அ.பாக்கியம்
சென்ற
தொடரில் இனச் சிறுபான்மையினர் மக்கள் மத்தியில் நிலவிய வறுமை ஒழிப்பதற்கான ஆய்வுகளையும், ஆய்வுகளின் அடிப்படையில்
பெறப்பட்ட தரவுகளையும், அந்த தரவுகள் மூலமாக உருவாக்கப்பட்ட திட்டங்களைப்பற்றி
எழுதி இருந்தேன். அந்தத் திட்டத்தின் அடிப்படையில் வறுமை ஒழிப்பிற்காக செயல்பாட்டில்
இறங்கினார்கள். அவ்வாறு செய்த பொழுது அதற்கான பலன்கள் பளிச்சென வெளிப்பட்டது. 2013ம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுகள் வரை குறிப்பான சில
திட்டங்களை அமலாக்க முயற்சி செய்தனர்.
இதுவரை
பொதுவான வறுமை ஒழிப்பு திட்டங்களில் இருந்து இலக்கு சார்ந்த வறுமை ஒழிப்பு என்ற அடிப்படையில்
திட்டங்கள் துல்லியப்படுத்தப்பட்டது. இந்த புதிய திட்டத்தின்படி தற்போது உள்ள வறுமை
ஒழிப்புத் திட்டங்களை சீர்படுத்தி வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒரு முன்மாதிரிகளை
உருவாக்க வேண்டும் என்று முடிவு எடுத்தனர். ஒவ்வொரு பிரதேசங்களிலும் வறுமை ஒழிப்பிற்கான
சவாலாக உள்ள பிரச்சனைகளை சரியாக மதிப்பீடு செய்து அதற்கான திட்டங்களை துல்லியமாக வரையறை
செய்ய வேண்டும். இந்த இலக்கு சார்ந்த வறுமை ஒழிப்பு என்பது சீன அரசின் வறுமை
ஒழிப்புத் திட்டத்தின் குவிமயமாக இன சிறுபான்மை பகுதி மாறியது.
இலக்கு
சார்ந்த வறுமை ஒழிப்பு கொள்கை திட்டங்களை இனச் சிறுபான்மை பகுதியில் அமலாக்கப்படுவதை
மதிப்பீடு செய்வதற்கான மேலாண்மை அமைப்புகளை உருவாக்கினார்கள். மேற்கண்ட அமைப்புகள்
மதிப்பீடு செய்து வறுமை ஒழிப்பு திட்டங்களை பல்வேறு ஏழை மக்களின் நிலைமைகளுக்கு ஏற்ப
அளவுகோலை தீர்மானித்து திட்ட செயல்பாட்டை வடிவமைத்தார்கள். இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில்
கிடைத்த அனுபவங்களை தொகுத்து 2018 ஆம் ஆண்டு இலக்கு சார்ந்த வறுமை ஒழிப்பு திட்டம் இலக்கு சார்ந்த தீவிர
வறுமை ஒழிப்பு திட்டம் என்று மாற்றியமைக்கப்பட்டது. இந்த தீவிர வறுமை ஒழிப்பு திட்டத்தின்
கீழ் 2020 ஆம் ஆண்டுக்குள் வறுமையை முற்றிலும் ஒழித்து விட வேண்டும்
என்ற இலக்குடன் செயல்கள் விரைவு படுத்தப்பட்டன.
இந்தத்
திட்டத்தின்படி வறுமை ஒழிப்பில் உற்பத்தி,
வேலை வாய்ப்பு, இடமாற்றம், மீள்குடியேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி மேம்பாடு, வாழ்வாதார உதவித்தொகை போன்ற திட்டங்களையும்
உள்ளடக்கி செயல்பட ஆரம்பித்தார்கள். இந்தத் திட்டங்களின் வெற்றிக்காக சமூகத்தின் அனைத்து
சக்திகளையும் அணி திரட்டினார்கள். இதுவரையில் கிராம அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட
பணிகள் இலக்கு சார்ந்த தீவிர வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு
வீடுகளையும் நோக்கி அமுலாக்க கூடிய முறையில் செயல்கள் துல்லியமாக விரிவுபடுத்தப்பட்டது.
இதற்கான செயல்பாட்டு முறைகளும் உதவிகளும் வடிவமைக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு இலக்கு சார்ந்த வறுமை ஒழிப்பு திட்டத்தை அறிவிக்கிற பொழுது 5 புதிய கொள்கைகளை திட்டத்தின் வழிகாட்டியாக அமைத்துக் கொண்டார்கள். அவைகள்
முறையே புதுமை, ஒருங்கிணைப்பு, பசுமை,
பகிரங்கத் தன்மை, பகிர்ந்து கொள்ளுதல் போன்றவைகள்
ஆகும். நாடு முழுவதும் உள்ள வறுமை ஒழிப்பிற்கு வழிகாட்டியாக அமைக்கப்பட்ட இந்த ஐந்து
விதிகள் இனச் சிறுபான்மை பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் விளைவாக வறுமையில்
வாடிய மக்களின் வாழ்வாதாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டது.
2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுகள் வரை சீனாவின் இனச்
சிறுபான்மை பகுதிகளில் வாழ்ந்த ஏழை மக்களின் தனிநபர் வருமானம் வியத்தகு மாற்றங்களை
பெற்றது. 2016 இல் 4,639 யுவான் வருவாயிலிருந்து
2020 ஆம் ஆண்டு 10,770 என்ற அளவில் அதாவது
156 சதவிகிதம் அதிகரித்தது. 2018 ஆம் ஆண்டு
இலக்கு சார்ந்த தீவிர வறுமை ஒழிப்பு திட்டம் துவங்கிய காலத்தில் இன சிறுபான்மையினர்
வசிக்கும் பகுதிகளில் நான்கு சதவீத மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே இருந்தார்கள். இந்த
எண்ணிக்கை என்பது சீன தேசிய அளவைவிட 1.7 சதவிகிதம் அதிகமாகும்.
2019 ஆம் ஆண்டில் இன சிறுபான்மை பகுதிகளில் வறுமைக்கு எதிரான போராட்டம் இறுதிக்
கட்டத்தை அடைந்த பொழுது இந்தப் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்தவர்கள் எண்ணிக்கை
தேசிய சராசரியைவிட 0.19 அளவாக குறைந்தது. அதாவது ஒரு வருடத்தில்
1.7 சதவீதத்திலிருந்து 0.19 சதவீதத்திற்கு
குறைக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு இலக்கு சார்ந்த தீவிர வறுமை
ஒழிப்பு திட்டத்தின் கீழ் முழுமையான அளவு வறுமை ஒழிக்கப்பட்டு வெற்றி காணப்பட்டது.
இவை ஒட்டுமொத்த இனச் சிறுபான்மை பகுதிகளின் பொதுவான விவரங்கள் ஆகும். கீழே சில பிரதேசங்களை
மட்டும் குறிப்பான தன்மைகளை சுட்டிக்காட்டலாம்.
தெற்கு
ஜின்ஜியாங்க் மாகாணத்தில் வறுமையால் பாதிக்கப்பட்ட 976 கிராமங்களிலும் தீவிர வறுமை ஒழிப்பு நிறைவேற்றப்பட்டது.
2017 ஆம் ஆண்டு வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்த மக்களின் சதவீதம்
மேற்கண்ட குறிப்பிட்ட பகுதிகளில் 18.3 சதவீதமாக இருந்தது. 2018 ஆம் ஆண்டு இலக்கு சார்ந்த தீவிர வறுமை ஒழிப்பை அமுல்படுத்திய பொழுது 10.51 சதவிகிதமாக குறைந்தது. மேலும் செயல்கள் தீவிர படுத்தப்பட்டு 2019 ஆம் ஆண்டில் 1.2 சதவீதமாக குறைக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு இந்தப் பகுதி முழுமையாக வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டது.
மற்றொரு
இனச் சிறுபான்மை தன்னாட்சி பிரதேசமான திபெத் மாகாணத்தில் 55 மாவட்டங்களில் 4714 கிராமங்கள் வறுமைக் கோட்டின் கீழே இருந்தது. இவற்றை குறிவைத்து தீவிர வறுமை
ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தப் பகுதியில் இருந்து 4,78,000 மக்கள் வறுமைக்கோட்டில் இருந்து மூன்று ஆண்டுகளில் மீட்டெடுக்கப்பட்டார்கள்.
இந்த வறுமை ஒழிப்பு திட்டத்தில் இதுவரை எங்கும் கடைபிடிக்கப்படாத புதிய உத்தி ஒன்று
திபெத் பகுதியில் அமலாக்கப்பட்டது. திபெத் பகுதி உலகில் உயரமான பகுதி. எளிதில் அணுக
முடியாத உயரத்தில் கடினமான சீதோசன நிலையில் போக்குவரத்து பாதைகள் கடின முயற்சி எடுத்தாலும்
அமைக்க முடியாத பகுதிகளில் 965 கிராமங்கள் இருந்தது. இந்த கிராம
மக்கள் காடுகளின் உணவு சேகரிப்பு வாழ்க்கையில் இருந்தார்கள். எனவே வறுமை இவர்களின்
வாடிக்கையான செயலாக இருந்தது. அதே இடத்தில் இந்த மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி
செய்வதோ, வறுமை ஒழிப்பதோ சாத்தியமற்றதாக இருந்தது.
எனவே
965 கிராமங்களையும் இடம் மாற்றம் செய்து உயரம் குறைவான இடங்களுக்கு இடம்பெயர செய்து
புதிய வீடுகளை கட்டிக் கொடுத்தது மட்டுமல்ல வேலை வாய்ப்புகள் சாலைகள் மற்ற அனைத்து
விதமான அணுகல்களையும் அமைத்துக் கொடுத்து வறுமையை ஒழித்தார்கள். இதன் மூலம் 2.66 லட்சம் மக்கள் வறுமைக்கோட்டில்
இருந்து மீட்கப்பட்டார்கள். இவ்வாறு ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு பகுதிகளும் இருக்கக்கூடிய
பிரத்தியேகமான நிலைமைகளை கணக்கில் எடுத்து முடிவுகள் அமலாக்கப்பட்டதால் இனச் சிறுபான்மை
பகுதிகளிலும் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டது.
அமைப்பும்
அர்ப்பணிப்பு மிக்க உழைப்பும்
இனச்
சிறுபான்மையினர் வாழக்கூடிய பிரதேசங்களில் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவது
மிகவும் சவால்மிக்க பணிகளாக இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன அரசாங்கமும் உயர்மட்ட
அமைப்புகளை உருவாக்கி இதை அமல்படுத்தினார்கள். திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் வறுமையை
ஒழிப்பதற்கான தனியான ஒரு தலைமை அலுவலகமே உருவாக்கப்பட்டது. வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் திபெத் பிராந்தியத்தின் நிலைகுழு உறுப்பினர் தலைமைப் பொறுப்பை
ஏற்றுக் கொண்டார். இந்த அமைப்பின் கீழ் பதினோரு சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு
பிராந்தியம் முழுவதும் நகரங்கள், மாவட்டங்கள், உள்ளூர் அளவுகளில் அமைப்புகளை உருவாக்கியது மட்டுமல்ல அதற்கான அலுவலகங்களையும்
உருவாக்கினார்கள். அனைத்து இடங்களிலும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இதற்கு நேரடியான
பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.
தெற்கு
ஜின்ஜியாங்க் மாகாணத்தில் உய்குர் தன்னாட்சி பகுதிகளில் இருந்த சீன மக்கள் குடியரசு
அரசாங்கம் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிகாரிகளையும், ஊழியர்களையும்
வறுமையால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். இவர்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்த கிராமங்களில் அவர்களை வறுமையில் இருந்து
மீட்டெடுக்கும் பணியினை செயல்படுத்தினார்கள். இந்தப் பகுதியில் 1289 கிராமங்கள் மிகக் கடுமையான வறுமையில் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த தரவுகளின்
அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை அனுப்பி உரிய காலத்தில் வறுமை ஒழிக்கப்பட்டது
என்பது இலக்கு சார்ந்த தீவிர வறுமை ஒழிப்பின் ஒரு வெற்றியாகும்.
மேற்கண்ட
1289 கிராமத்திற்கும்
ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்சியின் செயலாளர்களை நியமித்து வறுமை ஒழிப்பு என்ற திட்டத்தை
நிறைவேற்றினார்கள். இந்தப் பகுதியில் மட்டும் வறுமை ஒழிப்பிற்காக 31 துறை அளவிலான அதிகாரிகளையும், 869 பிரிவு அளவிலான அதிகாரிகளையும்
389 துணை நிலை ரிசர்வ் அதிகாரிகளையும் அனுப்பி வைத்து பணியாற்றினார்கள்.
இவ்வாறு வறுமை ஒழிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எந்திரகதியான முறையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
வறுமை ஒழிக்க கூடிய கிராமங்களில் இருக்கக்கூடிய மக்கள் இனச் சிறுபான்மை மக்கள் அவர்கள்
பேசக்கூடிய மொழி அவர்களின் தாய்மொழியாகும் எனவே இங்கு அனுப்பப்பட்டவர்கள் இரு மொழி
திறன் கொண்டவர்கள் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த துல்லியமான நடவடிக்கையின்
மூலமாகத்தான் மேற்கண்ட 1289 கிராமங்களில் வறுமை ஒழிக்கப்பட்டது. இதே போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் சிச்சுவான் மாகாணத்தில் 5,700 க்கு மேற்பட்ட அதிகாரிகள் பத்துக்கு மேற்பட்டு பிரிவுகளாக பிரித்து அனுப்பப்பட்டு
வறுமை ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வெற்றி கண்டார்கள்.
இவை
தவிர கிங்காய், யுன்னான், குவாங்சி, நிங்சியா,
உள் மங்கோலியா போன்ற பிரதேசங்களில் வறுமை ஒழிப்பிற்கான பிராந்திய அளவிலான
அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அதே நேரத்தில் மேற்கண்ட மாகாணங்களில் வறுமை
ஒழிப்பை நிறைவேற்றுவதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்து நிலை செயலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
மாகாண செயலாளர் ஒட்டுமொத்தமான இலக்குகளை நிர்ணயித்து முடிவுகளை கண்காணிப்பார். நகராட்சி
நிலை செயலாளர் மாவட்ட அளவிலான செயல்பாடுகளை வழிநடத்துவார். மாவட்ட அளவிலான செயலாளர்.
நிதி ஒதுக்கீடு உட்பட முன்னணி களப்பணியில் செயல்படக்கூடிய நபராக இருப்பார். டவுன்ஷிப்
செயலாளர் கிராமங்கள் மற்றும் வீடுகளுடன் தொடர்புகளை முறையாக ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவார்.
கிராம
நிலையில் உள்ள செயலாளர் தனிப்பட்ட குடும்பங்களில் நேரடியான தொடர்பை ஏற்படுத்தி பணியாற்றுவார்.
மேற்கண்ட 5 செயலாளர்களும் வறுமை ஒழிப்பு முயற்சிக்கான பொறுப்புக் கடிதத்தில் கையெழுத்திட
வேண்டும். இந்தத் திட்டம் மத்திய தலைமையில் இருந்து கிளைச் செயலாளர் வரை கட்டமைக்கப்பட்ட
ஒரு கட்டளை சங்கிலியை உருவாக்கியது. வறுமை ஒழிப்பு திட்டத்தில் நடைபெறக்கூடிய
விதி மீறல்கள் போன்றவற்றை தடுப்பதற்காகவே இப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு அமைப்ப
ரீதியான பொறுப்புக்கள் நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இந்த பொறுப்புக்கள்
நிறைவேற்றப்பட்டதன் விளைவாகவே வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டது.
செயல்பாட்டுக்
கிடையே தொடர்ந்த ஆய்வுகள்
இனச்
சிறுபான்மையினர் மத்தியில் வறுமை ஒழிப்புக்கான திட்டங்கள் ஒருபுறம் அமலாக்கி கொண்டே
இருப்பார்கள். அதே நேரத்தில் திட்ட அமலாக்கம் குறித்த மதிப்பீடு செய்வதற்கான பணிகள்
துல்லியமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த இரண்டையும் கடந்து தனிப்பட்ட முறையில்
பல அறிஞர்கள் வறுமை ஒழிப்பின் நடவடிக்கைகளை பற்றிய ஆய்வுகளையும் செய்து பகிரங்கமாக
வெளியிட்டு வந்தார்கள். குறிப்பாக லி ஜூவோ,
ஜூவோ டிங் என்ற இரண்டு அறிஞர்கள் பாலின லென்ஸ் என்ற முறையில் தங்கள்
ஆய்வுகளை வெளியிட்டார்கள். இன சிறுபான்மை பகுதிகளில் வறுமை ஒழிப்பு திட்டங்கள் அமலாக்குகின்ற
பொழுது பாலின ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கண்டறிந்தார்கள்
பெண்களின் வறுமையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும்,
கடுமையாக வறுமையில் வாடும் பெண்களில் குறிப்பிட்ட தேவைகளை குறிவைத்து
பூர்த்தி செய்துதர வேண்டும் என்று தரவுகளை முன் வைத்தார்கள்.
இவை
அமலாவதற்காக வளர்ச்சித் திட்டங்களில் பெண்களின் தலைமை பாத்திரங்களை மேம்படுத்துவதும், பெண்களின் பங்கேறுப்பை
மையமாகக் கொண்ட வறுமை ஒழிப்பு வழிமுறைகளையும் முன்மொழிந்தவர்கள். இந்த முன்மொழிவுகள்
திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு அமலாக்கப்பட்டது.
இனச்
சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வறுமை ஒழிப்பில் கிராமப்புறங்களில் இருந்த
வசதி படைத்தவர்களை அல்லது உயர் அடுக்கினர்களை பயன்படுத்த வேண்டும் அல்லது ஈடுபடுத்த
வேண்டும். இந்தப் பகுதிகளில் வறுமை ஒழிப்பின் செயல் திறனை மேம்படுத்துவதில் கிராமப்புற
உயர் அடுக்கினர் குறிப்பிடத்தக்க தனித்துவமான பங்களிப்பை வழங்க முடியும் என்று ஆய்வுகளின்
முடிவுகள் வலியுறுத்தின. அவர்களின் முதலீடுகளை வறுமை ஒழிக்க பயன்படுத்தலாம் என்று ஆலோசனை
வழங்கினார்கள். அதே நேரத்தில் உயர் அடுக்கினர் வறுமை ஒழிப்பின் வளங்களை தங்களுக்கு
சாதகமாக பயன்படுத்துவார்கள் என்ற சந்தேகத்தையும் மற்றொரு சாரார் முன்வைத்தனர்.
மேற்கண்ட
கூறுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அமலாக்கு வதற்கான திட்டங்கள் உருவாக்கப் பட்டது.
இதற்காக கிராம மக்களிடையே குடிமை விழிப்புணர்வை வளர்க்க வேண்டும். அதே வேலையில் சுயராஜ்ய
சட்டம், நல்லொழுக்கம்
ஆகியவற்றின் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் ஒரு வலுவான கிராமப்புற அமைப்பை நிறுவ வேண்டும்
என்ற முடிவும் எடுக்கப்பட்டது,. இந்த நிர்வாக அமைப்பு உயரடுக்கினர்
வறுமை ஒழிப்பிற்கு உதவுவதும் அதற்கு எதிராக வளங்களை ஒதுக்கி கொள்வதை தடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.
வறுமை ஒழிப்பு திட்டங்கள் அமலாக்கப்பட்ட பொழுது நிர்வாக அமைப்புகளில் இருக்கக்கூடிய
பலம் பலவீனங்களை சமமான உரையாடல்கள் மற்றும் ஆலோசனைகள் மூலமாக சரி செய்து கொண்டார்கள்.
இனச்
சிறுபான்மை பகுதிகளில் வறுமை ஒழிப்புக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவது
மத நம்பிக்கைகள், கலாச்சார மரபுகளை முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும்,
படிப்படியாக மதங்களின் கருத்துக்களில் இருந்து மதச்சார்பற்ற மயமாக்கலை
வலியுறுத்த வேண்டும் என்ற அணுகுமுறைகளையும் கடைபிடித்தார்கள். அதே நேரத்தில் சீன தேசத்தை
சேர்ந்தவர்கள் என்ற அடையாள உணர்வை மேம்படுத்தவும் அதன் அடிப்படையில் வறுமை ஒழிப்பு
அதன் வட்டாரங்களில் ஈடுபாட்டை வழிநடத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதாவது இனம்
சார்ந்த உணர்வுகள், வட்டார உணர்வுகள் கணக்கில் எடுக்கப்பட்டாலும்
சீன தேசம் என்ற உணர்வு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்ற முறையில் திட்டங்கள்
அமலாக்கப்பட்டது.
வறுமை
ஒழிப்பு திட்டத்தில் ஈடுபடுகிற பொழுது ஏற்படுகிற தவறுகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி சரி
செய்து கொண்டு முன்னேறியது மட்டுமல்ல,
வறுமை ஒழிப்பு திட்டங்களை மீறக்கூடியவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளையும்
மேற்கொண்டார்கள். திட்டங் களை அமலாக்குகின்ற பொழுது அவற்றை அமலாக்காமல் இருப்பவர்கள்
அல்லது விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நூற்றுக் கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டு சீனா தனது சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புக் கொள்கையை
அறிமுகப்படுத்தியதிலிருந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக சீன கல்வியாளர்கள்
சீனாவின் இன சிறுபான்மை பகுதிகளில் வறுமை குறைப்பு குறித்த பயனுள்ள ஆய்வுகளை மேற்கொண்டு
வந்தனர். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சீனாவின் இன சிறுபான்மை பகுதிகளில் வறுமை குறைப்பு
நடைமுறைகளையும் திட்டங்களையும் வடிவமைப்பதில் மதிப்பு மிக்க வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.
அதே நேரத்தில் உலகளாவிய வறுமை நிர்வாக முயற்சிகளுக்கான குறிப்பான புள்ளியாகவும் முக்கியத்துவம்
வாய்ந்ததாகவும் அமைந்திருந்தது.
2020 ஆம் ஆண்டில் சீனா ஒட்டுமொத்த பிராந்திய வறுமையை வெற்றிகரமாக ஒலித்ததன் மூலம்
ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியது. வறுமைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மகத்தான
வெற்றியை வரலாற்றில் பதிவு செய்திருக்கிறது. வறுமை ஒழிப்பில் இருந்து கிராமப்புற மறுமலர்ச்சிக்கு
வழிவகுக்கும் பாதை, சீன குணாதிசயங்களுடன் சோசலிசத்தை முன்னேற்றுவதற்கும்,
வறுமையை ஒழிப்பதற்கும், மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும்,
படிப்படியாக பொதுவான செழிப்பை அடைவதற்கும் இன்றியமையாத பாதையாக வறுமை
ஒழிப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சோசலிசத்தை அடைவது பட்டுக்கம்பலத்தில் நடப்பதல்ல பல
படிப்பினைகளோடு களமாற்றங்களை உருவாக்குவது என்பதை சீன சோசலிச முறைகள் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.
அ.பாக்கியம்




