அ.பாக்கியம்
1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட காலத்தில் இருந்து
உருவாக்கப்பட்ட கல்வி வளர்ச்சித் திட்டங்களில் இனச் சிறுபான்மையினருக்கான கல்வி
திட்டம் என்பது ஒரு முக்கிய அங்கமாக மாறியது. முதல் 50
ஆண்டுகள் வரை அதாவது 1998 ஆம் ஆண்டு வரை இனச்
சிறுபான்மையினர் கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றங்களை பெருமைமிகு வளர்ச்சியாக சீன
மக்கள் குடியரசும் இனச் சிறுபான்மையினரும் கருதுகின்றனர்.
1997 ஆம் ஆண்டு தரவுகளின் படி 18.15 மில்லியன் இனச்
சிறுபான்மை மாணவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக உள் மங்கோலியா, நிங்சியா,
ஜின்ஜியாங், திபெத், கிங்காய்,
குவாங்சி, குய்சோ மற்றும் யுன்னான் ஆகிய
சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பிரதேசங்களில் படிக்கும் வயதுடைய மொத்த குழந்தைகளின்
சேர்க்கை விகிதம் 97.65 சதவீதமாக உயர்ந்தது. இதே பகுதிகளில்
பெண்களின் சேர்க்கை விகிதம் அதுவரை இல்லாத அளவிற்கு 97.05%
என்ற அளவில் உயர்ந்தது என்றால் மாற்றங்களின் வேகத்தை நம்மால் புரிந்து கொள்ள
முடிகிறது.
ஏற்றம் பெற்ற கல்வி
நிலையங்கள்
இனச்
சிறுபான்மை மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு விதமான கல்வி
நிலையங்கள்உருவாக்கப்பட்ட . 1997ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட வகையில் கல்வி நிலையங்கள்
செயல்பட்டு வந்தது. 101 உயர்கல்வி பொதுப்பள்ளிகள்
செயல்பட்டன. இந்தப் பள்ளிகளில் இளங்கலை பட்டங்கள், அதற்கு
ஏற்பட்ட படிப்புகளையும் வழங்கும் பாடத்திட்டங்கள் அமைந்திருந்தது. இந்த பள்ளிகளின்
நோக்கம் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் இனச்
சிறுபான்மை மாணவர்கள் செல்வதற்கான படிப்பு முறைகள் இருந்தன. ஜூனியர் மற்றும்
சீனியர் உயர்நிலைப் பாடங்களை கற்றுக்
கொடுக்கக்கூடிய 11,563 நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டது.
குழந்தைகளுக்கு அடிப்படையான கட்டாய கல்வியை வழங்கக்கூடிய 1,03,139 தொடக்கப் பள்ளிகள் இருந்தன. இனச் சிறுபான்மை யினருக்கான கலாச்சாரங்கள்
மொழிகள் போன்றவற்றில் பயிற்சி அளிப்பதற்காக இனச் சிறுபான்மை பிராந்தியங்களில்
பணிபுரிவதற்கான ஊழியர்களையும் நிபுணர்களையும் உருவாக்கக்கூடிய 12க்கும் மேற்பட்ட சுயாதீனமான தேசிய நிறுவனங்கள் செயல்பட்டன. 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி பள்ளிகள் உயர்நிலைக் கல்வியை
போதிப்பதற்காக உருவாக்கப்பட்டு இருந்தது.
மழலையர்
பள்ளிகளுக்கும் தொடக்கப் பள்ளிகளுக்கும் தேவையான அளவு ஆசிரியர்களை உருவாக்கக்கூடிய
நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதே
நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கு தொழிற்கல்வி பயிற்றுவிக்கப் பட்டது. 2900க்கு மேற்பட்ட
தேசிய இன உறைவிட பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்தது. சிறுபான்மை மாணவர்களுக்கான இன
மொழி கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பாடத்திட்டங்கள் இந்த உறைவிடப் பள்ளிகளில்
கற்பிக்கப்பட்டன.
300க்கும் மேற்பட்ட தேசிய இன தொழில்முறை நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டது.
இந்த தொழில்முறை நடுநிலைப் பள்ளிகளில் சிறுபான்மை பிராந்தியங்களுக்கான பொருளாதாரத்
தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப பயிற்சியும், தொழிற்கல்வி
பயிற்சியும் இவற்றில் வழங்கப்பட்டன. 2500 க்கு மேற்பட்ட
தேசிய இன தொடக்கப்பள்ளிகள் இருந்தது. சிறுபான்மை இன குழந்தைகளுக்கான தொடக்கப்
பள்ளிகளில் இனம் சார்ந்த மரபுகளையும்,
மொழிகளுடன் கூடிய பயிற்சிகளும் வழங்கப்பட்டன. மிக அதிகமான மேய்ச்சல்
நிலப்பகுதிகளும், மலைப்பகுதிகளும் இருக்கக்கூடிய 270 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு இந்தப் பகுதிகளில் 6
ஆயிரத்துக்கு மேற்பட்ட உறைவிட பள்ளிகளை உருவாக்கி இருந்தார்கள்.
மேற்கண்ட
அடிப்படையான கல்வி அமைப்புகள் தவிர மாணவர்கள் உயர்கல்வியில் நுழைவதற்கான கல்வி
தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய முறையில் 200க்கும் மேற்பட்ட சிறப்பு கல்வி நிறுவனங்களின் அமைத்திருந்தார்கள். சீன
மக்கள் குடியரசும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் எடுத்த முயற்சிகள் சிறுபான்மை மக்கள்
மத்தியில் கல்விச் சாதனைகளை உருவாக்கியது.
திபெத்தில் சிறப்பு
முயற்சிகள்
மிகவும்
கடுமையான இயற்கை சூழலை கொண்டிருந்த திபெத்திய பிராந்தியத்தில் பொருளாதார
வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்றால் கல்வி முறையில் வளர்ச்சி மிகவும்
அவசியமாக இருந்தது. சீர்திருத்த காலங்களுக்குப் பிறகு அதாவது 1984 ஆம் முதல்
திபெத்தில் இருக்கக்கூடிய மாணவர்கள் திபெத்திற்கு வெளியே வந்து உயர்கல்வியில்
பயிற்சி பெறுவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கினார்கள். அந்தத் திட்டத்தின்படி
பெய்ஜிங், தியான்ஜின், சோங்கிங்,
ஹெனான், ஹெபே, ஷான்டாங்,
ஜியாங்சு, ஷான்சி, ஹுனான்,
ஹூபே, அன்ஹுய், ஷான்சி
மற்றும் யுன்னான் ஆகிய இடங்களில் திபெத்தியர்களுக்காக சிறப்பு வகுப்புகளை
அரசாங்கம் நடத்தி வருகிறது.
திபெத்திற்கு
தேவையான திறமையாளர்களை பயிற்றுவிப்பதே இந்த கல்வி நிலையங்களின் நோக்கமாக இருந்தது.
பெரும்பாலான வகுப்புகள் தொழிற்கல்வியுடன் இணைந்து ஏழு ஆண்டுகள் கற்பிக்கப்பட்டது.
இந்தப் பள்ளிகளுக்கு 11 முதல் 14 வயதுடைய திபெத்திய குழந்தைகள் நுழைவுத்
தேர்வுகளில் தேர்ச்சி பெற்று படிக்க வருகிறார்கள். இவர்களுக்கான அனைத்து
செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. பட்டம் பெற்றதும் அவர்கள் அனைவரும்
திபெத்திற்கு வேலை செய்வதற்காக திரும்புகிறார்கள். தங்களது படிப்பை தொடர விரும்புகிற
ஒரு சிலருக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்படுகிறது. மற்றவர்கள் திபெத்திற்கு
வந்து பணிபுரிய வேண்டும் என்ற முன்னுரிமையில் இந்தப் பள்ளிகள் நடத்தப்பட்டன.
சீனாவின்
வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் பொருளாதார ரீதியாக வறுமையில் இருந்த மாவட்டங்களில்
உள்ள இனச் சிறுபான்மையினர் கல்வி வளர்ப்பதற்கு பெரும் உதவி செய்தார்கள். சுமார் 80க்கும் மேற்பட்ட
நடுநிலைப் பள்ளிகளுக்கும் துவக்கப் பள்ளிகளுக்கும் நிதி உதவி செய்தனர். 4000 மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உதவி செய்ததுடன் இடையில்
நின்று போகும் மாணவர்களை மீண்டும் படிக்க வைப்பதற்கான உதவிகளையும், லட்சக்கணக்கான மதிப்புகள் உடைய கற்பித்தல் பொருள்களையும் வழங்கி இனச்
சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வியை மேம்படுத்த ஊக்கப்படுத்தினார்கள். கல்வியில்
மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இந்தக் கொள்கை கடைபிடிக்கப்படுகிறது.
சீனாவின்
மக்கள் தொகை அடிப்படையில் இனச் சிறுபான்மையினர் ஒன்பது(8.89) சதவீதம்
மட்டுமே. 1949 ஆம் ஆண்டு உயர்கல்வி சேர்க்கையில் இன
சிறுபான்மையினர் ஒரு சதவீதம் மட்டுமே இருந்தனர். 2000 ஆண்டு
இந்த எண்ணிக்கை ஆறு சதவீதமாக உயர்ந்தது. பல்கலைக்கழக சேர்க்கை அடிப்படையில்
பார்க்கின்ற பொழுது 2000ம் ஆண்டிலும் உயர்கல்வியில் இனச்
சிறுபான்மையினர் ஒட்டுமொத்த சீனாவுடன் ஒப்பிடுகிற பொழுது பின்தங்கி இருந்தனர். 2015 ஆம் ஆண்டு சீன அமைச்சரவை இனச் சிறுபான்மை கல்வியின் வளர்ச்சியை
துரிதப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து திட்டங்களை உருவாக்கியது.
2020 ஆம் ஆண்டிற்குள் இனச் சிறுபான்மை பகுதிகளில் கல்வியின் வளர்ச்சி
ஒட்டுமொத்தமான தேசிய கல்வி வளர்ச்சிக்கு நிகராக இருக்க வேண்டும் என்றும் அல்லது
அதைவிட அதிகமாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தனர். எந்த ஒரு சிறுபான்மை
பிராந்தியத்தையும் அல்லது சிறுபான்மையினரையும் பின்தங்க விடக்கூடாது என்றும்,
இனச் சிறுபான்மை கல்வியின் அனைத்து துறை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்பதை சீன கம்யூனிஸ்ட்
கட்சி செயல்படுத்த ஆரம்பித்தது. இந்த முயற்சியின் விளைவாக 2020 ஆம் ஆண்டில் இனச் சிறுபான்மையினரின் உயர்கல்வி அடைவு விகிதம் 8.93 சதவீதமாக உயர்ந்தது.
சிறுபான்மை இன மாணவர்களின்
சேர்க்கை அதிகரிப்பு
உதாரணமாக
அனைத்து மட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் இனச் சிறுபான்மை மாணவர்களின் எண்ணிக்கை 36 மில்லியனாக
உயர்ந்துள்ளது. இது சீனாவில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த மாணவர் எண்ணிக்கையில் 11.24 சதவீதமாகும். அனைத்து மட்டங்களிலும் உள்ள இனச் சிறுபான்மை ஆசிரியர்களின்
எண்ணிக்கை 1.57 மில்லியன் ஆக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை
சீனாவின் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில் 8.84% ஆகும்.
சீனாவின்
இனச் சிறுபான்மை மக்கள் தொகை விகிதமான 8.89 சதவீதத்துடன் ஒப்பிடுகிற பொழுது அதற்கு சமமான அளவில் கல்வி வளர்ச்சி
ஏற்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனையாகும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்,
சிறுபான்மை மாணவர்களின் சேர்க்கை விகிதமும் ஆசிரியர்களின்
எண்ணிக்கையும் ஹான் பெரும்பான்மையினரின் எண்ணிக்கை விட சதவீத அடிப்படையில் அதிகமாக
உள்ளது. அடிப்படைகல்வி மட்டத்தில் சிறுபான்மை மாணவர்களின் சேர்க்கை விகிதம் 11.83 சதவீதமும், குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகளில் 11.27 சதவீதமும், தொடக்கப் பள்ளிகளில் 12.41 சதவீதமும், இளநிலை தொழிற்கல்வி பள்ளிகளில் சேர்க்கை
விகிதம் 62.17 சதவீதமும் இருந்தது. குறிப்பாக மாணவர்களுக்கு
தொழிற்கல்வி அளிப்பதில் அரசு முன்னணியில் இருந்தது.
இனச்
சிறுபான்மை ஒட்டு மொத்த மாணவர்களின் செயற்கை விகிதம் 8.84 சதவீதமாக இருந்த
சூழலில், உயர்கல்வி துறையில் இனச் சிறுபான்மை மாணவர்களின்
சேர்க்கை விகிதம் 8.93 என்ற அளவில் இருந்தது. இது இனச்
சிறுபான்மை மக்கள் தொகை சதவீதத்தை விட அதிகமாகும்.
இளங்கலை
பட்டப்படிப்பு கல்வி நிலையங்களிலும்,
ஜூனியர் கல்லூரிகளிலும் இனச் சிறுபான்மையினரின் சேர்க்கை விகிதம் 10.01 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் முதுகலை பட்டப்படிப்பில் இனச் சிறுபான்மை
மாணவர்களின் சதவீதம் 5.57 மட்டுமே இருந்தது. இதேபோன்று இணைய
வழியில் வழங்கப்படும் பிற உயர்கல்வி
திட்டங்களில் சிறுபான்மை இனத்தவரின் சேர்க்கை விகிதம் 7.02 சதவீதமாக இருந்தது. 2020 ஆம் ஆண்டு இந்த இடைவெளியை
சமப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் சீன மக்கள் குடியரசு மேற்கொண்டது.
இனச் சிறுபான்மையினர்
ஆசிரியர்களின் உயர்வு
இனச்
சிறுபான்மை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்றால் ஆசிரியர்களின்
எண்ணிக்கை போதுமான அளவிற்கு இருக்க வேண்டும் அதிலும் குறிப்பாக இனச் சிறுபான்மை
பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் மூலமாகத்தான் இந்த முன்னேற்றத்தை காண முடியும் என்று
முடிவு செய்து அந்தத் துறையில் கவனம் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக 1978 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சிறுபான்மை இன ஆசிரியர்களின் ஒட்டு மொத்த
எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்தது.
2016 இல் தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் 10.16
சதவீதமும், நடுநிலைப் பள்ளிகளில் 9.15
சதவீதமும், மேல்நிலைப் பள்ளிகளில் 8.14
சதவீதமும், உயர்கல்வி நிறுவனங்களில் 5.93 சதவீதமும் இன ஆசிரியர்கள் பணிபுரிந்தார்கள். தனியார் உயர் கல்வி
நிறுவனங்களில் மொத்த ஆசிரியர்களில் 4.78 சதவீதம் ஆசிரியர்
இருந்தார்கள். குறிப்பாக இனச் சிறுபான்மையினர் கல்வி சமத்துவத்தை அடைவதற்கு
தனியாதுறையை அனுமதித்தாலும் அவைகளின் செயல்பாட்டில் போதுமான முன்னேற்றம் இல்லை
என்பதையும் இந்த விவரங்கள் காட்டுகிறது.
இனச்
சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சிக்கு ஒட்டுமொத்தமான கல்வி முதலீடு என்பதும் மிக
முக்கிய காரணமாகும். 2002 ஆம் ஆண்டு கல்விக்கு மொத்த தேசிய முதலீடு 548
பில்லியன் யுவானை எட்டியது. இது 1997 இல் 253.2 பில்லியன் யுவான்கள் ஆகும். அதாவது 116.5%
வளர்ச்சியை காட்டுகிறது. 1952 ஆம் ஆண்டு 1.2 பில்லியன் யுவானாக மட்டுமே இருந்தது. அதனுடன் ஒப்பிடுகிற பொழுது 472 மடங்கு அதிகமாகும்.
கல்வியில்
நிதி ஒதுக்கீட்டின் சராசரி ஆண்டு வளர்ச்சி என்பது 1997 முதல் 2002 வரை
16.7% ஆகவும் 1952 முதல் 2002 வரை 13.1% ஆகவும் இருந்தது. 2002 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகும் கல்விக்கான முதலீடுகளை தேசிய அரசாங்கம்
மிகப்பெரும் அளவிற்கு அதிகரித்து வருவது சீனாவின் இன சிறுபான்மை கல்வி வளர்ச்சி
உலகத்தில் வளர்ந்த நாடுகளுடன் போட்டியிடக் கூடிய அளவிற்கு மாற்றி உள்ளது. அனைத்து
மட்டங்களிலும் அரசாங்க வரவு செலவுத் திட்டங்களில் கல்வி முதலீடு என்பது மிக வேகமாக
வளர்ந்து வரக்கூடிய ஒரு முதலீடாக மாறி உள்ளது.
சீனாவில்
புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் பின்தங்கி இருந்த இனச்
சிறுபான்மையினரின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பல்வேறு விதமான
பொருளாதார சமூக நடவடிக்கைகளுக்கு கல்வி அடிப்படையான தேவை என்பதை சீன கம்யூனிஸ்ட்
கட்சியின் சீன அரசாங்கமும் முடிவு செய்தது. 1965 ஆம் ஆண்டு வரை முதல் கட்ட வளர்ச்சியும் 1978 ஆம்
ஆண்டுகளுக்குப் பிறகு சீர்திருத்த அடிப்படையில் கல்வியின் தரத்தை நிபுணர்களை
உருவாக்கக்கூடிய அளவிற்கு மாற்றி அமைத்தது. இதன் விளைவாக இனச் சிறுபான்மையினர்
அனைவரும் ஒட்டுமொத்த சீன சமூகத்தின் வளர்ச்சியில் சமபங்கினை செலுத்தக்
கூடியவர்களாக மாறினார்கள்.
அ.பாக்கியம்.




