Pages

வெள்ளி, செப்டம்பர் 11, 2026

89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

 

அ.பாக்கியம்

காரல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூலம் மனித சமுதாய வரலாற்று வளர்ச்சியின் விதிகளை கண்டறிந்தனர். மனித குல வரலாற்று வளர்ச்சிப் போக்கில், தேசம் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உருவான, அதாவது முதலாளித்து சகாப்தத்தில் உருவான ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு மாற்றங்களுக்கு உட்பட்டது. குறிப்பாக தேசம் என்ற அமைப்பு பொருளாதார அரசியல் மற்றும் கலாச்சார காரணிகளின் ஒருங்கிணைப்பால் உருவான ஒரு சமூக வரலாற்று நிகழ்வு ஆகும்.

புராதன காலத்தில் தேசங்கள் என்று உலகில் எங்கும் இல்லை. பண்டைய கிரேக்கம், எகிப்து, சீனா, இந்தியா இவையெல்லாம் ஒரு நாகரிகங்களாக இருந்தனவே தவிர தேசங்களாக இல்லை. கட்டிடக்கலை, இலக்கியம், கலை என வியத்தகு பல அம்சங்கள் பண்டைய காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால் அவை தேசங்களாக இருந்ததில்லை. உலகில் எந்த தேசமும் பழமையானவை அல்ல. அவை 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் அதாவது முதலாளித்து சமூக அமைப்பின் உருவாக்கமாகும். தேச அரசு (நேஷன் ஸ்டேட்) என்பது இக்காலத்தில் உருவானதுதான்.

கடந்த காலத்தில் மாபெரும் அரசுகளும், சாம்ராஜ்யங்களும் இருந்தனவே அவையும் தேசமாகாத என்ற கேள்வி எழலாம். மௌரியர்கள், முகலாயர்கள், தில்லி சுல்தான்கள், விஜயநகர அரசர்கள், மராத்தியர்கள் இவை அனைத்தும் மிகப்பெரிய அரசை கொண்டு இருந்தாலும் அவை சாம்ராஜ்யங்களாக மட்டுமே இருந்தன. வெவ்வேறு பகுதிகளை படை பலத்தைக் கொண்டு மட்டுமே கப்பம் வசூலித்து ஒருங்கிணைக்கப்பட்டவை ஆகும். தேசம் என்பது அவ்வாறு இணைக்கப்பட முடியாதவை.

தேசத்தின் உண்மைகளும் பொய்களும்

பார்த்தா சாட்டர்ஜி தேசத்தின் உண்மைகளும் பொய்களும் என்ற தனது நூலில் கீழ்க்கண்டவாறு விவாதிக்கிறார். “அசோகரும், அக்பரும் நல்ல அரசர்களாய் இருந்திருக்கலாம். மக்கள் அந்த அரசர்களின் கீழ் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்றே கூட வைத்துக்கொள்வோம். ஆனாலும் அசோகரின் சாம்ராஜ்யமோ, அக்பரின் சாம்ராஜ்யமோ வெகுஜன இறையாண்மையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அக்காலத்தில் அதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. மக்கள் அரசனுக்கு ஆட்பட்டவர்கள். இறையாண்மை என்பது அரசனைச் சார்ந்தது என்றே கருதினார்கள.

வெகுஜன இறையாண்மை என்பது ஒரு நவீனக் கருத்தாக்கம். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வட அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் உருவாகி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவுக்குப் பரவிபிறகு இருபதாம் நூற்றாண்டில் ஆசியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் பரவியது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நிச்சயமாக எனக்குத் தெரியும்.

பிரஞ்சு புரட்சியாளர்கள் 1789 ஆம் ஆண்டு தேசத்தின் பிரதிநிதிகளாகத் தங்களைக் கருதி, நாட்டை ஆள்பவர்கள் பொதுமக்களாக இருக்க வேண்டுமேயன்றி அரசனோ, பிரபுக்களோ அல்ல என்று குரலெழுப்பினார்கள். அரசனின் தலையை அவர்கள் வெட்டினார்கள். ஐரோப்பாவிலிருந்து புலம்பெயர்ந்து வட அமெரிக்காவிலும்தென்னமெரிக்காவிலும் பிரிட்டிஷ், ஸ்பானிய காலனிகளில் வாழ்ந்த மக்கள், தாங்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளைத் தேசங்கள் என்று பிரகடனம் செய்து காலனிய ஆட்சிக்கு எதிராகக் குரலெழுப்பி அத்தேசங்களை மக்கள் குடியரசுகளாக அறிவித்தார்கள். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டு நெடுகவும் வெவ்வேறு இன மக்கள் தங்களை ஒரு தேசமாகப் பிரகடனம் செய்து, அவர்களுக்கென தனி அரசுக்கு உரிமை கோரினார்கள். வெகுஜன இறையாண்மையைக் கோராமல் தேசம் என்பது சாத்தியமில்லை. ஆதலால், எல்லாத் தேசங்களும் நவீனமானவையே.” (பக்கம் 23)

ஒரு தேசம் உருவாவதற்கு முன்பு இருந்த நிலைமைகள் எவ்வாறு மாற்றம் அடைந்தன என்பதையும் காரல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் ஆய்வு மூலம் அறிந்து கொண்டு விளக்கினார்கள். மார்க்சிய விஞ்ஞான கோட்பாட்டின் அடிப்படையில் சமூகத்தில் இருக்கின்ற உற்பத்தி சக்திகளின் முன்னேற்றம் தான் அதாவது, உழைப்பு, கருவிகள், தொழில்நுட்பங்கள், மனிதனின் திறமைகள், அறிவியல் அறிவு, போன்றவைதான் ஒரு இனத்தின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், அதன் மறை விற்கும் அடிப்படை காரணியாக அமைகிறது என்பதை விளக்கினார்கள். இவற்றை மார்க்சிசத்தின் வரலாற்றுப் பொருள் முதல்வாத அணுகு முறையில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

சமூக அமைப்பின் அடித்தளம்

ஒரு சமூக அமைப்பின் அடித்தளம் என்பது உற்பத்தி சக்திகள் தான். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கும், தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இயற்கையுடன் இடையீடு செய்கிறார்கள். இந்த இடையீட்டின் போது பயன்படுத்தப்படும் கருவிகள், தொழில்நுட்பங்கள், உற்பத்தி திறன்கள் ஆகியவைதான் உற்பத்தி சக்திகள் என்று குறிப்பிடப்படுகின்றன. இதன் மூலம் உற்பத்தியில் ஈடுபடுகிற பொழுது மக்கள் எவ்வாறு உற்பத்தி செய்கிறார்கள் என்பதுதான் உற்பத்தி உறவுகள் ஆகும் என்பதையும், இந்த உற்பத்தி உறவுகள்தான் அவர்களின் சமூக, அரசியல், கலாச்சார, அமைப்புகளையும் தீர்மானிக்கிறது என்பது நிரூபிக்கப்படுகிறது.

எனவே உற்பத்தி சக்திகளின் மாற்றம்தான் சமூக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆரம்ப காலத்தில் அல்லது பழங்குடி சமூகத்தில் உற்பத்தி சக்திகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தன. வேட்டையாடுதல், மீன்பிடித்தல், அல்லது ஆரம்ப கட்ட விவசாயம் என்ற வகையில்தான் இயற்கையுடனான மக்களின் தலையீடு இருந்தது. அதிலும் ஒரு சிறிய பகுதிகளில்தான் இந்த செயல்பாடு அமைந்தது. இதன் காரணமாக அந்த மக்கள் இரத்த உறவு அடிப்படையில் வாழ்ந்தனர். இது ஒரு இனக்குழு செயல்பாட்டுக்கான வரையறையாக இருந்தது.

தொடர்ந்து மனித தலையீடுகள் மூலம் உற்பத்தி சக்திகள் அதாவது கருவிகள், தொழில்நுட்பங்கள் பயன்படுத்தும் திறன்கள் முன்னேறும் பொழுது இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் இரும்பு கருவிகள், உழவு செய்யும் முறைகள், கால்நடை வளர்ப்பு போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டது. இதன் மூலம் உபரி உற்பத்தி பொருட்கள் தோன்றியது. இதனால் ஆரம்பத்தில் உடமை வேறுபாடுகள் இம்மக்களிடையே உருவாகி, காலப்போக்கில் வர்க்கங்கள் தோன்றியது. இவைதான் வர்க்க சமுதாயமாக மாறுவதற்கான அடிப்படையாகும். சில அல்லது பல பழங்குடி இனங்கள் ஒன்றிணைந்து பெரிய இனக்குழுக்களாக மாறினார்கள். பின்னர் அது ஒரு நாடாகவும் மாறியது. ஒரு இனக் குழு உருவாவதற்கும், ஒரு நாடு உருவாவதற்கும் உற்பத்தி சக்திகள் ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ச்சி அடைந்த கட்டத்தின் விளைவாகும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

உற்பத்தி சக்தி வளர்ச்சியும் உறவுகளில் மாற்றமும்

உற்பத்தி சக்திகள் வளர்ச்சியின் காரணமாக அவை இனங்களுக்கு இடையிலான உறவுகளையும் மாற்றி விடுகின்றன. முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் நீராவி இயந்திரம், மின்சாரம், உலகளாவிய வர்த்தகம் போன்ற உற்பத்தி சக்தியின் வளர்ச்சி பல்வேறு இனங்களை ஒன்றிணைத்து தேசிய சந்தைகளை உருவாக்கியது. அதே நேரத்தில் மற்றொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். இதே உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிதான் வெவ்வேறு இனங்களுக்கு இடையில் போட்டியையும், சில சமயங்களில் மோதல்களையும், காலனி ஆதிக்கம், அதற்கான போர்களையும் உருவாக்கியது. உற்பத்தி சக்திகள் இந்த வளர்ச்சியின் காரணமாக அடுத்த நிலைக்கு முன்னேறின. இனங்களின் எல்லைகளையும் அவற்றின் ஒருங்கிணைப்பு அல்லது பிரிவினை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக மாறியது. இது தான் தேசம் உருவானதற்கான முதலாளித்துவ காலமாக அமைந்தது.

மார்க்ஸும் ஏங்கெல்சும், மாற்றத்திற்கு உட்பட்டது என்பதை வரலாற்று வளர்ச்சி விதிகளின்படி விளக்கினார்கள். உற்பத்தி சக்திகள் மிக உயர்ந்த கட்டத்தை அடையும்போது (தானியங்கி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எல்லையற்ற ஆற்றல், மற்றும் உலகளாவிய தொடர்பு போன்றவை), மனிதகுலத்தின் பொருளாதாரத் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும். இதன் காரணமாக உடைமை மற்றும் வர்க்க வேறுபாடுகள் பொருளற்றுப் போகும். உற்பத்தி மற்றும் விநியோகம் உலகளாவிய அளவில் ஒருங்கிணைக்கப்படும். மக்கள் ஒரு குறிப்பிட்ட தேசத்தின் எல்லைக்குள் மட்டும் வாழாமல், உலக குடிமக்களாக (cosmopolitans) செயல்படுவார்கள்.

தேசிய எல்லைகளும், இன வேறுபாடுகளும் முக்கியத்துவத்தை இழந்து, “உலக மக்கள்” (world nation) ஒன்றின் பகுதியாக மாறுவார்கள். இந்த கட்டத்தில்தான், உற்பத்தி சக்திகளின் முன்னேற்றம், தேசம் இருந்த சமூக-பொருளாதார அடித்தளத்தையே அழித்துவிடும். எனவே, உற்பத்தி சக்திகளின் முன்னேற்றம் என்பது இனத்தைப் பிறப்பிப்பது, வளர்ப்பது, மாற்றுவது, மற்றும் இறுதியில் அழிப்பது ஆகிய அனைத்திற்கும் தீர்க்கமான இயக்க சக்தியாக அமைகிறது.

உற்பத்தி சக்திகள் குறைவாக இருந்தபோது இனங்கள் உருவாகின. அவை வளர்ந்தபோது இனங்கள் ஒன்றோடொன்று மோதி, கலந்து, பெரிய தேசங்களாக உருவெடுத்தன. அவை உச்சக்கட்டத்தை அடையும்போது, மனிதகுலத்தின் பிரிவுகள் (வர்க்கம், தேசம்) தானாகவே மறைந்து, ஒரு பொதுவான மனித சமூகம் உருவாகும். இதுவே மார்க்ஸின் “இன வளர்ச்சியில் உற்பத்தி சக்திகளின் தீர்க்கமான பங்கு” பற்றிய விளக்கமாகும்.

இது ஒரு நீண்டகால வரலாற்று செயல்முறையாகும். இது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களின் மூலம் நிகழும். தற்போதைய உலகமயமாக்கல் போக்கு இந்த கோட்பாட்டிற்கு சில நடைமுறை ஆதாரங்களை வழங்குகிறது. ஆனால் இது மிகவும் சிக்கலான மற்றும் நீண்டகால செயல்முறையாகும். மேற்கண்ட அனைத்தும் மார்க்சியத்தால் கூறப்படுகிற ஆருடம் அல்ல. வரலாற்று வளர்ச்சி விதிகளின்படி மனித குலம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிற பொழுது ஏற்படுகின்ற மாற்றத்தை விஞ்ஞான பூர்வமாக விளக்கியிருக்கிற ஒரு கோட்பாடு. இந்த வளர்ச்சி விதிகளின்படி தான் முதலாளித்து சகாப்தத்தில் எதிர்கொள்ளக்கூடிய தேசிய இன பிரச்சனைகளை மார்க்சியம் எதிர்கொண்டது.

எங்கெல்ஸின் கூற்றுப்படி, “உண்மையான சர்வதேசியவாதம் அவசியமாக ஒரு தனித்துவமான தேசிய அமைப்பின் அடிப்படையில் அமைய வேண்டும்”. ஒரு நாடு மற்ற நாடுகளை அடிமைப்படுத்தும் போது, அது அந்த நாட்டின் மக்களின் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்துகிறது என்பது அவர்களின் கருத்து. “மற்ற நாடுகளை நாம் சங்கிலியால் பிணைத்துள்ள அதே சங்கிலிகள், நமது புதிய, எதிர்பாராத சுதந்திரத்தையும் பிணைக்கும்” என்று எங்கெல்ஸ் எச்சரித்தார். (‘Marx and Engels on Ireland’ (Progress Publishers, Moscow 1971) மற்றும் ‘The General Council of the First International. 1871-1872’) எனவே தேசம் என்பது தோன்றி மறைவதில்லை. வரலாற்றின் அதற்கான இருப்பையும், ஏற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேசியவாதம் தேசிய அமைப்பின் அடிப்படையிலிருந்து ஏற்படும் முன்னேற்றமாகும்.

மார்க்ஸ்,எங்கல்ஸ் சந்தித்த தேசிய இனப்பபிரச்சனைகள்

இன இயக்கம், இன விடுதலை இயக்கம் குறித்த மார்க்சிய சிந்தனைகள் எப்பொழுதும் பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் இருந்து முன்வைக்கப்படுகிறது. பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையும் இந்த அணுகு முறையில் கணக்கில் எடுக்கப்படுகின்றது. அதே நேரத்தில் ஒருபுறம், மேற்கத்திய உலகத்தின் காலனி நாடுகளை கொள்ளையடிப்பதற்கு இன அடக்குமுறைகளை கையாளுவதை மார்க்சியம் கடுமையாக எதிர்ப்பதுடன், காலணித்துவ மக்களின் வீரம் செறிந்த போராட்டத்திற்கான முழு ஆதரவையும் வழங்கி வருகிறது. மறுபுறம் முதலாளித்துவத்தை பலவீனப்படுத்துவதும் பாட்டாளி வர்க்கத்தின் சக்திகளை வலுப்படுத்தக்கூடிய அணுகுமுறைகளையும் கையாண்டார்கள். போலந்து மற்றும் அயர்லாந்து அணுகுமுறைகளை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

போலந்தின் சுதந்திரம் என்பது ஜனநாயகத்திற்கும், தொழிலாளர் இயக்கத்திற்குமான ஒரு அவசியம் என்று மார்க்ஸ், எங்கல்ஸ் கருதினார்கள். ஏனென்றால், போலந்தை அடக்கியாளும் ரஷ்ய பேரரசு, ஐரோப்பாவில் எதேச்சதிகாரத்தின் (absolutism) முக்கிய தூணாகவும், புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கும் சக்தியாகவும் இருந்தது. எனவே, “போலந்தின் சுதந்திரமே ஐரோப்பாவில் ஜனநாயகத்தின் நிலைக்கான முதல் நிபந்தனை” என்று எங்கெல்ஸ் வாதிட்டார். ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதன் மூலமே, ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் முக்கிய எதிரிகளில் ஒன்றான ரஷ்ய சாரிசத்தை (Tsarism) பலவீனப்படுத்த முடியும் என்று அவர்கள் நம்பினர்.

எங்கெல்ஸின் இந்த நிலைப்பாடு, போலந்தின் சுதந்திரத்தை ஐரோப்பிய ஜனநாயகத்திற்கான முதல் நிபந்தனையாகக் கருதியது பல படைப்புகளிலும் கட்டுரைகளிலும் இந்த நிலைபாடுகள் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளது. 1848-49 ஆம் ஆண்டுகளில் “நியூ ரைனிஷ் செய்தித்தாளில்” (Neue Rheinische Zeitung) எங்கெல்ஸ் எழுதிய கட்டுரைத் தொடர்களில் இவை அதிமாக காணப்படுகிறது.

போலந்தை அடக்கியாண்டதில் பிரஷியாவின் பங்கும் இருந்தது. மார்க்ஸ், எங்கல்ஸ் பிரஷியா (Prussia) தலைமையிலான ஜெர்மன் ஒருங்கிணைப்பை வரவேற்றனர். ஏனென்றால், ஒரு ஒருங்கிணைந்த ஜெர்மன் தேசம், பிரிவினைவாத நிலைமையைவிட முதலாளித்துவத்தை வேகமாக வளர்க்கும். அதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தின் எண்ணிக்கையும் பலத்தையும் அதிகரிக்கும் என்று அவர்கள் நம்பினர். இருப்பினும், இந்த ஒருங்கிணைப்பு “மேலிருந்து” (பிரஷிய இராணுவத்தின் மூலம்) நடந்ததால், அது ஜெர்மனியில் ஆளும் வர்க்கங்களின் (Junkers-ஜங்கர்கள்) அதிகாரத்தையும் வலுப்படுத்தியது என்பதையும் அவர்கள் விமர்சித்தனர். குறிப்பாக, “பிராங்பேர்ட் சட்டமன்றத்தில் போலந்து விவாதம்” (The Frankfurt Assembly Debates the Polish Question) என்ற தொடர் கட்டுரைகளில், ஒரு ஜனநாயக, ஒருங்கிணைந்த ஜெர்மனி சாத்தியமாக வேண்டுமென்றால், ஒரு ஜனநாயக, சுதந்திரமான, ஒருங்கிணைந்த போலந்து இருப்பது அவசியம் என்று மார்க்ஸும் எங்கெல்ஸும் வாதிட்டதாக ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்தக் கருத்துகளுக்கு மிகவும் நேரடியான மற்றும் முழுமையான மூலமாக “The Role of Force in History” மற்றும் “Neue Rheinische Zeitung” கட்டுரைகளையே குறிப்பிடலாம். “ஜனநாயக போலந்தை நிறுவுவதே ஜனநாயக ஜெர்மனியை நிறுவுவதற்கான முதல் நிபந்தனையாகும்”. போலந்து விவகாரத்தில் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் அணுகுமுறை என்பது தேசிய இனப்பிரச்சனையின் அடிப்படைக் கருவூலமாகக் கருதப்படுகிறது.

அயர்லாந்து விடுதலை ஆங்கிலப் பாட்டாளி வர்க்கத்திற்கான பாடம்

ஒரு தேசத்தை ஒடுக்கும் மற்றொரு தேசம், தன் சொந்தச் சுதந்திரத்திற்கான சங்கிலியையே உருவாக்கிக் கொள்கிறது” என்ற கொள்கை மார்க்சின் அயர்லாந்து பற்றிய பார்வையில் ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கிறது. ஆரம்பத்தில், ஆங்கிலேய தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியே அயர்லாந்தை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுவிக்கும் என்று மார்க்ஸ் நம்பினார். ஆழ்ந்த ஆய்வுக்குப் பின், அயர்லாந்தில் இருந்து ஆங்கிலேய தொழிலாளர் வர்க்கம் விடுபடும் வரை, அது எந்த முக்கியமான முன்னேற்றத்தையும் அடைய முடியாது எனும் முடிவுக்கு வந்தார். அதாவது, பிரிட்டனில் சமூக மாற்றத்திற்கான உத்தி அயர்லாந்தில் இருந்தே தொடங்க வேண்டும் என்று கருதினார். இது அயர்லாந்து மீதான பரிவு காரணமாக மட்டுமல்ல, ஆங்கிலேய தொழிலாளர் வர்க்கத்தின் நேரடி நலனுக்காகவும் அவசியம் என்று வாதிட்டார்.

ஆங்கிலேய முதலாளித்துவம் அயர்லாந்தை அடிமைப்படுத்தியதில், ஆங்கிலேய தொழிலாளர் வர்க்கம் ஒத்துழைத்தால் (அல்லது அதை எதிர்க்கத் தவறினால்), அது முதலாளித்துவத்திற்கு சாதகமாக அமையும். ஏனென்றால், அயர்லாந்தின் சுரண்டல் மூலம் கிடைக்கும் இலாபம் ஆங்கில முதலாளிகளுக்கு செல்கிறது.

இந்த ஒடுக்குமுறை ஆங்கில தொழிலாளர்களுக்கும் முதலாளித்துவத்திற்கும் இடையே “பிளவு” ஏற்படுத்துகிறது. அதாவது, பொதுவான எதிரி முதலாளித்துவம் என்பதை மறைத்து, தொழிலாளர்கள் தங்கள் விடுதலைக்காக போராடுவதற்குப் பதிலாக, இன அல்லது தேசிய உணர்வுகளில் சிக்கிக் கொள்கின்றனர்.

அயர்லாந்தை ஒடுக்குவதில் பங்கேற்பதன் மூலம், ஆங்கில தொழிலாளர்கள் தாங்களும் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதை உணர்வதில் தோல்வியடைகின்றனர். இது அவர்களின் வர்க்க உணர்வை பலவீனப்படுத்தி, முதலாளித்துவத்திற்கு எதிரான ஒற்றுமையான போராட்டத்தை தடுக்கிறது.

எனவே, ஆங்கில தொழிலாளர்கள் அயர்லாந்தின் விடுதலைக்கு ஆதரவளிக்காவிட்டால், அவர்களால் தங்கள் சொந்த விடுதலையையும் அடைய முடியாது. ஏனென்றால், இரு போராட்டங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.

1869 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று லுட்விக் குஜெல்மனுக்கு எழுதிய கடிதத்திலும், டிசம்பர் 10 அன்று எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்திலும் இந்தப் புதிய நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியுள்ளார். இந்தக் கருத்தை ஆங்கிலேய தொழிலாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பிய மார்க்ஸ், சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் பொதுக் குழுவில் இது குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற முன்மொழிந்தார்.

மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் காலத்தில் தேசிய இனப் பிரச்சனைக்கான அவர்களின் அணுகுமுறையை பேரரசுகளை பலவீனப்படுத்தும் எந்த தேசிய விடுதலை இயக்கமும் (போலந்து, அயர்லாந்து) ஆதரிக்கப்பட்டது. தேசிய பிரச்சனை எப்போதும் வர்க்கப் பிரச்சனைக்கு கீழ்ப்படுத்தப்பட்டது. இறுதி இலக்கு தேசிய அரசுகள் அல்ல. மாறாக, ஒரு சர்வதேச பாட்டாளி வர்க்க புரட்சிதான் என்ற நிலைபாட்டிலிருந்து பார்த்தனர்.

 

அ.பாக்கியம்

88 யி இனம் செம்படையின் நண்பன்

 

அ.பாக்கியம்

சீனாவின் நிலைமைகள் மாறிய பொழுது யி இன மக்கள் புரட்சிகரமான போராட்டங்களுக்கு உறுதுணையாக மாறினார்கள். 100 ஆண்டுகளுக்கு மேலாக சக்தி வாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களையும்,  அடிமை உடைமை யாளர்களுக்கு எதிரான போராட்டங்களையும் நடத்தினார்கள். சீன விவசாயிகளால் நடத்தப்பட்ட டைப்பிங் புரட்சி (1852-1864) ஏற்படுத்திய தாக்கத்தால் ‘யி’  இன மக்களும் பிற இன மக்களும் கிங் அரசாங்கத்திற்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்துவதற்கு வழி வகுத்தது.

1935 ஆம் ஆண்டு ஜப்பானிய படையெடுப்பாளர்களை எதிர்ப்பதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான செம்படை வடக்கு நோக்கி முன்னேறியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நீண்ட பயணத்தை மேற்கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி ‘யி’  இன மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாகத்தான் சென்றார்கள். செம்படையின் நீண்ட பயணம் ‘யி’  இன மக்கள் மீது நல்ல ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

வடமேற்கு குய்ஷோ மற்றும் வடகிழக்கு யுனான் வழியாகச் சென்ற வழியில், செம்படை உள்ளூர் கொடுங்கோலர்கள், தீய பிரபுக்கள் மற்றும் ஊழல் அதிகாரிகளை ஒடுக்கியதுடன், பட்டினியால் வாடிய ‘யி’  இன மக்களுக்கு உதவுவதற்காகத் தங்கள் தானிய களஞ்சியங்களைத் திறந்துவிட்டார்கள். செம்படை, பறிமுதல் செய்யப்பட்ட தானியங்கள், உப்பு, பன்றி இறைச்சி, ஆடைகள் மற்றும் அதுபோன்ற பிற பொருட்களை யி இன மக்களுக்கும் மற்ற இனக்குழு மக்களுக்கும் விநியோகித்தது. பதிலுக்கு அவர்களும் செம்படைக்கு மிகுந்த ஆர்வத்துடன் உதவினார்கள். பல இளம் ‘யி’ இன மக்கள் செம்படையில் சேர்ந்தனர்.

செம்படையின் அடுத்த பயணம் ஜின்ஷா ஆற்றைக் கடந்து யுவேசி மற்றும் மியானிங்கில் நிலை கொண்டனர். அங்கிருந்து இரு பகுதியாகப் பிரிந்து தாடு ஆற்றை நோக்கி முன்னேறினார்கள். இதற்கிடையில் ராணுவத்தின் ஆதரவுடன் மியானிங்கில் இருந்த ‘யி’ இன மக்களும் ஹான் இன மக்களும் இணைந்து மாவட்டத்தில் தொழிலாளர்-விவசாயி-வீரர்கள் உள்ளடக்கிய ஜனநாயக அரசாங் கத்தை நிறுவினார்கள்.

 

இந்த அரசின் சார்பில் புரட்சிகர படைகளை உருவாக்கினார்கள். இந்த மாவட்டத்தில் செம்படை குவோமிண்டாங் அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட “பிணைக்கைதிகள் முறையை” ஒழித்தனர். மேலும் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த பல நூறு ‘யி’ இனத் தலைவர்களையும் அவர்களது உறவினர்களையும் விடுவித்தனர்.

செம்படை ஒழுக்கத்தைக் கடுமையாகக் கடைப்பிடித்தது. சிறுபான்மைக் குழுக்களுக்கான சீனப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கையை உறுதியாகச் செயல்படுத்தியது. சிறுபான்மைக் குழுக்களை விடுவிப்பதே தனது நோக்கம் என்று அறிவித்தது. மேலும், அனைத்து ஏழை ‘யி’ மற்றும் ‘ஹான்’ இனத்தவரும் உறவினர்களே என்று பிரகடனப்படுத்தியது. செம்படையுடன் ஒன்றிணைந்து, போர்ப்பிரபுக்களை வீழ்த்தி, தேசிய சமத்துவத்திற்காகப் போராடுமாறு அது ‘யி’ இன மக்களுக்கு அழைப்பு விடுத்தது.

செம்படையின் கொள்கைகளால் உத்வேகம் பெற்ற, மியானிங் மாவட்டத்தில் உள்ள ஒரு ‘யி’ குலத்தின் தலைவரான இளைய யுவேடன், செம்படைத் தளபதி லியு போசெங்குடன் கூட்டணி அமைத்தார். ‘யி’ க்கள் மற்றும் தலைவரின் உதவியுடன், செம்படைப் படைகள் எவ்விதத் தடங்கலுமின்றி யி மக்கள் வாழும் பகுதிகளைக் கடந்து சென்று, லுடிங் பாலத்தைக் கைப்பற்றி, டாடு ஆற்றையும் கடந்து வெற்றி பெற்றன.

புதிய அரசும் புதிய வாழ்க்கையும்

1949-ல் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் மூலம், சீனாவில் யி இனத்தவர் மற்றும் பிற தேசிய இன மக்கள் அனுபவித்த அடிமைத்தனம் மற்றும் ஒடுக்குமுறையின் கசப்பான வரலாறு முடிவுக்கு வந்தது. 1952 ம் ஆண்டுகளுக்கு பிறகு சிச்சுவானின் லியாங்ஷான் யி தன்னாட்சி மாகாணம், யுனானின் சூசியோங் யி தன்னாட்சி மாகாணம், ஹாங்ஹே ஹானி மற்றும் யி தன்னாட்சி மாகாணம் என்று யி மக்களுக்கான தன்னாட்சி மாகாணம் ஒன்றன்பின் ஒன்றாக நிறுவப்பட்டன. யுனானின் ஈஷான், லூனான், நிங்லாங், வெய்ஷான், ஜியாங்செங், நான்ஜியான், சுண்டியான், சின்பிங் மற்றும் யுவான்ஜியாங் ஆகிய இடங்களிலும், குய்ஷோவின் வெய்னிங் மற்றும் குவாங்சியின் லாங்லின் ஆகிய இடங்களிலும் அதிகமாக யி இன மக்கள் வாழ்ந்து வந்ததால் அவர்களுக்கும் மற்ற இனச் சிறுபான்மையினருக்கும் மாவட்டங்கள் நிறுவப்பட்டன.

 

சமகால உலகில் நிலவி வந்த ஒரேயொரு அடிமைச் சமூகத்தின் உருமாற்றம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது புரட்சிக்கு பிந்தைய ஆண்டுகளில் யீ மக்களின் வரலாற்றில் ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாக மாறிவிட்டது. யி அடிமைகள் மற்றும் பிற ஏழை மக்களின் அபிலாஷைகளுக்கு தீர்வுகாணக்கூடிய வகையில் சீன மக்கள் குடியரசு சாமானிய மக்களுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்த உயர் சமூக அந்தஸ்துடைய யி மக்களுடன் கலந்தாலோசித்த பின்னர், 1956-ல் சிச்சுவானின் யி பகுதிகளிலும், யுனானின் நிங்லாங் தன்னாட்சி மாவட்டத்திலும் ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்தது.

இந்த ஜனநாயக சீர்திருத்தங்களின் அடிப்படை நோக்கம், அடிமைத்தனத்தை ஒழித்து, உழைக்கும் மக்கள் தனிப்பட்ட சுதந்திரத்தையும் அரசியல் சமத்துவத்தையும் அனுபவிக்கச் செய்வது. கிராமப்புற உற்பத்தி சக்தியை விடுவிக்கவும், விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கவும், அடிமை உடைமையாளர் வர்க்கத்தின் நில உரிமையை ரத்து செய்து, உழைக்கும் மக்களின் நில உரிமையை அறிமுகப்படுத்துவது. இதன் மூலம் விவசாயத்தில்  சோசலிச உருமாற்றம் ஏற்படுவதற்கும், கூட்டுறவு இயக்கம் உருவாவதற்குமான அடித்தளத்தை உருவாக்கினார்கள்.

கலந்தாய்வுக் கொள்கை

அமைதியான கலந்தாய்வுக் கொள்கையின்படி, ஜனநாயக சீர்திருத்தங்களுக்குத் தீவிரமாக உதவிய உயர் சமூகத்தினருக்கு மக்கள் அரசாங்கம் பொருத்தமான அரசியல் அந்தஸ்தையும் அதற்கேற்ற பொருள்சார் சலுகைகளையும் வழங்கியது. இதன் மூலம், பல அடிமை உரிமையாளர்கள் சீர்திருத்தத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டனர். அதே சமயம், சட்டவிரோதமாகவும், பிடிவாதமாகவும் இருந்த ஒரு சில அடிமை உடைமையாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இவ்வாறு, ஜனநாயக சீர்திருத்தங்கள் சுமுகமாக நடைபெற்றன.

1958 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், சிச்சுவான் மற்றும் யுன்னானில் உள்ள பெரிய மற்றும் சிறிய லியாங்ஷான் மலைகளில் அமைந்துள்ள யி இன மக்கள் வாழும் பகுதிகளில் ஜனநாயக சீர்திருத்தங்கள் நிறைவடைந்தன. இந்த சீர்திருத்தங்கள் அடிமைத்தனத்தை ஒழித்து, அடிமை உடைமையாளர்களின் அனைத்து சலுகைகளையும் நீக்கி, அவர்களிடமிருந்து நிலம், கால்நடைகள், விவசாயக் கருவிகள், வீடுகள் மற்றும் தானியங்களைப் பறிமுதல் செய்தனர்.

 

மேலும் அவற்றை அடிமைகளுக்கும் மற்ற ஏழை மக்களுக்கும் விநியோகித்தனர். லியாங்ஷான் யி தன்னாட்சி மாகாணம் மற்றும் சிச்சாங் யி பகுதிகளில், 120,000 ஹெக்டேர் நிலம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 280,000 கால்நடைகள், 34,000 விவசாயக் கருவிகள், 880,000 அறைகளைக் கொண்ட வீடுகள் மற்றும் 8,000 டன் தானியங்கள் ஆகியவை கையகப்படுத்தப்பட்டன அல்லது வாங்கப்பட்டன.

சட்டவிரோத அடிமை உரிமையாளர்களால் இழப்பீடாகச் செலுத்தப்பட்ட 4,700,000 யுவானுடன் சேர்த்து ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் அவை பிரித்து வழங்கப்பட்டன. இந்தச் சீர்திருத்தங்கள் 6,90,000 அடிமைகளையும் பிற ஏழை மக்களையும் விடுவித்து, அவர்களைப் புதிய சமூகத்தின் எஜமானர்களாக மாற்றியது.

அரசின் உதவி

மக்கள் அரசாங்கம், அடிமைகளுக்கும் மற்ற ஏழை மக்களுக்கும் வீடுகளைக் கட்டிக் கொடுத்ததுடன், விவசாயக் கருவிகள், தானியங்கள், ஆடைகள், மரச்சாமான்கள் மற்றும் பணத்தையும் வழங்கி, அவர்கள் சொந்த வீடுகளைக் கட்டிக்கொள்ள உதவியது. லியாங்ஷான் மலைப்பகுதிகளில், அடிமைத்தனத்தின் கீழ் வேலை செய்யும் திறனை இழந்த 1,400 வயதான மற்றும் பலவீனமான அடிமைகளுக்காக அரசாங்கம் இல்லங்களை அமைத்தது கொடுத்தது.

முன்னாள் அடிமைகளில் பலர் திருமணம் செய்துகொண்டு தங்கள் சொந்தக் குடும்பங்களைத் தொடங்கினர். பிரிந்து கிடந்த அல்லது அடிமை உடைமையாளர்களால் பிரித்து வைக்கப்பட்டிருந்த பல குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைந்தன. விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் சோசலிசப் பாதையை மிகவும் உறுதியாகப் பின்பற்றினர். மேலும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்குப் பிறகு விரைவிலேயே விவசாய உற்பத்தியில் மேம்பட்ட கூட்டுறவு சங்கங்களை அமைத்தனர்.

ஜனநாயக சீர்திருத்தங்கள், விடுதலை பெற்ற அடிமைகளையும் ஏழை விவசாயிகளையும் தங்கள் நிலங்களை மறுவடிவமைக்கவும், விவசாய உற்பத்தியை சீராக விரிவுபடுத்தவும் தூண்டின. யுனானின் சூசியோங் யி தன்னாட்சிப் பிரதேசம், சணல், புகையிலை, பருத்தி, நிலக்கடலை மற்றும் பிற பணப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதில் பெரும் வெற்றி கண்டது. ஹாங்ஹே யி தன்னாட்சிப் பிரதேசத்தில் உள்ள நிங்லாங், வெய்ஷான் மற்றும் ஈஷான் ஆகிய தன்னாட்சி மாவட்டங்கள் நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கின, அவை விவசாயத்தில் பெரும் பங்காற்றியுள்ளன.

விடுதலைக்கு முந்தைய காலங்களில் யுனானில் இருந்த கெஜியு ஈயச் சுரங்கத்தை தவிர வேறு எந்த தொழிலும் இல்லை. ஹான் பகுதியில் இருந்து லியாங்ஷான் மலைகளுக்கு அழைத்து வரப்பட்ட சில கொல்லர்கள், கொத்தனார், தச்சர்கள் தவிர வேறு எந்த திறன் தொழிலாளர்களும் இருக்கவில்லை.இப்போது லியாங்ஷான், சூசியோங் மற்றும் ஹாங்ஹே தன்னாட்சி மாகாணங்களில் உள்ள மக்கள், விவசாய இயந்திரங்கள், உர மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகள், சிறிய நீர்மின் நிலையங்கள் மற்றும் செம்பு, இரும்பு, நிலக்கரிச் சுரங்கங்களைக் கட்டியுள்ளனர்.

போக்குவரத்து வசதிகள் இல்லாதது, லியாங்ஷான் மலைகள் தனிமைப்படுத்தப்பட்டதற்குக் காரணமான காரணிகளில் ஒன்றாகும். விடுதலைக்குப் பிறகே சாலைகள் அமைக்கும் பணி தொடங்கியது. 1952-ல், சிச்சுவானையும் மேற்கு யுனானையும் இணைக்கும் நெடுஞ்சாலை புனரமைக்கப்பட்டு போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது. அதே நேரத்தில், லியாங்ஷான் தன்னாட்சி மாகாணத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பிரதான நெடுஞ்சாலைகளும் கட்டப்பட்டன. 1957-ல் யிக்சி நெடுஞ்சாலை போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டு, வரலாற்றில் முதன்முறையாகப் பெரிய மற்றும் சிறிய லியாங்ஷான் மலைகளை இணைத்தது. 1961-க்குள், மாகாணத்திற்குள் அனைத்து திசைகளிலும் பரவியிருந்த ஒரு நெடுஞ்சாலை வலையமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.

உள்கட்டமைப்பு வசதிகள்

1981-ஆம் ஆண்டின் இறுதியில், மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம், 1949-க்கு முன்பு இருந்த ஏழு கி.மீ.-லிருந்து 7,368 கி.மீ. ஆக அதிகரித்திருந்தது. 1949-க்கு முன்பு இப்பகுதி முழுவதும் 18 தள்ளுவண்டிகள் மட்டுமே இருந்த நிலையில், 1981-ல் வாகனங்களின் எண்ணிக்கை 11,000-ஐ எட்டியது, அவற்றில் 5,000 மோட்டார் வாகனங்கள் ஆகும். உள்ளூர் போக்குவரத்துத் துறை மொத்தம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்தது. செங்டு-குன்மிங் இரயில் பாதையானது, லியாங்ஷான் யி தன்னாட்சி மாகாணத்தில் உள்ள ஆறு மாவட்டங்களைக் கடந்து 337 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது, மேலும் இந்த வழித்தடத்தில் 45 நிலையங்கள் உள்ளன.

கடந்த காலத்தில் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த யி மக்களுக்கு, தற்போது அனைத்து கிராமங்களிலும் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. 1950-களின் பிற்பகுதியில், தன்னாட்சி மாகாணம் நடுநிலைப் பள்ளிகள், தொழில்நுட்பப் பள்ளிகள், பழங்குடியின ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பள்ளிகளை அமைக்கத் தொடங்கியது. விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் மற்றும் ஏழை விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இப்போது கல்விக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. சோசலிச உணர்வு கொண்ட யி அறிவுஜீவிகளின் ஒரு புதிய தலைமுறை உருவாகி பல துறைகளில் முக்கிய பங்காற்றி வருகின்றது. மேலும் மாகாணத்தில் உள்ள அனைத்து மட்டங்களிலான அரசாங்கங்களிலும் பல யி தலைவர்கள் முன்னணிப் பதவிகளை வகிக்கின்றனர்.

முற்காலத்தில், தொழில்முறை மருத்துவர்கள் இருக்கவில்லை. நோய்களைத் தடுக்கவும் குணப்படுத்தவும் இருந்த ஒரே வழி பிரார்த்தனை செய்வதுதான். இப்போது எல்லா மாவட்டங்களிலும் மருத்துவமனைகளும் மருத்துவ மையங்களும் உள்ளன. பெரியம்மை, டைபாய்டு, தொழுநோய், மலேரியா, காலரா போன்ற கடுமையான தொற்றுநோய்கள் ஒன்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன அல்லது பெருமளவில் ஒழிக்கப்பட்டுள்ளன. யி மக்களின் ஏராளமான பாரம்பரிய மருத்துவ அனுபவங்கள் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ளன.

உலகப் புகழ்பெற்ற யுனான் பாயாவோ (இரத்தப்போக்கு, காயங்கள், சிராய்ப்புகள் போன்றவற்றைக் குணப்படுத்துவதில் சிறப்புப் பயன் கொண்ட ஒரு வெள்ளை மருத்துவப் பொடி) யுனானில் உள்ள யி மக்களால் தலைமுறை தலைமுறையாகக் கைமாறி வந்த ஒரு நாட்டுப்புற மருத்துவக் குறிப்பின்படி தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

யி மக்களின் வண்ணமயமான இலக்கியமும் கலையும் செழித்து வருகின்றன. யி மக்கள், பழைய யி மொழியில் எழுதப்பட்ட ஏராளமான வரலாற்று மற்றும் இலக்கியப் படைப்புகளையும், வாய்மொழியாகப் பரப்பப்பட்ட நாட்டுப்புற இலக்கியப் படைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். எண்ணற்றதும் பல்வேறு வகைகளைக் கொண்டதுமான வாய்மொழி நாட்டுப்புற இலக்கியப் படைப்புகளில் கவிதைகள், கதைகள், நீதிக்கதைகள், பழமொழிகள், புதிர்கள் போன்றவை அடங்கும். பழைய யி மொழியில் எழுதப்பட்டு, தத்துவம், வரலாறு மற்றும் மதம் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு கலைக்களஞ்சியப் படைப்புகளான ‘தென்மேற்கில் யி மக்களின் வரலாறு’ மற்றும் ‘லெபுதேயி’ ஆகியவை சீன மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. ‘அஷிமா’, ‘அக்ஸி மக்களின் பாடல்’ மற்றும் ‘மெய்கே’ ஆகிய காவியங்கள் யுனான் முழுவதும் பிரபலமாக உள்ளன.

விடுதலைக்குப் பிறகு, பல யி நாட்டுப்புறக் கதைகள், காவியங்கள் மற்றும் பாடல்கள் சேகரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. ‘மகிழ்ச்சியான ஜின்ஷா நதி’ மற்றும் ‘தாஜியும் அவரது தந்தையும்’ போன்ற, யி மக்களின் தற்போதைய வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சில புதிய படைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. யி பாடல்களும் நடனங்களும் இனச்செறிவு மிக்கவை. ‘நட்சத்திரங்களும் நிலவும் ஒன்றாக இருக்கின்றன’ என்ற புதிய நாட்டுப்புறப் பாடல், சீனாவில் உள்ள தேசிய இனங்களின் மாபெரும் குடும்பத்தில் யி மக்கள் உணரும் மகிழ்ச்சியையும் அரவணைப்பையும் அழகான மெல்லிசைகள் மூலம் வெளிப்படுத்துகிறது. உற்சாகமான மற்றும் உயிரோட்டமான மெல்லிசைகளைக் கொண்ட மற்றொரு புதிய பாடலான ‘மகிழ்ச்சியான நுவோசு’, யி மக்களின் மகிழ்ச்சியான மற்றும் ஆற்றல்மிக்க வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.

சீனாவில் இருக்கக்கூடிய சிறுபான்மை இன குழுக்களில் பல்வேறு குழுக்களின் தோற்றம், வரலாறு, அவர்களின் கடந்த கால வாழ்க்கை, புதிய சீன மக்கள் குடியரசில் அவர்களிடம் ஏற்பட்ட வாழ்வியல் மாற்றங்கள் ஆகியவற்றை விரிவாக குறிப்பிடுவதற்கு காரணம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இனச் சிறுபான்மை மக்களை பொருளாதார ரீதியாக சலுகைகள் கொடுப்பது என்பதையெல்லாம் கடந்து, இனச் சிறுபான்மையினர் வாழ்வாதார மேம்பாடு மட்டுமல்ல, அவர்களின் அனைத்து வகையான கலாச்சாரம், பண்பாடு, தனித்தன்மை ஆகியவற்றை உயிரோட்டமான முறையில் பாதுகாப்பது என்பதுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்காகதான் விரிவான முறையில் இனச் சிறுபான்மை மக்களைப் பற்றிய விவரிப்பு கொடுக்கப்படுகிறது.

 

அ.பாக்கியம்

87 சாதிய கட்டமைப்பில் ஒரு இனம்

 


அ.பாக்கியம்

சீனாவின் தேசிய இனங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு இனம் யி(Yi) இனமாகும். இந்த இனத்தின் சமூக கட்டமைப்பு அடிமை முறைகளையும் படிநிலை சாதிய கட்டமைப்புகளையும் போன்றதொரு அமைப்பாக இருந்துள்ளது.

சமீபத்திய மக்கள் தொகை அடிப்படையில் யி இன மக்கள் சுமார் ஒரு கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் முக்கியமாக சிச்சுவான், யுன்னான் மற்றும் குய்ஜோ மாகாணங்களிலும், குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பகுதியிலும் பரவியுள்ளனர். சீனாவின் நிர்வாக அமைப்பின் அடிப்படையில் தன்னாட்சி பிரதேசங்களுக்குள் அதிக மக்கள் தொகையுடன் வாழும் இனக்குழுக்களுக்கு தனியான தன்னாட்சி மாகாணங்கள் அமைக்கப்படுவது ஒரு நிர்வாக முறையாக இருக்கிறது. “தன்னாட்சி மாகாணம்” என்பது சீனாவில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினர் அதிக அளவில் வாழும் பகுதிகளுக்கு வழங்கப்படும் ஒரு நிர்வாக அந்தஸ்தாகும். இது அந்த இனக்குழுவினரின் கலாச்சாரம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தை அளிக்கிறது.

அந்த அடிப்படையில் சீனாவின் மிகப்பெரிய ஒற்றை யி சமூகத்தைக் கொண்டுள்ள லியாங்ஷான் யி தன்னாட்சி மாகாணத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான யி மக்கள் உள்ளனர். இது சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. யுனான் மாகாணத்தில் முப்பது லட்சத்திற்கும் அதிகமான யி மக்கள் உள்ளனர். இந்த மாகாணத்தில் சுமார் 5.5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் யி இன மக்கள் 55% க்கும் அதிகமானவர்கள் (தோராயமாக 3 மில்லியன்) பெரும்பாலான யி இன மக்கள் மலைப்பகுதிகளில் சிதறி வாழ்கின்றனர்.

அவர்களில் கணிசமான மக்கள் மலைகளின் உயரமான இடங்களில் கடுங்குளிர்பிரதேசங்களில் வாழ்வதும், மற்றொருபகுதி மக்கள் சமவெளிகளிலோ அல்லது பள்ளத்தாக்குகளிலோ வாழும் நிலை உள்ளது. வேறுபட்ட வாழ்விடங்களில் இருப்பதால் அவர்களுக்கு இடையிலான கால நிலைகள் அதாவது மழை பொழிவும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இந்த வியக்கத்தக்க வேறுபாடுகள் பல்வேறு பகுதிகளில் உள்ள யி இன மக்கள் தங்கள் வாழ்வாதார முறைகளில் ஒருவருக்கொருவர் மிகவும் வேறுபட்டு இருப்பதற்கு முதன்மையான காரணமாக அமைகின்றது.

தோற்றக்கதைகள்

யி இன மக்களின் உருவாக்கம் என்பது பல நூற்றாண்டுகளாக தொடர்ச்சியாக நடந்த ஒரு செயல்முறையின் விளைவாகும். அவர்களின் மூதாதையர்கள் பொ.ஆ.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து பொ.ஆ.1ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தற்போதைய யுன்னானின் டியான்சி ஏரி மற்றும் சிச்சுவானின் கியோங்டூ (இன்றைய சிச்சாங்) பகுதிகளில் மையமாக வாழ்ந்தனர். வடக்கிலிருந்து வந்த இவர்கள், தென்மேற்கு சீனாவில் ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த உள்ளூர் பழங்குடி மக்களுடன் (குறிப்பாக பூ (Pu) மக்கள்) இணைந்தனர் .

இந்த இரண்டு குழுக்களின் கலப்பின் விளைவாகத்தான் யி இனம் உருவானது. கிழக்கு ஹான் (25-220), வெய் (220-265) மற்றும் ஜின் (265-420) வம்சங்களின் போது, ​​இப்பகுதிகளில் வசித்த மக்கள் ‘யி’ என்று அழைக்கப்பட்டனர்; “ஆறு கிளைகள்” (Six Ancestors / Six Tribes) பிரிவு எனப்படும் முக்கிய நிகழ்வு, அவர்களின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். இது சுமார் பொ.ஆ.மு 5ஆம் நூற்றாண்டில் (போரிடும் நாடுகள் காலத்தின் தொடக்கத்தில்) நிகழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. யி இனத்தின் புராண மூதாதையரான “ஜோங்முயூ” (Zhongmuyou) என்பவரின் ஆறு மகன்கள், பின்னாளில் ஆறு முக்கிய கிளைகளின் மூதாதையர்கள் ஆனார்கள் . இந்த “ஆறு கிளைகள்” பிரிவைத் தொடர்ந்து, அவர்கள் தென்கிழக்கு நோக்கி விரிவடைந்து, படிப்படியாக தற்போது வாழும் பகுதிகளில் குடியேறினர் .

தனித்துவமான மொழி அடையாளம்

யி மொழி, சீன-திபெத்திய மொழிக்குடும்பத்தின் திபெத்திய-மியான்மீஸ் மொழிக் குழுவைச் சேர்ந்தது. மேலும், யி மக்கள் ஆறு வட்டார மொழிகளைப் பேசுகிறார்கள். யுனான், குய்ஷோ மற்றும் குவாங்சி ஆகிய பகுதிகளில் உள்ள பல யி மக்கள் ஹான் மொழியை அறிந்திருக்கிறார்கள். யி மக்கள், 13 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பழைய யி மொழி எனப்படும் ஒரு அசையெழுத்தைப் பயன்படுத்தினர். தற்போதுள்ள பழைய யி எழுத்தில் சுமார் 10,000 சொற்கள் இருப்பதாகவும், அவற்றில் 1,000 சொற்கள் அன்றாடப் பயன்பாட்டுச் சொற்கள் என்றும் மதிப்பிடப்படுகிறது. வரலாறு, இலக்கியம், மருத்துவம் சார்ந்த பல படைப்புகளும், ஆளும் குடும்பங்களின் வம்சாவளிகளும் பழைய யி எழுத்தில் எழுதப்பட்டு, பெரும்பாலான யி பகுதிகளில் இன்றும் காணப்படுகின்றன. அப்படிப்பட்ட பழைமையான யி எழுத்தில் செதுக்கப்பட்ட பல கல்வெட்டுகளும் தூண்களும் சிதைவின்றி அப்படியே உள்ளன. பழைய யி மொழி, சொல் வடிவத்திலும் உச்சரிப்பிலும் சீரற்றதாக இருந்ததால், விடுதலைக்குப் பிறகு புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் பயன்படுத்துவதற்காக அது சீர்திருத்தப்பட்டது.

பழமையான படிநிலை சமூகம்

1949- கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைவதற்கு முன்பு , லியாங்ஷான் மலைப் பகுதிகளில் இருந்த யி இன மக்கள், “நுவோஹுவோ,” “குனுவோ,” “அஜியா” மற்றும் “ஷியாக்ஸி” என நான்கு வெவ்வேறு படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். எஜமானர்களுக்கும் அடிமைகளுக்கும் இடையிலான வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடாக இருந்த து. “நுவோஹுவோ” பிரிவு இரத்த உறவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு நிரந்தரமாக இருந்தது. இவர்கள் மட்டுமே ஆட்சியாளர்களாக இருந்தனர். மற்ற படிநிலைகளில் இருந்தவர்களால் ஒருபோதும் ஆட்சியாளர்கள் பதவிக்கு வர முடியவில்லை.

நுவோஹுவோ” என்றால் “கருப்பு யி” என்று பொருள். இது சமூகத்தின் மிக உயர்ந்த படிநிலையாக இருந்தது. அடிமைகளை உடைமையாக வைத்திருந்த வர்க்கமாக இருந்த து. இவர்கள் மொத்த யி இன மக்கள் தொகையில் 7 சதவீதம் மட்டுமே இருந்தனர் . கருப்பு யி க்கள் மற்ற மூன்று படிநிலைகளைச் சேர்ந்த மக்களைப் பல்வேறு அளவுகளில் கட்டுப்படுத்தினர். மேலும் 60 முதல் 70 சதவீத சாகுபடி நிலங்களையும், பெருமளவிலான பிற உற்பத்திச் சாதனங்களையும் சொந்தமாகக் கொண்டிருந்தனர். கருப்பு யி க்கள் பிறப்பால் பிரபுக்களாக இருந்தனர். தங்கள் இரத்தம் “உன்னதமானது” மற்றும் “தூய்மையானது” என்று கூறி, மற்ற மூன்று படிநிலைகளைச் சேர்ந்தவர்களுடனான திருமணங்களைத் தடை செய்தனர். அவர்கள் உடல் உழைப்பை வெறுத்தனர். மற்ற படிநிலை மக்களை சுரண்டிப் பிழைத்தனர். மேலும் அடிமைகளை பலவந்தமாக அடக்கி ஆண்டனர்.

குனுவோ” என்றால் “வெள்ளை யி” என்று பொருள். இவர்கள் படிநிலையில் ஆளும் கருப்பு யி மக்களுக்கு அடுத்தநிலையில் இருந்தனர். மக்கள் தொகையில் 50 சதவீதத்தைக் கொண்டிருந்தனர். அடிமை முறையின் கீழ் குடிமக்களாக இவர்கள் இருந்ததால், அவர்கள் பொருளாதார ரீதியாக ஒப்பீட்டு சுதந்திரத்தை அனுபவித்தனர். தங்களை விடத் தாழ்ந்தவர்களாக இருந்த “அஜியா” மற்றும் “சியாக்ஸி” ஆகியோரை இந்த வெள்ளை யி கட்டுப்படுத்த முடிந்தது. குனுவோக்கள் கருப்பு யி அடிமை உரிமையாளர்களால் ஆளப்பட்ட பகுதிகளுக்குள் வாழ்ந்தனர்.

அவர்களுக்கு இடம்பெயரும் சுதந்திரம் இல்லை. மேலும் தங்கள் எஜமானர்களின் அனுமதியின்றி அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறவும் முடியாது. தங்கள் சொந்த சொத்துக்களை விற்கும்போது அவர்களுக்கு முழுமையான உரிமை இல்லை. மாறாக தங்கள் எஜமானர்களின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்தனர். அவர்கள் தங்கள் நிலத்தை விற்க விரும்பும்போது, ​​தங்கள் எஜமானர்களுக்கு சில கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருந்தது. சந்ததி இல்லாத இறந்த நபரின் சொத்து அவரது எஜமானருக்கே சென்றது.

கருப்பு யி அடிமை உரிமையாளர்கள் தங்கள் விருப்பப்படி குனுவோக்களைக் கொல்லவோ, விற்கவோ அல்லது வாங்கவோ முடியாது. அதே நேரத்தில் அவர்கள் மீதான கட்டுப்பாட்டு அதிகாரத்தை அவர்களால் மாற்றவோ அல்லது பரிசாக மற்றவர்களுக்கு வழங்கவோ முடிந்தது. எனவே, குனுவோக்கள் அடிமைகள் அல்ல என்றாலும், அவர்களுக்குத் தங்களுக்கென ஒரு முழுமையான ஆளுமையும் இருக்கவில்லை.

மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காக இருந்த “அஜியா” பிரிவை சேர்ந்தவர்கள், கறுப்பின யி உடைமையாளர்களிடம் அடிமையாக இருந்தது மட்டுமல்ல, குனுவோ பிரிவினரிடமும் பிணைக்கப்பட்டிருந்தனர். அந்த உரிமையாளர்கள் அவர்களைத் தாராளமாக விற்கவும், வாங்கவும், கொல்லவும் உரிமை பெற்றிருந் தனர்.

சியாக்ஸி” என்ற பிரிவினர் மக்கள்தொகையில் 10 சதவிகிதம் மட்டுமே இருந்த, மிகக் கீழான வகுப்பினர் ஆவர். அவர்களுக்குச் சொத்து, தனிப்பட்ட உரிமைகள் அல்லது சுதந்திரம் எதுவும் இருக்கவில்லை. மேலும் அவர்கள் மனிதர்களாக அல்ல “பேசும் கருவிகளாக” மட்டுமே கருதப்பட்டனர். அவர்கள் தங்கள் எஜமானர்களின் வீடுகளில் இருண்ட மூலைகளில் வாழ்ந்தனர். இரவில் குளிரைத் தாங்க வீட்டு விலங்குகளுடன் சுருண்டு படுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. எஜமானர்களின் மேற்பார்வையில், சியாக்ஸிகள் ஆண்டு முழுவதும் கடினமான வீட்டு வேலைகளையும், பண்ணை வேலைகளையும் செய்தனர்.

 

அவர்கள் கந்தல் ஆடைகளையும், கிழிந்த ஆட்டுத்தோல்களையும் அணிந்து, காட்டு வேர்களையும் மீதமுள்ள உணவுகளையும் உண்டு வாழ்ந்தனர். கிளர்ச்சி செய்தவர்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க, அடிமை உரிமையாளர்கள் அவர்களை இரும்புச் சங்கிலிகளாலும், மர விலங்குகளாலும் பிணைத்து, எல்லாவிதமான சித்திரவதைகளையும் செய்தனர். வீட்டு விலங்குகளைப் போலவே, சியாக்ஸிகளையும் சுதந்திரமாக உடைமைகளாகக் கையாளலாம், கட்டளையிடலாம், அவமானப்படுத்தலாம், அடித்துத் துன்புறுத்தலாம், வாங்கலாம், விற்கலாம் அல்லது தெய்வங்களுக்குப் பலியாகக் கொல்லலாம் என்ற அவலநிலையில் இந்தபிரிவு மக்களின் வாழ்க்கை இருந்தது.

குனுவோ பிரிவினரும், அஜியாவும் தங்கள் எஜமானர்களான கருப்பு யி பிரிவினரின் நிலத்தைப் பயிரிட, தங்களுடைய சொந்த கால்நடைகளையும் கருவிகளையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. குனுவோ ஒவ்வொரு ஆண்டும் ஐந்து, ஆறு அல்லது 10 நாட்களுக்கும் மேலாக இலவச வேலை செய்ய வேண்டியிருந்தது.இவர்கள் அதை செய்ய முடியவில்லை என்றால் அவர்கள் வைத்திருந்த அடிமைகளை இலவச வேலைக்கு அனுப்ப வேண்டும். அதுவும் செய்யவிலை என்றால் அவர்கள் அதற்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட தொகையைப் பணமாகக் கொடுக்க வேண்டும். அஜியா பிரிவினர் செய்த இலவச வேலை, அவர்களின் மொத்த வேலை நேரத்தில் சரிபாதி வரை எடுத்துக்கொண்டது. தங்கள் எஜமானர்களின் நிலத்தைப் பயிரிடுவதற்காக, அவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த நிலத்தைப் புறக்கணிக்க வேண்டியிருந்தது. இலவச உழைப்பத்தவிர, குனுவோவும் அஜியாவும் தங்கள் கறுப்பின யி எஜமானர்களால் திணிக்கப்பட்ட கந்துவட்டி கடன்களையும் வாங்க வேண்டியிருந்தது.

சுமை சுமக்கும் மிருகங்களைப் போல உழைக்கக் கட்டளையிடப்பட்டதால், அடிமைகளுக்கு உற்பத்தியில் சிறிதும் ஆர்வம் இருக்கவில்லை. சுதந்திரத்தைப் பெறுவதற்காக, லியாங்ஷான் மலைப் பகுதிகளில் இருந்த அடிமைகள், மெதுவாக வேலை செய்வது, கருவிகளை அழிப்பது, விலங்குகளைத் துன்புறுத்துவது, தங்கள் எஜமானர்களின் சொத்துக்களை எரிப்பது, ஏன், தங்கள் எஜமானர்கள் மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தொலைதூர மலைப் பகுதிகளில் இருந்த அடிமைகளுக்குத் தப்பி ஓடுவது கடினமாக இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துத் தப்பிக்க முயன்றனர். அடிமை உரிமையாளர்களுக்கு எதிராக அடிமைகளால் அரங்கேற்றப்பட்ட தன்னிச்சையான மற்றும் அவ்வப்போதைய கிளர்ச்சிகள் ஒருபோதும் ஓயவில்லை. தனிப்பட்ட உரிமைகளுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் கூட்டுப் போராட்டமும் வளர்ந்தது, மேலும் கூட்டு வெறுப்பு பெரும்பாலும் சிறிய ஆயுதக் கிளர்ச்சியாக மாறியது.

நிர்வாகமும் நில உடைமையும்

லியாங்ஷான் மலைகளில் வசித்த சுமார் 70 ஆயிரம் கருப்பு யி இனத்தவர் தங்கள் இனத்தவர்களை 100 குலங்களாக பிரித்தார்கள். ஒவ்வொரு குலத்தின் எல்லையும் மலைத்தொடர்கள் ஆறுகளால் வரையறுக்கப்பட்டு எந்த அத்துமீறிலும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கான குலங்களில் முறையான நிர்வாக அமைப்புகள் எதுவும் இல்லை என்றாலும் குலத்தில் இருந்த மூத்தவர்கள் வர்க்க சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் அடிமை உடைமையாளராக இருந்த கருப்பின யி பிரிவினருக்கு உதவியாக செயல்பட்டனர். கிளர்ச்சி செய்யும் அடிமைகளை அடக்குவது போன்ற குலங்களின் முக்கிய பிரச்சனைகளை அமுலாக்கினார்கள்.

கிளர்ச்சி செய்யும் இதர அடிமை பிரிவினரை கூட்டாக சேர்ந்து கடுமையான அடக்குமுறைகளை ஏவி விட்டார்கள். இந்தப் பகுதியில் வாழ்ந்த இனத்தவருக்கு எழுதப்பட்ட சட்டம் எதுவும் இல்லை வழக்காறு சட்டம் என்ற பெயரில் அடிமைகளை ஒட்டச்சுரண்டுவதும் திருமண உறவுகள் குலங்களை தாண்டி நடத்தக் கூடாது என்பதிலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். அந்தப் பகுதிகளில், மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் நில உரிமையாளர்களாகவும், 60 முதல் 80 சதவீதம் பேர் ஏழை விவசாயிகளாகவும் பண்ணைத் தொழிலாளர்களாகவும் இருந்தனர். கொடூரமான நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு ஆளான ஏழை விவசாயிகளுக்குச் சொந்தமான நிலத்தை விட, நில உரிமையாளர்கள் வைத்திருந்த நிலம் சராசரியாக 10 மடங்கு அல்லது பல டஜன் மடங்கு அதிகமாக இருந்தது. பொருளாகச் செலுத்தப்பட்ட நில வாடகை, அறுவடையின் 60 முதல் 70 சதவீதத்தை எட்டியது. மேலும், குத்தகைதாரர்கள் கடுமையான கட்டாய வரிகளையும் இதர கட்டணங்களையும் ஏற்க வேண்டியிருந்தது.

பல நூற்றாண்டுகளாக, லியாங்ஷான் மலைப் பகுதிகளில் யி இனத்தவரிடையே பண்டமாற்று முறையே வர்த்தக முறையாக இருந்தது. பரிமாற்றத்திற்கான பொருட்களில் முக்கியமாக கால்நடைகளும் தானியங்களும் அடங்கியிருந்தன. உப்பு, துணி, உலோகப் பொருட்கள், ஊசிகள், நூல்கள் மற்றும் பிற அன்றாடத் தேவைகள், யி மற்றும் ஹான் இனத்தவர் ஒன்றாக வாழ்ந்த இடங்களில் மட்டுமே கிடைத்தன. எப்போதாவது, யி இனத் தலைவர்களால் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட சில ஹான் வணிகர்கள், லியாங்ஷான் மலைப் பகுதிகளுக்குள் பொருட்களைக் கொண்டு சென்றனர்.

பிடிபட்டு அடிமைகளாக மாற்றப்படும் அபாயத்தையும் பொருட்படுத்தாமல், அவர்கள் சென்று, பெரும்பாலும் 100 சதவீதத்திற்கும் அதிகமான நிகர லாபத்தை ஈட்டினர். உற்பத்தி மற்றும் வாழ்வாதாரச் சாதனங்களின் கடுமையான பற்றாக்குறையால் அவதிப்பட்ட யி இனத்தவர், சிறிதளவு அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்காகக் கடுமையான சுரண்டலைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

ஒரு கோழியின் மதிப்பு ஒரு ஊசிக்கு மட்டுமேயாகவும், ஒரு ஆட்டுத்தோலின் மதிப்பு ஒரு கைப்பிடி உப்புக்கு மட்டுமேயாகவும் இருந்தது. பல அடிமைகள் ஆண்டு முழுவதும் உப்பு இல்லாமல் இருக்க வேண்டியிருந்தது. சிக்கலான வரலாற்று காரணங்களால், லியாங்ஷான் மலைகளில் யி இனத்தவரின் அடிமை முறை 1949 வரை நீடித்தது.

1949-ஆம் ஆண்டு விடுதலைக்கு முன்பு, யுனான், குய்ஷோ மற்றும் குவாங்சி மாகாணங்களில் இருந்த யி இன மக்கள், தாவோயிசம் மற்றும் பௌத்த மதங்களின் தாக்கத்துடன் மூதாதையர் வழிபாட்டையும் இணைத்து, பலதெய்வ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தனர். லியாங்ஷான் மலைகளில் வசித்த யி இன மக்கள், தெய்வங்களையும் பேய்களையும் வழிபட்டதோடு, சிலை வழிபாட்டிலும் நம்பிக்கை கொண்டிருந்தனர். மேலும், அவர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு அடிக்கடி பலிகளைச் செலுத்தினர். அவர்களின் மதச் செயல்பாடுகள் மந்திரவாதிகளால் வழிநடத்தப்பட்டன. ஆரம்பகால யி நாட்காட்டி, ஆண்டை 36 நாட்கள் கொண்ட 10 மாதங்களாகப் பிரித்தது. பத்தாவது மாதம் வருடாந்திர விழாக் காலமாக இருந்தது.

அ.பாக்கியம்

திங்கள், ஆகஸ்ட் 24, 2026

86 மிகப்பெரிய சிறுபான்மை இனக்குழு : சுவாங்

 



அ.பாக்கியம்

சீனாவில் இருக்கக்கூடிய 55 இன  சிறுபான்மை மக்களில் அதிக மக்கள் தொகை கொண்டிருக்கக்கூடிய இனமாக சுவாங் இனம் இருக்கிறது. இந்த இனம் சீன வரலாற்றில் முக்கிய பங்காற்றி இருக்கிறது.

1949 ஆம் ஆண்டு சீனப் புரட்சி வெற்றி பிறகு 1958 ல் இந்த இன மக்களுக்காக குவாங்சி சுவாங் தன்னாட்சி மாகாணம் அமைக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுவாங் இன மக்கள் 1.96 கோடியாக இருக்கிறார்கள். இது ஹுய் (1.14 கோடி), உய்குர் (1.18 கோடி), மியாவ் (1.11 கோடி) போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள இனசிறுபான்மை குழுக்களைவிட கணிசமாக அளவு அதிகமாகும்.

இன இணைப்பின் அடையாளம்

இந்த இன மக்கள் முதன்மையாக குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பகுதியில் (சுமார் 85% பேர்) அதிகம் வசிக்கின்றனர். மேலும், யுன்னான், குவாங்டாங், குயிசூ மற்றும் ஹுனான் மாகாணங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர்.  குவாங்சி மாகாணத்தில் சுவாங் இன மக்கள் அதிகமாக வாழ்வதால் இதற்கு குவாங்சி சுவாங் தன்னாட்சிப் மாகாணம் என்று பெயரிடப்பட்டது. சுவாங் இன மக்கள் இந்த மாகாணத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 32.49 சதவிகிதம் உள்ளனர். மொத்த சுவாங் இனமக்களில் 85 சதவிகிதம் இங்கு தான் வாழ்கின்றனர்.  குவாங்ஷியில் ஜுவாங், ஹான், யாவோ, மியாவோ, டோங் உள்ளிட்ட 12 பூர்வீக இனங்களுடன், மொத்தம் 44 வேறு இனங்களும் வாழ்கின்றன.

இது பல வேறுபட்ட கலாச்சாரங்கள் ஒன்றாக வாழும் இடமாகும்.  குவாங்ஷியை ஒரு தனி இனத்திற்கான பகுதியாகப் பிரிக்காமல், அனைத்து இனங்களும் ஒன்றாக இணைந்து வாழும் ஒரு பகுதியாக இருப்பதே இதன் சிறப்பம்சமாகும். இந்த “இணைப்பு” என்ற கொள்கை, அனைத்து இன மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்திற்கு உகந்தது என்று கருதப்பட்டது.

சுவாங் இன மக்கள் தற்போது தன்னாட்சி பகுதியாக ஒதுக்கப்பட்டுள்ள இதே இடங்களில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் பகுதி முதன் முதலாக பொ.ஆ.மு. 221 இல் சின் பேரரசின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. சுவாங் என்ற பெயர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்தது மட்டுமல்ல சின் பேரரசால் அங்கீகரிக்கப்பட்டு இருந்தது.  இதற்கு முன்பு இவர்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார்கள். இந்த மக்கள் வாழ்ந்த பகுதியில் காடுகளை அழித்து எரித்து சாம்பலாக்கி அதன் பிறகு சாகுபடி செய்து வாழ்வதும், வேட்டையாடுவது உட்பட பழமையான பொருளாதார முறைகளையே கடைப்பிடித்து வந்தார்கள்.

இங்கு நிலவிய சமூக அமைப்பு முறை நிலபிரபுத்துவ அடிமை முறையாக இருந்தது. மக்கள் பரம்பர நில உரிமையாளர்கள், குத்தகை விவசாயிகள், வீட்டு அடிமைகள் என்று மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர். 1911 ஆம் ஆண்டு சன்யாட்சன் தலைமையிலான குடியரசு புரட்சி நடைபெற்ற பிறகு இந்த முறைகள் ஒழிக்கப்பட்டது. டாங் வம்சம் துவங்கி கிங் வம்சம் வரையிலும் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய ஆட்சியின் கீழ் சுவாங் இருந்தாலும் ,சுவாங் இன உள்ளூர் தலைவர்களின் ஆட்சியின் கீழ்தான் அந்த மக்கள் ஆளப்பட்டார்கள். அந்த உள்ளுர் ஆட்சியாளர்கள் மக்களை ஒடுக்கி சுரண்டினார்கள். இதனால் இந்தப் பகுதியில் நூற்றுக் கணக்கான  கிளர்ச்சிகள் உருவாகிக் கொண்டே இருந்தது.

அந்நிய படையெடுப்பிற்கு எதிராக சுவாங்

1851-ல், சீன வரலாற்றிலேயே மிகப்பெரிய விவசாயிகளின் எழுச்சியான தைப்பிங் புரட்சி, இந்தப் பகுதியில் வெடித்தது. ஆயிரக்கணக்கான சுவாங் இனத்தவர் தைப்பிங் இராணுவத்தில் இணைந்து, அதன் வடக்கு நோக்கிய அணிவகுப்பில் முன்னனியில் செயல்பட்டது மட்டுமல் அதன் முதுகெலும்பாகம் விளங்கினார்கள். அவர்களில் பலர் அந்த இராணுவத்திற்கு தலைமையேற்றது மட்டுமல்ல தைப்பிங்கின் தேவராஜ்யத்திற்கும் முக்கியமான தலைவர்களாக மாறினார்கள்.

சீனாவின் தெற்கு எல்லைப் பகுதிகளில் வசித்து வந்த சுவாங் மக்கள், அந்நாட்டின் நிலப்பரப்பைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். 1070-களில், அவர்கள் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடித்தனர். 16-ஆம் நூற்றாண்டின் மத்தியில், படையெடுத்து வந்த ஜப்பானிய கடற்கொள்ளையர்களைத் தோற்கடித்தனர்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில், தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்திருந்த பிரெஞ்சுப் படைகள், வடக்கு நோக்கி முன்னேறி சீனாவை ஆக்கிரமித்தன. குவாங்சியில் உள்ள சுவாங் மற்றும் ஹான் இன மக்கள் கருப்புக் கொடிப் படையை உருவாக்கி, 1873 இல் ஹனோய் அருகே பிரெஞ்சுப் படையெடுப்பாளர்களைத் தோற்கடித்தனர். அவர்கள் 1882 இல் மீண்டும் ஹனோயில் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்தனர்.

1885-ல் பிரெஞ்சுப் படையெடுப்பாளர்கள் சீனாவிற்குள் மீண்டும் ஊடுருவிய போது, உள்ளூர் சுவாங் மற்றும் ஹான் மக்கள், சீன-வியட்நாம் எல்லையில் உள்ள ஜென்னங்குவான் கணவாயில் சீன இராணுவம் ஒரு முக்கியமான வெற்றியைப் பெற சுவாங் இன மக்கள் உதவினர்.

டாக்டர் சன் யாட்-சென் தலைமையிலான சீனாவின் முதல் ஜனநாயகப் புரட்சியான 1911 ஆம் ஆண்டுப் புரட்சிக்கு சுவாங் மக்கள் பெரும் பங்களிப்புகளைச் செய்தனர். டாக்டர் சன்யாட்-சென் தனது புரட்சிகர நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உருவாக்கிய அமைப்பான டோங் மெங் ஹுய்யில் பல சுவாங் குடும்பத்தினர் முக்கிய உறுப்பினர்களாக ஆனார்கள்.

சுவாங் மக்கள் டாய் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த சுவாங் மொழியைப் பேசுகிறார்கள். இந்த மொழிக்கு வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு முக்கிய கிளைமொழிகள் உள்ளன. வேறுபட்ட மொழியியல் உறவுகள் இருந்தது.  இவர்களது மொழி, வடக்கு தாய் மொழிகளில் பூயி மொழியுடனும், தெற்கு கிளை வியட்நாமின் நுங் மற்றும் தேய் மொழிகளுடனும் நெருங்கிய தொடர்புடையது. இவர்களின் எழுத்து முறை பண்டைய சுவாங் எழுத்துக்கள். இவைசீன எழுத்துக்களைப் பின்பற்றி உருவாக்கப்பட்டவை. இது தெற்கு சாங் வம்சத்தின் போது தோன்றின. ஆனால் அவை ஒருபோதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1955 ஆம் ஆண்டில், சீன அரசு லத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தரப்படுத்தப்பட்ட சுவாங் எழுத்து முறையை உருவாக்க உதவியது, இது இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

பல்லின கடவுள் கொள்கை

சுவாங் மக்கள் மோ மதம் எனப்படும் ஒரு தனித்துவமான பூர்வீக நம்பிக்கையைப் பின்பற்றுகிறார்கள். இது அவர்களின் ஆன்மீக மற்றும் அன்றாட வாழ்க்கையை ஆழமாக வடிவமைக்கிறது. அவர்களின் பாரம்பரிய மத நடைமுறைகள் பொதுவாக பல்லினக் கடவுட் கொள்கை (பாலித்தீசம்) என்று விவரிக்கப்படுகின்றன. இதில் மூதாதையர் வழிபாடு மற்றும் இயற்கை, ஆன்மாக்களை வணங்குதல் ஆகியவை அடங்கும். பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட சமயங்களின் கலவையாக உள்ளது. இயற்கை மற்றும் மூதாதையர் வழிபாட்டுடன், பல ஒழுங்கமைக்கப்பட்ட சமயங்களும் சுவாங் இன சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

தாங் வம்சத்திலிருந்து (கி.பி. 618-907) தாவோயிசமும், பௌத்தமும் சுவாங் இனத்தவர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கத்தோலிக்க, கிறிஸ்தவ மிஷனரிகள் இப்பகுதிக்கு வந்தனர். இருப்பினும், அவர்களின் செல்வாக்கு பெரும்பாலும் நகர்ப்புறங்களில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மொத்த மதப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை சுமார் 5.5 லட்சமாகும்.

சுவாங் இன மக்களின் மதவழிபாட்டு முறைகள், இயற்கை மற்றும் மூதாதையர் வழிபாட்டில் வேரூன்றிய பழங்கால நம்பிக்கைகள் தொடங்கி, வெவ்வேறு காலகட்டங்களில் வந்த பௌத்தம், தாவோயிசம், கிறித்தவம் போன்ற சமயங்களின் தாக்கங்களை உள்வாங்கி, தனித்துவமான கலாச்சார அடையாளத்தை உருவாக்கியுள்ளன.

சுவாங் மக்கள் பண்பாட்டு ரீதியாக வளமானவர்கள் மற்றும் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்களின் மரபுகள், சிக்கலான ப்ரோகேட் (வாரணாசி பட்டு மற்றும் காஞ்சிபுரம் புடவைகள் போன்று) துணிகள் முதல் துடிப்பான பாடல் காட்சிகள் வரை, சீனாவின் பல்வேறுபட்ட பண்பாட்டு நிலப்பரப்பின் முக்கியமான கூறுகளாகும். சீனா எல்லையைத் தாண்டி, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள தாய் மொழி பேசும் மக்களுடன் (தாய், லாவோ, ஷான், நுங்) சுவாங் மக்கள் வரலாற்று மற்றும் மொழியியல் உறவைக் கொண்டுள்ளனர்.

சுவாங் இனக்குழு, ஒரு ஒருங்கிணைந்த மக்கள் குழுவாக, நவீன சீன அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. 1950 களுக்கு முன், இந்த மக்கள் பல்வேறு உள்ளூர் பெயர்களில் அழைக்கப்பட்டனர். ஒரு பொதுவான இன உணர்வு பெரும்பாலும் இல்லாமல் இருந்தது. பிற தென்கிழக்காசிய இனக்குழுக்களுடன் ஒப்பிடும்போது, சுவாங் மக்கள் நவீன சீனாவின் பிரதான ஹான் கலாச்சாரத்தில் அதிக அளவில் ஒருங்கிணைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

 

கல்வியும் பொருளாதாரமும்

ஒரு ஆய்வின் படி, சுவாங் மக்களின் சராசரி கல்வி ஆண்டுகள் 8.12 ஆகும். இது கொரியர் (10.25) மற்றும் மங்கோலியர் (9.17) போன்ற குழுக்களைவிட குறைவாகவும், திபெத்தியர் (5.33), யி (6.49), மற்றும் மியாவ் (7.17) போன்றவற்றை விட அதிகமாகவும் உள்ளது. சுவாங் மொழியைப் பாதுகாக்கவும், வளர்க்கவும், இருமொழிக் கல்வி (Zhuang-Mandarin Bilingual Education) முக்கிய வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது. 1980களில் இருந்தே பல பள்ளிகளில் இருமொழிக் கல்வி அமல்படுத்தப்பட்டு வருகிறது. சுவாங் மொழி ஆசிரியர்கள் மற்றும் மொழிப் பணியாளர்களைப் பயிற்றுவிக்க சிறப்புப் பள்ளிகளும் நிறுவப்பட்டன. 1950 களில், சுமார் 3 மில்லியன் சுவாங் மக்கள் எழுத்தறிவு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றனர். தற்போது, குவாங்ஷியில் 269 இருமொழிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

பல இன மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் வழக்குரைஞர் அலுவலகங்கள், வழக்குகளை விசாரிக்கும் போது உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. மேலும், மாண்டரின் மற்றும் உள்ளூர் மொழிகள் இரண்டிலும் தேர்ச்சி பெற்ற ஊழியர்களை நியமிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறது.

இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், நடைமுறையில் சில சவால்களும் உள்ளன. தரப்படுத்தப்பட்ட சுவாங் மொழி வூமிங் (Wuming) மாவட்டத்தின் பேச்சு வழக்கை அடிப்படையாகக் கொண்டது. இது வடக்கு மற்றும் தெற்கு சுவாங் வழக்குகளிலிருந்து மிகவும் வேறுபட்டதாக இருப்பதால், பல மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இதைக் கற்க கடினமாக உள்ளது என்று கருதுகின்றனர். சில மாணவர்கள், தாங்கள் படித்த தரப்படுத்தப்பட்ட சுவாங்கை தங்கள் குடும்பத்தினரிடம் பேசும்போது அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

சிறுபான்மை இன மொழிகளைப் பாதுகாக்கும் அரசின் கொள்கைகள் இருந்தாலும், மாண்டரின் மொழி கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு அவசியமாகக் கருதப்படுவதால், பல குடும்பங்கள் தங்கள் பிள்ளைகள் மாண்டரின் மொழியிலேயே சிறந்து விளங்குவதில் அக்கறை காட்டுகின்றனர். இதனால், சுவாங் மொழியைக் கற்கும் ஆர்வம் சில சமயங்களில் குறைவதாகவும் கூறப்படுகிறது.

 

தரப்படுத்தப்பட்ட எழுத்து முறை சீன மக்கள் குடியரசால் உருவாக்கப்பட்டது. சுவாங் மொழிக்கு நீண்ட காலமாக ஒரு நிலையான எழுத்து முறை இல்லாத நிலையில், 1957 ஆம் ஆண்டு ரோமன் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய எழுத்து முறை உருவாக்கப்பட்டது. பின்னர், 1982 ஆம் ஆண்டில் இது 26 லத்தீன் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு மேலும் சீர்திருத்தம் செய்யப்பட்டு, தற்போதைய தரப்படுத்தப்பட்ட சுவாங் எழுத்து முறையாக அறியப்படுகிறது.

குவாங்ஷி இப்போது நாட்டின் முக்கிய கரும்பு மற்றும் பட்டு புழு வளர்ப்பு உற்பத்தி மையமாக உள்ளது. இதன் கரும்பு உற்பத்தி நாட்டின் மொத்த உற்பத்தியில் 60% க்கும் அதிகமாகும். மேலும் பட்டு புழு வளர்ப்பு உற்பத்தி நாடு முழுவதும் முதலிடத்தில் உள்ளது. இது விவசாயிகளின் வருமானத்தை பெரிதும் அதிகரித்துள்ளது. குவாங்ஷியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2012 இல் 1.30 டிரில்லியன் யுவானிலிருந்து 2025 இல் 2.97 டிரில்லியன் யுவானாக உயர்ந்துள்ளது. இது பொருளாதார வலிமையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது. இன விவகாரங்களில் சட்ட முறைமையை வலுப்படுத்துதல் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.  குவாங்ஷி இன விவகாரங்கள் தொடர்பான பல உள்ளூர் சட்டங்களையும், அரசு ஒழுங்குமுறைகளையும் உருவாக்கியுள்ளது. இது உள்ளூர் பண்புகளைக் கொண்ட இனப் பணிகளுக்கான முறையான அமைப்பை உருவாக்கியுள்ளது.

அனைத்து இனங்களையும் ஒன்றாக நவீன சோசலிசத்தை நோக்கி இட்டுச் செல்வது; மேலும், வளர்ச்சியின் பாதையில் “எந்த ஒரு இனமும் பின்தங்கியிருக்கக் கூடாது” என்பதை உறுதி செய்வது என்பது தான் சீன சோஷலிசத்தின் பாதையாக மாறியுள்ளது.

அ.பாக்கியம்

 

 

89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

  அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...