அவர் விதைத்த விதைகள் மரங்களாகியது.
அவரோ மீண்டும் விதை ஆனார்.
தோழர் லூர்து சென்னை வியாசர்பாடி
பெரம்பூர் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனத் தலைவர்களில் முதன்மையானவர்.
மத்திய பிரதேசத்தில் ஓட்டுநர்
பயிற்சி பெற்ற பொழுது பொதுவுடமை இயக்க தோழருடன் தொடர்புகள் கிடைத்து. சென்னை மாநகர
போக்குவரத்து கழகத்தில் அதாவது அன்றைய பல்லவன் போக்குவரத்து கழகம் ஓட்டுநராக பணிக்கு
சேர்ந்தார்.
தோழர் வி பி சிந்தன் தலைமையில்
போக்குவரத்து தொழிலாளர்களை அணிதிரட்டியது மட்டுமல்ல, வியாசர்பாடி பகுதியில் சோசியலிஸ்ட் வாலிபர்
முன்னணி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றை அமைத்து அதன் பிறகு இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி மார்க்சிஸ்ட் கிளைகளை உருவாக்குவதில் பிதாமகனாக இருந்தார்.
சாஸ்திரி நகரில் எட்டாவது தெருவில்
வசித்து வந்த அவர் சாஸ்திர நகர் ஊர் சங்கத் தலைவராகவும் செயல்பட்டார். சமூக விரோதிகளை
எதிர்த்து கள்ளச்சாராய வியாபாரிகளை எதிர்த்து இயக்கம் நடத்தி மக்களின் பேராதரவை பெற்று
இடது சாரி இயக்கத்தை வளர்த்தவர்.
1977 ஆம் ஆண்டு சாஸ்திரி
நகரில் நடைபெற்ற மத மோதல்களை எதிர்த்து துணிச்சலுடன் பிரச்சாரம் செய்து அந்த பிரச்சனைக்கு
தீர்வு கண்டதில் முன்னணி பங்கு வகித்தவர்.
பொதுவாக வியாசர்பாடி பகுதிகளில்
கள்ளச்சாராய வியாபாரிகளால் அவ்வப்போது நடைபெறும் ஊர் தகராறுகளை தடுத்து நிறுத்தியதிலும்
ஒற்றுமை ஏற்படுத்தியதிலும் முக்கிய பங்காற்றியவர்.
மூலக்கடை வியாசர்பாடி சால்ட்
கோட்ரஸ் பேஷன் பிரிட்ஜ் போன்ற இடங்களில் காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தை
அமைத்ததில் முக்கிய பங்காற்றியவர். இந்த ஒவ்வொரு இடத்திலும் முதலாளிகளின் நிர்வாகத்தின்
கருங்காலிகளை எதிர்த்து மோதல்களை சந்தித்து தான் சங்கம் உருவாக்கப்பட்டது.
1980 ஆம் ஆண்டு நடைபெற்ற
சட்டமன்றத் தேர்தலில் தோழர் முருகையன் அவர்கள் வேட்பாளராக போட்டியிட்ட பொழுது வியாசர்பாடி
முழுவதும் பல்வேறு வட்டங்களில் தேர்தல் பணிகளை நிறைவேற்றியவர்.
தோழர்கள் ராமு, துளசிதாஸ், அமலாதாஸ், ஆரோக்கியம், சூசை மைக்கேல்,
சின்னப்பன், சந்தியாகு, செங்கோல்,
மணிவண்ணன், செபஸ்டியான், கராத்தே மாஸ்டர் பாமோஜெயன், கருப்பையா போன்ற மூத்த தோழர்களும்,
சாஸ்திரி நகரில் வெற்றி வளவன், பாக்கியம் ஆரோக்கியசாமி
(து.தா), கோர்ட் அந்தோணி, அமுல்ராஜ்,
சந்தியாகு, லூகாஸ், நோவேல்,
பெஞ்சமின், பக்தவச்சலம் காலணியில் பன்னீர்செல்வம்,
தனசேகரன், கலைச்செல்வன், மறத்தமிழ் வேந்தன், மூர்த்தி, சேகர்
போன்ற முன்னணி தோழர்களையும், கக்கன்ஜி காலணியில் நாராயணன்,
சாய், மோகன்ராஜ் மதன் குமார், புதுநகர் செல்வம் சௌந்தர் காளிதாஸ் போன்ற எண்ணற்ற முதல் கட்ட தலைவர்களை உருவாக்கியவர்.
செங்குன்றம் பகுதியில் முதுபெரும்
தலைவர் தோழர் முத்து வேலாயுதம் அவர்கள் இயக்கம் கட்டி வளர்த்த பொழுது அவருக்கு உறுதுணையாக
இருந்து அப்பகுதி இயக்க வளர்ச்சிக்கு உதவி செய்தவர்.
அவரது இல்லம் கட்சியின் அலுவலகமாக, படைக்கல தளவாடங்களாக,
மார்க்சிய பள்ளியாக, பல நேரங்களில் உணவளிக்கும்
இடமாக செயல்பட்டது. எண்ணற்ற நினைவுகள் வந்து போகிறது.
அந்தப் பகுதி இயக்க வரலாற்றை
எழுத வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு அவரை நேரடியாக சென்று சந்தித்து வந்து
பல்வேறு விஷயங்களை விவாதித்தும் வந்தேன். வேறு சில எழுத்து பணிகளால் அவற்றை தொடங்கவில்லை.
இதுதான் சரியான நேரம் இனிமேல் அதை காலதாமகப்படுத்துவது அப்பகுதி இயக்கத்தை உருவாக்கிய
அர்ப்பணிப்பு மிக்க ஊழியர்களுக்கு நியாயம் வழங்குவதாக ஆகாது. எனவே தோழர் லூர்து அவர்களின்
மரணத்திற்கு அஞ்சலி செலுத்துவது உடன் அவரது இயக்கப் பணிகளை முன்னெடுப்பதற்கான பணிகளையும்
மேற்கொள்வோம்.(அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை நோக்கி பேருந்தில் பயணித்துக்
கொண்டிருக்கும் பொழுது இந்த நினைவஞ்சலி பதிவிடுகிறேன். முழுமையான பதிவை அடுத்து வெளியிடுகிறேன்)
அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக