Pages

வெள்ளி, ஜூலை 17, 2026

கால் பந்தாட்டம்: சீனா ஏன் மைதானத்திற்குள் இல்லை?

 


அ.பாக்கியம்

இப்படி ஒரு கேள்வியை எழுப்புகிற பொழுதே சீனா கால்பந்து போட்டியின் மைதானத்திற்கு வெளியே அனைத்துமாக இருந்தது என்பதும் அடங்கி இருக்கிறது. உலக கோப்பை கால்பந்து போட்டி உலகத்தில் மிகப்பெரிய திருவிழாவாக நடைபெறுகிறது 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியாக இருந்தாலும் சரி, தற்போது அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகள் இணைந்து நடத்தும் கால்பந்து போட்டியானாலும் சரி மைதானத்திற்கு வெளியே உள்ள அனைத்து இடங்களிலும், அனைத்து பொருட்களிலும், சீனா தான் இருக்கிறது என்பது உலகறிந்த விஷயம். கத்தாரில் 2022 ல் நடைபெற்ற போட்டியின் போது மற்ற அனைத்து பொருட்களையும் தயாரித்து கொடுத்த சீனா, கால்பந்து போட்டியின் மைதானத்திற்கு தேவையான அதாவது பமைதானங்கள் ஒளிருவதற்கு லட்சக்கணக்கான சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவி மின்சாரத்தை  முழுமையாக அளித்தது. வேற எந்த நாடுகளும் குறுகிய காலத்தில் செய்ய முடியாத ஒரு விஷயத்தை சீனா செய்து முடித்தது.

தற்போது நடைபெறக்கூடிய 2026 ஆம் ஆண்டுக்கான உலக கால்பந்து போட்டிகளில் 16 பிரதான விளம்பரதாரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் நான்கு பெரிய விளம்பர நிறுவனங்கள் சீனாவை சேர்ந்தது. ஆடுகளத்தை சுற்றி இருக்கக்கூடிய விளம்பரங்கள் பெரும்பாலும் சீனத் தொழில்நுட்பங்களாலும், சீன நிறுவனத்தாலும் உருவாக்கப்பட்டது. சீனாவின் லெனோவா நிறுவனம் உலகக் கோப்பை போட்டியில் முதன்மையான அதிகாரப்பூர்வமான தொழில்நுட்ப கூட்டாளராக இருக்கிறது. மூன்று நாடுகளில் உள்ள ஒவ்வொரு மைதானத்திலும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில், ஆடுகளத்தில் ஆப்சைடு (off-side) கண்டுபிடிக்கும் தொழில்நுட்ப அமைப்புகளை சீன நிறுவனம் வழங்கி வருகிறது. ஹைசென்ஸ் என்ற சீன நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது முறையாக விளம்பரதாரராக இருக்கிறது. இந்த முறை மிக முக்கியமாக வார் (VAR)அமைப்புகளுக்கான காட்சி உபகரணங்களை தொழில்நுட்பத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது.

இதற்கும் மேலே,  ஜெஜியாங்கி மாகாணத்தில் உள்ள யிவூ நகரம், குவாங்  டாங், ஷான்டாங் ஆகிய இடங்களில் இருந்து  உலகக் கோப்பை போட்டியின் போது பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களிலும் 70 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்களை இவர்கதான் உற்பத்தி செய்து அனுப்பி  வைக்கிறார்கள். அதாவது சால்வைகள், ஜெர்சிகள், நினைவுப்பொருட்கள், ரசிகர்களின் வணிகப் பொருட்கள், போட்டியில் பயன்படுத்தப்படும் சிப்கள் பொருத்தப்பட்ட பந்துகள், என சீனாவில் இருந்து அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. இவற்றை அனைத்தையும் கடந்து தொடக்க விழாவில் சீனாவை சேர்ந்த பாப் மார்ட் நிறுவனத்தின் labubu பொம்மை கலாச்சார குறியீடுகளாகவும் இடம்பெற்றுள்ளன. உலகக் கோப்பையின் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் சீனா தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது.

மைதானத்திற்கு உள்ளே சீனாவின் தேசிய கால்பந்தாட்ட அணி இல்லை என்றாலும் மா நிங் (Ma Ning) தலைமையிலான நடுவர் குழு போட்டியை நிர்வகிக்கிறது. மா நிங் உலகக் கோப்பையில் சீனாவைப் பெருமையுடன் பிரதிநிதித்துவப் படுத்துகிறார். மா நிங் நேர்மைக்காக, கண்டிப்பான நடுநிலைமைக்கான செயல்பாட்டுக்கான புகழ்பெற்றவர்.  இயல்பாகவோ அல்லது வளப்பினாலோ கார்டு மாஸ்டர் என்ற பெயரை பெற்றுள்ளார். விதிகளை தீவிரமாக அமல்படுத்துவதால் அவரை அனைவரும் வரவேற்கின்றனர். 2024 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதிப் போட்டியை நடுவராக இருந்து சிறப்பாக நடத்தியவர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த உலகக் கோப்பையில் அவர் தொடர்ந்து  இரண்டாவது முறையாக பங்கேற்கிறார்.

எனவே ஆடப்படுகிற பந்தில் இருந்து பவுல்களை கண்டுபிடிக்கிற தொழில்நுட்பங்கள் முதல் நடுவர் வரை வழங்குகின்ற சீனா ஏன் கால்பந்தாட்ட அணியாக உள்ளே செல்ல முடியவில்லை. அல்லது தகுதி போட்டியில் ஏன் வெற்றி பெற முடியவில்லை என்பது கேள்வியாக எழத்தான் செய்யும். சீனா 2002 இல் முதல் முறையாக உலக கோப்பையில் பங்கேற்று விளையாடியது. அதன் பிறகு தகுதி பெற தவறிவிட்டது. முதல் முறையாக அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இணைந்து நடத்தும் இந்தப் போட்டிகளில் அணிகளின் எண்ணிக்கை 32 லிருந்து 48 ஆக உயர்ந்த போதிலும் சீனா தகுதி பெறவில்லை. சீனா கால்பந்தாட்டத்திற்கு இதுவே மிகவும் வேதனையான எதார்த்தமான காலமாகும். 2026 ம் ஆண்டு தகுதிச் சுற்றில் மூன்றாவது சுற்று வரை முன்னேறி பிறகு வெளியேறிவிட்டது.

 

கால்பந்து என்பது ஒரு அடித்தள செயல்பாடு என்றும் அது இயல்பாக வளர அனுமதிக்கப்பட்டால் மட்டுமே செழிக்கும் என்றும் லியான் ஹே ஸாபோ என்ற சீன செய்தி நிறுவனத்தின் இணை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். சீனாவின் விளையாட்டு துறை தடகளத்திலும், நீச்சல் பேட்மிட்டன், இன்னும் பல்வேறு வகையான விளையாட்டுகளிலும் அரசின் மையப்படுத்தப்பட்ட உதவியுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் கால்பந்தாட்டத்திற்கு  தனித்துவமான பயிற்சிகள் அதற்கு ஏற்ற உதவிகளும் தேவை . மேற்கண்ட விமர்சனம் நியாயமானதாகும். ஆனால் இதையே முன் வைத்து தி எக்கனாமிஸ்ட் என்ற பத்திரிக்கை, கால்பந்தில் சீனா ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறது. இந்த கட்டுரையில் அவர் சீன ஆட்சி முறைகளோடு பொருத்தி, சீனா ஒரு சர்வாதிகார நாடு என்ற அம்சத்தை நிரூபிக்க பார்க்கிறார். தி எக்கனாமிஸ்ட்  என்ற பத்திரிக்கை உலகம் அறிந்த முதலாளித்தத்தின் முட்டு என்பதை அனைவரும் அறிவார்கள். இக்கட்டுரையில் கீழ்கண்டவாறு எழுதுகிறார்.

உண்மையான பிரச்சினை என்னவென்றால், சீனாவில் கால்பந்து அரசு அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அது இலக்குகள், முழக்கங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களுடன் கூடிய ஒரு அரசியல் திட்டமாக மாறியுள்ளது. — மார்க் டிரேயர், தி எகனாமிஸ்ட் இதழில் எழுதும் ஒரு விளையாட்டு நிபுணர்.

மார்க் டிரேயர், வாதிடுபோல் அரசு அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத பல நாடுகள் கால்பந்தாட்டத்தின் தகுதிச் சுற்றின் முதல் சுற்றுக்கு கூட வர முடியவில்லை. குறிப்பாக இந்தியா லீக் ஆட்டம் முடித்து முதல் தகுதி சுற்று ஆட்டத்திலேயே வெளியேறி வருகின்றது. எனவே ஒரு கால்பந்தாட்ட அணியை வைத்து திறமையான எழுத்துக்கள் மூலம் சீனாவை  சர்வாதிகார அமைப்பு  என்பதை நிலை நிறுத்துகிறார்.

உண்மையில் சீன செய்தி ஆசிரியர் குறிப்பிட்டது போல், கால்பந்து என்பது இதர விளையாட்டுத்துறையான தடகளம், நீச்சல், பேட்மிட்டன் போன்ற பல வகையான விளையாட்டுகளில் அரசின் மையப்படுத்தப்பட்ட திட்ட உதவிகளும் மேற்பார்வைகளும் தனித்துவமான பயிற்சிகளும் இருக்கிறது. ஆனால் கால்பந்து விஷயத்தில் அப்படி இருக்க முடியாது என்பதையும் ஒரு அடித்தள செயல்பாடுகளில் இருந்து வரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதையும் கடந்த காலத்தில் முழுமையாக உள்வாங்காத பலகீனம் சீன கால்பந்தாட்ட முறைகளில் இருந்தது. அதே போன்று குழப்பமான லீக் நிர்வாக முறைகள் காணப்பட்டது. 2010 ஆம் ஆண்டிலிருந்து மணிப்பால் கால்பந்து (Money ball football) என்கிற வகையில் செயல்பட்டார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால் குறைந்த நிதி வளங்களை கொண்டு, குறைந்த மதிப்பிடப்பட்ட வீரர்களை கண்டுபிடித்து அவர்களின் திறமையை வளர்த்து போட்டி தன்மை உள்ள அணிகளை உருவாக்குவது என்பதாகும். இந்த முயற்சிகள் சீனாவில் வெற்றி பெறாமல் சிதைவுக்கு உட்பட்டன. பள்ளியில் உருவாக்கப்பட்ட கால்பந்தாட்ட திட்டங்களும் தொழில்முறை கால்பந்தாட்ட அமைப்பில் தடம் பதிக்க இயலாத சூழ்நிலைகளும் இருந்தன. இதில் அரசின் கொள்கை பிரச்சினைகளும் அடங்கி இருக்கிறது.

சீன நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற துறைகளில் மேலிருந்து கீழான திட்டமிடல் சீனாவிற்கு நன்கு பயனை தந்துள்ளது. இதேபோன்று மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதன் மூலமும் மையப்படுத்தப்பட்ட பயிற்சி முறைகள் மூலமும் வெற்றிகளை உருவாக்க முடிவதால் தனிநபர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் சீனா சிறந்து விளங்குகிறது. இதிலிருந்து மாறுபட்ட முறையில் இருக்கக்கூடிய கால்பந்து விளையாட்டானது சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுதல், கணிக்க முடியாத தன்மை மற்றும் ஆழமான அடித்தளம் ஆகியவற்றை சார்ந்து உள்ளது. ஒரு வெற்றிகரமான கால்பந்து கலாச்சாரம் என்பது பொதுவாக உள்ளூர் சார்ந்ததாகவும், இயல்பானதாகவும் இருக்கும் என்றும் அது குழந்தைகள் முறை சாராமல் விளையாடுவதையும், தனித்தன்மையுடன் கூடிய சமூக பரிணாம வளர்ச்சியும் கால்பந்தாட்ட முறைகள் சார்ந்திருக்கும் என்பதை சீனாவின் புதிய காலகட்ட விளையாட்டு துறை புரிந்து கொண்டிருக்கிறது.

தற்போதைய அதிபர் ஷி ஜின்பிங் நீண்ட காலமாகவே கால்பந்தாட்டத்தின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார் 2011 ஆம் ஆண்டில் அப்போது அவர் துணை அதிபராக இருந்தார். அவர் துணை அதிபராக இருந்த பொழுது, கால்பந்தாட்டம் குறித்து மூன்று ஆலோசனைகளை வெளிப்படுத்தினார். உலக கோப்பைக்கு தகுதி பெறுவது. உலகக்கோப்பை போட்டியை சீனாவில் நடக்குவது. அடுத்ததாக உலக கோப்பையை வெல்வது என்ற இலக்கை முன்வைத்தார். இவரின் விருப்பத்தின்படியே எடுத்துக் கொண்டாலும் FIFA வின் தற்போதைய சுழற்சி முறையின்கீழ் சீனா ஒரு உலக கோப்பையை நடத்தக்கூடிய வாய்ப்பை 2042 ஆம் ஆண்டு வரலாம் என்ற நிலை உள்ளது.  2030 ம் ஆண்டு போட்டி ஸ்பெயின்,போர்ச்சுகல்,மொராக்கோ நாடுகளில் நடைபெற உள்ளது. உலக கோப்பை போட்டி ஆரம்பித்து 100ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு தலா ஒரு தொடக்கப்போட்டி உருகுவே, அர்ஜென்டைனா,பராகுவே நாடுகளில் நடைபெறும். முன்று கண்டத்தில் 6 நாடுகளில் இப்போட்டை நடைபெறுகிறது.2034 ஆண்டு சவுதி அரேபியாவில் நடக்கும். எனவே 2042ம் ஆண்டு போட்டிகள் சீனாவில் நடத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் மற்ற இரண்டு இலக்குகளையும்  சென்றடைவதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள் அதில் வெற்றி பெறுவார்களா? இல்லையா? என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

புதிய நிலைமை என்னவென்றால், அடிமட்ட ஆற்றலை உள்ளடக்கிய ஒரு வகை கால்பந்து முறைகள் சீனாவில் உள்ளூர் மட்டத்தில் வேகமாக உருவாக தொடங்கி உள்ளது. குய்ஜோவின் “கிராம சூப்பர் லீக்குகள்” மற்றும் ஜியாங்சுவின் “சு சூப்பர் லீக்” போன்ற அடிமட்ட லீக்குகள் நடந்து வருகின்றது. இவை புத்துணர்ச்சியூட்டுவதாகத் தெரிகின்றன. அவை உள்ளூர் மக்களால் இயக்கப்படுவதாலும், குறைந்த நுழைவுத் தடைகள் மற்றும் இலகுவான நிர்வாகக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதாலும், அதிக உணர்ச்சிபூர்வமான மதிப்பையும் பரந்த மக்களைச் சென்றடை தலையும் கொண்டுள்ளன. சில போட்டிகள் தொழில்முறைப் போட்டிகளை விட அதிக பரபரப்பைக் கூட்டுவதாக இருக்கின்றன.

இந்தப் போட்டிகள் தேசிய அணி அமைப்பையோ அல்லது உயர்மட்ட அகமிகளையோ சார்ந்திருக்காமல், அடிமட்ட, உள்ளூர் மற்றும் சுயமாக ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. அவை தொழில்முறைப் போட்டிகள் அல்ல., ஆனால் கால்பந்தாட்டத்திற்கு இன்றியமையாத ஒரு கூறான தன்னிச்சையான பங்கேற்பைக் கொண்டுள்ளன. குறிப்பாக, கிராமப்புற சூப்பர் லீக்குகளில் பகல்நேர வேலை செய்யும் கால்பந்து வீரர்களே இடம்பெறுகின்றனர். அங்கு அதிக சம்பளம் பெறும் சூப்பர் ஸ்டார்கள் யாரும் இல்லை. மேலும் பார்வையாளர்கள் காண்பது என்னவென்றால், "அடுத்த கிராமத்தைச் சேர்ந்த வாங், பக்கத்து குக்கிராமத்தைச் சேர்ந்த லீயை எதிர்த்துப் போட்டியிடுகிறார்" என்ற முறையில் திறன்மிகு வீர ர்களை முன்வைத்து மக்கள் ஈர்க்கப்படுகின்றனர்.

அடிமட்ட கால்பந்தின் இந்த எழுச்சி, காலப்போக்கில் ஒரு அமைப்பு சார்ந்த போட்டித்தன்மையாக மாறி, சீனாவை ஒரு கால்பந்து வல்லரசாக உருவெடுக்க உதவுமா என்பதை காலம்தான் சொல்லும். ஆனால் வல்லுநர்கள் பரிந்துரைக்கும் அடிப்படை தர்க்கத்திற்குப் இது பொருந்துகிறது. சக்திவாய்ந்த கால்பந்து அணி உருவாக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். கால்பந்து, திட்டமிடலை அல்ல, பங்கேற்பையே தொடக்கப் புள்ளியாகக் கொண்டு இயல்பாக வளர வேண்டும் என்பதற்கான அறிகுறிகள் அதிகமாகி உள்ளது.

உலகளவில் பிரம்மாண்டமான வடிவமைப்பில் மிகவும் கைதேர்ந்த நாடுகளில் ஒன்றாக சீனா இருக்கிறது. ஆனால் கால்பந்து என்பது திட்டமிட முடியாத ஒரு விஷயமாகும். அதன் மிகப்பெரிய வசீகரம் அதன் கணிக்க முடியாத தன்மையில்தான் அடங்கியுள்ளது. இதனால்தான், சிறந்த கால்பந்து நாடுகள்  அனுபவத்தில், அதன் இலக்குகளிலிருந்து உருவாவதைவிட, பெரும்பாலும் கால்பந்து தெருக்களிலிருந்தும், சமூகங்களிலிருந்துமே உருவாகின்றன. இதற்கு ஆப்பிரிக்கநாட்டு பலவீர ர்களையும், பிரேசில் நாட்டு பலவீரர்களையும் ஏராளமாக குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

அ.பாக்கியம்

 

 

 

 

81 உய்குர்: முஸ்லீம் நாடுகளும் இரட்டை கோபுரமும்

 

அ.பாக்கியம்

சின்ஜியாங் தொடர்பான விவகாரங்களில் மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ந்து ஏராளமான, தவறான கருத்துக்களையும், பொய்களையும் பரப்பி வருகின்றன. இவற்றை இந்த நூற்றாண்டின் பொய்கள் என்றே அழைக்கலாம். இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி மேற்கத்திய நாடுகள் சீனாவின் நற்பெயரை கெடுக்கவும் அதன் உள் விவகாரங்களில் தலையிடவும் முயற்சி செய்து வருகின்றன.

முதலாவதாக, சின்சியாங் மாகாணத்தில் நடைபெறக்கூடிய விவகாரங்கள் பயங்கரவாதம். பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்த்து போராடுவதோடு இணைந்த ஒரு நடவடிக்கையாகும். ஆனால் மேற்கத்திய நாடுகள் இந்த பிரச்சனையை மதங்கள், இனக்குழுக்கள் மற்றும் மனித உரிமைகளுடன் இணைத்து பிரச்சனையை திசை திருப்புகிறார்கள். அப்பாவி மக்களை கடும் துயரத்துக்கு உள்ளாக்குகிற செயலில் ஈடுபடுகிறார்கள்.

1990 களில் இருந்து சின்ஜியாங் மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் இருந்தாலும் 2001 செப்டம்பர் 11 இல் அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு தீவிரவாத சக்திகள் சின்ஜியாங் மாகாணத்தில் ஆயிரக்கணக்கான வன்முறை தாக்குதல்களை நடத்தி உள்ளன. இதன் விளைவாக அப்பாவி மக்கள் பெரும் அளவில் உயிரிழந்ததோடு பெரும் சொத்து இழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. இவற்றில் உச்சபட்சமாக நடைபெற்றதுதான் உலகையே உலுக்கிய 2009 ஜூலை 5ஆம் தேதி நடந்த கலவரங்கள் ஆகும். இந்தக் கலவரத்தில் 197பேர்கள் உயிரிழந்தனர் 1700 க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இத்தகைய கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்டு சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்திய அரசாங்கம், சட்டப்படி வன்முறை பயங்கரவாத செயல்களை ஒடுக்கியது. அத்துடன் நிறகவில்லை அவற்றின் மூல காரணங்களை கலைவதற்காக தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக 2017 ஆம் ஆண்டுகள் முதல் ஒரு பயங்கரவாத தாக்குதல் கூட நடைபெறவில்லை. மக்களின் உயிருக்கும், சுகாதார கட்டமைப்பிற்கும் வளர்ச்சிக்கும் உரிமைகளுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இந்த நடவடிக்கைகளை சின்ஜியாங் கில் உள்ள அனைத்து இனக்குழு மக்களும் ஆதரவளித்தனர்.

 

உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு முக்கிய பங்களிப்பாகவும் இந்த நடவடிக்கைகள் அமைந்தது. இதன் விளைவாக சர்வதேச சமூகத்திடமிருந்து ஒரு நேர்மறையான வரவேற்பு கிடைத்தது. 2018-ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள், சீனாவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகப் பிரதிநிதிகள், ஜெனீவாவில் உள்ள ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான நிரந்தரப் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் மதக் குழுக்களின் பிரதிநிதிகள் உட்பட 70-க்கும் மேற்பட்ட குழுக்களில் 1,000-க்கும் அதிகமானோர் சின்ஜியாங்கிற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். சின்ஜியாங்கில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை அவர்கள் பெரிதும் பாராட்டினர். பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் இந்த நடவடிக்கைகள் இணக்கமாக உள்ளன என்றும், இவை முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு மற்ற நாடுகளுடன் பகிரப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 37 நாடுகளின் தூதர்கள் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பிரிவின் தலைவருக்கு கூட்டாக ஒரு கடிதத்தை அனுப்பினார்கள். அதில் மனித உரிமைகள் துறையில் சீனாவின் குறிப்பிட்டத்தக்க சாதனைகளை பாராட்டியது மட்டுமல்ல கடந்த மூன்று ஆண்டுகளில் சின்ஜியாங் மாகாணத்தில் ஒரு பயங்கரவாத தாக்குதல் கூட நடைபெறவில்லை என்பதையும் சின்ஜியாங்கிற்க்கு பாதுகாப்பும் நிம்மதியும் திரும்பியுள்ளது என்று பெருமையாக குறிப்பிட்டு இருந்தனர். இந்தக் கூட்டுக்கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் அல்ஜீரியா, கியூபா, எகிப்து, நைஜீரியா, பாகிஸ்தான், கத்தார், ரஷ்யா, சவூதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுடன் ஆப்பிரிக்கா, ஆசியா, மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளை சேர்ந்த நாடுகளும் அடங்கும்.

2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சீனாவின் சின்ஜியாங் மாகாண கொள்கையை ஆதரித்து அறிக்கை வெளியிட்ட நாடுகளின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்தது. இந்த 69 நாடுகளில் 28 நாடுகள் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய நாடுகளாகும். குறிப்பாக 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) உறுப்பினராக இருக்கும் நாடுகளாகும். இந்த அமைப்பின் சார்பில்தான் 2019ல் மார்ச் மாதம் சின்ஜியாங் மாகாணத்திற்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி அறிக்கையை வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில் தனது முஸ்லிம் குடிமக்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு அளிப்பதற்காக சீனாவை பாராட்டி இருந்தார்கள். 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சின்ஜியாங்கில் ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் வகையில், ஐ.நா பொதுச் சபையின் மூன்றாவது குழுவின் 74வது அமர்வில் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினார்கள்.

இத்தனை நடந்தும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி அப்போதைய அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பியோ சீன அரசாங்கம் ஜின்ஜாங்கில் முஸ்லிம் உய்குர் மக்களையும் பிற இன, மத சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்ற பொய்யை மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டே இருந்தார்கள்.

சீன அரசாங்கம் சின்ஜியாங்கின் உய்குர் பிரச்சனைகளை யுத்தம் தொடுப்பதன் மூலமாக தீர்ப்பதற்கு பதிலாக மாற்றுவழியில் தீர்த்ததை கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். ரஷ்யாவின் செச்சென்யாவில் 1994 முதல் 2009 வரை தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா இரண்டு போர்களில் ஈடுபட்டது போல் சீனா யுத்தத்தில் ஈடுபடவில்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய பயங்கரவாதத்திற்கு எதிரான போர் போன்ற வழிகளிலும் சீனா ஈடுபடவில்லை. இதைவிட அதிகமாக அமெரிக்கா ஈராக்கை கைப்பற்றிய பிறகு அபுகிரைப் (அபுகிரைப் (Abu Ghraib) என்பது ஈராக்கின் பாக்தாத் நகருக்கு மேற்கே அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது முதன்மையாக 2004-ஆம் ஆண்டு ஈராக் போரின் போது அமெரிக்கப் படைகளால் அங்குள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரமான சித்ரவதைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக உலகளவில் அறியப்படுகிறது சிறைச்சாலை (குவாண்டானமோ (Guantanamo) என்பது கியூபாவின் தென்கிழக்கே அமைந்துள்ள அமெரிக்க கடற்படை தளமாகும். இது உலகெங்கிலும் உள்ள பயங்கரவாத சந்தேக நபர்களை எந்தவித விசாரணையும் இன்றி நீண்டகாலம் அடைத்து வைக்கும் சர்ச்சைக்குரிய ‘குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம்’ மூலம் அறியப்படுகிறது.) முதல் கியூபாவின் அருகில் உள்ள குவாண்டனமோ சிறைச்சாலையில் நடத்திய சித்திரவதை கொலை மற்றும் ரகசிய முகாம்கள் அடிப்படையில் சீனா எந்த ஒரு கொடுமையான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.

 

மேலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2001 ரெட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா 24 நாடுகள் மீது போர் தொடுத்தது போல் சீனா செய்யவில்லை. 2001 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, யேமன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு நடத்திய போர்களில், வன்முறைகளில் சுமார் 9,40,000 திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 4,32,000 பொதுமக்கள் அடங்குவர். இந்த மோதல்களின் விளைவாக காயம் அடைந்தவர்கள் அல்லது நோய்வாய் பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். அதே போல் போர்களால் சுகாதாரம், பொருளாதாரம் கட்டமைப்புகள், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை அழிக்கப்பட்டதன் விளைவாக மறைமுகமாக இறந்த மக்களின் எண்ணிக்கையும் மிகஅதிகம். இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிந்தைய போர்நடந்த பகுதிகளில் சுமார் 3.6 முதல் 3.8 வரை அதாவது 36 லட்சம் முதல் 38 லட்சம் வரை மக்கள் மறைமுகமாக இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மொத்த இறப்பின் எண்ணிக்கை குறைந்தது 45 லட்சம் முதல் 47 லட்சம் என்ற அளவில் நடந்துள்ளது. சின்ஜியாங்கில் தீவிரவாதத்தில் ஈடுபடக்கூடிய குழுக்கள் அண்டை நாடுகளில் இருந்ததற்காக அந்த நாடுகள் மீது சீனா யுத்தத்தை தொடுக்கவில்லை.

ஐ.நா. பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் 2004-ல் பிபிசி-யிடம், ஈராக் மீதான அமெரிக்கத் தாக்குதல் சட்டவிரோதமானது என்று கூறினார். ஆனாலும், அமெரிக்க அரசாங்கத்தின் மீதோ அல்லது அதன் போர் திட்டமிடுபவர்கள் மீதோ எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை, மேலும் இந்தப் போர்களில் எதையும் விவரிக்க ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும், போரில் பொதுமக்கள் இறப்பது என்பது வெறும் “இணை சேதம்” மற்றும் “போரின் விளைவுகள்” மட்டுமே என்றும், அது ஒரு திட்டமிட்ட கொலைச் செயல் அல்ல என்றும் வலியுறுத்தின.

லிபியாவில் இலக்கு வைத்து பொதுமக்களை அழித்தது சம்பந்தமாக நேட்டோ நாடுகளிடம் கேட்கப்பட்ட பொழுது நேட்டோ நாடுகள் சட்டத்தை மீறவில்லை என்றும் எந்த ஒரு அறிக்கையும் நேட்டோ நாடுகள் வேண்டுமென்றே பொதுமக்களை குறி வைக்கவில்லை, லிபியாவில் போர் குற்றங்களை செய்யவில்லை என்று குறிப்பிட வேண்டும் என்று வாதிட்டார்கள். இத்தனை நடந்து பிறகும் 10 லட்சம் மக்கள் இறந்தது ஈராக்கில் அல்ல மாறாக சீனாவில் சின்ஜியாங் மாகாணத்தில் கொல்லப்பட்டதாக ஆவணப் படங்களை போலியாக தயாரித்து வெளியிட்டார்கள். ஆனால் இவை அனைத்தும் இன்று பொய் என்று நிரூபணம் ஆகி வருகின்றது.

இரண்டாவதாக சிங்கில் உள்ள தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மையங்களை பற்றி அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். இவையெல்லாம சித்திரவதை முகாம்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். உண்மை என்னவென்றால் இவை தீவிரவாத கருத்துக்களை தடுப்பது, தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான பயனுள்ள நேர்மறையான அணுகுமுறையாகும். தீவிரவாதத்திற்கான மூல காரணங்களை களைவதற்கும், வன்முறை தீவிரவாத சிந்தனைகள் உருவாவதை தடுப்பதற்கு இந்த மையங்கள் நிறுவப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது.

இந்த தொழிற்கல்வி பயிற்சி முகாம் பற்றி இதற்கு முந்தைய 76 வது அத்தியாயத்தில் விரிவாக விளக்கப்பட்டு இருந்தாலும், அதனுடைய நோக்கம் முழுமையாக அதில் எடுத்துரைக்கப்படவில்லை. தேவை கருதி இங்கே தொழிற்பயிற்சி முகாம்களின் நோக்கங்கள் முன்வைக்கப்படுகிறது.

தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மையங்களில், தீவிரவாதக் கருத்துக்களால் வழிதவறியவர்கள் அல்லது சிறு குற்றங்களைச் செய்தவர்கள், பொது மொழி, சட்ட அறிவு மற்றும் தொழில் திறன்களைக் கற்றுக்கொள்ளலாம். இத்தகைய கல்வியும் பயிற்சியும், தீவிரவாதக் கருத்துக்களிலிருந்து விடுபட்டு விலகி இருப்பதற்கும், தொழில் திறன்களில் தேர்ச்சி பெறுவதற்கும், அவர்களின் திறனை வலுப்படுத்தும். மேலும், இந்த முயற்சிகள் அவர்களைச் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக ஆக்குவதோடு மட்டுமல்லாமல், நிலையான வேலைகளைக் கண்டறியவும், சுயமாகப் பிழைப்பு நடத்தவும், ஒரு சிறந்த வாழ்க்கையை வாழவும் உதவும்.

தொழிற்கல்வி பயிற்சி மையங்களில்,

மனித உரிமைகளை மதிப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பான அரசியலமைப்பு மற்றும் சட்டக் கோட்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. பயிற்சி பெறுபவர்களின் கண்ணியம் முழுமையாக மதிக்கப்படுகிறது. மேலும் அனைத்து விதமான அவமதிப்புகளும் நிந்தனைகளும் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

பயிற்சி பெறுபவர்களின் சுதந்திரம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த மையங்கள் உறைவிடப் பள்ளிகளாக நிர்வகிக்கப்படுகின்றன. பயிற்சி பெறுபவர்கள் வீட்டிற்கு வருகை தரலாம் அல்லது தனிப்பட்ட காரியங்களைக் கவனிப்பதற்காக விடுப்பு கோரலாம்.

அதே சமயம், பயிற்சி பெறுபவர்கள் இனக்குழுக்களின் மொழிகளைப் பயன்படுத்துவதற்கான உரிமையும் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதிகளும் ஒழுங்குமுறைகளும், பள்ளி நேர அட்டவணைகள் மற்றும் உணவுப் பட்டியல்கள் ஆகியவை பொது மொழியிலும் இனக்குழுக்களின் மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன.

பல்வேறு இனக்குழுக்களின் பழக்கவழக்கங்கள் முழுமையாக மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. பலவகையான ஹலால் உணவுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

மத நம்பிக்கையின் சுதந்திரமும் முழுமையாக மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. மத நம்பிக்கையாளர்கள் விடுப்பில் சென்றாலும், சட்டப்பூர்வமான மத நடவடிக்கைகளில் கலந்துகொள்ள சுதந்திரம் பெற்றுள்ளனர்.

மூன்றாவதாக சீனாவின் உய்குர் முஸ்லிம்களுக்காக அமெரிக்கா கண்ணீர் வடிப்பது, மனித உரிமை பற்றி பேசுவது போலித்தனம் என்பதை அதனுடைய பாலஸ்தீனக் கொள்கை அம்பலப்படுத்தி வருகிறது. மிகக் கொடூரமான முறையில் இஸ்ரேலை வைத்து பாலஸ்தீனத்தினுடைய குழந்தைகளையும், பெண்களையும், பொது மக்களையும் ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து வருகிறது. அது மட்டுமல்ல மத்திய கிழக்கில் தனது கட்டுப்பாட்டுக்கு வராத அனைத்தும் முஸ்லிம் நாடுகளையும் தாக்குதல் நடத்தி, மக்களையும், அதன் கலாச்சாரத்தையும், வரலாற்றுச் சின்னங்களையும் அழித்து வருகின்றது.

இதற்கு மாறாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து பாலஸ்தீன பிரச்சனையை ஐரோப்பிய-அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் ஜியோனிசத்தின் தாக்குதல்களால் நடைபெற்று வருகிறது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 1955-ஆம் ஆண்டு பாண்டுங் மாநாட்டின் போது, ​​சீன மக்கள் குடியரசின் தூதுக்குழுவின் தலைவரான பிரதமர் சூ என்லாய், பாலஸ்தீன அகதிகள் பிரச்சினைக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளித்து, இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனப் பிரச்சினையை மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்க முன்மொழிந்தார்.

அன்று முதல், சீனாவின் மத்திய கிழக்குக் கொள்கை தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு வந்தாலும், பாலஸ்தீனப் பிரச்சினை குறித்த அதன் அடிப்படை நிலைப்பாடு மாறாமல் உள்ளது. அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு, அமெரிக்க-இஸ்ரேல் பாதுகாப்பு உதவி அங்கீகாரச் சட்டத்தை நிறைவேற்றியபோது, ​​சீனா உடனடியாகவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில், பாலஸ்தீனப் பிரச்சினை தொடர்பான ‘அமைதிக்கு நிலம்’ என்ற கொள்கையையும் பிற அடிப்படை நிலைப்பாடுகளையும் மீண்டும் வலியுறுத்தியது.

பாலஸ்தீனப் பிரச்சினை குறித்த சீனாவின் நிலைப்பாடு முஸ்லிம் உலகத்தின் பாராட்டைப் பெற்றது. அதன் விளைவாக 1950கள் மற்றும் 1960களில் பல்வேறு முஸ்லிம் நாடுகளுடன் தூதரக உறவுகள் நிறுவப்பட்டன. 1970களில் ஐ.நா. சபையில் சீனாவின் ஒரே சட்டப்பூர்வமான பிரதிநிதிகளாக சீன மக்கள் குடியரசின் அரசாங்கப் பிரதிநிதிகள் இருப்பதற்கு முஸ்லிம் நாடுகள் ஆதரவளித்தன; மேலும், அதன் தற்போதைய பட்டுப்பாதை முன்னெடுப்பிற்கு (BRI) முஸ்லிம் நாடுகள் பரவலான ஆதரவையும் பங்களிப்பையும் வழங்குகின்றன.

மறுபுறம், அமெரிக்காவின் பாலஸ்தீனக் கொள்கைகள், அமெரிக்காவிற்கும் முஸ்லிம் உலகிற்கும் இடையிலான உறவைச் சேதப்படுத்தியதோடு, அமெரிக்காவின் உலகளாவிய மூலோபாய நிலைநிறுத்தத்திற்கும் ஆபத்தை விளைவித்துள்ளன. 2008-ல் மேரிலாந்து பல்கலைக்கழகம் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள 80% முதல் 90% வரையிலான மக்கள், அமெரிக்காவையும் இஸ்ரேலையும் முதன்மையான அச்சுறுத்தல்களாகக் கருதுகின்றனர். அதே நேரத்தில், வெறும் 5% பேர் மட்டுமே சீனாவை ஒரு அச்சுறுத்தலாகக் கருதினர். மேலும், அமெரிக்காவை ஆதரித்தவர்களைக் காட்டிலும், சீனா ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கும் என்று நம்பியவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காக இருந்தது. தோஹாவின் அரபு ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆய்வு மையம் 2017-2018-ல் நடத்திய அரபு கருத்துச் சுட்டெண் (Arab Opinion Index) கணக்கெடுப்பில், 11 அரபு நாடுகளில் உள்ள பதிலளித்தவர்களில் 84% பேர், பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அமெரிக்கா ஓர் அச்சுறுத்தலாக இருப்பதாக உணர்ந்தனர். சீனாவைப் பொறுத்தவரை இந்த

 எண்ணிக்கை 28% ஆக இருந்தது. சீனாவின் உய்குர் கொள்கைகளுக்கு மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் அளிக்கும் ஆதரவானது, அடிப்படையில் சீனாவுக்கு அவை காட்டும் விசுவாசத்தின் வெளிப்பாடாகும்.

அ.பாக்கியம்

ஞாயிறு, ஜூலை 12, 2026

80 உய்குர்: அமெரிக்கத் தலையீடும் சீனாவின் அணுகுமுறையும்

 



அ.பாக்கியம்

 

1989 ஆம் ஆண்டு முதல் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசத்தில் தீவிரவாத நடவடிக்கைகளும், பயங்கரவாத செயல்களும் பல்கிப்பெருகின. வளர்ந்து வருகின்ற இந்த பிரச்சனையை அமைதியான முறையில் எவ்வாறு தீர்ப்பது என்பதற்கான தீவிர ஆலோசனையில் சீன மக்கள் குடியரசு ஈடுபட்டது. சீனாவின் திட்டமிடப்பட்ட பொருளாதார மேம்பாட்டிற்கும், வறுமை ஒழிப்பு கொள்கைகள் அமலாவதற்கும், சமூகத்தின் நிலைத்த தன்மையை மேம்படுத்துவதற்கும், வன்முறை மிகப்பெரும் இடையூறாக இருக்கும். இதற்கான மூல காரணங்களை கண்டு தீர்க்க வேண்டும் என்ற முறையில் தங்களுடைய செயல்பாடுகளை சீன அரசு அமைத்துக் கொண்டது. சீனாவின் இந்த அணுகுமுறை அமெரிக்காவின் அணுகு முறையான பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையாகும்.

சோசலிச சமூகத்தை உருவாக்குவதை லட்சியமாகக் கொண்டிருக்க கூடிய சீன கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பாக அமெரிக்க பாதையை கடைபிடிக்க முடியாது. பொருளதார வளர்ச்சி,வேலைவாய்ப்பு, கல்விகொள்கை, தொழிற்கல்வி பயிற்சி முகாம்கள் பற்றி முந்தைய அத்தியாயங்களில் விளக்கி உள்ளோம். அண்டைநாடுகள், சர்வதேச பயங்கரவாத் பிரச்சனைகள் எதிர்கொண்ட முறைகள் இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம். பயங்கரவாதத்தை காரணம் காட்டி அண்டை நாடுகள் மீது படையெடுப்பை நடத்துவது, அனைத்தையும் அழிப்பது என்ற கொள்கை சீனக் கொள்கையாக இருக்கவில்லை.

சோசலிசத்தை உருவாக்கக்கூடிய ஒரு கட்சி அண்டை நாடுகளோடு அமைதியான முறையில் பிரச்சினையை தீர்த்து தீவிரவாதத்தை ஒழித்து கட்டியது. சீனாவிற்கு அருகில் இருந்த குறிப்பாக ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசத்தின் எல்லைகளாக அமைந்திருந்த மத்திய ஆசிய நாடுகள், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்தும் இஸ்லாமிய அடிப்படை வாதிகள் சீனாவில் இருந்த சிறுபான்மை மக்களை, சீனாவின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக திருப்பிவிடக் கூடிய செயல்களை செய்தனர். இதற்கான வன்முறைகளை இங்கிருந்த தீவிரவாதிகளின் உதவியுடன் அரங்கேற்றினார்கள். எனினும் சீனா இந்த நாடுகள் மீது குற்றச்சாட்டை கூறி  படையெடுப்புகளை நடத்தவில்லை

மத்தியஆசிய நாடுகளும் சீனாவும்

மத்திய ஆசிய நாடுகளுடன் பதற்றத்தை தணிக்க கூடிய நடவடிக்கையில் சீனா ஈடுபட்டது. மத்திய ஆசிய நாடுகள் என்று அழைக்க கூடிய கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் 1992 ஆம் ஆண்டு முறையான தூதரக உறவுகளை ஏற்படுத்த தொடங்கியது. அடுத்த கட்டமாக கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டது. கஜகஸ்தான் மற்றும் உஸ்பெஸ்கிஸ்தான் இயற்கை எரிவாயுவை அதிகமாக சீனா வாங்கியது. சீனாவுடன் பொதுவான எல்லைகளை பகிர்ந்து கொள்வதுடன் சிறந்த சாலைகளையும், போக்குவரத்து வசதிகளையும் கொண்டிருந்த கஜகஸ்தானுடன் வர்த்தகம் செய்வதை அதிகப்படுத்தியது.

தீவிரமடைந்த பொருளாதார நடவடிக்கைகளின் விளைவாக 1992 முதல் 1997 வரையில் சீனாவுக்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையிலான வர்த்தகம் இரு மடங்கு அதிகரித்தது. சீனாவுடன் ஏற்பட்ட நல்லுறவுகளும் பொருளாதார வளர்ச்சிகளும் மத்திய ஆசிய நாடுகளின் உள்நாட்டு கொள்கைகளில் பல மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கியது. குறிப்பாக கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் உய்குர் தீவிரவாதிகள் கல்வி பயிற்சி, ராணுவ பயிற்சி முகாம்கள் நடத்துவதை அந்த அரசுகள் தடை செய்தன.

மேலும் 1996-ல், உய்குர் “பயங்கரவாதிகளை” தடுப்பதற்காக மத்திய ஆசிய நாடுகள் சீனாவுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. உஸ்பெகிஸ்தானின் ஆட்சியாளரான இஸ்லாம் கரிமோவ் (Islam Karimov), ‘உஸ்பெகிஸ்தானின் இஸ்லாமிய இயக்கம்’ (Islamic Movement of Uzbekistan) என்ற தீவிரவாத முஸ்லிம் குழுவின் சவாலை எதிர்கொண்டார்; இதனால் தீவிரவாதிகளுக்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் ஆதரித்தார்.

சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

1996 ஆம் ஆண்டு மத்திய ஆசிய நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்தக்கூடிய முறையிலும், தீவிரவாதத்திற்கு எதிரான ஒருமித்த நடவடிக்கைகளை உருவாக்கக் கூடிய முறையில், இன மற்றும் மத ரீதியிலான பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்ற அடிப்படையில்  சீனா, ரஷ்யா, கஜகஸ்தான் , கிர்கிஸ்தான் , தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து முறையான ஒரு பிராந்திய அமைப்பு தேவை என்ற காரணத்தினால் 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கினார்கள். உஸ்பெஸகிஸ்தான் காலதாமதமாக இந்த அமைப்பில் இணைந்து கொண்டது.

2017 ஆம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் 2023 ஆம் ஆண்டு ஈரானும், 24ஆம் ஆண்டு பெலாரஸ் நாடும் இந்த அமைப்பில் இணைந்தன.  அமெரிக்காவின் NATO அமைப்பு இனவாதங்களை தூண்டி கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பிளவுகளை உருவாக்கி தங்கள் ஆதிக்கத்திற்கு கீழ்கொண்டுவந்தது. இன மத ஒற்றுமைக்கான முயற்சியில்தான் சீனா ரஷ்யா மேற்கண்ட அமைப்பை ஆரம்பித்தனர்.

சீனாவுக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையிலான வர்த்தக பரிவர்த்தனை 2000-ஆம் ஆண்டு சுமார் $1.8 பில்லியனிலிருந்து 2005-ல் ஏறத்தாழ $7.7 பில்லியனாக அதிகரித்தது. வர்த்தகத்தில் நுகர்வோர் பொருட்களுக்குப் பதிலாக எரிசக்தி முக்கியப் பொருளாக மாறியது. எரிசக்தி வளங்களைக் கொண்டு செல்வதற்கு, சீன மக்கள் குடியரசு இப்பகுதி முழுவதும் குழாய்கள், இரயில் பாதைகள் மற்றும் சாலைகளை அமைக்க வேண்டியிருந்தது. இப்பகுதியில் உள்ள நாடுகளுடனான பொருளாதார செல்வாக்கும், ஒப்பந்தங்களும், ஜின்ஜியாங் மற்றும் மத்திய ஆசியா ஆகிய இருபகுதிகளில் வாழும் உய்குர் மக்கள் ஒத்துழைப்புக்கு வழிவகுத்தன.

மறுபுறத்தில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தின் மீது ஏற்படுத்திய தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் அவர்களுக்கு எதிரான மனப்பான்மை உருவாவதற்கும், அவர்கள் மீது தாக்குதுல் நடத்தவும் இது வழிவகுத்தது. ஆனால் சீனாவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிரான உணர்வுகளோ தாக்குதல்களோ ஏற்படாத வண்ணம் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள் குடியரசும் பிரச்சினைகளை கையாண்டனர். குறிப்பாக உய்குர் மற்றும் ஹீய் இன முஸ்லிம்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி இந்த வெறுப்புணர்வு உருவாகாமல் பார்த்துக் கொண்டார்கள்.

 

சீனா உடனடியாக அத்தாக்குதலைக் கண்டித்ததுடன், “பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் மதத் தீவிரவாதம்” ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தினர். ஜின்ஜியாங் பிரிவினைவாதிகளுக்கும் அல்-கொய்தா போன்ற சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சீனா கூறியது. 9/11 தாக்குதலுக்குப் பிறகு ஏறக்குறைய ஓராண்டு கழித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை சீனாவின் வாதத்தை ஏற்றுக்கொண்டு, ETIM-ஐ அமைப்பை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்ததுடன், அதை அல்-கொய்தாவுடன் தொடர்புபடுத்தியும் அறிவித்தது  சீன அதிகாரிகள் செப்டம்பர் 11 தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்ததோடு, ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்றும் அறிவித்தனர்.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள பயங்கரவாதப் பிரச்சினைகளுக்கு சீனா ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையைக் கையாண்டுள்ளது; ஆப்கானிஸ்தானில் கூட்டணிப் படைகளின் நடவடிக்கைகளுக்குப் பகிரங்கமாக ஆதரவளிப்பதோடு, தலிபான் மற்றும் அல்-கொய்தாவுக்கு எதிரான பன்னாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு பாகிஸ்தானுடனான தனது செல்வாக்கையும் பயன்படுத்தியது. இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, சீனாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டையும் உள்நாட்டுப் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்காக சீன அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

சமீபத்திய ஆண்டுகளில் உய்குர் பிரிவினைவாதக் குழுக்கள் வன்முறைத் தாக்குதல்களை நடத்தியுள்ள மேற்கு சீனாவின் சின்ஜியாங் பகுதியில் கண்காணிப்பை அதிகரிப்பதும், அப்பகுதியில் உள்ள தனது இராணுவ மற்றும் காவல் பிரிவுகளின் தயார்நிலையை உயர்த்துவதும் இதில் அடங்கும். ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்லும் பயங்கரவாதிகளைத் தடுப்பதற்காகவும், ஒட்டுமொத்த உள்நாட்டுத் தயார்நிலையை வலுப்படுத்துவதற்காகவும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைகளுக்கு அருகில் இராணுவப் பிரிவுகளையும் சீனா பலப்படுத்தியது. அமெரிக்காவின் வேண்டு கோளின் பேரில், பயங்கரவாத நிதியுதவி வழிமுறைகளைத் தாக்குவதற்கான ஆதாரங்களைத் தேடி சீன வங்கிகளுக்குள் சீனா ஒரு சோதனையை நடத்தியது.

ஜின்ஜியாங்-உய்குர் தன்னாட்சிப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் செயல்படும், சீன ஆட்சியை எதிர்க்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகள், ஆப்கானிஸ்தான் மற்றும் பிற இடங்களில் உள்ள அல்-கொய்தா, தலிபான் மற்றும் பிற தீவிரவாதிகளிடமிருந்து பயிற்சி, உபகரணங்கள் மற்றும் உத்வேகத்தைப் பெற்றதாக சீனா கவலை தெரிவித்துள்ளது. செச்சினியா உட்பட, முன்னாள் சோவியத் யூனியனில் உள்ள இஸ்லாமியக் குழுக்களுடன் உய்குர்கள் பயிற்சி பெற்றுப் போரிட்டதாகப் பல பத்திரிகை அறிக்கைகள் கூறின. ஆப்கானிஸ்தானில் உய்குர்கள் அல்கொய்தாவுடன் இணைந்து போரிட்டு வந்தது கண்டறியப்பட்டது. அல்கொய்தாவால் பயிற்சி அளிக்கப்பட்ட சில உய்குர்கள் சீனாவுக்குத் திரும்பிவிட்டதாக நம்பகமான அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

இரட்டை கோபுர தாக்குதலும் இரட்டை வேடமும்

இருப்பினும், சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சீனாவின் பங்களிப்பு குறித்த இந்த நேர்மறையான சித்தரிப்பு, அமெரிக்காவிடம் இல்லை. அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கையுடன் இணைக்கப்பட்ட, பயங்கரவாத அமைப்புகளாகப் பட்டியலிடப்பட்ட 33 அமைப்புகளின் பட்டியலிலோ அல்லது அவ்வாறு பட்டியலிடப்படாத பிற பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலோ, ஜின்ஜியாங்கைச் சேர்ந்த அறியப்பட்ட எந்தவொரு பயங்கரவாத/தீவிரவாத அமைப்பும் இடம்பெறவில்லை.

உஸ்பெகிஸ்தானின் இஸ்லாமிய இயக்கம் மற்றும் தெற்கு பிலிப்பைன்ஸின் அபு சயாஃப் ஆகியவை 1996 ஆம் ஆண்டின் அமெரிக்கச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டன. ஆனால் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமியக் கட்சி அவ்வாறு அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இவ்விரண்டும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஒசாமா பின்லேடனின் சர்வதேச இஸ்லாமிய ஜிஹாத் முன்னணியின் உறுப்பினர்களாகும்.

இருந்தும் அமெர்க்கா சீனாவிற்கு எதிராக உள்குத்து வேலைகளை தொடர்ந்து செய்துகொண்டு இருந்தது. ஒரு அமைப்பை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கோ அல்லது வங்கிக் கணக்குகள் தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானம் எண் 1373-இன் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கோ, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும், தங்களால் சர்வதேசத் தன்மை கொண்டவையாகக் கருதப்படும் அல்லது தங்கள் நாட்டு மக்களுக்கும் நலன்களுக்கும் அச்சுறுத்தலாகக் கருதப்படும் பயங்கரவாத அமைப்புகளை மட்டுமே தடைசெய்வதில் கவனம்செலுத்தின. இந்த இரட்டை அளவுகோல்கள் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹர்கத்-உல்-முஜாஹிதீன் (HUM), லஷ்கர்-இ-தொய்பா (LET) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JEM) ஆகிய மூன்று அமைப்புகளும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி (HUJI), அவ்வாறு அறிவிக்கப்படாத பிற பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால், ஜம்மு & காஷ்மீர் விடுதலை முன்னணி (JKLF), ஹிஸ்புல் முஜாஹிதீன் (HM) போன்ற உள்நாட்டு காஷ்மீர் பயங்கரவாத அமைப்புகளை அமெரிக்க பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்கவில்.

பாபர் கல்சா மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF) மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 1985-ல் ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானத்தில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் 1991-ல் புக்கரெஸ்டில் இந்தியத் தூதர் ரிபேரோவைக் கொல்ல முயன்றது போன்ற இந்திய எல்லைக்கு வெளியே நடந்த பயங்கரவாதச் செயல்களில் அவை முன்பு ஈடுபட்டிருந்ததே இதற்குக் காரணம் என்று தெரிகிறது. ஆனால், காலிஸ்தான் கமாண்டோ படை போன்ற பிற சீக்கிய பயங்கரவாத அமைப்புகள் இந்த நடவடிக்கையிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேசக் கூட்டணிக்கு சீனா ஆதரவளித்த போதிலும், உய்குர் பிரிவினைவாதக் குழுக்கள் விஷயத்தில் வாஷிங்டன் தனது இருநிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் பிடிக்கப்பட்ட உய்குர்களை, பயங்கரவாதிகளாக விசாரணை செய்வதற்காக சீன அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அது மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது; இந்தக் கோரிக்கையை அமெரிக்கா இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

1990 முதல் 2001 வரை, சீன எல்லைக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த கிழக்கு துர்கிஸ்தான் பயங்கரவாதப் படைகள், சின்ஜியாங்கில் 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாத சம்பவங்களுக்குப் பொறுப்பாக இருந்தன. இதன் விளைவாக, அடிமட்ட அதிகாரிகள் மற்றும் மதப் பணியாளர்கள் உட்பட அனைத்து இனக்குழுக்களையும் சேர்ந்த 162 பேர் உயிரிழந்தனர் மற்றும் 440-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சின்ஜியாங்கில் சீனா எதிர்கொள்ளும் பயங்கரவாதம்/மதத் தீவிரவாதம் தொடர்பான பிரச்சனையானது, கடந்த காலத்தில் பஞ்சாபிலும் தற்போது ஜம்மு-காஷ்மீரிலும் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகளுடன் சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. முதல் ஒற்றுமையானது, பயங்கரவாதத்தைத் தூண்டுவதில் புலம்பெயர் சமூகத்தின் சில உறுப்பினர்களின் பங்களிப்புடன் தொடர்புடையது. இந்தியாவில், பஞ்சாபில் சீக்கியப் பயங்கரவாதம் ஆரம்பத்தில் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற மேற்கத்திய நாடுகளில் உள்ள சீக்கியப் புலம்பெயர் சமூகத்தின் சில உறுப்பினர்களால், நிக்சன் நிர்வாகத்தின் போது பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ISI) மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு புலனாய்வு முகமை (DIA) ஆகியவற்றின் ஊக்குவிப்புடன் தொடங்கப்பட்டது.

ஆனால், அதனால் பஞ்சாபின் சீக்கிய மக்களிடையே ஒருபோதும் அதிக ஆதரவைப் பெற முடியவில்லை. இது பஞ்சாப் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது. இதற்கு மாறாக, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் ஆரம்பத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) உள்ள காஷ்மீரிகளின் ஆதரவுடன் உள்நாட்டு சக்திகளால் தொடங்கப்பட்டது. இதில் மேற்கத்திய நாடுகளில் உள்ள காஷ்மீரி (முக்கியமாக மிர்புரி) புலம்பெயர் சமூகத்தின் ஈடுபாடு மிகக் குறைவாகவே இருந்தது. சின்ஜியாங்கில், பயங்கரவாத வன்முறையைத் தூண்டுவதிலும் அரசியல் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதிலும் மத்திய ஆசியக் குடியரசுகள் சவூதி அரேபியா, துருக்கி மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள உய்குர் புலம்பெயர்ந்தோரின் பங்கு, கணிசமானதாக இருந்துள்ளது.

இரண்டாவது ஒற்றுமையானது, சின்ஜியாங்கில் பயங்கரவாத வன்முறை தீவிரமடைவதற்கான வெளிப்புறக் காரணங்கள் தொடர்பானது. ஜம்மு-காஷ்மீரைப் போலவே, சின்ஜியாங்கிலும் இரண்டு தனித்துவமான பயங்கரவாத/தீவிரவாத இயக்கங்கள் உள்ளன. ஒன்று, ஹான் சீனர்களின் ஆதிக்கம் என்று கருதப்படுவதற்கு எதிராக உய்குர் இன அடையாளத்தை நிலைநாட்ட இன அடிப்படையில் வன்முறையைக் கையாள்கிறது; மற்றொன்று, ஒரு சுதந்திர இஸ்லாமிய அரசை நிறுவுவதற்காக வன்முறையை நியாயப்படுத்த மத மற்றும் பான்-இஸ்லாமிய வாதங்களைப் பயன்படுத்துகிறது.

 

1970கள் மற்றும் 1980களில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை (சிஐஏ), உய்குர் பிரிவினைவாதக் கூறுகளுடன் ஒரு தொடர்பு வலையமைப்பை உருவாக்கியிருந்தது. அவர்களில், ஐரோப்பாவைத் தளமாகக் கொண்ட கிழக்கு துர்கிஸ்தானி ஒன்றியத்தின் தலைவரும், தலாய் லாமாவின் நெருங்கிய உய்குர் கூட்டாளியுமான எர்கின் அல்டெக்கின் போன்ற, கடந்த காலத்தில் சிஐஏ-வின் மியூனிக்கைத் தளமாகக் கொண்ட ரேடியோ லிபர்ட்டியில் பணியாற்றிய சிலர், இனப் பிரிவினைவாத இயக்கத்தின் முன்னணியில் இருந்தனர்.

அமெரிக்காவில் சீன பிரிவினைவாதிகள் மாநாடு

 

1998 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி, கிழக்கு துர்கிஸ்தான், திபெத் மற்றும் உள் மங்கோலிய மக்களின் கூட்டணிக் குழு என்ற பெயரில் பிரிவினையை ஆதரிக்க கூடிய சக்திகள்  நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தினர். கிளின்டன் நிர்வாகத்தின் சில அதிகாரிகளும், அமெரிக்க காங்கிரஸின் தலாய் லாமா ஆதரவு உறுப்பினர்கள் சிலரும் உட்பட 100 பேர் பங்கேற்றனர். தலாய் லாமாவின் நியூயார்க் பிரதிநிதியான ரின்சென் டார்லோ, மாநாட்டைத் தொடங்கி வைத்து, தலாய் லாமா மற்றும் எர்கின் அல்டெக்கினின் தந்தையான ஈசா யூசுப் அல்டெக்கின் ஆகியோரின் செய்திகளை வாசித்துக் காட்டினார்.

கூட்டணிக் குழுவிற்கு தனது ஆதரவைத் தெரிவித்த தலாய் லாமா, தனது செய்தியில் பின்வருமாறு கூறினார்: “மங்கோலியர்களும் திபெத்தியர்களும் ஒரே மதத்தையும் மதப் பாரம்பரியத்தையும் பகிர்ந்து கொண்டாலும், கிழக்கு துர்கிஸ்தான் மக்களுடனான நமது உறவுகள் சற்றும் குறைந்ததல்ல. நமது மூன்று மக்களும் புவியியல் மற்றும் வரலாற்றால் பிணைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் உலகில் மகத்தான மாற்றங்கள் நிகழ்வதை நாம் கண்டிருக்கிறோம். சோவியத் பேரரசு வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன் விளைவாக முன்னர் ஒடுக்கப்பட்ட பல நாடுகள் தங்கள் சுதந்திரத்தையும் விடுதலையையும் மீண்டும் பெற்றுள்ளன… இந்த மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, வெகு தொலைவில் இல்லாத எதிர்காலத்தில் கிழக்கு துர்கிஸ்தான், உள் மங்கோலியா மற்றும் திபெத் மக்களின் உண்மையான அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மேலும், கிழக்கு துர்கிஸ்தான், உள் மங்கோலியா மற்றும் திபெத் மக்கள் சீனாவின் அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசியாவிற்கும் பங்களிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”

சின்ஜியாங்கில் உள்ள பான்-இஸ்லாமிய சக்திகளுடன் தலாய் லாமா நெருங்கிப் பழகுவது குறித்து இந்தியாவும் அப்போது கவலைப்பட்டது. பாகிஸ்தானிய இராணுவ சர்வாதிகாரியான ஜெனரல் பர்வேஸ் முஷர்ரஃபின் ஆதரவாளர்களாகச் செயல்பட்டு வரும் சில சக்திகளால் கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மாநாட்டில் அவர் பங்கேற்றதற்குப் பின்னால் இந்தச் சக்திகளின் செல்வாக்கே இருந்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தைத் எழுப்பியது. அந்த மாநாட்டில் ஜம்மு-காஷ்மீர் ஹுரியத்தின் பிரதிநிதி ஒருவரும், ஓய்வுபெற்ற பாகிஸ்தானிய இராணுவ அதிகாரிகள் உட்பட ஏராளமான பாகிஸ்தானியர்களும் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் அவர் கூறியதாகக் கூறப்படும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை, தலாய் லாமாவின் தரப்பு பின்னர் மறுத்தனர்.

உள்நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக சீனா பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சியுடன் இணைத்து அரசியல் ரீதியாக மக்களை வென்றெடுத்தது. அதே நேரத்தில் சர்வதேச ரீதியில் இன மத பயங்கரவாதத்திற்கு எதிரான நேர்மறையான அணுகுமுறைகளை கடைபிடித்தது. ஆனால் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தங்களுக்கு வேண்டப்படாத நாடுகளை அடிபணிய வைப்பதற்கு எத்தகைய பயங்கரவாத குழுக்களையும் பயன்படுத்தக்கூடிய முறையில் தான் அவர்களின் அணுகுமுறை அமைந்திருந்தது.

 

அ.பாக்கியம்

"பாரோ"விடம் ஸ்தம்பித்த டாங்கோ நடனம்:


----------------------
பிரேசிலின் சம்பாவை அர்ஜென்டினாவின் டாங்கோ நடனம் புகழ்பெற்றது. நேற்றைய தினம் நடைபெற்ற எகிப்துக்கு எதிரான போட்டியில் எகிப்திய அணி அர்ஜெண்டை நாவை 80 நிமிடங்கள் கட்டிப்போட்டு. அர்ஜெண்டை நவின் அழகிய ஆட்டங்கள் அனைத்தும் கானல் நீராகவே இருந்தது. கடைசி 13 நிமிடங்களில் மூன்று கோள்களை அடித்து அர்ஜென்டினா தனது டாங்கோ நடனத்தின் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தியது. எகிப்து அணி மட்டுமல்ல பார்வையாளர்களும், தொலைக்காட்சியில் கண்ட கோடிக்கணக்கான அவர்களும் எகிப்து வெற்றி பெற்றுவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். எகிப்து அணியில் யார் அந்த ஹாசன் என்று கேட்கும் அளவிற்கு அவர்களின் விளையாட்டு அமைந்திருந்தது. ஆனால் கடைசி 13 நிமிடம் ஆட்டத்தின் போக்கையே அர்ஜென்டினா மாற்றிவிட்டது. குறிப்பாக மாற்று வீரர்கள் களமிறக்கப்பட்ட உடன் பிரம்மாண்டமான வேகம் எடுத்தது. எகிப்தின் கோல்கீப்பரை பாராட்டாமல் இருக்க முடியாது. தோல்வி அடைந்த அணியை விட வெற்றியடைந்த அர்ஜெண்டை நானு வீரர்கள் அழுதார்கள்... அழுதார்கள்... அழுதார்கள்... குறிப்பாக மெசியின் முகம் எல்லாம் கண்ணீரால் நனைந்து கிடந்தது... தோல்வி உறுதியாகி விட்ட நிலையில் கிடைத்த வெற்றி அல்லவா அதனால் தான் இந்த காட்சிகள் அடங்கியது.....
தொடரட்டும் அட்ஜென்டினாவின் டாங்கோ நடனம்...

ஐரோப்பாவில் அடங்கிய கால் இறுதி போட்டிகள்

 

கால் இறுதிக்கு முந்தைய சுற்று முடிவடைந்து கால் இறுதிப் போட்டிகள் நாளை காலை(10.7.20) துவங்க உள்ளது. கால் இறுதி போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்ற எட்டு அணிகளில் ஆறு அணிகள் ஐரோப்பாவை சேர்ந்தவை. அதிலும் குறிப்பாக ஐரோப்பாவின் ஸ்கான்ட்நேவியன் பகுதியை சேர்ந்த ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம், நார்வே நாடுகள் அடங்கும்.
இந்த உலகப் கோப்பை போட்டியில் இதுவரை கேப் வேர்டி, காங்கோ ஜனநாயக குடியரசு, எகிப்து ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு முத்திரை பதித்து சென்றுள்ளன.
இதுவரை நான்கு முறை உலக கோப்பையை வென்ற இத்தாலி லீக் ஆட்டத்திற்கு கூட தகுதி பெறவில்லை. இரண்டு முறை உலக கோப்பையை வென்ற உருகுவே இந்தப் போட்டியில் லீக் ஆட்டத்துடன் வெளியேறியது. நான்கு முறை கோப்பையை வென்ற ஜெர்மனி இரண்டாவது சுற்றில் வெளியேறியது.
ஐந்து முறை கோப்பையை வென்ற உலகில் கால்பந்தை பரவலாக அறிமுகப்படுத்திய பிரேசில் அணி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேற்றப்பட்டது. கால் இறுதிக்கு முன்னேறி உள்ள எட்டு அணிகளில் நான்கு அணிகள் அர்ஜெண்டைனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை ஏற்கனவே கோப்பையை வென்றுள்ள அணிகள்.
சுற்று பதினாறில் அமெரிக்காவின் அத்துமீறல் உச்சகட்டத்திற்கு சென்றது. சிவப்பு அட்டை காட்டப்பட்ட பாலேகான் மீண்டும் விளையாட வேண்டும் என்று ட்ரம்பு தலையிட்டு ஃபீபாவின் தலைவர் அதற்கான நிர்ப்பந்தம் கொடுத்து ஆட வைத்தார். ஏற்கனவே டிரம்பிற்கு கால்பந்து அமைதிக்கான புதிய ஒரு கேடயத்தை உருவாக்கி வழங்கினார். இந்த கால்பந்து போட்டியில் அமெரிக்க லீலைகள் என்று தனியாக எழுத வேண்டிய அளவுக்கு அதன் அடாவடித்தனங்கள் இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கிற 193 நாடுகளைவிட கால்பந்தாட்ட அமைப்பில் 211 நாடுகள் உறுப்பினராக இருக்கிறது. இந்த அமைப்பின் தலைவர் செய்த செயல்களை குறிப்பாக சிகப்பு அட்டையில் விஷயத்தில் அத்துமீறியதையும் டிரம்புக்கு கேடயம் கொடுத்ததையும் விமர்சித்து உள்ளது மட்டுமல்ல சட்டத்துக்கு புறம்பானது என்று கடுமையாக சாடி உள்ளது.
அமெரிக்காவின் அத்துமீறலை பெல்ஜியம் கால்பந்தாட்ட மைதானத்திற்குள் அடித்து நொறுக்கியது. டிரம்பை கேலிசெய்து அங்கேயே டான்ஸ் ஆடினர். அரங்கம் முழுவதும் அமெரிக்க ரசிகர்கள் அணி திரண்டு இருந்த பொழுதிலும் அமெரிக்காவின் அணிகள் படுதோல்வி அடைந்தன.
மற்றொரு முக்கியமான நிகழ்வு பிரேசில் தோல்வி அடைந்து வெளியேறியது. உலகம் முழுவதும் கால்பந்தாட்டத்தின் புகழைப் பரப்பியதில் பிரேசில் முதன்மையானது. அவர்களின் அழகியல் நிறைந்த ஆட்டங்கள் அற்புதமானவை. ஆரம்ப காலத்தில் பீலே ஆரம்பித்து நெய்மர் வரை பல்வேறு வீரர்கள் சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள். கால்பந்தை பல நுணுக்கங்களுடன் கையாள்வதில் அவர்களின் கால்கள் தனியாக வடிவமைக்கப்பட்டது போன்று தோன்றும்.
இந்த போட்டியில் காயப்பட்டிருந்த நெய்மறை விளையாட அனுமதித்து இருக்கக் கூடாது. அவர் இறங்கிய பிறகு வினிஷியஸ் ஜூனியர், என்றிக் இருவரின் ஆட்டமும் பக்கவாட்டில் ஒதுக்கப்பட்டதாகவே கருதுகிறார்கள். 2002 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட இடைவெளி பிரேசில் உலகக் கோப்பை இறுதிக்கு வர முடியாமல் இருக்கிறது. பிரேசில் பாரம்பரியங்களை மட்டுமே சுமக்காமல் புதிய காலத்துக்கு ஏற்ற வகையில் போதுமான பயிற்சிகள் எடுத்தால் 2030 ஆம் ஆண்டு கோப்பையை வெற்றி பெற முடியும் என்று பல நிபுணர்கள் கருதுகிறார்கள்.

கால் பந்தாட்டம்: சீனா ஏன் மைதானத்திற்குள் இல்லை?

  அ.பாக்கியம் இப்படி ஒரு கேள்வியை எழுப்புகிற பொழுதே சீனா கால்பந்து போட்டியின் மைதானத்திற்கு வெளியே அனைத்து மாக இருந்தது என்பது ம் அடங்...