Pages

செவ்வாய், ஜூலை 11, 2023

நிமிடங்களில் வீழ்ந்த இட்லரின் இனவெறி

 

தொடர் : 8

அ.பாக்கியம்

லூயிஸ்-செமலிங் மறுபோட்டி ஜூன் 22, 1938 அன்று நடந்தது. ஜோ லூயிஸ் உலக ஹெவி வெயிட் பட்டத்தை வென்ற நாளிலிருந்து ஒரு வருடம் கழித்து  இந்த போட்டி நடைபெற்றது. நியூயார்க் நகரத்தில்  யாங்கி ஸ்டேடியத்தில் போராளிகள் மீண்டும் சந்தித்தனர். அன்றைய காலத்தில் உலகப் புகழ்பெற்ற திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கிளார்க் கேபிள் , டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் , கேரி கூப்பர் , கிரிகோரி பெக் மற்றும் ஜே. எட்கர் ஹூவர் ஆகியோர்  உட்பட  70,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அரங்கத்தில் நிரம்பி வழிந்தனர்.

அமெரிக்காவில் தலைவிரித்தாடிய இனவெறிக்கு எதிராக மட்டும்தான் ஜாக் ஜான்சன்  போராட வேண்டி இருந்தது. குத்துச்சண்டை வளையத்திற்கு வெளியே அரசியல் களத்தில் வெள்ளையரா? கருப்பரா? என்ற கேள்விக்கான மோதல் மட்டுமே இருந்தது. ஆனால் ஜோ லூயிஸ் சந்திக்க வேண்டிய களமோ வேறுவிதமாக இருந்தது. முதலாவதாக வெள்ளை இனவெறிக்கு எதிராக கருப்பின மக்களின் சமத்துவத்தை நிலைநாட்ட சண்டை போட்டாக வேண்டிய நிலை இருந்தது. இரண்டாவதாக ஹிட்லரின் பிரதிநிதியாக குத்துச்சண்டை வளையத்திற்குள் வந்திருக்கக்கூடிய மேக்ஸ் செமலிங்கை வீழ்த்துவதன்மூலம் ஹிட்லரின் ஆரிய இன மேலாண்மை பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என்ற நிலைமை இருந்தது. அந்த காலகட்டத்தில்  அமெரிக்காவிற்கும், ஜெர்மனிக்குமான மோதல் தீவிரமாக இருந்தது. பொருளாதார மந்த நிலை வேறு அமெரிக்காவை ஆட்டிப்படைத்தது. இந்த தருணத்தில் ஹிட்லர் படையெடுப்பின் முலம் ஆஸ்திரியாவின் ஒரு பகுதியை தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டார். எனவே அமெரிக்காவின் அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், ஜோ லூயிசை அழைத்து, ‘‘ஜெர்மனியை வென்றிட உங்களைப் போன்ற ஒரு வீரர் அமெரிக்காவிற்கு தேவைப்படுகிறார்’’ (Joe, we need muscles like yours to beat Germany) என்று கூறியுள்ளார். இதை  நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டது.

எனவே அப்போது, இனவெறியால் கருப்பர்களை ஒதுக்கிக் கொண்டிருக்கும் வெள்ளை அமெரிக்காவிற்காகவும் குத்துச்சண்டையில் ஜோ லூயிஸ் வெற்றி பெற வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த முறை ஜோ லூயிஸ், கோல்ப் மைதானத்திற்கு செல்லாமல் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார். இந்த முறை நான் மேக்ஸ் செமலிங்கை வலுவான முறையில் எதிர்கொள்ள வேண்டும். மீண்டும் அவரை தோற்கடிக்க வேண்டும் என்ற எனது சொந்த காரணங்கள் இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காக அமெரிக்க நாடே என்னை சார்ந்திருக்கிறது என்ற நோக்கத்திற்காகவும் அவரை வலுவாக சந்திக்க வேண்டும் என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். இன்னும் ஒரு படி மேலே சென்று "ஒருவிதத்தில், நான் பயப்படுகிறேன். எப்படி என்றால், நான் மேக்ஸ் செமலிங்கை  கொன்று விடுவேனோ என்று பயப்படுகிறேன்" என்று கூறினார்.  வெற்றிக்கான கட்டாயத்தில்  முஷ்டிகளை உயர்த்த ஆரம்பித்தார் ஜோ லூயிஸ்.

இந்த குத்துச் சண்டைப் போட்டியை  பயன்படுத்தி ஹிட்லரும்  அவரது மந்திரி கோயபல்சும்  இனவாத பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தினர். மேக்ஸ் செமலிங் நியூயார்க் நகரத்திற்கு வந்த பொழுது அவருடன் நாஜி கட்சியின் விளம்பரதாரரும் உடன் வந்தார். ‘‘ஒரு கருப்பின மனிதனால் ஆரிய இன மேக்ஸ் செமலிங்கை தோற்கடிக்க முடியாது; மேக்ஸ் செமலிங் வெற்றி பெற்றவுடன்  கிடைக்கும் பரிசு தொகையை கொண்டு ஜெர்மனியின் யுத்த டாங்குகளை உருவாக்குவோம்’’ என்று நாஜி கட்சியின் விளம்பரதாரர், பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்தார்.

இந்த குத்துச்சண்டை போட்டியை அமெரிக்காவில் 70 மில்லியன் பேர், உலகம் முழுவதும் 100 மில்லியன் பேர் வானொலியில் கேட்டனர். ஹிட்லர் அதிகாலை 3.00 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவை தளர்த்தினார். இதனால் உணவு விடுதிகள், மதுபான விடுதிகள், தேநீர் விடுதிகள் திறக்கப்பட்டு அவற்றில் உள்ள வானொலிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் குத்துச்சண்டை போட்டியின் வர்ணனையை கேட்டனர். ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ், போர்ச்சுகீஷ் ஆகிய மொழிகளில் வானொலி வர்ணனைகள் அரங்கேறின. பொது இடங்களில், அமெரிக்கா முழுவதும் இந்த குத்துச்சண்டை போட்டியின் வர்ணனையை வானொலியில் கேட்பதற்கு அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. இவை அனைத்தும் வெகுஜன கூட்டங்களாக மாறியது. நடப்பது ஒரு குத்துச்சண்டை போட்டியா அல்லது மாபெரும் யுத்தமா என்ற அளவிற்கு அனைவரிடமும் பரபரப்பு ஏற்பட்டது.

நிமிடங்களில் வீழ்ந்தது இரட்டை இனவெறி:

இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட குத்துச்சண்டை இரண்டு நிமிடங்கள் நான்கு நொடிகளில் முடிந்தது. ஜோ லூயிஸ் தாக்குதலை ஜெர்மனிய வீரர் மேக்ஸ் செமலிங்கால் எதிர்கொள்ள முடியவில்லை. ஜோ லூயிஸ் 41 முறை குத்தியதில் 31 குத்துக்கள் மேக்ஸ் செமலிங் மீது வலுவாக விழுந்தது. அவரால் பதிலுக்கு  இரண்டு முறை மட்டுமே குத்துவதற்கு முடிந்தது. முதல் சுற்றில் 2 நிமிட 4 நொடிகளில் ஜோ லூயிஸ் ஆட்டத்தை முடித்தார். தோல்வி உறுதி என்று தெரிந்து கொண்ட ஹிட்லர், ஜெர்மனி  முழுவதும் வானொலி இணைப்பை துண்டித்தார். ஊரடங்கை மீண்டும் கொண்டு வந்தார். போட்டியில் தோற்ற மேக்ஸ் செமலிங் பத்து நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்தப் போட்டியில் இனம் மற்றும் அரசியல் பின்னணி இருந்ததால் அதன் வெளிப்பாடுகளும் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஜோ லூயிஸின் வெற்றியை பொதுவாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டாலும் பல எதிர்வினைகளும் இருந்தன. குறிப்பாக அமெரிக்க நாட்டு கருப்பினத்தவருக்கு இந்த வெற்றி மிகப் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் கருப்பர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் எப்படி இருந்தது என்பதற்கு ஜோ லூயிஸ் தோல்வி அடைந்தபோதும், வெற்றி பெற்றபோதும் கருப்பினமக்களின் எதிர்வினை எப்படி இருந்தது என்று புகழ்பெற்ற கவிஞர் மாயா ஏஞ்சலோ (Maya Angelou) தான் அறிந்தவற்றை குறிப்பிட்டிருக்கிறார்.

1936 ல் ஜோ லூயிஸ் தோல்வியின் தாக்கம்

"என் இனம் புலம்புகிறது. எங்கள் மக்களை வீழ்த்தினர். இது மற்றொரு கொலை. மற்றொரு கருப்பின மனிதன் ஒரு மரத்தில் தொங்கி  கொண்டிருக்கிறான். நாங்கள் அடிமைத்தனத்திலிருந்து மீள உதவி கிடைக்காத நிலைக்கு திரும்பியுள்ளோம். நாங்கள் கீழ்த்தரமான மனிதர்கள் என்ற பொய் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் உண்மையாக்கி விடுவார்கள்…   என்று இந்த தோல்வியை வானொலி முலம் கேட்ட பெண்மணி தனது இனத்தின் மீது அடுத்து நடக்கும் தாக்குதலை பற்றி புலம்புகிறார்.

            ஜோ லூயிஸ் 1938ல் வெற்றி பெற்ற பொழுது உணர்ச்சிகள் எல்லை இல்லாமல் இருந்தது "ஒரு கருப்பு பையன் உலக சாம்பியன். அவர் உலகில் வலிமையான மனிதர். மக்கள் கோகோ கோலாவை குவித்து ருசித்தனர். கிறிஸ்துமஸ் காலத்தில் கொடுக்கப்படும் மிட்டாய்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்" என்று கூறியிருக்கிறார்.

            கருப்பின மக்களின் எழுச்சியால் அமெரிக்காவே விழாக்கோலம் பூண்டது. ஹிட்லருக்கு எதிரான வெள்ளைஇன மக்களும்  இதில் இணைந்து கொண்டனர். ஜோ லூயிசுக்கு நேர்மறையான பல அம்சங்கள் இந்த வெற்றியின் மூலம் கிடைத்த போதும், எதிர்மறையான முறையில் இனவெறி தாக்குதல்களை பலரும் ஜோ லூயிஸ் மீது நடத்திக் கொண்டுதான் இருந்தனர். புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஒருவர் வாஷிங்டன் போஸ்டில்  எழுதினார் "ஜோ லூயிஸ் சோம்பேறி. கோழிகளை சாப்பிடும் பழுப்பு நிற பையன். பழுப்பு நிற வெடிகுண்டு என்ற தனது பட்டப் பெயருக்கு ஏற்ற வகையில் தாக்குதலை நடத்தினார் என்று அவர் குறிப்பிட்டார். யுனைடெட் பிரசின் பத்திரிக்கை யாளர் ஒருவர்,‘‘ஜோ லூயிஸ் ஒரு காட்டு மனிதர். காட்டுமிராண் டிகளை போலவே அவர் முற்றிலும் பழமையானவர். அவர் வெறுக்கும் விஷயத்தை அழிக்க தயாராக இருக்கிறார்’’ என்று மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்தார்.

எது எப்படி இருந்தாலும் ஜோ லூயிஸ் அமெரிக்க கருப்பு இன மக்களின் எழுச்சி நாயகனாக வெல்ல முடியாத வீரனாக தங்களின் பாதுகாவலனாக கருதப்பட்டார். அமெரிக்காவில் நிறவெறியை எதிர்த்து போராடிய மனித உரிமை போராளி மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தனது புகழ்பெற்ற புத்தகமான நாம் ஏன் காத்திருக்க முடியாது? (why we can't wait?) என்ற புத்தகத்தில் ஜோ லூயிசின் தாக்கம் எந்த அளவு இருந்தது என்பதை ஒரு உண்மை சம்பவத்தை முன்வைத்து விவரிக்கிறார்.

அமெரிக்காவின் தென்மாநிலங்களில் மரண தண்டனை  கொடுக்கிற முறையில் அரசு மாற்றத்தை ஏற்படுத்தியது. தூக்கிலிடுவதற்கு பதிலாக விஷவாயுவை செலுத்தி சாகடிப்பது என்ற முறையை அறிமுகப்படுத்தியது. இதற்கான அறையை உருவாக்கி அந்த அறைக்குள் குறிப்பிட்ட இடத்தில் விஷவாயுவை செலுத்து வதற்கான கருவிகள் பொருத்தப்பட்டன. விஷவாயு செலுத்தி மரணம் ஏற்படுகிற பொழுது அந்த குற்றவாளியின் மனோநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு சீல் செய்யப்பட்ட மைக்ரோபோனை உள்ளே பொருத்திவிட்டு வெளியில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளக்கூடிய முறையில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டது. இந்தப் புதிய முறையிலான மரண தண்டனைக்கு முதல் பலியானவன் ஒரு நீக்ரோ இளைஞன். அவனின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பொழுது அவனுடைய குரல்கள் என்ன எதிரொலித்தது தெரியுமா? இதோ அந்த வார்த்தைகள்....

ஜோ லூயிஸ் என்னை காப்பாற்றுங்கள்!

ஜோ லூயிஸ் என்னை காப்பாற்றுங்கள்!!

ஜோ லூயிஸ் என்னை காப்பாற்றுங்கள்!!!

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கிற சூழலில் ஜோ லூயிஸ் அமெரிக்காவில் கட்டாய ராணுவ பயிற்சியில் சேர்க்கப்பட்ட பொழுது அமெரிக்க ராணுவம் இனவெறியால் பீடிக்கப்பட்டு கிடக்கிறது என்று வேதனையை அடைந்தார். அதைவிட இனவெறிபிடித்த இட்லரை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தார். எனவே அமெரிக்க நிறவெறியை சகித்துக்கொண்டு பணியாற்றினார்.

அமெரிக்க நாட்டில் கருப்பர்களின் வாழ்க்கை அடிமை முறை வாழ்க்கையாக இருந்தது. சமத்துவத்துக்கான போராட்டத்தில் அந்த நாட்டின் முற்போக்காளர்கள், கம்யூனிஸ்டுகள், ஜனநாயக வாதிகள் என பலரும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கின்றனர். ஆனால் குத்துச்சண்டை வீரர்களாக மட்டுமே அறியப்பட்டவர்களின் மறுபக்கத்தில் அவர்கள், தங்கள் கருப்பின மக்களின் விடுதலைக்காக செய்த எண்ணற்ற செயல்கள், சந்தித்த இன்னல்கள் எண்ணில் அடங்காதது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஆப்பிரிக்க நாட்டின் எத்தோப்பியாவில் உள்ள சால் காடுகளில் வாழ்ந்த கருப்பின மக்களின் வாரிசுகள்தான் இன்றைய ஹோமோசேபியன் என்ற மனிதஇனம் என்பதை மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏ மூலம் விஞ்ஞானம் நிரூபித்த பிறகும் இனத்தால், நிறத்தால், மதத்தால், சாதியால் மக்களை பிளவுபடுத்துவது வர்க்கத் தேவையில் இருந்துதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...