Pages

வியாழன், மார்ச் 26, 2026

65 இனச் சிறுபான்மையினரின் கல்விச் சாதனைகள்


அ.பாக்கியம்

1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட கல்வி வளர்ச்சித் திட்டங்களில் இனச் சிறுபான்மையினருக்கான கல்வி திட்டம் என்பது ஒரு முக்கிய அங்கமாக மாறியது. முதல் 50 ஆண்டுகள் வரை அதாவது 1998 ஆம் ஆண்டு வரை இனச் சிறுபான்மையினர் கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றங்களை பெருமைமிகு வளர்ச்சியாக சீன மக்கள் குடியரசும் இனச் சிறுபான்மையினரும் கருதுகின்றனர்.

1997 ஆம் ஆண்டு தரவுகளின் படி 18.15 மில்லியன் இனச் சிறுபான்மை மாணவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக  உள் மங்கோலியா, நிங்சியா, ஜின்ஜியாங், திபெத், கிங்காய், குவாங்சி, குய்சோ மற்றும் யுன்னான் ஆகிய சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பிரதேசங்களில் படிக்கும் வயதுடைய மொத்த குழந்தைகளின் சேர்க்கை விகிதம் 97.65 சதவீதமாக உயர்ந்தது. இதே பகுதிகளில் பெண்களின் சேர்க்கை விகிதம் அதுவரை இல்லாத அளவிற்கு 97.05% என்ற அளவில் உயர்ந்தது என்றால் மாற்றங்களின் வேகத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏற்றம் பெற்ற கல்வி நிலையங்கள்

இனச் சிறுபான்மை மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு விதமான கல்வி நிலையங்கள்உருவாக்கப்பட்ட . 1997ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட வகையில் கல்வி நிலையங்கள் செயல்பட்டு வந்தது. 101 உயர்கல்வி பொதுப்பள்ளிகள் செயல்பட்டன. இந்தப் பள்ளிகளில் இளங்கலை பட்டங்கள், அதற்கு ஏற்பட்ட படிப்புகளையும் வழங்கும் பாடத்திட்டங்கள் அமைந்திருந்தது. இந்த பள்ளிகளின் நோக்கம் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் இனச் சிறுபான்மை மாணவர்கள் செல்வதற்கான படிப்பு முறைகள் இருந்தன. ஜூனியர் மற்றும் சீனியர்  உயர்நிலைப் பாடங்களை கற்றுக் கொடுக்கக்கூடிய 11,563 நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டது. குழந்தைகளுக்கு அடிப்படையான கட்டாய கல்வியை வழங்கக்கூடிய 1,03,139 தொடக்கப் பள்ளிகள் இருந்தன. இனச் சிறுபான்மை யினருக்கான கலாச்சாரங்கள் மொழிகள் போன்றவற்றில் பயிற்சி அளிப்பதற்காக இனச் சிறுபான்மை பிராந்தியங்களில் பணிபுரிவதற்கான ஊழியர்களையும் நிபுணர்களையும் உருவாக்கக்கூடிய 12க்கும் மேற்பட்ட சுயாதீனமான தேசிய நிறுவனங்கள் செயல்பட்டன. 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி பள்ளிகள் உயர்நிலைக் கல்வியை போதிப்பதற்காக உருவாக்கப்பட்டு இருந்தது.

மழலையர் பள்ளிகளுக்கும் தொடக்கப் பள்ளிகளுக்கும் தேவையான அளவு ஆசிரியர்களை உருவாக்கக்கூடிய நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதே நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கு தொழிற்கல்வி பயிற்றுவிக்கப் பட்டது. 2900க்கு மேற்பட்ட தேசிய இன உறைவிட பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்தது. சிறுபான்மை மாணவர்களுக்கான இன மொழி கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பாடத்திட்டங்கள் இந்த உறைவிடப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டன.

300க்கும் மேற்பட்ட தேசிய இன தொழில்முறை நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டது. இந்த தொழில்முறை நடுநிலைப் பள்ளிகளில் சிறுபான்மை பிராந்தியங்களுக்கான பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப பயிற்சியும், தொழிற்கல்வி பயிற்சியும் இவற்றில் வழங்கப்பட்டன. 2500 க்கு மேற்பட்ட தேசிய இன தொடக்கப்பள்ளிகள் இருந்தது. சிறுபான்மை இன குழந்தைகளுக்கான தொடக்கப் பள்ளிகளில் இனம் சார்ந்த மரபுகளையும்,  மொழிகளுடன் கூடிய பயிற்சிகளும்  வழங்கப்பட்டன. மிக அதிகமான மேய்ச்சல் நிலப்பகுதிகளும், மலைப்பகுதிகளும் இருக்கக்கூடிய 270 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு இந்தப் பகுதிகளில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறைவிட பள்ளிகளை உருவாக்கி இருந்தார்கள்.

மேற்கண்ட அடிப்படையான கல்வி அமைப்புகள் தவிர மாணவர்கள் உயர்கல்வியில் நுழைவதற்கான கல்வி தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய முறையில் 200க்கும் மேற்பட்ட சிறப்பு கல்வி நிறுவனங்களின் அமைத்திருந்தார்கள். சீன மக்கள் குடியரசும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் எடுத்த முயற்சிகள் சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்விச் சாதனைகளை உருவாக்கியது.

திபெத்தில் சிறப்பு முயற்சிகள்

மிகவும் கடுமையான இயற்கை சூழலை கொண்டிருந்த திபெத்திய பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்றால் கல்வி முறையில் வளர்ச்சி மிகவும் அவசியமாக இருந்தது. சீர்திருத்த காலங்களுக்குப் பிறகு அதாவது 1984 ஆம் முதல் திபெத்தில் இருக்கக்கூடிய மாணவர்கள் திபெத்திற்கு வெளியே வந்து உயர்கல்வியில் பயிற்சி பெறுவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கினார்கள். அந்தத் திட்டத்தின்படி பெய்ஜிங், தியான்ஜின், சோங்கிங், ஹெனான், ஹெபே, ஷான்டாங், ஜியாங்சு, ஷான்சி, ஹுனான், ஹூபே, அன்ஹுய், ஷான்சி மற்றும் யுன்னான் ஆகிய இடங்களில் திபெத்தியர்களுக்காக சிறப்பு வகுப்புகளை அரசாங்கம் நடத்தி வருகிறது.

திபெத்திற்கு தேவையான திறமையாளர்களை பயிற்றுவிப்பதே இந்த கல்வி நிலையங்களின் நோக்கமாக இருந்தது. பெரும்பாலான வகுப்புகள் தொழிற்கல்வியுடன் இணைந்து ஏழு ஆண்டுகள் கற்பிக்கப்பட்டது. இந்தப் பள்ளிகளுக்கு 11 முதல் 14 வயதுடைய திபெத்திய குழந்தைகள் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று படிக்க வருகிறார்கள். இவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. பட்டம் பெற்றதும் அவர்கள் அனைவரும் திபெத்திற்கு வேலை செய்வதற்காக திரும்புகிறார்கள். தங்களது படிப்பை தொடர விரும்புகிற ஒரு சிலருக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்படுகிறது. மற்றவர்கள் திபெத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்ற முன்னுரிமையில் இந்தப் பள்ளிகள் நடத்தப்பட்டன.

சீனாவின் வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் பொருளாதார ரீதியாக வறுமையில் இருந்த மாவட்டங்களில் உள்ள இனச் சிறுபான்மையினர் கல்வி வளர்ப்பதற்கு பெரும் உதவி செய்தார்கள். சுமார் 80க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கும் துவக்கப் பள்ளிகளுக்கும் நிதி உதவி செய்தனர். 4000 மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உதவி செய்ததுடன் இடையில் நின்று போகும் மாணவர்களை மீண்டும் படிக்க வைப்பதற்கான உதவிகளையும், லட்சக்கணக்கான மதிப்புகள் உடைய கற்பித்தல் பொருள்களையும் வழங்கி இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வியை மேம்படுத்த ஊக்கப்படுத்தினார்கள். கல்வியில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இந்தக் கொள்கை கடைபிடிக்கப்படுகிறது.

சீனாவின் மக்கள் தொகை அடிப்படையில் இனச் சிறுபான்மையினர் ஒன்பது(8.89) சதவீதம் மட்டுமே. 1949 ஆம் ஆண்டு உயர்கல்வி சேர்க்கையில் இன சிறுபான்மையினர் ஒரு சதவீதம் மட்டுமே இருந்தனர். 2000 ஆண்டு இந்த எண்ணிக்கை ஆறு சதவீதமாக உயர்ந்தது. பல்கலைக்கழக சேர்க்கை அடிப்படையில் பார்க்கின்ற பொழுது 2000ம் ஆண்டிலும் உயர்கல்வியில் இனச் சிறுபான்மையினர் ஒட்டுமொத்த சீனாவுடன் ஒப்பிடுகிற பொழுது பின்தங்கி இருந்தனர். 2015 ஆம் ஆண்டு சீன அமைச்சரவை இனச் சிறுபான்மை கல்வியின் வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து திட்டங்களை உருவாக்கியது.

2020 ஆம் ஆண்டிற்குள் இனச் சிறுபான்மை பகுதிகளில் கல்வியின் வளர்ச்சி ஒட்டுமொத்தமான தேசிய கல்வி வளர்ச்சிக்கு நிகராக இருக்க வேண்டும் என்றும் அல்லது அதைவிட அதிகமாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தனர். எந்த ஒரு சிறுபான்மை பிராந்தியத்தையும் அல்லது சிறுபான்மையினரையும் பின்தங்க விடக்கூடாது என்றும், இனச் சிறுபான்மை கல்வியின் அனைத்து துறை வளர்ச்சியை  ஊக்குவிக்க வேண்டும் என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுத்த ஆரம்பித்தது. இந்த முயற்சியின் விளைவாக 2020 ஆம் ஆண்டில் இனச் சிறுபான்மையினரின் உயர்கல்வி அடைவு விகிதம் 8.93 சதவீதமாக உயர்ந்தது.

சிறுபான்மை இன மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு

உதாரணமாக அனைத்து மட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் இனச் சிறுபான்மை மாணவர்களின் எண்ணிக்கை 36 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது சீனாவில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த மாணவர் எண்ணிக்கையில் 11.24 சதவீதமாகும். அனைத்து மட்டங்களிலும் உள்ள இனச் சிறுபான்மை ஆசிரியர்களின் எண்ணிக்கை 1.57 மில்லியன் ஆக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை சீனாவின் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில் 8.84% ஆகும்.

சீனாவின் இனச் சிறுபான்மை மக்கள் தொகை விகிதமான 8.89 சதவீதத்துடன் ஒப்பிடுகிற பொழுது அதற்கு சமமான அளவில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனையாகும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சிறுபான்மை மாணவர்களின் சேர்க்கை விகிதமும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் ஹான் பெரும்பான்மையினரின் எண்ணிக்கை விட சதவீத அடிப்படையில் அதிகமாக உள்ளது. அடிப்படைகல்வி மட்டத்தில் சிறுபான்மை மாணவர்களின் சேர்க்கை விகிதம் 11.83 சதவீதமும், குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகளில் 11.27 சதவீதமும், தொடக்கப் பள்ளிகளில் 12.41 சதவீதமும், இளநிலை தொழிற்கல்வி பள்ளிகளில் சேர்க்கை விகிதம் 62.17 சதவீதமும் இருந்தது. குறிப்பாக மாணவர்களுக்கு தொழிற்கல்வி அளிப்பதில் அரசு முன்னணியில் இருந்தது.

இனச் சிறுபான்மை ஒட்டு மொத்த மாணவர்களின் செயற்கை விகிதம் 8.84 சதவீதமாக இருந்த சூழலில், உயர்கல்வி துறையில் இனச் சிறுபான்மை மாணவர்களின் சேர்க்கை விகிதம் 8.93 என்ற அளவில் இருந்தது. இது இனச் சிறுபான்மை மக்கள் தொகை சதவீதத்தை விட அதிகமாகும்.

இளங்கலை பட்டப்படிப்பு கல்வி நிலையங்களிலும், ஜூனியர் கல்லூரிகளிலும் இனச் சிறுபான்மையினரின் சேர்க்கை விகிதம் 10.01 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் முதுகலை பட்டப்படிப்பில் இனச் சிறுபான்மை மாணவர்களின் சதவீதம் 5.57 மட்டுமே இருந்தது. இதேபோன்று இணைய வழியில் வழங்கப்படும் பிற உயர்கல்வி  திட்டங்களில் சிறுபான்மை இனத்தவரின் சேர்க்கை விகிதம் 7.02 சதவீதமாக இருந்தது. 2020 ஆம் ஆண்டு இந்த இடைவெளியை சமப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் சீன மக்கள் குடியரசு மேற்கொண்டது.

இனச் சிறுபான்மையினர் ஆசிரியர்களின் உயர்வு

இனச் சிறுபான்மை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்றால் ஆசிரியர்களின் எண்ணிக்கை போதுமான அளவிற்கு இருக்க வேண்டும் அதிலும் குறிப்பாக இனச் சிறுபான்மை பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் மூலமாகத்தான் இந்த முன்னேற்றத்தை காண முடியும் என்று முடிவு செய்து அந்தத் துறையில் கவனம் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக 1978 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சிறுபான்மை இன ஆசிரியர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்தது.

2016 இல் தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் 10.16 சதவீதமும், நடுநிலைப் பள்ளிகளில் 9.15 சதவீதமும், மேல்நிலைப் பள்ளிகளில் 8.14 சதவீதமும், உயர்கல்வி நிறுவனங்களில் 5.93 சதவீதமும் இன ஆசிரியர்கள் பணிபுரிந்தார்கள். தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் மொத்த ஆசிரியர்களில் 4.78 சதவீதம் ஆசிரியர் இருந்தார்கள். குறிப்பாக இனச் சிறுபான்மையினர் கல்வி சமத்துவத்தை அடைவதற்கு தனியாதுறையை அனுமதித்தாலும் அவைகளின் செயல்பாட்டில் போதுமான முன்னேற்றம் இல்லை என்பதையும் இந்த விவரங்கள் காட்டுகிறது.

இனச் சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சிக்கு ஒட்டுமொத்தமான கல்வி முதலீடு என்பதும் மிக முக்கிய காரணமாகும். 2002 ஆம் ஆண்டு கல்விக்கு மொத்த தேசிய முதலீடு 548 பில்லியன் யுவானை எட்டியது. இது 1997 இல் 253.2 பில்லியன் யுவான்கள் ஆகும். அதாவது 116.5% வளர்ச்சியை காட்டுகிறது. 1952 ஆம் ஆண்டு 1.2 பில்லியன் யுவானாக மட்டுமே இருந்தது. அதனுடன் ஒப்பிடுகிற பொழுது 472 மடங்கு அதிகமாகும்.

கல்வியில் நிதி ஒதுக்கீட்டின் சராசரி ஆண்டு வளர்ச்சி என்பது 1997 முதல் 2002 வரை 16.7% ஆகவும் 1952 முதல் 2002 வரை 13.1% ஆகவும் இருந்தது. 2002 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகும் கல்விக்கான முதலீடுகளை தேசிய அரசாங்கம் மிகப்பெரும் அளவிற்கு அதிகரித்து வருவது சீனாவின் இன சிறுபான்மை கல்வி வளர்ச்சி உலகத்தில் வளர்ந்த நாடுகளுடன் போட்டியிடக் கூடிய அளவிற்கு மாற்றி உள்ளது. அனைத்து மட்டங்களிலும் அரசாங்க வரவு செலவுத் திட்டங்களில் கல்வி முதலீடு என்பது மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு முதலீடாக மாறி உள்ளது.

சீனாவில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் பின்தங்கி இருந்த இனச் சிறுபான்மையினரின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பல்வேறு விதமான பொருளாதார சமூக நடவடிக்கைகளுக்கு கல்வி அடிப்படையான தேவை என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சீன அரசாங்கமும் முடிவு செய்தது. 1965 ஆம் ஆண்டு வரை முதல் கட்ட வளர்ச்சியும் 1978 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சீர்திருத்த அடிப்படையில் கல்வியின் தரத்தை நிபுணர்களை உருவாக்கக்கூடிய அளவிற்கு மாற்றி அமைத்தது. இதன் விளைவாக இனச் சிறுபான்மையினர் அனைவரும் ஒட்டுமொத்த சீன சமூகத்தின் வளர்ச்சியில் சமபங்கினை செலுத்தக் கூடியவர்களாக மாறினார்கள்.

அ.பாக்கியம்.

வியாழன், மார்ச் 19, 2026

64 கலாச்சார புரட்சியும் இனக்கல்வின் வீழ்ச்சியும்




அ.பாக்கியம்

சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட பிறகு ஆழமான ஆய்வுகள் அடிப்படையில் இனச் சிறுபான்மையினருக்கான கல்வி தங்கு தடையின்றி வளர்ச்சியில் தடம் பதித்து வந்தது. ஆனால் சீன அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் சீன சமூகத்தில் புதிய சிக்கல்களை உருவாக்கியதால் இனச் சிறுபான்மை கல்வியும் சில பாதகமான நிலைமைகளை எதிர்கொண்டன.

1957-58 ஆம் ஆண்டுகளில் சீனாவில் வலதுசாரி எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரமாக மாசேதுங் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1958-60 ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் அதிவேக முன்னேற்றம் தேவை என்ற திட்டத்தின் அடிப்படையில் பெரும் பாய்ச்சல் இயக்கம் துவக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை கலாச்சார புரட்சி தீவிரப்படுத்தப்பட்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த மூன்று இயக்கங்களும் சீன சமூகத்தில் எதார்த்தமான நிலைமைகளிலிருந்து செயல்படக்கூடிய முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் விளைவாக சில பாதகமான அம்சங்கள் தலைதூக்கியது. இனக் கல்விக்கான திட்டங்கள் சிதைந்ததும் அவ்வாறு ஏற்பட்ட பாதகமான அம்சங்களில் ஒன்றாகும்.

சித்தாந்தமே அனைத்தையும் சீர்படுத்தும்

இக்காலகட்டங்களில் மாவோ வின் சித்தாந்தங்களை போதிப்பது தான் தேசத்தின் முன்னுரிமை பணியாக மாற்றப்பட்டது. வெவ்வேறு இனக்குழுக்களின் பாரம்பரியங்களையும் கலாச்சாரங்களையும் உள்வாங்கிக் கொண்டு வர்க்க போராட்டத்துடன் இணைப்பது என்ற நிலையை கைவிட்டு வர்க்க போராட்டம் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டது. இனக்குழுக்களின் கலாச்சார மாண்புகள், மதங்கள், பழக்கவழக்கங்கள் போன்ற தனித்துவமான தன்மைகள் இணக்கமான முறையில் அணுகப்பட்ட நிலைமைகள் மாறி, பொதுவுடமை சித்தாந்தத்திற்கு எதிரானவையாக கருதும் போக்கு முன்னுக்கு வந்தது.

இதன் விளைவாக இனச் சிறுபான்மையினரின் கலாச்சார பண்புகள் பாரம்பரியங்கள் அனைத்தும் நிலப்பிரபுத்துவ குணாம்சங்களைக் கொண்டவையாகவும், பிற்போக்கு தன்மை வாய்ந்தவை என்றும், அவைகள் பயனற்றவை என்றும் ஒதுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இனக்குழுக்களின் கலாச்சாரங்களை பற்றி ஏற்கனவே பாடத்திட்டங்களில் சொல்லப்பட்டிருந்த விளக்கம் மாற்றப்பட்டு மறு விளக்கம் செய்யப்பட்டது. கல்வியைப் பெறுவதில் இனச் சிறுபான்மை மக்களுக்கு பிரத்தியேகமான சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பாடபுத்தகங்களில் மாவோயிச சிந்தனைகளும் சோசலிச சித்தாந்தமும் முன்னிலைப்படுத்தி மற்ற அனைத்தும் தவிர்க்கப்பட்டன.

இதன் விளைவாக ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சாரம் அணுகு முறையில் பல இனச் சிறுபான்மை மாணவர்கள் படிப்பதும், வாசிப்பதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பின் விளைவாக இனச் சிறுபான்மை மாணவர்களின் கல்வித் திறன் குறைய ஆரம்பித்தன. கலாச்சாரப் புரட்சியின் தாக்கம் சீன சமூகத்தில் பரவலான விளைவுகளை ஏற்படுத்தினாலும் இனச் சிறுபான்மை மக்களின் கல்வியில் பாதிப்புகள் ஏற்படுத்தியது கண்கூடாக தெரிந்தது.

1976 ஆம் ஆண்டு தோழர் மாசேதுங் மறைந்த பிறகு கலாச்சார புரட்சி மற்றும் அதனால் ஏற்பட்ட தவறுகள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட்டன. அந்தப் பரிசீலணையின் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் மாற்றங்களை உருவாக்கினார்கள். இதேபோன்று இனச் சிறுபான்மை மக்களின் கல்வியில் ஏற்பட்ட மிகப்பெரும் சேதாரத்தையும் சரி செய்ய வேண்டும் என்ற மிகப்பிரமாண்டமான பணியினை சீன கம்யூனிஸ்ட் கட்சி புதிய தலைமை முடிவெடுத்து மாற்றங்களை நோக்கி பயணித்தது.

சீர்திருத்தமும் இனக் கல்வியின் மீட்சியும்

கலாச்சாரப் புரட்சிக்கு பிறகு அனைத்து தவறுகளையும் சரி செய்வது என்று முடிவெடுத்த பொழுது, சீனா கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரும் பணியாக மாறியது பெரும்பாதிப்புக்கு உள்ளான பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகும். அதுவரை அரசியல் சித்தாந்த போதனைகளை மட்டுமே பிரதான திட்டங்களாக மாற்றப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் பொருளாதாரத்தில் வெளிப்படையாக தெரிந்தது. மற்ற அனைத்தையும் விட அவசரப் பணியாக பொருளாதார மேம்பாடு முன்வைக்கப்பட்டது. அதுவரை இருந்த உற்பத்தி முறைகளில் கடைபிடிக்கப்பட்ட உத்திகள் மாற்றப்பட்டு புதிய  உத்திகள் புகுத்தப்பட்டன.

திறன் நிறைந்த மனித வளங்களால் மட்டுமே பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்றும், இதற்காக திறன்மிக்க நிபுணர்களை உருவாக்குவதும் உற்பத்தி திறன் வாய்ந்த உழைப்பாளர்களை பெருமளவு உருவாக்குவதும் அடிப்படை தேவையாக அமைந்தது. இந்த இரண்டையும் நிறைவேற்றுவதற்கு முன்தேவையாக மட்டுமல்ல அடிப்படைத் தேவையாகவும் கவனம் செலுத்த வேண்டியது கல்வித் துறையாக அமைந்தது. இவற்றை அறிந்து கொண்டு கல்வித் துறைக்கான முக்கியத்துவத்தை சீன மக்கள் குடியரசு சீன கம்யூனிஸ்ட் கட்சியும் அமல்படுத்த ஆரம்பித்தனர். புதிய ஜனநாயக புரட்சிக்கு பிறகு கல்வி நோக்கங்கள் குறித்து பல்வேறு அம்சங்களை முன்னிறுத்தி செயல்பட்டார்கள். ஆனால் தற்பொழுது சீர்திருத்த காலத்தில் கல்வி நோக்கம் என்பது பொருளாதார நோக்குடையதாகவும், நாட்டின் உற்பத்தி திறனை வளர்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

கல்வியின் நோக்கம் பொருளாதார நோக்குடையதாகவும், திறன்மிகு மனித வளங்களை உருவாக்குவதற்கும் என்று மாறுகிற பொழுது சீனாவில் இருக்கின்ற இனச் சிறுபான்மை மக்களின் பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட கல்விக்கான சிறப்புத் திட்டங்கள் பாதிக்கப்படும் என்பதை அறிந்தனர். இந்த பாதிப்புகளால் பொதுவான தேர்வுப் போட்டிகளில் இனச் சிறுபான்மையினர் பங்கேற்க இயலாத நிலமை உருவாகும். இதுபோன்ற இன்னும் பல இடர்பாடுகளை ஆய்வு செய்து 1981 ஆம் ஆண்டில் இனச் சிறுபான்மையுருக்கான தேசிய கல்வி மாநாட்டை மீண்டும் விரிவான முறையில் நடத்தினார்கள். இந்த மாநாட்டின் முடிவுகளின் படி சில குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.

இனச் சிறுபான்மை பகுதிகளில் அடிப்படை கல்வியை விரிவாக்கம் செய்தனர். இந்த மாணவர்களிடம் போட்டித் தேர்வு எதிர்கொள்வதற்கான பாடத்திட்டங்களையும், அதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் செய்தார்கள். தொழில்நுட்ப திறனை வளர்ப்பதற்காக புதிய பள்ளிகளை நிறுவினார்கள். தொழிலாளர்களின் திறன்களை அதிகப்படுத்துவதற்காக இனச் சிறுபான்மையினர் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் சேர்வதற்காக முன்னுரிமை முறைகளை அமல்படுத்தினார்கள். அதாவது இனச் சிறுபான்மை மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி, அதன் மூலம் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்கினார்கள்.

சீர்திருத்த காலத்தில் எடுத்த மிக முக்கியமான திட்டம் என்பது உறைவிட பள்ளியாகும். இனச் சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சியில் இந்த திட்டம் பெரும் மாற்றங்களை உருவாக்கியது என்றால் மிகையாகாது. இனச் சிறுபான்மை மக்கள் எல்லையோரங்களிலும், மலைப்பகுதிகளிலும், பரந்த மேய்ச்சல் நிலங்களிலும் வாழ்ந்தார்கள். இவர்களது பிள்ளைகள் பள்ளிக்கு வந்து செல்வது, அதற்கான பொருளாதாரங்களை எதிர்கொள்வது போன்றவை கடினமாக இருந்தது. எனவே அரசு உறைவிட பள்ளி ஆரம்பித்தது. இந்த உறைவிட பள்ளிகள் முதல் முதலாக ஆரம்பிக்கிற பொழுது தொடக்கக் கல்விக்கு மட்டுமே அமலாக்கினார்கள். 1984 ஆம் ஆண்டு திபெத்திய பகுதியில் மாணவர்கள் உயர்தர கல்வியை இலவசமாக பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மேல்நிலைப் பள்ளிகளிலும் உறைவிட பள்ளியை ஆரம்பித்தார்கள். இந்த உறைவிட பள்ளிகளில் அனைத்தும் அரசு செலவில் இலவசமாக வழங்கப்பட்டது.

இரு சட்டங்களும் இன அடையாளங்களும்

சீர்திருத்தத்தின் தொடர்ச்சியாக 1984 ஆம் ஆண்டு இரண்டு முக்கியமான சட்டங்கள் இயற்றப்பட்டன. ஒன்று தேசிய சட்டம் மற்றொரு சட்டம் பிராந்திய சுயாட்சி சட்டம். இந்த இரண்டு சட்டங்களும் இனச் சிறுபான்மை மக்களின் கலாச்சாரத்தின் தனித்தன்மை வாய்ந்த உரிமைகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இனச் சிறுபான்மையினரின் தனித்துவமான மாண்புகள், கலாச்சார புரட்சி காலத்தில் அழிக்கப்பட்ட அடையாளங்கள், தற்போது இந்தச் சட்டத்தின் மூலமாக மேம்பட ஆரம்பித்தது. குறிப்பாக பன்முக கலாச்சார உறவுகளை மேம்படுத்தக்கூடிய முறையில் ஜின்ஜியாங் மாகாணத்தில் இச்சட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இங்குள்ள இனச் சிறுபான்மையினரின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய முறையில் உள்ளூர் அளவிலான பாடத்திட்டங்கள் தொகுக்கப்பட்டன.

உதாரணமாக, கலாச்சார புரட்சி காலத்தில் பின்தங்கிய கலாச்சாரங்கள், நிலப்பரப்புத்துவ கலாச்சாரங்கள் என்று முத்திரை குத்தி ஒதுக்கப்பட்டவை தற்போது சீர்திருத்த நடவடிக்கை மூலமாக பொருத்தமான கலாச்சார மாண்புகள் அனைத்தும் சிறுபான்மை  யினரின் கலாச்சார இலக்கியமாக அறிமுகப்படுத் தப்பட்டு கற்பிக்கப்பட்டது. இனச் சிறுபான்மை மக்களின் மொழியை பயன்படுத்துவதில் இருந்த அனைத்து தடைகளும் அகற்றப்பட்டு சிறுபான்மை இன மக்களின் கல்வி முறைகளில் தங்கள் மொழியை பயன்படுத்துவதற்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டன. சிறுபான்மை மக்களின் தாய் மொழியில் இருக்கக்கூடிய பாடங்கள் அனைத்தையும் மேம்படுத்தி முறைப்படுத்தி தொகுத்து வெளியிட்டார்கள்.

சீர்திருத்த காலத்திற்குப் பிறகு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் பல்கலைக்கழகங்களிலோ அல்லது கல்லூரிகளிலோ சேருகின்ற வரை அனைத்தையும் தங்களுடைய தாய் மொழி வழியாக பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலைமையில் உருவாக்கினார்கள். இக்காலங்களில் கடைபிடிக்கப் பட்ட இரு மொழிக் கொள்கை என்பது சிறுபான்மை மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இனச் சிறுபான்மை மாணவர்கள் தங்களின் தேசியத்தை அறிந்து கொள்வதற்கும், சீன மொழியின் மூலமாக இதர கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்கும், அவற்றில் சிறந்து விளங்குவதற்குமான வாய்ப்புகளை இந்த இரு மொழிக் கொள்கை உதவி செய்தது. மேற்கண்ட கல்வி முறை ஒரு மாணவர் தான் விரும்பிய வகையில் உருவாவதற்கான சூழலை அமைத்துக் கொடுத்தது. இதனால்தான் இந்த மக்கள் கல்விக் கொள்கையை வரவேற்றனர்.

மோதல்களும் சீன ஒற்றுமையும்

சமூகத்தின் பிரச்சினைகளை கல்விக் கொள்கையுடன் இணைத்து பார்ப்பதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு தகுதி பெற்றிருந்தது. சீர்திருத்த காலத்திற்குப் பிறகு இனச் சிறுபான்மை யினருக்கான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக இன அடையாளங்கள் மேலோங்கி மற்ற இனங்களுக்கு எதிரான உணர்வுகள் உருவாகி வேற்றுமைகளும் விரோதங்களும் வளர்ந்து விடாமல் இருப்பதற்கான முறைகளில் கல்விக் கொள்கை அமைய வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தினார்கள். இவ்வாறு சிந்திப்பதற்கு அங்கு நடைபெற்ற பல சம்பவங்கள் காரணமாகவும் அமைந்திருந்தது.

1987 மற்றும் 88 ஆம் ஆண்டுகளில் திபெத்தில் பெரும் கலவரம் நடைபெற்றது. இந்தக் கலவரத்தை தலாய்லாமாவின் ஆதரவாளர்களுடன் அமெரிக்க தூண்டுதலில் நடைபெற்றது. 1988 ஆம் ஆண்டு ஜின்ஜியாம் மாகாணத்தில் உய்குர் இனத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் பெரும் கலவரம் நடத்தப்பட்டது. 1989ஆம் ஆண்டு தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற கலவரங்கள். மேற்கண்ட கலவரங்களுக்கு அந்நிய சக்திகளின் நேரடி காரணங்கள் இருந்தாலும் அவற்றுக்கு மாணவர்கள் ஏன் ஆட்படுகிறார்கள் என்பதையும் அதற்கான பின்னணிகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் அடிப்படை நோக்கம் என்பது கல்வி முறைகளில் ஏதாவது பாதகமான அம்சங்கள் இருக்கிறதா என்பதையும் கணக்கில் எடுத்தனர். இந்த ஆய்வு தரவுகளின் அடிப்படையில் 1991 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை சீன கம்யூனிஸ்ட் கட்சி இன சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒற்றுமையை பாதுகாக்க கூடிய முறையிலும் ஒன்றுபட்ட சீனா என்ற உணர்வை உருவாக்கக்கூடிய வகையிலும் பிரச்சாரத்தை அடிமட்டம் வரை கொண்டு சென்றார்கள்.

கல்வி முறைகளில் இனம் சார்ந்த கலாச்சாரங்கள் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மதிக்கப்பட்டாலும் ஒன்றுபட்ட சீனம் என்ற உணர்வை மேம்படுத்தக்கூடிய வகையில் கல்வி முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். இந்த முயற்சியின் விளைவாக ஒன்றுபட்ட சீனா என்ற உணர்வு உள்ளார்ந்த மதிப்புகளில் ஒன்றாக மாறியது. சீனா வரலாற்றில் நீண்ட காலம் ஒன்றுபட்டு இருந்தது என்பதையும், பல செழிப்பான வரலாறுகளை உள்ளடக்கி உள்ளது என்பதையும், புகழ்பெற்ற பாரம்பரிய கலாச்சாரங்களும் இருந்தன என்பதை கல்வி முறையில் கொண்டு வந்தனர். கலாச்சாரப் புரட்சி காலத்தில் கன்பியூசிய சிந்தனைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டதிலிருந்து காலத்துக்கேற்ற கூறுகளை உள்வாங்கிக் கொண்டனர். இதன் விளைவாக சீன மக்கள் மேற்கத்திய சீரழிவுகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்பதற்கான உணர்வுகள் பரவலாக மேலும் இது. இந்த ஒன்றுபட்ட சீனம் என்ற உணர்வுடன் சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசம் என்ற கருத்தாக்கத்தையும் இணைத்தே முன்னிலைப் படுத்தினார்கள்.

மற்றொரு முக்கியமான அம்சம் கடந்த காலங்களில் நடைபெற்ற இனங்களுக்கு இடையிலான மோதல்கள், கலவரங்கள் போன்ற வரலாற்றில் பழி தீர்க்கும் கருத்துக்கள் பாடதிட்டங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. ஒற்றுமைக்கான அம்சங்களை முன்னிலைப் படுத்தி பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டது. புரட்சிக்கு முந்தைய காலத்தில் பெரும்பான்மை இனமான ஹான் சீனர்களுக்கும் இன சிறுபான்மையினருக்கும் திருமணங்கள் நடைபெற்றது. இன்று திருமணங்களை இரு பகுதியிலும் ஒரு அவமானமக கருதினார்கள். சீர்திருத்தக் காலத்தில் இனங்களுக்கு இடையிலான ரத்த உறவு முறைகளை மேம்படுத்தக்கூடிய முயற்சிகள் எடுக்கப்பட்டது. இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மேலோங்கிய பிறகு திருமணங்கள் மதிப்பு மிக்கவைகளாக மாறிவிட்டது. இந்த மாற்றங்களில் கல்வி முறையில் எடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் ஒரு முக்கிய பங்கை வகித்திருக்கிறது.

                                                                                                                                                                                                                                       

 

சீர்த்திருத்தக் காலத்தில் மற்றொரு முக்கியமான முன்னெடுப்பு கல்வி முறைகளில் கொண்டுவரப்பட்ட மாற்றமாகம். 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீன மக்கள் குடியரசு கட்டாய கல்வித் சட்டத்தை நிறைவேற்றி அதே ஆண்டு ஜூலை மாதம் அமுலாக்கத்திற்கு கொண்டு வந்தது. இந்த சட்டம் சீன மக்களின் கல்வி வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தச் சட்டம் இன சிறுபான்மை யினருக்கும், அனைத்து பாலினத்தவர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப் பட்டது. ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் 9 ஆண்டுகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று இந்த சட்டம் உத்தரவிட்டது. முதல் ஆறு ஆண்டுகள் தொடக்கநிலை கல்வியும் அடுத்த மூன்று ஆண்டுகள் நடுநிலை பள்ளியின் கல்வியையும் கற்க வேண்டும். இந்த கட்டாய கல்வி முறைக்கு வரக்கூடிய அனைவரும் அரசின் செலவில் இலவசமாக படிக்கவைக்கப்பட்டனர்.

இந்த சட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முறையில் நெகிழ்வுத் தன்மையுடன் அமுலாக்கி வெற்றி கண்டது. கல்வி அறிவின்மையை போக்குவதற்கும், பொருளாதாரத்தில் நவீன மயமாக்களை அதிகரிப்பதற்கும், கல்விக் கொள்கை என்பது சட்ட அடிப்படையிலான அமைப்பாக மாற்றுவதற்கும், இந்த சட்டம் மற்ற அனைத்து சட்டங்களைவிட மிகஅதிகமான முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது. இந்தக் கட்டாய கல்விச்சட்டத்தின் மூலம் மக்களிடம் அறிவியல் வளர்ச்சியையும் தேசிய கல்வியின் நிலைமைகளையும் மேம்படுத்தியது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் எவரும் இடையில் நிற்கக்கூடாது என்பதற்காக சிறப்பு நிதி உதவி திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்கள். 2010 ஆம் ஆண்டுகளில் ஒன்றும் குறையாது என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அதாவது ஒருவரும் சீனாவில் கல்வி பெறாமல் இருக்கக்கூடாது என்பதற்கான திருத்தங்களை கொண்டு வந்து அமலாக்கினார்கள்.

சீனாவில் இனச் சிறுபான்மையினரின் கல்வி முறை என்பது 1965 ஆம் ஆண்டு வரை மிகப் பெரும் வளர்ச்சியாகவும் அதற்கு அடுத்து பத்தாண்டுகள் கேட்க நிலையும் மீண்டும் 1976 ஆம் ஆண்டு முதல் எடுத்த முயற்சிகள் குறிப்பாக முன்னுரிமை திட்டங்கள், உறைவிட பள்ளிகள், கட்டாய கல்வி சட்டம் போன்றவைகள் பெரும் பங்காற்றி உள்ளது.

அ. பாக்கியம்

திங்கள், மார்ச் 16, 2026

தோழர். M. லூர்து மறைந்தார்


அவர் விதைத்த விதைகள் மரங்களாகியது. அவரோ மீண்டும் விதை ஆனார்.

 

தோழர் லூர்து சென்னை வியாசர்பாடி பெரம்பூர் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனத் தலைவர்களில் முதன்மையானவர்.

 

மத்திய பிரதேசத்தில் ஓட்டுநர் பயிற்சி பெற்ற பொழுது பொதுவுடமை இயக்க தோழருடன் தொடர்புகள் கிடைத்து. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அதாவது அன்றைய பல்லவன் போக்குவரத்து கழகம் ஓட்டுநராக பணிக்கு சேர்ந்தார்.

 

தோழர் வி பி சிந்தன் தலைமையில் போக்குவரத்து தொழிலாளர்களை அணிதிரட்டியது மட்டுமல்ல, வியாசர்பாடி பகுதியில் சோசியலிஸ்ட் வாலிபர் முன்னணி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றை அமைத்து அதன் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கிளைகளை உருவாக்குவதில் பிதாமகனாக இருந்தார்.

 

சாஸ்திரி நகரில் எட்டாவது தெருவில் வசித்து வந்த அவர் சாஸ்திர நகர் ஊர் சங்கத் தலைவராகவும் செயல்பட்டார். சமூக விரோதிகளை எதிர்த்து கள்ளச்சாராய வியாபாரிகளை எதிர்த்து இயக்கம் நடத்தி மக்களின் பேராதரவை பெற்று இடது சாரி இயக்கத்தை வளர்த்தவர்.

 

1977 ஆம் ஆண்டு சாஸ்திரி நகரில் நடைபெற்ற மத மோதல்களை எதிர்த்து துணிச்சலுடன் பிரச்சாரம் செய்து அந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டதில் முன்னணி பங்கு வகித்தவர்.

 

பொதுவாக வியாசர்பாடி பகுதிகளில் கள்ளச்சாராய வியாபாரிகளால் அவ்வப்போது நடைபெறும் ஊர் தகராறுகளை தடுத்து நிறுத்தியதிலும் ஒற்றுமை ஏற்படுத்தியதிலும் முக்கிய பங்காற்றியவர்.

 

மூலக்கடை வியாசர்பாடி சால்ட் கோட்ரஸ் பேஷன் பிரிட்ஜ் போன்ற இடங்களில் காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தை அமைத்ததில் முக்கிய பங்காற்றியவர். இந்த ஒவ்வொரு இடத்திலும் முதலாளிகளின் நிர்வாகத்தின் கருங்காலிகளை எதிர்த்து மோதல்களை சந்தித்து தான் சங்கம் உருவாக்கப்பட்டது.

 

1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோழர் முருகையன் அவர்கள் வேட்பாளராக போட்டியிட்ட பொழுது வியாசர்பாடி முழுவதும் பல்வேறு வட்டங்களில் தேர்தல் பணிகளை நிறைவேற்றியவர்.

 

தோழர்கள் ராமு, துளசிதாஸ், அமலாதாஸ், ஆரோக்கியம், சூசை மைக்கேல், சின்னப்பன், சந்தியாகு, செங்கோல், மணிவண்ணன், செபஸ்டியான், கராத்தே மாஸ்டர் பாமோஜெயன், கருப்பையா போன்ற மூத்த தோழர்களும்,

 

சாஸ்திரி நகரில் வெற்றி வளவன், பாக்கியம் ஆரோக்கியசாமி (து.தா), கோர்ட் அந்தோணி, அமுல்ராஜ், சந்தியாகு, லூகாஸ், நோவேல், பெஞ்சமின், பக்தவச்சலம் காலணியில் பன்னீர்செல்வம், தனசேகரன், கலைச்செல்வன், மறத்தமிழ் வேந்தன், மூர்த்தி, சேகர் போன்ற முன்னணி தோழர்களையும், கக்கன்ஜி காலணியில் நாராயணன், சாய், மோகன்ராஜ் மதன் குமார், புதுநகர் செல்வம் சௌந்தர் காளிதாஸ் போன்ற எண்ணற்ற முதல் கட்ட தலைவர்களை உருவாக்கியவர்.

 

செங்குன்றம் பகுதியில் முதுபெரும் தலைவர் தோழர் முத்து வேலாயுதம் அவர்கள் இயக்கம் கட்டி வளர்த்த பொழுது அவருக்கு உறுதுணையாக இருந்து அப்பகுதி இயக்க வளர்ச்சிக்கு உதவி செய்தவர்.

 

அவரது இல்லம் கட்சியின் அலுவலகமாக, படைக்கல தளவாடங்களாக, மார்க்சிய பள்ளியாக, பல நேரங்களில் உணவளிக்கும் இடமாக செயல்பட்டது. எண்ணற்ற நினைவுகள் வந்து போகிறது.

அந்தப் பகுதி இயக்க வரலாற்றை எழுத வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு அவரை நேரடியாக சென்று சந்தித்து வந்து பல்வேறு விஷயங்களை விவாதித்தும் வந்தேன். வேறு சில எழுத்து பணிகளால் அவற்றை தொடங்கவில்லை. இதுதான் சரியான நேரம் இனிமேல் அதை காலதாமகப்படுத்துவது அப்பகுதி இயக்கத்தை உருவாக்கிய அர்ப்பணிப்பு மிக்க ஊழியர்களுக்கு நியாயம் வழங்குவதாக ஆகாது. எனவே தோழர் லூர்து அவர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்துவது உடன் அவரது இயக்கப் பணிகளை முன்னெடுப்பதற்கான பணிகளையும் மேற்கொள்வோம்.(அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த நினைவஞ்சலி பதிவிடுகிறேன். முழுமையான பதிவை அடுத்து வெளியிடுகிறேன்)

 

அ.பாக்கியம்


வெள்ளி, மார்ச் 13, 2026

யாருக்கு வெற்றி?

 



அ. பாக்கியம் 

 

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் வெற்றி பெறுகிறார்கள் என்று கூறுகின்றவர்களின் கவனத்திற்கு..... ஈரான் சரணடைய போகிறது என்று டிரம்ப் பேசுகிறார்..... உண்மை என்ன?

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம்  என்று உள்நாட்டில் தலையிட்டார்கள். காமனியின் ஜனநாயக விரோத அடக்குமுறைகள் இருந்தாலும் யுத்தத்தை எதிர்க்க மக்கள் ஒன்றுபட்டு விட்டார்கள்.

காமனியை மாற்றி விடுவோம் என்றார்கள் புதிய காமணி ஈரானின் கொடியை உயர்த்தி பிடித்திருக்கிறார். காமினி படுகொலையால் மக்கள் ஒன்றுபட்டு இருப்பதாக தரவுகள் தெரிவிக்கிறது.

ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழித்து விடுவோம் என்றார்கள். அழிக்க முடியவில்லை.

மலைகளுக்கு அடியில் நிலத்தடி தளங்களில் இருந்த ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட  யுரேனியம் கைப்பற்ற வேண்டும் என்று சக்தி வாய்ந்த கமாண்டோக்களை இறக்கினார்கள் முழுமையாக வெற்றி கொள்ள முடியவில்லை.

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தை அடியோடு அழித்து விடுவோம் என்று இறங்கினார்கள். அதுவும் நடக்கவில்லை. அழித்து விட்டோம் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் செய்த பிரச்சாரம் மிகைப்படுத்தப்பட்டது என்று இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய வட்டாரங்களை ஒப்புக் கொண்டார்கள்.

பாரசீக வளைகுடாவில் இருக்கக்கூடிய அமெரிக்காவின் இராணுவ தளங்களை ஈரான் தாக்குவதற்கு அஞ்சி நடுங்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் ஈரான் அவற்றை தாக்கி மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல அமெரிக்காவின் வான் பாதுகாப்பு பூச்சாண்டியாக மாறிவிட்டது.

இந்த யுத்தத்தில் அமெரிக்கா தனது ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை யாரும் தாக்க முடியாது பாதுகாத்து வந்த ரேடார் அமைப்புகளை ஈரானின் தாக்குதலால் இழந்து விட்டது.

 

உலகப் பொருளாதாரத்தை வீழ்த்தக்கூடிய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஈரானால் ஏற்படுத்த முடிந்துள்ளது.

இந்த யுத்தத்தின் மூலம் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா விதித்த எரிசக்தி தடைகள் நொறுக்கப்பட்டது. ரஷ்யா ஒரு நாளைக்கு 150 மில்லியன் டாலர் வரை கூடுதல் எண்ணெய் வருவாயை பெறுகிறது.

ஹார்மோஸ் நீரினையில் ரஷ்யா மற்றும் சீனாவின் கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து கப்பல்களையும் தடை செய்யும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக தேவையற்ற யுத்தத்தில் தங்களை இழுத்து விட்டதாக அரபு நாடுகள் கோபமடைந்துள்ளன.

ஈரான் என்பது இஸ்ரேலிய கோழைத்தனத்தால் அழிக்கப்பட்ட பாலஸ்தீனம் அல்ல, இஸ்ரேலால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் லெபனான் அல்ல, அமெரிக்க இஸ்ரேல் மற்றும் துருக்கிய ஆக்கிரமிப்பால் சிதைக்கப்பட்ட சிரியா அல்ல லிபியாவும் அல்ல, ஈராக்கும் அல்ல ஏன் நொடிப்பொழுதில் மடக்கி போட்ட வெனிசுலாவும் அல்ல, ஈரான் என்பது உடைக்க கடினமான ஒரு நாடு என்பதை நிரூபித்து வருகிறது. ஈரான் , ஸ்பெயின் ஜெர்மனி இத்தாலி ஆகிய நாடுகளின நிலப்பரப்புக்கு சமமான அளவைக் கொண்டது. ஒன்பது கோடி மக்கள் தொகை இருக்கிறார்கள். 60 லட்சம் பாலஸ்தீன மக்களை தாக்குவது போல் ஈரானை தாக்கி விட முடியாது. 40 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா விதித்த தடைகள் இருந்த போதிலும் மேற்கத்திய நாடுகளின் ஒத்துழைப்புடன் ஈரான் தன்னை பலப்படுத்திக் கொண்டது. தன் மீது தாக்குதல் நடத்தினால் பழிவாங்குவதற்கான திறனையும் வளர்த்துள்ளது.

ஈரான் ஒரு பண்டைய நாகரிகம் நிறைந்தது. அதன் மரபுகளை பற்றி பெருமைப்படும் ஒரு நாடு. அது ஒருபோதும் காலனியாக இருக்கவில்லை இருப்பினும் சில காலகட்டங்களில் வெளிநாட்டு சக்திகளால் குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவால் அரை காலனி உறவுகளுக்கு உட்படுத்தப்பட்டது. ஒரு நாட்டின் மீது ஈரானின் கடைசி படையெடுப்பு 18 ஆம் நூற்றாண்டில் தான் நடந்தது. இப்போதும் ஈரானியர்கள் யாரையும் தாக்கவில்லை அவ்வாறு செய்வதற்கு தயாராகவும் இல்லை. அவர்கள் பேச்சு வார்த்தையின் மூலமாக அமெரிக்காவுடன் தீர்வு காண முயன்ற போது முதுகில் குத்தப்பட்டனர்.

 

அ. பாக்கியம் 

வியாழன், மார்ச் 12, 2026

சீனா ஏன் ஈரானுக்கு உதவவில்லை?


அ.பாக்கியம்

இந்தக் கேள்விகள் பரவலாக வலைதளங்களிலும் பலரிடமும் கேட்கப்படுகிற கேள்வியாகும். நானும் பல இடங்களில் செல்கிற பொழுது இந்த கேள்வியை பல தோழர்கள் கேட்கிறார்கள்.  பொதுவாக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் குதித்து இருப்பது போல் சீனாவும் குதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து இந்தக் கேள்விகள் எழுப்பப்படுகிறது. உண்மையில் அமெரிக்காவினுடைய நோக்கத்திற்காகத்தான் அல்லது அமெரிக்காவிற்கு ஆதரவாகத்தான் இஸ்ரேல் யுத்தம் நடத்துகிறது என்ற மிக முக்கியமான புரிதல் தேவைப்படுகிறது.

சீனாவும் ஈரானும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மிக விரிவான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளனர். இது 25 ஆண்டுகளுக்கான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் அனைத்து தகவல்களும் பொதுதளத்தில் கிடைக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் ராணுவ ஒத்துழைப்பு என்ற அம்சமும் அடங்கும்.

சீனா உலகில் இன்று பெரிய சக்தியாக இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த உலகை அமைதியான முறையில் நடத்திட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறது. எனவே அமெரிக்கா போன்ற ஒரு ஆக்கிரமிப்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டது அல்ல. அதே நேரத்தில் யுத்தம் தொடராமல் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளிலும் சீனா முன்னுரிமை அளிக்கிறது. இதனால் அமெரிக்கா இஸ்ரேலின் அத்துமீறல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் இல்லை. ஈரான் என்ற நாடு இன்று இஸ்ரேல், அமெரிக்கா என்ற பெரும் சக்திகளை எதிர்த்து நிற்கிறது என்றால் உலகளாவிய ராணுவ ஒப்பந்தங்களுக்கு உரிய சட்டத்தின் அடிப்படையில் சீனா உட்பட சில நாடுகள் செயல்படுவதன் வழியாகத்தான்.

ஈரான் நாட்டின் இந்த தாக்குப் பிடிக்கும் தாக்குதல்களில் சீன ஒப்பந்தமும் அடங்கி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்களின் தளங்களின் மீது இப்படிப்பட்ட தாக்குதல்களை இதுவரை சந்தித்தது இல்லை. இஸ்ரேலின் அனைத்து பெரிய சிறிய நகரங்களும் அதன் ராணுவ முகாம்களும் குறி வைத்து ஈரானால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் ஒரு விஷயத்தை அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது. இஸ்ரேல் மிகப்பெரிய உத்திகளைக் கொண்டிருக்கவும் இல்லை, இடம் சார்ந்த பாதுகாப்பையும் வலுவாக வைத்திருக்கவில்லை என்பது வெளிப்பட்டது. ஈரானின் இந்த தாக்குதல்களில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் ராணுவ தளபதி அலுவலகம், விமானப்படை கட்டளை தளங்கள், வணிக தங்கள், ராணுவத்திற்கு உதவி செய்யும் தொழிற்சாலைகள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது.

ஈரானின் இந்த எதிர் தாக்குதல் திடீரென்று நிகழவில்லை, நீண்ட காலமாக தயாரித்து வந்த ஒரு திட்டத்தின் வெளிப்பாடு. ஈரானின் உச்ச தலைவர், பாதுகாப்பு அமைச்சர், மற்றும் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டிருந்த நிலையிலும் இதுபோன்ற தாக்குதல்களை தொடர முடிகிறது என்றால் அதன் ராணுவ சக்தியை அறிந்து கொள்ள முடியும். இஸ்ரேலியர் ராணுவ தளவாடங்களையும் அமெரிக்க ராணுவ தளவாடங்களையும் தாக்கப்பட்டிருக்கிறது என்றால் இதன் உத்திகளை புரிந்து கொள்ள முடியும்.  ரஷ்யாவும் சீனாவும் ஒப்பந்த சரத்துகளின் அடிப்படையில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு ஆதரவாக உதவி செய்கிறார்கள். அமெரிக்காவின் சட்ட விரோத தடைகளுக்கு எதிராக பொருளாதார ஆதரவை வழங்குவது, ஈரானின் ராணுவ தொழில்துறை உற்பத்திக்கு தொழில்நுட்ப பொருட்களையும் ஆதரவையும் வழங்குவது, ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை மாற்றிக் கொடுப்பது போன்றவை நடந்து கொண்டு தான் இருக்கும். இவை அனைத்தும் மற்ற நாடு தாக்குவதற்கு அல்ல ஈரான் தன் நாட்டை பாதுகாப்பதற்காக என்ற அடிப்படையில் சீனா ஒப்பந்தத்தை கடைப்பிடிக்கிறது

ஆக்கிரமிப்பின் அஸ்திவாரம் தான் அமெரிக்க ராணுவம்

அமெரிக்க ராணுவம் உலகம் முழுவதும் 860 க்கு மேற்பட்ட ராணுவ தளங்களையும் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களையும் அமர்த்தி இருக்கிறது. உலகத்திலேயே அதிகமான அளவு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது அமெரிக்க ராணுவம்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க விசுவாசிகள், அமெரிக்க ரசிகர்கள் அல்லது ஜனநாயகம் பேசக்கூடிய கனவான்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சுருக்கமான பட்டியலை தருகிறேன் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அமெரிக்கா மற்ற நாடுகளில் தலையிட்ட நிகழ்வுகள் இங்கே கொடுக்கப்படுகிறது

 

ஈரான்: 1946 சீனா: 1946 - 1949 கிரீஸ்: 1947 - 1949இத்தாலி: 1948 பிலிப்பைன்ஸ்: 1948 – 1954 கொரியா: 1950 – 1953 ஈரான்: 1953 வியட்நாம்: 1954 குவாத்தமாலா: 1954 லெபனான்: 1958 பனாமா: 1958 ஹைட்டி: 1959 காங்கோ: 1960 வியட்நாம்: 1960 – 1964 கியூபா: 1961 கியூபா: 1962 லாவோஸ்: 1962 ஈக்வடார்: 1963 பனாமா: 1964 பிரேசில்: 1964 வியட்நாம்: 1965 – 1975 இந்தோனேசியா: 1965 காங்கோ: 1965 டொமினிகன் குடியரசு: 1965 லாவோஸ்: 1965 - 1973கானா: 1966 குவாத்தமாலா: 1966 – 1967 கம்போடியா: 1969 – 1975 லாவோஸ்: 1971 – 1973 சிலி: 1973 கம்போடியா: 1975 அங்கோலா: 1976 – 1992 ஈரான்: 1980 லிபியா: 1981 எல் சால்வடார்: 1981 – 1992 நிகரகுவா: 1981 – 1990 லெபனான்: 1982 – 1984 கிரெனடா: ​​1983 ஹோண்டுராஸ்: 1983 – 1989 ஈரான்: 1984 லிபியா: 1986 பொலிவியா: 1986 ஈரான்: 1987 – 1988 லிபியா: 1989 பிலிப்பைன்ஸ்: 1989 பனாமா: 1989 – 1990 லைபீரியா: 1990 ஈராக்: 1990 – 1991 ஈராக்: 1991 – 2003 ஹைட்டி: 1991 சோமாலியா: 1992 – 1994 யூகோஸ்லாவியா: 1992 – 1994 போஸ்னியா: 1993 – 1995 ஹைட்டி: 1994 – 1996 குரோஷியா: 1995 ஜயர் (காங்கோ): 1996 – 1997 லைபீரியா: 1997 சூடான்: 1998 ஆப்கானிஸ்தான்: 1998 ஈராக்: 1998 யூகோஸ்லாவியா: 1999 மாசிடோனியா: 2001 ஆப்கானிஸ்தான்: 2001ஈராக்: 2003 ஈராக்: 2003-தற்போது வரை ஹைட்டி: 2004 சிரியா: 2011-தற்போது வரை உக்ரைன்: 2014-தற்போது வரைவெனிசுலா: 2026 ஈரான்: 2026

சீன ராணுவமும் அதன் கட்டமைப்பும்

சீன மக்கள் விடுதலைப்படை தனது நாட்டு பாதுகாப்பை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்ட ராணுவம் ஆகும். அமெரிக்க ராணுவ வரலாறு என்பது ஆக்கிரமிப்புக்காகவே உருவாக்கப்பட்ட ராணுவம் ஆகும். இன்றைய சீனாவை சுற்றி 30க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை அமெரிக்கா அமைத்துள்ளது. அதாவது சீனாவை சுற்றி இருக்கக்கூடிய தீவுகளில் இந்த ராணுவ தளங்களை அமைத்துள்ளார்கள். இதற்கு தீவு சங்கிலி வலை அமைப்பு என்று பெயர். குறிப்பாக ஜப்பான் தென்கொரியா குவாம் பிலிப்பைன்ஸ் சிங்கப்பூர் போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட ராணுவ தளங்கள் சீனாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஆகும். சீனாவின் கடல் சார் செல்வாக்கை கட்டுப்படுத்த முதல் தீவு சங்கிலியாக ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள ராணுவம் செயல்படுகிறது. இரண்டாவது தீவு சங்கிலியாக குவாம், பலாவ் தீவுகள் இருக்கின்றது. இந்த தளங்கள் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் மற்ற நாடுகளை கட்டுப்படுத்தவும் சீனாவின் வளர்ச்சியை தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

 

சீன ராணுவம் அமெரிக்காவைப் போல் உலகை ஆக்கிரமிப்பதற்காக அல்லாமல் தனது நாட்டைச் சுற்றி இருக்கக்கூடிய அமெரிக்க படைகளை எதிர்கொள்வதற்கு தேவையான வலுவான வன் பொருட்களை சுற்றி அதன் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேசத்தின் பாதுகாப்புக்காக  தனது இராணுவத்தை முழு சக்தியுடன், அமெரிக்கா உட்பட எந்த சக்தி தாக்கினாலும் அவற்றை எதிர்கொள்வதற்கான நவீன திறன்களுடன் சீன ராணுவம் தகவமைக்கப்பட்டுள்ளது.

ஈரானை தாக்குவதற்காக அமெரிக்கா அந்த பிராந்தியங்களில் தளங்களை அமைத்தது, தளவாட அமைப்புகளை உருவாக்கியது. வெடி மருந்து கிடங்குகள், எரிபொருள் கிடங்குகள், வான்வழி தாக்குதல் போன்ற திட்டங்களை அமெரிக்கா அமைத்துக் கொண்டது. இதே பிராந்தியத்தில் அரசியல் ரீதியாக சவுதி அரேபியா, ஜோர்டான், பஹரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு ஈராக்,சிரியா போன்றவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டது.

இதை தடுக்க வேண்டும் என்றால் இதற்கு சமமான அளவில் பிராந்திய முழுவதும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். சீனா தன் நாட்டு மக்களை பட்டினியில் தள்ளி, உலகத்தை பதட்டமாக வைத்திருக்கும் ராணுவ போட்டிக்கு எப்பொழுதும் தயாராக இருந்தது இல்லை .சீனாவின் வெளியுறவு கொள்கை இப்படி உருவாக்கப்பட்டதல்ல.அமெரிக்காவை போல் சீனாவும் செய்யுமானால் ஒரு மோசமான நாடாகத்தான் இருக்க முடியும்.

அமெரிக்கா தற்பொழுது ரஷ்யா மீதும் சீனா மீதும் நேரடி போரை நடத்த முடியாது. எனவே தான் ஈரான் மீது தன்னுடைய நேரடி போரை நடத்திக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக அமெரிக்கா சீனாவைக் கண்டு மிரண்டு போயிருக்கிறது. அதன் பொருளாதார வளர்ச்சி நிலை கூட ராணுவ ரீதியிலான சதிகள் என்று முத்திரை குத்த தொடங்கியிருக்கிறது. 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க் போஸ்ட் ஒரு விரிவான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த செய்தியின் தலைப்பு அமெரிக்காவில் இருக்கக்கூடிய 19 ராணுவ தளங்களுக்கு அருகாமையில் சீனா சொந்தமாக விவசாய நிலங்களை வாங்கி குவிக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது. இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று எழுதியுள்ளார்கள். அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து வாய் வரை உள்ள 19 இராணுவ தங்களை அடையாளப்படுத்தி வரைபடங்களுடன் அந்தப் பத்திரிக்கை செய்து வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பல ராணுவ தளபதிகள் இது மூலோபாய இடங்களுக்கு அருகாமையில் இருப்பதால் ஆபத்தானது என்று இப்பொழுது அறத் தொடங்கி இருக்கிறார்கள். அமெரிக்க ராணுவத் திறன்கள், இயக்கங்கள் மற்றும் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்வதற்காக சீனர்கள் இந்த விவசாய நிலத்தை பயன்படுத்துகிறார்கள் அல்லது பயன்படுத்துவார்கள் என்று பிதற்றுகி றார்கள். சீனர்கள் அமெரிக்க சட்டத்துக்கு உட்பட்ட தான் இந்த விவசாய நிலங்களை வாங்குகிறார்கள். தைவானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் நகர்ந்தால் அவற்றை அறிந்து கொள்ள கூடிய அளவில் சீனாவின் இந்த நிலங்கள் பயன்படும் என்று தெரிவிக்கிறார்கள். நிலம் வாங்கியவர்கள் எல்லாம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

சீனர்கள் காற்றாலை பண்ணையாக நிலத்தை பயன்படுத்து கின்றனர், உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு பயன்படுத்துகின்றனர். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தரவுகளின் படி அமெரிக்க விவசாய நிலத்தில் சீன முதலீட்டாளர்கள் வாங்கி இருப்பது 3,49,442 ஏக்கர் மட்டுமே. அமெரிக்காவில் வெளிநாட்டுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் சீனர்களின் மொத்த பங்கு ஒரு சதவீதம் மட்டுமே. ஆனால் ஒட்டுமொத்த அமெரிக்காவையே வாங்கி விட்டதாக அலறுகின்றனர். முப்பதாயிரம் ஒற்றர்கள் உள்ளே புகுந்து விட்டார்கள், உழவு பலூன்களை பறக்க விடுகிறார்கள் அதிக பணம் கொடுத்து ராணுவ தளங்களுக்கு அருகாமையில் உள்ள இடங்களை வாங்குகிறார்கள் என்று சீனாவுக்கு எதிராக பொய் பிரச்சாரத்தை கட்டமைக்கிறார்கள். சீன கம்யூனிஸ்டுகள் சோவியத்தில் இருந்து வேறுபட்டவர்கள். அவர்கள் உலகப் பொருளாதார அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் அரசியல் செல்வாக்கின் காரணமாக சோவியத் ஒன்றியத்தை விட இன்னும் ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள் என்று சீனாவை இலக்கு வைத்து தாக்குதலை கொடுத்திருந்தனர்.

எது எப்படியோ சோவியத் நாட்டின் அடிப்படையில் சீனா இல்லை என்பதையும் சீனாவின் உத்திகள் உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவற்றை ஒழிக்க நினைக்கும் அமெரிக்காவை எதிர்த்த புதிய உத்திகள் மூலம் எதிர்கொள்வது என்பதை வெளிப்படுத்துகிறது. நான் மேலே குறிப்பிட்ட நிலப்பிரச்சனை ஒரு சிறு பகுதி மட்டும்தான். இன்னும் ஏராளமான செய்திகள் இதற்குள்ளே இருக்கிறது. எனவேதான் அமெரிக்காவின் இலக்கு சீனாவும் ரஷ்யாவும் என்பதை இந்த யுத்தத்தின் மூலமாக புரிந்து கொள்ள முடியும். சீனா ஹாங்காங் பகுதியை பிரிட்டனின் ஆக்கிரமிப்பில் இருந்து மீண்டும் தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்வதற்கு கடைப்பிடித்த அதே த்தியை சீனா மீண்டும் கடைப்பிடிக்கும் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எதிர்பார்த்தால் ஏமாந்து போவார்கள் என்பது திட்டவட்டமானது.

ரஷ்யாவும் சீனாவும் முடிந்தவரை தங்களின் சொந்த திறன்களை மிக வேகமாக விரிவுபடுத்தி வருகிறார்கள். அமெரிக்கா உலகை எளிய வகையில் கபளீகரம் செய்து விடலாம் என்பதை டுத்து வருகிறார்கள். இதற்கு உக்கரைன், தைவான் போன்ற நாடுகளை குறிப்பிட்டாலும் ஈரானின் எதிர் தாக்குதல் சாட்சியமாக இருக்கிறது.

எனவே சீனா வேடிக்கை பார்க்கிறது நேரடி யுத்தத்தில் இறங்க வேண்டும் என்பதெல்லாம் அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாகத்தான் சென்று முடியும் என்ற அம்சத்தை புரிந்து வைத்திருக்கிறார்கள்.

அ.பாக்கியம்

 

65 இனச் சிறுபான்மையினரின் கல்விச் சாதனைகள்

அ.பாக்கியம் 1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட கல்வி வளர்ச்சித் திட்டங்களில் இனச் சிறுபான...