Pages

வியாழன், ஏப்ரல் 02, 2026

சடங்குத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட படத்திறப்பு கூடுகை:





சடங்குகளாகவும் சம்பந்தப்படாதவர்களின் உரைகளாகவும் படத்திறப்பு நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கக் கூடிய காலகட்டத்தில், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சடங்குத்தனத்தை முறியடித்த  படத்துக்காக இது அமைந்தது.

 மறைந்த தோழரின் சமகாலத்தில் களத்தில் பணியாற்றிய தோழர்களாலும், அவர்களால் உருவாக்கப்பட்ட தோழர்களின் பங்கேற்பாலும் , மறைந்த தோழர்களின் உறவுகளாலும் அரங்கம் நிரம்பி வழிந்த நிகழ்வாக தோழர். S.M. லூர்து அவர்களின்  படத்திறப்பும், அவரோடு பணிபுரிந்தவர்களும், அதற்குப் பிறகு இயக்கத்தில் பயணித்து மறைந்து போன 35 தோழர்களின் பட திறப்பும், 28.03.26 அன்று மாலை 5:30 மணி அளவில் வியாசர்பாடி சர்மா நகரில் என் பி மகாலில் நடைபெற்றது. 

நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து நிறைவுறுகிற வரை இறுக்கமும், நெகிழ்ச்சியும், சில பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த தோழர்களின் உணர்வுகளும் அரங்கத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் திட்டமிட்ட முறையில் துவங்கி குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டது.

தோழர். லூர்து அவர்களின் குடும்பம் முழுமையாக நிகழ்வில் பங்கு பெற்றனர். 120 தோழர்களின் பெயர் பட்டியலை எடுத்து அழைப்பு கொடுத்திருந்தாலும் 180 இருக்கையில் போடக்கூடிய அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் 240 தோழர்கள் கலந்து கொண்டது மறைந்த தோழர்களின் மகத்தான பணிகளை வெளிப்படுத்தியது.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை தோழர்கள். அ. பாக்கியம்-மு. துரைப்பாண்டியன் இருவரும் முன்னெடுத்திருந்தாலும், தோழர்கள். எஸ் ஏ. வெற்றி ராஜன், திருவேட்டை, ஜபருல்லா, விஜயன், சந்தியாகு, மோகன், போன்றவர்கள் களத்தில் நின்று எங்களுடன் இணைந்து நிகழ்ச்சியை சிறப்புற அமைத்துக் கொடுத்தார்கள். நிகழ்ச்சிக்கான நிதி உதவியை தானே முன்வந்து பல தோழர்கள் உதவி செய்தது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய செயலாகும்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் எஸ்.ஏ வெற்றி ராஜன் முதலில் பேச, தோழர் எம்.துரை பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி 1980 ஆம் ஆண்டுகளில் துவங்கி பல தோழர்களின் பணிகளை குறிப்பிட்டு முடித்தார். தோழர் அ .பாக்கியம், லூர்து அவர்களின் பணியும் அப்பகுதியில் இயக்கம் எதிர்கொண்ட சவால்களையும் சுருக்கமாக எடுத்துரைத்தார். Repco வங்கியின் தலைவர் E .சந்தானம் அவர்கள் தனது இந்த உயர்வுக்கு லூர்து போன்றவர்களின் செயல்கள் காரணம் என்பதையும் நினைவு கூர்ந்தார். தோழர்கள் கலைச்செல்வன், திருவேட்டை, டி கே சண்முகம் போன்ற தோழர்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.

தோழர். எஸ் எம் லூர்து அவர்களுடன் இணைந்து பயணித்த தோழர், சிறுவயதிலிருந்தே நண்பர்களாகவும், வாழ்விடத்திலும் பணியிடத்திலும், இயக்கத்திலும் இணைந்தே பயணித்த தோழர்.A. ராமு அவர்கள் மறைந்த தோழர் லூர்து அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையை நிகழ்த்தினார்.

 அரங்கத்தில் இருந்த பலரின் கண்கள் கண்ணீரால் நனைந்தது. உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு நடக்க முடியாத சூழ்நிலையிலும் தோழர் ராமு அவர்களும் அவர்களது குடும்பமும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இக்காலத்தில் மறைந்த தோழர்கள் 35 பேர்களின் படத்தை தோழர் அ.சௌந்தரராஜன் திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். நான் நிகழ்வுக்கு வருவதற்கு முன்பாக வழக்கமான ஒன்று என நினைத்துக் கொண்டு வந்தேன். ஆனால் இங்கு வந்தவுடன் இந்த அரங்க சூழலும், மறைந்த தோழர்களின் படங்களும் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. ஒரு விதமான உணர்வுகளின் நடுக்கம் என்னை ஆட்கொள்கிறது என்று பேசினார். அவசரநிலை காலத்தில் இருந்து தோழர் லூர்து ராமு மற்றும் முக்கிய தோழர்களுடன் பணியாற்றியதை நினைவு கூர்ந்தார்.

தோழர் வே மீனாட்சி சுந்தரம் இக்காலங்களில் மாவட்டச் செயலாளராக இருந்து வழிகாட்டியவர். வடசென்னை பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு வியாசர்பாடி தோழர்களின் பங்கு என்பது மிக முக்கியமானது. தோழர் லூர்து போன்ற மிகத் துணிச்சலான, அர்ப்பணிப்பு மிக்க, அடுத்தவர்களை ஈர்த்து செயல்படக்கூடிய வல்லமை நிறைந்தவரின் பணியை நினைவு கூர்ந்தார். தோழர் லூர்து அவர்களின் மூத்த சகோதரர் மகள் செல்வி கவிதை வாசித்தார்.

நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் தோழர். எம் ராமகிருஷ்ணன், மாநில குழு உறுப்பினர் தோழர் L.சுந்தர்ராஜன், முன்னாள் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் கே மகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராணி பகுதி செயலாளர் எம் விஜயகுமார் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜ்குமார் நித்யராஜ், எம். பகவதி போன்ற தோழர்களும் கலந்து கொண்டார்கள். செங்குன்றத்திலிருந்து தோழர் லூர்து அவர்களின் பணியால் ஈர்க்கப்பட்ட எம் வீ நக்கீரன் அவர்களும், பெரியமேட் பகுதியில் இருந்து தோழர்கள் மனோகரன், சரளா, ராஜாமணி, உட்பட பல தோழர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் முதுகுளத்தூர் தாலுகாவின் செயலாளராக பணியாற்றி தற்போது மாவட்ட குழு உறுப்பினராகவும் முழு நேர ஊழியராகவும் செயல்படக்கூடிய தோழர். முருகன் அவர்களும் வருகை தந்து கலந்து கொண்டார்.

தோழர். பாக்கியம் அவர்கள் நிகழ்வு நிறைவடைவதற்கு முன்பாக ஒரு வேண்டுகோளை முன் வைத்தார் தோழர் லூர்து, அமலதாஸ், சூசை மைக்கேல், சந்தியாகு என பல தோழர்கள் ஓட்டுநர் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்ற பொழுது சாஸ்திரி நகர் பக்தவச்சலம் காலனி சத்தியவாணி முத்து நகர் பகுதிகளில் இருக்கும் கிளைகள் பயன்படுத்தக்கூடிய முறையில் ஒரு நூலகம் கட்ட வேண்டும் என்று நிதி வசூல் செய்து 1986 ஆம் ஆண்டு பணம் அனுப்பி வைத்தார்கள். அந்தப் பணத்தின் மூலம் சாஸ்தி நகர் 3வது தெருவில் தோழர் ராமு அவர்களின் தந்தையார் நடத்தி வந்த கடையை விலை கொடுத்து வாங்கி எனது பெயரில் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அடுத்தடுத்து வந்த பகுதி குழு தோழர்கள் அந்த இடத்தை விற்பனை செய்து சர்மா நகர் பிரதான சாலையில் பகுதி குழுவிற்கான இடம் வாங்கினார்கள். காலப்போக்கில் அதையும் விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த அதிக தொகை வைத்து தற்பொழுது புது நகர் எட்டாவது தெருவில் செயல்படக்கூடிய பெரம்பூர் பகுதி குழு அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்துக்கான அடித்தளம் பழைய தோழர்களால் போடப்பட்டது. எனவே அரங்கத்தில் தோழர் ராமு அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தோழர் லூர்து அவர்களின் பெரும் படத்தை பகுதி குழு அலுவலகத்திற்கு கொடுப்பது என்றும், அங்கு மறைந்த தோழர்களின் நினைவாக அவர்கள் எந்த நோக்கத்திற்காக நூலகம் அமைக்க வேண்டும் என்று விரும்பினார்களோ அதன் ஒரு பகுதியாக நூலகத்தை அமைக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

நிறைவாக மறைந்த தோழருக்கான மௌன அஞ்சலியுடன் நிகழ்ச்சி முடிவடையும் முன்பாக, சாஸ்திர நகர் கிளைச் செயலாளர் ஜபருல்லா அவர்கள்  கடந்த கால தோழர்களின் பணியினை முன்னெடுப்போம், தடம் பதித்து வரலாற்றின் வடம் பிடிப்போம் என்று சபதம் ஏற்றார்.

லூர்து அவர்களின் படத்தையும் 35 மறைந்த தோழர்களின் படத்தையும் உயிர்ப்புடன் உருவாக்கிக் கொடுத்து, அழைப்பிதழ், டிஜிட்டல் பேனர், சுவரொட்டிகள் போன்ற வற்றை கலை நுட்பத்துடன் வடிவமைத்து கொடுத்த ஓவியர் வசந்த் அவர்களுக்கு, வீடியோ பதிவு செய்த தோழர் சரவணன் அவர்களுக்கும், தீக்கதிர் ராம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு படத்திறப்பு அவரின் பணியினை மட்டும் நினைவு படுத்தாமல் அவரோடு இணைந்து இருந்த வரலாற்று நிகழ்வுகளையும் அவர்களுடன் பயணித்த தோழர்களின் பணிகளையும், பல்வேறு இடங்களில் பிரிந்து கிடந்த தோழர்களின் இணைப்பையும் ஏற்படுத்தியதாக பன்முகத்தன்மையுடன் அமைந்தது. இந்த நிகழ்வை சிறப்புடன் அமைத்துக் கொடுக்க உழைத்திட்டவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் நிதி உதவியை வழங்கியவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர். அ. பாக்கியம்

ஆற்றல்மிகு அடிகளாருடன் சந்திப்பு:

 









நான் எழுதிய சீன சோசியலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும் என்ற புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கிய அய்யா வைகுண்டர் தலைமை பதி திரு திரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் அவர்களை குமரி மாவட்டம் சுவாமி தோப்பில் சந்தித்து நன்றி தெரிவித்து வந்தேன்.

எங்களை அன்புடன் வரவேற்று நான் தான் உங்களை கௌரவிக்க வேண்டும் என்று எனக்கு பட்டாடை போர்த்தி மற்றவர்களையும் கவனித்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் உரையாடினார்.

எனது புத்தகத்திற்கு சிறந்த அணிந்துரை வழங்கியமைக்காக நான் நன்றி தெரிவித்த பொழுது நீங்கள் எனக்கு அணிந்துரை அளிப்பதற்காக கொடுத்த வாய்ப்பு இருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.

அய்யா வைகுண்டரின் வழிகளைப் பற்றியும், தற்போது வகுப்புவாத சனாதன சுயநலமிகள் கொடுக்கக்கூடிய தொல்லைகளை எடுத்துரைத்தார்.

மண்டைக்காடு அம்மனை ஆக்கிரமிக்க நினைத்த வகுப்புவாதிகளிடமிருந்து குன்றக்குடி அடிகளார் உடன் இணைந்து நடத்திய போராட்டங்களை நினைவு கூர்ந்தார்.

அவருக்கு வகுப்புவாதிகளால் ஏற்படக்கூடிய தொல்லைகளிலிருந்து பாதுகாக்க கூடிய பணியில் குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி செய்த பெரும் பணிகளையும் நினைவுக்கு கொண்டு வந்தார்..

சட்டப் போராட்டங்களில் கிடைத்த அனுபவங்களும் அரிய தகவல்களையும் எடுத்துச் சொன்னார் அவையெல்லாம் தனியாக எழுத வேண்டும்.

அவரை சந்தித்து விட்டு நான் மண்டைக்காடு சென்று கொண்டிருந்த பொழுது இடையிலையே என்னை தொலைபேசியில் அழைத்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தொலைக்காட்சியில் பேசிய விஷயத்தையும் அடிகளார் புத்தகத்தின் அணிந்துரையில் எழுதியுள்ளவற்றையும் தெரிவித்தார்.

அய்யா வைகுண்டரின் சமத்துவ கருத்துக்களைப் பற்றி நீங்கள் உங்கள் நடையில் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று தெரிவித்தார். நானும் மனம் மகிழுடன் ஏற்றுக் கொண்டேன். அதற்கான சில விவரங்களையும் தெரிவித்தார் தொடர்ந்து தெரிவிக்கிறேன் என்றார்.

விடைபெறுகிற பொழுது ஒரு வார்த்தை சொன்னார் அதாவது வகுப்புவாதிகளுடன் நடக்கக்கூடிய மோதல்களில் நாங்கள் அய்யா வைகுண்டரை தெய்வமாக்க பார்க்கிறோம் நீங்கள் மனிதனாகவே வைத்திருக்க பார்க்கிறீர்கள் என்று அவர்கள் அழுத்தம் கொடுக்கக் கூடிய விஷயத்தையும் சொல்லி முடித்தார்.

என்னுடன் குமரி மாவட்ட மூத்த தோழர் முருகேசன் அவர்களும் (இவரைப் பற்றி தனியாக எழுதுகிறேன்) தீக்கதி முருகேசன் அவர்களும், சீனாவின் தொடரை வெளியீட்டையும் புத்தக வெளியிட்டயும் இணைந்து வெளியிட்டுள்ள தமிழ் மார்க்ஸ் இணையதள பவுண்டேஷனின் வழக்கறிஞர் தோழர் ஜோதி அவர்களும், தென்காசி தாலுகா செயலாளர் தோழர் பட்டாபிராமன் அவர்களும் வந்திருந்தார்கள்.

ஏழாம் தேதி கன்னியாகுமரி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் திருவனந்தபுரம் இ எம் எஸ் அகாடமியில் நடைபெற்றது. இந்த வகுப்பில் மனித குல வரலாறு என்ற தலைப்பில் பவர் பாயிண்ட் முறையில் வகுப்பெடுத்தது நிறைவாக இருந்தது. புதியவர்களை சந்திப்பதும் அவர்களுடன் கலந்துரையாடுவதும் பலன் மிக்கது.

அங்கிருந்து தோழர்கள் ஸ்டீபன் மற்றும் சசியுடன் இணைந்து நாகர்கோவிலுக்கு வந்த பொழுது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  தோழர்.லீமா ரோஸ் அவர்களின் இல்லம் சென்று நலம் விசாரித்து விட்டு நாகர்கோவில் வந்து சேர்ந்தேன். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக அடிகளாரையும் சந்தித்தது நிறைவான ஒன்றாகவும் புதிய பணிகளுக்கான தேவை இருப்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. தோழர் பட்டாபிராமன் உடன் இருந்து ராஜாக்கமங்கலம் மற்றும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். கட்டிட சங்கத்தின் மாநில தலைவர் ராஜா க மண்டலத்தில் குடியிருக்கும் KP பெருமாள் அவர்களையும், சந்திக்கும் வாய்ப்பும், ராஜாக்கமங்கலத்தில் வாலிபர் சங்கத்தின் கட்டி வளர்த்த வரும் இடதுசாரிய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய வருமான தோழர் சந்திரன் அவர்களுடன் பேசுவதற்கான தருணமும் அமைந்தது.

அ. பாக்கியம்

தோழர் ஆர். என். கே.அவர்களுக்கு வீரவணக்கம்.

 


101 ஆண்டுகள் பொதுவுடமை வாழ்க்கையின் இலக்கணமாய் வாழ்ந்து காட்டி மறைந்துள்ளார். யாரும் வாழ முடியாத வாழ்க்கையை வரலாற்றில் பதிவு செய்துள்ளார்.  போராட்டங்களும் சிறை கொட்டடிகளும் அவரின் அன்றாட வாழ்வுகளாக மாறியது. உடல் அனுமதிக்கிற வரை முடங்கி விடாமல் இயங்கிக் கொண்டே இருந்தார்.

எளிமையாய் வாழ்ந்தார் என்று ஒற்றை வரியில் சடங்குபூர்வமான வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. டீக்கடைகளில் டீ குடிப்பதும் தோளில் கை போட்டு பேசுவதும்  பயண நேரங்களில் காத்திருப்பதும் எளிமை என்று எடுத்துக் கொள்ளக்கூடிய காலம் இது. கம்யூனிஸ்டுகள் அவ்வாறு இருப்பது எளிமையல்ல. அது கம்யூனிஸ்டுகளின் அடையாளம். மாக்ஸிம் கார்க்கி அவர்கள எளிமையை பற்றி பேசுகிற பொழுது எளிதில் அணுகக் கூடியவராக லெனின் வாழ்ந்தார் என்பார். அதுபோல் தோழர் ஆர். என். கே. அவர்கள் அனைவராலும் எளிதில் அணுகக்கூடிய எளிமையானவராக இருந்தார். எளியவர்களிடம் பாசத்தோடு பேசக்கூடியவராக, தான் தலைவர் என்ற அனைத்து இடைவெளிகளையும்  புறம் தள்ளி அவர்களின் ஒருவராக அணுகக் கூடியவர்.

கிளைச் செயலாளர், இடைக்கம்பட்டி செயலாளர், மாவட்ட பொறுப்புகள், மாநில விவசாய சங்க செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர், அகில இந்திய தலைவர்களின் ஒருவராக அமைப்புகளின் அனுபவங்களையும் போராட்டங்களின் அனுபவங்களையும்  பெற்றிருந்த பெரும் தலைவர்.

 தனிநபர் தொடர்புக்கும், தோழமைக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். எனது குடும்பம் பல்லாவரத்தில் குடியிருந்த பொழுது  தோழர் ஆர்.என்.கே அவர்கள் தோழர்கள் டாக்டர் ரவீந்திரநாத் சாந்தி அவர்களின் மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் வருகிற பொழுதெல்லாம் எங்களது வீட்டிற்கும் தவறாது வந்து செல்வார். எங்கள் வீட்டை கடந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டால் வீட்டிற்கு வந்துவிட்டு அதன் பிறகு ரவீந்திரநாத் அவர்களின் வீட்டிற்கு செல்வார். தோழர் ரவீந்திரநாத் அவர்கள்  எனது மருத்துவ பரிசோதனைக்காக தோழர் ஆர்.என்.கே அவர்களின் மகள் மருத்துவர் ஆண்டாள் அவர்களிடம் அனுப்பி வைத்தார். அதை அறிந்த தோழர் ஆர்.என்.கே அவர்கள் தொடர்ச்சியாக எனது உடல்நிலை பற்றி வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் விசாரித்துக் கொண்டே இருப்பார். எனது எழுத்துக்கள் எதையாவது வாசிக்க வாய்ப்பு இருந்து வாசித்து விட்டால் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதன் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார். எனக்கு மட்டுமல்ல அவருக்கு அறிமுகம் இல்லாத எழுத்தாளர்கள் எழுதினாலும் சிறப்பாக இருந்தால் தன்னுடைய கருத்துக்களை நேரடியாக பேசி விடுவார். தான் ஒரு உயர்ந்த பொறுப்பில் அல்லது கமிட்டிகளில் இருக்கிறோம் என்ற எண்ணம் என்றுமே வெளிப்பட்டதாக காண முடியாது. பகட்டுகளையும், பந்தா அரசியலையும் வெறுக்கக் கூடியவராக இருந்தார்

தனது முதிர்ந்த வயதுகளிலும் நிகழ்வுகளுக்கு அழைத்தால் மறுக்காமல் இயன்றவரை கலந்து கொள்வார். சில ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தோழர் நக்கீரன் அவர்களின் இளைய மகன் திருமணத்திற்கு வரவேண்டும் என்று நானும் அவரும் சென்று கேட்ட பொழுது, அவர் வர முடியாத நிலையில் இருந்தார். ஆனாலும் காணொளி மூலமாக மணமக்களை வாழ்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்றிக் கொடுத்தார். தோழர்களின் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு அவர்களின் உள்ளங்களில் உயர்ந்து நின்றார்.

தமிழக பொதுவுடமை இயக்கத்தின் பெரும் அடையாளமாக எண்ணற்ற முன்னுதாரணங்களை தன்னுடைய வாழ்க்கையின் மூலமாக வருங்கால தலைமுறைகளுக்கு வழங்கிச் சென்றிருக்கிறார்.

தோழர் ஆர் என் கே அவர்களுக்கு வீரவணக்கம்.

வியாழன், மார்ச் 26, 2026

65 இனச் சிறுபான்மையினரின் கல்விச் சாதனைகள்


அ.பாக்கியம்

1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட கல்வி வளர்ச்சித் திட்டங்களில் இனச் சிறுபான்மையினருக்கான கல்வி திட்டம் என்பது ஒரு முக்கிய அங்கமாக மாறியது. முதல் 50 ஆண்டுகள் வரை அதாவது 1998 ஆம் ஆண்டு வரை இனச் சிறுபான்மையினர் கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றங்களை பெருமைமிகு வளர்ச்சியாக சீன மக்கள் குடியரசும் இனச் சிறுபான்மையினரும் கருதுகின்றனர்.

1997 ஆம் ஆண்டு தரவுகளின் படி 18.15 மில்லியன் இனச் சிறுபான்மை மாணவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக  உள் மங்கோலியா, நிங்சியா, ஜின்ஜியாங், திபெத், கிங்காய், குவாங்சி, குய்சோ மற்றும் யுன்னான் ஆகிய சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பிரதேசங்களில் படிக்கும் வயதுடைய மொத்த குழந்தைகளின் சேர்க்கை விகிதம் 97.65 சதவீதமாக உயர்ந்தது. இதே பகுதிகளில் பெண்களின் சேர்க்கை விகிதம் அதுவரை இல்லாத அளவிற்கு 97.05% என்ற அளவில் உயர்ந்தது என்றால் மாற்றங்களின் வேகத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏற்றம் பெற்ற கல்வி நிலையங்கள்

இனச் சிறுபான்மை மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு விதமான கல்வி நிலையங்கள்உருவாக்கப்பட்ட . 1997ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட வகையில் கல்வி நிலையங்கள் செயல்பட்டு வந்தது. 101 உயர்கல்வி பொதுப்பள்ளிகள் செயல்பட்டன. இந்தப் பள்ளிகளில் இளங்கலை பட்டங்கள், அதற்கு ஏற்பட்ட படிப்புகளையும் வழங்கும் பாடத்திட்டங்கள் அமைந்திருந்தது. இந்த பள்ளிகளின் நோக்கம் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் இனச் சிறுபான்மை மாணவர்கள் செல்வதற்கான படிப்பு முறைகள் இருந்தன. ஜூனியர் மற்றும் சீனியர்  உயர்நிலைப் பாடங்களை கற்றுக் கொடுக்கக்கூடிய 11,563 நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டது. குழந்தைகளுக்கு அடிப்படையான கட்டாய கல்வியை வழங்கக்கூடிய 1,03,139 தொடக்கப் பள்ளிகள் இருந்தன. இனச் சிறுபான்மை யினருக்கான கலாச்சாரங்கள் மொழிகள் போன்றவற்றில் பயிற்சி அளிப்பதற்காக இனச் சிறுபான்மை பிராந்தியங்களில் பணிபுரிவதற்கான ஊழியர்களையும் நிபுணர்களையும் உருவாக்கக்கூடிய 12க்கும் மேற்பட்ட சுயாதீனமான தேசிய நிறுவனங்கள் செயல்பட்டன. 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி பள்ளிகள் உயர்நிலைக் கல்வியை போதிப்பதற்காக உருவாக்கப்பட்டு இருந்தது.

மழலையர் பள்ளிகளுக்கும் தொடக்கப் பள்ளிகளுக்கும் தேவையான அளவு ஆசிரியர்களை உருவாக்கக்கூடிய நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதே நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கு தொழிற்கல்வி பயிற்றுவிக்கப் பட்டது. 2900க்கு மேற்பட்ட தேசிய இன உறைவிட பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்தது. சிறுபான்மை மாணவர்களுக்கான இன மொழி கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பாடத்திட்டங்கள் இந்த உறைவிடப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டன.

300க்கும் மேற்பட்ட தேசிய இன தொழில்முறை நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டது. இந்த தொழில்முறை நடுநிலைப் பள்ளிகளில் சிறுபான்மை பிராந்தியங்களுக்கான பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப பயிற்சியும், தொழிற்கல்வி பயிற்சியும் இவற்றில் வழங்கப்பட்டன. 2500 க்கு மேற்பட்ட தேசிய இன தொடக்கப்பள்ளிகள் இருந்தது. சிறுபான்மை இன குழந்தைகளுக்கான தொடக்கப் பள்ளிகளில் இனம் சார்ந்த மரபுகளையும்,  மொழிகளுடன் கூடிய பயிற்சிகளும்  வழங்கப்பட்டன. மிக அதிகமான மேய்ச்சல் நிலப்பகுதிகளும், மலைப்பகுதிகளும் இருக்கக்கூடிய 270 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு இந்தப் பகுதிகளில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறைவிட பள்ளிகளை உருவாக்கி இருந்தார்கள்.

மேற்கண்ட அடிப்படையான கல்வி அமைப்புகள் தவிர மாணவர்கள் உயர்கல்வியில் நுழைவதற்கான கல்வி தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய முறையில் 200க்கும் மேற்பட்ட சிறப்பு கல்வி நிறுவனங்களின் அமைத்திருந்தார்கள். சீன மக்கள் குடியரசும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் எடுத்த முயற்சிகள் சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்விச் சாதனைகளை உருவாக்கியது.

திபெத்தில் சிறப்பு முயற்சிகள்

மிகவும் கடுமையான இயற்கை சூழலை கொண்டிருந்த திபெத்திய பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்றால் கல்வி முறையில் வளர்ச்சி மிகவும் அவசியமாக இருந்தது. சீர்திருத்த காலங்களுக்குப் பிறகு அதாவது 1984 ஆம் முதல் திபெத்தில் இருக்கக்கூடிய மாணவர்கள் திபெத்திற்கு வெளியே வந்து உயர்கல்வியில் பயிற்சி பெறுவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கினார்கள். அந்தத் திட்டத்தின்படி பெய்ஜிங், தியான்ஜின், சோங்கிங், ஹெனான், ஹெபே, ஷான்டாங், ஜியாங்சு, ஷான்சி, ஹுனான், ஹூபே, அன்ஹுய், ஷான்சி மற்றும் யுன்னான் ஆகிய இடங்களில் திபெத்தியர்களுக்காக சிறப்பு வகுப்புகளை அரசாங்கம் நடத்தி வருகிறது.

திபெத்திற்கு தேவையான திறமையாளர்களை பயிற்றுவிப்பதே இந்த கல்வி நிலையங்களின் நோக்கமாக இருந்தது. பெரும்பாலான வகுப்புகள் தொழிற்கல்வியுடன் இணைந்து ஏழு ஆண்டுகள் கற்பிக்கப்பட்டது. இந்தப் பள்ளிகளுக்கு 11 முதல் 14 வயதுடைய திபெத்திய குழந்தைகள் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று படிக்க வருகிறார்கள். இவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. பட்டம் பெற்றதும் அவர்கள் அனைவரும் திபெத்திற்கு வேலை செய்வதற்காக திரும்புகிறார்கள். தங்களது படிப்பை தொடர விரும்புகிற ஒரு சிலருக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்படுகிறது. மற்றவர்கள் திபெத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்ற முன்னுரிமையில் இந்தப் பள்ளிகள் நடத்தப்பட்டன.

சீனாவின் வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் பொருளாதார ரீதியாக வறுமையில் இருந்த மாவட்டங்களில் உள்ள இனச் சிறுபான்மையினர் கல்வி வளர்ப்பதற்கு பெரும் உதவி செய்தார்கள். சுமார் 80க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கும் துவக்கப் பள்ளிகளுக்கும் நிதி உதவி செய்தனர். 4000 மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உதவி செய்ததுடன் இடையில் நின்று போகும் மாணவர்களை மீண்டும் படிக்க வைப்பதற்கான உதவிகளையும், லட்சக்கணக்கான மதிப்புகள் உடைய கற்பித்தல் பொருள்களையும் வழங்கி இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வியை மேம்படுத்த ஊக்கப்படுத்தினார்கள். கல்வியில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இந்தக் கொள்கை கடைபிடிக்கப்படுகிறது.

சீனாவின் மக்கள் தொகை அடிப்படையில் இனச் சிறுபான்மையினர் ஒன்பது(8.89) சதவீதம் மட்டுமே. 1949 ஆம் ஆண்டு உயர்கல்வி சேர்க்கையில் இன சிறுபான்மையினர் ஒரு சதவீதம் மட்டுமே இருந்தனர். 2000 ஆண்டு இந்த எண்ணிக்கை ஆறு சதவீதமாக உயர்ந்தது. பல்கலைக்கழக சேர்க்கை அடிப்படையில் பார்க்கின்ற பொழுது 2000ம் ஆண்டிலும் உயர்கல்வியில் இனச் சிறுபான்மையினர் ஒட்டுமொத்த சீனாவுடன் ஒப்பிடுகிற பொழுது பின்தங்கி இருந்தனர். 2015 ஆம் ஆண்டு சீன அமைச்சரவை இனச் சிறுபான்மை கல்வியின் வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து திட்டங்களை உருவாக்கியது.

2020 ஆம் ஆண்டிற்குள் இனச் சிறுபான்மை பகுதிகளில் கல்வியின் வளர்ச்சி ஒட்டுமொத்தமான தேசிய கல்வி வளர்ச்சிக்கு நிகராக இருக்க வேண்டும் என்றும் அல்லது அதைவிட அதிகமாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தனர். எந்த ஒரு சிறுபான்மை பிராந்தியத்தையும் அல்லது சிறுபான்மையினரையும் பின்தங்க விடக்கூடாது என்றும், இனச் சிறுபான்மை கல்வியின் அனைத்து துறை வளர்ச்சியை  ஊக்குவிக்க வேண்டும் என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுத்த ஆரம்பித்தது. இந்த முயற்சியின் விளைவாக 2020 ஆம் ஆண்டில் இனச் சிறுபான்மையினரின் உயர்கல்வி அடைவு விகிதம் 8.93 சதவீதமாக உயர்ந்தது.

சிறுபான்மை இன மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு

உதாரணமாக அனைத்து மட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் இனச் சிறுபான்மை மாணவர்களின் எண்ணிக்கை 36 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது சீனாவில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த மாணவர் எண்ணிக்கையில் 11.24 சதவீதமாகும். அனைத்து மட்டங்களிலும் உள்ள இனச் சிறுபான்மை ஆசிரியர்களின் எண்ணிக்கை 1.57 மில்லியன் ஆக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை சீனாவின் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில் 8.84% ஆகும்.

சீனாவின் இனச் சிறுபான்மை மக்கள் தொகை விகிதமான 8.89 சதவீதத்துடன் ஒப்பிடுகிற பொழுது அதற்கு சமமான அளவில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனையாகும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சிறுபான்மை மாணவர்களின் சேர்க்கை விகிதமும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் ஹான் பெரும்பான்மையினரின் எண்ணிக்கை விட சதவீத அடிப்படையில் அதிகமாக உள்ளது. அடிப்படைகல்வி மட்டத்தில் சிறுபான்மை மாணவர்களின் சேர்க்கை விகிதம் 11.83 சதவீதமும், குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகளில் 11.27 சதவீதமும், தொடக்கப் பள்ளிகளில் 12.41 சதவீதமும், இளநிலை தொழிற்கல்வி பள்ளிகளில் சேர்க்கை விகிதம் 62.17 சதவீதமும் இருந்தது. குறிப்பாக மாணவர்களுக்கு தொழிற்கல்வி அளிப்பதில் அரசு முன்னணியில் இருந்தது.

இனச் சிறுபான்மை ஒட்டு மொத்த மாணவர்களின் செயற்கை விகிதம் 8.84 சதவீதமாக இருந்த சூழலில், உயர்கல்வி துறையில் இனச் சிறுபான்மை மாணவர்களின் சேர்க்கை விகிதம் 8.93 என்ற அளவில் இருந்தது. இது இனச் சிறுபான்மை மக்கள் தொகை சதவீதத்தை விட அதிகமாகும்.

இளங்கலை பட்டப்படிப்பு கல்வி நிலையங்களிலும், ஜூனியர் கல்லூரிகளிலும் இனச் சிறுபான்மையினரின் சேர்க்கை விகிதம் 10.01 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் முதுகலை பட்டப்படிப்பில் இனச் சிறுபான்மை மாணவர்களின் சதவீதம் 5.57 மட்டுமே இருந்தது. இதேபோன்று இணைய வழியில் வழங்கப்படும் பிற உயர்கல்வி  திட்டங்களில் சிறுபான்மை இனத்தவரின் சேர்க்கை விகிதம் 7.02 சதவீதமாக இருந்தது. 2020 ஆம் ஆண்டு இந்த இடைவெளியை சமப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் சீன மக்கள் குடியரசு மேற்கொண்டது.

இனச் சிறுபான்மையினர் ஆசிரியர்களின் உயர்வு

இனச் சிறுபான்மை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்றால் ஆசிரியர்களின் எண்ணிக்கை போதுமான அளவிற்கு இருக்க வேண்டும் அதிலும் குறிப்பாக இனச் சிறுபான்மை பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் மூலமாகத்தான் இந்த முன்னேற்றத்தை காண முடியும் என்று முடிவு செய்து அந்தத் துறையில் கவனம் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக 1978 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சிறுபான்மை இன ஆசிரியர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்தது.

2016 இல் தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் 10.16 சதவீதமும், நடுநிலைப் பள்ளிகளில் 9.15 சதவீதமும், மேல்நிலைப் பள்ளிகளில் 8.14 சதவீதமும், உயர்கல்வி நிறுவனங்களில் 5.93 சதவீதமும் இன ஆசிரியர்கள் பணிபுரிந்தார்கள். தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் மொத்த ஆசிரியர்களில் 4.78 சதவீதம் ஆசிரியர் இருந்தார்கள். குறிப்பாக இனச் சிறுபான்மையினர் கல்வி சமத்துவத்தை அடைவதற்கு தனியாதுறையை அனுமதித்தாலும் அவைகளின் செயல்பாட்டில் போதுமான முன்னேற்றம் இல்லை என்பதையும் இந்த விவரங்கள் காட்டுகிறது.

இனச் சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சிக்கு ஒட்டுமொத்தமான கல்வி முதலீடு என்பதும் மிக முக்கிய காரணமாகும். 2002 ஆம் ஆண்டு கல்விக்கு மொத்த தேசிய முதலீடு 548 பில்லியன் யுவானை எட்டியது. இது 1997 இல் 253.2 பில்லியன் யுவான்கள் ஆகும். அதாவது 116.5% வளர்ச்சியை காட்டுகிறது. 1952 ஆம் ஆண்டு 1.2 பில்லியன் யுவானாக மட்டுமே இருந்தது. அதனுடன் ஒப்பிடுகிற பொழுது 472 மடங்கு அதிகமாகும்.

கல்வியில் நிதி ஒதுக்கீட்டின் சராசரி ஆண்டு வளர்ச்சி என்பது 1997 முதல் 2002 வரை 16.7% ஆகவும் 1952 முதல் 2002 வரை 13.1% ஆகவும் இருந்தது. 2002 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகும் கல்விக்கான முதலீடுகளை தேசிய அரசாங்கம் மிகப்பெரும் அளவிற்கு அதிகரித்து வருவது சீனாவின் இன சிறுபான்மை கல்வி வளர்ச்சி உலகத்தில் வளர்ந்த நாடுகளுடன் போட்டியிடக் கூடிய அளவிற்கு மாற்றி உள்ளது. அனைத்து மட்டங்களிலும் அரசாங்க வரவு செலவுத் திட்டங்களில் கல்வி முதலீடு என்பது மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு முதலீடாக மாறி உள்ளது.

சீனாவில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் பின்தங்கி இருந்த இனச் சிறுபான்மையினரின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பல்வேறு விதமான பொருளாதார சமூக நடவடிக்கைகளுக்கு கல்வி அடிப்படையான தேவை என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சீன அரசாங்கமும் முடிவு செய்தது. 1965 ஆம் ஆண்டு வரை முதல் கட்ட வளர்ச்சியும் 1978 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சீர்திருத்த அடிப்படையில் கல்வியின் தரத்தை நிபுணர்களை உருவாக்கக்கூடிய அளவிற்கு மாற்றி அமைத்தது. இதன் விளைவாக இனச் சிறுபான்மையினர் அனைவரும் ஒட்டுமொத்த சீன சமூகத்தின் வளர்ச்சியில் சமபங்கினை செலுத்தக் கூடியவர்களாக மாறினார்கள்.

அ.பாக்கியம்.

வியாழன், மார்ச் 19, 2026

64 கலாச்சார புரட்சியும் இனக்கல்வின் வீழ்ச்சியும்




அ.பாக்கியம்

சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட பிறகு ஆழமான ஆய்வுகள் அடிப்படையில் இனச் சிறுபான்மையினருக்கான கல்வி தங்கு தடையின்றி வளர்ச்சியில் தடம் பதித்து வந்தது. ஆனால் சீன அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் சீன சமூகத்தில் புதிய சிக்கல்களை உருவாக்கியதால் இனச் சிறுபான்மை கல்வியும் சில பாதகமான நிலைமைகளை எதிர்கொண்டன.

1957-58 ஆம் ஆண்டுகளில் சீனாவில் வலதுசாரி எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரமாக மாசேதுங் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1958-60 ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் அதிவேக முன்னேற்றம் தேவை என்ற திட்டத்தின் அடிப்படையில் பெரும் பாய்ச்சல் இயக்கம் துவக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை கலாச்சார புரட்சி தீவிரப்படுத்தப்பட்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த மூன்று இயக்கங்களும் சீன சமூகத்தில் எதார்த்தமான நிலைமைகளிலிருந்து செயல்படக்கூடிய முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் விளைவாக சில பாதகமான அம்சங்கள் தலைதூக்கியது. இனக் கல்விக்கான திட்டங்கள் சிதைந்ததும் அவ்வாறு ஏற்பட்ட பாதகமான அம்சங்களில் ஒன்றாகும்.

சித்தாந்தமே அனைத்தையும் சீர்படுத்தும்

இக்காலகட்டங்களில் மாவோ வின் சித்தாந்தங்களை போதிப்பது தான் தேசத்தின் முன்னுரிமை பணியாக மாற்றப்பட்டது. வெவ்வேறு இனக்குழுக்களின் பாரம்பரியங்களையும் கலாச்சாரங்களையும் உள்வாங்கிக் கொண்டு வர்க்க போராட்டத்துடன் இணைப்பது என்ற நிலையை கைவிட்டு வர்க்க போராட்டம் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டது. இனக்குழுக்களின் கலாச்சார மாண்புகள், மதங்கள், பழக்கவழக்கங்கள் போன்ற தனித்துவமான தன்மைகள் இணக்கமான முறையில் அணுகப்பட்ட நிலைமைகள் மாறி, பொதுவுடமை சித்தாந்தத்திற்கு எதிரானவையாக கருதும் போக்கு முன்னுக்கு வந்தது.

இதன் விளைவாக இனச் சிறுபான்மையினரின் கலாச்சார பண்புகள் பாரம்பரியங்கள் அனைத்தும் நிலப்பிரபுத்துவ குணாம்சங்களைக் கொண்டவையாகவும், பிற்போக்கு தன்மை வாய்ந்தவை என்றும், அவைகள் பயனற்றவை என்றும் ஒதுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இனக்குழுக்களின் கலாச்சாரங்களை பற்றி ஏற்கனவே பாடத்திட்டங்களில் சொல்லப்பட்டிருந்த விளக்கம் மாற்றப்பட்டு மறு விளக்கம் செய்யப்பட்டது. கல்வியைப் பெறுவதில் இனச் சிறுபான்மை மக்களுக்கு பிரத்தியேகமான சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பாடபுத்தகங்களில் மாவோயிச சிந்தனைகளும் சோசலிச சித்தாந்தமும் முன்னிலைப்படுத்தி மற்ற அனைத்தும் தவிர்க்கப்பட்டன.

இதன் விளைவாக ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சாரம் அணுகு முறையில் பல இனச் சிறுபான்மை மாணவர்கள் படிப்பதும், வாசிப்பதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பின் விளைவாக இனச் சிறுபான்மை மாணவர்களின் கல்வித் திறன் குறைய ஆரம்பித்தன. கலாச்சாரப் புரட்சியின் தாக்கம் சீன சமூகத்தில் பரவலான விளைவுகளை ஏற்படுத்தினாலும் இனச் சிறுபான்மை மக்களின் கல்வியில் பாதிப்புகள் ஏற்படுத்தியது கண்கூடாக தெரிந்தது.

1976 ஆம் ஆண்டு தோழர் மாசேதுங் மறைந்த பிறகு கலாச்சார புரட்சி மற்றும் அதனால் ஏற்பட்ட தவறுகள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட்டன. அந்தப் பரிசீலணையின் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் மாற்றங்களை உருவாக்கினார்கள். இதேபோன்று இனச் சிறுபான்மை மக்களின் கல்வியில் ஏற்பட்ட மிகப்பெரும் சேதாரத்தையும் சரி செய்ய வேண்டும் என்ற மிகப்பிரமாண்டமான பணியினை சீன கம்யூனிஸ்ட் கட்சி புதிய தலைமை முடிவெடுத்து மாற்றங்களை நோக்கி பயணித்தது.

சீர்திருத்தமும் இனக் கல்வியின் மீட்சியும்

கலாச்சாரப் புரட்சிக்கு பிறகு அனைத்து தவறுகளையும் சரி செய்வது என்று முடிவெடுத்த பொழுது, சீனா கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரும் பணியாக மாறியது பெரும்பாதிப்புக்கு உள்ளான பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகும். அதுவரை அரசியல் சித்தாந்த போதனைகளை மட்டுமே பிரதான திட்டங்களாக மாற்றப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் பொருளாதாரத்தில் வெளிப்படையாக தெரிந்தது. மற்ற அனைத்தையும் விட அவசரப் பணியாக பொருளாதார மேம்பாடு முன்வைக்கப்பட்டது. அதுவரை இருந்த உற்பத்தி முறைகளில் கடைபிடிக்கப்பட்ட உத்திகள் மாற்றப்பட்டு புதிய  உத்திகள் புகுத்தப்பட்டன.

திறன் நிறைந்த மனித வளங்களால் மட்டுமே பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்றும், இதற்காக திறன்மிக்க நிபுணர்களை உருவாக்குவதும் உற்பத்தி திறன் வாய்ந்த உழைப்பாளர்களை பெருமளவு உருவாக்குவதும் அடிப்படை தேவையாக அமைந்தது. இந்த இரண்டையும் நிறைவேற்றுவதற்கு முன்தேவையாக மட்டுமல்ல அடிப்படைத் தேவையாகவும் கவனம் செலுத்த வேண்டியது கல்வித் துறையாக அமைந்தது. இவற்றை அறிந்து கொண்டு கல்வித் துறைக்கான முக்கியத்துவத்தை சீன மக்கள் குடியரசு சீன கம்யூனிஸ்ட் கட்சியும் அமல்படுத்த ஆரம்பித்தனர். புதிய ஜனநாயக புரட்சிக்கு பிறகு கல்வி நோக்கங்கள் குறித்து பல்வேறு அம்சங்களை முன்னிறுத்தி செயல்பட்டார்கள். ஆனால் தற்பொழுது சீர்திருத்த காலத்தில் கல்வி நோக்கம் என்பது பொருளாதார நோக்குடையதாகவும், நாட்டின் உற்பத்தி திறனை வளர்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

கல்வியின் நோக்கம் பொருளாதார நோக்குடையதாகவும், திறன்மிகு மனித வளங்களை உருவாக்குவதற்கும் என்று மாறுகிற பொழுது சீனாவில் இருக்கின்ற இனச் சிறுபான்மை மக்களின் பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட கல்விக்கான சிறப்புத் திட்டங்கள் பாதிக்கப்படும் என்பதை அறிந்தனர். இந்த பாதிப்புகளால் பொதுவான தேர்வுப் போட்டிகளில் இனச் சிறுபான்மையினர் பங்கேற்க இயலாத நிலமை உருவாகும். இதுபோன்ற இன்னும் பல இடர்பாடுகளை ஆய்வு செய்து 1981 ஆம் ஆண்டில் இனச் சிறுபான்மையுருக்கான தேசிய கல்வி மாநாட்டை மீண்டும் விரிவான முறையில் நடத்தினார்கள். இந்த மாநாட்டின் முடிவுகளின் படி சில குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.

இனச் சிறுபான்மை பகுதிகளில் அடிப்படை கல்வியை விரிவாக்கம் செய்தனர். இந்த மாணவர்களிடம் போட்டித் தேர்வு எதிர்கொள்வதற்கான பாடத்திட்டங்களையும், அதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் செய்தார்கள். தொழில்நுட்ப திறனை வளர்ப்பதற்காக புதிய பள்ளிகளை நிறுவினார்கள். தொழிலாளர்களின் திறன்களை அதிகப்படுத்துவதற்காக இனச் சிறுபான்மையினர் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் சேர்வதற்காக முன்னுரிமை முறைகளை அமல்படுத்தினார்கள். அதாவது இனச் சிறுபான்மை மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி, அதன் மூலம் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்கினார்கள்.

சீர்திருத்த காலத்தில் எடுத்த மிக முக்கியமான திட்டம் என்பது உறைவிட பள்ளியாகும். இனச் சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சியில் இந்த திட்டம் பெரும் மாற்றங்களை உருவாக்கியது என்றால் மிகையாகாது. இனச் சிறுபான்மை மக்கள் எல்லையோரங்களிலும், மலைப்பகுதிகளிலும், பரந்த மேய்ச்சல் நிலங்களிலும் வாழ்ந்தார்கள். இவர்களது பிள்ளைகள் பள்ளிக்கு வந்து செல்வது, அதற்கான பொருளாதாரங்களை எதிர்கொள்வது போன்றவை கடினமாக இருந்தது. எனவே அரசு உறைவிட பள்ளி ஆரம்பித்தது. இந்த உறைவிட பள்ளிகள் முதல் முதலாக ஆரம்பிக்கிற பொழுது தொடக்கக் கல்விக்கு மட்டுமே அமலாக்கினார்கள். 1984 ஆம் ஆண்டு திபெத்திய பகுதியில் மாணவர்கள் உயர்தர கல்வியை இலவசமாக பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மேல்நிலைப் பள்ளிகளிலும் உறைவிட பள்ளியை ஆரம்பித்தார்கள். இந்த உறைவிட பள்ளிகளில் அனைத்தும் அரசு செலவில் இலவசமாக வழங்கப்பட்டது.

இரு சட்டங்களும் இன அடையாளங்களும்

சீர்திருத்தத்தின் தொடர்ச்சியாக 1984 ஆம் ஆண்டு இரண்டு முக்கியமான சட்டங்கள் இயற்றப்பட்டன. ஒன்று தேசிய சட்டம் மற்றொரு சட்டம் பிராந்திய சுயாட்சி சட்டம். இந்த இரண்டு சட்டங்களும் இனச் சிறுபான்மை மக்களின் கலாச்சாரத்தின் தனித்தன்மை வாய்ந்த உரிமைகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இனச் சிறுபான்மையினரின் தனித்துவமான மாண்புகள், கலாச்சார புரட்சி காலத்தில் அழிக்கப்பட்ட அடையாளங்கள், தற்போது இந்தச் சட்டத்தின் மூலமாக மேம்பட ஆரம்பித்தது. குறிப்பாக பன்முக கலாச்சார உறவுகளை மேம்படுத்தக்கூடிய முறையில் ஜின்ஜியாங் மாகாணத்தில் இச்சட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இங்குள்ள இனச் சிறுபான்மையினரின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய முறையில் உள்ளூர் அளவிலான பாடத்திட்டங்கள் தொகுக்கப்பட்டன.

உதாரணமாக, கலாச்சார புரட்சி காலத்தில் பின்தங்கிய கலாச்சாரங்கள், நிலப்பரப்புத்துவ கலாச்சாரங்கள் என்று முத்திரை குத்தி ஒதுக்கப்பட்டவை தற்போது சீர்திருத்த நடவடிக்கை மூலமாக பொருத்தமான கலாச்சார மாண்புகள் அனைத்தும் சிறுபான்மை  யினரின் கலாச்சார இலக்கியமாக அறிமுகப்படுத் தப்பட்டு கற்பிக்கப்பட்டது. இனச் சிறுபான்மை மக்களின் மொழியை பயன்படுத்துவதில் இருந்த அனைத்து தடைகளும் அகற்றப்பட்டு சிறுபான்மை இன மக்களின் கல்வி முறைகளில் தங்கள் மொழியை பயன்படுத்துவதற்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டன. சிறுபான்மை மக்களின் தாய் மொழியில் இருக்கக்கூடிய பாடங்கள் அனைத்தையும் மேம்படுத்தி முறைப்படுத்தி தொகுத்து வெளியிட்டார்கள்.

சீர்திருத்த காலத்திற்குப் பிறகு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் பல்கலைக்கழகங்களிலோ அல்லது கல்லூரிகளிலோ சேருகின்ற வரை அனைத்தையும் தங்களுடைய தாய் மொழி வழியாக பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலைமையில் உருவாக்கினார்கள். இக்காலங்களில் கடைபிடிக்கப் பட்ட இரு மொழிக் கொள்கை என்பது சிறுபான்மை மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இனச் சிறுபான்மை மாணவர்கள் தங்களின் தேசியத்தை அறிந்து கொள்வதற்கும், சீன மொழியின் மூலமாக இதர கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்கும், அவற்றில் சிறந்து விளங்குவதற்குமான வாய்ப்புகளை இந்த இரு மொழிக் கொள்கை உதவி செய்தது. மேற்கண்ட கல்வி முறை ஒரு மாணவர் தான் விரும்பிய வகையில் உருவாவதற்கான சூழலை அமைத்துக் கொடுத்தது. இதனால்தான் இந்த மக்கள் கல்விக் கொள்கையை வரவேற்றனர்.

மோதல்களும் சீன ஒற்றுமையும்

சமூகத்தின் பிரச்சினைகளை கல்விக் கொள்கையுடன் இணைத்து பார்ப்பதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு தகுதி பெற்றிருந்தது. சீர்திருத்த காலத்திற்குப் பிறகு இனச் சிறுபான்மை யினருக்கான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக இன அடையாளங்கள் மேலோங்கி மற்ற இனங்களுக்கு எதிரான உணர்வுகள் உருவாகி வேற்றுமைகளும் விரோதங்களும் வளர்ந்து விடாமல் இருப்பதற்கான முறைகளில் கல்விக் கொள்கை அமைய வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தினார்கள். இவ்வாறு சிந்திப்பதற்கு அங்கு நடைபெற்ற பல சம்பவங்கள் காரணமாகவும் அமைந்திருந்தது.

1987 மற்றும் 88 ஆம் ஆண்டுகளில் திபெத்தில் பெரும் கலவரம் நடைபெற்றது. இந்தக் கலவரத்தை தலாய்லாமாவின் ஆதரவாளர்களுடன் அமெரிக்க தூண்டுதலில் நடைபெற்றது. 1988 ஆம் ஆண்டு ஜின்ஜியாம் மாகாணத்தில் உய்குர் இனத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் பெரும் கலவரம் நடத்தப்பட்டது. 1989ஆம் ஆண்டு தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற கலவரங்கள். மேற்கண்ட கலவரங்களுக்கு அந்நிய சக்திகளின் நேரடி காரணங்கள் இருந்தாலும் அவற்றுக்கு மாணவர்கள் ஏன் ஆட்படுகிறார்கள் என்பதையும் அதற்கான பின்னணிகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் அடிப்படை நோக்கம் என்பது கல்வி முறைகளில் ஏதாவது பாதகமான அம்சங்கள் இருக்கிறதா என்பதையும் கணக்கில் எடுத்தனர். இந்த ஆய்வு தரவுகளின் அடிப்படையில் 1991 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை சீன கம்யூனிஸ்ட் கட்சி இன சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒற்றுமையை பாதுகாக்க கூடிய முறையிலும் ஒன்றுபட்ட சீனா என்ற உணர்வை உருவாக்கக்கூடிய வகையிலும் பிரச்சாரத்தை அடிமட்டம் வரை கொண்டு சென்றார்கள்.

கல்வி முறைகளில் இனம் சார்ந்த கலாச்சாரங்கள் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மதிக்கப்பட்டாலும் ஒன்றுபட்ட சீனம் என்ற உணர்வை மேம்படுத்தக்கூடிய வகையில் கல்வி முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். இந்த முயற்சியின் விளைவாக ஒன்றுபட்ட சீனா என்ற உணர்வு உள்ளார்ந்த மதிப்புகளில் ஒன்றாக மாறியது. சீனா வரலாற்றில் நீண்ட காலம் ஒன்றுபட்டு இருந்தது என்பதையும், பல செழிப்பான வரலாறுகளை உள்ளடக்கி உள்ளது என்பதையும், புகழ்பெற்ற பாரம்பரிய கலாச்சாரங்களும் இருந்தன என்பதை கல்வி முறையில் கொண்டு வந்தனர். கலாச்சாரப் புரட்சி காலத்தில் கன்பியூசிய சிந்தனைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டதிலிருந்து காலத்துக்கேற்ற கூறுகளை உள்வாங்கிக் கொண்டனர். இதன் விளைவாக சீன மக்கள் மேற்கத்திய சீரழிவுகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்பதற்கான உணர்வுகள் பரவலாக மேலும் இது. இந்த ஒன்றுபட்ட சீனம் என்ற உணர்வுடன் சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசம் என்ற கருத்தாக்கத்தையும் இணைத்தே முன்னிலைப் படுத்தினார்கள்.

மற்றொரு முக்கியமான அம்சம் கடந்த காலங்களில் நடைபெற்ற இனங்களுக்கு இடையிலான மோதல்கள், கலவரங்கள் போன்ற வரலாற்றில் பழி தீர்க்கும் கருத்துக்கள் பாடதிட்டங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. ஒற்றுமைக்கான அம்சங்களை முன்னிலைப் படுத்தி பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டது. புரட்சிக்கு முந்தைய காலத்தில் பெரும்பான்மை இனமான ஹான் சீனர்களுக்கும் இன சிறுபான்மையினருக்கும் திருமணங்கள் நடைபெற்றது. இன்று திருமணங்களை இரு பகுதியிலும் ஒரு அவமானமக கருதினார்கள். சீர்திருத்தக் காலத்தில் இனங்களுக்கு இடையிலான ரத்த உறவு முறைகளை மேம்படுத்தக்கூடிய முயற்சிகள் எடுக்கப்பட்டது. இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மேலோங்கிய பிறகு திருமணங்கள் மதிப்பு மிக்கவைகளாக மாறிவிட்டது. இந்த மாற்றங்களில் கல்வி முறையில் எடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் ஒரு முக்கிய பங்கை வகித்திருக்கிறது.

                                                                                                                                                                                                                                       

 

சீர்த்திருத்தக் காலத்தில் மற்றொரு முக்கியமான முன்னெடுப்பு கல்வி முறைகளில் கொண்டுவரப்பட்ட மாற்றமாகம். 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீன மக்கள் குடியரசு கட்டாய கல்வித் சட்டத்தை நிறைவேற்றி அதே ஆண்டு ஜூலை மாதம் அமுலாக்கத்திற்கு கொண்டு வந்தது. இந்த சட்டம் சீன மக்களின் கல்வி வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தச் சட்டம் இன சிறுபான்மை யினருக்கும், அனைத்து பாலினத்தவர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப் பட்டது. ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் 9 ஆண்டுகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று இந்த சட்டம் உத்தரவிட்டது. முதல் ஆறு ஆண்டுகள் தொடக்கநிலை கல்வியும் அடுத்த மூன்று ஆண்டுகள் நடுநிலை பள்ளியின் கல்வியையும் கற்க வேண்டும். இந்த கட்டாய கல்வி முறைக்கு வரக்கூடிய அனைவரும் அரசின் செலவில் இலவசமாக படிக்கவைக்கப்பட்டனர்.

இந்த சட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முறையில் நெகிழ்வுத் தன்மையுடன் அமுலாக்கி வெற்றி கண்டது. கல்வி அறிவின்மையை போக்குவதற்கும், பொருளாதாரத்தில் நவீன மயமாக்களை அதிகரிப்பதற்கும், கல்விக் கொள்கை என்பது சட்ட அடிப்படையிலான அமைப்பாக மாற்றுவதற்கும், இந்த சட்டம் மற்ற அனைத்து சட்டங்களைவிட மிகஅதிகமான முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது. இந்தக் கட்டாய கல்விச்சட்டத்தின் மூலம் மக்களிடம் அறிவியல் வளர்ச்சியையும் தேசிய கல்வியின் நிலைமைகளையும் மேம்படுத்தியது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் எவரும் இடையில் நிற்கக்கூடாது என்பதற்காக சிறப்பு நிதி உதவி திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்கள். 2010 ஆம் ஆண்டுகளில் ஒன்றும் குறையாது என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அதாவது ஒருவரும் சீனாவில் கல்வி பெறாமல் இருக்கக்கூடாது என்பதற்கான திருத்தங்களை கொண்டு வந்து அமலாக்கினார்கள்.

சீனாவில் இனச் சிறுபான்மையினரின் கல்வி முறை என்பது 1965 ஆம் ஆண்டு வரை மிகப் பெரும் வளர்ச்சியாகவும் அதற்கு அடுத்து பத்தாண்டுகள் கேட்க நிலையும் மீண்டும் 1976 ஆம் ஆண்டு முதல் எடுத்த முயற்சிகள் குறிப்பாக முன்னுரிமை திட்டங்கள், உறைவிட பள்ளிகள், கட்டாய கல்வி சட்டம் போன்றவைகள் பெரும் பங்காற்றி உள்ளது.

அ. பாக்கியம்

சடங்குத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட படத்திறப்பு கூடுகை:

சடங்குகளாகவும் சம்பந்தப்படாதவர்களின் உரைகளாகவும் படத்திறப்பு நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கக் கூடிய காலகட்டத்தில் , அதிலிருந்து முற்றில...