Pages

புதன், பிப்ரவரி 26, 2025

பணிப் போருக்கான வெள்ளை மாளிகையின் அவதாரம் USAID


அ.பாக்கியம்

தேசப் பாதுகாப்பு பாஜகவின் அரசியல் சித்து விளையாட்டில் சிக்கிக் கொண்டிருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப், எலன் மாஸ்க் இருவரும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம்(USAID) மூலம் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பற்றி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டவுடன் பாஜக திக்குமுக்காடியது.

முதலில் இந்த பணத்தை நாங்கள் வாங்கவில்லை. 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட ஒப்பந்தம் என்று காங்கிரஸின் மீது பழி சுமத்தியது. பாஜக அரசின் நிதித்துறையோ உள்துறையோ வெளியுறவுத்துறையோ வாயை மூடிக்கொண்டு காங்கிரசை வசைபாடிக் கொண்டிருந்தார்கள். பத்திரிக்கைகள் பாஜகவின் பங்கை அம்பலப்படுத்திய பொழுது இப்பொழுது வெளியுறவுதுறையும் நிதி துறையும் வாய்திறந்து பேசி இருக்கிறார்கள். 2023-24 ஆம் ஆண்டில் 7 திட்டங்களுக்காக 750 மில்லியன் டாலர் அமெரிக்காவிடம் உதவி பெறப்பட்டது என்பதை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் இந்தியாவின் தேர்தலில் வாக்காளர்கள் பங்கேற்பை கொண்டு வருவதற்காக உதவி செய்யப்பட்டது என்பதை அழுத்தம் திருத்தமாக பேசி வருகிறார்.

இந்தியாவின் முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் குரோஷி அவர்கள் இதை மறுத்துவிட்டார். இப்பொழுது காங்கிரசின் தலைவர் ஜெயராம்ரமேஷ் அவர்கள் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை அல்ல அந்த 21 மில்லியன் டாலர் பங்களாதேஷினுடைய தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் மோடியோ இந்தியாவின் வெளியுறவுதுறை அமைச்சரோ இது பற்றி ஆரம்பத்திலேயே மறுப்பை தெரிவிக்காமல் காங்கிரஸின் மீது பழி சுமத்தி இந்தியாவின் மரியாதையை குறைத்தார்கள்.

அமெரிக்கா சர்வதேச மேம்பாட்டுக்கான நிறுவனம்(USAID)  என்ற பெயரில் ஆரம்பித்தது ஏதோ உலக மக்களை முன்னேற்றுவதற்காக என்று எண்ணிவிடக்கூடாது. அமெரிக்க உதவி என்றாலே நமக்கெல்லாம் முன்னேற்றத்திற்கான வழி என்று நினைக்கக்கூடிய அமெரிக்க அடிமை விசுவாசிகள் இன்றும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

1961 ஆம் ஆண்டு ஜான் எஃப் கென்னடி அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பொழுது இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. பனிப்போர் காலத்தில் சோவியத் யூனியனின் செல்வாக்குகள் உலகம் முழுவதும் பரவுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், பல்வேறு நாடுகளில் அமெரிக்காவின் நிதி உதவியின் மூலமாக சோவியத் நாட்டிற்கு எதிரான கருத்துக்களை விதைத்து வளர்ப்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது

ஜான் எஃப் கென்னடி மற்றும் ஜான்சன் போன்றவர்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது பல மேலை நாடுகளிலும், ஆசிய, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் பொருளாதார சீர்திருத்தங்களில் தலையிடுவதற்கும் பொது நிர்வாகத்தில் தலையிடுவதற்கும் சர்வதேச மேம்பாட்டுக்கான நிறுவனத்தை முழுமையாக பயன்படுத்தினார்கள். பனிப்போர் காலத்தில் வளரும் நாடுகளில் மூலதன பற்றாக்குறை ஏற்பட்ட பொழுது அந்த நெருக்கடியை பயன்படுத்தி அமெரிக்க நிறுவனம் உள்ளே புகுந்து ஒப்புதலை வாங்கி இந்த திட்டங்கள் முலமாக தங்கள் கருத்துக்களை விதைத்தார்கள்.

நிக்சன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பொழுது வியட்நாம் நாட்டில் தங்களது மேலாதிக்கத்தை நிலை நாட்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு துணையாக இந்த நிறுவனத்தின் நிதியை பயன்படுத்தினார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அந்த நாட்டில்  உருவாகக்கூடிய ஜனநாயக முற்போக்கு அரசுகளுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்துவதற்கும், பொது மக்களை அரசுக்கு எதிராக கொண்டு வருவதற்கும் இந்த நிறுவனம் நிதி உதவி செய்து கலவரத்தை உருவாக்கியது.

அமெரிக்காவிலிருந்து வழங்கப்பட்ட மொத்த வெளிநாட்டு நிதிகளில் ஐந்தில் மூன்று பாகம் இந்த சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் என்ற அமைப்பின் மூலமாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றால் இது நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். அமெரிக்கா தன்னை வெளிநாட்டு ஏழை மக்களுக்காக அதிக நன்கொடை வழங்கும் நாடு என்று கூறிக் கொள்கிறது.

உண்மையில் எவ்வளவு செலவு செய்கிறார்கள்? அமெரிக்காவின் உதவித்தொகை அறிக்கையில் இருந்து சில விவரங்கள் வெளிவந்து உள்ளது. அவர்கள் 71 பில்லியன் டாலர்கள் பொருளாதார மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது என்று கூறியிருப்பது தெளிவற்றதாக உள்ளது. குறிப்பாக வளர்ச்சிக்கான பொருளாதார அடிப்படைகளை உருவாக்குவது என்ற திட்டத்தின் கீழ் 15.9 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டதில் 14.4 பில்லியன் டாலர்கள் உக்ரைன் அரசாங்கத்திற்கு நேரடி ப உதவியாக கொடுத்ததாகும். அதாவது இவை அனைத்தும் ஆயுதங்களுக்காக பயன்படுத்தி பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த அமெரிக்க நிறுவனத்தின் உதவிகள் வெற்றுவாக்குறுதிகளாக மட்டுமே பெரும்பாலும் இருந்துள்ளது என்பதை பல திட்டங்கள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை பெறும் நாடுகள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

முதலாவதாக 2013 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா ஜூன் மாதம் தென்னாப்பிரிக்காவிற்கு சென்ற பொழுது பவர் ஆப்பிரிக்கா என்ற மிகப் பெரும் மின்சக்தி திட்டத்தை இந்த நிறுவனத்தின்(USAID)  மூலம் நடத்தப் போவதாக அறிவித்தார். 2020 ஆம் ஆண்டுக்குள் 20000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு அமெரிக்க நிதி நிறுவனம் முதலீடு செய்து தலைமை ஏற்று நடத்தும் என்று பேசினார். ஆனால் 2020 ஆம் ஆண்டு இறுதியில் இது பற்றி ஆய்வு செய்த பொழுது அவர் ஆப்பிரிக்காவின் உண்மையான மின் உற்பத்தி திறன் 4194 மெகாவாட் மட்டுமே ஆகும். இதை அமெரிக்க நிறுவனமே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் கால்பங்கைவிட குறைவான அளவிற்கு தான் மின் உற்பத்தி நடந்துள்ளது.

இரண்டாவதாக, மத்திய கிழக்கு நாடுகளிலும் குறிப்பாக ஆப்கானிஸ் தானத்திற்கு செய்த உதவிகள் அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பயன்படவில்லை.வேறு எதற்கு பயன்பட்டது என்று பலருக்கும் தெரியும். உதாரணமாக 2008 ஜூலை மாதம் முதல் 2015 ஜூன் மாதம் வரை சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிதி நிறுவனத்தின் மூலம் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் சுகாதாரத்திற்கான திட்டம் தோல்வியடைந்தது. எந்தவித தரத்திலும் அது இல்லை என்பதை மறுசீரமைப்புக்கான அறிக்கையே தெரிவித்து இருக்கிறது. அனைத்து திட்டத்தின் கீழ் கட்டப்படும் சுகாதார வசதிகளும் மின்சாரம் மற்றும் குழாய் நீர் திட்டங்களும் மக்கள் பெறக்கூடிய அளவுக்கு இல்லை என்பதை தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

முன்றாவதாக 2010 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அருகில் இருக்கக்கூடிய ஹைட்டி நாட்டில் பூகம்பம் ஏற்பட்டது. இதன் பிறகு அங்கு ஒரு மின் உற்பத்தி நிலையத்தையும் ஒரு புதிய துறைமுகத்தையும் ஒரு பெரிய தொழிற் பூங்காவையும் கட்டுவதற்காக மேற்கண்ட அமெரிக்க நிறுவனம் உறுதி அளித்தது. எதிர்பார்க்கப்பட்ட இத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தி கார்டியன் என்ற பத்திரிகை ஹைட்டி அமெரிக்க உதவியின் தோல்வியுற்ற வாக்குறுதி என்ற மிகப்பெரிய ஆய்வுக் கட்டுரை வெளியிட்டு இருக்கிறது.

மேற்கண்ட நிறுவனம் மூலமாக அமெரிக்கா அந்நிய நாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான அமெரிக்க மக்களிடம் கடுமையான அதிருப்தி ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுந்து வந்துள்ளது. ஆனால் பணிப் போருக்காகவும் மக்கள் சோசலிச சிந்தனைகளுக்கும் சோவியத் யூனியனுக்கு ஆதரவாக திரும்பி விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து மக்கள் எதிர்ப்பையும்மீறி இந்த USAIDதிட்டத்தை அமுல்படுத்தினார்கள்.

நிக்சன் காலத்தில் வியட்நாம் மீது படையெடுத்து வெற்றி பெறுவதற்காக இந்த நிதியை பயன்படுத்திய பொழுது அமெரிக்க மக்கள் மிகப் பெரும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதனால் அமெரிக்க காங்கிரஸில் புதிய திசைகள் என்ற முறையில் இதற்கான சட்டத்தை நிறைவேற்றியது இதன் மூலம் இந்த அமைப்பின் அணுகு முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதும் இதை நிரந்தரமாக ஒழித்து விடலாம் என்ற முறையிலும் அந்த சட்டத்தில் பேசினார்கள். காரணம் அமெரிக்க மக்களின் கடுமையான எதிர்ப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் இந்த நிறுவனத்தை அமெரிக்க ஆட்சியாளர்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை.

ரீகன் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாட்டுக்கான உதவி பட்ஜெட்டில் வியத்தகு முறையில் அதிகரித்திருக்கிறது இதனால் உள்நாட்டு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்ற கருத்து பரவலாக மேலோங்கியது ஆனால் இதன் நோக்கம் சோவியத் யூனிட் எதிராக மற்ற நாடுகள் சென்று விடக்கூடாது என்பதால் அமெரிக்க மக்களை ஏமாற்றுவதற்காக வேறு வழியில் இதை அமல்படுத்தினார்கள். சுகாதாரத்தில் மிகப்பெரும் முதலீடுகளை செய்து உலக அளவில் குழந்தைகளின் மரணத்தை குறைத்து குழந்தைகளை வாழ வைப்பது என்ற திட்டங்கள் மூலமாக இந்த நிறுவனத்தை நடத்தி வந்தார்கள்

1993 ஆம் ஆண்டு பனிப்போர் முடிந்த காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பில் கிளிண்டன் இந்நிறுவனத்தின் வெளிநாட்டு உதவியை பட்ஜெட்டில் கணிசமாக குறைக்க முயற்சி செய்தார்கள் உள்நாட்டில் அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் முழுமையாக அமலாகவில்லை.

1997இல் இந்நிறுவனத்தை தீவிரமாக மறுசீரமைக்க வேண்டும் அல்லது முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸில் மிகக் கடுமையான விமர்சனம் வெளிப்பட்டது பில்கிளிண்டள் நிர்வாகம் இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு சில மாற்றங்களை மட்டும் செய்தார்கள். இந்த நிறுவனம் ஆயுதப் பரிமாற்றங்கள் உட்பட அனைத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வந்ததால் அமெரிக்க எம்பிக்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்கள். பில் கிளிண்டன் ஆயுதக் கட்டுப்பாடு, ஆயுத குறைப்பு நிறுவனம், அமெரிக்க தகவல் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகளை வெளியுறவுத்துறைக்குள் கொண்டு வருவது என்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) தனி அமைப்பாக தனி சட்டத்தின் கீழ் செயல்படும் என்றும் முடிவெடுத்தது. இருந்த போதிலும் இந்த நிறுவனம் தனி சட்டத்தை கொண்டு இருந்தாலும் வெளியுறவுச் செயலாளரின் நேரடி அதிகாரம் மற்றும் வெளியுறவு கொள்கை வழிகாட்டுதலின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். பனிப்போர் முடிந்த பிறகும் உலகில் தங்களது செல்வாக்கு நீடிக்க அமெரிக்கா இந்த நிறுவனத்தை முழுமையாக பயன்படுத்தியது.

இந்த நிறுவனம் தனது திட்டங்களை செயல்படுத்துவதில் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானது. அமெரிக்க அரசின் அறிக்கையில், செர்பியாவில் செயல்படக்கூடிய LGBTQ குழுவிற்கு 1.5 மில்லியன் டாலர்களும், வியட்நாமில் மின்சார வாகனங்கள் பெருக்குவதற்கு 2.5 மில்லியன் டாலர்களும், எகிப்தில் சுற்றுலா மேம்பாட்டிற்கு ஆறு மில்லியன் டாலர்களும் மானியமாக வழங்கியதில் அனைத்தும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட உதவிகளாகவே இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார்கள். வரி செலுத்துவோருக்கு கணக்கு கொடுக்காமல் இந்த நிறுவனம் செயல்பட்டு உள்ளது. செல்லப்பிராணி வளர்ப்பதற்கான மிகப்பெரும் தொகையை செலவு செய்திருக்கிறார்கள் என்று வெள்ளை மாளிகை அறிக்கையே வெளிப்படுத்துகிறது.

 2023 ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தில் பத்தாயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள் என்றும் இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிக்கை உள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செயல்பாடுகளை கொண்டுள்ளது. 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரத்தியேகமான அலுவலகங்களை அமைத்து செயல்படுகிறது. இந்த நிறுவனம் எவ்வாறு அமெரிக்க உதவியின்றி வளர்ந்திருக்க முடியும். மனிதாபிமானம் மற்றும் வளர்ச்சி உதவி ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்துவதாக கூறும் இந்த நிறுவனத்தின் உண்மையான நோக்கமும் நடைமுறையும் பணிப்போர் காலத்தில் சோவியத்துக்கு எதிராகவும், அதன் பிறகு தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவும் செயல்பட்டது அதாவது சித்தாந் ஊடுருவல் செய்வதற்கு ஜனநாயக சீர்திருத்தம் என்ற பெயரால் இது அமெரிக்காவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு சேவை செய்தது.

இன்று ட்ரம்ப எலன் மாஸ்க்கும் ஏன் இந்த உதவியை நிறுத்துகிறார்கள் என்று கேள்வி எழத்தான் செய்யும். இந்த சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக நீண்ட காலம் செயல்பட்ட ஜேம்ஸ் குந்தர் தனது அறிக்கையில் கீழ்கண்ட விஷயத்தை சுட்டி காட்டி இருக்கிறார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய இரண்டு நாடுகளிலிருந்தும் பெறப்பட்ட கடினமான பாடம் என்னவென்றால் வளர்ச்சி திட்டங்கள் ஒரு பயனுள்ள ராஜதந்திர மற்றும் ராணுவ உத்திக்கு நல்ல மாற்றாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

அதாவது தங்களது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த ராணுவ நடவடிக்கைகளுக்கு துணையாக இந்த அமைப்பின் செயல்பாடு உதவி செய்ய வில்லை என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே இந்த வழிமுறைகள் மூலம் தொடர்ந்து இதை நடத்த முடியாது என்ற முடிவுக்கு டொனால்ட் ட்ரம்ப் வந்தது மட்டுமல்ல அமெரிக்க பொருளாதார நெருக்கடி ஆட்சியாளர்களின் மூச்சை திணறடிக்கிறது எனவே இந்த தடாலடி அறிவிப்புகள் வந்தது. இவை திடீரென்று வந்ததல்ல படிப்படியாக சில நடவடிக்கைகளை கடந்த காலங்களில் மேற்கொண்டார்கள்.

1995 மற்றும் 2000க்கும் இடைப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் பணியாளர்களில் 29 சதவீதம் பெயர்களை குறைத்தார்கள். நேரடி பணியமறுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இதற்கு மாறாக ஊழியர்களை அவுட்கோசிங் என்ற முறையில் அதிகம் பேரை பயன்படுத்த ஆரம்பித்தனர். இப்பொழுது டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற உடன் இந்த நிறுவனத்தின் ஏராளமான ஊழியர்களை ஊதிய விடுப்பு எடுக்குமாறு உத்தரவிட்டார். பிப்ரவரி 7ஆம் தேதி அன்று அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி ஊதிய விடுப்பு திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். மேலும் பிப்ரவரி 13 அன்று இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிப்புக் கொடுக்கப்பட்டது.

எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டின் நோக்கம் முழுமையாக இன்று பயனளிக்கிறதா இல்லையா என்பதை கேள்விக்குள்ளாக்கி அது பயனளிக்கவில்லை என்ற முடிவிலிருந்து அவர் விரும்பாத நாடுகளை அல்லது தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிற நாடுகளுக்கான உதவிகளை தடாடியாக நிறுத்துகிறார்.

இந்த நிறுவனத்தின் மூலம் நிறைவேற்றப்படும் சுகாதாரத் திட்டங்கள் ,குழந்தைகள் வளர்ச்சி, மனிதாபிமான செயல்பாடுகள், குடிநீர் போன்ற திட்டங்களில் பல்லாயிரக்கணக்கான அரசு சாரா நிறுவனங்கள் செயல்படுகிறது அவர்களின் சார்பில் இத்திட்டங்கள் நிறுத்தப்பட்டால் இதனால் பயனடைந்த மக்கள் மிகப்பெரிய ஆபத்திற்கு உள்ளாவார்கள் என்று எச்சரிக்கிறார்கள்.

ஆனால் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அல்லது மூலதனத்திற்கோ மனிதாபிமானம் முக்கியமல்ல. கார்ப்பரேட் முதலாளிகளின் மேலாதிக்க சுரண்டல், உலக முதலாளித்துவத்தின் இருத்தல், ஆகியவை தான் முக்கியம். அதற்கு எதையும் செய்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுகள்தான் இந்த சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் செயல்பாடுகளும் அதன் இன்றைய நெருக்கடிகளும் ஆகும்.

அ.பாக்கியம்

 

8. கன்பியூசியம் அதிகார கட்டமைப்பின் தத்துவம்

 



சீனா ஒரு கம்யூனிச நாடு. இங்கு மத சுதந்திரமோ வழிபாட்டு சுதந்திரமோ இல்லை. வழிபாட்டுத் தலங்களை இடித்து தள்ளி விட்டார்கள். இது நாத்திகர்களின் நாடு. சீனர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் என்று, கம்யூனிச எதிர்ப்பாளர்களும், முதலாளித்துவ சிந்தனைவாதிகளும் பொய் மூட்டைகளை உலகெங்கும் இன்றைக்கும் அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் அந்தப் பொய்யர்களின் வாய்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டு விடுகிறது. மேற்கத்திய மீடியாக்கள் என்னதான் வரிந்து கட்டிக்கொண்டு சீனாவைப் பற்றி தொடர்ந்து அவதூறு பிரசாரம் செய்தாலும் அவை உடனுக்குடன் தவிடு பொடியாக்கப்பட்டு விடுகிறது. சீனாவைப் பற்றிய இட்டுக்கட்டியப் பொய்கள், இன்று இருக்கும் இடம் தெரியாமல் போகும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் சீனா வெகு தூரத்துக்கு முன்னேறிச் சென்றுள்ளது.

சீனாவில் தேவதூதர்களின் பெயரால் மதங்கள் தோன்றவில்லை. கிறிஸ்துவமும், இஸ்லாமும் உருவமைக்கப்பட்ட முறைகளில் சீனாவில் மதங்கள் உருவாகவில்லை. பெருந்தெய்வ வழிபாடு சீனாவில் கிடையாது. கன்பியூஸியம், லாவோயிசம், பௌத்தம் போன்றவைகள் கடவுளின் இருப்பைப் பற்றி போதித்தவைகள் அல்ல. ஆனால், அக்காலத்திலேயே அவர்களுக்கு வழிபாட்டுத் தலங்கள் உருவானது என்பதையும் மறுக்க முடியாது.

இன்றைய சீனாவில் பெரும்பான்மையான மக்கள் எந்த ஒரு மதத்தையும் பின்பற்றக் கூடியவர்கள் அல்லர். சமீபத்திய தரவுகளின்படி, சீனாவில், மதம் அற்றவர்கள் அல்லது நாத்திகர்கள் சுமார் 50 முதல் 70 சதவீதம் பேர் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு பகுதியினர் கன்பியூஸியம், தாவோயிசம் போன்ற சீன பாரம்பரிய மரபுகளை கடைபிடிக்க கூடியவர்களும் இருக்கிறார்கள். சீன மக்கள் தொகையில் 15 முதல் 20 சதவீதம் பேர் பௌத்த மதத்தை பின்பற்றக்கூடிய பகுதியினர். இதில் பல பிரிவுகள் உள்ளது. ஒப்பீட்டளவில் பௌத்தம் சீனாவில் ஒழுங்கமைக்கப்பட்ட மிகப்பெரிய மதமாகும். தாவோயிசம் மதத்தை மக்கள் தொகையில் சுமார் 2 முதல் 3 சதவீதம் பேர் கடைபிடிக்கிறார்கள். சீனாவில், கிறிஸ்துவ மதத்தில் இரண்டு முதல் ஐந்து சதவீதம் பேர் இருக்கிறார்கள். இவற்றில் கத்தோலிக்கமும், ப்ராட்டஸ்டன்ட்டும் மிகப்பெரிய பிரிவாக உள்ளது. இவை தவிர ஒரு சிறிய சதவீதத்தினர் இந்து மதம் மற்றும் நாட்டுப்புற தெய்வ வழிபாடுகளை கடைபிடிக்கிறார்கள். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் சீன குடியரசில் பௌத்தம், தாவோயிசம், இஸ்லாம், கத்தோலிக்கம், ப்ராட்டஸ்டன்ட் ஆகிய ஐந்து மதங்களை அங்கீகரித்து உள்ளது. மதம் அல்லது மதம் சார்ந்த மரபுகள் அரசியலில் கலக்கக்கூடாது என்பதை கறாராக கடைபிடிக்கிறார்கள்.

மூதாதையர் வழிபாடும் அரசியல் கருத்தாக்கமும்

எல்லா சமூகங்களைப் போலவும் சீனாவில் ஆரம்ப காலத்தில் பழமைவாதமும் அறிவுமேன்மையும் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. பண்டைய சமூக வாழ்க்கையில் சீன மக்கள் இயற்கை வடிவங்களை வழிபட்டு வந்தார்கள். சூரியன், சந்திரன், பூமி, வானம், மழை என இயற்கை வடிவங்களை தொடர்ந்து வழிபட்டு வந்தார்கள். கால ஓட்டத்தில் உற்பத்தி முறை மாற்றங்களில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக நிலப்பிரபுத்துவ அமைப்பு முறை உருவானது. நிலப்பிரபுத்துவத்தின் மிக முக்கிய அம்சமாக குடும்ப அமைப்பு தோன்றி நிலைபெற்றது. இந்த குடும்பமுறை வளர்ச்சியின் விளைவாக மூதாதையர்களை வழிபடும் வழக்கம் சீன மக்களிடம் உருவாகியது. இதன் வெளிப்பாடாக மூதாதையர்களுக்கு தொடர்ந்து சடங்கு நடத்துவதும் அதற்கான விதிமுறைகளை உருவாக்குவதும் ஏற்பட்டது.

சாங் வம்ச (பொதுக்காலத்திற்கு முன்பு கிமு 1600-1046) ஆட்சி காலங்களில் மரணம் அடைந்த மூதாதையர்கள், உயிருடன் இருக்கும் தங்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக கடவுளிடம் சிபாரிசு செய்ய முடியும் என்ற நம்பிக்கை சீன மக்களிடம் வலுப்பெற ஆரம்பித்தது. இந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக மூதாதையர்களுக்கு உணவு, மது வகைகள் மற்றும் இதர பொருட்களை படைக்க ஆரம்பித்தனர். மேலும் ஆரக்கில் எலும்புகளில் தங்களது பிரச்சனைகளை எழுதி வைத்தால் அதன் மூலம் மரணம் அடைந்த மூதாதையர்கள் தெய்வங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி நல்லதை செய்வார்கள் என்று நம்பினார்கள். மூதாதையர்களின் ஆவிகளை திருப்திப்படுத்தாதவர்கள், அவர்களது கல்லறைகளை பராமரிக்காதவர்களின் குடும்பங்களை மூதாதையர்களின் ஆவி சீரழித்து விடும் என்று அஞ்சினார்கள். இவற்றை முறைப்படி செய்தால் குடும்பம் செழிப்பாக இருக்கும் என்று இந்த வழிபாட்டு முறைகளை பரவலாக கடைபிடித்தார்கள்.

சௌவ் வம்சம் (பொதுக்காலத்திற்கு முன்பு கிமு 1046–256) ஆட்சி காலத்தில் இந்த வழிபாட்டு முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. ஆளும் வர்க்கத்தால் வழிபாட்டு முறைகளில் புதிய கருத்தாக்கம் திணிக்கப்பட்டது. சொர்க்கத்தின் உத்தரவின் பேரில்தான் நல்லொழுக்கம் உள்ள ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றும் பேரரசர்களின் அதிகாரம் அவர்களாக எடுத்துக் கொள்வதில்லை சொர்க்கத்திலிருந்துதான் வழங்கப்படுகிறது என்ற முறையிலும் வழிபாட்டு முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்தக் கருத்துக்களை ஆளும் வர்க்கம் வலுவாகவே மக்களிடம் திணித்தது. இதன் விளைவாக ஆட்சியாளர்கள்  தெய்வீக சக்கரவர்த்திகளாக சிம்மாசனத்தில் வீற்றிருந்தனர். இங்கு முதல் முறையாக இயற்கை வழிபாட்டு நம்பிக்கைகளும், மூதாதையர் வழிபாட்டு முறைகளும் அரசியல் கருத்தாக்கமாக மாற்றப்பட்டது.

சமூக வளர்ச்சிப் போக்குகள் மேலும் பல அறநெறி கோட்பாடுகளை மக்கள் மேடைக்கு கொண்டு வந்தது. சௌவ் வம்ச ஆட்சியின் இறுதி காலத்தில் குழப்பங்கள் மேலோங்கியது. ஆட்சியைத் தக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டே இருந்தது. இந்த குழப்பகாலத்தை இளவேனில், இலையுதிர் காலம் என்றும் அழைப்பார்கள். ஒரு கட்டத்தில் சௌவ் வம்ச ஆட்சி வீழ்ச்சி அடைந்தது. அடுத்த சில நூறாண்டுகள் பேரரசுகள் இல்லாத நிலை நீடித்தது. இக்காலத்தை சீன வரலாற்றில் குழப்பங்களின் காலம் அல்லது போர்களின் காலம் என்று அழைக்கப்பட்டது. மக்களின் வாழ்க்கை பெரும் துன்பத்திற்கு ஆட்பட்டது. போர்களால் பொருளாதார நெருக்கடி மக்களை புதைகுழிக்கு அனுப்பியது. இந்தப் பின்னணியில், மக்கள் மாற்றங்களை தேடுகிற சூழலில், அப்பொழுது முன்வைக்கப்படுகிற கருத்துக்கள் மக்களால் வரவேற்கப்பட்டன. இந்த நிலையில்தான் கன்பியூஸியம், தாவோயிசம், மென்சியம், மோயிசம் போன்ற அறநெறி கோட்பாடுகள் உருவாகின. இவையே அக்காலத்தில் சீன சமூகத்தை வழிநடத்திய நெறிமுறைகளாக இருந்தன.

கன்பியூஸியம் : மன்னன் வழியே மக்கள்

‘‘எதையும் கண்டுபிடிக்காத அறிவு பரப்பாளர் நான்’’ என்று தன்னை பற்றி கன்பூசியஸ் கூறிக் கொள்கிறார். தன் சீடர்களைப் பார்த்து உங்களைப் பற்றியும் உங்களைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்குகிறார். அறிதல், படித்தல் என்ற செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். சீன மக்கள் இவரை தங்களது ஆசானாகவே கருதுகிறார்கள்.

வடக்கு சீனாவில் உள்ள லூ என்ற பிரதேசத்தில் குங் என்ற போர் வீரர் குடும்பம் ஒன்றில் பொதுக்காலத்திற்கு முன்பு கிமு 551 ஆம் ஆண்டு கன்பியூசியஸ் பிறந்தார். இவருடன் 9 பெண் குழந்தைகள் பிறந்தனர். மூன்று வயதிலேயே தனது தந்தை இறந்ததினால் மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து வறுமையில் வாடினார். உயிர் வாழ்வதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அவரது உழைப்பையும் திறமையும் கண்டு அரசாங்கத்தில் தானிய களஞ்சியங்களை மேற்பார்வையிடும் பொறுப்புக்கு அவர் நியமிக்கப்பட்டார். கன்பூசியஸ் சிறந்த முறையில் பணியாற்றியதைக் கண்டு தோட்டங்களையும், கால்நடைகளையும் மேற்பார்வையிடுவதற்கான கூடுதல் பணியும் வழங்கப்பட்டது. சமூகத்தின் புறச்சூழ்நிலை கன்பூசியஸின் சிந்தனையில் சில கேள்விகளை எழுப்பியது. ஆட்சி அதிகாரங்கள் குழப்பத்தில் சிக்கிக் கொண்டுள்ள பொழுது, அதிகார பலமும், பண பலமும் உள்ளவர்கள் பல்வேறு விதமான முறைகேடுகளிலும் தீய செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். ஏழைகள் மட்டும் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்ற வேண்டியது தன் கடமை என்று கருதினார். 

இதற்காக ஒரு சிறிய பள்ளிக்கூடத்தை தனது 22வது வயதில் துவங்கி சிறப்பான முறையில் நடத்தி வந்தார். தனது பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு ஒழுக்கத்தைப் பற்றியும், குடும்பத்தாரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் மற்றும் பெரியவர்களை மதிக்க வேண்டியதின் அவசியம் பற்றியும் போதனைகள் செய்தார். இது மாணவர்களின் பெற்றோர்களை ஈர்த்தது. இதன் மூலம் கன்பூசியஸ் பிரபலம் அடைந்தார். சுமார் 15 ஆண்டுகள் இந்தப் பணியை செய்தார். இவரின் இந்தப் பணிகள் மூலமாக மக்களால் பாராட்டப்படுகிறார் என்பதை அறிந்த அரசாங்கம் இவரை தலைமை நீதிபதியாக நியமித்தது. தனது 52 வது வயதில் இந்த பொறுப்புக்களை கன்பியூசியஸ் ஏற்றுக்கொண்டு பணியாற்றினார். அரசவம்ச ஆட்சிகளில் வழக்கம் போல் நடைபெறுகிற சதிகள், சூழ்ச்சிகள் போன்றவற்றால் நான்கு ஆண்டுகள் கழித்து தலைமை நீதிபதி பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இனி இந்த ஆட்சிப் பிரதேசத்தில் இருக்கக் கூடாது என்று அங்கிருந்து வெளியேறினார். இந்தக் காலகட்டத்தில் கன்பூஸியசுக்கு பல சீடர்கள் உருவானார்கள்.

கன்பியூசியஸ் தீர்க்கதரிசி அல்ல சிந்தனையாளர்

கன்பூசியஸ் ஒரு தீர்க்கதரிசி அல்லர். அவர் ஒரு சிந்தனையாளர். கடவுளைப் பற்றிய விவாதங்கள் வருகிற பொழுது கண் முன்னே நடமாடும் மனிதர்களுக்கு தொண்டு செய்யாமல் காணாத பொருளுக்கு எப்படி தொண்டு செய்ய முடியும் என்ற கேள்வியை எழுப்பியவர். இந்த உலகத்தில் பிறந்துவிட்டு உலக விவகாரங்களில் ஈடுபடாமல் உலகத்தை விட்டு பரலோகத்துக்கு ஓடிவிடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்ற கருத்தை முன் வைத்தவர். நாடு குழப்பமான சூழ்நிலையில் இருந்த பொழுது, பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவித்த பொழுது, இவரின் போதனைகள் மக்களிடம் வெகுவாக செல்வாக்கு பெற்றது. நம் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார் என்ற ஈர்ப்பு மக்களிடம் உருவானது. இதன் விளைவாக கன்பூசியஸ் மக்களுக்கு தேவையான கல்வி முறைகளைப் பற்றியும், அரசியல் செயல்பாடுகளைப் பற்றியும், சடங்கு நடத்த வேண்டிய விதிமுறைகளைப் பற்றியும் திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தார்

கன்பூசியசின் போதனைகள் அதிகாரக் கட்டமைப்புகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்களாகவும், அதேநேரம் அறநெறி அடிப்படையிலும் வாழ வேண்டும் என்பதை மையப்படுத்தி இருந்தது. இவரது காலத்தில் அரசியல் குழப்பம் நீடித்ததால் இதற்கு முந்தைய, விண்ணகத்தின் தீர்ப்பின் அடிப்படையில் நடைபெற்ற  பேரரசு ஆட்சி காலத்தில் இருந்த அமைதி மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். ஆட்சியாளர்களுக்கு மக்கள் கட்டுப்பட வேண்டும். தந்தைக்கு மகனும், கணவனுக்கு மனைவியும், மூத்தவர்களுக்கு இளையோர்களும் என்ற முறையில் நன்னெறிகள் கடைபிடிக்கப்பட்டால் சமூகத்தில் நல்லிணக்கத்தை கொண்டு வர முடியும் என்று போதித்தார். இந்த உறவுகளுக்கு மத்தியில் கடமைகளும், பொறுப்புகளும் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த தவறவில்லை. குடும்பங்கள், குலங்கள், உள்ளூர் அரசாங்கங்கள் என அனைத்தும் ஒரே மாதிரியான அதிகாரம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தனிமனித சிந்தனை முதல் பேரரசுகளின் அமைதி வரை ஒரு சங்கிலித் தொடராக இவரது போதனைகள் அமைந்திருந்தது. இவர், பண்டைய மூதாதையர்களின் வழிபாட்டு முறைகளை தனது போதனைகளில் இணைத்துக் கொள்ள தவறவில்லை. இவரது போதனைகளில் மூதாதையர்களின் வழிபாட்டுக்கும், ஆவிகளுக்கு படையல் போடும் சடங்குகளுக்கும் முதன்மை இடம் கொடுத்தார். சீன மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளின் மீது இவரது கோட்பாடுகள் அமைந்திருந்ததால் மக்கள் இவரை அதிகமாக விரும்பினார்கள்.

நன்னடத்தையுடன் வாழ சடங்குகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மக்களிடம் வலியுறுத்தினார். ஒவ்வொரு மட்டத்திலும் கட்டுப்படுத்துபவர்கள், கட்டுப்படுத்தப்பட கூடியவர்களுக்கு எல்லா வசதிகளையும், வாய்ப்புகளையும் அளிக்க வேண்டும். இல்லை என்றால் நிலைமை மோசமாகி ஆட்சி அமைப்புக்கும், குடும்பத்திற்கும் பேராபத்து ஏற்படும். ஒரு இணக்கமான சமூகச் சூழல் உருவாக அடுக்கு முறையிலான அதிகார அமைப்பு அவற்றை மதிப்பதற்கான சம்பிரதாயங்களும் கீழ்படிதல்களும் அவசியமானது என்பதை வலியுறுத்தினார்.  இதுபோன்ற வலியுறுத்தல்கள் மன்னர்களின் அதிகாரத்திற்கு மக்கள் கட்டுப்பட வேண்டும் என்ற முறையில் அமைந்தது. மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு சுரண்டுவதற்கு ஒரு கருவியாக, கன்பூசியஸின் போதனைகளை மன்னர்கள் பயன்படுத்தினார்கள்.

குடும்பம் கன்பியூசிய சிந்தனையின் அடிப்படை

கன்பூசியசின் மற்றொரு முக்கியமான போதனைகளில் ஒன்று குடும்பம் தொடர்பானது. நிலப்பிரபுத்துவ சமூகஅமைப்பு உருவான காலத்தில் குடும்ப அமைப்புகள் உறுதிப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குடும்பம் பற்றி கன்பூசியஸ் மிக ஆழமான கருத்துக்களை எழுதி உள்ளார். குடும்பம் மிக அடிப்படையான அமைப்பாக இருப்பதால் அவை நிலைத்து நிற்பதற்கு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் தனது குடும்பத்தை பாதுகாக்க, வழிநடத்த பொறுப்பேற்க வேண்டும் என்று போதித்தார். இந்த போதனை அடிப்படையில் சீன நாட்டு குடும்பங்கள் கன்பூசியஸ் எழுதிய சடங்குகள் தொடர்பான நூல்களை பயன்படுத்தி அவர்களின் மூதாதையர்களுக்கு பணிவிடை செய்து வருகின்றனர்.

தனது குடும்பத்தை கடந்து உறவினர்களுக்கு எந்த வகையில் உதவினாலும் அதுதான் தர்மம் என்று கன்பூசியஸ் போதித்தார். இந்த போதனை ஆட்சியாளர்களுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் மிகப்பெரும் சாதகமாக மாறியது. இந்த போதனையை  முன்னிறுத்தி அரசு நிர்வாகத்திலும், வணிகத் துறைகளிலும் குடும்பத்தின் உறவினர்களை நியமித்து கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். கன்பூசியஸின் உறவினர்களுக்கு உதவுவது தர்மம் என்ற போதனை ஊழலுக்கும், வாரிசு அதிகாரத்திற்கும் வழி வகுத்தது. கன்பியூசியஸ் இதை அறத்தின் அடிப்படையில் அமைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், அதிகார வர்க்கம்  தன் நலன்களுக்கு பயன்படுத்தியது.

அதிகாரத்தை சட்டத்தின் மூலம் நிலைநாட்டுவதை விட அறநெறி மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று கன்பூசியஸ் விரும்பினார். சட்டத்தின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்றால் அதை மீறுவதற்கு குறுக்கு வழியைத் தேடுவார்கள். அறநெறி அடிப்படையில் அதாவது தார்மீக அடிப்படையில் மக்கள் வழிநடத்தப்பட்டால் அவர்கள் பழி பாவங்களுக்கு அஞ்சி நல்லவர்களாக நடப்பார்கள் என்று அவர் போதித்தார். இதன் மூலம் அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய நற்பணிகள் பற்றி எடுத்துரைத்தார். ஆனால் ஆட்சியாளர்கள் தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கன்பூசியசத்தை பயன்படுத்திக் கொண்டார்கள்.

கன்பியூஸியம் சீன சமுதாயத்தில் மிகப்பெரிய செல்வாக்கு பெற்ற தத்துவமாகும். ஹான் அரச வம்சம் கன்பூசியஸ் கோட்பாடுகளை அரசின் கோட்பாடுகளாக அல்லது அரசின் மதமாக அங்கீகரித்தது; ஆதரவளித்தது. ஒரு கட்டத்தில் கன்பூசியஸ் எழுதிய நூல்களை பொதுத் தேர்வுக்கான பாட நூல்களாக மாற்றினார்கள். கன்பூசியஸ் நூல்களை படித்து தேர்ச்சி பெற்றால்தான் அரசாங்கத்தில் உத்தியோகம் கிடைக்கும் என்ற அளவிற்கு நிலைமை மாறியது. சீன நாட்டின் அதிகார வர்க்கத்தை நாடு தழுவிய முறையில் கட்டமைத்ததில் கன்பியூசியம் மையமான பங்கு வகித்தது. இந்த அதிகார வர்க்கம் சீன ஒற்றுமைக்கான காரணங்களில் ஒன்றாகவும் திகழ்ந்தது.

கன்பியூசியம் நாடுகடந்து மாற்றங்களை நோக்கி..

கன்பூசியம் கிழக்கு ஆசியா, தெற்கு ஆசிய கலாச்சாரங்களை ஆழமாக பாதித்தது. கன்பியூஸியம் ஆன்மீக மதிப்புகள், சமூக கட்டமைப்புகள், அரசியல் அமைப்புகள் ஆகியவற்றை வடிவமைத்தது என்றால் மிகையாகாது. இருபதாம் நூற்றாண்டு மத்திய காலம் வரை சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான புரட்சி நடக்கிற காலம்வரை செல்வாக்குடன் இருந்தது. ஆனால் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களும் அதற்குள் நிகழ்ந்து வந்தன. செவ்வியல் கன்பியூசியம், நவ கன்பூசியம், புதிய கன்பூயூசியம் என்று மூன்றாகப் பிரிந்து சிந்தனை போக்குகள் உருவாகின. டாங் அரச வம்ச காலம் வரை செவ்வியல் முறைகள் செல்வாக்கு செலுத்தியது. சோங்  அரச வம்ச காலத்தில் அது பெரும் மாற்றமடைந்து கன்பியூசியம், தாவோயிசம், பௌத்தம் ஆகிய மூன்று மரபுகளையும் உள்ளடக்கி நவ கன்பியூசியமாக உருவாகியது. ஆசிய நாடுகளுக்கு இந்த நவ கன்பியூசியம் பரவியது. புதிய கன்பியூசியம் கோட்பாட்டாளர்கள் கம்யூனிசத்திற்கு மாற்றகவும், மேற்கத்திய தாராளவாதத்திற்கு மாற்றாகவும் கன்பூசிய மரபுகளிலிருந்து சில கோட்பாடுகளை எடுத்துக்கொண்டு புதிய கன்பியூசிய கருத்துக்களை உருவாக்கினார்கள்.

கன்பியூசியத்தின் போதனை முறைகள் ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக இருந்தது. அந்தக் கோட்பாடுகள் மூலம் நிலப்பிரபுத்துவ வர்க்கம் மக்களை ஏமாற்றுகிறது என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்து அந்தக் கருத்துக்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியது. இன்றைய சீனாவிலும் கன்பியூசியம் ஒரு மதமாக இல்லை என்பதை அனைவரும் அறிவோம். கன்பூசியத்தில் இருக்கக்கூடிய, மக்களுக்கு சாதகமான கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு மக்களை பாதிக்கக்கூடிய கருத்துக்களுக்கு எதிராக வலுவான அறிவியல் பிரச்சாரங்களை, மக்கள் இயக்கங்களை நடத்தி சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.

சனி, பிப்ரவரி 22, 2025

டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு: பாஜகவின் குட்டு அம்பலம்



 அ.பாக்கியம்

இந்தியாவில் அவ்வளவு பணம் இருக்கும் பொழுது நாங்கள் ஏன் வாக்காளர் மேம்பாட்டுக்காக நிதி உதவி செய்ய வேண்டும் என்று மோடியின் விஜயத்தின் போது டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கேள்விகளை எழுப்பினார். டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அரசில் அரசாங்க செயல்திறன் துறையின் செயலாளர், உலகப் பெரும் பணக்காரர் எலன் மாஸ்க் இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்த 21 மில்லியன் டாலர் நிதி உதவி ரத்து செய்வதாக அறிவித்தார்.

சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (United States Agency for International Development – USAID) என்ற அமைப்பின் மூலம் இந்தியாவில் வாக்காளர்களை மேம்படுத்துவதற்கான நிதி அளிப்பது என்ற திட்டத்தின் அடிப்படையில் 21 மில்லியன் டாலர் வழங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதைத்தான் ரத்துசெய்துள்ளார்கள். இதுவரை இந்த யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID) மூலமாக ஒதுக்கி பல்வேறு வகையில் செய்த தும் நடந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை அத்துறையில் பொறுப்பாளர் எலன் மாஸ்க் குறிப்பிடவில்லை.

மேற்கண்ட அறிவிப்புகள் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்ல பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது. பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் அமித் மாலவியாவும், முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரனும் இந்த நிறுவனத்தின் மூலம் வந்த பணங்கள் இந்தியாவின் தேர்தல் செயல்முறையை சீர்குலைப்பதற்கு அமெரிக்காவிற்கு வழி வகுத்தது என்று கூறியுள்ளார்கள். இவர்களது கட்சி அமெரிக்க அடிமை என்பதை மறந்துவிட்டார் போலும். மேலும் 2012 ஆம் ஆண்டு தேர்தல் அரசியல் முறைகளை வலுப்படுத்துவதற்காக சர்வதேச தேர்தல் அமைப்புகளுக்கான அறக்கட்டளைக்கும் யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID) நிறுவனத்திற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனர். அதாவது காங்கிரஸ் காலத்தில் நடைபெற்றதாக திசை திருப்பும் வேலையை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருக்கக்கூடிய சஞ்சய் சன்யால் இந்தியாவின் வாக்காளர் வாக்குப்பதிவை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை யார் வாங்கினார்கள் என்பதை கண்டுபிடிக்க விரும்புகிறேன் என்று கூறியது மட்டுமல்ல யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID) மனித வரலாற்றில் மிகப்பெரிய மோசடி என்றும் கூறியுள்ளார். குட்டு வெனிப்பட்டவுடன் மற்றவர்கள் மீது பழியை சுமத்தி தப்பித்துக் கொள்வதில் பாஜகவிற்கு நிகர் பாஜக மட்டும் தான் உள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் பல துறைகள் தொடர்ந்து இந்த நிதி உதவியை பெற்று வந்திருக்கிறார்கள் என்பதை பத்திரிகைகள் அம்பலப்படுத்தி வருகிறது. பிரதமரை தலைவராக கொண்ட நிதி ஆயோக் அமைப்பின் அனுமதியுடன் சம்ரித (SAMRIDH) (புதுமையான சுகாதார பராமரிப்பு வினியோகத்திற்கான சந்தை மற்றும் வளங்களுக்கான நிலையான அணுகல்) என்று அமைப்பு யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID)-யுடன் ஒப்பந்தம் செய்து நிதியை பெற்றுள்ளது.

இந்தியாவில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள நகர்ப்புறங்களிலும் பழங்குடி பகுதிகளில் குறைந்த செலவில் சுகாதார பராமரிப்புகளை செய்வதற்காக பணம் பெறக்கூடிய ஒப்பந்தத்தை செய்துள்ளார்கள். பணம் செலவழிக்கப்பட்டதா என்பதற்கு எந்த விபரமும் இல்லை.

நிதி ஆயோக்கின் தலைவர் அமிதாப் காந்தி இந்த நிதியானது மறுவரை செய்யும் முறைகளை உள்ளடக்கியது என்று கூறியுள்ளார்.அதாவது ஒன்றுக்கு வாங்கி மற்றபெயரில் பயன்படுத்தலாம் என்பதுதான் இதன் அர்த்தம். மோடி தலைமையிலான அரசு இந்த அமைப்பிடமிருந்து தொடர்ந்து நிதி பெறுவதற்கான ஒப்பந்தங்களை செய்து வந்துள்ளது நிதிகளையும் பெற்றுள்ளது.

2022 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் இன்றைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது மாநிலத்தில் விவசாயம், நீர், கழிவு நீர் மேலாண்மை ஆகிய துறைகளின் மேம்பாட்டுக்காக யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID) நிறுவனமும் இஸ்ரேல் நிறுவனமும் கூட்டாக திட்டங்களை உருவாக்கிய கூட்டத்தில் கலந்து நிதிகளை பெற அடித்தளமிட்டுள்ளார்.

இந்தியாவில் டிஜிட்டல் இடைவெளியை குறைப்பதற்காக, அதாவது அதிக மக்களுக்கு டிஜிட்டல் முறைகளை கொண்டு செல்வதற்காக யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID) உடன் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஒப்பந்தம் செய்து நிதியைப் பெற்று திட்டங்களை அமல்படுத்தியுள்ளது இந்தியாவில் 17 மாநிலங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் இந்த திட்டங்களின் மூலம் பயனடைந்துள்ளார்கள் என்று 2022 ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். அறிக்கை மட்டும்தான் கூறுகிறது.

இதைவிட மிக மோசமான செய்தி யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID) தூதுவராக பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி ராணி 2011 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்துள்ளது அம்பலப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி வரை அதாவரு 20 நாட்களுக்கு முன்புவரை ஸ்மிருதிராணி இந்த நிறுவனத்தின் நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார் என்பதை அம்பலப்படுத்தி உள்ளனர்.

2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காச நோய் இல்லாத நிலைமையை உருவாக்க வேண்டும் என்று தனது கனவை நிறைவேற்றுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி 2021 ஆம் ஆண்டு ஒரு கூட்டத்தை கூட்டி அதில் உரை நிகழ்த்தி உள்ளார். இந்த திட்டத்திற்கான கூட்டத்தில் பில் கேட்ஸின் பி.எம்.ஜி.எஃப் அறக்கட்டளை, யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். 2025ம் வந்துவிட்டது. வந்த காசநோயும் போனபாடில்லை.

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவிற்கும் யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID)-க்கும் இடையே புரிந்துணர் ஒப்பந்தம் தொடர்பான கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கி உள்ளார். இந்தக் கூட்டத்தைப் பற்றி அமைச்சரவையிலும் விளக்கி இருக்கிறார்கள். இந்திய ரயில்வே துறையை 2030 ஆம் ஆண்டுகளுக்குள் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக மாற்றுவது என்ற திட்டத்திற்காக யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID)-யுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிலையங்களில் சூரிய சக்தி கூரைகளை இந்திய ரயில்வேயுடன் இணைந்து அமைப்பதற்கான செயலில் இந்த அமெரிக்க நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கோவிட் காலத்தில் இந்தியாவிற்கு உதவ அமெரிக்க அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த உதவிகள் மேற்கண்ட நிறுவனத்தின் மூலமாகவே நடைபெற்றது. அப்போதும் இப்போதும் வெளியுறவுதுறை அமைச்சராக இருக்கக்கூடிய எஸ்.ஜெயசங்கரின் மகன் துருவ் ஜெய்சங்கர் என்பவர் யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID)-யின் அமைப்பிலிருந்து உதவிய பெற்றுள்ளார் என்ற தகவலும் அம்பலமாகி உள்ளது. மேற்கண்ட அமெரிக்க நிறுவனம் இந்தியாவிற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் உதவி செய்துள்ளது.

மோடி அரசாங்கம் தொடர்ந்து மேற்கண்ட நிறுவனத்திடம் இருந்து பல்வேறு விதமான உதவிகளை செய்வது என்ற பெயரில் பணத்தைப் பெற்றுள்ளார்கள் அது எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது இப்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. எனவே வழக்கம்போல் காங்கிரஸ் மீதும் மற்றவரின் மீதும் பழி சுமத்தும் ஆயுதத்தை பாஜகவினர் எடுத்துள்ளார்கள். காங்கிரஸ் இப்போது யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID) நிதிபற்றி வெள்ளை அறிக்கை வேண்டும் என்று அறிவித்துள்ளது.

எழுதியவர் :

அ.பாக்கியம்

 தகவல் ஆதாரம்: தி வயர் நியூஸ்.


வியாழன், பிப்ரவரி 20, 2025

7. சீனா∶ கிழக்குலகின் அறிவுக் களஞ்சியம்

 



ரலாற்றில் ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப கல்வி முறைகளும், கற்பித்தல் முறைகளும் மாறுபடுகின்றன. நாகரிகங்களின் தொட்டில் என்று அழைக்கப்படும் பல இடங்களில் நாகரிக தோற்றக் காலத்திலேயே கல்வி போதிக்கும் முறைகளும் தோன்றத் துவங்கிவிட்டன. காலப்போக்கில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியின் வளர்ச்சியும் பல மாற்றங்களை பெற்று வளர்ந்து வந்தது. இந்தியாவில் அதிகாரத்தில் இருந்த வர்க்கத்தினரால் பிறப்பின் அடிப்படையில் கல்வி முறை புகுத்தப்பட்டது. வேதங்கள் புனிதமானது, அனைவரும் படிக்க கூடாது என்று கல்வியை கட்டுப்படுத்தினர். உபநிடதங்கள் தோன்றிய காலத்தில் அவை பிரம்ம ஞானம் என்ற பெயரால் மேலும் புனிதப்படுத்தப்பட்டு சுருக்கப்பட்டது. குலக் கல்வி முறை பிரதான வடிவமாக கடைபிடிக்கப்பட்டது. பண்டைய சீனாவிலும், மத்திய கால சீனாவிலும் கல்விமுறை பிறப்பின் அடிப்படை மற்றும் குலக்கல்வி வடிவம் ஆகியவற்றை கடந்து நிலப்பிரபுத்துவ வர்க்க சமுதாயத்திற்கு ஏற்ற முறையில் கல்வி முறைகள் உருவானது.

"பள்ளி" பற்றிய முதல் குறிப்பு

நிலப்பிரபுத்துவ சமூகம் சீனாவில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. அரசு கல்வி நிறுவனங்களும், தனிநபர்கள் நடத்தக்கூடிய கல்வி நிறுவனங்களும் செயல்பட்டதற்கான தரவுகள் கிடைத்துள்ளது. சியா வம்சத்தின் காலத்திலிருந்து (பொதுக்காலத்திற்கு முன்பு-கிமு2070-1600), பண்டைய மன்னர்களும் பேரரசர்களும் தங்கள் ராஜ்யங்களை நிர்வகிப்பதிற்கு அவர்களுக்கு உதவ நன்குபடித்த அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது பாரம்பரியமாக இருந்தது. சீனாவில் "பள்ளி" பற்றிய முதல் எழுத்துப்பூர்வ குறிப்பு, ஷாங் வம்சத்தின் (பொதுக்காலத்திற்கு முன்பு-கிமு சுமார் 1800-1050) ஆரக்கிள் எலும்புகளில் எழுதப்பட்டதிலிருந்து அறியமுடிகிறது. இது சீனாவில் முதலில் எழுதப்பட்ட முக்கிய வரலாற்றுப் பதிவாகும். ஆரக்கிள் எலும்புகளில் பள்ளிகளின் செயல்பாடு அல்லது நோக்கம் பற்றிய சிறிய தகவல்களும் உள்ளன.

சோவ் வம்ச (பொதுக்காலத்திற்கு முன்பு-கிமு1046-221)  ஆட்சியின் போது உற்பத்தி சக்திகளின் விரிவாக்கம் மற்றும் கலாச்சாரத்தின் சிறப்புடன் பல பள்ளிகள் நிறுவப்பட்டன. மேற்கு பகுதியை ஆட்சி செய்த சோவ்  வம்சத்தினர் காலத்தில் நிலப்பிரபுத்துவ பண்ணைஅடிமை முறைகள் பரவலாக இருந்தது. இதன் பின்னணியில் அரசு பள்ளிகள், கிராமப் பள்ளிகள் என பள்ளி முறைகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. அரசுப் பள்ளிகள் நிலப்பிரபுக்களின் குழந்தைகளுக்காகவே நிறுவப்பட்டன. உள்ளூர் பள்ளிகள் நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டு இருந்தன. ஷு, சியாங், சூ மற்றும் சியாவோ என்று வகைப்படுத்தப்பட்டு இருந்தது. பொதுவாக, ஷூவில் நன்றாகப் படித்த மாணவர்கள் அடுத்த நிலைக்குச் சென்று மேல்நோக்கிச் செல்லலாம். உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால், அவர்கள் மேலும் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

ஆட்சிப் பணி தேர்வு

சீன வரலாற்றில் அறிவுசார் மரபுகளில் அடிப்படைகளில் மிக முக்கியமானது பேரரசர் காலத்தில் உருவாக்கப்பட்ட தேர்வு முறைகள் ஆகும். இதில் மிகப் பிரசித்தி பெற்ற தேர்வு முறை ஆட்சிப் பணி தேர்வு முறையாகும். இந்த தேர்வு முறைகள் பிரதேச அடிப்படையில், வட்ட அடிப்படையில் நடத்தப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் நிர்வாகங்களை மேற்கொள்வதற்கும், அரண்மனைக்கு தேவைப்பட்ட அதிகாரிகளை தேர்வு செய்வதற்கும் தற்கால தேர்வு முறைகளைப் போன்று சிவில் சர்வீஸ் தேர்வு முறை நடத்தப்பட்டது என்றால் நாம் வியப்பதை தவிர வேறு வழியில்லை. இந்தத் தேர்வின் மூலம் உருவாக்கப்பட்டது தான் மிகப்பெரிய அதிகார வர்க்கம். அரசர்கள், இளவரசர்கள், இளவரசிகள் போன்றவற்றைத் தவிர மற்ற அனைத்து பதவிகளும் தேர்வின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது.

சீனாவில் வாரிசு அடிப்படையில் அதிகார வர்க்க பதவிகள் அளிக்கப்படுவதில்லை. எந்த ஒரு சீனனும் உயர்கல்வி பெற்று தேர்வு எழுதி பேரரசரின் அமைச்சர் நிலை வரை பதவி உயர்வு பெறுவதற்கு எந்த தடையும் இல்லாமல் இருந்தது. இந்தத் தேர்வு முறைகள் வருவதற்கு முன்பு, உலகின் பல இடங்களில் இருந்தது போலவே வாரிசுகள் பதவிகளை வகித்தனர். தேர்வு முறை வந்த பிறகு அனைத்தும் தலைகீழாக மாற்றப்பட்டது. மங்கோலியர் ஆட்சி காலத்திலும் ஒரு சில மன்னர்களின் ஆட்சி காலத்தை தவிர ஏனைய காலங்கள் முழுவதும் சுமார் 1300 ஆண்டுகள் இந்த தேர்வு முறைகள் கடைபிடிக்கப்பட்டது.

நேர்த்தியான தேர்வு முறைகள்

இந்தத் தேர்வு முறையில் ஒரு மாணவர் முதலில் வட்டார அளவிலிருக்கக் கூடிய ஆட்சிக்கான தேர்வு எழுத வேண்டும். அதில் வெற்றி பெற்றவர் உள்ளூர் வட்டார நிர்வாக பொறுப்பில் சேரலாம். அவர் அடுத்த கட்டமாக, மாவட்ட நிர்வாக பொறுப்புக்களை பெற விரும்பினால் அதற்கான தேர்வு முறைகளை எழுதி வெற்றி பெற்று சேரலாம். இதற்கு அடுத்து மாகாண அளவில் பொறுப்புக்களை பெற வேண்டும் என்றால் அதற்கான முறையில் தொடர்ந்து தேர்வு எழுதி அந்த பதவிகளை பெறலாம். மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய தேர்வு முறைகளாக இந்த முறைகள் இருந்தது.

இதேபோன்று நகர நிர்வாக பொறுப்பை பெறுவதற்கு தேர்வு முறைகள் நடந்தது. உச்சகட்டமாக அரண்மனையில் அமைச்சர் அந்தஸ்து வரை உயர்வதற்கு கடினமாக உழைக்கக்கூடிய தேர்வு முறைகள் இருந்தது. இதுதான் தேர்வு எழுதும் மாணவர்களின் இறுதி இலக்காக இருந்தது. அந்த அளவிற்கு படிப்படியான தேர்வு முறைகள் தற்காலத்தில் இருப்பது போல் இருந்திருக்கிறது. பேரரசு காலத்தில் நிர்வாக பதவி என்பது அதிகாரிகள், அரசியல்வாதிகள், காவல்துறையினர், நீதிபதிகள், சமூக தலைவர் என்ற எல்லா பொறுப்புக்களையும் ஒருசேர நிர்வகிக்கும் மிகப்பெரிய பதவியாகும். வெற்றி பெற்று பொறுப்பேற்றவர்கள் சகல அதிகாரங்களின் மையமாக விளங்கினார்கள் என்றால் மிகையாகாது.

பண்டைய சீனாவில் கல்விக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் இருந்தது. எல்லா தரப்பு மக்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு இருந்தது. தேர்வு எழுதக்கூடியவர்கள் பெட்டிப்  படுக்கையுடன் நகரங்களுக்கு சென்று தங்கி படித்து ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை தேர்வு எழுதவேண்டும். தேர்வு மையங்கள் இதற்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. விடைத்தாள்களை திருத்தும்பணி மிகமிக கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்கப்பட்டது. அப்பொழுது மாணவர்களின் பெயர்களுக்கு மாற்றாக ரகசிய எண்களை கொடுத்து அதன் மூலமாக விடைத்தாள்களை திருத்தக்கூடிய முறைகளை கடை பிடித்திருக்கிறார்கள். மாணவர்களின் கையெழுத்தை வைத்து எந்த மாணவன் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மாணவனின் விடைத்தாளை நகல்  எடுத்து அந்த நகலை மட்டும் மதிப்பீட்டுக்கு அனுப்புவார்கள்.

 ஒட்டுமொத்த தேர்விலும் 5 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள். மிக்கடினமான தேர்வுமுறைகள் என்பதால் தோல்வியடைந்தவர்கள் ஏற்கனவே இருக்கக்கூடிய உள்ளூர் பதவிகளில் நீடிக்கலாம். மற்றவர்கள் ஏதாவது ஒரு உள்ளூர் அதிகாரியாக பணி செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். அனைத்து ஆண்களும் தேர்வு முறைகளில் பங்கு பெறலாம். சில பேரரசர்கள் காலத்தில் குறிப்பாக  யுத்தங்களின் ஆட்சி காலம் என்று வரையறுக்கப்பட்ட காலங்களில் பெண்களும் இந்த தேர்வை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுதுவதற்கு நகரங்களை நோக்கி வரவேண்டும் என்ற நிலையும் அதற்கான செலவுகள் மிக அதிகம் என்பதாலும் சாமானிய மக்கள் இந்த தேர்வு முறைகளில் கலந்து கொள்வது கடினமானதாக இருந்தது. இருந்தாலும் மிகவும் பின்தங்கிய பாமர பின்னணி கொண்ட குடும்பத்தவர்களிலிருந்து பலர் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் பதவியை பெற்றிருக்கிறார்கள் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. பல நேரங்களில் வணிகப் பின்னணியை கொண்டவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் அவர்கள் பதவியை தவறாக பயன்படுத்துவார்கள் என்ற அச்சம் இருந்தது.

சராசரியான சூழலில் தேர்வு செய்யப்பட்டவர்களில் சுமார் 83 சதவீத நிர்வாகிகள், பொருளாதார அடிப்படையில்  கீழ்த்தட்டு பின்னணியை சார்ந்தவர்களாக இருந்தார்கள் என்றும், பிற இடங்களை வசதிபடைத்தவர்கள் பெற்றிருந்தார்கள் என்பதையும் ஆய்வுஅறிக்கை யிலிருந்து அறிய முடிகிறது. வர்க்க நிலைபாடுகளை மிகத் துல்லியமாக இது வெளிப்படுத்துகிறது. பொதுக்காலம் (கிபி) 1015  முதல் 1874 வரை சுமார் 800 ஆண்டுகள்  ஜியாங்சியில் உள்ள லியுகாங் என்ற கிராமத்திலிருந்து 300க்கும் மேற்பட்டவர்கள் பேரரசின் உயர்பதவிகளை பெற்றிருக்கிறார்கள். அவர்களின் சிலர் அமைச்சர்களாகவும் ஒருவர் பிரதம அமைச்சராகவே  பதவி வகித்தார் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

கன்பூசிய பாடத்திட்டங்கள்

பேரரசு காலத்தில் சீனக் கல்வியின் பாடத்திட்டம் என்பது கன்பியூசியசின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. ஐந்து கிளாசிக்கல் புத்தகங்கள் மற்றும் நான்கு புத்தகங்கள் ஆகியவற்றை படிப்பதன் மூலம் ஒழுக்கம், சமூக நடத்தை போன்றவற்றை இந்தத் திட்டம் போதிக்கிறது. ஐந்து புத்தகங்கள் என்பது பாடல்களின் புத்தகம், ஆவணங்களின் புத்தகம், சடங்குகளின் புத்தகம், மாற்றங்களின் புத்தகம், வசந்தம் மற்றும் இலையுதிர்கால ஆண்டுகள், ஆகியவற்றைப் பற்றிய புத்தகங்களை படிக்க வேண்டும்.

நான்கு புத்தகங்கள் என்பது கன்பூசியசின் புத்தகங்கள், கோட்பாடுகள், கற்றல் முறைகள், மென்சியஸ் என்ற ஞானியின் கோட்பாடுகள் ஆகியவற்றை படிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக கன்பியூசியசின் மதிப்பீடுகள் பரோவுபகாரம், நீதி, உரிமை, ஞானம், நம்பகத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுதான் கல்வி பாடத்திட்டம் அமைந்திருந்தது. வடக்கு மற்றும் தெற்கு வம்சங்களின் வரலாற்று அகாடமி (420-589), டாங் வம்சத்தின் கைரேகை அகாடமி (618-907) சாங் வம்சத்தின் சட்ட அகாடமி (960-1279) மற்றும் மிங் வம்சத்தின் பெயிண்டிங் அகாடமி (1368-1644) போன்ற ஆளும் வர்க்கங்களுக்கு சிறப்புத் திறமைகளைப் பயிற்றுவிப்பதற்காக அரசாங்கத்தால் பல தொழில்முறை கல்விக்கூடங்கள் உருவாக்கப்பட்டன.

பொதுவாக கன்பியூசியஸ் மரபுகள்  அரசின் சித்தாந்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஹான் அரச வம்ச காலத்தில் கன்பியூசியஸ் கோட்பாட்டை  அரசின் அதிகாரபூர்வ மதமாகவே மாற்றினார்கள். மன உறுதியுடன் உழைப்பவர்கள் மற்றவர்களை ஆளுகிறார்கள்; தங்கள் பலத்தால் உழைப்பவர்கள் மற்றவர்களால் ஆளப்படுகி றார்கள் என்று மென்சியின் அறிவுரையை பின்பற்றி கல்வி மீதான பாரம்பரிய அணுகுமுறையை சீனப்பேரரசர்கள் மேற்கொண்டார்கள்.

ஐரோப்பாவில் வாரிசுமுறை சீனாவில் தகுதி முறைகள்

பேரரசர்கள் காலத்தில், தொழில்முறை அதிகார வர்க்கத்தின் தேவைக்காகத்தான் மையப்படுத்தப்பட்ட தேர்வு முறைகள் சேவை செய்தது. இந்தக் கல்வி முறைகள்  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது அதிக முக்கியத்துவம் கொடுப்பதைவிட அறநெறியை வளர்ப்பதாக அமைந்தது. மிக முக்கிய குறிக்கோளாக அமைய வேண்டிய தேசிய வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு திறமைகளை உருவாக்குவதற்கு பதிலாக பேரரசர்களின் ஆட்சி அதிகாரத்திற்கு தேவைப்பட்ட பல நிலையிலான அதிகாரிகளை உருவாக்குவதற்கான கல்வி முறையாக இது இருந்தது.

உயர் வர்க்கத்தில் இருந்தவர்கள் அரசாங்கப் பதவியை அடைவதற்கு இந்த கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்தினார்கள். எனினும் ஒட்டுமொத்தமாக உலக வரலாற்றில் தேர்வு முறைகள் சீனாவின் மத்திய காலத்தில் உச்சகட்டத்தில் இருந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்றுபட்ட சீனாவாக தொடர்ந்து நீடிப்பதற்கு இந்த தேர்வு முறையும், இதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரும் அதிகார வர்க்கமும் முக்கிய  காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

சீனாவிற்கு கல்வி பயில்வதற்காக வருகை தந்த பல அறிஞர்களை எப்போதும் வியப்படைய செய்தது பண்டைய அதிகார வர்க்க தேர்வு முறையாகும். 15ஆம் நூற்றாண்டுகளுக்கு பிறகு சீனாவுக்கு வருகை புரிந்த கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் இந்த தேர்வு முறையை கண்டு பிரமித்துபோய் இருக்கிறார்கள். வேறு எங்கும் அவர்கள் அறிந்தவரை நடைமுறையில் இல்லாத மிகப்பெரிய தேர்வு முறையாக சீனாவில் இருப்பதை கண்டனர். கிறிஸ்துவ பாதிரிமார்கள் மூலமாக பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் பிறகு அமெரிக்காவிற்கும் இந்த தேர்வுமுறைகள் அறிமுகமாகி இப்போது உலகெங்கும் உள்ள ஜனநாயக நாடுகளில் கூட இந்த தேர்வு முறைகள் நிலவி வருவதை நாம் பார்க்க முடிகிறது.

மத்திய காலத்தில் ஐரோப்பாவில் நிலவிவந்த வாரிசு அடிப்படையிலான பிரபுத்துவ அதிகார வர்க்க முறைகளை காட்டிலும், சீனாவில் உருவாக்கப்பட்ட தகுதி அடிப்படையிலான தேர்வு முறைகள் முற்போக்கானதாக இருந்தது. மிக முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு அம்சம் 1584ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அரசியல் சாராத நிர்வாக முறைகளை உருவாக்குவதற்கு நார்த் கோர்ட்-ட்ராவல்யான் என்ற கமிஷனை அமைத்தது. அவர்கள் கொடுத்த அறிக்கையில் சீனாவின் பாரம்பரிய தேர்வு முறைகள் செல்வாக்கு செலுத்தியது. இந்த அடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளில் இந்தியாவில்தான் முதல் முதலில் சிவில் சர்வீஸ் தேர்வு முறைகள் அமலாக்கப்பட்டு அதன் பிறகு பிரிட்டனுக்கும் சென்றது.

சீன தேர்வு முறைகளில் பல சிறப்புகள் இருந்தாலும் கன்பூசியஸ் கோட்பாடுகளின் போதாமை காரணமாகவும், கன்பூசியஸ் கோட்பாடுகளால் உருவாக்கப்பட்ட அதிகார வர்க்கத்தினரின் பிற்போக்குத்தனத்தாலும், அவர்களின் கொடூர நடவடிக்கைகளாலும், குயின் வம்சம் கலகலத்துப் போனது. 1905 ஆம் ஆண்டு தேர்வு முறை கைவிடப்பட்டது. புதிய கல்வி முறைகளுக்கான விவாதங்களும், நடைமுறைகளும் துவங்க ஆரம்பித்தது.

6. பண்டைய சீனத் தொழில்நுட்பம் அறிவியலின் திசைகாட்டி

 



மத்திய காலத்தின் பிற்பகுதியில் தோன்றிய பல புதிய தொழில்நுட்பங்கள் ஐரோப்பிய வரலாற்றின் போக்கையே திசைமாற்றியது. இந்த தொழில்நுட்பங்களில் பெரும்பான்மையானது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டவை என்று வரலாற்றில் அறிவியல் என்ற புத்தகத்தில் ஜே.டி. பெர்னால் குறிப்பிட்டுள்ளார்.

பேரரசுகளின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும், குழப்பங்களுக்கும் மத்தியில் சீனாவில் கலையும், இலக்கியமும், தொழில்நுட்பத்தின் படைப்புகளும் உலகம் வியக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்ததன் ரகசியம் என்ன? மத்திய காலத்தில் மட்டுமல்ல... பண்டைய சீனாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று அறிவியல் தொழில்நுட்பத்தில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் ஆகும். ஒரு குறிப்பிட்ட அரச வம்சத்தில் மட்டும் அல்ல அடுத்தடுத்துவந்த அரச வம்சங்களின் ஆட்சி காலத்திலும் இந்த கண்டுபிடிப்புகளும் நடைமுறைப்படுத்தலும் தொடர்ந்து கொண்டே இருந்தது. நமது வழக்கமான பார்வைகள் அல்லது மரபார்ந்த பார்வைகள் என்பது, அனைத்து புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் ஐரோப்பாவிலிருந்து வந்வை என்பதாகத்தான் இருக்கிறது. இவை அனைத்தையும் மறுவாசிப்புக்கு உட்படுத்தவில்லை என்றால் வரலாற்றின் உண்மைகள் வெளியே தெரியாமல் போகும்.

சாங் அரசவம்ச காலத்திலேயே அரிசியை ஊறவைத்து மது வகைகளை தயாரிப்பதைக் கண்டுபிடித்தார்கள். மரத்திலான செவ்வக சவப்பெட்டிகளையும், பானைகளையும், ஊசிகள், கோடரிகள் போன்ற பொருட்களையும் கண்டுபிடித்து பண்டைய சீனர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். உடலில் ஊசியை குத்தி சிகிச்சை பெறக்கூடிய அக்குபங்சர் வைத்தியமுறை பொதுகாலத்திற்கு முந்தைய(கிமு) மூன்றாம் நூற்றாண்டிலேயே சீனாவில் நடைமுறைக்கு வந்து விட்டது.

குதிரையின் கழுத்துப்பட்டை (Horse-Collar), காம்பஸ்(Compass), கப்பலின் திசைகளை மாற்றும் சுக்கான் (Stern post rudder), வெடி மருந்து (Gun powder). காகிதம், அச்சுமுறை(Printing) ஆகியவை சீனாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டன. ஐரோப்பாவில் அல்ல.

குதிரையின் கழுத்துப்பட்டை தானே, இது ஒரு கண்டுபிடிப்பா? என்று நினைத்து விடக்கூடாது. குதிரையின் கழுத்தில் கட்டப்படும் கயிற்றைக் கொண்டுதான் குதிரையின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியும். கயிற்றை அதிகம் அழுத்தினால் குதிரை மூச்சு திணறி இறந்து விடும். இந்த பாதிப்புகள் காரணமாக ஐரோப்பாவில் குதிரைகளை அதிகம் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. சீனாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே குதிரையின் மூச்சுக்குழாயை அழுத்தாமல் அதன் கழுத்தில் போடுவதற்கான ழுத்துப்பட்டையை கண்டுபிடித்து பயன்படுத்தினார்கள். இந்த கழுத்துப்பட்டையும் அதன் சேணமும்  ஐரோப்பாவிற்கு வந்த பிறகுதான் ஐரோப்பாவின் போக்குவரத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவானது.

கடல் வணிகம் பெருகுவதற்கு கப்பல் போக்குவரத்து மிகவும் இன்றியமையாதது. வடக்கு திசையை அறிய உதவும் திசை காட்டி, கடல் பயணத்தில் மிக முக்கியமான கருவி. இவற்றைக் கண்டுபிடித்தது மட்டுமல்ல... கப்பல்களை தேவைப்படுகிற திசை நோக்கி திருப்புவதற்கான சுக்கானையும் கண்டுபிடித்து பயன்படுத்தினார்கள்.  பண்டைய காலத்தில் பயன்படுத்திய இந்த தொழில்நுட்பம், சீனாவில் மத்திய காலத்தில் சுக்கான் மற்றும் கீல்களுடன் அமைக்கப்பட்ட பெரிய கப்பல்கள் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக கடல் வணிகம் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. காந்தக் கருவிகளையும் சீனர்கள் கண்டுபிடித்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.

யுத்தங்களின் போக்குகளையே மாற்றிய வெடிமருந்துகள் சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. பதினோராவது நூற்றாண்டில் சோங் அரசவம்ச காலத்தில் வெடி மருந்தை கண்டுபிடித்து யுத்தத்தில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இந்த கண்டுபிடிப்பு ஐரோப்பாவிற்கு வந்து மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கியது. ஐரோப்பாவில் புரட்சியும், பீரங்கியும் அரசியல் அதிகாரங்களை மாற்றி விட்டதற்கு இந்த வெடி மருந்து கண்டுபிடிப்புகள் காரணமாக அமைந்தது. அதுவரை தகர்க்க முடியாமல் இருந்த நிலப்பிரபுக்களின் கோட்டைகளை நிர்மூலமாக்கினார்கள். மத்திய காலத்தில் கிரேக்க நாகரிகத்தில் வெடிகுண்டு மருந்து என்ற எண்ணம் கற்பனையில் கூட இல்லாத காலத்தில் சீனாவில் அது கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

சாய் லூன் (Cai lun) என்பவர் பொதுக்காலத்தின் (கிபி 105) முதல் நூற்றாண்டிலேயே, ஹான் வம்ச ஆட்சி காலத்தில் காகிதத்தை கண்டுபிடித்து விட்டார். மல்பரி மரக்கூழுடன் நாணல்களையும் பழைய துணிகளையும் இணைத்து கூழாக்கி அவற்றை உலர்த்தி காகிதத்தை உருவாக்கினார். சாய் லூன் திருநங்கை என்ற பதிவும் உள்ளது. இதற்கான சான்றுகள் இல்லை. சீனாவில் காகிதம், அச்சு, வெடிமருந்து, திசைகாட்டி  என்ற நான்கு பெரிய கண்டுபிடுப்புகளில்  காகித்தை கண்டுபிடித்த சாய் லூன் பெயர்மட்டும் வரலாற்றில் பதிவாகி உள்ளது. முதல் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த காகிதம் சீனாவில் மூன்றாம் நூற்றாண்டிலேயே மிகப்பெரிய அளவிற்கு, அதாவது எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டது.

அச்சிடும்முறைகளை கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகப்படுத்தி அசத்திய பெருமை சீனர்களுக்கே உண்டு. பொதுக்காலத்தின் ஐந்தாம் நூற்றாண்டில் அச்சு முறையை கண்டுபிடித்தார்கள். உலகின் முதன் முதலாக உருவாகிய அச்சு பிரதி  என்பது, பொதுக்காலத்தின் 868ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி அச்சடிக்கப்பட்டது. இந்த பிரதியின் பெயர் ஜின் காங் சிம் (வஜ்ரசேதிகா பிரக்ஞபாரமிதா சூத்திரம்) என்ற பௌத்த நூலாகும். இதன் பிரதி தற்போதும் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளது. இதேபோன்று ட்ரெடில் என்று அழைக்கப்படக்கூடிய நகர்வு அச்சுமுறையை 1450இல் தான் ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டது. இதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் பி ஷங்க் (990-1050) என்பவர் சுட்ட களிமண்ணை கொண்டு அந்த முறையை கண்டுபிடித்து பயன்படுத்தினார்கள்.

வணிகத்தில் பண்டமாற்று முறைகளே முதலில் நாணயங்களாக பயன்படுத்தப்பட்டது காலஓட்டத்தில் உலோகங்களிலிருந்து பல நாணயங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. சீனாவில் டாங் வம்ச ஆட்சி காலத்தில் செப்பு நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. இவற்றை வணிகர்கள் சுமந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது என்பதை மன்னனிடம் முறையிட்டார்கள். அதன் விளைவாக டாங் வம்ச ஆட்சி காலத்தில் காகித நாணயங்கள் உலகிற்கு முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

கண்டுபிடிப்புகளின் தாயகம் சீனாதான் என்று சொல்லக்கூடிய அளவில், சீனாவில் அடுத்தடுத்த தொழில்நுட்ப முறைகள் பயன்பாட்டுக்கு வந்தன. வார்ப்பு இரும்பு, இரும்பை உருக்க உதவும் காற்றுத் துருத்திகள், எந்திரவியல் இயக்க முறைகள், சுரங்கப் பணிகளுக்கான கருவிகள், பட்டாசு தயாரிப்புக்கான வெடி பொருட்கள், மடக்கிவிரிக்கப்படும் குடைகள் என பலவும் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு மேலாக நிலக்கரியை பயன்படுத்தக்கூடிய முறைகள், சீனாவில் நடைமுறையில் இருந்தது. எந்திரவியல் கடிகாரத்தை முதலில் உருவாக்கியது சீனர்கள் தான்.

ஹான் வம்சத்தின் ஆட்சி காலத்தில் ஜியூஸ்காங் சுவான்சு என்ற கணி நூல் தொகுக்கப்பட்டது. இது ஒன்பது பாகங்களை உள்ளடக்கியது. முன்பு இருந்த பல சீன கணித அறிஞர்களின் குறிப்புகளை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்கள். ஐரோப்பாவில் கண்டறிந்தார்கள் என்று கருதப்பட்ட பல கணித கோட்பாடுகள் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சீனாவின் நூல்களில் காணப்படுகிறது. காலண்டர் முறைகளையும் அதாவது ஒரு காலண்டர் ஆண்டின் காலஅளவு 365.2425 நாட்கள் என்று வரையறுத்து உள்ளனர். கணிதத் துறையில் இன்னும் ஏராளமான பிரிவுகளை சீனர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதிசயக்கத்தக்க மற்றொரு கண்டுபிடிப்பாக வாயு உருளைகளை (கேஸ் சிலிண்டர் போல்) கண்டுபிடித்து பயன்படுத்தி இருக்கிறார்கள். இயற்கை வாயுவை மூங்கில் கழிகளின் வழியாக அடுப்புக்கு எடுத்துச் சென்று எரிய வைத்திருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்களாக ஸ்விட்ச்வான் பகுதியில் 600 அடி ஆழமுள்ள இடத்திலிருந்து வெளிவரும் குழாய் உச்சியில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சீனாவின் அறிவியல் கண்டுபிடிப்புகளை மட்டுமே ஆய்வு செய்த ஜோசப் நீதாம் என்ற அறிஞர் கீழ்க்கண்ட வகையில் தன்னுடைய குறிப்புகளை பதிவு செய்துள்ளார். வானிலையிலும், காலநிலை ஆராய்ச்சியிலும் சீனர்கள் ஐரோப்பியர்களை விட ஆயிரம் ஆண்டுகள் முந்தி இருந்தார்கள். வானவியலில் சீனர்கள் திகைக்கும் படியான இரண்டு குறிப்புகளை வைத்திருந்தார்கள். சூரிய வட்டத்தில் கரும்புள்ளிகள் இருப்பதை ஐரோப்பிய அறிஞர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாக 1100 ஆண்டுகளுக்கு முன்பே சீனர்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது சூரிய ஒளியின் வெளிவட்டத்தில் ஆராய்ச்சியை ஐரோப்பியர் தொடங்குவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சீனர்கள் அதன் ஒவ்வொரு அங்கத்துக்கும் தொழில்நுட்ப பெயரை சூட்டி இருக்கிறார்கள். மற்றொரு திகைக்க வைக்கும் கண்டுபிடிப்பு எந்திரவியல் கடிகாரங்கள் ஐரோப்பாவில் 14வது நூற்றாண்டில் தான் பயன்படுத்தப்பட்டது சீனாவில் எட்டாம் நூற்றாண்டிலேயே இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஜோசப் நீதாம் பதிவு செய்து உள்ளார்

 மண்ணியல், கனிமயியல், நிலவரைவியல் போன்ற துறைகளிலும் அவர்கள் முன்னோடிகளாக இருந்தார்கள்.  அணுக்களின் அடிப்படையிலான சிந்தனைகளை விட அலைகளின் அடிப்படையில் அவர்களின் சிந்தனை இருந்தது என்று தெரிவிக்கிறார். சீனர்கள் பயன்படுத்திய நீர்இறைப்பு எந்திரங்கள், எந்திரவியல் கடிகாரங்கள், காற்றாலைகள், நீராளிகள் போன்றவைகள் மிகவும் சிக்கலான வடிவமைப்புகளையும் இயக்கங்களையும் கொண்டிருந்தது. நீராவி இயந்திரங்களுக்கு முன்னோடியாக ஒரு இயந்திரமும் சீனாவில் இருந்திருக்கிறது.

கடைசி வம்சத்துக்கு முந்தைய வம்சமான மிங் அரசவம்சத்தின் ஆரம்ப ஆண்டுகளில் (1405-1433) மிகவும் குறிப்பிடத்தக்க சாதனையாக கடற்படை நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. அட்மிரல் ஜெங் ஹி  என்பவர் தொழில் நுட்ப ரீதியாக வடிவமைக்கப்பட்ட கப்பற்படைகளின் மூலம் ஜாவா, இந்தியா, ஆப்பிரிக்க கொம்புமுனை, பார்மோஸ் ஜலசந்தி ஆகிய இடங்களுக்கு வெற்றிகரமாக சென்று வந்தார். ஐரோப்பாவில் கடற்பயணத்திற்கான ஆய்வுகள்கூட தொடங்காத காலத்திலேயே சீனாவின் கடற்படையானது சிறந்த தொழில்நுட்பத் தன்மையுடன் அமைந்திருந்தது. இதற்கு அடுத்து 150 ஆண்டுகளுக்கு பிறகுதான் ஸ்பெயின் கப்பல்கள் தங்களது பயணத்தை துவங்கின. சீனக் கப்பல்களின் அளவிற்கு தொழில்நுட்பமும், அதன் எண்ணிக்கையும் ஸ்பானிஷ் கப்பற்படையில் இல்லை.

மிங் வம்ச காலத்தில் உருவான கப்பற்படையின் நோக்கம் குறித்தும் அந்த அரசரின் செயல்பாடுகள் குறித்தும் வரலாற்று ஆசிரியர்கள் மேன்மையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அன்றைய மிங் வம்ச அரசர் அறிவித்த கொள்கைகளும் இன்று சீன அதிபர்  ஜி ஜின் பிங் அறிவிக்கிற கொள்கைகளுக்கும் ஒற்றுமை இருப்பதை நாம் காண முடியும். சீனா எந்த நாட்டையும் ஆக்கிரமிக்காது, ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடாது, மேலாதிக்கம் செலுத்தாது, பொருளாதார உறவுகளை வைத்துக் கொள்வதோடு, அந்த நாட்டின் வளர்ச்சியும் சீன நாட்டின் வளர்ச்சியும் இணைந்தே பயணிக்க வேண்டும், அதாவது ‘‘வெற்றி வெற்றி’’ (win win) என்ற கொள்கையின் அடிப்படையில் சீனாவின் சர்வதேச ஒத்துழைப்பு இருக்கும் என்று இன்றைய ஜி ஜின் பிங் அறிவித்திருக்கிறார்.

மிங் வம்சத்தின் மன்னர் சீன கப்பற்படையின் பயணத்தின் போது சென்ற இடங்களில் சீனப்பேரரசின் மகத்துவத்தை அறிவிக்க செய்தார். ஆடம்பர பரிசுகளை அவர்களுக்கு கொடுத்தார்கள். சீனாவிற்கு தூதர்களை அனுப்ப வேண்டும் என்று அழைத்தார்கள். சீனப்பேரரசின் மகத்துவத்தை மற்ற நாடுகளுக்கு தெரிவிப்பதற்காக நௌடவ்  (Knowtow)  என்ற கை கூப்பி தலை வணங்கும் சடங்குகளை நடத்தினார்கள். இதைக் கடந்து நாடு பிடிக்கும் கொள்கை எதையும் கொண்டிருக்கவில்லை. சீனாவிற்கு காலனிகளைப் (நாடுகளை) பிடிக்க வேண்டும் என்றோ அதன் மூலமாக கிடைக்கும் செல்வத்திலிருந்து சீனா வளர வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் மிங் வம்ச அரசர் அறிவித்தார். அதே நேரத்தில் சீன நாட்டு வணிகர்கள் வணிகம் செய்வதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தார். சீன கடற்படை சென்றடைந்த நாடுகளுடன் நட்புறவை பேணுவதையே குறிக்கோளாக கொண்டார்கள்.

1433ல் அடுத்த பேரரசர் ஆட்சிக்கு வந்தவுடன் வடகிழக்கு எல்லையில் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் கடற்பயணங்கள் நிறுத்தப்பட்டன. கப்பற்படையை அகற்ற உத்தரவிட்டார். மீண்டும் பயணங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சீனாவின் கடற்படை திறன்கள் மங்கி விட்டன. சீன வர்த்தகர்கள் ஜெங் ஹி பயணித்த பாதைகளில் வர்த்தகங்களை திறம்பட நடத்தினாலும் கப்பற்படை மீண்டெழவில்லை. வளர்ந்த கப்பற்படையை சீனா தன்முனைப்பாக நிறுத்திக் கொண்டது.

மக்கள் தொகையிலும் பிரதேச அளவிலும் தொழில் புரட்சி நடக்கிற வரை சீனா பெரும் பணக்கார நாடாகத்தான் இருந்தது. பெரிய ஆறுகள், உட்புறங்களில் உள்ள கால்வாய்கள் மூலம் நடைபெறும் போக்குவரத்துக்களால் மக்கள் இணைக்கப்பட்டார்கள். 15 ஆம் நூற்றாண்டில் சீனாவில் 28 தேசிய நெடுஞ்சாலைகளும் 53 மாகாண நெடுஞ்சாலைகளும் மொத்த சீனாவையும் இணைத்தது. மிக நீளமான சீனப் பெருஞ்சுவரும், சுமார் 1800 கிலோமீட்டர் நீளமுள்ள மாபெரும் வாய்க்கால் என்று பெயரிடப்பட்ட வாய்க்காலும், மண்ணில் ஒரு சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட பெய்ஜிங் பேரரசரின் அரண்மனைகள் போன்றவை சீனர்களின் அறிவையும் பிரம்மாண்ட சிந்தனைகளையும் வெளிகாட்டக் கூடியதாக அமைந்து இருந்தது

பொருளாதார நடவடிக்கைகள் இந்தப் பாதைகளில் தீவிரமாக அமைந்தது. சீனா பல நூற்றாண்டுகளாக உலகின் அதிக உற்பத்தி பொருளாதாரமாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட வணிகப் பகுதியாகவும் இருந்தது. அதன் செல்வவளம் மேற்கத்திய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இருந்தது. 1820 ஆம் ஆண்டு பிற்பகுதியில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்திற்கு மேலாக சீனாவின் உற்பத்தி இருந்தது. ஐரோப்பாவின் மேற்கு, கிழக்கை விட அமெரிக்காவை விட, இந்த உற்பத்தி அதிகமானது. சீனாவிற்கு பயணித்த பெரும்பாலான மேற்கத்திய பார்வையாளர்கள் அதன் பொருள் செல்வத்தை கண்டு வியந்தனர்.

1736 இல் பிரெஞ்சு இயேசு சபையைச்சேர்ந்த ஜீன்பாப் கிஸ்ட்டு ஆல்டே என்பவர் சீனாவிற்குச் சென்ற மேற்கத்திய பார்வையாளர்கள் தெரிவித்த கருத்துக்களை சுருக்கமாக முன் வைத்தார்.

"உலகில் மிக அழகானது இந்த நாடு என்பதை யாரும் மறுக்க முடியாது. மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட, மிகவும் செழிப்பான ராஜ்ஜியம். சீனாவைப் போன்ற ஒரு பேரரசு ஐரோப்பா முழுவதும் ஒரே இறையாண்மையின் கீழ் ஒன்று பட்டால் எப்படி இருக்கும் என்பதற்கு சமமான முறையில் இருந்தது. பெரும்பாலான சீனர்கள் சீனாவில் மதிப்புமிக்க உடைமைகளும் அறிவுசார் சாதனைகளும் இருப்பதாக நம்பினர். சீனாவின் உயர் அடுக்கினர் இதை சாதாரண பொருளாதார பரிமாற்றமாக மட்டும் பார்க்காமல் அதன் மேன்மையை உயர்த்தி பிடித்தனர்’’ என்று எழுதுகிறார். இவையெல்லாம் ஒரு சீன ஆதரவாளர் தனது நூலில் எழுதவில்லை. அமெரிக்கா ராஜதந்திரி ஹென்றி கிஷிங்கர் தனது நூலில் வியந்து எழுதுகிறார்.

இப்படிப்பட்ட பிரம்மாண்டமான வளர்ச்சிகள் ஏன் அதற்குப் பின் உருவாகிய ஐரோப்பாவை மிஞ்ச முடியவில்லை. இது சீனாவிற்கான கேள்வி மட்டுமல்ல... சீனாவைப் போன்று பண்டைய நாகரிகங்களில் ஒன்றான இந்தியா மற்றும் அரேபிய நாடுகளின்  நாகரிகங்களுக்கான கேள்வியாகவும் உள்ளது.

14. மத நம்பிக்கை சுதந்திரம் என்றால் என்ன?

சீன வரலாற்றில் மாற்றங்களின் மகுடமாக 1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்த புதிய ஜனநாயக புரட்சி அமைந்தது. புரட்சி, வெறும் வ...