ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்தின்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக மூன்று முறை பணியாற்றிய, திருவண்ணாமலை மாவட்டத்தையும்
உள்ளடக்கிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராகவும், வேலூர் மாவட்டத் தலைவராகவும், வாலிபர் சங்கத்தின் மாநில
நிர்வாகி, இளைஞர் முழக்கம் ஆசிரியர் குழு, விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர், மாநில செயலாளர்களில்
ஒருவர், சி ஐ டி யு ஆட்டோ சங்கத்தின் வேலூர் மாவட்ட முதல் செயலாளர்,
கட்டுமான சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் என 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில் மேற்கண்ட பொறுப்புகளில் பணியாற்றி இயக்கம் வளர்த்த
தோழர் எஸ் தயாநிதி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 30.03.26. திங்கள் கிழமை பிற்பகல் 4 மணி அளவில் வேலூரில் நடைபெற்றது.
படத்திறப்பு நிகழ்விற்கு தோழர்.
காத்தவராயன் தலைமையற்றார். மூத்த தோழர். வே
மீனாட்சி சுந்தரம் தோழர் எஸ் தயாநிதி அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்தார். நினைவேந்தல்
பாடல்களை சாரல் இசை குழுவினர் பாடினார்கள். மாநில செயற்குழு உறுப்பினர், தோழர் ரவீந்திரன்,
மூத்த தோழர் B. சுந்தரராஜன், அ. பாக்கியம் எஸ் வாலண்டினா ஆறுமுக நைனார் விவசாய சங்கத்தின் மாநிலச் செயலாளர்கள்
ஒருவர் பி துளசி நாராயணன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ரகுபதி,
முன்னாள் மாவட்ட செயலாளர் காசிநாதன்,எம் பி ராமச்சந்திரன்,
செங்கை மாவட்டத்தின் சார்பில் சங்கர் திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமணன்,
மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்
கதிர் ஆனந்த், திராவிடர் கழகத் தலைவர், மதிமுக வின் செயலாளர் விடுதலை
சிறுத்தை கட்சியின் செயலாளர் உட்பட பலரும்
நினைவேந்தல் உரையை நிகழ்த்தினார்கள். தோழர் தயாநிதி அவர்களின் தங்கை மகள் பிரித்தீயின்
உரை குடும்பத்தில் அவர் எந்த அளவு நேசிக்கப்பட்டார் என்பதை தெரிவித்த பொழுது அனைவரும்
மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாக இரங்கல் ஊர்வலமும் அஞ்சலியும்
செலுத்தப்பட்டது.நினைவேந்தல் உரையில் பல்வேறு நினைவுகளையும் தயாநிதிவுடன் இருந்த தொடர்புகளையும்
அவரின் நற்பண்புகளையும் ஸ்தாபன திறமைகளையும் நினைவு கூர்ந்தார்கள்.
ஊடக வெளிச்சத்தை தேடி ஓடக்கூடியவர்
அல்ல தயாநிதி. அதற்கான திறமை இல்லாதவர் அல்ல. கலை இலக்கியத் துறையில், ஓவியத்தில், பாடல்களில் ஆர்வமுள்ள படைப்பாளிகளில் அவரும் ஒருவர். ஆனால் எதார்த்தமான பதிவுகளில்
மட்டும் கவனம் செலுத்தினாரே தவிர தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கான ஊடகத்திற்குள்
அவர் நுழைந்திடவில்லை. சந்தர்ப்பவாதமற்ற, பிழைப்பு வாதமற்ற வாழ்க்கையை
அவர் நடத்தினார். பொறுப்புகளை ஏற்றுக் கொண்டாரே தவிர எந்த ஒரு பதவிக்கும் அது பொது
சேவை பதவியாக இருந்தாலும் அதற்காக அலைந்தது கிடையாது, முன்மொழிந்து
கொண்டதும் இல்லை. 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில் ஆடம்பர வாழ்க்கையை
அண்டியது இல்லை. அமைப்பை கட்டுவதில் முன்னுரிமை கொடுத்ததினால் அனைத்து தோழர்களாலும்
ஆகர்ஷிக்கப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தையும் உள்ளடக்கிய தற்போது
நான்கு மாவட்டமாக இருக்கக்கூடிய ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின்
முதல் முழு நேர ஊழியராக 1988 ஆம் ஆண்டு பணியினை துவக்கினார். அவருடைய இணையர் சங்கரி அவர்களும் முழு நேர
ஊழியராக பணியாற்றினார் என்பது நினைவு கூறப்பட்டது. ஒரு பணியில் இருந்து ஓய்வு பெற்று
அடுத்த இயக்கப் பணிகளில் வந்து பணியாற்றுவதற்கும், எந்தப் பின்னணியும்
இல்லாமல் முழு நேர ஊழியராக வந்து வாழ்க்கையை எதிர்கொள்வதற்கும் இடையில் மடுவுக்கும்
மலைக்குமான வேறுபாடுகள் இருக்கும் என்பதையும் எவ்வாறு அதை எதிர்கொண்டார் என்பதும் நினைவு கூறப்பட்டது.
1992 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பஸ் கட்டணம்
எதிர்ப்பு போராட்டத்தில் 350 இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
இதில் தோழர் சங்கரி அவர்களும் 15 நாட்கள் 7 பெண்களுடன் சிறையில் இருந்தார்கள்.
வேலூர் மாவட்டத்தில் சிஎம்சி
மருத்துவமனைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து நமது தோழர்கள் சிகிச்சைக்காக வருகிற
பொழுது அவற்றையெல்லாம் எந்தவிதமான தயக்கமும் இன்றி சலிப்புமின்றி அவர்களுக்கு உதவி
செய்தார். பல நாட்கள் உதவி செய்தார் என்பதையும் பலரும் நினைவு கூறினார்கள். தோழர் டி
ரவீந்திரன் பேசுகிற பொழுது விவசாய சங்கத்தின் மாநாடு வேலூரில் நடைபெற்ற பொழுது தனது
இளைய மகள் நோய்வாய்ப்பட்டு 15 நாட்கள் சிஎம்சி மருத்துவமனையில் இருந்த பொழுது தோழர் தயாநிதி அவர்களும் சங்கரி
அவர்களும் 15 நாட்களும் உடன் வந்து கவனித்துக் கொண்டதை உருக்கத்துடன்
வெளிப்படுத்தினார்.
வேலூர் சிறையில் நான் உட்பட 85 தோழர்கள் சுமார் 9 நாட்கள் வரை சிறைப்பட்ட பொழுது அன்றைய மாவட்டச் செயலாளர் நாராயணன் அவர்களும்,
தயாநிதி அவர்களும் வெளியில் இருந்து கவனித்துக் கொண்டார்கள். வேறு எந்த
மாவட்டத்திற்கும் இல்லாத ஒரு வேலை வேலூர் மாவட்டத்திற்கு இருந்தது. சிஎம்சி மருத்துவமனை
வேலைகளும், சிறையில் அடைக்கப்படுபவர்களை கவனிக்க கூடிய வேலைகளும்
அவர்களுக்கு தொடர்ந்து இருந்தது. தயாநிதி செயலாளராக இருந்த காலத்தில் இதை மிகப்பெரும்
பணியாக செய்து வந்தார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்
ரத்ததான கழகம் வலுவாக செயல்பட்ட மாவட்டங்களில் வேலூர் மாவட்டமும் ஒன்றாகும். இதற்கு
தயாநிதி அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. முதன் முதலில் ரத்ததானம் வழங்குவதற்காக
சிஎம்சி மருத்துவமனையை அணுகிய பொழுது அவர்கள் இடது சிந்தனை (left oriented) அமைப்புகளிடமிருந்து
நாங்கள் ரத்தம் தானம் வாங்கிக் கொள்வதில்லை என்று மறுத்துவிட்டார்கள். தொடர்ந்து பல்வேறு
அரசு மருத்துவமனைகளுக்கும் நோயாளிகளுக்கும் ரத்தம் கொடுக்கும் பணியை தயாநிதி போன்றவர்கள்
செய்து வந்ததை அறிந்து வேறு வழியின்றி வாலிபர் சங்கத்திடம் தொலைபேசியில் அழைத்து ரத்தம்
கேட்க வேண்டிய நிலைமையை சிஎம்சி மருத்துவமனைக்கு தோழர் தயாநிதி உருவாக்கினார். அவரும்
92 முறைகள் ரத்த தானம் செய்துள்ளார். 92வது முறைக்கு பிறகு அவருக்கு சர்க்கரை அளவு அதிகமானதால் ரத்த தானம் செய்யவில்லை.
இப்படி எண்ணற்ற பணிகளை நினைவு கூர்ந்தார்கள். நான் ஒரு வரியில் இந்தப் பதிவை முடிக்க
விரும்புகிறேன்.
தோழர் தயாநிதி அவர்கள் தோழமையின்
சூழலை சுயநலன்கள் ஆக்கிரமித்து விடாமல் தோழமையின் உணர்வுகளை மேம்படுத்துவதில் முன்னணியில்
இருந்தார். அவருக்கு எனது கண்ணீர் நிறைந்த அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.
தோழமையுடன்
அ. பாக்கியம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக