Pages

வியாழன், ஏப்ரல் 30, 2026

70 உய்குர் ஒற்றுமை பேணுதல்

 

அ.பாக்கியம்

திபெத் உலகத்தின் கூரை என்றால் ஜின்ஜியாங் மாகாணம் கனிம வளங்களின் களமாக பரந்து விரிந்து கிடக்கிறது. சீனாவின் மொத்த எண்ணெய் இருப்பில் 30 சதவீதமும், இயற்கை எரிவாயு இருப்பில் 34 சதவீதத்தையும், மிகப்பெரிய அளவு நிலக்கரி படிமங்களையும் இந்த பகுதி கொண்டுள்ளது. சீனா முழுவதும் உள்ள நிலக்கரி இருப்பில் சுமார் 40% ஜின்ஜியாங்கில் உள்ளது. இவை தவிர,வெயில் அதிகமாக இருப்பதால் புதுப்பிக்கத்தக்க சூரிய சக்திகளும், காற்றாலை சக்திகளும் உற்பத்தி செய்கிற இடம். எனவேதான் ஜின்ஜியாங் மாகாணத்தை சீனாவின் “எரிசக்திப் பெட்டகம்” (Energy Treasury) என்று அழைக்கிறார்கள்.

சீனாவில் உற்பத்தியாகும் பருத்தியில் 85 சதவீதத்தை உற்பத்தி செய்யும் மாகாணமாகும் இதுவே. எனவே தான் ஜின்ஜியாங் சீனாவின் பருத்தி கூடாரம் (Cotton Basket) என்று அழைக்கப்படுகிறது. அரிய வகை கனிமங்களான பெரிலியம் (beryllium), மைக்கா (mica), லித்தியம், கோபால்ட், நிக்கல், தாமிரம் (copper), இரும்பு (iron), தங்கம் மற்றும் வெள்ளி போன்ற தாதுக்கள் இங்கு ஏராளமாக கொட்டிக் கிடக்கின்ற பூமியாகும். மாகாணத்தின் இருப்புடன் இணைந்து இத்தைகைய இயற்கை வளங்களும் உள்ளதால் இது புவிசார் அரசியலின் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

முதலாவதாக சீனாவில் இருக்கக்கூடிய மாகாணங்களில் மிகப்பெரிய மாகாணம் இது. சீன நிலப்பரப்பில் ஆறில் ஒரு பகுதியை இந்த மாகாணம் தன்னகத்தே கொண்டுள்ளது. சுமார் 1.6649 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளது.

இரண்டாவதாக சீனாவின் மொத்த எல்லையில், சுமார் 5700 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம் அண்டை நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய மாநிலமாக இது இருக்கிறது அதாவது சீனாவின் மொத்த வெளிநாட்டு எல்லைகளில் கால்பங்கு எல்லையை இந்த மாநிலம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறது.

மூன்றாவதாக, மங்கோலியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு நாடுகளுடன் இந்த மாநிலம் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது

 

நான்காவது இந்த மாகாணம் யூரேசியா கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. மத்தியஆசியா என்று அழைக்கப்படக்கூடிய கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகள் மத்திய ஆசியா என்று அழைக்கப்படுகிறது. இந்த நாடுகள் ஆசியாவின் மையப் பகுதியில் அமைந்துள்ளன. மேற்கில் காஸ்பியன் கடலுக்கும் கிழக்கில் சீனாவிற்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த நாடுகளுக்கு எல்லையிலும் சீனாவின் எல்லைப் பகுதியில் இந்த மாகாணம் அமைந்திருப்பத புவிசார் அரசியலின் களமாக மாறுகிறது.

ஐந்தாவதாக, இந்த மாகாணம் புகழ்பெற்ற பட்டுப்பாதை வழியாக பண்டைய சீனாவை உலகின் பிறபகுதிகளுடன் இணைக்கிறது. பல்வேறு கலாச்சாரங்கள் கூடுகின்ற இடங்களாகவும் இந்த மாகாணம் வரலாற்று நெடுகிலும் இருந்து வந்துள்ளது. இந்தியாவிலிருந்து பௌத்த மதம் பட்டுப்பாதை வழியாக, அதாவது இந்த மாகாணத்தின் வழியாகத்தான் சீனாவிற்கு முதல் முதலாக சென்றது.

உய்குர் என்றால் என்ன? அவர்கள் யார்?

சீன வரலாற்றில் ஆரம்பகால வம்சங்களாக சியா, சாங், சோவ் இனம் முன்று இன மக்கள் இருந்தனர். இவர்கள் மஞ்சல் நதியின் மத்தியிலும், கீழ் பகுதிகளிலும் பரந்த சமவெளிகளில் தோன்றினார்கள். அவர்கள் அருகாமையில் இருந்த பழங்குடியினர்களுடன் இணைந்து பெரிய இனக்குழுக்களாக மாறினர். இதன் தொடர்ச்சியாக பிற்காலத்தில் ஹான் தேசிய இனம் உருவானது.

இதேபோன்று உய்குர் இன மக்கள் மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவின் பொதுவான பகுதியிலிருந்து தோன்றியவர்கள். நீண்டகால இடப்பெயர்வுகளாலும், இனக்குழுக்கள் இடையே உருவான ஒருங்கிணைப்பான செயல்முறைகளாலும், உருவாகியதுதான் உய்குர் இனக்குழு. உய்குர் இன மக்களின் முக்கிய மூதாதையர்கள் சூய் மற்றும் டாங் வம்சங்களின் ஆட்சியின்போது மங்கோலிய பீடபூமியில் வாழ்ந்த ஓய்கூர் மக்கள் ஆவார்கள்.

இந்த மக்கள் குழுவை குறிக்க வரலாற்றுப் பதிவுகளில் பல்வேறு வேறுபட்ட பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. வரலாற்று ரீதியாக, துருக்கியர்களின் அடக்குமுறை மற்றும் அடிமைத்தனத்தை எதிர்க்க, ஓய்கூர் மக்கள் டைல் பழங்குடியினருடன் இணைந்து ஓய்கூர் பழங்குடி கூட்டணியை உருவாக்கினர். 788 ஆம் ஆண்டில், அப்போதைய ஓய்கூர் பகுதியில் அதிகாரத்தில் இருந்தவர் சீனாவின் டாங் பேரரசருக்கு கடிதம் எழுதி, அவர்களின் பெயரை “உய்குர்” என்று மாற்றுமாறு கோரினார். ஆனால் அவை கண்டுகொள்ளப்படவில்லை.

840 ஆம் ஆண்டில் ஒய்கூர் பழங்குடி கூட்டணி அதிகாரத்தை இழந்த பிறகு, சில ஒய்கூர இனக்குழுக்கள் ஹான் மக்களுடன் வாழ்வதற்காக உள்நாட்டிற்கு குடிபெயர்ந்தார்கள்.இவர்களில் ஒரு பகுதியினர் டர்பன் படுகைக்கும், இன்றைய ஜிம்சார் பகுதிக்கும் குடிபெயர்ந்தது, அங்கு அவர்கள் கௌச்சாங் என்ற இடத்தில் ஒய்கூர் இராஜ்சியத்தை நிறுவினர். மற்றொன்று ஹெக்ஸி காரிடாருக்கு குடிபெயர்ந்தது, அங்கு அவர்கள் உள்ளூர் இனக்குழுக்களுடன் ஒன்றிணைந்து பின்னர் யுகூர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

மூன்றாவது துணைக் குழு பாமிரின் மேற்கே நகர்ந்து, மத்திய ஆசியாவிலிருந்து காஷ்கர் வரையிலான பகுதிகளில் சிதறிக்கிடந்த கார்லுக் மற்றும் யக்மா மக்களுடன் இணைந்ததும், பிற இனக்குழுக்களுடனும ஒன்றிணைந்து நவீன உய்குர் இனக்குழுவின் முக்கிய அமைப்பை உருவாக்கினர்.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளியான இந்தியா மற்றும் கிழக்கு,தெற்கு ஆசியாவின் என்சைக்ளோபீடியா என்ற கலைக்களஞ்சியம் உய்குர் மக்களின் முன்னோர்கள் சீன டார்டோரியன், ஜின்ஜியாங் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. சீன மக்கள் குடியரசு தெரிவித்திருப்பது போல் இந்தப் பிரதேசம் பண்டைக்காலம் முதல் சீனாவின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் பல உள்ளன.

யுவான் மற்றும் மிங் வம்சங்களில், ஜின்ஜியாங்கில் உள்ள பல்வேறு இனக்குழுக்கள் மேலும் இணைந்தன. மங்கோலியர்கள், குறிப்பாக சகதை கானேட்டைச் (ஆட்சிப்பகுதி) சேர்ந்தவர்கள், உய்குர்களுடன் இணைந்தனர். உய்குர் குழுவில் புதிய இரத்தத்தைச் சேர்த்தனர். 1934 ஆம் ஆண்டில், ஜின்ஜியாங் ஒரு அரசாங்க உத்தரவை பிறப்பித்தது, உய்குர் என்பது உய்குர்களுக்கான நிலையான சீனப் பெயராக இருக்கும் என்று விதித்தது, முதல் முறையாக “உய்குர்” என்பதன் துல்லியமான அர்த்தத்தை வெளிப்படுத்தியது. அதுவரை பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டவர்கள் உய்குர் என்பதை சட்டப்படி மாற்றினார்கள். உய்குர் என்றால் மக்களிடையே ஒற்றுமையைப் பேணுதல் என்று பொருள்படும்.

 

 

உய்குர்கள் துருக்கியர்களா?

துருக்கியர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த ஒய்கூர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதினால் அந்த ஆட்சிக்கு எதிராக கலகம் செய்து வந்தனர். சீனாவின் டாங் வம்ச ஆட்சியின் ஆதரவுடன் இந்த கிளர்ச்சி நடத்தப்பட்டது. அதன் பிறகு துருக்கிய மொழி பேசும் பழங்குடியினர் மேற்கு நோக்கி குடிப்பெயர்ந்தனர். இந்தப் பழங்குடியினரில் ஒரு பிரிவினர் ஆசியா மைனரில் குடியேறி அங்கிருந்த உள்ளூர் இனக்குழுக்களுடன் இணைந்தார்கள். இவர்கள் துருக்கிய மொழி பேசினார்களே தவிர துருக்கியர்களின் வழித்தோன்றல்கள் அல்ல. சில பான்-துருக்கிய ஆதரவாளர்கள் துருக்கிய மொழி குடும்பத்தின் அனைத்து மக்களையும் துருக்கிர்கள் என்று வர்ணித்துள்ளார்கள்.

ஒரு மொழி குடும்பம் என்பதற்கும், ஒரு இனக்குழு என்பதற்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள். சீனாவில் துருக்கி மொழிகளை பேசும் இனக்குழுகளில் உய்குர்கள் மட்டுமல்ல கசாக்ஸ், கிர்கிஸ், உஸ்பெக்ஸ், டாடர்கள், யுகூர்கள் மற்றும் சாலர்கள் என்று பல இனக்குழுக்கள் உள்ளனர். ஒவ்வொரு இனக்குழுவும் அதன் சொந்த வரலாற்றையும், தனித்துவமான கலாச்சாரத்தையும் கொண்டுள்ளது. இந்த மக்களை துருக்கியர்கள் என்று குறிப்பிட முடியாது. உய்குர்கள் பற்றி பொது ஆண்டு 4 மற்றும் 5 நூற்றாண்டுகளில் விரிவான பதிவுகள் செய்யப்பட்டுள்ளது.

ஜின்ஜியாங் அல்லது உய்குர் பண்பாடு சீன பண்பாட்டின் ஒரு பகுதியாகவே வளர்ச்சி அடைந்தது. பண்டைய காலங்களில் இருந்து சீனாவின் புவியியல் மாறுபாடுகளாலும், வெவ்வேறு பிராந்தியங்களின் சமநிலையற்ற வளர்ச்சியின் காரணமாகவும், கலாச்சார தன்மையில் வேறுபட்ட அம்சங்கள் உருவாகியது. சீன கலாச்சாரம் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் பன்முகத்தன்மையுடன் உருவானது. இனப் பன்முகத்தன்மையும், கலாச்சார பன்முகத்தன்மையும் சீன தேசத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். சீனாவின் தேசிய வளர்ச்சிக்கு இது ஒரு உந்து சக்தியாக அமைந்தது.

ஜின்ஜியாங் கலாச்சாரமும் சீனக்கலாச்சார உருவாக்கமும்

சீனாவின் 5000 ஆண்டுகால வரலாற்றில் அனைத்து இனக்குழுக்களும் ஒரு நீண்ட வரலாற்றையும் ஒரு அற்புதமான கலாச்சாரத்தையும் உருவாக்கியுள்ளன. வசந்தகாலம் மற்றும் இலையுதிர் காலம் தொடங்கி அதாவது சின் வம்சங்கள் தொடங்கி ஹான் அம்சங்களின் காலம் வரையும் (பொ. ஆ. மு. 770-476) மற்றும் போரிடும் நாடுகளின் (பொ.ஆ.மு.475-221)) காலங்களின் ஆரம்ப கட்டத்தில் பெருமபாலான இனக்குழுக்கள் சொந்தமான பிராந்திய கலாச்சாரங்கள் உருவாகி இருந்தது. இந்த கலாச்சாரங்கள் அனைத்து அம்சங்களையும் உள்ளடங்கி இருந்தது.

இதைத்தொடர்ந்து வந்த அனைத்து வம்சங்களின் ஆட்சியிலும் சீனாவின் பரந்த பிரதேசம் முழுவதும் அனைத்து இனக்குழுக்களின் கலாச்சாரங்களும், இடப்பெயர்வுளாலும், ஒன்றுகூடல்களாலும், போர்கள் மூலமும், திருமணம் மற்றும் வர்த்தக மூலம் நிலையான பரிமாற்றத்திலும் ஒருங்கிணைப்பிலும் ஈடுபட்டன. இதன் வழியாக ஒட்டுமொத்த சீன கலாச்சாரம் உருப்பெற்றது. ஜின்ஜியாங் மாகாணமும் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கலாச்சார பரிமாற்றத்தின், தகவல் தொடர்பின் முக்கிய தளமாக இருந்தது வந்துள்ளது.ஆரம்பத்தில் இருந்து ஜிஞ்சியாங்கில் உள்ள இன கலாச்சாரங்கள் சீன கலாச்சாரத்தின் கூறுகளை பிரதிபலித்தது.

யுவான் வம்ச ஆட்சி(1250-1368) காலத்தில் ஏராளமான உய்குர்களும், பிற இன குழுக்களைச் சேர்ந்த மக்களும், சீனாவில் உள்நாட்டுப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் அங்கு குடியேறிய பிறகு, சீன மொழியை கற்றுக்கொண்டு அவற்றைப் பயன்படுத்தினர். இவர்களில் பலபேர் சீனப் பேரரசின் தேர்வுகளை எழுதி பல்வேறு நிலையில் அரசு அதிகாரிகளாக உயர்ந்தனர். இந்த பொறுப்பில் இருந்தவர்கள் ஜின்ஜியாங்கில் இன கலாச்சாரங்களின் வளர்ச்சியை தீவிரமாக ஊக்குவித்தனர். அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள், வேளாண் வல்லுநர்கள், மொழிபெயர்ப் பாளர்கள் மற்றும் பிற வகை நிபுணர்கள் தோன்றினார்கள்.

மிங்(1368-1644)மற்றும் கிங்(1644-1911) வம்சங்களின் ஆட்சி காலத்தில் இஸ்லாமிய கலாச்சாரத்தின் செல்வாக்கின்கீழ் ஜின்ஜியாங்கில் உள்ள இன கலாச்சாரங்கள் வளர்ச்சி அடைந்தன. பிராந்தியத்திற்கு வெளியே உள்ள கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைந்தும், மோதலில் ஈடுபட்டும் வந்தது. நவீன சீனாவில் 1911 ஆம் ஆண்டு புரட்சி, 1917 ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி, 1919 சீனாவில் மே 4 இயக்கம், 1949 புதிய ஜனநாயக புரட்சி ஆகியவற்றின் செல்வாக்கின் கீழ் ஜின்ஜாங்கில் இருந்த இன கலாச்சாரங்கள் நவீனமயமாக தொடங்கின.

இஸ்லாமிய கலாச்சார வருகையும் இணைதலும்

இஸ்லாமிய கலாச்சாரம் ஜிஞ்சியாங்கில் பரவுவதற்கு முன்பு உய்குர் கலாச்சாரம் உட்பட இப்பகுதியில் பல்வேறு இனங்களின் கலாச்சாரம் செழித்து இருந்தது. பொது ஆண்டு 9 மற்றும் 10 தாம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில்தான் இஸ்லாம் மதம் இப்பகுதியில் பரவியது. இக்காலகட்டத்தில் தான் அரபு நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருந்த ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்லாமிய கலாச்சாரம் ஜின்ஜியாங்கில் உள்ள இன கலாச்சாரங்கன் மீது செல்வாக்கு செலுத்த தொடங்கியது. சீனாவில் இருந்த உய்குர் கலாச்சாரம் உட்பட இன கலாச்சாரங்கள் இஸ்லாமிய கலாச்சாரத்தை ஒருபுறம் எதிர்த்தும், அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் அவற்றை ஒருங்கிணைத்து சீன எதார்த்தங்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்தன. எதிர்த்தல் அல்லது உள்வாங்கள் என்ற முறையின் காரணமாக சீன அம்சங்களுடன் வேரூன்றி இருந்த ஜின்ஜியாங் கலாச்சாரத்தை மாற்ற முடியவில்லை அல்லது சீன நாகரிகத்திற்குள் உள்ளூர் கலாச்சாரங்களில் ஓட்டத்தை தடுக்கவில்லை.அவை சீனக்கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அவற்றை தழுவ வேண்டிய சூழல் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு ஏற்பட்டது.

ஜின்ஜியாங்கில் உள்ள இன கலாச்சாரங்கள் செழித்து வளர வேண்டும் என்றால் அவை காலத்திற்கு ஏற்ப வேகமாக செல்ல வேண்டும். சிறந்த மற்றும் உள்ளடக்கங்களை கொண்டதாக இருக்க வேண்டும். சீனாவில் உள்ள பிற இன கலாச்சாரங்களுடன் பரிமாற்றம் செய்து கொள்வதும் ஒருங்கிணைப்பில் ஈடுபடுவதும் தேவையா இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பிற கலாச்சார அம்சங்களை கற்றுக் கொள்ள வேண்டும். சீனாவில் உள்ள அனைத்து இனக்குழுக்களும் ஒரு பகிரப்பட்ட சீன கலாச்சாரத்தை வளர்ப்பதில் தங்கள் பங்கை செலுத்த வேண்டும் என்ற முறையில் சீன அரசு அணுகி வருகிறது.

ஜின்ஜியாங்கில் இப்போதும் 47 இனக்குழுக்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை உய்குர், ஹான், கசாக், ஹுய், மங்கோலியன், கிர்கிஸ், சிபே, தாஜிக், உஸ்பெக், மஞ்சு, டாவர், டாடர் மற்றும் ரஷ்யன் ஆகியவைகளாகும். தற்போது சீனாவில் உள்ள ஐந்து சிறுபான்மை தன்னாட்சி பிரதேசங்களில் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி மாகாணம் மிக முக்கியமானதாக திகழ்கிறது.

அ.பாக்கியம்

வியாழன், ஏப்ரல் 23, 2026

69 இனச் சிறுபான்மை மொழியும் சீன மொழியும்

 



அ.பாக்கியம்

மொழி என்பது பெரும்பாலும் ஒரு இனத்தின் நல்ல குறிகாட்டியாகும். காரணம் ஒவ்வொரு இனக் குழுவும் அதன் சொந்த மொழியை கொண்டிருக்கும். மொழி என்பது ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடுகள் ஆகியவற்றோடு பிரிக்க முடியாமல் இணைந்து இருக்கக்கூடியது. மொழி அடிமைத்தனம் எண்ணங்களின் அடிமைத்தனத்தில் கொண்டு போய் விட்டு விடும். இலக்கிய மொழி செத்துவிட்டால் எந்த ஒரு கருத்தையும் அந்த மொழியில் திட்டவட்டமாக தெரிவிக்க முடியாது. எனவே ஒவ்வொரு இனத்தின் மொழியும் அவற்றின் உணர்வுகளோடு கலந்து இருக்கக்கூடிய ஒன்றாக மாறிவிடுகிறது.

சீனா ஒரு பரந்த மொழிப்பன்முகத்தன்மை கொண்டதாகவும், பல இனங்களைக் கொண்டதாகவும் இருக்கின்ற பல்லின நாடு என்று அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில் சீனாவின் இனச் சிறுபான்மை மொழிகள் உலகின் மொழியியல் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு மகத்தான பகுதியாகவும் இருந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு உலகம் முழுவதும் பல்லின நாடுகளாக இருக்கக்கூடியவற்றில் மொழிக் கொள்கை பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாகவும், மாறிவரும் சமூக அரசியல் சூழலில் எளிதில் பாதிக்கக் கூடியதாகவும் உள்ளது. சீனாவின் மொழிக் கொள்கைகளும் அரசியல் மாற்றங்களின் அலைகளுக்கு ஆளாகித்தான் இருந்தது.

மொழிச் சூழலும் மொழிப்பயன்பாட்டுச் சூழலும்.

1949ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு இனச் சிறுபான்மை மக்களுக்கான மொழிக் கொள்கையும், பெரும்பான்மை சீன மக்கள் பேசக்கூடிய சீன மொழியைப் பற்றிய கொள்கைகளும் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. சோவியத் நாட்டின் அணுகு முறையிலிருந்து சற்று வேறுபட்டதாக இருந்தது. மொழிச் சூழல் என்பது சமூக மொழியியல் இலக்கியத்தில் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய சொல்லாகும். சீனாவில் மொழிப் பயன்பாட்டுச் சூழல் என்ற சொற்றொடரை பொதுவாக பயன்படுத்துகின்றனர். மொழி பயன்பாட்டுச் சூழல் என்பது ஒரு நாடு, ஒரு புவியியல் பகுதி, ஒரு இனக்குழு அல்லது ஒரு அமைப்பு ஆகியவற்றில் குறிப்பாக கவனம் செலுத்துவதை மட்டும் குறிப்பிடக் கூடியதாகும். சீனாவில் இந்த மொழிப் பயன்பாட்டுச் சூழல் என்ற முறைகளை தங்களது ஆய்வு முடிவுகள் மூலமாக பின்பற்றி வருகிறார்கள்.

மொழி பன்முகத்தன்மையின் தாயகம்

சீனா 140 கோடி மக்கள் தொகைக்கு மேல் இருக்கக்கூடிய ஒரு நாடு. சீனாவிற்கு வெளியே உள்ள பெரும்பாலான மக்கள், சீனாவில் ஒரே மொழிதான் இருக்கிறது என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மாண்டரின் மொழியை மட்டும் பேசுகிறார்கள் என்ற கருத்து நிலவுகின்றது. ஆனால் சீனா வியக்கத்தக்க மொழி பன்முகத் தன்மைக்கு தாயகமாக விளங்குகிறது என்பதுதான் உண்மை. மற்றவர்கள் நினைப்பது போல் மாண்டரின் மொழி நாடு முழுவதும் பேசக் கூடியதுதான். சீன மொழியில் இது எளிமைப்படுத்தப்பட்ட வடிவமாகும்.

ஆனால் உண்மையில் சீனாவில் 284 பழங்குடி மொழிகள் உட்பட மொத்தம் 309 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. உலக மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேர் சீன மொழியை தாய்மொழியாக பேசுகிறார்கள். சீனாவின் மொழி இயல் நிலப்பரப்பு நம்ப முடியாத அளவிற்கு பன்முகத்தன்மை வாய்ந்ததாகவும், அதே நேரத்தில் சிக்கல் நிறைந்ததாகவும் உள்ளது. குறிப்பாக சில விஷயங்களை அறிந்து கொள்வதற்கு கீழ்க்கண்ட உதாரணங்களை எடுத்துச் சொல்லலாம். சீன மொழி என்று பொதுவாக அழைக்கப்படுவதிலேயே எட்டுக்கும் மேற்பட்ட முதன்மையான மொழி குழுக்கள் இருக்கின்றன.

மாண்டரின் மொழி சீனாவின் அதிகாரப்பூர்வமொழியாகவும், உலகில் மிகவும் பரவலாக பேசப்படும் தாய் மொழியாகவும் இருக்கிறது. சீனாவில் மட்டும் 100 கோடிக்கு மேல் மக்கள் இதை பேசுகிறார்கள். இது நாடு முழுவதும் பொது மொழியாக செயல்படுவதுடன், கல்வி அரசாங்கம் ஊடகங்களின் மொழியாகவும் விளங்குகிறது.

கான்டோனீஸ் அல்லது யூ என்று அழைக்கப்படும் மொழி தெற்கு சீனாவில் அதிக மக்களால் பேசப்படுகின்ற நன்கு அறியப்பட்ட சீன மொழியாகும். சுமார் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதை பேசுகிறார்கள்.

ஷாங்கைனீஸ் அல்லது வூ என்று அழைக்கப்படுகிற மொழியானது சீனாவின் கிழக்குப் பகுதியில், குறிப்பாக ஷாங்காய், தென்கிழக்கு ஜியாங்சு மாகாணம், ஜெஜியாங் மாகாணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கக்கூடிய 83 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

மின் மொழிகள் புஜியான் மாகாணத்திலும், குவாங்டாங், ஜெஜியாங், ஹைனான் மற்றும் தைவானின் சில பகுதிகளிலும் பேசப்படுகின்றன. அவை பொதுவாக வடக்கு மின் மற்றும் தெற்கு மின் எனப் பிரிக்கப்படுகின்றன. சீனா மற்றும் தைவானில், சுமார் 5 கோடி மக்கள் தெற்கு மின் மொழியைப் பேசுகிறார்கள். மின் மொழிகளைப் பிரத்தியேகமாகச் சுவாரஸ்யமாக்குவது என்னவென்றால், அவை தங்களுக்குள்ளேயேகூட ஒன்றுக்கொன்று புரிந்துகொள்ள முடியாத வையாக இருப்பதுதான். வடக்கத்திய மின்மொழி பேசுபவர்களால், தெற்கத்திய மின்மொழி பேசுபவர்களைப் பெரும்பாலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. வெளியாட்கள் சாதாரணமாக “சீன மொழி” என்று அழைக்கக்கூடிய மொழிகளுக்குள் இருக்கும் அசாதாரணமான மொழிப் பன்முகத்தன்மையை இது எடுத்துக்காட்டுகிறது.

ஹாக்கா என்று அழைக்கக்கூடிய மொழி சுமார் 36.8 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. குவாங்டாங், ஜியாங்சி, ஹுனான் மற்றும் சிச்சுவான் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இவர்கள் இருக்கிறார்கள். வரலாற்று ரீதியாக சீனாவுக்குள் இடம் பெயர்ந்து வந்தவர்கள். இதனால் இவர்களுடைய மொழி வெவ்வேறு பிராந்தியங்களில் பரவியது.

மேற்கு சீனாவின் பல பகுதிகளில் கான் மொழி 22.6 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். இவற்றில் ஐந்துக்கும் மேற்பட்ட வட்டார மொழிகளும் உள்ளன. சியாங் அல்லது ஹுனானிஷ் என்ற மொழி 38 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வேறுபட்ட மொழிகளும் ஒற்றை எழுத்து முறையும்.

பெரும்பான்மை சீன மக்களால் பேசப்படும் மொழிகளில் எத்தனை பிரிவுகள் இருந்தாலும் ஒரு மொழி பேசக் கூடியவர்கள் மற்றொரு மொழி பேசக் கூடியவர்களிடமிருந்து புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தாலும் இவர்கள் அனைவருக்கும் எழுத்து முறை ஒன்றுதான். சீனாவில் எழுத்துமுறை ஒன்றாக இருப்பது ஒரு சுவாரசியமான சூழலை உருவாக்குகிறது. பல மொழி பேசக் கூடியவர்கள் ஒரே எழுத்தின் மூலம் தொடர்பு கொள்ள முடியும். இங்கு பேச்சு வழக்கு மொழிகள் வேறாகவும் எழுத்து மொழிகள் ஒன்றாகவும் இருக்கிறது.

 

சீன மொழியானது இப்போது இருப்பது போலவே முன்பும் இருந்து வந்தது. இதனால்தான் சீன இலக்கியத்தின் வளர்ச்சி தனி வழியில் செல்ல வேண்டியதாயிற்று. ஐரோப்பிய மொழிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இலக்கியத்திலும், சிந்தனை வளர்ச்சியிலும் சீனர்களின் சிறப்பு இயல்புகள் காணப்படுவதற்கு காரணமாகும். ஓர் சைச் சொற்களைக் கொண்ட(ச்சிங், ச்சொங், ச்சாங்,) மொழி என்று இது கூறப்படுகிறது. ஓரசை கொள்கை அடிப்படையிலேயே சீன மொழியின் எழுத்து நிர்ணயிக்கப்படுகிறது. இந்த எழுத்தின் தன்மையால்தான் சீனாவின் நீண்ட கால இலக்கியத்தை அழிந்தொழியாமல் தொடர்ந்து அறிய முடிகிறது “(சீனாவும் சீன மக்களும்-லின் யூடாங்) என்று எழுதியிருக்கிறார். சீன மரபில் பேரரசர் பேசும் சீன மொழிகள் பல்வேறு வகைகளாக இருந்தாலும் அவை ஒரு நிலையான மொழியாக கருதப்பட்டன மற்ற அனைத்து மொழி வகைகளும் நிலையான ஒன்றை கொண்டிருந்தாலும் அவற்றை பேச்சு வழக்கு மொழிகள் என்று தான் குறிப்பிட்டார்கள். புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங் களினால் இந்த வகைகள் அனைத்தும் மாற்றி அமைத்து மேம்படுத் தப்பட்டன.

இனச் சிறுபான்மை மொழி அமைப்புகள்.

சீனாவில் இனத்திற்கும் மொழிக்கும் இடையே மூன்று முக்கிய உறவுகள் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இனச் சிறுபான்மை பகுதியில் சிக்கலான மொழி அமைப்புகள் இருந்தது. ஒரு இனம் அல்லது கிளை பல பேச்சு வழக்குகளை கொண்ட மொழிகளை பயன்படுத்தியது. இவற்றை பொதுவாக சிறுபான்மை தேசிய இனத்தின் மொழி என்று எடுத்துக் கொண்டாலும் அவற்றுக் கிடையிலான சிக்கலான உறவுகள் காணப்பட்டன.

முதலாவதாக ஒரு இனம் ஒரே மொழியை பேசக்கூடிய வகை. இதில் ஹான் இனத்தவர்கள், மங்கோலியர்கள், திபெத்தியர்கள், மியாவ் இனத்தவர்கள் அடங்குவார்கள்.

இரண்டாவதாக ஒரு இனம் பல மொழிகளை பேசக்கூடியதாக இருக்கிறது. தெற்கில் உள்ள யாவ் இனத்தவர் ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளை கொண்டுள்ளனர். யுன்னானில் உள்ள ஜிங்போ இனத்தவர்கள் இரண்டு மொழிகளை பேசுகிறார்கள். திபத்தில் இருக்கின்ற மோன்பா இனத்தவர்கள் இரண்டு மொழிகளை பேசுகிறார்கள். யி(Yi) என்ற இனம் இவர்களுக்கென்று தனி பேச்சு மற்றும் எழுத்து மொழிகள் இருந்தாலும், ஆறு வகையான பேச்சு வழக்குகளை ஒரு குறுகிய எல்லைக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த இனம் சீனாவில் உள்ள மிகப் பழமையான இனங்களில் ஒன்றாகும். இதன் மக்கள் தொகை 6.58 மில்லியன் ஆகும். இவர்கள் முக்கியமாக யுன்னான், சிச்சுவான், குயிஷோ மாகாணங்களிலும் வாழ்கின்றனர்.

மூன்றாவதாக பல இனங்கள் ஒரு மொழியை பேசக்கூடிய தன்மையாகும். ஹுய், மஞ்சு, ஷே, துஜியா, கெலாவ், ஹெஜென், சிபே மற்றும் காவோஷான் ஆகிய எட்டு இனக்குழுக்கள் சீன மொழியைப்பயன்படுத்துகின்றன. இனக்குழுக்கள் இடையே காணப்படும் இந்த மொழி அமைப்புகளால் இனத்திற்கும் மொழிக்கும் இடையிலான தொடர்புகள் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது. ஆங்கிலம் கற்பது உலகில் எந்த இடத்திற்கும் செல்ல வாய்ப்பு இருப்பது போல் சீனா முழுவதும் பரவலாக பயன்படுத்தக்கூடிய மொழியான மாண்டரின் கற்பது சீனா முழுவதும் தொடர்பு கொள்வதற்கான ஒரு மொழியாகும். சிறுபான்மையினரிடையே தொடர்பு நோக்கங்களுக்காக இந்த மாண்டரின் மொழி பயன்படுத்தப்படுகிறது.

எழுத்து வடிவம் பெற்ற மொழிகள்

சீனாவில் உய் மற்றும் மஞ்சு இனம் தவிர மற்ற அனைத்து இனங்களுக்கும் சொந்த மொழிகள் உள்ளன. 1950 களிலிருந்து சீன அரசு இன மொழிகளின் வளர்ச்சிக்கு உதவும் கொள்கைகளை உருவாக்கியது. இதன் அடிப்படையில் புதிய எழுத்து வடிவங்கள் உருவாக்கப்பட்டன. 1949 ஆம் ஆண்டு புரட்சிக்கு முன்பு சீனாவில் 21 இன சிறுபான்மை மொழிகள் தங்களுக்கான 24 எழுத்து வடிவத்தை கொண்டிருந்தன.

மங்கோலிய, திபெத்திய, உய்குர், யீ, கொரிய, கசாக் மற்றும் டாய் போன்ற 21 இன சிறுபான்மையினர் தங்களுக்கென சொந்த எழுத்துமுறைகளைக் கொண்டிருந்தனர். இந்த எழுத்துமுறைகளில் சில நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன; உதாரணமாக, யீ மற்றும் திபெத்திய எழுத்துமுறைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளன, அதே சமயம் மங்கோலிய, உய்குர் மற்றும் டாய் எழுத்துமுறைகள் பல நூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளன.

 

1950-களில் இருந்து, லத்தீன் (ரோமன்) எழுத்து முறையை அடிப்படையாகக் கொண்டு, ஜுவாங் (Zhuang), புயீ (Buyi), மியாவ் (Miao), லி (Li), ஹானி (Hani) போன்ற 10-க்கும் மேற்பட்ட இனங்களுக்கு 14 புதிய எழுத்து வடிவங்கள் உருவாக்கப்பட்டன 4 இனக் குழுக்களுக்கான ஐந்து எழுத்து வடிவங்கள் மேம்படுத்தப்பட்டன.

இந்தப் பணிகள் அனைத்தும் சீன அரசின் ஒருங்கிணைந்த முயற்சியின் கீழ் நடைபெற்றன. இருப்பினும், சில இனக்குழுக்கள் புதிதாக உருவாக்கப்பட்ட எழுத்துவடிவங்களைப் பயன்படுத்த மறுத்துவிட்டனர். உதாரணமாக, லி மக்கள் தங்களுக்கென உருவாக்கப்பட்ட புதிய எழுத்தைக் கைவிட்டு, சீன மொழியையே பயன்படுத்தத் தேர்வு செய்தனர். எழுத்து மொழிகளை உருவாக்கும் செயல்பாட்டில், இன சிறுபான்மையினர் தாங்கள் பயன்படுத்த விரும்பும் மொழிகளைத் தேர்ந்தெடுக்க அரசு அனுமதித்தது.

சில சிறுபான்மையினர், புதிய எழுத்து மொழியைப் பயன்படுத்திய பிறகு, அது தங்கள் தேவைகளுக்குப் பொருந்தவில்லை என்பதைக் கண்டறிந்து, வேறு புதிய மொழியைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தனர். 1982-ல் உய்குர் மற்றும் கசாக் குழுக்கள் அரபு எழுத்துக்களைப் பயன்படுத்தும் தங்கள் அசல் மொழிக்குத் திரும்பினர். யி குழுவினர், தாங்கள் புதிதாக உருவாக்கிய எழுத்து மொழியைக் கைவிட்டு, தரமான யி மொழியை ஏற்றுக்கொண்டனர். தற்போது, சீனாவில் 21 இன சிறுபான்மையினருக்கு 27 எழுத்து வடிவங்கள் உட்பட, தங்களுக்கென சொந்த எழுத்து மொழி உள்ளது.

இன சிறுபான்மையினரின் எழுத்து மொழியில் ஏற்பட்ட சீர்திருத்தங்களுக்குப் பிறகு, புதிய எழுத்து மொழி மேலும் எளிமையாக் கப்பட்டது. இப்போது எழுத்து மொழியைக் கொண்டிருந்த இன சிறுபான்மையினர், தொடக்கப் பள்ளிகள் முதல் உயர் கல்வி வரை இருமொழிக் கல்வியைத் கற்கத்தொடங்கினர். எழுத்து மொழி இல்லாத இன சிறுபான்மையினர், கற்பிப்பதற்காக சீன அல்லது பிற இன சிறுபான்மையினரின் எழுத்து மொழியைப் பயன்படுத்தத் தொடங்கினர். பல இன சிறுபான்மையினர் தங்கள் சொந்த மொழியில் செய்தித்தாள்களையும், பத்திரிகைகளையும் வெளியிடுகின்றனர். 1998-ல், பதினேழு இன சிறுபான்மையினர் 83 செய்தித்தாள்களையும் 184 பத்திரிகைகளையும் வெளியிட்டனர்.

 

மேற்கண்ட பின்னணியில் இனச் சிறுபான்மை மொழிகளை பாதுகாப்பது மட்டுமல்ல வளர்த்தெடுக்கும் பணிகளையும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள் குடியரசும் செய்தது. எழுத்து மொழி உள்ள அனைத்து சிறுபான்மை இனங்களுக்கும் தொடக்கப் பள்ளிகள் முதல் உயர்கல்வி வரை இரு மொழி கொள்கையை தொடர்கிறார்கள். தேசிய சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வகுப்புகள் உள்ளூர் மொழி பாடப்புத்தகங்களை பயன்படுத்தி கற்பிக்கப் படுகின்றன. மாண்டரின் இரண்டாவது மொழியாக கற்பிக்கப்படுகிறது. 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் இனச் சிறுபான்மையினரில் 68 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எழுத்து வடிவ மொழிகளை பயன்படுத்துகின்றனர் இது இனச் சிறுபான்மை மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கு மேலாகும்.

துறவியின் குற்றச்சாட்டும் உண்மைநிலையும்

திபெத்திய மாகாணத்தில் அனைத்து பெயர்ப்பலகைகளும் திபெத்திய மொழி மற்றும் ஹான் இரு மொழிகளிலும் காணப்படுகிறது. எங்காவது திபெத்திய மொழி எழுதப்படவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

1988 ஆம் ஆண்டுகள் விதிகளின்படி மாவட்ட அளவிலோ, அதற்கு மேலே இருக்கக்கூடிய நிறுவனங்களால் அந்த பிராந்தியங்களுக்குள் செயல்படுவதற்காக வழங்கப்படும் அனைத்து ஆவணங்களும் திபெத்திய மொழியிலும், ஹான் மொழியிலும் இருக்க வேண்டும். பேரூராட்சி மற்றும் கிராம அளவிலான ஆவணங்கள் திபெத்திய மொழியில் மட்டும் இருக்கலாம். 1991 ஆம் ஆண்டு முதல் கீழ் நிலையில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் திபெத்திய மொழியில் இல்லாத ஆவணங்களை செயல்படுத்த மறுக்கும் உரிமையை பெற்றுள்ளன. அனைத்து உள்ளூர் அரசு துறைகளிலும் அதிகாரப்பூர் ஆவணங்கள் மட்டுமின்றி, அரசு முத்திரைகள், சான்றிதழ்கள், படிவங்கள், உறைகள், காகிதங்கள், அறிவிப்பு பலகைகள், கையொப்பங்கள் ஆகியவற்றில் திபெத்திய மொழியும் சீன மொழியும் பயன்படுத்த வேண்டும் என்பது அமுலாகி வருகிறது.

திபெத்தின் உயர் மக்கள் நீதிமன்றமும், உயர் மக்கள் அரசு வழக்கறிஞர் அலுவலகமும், சட்ட ஆவணங்களை கையாளுவதற்கு இரு மொழியையும் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் இத்துறைகள் சட்டங்கள் மற்றும் சட்டச் சொற்கள் குறித்த தொடர் புத்தகங்களை திபெத்திய மொழியில் வெளியிட்டுள்ளன.

 

உள்ளூர் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளுக்கு திபெத்திய மொழியே ஒரு முக்கிய மொழியாக இருந்து வருகிறது. திபெத் மக்கள் வானொலி நிலையம் தினமும் 41 மணி நேரம் ஒளிபரப்பு செய்கிறது. இதில் 20.5 மணி நேரம் திபெத்திய மொழியில் அமைந்த நிகழ்ச்சிகளாகும். திபெத்திய தொலைக்காட்சி நிலையம் தினமும் 12 மணி நேரம் திபெத்திய மொழி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. 1999 ஆம் ஆண்டு திபெத்திய மொழிக்கான செயற்கைக்கோள் அலைவரிசை தொடங்கப்பட்டது.

சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்கள் பேசப்படும் திபெத்திய மொழி அழிக்கப்படுகிறது அல்லது அழிந்து வருகிறது என்று குற்றம் சாட்டுவது அபத்தமானது. இது வளர்ச்சி அடையும் மொழியாக இருக்கிறது. தீபெத்தில் வாழுகின்ற ஹான் மொழி பேசும் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் திபெத்திய மொழியை கற்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மேம்பட்ட தொழில்நுட் பங்களையும், புதிய அறிவையும் திபெத்தில் செயல்படுத்த முடியும் எனக் கூறுகின்றன.

காரணம், திபெத்தில் பின்தங்கிய உள்ளூர் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மேம்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பங்கள் அவசியமாக தேவைப்படுகின்றனர். திபெத்திய மொழியை கற்றுக் கொண்டால் மட்டுமே தேவைப்படுபவர்களுக்கு தகவல் சென்றடைவது உறுதி செய்ய முடியும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி தெளிவுபடுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஹான் மொழியிலிருந்து திபெத்திய மொழிக்கு மொழிபெயர்ப்பது பெரும் பணியாக மாறி நடைபெறுகிறது.

சீன அரசாங்கம் திபெத்திய மொழியை படிப்படியாக கைவிட்டு வருகிறது என்ற தலாய்லாமா வகையினர் முன் வைக்கும் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் நிலைமைகள் இருக்கிறது. ‘திபெத் டெய்லி’யின் திபெத்திய மொழிப் பதிப்பு தினமும் 16,000 பிரதிகள் விற்பனையாகும் சிறப்பைப் பெற்றுள்ளது.

இதுவரை, திபெத்திய மொழியில் 108 தலைப்புகளிலான மக்கள் அறிவியல் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், விவசாயத் தொழில்நுட்பம் குறித்த பல தொலைக்காட்சி ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டு திபெத்திய கிராம மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான துறை தெரிவித்துள்ளது.

 

திபெத்தில் திபெத்திய மொழி இலக்கியத்திற்கான ஐந்து பருவ இதழ்கள் வெளியாகி வருகின்றன; அவற்றில் இரண்டு இதழ்கள் இதுவரை மொத்தம் 100 இதழ் வெளியீடுகளைக் கண்டுள்ளன. மேலும், அனைத்து பயில்நிலை நாடகக் குழுக்களும் தங்கள் கலைநிகழ்ச்சிகளில் திபெத்திய மொழியையே பயன்படுத்துகின்றன; திபெத்தில் செயல்படும் பத்து தொழில்முறை நாடகக் குழுக்களும் பெரும்பாலும் திபெத்திய மொழியிலேயே தங்கள் நாடகங்களை அரங்கேற்றுகின்றன.

1989-ஆம் ஆண்டிலிருந்து, ‘திபெத் மக்கள் பதிப்பகம்’ மற்றும் ‘திபெத் பண்டைய ஆவணங்கள் பதிப்பகம்’ ஆகியவை திபெத்திய மொழியில் 441 நூல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கிறது. இதற்கிடையில், திபெத்திய மொழியில் வெளியாகும் 20 செய்தித்தாள்களும் இதழ்களும் புழக்கத்தில் உள்ளன.

கடந்த ஐந்து தசாப்தங்களாக, திபெத்திய மொழியின் ஆய்வு, பயன்பாடு மற்றும் பரவலாக்கம் ஆகியவை திபெத்தின் சமூகப் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நிலைத்தன்மையை ஊக்குவிப்பதிலும், அறிவியல், கலாச்சாரம் மற்றும் கல்வியின் செழிப்பையும் முன்னேற்றத்தையும் முன்னெடுத்துச் செல்வதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளன என்று இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

சீன அரசாங்கம் திபெத்திய மொழியைப் படிப்படியாகக் கைவிட்டு வருகிறது” என்றும், “திபெத்திய கலாச்சாரம் அழிக்கப்பட்டு வருகிறது” என்றும் தலாய் லாமா தரப்பினர் பரப்பி வரும் வதந்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை மேற்கூறிய அனைத்துச் சான்றுகளும் நிரூபிக்கின்றன.

அ.பாக்கியம்

வியாழன், ஏப்ரல் 16, 2026

68 திருடப்பட்ட தலைமுறைகளும் தொடரப்பட்ட தலைமுறைகளும்

 



அ.பாக்கியம்

சீனாவில் இனச் சிறுபான்மை கல்வி வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வரும் உறைவிட பள்ளி குறித்து மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் உலகெங்கிலும் பொய்ப் பிரச்சாரத்தை நடத்துகிறார்கள். இது அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படும் பொய் பிரச்சாரம் என்பதை சீன நாட்டின் தலைவர்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர். இந்தப் பிரச்சாரத்தின் மையமான இடமாக திபெத் இருக்கிறது. தலாய்லாமா நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தை நீடித்து வைத்திருப்பதற்கு, கிராமங்களிலும், மலைப்பிரதேசங்களிலும், மேய்ச்சல் நிலங்களிலும் வாழ்ந்த மக்களுக்கு கல்வியை கொடுக்காமல் தடுத்து வந்தார். கிராமப்புறங்களில் கல்வி எளிதில் அணுக முடியாத இடங்களில் இருக்கக்கூடிய குடும்பங்கள் அரசு செலவில் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பி வைக்கிறார்கள். இதன் மூலம் தலாய்லாமாவின் கட்டுப்பாடுகள் கலகலத்து போவதுடன் அறிவியல் கல்வியும், அறிவியல் சார்ந்த அறிவும் மேம்படுகிறது. இதை தடுப்பதற்காக உறைவிடப் பள்ளிகள் சிறைக்கூடங்கள் என்று சித்தரிக்கிறார்கள். பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரிப்பது, சிறுபான்மை கலாச்சாரத்தை அழித்து சீன மயமாக்குவது என்பது பிரதான குற்றச்சாட்டாகும்.

முதலாவதாக, இனச் சிறுபான்மை பிரதேசங்களில் அமலாக்கப்படும் உறைவிடப் பள்ளி என்பது முழுக்க முழுக்க தன்னார்வத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. உறைவிட பள்ளியில் சேருவதா அல்லது தினசரி மாணவராக வந்து செல்வதா என்பதை முற்றிலும் மாணவர்களும், அவரது பெற்றோர்களின் விருப்பத்தைச் சார்ந்ததாகும். கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில் இதில் ஏதாவது ஒன்றை கடைபிடிக்க வேண்டும். எனவே தான் உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களிலும் வார விடுமுறைகளிலும் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவது இந்த தன்னார்வத் திட்டத்தின் அடிப்படையில்தான்.

    இரண்டாவதாக, புவியியல் தேவையை சார்ந்தது. திபெத் பகுதியும் வேறு சில சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பிரதேசங்களும் மிக உயரத்திலும் விரிந்த பகுதிகளிலும் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்டதாகவும் உள்ளது. இவர்களுக்கு பள்ளிக் கல்வி கிடைப்பது சிரமமாகும். எனவே அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி உரிமையை உறுதி செய்ய இந்த உறைவிடப் பள்ளி அமைக்கப்பட்டது. உலகில் இதே போன்று நிலப்பரப்பு அமைந்துள்ள பல நாடுகளிலும் இது போன்ற பள்ளிகள் அமைத்துதான் கல்வி கற்பிக்கப்படுகிறது.

மூன்றாவதாக, பாரம்பரிய கலாச்சாரம் ஒழிக்கப்படுகிறது என்பதற்கு மாறாக திபெத்திய மொழி, இலக்கியம், நாட்டுப்புற நடனம் போன்ற பாரம்பரிய பண்பாட்டுப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். உணவுகளிலும் கூட திபெத்திய மற்றும் இதர சிறுபான்மை மக்களின் பாரம்பரிய உணவுகள் வழங்கப்படுகின்றன. ஆசிரியர்களில் இனச் சிறுபான்மை ஆசிரியர்கள் 90% தங்கள் தாய் மொழியில் பாடங்களை நடத்துகிறார்கள். நான்காவதாக, வரலாற்று ரீதியாக மேற்கத்திய காலனித்துவ உறைவிடப் பள்ளிகளுக்கும் சீனாவில் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளுக்கும் அதன் நோக்கத்திலேயே அடிப்படை வேறுபாடு இருக்கிறது என்று சீன நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் உறைவிடப் பள்ளிகளின் நோக்கம் பழங்குடியினரின் கலாச்சாரத்தையே அழிப்பதாக இருந்தது. ஆனால் சீன பள்ளிகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதுடன், கலாச்சாரத்தையும் பாதுகாக்கின்றன. சீன அரசியல் அமைப்பு பன்முக இனங்களுக்கான உரிமைகளை வழங்குகிறது.

திருடப்பட்ட தலைமுறைகள்

எனவே மேற்கத்திய நிபுணர்களின் கருத்துப்படி இந்த விமர்சனங்கள் உண்மை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. மாறாக அமெரிக்காவின் புவிசார் அரசியல் நிலைபாடுகளுக்காக சீனாவுக்கு எதிராக பரப்பப்படும் பொய் பிரசாரங்கள் ஆகும். தங்கள் நாட்டில் செய்த கலாச்சார படுகொலை போன்ற வரலாற்றுக் குற்றங்களை வைத்துக் கொண்டு சீனாவையும் அவ்வாறே இருப்பதாக மற்றவர்களை நம்ப வைக்கக்கூடிய பிரச்சாரமாகும். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடாவில் நடந்த உறைவிடப் பள்ளிகளின் படுகொலைகளை இங்கு கவனத்திற்கு கொண்டு வருவது அவசியமாகிறது.

ஆஸ்திரேலியாவில் 1910 ஆம் ஆண்டு முதல் 1970 வரை அரசு மற்றும் தேவாலயக் கொள்கைகள் காரணமாக பல்லாயிரக் கணக்கான பழங்குடி இனக்குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். பழங்குடி பகுதி மற்றும் டோரஸ் ஜலசந்தி தீவு (Aboriginal and Torres Strait Islander) கூட்டங்களில் குவியலாக பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். உலகின் மிகப் பழமையான, தொடர்ச்சியான கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்கள் இரண்டு தனி குழுக்களாக, 250 க்கும் மேற்பட்ட மொழி குழுக்களாக வாழ்ந்தனர். வளமான பன்முக கலாச்சார மரபுகளை கொண்டிருந்தனர். இவர்களிடம் இருந்து பல்லாயிரக்கணக்கான பழங்குடி இன குழந்தைகளை அவர்களின் குடும்பங்களிலிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் இதரப் பகுதியில் வாழ்ந்த வெள்ளை இனத்தவர் குடும்பங்களில் கட்டாயமாக வளர்க்கப்பட்டனர்.

இந்த செயல் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை அழித்து வெள்ளை இன கலாச்சாரத்துடன் இணைக்கும் நோக்கில் செய்யப்பட்டது. குழந்தைகளின் பாதுகாப்பிற் காகவும், அவர்களை புறக்கணிப்பு வாழ்க்கையில் இருந்து காப்பாற்றுவதற்கும் இதை மேற்கொள்கிறோம் என்று ஆஸ்திரேலியா அரசாங்கத்தால் இந்த நடவடிக்கை நியாயப்படுத்தப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம் தூயஇரத்த பழங்குடியின மக்கள் அழிந்து விடுவார்கள் என்றும், கலப்பு இரத்த குழந்தைகள் சமூகத்துடன் மிக எளிதாக ஒன்றி விடுவார்கள் என்றும் அன்றைய அரசாங்கம் நம்பியது. பழங்குடி இன மக்கள் இன ரீதியாக தாழ்ந்தவர்கள் என்ற வெள்ளை இன மேலாதிக்க கருத்தின் அடிப்படையில் இந்த கொள்கை அமலாக்கப்பட்டது.

இவ்வாறு பழங்குடி குடும்பங்களிடமிருந்து குழந்தைகளை அகற்றுவதற்காக 1869 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் விக்டோரியன் பழங்குடி பாதுகாப்பு சட்டம்(1869) என்ற ஒரு சட்டத்தை இயற்றினார்கள். இந்த சட்டத்தின் மூலம் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்துக் கொண்டுவர அனுமதி அளித்தது. 1915 ஆம் ஆண்டு பழங்குடியினர் பாதுகாப்பு திருத்தச் சட்டம் (நியூ சவுத் வேல்ஸ் 1915) கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் தீங்குகள் நிறைந்தது. 1869 சட்டத்தின்படி பழங்குடியின குழந்தைகள் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இந்த திருத்தம் நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து அகற்றுவதற்கான அதிகா ரத்தை கொடுத்தது.

ஒரு குழந்தை தன் குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்ட உடன் அது வெள்ளையர் சமூகத்துடன் ஒன்றிப்போக கட்டாயப்படுத்தப்பட்டது. வெள்ளையர்களின் குடும்பத்தில் வேலைக்கு சேர்க்கப்பட்டார்கள். அங்கு அவர்கள் பாரம்பரிய மொழியை பேசவோ, சொந்த கலாச்சார பழக்கவழக்கங்களில் பங்கேற்பது தடை செய்யப்பட்டது. அவர்களுக்கு புதிய பெயர்களும், புதிய அடையாளங்களையும் கொடுத்தார்கள். இவ்வாறு கொண்டுவரப்பட்ட குழந்தைகளிடம் அவர்களது குடும்பத்தினர் அவர்களை கைவிட்டு விட்டனர் அல்லது இறந்து விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. பிரித்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆஸ்திரேலியா அரசாங்க அதிகாரிகள் குழந்தைகளை அவர்களின் வாழ்விடங்களில் இருந்தும் குடும்பங்களிலிருந்தும் வெகு தொலைவிற்கு அனுப்பி விடுவார்கள்.

 தங்கள் குடும்பத்தை பற்றி தவறாக கற்பிக்கப்பட்டதால் பிரிக்கப்பட்ட குழந்தைகள் தங்களது பாரம்பரியத்தை பற்றியும் குடும்பத்தை பற்றியும் அவமானமாக கருதினார்கள். பிற்காலத்தில்தான் இந்த திருடப்பட்ட தலைமுறையைப் பற்றி அவர்கள் அறிந்து கொண்டனர். இவ்வாறு பிரிக்கப்பட்ட குழந்தைகளில் பலர் உறைவிட பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இந்தப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாலியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல் உட்பட பல்வேறு வடிவங்களில் கொடுமைகளையும் அனுபவித்தனர். இந்த நிகழ்வு தலைமுறைகளுக்கு இடையேயான மன அதிர்ச்சியை (intergenerational trauma) ஏற்படுத்தி பழங்குடி சமூகங்களில் நீண்டகால இழப்புகளையும் பாதிப்புகளையும் விளைவித்தது.

மன்னிப்பும் தொடரும் தலைமுறை திருட்டும்

2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி அப்போதைய ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் திருடப்பட்ட தலைமுறை உறுப்பினர்களிடம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார். இந்த நிகழ்வு ஆஸ்திரேலிய வரலாற்றில் இருண்ட பக்கமாக கருதப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு இது இன்றும் பெரும் வலியாக உள்ளது. குழந்தைகளை அகற்றும் நடைமுறை இன்றும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு நிறுவனம், மேற்கு ஆஸ்திரேலியா சமூக துறை மற்றும் சுகாதாரத் துறையின் தரவுகளில் இருந்து தொகுக்கப்பட்ட தொகுக்கப்பட்ட விவரங்கள் 2019 வெளியிடப்பட்டது.

2012 மற்றும் 2017 க்கு இடையில் உறைவிட இல்ல பராமரிப்பில் வைக்கப்பட்ட பழங்குடி குழந்தைகளின் எண்ணிக்கை 1000 க்கு 46.6 லிருந்து 1000க்கு 56.6 உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இதே ஆராய்ச்சி தரவுகள் 2013 மற்றும் 2016 க்கு இடையில் இல்ல பராமரிப்பில் வைக்கப்பட்ட ஒரு வயதுக்கு உட்பட்ட கைக்குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் 1000 எனக்கு 24.8 இலிருந்து 29.1 ஆக உயர்ந்ததையும் கண்டறிந்துள்ளனர். பழங்குடி குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக தொடரும் மன அதிர்ச்சியை அனுபவித்து வருகின்றனர். பாரம்பரிய அறிவு, கலாச்சாரம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட முடியாததால் திருடப்பட்ட தலைமுறையினர் பாரம்பரிய அறிவை இழந்துள்ளனர். 1788 ஆம் ஆண்டில் பிரிட்டன் தனது முதல் ஆஸ்திரேலியா காலனியை நிறுவிய பொழுது பழங்குடி மக்கள் தொகை மூன்று லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. 1901 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் நிறுவப்பட்ட போது பழங்குடியின மக்கள் தொகை 90 ஆயிரம் ஆக குறைந்துவிட்டது. எந்த அளவு காலனித்துவ வேட்டை நடந்துள்ளது என்பதை இந்த எண்ணிக்கை புலப்படுத்தும்.

இந்தியரை கொன்று மனிதரை காப்பாற்றுங்கள்

ஆஸ்திரேலியாவில் பிரிட்டன் நடத்தியது போன்று அமெரிக் காவில் பழங்குடி இன மக்களின் குழந்தைகளை பல பத்தாண்டுகளாக கட்டாயப்படுத்தி உறைவிட பள்ளிகளில் சேர்த்தார்கள். இந்த நடவடிக் கைகள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கி 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அமெரிக்க அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொடூரமான கட்டாய ஒருங்கிணைப்புக் கொள்கையாகும். இதன் மிச்ச சொச்சங்கள் 1980 ஆம் ஆண்டு வரை இயங்கி வந்ததாகவும் தரவுகள் தெரிவிக்கிறது. இந்தக் கொள்கையின் நோக்கம் பழங்குடி குழந்தைகளை அவர்களின் குடும்பங்களில் இருந்து பிரித்து வெள்ளை அமெரிக்க சமூகத்தில் ஒருங்கிணைப்பது ஆகும். இந்த செயலின் வழியாக பழங்குடி கலாச்சாரத்தை அழிப்பதாகும். இந்தப் பள்ளியை துவக்குதற்கு முதல் காரணமாக இருந்த ராணுவ அதிகாரியான ரிச்சர்ட் ஹென்றி பிராட் கூறியதுதான் இந்தியனை மனிதனைக் காப்பாற்று என்ற வாக்கியமாகும். அமெரிக்காவிலிருந்து பூர்வகுடி மக்களை செவ்விந்தியர்கள் என்று அழைப்பார்கள். அந்த அடிப்படையிலேயே அனைத்து பூர்வகுடி இன குழந்தைகளையும் கட்டாய உறைவிட பள்ளியில் சேர்த்தார்கள்.

குழந்தைகளை கட்டாயமாக பள்ளிக்கு அனுப்புவதற்கு பல்வேறு முறைகளை பயன்படுத்தினார்கள். 1891ஆம் ஆண்டில் அமெரிக்க காங்கிரஸ் ஒரு சட்டத்தை இயற்றி பழங்குடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை கட்டாயமாக்கியது. பழங்குடி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தால் அந்த பெற்றோருக்கான உணவுப் பொருட்கள் மற்றும் பிற உதவிகளை நிறுத்தி வைக்க அதிகாரிகளுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த முறைகளுக்கு ஒத்துழைக்காத பெற்றோரின் குழந்தைகளை போலீசார் மூலம் நேரடியாக பிடித்துச் செல்லப்பட்டனர். பெற்றோர்கள் எதிர்த்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். உதாரணமாக 1894 ஆம் ஆண்டில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த 29 ஹோபிஇன பெற்றோர்கள் அல்காட்ராஸ் சிறையில் அடைக்கப் பட்டார்கள்.

உறைவிட பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகள் மிகவும் கடுமையான சூழலை எதிர்கொண்டார்கள். குழந்தைகளின் பூர்வீக பெயர்கள் மாற்றப்பட்டு ஆங்கில பெயர்கள் சூட்டப்பட்டன. அவர்களது நீண்ட முடிகள் வெட்டப்பட்டு சீருடை அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். தாய் மொழியில் பேசுவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டு ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றனர். தாய் மொழியில் பேசினால் சோப்புக் கட்டிகளை சாப்பிட வைத்து கடுமையான தண்டனைகள் வழங்கினார்கள். இந்தப் பள்ளிகள் ராணுவ முகாம் போல் இயக்கப்பட்டன. விதிகளை மீறினால் அடித்தல், தனிமை சிறையில் அடைத்தல், மின்சாரத்தை பாய்ச்சுதல் போன்ற தண்டனைகளும் வழங்கப்பட்டன.

மோசமான உணவு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்கள் காரணமான ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தார்கள். 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க அரசாங்க அறிக்கையின்படி 1819 முதல் 1969 வரை 973 பழங்குடி குழந்தைகள் பள்ளிகளிலேயே இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அடையாளம் தெரியாத கல்லறைகளில் புதைக்கப்பட்டார்கள். இந்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமானது மட்டும்தான். மரணமடைந்தது இதைவிட அதிகம்.

அமெரிக்காவில் இருந்த உறைவிட பள்ளி கல்விக்காக மட்டுமல்ல ஒரு முழு சமூகத்தையே ஒடுக்குவதற்கான அரசின் கொள்கையின் வெளிப்பாடாகும். இதன் விளைவாக பல தலைமுறை பழங்குடி மக்கள் மன உளச்சலுக்கு ஆளானார்கள். மொழிகள் அழிந்து போனது, கலாச்சாரம் சீர்குலைந்து போனது, அத்துடன் அவர்களின் அடுத்த தலைமுறையும் மறைந்து போனது. ஆஸ்திரேலியா நாட்டுப் பிரதமர் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார். 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு என்பது நடந்த து உண்மை என்பதை நிருபிக்கிறது. ஆனால் காலனித்துவ வாதிகள்னி சுரண்டல் கொள்கையே இதற்கு காரணம். இன்றும் இது புதிய வடிவில் வெளிப்படுகிறது.

கனடாவில் கலாச்சார இனப்படுகொலை

கனடிய இந்திய உறைவிட பள்ளி அமைப்பு என்பது பழங்குடி மக்களுக்கான உறைவிட பள்ளிகளின் வலையமைப்பாகும். இந்தப் பள்ளிக்கூடங்கள் கனடிய அரசாங்கத்தின், இந்திய விவகாரங்கள் துறையால் நிதியளிக்கப்பட்டு பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களால் நடத்தப்பட்டது. பழங்குடி குழந்தைகளை அவர்களின் சொந்த கலாச்சாரம் மற்றும் அவர்கள் மதத்தின் செல்வாக்கில் இருந்து தனிமைப்படுத்தி அவர்களை மேலாதிக்க யூரோ-கனடிய கலாச்சாரத்தில் ஒருங்கிணைப்பதற்கான ஒரு முயற்சியாகும். இது கனடிய வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகும். 1870 முதல் 1997 வரை அதாவது கடைசி உறைவிட பள்ளிகள் மூடுகின்ற வரை 1,50,000பழங்குடி குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பறிக்கப்பட்டு தேவாலயங்களால் நடத்தப்பட்ட வந்த உறைவிட பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

1894ஆம் ஆண்டு இந்தியன் சட்டத்திருத்தம் பழங்குடி குழந்தைகளை அவர்களது குடும்பங்களில் இருந்து அகற்றி உறைவிட பள்ளிகளில் சேர்க்கும் அதிகாரத்தை உள்ளுர் அதிகாரிகளுக்கு அளித்தது. 1920 ஆம் ஆண்டு இந்தச் சட்டம் மேலும் பலப்படுத்தப்பட்டு 7முதல்16 வயதுடைய ஒவ்வொரு பழங்குடி குழந்தையும் இந்தப் பள்ளிகளில் சேர்வது கட்டாயமாக்கப்பட்டது. இந்திய உறைவிட பள்ளிகள் தீர்வு ஒப்பந்தத்தின் கீழ் (IRSSA) மொத்தம் 139 பள்ளிகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன.

இந்தப் பள்ளிகளின் முதன்மையான நோக்கம் பழங்குடி குழந்தைகளை அவர்களின் குடும்பம், மொழி மற்றும் கலாச்சாரத்தில் இருந்து பிரித்து, அவர்களை வெள்ளையர் சமூகத்தின் பழக்கவழக்கங்கள் கடைபிடிக்க வைப்பது. கிறிஸ்துவ மதத்தை தழுவு செய்வது. ஆங்கில மொழியை கற்கும்படி கட்டாயப்படுத்துவது போன்ற மிகப் பெரும் கலாச்சார இனப்படுகொலையை செய்தனர்.

கன்னடிய நாட்டில் இருந்த உறைவிடப் பள்ளிகளில் கடுமையான உடல் ரீதியான துன்புறுத்தல்களும், மனரீதியான துன்புறுத்தல் களாலும், பாலியல் துன்புறுத்தவர்களாலும் பெரும் பகுதி மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். குழந்தைகள் தங்கள் தாய் மொழியில் பேசவோ பாரம்பரிய பழக்க வழக்கங்களை பின்பற்றுவோ அனுமதிக்கப் படவில்லை. அவ்வாறு செய்தால் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். உறைவிட பள்ளிகளின் மோசமான வாழ்க்கை நிலைமைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நோய்கள் காரணமாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்தனர்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையும் என்ற அமைப்பு இறந்த குழந்தைகளில் இதுவரை 4100 க்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயர்களை அடையாளம் கண்டுள்ளது இருப்பினும் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. சமீப காலங்களில் பல பள்ளி கட்டிடங்களின் வளாகங்களில் அடையாளம் தெரியாத கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உறைவிட பள்ளி மாணவர்களின் கல்லறைகள் என்று யூகிக்கப் படுகிறது.

2008 ஆம் ஆண்டில் கன்னடிய நாட்டின் அப்போதைய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக கலாச்சார இனப்படுகொலைக்காக மன்னிப்பு கோரினார். உண்மை மற்றும் நல்லிணக்க அமைப்பு 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 2015 ஆம் ஆண்டு தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கனடாவின் உறைவிட பள்ளி முறைகள் பழங்குடி சமூகங்களுக்கு ஏற்படுத்திய ஆழ்ந்த துயரத்தையும் அதன் பயனாக இன்றும் தொடரும் வலியை பற்றியும் தெரிவித்திருக்கிறது

மேற்கத்திய நாடுகளில் காலினித்துவ கொள்கையை தீவிரமாக கடைபிடித்த பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பழங்குடி மக்களை அவர்களின் குழந்தைகளை கொடூரமான முறையில் நடத்தியதை இந்தச் சம்பவங்கள் வெளிக்கொணர்ந்து உள்ளது. இதே கண்ணோட்டத்தில் சீனாவில் உறைவிட பள்ளிகள் இருப்பதாக அரசியல் நோக்கத்துடன் பிரச்சாரம் செய்கிறார்கள். சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின் பிங் மேற்கத்திய நாடுகள் காலனித்துவ வரலாற்றை தன்னகத்தை கொண்டுள்ள பொழுது, சீனா காலனித்துவத்தை எதிர்த்த வரலாற்றை ஏற்படுத்தி உள்ளது. எனவே நம் மக்களின் வலியை உணர்ந்தவர்கள் என்றார். எங்கள் கொள்கையும் காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மேம்படுத்துவதாகும் என்பதை திட்டவட்டமாக அறிவித்தார்.

அ.பாக்கியம்

வியாழன், ஏப்ரல் 09, 2026

67 சிறுபான்மையினரின் அறிவுக்களம்


அ.பாக்கியம்

சீனாவில் இனச் சிறுபான்மை மக்களின் கல்வியை வளர்ப்பதில் இரு மொழி கொள்கைகளும், முன்னுரிமை கொள்கைகளும், ஒன்பது ஆண்டுகள் கட்டாய கல்வி முறைகளும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியதைவிட, சீன மக்கள் குடியரசு உருவாக்கிய உறைவிடப் பள்ளிகள் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. சீன மொழியில் இதற்கு நெய்டிபன் அதாவது உள்துறை பள்ளி என்று அழைக்கிறார்கள். இந்த உறைவிடப் பள்ளி தொடர்பாக மேற்கத்திய நாடுகள் அவதூறு மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக திபெத்திய பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள உறைவிடப் பள்ளிகள் தொடர்பாக அதிக பொய் பிரச்சாரங்களை செய்கிறார்கள். திபெத்திய குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதாகவும், கட்டாயமாக உறைவிட பள்ளிக்கு அனுப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட திபெத்துக்கு ஆதரவான சர்வதேச பிரச்சார குழு சுமார் 10 லட்சம் குழந்தைகள் உறைவிடப் பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொய்களை கட்டமைக் கிறார்கள். இந்த உறைவிடப் பள்ளிகள் திபெத்திய குழந்தைகளின் தாய்மொழி, பண்பாடு மற்றும் அவர்களின் அடையாளத்தில் இருந்து பிரித்து சீனமயமாக்குவதற்கு ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் சும்த்துகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டின் மூலக்கர்த்தாவாக இருப்பது 14 வது தலாய்லாமா ஆகும். இது குறித்த உண்மை நிலைமைகளை இதற்கு அடுத்த பகுதியில் காணலாம். சீன சோசலிசத்தில் உறைவிட பள்ளிகள் எவ்வாறு செயல்படுகிறது, எவ்வளவு செயல்படுகிறது என்பதை முதலில் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவைதான் புதிய கண்டுபிடிப்புகளின் தாய்

 

சீன மக்கள் குடியரசும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் இனச் சிறுபான்மை மக்களுக்கு கல்வி வழங்குவதற்கான திட்டங்களை உருவாக்குகிற பொழுது அங்கிருந்த புறச்சூழலைகள் உறைவிடப் பள்ளிகளின் தேவைகளை உணர்த்த ஆரம்பித்தன. 1950 ஆம் ஆண்டுகளிலேயே இதற்கான கருத்துக்கள் உருவாக ஆரம்பித்தது. ஒவ்வொரு இடத்திற்கும் கல்வியை கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பொழுது 1950 ஆம் ஆண்டுகளில் இறுதிப்பகுதியில் இதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது.

ஆரம்ப கட்டத்தில் இனச் சிறுபான்மை மாணவர்கள் பரந்த மேய்ச்சல் நிலப் பகுதிகளிலும், மலைப்பிரதேசங்களிலும் சிதறிக் கிடந்தனர். அவர்களின் வாழ்க்கை மேய்ச்சல் நில வாழ்க்கையாக இருந்தது. முதலில் கூடார பள்ளிகள் (டெண்ட்) அமைத்துக் கற்றுக் கொடுத்தனர். அவ்வாறு அமைக்க முடியாத இடங்களில் நடமாடும் கற்பித்தல் பள்ளிகளை உருவாக்கினார்கள். இவற்றுடன் கூடவே குதிரை ஏற்ற பள்ளிகளும் உருவாக்க உருவாக்கப்பட்டது. ஜின்ஜியாங் பகுதிகளில் குதிரை வளர்ப்பு மற்றும் குதிரை ஏற்றத்தில் திறமையான கசாக், கிர்கிஸ் போன்ற இனக் குழுக்களின் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் பாரம்பரிய குதிரை ஏற்ற கலைகளை பள்ளிகளில் கற்பித்தனர். இவை கல்வி முறையின் ஒரு பகுதியாக மாறியது. இவற்றைத் தொடர்ந்துதான் உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

இவை ஆரம்ப காலத்தில் குறைவாக இருந்தாலும், கலாச்சார புரட்சிக்கு பிறகு 1980 ஆம் ஆண்டுகளில் சீர்திருத்தம், திறந்துவிடுதல் கொள்கையின் காலத்தில் இன சிறுபான்மை மக்கள் தனித்து விடப்படுகிறார்கள் என்ற நிலைமை உருவாகாமல் இருப்பதற்கு தீவிரமான முறையில் உறைவிடப் பள்ளிகளை உருவாக்கினார்கள். குறிப்பாக 1980 ஆம் ஆண்டுகளில் இனச் சிறுபான்மையினரின் கல்வி விரிவாக்கத்திற்காக உள்மங்கோலியா, ஜின்ஜியாங்க், மற்றும் திபெத்திய பகுதிகளில் இருந்த மேய்ச்சல் நிலம் மற்றும் மலைப்பகுதியில் வசித்தவர்களுக்கான தங்குமிட பள்ளிகளை அதிகமாக்கினார்கள். ஆரம்ப காலத்தில் துவக்கப் பள்ளிகள் மட்டும் தங்குமிட பள்ளிகளாக இருந்தது. பிற்காலத்தில் தேவையை கருதி இடைநிலைப் பள்ளிகள் வரை தங்குமிட பள்ளிகளாக மாற்றப்பட்டன. 2011ஆம் ஆண்டுகளில் உறைவிடப் பள்ளிகள் தொழிற்கல்விகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. உறைவிடப் பள்ளிகள் 1950 ஆம் ஆண்டுகளில் துவக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவில் விரிவுபடுத்தப்பட்ட ஒரு மாபெரும் திட்டமாக மாறியது

நவீன கல்விக்கான ஊற்றுக்கண்   

சீனாவில் கட்டாய கல்வி சட்டம் அமலாக்க வேண்டும் என்றால் உறைவிட பள்ளிகளின் தேவை அவசியமாகியது. அதிகாரப்பூர்வமாக தினமும் பள்ளிக்குச் சென்று வருவது தொலைதூரத்தில் இருக்கும் மாணவர்களுக்கு சாத்தியமற்றது. எனவே இப்பள்ளிகள் அமைக்கப் பட்டது. இந்த அமைப்பு கல்வி சமத்துவத்தை மேம்படுத்துவதையும், இன கலாச்சாரத்தை பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. தற்காலத்தில் நவீன கல்வி பாடத்திட்டத்தை கற்றுக் கொள்ளக் கூடிய வகையில் உறைவிடப் பள்ளிகளில் ஆய்வகங்கள், நூலகங்கள், கணினி அறைகள், உணவு கூடங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் உருவாக்கப் பட்டுள்ளன. அரசு அளித்திடும் நிதி உதவி என்பது மாணவர்களின் தங்குமிடம், உவுணக்கானது மட்டுமல்ல கல்விக்கட்டணமும், அத்தியாவசிய வாழ்க்கைச் செலவுகளையும் உள்ளடக்கியதாகும்.

திபெத்திய பகுதியில் மழையர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை 15 ஆண்டுகள் பொது நிதி உதவி மூலமாக கல்வியை வழங்குகிறார்கள். இந்தப் பள்ளியின் சேர்க்கை என்பது முற்றிலும் தன்னார்வமானது. தங்களின் குழந்தைகளை உறைவிடப் பள்ளி மாணவர்களாக சேர்ப்பதா வேண்டாமா என்பதை பெற்றோர்கள்தான் தேர்வு செய்து கொள்கிறார்கள். அருகில் இருக்கக்கூடிய மாணவர்கள் பகலில் படித்துச் செல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள். உறைவிட பள்ளி மாணவர்கள் வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் வீட்டிற்கு சென்று வருகிறார்கள். சீன அரசாங்கத்தின் கண்ணோட் டத்தின்படி புவியியல் சவால்களுக்கு இந்த பள்ளிகள் ஒரு நடைமுறை தீர்வாக உள்ளது. அதுமட்டுமல்ல வறுமை ஒழிப்புக்கான ஒரு கருவியாகவும், சிறுபான்மை மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குவதாகவும் இந்த உறைவிடப் பள்ளிகள் அமைந்துள்ளது. அதே நேரத்தில் சிறுபான்மை மக்களின் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் இந்த பள்ளிகளின் பாடத்திட்டங்களில் இருக் கின்றது.

மேற்கத்திய நாடுகளில் உறைவிட பள்ளிகள் பெரும்பாலும் உயர் குடி, செல்வந்த குடும்பங்களுக்கு சேவை செய்யக் கூடியதாகும். சீனாவில் அரசு நடத்தும் உறைவிட பள்ளி அமைப்பானது சாதாரண குடும்பங்களுக்கு சேவை செய்வதை முதன்மை பணியாக கொண்டுள்ளது. அரசாங்கத்தின் மானியங்கள் தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கான தரமான கல்விக்கு செலவு செய்யப்படுகிறது. இந்த உறைவிட பள்ளிகள் ஒரு நிலைத்த தன்மையை உருவாக்குகின்றன. இதன் மூலம் கல்வியில் வெற்றிபெறுவதும், ஒழுக்கமான சூழலில் வாழ்வதும் நன்கு கட்டமைக்கப்பட்ட கல்விசூழலையும் இந்த உறைவிடப்பள்ளிகள் உருவாக்குகின்றது என்று சீனா மற்றும் உலகமயமாக்கல் மையத்தைச் சேர்ந்த மரியூர் யூஜென்ஸ் கவாலோ தெரிவிக்கின்றார்.

இந்த உறைவிட பள்ளிகள் மூலமாக சிறுபான்மை மாணவர்களின் கல்வி அறிவு மேம்படுகிறது. இதனால் அவர்களின் குடும்பங்கள் மேல்நோக்கிய சமூக இயக்கத்தில் உள் நுழைவதும், சமூகத்தில் உயர் அந்தஸ்து கிடைப்பதும், அதிக வருமானமும் கிடைப்பதற்கான மதிப்பு மிக்க வழிகளை இந்த உறைவிட பள்ளிகள் வழங்கி இருக்கிறது. இதன் காரணமாக இனச் சிறுபான்மை உறைவிட பள்ளிகள் அப்பகுதி பெற்றோர்களால் அதிகம் விரும்பப்பட்ட பள்ளி முறையாகவும் உயர்ந்து நிற்கிறது.

திபெத்திற்கு அறிவு சார் உதவி

 

1980 ஆம் ஆண்டு அன்றைய சீன நாட்டின் பிரதமர் ஹூ யாவோ பாங் திபெத்திற்கு பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் போது திபெத்தின் வளர்ச்சி குறித்து பல்வேறு துறைகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் அடிப்படையில் கல்வித்துறையில் போதுமான வளர்ச்சி ஏற்படவில்லை என்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டு, அரசு சார்பிலும், சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் கூடுதல் கவனம் செலுத்தக்கூடிய முறையில் திபெத் திற்கான அறிவுசார் உதவி என்ற ஒரு சிறப்பு திட்டத்தை உருவாக்கி னார்கள்.இந்தத் திட்டத்தின் படி திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள உள்ளுர் அரசாங்கமும், மத்திய அரசும் இணைந்து பல திட்டங்களை உருவாக்கியது மட்டுமல்ல, சீனாவின் வளர்ச்சி அடைந்த பகுதியான கிழக்கு சீனாவில் இருந்த மாகாண அரசுடன் ஒப்பந் தங்களை ஏற்படுத்தி திபெத்தின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டார்கள்.

கிழக்கு மாகாண அரசுகளின் உதவியுடன், திபெத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக 1984 ஆம் ஆண்டு முதல் பெய்ஜிங், தியான்ஜின், சோங்கிங், ஹெனான், ஹெபே, ஷான்டாங், ஜியாங்சு, ஷான்சி, ஹுனான், ஹூபே, அன்ஹுய், ஷான்சி மற்றும் யுன்னான் ஆகிய இடங்களில் திபெத்தியர்களுக்காக சிறப்பு வகுப்புகளை அரசாங்கம் நடத்தி வருகிறது. திபெத்திற்குத் தேவையான திறமையாளர்களைப் பயிற்றுவிப்பதே இதன் நோக்கம். இந்த உறைவிடப் பள்ளிகளில் இடைநிலைக் கல்வியும், மேம்பட்ட மேல்நிலைக் கல்விகளும் போதிக்கப்படுகிறது. சீனியர் மற்றும் இடைநிலை அளவில் தொழிற்கல்விகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக 11 முதல் 14 வயதுடைய திபெத்திய குழந்தைகள் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இந்த சிறப்பு உறைவிட பள்ளிகளுக்கு வருகிறார்கள். அவர்களின் அனைத்து செலவுகளும் அரசாங்கத்தால் செய்யப்படுகிறது. இந்தப் பள்ளிகளை நடத்துவதற்கு ஒரு கூட்டு நிதி ஒப்பந்தமும் போடப்பட்டது.

இந்தத் திட்டம் நாடு முழுவதும் விரிவடைந்த பொழுது 1985 ஆம் ஆண்டு திபெத்திய தன்னாட்சிப் பகுதி மாணவர்கள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின் மூலமாக பயன் அடைந்தார்கள். இந்த உறைவிட பள்ளிகளில் படித்த ஒட்டுமொத்த திபெத்திய மாணவர்களில் 70% விவசாய குடும்பத்திலிருந்தும் மேச்சல் நில குடும்பத்திலிருந்தும், நாடோடி வாழ்க்கை நடத்தும குடும்பத்திலிருந்தும் வந்தவர்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது. 20% மட்டுமே நகர்ப்புறங்களில் இருந்து உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்தவர்கள். இந்தப் பள்ளிகளில் 10% திபெத்தில் பணியாற்றக்கூடிய பெரும்பான்மை ஹான் இன பிரிவுகளின் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டது. உறைவிடப் பள்ளிகளில் படித்த திபெத்திய மாணவர்களில் 90% பேர் திபெத்திற்கு திரும்பி அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டார்கள். உயர்கல்வி படிக்க விருப்பப்பட்டவர்கள் அதற்கான வாய்ப்புகள் அரசால் வழங்கப்பட்டது. மிகவும் பின்தங்கிய கடுமையான இயற்கை சூழலை கொண்ட திபெத்தில் கல்வி வளர்ச்சிக்கு மத்திய அரசும், வளர்ந்த மாநிலங்களும் செய்த உதவிகள் மூலமாக, சீனாவில் மற்ற பகுதி மாணவர்களுக்கு இணையான கல்வியை திபெத் மாணவர்கள் பெற முடிந்தது.

மற்றொரு முக்கிய மாகாணம் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பகுதியாகும். 2000 ஆண்டு இலையுதிர் காலத்தில் மட்டும் இங்கு உள்ள இனச் சிறுபான்மை மாணவர்களுக்காக 12க்கும் மேற்பட்ட உறைவிட பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஒரு சில மாகாணங்களை தேர்ந்தெடுத்து அந்த மாகாணங்களில் இருந்த 21 நகரங்களில் சிறுபான்மையினருக்கான உறைவிடப் பள்ளிகளை உருவாக்கினார்கள். 2017 ஆம் ஆண்டில் 14 வெவ்வேறு மாகாணங்களில் உள்ள 45 நகரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட உறைவிடப் பள்ளிகளை இனச் சிறுபான்மையினருக்காக மட்டும் அமைத்தனர். இந்த 45 நகரங்களில் இருந்த உறைவிடப் பள்ளிகளில் பல்வேறு இனச் சிறுபான்மையினர் படித்தாலும் ஜின்ஜியாங்க் மாகாணத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்தார்கள். இவர்கள் அனைவரும் வறட்சி நிறைந்த பகுதிகளில் இருந்து படிக்க வந்தவர்கள் குறிப்பாக உய்குர் இஸ்லாமிய இனச் சிறுபான்மையினராக இருக்கக்கூடிய மாணவர்கள் இதில் அதிகமாக சேர்ந்திருக்கிறார்கள்.

இங்குள்ள உறைவிட பள்ளிகளில் படிக்கிறவர்கள் உயர்கல்விக்காக சீனாவின் புகழ்பெற்ற பெய்ஜிங், பூடான் பல்கலைக் கழகங்களில் அதிகமான அளவிற்கு சேர்கிறார்கள். திபெத்தியர்கள், உய்குர் தவிர உய், கசாக், சலார் போன்ற பிற இனச் சிறுபான்மையினரும் உறைவிட பள்ளிகளில் அதிகமான அளவு சேர்கிறார்கள். இந்த உறைவிடப் பள்ளிகளில், துவக்கப்பள்ளி பாடங்கள், இடைநிலைப் பள்ளி பாடங்கள், தொழிற்கல்வி பாடங்களை கடந்து பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான பிரதான கல்வி முறைகளை கற்றுக் கொடுப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

சீனாவில் இனச் சிறுபான்மையினருக்கான உறைவிட பள்ளிகள், ஒழுக்கம் நிறைந்ததாகவும், தேவையான கட்டுப்பாடுகளுடனும், உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடிய முறைகளிலும் நடத்தப்படுகிறது. உறைவிடப் பள்ளிகள் சீன மாணவர்களுக்கு புதிதல்ல. வரலாற்று வழியில் பல்வேறு அனுபவங்கள் அவர்களுக்கு இருக்கிறது. இனச் சிறுபான்மையினருக்கு இது புதிய சூழலாகவும், புதிய முறையாகவும் இருந்தது. அவர்களின் புதிய சூழலை கணக்கில் கொண்டு வார விடுமுறைகளுக்கு குடும்பத்துடன் இருப்பதும், விடுமுறை நாட்களில் வீடுகளுக்கு செல்வதற்கும் போதிய வசதிகளை செய்து கொடுத்தார்கள். இதற்கு ஏற்ற வகையில் உறைவிட பள்ளிகளை மேம்படுத்துகிறார்கள். மற்றொரு குறிப்பிட்ட சொல்லக் கூடிய அம்சம் பெரும்பான்மை இனமான ஹான் இன மாணவர்களும் உறைவிட பள்ளிகளில் படிப்பதால் இன ஒற்றுமைக்கான அடித்தளம் அங்கே உருவாக்கப்படுகிறது.

அ.பாக்கியம்

 

70 உய்குர் ஒற்றுமை பேணுதல்

  அ.பாக்கியம் திபெத் உலகத்தின் கூரை என்றால் ஜின்ஜியாங் மாகாணம் கனிம வளங்களின் களமாக பரந்து விரிந்து கிடக்கிறது. சீனாவின் மொத்த எண்ணெய் இ...