Pages

வியாழன், பிப்ரவரி 26, 2026

61 மடாலயங்களில் முடக்கப்பட்ட இனக்கல்வி

 


அ.பாக்கியம்

மதம்” எவ்வாறு ஒரு மனிதனின் மனப்பான்மைகளையும் மன வடிவங்களையும் உருவாக்குகின்றதோ அதேபோன்று தான் ”கல்வியும்” மனிதனின் மனப்பான்மைகளையும் மன வடிவங்களையும் உருவாக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. மதங்களின் பிடியில் இருந்த காலங்களில் கல்வி மாற்றத்தை ஏற்றுக் கொள்ள தயங்கினாலும், மதம் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதைவிட கல்வி மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய பயணத்தில் ஒரு படி முன்னே தான் இருந்தது.

சீனாவில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி முதல் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி வரை சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வி என்பது மத பிற்போக்குவாதிகளிடம் மாட்டிக் கொண்டிருந்தது. அனேகமாக மடாலயங்கள்தான் கல்வியை கட்டுப்படுத்தினார்கள். இக்காலத்தில் இருந்த கல்வி முறைகள் எவ்வாறு இருந்தன. அவற்றின் மீது மாற்றத்தை கோரிய தலையீடுகளும், அதை எதிர்த்த பிற்போக்குவாதிகளின் செயல்பாடுகளையும் அறிந்து கொண்டால்தான், 1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அமையப்பெற்ற சீன மக்கள குடியரசு எவ்வாறு கல்வியை ஒரு மதசார்பற்ற கல்வியாகயும், சிறுபான்மை மக்கள் மத்தியில் எவ்வாறு நிலை நிறுத்தியது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

இனச் சிறுபான்மையினர் மத்தியில் பாரம்பரியமான கல்வி அறிவு என்பது ஒவ்வொரு தேசிய இனங்களுக்கு இடையிலும், வேறுபாடுகளுக்கு ஏற்ப செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு தேசிய சிறுபான்மை இனத்திற்கு இடையிலும் வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்து இனச் சிறுபான்மை பிரிவிடமும் ஒரு பொதுவான தன்மைகளும் காணப்பட்டது. அங்கு மடாலயங்கள்தான் கல்விச்சாலைகளாக செயல்பட்டன. மத குருக்கள் தான் கல்வி கற்பிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். பாடத்திட்டங்கள் பிரதானமாக மத போதனைகளாகத்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. மற்றொரு முக்கியமான பொது அம்சம் என்னவென்றால் கல்வி முறைகள் எப்படி இருந்தாலும், அது பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இனச் சிறுபான்மையினர் அனைவருக்கும் கல்வி பெறுவது தடுக்கப்பட்டிருந்தது.

 

1911 ஆம் ஆண்டு ”சன் யாட் சன்” தலைமையில் நடைபெற்ற குடியரசு புரட்சிக்கு முன்பு மிங் வம்சமும் அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த குயிங் வம்சமும் தங்களது வர்க்க நலன்களுக்கு ஏற்ற வகையில் கல்வி முறைகளை மாற்றி அமைத்தார்கள். குறிப்பாக மஞ்சு வம்சத்தினர் தாங்கள் அன்னியர் என்பதால் பெரும்பான்மையாக இருந்த ஹான் சீனர்களின் எதிர்ப்பை எதிர்கொள்வதற்காக இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வியின் மூலம் செல்வாக்கு செலுத்த முயற்சி செய்தார்கள்.

1911 ஆம் ஆண்டு குடியரசு ஆட்சி அமைந்த பிறகு ஷாங்-கய்-ஷேக் தேசிய அரசாங்கத்தின் மூலமாக சில பொதுவான முயற்சிகளை கல்வித்துறையில் மேற்கொண்டனர். இவை முழுமையாக வெற்றி பெறவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் சீனாவை காலனிபடுத்திய பிறகு கிறிஸ்துவ மிஷனரிகளின் செயல்பாடு அதிகரித்தது. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த கிறிஸ்துவ மிஷனரிகள் குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த அமைப்புகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சிறுபான்மை மக்களை மதமாற்ற முயற்சி செய்தனர்.

ஆனால் இவர்களது முயற்சி வெற்றி பெறவில்லை. சீனாவின் பெரும்பான்மை இனமாக இருந்த  ஹான்  மக்களிடம் கிறிஸ்துவம் பரவிய அளவிற்கு சிறுபான்மை மக்களிடம் பரவவில்லை. இதற்கு மாறாக ஏற்கனவே சிறுபான்மை மக்களிடம் வளர்ந்திருந்த திபெத்திய பௌத்தமும், இஸ்லாமியமும் கிறிஸ்துவத்தின் செல்வாக்கை மிக வலுவான முறையில் எதிர்த்து பின்னுக்கு தள்ளியது. இந்தப் பின்னணியில் தான் சிறுபான்மை மக்களிடம் மடாலய மதக் கல்விகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.

இதனைப் பற்றி தெரிந்துக்கொள்ளா அனைத்து சிறுபான்மை இனங்களின் கடந்த கால வளர்ச்சிப் போக்குகளை அறிவதைவிட சிறுபான்மை மக்கள் மத்தியில் வெகுவாக செல்வாக்கு செலுத்தக்கூடிய இனச் சிறுபான்மையாக இருக்கும் திபெத், ஜின்ஜியாங், ஹுய் மற்றும் கொரிய இனங்களுடைய உதாரணங்களை அறிந்து கொண்டாலே போதுமானதாக இருக்கும்.

மதமே கல்வி” “கல்வியே மதம்”

திபெத்தில் மதத்தின் ஆதிக்கம் பல்வேறு துறைகளில் இருந்தது போல்  கல்வியின் மீதும் அதன் ஆணிவேர் வரை இருந்தது. மடாலயங்களே பள்ளிகளாக இருந்ததும், மதம் கல்வி இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாத அன்றைய அசாதாரண சூழலில் திபெத்திய கல்வியின் மீது லாமாயிச மதத்தின் ஆதிக்கம் இருந்தது. திபெத்திய பௌத்த துறவிகள் மட்டுமே அறிவு ஜீவிகளாக கட்டமைக்கப்பட்டனர். கல்வியில் மடாலயங்களின் செயல்பாட்டை மட்டுமே இந்த துறவிகள் வலியுறுத்தினார்கள். மடாலயங்களுக்கு வெளியே இருக்கக்கூடிய மக்களைப் பற்றியோ, அவர்களுக்கான கல்வியைப் பற்றியோ கவலைப்படவில்லை.

திபெத்தில் இருந்த பீக் மற்றும் எக்லேசியாஸ்டிகள் ஆகிய இரண்டு கல்வி நிலையங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த இரண்டு பள்ளிகளும் அரசாங்கத்தில் பணிபுரியக்கூடிய துறவிகளுக்கான பயிற்சி அளிக்க கூடியதாகவே இருந்தன. அரசின் பணிகள் அனைத்தையுமே துறவிகள்தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.  என்பதை இந்தக் கல்வி முறைகளில் இருந்து அறிய முடியும். இந்தப் பள்ளிகளில் முன்னாள் பட்டதாரிகளின் வாரிசுகளும் பரம்பரையாக நிலப்பிரப்புக்களாக இருப்பவர்களின் மகன்களும் மட்டுமே படிப்பை மேற்கொள்ள முடியும். 1949 ஆம் ஆண்டுகளுக்கு முன்புவரை திபெத்திய கல்விமுறையின் பாடத்திட்டம் என்பது மத போதனைகளை மையமாக வைத்ததுடன், அரசு அலுவலகங்களில் பணி புரிவதற்கான சில பாடத்திட்டங்களும், மருத்துவத்தை கற்றுக் கொள்வதற்கான பாடத்திட்டம் மட்டுமே இருந்தது.இவற்றை ஐந்து பிரிவுகளாக பிரித்து வைத்திருந்தனர்.

முதல் பிரிவு: மத அமைப்புகளின் செயல்பாடுகள் அது சார்ந்த நிர்வாக முறைகளுக்காக லாசா அரண்மனையிலேயே பள்ளிக்கூடம் இயங்கியது.

இரண்டாவதுவகை: ஆவணங்களை பராமரிப்பதற்கும் கையெழுத்து பயிற்சியை கொடுத்து அதிகாரப்பூர்வமான ஆவணங்களை எழுதுவதற்கும் இதில் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

மூன்றாவது: இப்பிரிவு கணிதம், எண் கணிதம் ஆகியவற்றை சொல்லிக் கொடுத்தது. அதாவது அரசாங்கத்தின் வருவாய் சேகரிப்பு வரவு செலவுகளை கவனிக்க கூடிய நபர்களை உருவக்கும் கல்வியாக இருந்தது.

நான்காவது: இது மதங்கள் தொடர்பான சிறப்பு பாடங்களையும் அதற்கான நூல்களையும் படிக்க வைப்பது.

 

ஐந்தாவது: இக்கல்வி பாரம்பரிய திபெத்திய மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க கூடியது.

மற்ற இனச் சிறுபான்மையிடம் இல்லாத ஒன்று திபெத்திய இனத்தில் இருந்தது. இவர்களின் கல்வி முறைகள் மடாலயங்களில் சொல்லிக் கொடுத்தாலும் திபெத்திய மொழி, மருத்துவம், வானியல், நாட்காட்டி, கணக்கீடு, ஓவியம் போன்ற சிலவற்றையும் சேர்த்தே சொல்லிக் கொடுத்தார்கள். திபெத்திய மொழி தொடர்பான அச்சு பிரிவுகளும் மடங்களில் இருந்தது.

அதாவது இந்த திபெத்திய மடாலயங்களில் நடத்தப்பட்ட பாடத்திட்ட முறைகளும், பள்ளிகளும் அரசை நடத்துவதற்கும், மதத்தை கடத்துவதற்குமான கல்வி முறையாக மட்டுமே இருந்தது. இது இரண்டையும் பெறக்கூடியவர்களாகவும் செய்யக்கூடியவர்களாகவும் சமூகத்தில் வசதி படைத்த வர்க்கம் மட்டுமே இருந்தது.

நவீன மதசார்பற்ற கல்வியையும், ஆங்கில பாணி பள்ளிகளையும் அறிமுகப்படுத்திய போது இந்த பள்ளிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். திபெத் பிராந்தியத்தில் இருந்த பள்ளிகளில் பெரும்பாலும் தனியார் பள்ளிகளே இருந்தன. திபெத்தில் மதத்தலைவரே, அரசுத் தலைவராகவும் இருந்ததால் சீன நாட்டின் மத்திய அரசிலிருந்து அரசுக்கான ஒரு துணைத் தலைவரை அனுப்பி வைப்பது வழக்கம். அப்படி அனுப்பி வைக்கப்படுபவர் அங்கிருக்கும் ஆட்சி முறைகளை மத்திய அரசின் சார்பில் மேற்கொள்வார்.

1906 ஆம் ஆண்டு திபெத்திற்கு சீன மத்திய அரசிலிருந்து அனுப்பப்பட்ட ஜாங் யின் டாங் திபெத்திய கல்விமுறையில் சீர்திருத்தங்களை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அவரின் முயற்சிகளில் ஒன்று மடங்களை கடந்து மதச்சார்பற்ற கல்விகளை கொடுப்பதாகும். ஆனால் அவருடைய சீர்திருத்தத்தை நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் திபெத்திய துறவிகளும் நிலப்பரப்புகளும் அவரை அங்கிருந்து வெளியேற்றினார்கள்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் நவீன கல்வி, ஆங்கில வழிக் கல்வி, மதச்சார்பற்ற கல்வி என அனைத்து விதமான புதிய முயற்சிகளும்  தங்களின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தது என மடாலய துறவிகள்  அதை எதிர்த்தார்கள். தலாய்லாமா திபெத்தின் சிகரமாகவும், துறவிகளின் எஜமானராகவும், மதஆதிக்க நிலப்பிரப்புத்துவ அரசின் உயிராகவும் இருந்தார். திபெத்திய ஆளும் வர்க்கம் குறிப்பாக துறவிகளும், நிலப்பிரபுக்களும் நவீன கல்வி முறையை போதிக்க கூடிய பள்ளிகளுக்கு தங்களுடைய குழந்தைகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால்  புதிய முறையை எதிர்த்தார்கள்.

இதைவிட மிக மோசமான ஒரு சிந்தனை போக்கு தலாய்லாமாவிடமும், துறவிகளிடமும் காணப்பட்டது. நவீன, முறையான கல்வி பயனற்றது. நேரத்தை வீணடிக்க கூடியது. அதனை கற்பவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்று பேசியது மட்டுமல்ல  அக்கல்வி முறையை கடுமையாக எதிர்த்தார்கள். அது மட்டுமல்ல கல்வி என்பது முடிந்தால் தவிர்க்கப்படவும் வேண்டிய ஒரு கடமை என்று இந்த மத குருக்களால் கருதப்பட்டது.

நவீன கல்வி முறையில் சில  பள்ளிகள் உருவானபோது தங்களது குழந்தைகளை கட்டாயம் அனுப்ப வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட நிலையில் வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மாற்றாக ஏழைக் குழந்தைகளுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைக்கக்கூடிய செயலையும் செய்தார்கள் என்று வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கிறது. இந்த கல்வி முறைகளைப் பற்றி அறிஞர்கள் பதிவு செய்யும் பொழுது மடாலயங்கள் என்பவை கலாச்சாரத்தையும் மதத்தையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்ற துறவிகள் மற்றும் நிறுவனங்களின் தொகுப்பாக இருந்தது என்று குறிப்பிடுகிறார்கள். இந்தியாவில் வேதங்கள் புனிதமானது மற்றவர்கள் படிக்க கூடாது என்று வர்ணாசிரம சித்தாந்தத்தை போதித்து கல்வியை தங்களுடையதாக்கிக் கொண்டார்கள். இதேபோன்று திபெத்திய லாமாக்கலும் புரட்சி நடைபெறுகிற வரை அதிகாரத்தைக் கொண்டு மக்களை கல்வி அறிவற்றவர்களாக மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

மதக்கல்வி-பொதுக்கல்வி முரண்களின் களம்

சோவியத் யூனியனுடன் அதிக எல்லைப் பகுதிகளை பகிர்ந்து கொண்ட சீனாவின் ஜின்ஜியாங்க் பிராந்தியம் இஸ்லாமிய சிறுபான்மையினர்கள் அதிகம் வாழக்கூடிய தன்னாட்சி பிரதேசமாகும். இங்கு மட்டும் 13-க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் ஒரே மாகாணத்தில் வாழ்கிறார்கள். இந்த பிராந்தியத்தில் ஹுய், உய்குர், கசாக், கிர்கிஸ், டாடர், உஸ்பெக், தாஜிக், டோங்சியாங், சலார் மற்றும் போனன் குழுக்களின் உறுப்பினர்கள் இஸ்லாமிய மத நம்பிக்கையைப் பின்பற்றுபவர்கள்.

இங்கு உய்குர் இனக் குழு அதிகமாக வாழ்கின்றனர். இவர்கள் துருக்கிய மொழி பேசக்கூடிய இஸ்லாமியர்கள். திபெத்  பிராந்தியத்திலும், ஹுய் இனத்தவர்கள் மத்தியில் அறிவு சார்ந்த துறைக்கு அவர்களின் வர்க்க நலன் கருதி அக்கறை எடுத்தது போன்று ஜின்ஜியாங்க் பிராந்தியத்தில் இருந்த இஸ்லாமியர்கள் அவ்வாறு எடுக்கவில்லை என்று இங்கு பிரிட்டிஷ் தூதராக இருந்த பி.டி கர்னல் குறிப்பிடுகின்றார். இந்த மதிப்பீடு மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு என்றும் அல்லது பிரிட்டிஷார் காலனி படுத்தக்கூடிய நாடுகளைப் பற்றி தெரிவிக்கின்ற வழக்கமான கருத்துக்கள் என்றும் சில அறிஞர்கள் பதிவிட்டுள்ளனர். ஆனாலும் இந்த பிராந்தியத்தில் இருந்த இனச் சிறுபான்மை மக்களுக்கான புத்தகங்கள் கூட வெளியில் இருந்து தான் வந்தது என்ற தரவுகளும் உள்ளன. இதனால் கல்விகற்பதற்கான  முயற்சிகள் உயர்வர்க்க மக்களிடம் கூட போதுமான அளவிற்கு இல்லை என்ற ஒரு நிலைமைதான் அங்கு இருந்தது.

1930 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு ஜின்ஜியாங்கில் ஒட்டுமொத்த கல்வியும் இஸ்லாமிய மயமாகத்தான் இருந்தது. குர்ஆன், இஸ்லாமிய கோட்பாடுகள், இஸ்லாமிய மத நடைமுறைகள், மற்றும் அது தொடர்பான வரலாற்று ஆவணங்கள் மட்டுமே பாடத்திட்டங்களாக இருந்தன. கல்வி கற்றுக் கொடுக்கக்கூடிய இடமாக மசூதி மட்டுமே இருந்தது. முல்லாக்கள்தான் அனைத்து பாடத்திட்டத்தையும் தீர்மானித்தார்கள். மசூதிக்கு வெளியே இயங்கிய சில பள்ளிகளும் மதம் சார்ந்த போதனைகளாக இருந்தாலும் அவற்றிலும் கூட வசதி படைத்தவர்கள் மட்டுமே படிக்க முடிந்தது. சிறுவர்கள் குர்ஆனை படிக்க எழுத மற்றும் ஓத கற்றுக் கொடுக்கும் இடங்களாகத்தான் மசூதிகள் இருந்தன. இத்தகைய பழமையான பாடத்திட்டத்தையும், கல்வி முறையையும் எதிர்த்து மாற்றுக்கல்விக்கான  ஆலோசனைகளை முன்வைத்தால் அவை அனைத்தும் கடுமையான முறையில் நசுக்கப்பட்டன. அவ்வாறு எழும் குரல்கள் தங்கள் மதஆதிக்க ஏகபோகத்திற்கு ஊறு விளைவிக்கும் என்று கருதினார்கள்.

முதலாம் உலகப் போர் நடந்த காலத்தில் உலகின் மிகப்பெரிய பேரரசாக துருக்கிய ஓட்டோமான் பேரரசு விளங்கியது. இவர்களின் உதவியுடன் ஜின்ஜியாங்கின் காக்ஸ்கார் நகரில் ஒரு பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பள்ளியின் பாடத்திட்டம்  துருக்கியப் பேரரசின் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இங்கு படித்த மாணவர்களை துருக்கிய சுல்தானை தங்களின் ஆன்மீக தலைவராகவும், உலகத்தின் தலைவராகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பாடதிட்டங்களும் அவ்வாறே அமைந்திருந்தது. இதனால் சீனத்தின் பகுதியில் துருக்கி அடையாளத்தை வலிந்து திணிப்பது மட்டுமல்ல துருக்கி நாட்டிற்கு விசுவாசம் உள்ளவர்களாக மாற்றப்படுகிறார்கள் என்று சீன அரசு அஞ்சியது. சீனாவை குறித்த அடையாளங்களும் அழிக்கப்பட்டது. இது இன ரீதியிலான மோதல்களை ஊக்குவிப்பதாக சீன அதிகாரிகள் கருதினார்கள். எனவே இந்தப் பகுதியில் நீண்ட காலம் ஆளுநராக இருந்த யான் செங் அந்தக் குறிப்பிட்ட பள்ளியை மூடினார். அது மட்டுமல்ல பள்ளியின் பொறுப்பாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். துருக்கி நாட்டிற்கு விசுவாசமான முறையிலும், அடிபணியக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்டு இருந்த சின்னங்களை எல்லாம் அகற்றினார். பின் உள்ளூர் மொழி மற்றும் சீன மொழி, சீன ராணுவ பயிற்சி ஆகியவற்றை கற்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அந்தப் பள்ளியை மீண்டும் திறந்து செயல்பட வைத்தனர்.

முதல் உலகப்போரின் முடிவில் துருக்கிய ஓட்டோமான் பேரரசு வீழ்ச்சி அடைந்ததால் ஜின்ஜியாங்கில் அதன் பலம் குறைந்தது. ஜின்ஜியாங்கில் சில பகுதிகள் சோவியத்தில் எல்லையில் இருந்ததால் சோவியத் செல்வாக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதே காலத்தில் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய புரட்சிகரமான போராட்டங்கள் இந்தப் பகுதிகளிலும் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தது. இக்காலத்தில் குறிப்பாக 1933 ஆம் ஆண்டு செங் ஷிகாய் என்பவர் பொறுப்பேற்றார். இவர் கல்வியில் புதிய பல திட்டங்களை அமலாக்கினார். இந்த கல்வித் திட்டத்தில் சோவியத் புரட்சியின் தாக்கம் இருந்தது. இவர் ஆரம்பித்த பள்ளிகளில் இடைநிலைப் பள்ளிகள், தொழில் முறை பள்ளிகள், பல்வேறு இனச் சிறுபான்மையர்கள் ஒன்றாக படிக்கும் வகையிலான பொது தொடக்கப் பள்ளிகள், உள்நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே தனியான பள்ளிகள், மழலையர் பள்ளிகள் போன்ற பல பள்ளிகளை இவர் ஆரம்பித்தார். பாடத்திட்டமும் சோவியத் செல்வாக்கை பிரதிபலித்தது. கல்விகள் அனைத்தும் தாய்மொழி வழியாகவே கற்பிக்கப்பட்டாலும், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளும் இவர் ஆரம்பித்த பள்ளிகளில் விருப்ப மொழியாக அறிமுகப்படுத்தப்பட்டன.

இக்காலத்தில் ஜின்ஜியாங் பொருளாதாரத்தை மேம்படுத் தக்கூடிய முறையில் கல்வி கற்பித்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பல்வேறு வகையான தொழில்நுட்ப பயிற்சியாளருக்கு பயிற்சி அளிப்பது பொருளாதார மேம்பாட்டுக்கான முக்கிய கருவியாக கருதப்பட்டது. இதற்காக அவர் விவசாயம், மேய்ச்சல் நிலம், கால்நடை அறுவை சிகிச்சை, பொறியியல், கணக்குகள், நிதியியல், ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட பள்ளிகளும் துவக்கப்பட்டன. 1936 முதல் 1942 வரை செங் ஷிகாய் ஆட்சி காலத்தில் கல்வி வியத்தகு விரிவாக்கத்தை பெற்றது. குறிப்பாக 1935 இல் 425 மாணவர்களைக் கொண்ட சாதாரண நடுநிலைப் பள்ளிகள் மட்டுமே இருந்தன. 1943 இல் 2590 மாணவர்களைக் கொண்ட ஏழு நடுநிலைப் பள்ளிகள் இருந்தது. 1937 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளிகள் 215 ஆக இருந்தது 1942 ஆம் ஆண்டில் 556 பொது தொடக்கப் பள்ளிகள் உருவானது. இக்காலத்தில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 2.66 லட்சமாக உயர்ந்தது.

செங் ஷிகாய் அடிப்படை கல்வி, அறிவை எளிதில் அடையவும் அதன் மூலம் சமூகத்தில் தங்கள் சொந்த செல்வாக்கை விரிவுபடுத்த முடியும் என்று நம்பி கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இவர் இன, கலாச்சாரம், மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அங்கீகரித்தார். தங்களது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கான முயற்சிகளாக இருந்தாலும், இயற்கையாகவே அவை முற்போக்கானதாகவும் விரும்பத்தக்கதாகவும் இருந்தது. இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வியை விரிவு படுத்தியதற்காக செங் ஷிகாய் பாராட்டப்பட்டார். எனினும் முல்லாக்கள் அனைவரும் இவரின் செல்வாக்கை அகற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்தார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்று புதுக் கல்வியை மீண்டும் மதக் கல்விக்கான அடித்தளமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இன்றும் கூட ஜின்ஜியாங்கில் உள்ள இஸ்லாமிய முல்லாக்கள் செங் ஷிகாய் ஆட்சியைப்பற்றி பாராட்டி பேசுவது கிடையாது.  தூற்றுவார்கள்.

எனவே ஜின்ஜியாங் பகுதிகளில் மதக் கல்வியின் ஆதிக்கம், அதன் பாடத்திட்டம் தொடர்ந்தாலும் எல்லை நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும், உள்ளூரில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டின் தாக்கமும் கல்விக் கொள்கையில் ஏகபோகத்திற்கு எதிரான குரலாக வெளிப்பட ஆரம்பித்தது.

அ.பாக்கியம்

வியாழன், பிப்ரவரி 19, 2026

60 இனக்கல்வியும் மத மரபும்


அ.பாக்கியம்

இன்றைய உலகில் கல்வியானது மக்களின் வாழ்வில் ஒரு அத்தியாவசியமான அங்கமாக மாறிவிட்டது. கல்வி ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றுகிறது. மனிதர்களுக்கு கல்வி வெறுமனே ஒரு ஆன்மீக உரிமைகள் என்ற நிலைமையில் இருந்து, சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு சட்டபூர்வமான உரிமையாக மாற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளைப் பற்றிய உலகளாவிய பிரகடனத்தில் 26 ஆவது பிரிவு கல்வியைப் பற்றி குறிப்பாக சொல்லி இருக்கிறது. கல்வியானது மனித ஆளுமையின் முழுமையான வளர்ச்சிக்கும் மனித உரிமைகளுக்கும் அடிப்படையான சுதந்திரங்களுக்கும் மரியாதையை ஏற்படுத்துவதற்கு வழி வகுக்க வேண்டும் என்று கல்வி எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்க எவ்வாறு இருக்க வேண்டுமென எடுத்துச் சொல்லி இருக்கிறது.

ஆனால் இன்றைய உலகில், கல்வி வணிகமயத்தின் உச்சத்தை எட்டியுள்ளது. பணம் இல்லாதவர்கள் சிறந்த கல்வியை பெற முடியாது என்ற நிலைமை உலகை ஆட்சி செய்கிறது. மறுபுறத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கக்கூடிய சிறுபான்மை தேசிய இனங்கள் அல்லது மதச் சிறுபான்மையினர் அல்லது மொழிச் சிறுபான்மையினர் கல்வி தளத்தில் கணிசமான அளவு புறக்கணிக்கப்படுகின்றனர். உலகம் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து துறை வளர்ச்சியால் சுருங்கி வருகிறது. ஆனால் உலக மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் விரிவடைந்து செல்கிறது. வறுமையில் வாடுபவர்கள் வசதியாக வாழ்பவர்களுக்கு இடையிலான இடைவெளி மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியாக மாறிக் கொண்டிருக்கிறது.

2025 ஆம் ஆண்டு தரவுகளின்படி, உலகளவில் 73 – 77 கோடி வரையிலான வயது வந்தவர்களுக்கு படிக்கவும் தெரியாது எழுதவும் தெரியாது. மேலும் 200 கோடி மக்களுக்கு ஒரு வாக்கியத்தை முழுமையாக படிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். உலகம் முழுவதும் எழுத்தறிவற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள். தற்போது கல்வி பெற முடியாதவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2.2 சதவீதம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக வளர்ந்த நாடுகளில்தான் கல்வி அறிவை பெற்றவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கல்வி பெறுவதற்கான சட்டபூர்வமான உரிமைகளை பெற முடியாத மக்கள் கணிசமான அளவில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சீன எழுத்தறிவின் அளவுகோல்….

உலகில் மக்கள் தொகையில் மட்டுமல்ல பொருளாதாரத்திலும் மிகப்பெரிய நாடாக சீனா விளங்குகிறது . 1949 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவைப் போன்று பல காலனித்துவ நாடுகள் சந்தித்த அனைத்து விதமான கொடுமைகளையும் சீனாவும் சந்தித்தது. சீனாவில் அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட்டிருப்பது அசாதாரண சாதனையாகும். இதே காலத்தில் விடுதலை அடைந்த பல நாடுகளில் முதலாளித்துவ கொள்கைகள் கோலோச்சியதால் கல்வி அறிவின் நிலைமைகள் பின்தங்கி இருந்தது. சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைமையிலான அரசு அனைத்து மக்களுக்குமான கல்வியை சாத்தியப்படுத்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டு சீனாவின் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி வயது வந்தவர்களுக்கான அதாவது 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் எழுத்தறிவு விகிதம் 97.33 சதவிகிதமாகும். இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் எழுத்தறிவு சதவீதம் 76 சதவிகிதமாகும். சீன நாட்டில் 2.67 சதவிகிதம் எழுத்தறிவு பெற முடியாத நிலைமை நீடிப்பதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் இருக்கிறது. புரட்சிக்கு முந்திய காலத்திலும், புரட்சி முடிந்த ஆரம்ப கட்டத்திலும் சீனாவில் கட்டாய கல்வி முறை அமலாக்கத்தில் இல்லை. எனவே இக்காலத்தில் பலர் கல்வி கற்பதற்கு செல்லவில்லை. குறிப்பாக பெண்கள் அதிகம் கல்விச்சாலைக்கு செல்லாதவர்களாக இருந்தார்கள். தற்போது சீனாவில் கல்வி அறிவு இல்லாதவர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். சீனாவில் கட்டாய கல்வி முறை கொண்டு வந்த பிறகு அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு உட்பட்ட குடிமக்களில் 99 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர்கள். 15 வயது முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்கள் மத்தியில் எழுத்தறிவின் விகிதம் 99.9 சதவிகிதமாக இருக்கிறது. இந்த இளையோர்கள் முழுமையான கல்வியை பெறுவதற்கு மிகவும் அடிப்படை காரணமாக இருப்பது ஒன்பது ஆண்டுகள் கட்டாய கல்வி முறையை சீன அரசாங்கம் சட்டமாக கொண்டு வந்தது. இதன் மூலம் அனைவரும் கல்வி அறிவை பெற்றார்கள்.

 

சீனாவின் 14 ஆவது ஐந்து ஆண்டு திட்டத்தில் (2021-2025) கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இருக்கக்கூடிய எழுத்தறி வின்மையை முற்றிலும் ஒழிப்பதன் மூலம் வயது வந்தோருக்கான எழுத்தறிவு விகிதத்தை 100% மாற்றுவது என்றும் இலக்கு தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு சீனாவின் எழுத்தறிவு விகிதம் 99 சதவீதம் வரை இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். தரவுகள் சில ஆண்டுகளில் வெளியிடப்படும். சீனாவில் எழுத்தறிவு என்பதற்கான அளவுகோல் 1500 முதல் 2000 வரை உள்ள பொதுவான சீன எழுத்துக்களை படிக்கவும் எழுதவும் உள்ள திறனை எழுத்தறிவு பெற்றவர்கள் என்ற அளவுகோலுக்கு உட்படுகிறார்கள். இது ஒரு செயல்பாட்டுக்கான எழுத்தறிவு அளவுகோலாகும். சீனாவின் பொதுவான கல்வி அளவிலிருந்து இனச் சிறுபான்மை மக்களின் கல்வி முறைகள் மாறுபட்டதாக இருந்தது மட்டுமல்ல, அவற்றை வெற்றி கொள்வதும் மிகப்பெரும் சவாலாக அமைந்தது.

சீனா பெரும்பாலும் ஒற்றைத் தன்மை கொண்ட சமூகமாகவே வெளி உலகத்தில் இருந்து பார்க்கப்படுகிறது. சீன மக்கள் தொகையில் 91 சதவீதம் பேர் ஒரே கலாச்சாரத்தை (கன்பியூசியம்) பின்பற்றுவர் களாகவும் ஒரே மொழியை (மாண்டரின்) பேசுகின்றவர்களாகவும் இருப்பதினால் ஒற்றைத் தன்மை கொண்ட சமூகம் என பார்க்கப்படுகிறது. ஆனால் இது உண்மை அல்ல. சீன சமூகம் வரலாற்று ரீதியாக பன்முக இனச் சமூகங்களை கொண்டதாகும். சுமார் 12 முதல் 13 கோடி வரை உள்ள இனச் சிறுபான்மை மக்கள் 9 சதவீதம் வரை உள்ளனர். இவர்களில் 55 இனச் சிறுபான்மையினர் உள்ளார்கள். சீனாவின் மொத்த நிலப்பரப்பில் 64 சதவிகித நிலப்பரப்பில் இவர்கள் வாழ்கிறார்கள்.

இந்தப் பின்னணியில்தான் சீனா தன்னை பல்வேறு கலாச்சாரங் களையும் இனங்களையும் கொண்ட ஒருங்கிணைந்த பல இனநாடு (பல்லினநாடு) என்று பிரகடனப்படுத்தி உள்ளது. உலகில் சில நாடுகள் பல்வேறு மொழி கலாச்சார இனங்களைக் கொண்டிருந்தாலும், ஓரளவு பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இனத்தால் அல்லது மதத்தின் பெயரால் ஒற்றைத் தன்மை கொண்ட சமூகமாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அதற்காக அடக்குமுறைகளையும் கையாளு கின்றனர். ஆனால் சோசலிச கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சீனா ஒன்பது சதவீதம் இருக்கக்கூடிய இனச் சிறுபான்மையினர்களை உள்ளடக்கிய பல இன நாடு என்று தன்னை அழைத்துக் கொள்வது மட்டுமல்ல அனைத்து இனப் பகுதிகளுக்கும் சமத்துவமான உரிமைகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த வரலாற்று பின்னணியின் அடிப்படையில் தான் சீனாவில் இனச் சிறுபான்மையினருக்கான கல்வியை கடின முயற்சி எடுத்து கற்பித்து வருகிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் இனச் சிறுபான்மையினர் இருந்தாலும் அவர்களுக்கான கல்வி வழங்குவது ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் சவாலான பிரச்சனையாக உள்ளது. இதற்கு காரணம் இருக்கிறது. அதாவது இனச் சிறுபான்மையினரின் இனங்களுக்கு மத்தியில் சமூக சமத்துவம், சமூக இயக்கம், பரந்த அளவில் தேசிய அடையாளம் போன்ற உணர்வுகள் அழுத்தமாகவும் நெருக்கமான தொடர்புகளையும் கொண்டு இருக்கிறது. இவர்களுக்கு கல்வி வழங்கினால் தொழிலாளர்கள் சந்தையில் தங்கள் தொழில் முறை திறன்களை மேம்படுத்திக் கொள்வதும், பரந்த சமூகத்தில் தங்கள் குழு அடையாளத்தையும் அரசியல் நிலைபாடுகளையும் உறுதிப்படுத்திக் கொள்வார்கள் என்ற அச்சம் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

எனவே ஒரு குறிப்பிட்ட தேச உணர்வை உருவாக்குதல், தேசபக்தி உருவாக்குதல், தேச ஒற்றுமையை பேணுவது ஆகிய ஒட்டுமொத்தமான இலக்குகளுக்கு இவற்றின் மூலம் சிக்கல்கள் ஏற்படலாம். இவற்றை எதிர்கொள்ள முடியாத இடத்தில் சிறுபான்மை மக்கள் மீது அடக்குமுறைகளோ அல்லது கல்வி ரீதியான புறக்கணிப்பு களோ மேலோங்கி வருகிறது. இதுதான் பல முதலாளித்துவ நாடுகளில் காணக்கூடிய நிகழ்வாக அமைந்திருக்கிறது. இதே பிரச்சனைகள் சீனாவிலும் இருந்தது. கல்விக்கான பணிகளை ஆரம்பிக்கிற பொழுது இந்த இடர்பாடுகளை எதிர்கொண்டனர். சீனா சீன தேசம் என்ற தேசிய உணர்வை வளர்ப்பது என்பதைவிட இனச் சிறுபான்மை மக்களுக்கு கல்வி போற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த சோசலிச பாதையை நோக்கி முன்னேறுவதற்கான ஒரு அடித்தளமாக இந்த இனச் சிறுபான்மையின ருக்கான கல்வி அமையும் என்று கருதினார்கள். ஒரு சோசலிச சமூகம் நோக்கிய பயணத்தின் தொடர்ச்சியாகதான் சிறுபான்மை மக்களுக்கான கல்வி கொள்கைகள் உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்ட அனுபவத்தை பெற்றார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் இன்றும் சீனாவைப் போன்ற ஒரு வெற்றி சாத்தியப் படாததாக இருக்கிறது.

1949க்கு முந்தைய கல்வி….

மார்க்சியம் என்பது சூனியத்திலிருந்து உருவானதில்லை. அதே போன்று சோசலிச சமூகம் என்பது அதற்கு முந்தைய சமூகத்தை வெட்டி துண்டாகி விட்டு உருவாக்கப்படக்கூடிய சமூகமல்ல. கடந்த கால சமுதாயத்தின் ஒரு தொடர்ச்சியாக தான் சோசலிச சமுதாயத்தை உருவாக்க வேண்டி இருக்கிறது. கடந்த கால சமூகத்தின் தகுதி வாய்ந்தவைகளை தக்கவைத்து கொண்டு, தகுதியற்றவைகளை அழித்து ஒழிப்பது தான் சோசலிச பயணத்திற்கு அடிப்படையானது என்பதை அனைத்து மார்க்சியங்களும் அறிவார்கள். இந்த வகையில் தான் மார்க்சியத்தின் வரலாற்றியல் பொருள் முதல்வாத அடிப்படையில் 1949 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உலகின் பல நாடுகளை விட சீனாவில் நிலப்பிரபுத்துவ காலத்திலேயே கல்வி முறைகள் மாறுபட்டு இருந்தது. பொது ஆண்டுகளுக்கு முன்பு (2070-1600) சியா வம்ச ஆட்சி காலத்திலேயே பள்ளிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அடுத்தடுத்து வந்த வம்ச ஆட்சிகளும் கல்விக்கான தலையீடுகளை தொடர்ந்து செய்துள்ளார்கள். வம்ச ஆட்சி காலத்திலேயே சீனாவில் மிகவும் பிரசித்தி பெற்றது கல்வியில் நடத்தப்பட்ட தேர்வு முறைகள் ஆகும். குறிப்பாக ஆட்சி பணி தேர்வு முறை குறிப்பிடத்தக்கது. ஐரோப்பா உட்பட பல நாடுகளில் வாரிசு அடிப்படையில் தேர்வுகள் நடந்த பொழுது சீனாவில் தகுதியின் அடிப்படையில் நடத்தப்பட்டது. கன்பூசியம் அடிப்படையில்தான் பாடத்திட்டங்களும் தேர்வு முறைக ளும் இருந்தது.

இப்படி பல விஷயங்களை குறிப்பிட்டுச் சொன்னாலும் இவை அனைத்தும் சீனாவில் வாழ்ந்த சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வி அறிவை மேம்படுத்துவதற்கான நடவடிக் கையாக அமையவில்லை. ஹான் இன சீனர்கள் மத்தியில் தான் இந்த கல்வி அறிவு வளர்ந்து இருந்தது.

1949க்கு முன்பு இனச் சிறுபான்மை மக்கள் வாழ்ந்த பகுதிகள் சமூக ரீதியிலும், பொருளாதார அடிப்படையிலும் மிகவும் பின்தங்கி இருந்தன. பல்வேறு பகுதிகளில் நிலபிரபுக்களின்கீழ் அடிமைகளாகவும், பண்ணை அடிமைகளாகவும் மக்கள் இருந்தார்கள். இந்த நிலையில் அன்றாட நிகழ்வுகளை மரங்களில் குறியிடுவதன் மூலமும், சில கயிறுகளை கட்டி வைப்பதன் மூலமாகவே தங்களது கணக்குகளை பதிவு செய்து கொண்டிருந்தார்கள். பெரும்பகுதி மக்களிடம் நவீன கல்வி முறைகள் எதுவும் இல்லை.

1950 ஆம் ஆண்டுகளில் புரட்சி முடிந்த அடுத்த ஆண்டு சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உயர்நிலை கல்வி கற்கும் மாணவர்களில் 0.9 சதவீதம், இடைநிலைப் பள்ளி மாணவர்களில் 0.4 சதவிகிதம், தொடக்கப்பள்ளி மாணவர்களில் 0.2 சதவீதம் என்ற அளவில்தான் இனச் சிறுபான்மை மாணவர்கள் இருந்தார்கள். திபெத் பிராந்தியத்தில் பள்ளி சேர்க்கை விகிதம் 2 சதவீதம் மட்டுமே இருந்தது. இந்த இரண்டு சதவீதத்திலும் உயர்குடி வகுப்பைச் சேர்த்த மாணவர்களும் நிலப்பிரபுக்களும் இடம் பெற்றிருந்தார்கள். 1930 மற்றும் 40 ஆம் ஆண்டுகளில் சீனாவில் இருந்த 55 இனச் சிறுபான்மையினரில் 22 இன சிறுபான்மை குழுக்களின் கல்வி அறிவின்மை என்பது 95% க்கு அதிகமாகவே இருந்தது. 1950 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட தரவுகளின் ஒரு பொதுவான அம்சம் ஒட்டுமொத்த இன சிறுபான்மை யினர்கள் 80 சதவீதம் பேர் கல்வியறி இல்லாதவர்களாக இருந்தார்கள். சிறுபான்மை பகுதிமக்கள் வாழ்ந்த இடங்களில் மதம் கல்வியின் மீது பெரும் மேலாதிக்கும் செய்தது. அதே நேரத்தில் கடினம் முயற்சி எடுத்து தீர்வு காண வேண்டிய பிரச்சனையாக ஆட்சியாளர்களுக்கு இருந்தது.

வலுவான மத மரபில் சிறுபான்மையினர்…

பொதுவாக ஹான் சீனர்களின் கலாச்சாரம் உறுதியாக மதசார்பற்றது. அவற்றின் கல்வி முறைகள் வரலாற்று ரீதியாக கன்பியூசியத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. இது ஒரு மதசார்பற்ற சித்தாந்தம் ஆகும். இது ஒட்டுமொத்தமாக மதசார்பற்ற வழிகளில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான மிக முக்கியமான வழிமுறையாக கன்பியூசிய தேர்வு முறைகள் இருந்தது. எனவே மத விஷயங்களில் கன்பியூசியம் கூடுதல் அக்கறை செலுத்தவில்லை. இக்காலத்தில் பௌத்தமும் தாவோயிச பாதிரிமார்களும் பெயரளவிற்கு பள்ளிகளையும் நடத்தினார்கள். பொதுவாக கல்வி முறையில் கூடுதல் பங்களிப்பு இல்லை என்று கூறலாம். ஹான் சீனர்கள் வாழக்கூடிய பகுதியில் மதம் சமூகத்தில் செல்வாக்கு மிக்கதாக இருந்தாலும், சமூக ஒழுக்கத்தை அமுல்படுத்துவதற்கு எந்த ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரமும் இல்லாமல் இருந்தது. இருந்த மத அமைப்புகளும் முக்கியமாக மதசார்பற்ற நெறிமுறைகளுக்கும், மதிப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டிய நிலைமை நீடித்தது. இதற்கு கன்பியூசியம் அடிப்படை காரணமாகும். சிறுபான்மை பகுதிகளில் குறிப்பாக கொரிய இனச் சிறுபான்மை மக்களிடம் இந்த மதசார்பற்ற தன்மை.

சீனாவில் இருந்த பெரும்பாலான இனச் சிறுபான்மையினருக்கு ஒரு வலுவான மத மரபு இருந்தது. மதம் அவர்களின் கலாச்சாரங்களில் ஊடுருவி, அவர்களின் சித்தாந்தங்கள், வாழ்க்கை முறைகள், மற்றும் சமூக நடத்தைகளை வடிவமைப்பதில் ஒரு ஆழமான பங்கை வகித்துள்ளது. இன சிறுபான்மையினர் இடையே மத நம்பிக்கைக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் இருந்த பல்வேறு இனக்குழுக்கள் நாம் அறிய முடியும். சீனாவில் இருந்த இன சிறுபான்மையினரின் முக்கிய மதங்களாக இஸ்லாம், பௌத்தம், லாமயிசம் போன்றவைகள் இருந்தன. ஹுய் இனத்தவர்களுக்கு இஸ்லாம் முக்கிய அடையாளமாக இருந்தது.

ஹுய், உய்குர், கசாக், கிர்கிஸ், டாடர், உஸ்பெக், தாஜிக், டோங்சியாங், சலார் மற்றும் போனன் குழுக்களின் உறுப்பினர்கள் இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றுபவர்கள். திபெத்திய, மங்கோலிய, யுகூர் மற்றும் து குழுக்கள் லாமாயிசத்தைப் பின்பற்றுபவர்கள். டாய், புலாங் மற்றும் பெங்லாங் இனத்தவர்கள் ஹீனயானா பௌத்தத்தை பின்பற்றுபவர்கள். ஓரோகென், டௌர் மற்றும் எவென்கி ஆகியோரால் ஷாமனிசம் (ஆவிகளுடன் தொடர்பு) பின்பற்றப்படுகிறது. ட்ரங், நு, வா, ஜிங்போ மற்றும் காவ்ஷான் இனத்தவர்கள் பலதெய்வ வழிபாடு மற்றும் டோட்டெமிசம் (இதில் மக்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட விலங்கு, தாவரம் அல்லது இயற்கை பொருளுடன் நெருங்கிய, புனிதமான உறவு) மற்றும் மூதாதையர் வழிபாட்டைப் பின்பற்றுகிறார்கள். கொரியர்கள், மியாவோ, லாஹு மற்றும் யி ஆகியோரிடையே கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்களின் ஒரு சிறிய குழுவைக் காணலாம்.

குடும்பத்திற்கு வெளியே ஒரு ஒழுங்கு அமைக்கப்பட்ட மதக்கல்வியை கொடுப்பதற்கு மடாலயங்கள் பாரம்பரியமாக வடிவமாக இருந்து வருகிறது. அரசு உருவாக்குகிற மதசார்பற்ற பள்ளிகளுக்கு மிகப்பெரிய சவாலாகவும் இந்த மடாலயங்களின் பள்ளிகள் இருந்தன. அரசு சிறுபான்மை மொழிகளை விட சிறுபான்மை மதங்களைப் பற்றிய சவால்களை அதிகம் சந்திக்க வேண்டி இருந்தது. அரசு ஆரம்பித்த பள்ளிகளின் வருகைக்காக நிதி பங்களிப்பை செய்தது மட்டுமல்ல குடும்பங்களின் ஆதரவை பெறுவதற்காகவும் மடாலயங்களின் கட்டுப்பாடுகளுடன் போட்டியிட வேண்டியது இருந்தது.

அ.பாக்கியம்

வியாழன், பிப்ரவரி 12, 2026

59 இனச் சிறுபான்மை வறுமை ஒழிப்பின் முறைகளும் பயன்களும்



அ.பாக்கியம்

சென்ற தொடரில் இனச் சிறுபான்மையினர் மக்கள் மத்தியில் நிலவிய வறுமை ஒழிப்பதற்கான ஆய்வுகளையும், ஆய்வுகளின் அடிப்படையில் பெறப்பட்ட தரவுகளையும், அந்த தரவுகள் மூலமாக உருவாக்கப்பட்ட திட்டங்களைப்பற்றி எழுதி இருந்தேன். அந்தத் திட்டத்தின் அடிப்படையில் வறுமை ஒழிப்பிற்காக செயல்பாட்டில் இறங்கினார்கள். அவ்வாறு செய்த பொழுது அதற்கான பலன்கள் பளிச்சென வெளிப்பட்டது. 2013ம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுகள் வரை குறிப்பான சில திட்டங்களை அமலாக்க முயற்சி செய்தனர்.

இதுவரை பொதுவான வறுமை ஒழிப்பு திட்டங்களில் இருந்து இலக்கு சார்ந்த வறுமை ஒழிப்பு என்ற அடிப்படையில் திட்டங்கள் துல்லியப்படுத்தப்பட்டது. இந்த புதிய திட்டத்தின்படி தற்போது உள்ள வறுமை ஒழிப்புத் திட்டங்களை சீர்படுத்தி வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒரு முன்மாதிரிகளை உருவாக்க வேண்டும் என்று முடிவு எடுத்தனர். ஒவ்வொரு பிரதேசங்களிலும் வறுமை ஒழிப்பிற்கான சவாலாக உள்ள பிரச்சனைகளை சரியாக மதிப்பீடு செய்து அதற்கான திட்டங்களை துல்லியமாக வரையறை செய்ய வேண்டும். இந்த இலக்கு சார்ந்த வறுமை ஒழிப்பு என்பது சீன அரசின் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் குவிமயமாக இன சிறுபான்மை பகுதி மாறியது.

இலக்கு சார்ந்த வறுமை ஒழிப்பு கொள்கை திட்டங்களை இனச் சிறுபான்மை பகுதியில் அமலாக்கப்படுவதை மதிப்பீடு செய்வதற்கான மேலாண்மை அமைப்புகளை உருவாக்கினார்கள். மேற்கண்ட அமைப்புகள் மதிப்பீடு செய்து வறுமை ஒழிப்பு திட்டங்களை பல்வேறு ஏழை மக்களின் நிலைமைகளுக்கு ஏற்ப அளவுகோலை தீர்மானித்து திட்ட செயல்பாட்டை வடிவமைத்தார்கள். இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் கிடைத்த அனுபவங்களை தொகுத்து 2018 ஆம் ஆண்டு இலக்கு சார்ந்த வறுமை ஒழிப்பு திட்டம் இலக்கு சார்ந்த தீவிர வறுமை ஒழிப்பு திட்டம் என்று மாற்றியமைக்கப்பட்டது. இந்த தீவிர வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டுக்குள் வறுமையை முற்றிலும் ஒழித்து விட வேண்டும் என்ற இலக்குடன் செயல்கள் விரைவு படுத்தப்பட்டன.

 

இந்தத் திட்டத்தின்படி வறுமை ஒழிப்பில் உற்பத்தி, வேலை வாய்ப்பு, இடமாற்றம், மீள்குடியேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி மேம்பாடு, வாழ்வாதார உதவித்தொகை போன்ற திட்டங்களையும் உள்ளடக்கி செயல்பட ஆரம்பித்தார்கள். இந்தத் திட்டங்களின் வெற்றிக்காக சமூகத்தின் அனைத்து சக்திகளையும் அணி திரட்டினார்கள். இதுவரையில் கிராம அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட பணிகள் இலக்கு சார்ந்த தீவிர வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளையும் நோக்கி அமுலாக்க கூடிய முறையில் செயல்கள் துல்லியமாக விரிவுபடுத்தப்பட்டது. இதற்கான செயல்பாட்டு முறைகளும் உதவிகளும் வடிவமைக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு இலக்கு சார்ந்த வறுமை ஒழிப்பு திட்டத்தை அறிவிக்கிற பொழுது 5 புதிய கொள்கைகளை திட்டத்தின் வழிகாட்டியாக அமைத்துக் கொண்டார்கள். அவைகள் முறையே புதுமை, ஒருங்கிணைப்பு, பசுமை, பகிரங்கத் தன்மை, பகிர்ந்து கொள்ளுதல் போன்றவைகள் ஆகும். நாடு முழுவதும் உள்ள வறுமை ஒழிப்பிற்கு வழிகாட்டியாக அமைக்கப்பட்ட இந்த ஐந்து விதிகள் இனச் சிறுபான்மை பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் விளைவாக வறுமையில் வாடிய மக்களின் வாழ்வாதாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டது.

2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுகள் வரை சீனாவின் இனச் சிறுபான்மை பகுதிகளில் வாழ்ந்த ஏழை மக்களின் தனிநபர் வருமானம் வியத்தகு மாற்றங்களை பெற்றது. 2016 இல் 4,639 யுவான் வருவாயிலிருந்து 2020 ஆம் ஆண்டு 10,770 என்ற அளவில் அதாவது 156 சதவிகிதம் அதிகரித்தது. 2018 ஆம் ஆண்டு இலக்கு சார்ந்த தீவிர வறுமை ஒழிப்பு திட்டம் துவங்கிய காலத்தில் இன சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் நான்கு சதவீத மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே இருந்தார்கள். இந்த எண்ணிக்கை என்பது சீன தேசிய அளவைவிட 1.7 சதவிகிதம் அதிகமாகும்.

2019 ஆம் ஆண்டில் இன சிறுபான்மை பகுதிகளில் வறுமைக்கு எதிரான போராட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்த பொழுது இந்தப் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்தவர்கள் எண்ணிக்கை தேசிய சராசரியைவிட 0.19 அளவாக குறைந்தது. அதாவது ஒரு வருடத்தில் 1.7 சதவீதத்திலிருந்து 0.19 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு இலக்கு சார்ந்த தீவிர வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் முழுமையான அளவு வறுமை ஒழிக்கப்பட்டு வெற்றி காணப்பட்டது. இவை ஒட்டுமொத்த இனச் சிறுபான்மை பகுதிகளின் பொதுவான விவரங்கள் ஆகும். கீழே சில பிரதேசங்களை மட்டும் குறிப்பான தன்மைகளை சுட்டிக்காட்டலாம்.

தெற்கு ஜின்ஜியாங்க் மாகாணத்தில் வறுமையால் பாதிக்கப்பட்ட 976 கிராமங்களிலும் தீவிர வறுமை ஒழிப்பு நிறைவேற்றப்பட்டது. 2017 ஆம் ஆண்டு வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்த மக்களின் சதவீதம் மேற்கண்ட குறிப்பிட்ட பகுதிகளில் 18.3 சதவீதமாக இருந்தது. 2018 ஆம் ஆண்டு இலக்கு சார்ந்த தீவிர வறுமை ஒழிப்பை அமுல்படுத்திய பொழுது 10.51 சதவிகிதமாக குறைந்தது. மேலும் செயல்கள் தீவிர படுத்தப்பட்டு 2019 ஆம் ஆண்டில் 1.2 சதவீதமாக குறைக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு இந்தப் பகுதி முழுமையாக வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டது.

மற்றொரு இனச் சிறுபான்மை தன்னாட்சி பிரதேசமான திபெத் மாகாணத்தில் 55 மாவட்டங்களில் 4714 கிராமங்கள் வறுமைக் கோட்டின் கீழே இருந்தது. இவற்றை குறிவைத்து தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தப் பகுதியில் இருந்து 4,78,000 மக்கள் வறுமைக்கோட்டில் இருந்து மூன்று ஆண்டுகளில் மீட்டெடுக்கப்பட்டார்கள். இந்த வறுமை ஒழிப்பு திட்டத்தில் இதுவரை எங்கும் கடைபிடிக்கப்படாத புதிய உத்தி ஒன்று திபெத் பகுதியில் அமலாக்கப்பட்டது. திபெத் பகுதி உலகில் உயரமான பகுதி. எளிதில் அணுக முடியாத உயரத்தில் கடினமான சீதோசன நிலையில் போக்குவரத்து பாதைகள் கடின முயற்சி எடுத்தாலும் அமைக்க முடியாத பகுதிகளில் 965 கிராமங்கள் இருந்தது. இந்த கிராம மக்கள் காடுகளின் உணவு சேகரிப்பு வாழ்க்கையில் இருந்தார்கள். எனவே வறுமை இவர்களின் வாடிக்கையான செயலாக இருந்தது. அதே இடத்தில் இந்த மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதோ, வறுமை ஒழிப்பதோ சாத்தியமற்றதாக இருந்தது.

எனவே 965 கிராமங்களையும் இடம் மாற்றம் செய்து உயரம் குறைவான இடங்களுக்கு இடம்பெயர செய்து புதிய வீடுகளை கட்டிக் கொடுத்தது மட்டுமல்ல வேலை வாய்ப்புகள் சாலைகள் மற்ற அனைத்து விதமான அணுகல்களையும் அமைத்துக் கொடுத்து வறுமையை ஒழித்தார்கள். இதன் மூலம் 2.66 லட்சம் மக்கள் வறுமைக்கோட்டில் இருந்து மீட்கப்பட்டார்கள். இவ்வாறு ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு பகுதிகளும் இருக்கக்கூடிய பிரத்தியேகமான நிலைமைகளை கணக்கில் எடுத்து முடிவுகள் அமலாக்கப்பட்டதால் இனச் சிறுபான்மை பகுதிகளிலும் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டது.

அமைப்பும் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பும்

இனச் சிறுபான்மையினர் வாழக்கூடிய பிரதேசங்களில் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவது மிகவும் சவால்மிக்க பணிகளாக இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன அரசாங்கமும் உயர்மட்ட அமைப்புகளை உருவாக்கி இதை அமல்படுத்தினார்கள். திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் வறுமையை ஒழிப்பதற்கான தனியான ஒரு தலைமை அலுவலகமே உருவாக்கப்பட்டது. வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் திபெத் பிராந்தியத்தின் நிலைகுழு உறுப்பினர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த அமைப்பின் கீழ் பதினோரு சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு பிராந்தியம் முழுவதும் நகரங்கள், மாவட்டங்கள், உள்ளூர் அளவுகளில் அமைப்புகளை உருவாக்கியது மட்டுமல்ல அதற்கான அலுவலகங்களையும் உருவாக்கினார்கள். அனைத்து இடங்களிலும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இதற்கு நேரடியான பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

தெற்கு ஜின்ஜியாங்க் மாகாணத்தில் உய்குர் தன்னாட்சி பகுதிகளில் இருந்த சீன மக்கள் குடியரசு அரசாங்கம் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிகாரிகளையும், ஊழியர்களையும் வறுமையால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். இவர்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்த கிராமங்களில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் பணியினை செயல்படுத்தினார்கள். இந்தப் பகுதியில் 1289 கிராமங்கள் மிகக் கடுமையான வறுமையில் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த தரவுகளின் அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை அனுப்பி உரிய காலத்தில் வறுமை ஒழிக்கப்பட்டது என்பது இலக்கு சார்ந்த தீவிர வறுமை ஒழிப்பின் ஒரு வெற்றியாகும்.

மேற்கண்ட 1289 கிராமத்திற்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்சியின் செயலாளர்களை நியமித்து வறுமை ஒழிப்பு என்ற திட்டத்தை நிறைவேற்றினார்கள். இந்தப் பகுதியில் மட்டும் வறுமை ஒழிப்பிற்காக 31 துறை அளவிலான அதிகாரிகளையும், 869 பிரிவு அளவிலான அதிகாரிகளையும் 389 துணை நிலை ரிசர்வ் அதிகாரிகளையும் அனுப்பி வைத்து பணியாற்றினார்கள். இவ்வாறு வறுமை ஒழிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எந்திரகதியான முறையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. வறுமை ஒழிக்க கூடிய கிராமங்களில் இருக்கக்கூடிய மக்கள் இனச் சிறுபான்மை மக்கள் அவர்கள் பேசக்கூடிய மொழி அவர்களின் தாய்மொழியாகும் எனவே இங்கு அனுப்பப்பட்டவர்கள் இரு மொழி திறன் கொண்டவர்கள் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த துல்லியமான நடவடிக்கையின் மூலமாகத்தான் மேற்கண்ட 1289 கிராமங்களில் வறுமை ஒழிக்கப்பட்டது. இதே போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் சிச்சுவான் மாகாணத்தில் 5,700 க்கு மேற்பட்ட அதிகாரிகள் பத்துக்கு மேற்பட்டு பிரிவுகளாக பிரித்து அனுப்பப்பட்டு வறுமை ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வெற்றி கண்டார்கள்.

இவை தவிர கிங்காய், யுன்னான், குவாங்சி, நிங்சியா, உள் மங்கோலியா போன்ற பிரதேசங்களில் வறுமை ஒழிப்பிற்கான பிராந்திய அளவிலான அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அதே நேரத்தில் மேற்கண்ட மாகாணங்களில் வறுமை ஒழிப்பை நிறைவேற்றுவதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்து நிலை செயலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். மாகாண செயலாளர் ஒட்டுமொத்தமான இலக்குகளை நிர்ணயித்து முடிவுகளை கண்காணிப்பார். நகராட்சி நிலை செயலாளர் மாவட்ட அளவிலான செயல்பாடுகளை வழிநடத்துவார். மாவட்ட அளவிலான செயலாளர். நிதி ஒதுக்கீடு உட்பட முன்னணி களப்பணியில் செயல்படக்கூடிய நபராக இருப்பார். டவுன்ஷிப் செயலாளர் கிராமங்கள் மற்றும் வீடுகளுடன் தொடர்புகளை முறையாக ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவார்.

கிராம நிலையில் உள்ள செயலாளர் தனிப்பட்ட குடும்பங்களில் நேரடியான தொடர்பை ஏற்படுத்தி பணியாற்றுவார். மேற்கண்ட 5 செயலாளர்களும் வறுமை ஒழிப்பு முயற்சிக்கான பொறுப்புக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டும். இந்தத் திட்டம் மத்திய தலைமையில் இருந்து கிளைச் செயலாளர் வரை கட்டமைக்கப்பட்ட ஒரு கட்டளை சங்கிலியை உருவாக்கியது. வறுமை ஒழிப்பு திட்டத்தில் நடைபெறக்கூடிய விதி மீறல்கள் போன்றவற்றை தடுப்பதற்காகவே இப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு அமைப்ப ரீதியான பொறுப்புக்கள் நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இந்த பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட்டதன் விளைவாகவே வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டது.

செயல்பாட்டுக் கிடையே தொடர்ந்த ஆய்வுகள்

இனச் சிறுபான்மையினர் மத்தியில் வறுமை ஒழிப்புக்கான திட்டங்கள் ஒருபுறம் அமலாக்கி கொண்டே இருப்பார்கள். அதே நேரத்தில் திட்ட அமலாக்கம் குறித்த மதிப்பீடு செய்வதற்கான பணிகள் துல்லியமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த இரண்டையும் கடந்து தனிப்பட்ட முறையில் பல அறிஞர்கள் வறுமை ஒழிப்பின் நடவடிக்கைகளை பற்றிய ஆய்வுகளையும் செய்து பகிரங்கமாக வெளியிட்டு வந்தார்கள். குறிப்பாக லி ஜூவோ, ஜூவோ டிங் என்ற இரண்டு அறிஞர்கள் பாலின லென்ஸ் என்ற முறையில் தங்கள் ஆய்வுகளை வெளியிட்டார்கள். இன சிறுபான்மை பகுதிகளில் வறுமை ஒழிப்பு திட்டங்கள் அமலாக்குகின்ற பொழுது பாலின ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கண்டறிந்தார்கள் பெண்களின் வறுமையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், கடுமையாக வறுமையில் வாடும் பெண்களில் குறிப்பிட்ட தேவைகளை குறிவைத்து பூர்த்தி செய்துதர வேண்டும் என்று தரவுகளை முன் வைத்தார்கள்.

இவை அமலாவதற்காக வளர்ச்சித் திட்டங்களில் பெண்களின் தலைமை பாத்திரங்களை மேம்படுத்துவதும், பெண்களின் பங்கேறுப்பை மையமாகக் கொண்ட வறுமை ஒழிப்பு வழிமுறைகளையும் முன்மொழிந்தவர்கள். இந்த முன்மொழிவுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு அமலாக்கப்பட்டது.

இனச் சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வறுமை ஒழிப்பில் கிராமப்புறங்களில் இருந்த வசதி படைத்தவர்களை அல்லது உயர் அடுக்கினர்களை பயன்படுத்த வேண்டும் அல்லது ஈடுபடுத்த வேண்டும். இந்தப் பகுதிகளில் வறுமை ஒழிப்பின் செயல் திறனை மேம்படுத்துவதில் கிராமப்புற உயர் அடுக்கினர் குறிப்பிடத்தக்க தனித்துவமான பங்களிப்பை வழங்க முடியும் என்று ஆய்வுகளின் முடிவுகள் வலியுறுத்தின. அவர்களின் முதலீடுகளை வறுமை ஒழிக்க பயன்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கினார்கள். அதே நேரத்தில் உயர் அடுக்கினர் வறுமை ஒழிப்பின் வளங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார்கள் என்ற சந்தேகத்தையும் மற்றொரு சாரார் முன்வைத்தனர்.

மேற்கண்ட கூறுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அமலாக்கு வதற்கான திட்டங்கள் உருவாக்கப் பட்டது. இதற்காக கிராம மக்களிடையே குடிமை விழிப்புணர்வை வளர்க்க வேண்டும். அதே வேலையில் சுயராஜ்ய சட்டம், நல்லொழுக்கம் ஆகியவற்றின் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் ஒரு வலுவான கிராமப்புற அமைப்பை நிறுவ வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது,. இந்த நிர்வாக அமைப்பு உயரடுக்கினர் வறுமை ஒழிப்பிற்கு உதவுவதும் அதற்கு எதிராக வளங்களை ஒதுக்கி கொள்வதை தடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. வறுமை ஒழிப்பு திட்டங்கள் அமலாக்கப்பட்ட பொழுது நிர்வாக அமைப்புகளில் இருக்கக்கூடிய பலம் பலவீனங்களை சமமான உரையாடல்கள் மற்றும் ஆலோசனைகள் மூலமாக சரி செய்து கொண்டார்கள்.

இனச் சிறுபான்மை பகுதிகளில் வறுமை ஒழிப்புக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவது மத நம்பிக்கைகள், கலாச்சார மரபுகளை முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், படிப்படியாக மதங்களின் கருத்துக்களில் இருந்து மதச்சார்பற்ற மயமாக்கலை வலியுறுத்த வேண்டும் என்ற அணுகுமுறைகளையும் கடைபிடித்தார்கள். அதே நேரத்தில் சீன தேசத்தை சேர்ந்தவர்கள் என்ற அடையாள உணர்வை மேம்படுத்தவும் அதன் அடிப்படையில் வறுமை ஒழிப்பு அதன் வட்டாரங்களில் ஈடுபாட்டை வழிநடத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதாவது இனம் சார்ந்த உணர்வுகள், வட்டார உணர்வுகள் கணக்கில் எடுக்கப்பட்டாலும் சீன தேசம் என்ற உணர்வு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்ற முறையில் திட்டங்கள் அமலாக்கப்பட்டது.

வறுமை ஒழிப்பு திட்டத்தில் ஈடுபடுகிற பொழுது ஏற்படுகிற தவறுகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி சரி செய்து கொண்டு முன்னேறியது மட்டுமல்ல, வறுமை ஒழிப்பு திட்டங்களை மீறக்கூடியவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்கள். திட்டங் களை அமலாக்குகின்ற பொழுது அவற்றை அமலாக்காமல் இருப்பவர்கள் அல்லது விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நூற்றுக் கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டு சீனா தனது சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியதிலிருந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக சீன கல்வியாளர்கள் சீனாவின் இன சிறுபான்மை பகுதிகளில் வறுமை குறைப்பு குறித்த பயனுள்ள ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சீனாவின் இன சிறுபான்மை பகுதிகளில் வறுமை குறைப்பு நடைமுறைகளையும் திட்டங்களையும் வடிவமைப்பதில் மதிப்பு மிக்க வழிகாட்டுதலாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் உலகளாவிய வறுமை நிர்வாக முயற்சிகளுக்கான குறிப்பான புள்ளியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்திருந்தது.

 

2020 ஆம் ஆண்டில் சீனா ஒட்டுமொத்த பிராந்திய வறுமையை வெற்றிகரமாக ஒலித்ததன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியது. வறுமைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மகத்தான வெற்றியை வரலாற்றில் பதிவு செய்திருக்கிறது. வறுமை ஒழிப்பில் இருந்து கிராமப்புற மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் பாதை, சீன குணாதிசயங்களுடன் சோசலிசத்தை முன்னேற்றுவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும், மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், படிப்படியாக பொதுவான செழிப்பை அடைவதற்கும் இன்றியமையாத பாதையாக வறுமை ஒழிப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சோசலிசத்தை அடைவது பட்டுக்கம்பலத்தில் நடப்பதல்ல பல படிப்பினைகளோடு களமாற்றங்களை உருவாக்குவது என்பதை சீன சோசலிச முறைகள் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.

அ.பாக்கியம்

வெள்ளி, பிப்ரவரி 06, 2026

விடையும் வியப்பும் நிறைந்த வரலாற்று ஆவணம்

 

                                                            கு.மனோகரன்         

பொதுவுடைமை கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி புரிந்து வரும் நாடுகளில்... குறிப்பாக, வல்லரசுகள் வாயடைத்து நிற்கும் அளவிற்கு பொருளாதார வலிமையுடன், தீவிர வறுமையை ஒழித்த உலகின் ஒப்பற்ற தேசமான சீனாவில் மதங்களுக்கும், வழிபாடுகளுக்கும் போதுமான அளவிற்கு சுதந்திரம் இல்லை என்று   பொய்களை பரப்பி வருவோருக்கு, விடையையும் வியப்பையும் அளித்திடும் "வரலாற்று ஆவணமே" இந்நூல். சீனாவில் அனைத்து வகையான நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிப்பதோடு, வழிபாட்டு உரிமைகள் எவ்வாறு ஒழுங்கு படுத்தப்பட்டு சீரிய முறையில் இயங்கி வருகிறது என்பதை, வரலாற்றுப் பின்புலத்துடன் விரிவாகவும், ஆர்வத்தை தூண்டும் எழுத்து நடையிலும் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். தோழர் அ.பாக்கியம் அவர்களின் "தேடலுக்கு" மேலும் ஒரு சாட்சியமாய் நிற்கிறது இப்புத்தகம். அனைவரும் வாங்குவோம்! வாசிப்போம்! சோசலிச நாடுகள் மீதான பொய்யுரைகளை தகர்ப்போம்!

மதம் குறித்து மாமேதை மார்க்ஸ் அவர்களின் மதிப்பீட்டை முன்வைத்து துவங்குகிறது புத்தகம். உதாரணமாக "மதம் மக்களின் அபின்" என்கிற வகையில், மார்க்சின் கருத்தினை முழு புரிதலின்றி பேசித் திரிவோருக்கு, அதன் முழுமையான விளக்கத்தினை அளித்து தெளிவு படுத்தியுள்ளது இப்புத்தகம்.

"மதம் ஒரு சமூக மயக்க மருந்து. மதம் சுரண்டலின் வலியை மழுங்கடித்து, ஒடுக்குமுறை அமைப்பின் கீழ் வாழ்க்கையை தாங்கிக் கொள்ளக் கூடியதாக மாற்றுகிறது. உழைக்கும் மக்களுக்கான சுகம் சொர்க்கத்தில் காத்துக் கிடக்கிறது. எனவே, பூமியின் சூழ்நிலைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்கிற கருத்தினை எளிமையாக விளக்கிடும் வகையில் தான், வலியை மறக்கச் செய்யும் போதைப் பொருளான அபினுடன் ஒப்பிட்டுப் பேசினார் மார்க்ஸ். அதாவது, எளிய மக்களின் துன்ப துயரங்களுக்கான காரணங்களை சிந்திக்கா வண்ணம் மதம் வினையாற்றுகிறது என்பதையே, வலி நிவாரணியான அபினுடன் ஒப்பிட்டுக் கூறினார். முதலாளித்துவத்திற்கு மாற்றாக சோசலிசக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறை 1917ல் சோவியத் யூனியனில் நிகழ்ந்தது. அந்நாட்டில் மதத்தை கையாளுவதற்கான வழிகாட்டியாய் இருந்தது மார்க்சின் கொள்கைகளே. மேலும், சோவியத் யூனியனில் தோழர் லெனின், தோழர் ஸ்டாலின் ஆகியோர் மதங்களை கையாண்ட விதத்தினை விளக்கமாக பதிவு செய்துள்ளது இந்நூல். இத்தகு பின்புலத்துடன் சீனாவில் நுழைகிறார் நூலாசிரியர்.

பழங்காலத்தில் சீனாவில் பெருந்தெய்வ வழிபாடோ, கடவுள் வழிபாடோ கிடையாது. மதம் என்ற சொல் கூட கிடையாது. மூதாதையர் வழிபாடு மற்றும் இயற்கை சார்ந்த வழிபாட்டு முறைகளே இருந்தன. இச்சூழலை அடிப்படையாகக் கொண்டு கன்பியூசியஸ் என்பவர் வாழ்வியல் நெறிமுறைகளை ஒழுங்குபடுத்தி மக்களிடையே போதிக்கும் பணிகளை மேற்கொள்கிறார். அதாவது... ஒழுக்கம், பெரியோர்களை மதித்தல், மூதாதையர் வழிபாடு, கூட்டுக் குடும்ப முறை, அரசனை மதித்தல் ஆகியவற்றை வாழ்வியல் நெறிமுறைகளாக கடைபிடிக்குமாறு மக்களிடம் பரப்புரைகளை மேற்கொண்டார். இது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. 1911 வரை கன்பியூசியஸ் தத்துவம் சீனாவில் பெரும் செல்வாக்குடன் இருந்தது. அதனைத் தொடர்ந்து "மென்சியஸ், தாவோயிசம், மோஹிசம், சட்டவாதம்" என பல்வேறு தத்துவங்கள் சீனாவில் உதயமாகின. ஆனாலும் கன்பியூசியஸ், தாவோயிசம் ஆகிய தத்துவங்கள் மட்டுமே மக்களிடையே ஈர்ப்பினை உருவாக்கியது.

இந்நிலையில் வணிகம் சார்ந்து "பெளத்தம்" சீனாவில் நுழைந்தது. துவக்கத்தில் மக்கள் மத்தியில் பெளத்தம் வரவேற்பை பெறவில்லை. காரணம், துறவு வாழ்க்கையை அடிப்படைக் கொள்கையாகக்  கொண்ட பெளத்தத்தால், கூட்டுக் குடும்பத்திற்கு முக்கியத்துவம்  அளித்து வந்த சீன மக்களை கவர முடியவில்லை. ஆனால் பெளத்தத்திற்கு வணிகம் முக்கியமாக இருந்ததால், கன்பியூசியஸ் தத்துவத்திலிருந்து சிலதை தனதாக்கிக் கொண்டதோடு, அமைப்பு ரீதியாய் மக்களை அணி திரட்டியது. ஆகையால் தான் இன்றும் பெரும்பான்மை மதமாக சீனாவில் பெளத்தம் இருந்து வருகிறது. பின்னர் 19 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் "கிறிஸ்தவம், அதனைத் தொடர்ந்து " இஸ்லாம்" ஆகியவையும் சீனாவிற்குள் நுழைந்தன. கிறிஸ்தவத்தில் "கத்தோலிக்கம், புராட்டஸ்டன்ட்" ஆகிய இரு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இவை எல்லாம் 1949 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மட்டுமே. அதற்குப் பின்னர் சீனாவின் நிலையில் தலைகீழ் மாற்றம் உதயமானது. இது வரைக்குமான வரலாற்றினை உரிய தரவுகளோடும், சுவையோடும் எடுத்துக் கூறிய நூலாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சீனாவின் சிவப்பு நட்சத்திரமான தோழர் மாவோ அவர்கள் "எங்கள் கடவுள் சீன தேசத்தின் வெகுஜனங்களே தவிர, வேறு யாருமில்லை" என பிரகடனம் செய்து தனது பணிகளை துவக்குகிறார். மக்களுக்கான தேவைகள் பூர்த்தியாகும் போது மதங்களுக்கும், வழிபாடுகளுக்குமான தேவை இருக்காது. அனைத்துத் தளங்களிலும் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தியதோடு, பகுத்தறிவு பரப்புரைகளையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. அதே நேரத்தில், மதத்தின் பால் நம்பிக்கை இருப்போரின் வழிபாட்டுக்கான வசதிகளையும் ஒழுங்கமைத்து வழங்கியது சீன அரசு. இன்று வரை, பெளத்தம், கன்பியூசியம், தாவோயிசம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய ஐந்து மதங்கள் சீனாவில் சுதந்திரமாய் செயல்பட்டு வருகின்றன. சீன அரசியல் சட்டம் 36-வது பிரிவின் கீழ் இவை முறைபடுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பொறுப்பற்ற முறையிலும், பொது சமூகத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு சீனத்தில் இடமில்லை. இவைகள் எல்லாம் எவ்வாறு ஒழுங்குபடுத்தப் பட்டன என்பது குறித்து வாசிக்கும் போது, நிச்சயம் வாசகர்களுக்கு மலைப்பை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இப்போது ஒரு கேள்வி இயல்பாய் எழும். சீனா எனும் சோசலிச தேசத்தில் "பகுத்தறிவு" கொள்கைகள் மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லையா? என்பதே. அப்படியொரு கேள்வி எழுவதற்கான தேவை எழாவண்ணம் இப்புத்தகம் அமைந்துள்ளது தான் ஆகச்சிறப்பாகும்.

2018 - 2020 கணக்கீட்டின் படி, 142 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் மத விசுவாசிகளாய் இருப்போர் 20 கோடி பேர் மட்டுமே. மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரம் வழிபாட்டுத் தலங்கள் சீனாவில் உள்ளன. பெளத்தக் கோயில்கள் 33 ஆயிரத்து 500. தாவோயிசக் கோயில்கள் 9 ஆயிரம். இஸ்லாம் மசூதிகள் 35 ஆயிரம். கத்தோலிக்க சர்ச்சுகள் 6 ஆயிரம். புராட்டஸ்டன்ட் சர்ச் & ஒன்று கூடும் இடம் 60 ஆயிரம். மொத்தமுள்ள மத விசுவாசிகளில் 18% பேர் பெளத்தத்தை பின்பற்றுபவர்கள். மொத்தம் 3 லட்சத்து 80 ஆயிரம் மத குருக்கள் உள்ளனர். பெளத்தம் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர். தாவோயிசம் 40 ஆயிரம் பேர். இஸ்லாம் 57 ஆயிரம் பேர். கத்தோலிக்கம் 8 ஆயிரம் பேர். புராட்டஸ்டன்ட் 57 ஆயிரம் பேர். இவைகள் தவிர்த்து இதரச் சிற்சிறுப் பிரிவுகள் அனைத்தையும் சேர்த்து 5,500 மத குருக்கள் உள்ளனர். 96.5% மதக் குருக்களுக்கு மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பாதுகாப்புத் திட்டங்களும் சீனாவில் இருந்து வருகின்றன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் "அறிவியல், விஞ்ஞானம், பகுத்தறிவு" பரப்புரைகளை தொடர் இயக்கமாய் செய்து வருவதன் காரணமாகவும், சீன அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருவதன் காரணமாகவும் மத விசுவாசிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சீனாவில் குறைந்து கொண்டே வருகிறது. தற்போதைய சீனத்தின் அதிபர்

"ஜி ஜின் பிங்" பின்வருமாறு கூறுகிறார், அனைத்து வகையிலும் சிறந்த வளர்ச்சி பெற்ற சோசலிச நடாக சீனாவை வளர்த்தெடுக்கவும், மக்களின் எண்ணங்களை முழுமையாக நனவாக்கவும், மத நம்பிக்கை உள்ளோரையும் இணைத்துக் கொண்டு செயலாற்றி வருகிறோம். இச்செயல்பாடுகள் மூலம் எதிர்காலத்தில் "மதங்களுக்கும், வழிபாடுகளுக்கும்" தேவைப்படாத  தேசமாக சீனா திகழும். "எல்லோருக்கும் எல்லாம்" கிடைக்கப்பெற்ற சமூகமாக உலக அரங்கில் சீனா ஜொலிக்கும்.

நிறைவாக,

"ஒருவரின் மதக் கருத்துகள், உங்கள் கருத்துடன் ஒத்துப் போகவில்லை என்றாலும் கூட, அவரை நேசியுங்கள்"

இது புத்தகத்தின் ஓரிடத்தில் வரும் மேற்கோள். இது போல் 19 மேற்கோள்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இப்புத்தகத்தை வாசித்து முடிக்கும் தருணம், அனைவரின் மனதினுள் ஒரு பூரிப்புணர்வு தோன்றும். ஆம்! இயக்கவியல் பொருள் முதல்வாதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி புரியும் சோசலிச நாடுகளில் மட்டுமே "அனைத்துக் கருத்துகளுக்கும்" மதிப்பளிக்கப் படுகிறது என்கிற பெருமிதமே அவ்வுணர்வு. இப்புத்தகத்தை வாசிக்கும் போது இன்னொரு உண்மையும் வெளிப்படும். அது, இந்தியாவில் மதம் எவ்வளவு அரசியல் மயமாகியுள்ளது என்பதேயாகும். மிக மிக பொருத்தமான நேரத்தில் இத்தனை நேர்த்தியுடன் இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கும், வெளியீடு செய்துள்ள பதிப்பகத்தாருக்கும் மீண்டுமொரு முறை புரட்சி வாழ்த்துகள்.

கு.மனோகரன்

தலைவர்

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்

சென்னைக்கோட்டம்-2

நூல் கிடைக்கும் இடம்

சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும்

ஆசிரியர். அ.பாக்கியம்

தூவல்கிரியேஷன்ஸ் தமிழ்மார்க்ஸ் பவுண்டேஷன்

விலை 250. Gpay 94863 44333(vedhachala perumal)

சிந்தன் புக்ஸ்

327 /1 திவான் சாஹிப் கார்டன்

டிடிகே சாலை, ராயப்பேட்டை

சென்னை 600 014

செல் பேசி: 9445123164

வடசென்னை வாசி புத்தக நிலையம்

எண்:9, G.R. சாலை

பழைய வண்ணாரப்பேட்டை

சென்னை-21

செல் பேசி: +918508698507

 

 

புதன், பிப்ரவரி 04, 2026

58 இனச் சிறுபான்மை வறுமைக்கான ஆய்வுகளும் சவால்களும்

 

அ.பாக்கியம்

மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் வறுமை என்பது பல்வேறு சமூக வடிவங்களிலும் பல்வேறு காலகட்டத்திலும் வெளிப்படுகின்ற ஒரு நிலையான பொருளாதார நிகழ்வாக இருந்து வருகிறது. வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகள் வரலாறு முழுவதும் நடந்து வந்துள்ளது. ஆனால் இன்றைய உலகிலும் வறுமை என்பது குறிப்பிடத்தக்க அளவிற்கான உலகளாவிய சவாலாக உள்ளது. இதன் காரணமாக வறுமையை குறைப்பதற்கான செயல்கள் உலகம் முழுவதும் ஒரு முக்கிய கவலையாக மாறி உள்ளது. அதே நேரத்தில் வறுமையைப் பற்றிய ஆய்வுகளும் இக்காலத்தில் பல்வேறு விதமான கோணங்களில் நடந்து கொண்டே இருக்கிறது. அதிகமாகியும் உள்ளது. ஐக்கிய நாடுகளின் சபை 2030ம் ஆண்டு நிலையான வளர்ச்சிக்கான ஒரு நிகழ்ச்சி நிரல் என்ற தலைப்பில் சிறப்புத் திட்டத்தை அறிவித்தது இத்திட்டத்தில் 2030 ஆம் ஆண்டுக்குள் எல்லா இடங்களிலும் இருக்கின்ற தீவிர வறுமையை ஒழித்து விட வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்தார்கள்.

அனுபவத்தின் உறைவிடமாக சீன கம்யூனிஸ்ட் கட்சி:

புராதன சமுதாயத்திற்கு முன்பு இயற்கையை போதுமான அளவிற்கு மனிதன் தன் வசப்படுத்த முடியாத காரணத்தினால் வறுமை மனித குலத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது. உணவு சேகரிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்த காலத்தில் வறுமை தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்தது. சமுதாயம் வர்க்கங்களாக பிளவுண்ட பிறகு மனிதகுலம் வறுமையில் வாடுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகப் பிரதான காரணம் என்பது சுரண்டல் முறை ஆகும். வர்க்க சமுதாயத்தின் வரலாறு நெடுகிலும் வறுமை என்பது வர்க்கங்களின் சுரண்டலினால் மேலோங்கி ஆதிக்கம் செலுத்தியது. வர்க்க சமுதாயத்தை வீழ்த்தி வர்க்கமற்ற சமுதாயத்தின் துவக்கமாக அமைந்த உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரத்தில் வறுமை ஒழிக்கப்பட்டது. இங்கும் கூட அதிகாரத்தை இழந்த சுரண்டல் வர்க்கம் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு வறுமையில் மக்களை வாடச்செய்தனர். இந்த வரலாற்று பின்னணியில் தான் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனாவின் முன் முயற்சிகளும் வெற்றிகளும் உலகளாவிய வலிமை ஒழிப்பிற்கு புதிய உத்திகளையும் நுணுக்கமான அறிவுகளையும் வழங்கி உள்ளது.

சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சீன மக்கள் குடியரசு தீவிர வறுமையை முற்றிலும் ஒழித்து விட்டது என்பது இன்றைய உலகில் மிகப்பெரிய சாதனையாகும். இந்த வறுமை ஒழிப்பை எவ்வாறு நடத்தினார்கள் என்பதை பற்றிய ஏராளமான தரவுகள் இருக்கிறது ஐக்கிய நாடுகள் சபையும் இந்த வறுமை ஒழிப்பை உலகின் மிகப்பெரிய அனுபவமாக எடுத்துக் கொண்டுள்ளது. இதற்கு முந்தைய பகுதியில் சீனாவில் வறுமை ஒழிப்பு சம்பந்தமாக ஒரு பொதுவான முன்னோட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் பகுதியில் மிகவும் பின்தங்கிய நிலைமையில் இருந்த இனச் சிறுபான்மையர் மத்தியில் வறுமையை எவ்வாறு ஒழித்தார்கள், எடுத்த புதிய முயற்சிகள் என்ன என்பதையும், என்ன விதமான இடர்பாடுகளை சந்தித்தார்கள் என்பதுதான் மனித குலம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஆகும்.

உலகின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை இனங்கள் வளர்ச்சி அடையாமல் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். பிரேசில் நாட்டில் வறுமையில் வாழக்கூடியவர்களின் எண்ணிக்கை 7. 5 கோடி மக்களாகும் இவர்களில் 90 சதவீதத்திற்கு மேல் ஆப்பிரிக்க இந்தியர்கள் இந்தியர்கள் கருப்பின மக்கள் ஆகியோர்களை அடங்குவார்கள். சிறுபான்மை மக்கள் மத்தியில் தான் வறுமை அதிகமாக இருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டில் பல்வேறு இனங்கள் இருக்கிறது இந்த நாட்டை இன மொசைக் நாடு என்று அழைப்பார்கள் ஒவ்வொரு தேசிய இனங்களும் தங்களது தனித்தன்மைகளை பாதுகாத்துக் கொண்டே ஒன்றாக வாழ்வார்கள். இந்த முறைக்கு தான் இன மொசைக் நாடு என்று பெயர். ஆனாலும் இங்கு வறுமை என்பது பழங்குடி மக்களிடம் தான் மிக மிக அதிகமாக இருக்கிறது. சொர்க்கபுரி என்று சொல்லக்கூடிய அமெரிக்காவை எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவில் வறுமையில் வாழக்கூடிய மக்களின் பெரும்பகுதி ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் கருப்பினத்தவர்களும் ஆவார்கள். இந்தியாவிலும் மதச் சிறுபான்மை இன சிறுபான்மையர் சாதிய அடுக்குகளின் அடிமட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் வறுமையில் வதைப்படுகிறார்கள் . உலகின் பல நாடுகளில் பல்வேறு காரணங்களால் காலங்காலமாக சிறுபான்மை மக்கள் வறுமையை வாழ்க்கையாக கொண்டுள்ளனர் இந்த நீண்ட கால போக்கை மாற்ற வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்கள் குடியரசும் முடிவெடுத்தது.

 

ஆய்வுகளே திட்டத்தின் அடிப்படை:

சீனாவில் எந்த ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கு முன்பும் அவற்றை அமுலாக்குவதற்கு முன்பாகவும் அது பற்றிய விரிவான ஆய்வுகளை நடத்துவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குவார்கள். அந்த ஆய்வுத் திட்டத்தின் படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவுகளில் இருந்து கிடைக்கும் உண்மை நிலைகளின் அடிப்படையிலேயே திட்டங்களை உருவாக்குவார்கள். இது ஆரம்ப காலத்தில் இருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது செயல்பாட்டிலும் சில மக்கள் குடியரசு உருவான காலத்திலும் இந்த முறைகளை கடைப்பிடித்து வருகிறார்கள்.

1978 ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன அரசாங்கமும் சீர்திருத்தம் மற்றும் பிறப்புக் கொள்கை ஆகியவற்றை அமல்படுத்தினார்கள் இதன் விளைவாக கிராமப்புறங்களில் பொருளாதாரத்தின் வளர்ச்சி மிக வேகமாக மாற்றமடைந்தது. இந்த அதிவேக பொருளாதார வளர்ச்சியின் காரணமாக 1978 இல் கிராமப்புறத்தில் 25 கோடி மக்கள் வறுமையில் வாழ்ந்த நிலை மாறி 2008 ஆம் ஆண்டு 4 கோடியாக குறைந்தது. ஆனால் தனது ஆய்வுகள் மூலம் இனச் சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வறுமை ஒழிப்பு போதுமான அளவிற்கு முன்னேறவில்லை என்று கண்டுபிடித்தார்கள். சீனாவின் தேசிய இன விவகார ஆணையம் (NEAC) 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் கிராமப்புறத்தில் வறுமையில் வாழக்கூடிய மக்கள் தொகையில் 52.3 சதவீதம் இனச் சிறுபான்மை மக்கள் என்ற முடிவுக்கு வந்தார்கள். இவை அனைத்தும் இனச் சிறுபான்மையுருக்கான தன்னாட்சி பிரதேசங்களில் இருந்தது.

இந்த தரவுகளின் உண்மையான அர்த்தம் சீனாவின் வறுமையில் வாழும் மக்கள் இனச் சிறுபான்மை பகுதிகளில் குவிந்து இருக்கிறார்கள் என்பது ஆகும். இந்தத் தரவுகளின் அடிப்படையில் இனச் சிறுபான்மையினர் வாழக்கூடிய பகுதிகளில் வறுமைக்கான காரணங்களை ஆய்வு செய்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டது சுயமாக பல்வேறு அறிவு ஜீவிகளும் களத்தில் இறங்கினார்கள். பல அறிஞர்கள் இந்த ஆய்வுகளை மூன்று கட்டமாக தொகுத்து அளித்தார்கள். 1978 முதல் 2012 வரை முதல் கட்டமாகவும் 2013 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இரண்டாவது கட்டமாகவும் 2020 ஆம் ஆண்டு முழுமையாக வறுமை ஒழிக்கப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்த ஆய்வுகளை மூன்றாவது கட்டமாக பிரித்து ஆய்வு செய்து தரவுகளை வெளியிட்டார்கள். இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு சீன மக்கள் குடியரசு இன சிறுபான்மை பகுதிகளில் வறுமை ஒழிப்பிற்கான வரையறைகளை உருவாக்கினார்கள்.

சீனாவின் சமதளப் பகுதிகளில் வறுமைகளை ஒழிப்பதற்காக அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டது. அவற்றை எட்டு தர அளவுகோல்கள் அடிப்படையில் தீர்மானித்தார்கள்.

1.வருடாந்திர தனிநபர் தானிய உற்பத்தி

2.தனிநபரின் பண வருமானம்

3.போதுமான வசதி இல்லாத வீடுகளின் சதவீதம்

4.குடிநீர் வசதி கிடைக்காத வீடுகளின் சதவீதம்,

5.நிரந்தரமாக மின்சார வசதி இல்லாத இயற்கை கிராமங்கள்

6.மாவட்ட தலைநகர உடன் சாலைகளால் இணைக்கப்படாத கிராமங் களின் சதவீதம்

7.நீண்ட காலமாக சுகாதார வசதி கிடைக்காத பெண்களின் சதவீதம்

8.தகுதி இருந்தும் பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகளின் சதவீதம்

 

மேற்கண்ட அளவுகோலின் அடிப்படையில் தான் வறுமை ஒழிப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதே முறையில் சிறுபான்மை தேசிய இனங்கள் வாழக்கூடிய பகுதிகளில் வறுமையை அடையாளம் கண்டு அதற்கான அளவுகோலை தீர்மானிப்பதில் நிர்ணயிப்பதில் பலவீனம் இருந்தது என்பதை கண்டுபிடித்தார்கள் எனவே இனச் சிறுபான்மை பகுதிகளில் வறுமை நீடிப்பதற்கான காரணங்களை வரலாற்று ரீதியாகவும் புவியியல் சார்ந்தும் மற்ற அனைத்து முனைகளிலிருந்தும் ஆய்வுகளின் மேற்கொண்டு முடிவுக்கு வந்தார்கள்

ஆய்வு தரவுகளின் முடிவுகள்

இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் வறுமைக்கான காரணங்களை ஆய்வு செய்த பொழுது அவை பல தனித்துவமான பண்புகளைக் கொண்டிருந்தது. மிக நீண்ட காலமாக வறுமையிலேயே வாழ்ந்து வந்ததால் வறுமையே ஒரு கலாச்சாரமாக மாற்றப்பட்டு இருந்தது. இந்தப் பகுதியில் அறிவுக்கான வாய்ப்புகள் இருந்த பொழுதும் அவை தடுக்கப்பட்டு விட்டதால் மனித வளர்ச்சியின் சதவீதம் குறைவாக இருந்தது. இதனால் சமூக பாதுகாப்பு பற்றியும் சந்தை பொருளாதாரத்தை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது. தனிநபர்களின் விலை நிலங்கள் போதுமானதாக இல்லை அதன் விளைவாக தானிய உற்பத்தி மிக மிக குறைவாக இருந்தது. அதே நேரத்தில் உற்பத்தி முறைகள் மிகவும் பழமையானதாக இருந்தது மட்டுமல்ல மக்களிடம் பழமை வாத மனநிலை இருந்ததால் தனி நபர்களின் மேம்பாட்டுத்திறன் மிகப்பெரிய அளவிற்கு பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது. விவசாயிகளுக்கான சந்தை மிகத் தொலைவில் இருந்ததால் இவர்களின் பண வருமானத்திற்கு பாரம்பரியமான உற்பத்திகளை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டியதாயிற்று உயிர் வாழ்வதற்கான அடிப்படையான பொருட்களின் விலை மிக அதிகமாக இருந்தது இம்மக்களிடமிருந்த ஒரே பொருளான கால்நடைகளை விற்பனை செய்கிற பொழுது மிகக் குறைந்த விலையே கிடைத்தது. இனச் சிறுபான்மை பகுதியில் உள்ள இந்தக் காரணங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாத வகையில் பிணைந்து இருந்தது. இதன் காரணமாக வறுமை தொடர்ந்து நீடிப்பது மட்டுமல்ல இவர்களின் வாழ்க்கை கலாச்சாரமாகவே மாறி இருக்கிறது என்பதையும் இந்த ஆய்வுகளின் தரவுகள் வெளிப்படுத்தியது.

மேற்கண்ட தரவுகளையும் விவரங்களையும் நுணுக்கமான முறையில் ஆய்வு செய்து சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்கள் குடியரசும் எந்தெந்த துறைகளில் சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் எவ்வாறு கவனம் செலுத்துவது என்பதற்கான வழிகாட்டுதல்களையும் உருவாக்கி அமலாக்கினார்கள்.

முதலாவதாக, இனச் சிறுபான்மை பகுதிகளில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் பண்டபொருளாதரத்தின் முக்கிய பங்கு தேவை என்பதை உணர்ந்ததுடன் வறுமை நிலையை மாற்றுவதற்கான அடிப்படை காரணியாகவும் பண்ட பொருளாதரத்தை அமைத்திட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். இதற்காக சந்தை செயல்பாட்டை மேம்படுத்தி பல்வேறு பொருளாதாரத் துறைகளில் பண்டங்களின் எண்ணிக்கைகளையும் அதிகப்படுத்துவது என்று முடிவாக்கினார்கள். நிதி உதவி சார்ந்த வறுமை ஒழிப்பு உடனடி காரணியாக இருந்தாலும் தொழில்துறை சார்ந்த வறுமை ஒழிப்பு ஒரு முக்கிய உத்தியாக முன்வைக்கப்பட்டது. உள்ளூர் வளங்களை அடிப்படையாகக் கொண்டு சிறப்பியல்பு உள்ள தொழில்களின் வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் வேலை குடும்பங்களுக்கு செல்வத்தை தேடும் உந்துதலை ஏற்படுத்த முடியும் என்று முடிவெடுத்து அமலாக்கினார்கள். உதவி சார்ந்த வறுமை ஒழிப்புகளுடன் வளர்ச்சி சார்ந்த வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற வகையில் நிதி நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். கடன் சேவைகளை விரிவுபடுத்துவது வீடுகளின் சுயசார்பு மேம்பாட்டுத்தலனே அதிகப்படுத்துவது ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் அதிகாரம் பெற்ற அமைப்புகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று முடிவாக்கினார்கள்.

இரண்டாவதாக, வறுமை ஒழிப்பு என்பது அடிப்படையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் கணிசமான முன்னேற்றத்தை சார்ந்துள்ளது என்ற முடிவுக்கு வந்தார்கள் இதன் காரணமாக தொழில்நுட்பத்தின் அவசியத்தை அங்கீகரித்து அவற்றின் மூலமாக விரைவான வளர்ச்சியை ஏற்படுத்துவது. குறிப்பாக வறுமை ஒழிப்பிற்கான புதிய பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குவதில் இணைய தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கை அமலாக்குவது.

மூன்றாவதாக, கலாச்சார ரீதியிலான தலையீட்டை அதிகப்படுத்தி செயல்படுத்துவது. தலைமுறை தலைமுறையாக வறுமை கலாச்சாரத்தில் வாழக்கூடிய நிலைமைகளை மாற்றுவது. இனச் சிறுபான்மை பகுதிகளில் சுற்றுலா மற்றும் கலாச்சார சுற்றுலா போன்றவற்றை நடத்தி வருமான வாய்ப்புகளை அதிகப்படுத்துவது. இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் சுய வளர்ச்சி திறன்களை மேம்படுத்துவதற்கும் ஏழை மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை வழங்குவதற்கும் இவற்றை பயன்படுத்துவது. சுற்றுலாவில் முதலீடுகளையும் வேலை வாய்ப்புகளையும் அதிகப்படுத்துவது. தனித்துவம் வாய்ந்த சுற்றுலா திட்டங்களை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அதிகப்படுத்த முடியும். இன விழாக்கள் இன கலாச்சாரம் வணிக கலாச்சாரம் பாரம்பரிய தொழில் மயமாக்கல் ஆகியவற்றின் மூலமாக கலாச்சாரத்தை சுற்றுலா உடன் இணைப்பது போன்ற நடவடிக்கைகளை வறுமை ஒழிப்பின் ஒரு பகுதியாக மாற்றுவது.

நான்காவது கல்வியை மேம்படுத்துவதன் மூலம் வறுமை ஒழிப்புக்கான திட்டத்தை செயல்படுத்துவது எளிமையாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தார்கள் வறுமையை எதிர்த்து போராடுவதற்கான திறவுகோலாக கல்வி இருக்கும் என்பதை கண்டறிந்து அவற்றுக்கான திட்டத்தை உருவாக்கினார்கள் கல்வியின் அணுகல்களை அதிகப்படுத்துவதன் மூலமாக ஏழை மக்களின் மனித வளத்தை மேம்படுத்துவது போன்ற செயல்களை சாத்தியப்படுத்தினார்கள். இனச் சிறுபான்மை பகுதிகளில் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடங்கள் முழு பாதுகாப்பு மற்றும் நெகிழ்வான வடிவங்களை முன்வைத்து கல்வியை சீர்திருத்தம் செய்து மேம்படுத்தி வறுமை ஒழிப்புக்கு கல்வி பயன்படுத்தப்பட்டது.

ஐந்தாவதாக இனச் சிறுபான்மை வாழக்கூடிய பகுதிகளில் வறுமைக்கும் பேரிடர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு மிக நீண்ட காலமாக உள்ளது என்பதை அறிந்து கொண்டார்கள். இயற்கை பேரிடர்களால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும் வாழ்விடங்களையும் இழந்து வறுமையில் தள்ளப்பட்டார்கள். வறுமை அதிகம் ஆவதற்கு பேரிடர் ஒரு முக்கிய காரணமாக இனச் சிறுபான்மை மக்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்தது என்பதை அறிந்தார்கள் எனவே வறுமையை குறைக்க பேரிடர் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. அதே நேரத்தில் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட வுடன் மீட்பு நடவடிக்கைகளை அதற்கான ஒருங்கி ணைப்புகளை பலப்படுத் துவதன் மூலமாக வறுமையின் கீழ் செல்லக்கூடிய மக்களை பாதுகாக்க முடியும் என்ற திட்டத்தை உருவாக்கினார்கள்.

ஆறாவதாக சமூக பொருளாதார வளர்ச்சியின் இன சிறுபான்மை பகுதி தனிமைப்பட்டு இருந்தது. பரந்த தேசிய பொருளாதாரத்துடன் பிராந்திய நிலைமைகளை ஒருங்கிணைப்பதற்கான வழிமுறைகள் இல்லாமல் இருந்தது அதே நேரத்தில் தங்கள் உள்ளூர் நலனுக்காக சொந்த வளங்களை திறம்பட பயன்படுத்த முடியாத நிலைமைகளும் நீடித்தன. இந்த நிலைகளுக்கு மூடிய இரட்டை கட்டமைப்பு என்று ஆய்வாளர்கள் பெயர் கொடுத்தார்கள். இந்த இரண்டு விதமான கட்டமைப்புகளையும் உடைக்க வேண்டும் என்பது வறுமை ஒழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது.

இந்த முடிவுகளை அமலாக்கி எவ்வாறு வெற்றிகண்டார்கள் என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

அ.பாக்கியம்,

61 மடாலயங்களில் முடக்கப்பட்ட இனக்கல்வி

  அ.பாக்கியம் “ மதம்” எவ்வாறு ஒரு மனிதனின் மனப்பான்மைகளையும் மன வடிவங்களையும் உருவாக்குகின்றதோ அதேபோன்று தான் ”கல்வியும்” மனிதனின் மனப்ப...