கு.மனோகரன்
பொதுவுடைமை
கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி புரிந்து வரும் நாடுகளில்... குறிப்பாக, வல்லரசுகள்
வாயடைத்து நிற்கும் அளவிற்கு பொருளாதார வலிமையுடன், தீவிர
வறுமையை ஒழித்த உலகின் ஒப்பற்ற தேசமான சீனாவில் மதங்களுக்கும், வழிபாடுகளுக்கும் போதுமான அளவிற்கு சுதந்திரம் இல்லை என்று பொய்களை பரப்பி வருவோருக்கு, விடையையும் வியப்பையும் அளித்திடும் "வரலாற்று ஆவணமே" இந்நூல்.
சீனாவில் அனைத்து வகையான நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிப்பதோடு, வழிபாட்டு உரிமைகள் எவ்வாறு ஒழுங்கு படுத்தப்பட்டு சீரிய முறையில் இயங்கி
வருகிறது என்பதை, வரலாற்றுப் பின்புலத்துடன் விரிவாகவும்,
ஆர்வத்தை தூண்டும் எழுத்து நடையிலும் பதிவு செய்துள்ளார்
நூலாசிரியர். தோழர் அ.பாக்கியம் அவர்களின் "தேடலுக்கு" மேலும் ஒரு
சாட்சியமாய் நிற்கிறது இப்புத்தகம். அனைவரும் வாங்குவோம்! வாசிப்போம்! சோசலிச
நாடுகள் மீதான பொய்யுரைகளை தகர்ப்போம்!
மதம்
குறித்து மாமேதை மார்க்ஸ் அவர்களின் மதிப்பீட்டை முன்வைத்து துவங்குகிறது
புத்தகம். உதாரணமாக "மதம் மக்களின் அபின்" என்கிற வகையில், மார்க்சின்
கருத்தினை முழு புரிதலின்றி பேசித் திரிவோருக்கு, அதன்
முழுமையான விளக்கத்தினை அளித்து தெளிவு படுத்தியுள்ளது இப்புத்தகம்.
"மதம் ஒரு சமூக மயக்க மருந்து. மதம் சுரண்டலின் வலியை மழுங்கடித்து,
ஒடுக்குமுறை அமைப்பின் கீழ் வாழ்க்கையை தாங்கிக் கொள்ளக் கூடியதாக
மாற்றுகிறது. உழைக்கும் மக்களுக்கான சுகம் சொர்க்கத்தில் காத்துக் கிடக்கிறது.
எனவே, பூமியின் சூழ்நிலைகளை மாற்ற வேண்டிய அவசியம்
இல்லை" என்கிற கருத்தினை எளிமையாக விளக்கிடும் வகையில் தான், வலியை மறக்கச் செய்யும் போதைப் பொருளான அபினுடன் ஒப்பிட்டுப் பேசினார்
மார்க்ஸ். அதாவது, எளிய மக்களின் துன்ப துயரங்களுக்கான
காரணங்களை சிந்திக்கா வண்ணம் மதம் வினையாற்றுகிறது என்பதையே, வலி நிவாரணியான அபினுடன் ஒப்பிட்டுக் கூறினார். முதலாளித்துவத்திற்கு
மாற்றாக சோசலிசக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறை 1917ல் சோவியத் யூனியனில் நிகழ்ந்தது. அந்நாட்டில் மதத்தை கையாளுவதற்கான
வழிகாட்டியாய் இருந்தது மார்க்சின் கொள்கைகளே. மேலும், சோவியத்
யூனியனில் தோழர் லெனின், தோழர் ஸ்டாலின் ஆகியோர் மதங்களை
கையாண்ட விதத்தினை விளக்கமாக பதிவு செய்துள்ளது இந்நூல். இத்தகு பின்புலத்துடன்
சீனாவில் நுழைகிறார் நூலாசிரியர்.
பழங்காலத்தில்
சீனாவில் பெருந்தெய்வ வழிபாடோ,
கடவுள் வழிபாடோ கிடையாது. மதம் என்ற சொல் கூட கிடையாது. மூதாதையர்
வழிபாடு மற்றும் இயற்கை சார்ந்த வழிபாட்டு முறைகளே இருந்தன. இச்சூழலை
அடிப்படையாகக் கொண்டு கன்பியூசியஸ் என்பவர் வாழ்வியல் நெறிமுறைகளை ஒழுங்குபடுத்தி
மக்களிடையே போதிக்கும் பணிகளை மேற்கொள்கிறார். அதாவது... ஒழுக்கம், பெரியோர்களை மதித்தல், மூதாதையர் வழிபாடு, கூட்டுக் குடும்ப முறை, அரசனை மதித்தல் ஆகியவற்றை
வாழ்வியல் நெறிமுறைகளாக கடைபிடிக்குமாறு மக்களிடம் பரப்புரைகளை மேற்கொண்டார். இது
மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. 1911 வரை கன்பியூசியஸ்
தத்துவம் சீனாவில் பெரும் செல்வாக்குடன் இருந்தது. அதனைத் தொடர்ந்து
"மென்சியஸ், தாவோயிசம், மோஹிசம்,
சட்டவாதம்" என பல்வேறு தத்துவங்கள் சீனாவில் உதயமாகின. ஆனாலும்
கன்பியூசியஸ், தாவோயிசம் ஆகிய தத்துவங்கள் மட்டுமே
மக்களிடையே ஈர்ப்பினை உருவாக்கியது.
இந்நிலையில்
வணிகம் சார்ந்து "பெளத்தம்" சீனாவில் நுழைந்தது. துவக்கத்தில் மக்கள்
மத்தியில் பெளத்தம் வரவேற்பை பெறவில்லை. காரணம், துறவு வாழ்க்கையை அடிப்படைக்
கொள்கையாகக் கொண்ட பெளத்தத்தால்,
கூட்டுக் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து வந்த சீன மக்களை கவர முடியவில்லை.
ஆனால் பெளத்தத்திற்கு வணிகம் முக்கியமாக இருந்ததால், கன்பியூசியஸ்
தத்துவத்திலிருந்து சிலதை தனதாக்கிக் கொண்டதோடு, அமைப்பு
ரீதியாய் மக்களை அணி திரட்டியது. ஆகையால் தான் இன்றும் பெரும்பான்மை மதமாக
சீனாவில் பெளத்தம் இருந்து வருகிறது. பின்னர் 19 ஆம்
நூற்றாண்டின் இடைக்காலத்தில் "கிறிஸ்தவம், அதனைத்
தொடர்ந்து " இஸ்லாம்" ஆகியவையும் சீனாவிற்குள் நுழைந்தன.
கிறிஸ்தவத்தில் "கத்தோலிக்கம், புராட்டஸ்டன்ட்"
ஆகிய இரு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இவை எல்லாம் 1949 ஆம்
ஆண்டுக்கு முன்பு வரை மட்டுமே. அதற்குப் பின்னர் சீனாவின் நிலையில் தலைகீழ்
மாற்றம் உதயமானது. இது வரைக்குமான வரலாற்றினை உரிய தரவுகளோடும், சுவையோடும் எடுத்துக் கூறிய நூலாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சீனாவின்
சிவப்பு நட்சத்திரமான தோழர் மாவோ அவர்கள் "எங்கள் கடவுள் சீன தேசத்தின்
வெகுஜனங்களே தவிர, வேறு யாருமில்லை" என பிரகடனம் செய்து தனது பணிகளை துவக்குகிறார்.
மக்களுக்கான தேவைகள் பூர்த்தியாகும் போது மதங்களுக்கும், வழிபாடுகளுக்குமான
தேவை இருக்காது. அனைத்துத் தளங்களிலும் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து
செயல்படுத்தியதோடு, பகுத்தறிவு பரப்புரைகளையும் சீன
கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. அதே நேரத்தில், மதத்தின்
பால் நம்பிக்கை இருப்போரின் வழிபாட்டுக்கான வசதிகளையும் ஒழுங்கமைத்து வழங்கியது
சீன அரசு. இன்று வரை, பெளத்தம், கன்பியூசியம்,
தாவோயிசம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய ஐந்து மதங்கள் சீனாவில் சுதந்திரமாய் செயல்பட்டு வருகின்றன.
சீன அரசியல் சட்டம் 36-வது பிரிவின் கீழ் இவை
முறைபடுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பொறுப்பற்ற முறையிலும், பொது சமூகத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் மதம் சார்ந்த
நிகழ்வுகளுக்கு சீனத்தில் இடமில்லை. இவைகள் எல்லாம் எவ்வாறு ஒழுங்குபடுத்தப் பட்டன
என்பது குறித்து வாசிக்கும் போது, நிச்சயம் வாசகர்களுக்கு
மலைப்பை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இப்போது ஒரு கேள்வி இயல்பாய்
எழும். சீனா எனும் சோசலிச தேசத்தில் "பகுத்தறிவு" கொள்கைகள்
மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லையா? என்பதே. அப்படியொரு
கேள்வி எழுவதற்கான தேவை எழாவண்ணம் இப்புத்தகம் அமைந்துள்ளது தான் ஆகச்சிறப்பாகும்.
2018 -
2020 கணக்கீட்டின் படி, 142 கோடி மக்கள்
தொகை கொண்ட சீனாவில் மத விசுவாசிகளாய் இருப்போர் 20 கோடி
பேர் மட்டுமே. மொத்தம் 1 லட்சத்து 44
ஆயிரம் வழிபாட்டுத் தலங்கள் சீனாவில் உள்ளன. பெளத்தக் கோயில்கள் 33 ஆயிரத்து 500. தாவோயிசக் கோயில்கள் 9 ஆயிரம். இஸ்லாம் மசூதிகள் 35 ஆயிரம். கத்தோலிக்க
சர்ச்சுகள் 6 ஆயிரம். புராட்டஸ்டன்ட் சர்ச் & ஒன்று கூடும் இடம் 60 ஆயிரம். மொத்தமுள்ள மத
விசுவாசிகளில் 18% பேர் பெளத்தத்தை பின்பற்றுபவர்கள்.
மொத்தம் 3 லட்சத்து 80 ஆயிரம் மத
குருக்கள் உள்ளனர். பெளத்தம் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர். தாவோயிசம் 40 ஆயிரம் பேர். இஸ்லாம் 57 ஆயிரம் பேர். கத்தோலிக்கம் 8 ஆயிரம் பேர்.
புராட்டஸ்டன்ட் 57 ஆயிரம் பேர். இவைகள் தவிர்த்து இதரச்
சிற்சிறுப் பிரிவுகள் அனைத்தையும் சேர்த்து 5,500 மத
குருக்கள் உள்ளனர். 96.5% மதக் குருக்களுக்கு மருத்துவக்
காப்பீடு உள்ளிட்ட பாதுகாப்புத் திட்டங்களும் சீனாவில் இருந்து வருகின்றன. சீன
கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் "அறிவியல், விஞ்ஞானம்,
பகுத்தறிவு" பரப்புரைகளை தொடர் இயக்கமாய் செய்து வருவதன்
காரணமாகவும், சீன அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து
வருவதன் காரணமாகவும் மத விசுவாசிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சீனாவில் குறைந்து
கொண்டே வருகிறது. தற்போதைய சீனத்தின் அதிபர்
"ஜி ஜின் பிங்" பின்வருமாறு கூறுகிறார், அனைத்து
வகையிலும் சிறந்த வளர்ச்சி பெற்ற சோசலிச நடாக சீனாவை வளர்த்தெடுக்கவும், மக்களின் எண்ணங்களை முழுமையாக நனவாக்கவும், மத
நம்பிக்கை உள்ளோரையும் இணைத்துக் கொண்டு செயலாற்றி வருகிறோம். இச்செயல்பாடுகள்
மூலம் எதிர்காலத்தில் "மதங்களுக்கும், வழிபாடுகளுக்கும்"
தேவைப்படாத தேசமாக சீனா திகழும்.
"எல்லோருக்கும் எல்லாம்" கிடைக்கப்பெற்ற சமூகமாக உலக அரங்கில் சீனா
ஜொலிக்கும்.
நிறைவாக,
"ஒருவரின் மதக்
கருத்துகள், உங்கள் கருத்துடன் ஒத்துப் போகவில்லை என்றாலும்
கூட, அவரை நேசியுங்கள்"
இது
புத்தகத்தின் ஓரிடத்தில் வரும் மேற்கோள். இது போல் 19 மேற்கோள்கள்
புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இப்புத்தகத்தை வாசித்து முடிக்கும் தருணம், அனைவரின் மனதினுள் ஒரு பூரிப்புணர்வு தோன்றும். ஆம்! இயக்கவியல் பொருள்
முதல்வாதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி புரியும் சோசலிச நாடுகளில்
மட்டுமே "அனைத்துக் கருத்துகளுக்கும்" மதிப்பளிக்கப் படுகிறது என்கிற
பெருமிதமே அவ்வுணர்வு. இப்புத்தகத்தை வாசிக்கும் போது இன்னொரு உண்மையும்
வெளிப்படும். அது, இந்தியாவில் மதம் எவ்வளவு அரசியல்
மயமாகியுள்ளது என்பதேயாகும். மிக மிக பொருத்தமான நேரத்தில் இத்தனை நேர்த்தியுடன்
இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கும், வெளியீடு செய்துள்ள
பதிப்பகத்தாருக்கும் மீண்டுமொரு முறை புரட்சி வாழ்த்துகள்.
கு.மனோகரன்
தலைவர்
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்
சென்னைக்கோட்டம்-2
நூல்
கிடைக்கும் இடம்
சீன சோசலிசத்தில்
மதங்களும் வழிபாடுகளும்
ஆசிரியர்.
அ.பாக்கியம்
தூவல்கிரியேஷன்ஸ்
தமிழ்மார்க்ஸ் பவுண்டேஷன்
விலை
250. Gpay 94863
44333(vedhachala perumal)
சிந்தன்
புக்ஸ்
327 /1 திவான் சாஹிப் கார்டன்
டிடிகே
சாலை, ராயப்பேட்டை
சென்னை
600 014
செல்
பேசி: 9445123164
வடசென்னை
வாசி புத்தக நிலையம்
எண்:9, G.R. சாலை
பழைய
வண்ணாரப்பேட்டை
சென்னை-21
செல்
பேசி: +918508698507




