Pages

வியாழன், பிப்ரவரி 12, 2026

59 இனச் சிறுபான்மை வறுமை ஒழிப்பின் முறைகளும் பயன்களும்



அ.பாக்கியம்

சென்ற தொடரில் இனச் சிறுபான்மையினர் மக்கள் மத்தியில் நிலவிய வறுமை ஒழிப்பதற்கான ஆய்வுகளையும், ஆய்வுகளின் அடிப்படையில் பெறப்பட்ட தரவுகளையும், அந்த தரவுகள் மூலமாக உருவாக்கப்பட்ட திட்டங்களைப்பற்றி எழுதி இருந்தேன். அந்தத் திட்டத்தின் அடிப்படையில் வறுமை ஒழிப்பிற்காக செயல்பாட்டில் இறங்கினார்கள். அவ்வாறு செய்த பொழுது அதற்கான பலன்கள் பளிச்சென வெளிப்பட்டது. 2013ம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுகள் வரை குறிப்பான சில திட்டங்களை அமலாக்க முயற்சி செய்தனர்.

இதுவரை பொதுவான வறுமை ஒழிப்பு திட்டங்களில் இருந்து இலக்கு சார்ந்த வறுமை ஒழிப்பு என்ற அடிப்படையில் திட்டங்கள் துல்லியப்படுத்தப்பட்டது. இந்த புதிய திட்டத்தின்படி தற்போது உள்ள வறுமை ஒழிப்புத் திட்டங்களை சீர்படுத்தி வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒரு முன்மாதிரிகளை உருவாக்க வேண்டும் என்று முடிவு எடுத்தனர். ஒவ்வொரு பிரதேசங்களிலும் வறுமை ஒழிப்பிற்கான சவாலாக உள்ள பிரச்சனைகளை சரியாக மதிப்பீடு செய்து அதற்கான திட்டங்களை துல்லியமாக வரையறை செய்ய வேண்டும். இந்த இலக்கு சார்ந்த வறுமை ஒழிப்பு என்பது சீன அரசின் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் குவிமயமாக இன சிறுபான்மை பகுதி மாறியது.

இலக்கு சார்ந்த வறுமை ஒழிப்பு கொள்கை திட்டங்களை இனச் சிறுபான்மை பகுதியில் அமலாக்கப்படுவதை மதிப்பீடு செய்வதற்கான மேலாண்மை அமைப்புகளை உருவாக்கினார்கள். மேற்கண்ட அமைப்புகள் மதிப்பீடு செய்து வறுமை ஒழிப்பு திட்டங்களை பல்வேறு ஏழை மக்களின் நிலைமைகளுக்கு ஏற்ப அளவுகோலை தீர்மானித்து திட்ட செயல்பாட்டை வடிவமைத்தார்கள். இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் கிடைத்த அனுபவங்களை தொகுத்து 2018 ஆம் ஆண்டு இலக்கு சார்ந்த வறுமை ஒழிப்பு திட்டம் இலக்கு சார்ந்த தீவிர வறுமை ஒழிப்பு திட்டம் என்று மாற்றியமைக்கப்பட்டது. இந்த தீவிர வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டுக்குள் வறுமையை முற்றிலும் ஒழித்து விட வேண்டும் என்ற இலக்குடன் செயல்கள் விரைவு படுத்தப்பட்டன.

 

இந்தத் திட்டத்தின்படி வறுமை ஒழிப்பில் உற்பத்தி, வேலை வாய்ப்பு, இடமாற்றம், மீள்குடியேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி மேம்பாடு, வாழ்வாதார உதவித்தொகை போன்ற திட்டங்களையும் உள்ளடக்கி செயல்பட ஆரம்பித்தார்கள். இந்தத் திட்டங்களின் வெற்றிக்காக சமூகத்தின் அனைத்து சக்திகளையும் அணி திரட்டினார்கள். இதுவரையில் கிராம அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட பணிகள் இலக்கு சார்ந்த தீவிர வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளையும் நோக்கி அமுலாக்க கூடிய முறையில் செயல்கள் துல்லியமாக விரிவுபடுத்தப்பட்டது. இதற்கான செயல்பாட்டு முறைகளும் உதவிகளும் வடிவமைக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு இலக்கு சார்ந்த வறுமை ஒழிப்பு திட்டத்தை அறிவிக்கிற பொழுது 5 புதிய கொள்கைகளை திட்டத்தின் வழிகாட்டியாக அமைத்துக் கொண்டார்கள். அவைகள் முறையே புதுமை, ஒருங்கிணைப்பு, பசுமை, பகிரங்கத் தன்மை, பகிர்ந்து கொள்ளுதல் போன்றவைகள் ஆகும். நாடு முழுவதும் உள்ள வறுமை ஒழிப்பிற்கு வழிகாட்டியாக அமைக்கப்பட்ட இந்த ஐந்து விதிகள் இனச் சிறுபான்மை பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் விளைவாக வறுமையில் வாடிய மக்களின் வாழ்வாதாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டது.

2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுகள் வரை சீனாவின் இனச் சிறுபான்மை பகுதிகளில் வாழ்ந்த ஏழை மக்களின் தனிநபர் வருமானம் வியத்தகு மாற்றங்களை பெற்றது. 2016 இல் 4,639 யுவான் வருவாயிலிருந்து 2020 ஆம் ஆண்டு 10,770 என்ற அளவில் அதாவது 156 சதவிகிதம் அதிகரித்தது. 2018 ஆம் ஆண்டு இலக்கு சார்ந்த தீவிர வறுமை ஒழிப்பு திட்டம் துவங்கிய காலத்தில் இன சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் நான்கு சதவீத மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே இருந்தார்கள். இந்த எண்ணிக்கை என்பது சீன தேசிய அளவைவிட 1.7 சதவிகிதம் அதிகமாகும்.

2019 ஆம் ஆண்டில் இன சிறுபான்மை பகுதிகளில் வறுமைக்கு எதிரான போராட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்த பொழுது இந்தப் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்தவர்கள் எண்ணிக்கை தேசிய சராசரியைவிட 0.19 அளவாக குறைந்தது. அதாவது ஒரு வருடத்தில் 1.7 சதவீதத்திலிருந்து 0.19 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு இலக்கு சார்ந்த தீவிர வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் முழுமையான அளவு வறுமை ஒழிக்கப்பட்டு வெற்றி காணப்பட்டது. இவை ஒட்டுமொத்த இனச் சிறுபான்மை பகுதிகளின் பொதுவான விவரங்கள் ஆகும். கீழே சில பிரதேசங்களை மட்டும் குறிப்பான தன்மைகளை சுட்டிக்காட்டலாம்.

தெற்கு ஜின்ஜியாங்க் மாகாணத்தில் வறுமையால் பாதிக்கப்பட்ட 976 கிராமங்களிலும் தீவிர வறுமை ஒழிப்பு நிறைவேற்றப்பட்டது. 2017 ஆம் ஆண்டு வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்த மக்களின் சதவீதம் மேற்கண்ட குறிப்பிட்ட பகுதிகளில் 18.3 சதவீதமாக இருந்தது. 2018 ஆம் ஆண்டு இலக்கு சார்ந்த தீவிர வறுமை ஒழிப்பை அமுல்படுத்திய பொழுது 10.51 சதவிகிதமாக குறைந்தது. மேலும் செயல்கள் தீவிர படுத்தப்பட்டு 2019 ஆம் ஆண்டில் 1.2 சதவீதமாக குறைக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு இந்தப் பகுதி முழுமையாக வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டது.

மற்றொரு இனச் சிறுபான்மை தன்னாட்சி பிரதேசமான திபெத் மாகாணத்தில் 55 மாவட்டங்களில் 4714 கிராமங்கள் வறுமைக் கோட்டின் கீழே இருந்தது. இவற்றை குறிவைத்து தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தப் பகுதியில் இருந்து 4,78,000 மக்கள் வறுமைக்கோட்டில் இருந்து மூன்று ஆண்டுகளில் மீட்டெடுக்கப்பட்டார்கள். இந்த வறுமை ஒழிப்பு திட்டத்தில் இதுவரை எங்கும் கடைபிடிக்கப்படாத புதிய உத்தி ஒன்று திபெத் பகுதியில் அமலாக்கப்பட்டது. திபெத் பகுதி உலகில் உயரமான பகுதி. எளிதில் அணுக முடியாத உயரத்தில் கடினமான சீதோசன நிலையில் போக்குவரத்து பாதைகள் கடின முயற்சி எடுத்தாலும் அமைக்க முடியாத பகுதிகளில் 965 கிராமங்கள் இருந்தது. இந்த கிராம மக்கள் காடுகளின் உணவு சேகரிப்பு வாழ்க்கையில் இருந்தார்கள். எனவே வறுமை இவர்களின் வாடிக்கையான செயலாக இருந்தது. அதே இடத்தில் இந்த மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதோ, வறுமை ஒழிப்பதோ சாத்தியமற்றதாக இருந்தது.

எனவே 965 கிராமங்களையும் இடம் மாற்றம் செய்து உயரம் குறைவான இடங்களுக்கு இடம்பெயர செய்து புதிய வீடுகளை கட்டிக் கொடுத்தது மட்டுமல்ல வேலை வாய்ப்புகள் சாலைகள் மற்ற அனைத்து விதமான அணுகல்களையும் அமைத்துக் கொடுத்து வறுமையை ஒழித்தார்கள். இதன் மூலம் 2.66 லட்சம் மக்கள் வறுமைக்கோட்டில் இருந்து மீட்கப்பட்டார்கள். இவ்வாறு ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு பகுதிகளும் இருக்கக்கூடிய பிரத்தியேகமான நிலைமைகளை கணக்கில் எடுத்து முடிவுகள் அமலாக்கப்பட்டதால் இனச் சிறுபான்மை பகுதிகளிலும் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டது.

அமைப்பும் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பும்

இனச் சிறுபான்மையினர் வாழக்கூடிய பிரதேசங்களில் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவது மிகவும் சவால்மிக்க பணிகளாக இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன அரசாங்கமும் உயர்மட்ட அமைப்புகளை உருவாக்கி இதை அமல்படுத்தினார்கள். திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் வறுமையை ஒழிப்பதற்கான தனியான ஒரு தலைமை அலுவலகமே உருவாக்கப்பட்டது. வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் திபெத் பிராந்தியத்தின் நிலைகுழு உறுப்பினர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த அமைப்பின் கீழ் பதினோரு சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு பிராந்தியம் முழுவதும் நகரங்கள், மாவட்டங்கள், உள்ளூர் அளவுகளில் அமைப்புகளை உருவாக்கியது மட்டுமல்ல அதற்கான அலுவலகங்களையும் உருவாக்கினார்கள். அனைத்து இடங்களிலும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இதற்கு நேரடியான பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

தெற்கு ஜின்ஜியாங்க் மாகாணத்தில் உய்குர் தன்னாட்சி பகுதிகளில் இருந்த சீன மக்கள் குடியரசு அரசாங்கம் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிகாரிகளையும், ஊழியர்களையும் வறுமையால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். இவர்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்த கிராமங்களில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் பணியினை செயல்படுத்தினார்கள். இந்தப் பகுதியில் 1289 கிராமங்கள் மிகக் கடுமையான வறுமையில் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த தரவுகளின் அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை அனுப்பி உரிய காலத்தில் வறுமை ஒழிக்கப்பட்டது என்பது இலக்கு சார்ந்த தீவிர வறுமை ஒழிப்பின் ஒரு வெற்றியாகும்.

மேற்கண்ட 1289 கிராமத்திற்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்சியின் செயலாளர்களை நியமித்து வறுமை ஒழிப்பு என்ற திட்டத்தை நிறைவேற்றினார்கள். இந்தப் பகுதியில் மட்டும் வறுமை ஒழிப்பிற்காக 31 துறை அளவிலான அதிகாரிகளையும், 869 பிரிவு அளவிலான அதிகாரிகளையும் 389 துணை நிலை ரிசர்வ் அதிகாரிகளையும் அனுப்பி வைத்து பணியாற்றினார்கள். இவ்வாறு வறுமை ஒழிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எந்திரகதியான முறையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. வறுமை ஒழிக்க கூடிய கிராமங்களில் இருக்கக்கூடிய மக்கள் இனச் சிறுபான்மை மக்கள் அவர்கள் பேசக்கூடிய மொழி அவர்களின் தாய்மொழியாகும் எனவே இங்கு அனுப்பப்பட்டவர்கள் இரு மொழி திறன் கொண்டவர்கள் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த துல்லியமான நடவடிக்கையின் மூலமாகத்தான் மேற்கண்ட 1289 கிராமங்களில் வறுமை ஒழிக்கப்பட்டது. இதே போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் சிச்சுவான் மாகாணத்தில் 5,700 க்கு மேற்பட்ட அதிகாரிகள் பத்துக்கு மேற்பட்டு பிரிவுகளாக பிரித்து அனுப்பப்பட்டு வறுமை ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வெற்றி கண்டார்கள்.

இவை தவிர கிங்காய், யுன்னான், குவாங்சி, நிங்சியா, உள் மங்கோலியா போன்ற பிரதேசங்களில் வறுமை ஒழிப்பிற்கான பிராந்திய அளவிலான அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அதே நேரத்தில் மேற்கண்ட மாகாணங்களில் வறுமை ஒழிப்பை நிறைவேற்றுவதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்து நிலை செயலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். மாகாண செயலாளர் ஒட்டுமொத்தமான இலக்குகளை நிர்ணயித்து முடிவுகளை கண்காணிப்பார். நகராட்சி நிலை செயலாளர் மாவட்ட அளவிலான செயல்பாடுகளை வழிநடத்துவார். மாவட்ட அளவிலான செயலாளர். நிதி ஒதுக்கீடு உட்பட முன்னணி களப்பணியில் செயல்படக்கூடிய நபராக இருப்பார். டவுன்ஷிப் செயலாளர் கிராமங்கள் மற்றும் வீடுகளுடன் தொடர்புகளை முறையாக ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவார்.

கிராம நிலையில் உள்ள செயலாளர் தனிப்பட்ட குடும்பங்களில் நேரடியான தொடர்பை ஏற்படுத்தி பணியாற்றுவார். மேற்கண்ட 5 செயலாளர்களும் வறுமை ஒழிப்பு முயற்சிக்கான பொறுப்புக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டும். இந்தத் திட்டம் மத்திய தலைமையில் இருந்து கிளைச் செயலாளர் வரை கட்டமைக்கப்பட்ட ஒரு கட்டளை சங்கிலியை உருவாக்கியது. வறுமை ஒழிப்பு திட்டத்தில் நடைபெறக்கூடிய விதி மீறல்கள் போன்றவற்றை தடுப்பதற்காகவே இப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு அமைப்ப ரீதியான பொறுப்புக்கள் நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இந்த பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட்டதன் விளைவாகவே வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டது.

செயல்பாட்டுக் கிடையே தொடர்ந்த ஆய்வுகள்

இனச் சிறுபான்மையினர் மத்தியில் வறுமை ஒழிப்புக்கான திட்டங்கள் ஒருபுறம் அமலாக்கி கொண்டே இருப்பார்கள். அதே நேரத்தில் திட்ட அமலாக்கம் குறித்த மதிப்பீடு செய்வதற்கான பணிகள் துல்லியமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த இரண்டையும் கடந்து தனிப்பட்ட முறையில் பல அறிஞர்கள் வறுமை ஒழிப்பின் நடவடிக்கைகளை பற்றிய ஆய்வுகளையும் செய்து பகிரங்கமாக வெளியிட்டு வந்தார்கள். குறிப்பாக லி ஜூவோ, ஜூவோ டிங் என்ற இரண்டு அறிஞர்கள் பாலின லென்ஸ் என்ற முறையில் தங்கள் ஆய்வுகளை வெளியிட்டார்கள். இன சிறுபான்மை பகுதிகளில் வறுமை ஒழிப்பு திட்டங்கள் அமலாக்குகின்ற பொழுது பாலின ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கண்டறிந்தார்கள் பெண்களின் வறுமையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், கடுமையாக வறுமையில் வாடும் பெண்களில் குறிப்பிட்ட தேவைகளை குறிவைத்து பூர்த்தி செய்துதர வேண்டும் என்று தரவுகளை முன் வைத்தார்கள்.

இவை அமலாவதற்காக வளர்ச்சித் திட்டங்களில் பெண்களின் தலைமை பாத்திரங்களை மேம்படுத்துவதும், பெண்களின் பங்கேறுப்பை மையமாகக் கொண்ட வறுமை ஒழிப்பு வழிமுறைகளையும் முன்மொழிந்தவர்கள். இந்த முன்மொழிவுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு அமலாக்கப்பட்டது.

இனச் சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வறுமை ஒழிப்பில் கிராமப்புறங்களில் இருந்த வசதி படைத்தவர்களை அல்லது உயர் அடுக்கினர்களை பயன்படுத்த வேண்டும் அல்லது ஈடுபடுத்த வேண்டும். இந்தப் பகுதிகளில் வறுமை ஒழிப்பின் செயல் திறனை மேம்படுத்துவதில் கிராமப்புற உயர் அடுக்கினர் குறிப்பிடத்தக்க தனித்துவமான பங்களிப்பை வழங்க முடியும் என்று ஆய்வுகளின் முடிவுகள் வலியுறுத்தின. அவர்களின் முதலீடுகளை வறுமை ஒழிக்க பயன்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கினார்கள். அதே நேரத்தில் உயர் அடுக்கினர் வறுமை ஒழிப்பின் வளங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார்கள் என்ற சந்தேகத்தையும் மற்றொரு சாரார் முன்வைத்தனர்.

மேற்கண்ட கூறுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அமலாக்கு வதற்கான திட்டங்கள் உருவாக்கப் பட்டது. இதற்காக கிராம மக்களிடையே குடிமை விழிப்புணர்வை வளர்க்க வேண்டும். அதே வேலையில் சுயராஜ்ய சட்டம், நல்லொழுக்கம் ஆகியவற்றின் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் ஒரு வலுவான கிராமப்புற அமைப்பை நிறுவ வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது,. இந்த நிர்வாக அமைப்பு உயரடுக்கினர் வறுமை ஒழிப்பிற்கு உதவுவதும் அதற்கு எதிராக வளங்களை ஒதுக்கி கொள்வதை தடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. வறுமை ஒழிப்பு திட்டங்கள் அமலாக்கப்பட்ட பொழுது நிர்வாக அமைப்புகளில் இருக்கக்கூடிய பலம் பலவீனங்களை சமமான உரையாடல்கள் மற்றும் ஆலோசனைகள் மூலமாக சரி செய்து கொண்டார்கள்.

இனச் சிறுபான்மை பகுதிகளில் வறுமை ஒழிப்புக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவது மத நம்பிக்கைகள், கலாச்சார மரபுகளை முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், படிப்படியாக மதங்களின் கருத்துக்களில் இருந்து மதச்சார்பற்ற மயமாக்கலை வலியுறுத்த வேண்டும் என்ற அணுகுமுறைகளையும் கடைபிடித்தார்கள். அதே நேரத்தில் சீன தேசத்தை சேர்ந்தவர்கள் என்ற அடையாள உணர்வை மேம்படுத்தவும் அதன் அடிப்படையில் வறுமை ஒழிப்பு அதன் வட்டாரங்களில் ஈடுபாட்டை வழிநடத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதாவது இனம் சார்ந்த உணர்வுகள், வட்டார உணர்வுகள் கணக்கில் எடுக்கப்பட்டாலும் சீன தேசம் என்ற உணர்வு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்ற முறையில் திட்டங்கள் அமலாக்கப்பட்டது.

வறுமை ஒழிப்பு திட்டத்தில் ஈடுபடுகிற பொழுது ஏற்படுகிற தவறுகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி சரி செய்து கொண்டு முன்னேறியது மட்டுமல்ல, வறுமை ஒழிப்பு திட்டங்களை மீறக்கூடியவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்கள். திட்டங் களை அமலாக்குகின்ற பொழுது அவற்றை அமலாக்காமல் இருப்பவர்கள் அல்லது விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நூற்றுக் கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டு சீனா தனது சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியதிலிருந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக சீன கல்வியாளர்கள் சீனாவின் இன சிறுபான்மை பகுதிகளில் வறுமை குறைப்பு குறித்த பயனுள்ள ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சீனாவின் இன சிறுபான்மை பகுதிகளில் வறுமை குறைப்பு நடைமுறைகளையும் திட்டங்களையும் வடிவமைப்பதில் மதிப்பு மிக்க வழிகாட்டுதலாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் உலகளாவிய வறுமை நிர்வாக முயற்சிகளுக்கான குறிப்பான புள்ளியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்திருந்தது.

 

2020 ஆம் ஆண்டில் சீனா ஒட்டுமொத்த பிராந்திய வறுமையை வெற்றிகரமாக ஒலித்ததன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியது. வறுமைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மகத்தான வெற்றியை வரலாற்றில் பதிவு செய்திருக்கிறது. வறுமை ஒழிப்பில் இருந்து கிராமப்புற மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் பாதை, சீன குணாதிசயங்களுடன் சோசலிசத்தை முன்னேற்றுவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும், மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், படிப்படியாக பொதுவான செழிப்பை அடைவதற்கும் இன்றியமையாத பாதையாக வறுமை ஒழிப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சோசலிசத்தை அடைவது பட்டுக்கம்பலத்தில் நடப்பதல்ல பல படிப்பினைகளோடு களமாற்றங்களை உருவாக்குவது என்பதை சீன சோசலிச முறைகள் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.

அ.பாக்கியம்

வெள்ளி, பிப்ரவரி 06, 2026

விடையும் வியப்பும் நிறைந்த வரலாற்று ஆவணம்

 

                                                            கு.மனோகரன்         

பொதுவுடைமை கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி புரிந்து வரும் நாடுகளில்... குறிப்பாக, வல்லரசுகள் வாயடைத்து நிற்கும் அளவிற்கு பொருளாதார வலிமையுடன், தீவிர வறுமையை ஒழித்த உலகின் ஒப்பற்ற தேசமான சீனாவில் மதங்களுக்கும், வழிபாடுகளுக்கும் போதுமான அளவிற்கு சுதந்திரம் இல்லை என்று   பொய்களை பரப்பி வருவோருக்கு, விடையையும் வியப்பையும் அளித்திடும் "வரலாற்று ஆவணமே" இந்நூல். சீனாவில் அனைத்து வகையான நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிப்பதோடு, வழிபாட்டு உரிமைகள் எவ்வாறு ஒழுங்கு படுத்தப்பட்டு சீரிய முறையில் இயங்கி வருகிறது என்பதை, வரலாற்றுப் பின்புலத்துடன் விரிவாகவும், ஆர்வத்தை தூண்டும் எழுத்து நடையிலும் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். தோழர் அ.பாக்கியம் அவர்களின் "தேடலுக்கு" மேலும் ஒரு சாட்சியமாய் நிற்கிறது இப்புத்தகம். அனைவரும் வாங்குவோம்! வாசிப்போம்! சோசலிச நாடுகள் மீதான பொய்யுரைகளை தகர்ப்போம்!

மதம் குறித்து மாமேதை மார்க்ஸ் அவர்களின் மதிப்பீட்டை முன்வைத்து துவங்குகிறது புத்தகம். உதாரணமாக "மதம் மக்களின் அபின்" என்கிற வகையில், மார்க்சின் கருத்தினை முழு புரிதலின்றி பேசித் திரிவோருக்கு, அதன் முழுமையான விளக்கத்தினை அளித்து தெளிவு படுத்தியுள்ளது இப்புத்தகம்.

"மதம் ஒரு சமூக மயக்க மருந்து. மதம் சுரண்டலின் வலியை மழுங்கடித்து, ஒடுக்குமுறை அமைப்பின் கீழ் வாழ்க்கையை தாங்கிக் கொள்ளக் கூடியதாக மாற்றுகிறது. உழைக்கும் மக்களுக்கான சுகம் சொர்க்கத்தில் காத்துக் கிடக்கிறது. எனவே, பூமியின் சூழ்நிலைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்கிற கருத்தினை எளிமையாக விளக்கிடும் வகையில் தான், வலியை மறக்கச் செய்யும் போதைப் பொருளான அபினுடன் ஒப்பிட்டுப் பேசினார் மார்க்ஸ். அதாவது, எளிய மக்களின் துன்ப துயரங்களுக்கான காரணங்களை சிந்திக்கா வண்ணம் மதம் வினையாற்றுகிறது என்பதையே, வலி நிவாரணியான அபினுடன் ஒப்பிட்டுக் கூறினார். முதலாளித்துவத்திற்கு மாற்றாக சோசலிசக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறை 1917ல் சோவியத் யூனியனில் நிகழ்ந்தது. அந்நாட்டில் மதத்தை கையாளுவதற்கான வழிகாட்டியாய் இருந்தது மார்க்சின் கொள்கைகளே. மேலும், சோவியத் யூனியனில் தோழர் லெனின், தோழர் ஸ்டாலின் ஆகியோர் மதங்களை கையாண்ட விதத்தினை விளக்கமாக பதிவு செய்துள்ளது இந்நூல். இத்தகு பின்புலத்துடன் சீனாவில் நுழைகிறார் நூலாசிரியர்.

பழங்காலத்தில் சீனாவில் பெருந்தெய்வ வழிபாடோ, கடவுள் வழிபாடோ கிடையாது. மதம் என்ற சொல் கூட கிடையாது. மூதாதையர் வழிபாடு மற்றும் இயற்கை சார்ந்த வழிபாட்டு முறைகளே இருந்தன. இச்சூழலை அடிப்படையாகக் கொண்டு கன்பியூசியஸ் என்பவர் வாழ்வியல் நெறிமுறைகளை ஒழுங்குபடுத்தி மக்களிடையே போதிக்கும் பணிகளை மேற்கொள்கிறார். அதாவது... ஒழுக்கம், பெரியோர்களை மதித்தல், மூதாதையர் வழிபாடு, கூட்டுக் குடும்ப முறை, அரசனை மதித்தல் ஆகியவற்றை வாழ்வியல் நெறிமுறைகளாக கடைபிடிக்குமாறு மக்களிடம் பரப்புரைகளை மேற்கொண்டார். இது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. 1911 வரை கன்பியூசியஸ் தத்துவம் சீனாவில் பெரும் செல்வாக்குடன் இருந்தது. அதனைத் தொடர்ந்து "மென்சியஸ், தாவோயிசம், மோஹிசம், சட்டவாதம்" என பல்வேறு தத்துவங்கள் சீனாவில் உதயமாகின. ஆனாலும் கன்பியூசியஸ், தாவோயிசம் ஆகிய தத்துவங்கள் மட்டுமே மக்களிடையே ஈர்ப்பினை உருவாக்கியது.

இந்நிலையில் வணிகம் சார்ந்து "பெளத்தம்" சீனாவில் நுழைந்தது. துவக்கத்தில் மக்கள் மத்தியில் பெளத்தம் வரவேற்பை பெறவில்லை. காரணம், துறவு வாழ்க்கையை அடிப்படைக் கொள்கையாகக்  கொண்ட பெளத்தத்தால், கூட்டுக் குடும்பத்திற்கு முக்கியத்துவம்  அளித்து வந்த சீன மக்களை கவர முடியவில்லை. ஆனால் பெளத்தத்திற்கு வணிகம் முக்கியமாக இருந்ததால், கன்பியூசியஸ் தத்துவத்திலிருந்து சிலதை தனதாக்கிக் கொண்டதோடு, அமைப்பு ரீதியாய் மக்களை அணி திரட்டியது. ஆகையால் தான் இன்றும் பெரும்பான்மை மதமாக சீனாவில் பெளத்தம் இருந்து வருகிறது. பின்னர் 19 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் "கிறிஸ்தவம், அதனைத் தொடர்ந்து " இஸ்லாம்" ஆகியவையும் சீனாவிற்குள் நுழைந்தன. கிறிஸ்தவத்தில் "கத்தோலிக்கம், புராட்டஸ்டன்ட்" ஆகிய இரு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இவை எல்லாம் 1949 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மட்டுமே. அதற்குப் பின்னர் சீனாவின் நிலையில் தலைகீழ் மாற்றம் உதயமானது. இது வரைக்குமான வரலாற்றினை உரிய தரவுகளோடும், சுவையோடும் எடுத்துக் கூறிய நூலாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சீனாவின் சிவப்பு நட்சத்திரமான தோழர் மாவோ அவர்கள் "எங்கள் கடவுள் சீன தேசத்தின் வெகுஜனங்களே தவிர, வேறு யாருமில்லை" என பிரகடனம் செய்து தனது பணிகளை துவக்குகிறார். மக்களுக்கான தேவைகள் பூர்த்தியாகும் போது மதங்களுக்கும், வழிபாடுகளுக்குமான தேவை இருக்காது. அனைத்துத் தளங்களிலும் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தியதோடு, பகுத்தறிவு பரப்புரைகளையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. அதே நேரத்தில், மதத்தின் பால் நம்பிக்கை இருப்போரின் வழிபாட்டுக்கான வசதிகளையும் ஒழுங்கமைத்து வழங்கியது சீன அரசு. இன்று வரை, பெளத்தம், கன்பியூசியம், தாவோயிசம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய ஐந்து மதங்கள் சீனாவில் சுதந்திரமாய் செயல்பட்டு வருகின்றன. சீன அரசியல் சட்டம் 36-வது பிரிவின் கீழ் இவை முறைபடுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பொறுப்பற்ற முறையிலும், பொது சமூகத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு சீனத்தில் இடமில்லை. இவைகள் எல்லாம் எவ்வாறு ஒழுங்குபடுத்தப் பட்டன என்பது குறித்து வாசிக்கும் போது, நிச்சயம் வாசகர்களுக்கு மலைப்பை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இப்போது ஒரு கேள்வி இயல்பாய் எழும். சீனா எனும் சோசலிச தேசத்தில் "பகுத்தறிவு" கொள்கைகள் மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லையா? என்பதே. அப்படியொரு கேள்வி எழுவதற்கான தேவை எழாவண்ணம் இப்புத்தகம் அமைந்துள்ளது தான் ஆகச்சிறப்பாகும்.

2018 - 2020 கணக்கீட்டின் படி, 142 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் மத விசுவாசிகளாய் இருப்போர் 20 கோடி பேர் மட்டுமே. மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரம் வழிபாட்டுத் தலங்கள் சீனாவில் உள்ளன. பெளத்தக் கோயில்கள் 33 ஆயிரத்து 500. தாவோயிசக் கோயில்கள் 9 ஆயிரம். இஸ்லாம் மசூதிகள் 35 ஆயிரம். கத்தோலிக்க சர்ச்சுகள் 6 ஆயிரம். புராட்டஸ்டன்ட் சர்ச் & ஒன்று கூடும் இடம் 60 ஆயிரம். மொத்தமுள்ள மத விசுவாசிகளில் 18% பேர் பெளத்தத்தை பின்பற்றுபவர்கள். மொத்தம் 3 லட்சத்து 80 ஆயிரம் மத குருக்கள் உள்ளனர். பெளத்தம் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர். தாவோயிசம் 40 ஆயிரம் பேர். இஸ்லாம் 57 ஆயிரம் பேர். கத்தோலிக்கம் 8 ஆயிரம் பேர். புராட்டஸ்டன்ட் 57 ஆயிரம் பேர். இவைகள் தவிர்த்து இதரச் சிற்சிறுப் பிரிவுகள் அனைத்தையும் சேர்த்து 5,500 மத குருக்கள் உள்ளனர். 96.5% மதக் குருக்களுக்கு மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பாதுகாப்புத் திட்டங்களும் சீனாவில் இருந்து வருகின்றன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் "அறிவியல், விஞ்ஞானம், பகுத்தறிவு" பரப்புரைகளை தொடர் இயக்கமாய் செய்து வருவதன் காரணமாகவும், சீன அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருவதன் காரணமாகவும் மத விசுவாசிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சீனாவில் குறைந்து கொண்டே வருகிறது. தற்போதைய சீனத்தின் அதிபர்

"ஜி ஜின் பிங்" பின்வருமாறு கூறுகிறார், அனைத்து வகையிலும் சிறந்த வளர்ச்சி பெற்ற சோசலிச நடாக சீனாவை வளர்த்தெடுக்கவும், மக்களின் எண்ணங்களை முழுமையாக நனவாக்கவும், மத நம்பிக்கை உள்ளோரையும் இணைத்துக் கொண்டு செயலாற்றி வருகிறோம். இச்செயல்பாடுகள் மூலம் எதிர்காலத்தில் "மதங்களுக்கும், வழிபாடுகளுக்கும்" தேவைப்படாத  தேசமாக சீனா திகழும். "எல்லோருக்கும் எல்லாம்" கிடைக்கப்பெற்ற சமூகமாக உலக அரங்கில் சீனா ஜொலிக்கும்.

நிறைவாக,

"ஒருவரின் மதக் கருத்துகள், உங்கள் கருத்துடன் ஒத்துப் போகவில்லை என்றாலும் கூட, அவரை நேசியுங்கள்"

இது புத்தகத்தின் ஓரிடத்தில் வரும் மேற்கோள். இது போல் 19 மேற்கோள்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இப்புத்தகத்தை வாசித்து முடிக்கும் தருணம், அனைவரின் மனதினுள் ஒரு பூரிப்புணர்வு தோன்றும். ஆம்! இயக்கவியல் பொருள் முதல்வாதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி புரியும் சோசலிச நாடுகளில் மட்டுமே "அனைத்துக் கருத்துகளுக்கும்" மதிப்பளிக்கப் படுகிறது என்கிற பெருமிதமே அவ்வுணர்வு. இப்புத்தகத்தை வாசிக்கும் போது இன்னொரு உண்மையும் வெளிப்படும். அது, இந்தியாவில் மதம் எவ்வளவு அரசியல் மயமாகியுள்ளது என்பதேயாகும். மிக மிக பொருத்தமான நேரத்தில் இத்தனை நேர்த்தியுடன் இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கும், வெளியீடு செய்துள்ள பதிப்பகத்தாருக்கும் மீண்டுமொரு முறை புரட்சி வாழ்த்துகள்.

கு.மனோகரன்

தலைவர்

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்

சென்னைக்கோட்டம்-2

நூல் கிடைக்கும் இடம்

சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும்

ஆசிரியர். அ.பாக்கியம்

தூவல்கிரியேஷன்ஸ் தமிழ்மார்க்ஸ் பவுண்டேஷன்

விலை 250. Gpay 94863 44333(vedhachala perumal)

சிந்தன் புக்ஸ்

327 /1 திவான் சாஹிப் கார்டன்

டிடிகே சாலை, ராயப்பேட்டை

சென்னை 600 014

செல் பேசி: 9445123164

வடசென்னை வாசி புத்தக நிலையம்

எண்:9, G.R. சாலை

பழைய வண்ணாரப்பேட்டை

சென்னை-21

செல் பேசி: +918508698507

 

 

புதன், பிப்ரவரி 04, 2026

58 இனச் சிறுபான்மை வறுமைக்கான ஆய்வுகளும் சவால்களும்

 

அ.பாக்கியம்

மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் வறுமை என்பது பல்வேறு சமூக வடிவங்களிலும் பல்வேறு காலகட்டத்திலும் வெளிப்படுகின்ற ஒரு நிலையான பொருளாதார நிகழ்வாக இருந்து வருகிறது. வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகள் வரலாறு முழுவதும் நடந்து வந்துள்ளது. ஆனால் இன்றைய உலகிலும் வறுமை என்பது குறிப்பிடத்தக்க அளவிற்கான உலகளாவிய சவாலாக உள்ளது. இதன் காரணமாக வறுமையை குறைப்பதற்கான செயல்கள் உலகம் முழுவதும் ஒரு முக்கிய கவலையாக மாறி உள்ளது. அதே நேரத்தில் வறுமையைப் பற்றிய ஆய்வுகளும் இக்காலத்தில் பல்வேறு விதமான கோணங்களில் நடந்து கொண்டே இருக்கிறது. அதிகமாகியும் உள்ளது. ஐக்கிய நாடுகளின் சபை 2030ம் ஆண்டு நிலையான வளர்ச்சிக்கான ஒரு நிகழ்ச்சி நிரல் என்ற தலைப்பில் சிறப்புத் திட்டத்தை அறிவித்தது இத்திட்டத்தில் 2030 ஆம் ஆண்டுக்குள் எல்லா இடங்களிலும் இருக்கின்ற தீவிர வறுமையை ஒழித்து விட வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்தார்கள்.

அனுபவத்தின் உறைவிடமாக சீன கம்யூனிஸ்ட் கட்சி:

புராதன சமுதாயத்திற்கு முன்பு இயற்கையை போதுமான அளவிற்கு மனிதன் தன் வசப்படுத்த முடியாத காரணத்தினால் வறுமை மனித குலத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது. உணவு சேகரிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்த காலத்தில் வறுமை தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்தது. சமுதாயம் வர்க்கங்களாக பிளவுண்ட பிறகு மனிதகுலம் வறுமையில் வாடுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகப் பிரதான காரணம் என்பது சுரண்டல் முறை ஆகும். வர்க்க சமுதாயத்தின் வரலாறு நெடுகிலும் வறுமை என்பது வர்க்கங்களின் சுரண்டலினால் மேலோங்கி ஆதிக்கம் செலுத்தியது. வர்க்க சமுதாயத்தை வீழ்த்தி வர்க்கமற்ற சமுதாயத்தின் துவக்கமாக அமைந்த உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரத்தில் வறுமை ஒழிக்கப்பட்டது. இங்கும் கூட அதிகாரத்தை இழந்த சுரண்டல் வர்க்கம் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு வறுமையில் மக்களை வாடச்செய்தனர். இந்த வரலாற்று பின்னணியில் தான் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனாவின் முன் முயற்சிகளும் வெற்றிகளும் உலகளாவிய வலிமை ஒழிப்பிற்கு புதிய உத்திகளையும் நுணுக்கமான அறிவுகளையும் வழங்கி உள்ளது.

சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சீன மக்கள் குடியரசு தீவிர வறுமையை முற்றிலும் ஒழித்து விட்டது என்பது இன்றைய உலகில் மிகப்பெரிய சாதனையாகும். இந்த வறுமை ஒழிப்பை எவ்வாறு நடத்தினார்கள் என்பதை பற்றிய ஏராளமான தரவுகள் இருக்கிறது ஐக்கிய நாடுகள் சபையும் இந்த வறுமை ஒழிப்பை உலகின் மிகப்பெரிய அனுபவமாக எடுத்துக் கொண்டுள்ளது. இதற்கு முந்தைய பகுதியில் சீனாவில் வறுமை ஒழிப்பு சம்பந்தமாக ஒரு பொதுவான முன்னோட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் பகுதியில் மிகவும் பின்தங்கிய நிலைமையில் இருந்த இனச் சிறுபான்மையர் மத்தியில் வறுமையை எவ்வாறு ஒழித்தார்கள், எடுத்த புதிய முயற்சிகள் என்ன என்பதையும், என்ன விதமான இடர்பாடுகளை சந்தித்தார்கள் என்பதுதான் மனித குலம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஆகும்.

உலகின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை இனங்கள் வளர்ச்சி அடையாமல் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். பிரேசில் நாட்டில் வறுமையில் வாழக்கூடியவர்களின் எண்ணிக்கை 7. 5 கோடி மக்களாகும் இவர்களில் 90 சதவீதத்திற்கு மேல் ஆப்பிரிக்க இந்தியர்கள் இந்தியர்கள் கருப்பின மக்கள் ஆகியோர்களை அடங்குவார்கள். சிறுபான்மை மக்கள் மத்தியில் தான் வறுமை அதிகமாக இருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டில் பல்வேறு இனங்கள் இருக்கிறது இந்த நாட்டை இன மொசைக் நாடு என்று அழைப்பார்கள் ஒவ்வொரு தேசிய இனங்களும் தங்களது தனித்தன்மைகளை பாதுகாத்துக் கொண்டே ஒன்றாக வாழ்வார்கள். இந்த முறைக்கு தான் இன மொசைக் நாடு என்று பெயர். ஆனாலும் இங்கு வறுமை என்பது பழங்குடி மக்களிடம் தான் மிக மிக அதிகமாக இருக்கிறது. சொர்க்கபுரி என்று சொல்லக்கூடிய அமெரிக்காவை எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவில் வறுமையில் வாழக்கூடிய மக்களின் பெரும்பகுதி ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் கருப்பினத்தவர்களும் ஆவார்கள். இந்தியாவிலும் மதச் சிறுபான்மை இன சிறுபான்மையர் சாதிய அடுக்குகளின் அடிமட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் வறுமையில் வதைப்படுகிறார்கள் . உலகின் பல நாடுகளில் பல்வேறு காரணங்களால் காலங்காலமாக சிறுபான்மை மக்கள் வறுமையை வாழ்க்கையாக கொண்டுள்ளனர் இந்த நீண்ட கால போக்கை மாற்ற வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்கள் குடியரசும் முடிவெடுத்தது.

 

ஆய்வுகளே திட்டத்தின் அடிப்படை:

சீனாவில் எந்த ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கு முன்பும் அவற்றை அமுலாக்குவதற்கு முன்பாகவும் அது பற்றிய விரிவான ஆய்வுகளை நடத்துவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குவார்கள். அந்த ஆய்வுத் திட்டத்தின் படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவுகளில் இருந்து கிடைக்கும் உண்மை நிலைகளின் அடிப்படையிலேயே திட்டங்களை உருவாக்குவார்கள். இது ஆரம்ப காலத்தில் இருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது செயல்பாட்டிலும் சில மக்கள் குடியரசு உருவான காலத்திலும் இந்த முறைகளை கடைப்பிடித்து வருகிறார்கள்.

1978 ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன அரசாங்கமும் சீர்திருத்தம் மற்றும் பிறப்புக் கொள்கை ஆகியவற்றை அமல்படுத்தினார்கள் இதன் விளைவாக கிராமப்புறங்களில் பொருளாதாரத்தின் வளர்ச்சி மிக வேகமாக மாற்றமடைந்தது. இந்த அதிவேக பொருளாதார வளர்ச்சியின் காரணமாக 1978 இல் கிராமப்புறத்தில் 25 கோடி மக்கள் வறுமையில் வாழ்ந்த நிலை மாறி 2008 ஆம் ஆண்டு 4 கோடியாக குறைந்தது. ஆனால் தனது ஆய்வுகள் மூலம் இனச் சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வறுமை ஒழிப்பு போதுமான அளவிற்கு முன்னேறவில்லை என்று கண்டுபிடித்தார்கள். சீனாவின் தேசிய இன விவகார ஆணையம் (NEAC) 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் கிராமப்புறத்தில் வறுமையில் வாழக்கூடிய மக்கள் தொகையில் 52.3 சதவீதம் இனச் சிறுபான்மை மக்கள் என்ற முடிவுக்கு வந்தார்கள். இவை அனைத்தும் இனச் சிறுபான்மையுருக்கான தன்னாட்சி பிரதேசங்களில் இருந்தது.

இந்த தரவுகளின் உண்மையான அர்த்தம் சீனாவின் வறுமையில் வாழும் மக்கள் இனச் சிறுபான்மை பகுதிகளில் குவிந்து இருக்கிறார்கள் என்பது ஆகும். இந்தத் தரவுகளின் அடிப்படையில் இனச் சிறுபான்மையினர் வாழக்கூடிய பகுதிகளில் வறுமைக்கான காரணங்களை ஆய்வு செய்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டது சுயமாக பல்வேறு அறிவு ஜீவிகளும் களத்தில் இறங்கினார்கள். பல அறிஞர்கள் இந்த ஆய்வுகளை மூன்று கட்டமாக தொகுத்து அளித்தார்கள். 1978 முதல் 2012 வரை முதல் கட்டமாகவும் 2013 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இரண்டாவது கட்டமாகவும் 2020 ஆம் ஆண்டு முழுமையாக வறுமை ஒழிக்கப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்த ஆய்வுகளை மூன்றாவது கட்டமாக பிரித்து ஆய்வு செய்து தரவுகளை வெளியிட்டார்கள். இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு சீன மக்கள் குடியரசு இன சிறுபான்மை பகுதிகளில் வறுமை ஒழிப்பிற்கான வரையறைகளை உருவாக்கினார்கள்.

சீனாவின் சமதளப் பகுதிகளில் வறுமைகளை ஒழிப்பதற்காக அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டது. அவற்றை எட்டு தர அளவுகோல்கள் அடிப்படையில் தீர்மானித்தார்கள்.

1.வருடாந்திர தனிநபர் தானிய உற்பத்தி

2.தனிநபரின் பண வருமானம்

3.போதுமான வசதி இல்லாத வீடுகளின் சதவீதம்

4.குடிநீர் வசதி கிடைக்காத வீடுகளின் சதவீதம்,

5.நிரந்தரமாக மின்சார வசதி இல்லாத இயற்கை கிராமங்கள்

6.மாவட்ட தலைநகர உடன் சாலைகளால் இணைக்கப்படாத கிராமங் களின் சதவீதம்

7.நீண்ட காலமாக சுகாதார வசதி கிடைக்காத பெண்களின் சதவீதம்

8.தகுதி இருந்தும் பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகளின் சதவீதம்

 

மேற்கண்ட அளவுகோலின் அடிப்படையில் தான் வறுமை ஒழிப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதே முறையில் சிறுபான்மை தேசிய இனங்கள் வாழக்கூடிய பகுதிகளில் வறுமையை அடையாளம் கண்டு அதற்கான அளவுகோலை தீர்மானிப்பதில் நிர்ணயிப்பதில் பலவீனம் இருந்தது என்பதை கண்டுபிடித்தார்கள் எனவே இனச் சிறுபான்மை பகுதிகளில் வறுமை நீடிப்பதற்கான காரணங்களை வரலாற்று ரீதியாகவும் புவியியல் சார்ந்தும் மற்ற அனைத்து முனைகளிலிருந்தும் ஆய்வுகளின் மேற்கொண்டு முடிவுக்கு வந்தார்கள்

ஆய்வு தரவுகளின் முடிவுகள்

இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் வறுமைக்கான காரணங்களை ஆய்வு செய்த பொழுது அவை பல தனித்துவமான பண்புகளைக் கொண்டிருந்தது. மிக நீண்ட காலமாக வறுமையிலேயே வாழ்ந்து வந்ததால் வறுமையே ஒரு கலாச்சாரமாக மாற்றப்பட்டு இருந்தது. இந்தப் பகுதியில் அறிவுக்கான வாய்ப்புகள் இருந்த பொழுதும் அவை தடுக்கப்பட்டு விட்டதால் மனித வளர்ச்சியின் சதவீதம் குறைவாக இருந்தது. இதனால் சமூக பாதுகாப்பு பற்றியும் சந்தை பொருளாதாரத்தை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது. தனிநபர்களின் விலை நிலங்கள் போதுமானதாக இல்லை அதன் விளைவாக தானிய உற்பத்தி மிக மிக குறைவாக இருந்தது. அதே நேரத்தில் உற்பத்தி முறைகள் மிகவும் பழமையானதாக இருந்தது மட்டுமல்ல மக்களிடம் பழமை வாத மனநிலை இருந்ததால் தனி நபர்களின் மேம்பாட்டுத்திறன் மிகப்பெரிய அளவிற்கு பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது. விவசாயிகளுக்கான சந்தை மிகத் தொலைவில் இருந்ததால் இவர்களின் பண வருமானத்திற்கு பாரம்பரியமான உற்பத்திகளை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டியதாயிற்று உயிர் வாழ்வதற்கான அடிப்படையான பொருட்களின் விலை மிக அதிகமாக இருந்தது இம்மக்களிடமிருந்த ஒரே பொருளான கால்நடைகளை விற்பனை செய்கிற பொழுது மிகக் குறைந்த விலையே கிடைத்தது. இனச் சிறுபான்மை பகுதியில் உள்ள இந்தக் காரணங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாத வகையில் பிணைந்து இருந்தது. இதன் காரணமாக வறுமை தொடர்ந்து நீடிப்பது மட்டுமல்ல இவர்களின் வாழ்க்கை கலாச்சாரமாகவே மாறி இருக்கிறது என்பதையும் இந்த ஆய்வுகளின் தரவுகள் வெளிப்படுத்தியது.

மேற்கண்ட தரவுகளையும் விவரங்களையும் நுணுக்கமான முறையில் ஆய்வு செய்து சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்கள் குடியரசும் எந்தெந்த துறைகளில் சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் எவ்வாறு கவனம் செலுத்துவது என்பதற்கான வழிகாட்டுதல்களையும் உருவாக்கி அமலாக்கினார்கள்.

முதலாவதாக, இனச் சிறுபான்மை பகுதிகளில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் பண்டபொருளாதரத்தின் முக்கிய பங்கு தேவை என்பதை உணர்ந்ததுடன் வறுமை நிலையை மாற்றுவதற்கான அடிப்படை காரணியாகவும் பண்ட பொருளாதரத்தை அமைத்திட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். இதற்காக சந்தை செயல்பாட்டை மேம்படுத்தி பல்வேறு பொருளாதாரத் துறைகளில் பண்டங்களின் எண்ணிக்கைகளையும் அதிகப்படுத்துவது என்று முடிவாக்கினார்கள். நிதி உதவி சார்ந்த வறுமை ஒழிப்பு உடனடி காரணியாக இருந்தாலும் தொழில்துறை சார்ந்த வறுமை ஒழிப்பு ஒரு முக்கிய உத்தியாக முன்வைக்கப்பட்டது. உள்ளூர் வளங்களை அடிப்படையாகக் கொண்டு சிறப்பியல்பு உள்ள தொழில்களின் வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் வேலை குடும்பங்களுக்கு செல்வத்தை தேடும் உந்துதலை ஏற்படுத்த முடியும் என்று முடிவெடுத்து அமலாக்கினார்கள். உதவி சார்ந்த வறுமை ஒழிப்புகளுடன் வளர்ச்சி சார்ந்த வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற வகையில் நிதி நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். கடன் சேவைகளை விரிவுபடுத்துவது வீடுகளின் சுயசார்பு மேம்பாட்டுத்தலனே அதிகப்படுத்துவது ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் அதிகாரம் பெற்ற அமைப்புகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று முடிவாக்கினார்கள்.

இரண்டாவதாக, வறுமை ஒழிப்பு என்பது அடிப்படையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் கணிசமான முன்னேற்றத்தை சார்ந்துள்ளது என்ற முடிவுக்கு வந்தார்கள் இதன் காரணமாக தொழில்நுட்பத்தின் அவசியத்தை அங்கீகரித்து அவற்றின் மூலமாக விரைவான வளர்ச்சியை ஏற்படுத்துவது. குறிப்பாக வறுமை ஒழிப்பிற்கான புதிய பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குவதில் இணைய தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கை அமலாக்குவது.

மூன்றாவதாக, கலாச்சார ரீதியிலான தலையீட்டை அதிகப்படுத்தி செயல்படுத்துவது. தலைமுறை தலைமுறையாக வறுமை கலாச்சாரத்தில் வாழக்கூடிய நிலைமைகளை மாற்றுவது. இனச் சிறுபான்மை பகுதிகளில் சுற்றுலா மற்றும் கலாச்சார சுற்றுலா போன்றவற்றை நடத்தி வருமான வாய்ப்புகளை அதிகப்படுத்துவது. இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் சுய வளர்ச்சி திறன்களை மேம்படுத்துவதற்கும் ஏழை மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை வழங்குவதற்கும் இவற்றை பயன்படுத்துவது. சுற்றுலாவில் முதலீடுகளையும் வேலை வாய்ப்புகளையும் அதிகப்படுத்துவது. தனித்துவம் வாய்ந்த சுற்றுலா திட்டங்களை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அதிகப்படுத்த முடியும். இன விழாக்கள் இன கலாச்சாரம் வணிக கலாச்சாரம் பாரம்பரிய தொழில் மயமாக்கல் ஆகியவற்றின் மூலமாக கலாச்சாரத்தை சுற்றுலா உடன் இணைப்பது போன்ற நடவடிக்கைகளை வறுமை ஒழிப்பின் ஒரு பகுதியாக மாற்றுவது.

நான்காவது கல்வியை மேம்படுத்துவதன் மூலம் வறுமை ஒழிப்புக்கான திட்டத்தை செயல்படுத்துவது எளிமையாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தார்கள் வறுமையை எதிர்த்து போராடுவதற்கான திறவுகோலாக கல்வி இருக்கும் என்பதை கண்டறிந்து அவற்றுக்கான திட்டத்தை உருவாக்கினார்கள் கல்வியின் அணுகல்களை அதிகப்படுத்துவதன் மூலமாக ஏழை மக்களின் மனித வளத்தை மேம்படுத்துவது போன்ற செயல்களை சாத்தியப்படுத்தினார்கள். இனச் சிறுபான்மை பகுதிகளில் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடங்கள் முழு பாதுகாப்பு மற்றும் நெகிழ்வான வடிவங்களை முன்வைத்து கல்வியை சீர்திருத்தம் செய்து மேம்படுத்தி வறுமை ஒழிப்புக்கு கல்வி பயன்படுத்தப்பட்டது.

ஐந்தாவதாக இனச் சிறுபான்மை வாழக்கூடிய பகுதிகளில் வறுமைக்கும் பேரிடர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு மிக நீண்ட காலமாக உள்ளது என்பதை அறிந்து கொண்டார்கள். இயற்கை பேரிடர்களால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும் வாழ்விடங்களையும் இழந்து வறுமையில் தள்ளப்பட்டார்கள். வறுமை அதிகம் ஆவதற்கு பேரிடர் ஒரு முக்கிய காரணமாக இனச் சிறுபான்மை மக்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்தது என்பதை அறிந்தார்கள் எனவே வறுமையை குறைக்க பேரிடர் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. அதே நேரத்தில் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட வுடன் மீட்பு நடவடிக்கைகளை அதற்கான ஒருங்கி ணைப்புகளை பலப்படுத் துவதன் மூலமாக வறுமையின் கீழ் செல்லக்கூடிய மக்களை பாதுகாக்க முடியும் என்ற திட்டத்தை உருவாக்கினார்கள்.

ஆறாவதாக சமூக பொருளாதார வளர்ச்சியின் இன சிறுபான்மை பகுதி தனிமைப்பட்டு இருந்தது. பரந்த தேசிய பொருளாதாரத்துடன் பிராந்திய நிலைமைகளை ஒருங்கிணைப்பதற்கான வழிமுறைகள் இல்லாமல் இருந்தது அதே நேரத்தில் தங்கள் உள்ளூர் நலனுக்காக சொந்த வளங்களை திறம்பட பயன்படுத்த முடியாத நிலைமைகளும் நீடித்தன. இந்த நிலைகளுக்கு மூடிய இரட்டை கட்டமைப்பு என்று ஆய்வாளர்கள் பெயர் கொடுத்தார்கள். இந்த இரண்டு விதமான கட்டமைப்புகளையும் உடைக்க வேண்டும் என்பது வறுமை ஒழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது.

இந்த முடிவுகளை அமலாக்கி எவ்வாறு வெற்றிகண்டார்கள் என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

அ.பாக்கியம்,

சனி, ஜனவரி 31, 2026

நவ பாசிச சக்திகளின் வேர்களில் வென்னீராக... நூல் அறிமுகம்:


“மதம் என்பது மனிதனின் அடிப்படை உண்மை அல்ல; மதம் ஒரு மனித படைப்பு. மதம் ஒரு பொய் என்று மட்டுமே கூறி, அதனை அகற்ற முடியாது. மக்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, மதம் தேவையில்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவதன்மூலம் தான் அதை அகற்ற முடியும்”. (32)

இப்படித்தான்... “சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும்” என்கிற அ.பாக்கியம் எழுதிய நூல் விரிகிறது. மொத்தம் பத்தொன்பது தலைப்புகளில் பாமரனும் படிப்பதற்கு இலகுவாக வெளிவந்துள்ளது. அதற்காக எட்டுக்கும் மேற்பட்ட நூல்கள், இருபத்தெட்டுக்கும் மேற்பட்ட வலைதள இணைப்பு களின் கட்டுரைகள் ஆகியவற்றை ஆதாரமாக்கப்பட்டு, சுமார் நூற்றம்பது பக்கங்களில் நம்மை பிரமிக்க வைத்துள்ளார்.

சீனா என்றாலே... பாம்பு, பல்லி, தவளை தின்பவர்கள்; புற்றீசல்போல் மக்கள் தொகை கொண்டவர்கள்; அதொரு சர்வாதிகார... இரும்புத்திரைக் கொண்ட நாடு; ஆட்சியாளர்களை எதிர்ப்பவர்களுக்கு மரணம் நிச்சயம்; சுட்டு தள்ளிவிடுவார்கள்; எந்த சுதந்திரமும் கிடையாது என்றெல்லாம் வாய்கிழிய பிரச்சாரம் செய்யப்பட்ட காலம் ஒன்று உண்டு. அதெல்லாம் எவ்வளவு பெரிய கட்டுக்கதை என்பதையும், மனித சுதந்திரமும் முதல் மத சுதந்திரம் வரை எப்படியெல்லாம் ஜனநாயக புரட்சிக்குப்பின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் கட்டி அமைக்கப்பட்டிருக்கிறது என்கிற தலைப்புகளை வாசித்து கடக்கிறபோது மெய்சிலிர்த்து போகிறது.

அதுபோலத்தான் 5000 ஆண்டு பழமைமிக்க நாகரீகம் சீன நாகரீகம் என்பதை ஐநூறு லிட்டர் பாலை அரைலிட்டர் பாலாக சுண்டவைத்து பரிமாறினால், எப்படி இருக்குமோ, அதுபோல் ஜனநாயக புரட்சிக்கு முன்பான கால கட்டத்தில் மனிதமும் மதமும் எப்படி சீனத்தை ஆண்டது என்பதை மிக அற்புதமாக அவருக்கே உரிய பாணியில் விவரிக்கிறார். நம்மை அப்படியே அந்த லோகத்திற்கு அழைத்து செல்கிறார் என்றால்... பாருங்களே..!

“இன்றைய சீனாவில் பெரும்பான்மையான மக்கள் எந்த ஒரு மதத்தையும் பின்பற்றக்கூடியவர்களல்ல. மத நம்பிக்கை அற்றவர்கள் 52.2 விழுக்காடு. முன்னோர்கள் மற்றும் நாட்டுப்புற நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள் (கம்பியூசியவாதிகள்) 21.9 விழுக்காடு. பௌத்தம் நம்பிக்கையாளர்கள் 18.2 விழுக்காடு. தாவோயிசவாதிகள் 3 விழுக்காடு. புரோட்டஸ்டன்ட் 3.8 கோடி. கத்தேலிக்கர்கள் 60 லட்சம். இஸ்லாமியர்கள் 2.5 கோடி. ஒப்பீட்டளவில் பௌத்தம் மிகப்பெரிய மதம்” என்கிறது இந்நூல்.

சீனத்தில் முளைவிட்ட தத்துவங்களாக... கன்பியூசியம், மென்சியம், தாவோயிசம், மோஷிசம், சட்டவாதம் இருந்துள்ளது. இவைகளே மக்களை ஆட்கொண்ட வாழ்வியல் தத்துவங்களாக இருந்திருக்கிறது. இவைகளை பிற்காலத்தில் பற்பல காலகட்டங்களில் பௌத்தம், கிறித்துவம், இஸ்லாம் எல்லாம் உட்கொள்ள போராடி உள்ளன என்பதை இந்த நூலில் காணமுடிகிறது. ஆம், இவற்றை ஏறக்குறைய நூறுப்பக்கங்களிலேயே அப்படியே பிரித்து மேய்ந்துவிடுகிறது இந்நூல்.

அடுத்து ஒரு அறுபது பக்கங்களில், மதம் என்கிற யானைகளிடமிருந்து சீன மக்களை மீட்பது எப்படி என்கிற போராட்டத்திலேயே பெரும்பகுதி செலவளிக்கப்பட்டதையும், நால்வர் அணியின் தவறான புரட்சியால் ஏற்பட்ட ரணங்களை ஆற்றுப்படுத்துவதிலுமே பெரும்பகுதி காலம் ஆயிரத்து தொல்லாயிரத்து நாற்பத்தொன்பதுக்குப் பிறகு ஓடியிருக்கிறது என்கிறதைக் கடக்கிறபோது கனந்த இதயம், அதிலிருந்து குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றப்பட்டது என்கிற பகுதியை கடக்கிடபோது கனந்த இதயம் மகிழ்ந்தது.

ஆம், 52 விழுக்காட்டுக்குமேல் மதத்தை நம்பாதவர்கள் இன்று சீனத்தில் இருக்கிறார்கள் என்றால், அதென்ன அவ்வளவு சாதாரண விடயமா? சரித்திர சாதனை அல்லவா? நல்லவேளையாக அங்கு இங்கு இருப்பதைப்போன்ற ‘சாதி’ சனியன்கள் தோன்றவில்லை. அது இருந்திருந்தால்... என்னவாகி இருக்கும் சீனம் என நினைத்துப் பார்க்கிறது மனசு..! ஆதிபூர்வீக தத்துவங்கள் என்ன சொல்கிறதென பார்ப்போமா?

கன்பியூசியம்: சீன மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளின்மீது அதன் கோட்பாடு அமைந்திருந்ததனால், மக்கள் அதை விரும்பினார்கள் (56).

மென்சியம்: கன்பியூசியம் கட்டுமானத்தில் இரக்கம், அவமானம், மரியாதை, ஒப்புதல் அல்லது மறுப்பு இவை நான்கும் அடிப்படையாக கொண்டு கட்டப்படுவதாகும். (62).

தாவோயிசம்: கன்பியூசியத்திற்கு முன்பே இது பிறந்திருந்தாலும், கன்பியூசியத்திடமிருந்த மூதாதையர்களின் வழிப்பாட்டு முறைகளுக்கு மாறாக மாற்று தத்துவங்களை இது போதித்தது. (67).

தாவோயிசம் பற்றி நூலாசிரியர் கூறுகிறார்... “கன்பியூசியம் மனித இயற்கையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தது. தாவோயிசம் இதற்கு நேர்மாறாக செயல்பட்டு, இதன் கோட்பாடுகள் மத விஷயமாக உருப்பெற்று, பிற்காலத்தில் மதமாகவே மாறியது” (71).

மோஹிசம்: மேற்காணும் இசங்களுக்கு சவால்விடும் இசமாக இது இருந்து உள்ளது. நூலாசிரியர் பதிவு செய்கிறார்... “ஒரு மனிதன் பட்டினியாக இருந்தால், அவனுக்கு சோறு போடு; அவன் குளிரில் அவஸ்தைப்பட்டால் போர்வை கொடு; நோயால் பாதிக்கப்பட்டால், சிகிச்சை செய்; செத்துப்போனால் குழிதோண்டி புதைத்துவிடு”.

சட்டவாதம்: கன்பியூசியம், மென்சியம், தாவோசியம் போன்ற தத்துவங்கள் மக்கள் தங்கள் ஆட்சியாளரின் நல்லொழுக்கத்தை அங்கீகரிப்பதன் மூலமாக சமூக நல்லிணக்கத்தை உறுதிபடுத்த முடியும் என்று நம்பினார்கள். ஆனால் சட்டவாதம்... இது சாத்தியமில்லை என்றது. வலுவான அரசு கட்டுப்பாடும், அதிகாரத்திற்கு முழுமையான கீழ்படிதலும் மூலமாகத்தான் நாடு வளரும் என்றது (80).

சீனத்தை பௌத்தம், கிறித்துவம், இஸ்லாம் எல்லாம் எப்படி உட்கொண்டன என்பதை நான்கு அத்தியாயங்களில் விரிவாக பேசுகிறார். கடைசி எட்டு அத்தியாயங்களில் புதிய ஜனநாயக புரட்சியால் நிகழ்ந்த பிரமிக்கத்தக்க மாற்றங்களை, அல்லது வளர்ச்சிகளை விளக்குகிறார். நால்வர் அணியால், கலாச்சாரப் புரட்சியால் நேர்ந்த கேடுகளைக் கடந்து, சீனத்தை வளர்ச்சி மேடுகளாக்கி, சோசலிச சீனமாக சாதித்ததை நூலாசிரியர் பதிவிடுகிறார்... “முதியவர்களும், இளைஞர்களும் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கணிச்சமாக குறைந்து இருக்கிறது. அது 2012ல் 53 விழுக்காடாக இருந்தது. 2018ல் 45 விழுக்காடாக விழுந்தது. 2021ல் 35 விழுக்காடாக வீழ்ந்தது. இளைஞர்கள் மத்தியில் இது மிகமிக குறைவாக இருக்கிறது” (152).

பண்டை கால வரலாறுகளை ஆய்வதற்கு பொறுமை தேவை. எந்தளவுக்கு வேண்டுமென்றால், இந்நூலாசிரியர் ஏ.பாக்கியம் அளவிற்கு வேண்டும் என்பேன். காரணம்... சீனம் மற்றும் திபெத் தொடர்பாக தொடர்ந்து வலைதளங்களில் எழுதிவரும் தொடர்களைக்கூட முழுமையாக படிப்பதற்கு சலிப்பு தட்டியிருக்கிறது எனக்கு. ஆனால், சலிப்பு என்றால், அது எங்கே விற்கிறது என்கிற அளவிற்கு இந்நூல் படிப்போரைத் தட்டியெழுப்புகிறது. பண்டைய வரலாறுகளை எழுதுகிறபோது, தரவுகள் மிகமுக்கியம். தரவுகளை மூட்டைகளாக அடுக்கினால், வாசிப்பு அறுந்துவிடும். அத்தகைய ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்பதை உணர்ந்த நூலாசிரியர் அவற்றை அளவோடு படையலிட்டுள்ளார். பாராட்டுக்கள்.

சீன சோசலிசத்தில் மதங்களும், வழிபாடுகளும் என்று நூலின் பெயர் இருந்தாலும், சீன தேசத்தில் மதங்களும், வழிபாடுகளும் என்பதுதான் இந்நூலை ஆக்கிரமித்துள்ளது.  அது அவசியமும்கூட.

நூல் வடிவமைப்பு சிறப்பாக வந்துள்ளது. காற்றின் தீரா பக்கங்களைத் தந்த தூவல் கிரியேஷன்ஸ் மெச்சத்தக்கதே. அட்டைப்படம் அமைப்பு அருமை. தமிழ்கூறும் நல்லுலகுக்கு மேலும் ஒரு அரிய கொடை இந்நூல். மாவோ நெடும்பயணம் படித்திருக்கிறேன். சீனப்பெரும் சுவர் படத்தில் பார்த்திருக்கிறேன். சீனர்களின் நெடும் வாழ்க்கையை கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. அந்த குறையை இந்நூல் போக்கிவிட்டது.

ஐயாயிரமாண்டு பழமை வாய்ந்த சீனம் இன்று எப்படி உலகையே உற்றுப் பார்க்க வைக்கிறது? இத்தகைய பழமையான நாகரீகத்தில் வாழ்ந்த மக்கள் எப்படி சோசலிச பாதையை தேர்ந்தெடுத்தனர் என்பதை இவ்விதமாக நூலாசிரியர் பார்க்கிறார் போல... “சீன நாகரீகம் பெரும் புராணங்கள், இதிகாசங்கள் அடிப்படையிலான வழிப்பாடு, உயிரினங்கள் உள்பட அனைத்தையும் ஆக்கியதும், இயக்குவதும் முழு முதல் கடவுள் என்ற கோட்பாடுகளுக்கு உட்பட்டோ சீனாவில் வழிப்பாட்டு முறைகள் இல்லை”.

“ஒரே நேரத்தில் உண்மையான துன்பத்தின் வெளிப்பாடாகவும், உண்மையான துன்பத்திற்கு எதிரானப் போராட்டமாகவும் மதம் இருக்கிறது” என்கிற காரல்மார்க்ஸ் வார்த்தைகளில் துவங்கி, “எங்கள் கடவுள் சீன தேசத்தின் வெகு மக்களேத் தவிர வேறு யாரும் இல்லை” என்கிற மாவோ வார்த்தைகளோடு நிறைவடைகிறது.

நிறைவடைவது நூல் மட்டுமல்ல, இந்நூலை நுகரும் வாசிப்போரின் மனமும்தான். ஆம், நுகர்ந்து பாருங்கள் தெரியும். இந்நூல் சோசலிச விரும்பிகளுக்கு மட்டுமல்ல, இந்திய தேசத்தில் மக்கள் ஒற்றுமையை பேணிட விழைவோர், நவ பாசிசத்தை வேரறுக்க விரும்புவோர் யாவருக்கும் ஓர் கையேடு. ஆம், இந்திய நவ பாசிச சக்திகளின் வேர்களில் வென்னீரிட்டு வென்றிட இந்நூல் உரமிடுகிறது என்றால் மிகையல்ல!   

-பி.தங்கவேலு, 30.01.2026.

நூல் கிடைக்கும் இடம்

சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும்

ஆசிரியர். அ.பாக்கியம்

விலை 250.

தூவல்கிரியேஷன்ஸ் தமிழ்மார்க்ஸ் பவுண்டேஷன்

Gpay 94863 44333

சிந்தன் புக்ஸ்

327 /1 திவான் சாஹிப் கார்டன்

டிடிகே சாலை, ராயப்பேட்டை

சென்னை 600 014

செல் பேசி: 9445123164

வடசென்னை வாசி புத்தக நிலையம்

எண்:9, G.R. சாலை

பழைய வண்ணாரப்பேட்டை

சென்னை-21

செல் பேசி: 8508698507

 

 

வியாழன், ஜனவரி 29, 2026

சீனப் பொருளாதாரத்தின் புதிய தர்க்கம்

 


Xu Feihong

இந்தியாவுக்கான சீனத் தூதர்

இது சீனா-இந்தியா ஒத்துழைப்புக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிறது.

வெளியிடப்பட்டது - ஜனவரி 29, 2026 01:04 am IST

'சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி போன்ற தளங்களைப் பயன்படுத்தி, சீன சந்தைக்கு அதிக பிரீமியம் இந்திய தயாரிப்புகளைக் கொண்டு வரவும், வர்த்தக பற்றாக்குறையை கூட்டுறவு உபரிகளாக மாற்றவும், அதிகமான இந்திய நிறுவனங்களை நாங்கள் வரவேற்கிறோம்.'

'சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி போன்ற தளங்களைப் பயன்படுத்தி சீன சந்தைக்கு அதிக பிரீமியம் இந்திய தயாரிப்புகளைக் கொண்டு வரவும், வர்த்தக பற்றாக்குறையை கூட்டுறவு உபரிகளாக மாற்றவும் அதிக இந்திய நிறுவனங்களை நாங்கள் வரவேற்கிறோம்.' | புகைப்பட உரிமை: ராய்ட்டர்ஸ்

அஉலகப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கு கடுமையான அடியைச் சந்தித்த நிலையில், சீனப் பொருளாதாரம் என்ற மாபெரும் கப்பல் மீண்டும் அதன் வலுவான மீள்தன்மையை நிரூபிக்கிறது, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025 ஆம் ஆண்டில் 140 டிரில்லியன் யுவானை (தோராயமாக $20 டிரில்லியன்) தாண்டியுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 5% அதிகரிப்பைக் குறிக்கிறது. உலகப் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்களிப்பு சுமார் 30% ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கடின உழைப்பால் பெற்ற சாதனை குறிப்பிடத்தக்க உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய நண்பர்கள் கவலைப்படும் பல குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன காரணம்?

2025 ஆம் ஆண்டில், சீனாவின் பொருளாதாரம் நுகர்வு, ஏற்றுமதி மற்றும் முதலீட்டால் உந்தப்பட்டு முன்னேறியது, ஆனால் அதன் உள் அமைப்பு ஒரு ஆழமான மற்றும் நேர்மறையான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.

 

சீனாவின் வளர்ச்சிக்கான முதன்மை இயந்திரம் உள்நாட்டு தேவை. 2025 ஆம் ஆண்டில், இறுதி நுகர்வு செலவு பொருளாதார வளர்ச்சிக்கு 52% பங்களித்தது. சீன பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உலக சராசரியை விட கணிசமாகக் குறைவாக இருப்பதால் சீனாவில் "போதுமான நுகர்வு இல்லை" என்று சிலர் முடிவு செய்யலாம். உண்மையில், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடல் நுகர்வு தரநிலைகளால் அளவிடப்படும் சீனா, மொத்த அடிப்படை நுகர்வு அடிப்படையில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது. இவற்றில், ஒரு நபருக்கு சொந்தமான சராசரி மொபைல் போன்களின் எண்ணிக்கை 1.28 ஆகும், இது உலகின் முன்னணி நிலைகளில் ஒன்றாகும். சராசரி தினசரி புரத உட்கொள்ளல் 124.6 கிராம் ஆகும், இது அமெரிக்கா மற்றும் ஜப்பானை விட அதிகமாகும். சராசரி ஆண்டு காய்கறி நுகர்வு 109.8 கிலோகிராம் ஆகும், இது உலகிலேயே மிக அதிகம்.

சீனாவின் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதிகள் வலுவான மீள்தன்மையை வெளிப்படுத்தின, பொருளாதார வளர்ச்சிக்கு 32.7% பங்களித்து ஒரு முக்கிய ஊக்கியாக மாறியது. சாதகமற்ற சர்வதேச வர்த்தக சூழல் இருந்தபோதிலும், 'சீனாவில் தயாரிக்கப்பட்டது', குறிப்பாக உயர் தொழில்நுட்ப பொருட்கள், அதன் முழுமையான தொழில்துறை சங்கிலி மற்றும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட புதுமை திறன்கள் காரணமாக பரவலாக பிரபலமடைந்தன, உயர் தொழில்நுட்ப தயாரிப்பு ஏற்றுமதிகள் ஆண்டு முழுவதும் 13.2% வரை வளர்ந்தன. ஆசியான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற முக்கிய சந்தைகளுக்கான ஏற்றுமதிகள் நிலையான வளர்ச்சியைப் பராமரித்தன, மற்ற பிராந்தியங்களில் சந்தை ஏற்ற இறக்கங்களை திறம்பட ஈடுசெய்தன.

இதற்கு நேர்மாறாக, மொத்த மூலதன உருவாக்கம் வளர்ச்சிக்கு 15.3% பங்களித்தது, இது சீனப் பொருளாதாரம் வளர்ச்சி இயந்திரங்களின் கடினமான ஆனால் அவசியமான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது: முதலீடு மற்றும் ஏற்றுமதிகளை நம்பியிருப்பதில் இருந்து உள்நாட்டு நுகர்வு முன்னிலை வகிக்கும் ஒரு சிறந்த மாதிரியாக மாறுதல், அதே நேரத்தில் ஏற்றுமதி மற்றும் புதுமை உத்வேகத்தை சேர்க்கிறது. இந்த மாற்றத்தின் மத்தியில், AI, குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் மூளை-கணினி இடைமுகங்கள் போன்ற அதிநவீன துறைகளில் முன்னேற்றங்கள் தொடர்ந்து அடையப்பட்டுள்ளன. சர்வர்கள் மற்றும் தொழில்துறை ரோபோக்கள் உட்பட உயர்நிலை உற்பத்தியின் வெளியீடு விரைவான வளர்ச்சியைப் பராமரித்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மற்றும் சுத்தமான ஆற்றல் போன்ற பசுமைத் தொழில்கள் செழித்துள்ளன. இந்த வளர்ந்து வரும் இயக்கிகள் சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலப் போக்கை தெளிவாக கோடிட்டுக் காட்டுகின்றன.

ஏன் ஏற்றுமதி உற்பத்தி திறன்?

சீனா "அதிகப்படியான திறனை" ஏற்றுமதி செய்யவில்லை, மாறாக வளரும் நாடுகளால் பரவலாக வரவேற்கப்படும் உயர்தர உற்பத்தி திறன் மற்றும் மேம்பட்ட தீர்வுகளை ஏற்றுமதி செய்கிறது. விநியோகப் பக்கத்திலிருந்து, சீனாவில் "அதிகப்படியான திறன்" இல்லை. 2025 ஆம் ஆண்டில், சீனாவின் நியமிக்கப்பட்ட அளவிற்கு மேல் உள்ள தொழில்துறையின் திறன் பயன்பாட்டு விகிதம் 74.4% ஆக இருந்தது, இது அனைத்து துறைகளிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திறன் பயன்பாட்டு விகிதத்திற்கு சமம். சீன தயாரிப்புகளின் உலகளாவிய போட்டித்தன்மை, மானியங்கள் அல்லது குப்பைகளை விட நீண்ட கால, அதிக தீவிரம் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீடு, வலுவான உள்நாட்டு போட்டி மற்றும் மிகவும் விரிவான தொழில்துறை அமைப்பிலிருந்து உருவாகிறது.

தேவைப் பக்கத்திலிருந்து, சீனாவின் உற்பத்தித் திறனின் செழிப்பான வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள அடிப்படை உந்து சக்தி உலக சந்தையின் உண்மையான தேவையாகும். பல வளரும் நாடுகள் தங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளன, ஆற்றல் மாற்றத்தை அடைந்துள்ளன மற்றும் உயர்தர சீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொழில்மயமாக்கலில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் சுட்டிக்காட்டியபடி, சீன உற்பத்தியை "அதிகப்படியான திறன்" என்று மேற்கத்திய முத்திரை குத்துவது "பொறாமையால்" ஏற்படுகிறது.

சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைத்தல்

சீனாவின் சுங்கத்துறை பொது நிர்வாகத்தின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் சீனா-இந்தியா வர்த்தகம் வரலாற்று உச்சமாக 155.6 பில்லியன் டாலர்களை எட்டியது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்கள் இந்தியாவிற்கு மிகவும் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் கூறுகள் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தவை. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பொருளாதார நிரப்புத்தன்மையையும் ஒத்துழைப்புக்கான பெரும் ஆற்றலையும் முழுமையாக நிரூபிக்கிறது.

இதற்கிடையில், சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதிகள் நேர்மறையான வேகத்தைக் காட்டி, 2025 ஆம் ஆண்டில் $19.7 பில்லியனை எட்டியுள்ளன, மேலும் ஆண்டுக்கு ஆண்டு 9.7% அதிகரிப்பைக் குறிக்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், 2025 ஆம் ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் வளர்ச்சி விகிதங்கள் குறிப்பாக வலுவாக இருந்தன, முறையே 90% மற்றும் 67% ஐ எட்டின. சீனா ஒருபோதும் வேண்டுமென்றே வர்த்தக உபரியைப் பின்பற்றவில்லை, மேலும் உலகின் தொழிற்சாலையாக மட்டுமல்லாமல் உலகின் சந்தையாகவும் இருக்க விரும்புகிறது. சர்வதேச தரத்தின்படி சீனாவின் கட்டண அளவு 7.3% இல் குறைவாகவே உள்ளது. வெளிநாட்டு முதலீட்டு அணுகலுக்கான எதிர்மறை பட்டியல் தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளது, மேலும் சீனாவின் விசா இல்லாத கொள்கை விரிவடைந்து வருகிறது. குறிப்பாக, மத்திய பொருளாதார பணி மாநாடு 2026 ஆம் ஆண்டில் பொருளாதாரப் பணிகளுக்கான முதன்மை முன்னுரிமையாக "உள்நாட்டு தேவை விரிவடைவதை" அடையாளம் கண்டுள்ளது. நடுத்தர வருமானக் குழுவில் 400 மில்லியனுக்கும் அதிகமானோர் உட்பட, 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன், சீனா உயர்தர இந்திய தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது.

சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி போன்ற தளங்களைப் பயன்படுத்தி சீன சந்தைக்கு அதிக பிரீமியம் இந்திய தயாரிப்புகளைக் கொண்டு வரவும், வர்த்தக பற்றாக்குறையை கூட்டுறவு உபரிகளாக மாற்றவும், அதிக இந்திய நிறுவனங்கள் வருவதை நாங்கள் வரவேற்கிறோம். ஒருவருக்கொருவர் நோக்கி நகர்வதன் மூலம், வளர்ச்சியின் ஈவுத்தொகையைப் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் ஆசியாவிற்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை கூட்டாக உருவாக்கலாம்.

இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹாங்

https://www.thehindu.com/opinion/op-ed/the-new-logic-of-the-chinese-economy/article70560664.ece

கூகிள் மூலம் மொழியாக்கம்

 

59 இனச் சிறுபான்மை வறுமை ஒழிப்பின் முறைகளும் பயன்களும்

அ.பாக்கியம் சென்ற தொடரில் இனச் சிறுபான்மையினர் மக்கள் மத்தியில் நிலவிய வறுமை ஒழிப்பதற்கான ஆய்வுகளையும் , ஆய்வுகளின் அடிப்படையில் பெறப்பட...