அ.பாக்கியம்
இந்தக்
கேள்விகள் பரவலாக வலைதளங்களிலும் பலரிடமும் கேட்கப்படுகிற கேள்வியாகும். நானும் பல இடங்களில்
செல்கிற பொழுது இந்த கேள்வியை பல தோழர்கள் கேட்கிறார்கள். பொதுவாக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில்
குதித்து இருப்பது போல் சீனாவும் குதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து இந்தக்
கேள்விகள் எழுப்பப்படுகிறது. உண்மையில் அமெரிக்காவினுடைய நோக்கத்திற்காகத்தான்
அல்லது அமெரிக்காவிற்கு ஆதரவாகத்தான் இஸ்ரேல் யுத்தம்
நடத்துகிறது என்ற மிக முக்கியமான புரிதல் தேவைப்படுகிறது.
சீனாவும்
ஈரானும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மிக விரிவான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை
ஏற்படுத்தி உள்ளனர். இது 25 ஆண்டுகளுக்கான ஒப்பந்தமாகும். இந்த
ஒப்பந்தத்தின் அனைத்து தகவல்களும் பொதுதளத்தில் கிடைக்கிறது.
இந்த ஒப்பந்தத்தில் ராணுவ ஒத்துழைப்பு என்ற அம்சமும் அடங்கும்.
சீனா
உலகில் இன்று பெரிய சக்தியாக இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த உலகை
அமைதியான முறையில் நடத்திட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறது. எனவே அமெரிக்கா போன்ற ஒரு ஆக்கிரமிப்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டது
அல்ல. அதே நேரத்தில் யுத்தம் தொடராமல் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளிலும்
சீனா முன்னுரிமை அளிக்கிறது. இதனால் அமெரிக்கா இஸ்ரேலின் அத்துமீறல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் இல்லை. ஈரான் என்ற நாடு இன்று
இஸ்ரேல், அமெரிக்கா என்ற பெரும் சக்திகளை எதிர்த்து
நிற்கிறது என்றால் உலகளாவிய ராணுவ ஒப்பந்தங்களுக்கு உரிய சட்டத்தின் அடிப்படையில்
சீனா உட்பட சில நாடுகள் செயல்படுவதன் வழியாகத்தான்.
ஈரான்
நாட்டின் இந்த தாக்குப் பிடிக்கும் தாக்குதல்களில் சீன ஒப்பந்தமும் அடங்கி
இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்களின்
தளங்களின் மீது இப்படிப்பட்ட தாக்குதல்களை இதுவரை சந்தித்தது இல்லை. இஸ்ரேலின்
அனைத்து பெரிய சிறிய நகரங்களும் அதன் ராணுவ முகாம்களும் குறி வைத்து ஈரானால்
தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் ஒரு விஷயத்தை அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது. இஸ்ரேல் மிகப்பெரிய
உத்திகளைக் கொண்டிருக்கவும் இல்லை, இடம் சார்ந்த
பாதுகாப்பையும் வலுவாக வைத்திருக்கவில்லை என்பது வெளிப்பட்டது. ஈரானின் இந்த
தாக்குதல்களில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் ராணுவ தளபதி அலுவலகம், விமானப்படை கட்டளை தளங்கள், வணிக தளங்கள், ராணுவத்திற்கு உதவி செய்யும் தொழிற்சாலைகள்
அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது.
ஈரானின்
இந்த எதிர் தாக்குதல் திடீரென்று நிகழவில்லை, நீண்ட காலமாக தயாரித்து வந்த ஒரு திட்டத்தின் வெளிப்பாடு. ஈரானின் உச்ச
தலைவர், பாதுகாப்பு அமைச்சர், மற்றும்
முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டிருந்த நிலையிலும் இதுபோன்ற தாக்குதல்களை தொடர
முடிகிறது என்றால் அதன் ராணுவ சக்தியை அறிந்து கொள்ள முடியும். இஸ்ரேலியர் ராணுவ
தளவாடங்களையும் அமெரிக்க ராணுவ தளவாடங்களையும் தாக்கப்பட்டிருக்கிறது என்றால் இதன்
உத்திகளை புரிந்து கொள்ள முடியும். ரஷ்யாவும் சீனாவும் ஒப்பந்த சரத்துகளின்
அடிப்படையில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு ஆதரவாக உதவி செய்கிறார்கள்.
அமெரிக்காவின் சட்ட விரோத தடைகளுக்கு எதிராக பொருளாதார ஆதரவை வழங்குவது, ஈரானின் ராணுவ தொழில்துறை உற்பத்திக்கு தொழில்நுட்ப பொருட்களையும்
ஆதரவையும் வழங்குவது, ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆயுதங்கள்
மற்றும் உபகரணங்களை மாற்றிக் கொடுப்பது போன்றவை நடந்து கொண்டு தான் இருக்கும். இவை
அனைத்தும் மற்ற நாடு தாக்குவதற்கு அல்ல ஈரான் தன் நாட்டை பாதுகாப்பதற்காக என்ற
அடிப்படையில் சீனா ஒப்பந்தத்தை கடைப்பிடிக்கிறது
ஆக்கிரமிப்பின் அஸ்திவாரம்
தான் அமெரிக்க ராணுவம்
அமெரிக்க
ராணுவம் உலகம் முழுவதும் 860 க்கு மேற்பட்ட ராணுவ தளங்களையும் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களையும்
அமர்த்தி இருக்கிறது. உலகத்திலேயே அதிகமான அளவு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில்
ஈடுபட்டது அமெரிக்க ராணுவம்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க விசுவாசிகள், அமெரிக்க ரசிகர்கள் அல்லது
ஜனநாயகம் பேசக்கூடிய கனவான்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சுருக்கமான பட்டியலை
தருகிறேன் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அமெரிக்கா மற்ற நாடுகளில் தலையிட்ட
நிகழ்வுகள் இங்கே கொடுக்கப்படுகிறது
ஈரான்: 1946 சீனா: 1946
- 1949 கிரீஸ்: 1947 - 1949இத்தாலி: 1948 பிலிப்பைன்ஸ்: 1948 – 1954 கொரியா: 1950 –
1953 ஈரான்: 1953 வியட்நாம்: 1954 குவாத்தமாலா: 1954 லெபனான்: 1958 பனாமா: 1958 ஹைட்டி: 1959
காங்கோ: 1960 வியட்நாம்: 1960 – 1964
கியூபா: 1961 கியூபா: 1962 லாவோஸ்: 1962 ஈக்வடார்: 1963 பனாமா: 1964
பிரேசில்: 1964 வியட்நாம்: 1965 – 1975
இந்தோனேசியா: 1965 காங்கோ: 1965
டொமினிகன் குடியரசு: 1965 லாவோஸ்: 1965 - 1973கானா: 1966 குவாத்தமாலா: 1966 – 1967 கம்போடியா: 1969 – 1975 லாவோஸ்: 1971 – 1973 சிலி: 1973 கம்போடியா: 1975
அங்கோலா: 1976 – 1992 ஈரான்: 1980
லிபியா: 1981 எல் சால்வடார்: 1981 – 1992 நிகரகுவா: 1981 – 1990 லெபனான்: 1982 – 1984 கிரெனடா: 1983 ஹோண்டுராஸ்: 1983 – 1989 ஈரான்: 1984 லிபியா: 1986
பொலிவியா: 1986 ஈரான்: 1987 – 1988
லிபியா: 1989 பிலிப்பைன்ஸ்: 1989
பனாமா: 1989 – 1990 லைபீரியா: 1990
ஈராக்: 1990 – 1991 ஈராக்: 1991 – 2003
ஹைட்டி: 1991 சோமாலியா: 1992 – 1994
யூகோஸ்லாவியா: 1992 – 1994 போஸ்னியா: 1993 – 1995 ஹைட்டி: 1994 – 1996 குரோஷியா: 1995 ஜயர் (காங்கோ): 1996 – 1997 லைபீரியா: 1997 சூடான்: 1998 ஆப்கானிஸ்தான்: 1998 ஈராக்: 1998 யூகோஸ்லாவியா: 1999 மாசிடோனியா: 2001 ஆப்கானிஸ்தான்: 2001ஈராக்: 2003 ஈராக்: 2003-தற்போது
வரை ஹைட்டி: 2004 சிரியா: 2011-தற்போது
வரை உக்ரைன்: 2014-தற்போது வரைவெனிசுலா: 2026 ஈரான்: 2026
சீன ராணுவமும் அதன்
கட்டமைப்பும்
சீன
மக்கள் விடுதலைப்படை தனது நாட்டு பாதுகாப்பை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்ட ராணுவம் ஆகும்.
அமெரிக்க ராணுவ வரலாறு என்பது ஆக்கிரமிப்புக்காகவே உருவாக்கப்பட்ட ராணுவம் ஆகும்.
இன்றைய சீனாவை சுற்றி 30க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை
அமெரிக்கா அமைத்துள்ளது. அதாவது சீனாவை சுற்றி இருக்கக்கூடிய தீவுகளில் இந்த ராணுவ
தளங்களை அமைத்துள்ளார்கள். இதற்கு தீவு சங்கிலி வலை
அமைப்பு என்று பெயர். குறிப்பாக ஜப்பான் தென்கொரியா குவாம் பிலிப்பைன்ஸ்
சிங்கப்பூர் போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட ராணுவ தளங்கள் சீனாவின் பாதுகாப்பிற்கு
மிகப்பெரும் அச்சுறுத்தல் ஆகும். சீனாவின் கடல் சார் செல்வாக்கை கட்டுப்படுத்த முதல்
தீவு சங்கிலியாக ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள ராணுவம் செயல்படுகிறது. இரண்டாவது தீவு
சங்கிலியாக குவாம், பலாவ் தீவுகள் இருக்கின்றது. இந்த
தளங்கள் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் மற்ற நாடுகளை
கட்டுப்படுத்தவும் சீனாவின் வளர்ச்சியை தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
சீன
ராணுவம் அமெரிக்காவைப் போல் உலகை ஆக்கிரமிப்பதற்காக அல்லாமல் தனது நாட்டைச் சுற்றி
இருக்கக்கூடிய அமெரிக்க படைகளை எதிர்கொள்வதற்கு தேவையான வலுவான வன் பொருட்களை
சுற்றி அதன் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேசத்தின் பாதுகாப்புக்காக தனது இராணுவத்தை முழு சக்தியுடன், அமெரிக்கா உட்பட எந்த சக்தி தாக்கினாலும் அவற்றை எதிர்கொள்வதற்கான நவீன
திறன்களுடன் சீன ராணுவம் தகவமைக்கப்பட்டுள்ளது.
ஈரானை
தாக்குவதற்காக அமெரிக்கா அந்த பிராந்தியங்களில் தளங்களை அமைத்தது, தளவாட அமைப்புகளை
உருவாக்கியது. வெடி மருந்து கிடங்குகள், எரிபொருள் கிடங்குகள், வான்வழி தாக்குதல் போன்ற
திட்டங்களை அமெரிக்கா அமைத்துக் கொண்டது. இதே பிராந்தியத்தில் அரசியல் ரீதியாக
சவுதி அரேபியா, ஜோர்டான், பஹரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு ஈராக்,சிரியா போன்றவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டது.
இதை
தடுக்க வேண்டும் என்றால் இதற்கு சமமான அளவில் பிராந்திய முழுவதும் கட்டமைப்புகளை
உருவாக்க வேண்டும். சீனா தன்
நாட்டு மக்களை பட்டினியில் தள்ளி, உலகத்தை
பதட்டமாக வைத்திருக்கும் ராணுவ போட்டிக்கு எப்பொழுதும் தயாராக இருந்தது இல்லை .சீனாவின்
வெளியுறவு கொள்கை இப்படி உருவாக்கப்பட்டதல்ல.அமெரிக்காவை
போல் சீனாவும் செய்யுமானால் ஒரு மோசமான நாடாகத்தான் இருக்க முடியும்.
அமெரிக்கா
தற்பொழுது ரஷ்யா மீதும் சீனா மீதும் நேரடி போரை நடத்த முடியாது. எனவே தான் ஈரான்
மீது தன்னுடைய நேரடி போரை நடத்திக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக
அமெரிக்கா சீனாவைக் கண்டு மிரண்டு போயிருக்கிறது. அதன் பொருளாதார வளர்ச்சி நிலை கூட ராணுவ
ரீதியிலான சதிகள் என்று முத்திரை குத்த தொடங்கியிருக்கிறது. 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க் போஸ்ட் ஒரு விரிவான செய்தியை வெளியிட்டு
இருக்கிறார்கள். அந்த செய்தியின் தலைப்பு அமெரிக்காவில்
இருக்கக்கூடிய 19 ராணுவ தளங்களுக்கு அருகாமையில் சீனா
சொந்தமாக விவசாய நிலங்களை வாங்கி குவிக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது. இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று
எழுதியுள்ளார்கள். அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து ஹவாய் வரை உள்ள 19 இராணுவ தளங்களை அடையாளப்படுத்தி வரைபடங்களுடன் அந்தப் பத்திரிக்கை செய்து
வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின்
பல ராணுவ தளபதிகள் இது மூலோபாய இடங்களுக்கு அருகாமையில் இருப்பதால் ஆபத்தானது
என்று இப்பொழுது அலறத் தொடங்கி இருக்கிறார்கள். அமெரிக்க ராணுவத் திறன்கள், இயக்கங்கள் மற்றும் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்வதற்காக சீனர்கள்
இந்த விவசாய நிலத்தை பயன்படுத்துகிறார்கள் அல்லது பயன்படுத்துவார்கள் என்று
பிதற்றுகி றார்கள். சீனர்கள் அமெரிக்க சட்டத்துக்கு உட்பட்ட தான் இந்த விவசாய
நிலங்களை வாங்குகிறார்கள். தைவானுக்கு எதிராக அமெரிக்க
ராணுவம் நகர்ந்தால் அவற்றை அறிந்து கொள்ள கூடிய அளவில் சீனாவின் இந்த நிலங்கள்
பயன்படும் என்று தெரிவிக்கிறார்கள். நிலம் வாங்கியவர்கள் எல்லாம் சீன கம்யூனிஸ்ட்
கட்சியின் உறுப்பினர்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
சீனர்கள்
காற்றாலை பண்ணையாக நிலத்தை பயன்படுத்து கின்றனர், உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும்
விவசாயம் போன்றவற்றிற்கு பயன்படுத்துகின்றனர். 2022 ஆம்
ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தரவுகளின் படி
அமெரிக்க விவசாய நிலத்தில் சீன முதலீட்டாளர்கள் வாங்கி இருப்பது 3,49,442 ஏக்கர் மட்டுமே. அமெரிக்காவில் வெளிநாட்டுக்கு சொந்தமான விவசாய
நிலங்களில் சீனர்களின் மொத்த பங்கு ஒரு சதவீதம் மட்டுமே. ஆனால் ஒட்டுமொத்த
அமெரிக்காவையே வாங்கி விட்டதாக அலறுகின்றனர். முப்பதாயிரம் ஒற்றர்கள் உள்ளே
புகுந்து விட்டார்கள், உழவு பலூன்களை பறக்க விடுகிறார்கள்
அதிக பணம் கொடுத்து ராணுவ தளங்களுக்கு அருகாமையில் உள்ள இடங்களை வாங்குகிறார்கள்
என்று சீனாவுக்கு எதிராக பொய் பிரச்சாரத்தை கட்டமைக்கிறார்கள். சீன கம்யூனிஸ்டுகள்
சோவியத்தில் இருந்து வேறுபட்டவர்கள். அவர்கள் உலகப்
பொருளாதார அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இவர்களின்
அரசியல் செல்வாக்கின் காரணமாக சோவியத் ஒன்றியத்தை விட
இன்னும் ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள் என்று சீனாவை இலக்கு வைத்து தாக்குதலை
கொடுத்திருந்தனர்.
எது
எப்படியோ சோவியத் நாட்டின் அடிப்படையில் சீனா இல்லை என்பதையும் சீனாவின் உத்திகள்
உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவற்றை ஒழிக்க நினைக்கும் அமெரிக்காவை
எதிர்த்த புதிய உத்திகள் மூலம் எதிர்கொள்வது என்பதை வெளிப்படுத்துகிறது. நான் மேலே
குறிப்பிட்ட நிலப்பிரச்சனை ஒரு சிறு பகுதி மட்டும்தான். இன்னும் ஏராளமான
செய்திகள் இதற்குள்ளே இருக்கிறது. எனவேதான் அமெரிக்காவின் இலக்கு சீனாவும்
ரஷ்யாவும் என்பதை இந்த யுத்தத்தின் மூலமாக புரிந்து கொள்ள முடியும். சீனா ஹாங்காங்
பகுதியை பிரிட்டனின் ஆக்கிரமிப்பில் இருந்து மீண்டும் தங்கள் நாட்டுடன் இணைத்துக்
கொள்வதற்கு கடைப்பிடித்த அதே உத்தியை சீனா மீண்டும்
கடைப்பிடிக்கும் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும்
எதிர்பார்த்தால் ஏமாந்து போவார்கள் என்பது திட்டவட்டமானது.
ரஷ்யாவும்
சீனாவும் முடிந்தவரை தங்களின் சொந்த திறன்களை மிக வேகமாக விரிவுபடுத்தி
வருகிறார்கள். அமெரிக்கா உலகை எளிய வகையில் கபளீகரம் செய்து விடலாம் என்பதை தடுத்து வருகிறார்கள். இதற்கு உக்கரைன், தைவான்
போன்ற நாடுகளை குறிப்பிட்டாலும் ஈரானின் எதிர் தாக்குதல் சாட்சியமாக
இருக்கிறது.
எனவே
சீனா வேடிக்கை பார்க்கிறது நேரடி யுத்தத்தில் இறங்க வேண்டும் என்பதெல்லாம்
அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாகத்தான் சென்று முடியும் என்ற அம்சத்தை
புரிந்து வைத்திருக்கிறார்கள்.
அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக