Pages

புதன், செப்டம்பர் 17, 2025

சமத்துவ சமுதாயம் நோக்கி

 

தோமஸ் பிக்கெட்டி எழுதிய


சமத்துவ சமுதாயம் நோக்கி என்ற புத்தக அறிமுக கூட்டத்தில், புத்தகத்தின் மொழிபெயர்ப் பாளர் அக்களூர்இரவி அவர்களை கௌரவித்த பொழுது .....

தோழர் இரவி 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த் திருக்கிறார். ஆரவாரம் அற்ற அவரது மொழிபெயர்ப்பு பணிகள் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

தாமஸ் பிக்கெட்டின்யின் இந்த புத்தகம் புதிய முறையில் எழுதப்பட்டுள்ளது. அரசியல் களத்தில் களமாடுபவர்களும் தொழிற்சங்கத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களும் படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான புத்தகமாக நான் கருதுகிறேன்.

இன்றைய உலகமய சூழலில் தொழிற்சங்கம் பொருளாதார வாதத்திற்குள் சிக்கித் தவிக்கிறது. முதலாளித்துவக் கட்சிகள் தொழிற்சங்கத்தை தொழிலாக மாற்றி வரக்கூடிய செயல்கள், பல தொழிற்சங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

புத்தகத்தை அறிமுகப்படுத்திய கோமதி சங்கர் அவர்கள் மிக முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார்.

தோழர் பீட்டர் துரைராஜ் அவர்களின் முன்முயற்சியால் 35க்கு மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது.

தாமஸ் பிக்கெட்டின்யின் இந்தப் புத்தகம் சொல்லக்கூடிய தீர்வுகளில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் முன் வைக்கக்கூடிய ஏராளமான தரவுகள் மிக முக்கியமான நடைமுறை சார்ந்த முடிவுகள் ஆகும் . தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன் முடித்த பிறகு முழுமையான மதிப்புரை எழுதுவேன்.

எதிர் வெளியீடு

விலை 450/=

 

கைத்தட்டி கொண்டே இருக்கிறேன் ........

 



அ. பாக்கியம்

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வெளியிட்ட ஒரு நினைவு மலரில் வாலிபர் சங்கத்தின்  முன்னத்தி ஏர்களிடம் வாழ்த்துச் செய்தி பெறப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த வாழ்த்து செய்திகளில் நான் படித்தது என்றும் நினைவில் நின்றது மட்டுமல்ல சில இடங்களில் தொடர்ந்து பயன்படுத்திய வார்த்தைகளும் ஆகும். முன்னத்தி ஏரில் ஒருவர்  நான் மைதானத்தில் ஓடி முடித்து விட்டேன் தற்பொழுது அடுத்த தலைமுறை ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து கேலரியில் அமர்ந்து கொண்டு கைதட்டிக் கொண்டிருக்கிறேன் என்ற வார்த்தைகளில் அவரது வாழ்த்து செய்தி முடித்திருந்தார். தோழர் அகத்தியலிங்கம் பொறுப்பில் இருந்த பொழுது நான் உட்பட அவருடன் மையப் பணிகளில் இருந்த காலத்தில் இந்த நினைவு மலரை அவரின் முன்முயற்சியால் சிறப்பாக வெளியிடப்பட்டது. அந்த மலரில் பலரின் கருத்துக்களோடு மேற்கண்ட வரிகளை எழுதி இருந்தவர் கே வி எஸ் என்று அன்புடன் அழைக்கக்கூடிய கே வி எஸ் இந்துராஜ் ஆகும்.

திருச்சி மாவட்டத்தின் கட்சித் தலைவர்களின் ஒருவராக திகழ்ந்தவர் மட்டுமல்ல தொடர்ந்து சாத்தியமான அளவு இயங்கிக் கொண்டும் இருக்கிறார்.

 நேற்றைய தினம்(14.09.25)  திருச்சியின்  புறநகர் மாவட்ட பயிற்சி முகாமில் அவரை சந்தித்து பேசியது இதமான நிகழ்வாக அமைந்தது. நான் திருச்சிக்கு வாலிபர் சங்க வேலைகளுக்காக தொடர்ந்து வந்த பொழுதெல்லாம் மாவட்ட அலுவலகத்தில் கலகலப்பான ஒரு மனிதராக இருந்தவர் தோழர் கே வி எஸ் ஆவார்.

அவர் இல்லை என்றால் வெற்றிடத்துடன் திரும்புவதான ஒரு மெல்லிய உணர்வு ஏற்படும். அனைத்தையும் மிக சாதாரணமாக செய்வது மட்டுமல்ல அவருடைய பேச்சுக்களும் அவ்வாறே அமைந்திருக்கும். இளைஞர்கள் கட்சிக்குள் வந்த பொழுது அவர் திருச்சி மாநகர் கட்சியின் செயலாளராக இருந்தார். பல இளைஞர்களை எதிர்கொண்டார். இளைஞர்களின் கிண்டல் கேலிகளை புன்னகையுடன் கடந்து செல்வார். சில நேரங்களில் நான் அவரை சந்திக்கிற பொழுது பாக்கியம் இந்த பயலுகளை சொல்லிவை ரொம்பத்தான் பிரச்சனை பண்ணுகிறார்கள் என்று செல்லமாக கடிந்து கொள்வதும் பதிலுக்கு பல இளைஞர்கள் அவரை நகைச்சுவையுடன் பேசுவதும் நெருக்கத்தை உருவாக்குவதாக இருந்தது. இன்று 73 வயதை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். வாய்ப்புள்ள போது நிகழ்ச்சிகளில் அனைத்திலும் பங்கு பெறுகிறார். அந்த மாவட்ட குழுவும் அவரையும் இதர மூத்த தோழர்களையும் அரவணைப்போடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரோடு சிறிது நேரம் உரையாடினேன்.

திருச்சி மாநகரில் 21 ஆண்டுகள் கட்சியின் இடைக்கமட்டி செயலாளராக பணியாற்றி இருக்கிறார். 1981ம் ஆண்டு முதல் கட்சியின் மாவட்ட குழுவிலும், 1985 முதல் 2022 ஆண்டு வரை மாவட்ட செயற்குழுவிலும் இருந்து பணியாற்றிருக்கிறார்.

தோழர் பி ஆர் சி என்று அன்புடன் அழைக்கக்கூடிய பி இராமச்சந்திரன் அவர்கள் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தின் செயலாளராக அதாவது புதுக்கோட்டை கரூர் பெரம்பலூர் அரியலூர் திருச்சி புறநகர் திருச்சி மாநகர் இவை அனைத்தும் ஒன்றாக இருந்த பொழுது அதன் செயலாளராக பணியாற்றிய காலத்தில் தோழர் கே வி எஸ் அவர்களை  இயக்கத்தில் ஈடுபடுத்தியதை  நினைவு கூர்ந்தார்.

திருச்சியில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆரம்பிப்பதற்கு முன்பே தோழர் பி ஆர் சி மாவட்ட அளவில் 1972 ஆம் ஆண்டுகளில் ஒன்பது பேர் கொண்ட ஒரு அமைப்புக்குழுவை உருவாக்கினார் அதில் நானும் ஒருவன் என்று குறிப்பிட்டார்.

 தோழர் பி ஆர் சி வாலிபர் அமைப்பை கட்டுவதற்கு திருச்சியில்  விதை போட்டவர் என்பது மட்டுமல்ல அதை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றினார். என்னைப் போன்றவர்கள் வாலிபர் சங்கத்தின் மாவட்ட மாநில பணிகளில் இயங்கத் துவங்கிய பொழுது அதன் பொறுப்பாளராக இருந்து வழிகாட்டியவர் தோழர். பி ஆர் சி.இதன் தொடர்ச்சியாக தான் 1974 ஆம் ஆண்டு தோழர் பிஆர்சி போன்றவர்களின் முன் முயற்சியால் முதல் ஜனநாயக வாலிபர் சங்கம் மாநாடு திருச்சி முனிசிபல் மண்டபத்தில் நடைபெற்றது என்றும் இந்த மாநாட்டில் தோழர்கள் ஆர். உமாநாத், தணிகைச் செல்வன், தஞ்சை மணியரசன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் முத்துக்கிருஷ்ணன் தலைவராகவும், தோழர் வி பரமேஸ்வரன் செயலாளராகவும், தோழர் கே வி எஸ்  துணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதை நெகிழ்வோடு தெரிவித்தார்.

இந்த ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 1975 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி #இளைஞர் முழக்கம் என்ற பத்திரிக்கை வெளியிடப்பட்டது.முதல் இதழை தோழர் பிஆர்சி பெற்றுக் கொண்டார். இந்த பத்திரிக்கையை வெளிமாநிலத்தில் இருந்த தமிழ் இளைஞர்கள் உட்பட வாங்கினார்கள்.  பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவாக தோழர் முத்துகிருஷ்ணன், பரமேஸ்வரன், ஜெகதீசன் மற்றும் நான் உட்பட ஆசிரியர் குழுவில் இருந்தேன் என்றும்,  எனக்கு பாசறை செய்திகள் என்று ஒரு பிரிவை ஒதுக்கி அது தொடர்பாக தொடர்ந்து எழுதி வந்தேன் என்பதையும் மன நிறைவோடு கே வி எஸ் அவர்கள் குறிப்பிடு கிறார்கள்.

தோழர்.ஜெகதீசன் தனது வருமானத்தை முழுவதும் கட்சிக்காகவும், வாலிபர் இயக்கத்திற்காகவும் செலவழித்தார் என்பதை நினைவு கூர்ந்தார் .சங்கம் ஆரம்பித்த காலத்தில் மிகப்பெரிய நெருக்கடியான அரசியல் சூழல் இருந்தது என்றும் ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் அதனைத் தொடர்ந்து,  அவசர கால நிலை பிரகடனம் என்று நீடித்தது. பத்திரிக்கையை தொடர்ந்து நடத்த இயலவில்லை என்பதையும் தெரிவித்தார்

1977 ஆம் ஆண்டு சோசலிச வாலிபர் முன்னணி கோவை மாவட்டம் இடிகரையில் அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக்குழு ஒன்பது பேர்களில் கே வி எஸ்  ஒருவராக இருந்துள்ளது மட்டுமல்ல அவசர நிலை காலத்தில் பிரிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி மாவட்டத்திற்கு வாலிபர் சங்கத்திற்கு பொறுப்பாக இருந்து பணியாற்றியதையும் தெரிவித்தார். அதன் பிறகு நடைபெற்ற மாநாட்டில் வாலிபர் சங்க மாநில குழு உறுப்பினராக பணியாற்றியதை கவனப்படுத்தினார்.

கட்சியில் உறுப்பினரான பிறகு திருச்சி வட்டாரக் குழு என்று அமைக்கப்பட்டு அதன் செயலாளராக தோழர் டி கே ரங்கராஜன் அவர்கள் பணியாற்றி இருக்கிறார். இது எனக்கு புது செய்தியாக தான் இருந்தது. இவர்கள் எல்லாம் கட்சியின் அடிமட்டு அமைப்புகளில் பொறுப்புகளில் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அறிகிற பொழுது மகிழ்ச்சியாக தான் இருக்கிறது.  இவ்வாறு அடித்தள அனுபவம் அற்ற முறையில் வளர்வது இயக்கத்திற்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதையும் எனது அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டேன். அதன் பிறகு கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப திருச்சி வட்டாரக்குழு இரண்டாக பிரிக்கப்பட்டு திருவரும்பூர் பகுதி,பெல் தொழிற்சாலை, பொன்மலை, ரயில்வே போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வட்டாரக் குழுவிற்கு தோழர் டி கே ரங்கராஜன் அவர்கள் கிடைக்கும் செயலாளராக தொடர்ந்து செயல்பட்டு இருக்கிறார். திருச்சி மாநகரப் பகுதியை ஒட்டிய வட்டாரக் குழுவிற்கு தோழர்.கஸ்தூரி ரங்கன் அவர்கள் இடைக்கமிட்டி செயலாளர்களாக செயல்பட்டு உள்ளார். இந்த கமிட்டியிலும் தோழர் கே வி எஸ் அவர்கள் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார்.

83 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இடைக்கம்டி செயலாளராக பொறுப்பேற்று 21 ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார்.

திருச்சி எரிசாராய தொழிற்சாலையில் 1966 ஆம் ஆண்டு ஒரு தொழிலாளியாக பணியில் சேர்ந்து பணியாற்றினார் என்றும் 1969 ஆம் ஆண்டு சங்கம் அமைத்து அதன் பிறகு சங்கத்தை பலப்படுத்திய பணிகளிலும் , 1973 ஆம் ஆண்டு வேலை நிறுத்தம் 28 நாட்கள் நடைபெற்று அன்றைக்கு இருந்த அரசு வேலை நிறுத்தத்தை உடைத்து பழி வாங்கியது. அதன் பிறகு கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட்ட வரலாற்று எடுத்துரைத்தார்.

1973 ஆம் ஆண்டு முதல் தோழர் பி ஆர் சி அவர்கள் கே வி எஸ் அவர்களை முழு நேர ஊழியராக கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து, அவசரநிலை காலம், ரயில்வே வேலை நிறுத்தங்கள், 77 ஆம் ஆண்டு தேர்தல், 80 ஆம் ஆண்டு தேர்தல  என்று தொடர் பணிகளின் காரணமாக  உடனடியாக முழு நேர ஊழியராக வர இயலவில்லை.

 தோழர் பி ஆர் சி 1980 ஆம் ஆண்டு அவரை ஒரு நேர ஊழியராக கொண்டு வந்ததை நெகிழுடன் குறிப்பிடுகிறார். அத்துடன் கம்பெனி வேலையும் விட்டுவிட்டார்.

தோழர் பி ஆர் சி யை தொடர்ந்து தோழர்.கே. வரதராஜன் தன்னை எவ்வாறு வழிநடத்தினார் என்பதையும் அரசியல் படுத்தினார் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

திருச்சி சுமை பணி தொழிலாளர் சங்கப் போராட்டத்தில் ஆறு நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்ததை குறிப்பிட்டார்.

தோழர்.கே வரதராஜன் பொறுப்புகளில் இருக்கிற பொழுது திருச்சியில் நவரத்தினங்கள் என்று சொல்லக்கூடிய அரசியல் தலைமை குழு உறுப்பினர்களில் தோழர் பிரமோத் தாஸ் குப்தா தவிர அனைத்து அரசியல் தலைமை குழு உறுப்பினர்களும் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்ததுடன் இந்த கூட்டங்கள் முழுவதும் கட்சி என்னை தலைமை ஏற்க வைத்தது என்பதை மிகப் பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். குறிப்பாக அவசர நிலை காலத்தில் தோழர் பி ஆர் அவர்களின் பொதுக்கூட்டத்தை குறிப்பாக சுட்டிக்காட்டினார்.

தோழர் பிஆர்சி மீதும் தோழர் கே வி மீதம் அளவு கடந்த மரியாதையுடன் தனது ஆசானாகவும் நினைவு கூறுகிறார். தோழர் கே வரதராஜன் கொரோனா இல்லையென்றாலும்  கொரோனா காலத்தில் மரணம் அடைந்தார். மரணம் அடைந்து அவருடைய பூத உடல் வாகனத்தில் எடுத்துச் செல்லும் பொழுது அந்த பூத உடலுடன் அவரது மகன் மருமகள் பேரன் ஆகியோர் வாகனத்தில் ஏறி அமர்ந்தார்கள். மற்றவர்கள் எல்லாம் தயங்கிய பொழுது உடல்நிலை சரியில்லை என்றாலும் கொரோனா அச்சம் இருந்த சூழ்நிலையிலும் அந்த வாகனத்தில் அனைத்தையும் மீறி ஏறிச் சென்று  பூத உடலை சிதையில் எரிக்கும் வரை இருந்து விட்டு வந்தேன் என்று அந்த தலைவரின் இறுதி நிகழ்வை குறிப்பிடுகிற பொழுது சற்றே உணர்ச்சி வசப்பட்டார்.

தோழர் கே வி எஸ் அவர்கள் தேர்தல் காலத்திலும் கே ஜி எஃப் உட்பட பல இடங்களுக்கு சென்று சென்று பணியாற்றியிருக்கிறார். மாநாடுகளில் சமையல் பொறுப்பில் ஆரம்பித்து பல பொறுப்புக்களை நிறைவேற்றி இருக்கிறார்.

என்னை போன்றவர்கள் அலுவலகத்திற்கு வருகிற பொழுது அவரின் நெருக்கமான, உரிமையான, அரவணைப்பு எப்போதும் கிடைத்துக் கொண்டே இருந்தது. நேற்று நான் அவரை சந்தித்து பொழுது அதே உணர்வு என்னை ஆட்கொண்டது.

இந்த உணர்வை வெளிப்படுத்துவதற்காக தான் இந்த பதிவை இங்கு பதிவிடுகிறேன். இதமான சந்திப்பும் உரையாடலில் புதிய உணர்வுகளுடன் அங்கிருந்து புறப்பட்டேன்

அ. பாக்கியம்

"நாம்_அறியாத_அலி முகமதலி"



பள்ளிப்பருவத்தில் இருந்தே விளையாட்டு என்றால் எனக்குக் பிடிக்காது; அதற்கான காரணம்... அதெல்லாம் நமக்கு எதற்கு? அதனால் என்ன பயன்? என்ற அறியாத பருவ மனநிலையில் இருந்து உருவானது எனலாம். விளையாட்டுகளைப் பொருத்தவரை இன்றும் அந்த மனநிலை தொடர்வது ஆச்சரியம் தரக்தக்கதாக இருக்கிறது.

அது கிரிக்கெட் முதல் அனைத்து விளையாட்டுகளுக்கும் பொருந்தும். இந்தியா பாகிஸ்தான் போட்டிகளில் இந்தியா தோற்றுவிட்டால், எதோ நாட்டை அடமானம் வைத்து தோற்றமாதிரி ஒரு சித்திரம் கட்டப்படும் பாருங்க. அய்யய்யோ அது, இன்னும் விளையாட்டுகள்மீது வெறுப்பைத்தான் என்னுள் உண்டுபண்ணி இருக்கிறது.

சினிமா, டிவி வந்தப்பின் அவற்றை அதில் பார்க்கிறபோது, அது ஏற்படுத்தும் உணர்வு இருக்கிறதே... அது அதைவிட மோசம். அந்த மனநிலையை சிவகார்த்திகேயனின் "கனா" திரைப்படம் என்னுள் இருந்த வெறுப்பை கொஞ்சம் தணித்தது! அதிலும் குத்துச்சண்டையை பார்க்கும்போது முகமெல்லாம் உடைக்கப்பட்டு, ரத்தம் சிந்துவதைப் பார்த்தால், 'ச்சைய்...' என்று தோன்றும்!

அப்படித்தான் தோழர் ஏ.பாக்கியம் அவர்களின் 'நானே மகத்தானவன்' என்கிற நூலையும் "அவரென்ன குத்துச்சண்டை வீரர்; அவ்வளவுதானே. அதிலென்ன நமக்கு இருக்க போகுது; அவரது வாழ்க்கை வரலாறு இருக்கும்" என அசால்ட்டாக படிக்க துவங்கினேன்.

படித்து முடிக்கும்போதுதான் தெரிந்தது... மறைந்த மார்க்சீய நூலாசிரியர் என்.ராமகிருஷ்ணன் அவர்கள், 'நாம் அறியாத அம்பேத்கர்' என்ற நூலை கம்யூனிஸ்ட்கள் மத்தியில் அம்பேத்கரைப் பற்றிய மறுவாசிப்புக்கு, இட்டு சென்றாரோ... அதுபோல், "நாம் அறியாத அலியை... ஆம், முகமது அலியை 'நானே மகத்தானவன்' என நூலின் வாயிலாக கம்யூனிஸ்ட்களுக்கு மட்டுமல்ல, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக யாரெல்லாம் போராடுகிறார் களோ... அல்லது சமூக சமத்துவ விடுதலைக்காக யாரெல்லாம் போராடுகிறார்களோ... அவர்களுக் கான மறுவாசிப்பிற்காகவும், அதையும் மார்க்சீய கோணத்தில் அரிய கொடையாக அரும்பாடுபட்டு வழங்கியிருப்பது, இந்த நூல் படித்து முடித்தப் பிறகுதான் தெரிந்தது...

ஆம், விளையாட்டையும் சமூக விடுதலைக்கான 'வெப்பனாக' (ஆயுதமாகப்) பயன்படுத்த முடியும் என்ற யதார்த்தத்தை இந்த நூல் எனக்கு புரிய வைத்தது என்றால்... அதுமிகையல்ல... எனக்கு மட்டுமா? படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வை அள்ளித்தர தவறாது இந்நூல். ஆம், தமிழ்கூறும் நல்லுலகுக்கு இந்த நூல் அரிய, அறிய நல்கொடையே.

அமெரிக்கா என்றாலே... அதொரு ஏகாதிபத்திய நாடு; அதாவது உலகை சுரண்டி கொழுக்கிற நாடு; இப்படித்தான் பொதுப்புத்தியில் இருக்கிறது. வேறு வார்த்தையில் சொன்னால்... அது பணக்கார நாடு; அங்கு கக்கூஸ் கழுவும் வேலை செய்பவர்கள்கூட கோட், சூட் போட்டுக்கொண்டு, டை கட்டிக்கொண்டு, காரில்தான் வந்து இறங்கி, வேலை செய்துவிட்டு, திருப்பி காரில்தான் செல்வார்கள் என்று இந்தியா போன்ற நாடுகளில் பொதுபுத்தியில் ஏற்றி வைத்திருக்கிறார்கள்.

சாதி கிடையாது; மதம் கிடையாது; இன ஒதுக்கல் கிடையாது; பாலினம் பாகுபாடு கிடையாது; இருந்தால் அமெரிக்கா மாதிரி இருக்கணும்; வாழ்ந்தால் அமெரிக்காவில் வாழணும் என்று இன்றும் டமாரம் அடிப்போர் உண்டு. ஆனால், அமெரிக்கா என்பது நிறவெறி, போர்வெறி, மதவெறி, பணவெறி என அத்தனை வெறிகளையும் கொண்ட நாடு என்பதை இந்த நூலில் அட்டகாசமாக முகமதுஅலி வாழ்க்கை ஊடே துள்ளல் நடையில் தூரிகையால் எழுதி உள்ளார் தோழர் பாக்கியம்.

இந்தியாவில் இந்துத்துவா சனாதன கோட்பாட்டை எப்படி தமது அறிவுகூர்மையால் அடித்து நொறுக்கி, அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவினார்

 அதுபோல் அமெரிக்காவில் அங்கிருந்த அன்றைய ஆளும் வர்க்கத்திற்கு நிறவெறி வாயிலாக உருவாக்கப்பட்ட, இன ஒதுக்கலை ஒழிக்க குத்துச்சண்டையை கேசியஸ் கிளே என்ற இயற்பெயர் கொண்ட முகமது அலி... களமாக கொண்டு களமாடி இஸ்லாத்தை இளமையிலேயே தழுவிட்டார்.

தமது 39 வயதிலேயே குத்துச்சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற உலக நாடுகள் எல்லாம் சென்று, எவ்விதம் தமது வாழ்க்கையை, கருப்பின மக்கள் விடுதலைக்கு அர்ப்பனித்துக் கொண்டார் என்பதை அணுஅணுவாக நுணுகி மிக நுட்பமாக படைத்துள்ளார் இந்நூலை பாக்கியம் அவர்கள். அதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நூலுக்குள் ஒன்றிரண்டு நுகர்வோமா... "குத்துச்சண்டை அரங்கில், வளையத்தில், வெள்ளை நிறவெறி வீரர்களின் முகத்தின்மீது விழும் ஒவ்வொரு 'பஞ்ச்'சும் (Punch), நிறவெறிக்கு எதிராக கருப்பின மக்கள் வெளிப்படையாக தங்கள் வலிமையும், மேன்மையும் காட்டுவதற்குக் குத்துச்சண்டை ஒரு களமாக அமைந்தது" (76-2).

என்றாலும் முகமதலிக்கு, "குத்துச்சண்டையைவிட இனவெறிக்கு எதிர்வினை ஆற்றக்கூடியது இஸ்லாம் மதம்தான்" (87-3) என்ற கருத்தில் உறுதியாக இருந்தார்; அதையே தழுவினார்.

ஆனால், வீட்டுக்கு ஒருவர் சோசலிச வியட்நாம்மீது அமெரிக்க படையெடுப்புக்கு ஆள்களை சேர்த்தபோது அதை ஏற்க மறுத்தார். "வியட்நாம் யுத்தம் எவ்வளவு நாள் நடக்கும் என்பது பிரச்சனை அல்ல. ஆனால், நான் வியட்நாமியர்களுடன் சண்டையிட மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளேன்" (104-3) உறுதியாக இருந்தார்.

அதனால் அமெரிக்க அரசால் தரப்பட்ட நெருக்கடிகள் ஏராளம். அதை இன்முகத்துடனே எதிர்கொண்டார். ஒருபோதும் சமரசத்திற்குப் போகவில்லை. மேலும், அதற்கு எவ்விதம் பதிலடி கொடுத்தார் பாருங்கள்... "வியட்நாமியர்களோ, சீனர்களோ, ஜப்பானியர்களோ எனது எதிரிகள் அல்ல; எனது எதிரிகள் வெள்ளைநிற வெறியர்கள். எனது நாட்டில் என்னுடன் நிற்காத நீங்கள், நான் எங்காவது சென்று சண்டையிட வேண்டும் என்று மட்டும் விரும்புகிறீர்கள்" (104-4).

அன்றைய சூழலை அந்நாட்டின் பிரபல பத்திரிக்கை ஒன்று விவரிக்கிறது... "போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தங்கள் உயிரை நிச்சயம் இழப்போம் என்று தெரியாது; ஆனால், முகமது அலியோ புகழ் பறிப்பு, பண இழப்பு, சிறைக்குச் செல்வது உறுதி என்பன தெரிந்தும், அதை செய்தார் என்றால், அது தியாகத்தின் மற்றொரு நிலை" (111-1).

குத்துச்சண்டையைப்பற்றி பிற்காலத்தில் அவரே சிலாகிப்பதைப்பாருங்கள். என்றாலும் அவர் அடித்தால் அந்த அடி இடிபோல் இறங்குமாம். ஆம், அதைப்பற்றி நூலாசிரியர் கூறுகிறார்...

"தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியப்பிறகு, 1974ஆம் ஆண்டில் அவர், குத்துச்சண்டைக் களத்தில், வேகத்தைக் குறைத்து, ரோப்-ஏ-டோப் நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தார். அதற்குமுன் முகம்மது அலியின் குத்துக்கள் தோராயமாக 1000 பவுண்டு சக்தி கொண்டது" (118-1).

ஒரு கட்டத்தில் சீனாவில் சுற்றுபயணம் மேற்கொண்டபோது, தமது குத்துச்சண்டை விளையாட்டு பழைய வீடியோ ஒன்றைப் பார்க்க கூறியபோது, அலி சொல்கிறார்..."அந்த நரகத்திற்குள் மீண்டும் நான் செல்ல விரும்பவில்லை" (147-1).

எளியோருக்கு கொடை வழங்குவதில் அவர் வள்ளல்தான். ஆனாலும் அதை எவ்வளவு தன்னடக்கமாக சொல்கிறார்..."ஒரு பிரச்சனை இருப்பதாக என்னிடம் கூறப்பட்டால் என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன்" (172-2).

முகமது அலி அமெரிக்க கம்யூனிஸ்ட்களுடன் நட்பு பாராட்டி வந்துள்ளார். ஆனாலும், வர்க்க அடிப்படையில் மக்களைத் திரட்டுவதில் கம்யூனிஸ்ட்களோடு இணைந்து செயலாற்றுவதில் அவரின் ரோல் என்ன? என்பது வெற்றிடமாகத்தான் இருக்கிறது. இக்காலத்தில் கம்யூனிஸ்ட்களின் பணிகளைத் தனி அத்தியாயமாக தரப்பட்டிருப்பது சிறப்பு என்றாலும் அது நூலோடு ஒட்டவில்லை!

இங்கே மதம் மாறுவதால் சமூகம் சமநிலை அடையும் என்று அண்ணல் அம்பேத்கர் நினைத்தைப்போல, அங்கே அலியும் நினைத்துவிட்டார் போலும்!

எது எப்படியோ... கறுப்பின மக்களின் விடிவெள்ளியான முகமது அலி... உலக வரலாற்று பக்கங்களில் அழிக்கமுடியாத முத்திரைப் பதித்துள்ளார் என்பதை இந்த நூல் நன்கு படம் பிடித்து காட்டி உள்ளது எனலாம்.

நூலைப்பற்றியும், நூலாசிரியரைப் பற்றியும் அணிந்துரை எழுதிய புலவர் பா.வீரமணி வார்த்தைகளோடு நிறைவு செய்கிறேன்... "இப்படி எல்லோராலும் எழுதிவிட முடியாது. அரசியல் வித்தகம் வாய்ந்தவர்களால்தான் இப்படி எழுத முடியும். அந்த வித்தகம் வாய்ந்தவர்தான் தோழர் பாக்கியம். அந்த வித்தகத்தை நூலில் காணலாம். மொத்தத்தில் இந்த நூல் கருத்து களஞ்சியம்".

நூல் வடிவமைப்பு வாசிப்பைத் தடையின்றி கொண்டு செல்கிறது. அட்டைபடம் முதல் அச்சாக்கம் வரை அனைத்தும் அருமை! வெளியீட்டகத்திற்கு ஆயிரம் நன்றிகள்!

தான் வாழும் சமூகம் சமத்துவமடைய வேண்டுமென களமாடுவோர்கள் மட்டுமல்ல, சமூக சீர்திருத்தவாதிகள் உள்ளிட்டு அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்தான் "நானே மகத்தானவன்!"

தாரைப்பிதா... 16.09.2025.

'பஞ்ச்'சால் பதில் சொல்லியவன்

 

கடந்த வாரம் தோழர் Bakkiam  அவர்களை நாமக்கல் கட்சி அலுவலகத்தில் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது.

தோழர் பழகுவதற்கு இனிமையானவர் வேறு என்ன கம்யூனிஸ்ட்களின் பண்புகளை குறித்து சொல்லவா வேண்டும்.

உரையாடலூடனான தோழரின் வார்த்தைகள் இளைஞர்களை அரசியல் படுத்த வேண்டும், வாசிக்க வைக்க வேண்டும் என்ற கனவுகளை தாங்கியே இருந்தன.

முகமது அலியின் வாழ்க்கையை சமூக நடவடிக்கைகளை குறித்தான புத்தகம் மேலும் தோழர் பாக்கியம் அவர்கள் முகமது அலியின் வாழ்க்கை வரலாற்றை எழுதாமல் உலக வரலாற்றில் இருந்து முகமது அலியின் வாழ்க்கையை எழுதிவுள்ளார்.

ஒரு இடதுசாரி தன்னுடைய படைப்புக்கு எப்படி இதுபோன்ற தலைப்பை தேர்வு செய்தார் என்று கூட சிலர் கேட்ககூடும்.

தலைப்பு தோழரின் சிந்தனையில் உதித்தது அல்ல

ஆயிரம் ஆண்டுகளாக நிறத்தை வைத்து சுரண்டப்பட்ட மக்களின்

எல்லாவற்றிலும் புறக்கணிப்பை மட்டுமே பார்த்த சமூகத்தின்

கேவலமானவன் அசிங்கமானவர்கள் பலவீனமானவர்கள் என்பவர் களின் பிரதிநிதியாக

வெள்ளை நிறவெறியர்களுக்கு பாக்ஸிங் ரிங்யில் தனது 'பஞ்ச்'சால் பதில் சொல்லி கர்ஜித்த அலியின் வார்த்தைகளே #நானே_மகத்தானவன்

முகமது அலி அமெரிக்க போர் கைதிகளை மீட்டு வருவது போன்ற அதீத செயல்பாடாக உடையவராக

தன்னை எளிதில் வெல்ல முடியாது என்ற அதீத தன்னம்பிக்கை என அனைத்தும் தானாக உருவானது அல்ல ஒடுக்கப்பட்ட  கறுப்பின மக்களின் ஓராயிரம் ஆண்டு கோபம் தான் அலியின் செயல்பாடு

தன்னுடைய வாழ்க்கை புகழ் எதை இழந்தாலும் கருப்பின மக்களின் விடுதலையில் சமரசம் செய்துகொள்ளாத விளையாட்டு வீரன்

வெள்ளை நிறவெறி எதிர்பாளராக மட்டுமே அறிமுகமான முகமது அலியை அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியாக கட்டமைப்பது தான் புத்தகத்தின் ரகசியம்.

கேசியஸ் கிளே முகமது அலியாக பரிணாமம் அடைந்தது. முகமது அலியின் சோவியத், சீனா, இந்தியா, சோசலிச கியூபா பயணம் ஆகியவை ஆசிரியரின் தேடலை வாசகர்களுக்கு கடத்துக்கிறது.

நிற வெறிக்கு எதிராக அமெரிக்க கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகளை குறிப்பாக வெள்ளை நிறைவெறிக்கு எதிராக கறுப்பின மக்களை மட்டும் ஒருங்கிணைக்காமல் வெள்ளைநிற மக்களையும் களத்தில் போராட வைத்தது தான் கம்யூனிஸ்ட்களின் வரலாறு என்ற பதிவு.இந்தியாவில் சாதிய சுரண்டல்களுக்கு எதிராக அனைத்து சாதியினரையும் ஒருங்கிணைத்து போராடுகின்ற இந்திய  கம்யூனிஸ்ட்கள் செயல்பாடுகளை புரிந்துகொள்ள முடியும்.

புத்தகத்தில் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு களம் அமைத்தது கம்யூனிஸ்ட்கள் என்று படித்த பொழுது  இந்தியாவில் இயங்ககூடிய தலித் மற்றும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராட கூடிய இயக்கங்ளுக்கு களத்தை தயார் செய்தது கம்யூனிஸ்ட்கள் தான் " என்பதை பொருத்திப் பார்க்க முடிந்தது

இறுதியாக, தோழன் #மரடோனா மூலம்

" Football " பிடித்த விளையாட்டாக மாறியது அந்த பட்டியலில் குத்து சண்டையும் இணைந்தது தோழன் #முகமது_அலியால் ....

அரிய-அறிய வேண்டிய வரலாற்று பதிவுகள் இவை.


"நானே  மகத்தானவன்" 🥊


தோழர் அ. பாக்கியத்திற்கு நன்றிகள் வாழ்த்துக்கள் .

மெனக்கெடல் என்று சொல்லுவார்கள் - நிறைய விஷயங்களை தேடி தேடி மெனக்கிட்டு நல்ல முயற்சியை மேற்கொண்டு இந்த புதையலை  எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றிகள்.

ஆரம்பமே அமர்க்களம் .

நானே மகத்தானவன்-  மட்டுமல்ல தனித்துவமான பன்முகம் கொண்ட உயர்ந்த களப்போராளி குத்துச்சண்டையின் நிகரற்ற மாவீரன். நிறவெறிக்கு எதிராக ஆங்காரமாக குரல் எழுப்பியவன் முகமது அலி.

அமெரிக்காவின் முதல் குடிமக்களான செவ்விந்தியர்களை அழித்து ஒழித்திடவும். தங்களை வளப்படுத்திக் கொள்ளவும் கருப்பின மக்களை அடிமைகளாக்கி மிருகங்களிலும் கீழாக நடத்திய அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய வீரன் அவன்.

வீர வியட்நாம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து- எந்த விளைவுகள் ஏற்பட்ட போதிலும்,  குத்துச்சண்டை விளையாட்டிற்கு தடை போட்ட போதிலும் போர்வெறிக்கு அடிபணிய மாட்டேன் என்று சமர்ப்புரிந்த மாவீரன் அவன்.

பல நேரங்களில்  உயிருக்கு ஆபத்தான பயணங்களிலும் அரசியல் பினைக்கைதிகளை  மீட்டெடுப்பது எளிய மக்களுக்கு மருத்துவ உதவி நிதி அளிப்பது என பல நல்ல காரியங்களை செய்த கருணை நிறைந்தவன்.

கியூபா மக்களுக்கு எதிராக பொருளாதார தடை விதித்த போதும் அமெரிக்காவுக்கு எதிராக கியூபா மக்களுக்கு ஆதரவாக பல்வேறு பொருளாதார உதவிகளை செய்த மகத்தானவன்.

நிறவெறி அமெரிக்காவில் இன்றும் தலை விரித்தாடும் சூழ்நிலையில் பல்வேறு படுபாதக கொடுமைகள் நடந்தன   1955 ஆம் ஆண்டு வாக்கில் எம்மெட்  என்ற 14 வயது கருப்பின சிறுவன் கரோலின் என்ற 21 வயது வெள்ளை நிற பெண்ணுடன் பேசுகிறான் இருவரும் சிரித்து பேசி அரட்டை அடிப்பதை பொறுக்க முடியாத நிறவெறியர்கள் அந்த சிறுவனின் வீட்டுக்குள் புகுந்து   அடித்து சித்திரவதை செய்து துப்பாக்கியில் சுட்டு ஆற்றில் வீசி விட்டார்கள்.

 சிறுவனின் தாய் அந்த கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்து தொடர்ந்து போராடுகிறாள். விசாரணை முடிவில் அந்த கொடூர குற்றவாளி குற்றமற்றவன் என்று நீதிமன்றம் அநீதியாக அறிவிக்கிறது. மக்கள் தொடர்ந்து கொந்தளித்து போராடுகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக 2006 ஆம் ஆண்டில் அவன் உடல் சிதைக்கப்பட்ட இடத்திலும் மற்ற எட்டு இடங்களிலும்  நினைவுச்சின்னம் உருவாக்கினார்கள். வெள்ளை நிற வெறியர்கள் அந்த நினைவுச் சின்னங்களை உடைத்து நொறுக்கினார்கள். அதற்கு எதிராக கருப்பின மக்கள் மீண்டும் நினைவுச் சின்னத்தை எழுப்பினார்கள் அவர்கள் மீண்டும் உடைத்தார்கள் மீண்டும் மீண்டும் நினைவுச் சின்னங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தார்கள்.

 இறுதியில் 230 கிலோ எடை இரும்பை கொண்டு நினைவு சின்னத்தை பலமாக உருவாக்கினார்கள். இது ஒரு நினைவுச் சின்னத்தின் அடையாளம் மட்டுமல்ல நிறவெறியர்களுக்கு எதிராக  கருப்பின மக்களின் ஒற்றுமையை பலப்படுத்தினார்கள் இந்த நிகழ்வு நமக்கு பல நினைவுகளையும் கதைகளையும் உணர்த்தும் அடையாள சின்னமாகும்.

குத்துச்சண்டையில் பல சாம்பியன்களையும் மண்டியிட வைத்தவன். போர்வெறிக்கு காரணமான அமெரிக்க  ஏகாதிபத்திய வெறியையும் மண்டியிட வைத்தவன்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் கம்யூனிஸ்ட் இடதுசாரிகள் ஜனநாயக சக்திகளுக்கு எதிராக எந்த அபாயகரமான காரியங்களையும் சூழ்ச்சிகளையும் செய்யும் அத்தகைய அமெரிக்க நாட்டில்  கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக - எத்தகைய வன்மங்கள் சூழ்ச்சிகள் தடைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது அதை எதிர்த்து கம்யூனிஸ்ட் ஜனநாயக சக்திகள் தொடர்ந்து வீர நடை போடுகிறது. இந்த வரலாற்றை சுருக்கமாக ஆனால் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

"நானே மகத்தானவன்" என்ற  நூல் மூலம் ஒவ்வொரு மனிதனும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் மூலமாக  நாமும் மகத்தானவர்களாக மாற முடியும் என்கிற மனநிலையை ஏற்படுத்துகிறது.

எழுத்தாளரின் எழுத்துக்கள் முகமது அலியுடன் நாமும் சேர்ந்து பயணித்த உணர்வை அளிக்கிறது. உங்களின் எழுத்துக்களின் பயணம் மீண்டும் மீண்டும் பயணப்பட வேண்டும்.

உங்கள் எழுத்துக்களையும் தாண்டி சிறந்த மனிதாபிமானமிக்க கம்யூனிஸ்ட் கட்சி ஊழியன் என்பதை நானும் நிறைய நண்பர்களும் தோழர்களும் அறிவார்கள்.

 அனைவரும்  வாங்கி படித்து அறிய வேண்டிய பொக்கிஷத்தின் அனுபவத்தை நீங்களும் அனுபவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

13.09.2025

நிற வெறி,இன வெறி மத வெறி சக்திகளுக்கு எதிராக

 

நிற வெறி,இன வெறி மத வெறி சக்திகளுக்கு எதிராக

நாம் களமாட பல அனுபவங்களை

நிச்சயமாக இந்த நூல் தருகிறது...

                                 


ஏஜி.கண்ணன்

 

தோழர்.AB அவர்களுக்கு வணக்கம்...

நானே மகத்தானவன் என்ற புத்தகம் தோழர்.கோபால் நேற்று முன்தினம் கொடுத்தார்...

வாங்கும் போது குத்து சண்டை வீரர் பற்றி புத்தகம்.. அது பற்றி தான் இருக்கும் என்று நினைத்தேன்..

அணிந்துரை வழங்கிய புலவர் வீரமணி அவர்களும் தமிழக குத்து சண்டை உலகிற்கு அரிய பங்களிப்பு செய்யும் நூல் என்று குறிப்பிட்டார்..

அதே சிந்தனை உடன் படிக்க துவங்கினேன்..

14 வயது சிறுவன் எம்மேட்டில் படுகொலை, இறுதி ஊர்வலம்,வழக்கு, தீர்ப்பு விவரங்கள்...

நகர பேருந்தில் நிற வெறி செயல்,ரோச பார்க்ஸ் கைது,அலபாமா நகர கருப்பு இன மக்கள்-381 நாள்,40,000 மக்கள் பேருந்து புறகணிப்பு போராட்டம் உணர்வு பூர்வமாக படிக்க தூண்டியது..

காசியஸ் கிளே முகமது அலி யாக மாறும் வரலாறு, வியட்நாம் போரில் ஈடுபட மாட்டேன் என்று அறிவிப்பு..சிறை தண்டனை குத்து சண்டை போட்டியில் பங்கேற்க தடை.. பதக்கங்கள் பறிப்பு..

மேல் முறையீடு..

நிற வெறி எதிராக தொடர் எதிர்ப்பு நடவடிக்கைகள்... ஏராளமான செய்திகள்...

அதிலும் குறிப்பாக அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலையீடூகள், போராட்டங்கள், வழக்குகள் தண்டனை...

 கம்யூனிஸ்டு கட்சியின் வளர்ச்சி...மலைக்க வைக்கிறது...

தெளிவான உரை நடை.. சோர்வின்றி கோர்வையாக படிக்க தூண்டியது... பக்கங்கள் வேகமாக கடந்தது...

ஆனால் இதற்கான தங்களின் உழைப்பு நிச்சயமாக அதிகம்... கோர்வையாக ஆண்டுகள் பெயர்கள் சம்பவங்கள் வந்தது சிறப்பு...

தங்களின் கடுமையான உழைப்பு வீண் போகவில்லை.. சிறந்த நூல்..நிற வெறி,இன வெறி மத வெறி சக்திகளுக்கு எதிராக நாம் களமாட பல அனுபவங்களை நிச்சயமாக இந்த நூல் தருகிறது... குறிப்பாக இளம் தோழர்கள் இடம் சேர வேண்டிய புத்தகம்... மிகவும் மகிழ்ச்சி

 தோழர்...

தோழமையுடன்..

ஏஜி.கண்ணன்

திருவள்ளூர்..

சிபிஐஎம் டைரி இளம் கம்யூனிஸ்டுகளின் கையேடு


அ .பாக்கியம்.

எழுத்துக்களில் வரலாற்றை பதிவு செய்வதை விட படங்களின் இடையே எழுத்துக்களை பதிவு செய்து வரலாற்றை முன்னிறுத்தி உள்ளது இந்த புத்தகம். 100 பக்கத்தையும் வண்ணத்தில் அச்சடித்திருப்பது படங்களின் மூலம் சொல்ல வந்த கருத்துக்களை கச்சிதமாக வெளிப்படுத்துகிறது. இளம் கம்யூனிஸ்டுகளின் கையேடு என்பதற்கான அடிப்படை இதில் உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட்களின் துவக்கம்

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்கள்,

பெஷாவர் சதி வழக்கு துவங்கி மீரட் சதி வழக்கு வரை அறிய படங்களை உரிய முறையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் கட்சிகளை ஆரம்பித்த தலைவர்களின் படமும், கேரளாவில் கம்யூனிஸ்டுகளின் பயணம் என்ற தலைப்பில் போராட்டத் தளபதிகளையும் காட்சிப்படுத்தி உள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடுகளை பம்பாய் டு மதுரை என்று படச்சுருள் போல் பதிப்பித்து இருக்கிறார்கள்.

உலக வரலாற்றில் தேர்தல் மூலமாக ஆட்சிக்கு வந்த கேரளத்தின் முதல் மந்திரி சபை,

தலைவர்களின் சிறை வாழ்க்கையில் வருடங்களை கூட்டினால் ஆயிரம் ஆண்டுகளை கடந்து செல்கிறது.

தமிழக கம்யூனிஸ்டுகளின் தியாகத்தைப் பற்றியும்

கட்சி பத்திரிகையின் அவசியம் பற்றியும்

மார்க் கட்சியை உருவாக்கிய தலைவர்கள் மற்றும் கட்சி கட்டமைப்பு என்று பல தலைப்புகளில் கட்டுரைகளாக எழுதப்பட வேண்டியவைகளை படங்களாக முன்வைத்து சில வரிகளில்  விளக்கப்பட்டுள்ளது.

லியூ சோசியின் உள்கட்சி போராட்டம், ஜோசப் ஸ்டாலின் கருத்துக்கள், கம்யூனிஸ்ட் அகிலம், காரல் மார்க்ஸின் வறுமை நிற சிவப்பு என்ற கட்டுரை, பகசிங்கு பற்றிய கட்டுரை, சார்லஸ் டார்வின் பற்றிய அறிமுகம் என்று சில கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளது. நிறைவாக தோழர். லெனின் செயல்படுத்திய என்ன செய்ய வேண்டும் என்ற புத்தகத்தின் வரிகள் இந்த நூலை நிறைவு செய்கிறது.

நூறு பக்கங்களில் நீண்ட வரலாற்றின் பல பகுதிகளை எளிய முறையில் அறிந்து கொள்வதற்கு அனைவரும் வாங்கி படிக்க வேண்டிய நூலாகும். கோவை தோழர்.R.ஹரிஹரனின் ஆக்கமும், தண்டபாணி அவர்களின் வடிவமைப்பிலும் ஓவியா பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான புத்தகங்களில் இருந்து ஒரு மாறுபட்ட முறையில் எடுக்கப்பட்ட முயற்சி சிறப்பாக அமைந்துள்ளது.

புத்தகத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் வருகிற படங்களை தவிர்த்து இருந்தால்  சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்.

அ .பாக்கியம்.

பாக்சிங்கின் சமத்துவ அரசியல் குத்துக்கள்

 

வே. மீனாட்சிசுந்தரம்

முகநூல் பக்கம்

  பாக்ஸர் முகம்மதுஅலியின் வாழ்க்கையை அற்புதமாக சித்தரித்து தோழர் பாக்கியம் தந்துள்ளார். அதோடு பிரபுக்கள் காலத்தில் அடிமைகளை மோதவைத்து ரசிக்கும் கொடூரமான விளையாட்டு எப்படி மாறியது என்பதை சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளார் ஒடுக்கப்பட்ட மக்களின் தற்காப்பு கலைகளையும விரிவாக விளக்குகிறார்.

 விளையாட்டிற்கும் தத்துவ அடிப்படை அவசியம். மானுடம் ஸ்போர்ட்சால் பயனுற வேண்டுமானால் மார்க்சிசம் வழிகாட்டவேண்டு மென்பதை நிறைவாக நிரூபிக்கிறார்.

விளையாட்டை ரசிப்பவர்களிடையே நிலவும் வெறித்தனம் மறைந்து விளையாடுபவரின் திறனை ரசிக்க பக்குவப்பட மார்க்சிச பார்வையை பெற வேண்டும்  என்பதை இப்புத்தகத்தை வாசிப்போர் உணர்வர்.

குத்துச்சண்டை என்பது உலகின் மிகவும் வளர்ந்த  விளையாட்டாகும் குத்துச்சண்டை என்பது எதிராளி மீது குத்துக்களை வீசுவதை விட நிறைய அறிவியல் தத்துவ அடிப்படை மற்றும் அரசியலை உள்ளடக்கியது.

முதலாளித்துவ உலகில்  ஆண்டுதோறும்  பில்லியன் கணக்கான டாலர்களை உருவாக்குகிற விளையாட்டு  சோசலிச நாடுகளில்  சமத்துவ அரசியலை உலகளவில் பரப்ப உதவும் விளையாட்டாக கருதப்படுகிறது.

இப்புத்தகம் அதற்கான காரணங்களை தெள்ளு தமிழில் பேசுகிறது பாக்ஸிங்கில் குத்துக்களுக்கு அறிவியல் அடிப்படை  உண்டு என்பதை விளக்குகிறார்

இந்த புத்தகம்  நிற வெறிக்கெதிரான போராட்ட முனையாக பாக்சிங் இருந்த தையும் வெள்ளை நிற ஆணவத்திற்க கருப்பு பாக்ஸர்கள்  கொடுத்த குத்துக்களையும் அழகாகவே பதிவு செய்துள்ளது.

இன வெறியர்களான முசோலினி, ஹிட்லர் நாடுகளின் பாக்ஸர்களை அமெரிக்க கருப்பு பாக்ஸர்களே தோற்கடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்ததால் பரவலாக இருந்த  அமெரிக்க நிற வெறி இப்பொழுது சுரண்டும் வர்க்கத்தின் தொத்து நோயாக சுருங்கிவிட்டது. 

இப் புத்தகம் பாக்சிங்கை முகம்மது அலி கருப்புநிற மக்களின் விடுதலைக்காக மட்டும் அரசியல் கருவியாக்கவில்லை சமத்துவத்தை, தனிநபரின் ஒத்துழைக்கும் பண்பை யாவரும் கேளிர் என்ற பார்வையை பண்பாக்க பாக்சிங் குத்துக் களையும் கவிதை வரிகளையும் இணைக்கும் அற்புதத்தை விளக்குகிறது.

முகம்மது அலியின்  அரசியல்பேசும் துள்ளல்பாடல்கள் கொண்ட இரண்டு ஆல்பங்கள்  கிராமி அவார்டு பெற்றன.

 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து”

என்ற குறளுக்கு இலக்கனமாக பாக்சிங்கில் திகழ்கிறார்.

அதே வேளையில் நிறவெறிக்கெதிராக, ஆதிக்க மனப்பாங்கிற் கெதிராக ,  ஏகாதிபத்திய யுத்த வெறிக் கெதிராக,  சுரண்டும் வர்க்கத்தின் ஆயுதமாகிவிட்ட கிறுத்துவ மதத்தின் போலித்தனத்தை காட்டிட, பாக்சிங்கை அவர் பயன்படுத்திய விதம் அவர் பாக்ஸர் என்பதைவிட மக்கள் ஜனநாயக போராளியாகவே நம் முன் நிற்கிறார்.

இப்புத்தகம் வாசிப்போரின் மனதை மேம்படுத்துகிறது அறிவை விசாலப்படுத்த தூண்டுகிறது.

புத்தகம் வெளியீடு

 

*புத்தகம் வெளியீடு:*



காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், சென்னைக் கோட்டம் இரண்டின்  மாநாட்டில்...

*"நானே மகத்தானவன்"*

என்கிற நான் எழுதிய புத்தகத்தை வெளியீடு செய்தமைக்குநன்றிகள்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் *G.ஆனந்த்* அவர்கள் நூலை வெளியிட்டு உரையாற்றினார். இந்நிகழ்வில், சங்கத்தின் தலைவர் *K.மனோகரன்,* பொதுச்செயலாளர் *R.சர்வமங்களா* ஆகியோர் உடனிருந்தனர்!

*50 புத்தகம், மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது!*

அஞ்சலி: சரஸ்வதி

 



ஜனநாயக மாதர் சங்க தலைவர்களில் ஒருவராகவும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், தொழிற்சங்க தலைவராகவும் , சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து பணியாற்றிய தோழர் உ.ரா. வரதராசனின் துணைவியார் சரஸ்வதி அவர்கள் மறைந்தார்.

ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொருளாளராகவும்  மகளிர் சட்ட உதவி குழுவின் அமைப்பாளராகவும், சென்னை மாவட்ட நிர்வாகியாகவும் இருந்து செயலாற்றியவர்.

சென்னையில் தோழர் மைதிலி சிவராமன் அவர்களுடன் இணைந்து மாதர் சங்கத்தை உருவாக்குவதில் முன்னணி பங்கு வகித்தார். சென்னையில் மகளிர் சட்ட உதவி மையம் பிரபலம் அடைவதற்கு தோழர் சரஸ்வதியின் பங்கு மகத்தானது.

சாதாரண மக்களிடமும் பெண்களிடமும் நெருக்கமாக பழகக் கூடியவர். சென்னையில் குடிசை பகுதிகளில் இருந்து வந்த மாத சங்கத் தோழர்களை அரவணைத்துச் செல்வதில் கவனம் செலுத்தினார். தோழர் சரளா, சாந்தி, தோழர் தேவி ,சூழல் புனல் கரை மாரியம்மாள், மோகனசுந்தரி, ராதை, அம்சா  போன்ற தோழர்களின் கள செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்தார்.

சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலில் அண்ணா நகர் டிபி சத்திரத்தில் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஒரு உள்ளூர் வேட்பாளரை போன்று அன்றாடப் பணிகளில் ஈடுபட்டார். சென்னை மாநகராட்சி தேர்தலில் அப்போது நடைபெற்ற மோசடி பிரசித்தி பெற்றது. வன்முறை தாண்டவமாடியது.வாக்குப் பெட்டிகளை கைப்பற்றி அவர்களே வேட்பாளர்களுக்கு எண்ணிக்கை அறிவித்தார்கள். சென்னை மாநகராட்சி தேர்தலில் 77 வட்டங்களுக்கு மறு தேர்தல் அப்போது நடைபெற்றது. அதில் ஒன்று டிபி சத்திரம். மறு தேர்தலில் பணிகள் செய்து மூன்றாவது இடம் கிடைத்தது. வன்முறை செய்பவர்களை எங்களுடன் நின்று  சரஸ்வதி அவர்களும் எதிர்கொண்டார்கள்.

அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

38 திபெத்: தலாய்லாமாவும் சாம்பவி எனும் ஆந்திர குழந்தையும்

 


அ.பாக்கியம்

தலாய்லாமா திபெத்திய பௌத்த மரபுகளின் மையமானவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் திபெத்திய வஜ்ரயான பௌத்தத்தில் உள்ள மறுபிறவி சடங்கு என்ற மிக மோசமான அடையாளத்தை கடைபிடிக்க கூடியவராகவும் அவர் திகழ்கிறார். எந்தக் காலத்திலும் இதை விட்டொழிக்க மறுத்து அரசியலுக்கு பயன்படுத்துகிறார்.

உலகில் வேறு எந்த பௌத்த மதப் பிரிவுகளிலும் இந்த நடைமுறை இல்லை. திபெத்திய பௌத்தத்தில் தலாய்லாமா மறுபிறவி என்ற மூடநம்பிக்கை சடங்குகளுக்கு குழந்தைகளை பலிகடாவாக மாற்றிக் கொண்டிருக்கிறார். இதற்காகத்தான் திபெத்திய பௌத்தத்திற்கு அதிக குழந்தைகள் தேவைப்படுகிறார்கள். மறுபிறவி குழந்தைகளாக தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர்கள் மடாலயங்களில் தங்கவைத்து வளர்க்கப்படுகிறார்கள். சிறு வயதில் இருந்தே மதம் தொடர்பான அனைத்து விதமான சடங்குகளுக்கும் இந்த குழந்தைகள் உட்படுத்தப்படுகிறார்கள். இதனால் அக்குழந்தைகளின் பருவ காலத்தில் இருக்கக்கூடிய சுயத்தன்மை பறிக்கப்படுவதுடன் குழந்தைகளின் பருவங்கள் மற்றும் விருப்பங்கள் அனைத்தும் நசுக்கப்படுகின்றன.

சீனாவின் மதச்சுதந்திர பாதுகாப்பு மற்றும் வழிபாட்டு முறைகளின்படி சிறுவர்களை அதாவது 18 வயது வரை எந்த மதத்தின் கருத்துக்களுக்கும், சடங்குகளுக்கும் உட்படுத்த கூடாது. எந்த மத கருத்துக்களையும் திணிக்க கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது. இருப்பினும் திபெத்திய தன்மைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு மறுபிறவி விஷயத்தில் நெகிழ்வாக நடந்து கொள்கிறது. குழந்தைகளை மறுபிறவியாக அறிவிப்பதை அதிகபட்சமாக தடுத்து வருகிறது.

இதே காலத்தில் தலாய்லாமாவும், திபெத்திய பௌத்தமும் குழந்தைகளை மத விஷயங்களுக்காக பயன்படுத்தி வருவதை சர்வதேச அளவில் பல அமைப்புகளும் மக்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திபெத்தில் உள்ள குழந்தைகளை மத கட்டுப்பாடுகள் உள்ள கல்வி முறைகளில் தான் பயில வேண்டும் என்று தலாய்லாமாக்கள் வலியுறுத்துகிறார்கள். சீன அரசாங்கம் விடுதிகளுடன்கூடிய பள்ளிகளை உருவாக்கி தொலைதூரங்களிலிருந்து வரக்கூடிய குழந்தைகளுக்கு நவீன வசதிகளுடன் கல்வியை சொல்லிக் கொடுக்கிறது. இந்த முறையை தலாய்லாமாகடுமையாக எதிர்க்கிறார் என்றால் குழந்தைகள் மீதான அவரின் நோக்கம் தெளிவாகப் புரியும்.

நாக்கை உறிஞ்சும் கலாச்சாரமா?

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தர்மசாலாவில் அந்தப் பகுதியில் உள்ள பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனமான M3M நிறுவனம் பொது நிகழ்ச்சியை தலாய்லாமா பங்கெடுக்கக்கூடிய வகையில் நடத்தியது. அப்பொழுது அவரிடம் வந்த ஒரு சிறுவனுக்கு முத்தம் கொடுத்த பிறகு தனது நாக்கை உறிஞ்ச வேண்டும் என்று கேட்டது மட்டுமல்ல, சிறுவனது நாக்கை தானும் உறிஞ்ச வேண்டும் என கேட்டுள்ளார். இது ஒரு வீடியோவாக வெளிவந்து மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை குழந்தைகளின் மீது உடல் ரீதியான தாக்குதல் என விமர்சனங்கள் எழுந்தது.

ஆனால் தலாய்லாமாவும் அவரது அலுவலகமும் ஆரம்பத்தில் அந்த சம்பவத்தை நியாயப்படுத்தி ஆதரவாக பேசினார்கள். ஒருவரது நாக்கை நீட்டுவது மரியாதை அல்லது உடன்பாட்டின் அறிகுறி. இது பெரும்பாலும் திபெத்திய பாரம்பரிய கலாச்சாரத்தில் வாழ்த்தாக பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்கள். மேற்கத்திய பார்வையில் இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார்கள். இன்றைய நாட்களில் உணர்ச்சிகள் மற்றும் பழக்கவழக்கங்களின் வெளிப்பாடு என்று உருவாகி அனைத்தும் மேற்கத்திய மையமாகப்பட்டுள்ளதால் இது போன்றவற்றை தவறாக சித்தரிக்கிறார்கள் என்று தலாய்லாமாவின் ஆதரவாளர் எழுதினார். இது ஒரு அப்பாவித்தனமான விளையாட்டுத்தனமான கேலி என்று விளக்கம்  அளித்தார்கள்

ஆனால் குழந்தை உரிமைகளுக்கான அமைப்புகள் இந்த செயலை வன்மையாக கண்டித்தன. அனைத்து வகையான குழந்தை துஷ்பிரயோகங்களையும் கண்டிப்பதாக பல அமைப்புகள் அறிக்கை வெளியிட்டன. சிலர் இதை திபெத்திய கலாச்சாரம் என்று விளக்கம் கூறினாலும் தலாய்லாமாவின் இந்த வீடியோ நிச்சயமாக எந்த கலாச்சார வெளிப்பாடுகளாகவும் அமையவில்லை என்று குழந்தை உரிமை அமைப்புகள் அறிவித்தன. குழந்தைகளின் உடலில் தன்னாட்சி மற்றும் கலாச்சார உணர்திறன்கள் குறித்த அதிக விழிப்புணர்வு தேவை என்பதை இது போன்ற நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டுவதாக கூறி அந்த நிகழ்ச்சியின் அகோரத்தையும் அம்பலப்படுத்தினார்கள். கலாச்சாரம் அல்லது மத நடைமுறைகளை விட குழந்தைகளின் நலன்கள் தான் எப்போதும் முன்னுரிமை பெற வேண்டும் என்பதை குழந்தை உரிமை பாதுகாப்பு ஆர்வலர்கள் அதிக அக்கறையுடன் பேசினார்கள்.

இறுதியாக தலாய்லாமாவும் அவருடைய அலுவலகமும், அந்த சிறுவனுக்கு வார்த்தைகளால் ஏற்படுத்திய காயத்திற்காகவும், சிறுவனிடமும், அவரது குடும்பத்திடமும், உலகெங்கிலும் உள்ள அவரது பல நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்று தலாய்லாமா வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டது.

தலாய்லாமா அரசியல் சர்ச்சைக்கு மட்டுமல்ல இது போன்ற பல சர்ச்சைகளுக்கும் உள்ளாகிறவர் தான். 2019 ஆம் ஆண்டு பிபிசி நிறுவனத்தில் கருத்து தெரிவித்த பொழுது ஒரு பெண் தலாய்லாமாவாக தனது வாரிசாக வந்தால் அவர் மிகவும் கவர்ச்சிகரமானவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு அணைத்து தரப்பிலும் எதிர்புகள் எழுந்த பிறகு மன்னிப்பு கேட்டார். குழந்தைகளிடையே கருணையையும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கம் போன்ற மதிப்புகளையும்  ஊக்குவிக்கவே நான் குழந்தைகளை நாடுகிறேன் என்று அவர் தெரிவித்தாலும் திபெத்திய பௌத்தத்தின் பாரம்பரிய நடைமுறைகளில் மறுபிறவி என்ற பெயரால் அவர் ஈடுபடுவது மேற்கண்ட செயலை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இவரின் இந்த செயல்பாடுகளால் குழந்தைகளின் தன்னாட்சி உடலாட்சி பாதிக்கப்படுகிறது என்ற பரவலான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

மறுபிறவிக்காக அவர் பல்வேறு விதமான வித்தைகளை செய்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பெயின் நாட்டில் இருந்து வாசல் டோரஸ் என்ற குழந்தையை மறுபிறவி அடையாளமாக கண்டுபிடித்து திபெத்தின் மடத்திற்கு கொண்டு வந்தார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த குழந்தை மடத்திலிருந்து தப்பித்து ஓடி விட்டது. மடத்தில் வாழ்ந்த என் வாழ்க்கை அனைத்தும் பொய்யானது நான் தலாய்லாமா அல்ல என்று அந்த குழந்தை அறிவித்துவிட்டு மீண்டும் தன் பெற்றோரிடம் சேர்ந்து விட்டது. குழந்தைகள் மூலம் மூடநம்பிக்கைகளையும் திபெத்திய பௌத்தத்தின் மூலம் நிலப்பிரபுத்துவ மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருவதற்கு மற்றொரு சான்று இந்தியாவில் நடந்துள்ளது.

எதிர்ப்பால் வீழ்ந்த மறுபிறவி அரசியல்

ஆந்திர பிரதேசத்தில் கர்னூல் மாவட்டத்தில் நந்தியால் பகுதிக்கு அருகாமையில் சூரிய நந்தி என்ற இடம் உள்ளது. இங்கு ஆறு வயது சிறுமி சாம்பவி என்பவளை தனது மறுபிறவி என்று தலாய்லாமாவால் அடையாளம் காணப்பட்டார். இது நடந்தது 2009 ஆம் ஆண்டு துவக்கத்தில். இந்த சிறுமி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவிற்கு சென்று தலாய்லாமாவுடன் மதச் சடங்குகளில் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளார். இந்த குழந்தையின் பெற்றோர்கள் வீடியோக்களை எடுத்து சாம்பவிக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளும், தீர்க்கதரிசன சக்திகளும் இருக்கின்றன என்று பிரச்சாரம் செய்தார்கள். பல வீடியோக்களை வெளியிட்டார்கள். சாம்பவி திபெத்துக்கு மயக்கத்தில் பயணிப்பதாகவும், டெலிபதி மூலம் தலாய்லாமாவுடன் தொடர்பு கொள்வதாகவும் வதந்திகளை பரப்பினார்கள். இந்த சிறுமி அதுவரை அறியாத தமிழிலும் தெலுங்கிலும் சரளமாக பேசுவதாக சரடு விட்டார்கள். இதன் தொடர்ச்சியாக அந்த சிறுமி ஒரு கோவிலில் தங்க வைக்கப்பட்டு அந்த இடம் குடிசைகள் வேய்ந்த ஆசிரமமாக மாற்றப்பட்டது. அந்த சிறுமியின் முன் பக்தர்கள் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும் காட்சிகள் பரபரப்பாக காணொளியில் அரங்கேற்றப்பட்டது. நாடு முழுவதும் செய்திகள் பரவியது.

சிறுமி சாம்பவியின் தீர்க்க தரிசனத்திற்காக கீழ்க்கண்ட விஷயங்களை சொல்ல வைக்கப்பட்டாள். 400 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வீர பிரம்மேந்திர சுவாமி அவர்களின் கணிப்பின்படி வீர போக வசந்த ராயலு 2012 ஆம் ஆண்டு அவதரிப்பார் அவர் நாத்திகர்களின் இதயங்களையும் கண்களையும் கிழித்து எரிவார் என்று தீர்க்கதரிசனம் கூறினார். மக்களில் ஒரு பகுதி இதை நம்பினார்கள் ஆனால் அவர்களை விட அதிகமாக ரியல் எஸ்டேட் மற்றும் வணிகர்கள் சிறுமியை தெய்வமாக மாற்றி தங்கள் கருவூலத்திற்கான வருமானத்தை அதிகப்படுத்தி கொண்டார்கள்.

ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆசிரமத்தை சுற்றி நிலங்களை வாங்கி போட்டார்கள். வேக வேகமாக ஹெலிகாப்டர் தளம் கட்டப்பட்டது. சூரிய நந்தி என்ற அந்த பகுதிக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டது. அந்தக் கோயிலை சுற்றி இருக்கக்கூடிய நிலத்தை எல்லாம் சிறுமியின் பெற்றோர்கள் ஆக்கிரமித்தார்கள். பக்தர்களுக்கு என்று போடப்பட்ட குடிசைகளில் குளுகுளு ஏசி அறைகளாக மாற்றினார்கள். பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து தலாய்லாமா மூலம் வரவழைக்கப்பட்டவர்கள் சென்ற பிறவியில் தலாய்லாமாவுடன் விளையாடியவர்கள் என்று ஆவணப் படங்களை எடுத்து பரப்பினார்கள்.

தீர்க்கதரிசனம் அடுத்த கட்டத்திற்கு நேரடி அரசியலை நோக்கி சென்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆச்சாரியா நாகார்ஜுனாவை சந்தித்ததாகவும், அவர் மூலம் திபெத்திற்கு சுதந்திரத்திற்காகத தான்  தான் பிறந்ததாகவும், 2012 ஆம் ஆண்டுக்குள் திபெத் சுதந்திரம் அடைந்து விடும் என்றும், 2016 ஆம் ஆண்டு சீனா ஒரு ஜனநாயக நாடாக மாறும் என்றும் சாம்பவி தீர்க்க தரிசனம் என்ற பெயரால் அரசியல் பேச வைக்கப்பட்டார்.

இதை சாதாரணமாக சொல்லவில்லை “நோய்வாய்ப்பட்டிருந்த தலாய்லாமாவை குணப்படுத்திய சாம்பவி சொன்னார்” என்று பிரச்சாரம் செய்தார்கள். இந்த செய்தி சாம்பவி குடும்பத்தைச் சார்ந்தவர்கள், வணிகர்களைக் கடந்து தலாய்லாமாவிற்கு மிகப்பெரும் ஆன்மீக அரசியல் தேவையாக இருந்தது. எனவே சாம்பவி சம்பவத்தை மிகப்பெரிய அதிசய நிகழ்ச்சியாக தலாய்லாமா கட்டமைத்தார்.

மூடநம்பிக்கைக்கு எதிரான வழக்கு

இந்த நடவடிக்கைகள் மக்களை கடுமையாக பாதித்து இருந்தது. இதனால் ஆந்திராவில் இருந்த மனித உரிமை போராளிகள் இந்த மூடநம்பிக்கை தடுக்க வேண்டும் என்றும் குழந்தையின் மீதான மோசமான கட்டுப்பாடற்ற பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதும், மனரீதியான துஷ்பிரயோகத்திலிருந்து குழந்தையை காப்பாற்றவும், பாதிக்கப்படக்கூடிய குழந்தையின் மத மற்றும் அரசியல் சுரண்டலை தடுக்கவும், அவசர தலையீடு கோரி வழக்கு தொடுத்து இருந்தனர். இந்த வழக்கை ஆந்திராவில் இருந்த மனித உரிமை போராளிகள் மற்றும் அறிவுஜீவிகள், இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களில் கூட்டமைப்பின் தலைவர் நாயக், ஜனவிக்னனா வேதிகா, குழந்தை உரிமைகள் குழுக்கள், ஹைதராபாத் பகுத்தறிவாளர் மன்றம், இந்திய தீவிர மனிதநேய சங்கம் போன்ற அமைப்புகள் இந்த வழக்கை தொடுத்திருந்தார்கள். வழக்குத் தொடுப்பது மட்டுமல்ல மக்களிடம் பிரச்சாரத்தையும் துவக்கி இருந்தார்கள்.

 

இந்தப் பின்னணியில் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி 75 வயதான தலாய்லாமா ஆறு வயது நிரம்பிய சிறுமி தனது மறுபிறவி சாம்பவிக்காக கூட்டுப் பிரார்த்தனை நடத்துவதற்கும் மத சொற்பொழிவு நடத்துவதற்கும் ஹைதராபாத் வந்து சேர்ந்தார். இதே காலத்தில் ஹைதராபாத்தில் வழக்கு தொடுத்த அமைப்பினர்கள் குழந்தை கோயிலில் இருக்க வேண்டுமா? பள்ளிக்கூடத்தில் இருக்க வேண்டுமா? என்ற கேள்வியுடன் வலுவான பிரச்சாரம் செய்ததினால் மக்கள் விழிப்படைந்தனர். அறிவிஜீவிகளும், மனித உரிமை போராளிகளும் பொது தளத்திற்கு வந்தனர். தங்களது பிரச்சாரத்தில் இவை எல்லாம் தலாய்லாமாவின் திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுவதை அம்பலப்படுத்தினார்கள். இயற்கையாகவே தலாய்லாமாவின் மீது மக்கள் கடும் கோபம் கொண்டதினால் அங்கிருந்து தலாய்லாமா பின் வாங்கினார்.

தீர்ப்புகள் அடுத்தடுத்து வழங்கப்பட்டன. முதலில் குழந்தையின் பெற்றோர்களைப் பற்றி விசாரிப்பதற்கு உத்தரவிடப்பட்டது. சிறுமியின் உண்மையான தாய் இறந்துவிட்டார் என்பதே அப்போது தான் தெரிய வந்தது. சிறுமியின் தந்தையின் இரண்டாவது மனைவி இந்த குழந்தையை தெய்வக் குழந்தை என்று இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வந்ததையும் அறிய முடிந்தது. குழந்தையின் தாய் பொய் சொன்னதாகவும் குழந்தை சுரண்டப்படுவதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டார்கள்.

குழந்தை அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்குச் செல்ல வேண்டும், குழந்தையை ஒரு தெய்வமாக சித்தரிக்க முடியாது, மேலும் குழந்தைக்கு தெய்வீக சக்திகள் இருப்பதாக நம்ப வைக்க கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குழந்தையின் பெற்றோர்கள் குழந்தைக்கு தனியார் பள்ளியில் கல்வி வழங்குகிறோம் என்று கேட்டார்கள். அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும், குழந்தை பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை என்று பெற்றோர்கள் கூறுவதை ஏற்க முடியாது என்றார். தீர்ப்பு பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது

குழந்தை இருக்க வேண்டிய இடம் கல்வி நிலையம் தான்

குழந்தை சாம்பவி இயற்கைக்கு அப்பாற்பட்டவர் என்று அவருடைய வழக்கமான இயல்பான உள்ளார்ந்த குழந்தை பருவ உரிமைகளை பறிக்க தாய் திருமதி உஷாராணிக்கு உரிமை இல்லை என்றும், இயற்கை சூழலில் இருந்து குழந்தையை தனிமைப்படுத்தி தெய்வீக சக்திகளை கொண்ட ஒரு நபர் என்றும் பக்தர்களை ஈர்க்கும் ஒரு இடத்தில் அடக்கி வைக்கப்பட்ட ஒரு துறவியை போல் நடந்து கொள்ளக் கூடாது என்றும், குழந்தை சாம்பவியின் மென்மையான மனதில் எந்த மாயத் தோற்றத்தையும் உருவாக்க கூடாது என்று அக்குழந்தையில் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவருக்கும் உத்தரவிடப்பட்டது. குழந்தையின் பெற்றோர்களும் குழந்தையும் தங்கள் விருப்பப்படி எந்த மதத்தை பின்பற்றவும் உரிமை உடையவர்கள் என்பதையும் மனித உரிமை ஆணையம் தெளிவுபடுத்தியது. அதே நேரத்தில் குழந்தை ஒரு தெய்வீக சக்தி என்று மற்றவர்களை நம்ப வைக்க கூடாது என்று கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பு சாம்பவியின் உரிமைகளுக்கு கிடைத்த வெற்றி தான் என்றாலும் இது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான தீர்ப்பாகும். சிறுமியின் பெற்றோர்களும் இந்த தீர்ப்பை மீற முடியாது என்று நீதிபதி கூறினார். குழந்தைகளின் உரிமைகளை உயர்த்தி பிடிக்கும் அனைவருக்கும் இது ஒரு வெற்றியாக கருதப்பட்டது. இலவச கட்டாய கல்வி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதல் உத்தரவு இது, இந்தச் சட்டத்தின் படிதான் குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்று சாம்பவியின் பெற்றோர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. குழந்தையை ஆசிரமத்திலேயே தங்க வைத்து ஆசிரியர்களை வைத்து கல்வி போதிக்கிறோம் என்று சொன்னதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. மனுதாரர்கள் சார்பில் குழந்தைக்கு எதார்த்தத்தை மீண்டும் கொண்டுவர உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது

ஹைதராபாத்தில் இருந்து பின் வாங்கிய பிறகு தலாய்லாமா சாம்பவி விவகாரம் குறித்து வாய் திறக்காமல் இருந்தார். பொதுவாக சீனாவை வெறுப்பவர்கள் தலாய்லாமாவை விருப்பத்துடன் அணுகுவார்கள். ஆனால் அவரது ஆபத்தான, அதே நேரத்தில் முட்டாள்தனமான செயல்களைப் பற்றி அறியக்கூடியவர்கள் அவரை விரும்ப மாட்டார்கள். அவர் குழந்தைகளை மத நடவடிக்கில் ஈடுபடுத்துவதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு ஒரு அரிய வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தார்கள். அவரின் இந்த செயல்கள் தடுக்கப்படவில்லை என்றால் அவர் மீண்டும் ஒரு குழந்தையை இவ்வாறு பலிகடாவாக மாற்றுவதற்கு தயங்க மாட்டார் என்றும் கருத்துக்கள் மேலோங்கியது.

 

தலாய்லாமாவின் இந்த நடவடிக்கைகளை உயர்மட்ட ஊடகங்கள் அம்பலப்படுத்த தயங்கிய ஒரு பயங்கரமான சூழலில், கடுமையான எதிர்ப்புகளையும் மீறி ஆந்திரப்பிரதேச மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அறிவுஜீவிகள், முற்போக்காளர்கள் அம்பலப்படுத்தினார்கள். அவர்களுக்குத் தான் நோபல் பரிசு வழங்க வேண்டும். நோபல் பரிசை பெறக்கூடிய வரும், கொடுக்கக் கூடியவர்களும் ஆதிக்க செல்வாக்கில் இருப்பதினால் இங்கே விருதுகள் இடம் மாறி போய்க் கொண்டிருக்கின்றன.

தலாய்லாமா தன்னுடைய தவறுகளை திருத்திக் கொள்வதற்கான முயற்சியில் இறங்கவில்லை. குழந்தைகளின் உடலாட்சி. தன்னாட்சி உரிமைகளை விட அவரின் திபெத்திய அதிகாரம், நிலப்பிரப்புத்துவ உடமையாளரின் வர்க்க உணர்வும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சேவகம் மட்டும் தான் முக்கியமாக தெரிகிறது. எனவே மறுபிறவி என்ற குழந்தைகளை வதைக்கும் செயலை தனது அரசியலுக்காக முன்னிறுத்துகிறார். சீன சோசலிசம் இதை வென்றெடுக்கும்.

அ.பாக்கியம்

சமத்துவ சமுதாயம் நோக்கி

  தோமஸ் பிக்கெட்டி எழுதிய சமத்துவ சமுதாயம் நோக்கி என்ற புத்தக அறிமுக கூட்டத்தில் , புத்தகத்தின் மொழிபெயர்ப் பாளர் அக்களூர்இரவி அவர்களை கௌரவ...