அ.பாக்கியம்
கம்யூனிஸ்டுகள்
அதிகாரத்திற்கு வந்தால் இனம் மொழி கலாச்சாரம் அனைத்தையும் அழித்து விடுவார்கள்
என்று இன்றும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வரலாறு வேறு விதமாக
இருக்கிறது. சீனாவில் இனச் சிறுபான்மையினரின் அனைத்து வித கலாச்சார
பொக்கிஷங்களையும் எவ்வாறு பாதுகாத்து காலத்துக்கு தேவையானதை வளர்த்தெடுக்கிறார்கள்
என்பதை புரிந்து கொள்வதற்காக எங்கே விரிவான முறையில் சுட்டிக்காட்டப்படுகிறது.
கலாச்சார பாரம்பரிய
பாதுகாப்பு
சீன
கம்யூனிஸ்ட் கட்சியும்,
சீன மக்கள் குடியரசு அது நிறுவப்பட்ட காலத்திலிருந்து சீனாவின்
ஒற்றுமையை உயர்த்தி பிடிப்பதுடன் இனச் சிறுபான்மை குழுக்களின் கலாச்சார
பாரம்பரியங்களையும் அரிய பொக்கிஷங்களையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கூர் இன மக்கள் அதிகமாக இருந்தாலும் இங்குள்ள பல்வேறு
இனக்குழுக்கள் சீன கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு தனித்துவமான பங்களிப்புகளை செய்து
உயிரோட்டமான கலாச்சாரங்களை உருவாக்கி உள்ளது.
பண்டைய
காலத்து பட்டுப்பாதையின் ஒரு முக்கிய பகுதியில் இருந்து ஜின்ஜியாங்க் கலாச்சாரம்
தோன்றியது. ஆழமான, பாரம்பரியமிக்க, மாறுபட்ட வடிவங்களை கொண்ட, வளமான கலாச்சாரமாகும் இது. பலதரப்பட்ட நாட்டுப்புற கலைகளை உட்கொண்டும்,
வலுவான பிராந்திய தன்மைகளுடனும், இனப்
பண்புகளையும் உள்ளடக்கியது ஜின்ஜியாங்க் கலாச்சாரம். சீன மக்கள் குடியரசு பல
ஆண்டுகளாக சீனாவில் உள்ள பல்வேறு சிறுபான்மை இனக்குழுக்களின் கலாச்சார
பாரம்பரியத்தை சேகரித்தும், வகைப்படுத்தியும், அவற்றை மொழி பெயர்த்து வெளியிடக்கூடிய பணிகளை செய்து வருகிறது.
இம்
மக்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், இயற்கை எழில்
நிறைந்த தன்மைகளையும், பிற மதிப்புமிக்க வரலாற்று
பாரம்பரியங்களையும், பாதுகாக்க கூடிய பணிகளை சீனக்
கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள் குடியரசும் தொய்வின்றி
செய்து வருகிறது. இதற்கு மேலாக அரசாங்க வழிகாட்டுதல் கல்விசார் ஆதரவு, பொதுமக்கள் பங்கேற்க கூடிய முறையில் ஒருங்கிணைக்கும் பாதுகாப்பு அமைப்பை
சீன மக்கள் குடியரசு நிறுவியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் அனைத்து இனக்குழுக்களின்
சிறந்த கலாச்சார பாரம்பரியத்தின் தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் உறுதி செய்ய
முடிகிறது.
1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு மாகாணத்தில் பல்வேறு
நிலைகளில் கலைக்குழுக்களையும், கலைக்குழுக்கான பள்ளிகளையும்,
அது தொடர்பான நிறுவனங்களையும் ஏற்படுத்தினார்கள். இந்த நிறுவனங்கள்
மூலம் நாட்டுப்புற இசைகளையும், நடன படைப்புகளையும் சேகரித்து,
தொகுத்து, பாதுகாத்து, அடுத்த
தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியை செய்து வருகிறார்கள். தலைமுறை தலைமுறையாக
கலைப்பணியாளர்களுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
1990-களில், ‘சீன இன மற்றும் நாட்டுப்புற இசைக்கருவிகளின்
தொகுப்பு (ஜின்ஜியாங் தொகுதி), ‘சீன நாடக இசையின் தொகுப்பு
(ஜின்ஜியாங் தொகுதி), ‘சீன நாட்டுப்புறப் பாடல்களின்
தொகுப்பு (ஜின்ஜியாங் தொகுதி), ‘சீன இன மற்றும் நாட்டுப்புற
நடனங்களின் தொகுப்பு (ஜின்ஜியாங் தொகுதி)’ உள்ளிட்ட கலை தொடர்பான புத்தகங்கள்
அல்லது புத்தகத் தொடர்கள் வெளியிடப்பட்டன. இதன் மூலம், பல்வேறு
இனக்குழுக்களின் அனைத்து வகையான சிறந்த பாரம்பரிய இசை மற்றும் நடனங்களும், இசை, இசைக்குறிப்புகள், படங்கள்,
அத்துடன் உரை மற்றும் ஒலி-ஒளி வடிவங்களில் பாதுகாக்கப்படுவது
திறம்பட உறுதி செய்யப்பட்டது.
உய்குர் இசையின் தாய்
முகம்ஸ்.
“உய்குர் இசையின் தாய்” என்று அழைக்கப்படும் பன்னிரண்டு முகம்ஸ் என்பது
உய்குர் பாடல், நடனம் மற்றும் இசையை இணைக்கும் ஒரு செவ்வியல்
இசைத் தொகுப்பாகும். பட்டுப்பாதை வர்த்தகத்தினால் இவர்களது கலையில் பாரசீகம்,
துருக்கி, மற்றும் சீனக் கலாச்சாரங்களின்
தாக்கம் ஒருங்கே காணப்படுகிறது. உய்கூர் முகம் (Uyghur Muqam) என்ற தொகுப்பு உய்கூர் கலாச்சாரத்தின் மணிமகுடம் போன்றது. இது இசை,
பாடல், நடனம் மற்றும் கவிதை ஆகியவற்றின்
தொகுப்பாகும். பன்னிரு முகம் (12 Muqams) உலகப்
புகழ்பெற்றது. சுமார் 300-க்கும் மேற்பட்ட மெட்டுகள்,
பாடல்களைக் கொண்ட ஒரு மாபெரும் இசைக்கோவை. இது சீனாவில் இன இசையின்
ஒரு பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. 1949-ல் சீன மக்கள்
குடியரசு நிறுவப்படுவதற்கு முன்பு, பன்னிரண்டு முகம்ஸ்
கிட்டத்தட்ட அழிந்துபோகும் நிலையில் இருந்தது.
ஆகஸ்ட் 1951-ல், அப்போதைய சின்ஜியாங் மாகாணத்தின் மக்கள் அரசாங்கம், மீட்கப்பட
வேண்டிய கலைகளின் பட்டியலில் பன்னிரண்டு முகம்ஸை முதலிடத்தில் பட்டியலிட்டது.
அந்நிறுவனம் முறையான ஆராய்ச்சி, சேகரிப்பு மற்றும்
தொகுப்பிற்கான முயற்சிகளைத் திரட்டியது. 1955-ல், பன்னிரண்டு முகம்ஸின் இசைப் பதிவு, இசைக்குறிப்புகள்
மற்றும் பாடல் வரிகளின் தொகுப்பு ஆகியவை நிறைவடைந்தன. மேலும், பன்னிரண்டு முகம்ஸின் இசைக்குறிப்புகள் 1960-ல்
வெளியிடப்பட்டன. இது முற்றிலும் வாய்மொழி மரபிலிருந்து ஒரு எழுத்து வடிவ மரபாக
மாறிய திருப்புமுனையைக் குறித்தது.1980-களுக்குப் பிறகு,
தன்னாட்சிப் பிராந்தியத்தின் அரசாங்கம் ஒரு முகாம் ஆராய்ச்சி
நிறுவனத்தையும் ஒரு முகாம் கலைக் குழுவையும் நிறுவியது.
இந்த
நிறுவனமும், கலைக்குழுவும் உய்குர் செவ்வியல் இசை, நாட்டுப்புறப்
பாடல்கள் மற்றும் நடனங்கள், குறிப்பாக முகாம்களைச்
சேகரித்தல், வகைப்படுத்துதல், ஆராய்ச்சி
செய்தல் மற்றும் நிகழ்த்துவதில் நிபுணத்துவம் பெற்றவை. இதன் மூலம் முகாம் கலைகளின்
மீட்பு, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை மேலும் ஊக்குவித்தன. 2003-ல், ஜின்ஜியாங் உய்குர் முகாம் கலைகள் “சீன இன
மற்றும் நாட்டுப்புற கலாச்சார பாதுகாப்புத் திட்டத்தின்” முதல் தொகுதி முன்னோடித்
திட்டங்களில் சேர்க்கப்பட்டன.
2005-ல், சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் முகாம் கலைகள்
யுனெஸ்கோவால் “மனிதகுலத்தின் வாய்மொழி மற்றும் அருவ பாரம்பரியத்தின் தலைசிறந்த
படைப்பு” என அங்கீகரிக்கப்பட்டது. இவர்களது கலை, மனித
உணர்ச்சிகளையும், இயற்கைக்கும் மனிதனுக்குமான பிணைப் பையும்
அழகாக வெளிப்படுத்துகிறது. உலகளாவிய கலாச்சாரப் பன்முகத்தன்மையில், உய்கூர் மக்களின் கலைகள் என்றும் அழியாத ஒரு வண்ணமயமான அத்தியாயமாகத்
திகழ்கின்றன.
ஜின்ஜியாங்
அனைத்து இன சிறுபான்மையினரின் நாட்டுப்புற இலக்கிய வளங்களின் வளத்தை தன்னகத்தே
கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக அரசின் ஆதரவுடன்,
இந்த தன்னாட்சிப் பிராந்தியத்தின் அரசாங்கம், பல்வேறு
இன சிறுபான்மையினரின் நாட்டுப்புற இலக்கியப் படைப்புகளை முறையாக மீட்டுப்
பாதுகாப்பதற்கான திட்டங்களை வகுத்து, முயற்சிகளை
ஒருங்கிணைத்துள்ளது.
இதன் விளைவாக, உய்குர், கசாக், மங்கோலிய, கிர்கிஸ்,
தாஜிக், ஷிபே, உஸ்பெக்
மற்றும் பிற மக்களின் நாட்டுப்புறப் பாடல் வரிகள், புராணங்கள்
மற்றும் இதிகாசங்கள், நகைச்சுவையான நிகழ்வுகள் மற்றும்
கதைகள், நீதிக்கதைகள் மற்றும் பழமொழிகள் உள்ளிட்ட ஏராளமான
நாட்டுப்புற இலக்கியப் பாரம்பரியங்கள் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு,
மொழிபெயர்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளன.
மானஸ், இது கிர்கிஸ் (Kirgiz) மக்களின்
மாபெரும் வீர காவியமாகும். ஹோமரின் இலியாட் மற்றும் ஒடிஸி காவியங்களை விடவும்
நீண்டதாகக் கருதப்படும் இக்காவியம், தீய சக்திகளுக்கு
எதிராகப் போராடிய மானஸ் மற்றும் அவரது சந்ததியினரின் கதையைக் கூறுகிறது. இது
யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் மனிதகுலத்தின் அருவமான கலாச்சார
பாரம்பரியப் பட்டியலில் (Intangible Cultural Heritage) இடம்பெற்றுள்ளது.
ஜங்கர்
மங்கோலிய (Mongolian) மக்களின் ஓயிரட் (Oirat) பழங்குடியினரிடையே உருவான
காவியம் இது. கெசார் திபெத்திய (Tibetan) மக்களின்
பாரம்பரியக் காவியமாகும். இது சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாகப்
பாடப்பட்டு வருகிறது. வன்முறையை எதிர்த்துப் போராடி, பலவீனமானவர்களைக்
காத்த கெசார் மன்னனின் வீரதீர செயல்களை இக்காவியம் விவரிக்கிறது. சுமார் 6 லட்சம் வரிகளைக் கொண்டுள்ள இது, உலகின் மிக நீண்ட
மற்றும் தற்போதும் வழக்கில் இருக்கும் ஒரே வாழும் காவியமாக (Living Epic) அறியப்படுகிறது. இது போன்ற அரியவகை நாட்டுப்புற இதிகாசங்களைச் சேகரித்தல்,
தொகுத்தல், மொழிபெயர்த்தல், வெளியிடுதல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகியவற்றில் பெரும் சாதனைகள்
செய்யப்பட்டுள்ளன.
ஒரு
விரிவான துருக்கிய அகராதி மற்றும் பிற விதிவிலக்கான சிறுபான்மையினரின் வரலாற்று
மற்றும் கலாச்சாரப் பாரம்பரியங்கள் திறம்படப் பாதுகாக்கப்பட்டுள்ளன. ரபியா என்ற
இலக்கியம் உய்குர் இலக்கியத்தில் தாஜ்மகால் என்று போற்றப்படும் ஒரு செவ்வியல்
காதல் கதையாகும். இக்காவியம் வெறும் காதல் கதை மட்டுமல்ல. அக்கால சமூகத்தில்
நிலவிய பொருளாதார ஏற்றத்தாழ்வையும்,
சமூக அநீதிகளையும் கடுமையாக விமர்சிக்கிறது. ஃபெர்ஹாத், ஷெரின், மற்றும் கசாக் நெடுங்கவிதைகளான செலிஹா,
செமென் ஆகியவை தொகுக்கப்பட்டு சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு
வெளியிடப் பட்டன.
பண்பாட்டுப் பாரம்பரியத்தை
மீட்டெடுத்தல்
1980-களின் முற்பகுதியில், சின்ஜியாங்கில் இன
சிறுபான்மையினரின் தொன்மையான நூல்களைச் சேகரித்தல், பதிப்பித்தல்
மற்றும் வெளியிடுதல் ஆகியவற்றுக்குப் பொறுப்பான ஒரு அலுவலகமும், ஒரு திட்டமிடல் மற்றும் வழிநடத்தும் குழுவும் நிறுவப்பட்டது. 2008-ஆம் ஆண்டுக்குள், ஜின்ஜியாங் சிறுபான்மையினர்
தொன்மையான நூல்கள் பதிப்பு அலுவலகம் 20,518 தொகுதிகளை
(அல்லது படைப்புகளை) சேகரித்துப் பதிவுசெய்தது. இதில் 100-க்கும்
மேற்பட்ட தலைப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றுள், உய்குர்
செவ்வியல் நூலான ‘குடாட்கு பிலிக்’கின் மூன்று கையெழுத்துப் பிரதிகளின் அசல்
பிரதிகள், கசாக் மருத்துவப் படைப்பான ‘மருத்துவ
ஆண்டுக்குறிப்புகள்’, மற்றும் ஷிபே ஷாமனிச செவ்வியல் நூலான
‘ஷாமன் தெய்வீகப் பாடல்கள்’ போன்றவையும் அடங்கும்.
தன்னாட்சிப்
பிராந்தியத்தில் அருவப் பண்பாட்டுப் பாரம்பரியத்தை மீட்டெடுத்தல், தொகுத்தல், ஆய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக, ஜின்ஜியாங் அருவப் பண்பாட்டுப் பாரம்பரியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம்
நிறுவப்பட்டது. 2008-ஆம் ஆண்டு , ஜின்ஜியாங்கில்
4,000-க்கும் மேற்பட்ட பண்பாட்டுச் சின்னங்கள் உள்ள இடங்கள்
கண்டறியப்பட்டன. அவற்றில் 58 இடங்கள், அரசின்
பாதுகாப்பின் கீழ் உள்ள முக்கிய பண்பாட்டுச் சின்னங்களாகப் பட்டியலிடப்பட்டன.
ஜின்ஜியாங்கில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாப்பதற்கும்
புனரமைப்பதற்கும் அரசு எப்போதுமே மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.
குவிந்துகிடக்கும் பௌத்த
குடைவரைக் கோயில்கள்
பாதுகாப்பு
மற்றும் மீட்பு ஆகிய இரண்டிற்கும் முன்னுரிமை அளித்தல்” என்ற வழிகாட்டும்
கொள்கையின் கீழ், கிசில் (Kizil Caves) ஆயிரம் புத்தர் குகைகள்,
சுமார் 236 குகைகள் உள்ளன. பௌத்த மதக் கதைகள்,
இயற்கை காட்சிகள், மற்றும் கடவுள் உருவங்கள்
அடங்கிய ஆயிரக்கணக்கான சதுர மீட்டர் பரப்பளவிலான வண்ணமயமான சுவரோவியங்கள் இங்கு
பாதுகாக்கப்படுகின்றன. கும்துரா ஆயிரம் புத்தர் குகைகள் (Kumtura Thousand
Buddha Caves) கி.பி. 5 முதல் 11 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட இந்த குகைகளில் 100 க்கும் மேற்பட்ட கோயில்கள் மற்றும் விகாரங்கள் உள்ளன. சிம்சிம் ஆயிரம்
புத்தர் குகைகள் இப்பகுதியில் சுமார் 54 குகைகள்
காணப்படுகின்றன. இவை வெய்-ஜின் (Wei-Jin) முதல் சுயி-டாங் (Sui-Tang)
காலம் வரை உருவாக்கப்பட்டவை ஆகும். இந்த குகைகளில் உள்ள
சுவரோவியங்களில் இந்திய-ஈரானிய கலைப் பாணிகளைக் காண முடிகிறது. பெஸ்கிலிக் ஆயிரம்
புத்தர் குகைகள் 5 முதல் 14-ஆம்
நூற்றாண்டைச் சார்ந்தவை. உய்குர் (Uyghur) மொழியில்
“பெஸ்கிலிக்” என்றால் “அலங்கரிக்கப்பட்ட இடம்” அல்லது “ஓவியங்கள் நிறைந்த இடம்”
என்று பொருள். இங்கு 83 குகைகளில் 57
குகைகள் எஞ்சியுள்ளன. அவற்றில் 40 குகைகளில் 1200 சதுர மீட்டர் பரப்பளவில் வண்ணமயமான புத்தரின் ஓவியங்கள் மற்றும் போதனைகள்
மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன. காவோசாங் பண்டைய நகர இடிபாடுகள், ஹமி மன்னரின் கல்லறை, யிலி தளபதியின் முன்னாள்
இல்லம் போன்ற இப்பகுதியின் முக்கிய கலாச்சார நினைவுச்சின்னத் தளங்களில் ஒரு பெரிய
அளவிலான புனரமைப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டில், தன்னாட்சிப் பிராந்தியத்தில் “பட்டுப்
பாதைக்கான முக்கிய கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீட்பு மற்றும் பாதுகாப்புத்
திட்டம் (ஜின்ஜியாங் பிரிவு)” தொடங்கப்பட்டது. ஜின்ஜியாங்கில் உள்ள பண்டைய பட்டுப்
பாதையின் பிரதான வழித்தடத்தில் அமைந்துள்ள பெரிய வரலாற்றுத் தளங்கள் மற்றும்
முக்கிய கலாச்சார பாரம்பரியங்களை முழுமையாக மீட்டுப் பாதுகாப்பதற்காக, விரிவான நிதி மற்றும் மனித வளங்கள் திரட்டப்பட்டு மீட்டெடுக்கப்பட்டன.
சமீபத்திய
ஆண்டுகளில், காஷி மற்றும் பிற புகழ்பெற்ற வரலாற்று மற்றும் கலாச்சார நகரங்களைப்
பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக,
காஷி பட்டுப்பாதையில் ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக
இருந்தது. இந்த நகரமும் அதன் கலாச்சாரமும் தனித்துவமான இனப் பண்புகளைக்
கொண்டுள்ளன. ஆனால், இந்த நகரம் அடிக்கடி நிலநடுக்கங்களால்
பாதிக்கப்படும் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. மேலும், காஷியின்
பழைய நகரத்தில் உள்ள வீடுகள் பெரும்பாலும் பழமையானவையாகவும் சிதிலமடைந்தவையாகவும்
இருப்பதால், நிலநடுக்கம் அல்லது தீ விபத்துகளால் மிகவும்
பாதிக்கப்படக் கூடியவையாக உள்ளன. மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கவும்,
அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும், அதே நேரத்தில் பழைய வீடுகளின் நிலநடுக்கத் தடுப்புத் திறனை அதிகரிக்கவும்,
பண்டைய நகரத்தின் அசல் தோற்றத்தைப் பாதுகாக்கவும், சீனா 2009 பிப்ரவரியில் பழைய காஷி நகரத்தில் உள்ள
சிதிலமடைந்த வீடுகளின் விரிவான புனரமைப்புப் பணியை அதிகாரப்பூர்வமாக மேற்கொண்டது.
வரலாற்று மற்றும் கலாச்சார நகரங்களுக்கான தேசிய பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்க
செய்யப்படும் இந்தப் புனரமைப்புப் பணிகளுக்காக மூன்று பில்லியன் யுவான்
செலவிடப்பட்டுள்ளது. புனரமைப்பின் போது காஷியின் அசல் தோற்றத்தைப் பராமரிக்க
முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவே புனரமைப்புக்குப் பிறகும் கட்டமைப்புகள்
அவற்றின் அசல் கட்டடக்கலை மற்றும் கலாச்சாரப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளும்.
சின்ஜியாங்கின்
நாட்டுப்புறக் கலாச்சாரங்களும் கலைகளும்,
கடந்தகால மரபுகளைப் பின்பற்றுவதன் அடிப்படையில் மேலும் வளர்ச்சி
கண்டுள்ளன. உய்குர்களின் “மெஷ்ரெப்,”( பாரம்பரியக் கலை
மற்றும் சமூகக் கூட்டம்) கசாக் மக்களின் “ஆய்டெஸ்,”( இது
“இருபக்க உரையாடல்” அல்லது “பாட்டுப் போட்டி” என்று பொருள்படும் .) கிர்கிஸ்
மக்களின் “கோபுஸ் பாலாட் பாடல் திருவிழா,” மங்கோலிய மக்களின்
“நாடம் திருவிழா,”( மங்கோலிய மக்களின் “நாடம் திருவிழா” (Naadam
Festival) என்பது அவர்களின் மிக முக்கியமான மற்றும் பிரமாண்டமான
பாரம்பரியக் கொண்டாட்டமாகும். மங்கோலிய மொழியில் “நாடம்” என்றால் “விளையாட்டுகள்”
அல்லது “மகிழ்ச்சி” என்று பொருள்படும்) ஷிபே மக்களின் “மேற்கு நகர்வுத் திருவிழா”
மற்றும் ஹான் மக்களின் “விளக்குத் திருவிழா” போன்ற பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகள்
பரவலாக நடத்தப்பட்டுள்ளன. நவீன நாடகமான குன்செம், உய்குர்
நாடகங்களான கெரிப் மற்றும் செனெம், சாகசக் கலை நிகழ்ச்சியான
தர்வாஸ், அத்துடன் கசாக் ஆய்டெஸ், போன்ற
வளமான இன மற்றும் பிராந்தியப் பண்புகளைக் கொண்ட பல அற்புதமான நாடகங்கள்
மேடையேற்றப்பட்டுள்ளன. 21 ஆம் நூற்றாண்டில், ‘ஜின்ஜியாங் என்ற நல்ல இடம்’, ‘தியான்ஷான் மலையின்
மகிழ்ச்சிப் பாடல்கள்’ மற்றும் ‘காஷ்கர்’ உட்பட 20 க்கும்
மேற்பட்ட நாட்டுப்புறப் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் தேசியப் பரிசுகளை
வென்றுள்ளன.
சிறுபான்மை
மொழிகள் நமது காலத்தின் வளர்ச்சிக்கு ஈடுகொடுப்பதை உறுதி செய்வதற்காக, சீனா “ஜின்ஜியாங்
உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்தின் சிறுபான்மை இன மக்களின் மொழிகள் மற்றும்
எழுத்துமுறைகள் மீதான பணிக்குழு” மற்றும் பல்வேறு நிலைகளில் சிறுபான்மை
மொழிகளுக்கான ஆராய்ச்சி நிறுவனங்களை அமைத்துள்ளது. இவை சிறுபான்மை இன மக்களின்
மொழிகளை ஒழுங்குபடுத்துதல், தரப்படுத்துதல், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் நிர்வாகம் ஆகியவற்றுக்குப் பொறுப்பாகும்.
அரசாங்கத்தின் ஆதரவுடன், “போக்டா உய்குர்-கசாக்-கிர்கிஸ்
மொழிகளுக்கான அச்சுக்கோர்ப்பு முறை,” “சிபே மற்றும் மஞ்சு
மொழிகளுக்கான செயலாக்க மற்றும் திறமையான அச்சிடும் முறை,” “ஜின்ஜியாங்
2000” மற்றும் “அரபு மற்றும் பன்மொழிகளுக்கான
அச்சுக்கோர்ப்பு முறை” போன்ற மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மென்பொருள்
குறியீடு, விசைப்பலகை அமைப்பு மற்றும் உள்ளீட்டு முறைகள்
ஆகியவற்றின் அடிப்படையில், பிற சிறுபான்மை இன மக்களின்
மொழிகளுக்கான தரநிலைகள் மற்றும் மென்பொருள் மேம்பாட்டு முறைகளுக்கு இவை
வழிகாட்டுதல்களை வழங்குகின்றன.
ஜின்ஜியாங்
மாகாணத்தில் இருக்கக்கூடிய இனச் சிறுபான்மை மக்கள்,குறிப்பாக உய்கூர் இஸ்லாமிய மக்களின்
பாரம்பரியங்கள் உட்பட அனைத்து இனங்களின் பாரம்பரியங்களையும் உலகின் வேற எந்த
நாடுகளும் செய்யாத அளவிற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன
மக்கள் குடியரசும் பாதுகாத்து வருவது மட்டுமல்ல வளர்த்தெடுக்கும் பணிகளையும்
செய்து வருகின்றார்கள்.
அ.பாக்கியம்