Pages

புதன், ஜூலை 08, 2026

79 உய்குர்∶ வெடிகுண்டுகளின் கொலைக்களம்

 

அ.பாக்கியம்

சமுக மாற்றத்தை படைக்கின்ற, முதலாளித்துவத்திற்கு மாற்றுச் சித்தாந்தை ஏற்றுக்கொண்ட ஒரு அரசை படையெடுத்துதான் வீழ்த்த வேண்டும் என்று இல்லை. உள்நாட்டு கலவரங்களை உருவாக்கி உருக்கொளைத்து விடலாம். இரண்டாவது வழிமுறைகளைத்தான் மத தீவிரவாதிகளும், அமெரிக்க ஏகாதிபத்தியமும், மேலைநாடுகளும் தேர்ந்தெடுத்தன.  சீர்திருத்தகாலத்திற்கு பிறகு சீனாவின் வளர்ச்சிகண்டு மேற்கண்ட சக்திகள் அச்சமடைந்தன. இதனால் 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து ஜின்ஜியாங் மாகாணத்தில் மதத் தீவிரவாத மற்றும் பிரிவினைவாக சக்திகளும் ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்தனர்.

குறிப்பாக 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற 9/11 இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாத தாக்குதல்கள் ஜின்ஜியாங் மாகாணத்தில் இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் முன்னெடுக்கப்பட்டன. ஜின்ஜியாங் மாகாணத்தில் இருக்கக்கூடிய மசூதிகளிலும், மசூதிகளில் நடைபெறக்கூடிய கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகளுக்குள்ளும் மத மற்றும் பிரிவினைவாத தீவிரவாதிகள் ஊடுருவி அவற்றை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். சீன மக்கள் குடியரசின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக மத வழிபாட்டுத் தலங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியாகவே பிரிவினைவாத செயல்பாடுகளுக்கு மத முகமூடிகளை அணிந்து கொண்டனர்.

1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜின்ஜியாங் மாகாணத்தின் காஷ்கர் நகருக்கு அருகில் உள்ள பேரன் என்ற ஊரில் மசூதிகளுக்கான வழிகாட்டுதல்களை மீறி தீவிரவாதிகள் செயல்பட ஆரம்பித்தனர். இவற்றை ஒழுங்குபடுத்த ஆரம்பித்த பொழுது மக்களை தூண்டி விட்டு போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அமைதியான முறையில் தீர்ப்பதற்கான முயற்சியில் இரண்டு உயர் அரசு அதிகாரிகளை அனுப்பியது.  அவர்களை அங்கேயே படுகொலை செய்வதனர். இது சீன அரசுக்கு அதிர்ச்சி அளித்தது. சிறிய காவல் படையை அனுப்பிய பொழுதும் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு சேதத்திற்கு உள்ளானார்கள். இந்த அளவிற்கு தீவிரவாதிகள் தாக்குவதற்கு ஆயுதங்களை ஆப்கானிஸ்தான் உட்பட பல இடங்களில் சேகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் விளைவாக மக்கள் சீன ராணுவத்தை அனுப்பி கலவரங்களை ஒடுக்கினார்கள்.

 

தீவிரவாதிகளின் ஊடுருவல்கள் பல இடங்களில் இருந்தது. 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாகாண தலைநகர் உரும்கியில் தீவிரவாதிகள் இரண்டு பேருந்துகளில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த சம்பவத்தில் ஆறு பொதுமக்கள் இறந்தனர். இஸ்லாமிய சீர்திருத்த கட்சியின் ஷாக் பிரிகேட் என்ற அமைப்பு இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோன்று மாகாணத்தின் கோட்டான் (Khotan), காஷ்கர் (Kashgar), யினிங் (Yining) போன்ற நகரங்களிலும் மற்ற சிறிய நகரங்களிலும் பல வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இது போன்ற சதி திட்டங்கள் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டதையும் கஜகஸ்தானில் உருவாக்கப் பட்ட விடுதலை அமைப்பு காரணம் என்பதையும் அறிந்து கொண்டு நடவடிக்கையில் இறங்கினார்கள்.

1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி கோட்டான் நகரத்தில் இருந்த மசூதிகளில் இரு மதத் தலைவர்கள் மத வழிபாட்டுத் தலத்தை பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவாகவும் எதிர் புரட்சி சக்திகளுக்கு சாதகமான முறையிலும் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் இந்த இரு மதத் தலைவர்களையும் அரசு பொறுப்பிலிருந்து நீக்கியது. தீவிரவாதிகள் காவல் நிலையங்களையும் அரசு அலுவலகங் களையும் தாக்கினார்கள்.

1997 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  மாகாணத்தின் யினிங்கில் (Yining) உள்ள மசூதிகளில் தீவிரவாதிகள் கலந்துரையாடல் என்ற பெயரில் ரகசியமாக செயல்பட ஆரம்பித்தனர். இந்த நகரம் மாகாணத்தின் வடக்கு பகுதியில் இருக்கிறது. இங்கு கசாக் இனத்தவர்கள் தான் அதிகமாக வாழ்கிறார்கள். இருந்தும் உய்குர் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் இங்கும்  மதப் போர்வையில் நடப்பதால் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு, பல தீவிரவாதிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் எதிர்வினையாக நகரங்களின் பல்வேறு இடங்களிலும், பேருந்துகளிலும்  மத தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் ஒன்பதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இறந்தனர்.

மேற்கண்ட தொடர் சம்பவங்கள் அரசு அமைப்புகளில் புதிய விவாதங்களை முன்னெடுத்தது. 1979 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வந்த மிதமான போக்குகளையும், சகிப்புத்தன்மைகளையும் மாற்ற வேண்டும் என்றும், கடுமையான நடவடிக்கைகளை உட்படுத்த வேண்டும் என்றும் பேசப்பட்டது. சீன மக்கள் குடியரசு சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை தொடர்ந்து பாதுகாத்து வந்தததுடன், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டும் தனிமைப்படுத்தி மேற்கொள்ள ஆரம்பித்தது. இந்த நடவடிக்கைகள் சட்டரீதியாகும் அரசியல் ரீதியாகவும் அமைந்தது. அனைத்து எதிர்ப்பாளர்களையும் பிரிவினை வாதிகள் என்று முத்திரை குத்தாமல் அவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளை கருத்தில் கொண்டது. சுற்றுச்சூழல் பாதுகாவலர்களின் கருத்துக்களையும் தனியாக ஆலோசித்தனர். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிலும் வெளிநாடுகளிலும் செயல்படக்கூடிய தீவிரவாத அமைப்புகளை பற்றிய கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டன. 1997 மற்றும் 99 ஆம் ஆண்டுகளில் 19க்கு மேற்பட்ட குண்டு வெடிப்புகளை நடத்தி பொதுமக்களை படுகொலை செய்தனர்.

இந்த தீவிரவாதிகளுக்கு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் நிதி உதவி அளித்து வந்தனர். உயிகுர் அமெரிக்க காங்கிரஸ் அமைப்பிற்கு நேஷனல் எண்டோவ்மென்ட் ஆப் டெமாக்ரசி என்ற அமைப்பின் மூலம் அமெரிக்கா நிதி உதவி செய்தது. அமெரிக்க நாடாளுமன்றமும் ஏராளமான நிதி உதவி செய்தது. இதன் மூலம் ஆயுதங்களை வாங்குவது, பயிற்சி அளிப்பது போன்றவற்றில் தீவிரவாதிகள் ஈடுபட ஆரம்பித்தார்கள். 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கஜகஸ்தானில் சீன தூதரக அதிகாரி மற்றும் அவருடைய ஓட்டுனர் ஆகியோர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று சீன அரசு தெரிவித்தது.

 

2009 உரும்கி “ஜூலை 5” சம்பவம்

 

2009 ஜூலை 5 ஆம் தேதி, சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியின் தலைநகரான உரும்கியில் கடுமையான வன்முறைக் குற்றச் சம்பவம் நிகழ்ந்தது. சீன அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இது வெளிநாட்டுப் பிரிவினைவாத சக்திகளால் திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப் பட்ட  சம்பவமாகும. இது அமைதியான போராட்டம் அல்ல, மாறாக பயங்கரவாதத் தன்மை கொண்ட ஒரு வேண்டுமென்றே திட்டமிடப்பட்ட கொடூர வன்முறை நிகழ்வு ஆகும். அதாவது நகரத்தின் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதல்கள் அனைத்தும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்கள், வாகனங்கள், கடைகள் போன்றவற்றை இலக்காக வைத்து நடைபெற்று உள்ளது.

இந்த தாக்குதலில் 197 பேர் உயிரிழந்தார்கள். உயிர் இழந்தவர்களில் உய்குர் மக்கள், ஹுய் முஸ்லிம்கள், மஞ்சுக்கள், ஹான் இனத்தவர்கள் என அனைவரும் அடங்குவார்கள். 1700க்கு மேல் படுகாயம் அடைந்தனர்.  வெளிநாட்டில் செயல்படக்கூடிய உலக உயிகுர் காங்கிரஸ் மற்றும் சில அமைப்புகள் இந்த கலவரங்களுக்கு காரணம் என்று சீன அரசு கண்டறிந்தது. சீன மக்கள் குடியரசு வன்முறை குற்றங்களில் ஈடுபட்டவர்களை சட்டப்படி கைது செய்து, விசாரணை நடத்தி ஒன்பது பேருக்கு மரண தண்டனை உட்பட 198 பேர்கள் தண்டிக்கப்பட்டனர். இந்த தாக்குதலின் நோக்கம் ஜின்ஜியாங் கின் இன ஒற்றுமையையும், சமூக ஸ்திரத்தன்மையையும் சீர்குலைப்பதே என்றும், குற்றவாளி களை சட்டப்படி கடுமையாக தண்டிப்பதும் சமூக ஒழுங்கை மீட்டெடுப்பதும் அவசியமானது என்றும் சீன அரசு வலியுறுத்தியது.  ஜீலைமாதம் சம்பவத்திற்கு முன்பு 2009 ஜூன் 25-26 தேதிகளில்  குவாங்டாங்கில் ஷாவோகுவான் என்ற இடத்தில நடத்திய வெடிகுண்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 118 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் ஜூலை 2009 உரும்கி கலவரங்களைத் தூண்டுவதற்கு முன்னோட்டமாக அமைந்தது.

2009-ஆம் ஆண்டு உரும்கி கலவரங்களுக்குப் பிறகும் வன்முறை தொடர்ந்தது. 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அக்சு (Aksu) பகுதியில் உய்குர் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். பதினான்கு பேர் காயமடைந்தனர். 2011-ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று, கோட்டான் (Khotan) நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் மீது உய்குர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; அதே மாதத்தில் காஷ்கர் (Kashgar) நகரிலும் தாக்குதல் நடைபெற்றது. ஜூலை 2011 ஹோட்டான் தாக்குதல் 18 பேர் இறப்பதற்கு வழிவகுத்தது, அவர்களில் 14 பேர் தாக்குதல் நடத்தியவர்கள். தாக்குதல் நடத்தியவர்கள் உய்குர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ஹான் மற்றும் உய்குர் ஆகிய இரு இனத்தவரும் பாதிக்கப்பட்டனர். அந்த ஆண்டு, ஆறு உய்குர் இன ஆண்கள் உரும்கிக்குச் செல்லும் ஒரு விமானத்தைக் கடத்த முயற்சி செய்து  தோல்வியுற்றனர். டிசம்பரில் பிஷான் பணயக்கைதிகள் நெருக்கடி ஏற்பட்டது. சுமார் 15 உய்குர் இளைஞர்கள் கொண்ட ஒரு குழு, பயிற்சி பெற எல்லையைக் கடக்க முயன்று, வழி தவறியதால் இரண்டு ஆடு மேய்ப்பவர்களைக் கடத்தி திசை காட்டுமாறு கட்டாயப்படுத்தினர். மேய்ப்பவர்கள் உள்ளூர் காவல்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். ஐந்து காவலர்கள் பணயக்கைதிகளை மீட்க பேச்சுவார்த்தை நடத்திய போது, கடத்தல்காரர்கள் அவர்கள் மீது கத்தியால் தாக்கி, துணை காவலரைக் கொன்றனர். பதிலடியாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர், 4 பேர் காயமடைந்து கைது செய்யப்பட்டனர். இரண்டு பணயக்கைதிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

28 பிப்ரவரி 2012 அன்று, யெச்செங்கில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேர் இறந்தனர்.  இதில் தீவிரவாதிகள் 7பேர் அடங்குவர். 24 ஏப்ரல் 2013 அன்று, காஷ்கருக்கு அருகில் பாச்சுவில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் காவல்துறையினர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதில் 15 காவல்துறையினர், அதிகாரிகள் உட்பட குறைந்தது 21 பேர் இறந்தனர்.

2013 அக்டோபர் 28 –. உஸ்மென் ஹசன் என்ற தீவிரவாதி , தனது தாய் மற்றும் மனைவியுடன் சேர்ந்து, பெய்ஜிங்கின்  தியானன்மென் சதுக்கத்தில் கூட்டத்தின் ஊடாக ஒரு ஜீப்பை ஓட்டிச் சென்று, அந்த வாகனத்திற்குத் தீ வைத்தார். இதில் 5 பேர் இறந்த துடன் 40 பெர் படுகாயம் அடைந்த்னர்.

2014 மார்ச் 1 ம் தேதி குன்மிங் ரயில் நிலையத்தில் எட்டு தீவிரவாதிகள் உள்ளே புகுந்து  கண்ணில்பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்தினார்கள். இந்த தாக்குதலுக்கு கிழக்கு துர்கிஸ்தான் அமைப்பை சேர்ந்த அப்துர் ரஹீம் குர்பான் என்பவன் தலைமையில் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர், 141 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி உட்பட சர்வதேச சமூகம், சீனாவுடன் இணைந்து இந்தத் தாக்குதலை ஒரு பயங்கரவாதச் செயல் எனக்  கண்டித்துள்ளது .

2014 மே 22 அன்று ஜின்ஜியாங்க தலைநகர் உரும்கியில் தீவிர வாதிகள் இரண்டு கார்களை மக்கள் கூட்டம் நிறைந்த சந்தைக் குள் ஓட்டிச் சென்று வெடிக்கச் செய்தனர். சுற்றியிருந்த கட்டிடங்கள் மீது வெடிபொருட்களை வீசியதில் 39 பேர் கொல்லப் பட்டனர். 94 பேர் காயமடைந்தனர்.

2014 ஜூலை 30 அன்று காலைத் தொழுகைக்குப் பிறகு ஈத் கா மசூதியில் இமாம் ஜுமா தாஹிர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஜுமா தாஹிர், சீனாவின் மிகப்பெரிய மசூதியான ஈத் காவின் இமாமாகவும், தேசிய மக்கள் காங்கிரஸின் உறுப்பினராகவும், சீன இஸ்லாமிய சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார். அப்பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைக்கு மத்தியில், ஜுமா தாஹிர் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்படுத்தும் முயற்சியில் இருந்தார்.

2014 ம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று வியட்நாமில் ஊடுருவிய உய்குர் இனத்தைச் சேர்ந்தவர்கள் 16 பேர்களை அடையாளம் கண்டு சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காகத் வியட்நாம் எல்லையில் தடுத்து வைக்கப்பட்டபோது, ​​வியட்நாமிய எல்லைக் காவலர்களின் துப்பாக்கிகளைப் பறித்து அவர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் ஐந்து உய்குர்தீவிரவாதிகளும், இரண்டு வியட்நாமியக் காவலர்களும் இறந்தனர்.

2014 மே 22 அன்று, தலைநகர் ஊரும்கி தெருச்சந்தையில் இரண்டு தற்கொலை கார் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்தத் தாக்குதல்களில் 43 பேர் கொல்லப்பட்டனர். 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது சின்ஜியாங் மோதலில் இன்றுவரை நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.

சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி , ஜூலை 28 அன்று, ஷாச்சே கவுண்டியில் உள்ள எலிக்ஸ்கு மற்றும் ஹுவாங்டி நகரங்களில் கத்திகள் மற்றும் கோடரிகளுடன் ஆயுதம் ஏந்திய ஒரு கும்பலால் 37 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

செப்டம்பர் 21 அன்று, பிராந்திய தலைநகரான ஊரும்கியின் தென்மேற்கில் உள்ள லுண்டாய் கவுண்டியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 50 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஆறு பொதுமக்கள், நான்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் 40 கலவரக்காரர்கள் அடங்குவர்.

அக்டோபர் 12 அன்று, கத்திகள் மற்றும் வெடிபொருட்களுடன் ஆயுதம் ஏந்திய நான்கு தீவிரவாதிகள் சின்ஜியாங்கில் உள்ள ஒரு உழவர் சந்தையைத் தாக்கினர். காவல்துறையின் கூற்றுப்படி, 22 பேர் இறந்தனர் நவம்பர் 29 அன்று, ஷாச்சே கவுண்டி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர்.

செப்டம்பர் 18, 2015 அன்று, அக்ஸுவில், அடையாளம் தெரியாத கத்தி ஏந்திய பயங்கரவாதிகள் குழு ஒன்று நிலக்கரிச் சுரங்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களைத் தாக்கி, 50 பேர் வரை கொன்றுவிட்டு மலைகளுக்குள் தப்பிச் சென்றது. இந்தத் தாக்குதலுக்கு துர்கிஸ்தான் இஸ்லாமியக் கட்சி பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணியில் 56 நாட்கள் ஈடுபட்டு அப்போது நடைபெற்ற மோதலில் 28 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் சரணடைந்தனர்.

தாய்லாந்து நாட்டில்  100 உய்குர் தீவிரவாதிகள் ஊடுருவி இந்தனர். அவர்ளை தாய்லாந்து சீனாவுக்கு நாடு கடத்தியது.இதற்குப் பதிலடியாக, பாங்காக் நகரத்தில்  குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.  ஆகஸ்ட் 30, 2016 அன்று, கிர்கிஸ்தானின் சீனத் தூதரகம் ஒரு உய்குர் தீவிரவாதியால் தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் மட்டுமே. உயிரிழந்தவர்களில் கிர்கிஸ் பணியாளர்கள் காயமடைந்தனர்.  2016 டிசம்பர் 28 அன்று கரகாக்ஸில் குண்டுவெடிப்பு நடத்திய 4 தீவிரவாதிகளை போலீசார் கொன்றனர். 14 பிப்ரவரி 2017 அன்று, கத்தியுடன் வந்த மூன்று தாக்குதல்தாரிகள் ஐந்து பேரைக் கொன்றனர், பின்னர் அவர்கள் காவல்துறையினரால் கொல்லப்பட்டனர்.

2017ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு முற்றிலுமாக தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மக்களை வென்றெடுத்திருக்கிறார்கள் என்ற செய்தியும் இந்த பட்டியலை தொடர்ந்து வருகிறது.

மேலே குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் செய்திகள் மட்டுமல்ல. ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி  மாகாணத்தில் சீன அரசு மிகக் கொடூரமான முறையில் உய்குர் மக்களை கொன்று குவிக்கிறது என்று அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகளும் பிரிவினைவாதிகளும் பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள். அமெரிக்க ஆதரவுடன் செயல்படக்கூடிய தீவிரவாதிகளின் தாக்குதல் எந்த அளவிற்கு இருந்தது என்பதை எடுத்துக்காட்டுவதற்குதான் இந்த பட்டியல் போடப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, தீவிரவாதிகளையும் பிரிவினைவாதிகளையும், எதிர்த்து போராடுவதில் பொதுமக்கள் மட்டுமல்ல நாட்டுப்பற்றுள்ள மதத் தலைவர்களும், உய்குர் இன மக்களும், சீன நாட்டின் காவல்துறையினரும் பெரும் இழப்பை சந்தித்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மோதல்களில் இறந்தவர்கள் தவிர மற்ற அனைத்து தீவிரவாதிகளும் சட்டப்படியான முறையில் கைது செய்யப்பட்டு உரிய விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள் என்ற தரவும் இந்த பட்டியலில் அடங்கியுள்ளது.

.பாக்கியம்

 

 

திங்கள், ஜூன் 29, 2026

கால்பந்து உலகக் கோப்பை அசத்தும் ஆப்பிரிக்கா

 



 

கால்பந்து உலக கோப்பை போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிந்து நாக்கவுட் சுற்று 29 ஆம் தேதி முதல் ஆரம்பிக்கிறது. கலந்து கொண்ட 48 நாடுகளில் 32 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

 

உலகில் உள்ள நாடுகளை ஆறு மண்டலங்களாக பிரித்து உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதிச்சுற்றுகளை நடத்தி அதன் மூலம் 48 அணிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். 

 

ஆப்பிரிக்க மண்டலத்தில் 54 நாடுகளுக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஒன்பது நாடுகள் தகுதி பெற்று லீக் ஆட்டத்தில் கலந்து கொண்டனர். எகிப்து, மொராக்கோ, காங்கோ ஜனநாயக குடியரசு, செனகல், அல்ஜீரியா, ஐவரி கோஸ்ட், கானா, கோபா வெர்டி மற்றும் டுனிசியா ஆகிய 9 நாடுகளில் டுனிசியா தவிர மற்ற எட்டு நாடுகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

 

ஆசிய மண்டலத்தில் உள்ள 47 நாடுகளுக்கு எட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டது. எட்டு நாடுகள் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஈரான், ஈராக், சவுதி அரேபியா, ஜோர்டான், கத்தார், உஸ்பெகிஸ்தான், ஜப்பான், தென் கொரியா ஆகிய எட்டு நாடுகளில் ஜப்பான் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 

 

ஐரோப்பா மண்டலத்தில் 55 நாடுகளுக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டு லீக் ஆட்டத்திற்கு முன்னேறினார்கள். இவற்றில் 12 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 

 

தென் அமெரிக்கா மண்டலத்தில் பத்து நாடுகளுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டது. லீக் ஆட்டத்தில் கலந்து கொண்ட அர்ஜென்டைனா, பிரேசில் ,கொலம்பியா, ஈகுவடார், ராகுவே, உருகுவே ஆகிய ஆறு நாடுகளில் உருகுவே தவிர மற்ற ஐந்து நாடுகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

 

வட அமெரிக்க மண்டலத்தில் 41 நாடுகளுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் கலந்து கொண்டனர். இவற்றில் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் மட்டும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. 

 

ஓசினியா மண்டலத்தில் 11 நாடுகளுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு நியூசிலாந்து வெற்றி பெற்று வந்து, லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது. ஆஸ்திரேலியா புவியியல் ரீதியாக ஓசினியாவில் இருந்தாலும் ஆசிய மண்டலத்தில் விளையாடுகிறது. கயானா, சூரனாம் நாடுகள் தென் அமெரிக்காவில் இருந்தாலும் வட அமெரிக்க மண்டலத்தில் கலந்து கொள்கிறது. இஸ்ரேல் ஆசியாவில் இருந்தாலும் அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐரோப்பிய மண்டலத்தில் கலந்து கொள்கிறது.

 

ஆப்பிரிக்காவின் கோபா வேர்டி என்று சொல்லக்கூடிய சுமார் ஐந்து லட்சம் மக்கள் தொகை கொண்ட தீவு நாடு முதல்முறையாக உலக கோப்பைக்கு தகுதி பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இப்படி ஒரு நாடு இருக்கிறது என்பதை உலகிற்கு அறிமுகப்படுத்தியது அந்த நாட்டின் விளையாட்டு வீரர்கள். குறிப்பாக அதன் கோல் கீப்பர் வோசின்ஹா (VOZINHA) ஆவார். 2022 ஆம் ஆண்டு கத்தார் உலகக் கோப்பை போட்டியின்போது  மொராக்கோ உலக கால்பந்து ரத்தில் முதல் இடத்தில் இருந்த பிரேசிலை கால் இறுதியில் வெளியேற்றியது. சவுதி அரேபியா முதல் சுற்றில் அர்ஜெண்டனாவை வீழ்த்தியது. ஜப்பான் ஜெர்மனியை தோற்கடித்தது. வலுவான ஜெர்மனியும், பெல்ஜியமும் முதல் சுற்றிலேயே வெளியேறினார்கள். 

 

கால்பந்தாட்ட  அணியின் பாரம்பரிய சக்திகளை கடந்து வலிமை பெற்று வரும் புதிய அணிகள் உருவாகி இருக்கிறது. புதிய கதாநாயகர்கள் உருவாக்கினார்கள். ஆப்பிரிக்கா இந்த வகையில் முன்னணியில் இருக்கிறது. மிகவும் பின்தங்கிய பொருளாதாரம் கால்பந்தாட்ட அமைப்புகள், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பது, கடுமையான இனஒதுக்கல் போன்ற சவால்களை எதிர்கொண்டாலும் அணி ஒற்றுமை என்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதன் விளைவாக ஒன்பது அணிகளில் 8 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி இருப்பது பெரும் மாற்றம் ஆகும். 

 

அ. பாக்கியம் 

 

78 சீர்திருத்தமும் பிரிவினைவாத முன்னெடுப்புகளும்

 

அ.பாக்கியம்

ஜின்ஜியாங் மாகாணத்தில் இனச் சிறுபான்மையினர் பெரும்பகுதியாக வாழ்வதாலும் அந்த மாகாணத்தின் புவிசார் இருப்பின் முக்கியத்துவம் கருதி சீன மக்கள் குடியரசு இந்த மாகாணத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி வந்தது. 1949 புரட்சி வெற்றி பெற்ற பிறகு 1962 ஆம் ஆண்டு வரை ஆக்கப்பூர்வமான வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகள் இன ஒற்றுமையை ஏற்படுத்தியது மட்டுமல்ல பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மாற்றி அமைத்தது. 1964 ஆம் ஆண்டு கலாச்சாரப் புரட்சி ஏற்பட்ட பொழுது சித்தாந்தங்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு அமலாக்கப்பட்டது. இதன் விளைவாக இனச் சிறுபான்மையினரின் பல்வேறு தனித்தன்மைகள் பாதிப்புக்கு உள்ளானது. அது மட்டுமல்ல கலாச்சார புரட்சியின் தொடர்ச்சியாக பொருளாதாரத்திலும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது.

1976 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றங்கள் ஏற்பட்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி 1978 இல் டெங் ஷியோ பிங் தலைமையில் சீர்திருத்தமும் புதிய திறப்புக் கொள்கையும் அறிவித்தது. இந்த புதிய கொள்கையின் அடிப்படையில் சித்தாந்தத்தைவிட பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தனர். விவசாயம், தொழில், அறிவியல் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆகிய நான்கு துறைகளை நவீனமாக்கக்கூடிய முறையில் திட்டங்கள் உருவாக்கி அமலாக்கப்பட்டது. அதே நேரத்தில் ஜின்ஜியாங் மாகாணத்தில் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சி மட்டுமே போதாது என்பதையும் உணர்ந்து கொண்டு கலாச்சார கொள்கைகளை மாற்றி அமைத்தது. பொருளாதார வளர்ச்சி, இன சிறுபான்மை மக்களின் தனித்தன்மைகளை மீண்டும் நிலை நாட்டுவது, பாதுகாப்பை பலப்படுத்துவது போன்றவற்றை முக்கியத்துவம் கொடுத்து அமல்படுத்தியது.

பொருளாதாரத்தின் முயற்சிகள்

ஜின்ஜியாங் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து இதற்கு முந்தைய பகுதிகளில் பார்த்திருக்கிறோம். இங்கு விரிவாக அது பற்றி எழுதப் போவதில்லை. மாறாக கலாச்சார புரட்சியில் ஏற்பட்ட பின்னடைவை கணக்கில் எடுத்து ஒட்டு மொத்த சீனத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்த கொள்கைகள் இனச் சிறுபான்மை பகுதிகளிலும் அதற்குரிய சிறப்புத் தன்மையோடு அமலாக்கப்பட்டது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் பழுது பார்க்கப்பட்டது என்று சொல்லலாம். இந்த மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமான படை என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த அமைப்புதான் பொருளாதார வளர்ச்சியின் அடித்தளமாக அமைந்திருந்தது. கலாச்சாரப் புரட்சியின் போது இதனுடைய கட்டமைப்பு சீர்குலைந்து பலவீனம் அடைந்தது. மற்றும் இனவாத போக்குகளும் ஊடுருவ ஆரம்பித்ததனால் அவற்றை கலைத்து உற்பத்தி முறைகளை உள்ளூர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மற்றொரு முக்கிய அம்சம் ஜின்ஜியாங் மாகாணத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக பொருளாதார வளர்ச்சி தான் அடிப்படையானது என்பதை சீன மக்கள் குடியரசின் தலைமை முழுமையாக நம்பியதால் மாகாணத்தில் அதிகமான முதலீடுகளை செய்தனர். முதலீட்டின் முக்கியமான நோக்கமாக மாகாணத்தின் வடக்கு பகுதியில் அதிகமான அளவு வசிக்கும் ஹான் மக்களுக்கும் தெற்கு பகுதியில் அதிகமாக வசிக்கும் உய்கூர் இன மக்களுக்கும் சமத்துவம் ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த முதலீடுகள் அமைந்தது. இந்த முயற்சிகள் இன சமத்துவத்தை ஏற்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றது.

அரசாங்கம் வரிகளை குறைத்தது. பருத்தி என்பது முக்கிய சாகுபடியாகும். இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இயற்கை வளங்கள், குறிப்பாக எண்ணெய் வளங்களை பிரித்தெடுத்தல் போன்ற தொழில்களுக்கு அதிக முதலீடு செய்து வேலைவாய்ப்புகளில் உருவாக்கினார்கள். இந்த முயற்சிகள் ஹான் இன மக்களைக் கடந்து இனச் சிறுபான்மை மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தியது.

1949 ஆம் ஆண்டு புரட்சி ஏற்பட்ட பிறகு ஜின்ஜியாங் மாகாணத்தில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டது. அரசு பல மருத்துவ மையங்களை உருவாக்கியது. மாகாணத்தின் எல்லைப் புறத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு வெறும் கால் மருத்துவர்கள் (barefoot doctors) என்ற மருத்துவர்கள் மூலமாக சிகிச்சையை செய்தனர். இந்தப் போக்குகள் கலாச்சார புரட்சி காலத்தில் பெரும் சிதைவுக்கு உள்ளாகியது. எனவே முந்தைய நிலைமைகளை மீண்டும் மீட்டெடுக்கவும் புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் மருத்துவ சேவைக்கான இலக்கு தீர்மானிக்கப்பட்டு முன்னேற்றத்தை கண்டனர். 1998க்குள் இந்தக் கொள்கை பெரும் அளவு வெற்றி பெற்றது. 1998 ஆம் ஆண்டு 1000 மக்களுக்கு 2.7 மருத்துவர்கள் மாகாண அளவிலும் மாவட்டங்களில் சராசரியாக 1.7 என்ற அளவிலும் வளர்ச்சி ஏற்பட்டது. இந்த வளர்ச்சி என்பது தேசிய சராசரியை விட அதிகமானது. தேசிய சராசரி 2.6 என்றும், மாவட்ட சராசரி 1.1 என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் சீர்திருத்த காலத்தில் ஏற்பட வேண்டிய அளவிற்கான வளர்ச்சி போதுமானதாக இல்லை. குறிப்பாக இயற்கை வளங்களை பயன்படுத்துவதும், இனச் சிறுபான்மை மக்களை நவீன உற்பத்தி முறைகளில் வேலை வாய்ப்பு உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய முறைகள் பரவலாக நடைபெறவில்லை. ஆகவே மீண்டும் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமான படை என்ற சிறப்பு அமைப்பை புதிய தலைமையுடன் உருவாக்கியது. இதன் மூலம் ஜிஞ்சியங் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகி மொத்த உற்பத்தியில் கால்பங்கை இந்த அமைப்பின் மூலம் உற்பத்தி செய்தார்கள்.

இனச் சிறுபான்மை உரிமைகளை மீட்டெடுத்தல்.

கலாச்சார புரட்சியின் போது ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கும் அதன் நீட்சியாக நடைபெற்று வந்த குழப்பங்களை தீர்ப்பதற்குமான முயற்சிகளை மேற்கொண்டார்கள். தனிநபர்கள் அல்லது குழுக்கள் மீதான தாக்குதல் போன்ற கலாச்சார புரட்சியின் தொடர் நடவடிக்கைகள் ஒழிக்கப்பட்டது. இந்த மாகாணத்தில் கலாச்சார புரட்சியின் போது நிகழ்ந்த உயிரிழப்புகள், கட்டிடங்களின் அழிவு, சீர்குலைக்கும் கொள்கைகள் குறித்த அனைத்திற்கும் அரசு வருத்தம் தெரிவித்தது. வருத்தம் என்பது வாழ்வில் ஏற்பட்ட வடுக்களை குறைக்காது என்பதை அறிந்திருந்த சீன அரசாங்கம் இடிக்கப்பட்ட மசூதிகள் வழிபாட்டுத் தலங்கள் போன்ற கட்டிடங்களை பழுது பார்த்துக் கொடுப்பதும், மீண்டும் கட்டிக் கொடுக்கக்கூடிய பணிகளையும் செய்தார்கள். 1990 ஆம் ஆண்டுக்குள் இந்த மாகாணத்தின் முக்கிய நகரமான கஷ்கர் நகரில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மசூதிகள் புதுப்பிக்கப்பட்டும், புதிதாக கட்டியும் கொடுக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் சடங்குகளில் உள்ளூர் அதிகாரிகள் தலையிடுவது தடை செய்யப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் கொண்டுவரப்பட்டன. புனித நூல்களை அச்சிடுவதற்கு உரிமை வழங்கப்பட்டது மட்டுமல்ல மக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளக்கூடிய முறைகளையும் அமலாக்கினார்கள்.

உய்கூர் மக்களின் இசை, நடனம், கவிதை, வரலாறு, இலக்கியம் தொடர்பான வெளியீடுகளில் உள்ளூர் அதிகாரிகள் தலையிடவோ தடை செய்யவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று 1980 களின் முற்பகுதியில் உய்கூர் மொழி உச்சரிப்புகளுக்கு லத்தீன் மற்றும் சிரில்லிக் ஒலிகளை பயன்படுத்தினர். இது அம்மக்களிடம் பரவலாக எடுபடவில்லை. 1980 களுக்குப் பிறகு சீர்திருத்த கொள்கையின் தொடர்ச்சியாக அரபு மொழி ஒலி உச்சரிப்புகளுக்கு மாறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றது. சுருக்கமாகச் சொன்னால் டெங் ஷியோ பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி கலாச்சார புரட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்த இனச் சிறுபான்மை மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதில் அதிக கவனம் செலுத்தியது. இதனால் பொருளாதார மேம்பாடு ஏற்பட்டது மட்டுமல்ல இனங்களுக்கு இடையிலான பதட்டங்கள் குறைந்தது பள்ளிகளும் கல்லூரிகளும் இயல்பு நிலைகளுக்கு திரும்பின.

இனச் சிறுபான்மை தொடர்பான சட்டங்களும் அவர்களின் தனித்தன்மையில் பாதுகாப்பதற்கான கொடுக்கப்பட்ட உரிமைகள் அனைத்தும் அந்த மக்களை மேம்படுத்துவதில் ஒன்றுபட்ட சீனம் என்ற உணர்வை உருவாக்குவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த சுதந்திரமான பல உரிமைகளை மத தீவிரவாத சக்திகளும் பிரிவினைவாத சக்திகளும் ஏகாதிபத்திய மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் சீனாவில் பயங்கரவாதத்தை அரங்கேற்றினார்கள். இதற்கு சர்வதேச அரசியல் மாற்றங்களும் காரணமாக அமைந்தது. இதனால் ஜின்ஜியாங் மாகாணத்தை பிரிவினை ஏற்படுத்துவதற்காக பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டது. ஒரு சில அமைப்புகள் வேறுபெயர்களில் உயிர் பெற்றது.

பிரிவினைவாத அமைப்புகளின் தோற்றம்

1970 ஆம் ஆண்டுகளில் சீன சோவியத் எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கு இடையில் உறவுகளில் மோதல்கள் உருவாகின. ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள இனச் சிறுபான்மையினர் அவர்களின் கலாச்சார அடையாளங்கள் சோவியத் பகுதியில் வசிக்கும் மக்களுடனும், துருக்கிய இஸ்லாமிய மக்களின் அடையாளங்களுடனும் சில ஒற்றுமைகள் இருந்தன. இதனால் பிரிவினை சக்திகள் உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சி கவனத்தில் கொண்டது. 1979 ஆம் ஆண்டு சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்த பிறகு நிலைமை இன்னும் பதட்டமாகிறது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் தீவிரவாத பாதிப்புகள் வந்துவிடும் என்பதை கவனத்தில் கொண்டு சீன அரசாங்கம் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தியது. இந்தப் பதட்டமான சூழல் சீன சோவியத் இரு நாடுகளுக்கும் ராணுவத்துக்கான நிதிச் சுமையை ஏற்படுத்தியது. எனினும் 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பதட்டங்களை தனித்து மத்திய ஆசிய நாடுகளுடன் சீனா வர்த்தகத்தை மேம்படுத்தியது.

1989 மற்றும் 91ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் நிலைமைகளை மேலும் சிக்கலாகியது. சோவியத் யூனியனில் கோர்பசேவ் தலைமையிலான அரசு அமைந்த பிறகு தேசிய இனங்களின் மோதல்களும் எழுச்சியும் அதிகமாகியது. இது சோவியத் யூனியன் சிதைவுக்கு காரணமாகி தேசிய இனங்களின் அடிப்படையில் பல நாடுகள் உருவாவதற்கு வழி வகுத்தது. 1989 ஆம் ஆண்டு சீன அரசை கவிழ்ப்பதற்காக அமெரிக்க ஆதரவுடன் தியானன்மென் சதுக்கத்தில் பெரும் கலவரம் ஏற்படுத்தப்பட்டது. 1990 ஆம் ஆண்டு அமெரிக்கா கிழக்கு ஆசிய நாடுகள் மீது குறிப்பாக ஈராக் மீது ஒருதலை பட்சமான தாக்குதலை நடத்தியது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை போல் சீனாவையும் வீழ்த்தி விட வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டார்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட களம் என்பது இனச் சிறுபான்மையினர் அதிகமாக வாழக்கூடிய எல்லைப்புறத்தில் அமைந்த ஜின்ஜியாங் மாகாணமாகும்.

சீனாவில் இருந்து புரட்சிக்குப் பிறகு வெளியேறியவர்களையும் 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறியவர்களையும் அமெரிக்கா பயன்படுத்தி பல அமைப்புகளில் உருவாக்கியது. 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெர்மனியில் உலக உய்கூர் இளைஞர் காங்கிரஸ் (WUYC) என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதை உருவாக்கியதில் ஓமர் கனத் என்பவரும், டோல்குன் ஈசா என்பவரும் முக்கிய பங்காற்றினார்கள். ஓமர் கனத் என்பவர் 1971 ஆம் ஆண்டு சீனாவை விட்டு வெளியேறி ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அங்கிருந்து 1979இல் துருக்கிக்குச் சென்று அங்கிருந்து 1999இல் அமெரிக்காவில் குடியேறினார். இதேபோன்று ஈசா என்பவர் 1994 ஆம் ஆண்டு சீனத்தை விட்டு வெளியேறினார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தொடங்கி நடத்தி வந்த ரேடியோ ஃப்ரீ ஆசியான் என்ற வானொலி அமைப்பில் மூத்த ஆசிரியராக கனத் என்பவர் 1999 முதல் 2009 வரை பணியாற்றினார்.

உலக உய்கூர் இளைஞர் காங்கிரஸும், கிழக்கு துர்க்கிஸ்தான் தேசிய காங்கிரஸும் இணைந்து 2004 ஆம் ஆண்டு உலக உய்கூர் காங்கிரஸ் (WUC) என்ற பெரிய அமைப்பை ஜெர்மனியின் முனிச் நகரில் உருவாக்கினார்கள். இதன் தொடக்கத் தலைவராக எர்கின் அல்ப்டேகின் பொறுப்பேற்றார். இவர் சீனாவில் புரட்சியை அடக்கிய கோமிங்தான் கட்சியைச் சேர்ந்தவர். தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர். ஜின்ஜாங்கில் உய்கூர் மக்களுக்கும் மற்ற இனத்தவருக்கும் ஒற்றுமை ஏற்படுத்துவதை கடுமையாக எதிர்த்தவர். சிஐஏவின் நீண்டகால ஏஜெண்டாக இருந்தார். 1970 மற்றும் 80களில் உய்கூர் பிரிவினைவாத சக்திகளை ஒன்றிணைப்பதற்காக சி ஐ ஏ விற்கு உதவி செய்தவர். 14 ஆவது தலாய்லாமாவுடன் நெருக்கமான உறவை வைத்திருப்பவர்.

இந்த அமைப்புகள் போதாது என்று 1998 ஆம் ஆண்டு உய்கூர் அமெரிக்க சங்கம் (UAA) என்ற அமைப்பை அமெரிக்காவில் உருவாக்கினார்கள். இதற்கு சீனாவில் இருந்து ஓடிவிட்ட ருஷான் அப்பாஸ் துணைத் தலைவராக பணியாற்றியது மட்டுமல்ல ரேடியோ ஃப்ரீ ஏசியா என்ற அமெரிக்க வானொலிக்கு செய்தியாளராகவும் பணியாற்றினார். 1993 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உதவியுடன் முதல் உய்கூர் வெளிநாட்டு மாணவர் மற்றும் அறிஞர்கள் சங்கத்தை இணைந்து உருவாக்கினார். இந்த அப்பாஸ் என்பவர் அமெரிக்காவால் கியூபாவின் அருகில் உள்ள தீவில் நடத்தப்படும் குவாண்டநமோ சிறைச்சாலையில் மொழியியல் துறையிலும், மொழிபெயர்ப் பாளராகவும் பணியாற்றினார்.

அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட உய்கூர் அமெரிக்க சங்கத்திற்கு அமெரிக்கா பகிரங்கமாக நிதிஉதவி வழங்கி வருகிறது. உலகில் ஜனநாயகத்தை மீட்பது என்ற பெயரில் தேசிய ஜனநாயக நிதியகத்தை அமெரிக்கா நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் நிதி உதவியுடன் உய்கூர் மனித உரிமைகள் திட்டத்தை உருவாக்கினார்கள். சீனாவிலிருந்து 1995 இல் அமெரிக்காவில் குடிபுகுந்த நூரி துர்கெல் என்பவர் இணைந்து இந்த திட்டத்தை உருவாக்கினார்.சீன எதிர்ப்பு நடவடிக்கையில் இவர் தீவிரமாக ஈடுபட்டதால் 2020 மே மாதம் அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையத்தின் ஆணையராக மாறினார். இது சீனாவில் மத சுதந்திரம் இல்லை என்று பிரச்சாரம் செய்யும் அமைப்பு மட்டுமல்ல உய்கூர் பகுதியில் மததுவேஷத்தை உருவாக்கி கலவரத்தையும் ஏற்படுத்தியது.

 

இந்தக் காலத்தில் 2020 மே 29 அன்று அமெரிக்காவின் தேசிய ஜனநாயக நிதியகம் 2004 ஆம் ஆண்டு முதல் உய்கூர் பிரிவினைவாத குழுக்களுக்கு 8,75,8300 டாலர் நிதி வழங்கியதாக பெருமிதம் கொள்கிறது. உய்கூரில் ஜனநாயக மீட்பு என்ற பெயரால் அனைத்து அமைப்புகளுக்கும், பிரிவினைவாத தீவிரவாத செயல்களுக்கும், அமெரிக்காவில் தேசிய ஜனநாயக நிதியகத்திலிருந்து நிதி வழங்கப்பட்டு வருகிறது.

கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (ETIM) மற்றும் துர்கிஸ்தான் இஸ்லாமிய கட்சி(TIP) 1990 களில் ஹாசன் மாஹ்சூம் என்பவரால் உருவாக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இக்குழுவின் பெயர் துர்கிஸ்தான் இஸ்லாமிய கட்சி என்று மாற்றப்பட்டது. ஜின்ஜியாங் பகுதியை சீனாவில் இருந்து பிரித்து அங்கு ஒரு சுதந்திரமான இஸ்லாமிய அரசை உருவாக்குவதே இவர்களின் முதன்மையான இலக்கு. இதற்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் தாராளமான உதவிகள் கிடைக்கின்றது. இந்த அமைப்பு தாலிபன்கள், அல்-கொய்தா போன்ற சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன. மத்திய கிழக்கு மற்றும் சிரியா போர்களிலும் இவர்களின் போராளிகள் பங்கேற்று உள்ளனர். சீன அரசு இவ் அமைப்புகளை தனது நாட்டின் மிக முக்கிய தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆக கருதுகிறது. ஐக்கிய நாடுகள் சபையும் பல நாடுகளும் இவற்றை தீவிரவாத அமைப்பு என்று பட்டியலிட்டுள்ளது.

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தையும், உய்கூர் முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதன் மூலமும் சீனத்தை துண்டாடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேற்கத்திய நாடுகளின் ஜனநாயக மீட்பு, மத சுதந்திரம் என்ற போர்வையில் நடைபெறக்கூடிய அல்லது நடைபெற்ற வன்முறைகளை அடுத்த தொடரில் பார்ப்போம்.

அ.பாக்கியம்

77 இன கலாச்சாரங்களை பாதுகாத்தல்-

 


அ.பாக்கியம்

கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்தால் இனம் மொழி கலாச்சாரம் அனைத்தையும் அழித்து விடுவார்கள் என்று இன்றும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வரலாறு வேறு விதமாக இருக்கிறது. சீனாவில் இனச் சிறுபான்மையினரின் அனைத்து வித கலாச்சார பொக்கிஷங்களையும் எவ்வாறு பாதுகாத்து காலத்துக்கு தேவையானதை வளர்த்தெடுக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்காக எங்கே விரிவான முறையில் சுட்டிக்காட்டப்படுகிறது.

கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள் குடியரசு அது நிறுவப்பட்ட காலத்திலிருந்து சீனாவின் ஒற்றுமையை உயர்த்தி பிடிப்பதுடன் இனச் சிறுபான்மை குழுக்களின் கலாச்சார பாரம்பரியங்களையும் அரிய பொக்கிஷங்களையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கூர் இன மக்கள் அதிகமாக இருந்தாலும் இங்குள்ள பல்வேறு இனக்குழுக்கள் சீன கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு தனித்துவமான பங்களிப்புகளை செய்து உயிரோட்டமான கலாச்சாரங்களை உருவாக்கி உள்ளது.

பண்டைய காலத்து பட்டுப்பாதையின் ஒரு முக்கிய பகுதியில் இருந்து ஜின்ஜியாங்க் கலாச்சாரம் தோன்றியது. ஆழமான, பாரம்பரியமிக்க, மாறுபட்ட வடிவங்களை கொண்ட, வளமான கலாச்சாரமாகும் இது. பலதரப்பட்ட நாட்டுப்புற கலைகளை உட்கொண்டும், வலுவான பிராந்திய தன்மைகளுடனும், இனப் பண்புகளையும் உள்ளடக்கியது ஜின்ஜியாங்க் கலாச்சாரம். சீன மக்கள் குடியரசு பல ஆண்டுகளாக சீனாவில் உள்ள பல்வேறு சிறுபான்மை இனக்குழுக்களின் கலாச்சார பாரம்பரியத்தை சேகரித்தும், வகைப்படுத்தியும், அவற்றை மொழி பெயர்த்து வெளியிடக்கூடிய பணிகளை செய்து வருகிறது.

இம் மக்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், இயற்கை எழில் நிறைந்த தன்மைகளையும், பிற மதிப்புமிக்க வரலாற்று பாரம்பரியங்களையும், பாதுகாக்க கூடிய பணிகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள் குடியரசும் தொய்வின்றி செய்து வருகிறது. இதற்கு மேலாக அரசாங்க வழிகாட்டுதல் கல்விசார் ஆதரவு, பொதுமக்கள் பங்கேற்க கூடிய முறையில் ஒருங்கிணைக்கும் பாதுகாப்பு அமைப்பை சீன மக்கள் குடியரசு நிறுவியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் அனைத்து இனக்குழுக்களின் சிறந்த கலாச்சார பாரம்பரியத்தின் தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் உறுதி செய்ய முடிகிறது.

1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு மாகாணத்தில் பல்வேறு நிலைகளில் கலைக்குழுக்களையும், கலைக்குழுக்கான பள்ளிகளையும், அது தொடர்பான நிறுவனங்களையும் ஏற்படுத்தினார்கள். இந்த நிறுவனங்கள் மூலம் நாட்டுப்புற இசைகளையும், நடன படைப்புகளையும் சேகரித்து, தொகுத்து, பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியை செய்து வருகிறார்கள். தலைமுறை தலைமுறையாக கலைப்பணியாளர்களுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

1990-களில், ‘சீன இன மற்றும் நாட்டுப்புற இசைக்கருவிகளின் தொகுப்பு (ஜின்ஜியாங் தொகுதி), ‘சீன நாடக இசையின் தொகுப்பு (ஜின்ஜியாங் தொகுதி), ‘சீன நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்பு (ஜின்ஜியாங் தொகுதி), ‘சீன இன மற்றும் நாட்டுப்புற நடனங்களின் தொகுப்பு (ஜின்ஜியாங் தொகுதி)’ உள்ளிட்ட கலை தொடர்பான புத்தகங்கள் அல்லது புத்தகத் தொடர்கள் வெளியிடப்பட்டன. இதன் மூலம், பல்வேறு இனக்குழுக்களின் அனைத்து வகையான சிறந்த பாரம்பரிய இசை மற்றும் நடனங்களும், இசை, இசைக்குறிப்புகள், படங்கள், அத்துடன் உரை மற்றும் ஒலி-ஒளி வடிவங்களில் பாதுகாக்கப்படுவது திறம்பட உறுதி செய்யப்பட்டது.

உய்குர் இசையின் தாய் முகம்ஸ்.

உய்குர் இசையின் தாய்” என்று அழைக்கப்படும் பன்னிரண்டு முகம்ஸ் என்பது உய்குர் பாடல், நடனம் மற்றும் இசையை இணைக்கும் ஒரு செவ்வியல் இசைத் தொகுப்பாகும். பட்டுப்பாதை வர்த்தகத்தினால் இவர்களது கலையில் பாரசீகம், துருக்கி, மற்றும் சீனக் கலாச்சாரங்களின் தாக்கம் ஒருங்கே காணப்படுகிறது. உய்கூர் முகம் (Uyghur Muqam) என்ற தொகுப்பு உய்கூர் கலாச்சாரத்தின் மணிமகுடம் போன்றது. இது இசை, பாடல், நடனம் மற்றும் கவிதை ஆகியவற்றின் தொகுப்பாகும். பன்னிரு முகம் (12 Muqams) உலகப் புகழ்பெற்றது. சுமார் 300-க்கும் மேற்பட்ட மெட்டுகள், பாடல்களைக் கொண்ட ஒரு மாபெரும் இசைக்கோவை. இது சீனாவில் இன இசையின் ஒரு பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. 1949-ல் சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதற்கு முன்பு, பன்னிரண்டு முகம்ஸ் கிட்டத்தட்ட அழிந்துபோகும் நிலையில் இருந்தது.

 

ஆகஸ்ட் 1951-ல், அப்போதைய சின்ஜியாங் மாகாணத்தின் மக்கள் அரசாங்கம், மீட்கப்பட வேண்டிய கலைகளின் பட்டியலில் பன்னிரண்டு முகம்ஸை முதலிடத்தில் பட்டியலிட்டது. அந்நிறுவனம் முறையான ஆராய்ச்சி, சேகரிப்பு மற்றும் தொகுப்பிற்கான முயற்சிகளைத் திரட்டியது. 1955-ல், பன்னிரண்டு முகம்ஸின் இசைப் பதிவு, இசைக்குறிப்புகள் மற்றும் பாடல் வரிகளின் தொகுப்பு ஆகியவை நிறைவடைந்தன. மேலும், பன்னிரண்டு முகம்ஸின் இசைக்குறிப்புகள் 1960-ல் வெளியிடப்பட்டன. இது முற்றிலும் வாய்மொழி மரபிலிருந்து ஒரு எழுத்து வடிவ மரபாக மாறிய திருப்புமுனையைக் குறித்தது.1980-களுக்குப் பிறகு, தன்னாட்சிப் பிராந்தியத்தின் அரசாங்கம் ஒரு முகாம் ஆராய்ச்சி நிறுவனத்தையும் ஒரு முகாம் கலைக் குழுவையும் நிறுவியது.

இந்த நிறுவனமும், கலைக்குழுவும் உய்குர் செவ்வியல் இசை, நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனங்கள், குறிப்பாக முகாம்களைச் சேகரித்தல், வகைப்படுத்துதல், ஆராய்ச்சி செய்தல் மற்றும் நிகழ்த்துவதில் நிபுணத்துவம் பெற்றவை. இதன் மூலம் முகாம் கலைகளின் மீட்பு, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை மேலும் ஊக்குவித்தன. 2003-ல், ஜின்ஜியாங் உய்குர் முகாம் கலைகள் “சீன இன மற்றும் நாட்டுப்புற கலாச்சார பாதுகாப்புத் திட்டத்தின்” முதல் தொகுதி முன்னோடித் திட்டங்களில் சேர்க்கப்பட்டன.

2005-ல், சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் முகாம் கலைகள் யுனெஸ்கோவால் “மனிதகுலத்தின் வாய்மொழி மற்றும் அருவ பாரம்பரியத்தின் தலைசிறந்த படைப்பு” என அங்கீகரிக்கப்பட்டது. இவர்களது கலை, மனித உணர்ச்சிகளையும், இயற்கைக்கும் மனிதனுக்குமான பிணைப் பையும் அழகாக வெளிப்படுத்துகிறது. உலகளாவிய கலாச்சாரப் பன்முகத்தன்மையில், உய்கூர் மக்களின் கலைகள் என்றும் அழியாத ஒரு வண்ணமயமான அத்தியாயமாகத் திகழ்கின்றன.

ஜின்ஜியாங் அனைத்து இன சிறுபான்மையினரின் நாட்டுப்புற இலக்கிய வளங்களின் வளத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக அரசின் ஆதரவுடன், இந்த தன்னாட்சிப் பிராந்தியத்தின் அரசாங்கம், பல்வேறு இன சிறுபான்மையினரின் நாட்டுப்புற இலக்கியப் படைப்புகளை முறையாக மீட்டுப் பாதுகாப்பதற்கான திட்டங்களை வகுத்து, முயற்சிகளை ஒருங்கிணைத்துள்ளது.

 

இதன் விளைவாக, உய்குர், கசாக், மங்கோலிய, கிர்கிஸ், தாஜிக், ஷிபே, உஸ்பெக் மற்றும் பிற மக்களின் நாட்டுப்புறப் பாடல் வரிகள், புராணங்கள் மற்றும் இதிகாசங்கள், நகைச்சுவையான நிகழ்வுகள் மற்றும் கதைகள், நீதிக்கதைகள் மற்றும் பழமொழிகள் உள்ளிட்ட ஏராளமான நாட்டுப்புற இலக்கியப் பாரம்பரியங்கள் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளன. மானஸ், இது கிர்கிஸ் (Kirgiz) மக்களின் மாபெரும் வீர காவியமாகும். ஹோமரின் இலியாட் மற்றும் ஒடிஸி காவியங்களை விடவும் நீண்டதாகக் கருதப்படும் இக்காவியம், தீய சக்திகளுக்கு எதிராகப் போராடிய மானஸ் மற்றும் அவரது சந்ததியினரின் கதையைக் கூறுகிறது. இது யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியப் பட்டியலில் (Intangible Cultural Heritage) இடம்பெற்றுள்ளது.

ஜங்கர் மங்கோலிய (Mongolian) மக்களின் ஓயிரட் (Oirat) பழங்குடியினரிடையே உருவான காவியம் இது. கெசார் திபெத்திய (Tibetan) மக்களின் பாரம்பரியக் காவியமாகும். இது சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாகப் பாடப்பட்டு வருகிறது. வன்முறையை எதிர்த்துப் போராடி, பலவீனமானவர்களைக் காத்த கெசார் மன்னனின் வீரதீர செயல்களை இக்காவியம் விவரிக்கிறது. சுமார் 6 லட்சம் வரிகளைக் கொண்டுள்ள இது, உலகின் மிக நீண்ட மற்றும் தற்போதும் வழக்கில் இருக்கும் ஒரே வாழும் காவியமாக (Living Epic) அறியப்படுகிறது. இது போன்ற அரியவகை நாட்டுப்புற இதிகாசங்களைச் சேகரித்தல், தொகுத்தல், மொழிபெயர்த்தல், வெளியிடுதல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகியவற்றில் பெரும் சாதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு விரிவான துருக்கிய அகராதி மற்றும் பிற விதிவிலக்கான சிறுபான்மையினரின் வரலாற்று மற்றும் கலாச்சாரப் பாரம்பரியங்கள் திறம்படப் பாதுகாக்கப்பட்டுள்ளன. ரபியா என்ற இலக்கியம் உய்குர் இலக்கியத்தில் தாஜ்மகால் என்று போற்றப்படும் ஒரு செவ்வியல் காதல் கதையாகும். இக்காவியம் வெறும் காதல் கதை மட்டுமல்ல. அக்கால சமூகத்தில் நிலவிய பொருளாதார ஏற்றத்தாழ்வையும், சமூக அநீதிகளையும் கடுமையாக விமர்சிக்கிறது. ஃபெர்ஹாத், ஷெரின், மற்றும் கசாக் நெடுங்கவிதைகளான செலிஹா, செமென் ஆகியவை தொகுக்கப்பட்டு சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப் பட்டன.

 

பண்பாட்டுப் பாரம்பரியத்தை மீட்டெடுத்தல்

1980-களின் முற்பகுதியில், சின்ஜியாங்கில் இன சிறுபான்மையினரின் தொன்மையான நூல்களைச் சேகரித்தல், பதிப்பித்தல் மற்றும் வெளியிடுதல் ஆகியவற்றுக்குப் பொறுப்பான ஒரு அலுவலகமும், ஒரு திட்டமிடல் மற்றும் வழிநடத்தும் குழுவும் நிறுவப்பட்டது. 2008-ஆம் ஆண்டுக்குள், ஜின்ஜியாங் சிறுபான்மையினர் தொன்மையான நூல்கள் பதிப்பு அலுவலகம் 20,518 தொகுதிகளை (அல்லது படைப்புகளை) சேகரித்துப் பதிவுசெய்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தலைப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றுள், உய்குர் செவ்வியல் நூலான ‘குடாட்கு பிலிக்’கின் மூன்று கையெழுத்துப் பிரதிகளின் அசல் பிரதிகள், கசாக் மருத்துவப் படைப்பான ‘மருத்துவ ஆண்டுக்குறிப்புகள்’, மற்றும் ஷிபே ஷாமனிச செவ்வியல் நூலான ‘ஷாமன் தெய்வீகப் பாடல்கள்’ போன்றவையும் அடங்கும்.

தன்னாட்சிப் பிராந்தியத்தில் அருவப் பண்பாட்டுப் பாரம்பரியத்தை மீட்டெடுத்தல், தொகுத்தல், ஆய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக, ஜின்ஜியாங் அருவப் பண்பாட்டுப் பாரம்பரியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டது. 2008-ஆம் ஆண்டு , ஜின்ஜியாங்கில் 4,000-க்கும் மேற்பட்ட பண்பாட்டுச் சின்னங்கள் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் 58 இடங்கள், அரசின் பாதுகாப்பின் கீழ் உள்ள முக்கிய பண்பாட்டுச் சின்னங்களாகப் பட்டியலிடப்பட்டன. ஜின்ஜியாங்கில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாப்பதற்கும் புனரமைப்பதற்கும் அரசு எப்போதுமே மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

குவிந்துகிடக்கும் பௌத்த குடைவரைக் கோயில்கள்

பாதுகாப்பு மற்றும் மீட்பு ஆகிய இரண்டிற்கும் முன்னுரிமை அளித்தல்” என்ற வழிகாட்டும் கொள்கையின் கீழ், கிசில் (Kizil Caves) ஆயிரம் புத்தர் குகைகள், சுமார் 236 குகைகள் உள்ளன. பௌத்த மதக் கதைகள், இயற்கை காட்சிகள், மற்றும் கடவுள் உருவங்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான சதுர மீட்டர் பரப்பளவிலான வண்ணமயமான சுவரோவியங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. கும்துரா ஆயிரம் புத்தர் குகைகள் (Kumtura Thousand Buddha Caves) கி.பி. 5 முதல் 11 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட இந்த குகைகளில் 100 க்கும் மேற்பட்ட கோயில்கள் மற்றும் விகாரங்கள் உள்ளன. சிம்சிம் ஆயிரம் புத்தர் குகைகள் இப்பகுதியில் சுமார் 54 குகைகள் காணப்படுகின்றன. இவை வெய்-ஜின் (Wei-Jin) முதல் சுயி-டாங் (Sui-Tang) காலம் வரை உருவாக்கப்பட்டவை ஆகும். இந்த குகைகளில் உள்ள சுவரோவியங்களில் இந்திய-ஈரானிய கலைப் பாணிகளைக் காண முடிகிறது. பெஸ்கிலிக் ஆயிரம் புத்தர் குகைகள் 5 முதல் 14-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. உய்குர் (Uyghur) மொழியில் “பெஸ்கிலிக்” என்றால் “அலங்கரிக்கப்பட்ட இடம்” அல்லது “ஓவியங்கள் நிறைந்த இடம்” என்று பொருள். இங்கு 83 குகைகளில் 57 குகைகள் எஞ்சியுள்ளன. அவற்றில் 40 குகைகளில் 1200 சதுர மீட்டர் பரப்பளவில் வண்ணமயமான புத்தரின் ஓவியங்கள் மற்றும் போதனைகள் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன. காவோசாங் பண்டைய நகர இடிபாடுகள், ஹமி மன்னரின் கல்லறை, யிலி தளபதியின் முன்னாள் இல்லம் போன்ற இப்பகுதியின் முக்கிய கலாச்சார நினைவுச்சின்னத் தளங்களில் ஒரு பெரிய அளவிலான புனரமைப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டில், தன்னாட்சிப் பிராந்தியத்தில் “பட்டுப் பாதைக்கான முக்கிய கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீட்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் (ஜின்ஜியாங் பிரிவு)” தொடங்கப்பட்டது. ஜின்ஜியாங்கில் உள்ள பண்டைய பட்டுப் பாதையின் பிரதான வழித்தடத்தில் அமைந்துள்ள பெரிய வரலாற்றுத் தளங்கள் மற்றும் முக்கிய கலாச்சார பாரம்பரியங்களை முழுமையாக மீட்டுப் பாதுகாப்பதற்காக, விரிவான நிதி மற்றும் மனித வளங்கள் திரட்டப்பட்டு மீட்டெடுக்கப்பட்டன.

சமீபத்திய ஆண்டுகளில், காஷி மற்றும் பிற புகழ்பெற்ற வரலாற்று மற்றும் கலாச்சார நகரங்களைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக, காஷி பட்டுப்பாதையில் ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது. இந்த நகரமும் அதன் கலாச்சாரமும் தனித்துவமான இனப் பண்புகளைக் கொண்டுள்ளன. ஆனால், இந்த நகரம் அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதிக்கப்படும் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. மேலும், காஷியின் பழைய நகரத்தில் உள்ள வீடுகள் பெரும்பாலும் பழமையானவையாகவும் சிதிலமடைந்தவையாகவும் இருப்பதால், நிலநடுக்கம் அல்லது தீ விபத்துகளால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவையாக உள்ளன. மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும், அதே நேரத்தில் பழைய வீடுகளின் நிலநடுக்கத் தடுப்புத் திறனை அதிகரிக்கவும், பண்டைய நகரத்தின் அசல் தோற்றத்தைப் பாதுகாக்கவும், சீனா 2009 பிப்ரவரியில் பழைய காஷி நகரத்தில் உள்ள சிதிலமடைந்த வீடுகளின் விரிவான புனரமைப்புப் பணியை அதிகாரப்பூர்வமாக மேற்கொண்டது. வரலாற்று மற்றும் கலாச்சார நகரங்களுக்கான தேசிய பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்க செய்யப்படும் இந்தப் புனரமைப்புப் பணிகளுக்காக மூன்று பில்லியன் யுவான் செலவிடப்பட்டுள்ளது. புனரமைப்பின் போது காஷியின் அசல் தோற்றத்தைப் பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவே புனரமைப்புக்குப் பிறகும் கட்டமைப்புகள் அவற்றின் அசல் கட்டடக்கலை மற்றும் கலாச்சாரப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளும்.

சின்ஜியாங்கின் நாட்டுப்புறக் கலாச்சாரங்களும் கலைகளும், கடந்தகால மரபுகளைப் பின்பற்றுவதன் அடிப்படையில் மேலும் வளர்ச்சி கண்டுள்ளன. உய்குர்களின் “மெஷ்ரெப்,”( பாரம்பரியக் கலை மற்றும் சமூகக் கூட்டம்) கசாக் மக்களின் “ஆய்டெஸ்,”( இது “இருபக்க உரையாடல்” அல்லது “பாட்டுப் போட்டி” என்று பொருள்படும் .) கிர்கிஸ் மக்களின் “கோபுஸ் பாலாட் பாடல் திருவிழா,” மங்கோலிய மக்களின் “நாடம் திருவிழா,”( மங்கோலிய மக்களின் “நாடம் திருவிழா” (Naadam Festival) என்பது அவர்களின் மிக முக்கியமான மற்றும் பிரமாண்டமான பாரம்பரியக் கொண்டாட்டமாகும். மங்கோலிய மொழியில் “நாடம்” என்றால் “விளையாட்டுகள்” அல்லது “மகிழ்ச்சி” என்று பொருள்படும்) ஷிபே மக்களின் “மேற்கு நகர்வுத் திருவிழா” மற்றும் ஹான் மக்களின் “விளக்குத் திருவிழா” போன்ற பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகள் பரவலாக நடத்தப்பட்டுள்ளன. நவீன நாடகமான குன்செம், உய்குர் நாடகங்களான கெரிப் மற்றும் செனெம், சாகசக் கலை நிகழ்ச்சியான தர்வாஸ், அத்துடன் கசாக் ஆய்டெஸ், போன்ற வளமான இன மற்றும் பிராந்தியப் பண்புகளைக் கொண்ட பல அற்புதமான நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன. 21 ஆம் நூற்றாண்டில், ‘ஜின்ஜியாங் என்ற நல்ல இடம்’, ‘தியான்ஷான் மலையின் மகிழ்ச்சிப் பாடல்கள்’ மற்றும் ‘காஷ்கர்’ உட்பட 20 க்கும் மேற்பட்ட நாட்டுப்புறப் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் தேசியப் பரிசுகளை வென்றுள்ளன.

சிறுபான்மை மொழிகள் நமது காலத்தின் வளர்ச்சிக்கு ஈடுகொடுப்பதை உறுதி செய்வதற்காக, சீனா “ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்தின் சிறுபான்மை இன மக்களின் மொழிகள் மற்றும் எழுத்துமுறைகள் மீதான பணிக்குழு” மற்றும் பல்வேறு நிலைகளில் சிறுபான்மை மொழிகளுக்கான ஆராய்ச்சி நிறுவனங்களை அமைத்துள்ளது. இவை சிறுபான்மை இன மக்களின் மொழிகளை ஒழுங்குபடுத்துதல், தரப்படுத்துதல், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் நிர்வாகம் ஆகியவற்றுக்குப் பொறுப்பாகும். அரசாங்கத்தின் ஆதரவுடன், “போக்டா உய்குர்-கசாக்-கிர்கிஸ் மொழிகளுக்கான அச்சுக்கோர்ப்பு முறை,” “சிபே மற்றும் மஞ்சு மொழிகளுக்கான செயலாக்க மற்றும் திறமையான அச்சிடும் முறை,” “ஜின்ஜியாங் 2000” மற்றும் “அரபு மற்றும் பன்மொழிகளுக்கான அச்சுக்கோர்ப்பு முறை” போன்ற மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மென்பொருள் குறியீடு, விசைப்பலகை அமைப்பு மற்றும் உள்ளீட்டு முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில், பிற சிறுபான்மை இன மக்களின் மொழிகளுக்கான தரநிலைகள் மற்றும் மென்பொருள் மேம்பாட்டு முறைகளுக்கு இவை வழிகாட்டுதல்களை வழங்குகின்றன.

ஜின்ஜியாங் மாகாணத்தில் இருக்கக்கூடிய இனச் சிறுபான்மை மக்கள்,குறிப்பாக உய்கூர் இஸ்லாமிய மக்களின் பாரம்பரியங்கள் உட்பட அனைத்து இனங்களின் பாரம்பரியங்களையும் உலகின் வேற எந்த நாடுகளும் செய்யாத அளவிற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள் குடியரசும் பாதுகாத்து வருவது மட்டுமல்ல வளர்த்தெடுக்கும் பணிகளையும் செய்து வருகின்றார்கள்.

அ.பாக்கியம்

வியாழன், ஜூன் 11, 2026

76 கல்வியும்-தொழில்கல்வியும் பயங்கரவாதத்தை வீழ்த்திய பேராயுதம்

 


அ. பாக்கியம்

வறுமை வேலையின்மை மாற்று வேலை வாய்ப்புகள் இல்லாமல் குறைந்த அளவிலான கல்வி ஆகியவையே வன்முறை தீவிரவாதத்திற்கான பின்னணி காரணங்களாகும். அத்துடன் மத நம்பிக்கைகள் இன வேறுபாடுகள் மற்றும் அரசியல் சித்தாந்தங்களின் வன்முறை தீவிரவாத குழுக்களின் சிதைவு இவற்றுடன் இணைந்த சுரண்டல் ஆகியவைகளும் காரணங்களாகும்.(வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான முக்கிய நாடுகளின் திட்டத்திலிருந்து)

தீவிரவாதத்தின் செயல் வடிவமாக இருக்கக்கூடிய பயங்கரவாதம் மனித குலத்தின் பொதுவான எதிரிகள். இவை இரண்டையும் எதிர்த்து சர்வதேச சமூகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஒழித்துக்கட்டி மக்கள் வாழ்விற்கான சூழலை உறுதி செய்வது ஒரு அரசின் கடமையாகும். 1990 முதல் உலகளாவிய தீவிரவாதமும், பயங்கரவாதமும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாத தாக்குதல்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம், ரஷ்யா, துருக்கி, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, இலங்கை போன்ற நாடுகளிலும் பல பிராந்தியங்களிலும் பெரும் உயிரிழப்பு களையும் உடமை சேதாரங்களையும் ஏற்படுத்தி உள்ளது என்பதை உலகம் அறியும்.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொண்ட நீண்ட வரலாற்றை உடையது. 20ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் அதாவது 1940 ஆம் ஆண்டுகளில் தீவிரவாதமும், பிரிவினைவாதமும் பான்-துருக்கியம், பான் இஸ்லாமியம் என்ற பெயரில் பரவ ஆரம்பித்தது. இதன் தொடர்ச்சியாக ஜின்ஜியாங் மாகாணத்தை பிரித்து கிழக்கு துருக்கிஸ்தான் என்ற தேவ ராஜ்ஜிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று பிரிவினைவாதிகள் முயன்றார்கள். சீனாவை பிளவுபடுத்தும் நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை முன்வைத்து பயங்கரவாத நடவடிக்கைகளில் இறங்கினார்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக புரட்சி நடைபெற்று சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட பிறகு தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி மக்களை வென்றெடுத்தார்கள்.

1990 ஆம் ஆண்டுகளில் சர்வதேச சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டது. சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு தேசிய இன பிரச்சனைகள் சோவியத் ஒன்றியத்தில் தலை தூக்கியது. இதனால் பல தனித்தனி நாடுகள் உருவாகியது. கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள் சிதைவுகளுக்கு உள்ளாகி பல நாடுகளாக மாறியது. இந்த மாற்றங்களில் அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் வலுவான தலையீடுகள் இருந்தது. இதே காலத்தில் சீனாவில் ஏற்பட்ட தியானன்மென் சதுக்கம் போராட்டங்களும், அமெரிக்கா ஈராக் மீது படையெடுப்பு போன்ற சங்கிலிதொடர் நிகழ்வுகள் பிரிவினை சக்திகளை ஊக்குவித்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் கிழக்கு துர்கிஸ்தான் என்ற பிரிவினை கோஷங்கள் உயிர்பெற்றது.

1990 முதல் 2016 ஆம் ஆண்டுகளின் இறுதிவரை ஜின்ஜியாங் மாகாணத்தில் பிரிவினைவாதிகளும், மதத்தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் குண்டு வெடிப்புகளையும், படுகொலைகளையும், தீ வைப்புகள், தாக்குதல்கள், கலவரங்கள் ஆகியவற்றை விரிவான முறையில் செய்வதற்கான சதிகளில் இறங்கினார்கள். இவர்களின் இந்த நடவடிக்கைகளால் பல அப்பாவி மக்களும் நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகளும் மரணம் அடைந்தனர். மேலே குறிப்பிட்ட 20 ஆண்டு காலங்களில் ஜின்ஜியாங் மாகாணத்தில் பயங்கரவாத செயல்கள் அடிக்கடி நடைபெற்று கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. சீனாவின் வளர்ச்சிக்கு இது மிகப்பெரிய சவாலாக மாறியது.

வளர்ச்சியின்மையை பயன்படுத்துவது

தீவிரவாதிகள் பலவீனமா கண்ணிகளை தங்களது செயலுக்க சாதகமாக பயன்படுத்தினர். அதிக மதநம்பிக்கை உள்ள மக்கள், இதர சமுகங்களுடன் அதிக தொடர்பில்லாத மக்களை குறிவைத்தனர். அது மட்டுமல்ல விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் போதுமான அளவுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாத நிலைமைகளையும், குறைவான நவீன அறிவியல் அறிவு இருக்கின்ற பகுதியிலும், குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மக்கள் தொகை குவியலாக இருக்கக்கூடிய இடங்களிலும் இந்த தீவிரவாத செயல்களை முன்னெடுத்தனர்.

     மத கோட்பாடுகளையும் அதன் நியதிகளையும் வேண்டுமென்றே சிதைத்து பிற்போக்குத்தனமான கருத்துக்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தனர். மதச்சார்பற்ற கருத்துக்களையும், அதன் சாதனைகளையும் மறுத்து சொர்க்கத்தில் நுழைவதற்கான ஒரு புனிதப் போரில் ஈடுபட்டு தங்களின் மத நம்பிக்கைகளுக்காக இறக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள். மதத்தின் நியதிகளை கடைபிடிக்கக்கூடிய உயர்ந்த மத தலைவர்களை இந்த தீவிரவாதிகள் ஒதுக்கி வைத்தது மட்டுமல்ல துன்புறுத்தி படுகொலை செய்தார்கள். சீனாவையும், சீன மொழியையும் நவீன அறிவியலையும் புறக்கணிக்க வேண்டும் என்று தூங்கிவிட்டது மட்டுமல்ல, அரசியல் சட்டத்தை மீற வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்கள். ஒவ்வொருவரின் தலைவிதி முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதன்படிதான் அனைத்தும் நடக்கும் என்று முலைச்சலவை செய்தனர்.

தீவிரவாதமும் பயங்கரவாதமும் உருவாவதற்கு அரசியல் பொருளாதாரம் மற்றும் கலாச்சார காரணிகள் அடிப்படையாக அமைகின்றது உலகளாவிய பல நாடுகளில் அல்லது பிராந்தியங்களில் இது போன்ற தீவிரவாத செயல்கள் தலைதூக்குகின்றன. ஒவ்வொரு நாடும் தீவிரவாதத்தை தடுப்பதற்கு அவர்கள் ஏற்றுக் கொண்டபாநடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். இந்த நடவடிக்கை அந்தந்த நாட்டின் வரலாற்று அம்சங்களையும் கலாச்சார மரபுகளையும் சமூகப் பொருளாதார வளர்ச்சி நிலைமைகளையும் கல்வி வேலை வாய்ப்பு ஆகியவற்றை சார்ந்தும் அமைந்திருக்கிறது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் தீவிரவாதத்தையும் பிரிவினைவாக பயங்கரவாதத்தையும் ஊற்றிக் கொள்வதற்கு சீன சூழலுக்கு ஏற்ற நடைமுறைகளை கடைபிடித்தார்கள்..

சட்டம் சார்ந்த கல்வியும் பயிற்சியும்

சீனாவில் சட்டத்தின் ஆட்சி என்ற உணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது முதல் தேவியாக இருந்தது. எனவே சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்புச் சட்டம் குற்றவியல் சட்டம் அறிவியல் நடைமுறைச் சட்டம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் மத விவகாரங்களுக்கான மாகாணத்தின் உள்ளூர் விதிமுறை சட்டங்கள் ஆகியவற்றை பற்றி விரிவான முறையில் மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது. கல்விச்சாலைகள் இந்த கருத்துக்களின் வாகனமாக அமைந்தது.

     

இதன் அடிப்படையில் சட்ட விரோத செயல்களையும் குற்றச் செயல்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். குற்றச் செயல்கள் பொது பாதுகாப்பு என்ற அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு குற்றம் நடைபெறுவதற்கான சூழல்கள் என்ன என்பதையும் இச்செயலில் ஈடுபட்டவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து கொண்ட பொழுது அவர்கள் மீதான வழக்குகள் தொடுவதில்லை என்று கைவிடப்படும் முறை கடைபிடிக்கப்பட்டது.

பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு கட்டாயமாகவோ அல்லது தூண்டுதல் பேரில்லையோ தங்களை அறியாமல் ஈடுபட்ட இளைஞர்களுக்கு தனியான பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு சட்டத்தின் ஆட்சி பற்றியும் சமூக வளர்ச்சி பற்றியும் போதிக்கப்பட்டது. மூன்றாவதாக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு விடுதலை பெற்றவர்களுக்கான பிரத்தியேகமான திட்டங்களை உருவாக்கி அவர்களை பொது சமூகத்தில் இணைப்பதற்கான முயற்சிகள் திட்டமிடப்பட்டது.

மேற்கண்ட 3 பகுதி இளைஞர்களையும் இணைப்பதற்கு அவர்களுக்கு கல்வி அளிப்பது தொழிற்கல்வி அளித்து வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கக் கூடிய பணிகளை செய்தார்கள். இந்தக் கல்வியும் தொழிற்கல்வியும் அனைத்தும் இலவசமாக செய்து கொடுக்கப்பட்டது.

பயிற்சியின் உள்ளடக்கம் பாதையை மாற்றியது.

மதத் தீவிரவாதத்தையும் அடிக்கடி நிகழும் பயங்கரவாத சம்பவங்களின் வரவழை கட்டுப்படுத்துவதற்கும் இந்த மாகாணத்தில் தொழிற்கல்விக்கான அதை உருவாக்கியது மட்டுமல்ல பயிற்சி மையங்களையும் உருவாக்கினார்கள். கல்வி அறிவை வளர்ப்பது தொழில் திறன்களை இந்த இளைஞர்களிடம் உருவாக்குவது தீவிரவாத கொள்கைகளில் இருந்து அரசியல் ரீதியாக வென்றெடுப்பதற்கான பாடத்திட்டத்தை செயல்படுத்தினார்கள்.

பயிற்சி பெறக்கூடியவர்களுக்கு அவர்களின் படிப்புக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் வழங்குகிறார்கள் இவர்களுக்கு என்று உருவாக்கப்பட்ட பாட புத்தகங்களை பயன்படுத்தி அதற்கான ஆசிரியர்கள் பணி அமர்த்த படுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் கல்வியும் வேலைவாய்ப்பையும் பெறுவதற்கான தொழில்கல்வித் திறனை வளர்க்க முடிகிறது. தரமான சீன மொழியை பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயிற்சி கொடுப்பது மூலமாக சீன நாடு முழுவதும் செல்வதற்கும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்கும் தொழில் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கும் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கும் பிற இன குழுக்கள் உடன் தங்குதடையின்றி தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த பயிற்சி மையங்கள் அடிப்படை காரணமாக அமைந்தது.

அதே நேரத்தில் இனச் சிறுபான்மை இளைஞர்களின் மொழிகளை பயன்படுத்துவதற்கும் படிப்பதற்குமான உரிமைகளும் வழங்கப் பட்டன. அதற்கான எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் உரிமைகள் இருந்தது. கல்வி மற்றும் பயிற்சி என்பது ஒரு நபரின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தவும் அல்லது கட்டுப்படுத்தவோ இருக்கக்கூடிய ஒரு நடவடிக்கை அல்ல அதற்கு மாறாக பயங்கரவாதம் மற்றும் மத தீவிரவாத கருத்துக்களில் இருந்து இளைஞர்களை மீட்டெடுப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக மட்டுமே இந்த பள்ளிகளும் கல்வி நிலையங்களும் பயிற்சி நிலையங்களும் செயல்பட்டது. இந்த மையங்களில் இணைவதற்கான ஒரே அளவுகோல் பயிற்சி பெற வரக்கூடியவர் பயங்கரவாத செயல்களிலோ தீவிரவாதம் சம்பந்தப்பட்ட சட்டவிரோத செயல்களிலோ ஈடுபட்டாரா என்பது மட்டும்தான் அளவுகோலாக இருந்தது. இந்த பயிற்சி மையங்களில் அவர்களின் பிராந்தியம் இனம் அல்லது மதத்துடன் எந்த விதமான தலையிடும் செய்யாமல் செயல்படுத்தப்பட்டது

அனைத்து இனக்குழுக்களின் பழக்கவழக்கங்களும், அவர்களின் பேச்சு மற்றும் எழுத்து மொழிகளைப் பயன்படுத்தும் உரிமையும் மையங்களில் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன. மையங்களில் உள்ள விதிமுறைகள், பாடத்திட்டங்கள் மற்றும் மெனுக்கள் அனைத்தும் உள்ளூர் இன மொழிகளையும் நிலையான சீன மொழியையும் பயன்படுத்துகின்றன. அனைத்து இனக்குழுக்களின் பழக்கவழக்கங்களும் முழுமையாக மதிக்கப்பட்டு பாதுகாக்கப் படுகின்றன, மேலும் பல்வேறு வகையான சத்தான உணவுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கல்வி மற்றும் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவர்களின் மத நம்பிக்கை சுதந்திரத்தை பாதுகாக்கின்ற அதே நேரத்தில் மத விவகாரங்கள் தொடர்பான விதிமுறைகளும் கண்டிப்பான முறையில் கடைபிடிக்கப்படுகிறது. மதப் பிரச்சாரம் மத நடவடிக்கைகள் மத அமைப்புகளை நிறுவுதல் போன்றவற்றை பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் முழுமையாக தடை செய்யப்படுகிறது. அதாவது கல்வி மற்றும் மதத்தை பிரித்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் இது ஒன்றாகும். பயிற்சி பெறக்கூடியவர்கள் பயிற்சி நிலையங்களில் மத நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவோ அதாவது நடத்துவதற்கோ பங்கேற்பதற்கோ அனுமதி இல்லை அவர்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட இடங்களிலோ மத நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

அனைத்து பயிற்சி பெறுபவர்களும் பொது ஓய்வூதியம் மற்றும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர், மேலும் இலவச சுகாதார பரிசோதனைக்கு உரிமை உண்டு. குடும்பக் கவலைகளிலிருந்து அவர்களை விடுவிக்க, ஜின்ஜியாங்கின் அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள், சமூகப் பாதுகாப்பு, கல்வி, மருத்துவ சேவை மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் முன்னுரிமை கொள்கைகளின் அடிப்படையில் பயிற்சி பெறுபவர்களின் குடும்பங்களை சமமாக நடத்துகிறார்கள். மேலும் அவர்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் வேலை, அன்றாட வாழ்க்கை, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் மருத்துவ சேவைகளில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க உதவுகிறார்கள்,

கல்வியும் பயிற்சியும் பலனை கொடுத்தது

பயங்கரவாதமும் மத தீவிரவாதமும் சட்ட விரோத நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கல்வியும் பயிற்சியும் அதற்குரிய பலனை கொடுத்துள்ளனர். சட்டத்தின் ஆட்சி பற்றிய மக்களின் புரிதல் பல மட்டம் உயர்ந்துள்ளது குடிமக்கள் அரசியல் அமைப்பிற்கும் பிற சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற ஒரு பொதுவான அங்கீகாரத்தை நோக்கி முன்னேறி உள்ளார்கள். தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட இளைஞர்கள் தங்களது கல்வி அறிவையும் சீன மொழி பேசும் திறனையும் தொழில் திறனையும் அதிகமாக பெற்றிருப்பது நாள் மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மத தீவிரவாதம் மதத்தை சிதைவு படுத்தக்கூடியவர்களின் செயல் என்பதை உணர்ந்து இருக்கிறார்கள் மத தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கக்கூடிய அளவிற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

சமூக சூழலில் சீன மக்கள் குடியரசு எடுத்த முயற்சிகள் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கல்வியும் பயிற்சியும் மனநிலையை மாற்றியது மட்டுமல்ல இனக்குழுக்கள் இடையே பரஸ்பரம் மரியாதையை உயர்த்தி உள்ளது. அதே நேரத்தில் உணவு உடை வீட்டு வசதி போக்குவரத்து திருமணங்கள் இறுதிச் சடங்குகள் மற்ற பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நவீன சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் தங்களது தகவமைப்பு திறன்களை மக்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கல்வியும் பயிற்சியும் பெற்றவர்கள் காலாவதியான மரபுகளையும் பழக்க வழக்கங்களையும் கைவிட்டு உள்ளனர். நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை நோக்கியும் பண்பட்ட வாழ்வை நோக்கியும் விரும்பிச் செல்லுகின்றனர். சீன மக்கள் குடியரசின் இந்த முயற்சிகள் ஜின்ஜியாங் மாகாணத்தில் பயங்கரவாதத்தையும் மத தீவிரவாதத்தையும் குறைத்து உள்ளது மட்டுமல்ல இக்காலத்தில் எதுவும் நடைபெறவும் இல்லை.

சமூகச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களும் அமைதியான அதே நேரத்தில் இயல்பான நிலைமைகள் திரும்பிய பிறகு 2018 ஆம் ஆண்டு முதல் சுற்றுலா தொழில் பிரமாண்டமான வளர்ச்சியை கண்டுள்ளது. ஜின்ஜியாங் மாகாணத்திற்கு சீனாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 150 மில்லியனுக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இது ஆண்டுக்கு 40 சதவீதம் உயர்வாகும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டும் 2.6 மில்லியன் பேர் அதாவது 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

சர்வதேச சமூகம் ஜின்ஜியாங்கின் முயற்சிகள் குறித்து நேர்மறையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. கல்வி மற்றும் பயிற்சி சர்வதேச சமூகத்தின் பொதுவான ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. டிசம்பர் 2018 இறுதியிலிருந்து, கிட்டத்தட்ட 1,000 பேர் ஜின்ஜியாங்கிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் சீனாவிற்கான வெளிநாட்டு இராஜதந்திர தூதர்கள், ஐ.நா. அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் ஜெனீவாவை தளமாகக் கொண்ட மூத்த இராஜதந்திரிகள், அத்துடன் பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், செய்தி ஊடகங்கள் மற்றும் மத அமைப்புகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குழுக்கள் (அல்லது பிரதிநிதிகள்) உள்ளனர். களப்பயணங்கள் மூலம், பலர் உண்மையை உணர்ந்து, கல்வி மற்றும் பயிற்சியை மேற்கொள்வதன் அவசரம், அவசியம், சட்டபூர்வமான தன்மை மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றைப் புரிந்துகொண்டுள்ளனர்.

தீவிரவாதத்தை எதிர்ப்பதில் அனுபவம்

சில நாடுகள் தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மையங்களை நிறுவி கல்வி கற்கும் போதனைகளை செய்கிறார்கள். சில நாடுகள் கல்வி மற்றும் மன மாற்ற மையங்களை அமைத்துள்ளார்கள். மேலும் சில நாடுகள் சிறைச்சாலைகள் சமூக நலக்கூடங்கள் இரண்டிலும் பயங்கரவாதிகளை வயிற்றுவித்து மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். சில நாடுகள் தீவிரவாதிகள் இஸ்லாமிய கோட்பாட்டை தவறாக சித்தரிப்பதை கண்டிக்கிறார்கள் ஆனால் மதத்தின் உள்ளடக்கத்தை ஊக்குவித்து மிதமான இஸ்லாத்தை ஆதரிக்கின்றார்கள். வேறு சில நாடுகள் அவர்களை தனிமைப்படுத்தி பயிற்சியில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

ஆனால் சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் பயங்கரவாதத் தாலும் மத தீவிர போதனைகளாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழிற்கல்வியும் பயிற்சி மையங்களையும் வேலைவாய்ப்பையும் உருவாக்குவதன் மூலம் மற்ற நாடுகளின் முயற்சியில் இருந்து வேறுபட்டு இருக்கிறார்கள். தீவிரவாதம் உருவாகக்கூடிய மூலத்தை கண்டுபிடித்து அவற்றை தீர்ப்பதற்கான முயற்சி தான் இது இந்த குறிக்கோள்கள் வெற்றி கண்டுள்ளது. சின்ஜியாங்கின் தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்கள் குறிப்பிடத்தக்க முடிவுகளை அடைந்துள்ளன, மேலும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளுக்கு அனுபவத்தை பங்களித்துள்ளன. சட்டத்தின் ஆட்சியை ஊக்குவித்தல். சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு சோசலிச நாட்டைக் கட்டியெழுப்ப சீன பண்புகளுடன் கூடிய சோசலிசத்தை வளர்ப்பது அவசியமான தேவையாகும்

அரசாங்கம் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உறுதியான முடிவுகளை அடைய வேண்டும். மக்களின் உயிர்கள், சுகாதாரம், சொத்துக்கள் மற்றும் பிற அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும், பாதுகாப்பான, நிலையான மற்றும் இணக்கமான வாழ்க்கைச் சூழலை வழங்குவதும் ஒரு பொறுப்பான அரசாங்கத்தின் கட்டாயக் கடமையாகும். ஜின்ஜியாங்கில் உள்ள அனைத்து மட்டங்களிலும் உள்ள அரசாங்கங்கள், மக்களுக்கு தங்கள் பொறுப்பை மனதில் கொண்டு, பயங்கரவாத மற்றும் மத தீவிரவாத போதனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கும் மறுவாழ்வு அளிப்பதற்கும் பொறுமையான, கவனமான மற்றும் மிகவும் கடினமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. தொழிற்கல்வி மற்றும் பயிற்சியில் வெற்றி பெறுவது நீதியை ஊக்குவிக்கிறது, மக்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கிறது மற்றும் அரசாங்கத்தின் நேர்மறையான பிம்பத்தை அளிக்கிறது.

 

ஜின்ஜியாங்கில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி பயங்கரவாதம் மற்றும் மத தீவிரவாதம் இனப்பெருக்கம் செய்து பரவ உதவும் நிலைமைகளை திறம்பட ஒழிக்க முடியும் என்பதை நடைமுறை நிரூபித்துள்ளது. தொழிற்கல்வி மற்றும் பயிற்சியில் ஜின்ஜியாங்கின் முயற்சிகளின் குறிக்கோள் பயங்கரவாதம் மற்றும் மத தீவிரவாதத்தின் மூலங்களை அகற்றுவதாகும். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜின்ஜியாங் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளத. முன்னேற்றங்களைச் செய்ய முடியும்.

 

அ.பாக்கியம்

79 உய்குர்∶ வெடிகுண்டுகளின் கொலைக்களம்

  அ.பாக்கியம் சமுக மாற்றத்தை படைக்கின்ற , முதலாளித்துவத்திற்கு மாற்றுச் சித்தாந்தை ஏற்றுக்கொண்ட ஒரு அரசை படையெடுத்துதான் வீழ்த்த வேண்டும...