Pages

வியாழன், டிசம்பர் 18, 2025

தேசிய இனங்கள் : ஒரு நாடு 56 கலாச்சாரங்கள்

 

அ.பாக்கியம்

சீனாவில் இன சிறுபான்மையினரை பாதுகாப்பதிலும் வளர்த்தெடுப் பதிலும் ஒன்றுபட்ட சீனா என்ற உணர்வை உருவாக்குவதிலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்கள் குடியரசும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. சோசலிச சித்தாந்தத்தின் அடிப்படையில் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு சீனாவில் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் சீன மக்கள் தொகை 141.5 கோடியாகும் இவற்றில் ஹான் இன மக்கள் தொகை 128.6 கோடி. இது மற்ற மக்கள் தொகையில் 91. 11% ஆகும். இவை தவிர மற்ற சிறுபான்மை இன மக்களின் தொகை 12.6 கோடி உள்ளது. மொத்த மக்கள் தொகையில் சிறுபான்மை மக்களின் பங்கு 8.89 சதவீதமாகும். ஹான் இனக்குழுவை தவிர சீனாவில் 55 இன சிறுபான்மை குழு மக்கள் வாழ்கிறார்கள்.

இந்த 55 சிறுபான்மை இனக்குழுவில் அதிக மக்கள் தொகை கொண்ட பல இன குழுக்கள் உள்ளது. சீனாவில் உள்ள முக்கிய இன சிறுபான்மையினர் ஜுவாங் ( 19.6 மில்லியன்), ஹுய் (11.4 மில்லியன்), உய்குர்கள் (11 மில்லியன்), மியாவோ (11 மில்லியன்), மஞ்சுகள் (10.4 மில்லியன்), யி (9.8 மில்லியன்), துஜியா (9.6 மில்லியன்), திபெத்தியர்கள் (7 மில்லியன்), மங்கோலியர்கள் (6.3 மில்லியன்), புயெய் (3.5 மில்லியன்), டோங் (3.5 மில்லியன்), யாவோ (3.3 மில்லியன்), பாய் (2 மில்லியன்), கொரியர்கள் (1.7 மில்லியன்), ஹானி (1.7 மில்லியன்), லி (1.6 மில்லியன்) , கசாக் (1.5 மில்லியன்)  டாய் (1.2 மில்லியன்) என்று உள்ளனர். இந்த 18 இனக் குழுக்கள் தவிர மற்ற சிறிய இனக்குழுக்களில் 7,30,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட பல இன குழுக்கள் உள்ளன.

சீன மக்கள் குடியரசு 1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உடனேயே 1954 ஆம் ஆண்டு முதல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி அப்போது 39 இனக்குழுக்கள் அங்கீகரிக்கப்பட்டன. 1964 ஆம் ஆண்டு இரண்டாவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் மேலும் சிறிய இனக்குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு 54 ஆக உயர்த்தப்பட்டது. 1965 ஆம் ஆண்டு திபெத்திலிருந்து லோபா மக்கள் மற்றொரு இனக் குழுவாக சேர்க்கப்பட்டனர். கடைசியாக 1979 ஆம் ஆண்டு ஜீனோ மக்கள் இனக்குழுவாக அங்கீகரிக்கப்பட்டனர். தற்பொழுது சீனாவில் மொத்த இனக்குழுக்கள் ஹான் இனக்குழுவையும் சேர்த்து 56 ஆகும்.

சுயாட்சி பிராந்தியம் முதல் இன நகரங்கள் வரை

சீனாவில் அரசியல் நிர்வாகத்தின் அடிப்படையில் மத்திய அரசிற்கு கீழ் 33 மாகாணங்கள் செயல்படுகிறது. இந்த 33 மாகாணங்களிலும் சில வேறுபட்ட நிர்வாக முறைகள் கடைபிடிக்கப் படுகிறது. மாகாணம் என்ற அடிப்படையில் 22 மாகாணங்கள் உள்ளன. தேசிய இனங்களுக்கான ஐந்து தன்னாட்சி பிரதேசங்கள் இருக்கிறது. நான்கு பெரு நகரங்கள் மற்றும் இரண்டு சிறப்பு நிர்வாக அமைப்புகள் என மொத்தம் 33 அமைப்புகள் செயல்படுகிறது.55 சிறுபான்மை இன குழுக்கள் இருந்தாலும் அவர்கள் வாழக்கூடிய இடம் என்பது சீனாவின் பல்வேறு பகுதிகளில் உள்ளது. இன சிறுபான்மையினர் குவியலாக வாழக்கூடிய இடங்களில் அதற்குரிய தன்னாட்சி அமைப்புகளை சீன அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சீனாவில் 155 இன தன்னாட்சி பகுதிகளும்   5 பெரிய தன்னாட்சி பிரதேசங்களும் உள்ளன.  அவை முறையே குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பிரதேசம், நிங்சியா ஹுய் தன்னாட்சிப் பிரதேசம், ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிரதேசம், திபெத் தன்னாட்சிப் பிரதேசம், உள் மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசங்களாகும்.

இவை தவிர முப்பது தன்னாட்சி பகுதிகளும், 120 தன்னாட்சி மாவட்டங்களும் இருக்கிறது. தன்னாட்சிப் பகுதிகள், தன்னாட்சி மாவட்டங்கள் என்பது குறிப்பிட்ட தன்னாட்சி பிரதேசங்களில் இன சிறுபான்மை மக்கள் குவியலாக குடியிருந்தால் அவர்களுக்கான தன்னாட்சி பகுதியாகவோ அல்லது தன்னாட்சி மாவட்டமாகவோ அது உருவாக்கப்படும். மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் இவற்றை உருவாக்கி உள்ளார்கள்.

உதாரணமாக ஜின்ஜியாங் உயிகூர் தன்னாட்சி பிரதேசத்தில் ஹூய் இன மக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவியலாக வாழ்ந்தால் மக்கள் தொகைக்கு ஏற்ப அதை ஒரு தன்னாட்சிப் பகுதியாகவோ அல்லது மாவட்டமாகவோ உருவாக்கியுள்ளார்கள். இந்த நிர்வாக அமைப்பு முறைகள் ஐந்து தன்னாட்சி பிரதேசங்களுக்கு மட்டுமல்ல, சீனாவில் உள்ள இதரப் பகுதிகளில் குவியலாக வாழ்ந்தாலும் சிறுபான்மை மக்களுக்கான தன்னாட்சி பகுதியாக அவை மாற்றப்பட்டு உள்ளன.

 

இவை தவிர சீனாவில் 1,173 இன நகரங்கள் உள்ளன. இந்த இன நகரங்கள் என்பது மிகச் சிறிய அளவிலான இன மக்கள் வாழக்கூடிய பகுதியை கிராமங்கள் அல்லது நகரங்களை தன்னாட்சி இன நகரங்களாக அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு பிராந்திய சுயாட்சி சட்டத்தின் அடிப்படையிலான சலுகைகளும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. சீனாவில் இருக்கிற 55 இன சிறுபான்மையினருக்கு 44 தன்னாட்சி பகுதிகளை நிறுவி இருக்கிறார்கள். இங்கு பிராந்திய சுயாட்சி முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. சீனாவில் உள்ள மொத்த சிறுபான்மை மக்களில் பிராந்திய சுயாட்சி நிர்வாகத்தின் கீழ் 71% மக்கள் வாழ்கிறார்கள். பெரும்பாலான சிறுபான்மை மக்கள் சுயாட்சி அரசு நிர்வாகத்திற்கு கீழ் வருவது வேறு எங்கும் இல்லாத ஒரு முன்னுதாரணமாகும். சீனாவில் இருக்கக்கூடிய இன சுயாட்சி பிரதேசங்கள் ஒட்டுமொத்த சீனாவின் நிலப்பரப்பில் 64% தன்னகத்தை கொண்டிருக்கிறது என்பது மற்றொரு மாறுபட்ட சூழலாகும்.

பிராந்திய சுயாட்சி குறித்து சீன மக்கள் குடியரசு தனது அரசியல் சட்டத்தில் கீழ்கண்டவாறு இறுதி செய்துள்ளது. சீனாவில் இன சிறுபான்மை மக்களுக்கான பிராந்திய சுயாட்சி என்பது அரசின் ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் இன சிறுபான்மையினர் சமூகங்களாக வாழும் பகுதிகளில் பிராந்திய  சுயாட்சி முறைகளை கடைபிடிப்பது என்பது ஆகும். அதாவது அரசின் ஒருங்கிணைந்த தலைமை என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது. பொதுவாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள இன தேசம் அல்லது இன சுயநிர்ணய உரிமை போன்ற கருத்துக்களில் இருந்து சீன அரசியல் சட்டத்தின் வரையறை என்பது நுணுக்கமான முறையில் வரையறுக்கப் பட்டுள்ளது. இது ஒற்றை ஆட்சி அமைப்பின் கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைந்த உள்ளூர் சுயாட்சி வடிவத்தை செயல்படுத்துவதாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சிறுபான்மை இன வளர்ச்சி கொள்கை.

எந்த ஒரு சமூகத்தின் அடிப்படை நோக்கமும் வளர்ச்சி பெறுவதாகதான் இருக்க முடியும். ஒவ்வொரு நாளும் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு விதமான வேறுபட்ட கொள்கைகளையும் நடைமுறைகளையும் கடைபிடிக்கிறார்கள். மேற்கத்திய நாடுகள் அல்லது முதலாளித்துவ கொள்கைகளை கடைபிடிக்க கூடியவர்கள் இன சிறுபான்மையினர் வளர்ச்சிக்கும் பழங்குடி மக்களின் வளர்ச்சிக்கும் இரண்டு விதமான பாதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒன்று தாராளமயம் (liberalism) மற்றொன்று பொதுவுடமை வாதம் (Communitarianism) என்பதாகும். (இந்த வார்த்தையை சோசலிச சித்தாந்தத்துடன் இணைத்து குழப்பிக் கொள்ளக்கூடாது)

மேற்கண்ட கொள்கையின் அடிப்படையில் தாராளமய அரசு சிறுபான்மை மக்களின் இன கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் என்றும், சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளில் நடுநிலைமையை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள். மதிப்பதும் நடுநிலை வகிப்பதும் என்றால் அரசின் பங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது. அவர்களின் வளர்ச்சியில் அரசின் பங்கு நேரடியாக இருக்காது என்று அர்த்தம். சந்தை தான் சிறுபான்மை மக்களின் வளர்ச்சியை தீர்மானிக்கும் என்று அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். சந்தையின் சுதந்திரப் போட்டி அடிப்படையில் சிறுபான்மை மக்கள் முன்னேறிக் கொள்ளலாம் என்பதுதான் இதன் அர்த்தம்.

சந்தை சிறுபான்மை மக்களை தனிமைப்படுத்தியது அடையாள அரசியலை நோக்கி தள்ளியது. மற்றொன்று சந்தை வாதத்தை புறக்கணித்து, ஒரு குழுவிற்குள் உள்ள தனி நபர்களின் உரிமைகளை விட குழு உரிமைகள் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று வாதிடுகிறது. இதன் மூலம் பழங்குடி மக்களின் வளர்ச்சியை பாதுகாக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்கள். இந்தக் கொள்கை அமலாக்கத்தினால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பழங்குடி மக்கள் தங்கள் பகுதியின் வளங்களை இழந்தார்கள். அவர்கள் வாழ்வாதார ரீதியாக கடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப் பட்டார்கள். குழுக்களுக்கான செழிப்பு என்பது வளரவில்லை.

சீன மக்கள் குடியரசும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு மாறான முறையில் சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்கு சோசலிச சித்தாந்தத்தின் வழிகாட்டுதல் அடிப்படையிலும், சீன சூழலுக்கு ஏற்ற வகையிலும் தங்களது இனக் கொள்கைகளை உருவாக்கினார்கள். 1949 ஆம் ஆண்டு சீன மக்கள குடியரசு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கொள்கைகளை உருவாக்கியது மட்டுமல்ல, தொடர்ச்சியாக காலத்துக்கு ஏற்ப மாற்றங்களையும் செய்து கொண்டே வருகிறார்கள். 1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு இன சமத்துவம், இன ஒற்றுமை மற்றும் பிராந்திய இன சுயாட்சி என்ற கொள்கையை நிறுவியது.

 

இதன் முதல் கட்டமாக சிறுபான்மை இனங்களிடையே உள்ள செல்வாதார பங்கீடு எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். வாழ்வாதாரம், கல்வி, வேலை, மருத்துவம், சுகாதாரம், வறுமை போன்றவைகள் அறிந்து கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் சீனாவின் கொள்கை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியது

1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சீனாவின் அரசியல் சட்ட அமைப்பில் சீன மக்கள் காங்கிரஸில் அதாவது பாராளுமன்றத்தில் அனைத்து இன சிறுபான்மையினரும் பொருத்தமான எண்ணிக் கையில் பிரதிநிதிகளை கொண்டிருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றியது. இந்த ஏற்பாடு அனைத்து இன சிறுபான்மையி னருக்கும் சிறிய மக்கள் தொகை கொண்ட சிறுபான்மையினராக இருந்தாலும் அரசின் நிர்வாகத்தில் பங்கேற்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தியது. இந்தப் பின்னணியில்தான் 1954 ஆம் ஆண்டு திபெத்திலிருந்து  தலாய்லாமா துணை பிரதமராகவும், பஞ்சன்லாமா மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

1954 முதல் 59 வரை சீனாவில் இயங்கிய தேசிய மக்கள் காங்கிரஸில்(பாராளுமன்றம்) 1226 பிரதிகள் இருந்தார்கள். இதற்கு ஏற்ற வகையில்தான் சிறுபான்மையினரின் பங்களிப்பும் இருந்தது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 14 வது தேசிய மக்கள் காங்கிரஸில் இன சிறுபான்மை பிரதிநிதிகள் சுமார் 12 சதவீதம் பேர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அது மட்டுமல்ல மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட இன சிறுபான்மை குழுக்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு பிரதிநிதியாவது இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டு முடிவுகளை அமலாக்கினார்கள்.

மற்றொரு முக்கிய அம்சம் இன பாகுபாட்டிருக்கு தடை விதித்தது மட்டுமல்ல, புரட்சிக்கு முன்பு இன பாகுபாட்டின் ஒரு வடிவமாக இருந்த அதாவது இனத்தை இழிவாக குறிப்பிட்ட பெயர்கள் அனைத்தையும் மாற்றி அமைத்தார்கள். உதாரணமாக ஜுவாங் சிறுபான்மை இன மக்களை டொங் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இவை நாயுடன் இணைத்து இழிவுபடுத்தப்பட்ட வார்த்தையாகும். இவற்றை மாற்றி ஜுவாங் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இதுபோன்ற இழிவான பெயர்களை நீக்கியது மட்டுமல்ல இனம் தொடர்பான வரலாற்று ரீதியான குழப்பங்களையும் சரி செய்தார்கள். இதற்காக நீண்ட ஆய்வுகள் நடத்தி அதன் மூலம் இந்த குறைகள் நீக்கப்பட்டது. புரட்சிக்கு முந்தைய இன சிறுபான்மையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும், இழி செயல்களும் படிப்படியாக ஒழிக்கப்பட்டன.

மத்திய அரசாங்கத்திற்கும், இன சிறுபான்மை பகுதிகளுக்கும் இடையிலான நேரடி உறவுகள் பலப்படுத்தப்பட்டது. மத்திய அரசு இன சிறுபான்மை பகுதிகளுக்கு, நிலைமைகளை ஆய்வு செய்யவும், உறவுகளை மேம்படுத்துவதற்கும் தனது பிரதிநிதிகளை அனுப்பியது. சீனாவில் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் இன சிறுபான்மை மக்களை பொருளாதார ரீதியாக முன்னேறிய சீனாவின் இதரப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தது. இதன் மூலம் இன சிறுபான்மையின் வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டது.

இன சிறுபான்மையினரின் சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் ஜனநாயக சீர்திருத்தங்களை சோசலிச ரீதியான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. இந்த சீர்திருத்தங்கள் சிறிய மக்கள் தொகை கொண்டவர்களை சோசலிச பாதையை நோக்கி செல்வதற்கு வழி வகுத்தது. 1949 இல் சீனா நிறுவப்பட்ட போது, சில இனக் குழுக்கள் பழமையான வாழ்க்கையிலேயே பின்தங்கி இருந்தார்கள். இவர்கள் நிலபிரபுத்துவ, முதலாளித்துவ உற்பத்தி முறையை சந்திக்காமலேயே கடந்து சோசலிக சமூக அமைப்புக்குள் நுழைந்தனர்.

முக்கியமாக யுன்னான் மாகாணத்தில் உள்ள ஜிங்போ, லிசு, டெருங், நு, பிளாங், வா, ஜினோ மற்றும் தி’யாங் இக்குழுக்களும், உள் மங்கோலியா தன்னாட்சிப் பகுதி மற்றும் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் ஓரோகென், எவென்கே மக்கள், ஹைனான் தீவில் உள்ள லி இனத்தைச் சேர்ந்த சில சமூகங்கள் ஆகியவை நிலபிரபுத்துவ, முதலாளித்துவ சமுக அமைப்பை முறையை சந்திக்காமலேயே கடந்து சென்றது. இது சமூக வளர்ச்சியில் ஒரு மாறுபட்டு முன்னேற்றம்.

இந்த காலகட்டத்தில் சீனா ஏராளமான சவால்களை சந்திக்க நேர்ந்தது. ஒரு சோசலிச நாட்டை கட்டி எழுப்புவதற்கு பங்களிக்க அரசாங்கம் இன சிறுபான்மையினரை திரட்டியது. பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில்,  இன சிபான்மை மக்களை சீன விரோத சக்திகள் சீன ஒற்றுமைக்கு எதிராக தூண்டி விட்டார்கள். அவற்றை எதிர்கொண்டு சீன சிறுபான்மை இன மக்களின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியது. அரசியல் அதிகாரத்தில், பொருளாதாரத்தில், கலாச்சார கல்வித் துறையில் என அனைத்திலும் சிறுபான்மை மக்கள் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

சீன மக்கள் குடியரசின் கொள்கையின் விளைவாக 2000 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுகள் வரை 91% உள்ள ஹான் மக்கள் தொகையைவிட, சிறுபான்மை இன மக்கள் தொகை வேகமாக வளர்ந்தது. 2010 முதல் 2020 வரை ஹான் இன மக்கள் தொகை வளர்ச்சி 4.93% இருந்தது. மொத்த சிறுபான்மை இன மக்கள் தொகை வளர்ச்சி இதே காலத்தில் 10.26 சதவீதமாக அதிகரித்தது. சீன அரசின் சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்கான ஆதரவு கொள்கை இந்த முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும்.

 

-அ.பாக்கியம்

வியாழன், டிசம்பர் 11, 2025

50 திபெத்: மூன்றாவது துருவத்தின் சூழல்பாதுகாப்பு

அ.பாக்கியம்

 

மனிதன் இயற்கையின் ஒரு பகுதி அதிலிருந்து பிரிந்தவன் அல்ல. இயற்கை என்பது மனித குலத்தின் கனிமஉடல். அதன் இருப்பு நல்வாழ்வுக்கு அவசியமானது. மனித குலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான சம நிலையான இணக்கமான பரிமாற்றத்தின் மூலமாகத்தான் மனிதனும் இயற்கையும் வாழ முடியும். சுற்றுச்சூழல் குறித்து காரல் மார்க்ஸ் மேற்கண்ட கருத்தை கொண்டு இருந்தார். இதைத்தான் அவர் வலியுறுத்தினார்.இன்னும் அழுத்தமாக முதலாளித்துவம் இயற்கையுடனான மனித குலத்தின் உறவை சீர்குலைத்து வருகிறது. இயற்கை வளங்களை சுரண்டி, கழிவுகளை உருவாக்குவதன் மூலம் ஒரு வளர்ச்சிதை மாற்ற விரிசலை ஏற்படுத்துகிறது என்று ஆணித்தரமாக பதிய வைத்தார். இவ்வாறு நடப்பதற்கு காரணம் முதலாளி உற்பத்தி முறை என்று அவர் தெரிவித்தார். இயற்கையின் நிலைத்த தன்மையைவிட முதலாளித்துவ உற்பத்தி முறை லாபத்தை முன்னிலைப் படுத்துகிறது. மண், காற்று, மற்றும் நீரின் சீரழிவுக்கு வழிவகுக்கிறது. எதிர் காலத்தில் உருவாகும் கம்யூனிச சமூகம் பூமியின் வளங்களை ஒத்துழைப்புடன் மற்றும் பகுத்தறிவுடன் நிர்வகிக்க முடியும். மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான மோதல்களை தீர்க்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்

சோசலிச கொள்கைகளை ஏற்று ஆட்சி நடத்தி வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சி பூமிக்கோளத்தில் மனிதன் வாழக்கூடிய முறையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உலகில் முன்னணி நாடாக சீனா திகழ்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திபெத்திய பிராந்தியத்தில் சீன பண்புகளுடன் கூடிய சோசலிச கட்டமைப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலகின் சுற்றுச்சூழல் வளத்தில் திபெத் ஒரு முக்கிய பங்காற்றுகிறது என்பதை சீன அரசு உணர்ந்துள்ளது.

 

 

பரவலாக்கப்படும் வனப்பகுதியும் புல்வெளிகளும்

திபெத்திய பீடபூமி உலகின் மூன்றாவது துருவம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பனிப்பாறை களுக்குப் பிறகு பனி மற்றும் பனிக்கட்டிகளின் மிகப்பெரிய அளவைக் கொண்டுள்ளது. இது உலகின் காலநிலை ஒழுங்குமுறையில் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் இங்குள்ள பனிப்பாறைகள் பல ஆசிய நாடுகளின் நன்னீருக்கு ஆதாரமாக உள்ளன. தனித்துவமான நிலப்பரப்பு, காலநிலை, சுற்றுச்சூழல், அரிதான பல்லுயிரிகள் இங்கு காணப்படுகிறது. இங்குள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பதன் மூலமாக சீனாவிற்கு மட்டும் நன்மை பயக்க கூடியது அல்ல உலகிற்கே நன்மை பயக்கக்கூடிய செயலாகும்.

சீன மக்கள் குடியரசு கிங்காய்-திபேத் பகுதிகளின் சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நாட்டிற்கும் மக்களுக்கும் பயனளிக்கும் என்று கருதுகிறார்கள். சுற்றுச்சூழல் நாகரிகத்தை முன்னேற்றதற்கு தேசிய அளவிலும் சர்வதேசி அளவிலும் கிங்காய்-திபெத் பகுதிகளை ஒரு மாதிரி பிராந்தியமாக மாற்றுவதற்கு சீன அரசு முன்னுரிமை அளித்து வருகின்றது. சுற்றுச்சூழலின் பாதுகாப்பு மேம்பாட்டை ஒருங் கிணைப்பதற்கான முழுமையான திட்டத்தை உருவாக்கி பின்பற்றுகிறது. பசுமை மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்ந்து இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. அழகிய திபெத்தை கட்டியமைக்கும் அதே வேளையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய செயல்கள் இருந்தால், அதற்கான செலவுகளை செய்து பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழலுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

இதன் முதல் நடவடிக்கையாக வேசாங்டாங், மவுண்ட் கோமோலாங்மா, மவுண்ட் காங்க்ரின்போக், காவோலிகாங் மலை மற்றும் யார்லுங் சாங்போ, கிராண்ட் கேன்யன் ஆகிய மலை மற்றும் காட்டுப்பகுதிகளை சீனாவின் தேசிய பூங்காக்களாக அறிவித்து உள்ளனர். திபெத்தின் இயற்கை இருப்பை அதிகப்படுத்தும் திட்டங்கள் தொடர்ந்து வருகிறது. தற்போது 47 க்கும் மேற்பட்ட இயற்கை பாதுகாப்பு வனப்பகுதிகள் திபெத்தில் உள்ளது. இவை மொத்தம் 4,12,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவாகும். இந்த பிராந்தியத்தில் உள்ள நிலங்கள், காடுகள், புல்வெளிகள், ஈர நிலங்கள், நீர் பிடிப்பு கொண்ட பகுதிகள், இதர சுற்றுச்சூழல் செயல்பாடுகளைக் கொண்ட நிலங்கள் சுமார் 1.08 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளது. மூன்றாவது தேசிய கணக்கெடுப்பின்படி இந்த தரவுகளை சீன அரசு வெளியிட்டு உள்ளது. இதற்கு அப்பால் இருக்கக்கூடிய டாங்குலா மழையின் வடக்கே உள்ள பகுதி, யாங்சி மற்றும் லாகாங் நதிகள் உருவாகிற இடங்களில் நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கான பூங்காக்களை உருவாக்கி உள்ளார்கள்.

பல்கிப்பெருகும் பல்லுயிரிகளும் தாவரங்களும்

மற்றொரு முக்கியமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியாக திபெத்திய பீடபூமி பகுதியில் உள்ள பல்லுயிரிகளின் எண்ணிக்கையை பாதுகாத்து வருவது மட்டுமல்ல அதிகப்படுத்துவதற்கான சூழலையும் உருவாக்கி உள்ளார்கள். 2016 முதல் 2022 வரை திபெத்திய பிராந்தியத்தில் 5,54, 666 ஹெக்டேரில் மரங்கள் நடப்பட்டது. இதன் விளைவாக காடுகளும் புல்வெளிகளும் தாவரங்களும் இக்காலத்தில் இரட்டை வளர்ச்சியை அடைந்தது. திபெத்திய நிலப்பரப்பில் 1072 முதுகெலும்புள்ள விலங்குகள் வாழுகின்றது. இவற்றில் பனிச்சிறுத்தை, திபெத்திய யாக் என்ற காட்டு எருதுகள், திபெத்திய மாறிமான், கருப்பு கழுத்து கொக்கு, யுன்னான் தங்க மூக்கு குரங்கு போன்ற அரிதான இனங்கள் இங்கு வாழ்கின்றன. இவற்றை பாதுகாக்க கூடிய முறையில் 65 வகையான காட்டு விலங்குகளை தேசிய முதல் தர பாதுகாப்பிலும், 152 வகையான காட்டு விலங்குகளை தேசிய இரண்டாம் தரப்பாதுகாப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டு பாதுகாத்து வருகின்றனர். ஒட்டு மொத்த சீனாவில் உள்ள பெரிய மற்றும் நடுத்தர வகையான காட்டு விலங்கு இனங்களில் திபெத்திய பிராந்தியம் மட்டும் அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளது.

திபெத்திய நிலப்பரப்பில் வாழக்கூடிய விலங்குகளின் எண்ணிக் கையை இரண்டாவது தேசிய கணக்கெடுப்பு அடிப்படையில் இறுதி செய்தனர். இந்த கணக்கெடுப்பின் தரவுகளின்படி திபெத்திய மாறிமான் 70,000 லிருந்து 1990 இல் 3,0,0000உயர்ந்துள்ளது. திபெத்திய யாக் என்று அழைக்கக்கூடிய காட்டு எருதுகள் 10,000லிருந்து 20,000அளவிற்கு உயர்ந்துள்ளது. கருப்பு கழுத்து கொக்குகள் இக்காலத்தில் 3000 த்தில் இருந்து 10,000வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதைவிட முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சம், சர்வதேச சமூகத்தால் ஒரு காலத்தில் அழிந்து விட்டதாக கருதப்பட்ட திபெத்திய சிவப்பு மான்கள் திபெத்தில் இருப்பதை கண்டுபிடித்தார்கள். இந்த மான்களின் எண்ணிக்கை 200இல் இருந்து தற்போது 800க்கு மேலாக அதிகமாகி உள்ளது. இதற்கு மேலாக விலங்குகளைப் பற்றிய கணக்கெடுப்புகளை, அதை பாதுகாக்க வேண்டும் என்ற முறையிலும் உட்பகுதி முழுவதும் இருக்கக்கூடிய விலங்கினங்களை ஆய்வு செய்த பொழுது 5 புதிய விலங்கினங்களும், ஒரு புதிய தாவர வகையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை ஏற்படுத்துவதும் பசுமை வளர்ப்பின் ஒரு பகுதியாக தீபத்தில் சிறப்பு கவனம் செலுத்தியதன் மூலமாக கிங்காய் திபெத்திய பிராந்தியத்தில் வனப்பகுதியின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இவை தவிர திபெத்திய பிராந்தியத்தில் 750 வகையான வாஸ்குலர் தாவரங்கள் இருக்கிறது. வாஸ்குலர் தாவரம் என்பது நீரையும், நீர்ச்சத்து உணவுகளையும் கடத்தக்கூடிய ஒன்றாகும். இவற்றில் மிக முக்கிய ஒன்பது வகையான தாவரங்களை தேசிய முதல் தரப் பாதுகாப்பிலும், 148 தாவர இனங்களை தேசிய இரண்டாம்தர பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

தற்போது பணப்பகுதி 12.31% இருக்கிறது இதற்கு மேலும் புல்வெளியின் பரப்பளவு தாவரங்களின் பரப்பளவு 47.14% எட்டியுள்ளது. 2024 ஆண்டில் மட்டும் திபெத்தில் 70,667 எக்டேர் பரப்பளவு காடுகளை வளர்த்துள்ளனர். பல்வேறு காலங்களில் பராமரிப்பு இல்லாமல் சீரழிந்து கிடந்த 4 லட்சம் எக்டேர் புல்வெளிகளை மறுசீரமைப்பு செய்து பசுமையாக்கி உள்ளார்கள். இதுபோன்ற முயற்சிகளின் விளைவாக மிக உயரமான இடங்களில் வாழும் உயிரினங்களும் புத்துயிர் பெற்று இனப்பெருக்கத்தை அதிகப்படுத்தி உள்ளது.

மேம்பட்ட காற்றின் தரமும் கார்பன் நடுநிலை திட்டமும்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையின் விளைவாக திபெத்திய பகுதியில் வாழ்க்கைச் சூழல் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் இங்கு காற்றின் தரம் உயர்ந்து வருகிறது. 99% சுத்தமான காற்று கிடைக்கிறது. 2022 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள 168 முக்கிய நகரங்களில் காற்றின் தரத்தை அளவீடு செய்தபொழுது திபெத்திய பிராந்தியத்தின் தலைநகரம் லாசா முதலிடத்தை பிடித்தது. இதே போன்று அடுத்த இரண்டு இடங்களும் திபெத்திய பகுதியில் உள்ள நியஞ்சி, காம்டோ நகரங்கள் பிடித்தன. ஆண்டு முழுவதும் சிறந்த தரமுடைய காற்றை இப்பகுதி மக்கள் சுவாசித்து வருகிறார்கள்

திபெத்திய பகுதியில் ஓடக்கூடிய நதிகளும் ஏரிகளும் தரமான நிலையில் உள்ளது. அனைத்து நதிகளும் முதல் தர நிலையிலும், இரண்டாவது தர நிலையிலும் இருக்கிறது. இதன் விளைவாக திபெத்திய பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களுக்கும் சுத்தமான குடிதண்ணீர் கிடைக்கிறது. இதற்குக் காரணம் திபெத்திய பகுதியில் மண் மாசுபடாமல் மண் வளத்துக்கான சுற்றுச்சூழலை சீன அரசு மக்களின் ஆதரவுடன் பாதுகாத்து வருகிறது. எனவே தான் இந்த தரத்தை கொண்டு வர முடிந்தது.

மேற்கண்ட சுற்றுச்சூழல் பசுமை பாதுகாப்பு முயற்சியும் மண் மாசுபடுவதை தவிர்க்கக் கூடிய முயற்சிகளும் திபெத்திய பிராந்தியத்தில் மட்டுமல்ல சீனாவிலும் கார்பன் உமிழ்வின் அளவை மிகப் பெரும் அளவிற்கு குறைத்து வருகிறது. சீன அரசின் இலக்கான கார்பன் நடுநிலை நோக்கத்தை நிறைவேற்றுவதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. திபெத்திய பிராந்தி யத்தில் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பதையும் பசுமை திட்டத்தின் அடிப்படையில் வளர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.மாசு இல்லாத பண்ணை, பசுமை பண்ணை, கரிம பண்ணை பொருட்கள் அல்லது வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய 1014 பண்ணைகளை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பசுமை உற்பத்தி பொருட்கள் என்று விற்பனை செய்யப்படுகிறது. சீனாவில் பசுமை உற்பத்தியில் சிறந்து விளங்கக்கூடிய 100 பண்ணைகளில் திபெத்திய பிராந்தியத்தில் இருந்து சில பண்ணைகளும் இடம் பிடித்து உள்ளது. பசுமை பொருட்கள் என்ற முத்திரையிடப்பட்ட பொருட்களை மக்கள் திரும்பி வாங்குகிறார்கள்.

வளர்ச்சி திட்டங்களால் குறிப்பாக நதிகளில் நீர் மின் நிலையங்களை கட்டுகிற பொழுது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதா என்ற கேள்வி எழுவது நியாயமானது. அதை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள் என்பதற்கான ஒரு உதாரணம் இங்கே கொடுக்கப்படுகிறது. யார்லுங் சாங்போ நதியில் ஜாம் நீர் மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. இந்த நிர்வாண பணிகளால் அங்குள்ள மீன் வளங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அரிதான அந்த மீன்களை பாதுகாக்க 2.6 கிலோமீட்டர் நீளமுள்ள ஆறுகள் அமைக்கப்பட்டு மீன்கள் இடம் பெயர்ந்து செல்வதற்கான முறைகள் ஏற்படுத்தப்பட்டது. அது மட்டுமல்ல மீன் குஞ்சுகளின் இனப்பெருக்கத்திற்கான வசதிகள் செய்யப்பட்டு ஆண்டுதோறும் இவை ஆறுகளில் விடப்படுகிறது. திபெத்திய பீடபூமியின் அரிய வகை மீன்களை அழிந்து விடாமல் பாதுகாத்து மீண்டும் வளர்த்தெடுக் கிறார்கள்.

மற்றொரு சம்பவம் லாசா-சிகேஸ் ரயில் பாதை கட்டுகிற பொழுது அந்த வழித்தடத்தில் இருந்த சிறந்த மரங்களை தேர்வு செய்து ரயில் பாதைக்கு அருகில் மணல் திட்டுகளை உருவாக்கி அங்கு அவற்றை பாதுகாத்து காடுகளாக வளர்த்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் திபெத்திய காடுகளின் அளவு குறையாமல் இருக்கக்கூடிய வகையிலும், அரிய மரங்கள் அழியாமல் இருக்கக்கூடிய வகையிலும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ரயில் பாதை போன்ற திட்டங்கள் நிறைவேறுகின்ற பொழுது விலங்குகளின் பாதை தடைபடும். இவற்றைக் கணக்கில் எடுத்து விலங்குகள் தடையின்றி இடம் பெயர்வதற்கு முக்கியமான இடங்களில் உயரமான பாதைகள் அமைக்கப்பட்டு விலங்குகள் தடையின்றி இடம்பெயர வழிவகை செய்யப்பட்டது. மற்றொரு ரயில் பாதை கட்டுமானத்தின் போது கருப்பு கழுத்து கொக்குகள் இருக்கக்கூடிய பகுதிகளின் ஒரு பகுதி பாதிப்பை ஏற்படுத்தியது. அவற்றை பாதுகாப்பதற்காக கருப்பு கொக்குகளுக்கு வாழ்வதற்கு ஏற்ற குளிரான பகுதிகள் உருவாக்கப்பட்டு அவற்றின் வாழ்விடத்தையும் எண்ணிக்கையும் பாதுகாத்தார்கள். இந்த முயற்சியின் விளைவாக கருப்பு கொக்குகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

சீன மற்றும் திபெத்திய பிராந்தியத்தில் சுற்றுச்சூழல், நீர்நிலை, காடுகள் என அனைத்தையும் பாதுகாப்பதற்கான சட்டங்கள் சமரசம் இன்றி அமுல்படுத்தப்பட்டன. இதன் விளைவாக மேலும் சுற்றுச்சூழல் பலமடைந்து உள்ளது. ஆறுகள், ஏரிகள், காடுகள், புல்வெளிகளை பாதுகாப்பதற்காக தனித்தனியாக பொறுப்புத் தலைவர்கள் என்ற பட்டம் கொடுக்கப்பட்டு குறிப்பிட்ட நபர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பிராந்தியம் முழுவதும் உள்ள இதுபோன்ற நூற்றுக்கணக்கான பொறுப்புத் தலைவர்களின் அமைப்பு வலுவாக செயல்படுகிறது.

2017 ஆம் ஆண்டு முதல் திபெத்திய நீர்வள நிர்வாக அமைப்பை அமுல்படுத்தி நீர் நிலைகளையும், கரையோரங்களின் நிர்வாகத்தையும் வலுப்படுத்தவும் ஆறுகள், ஏரிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அவற்றின் நிலையான பயன்பாட்டை நீடித்திருக்க செய்யவும், நதி மற்றும் ஏரிகளின் தலைவர், வழக்கறிஞர், பாதுகாப்பு ஜெனரல், காவல்துறை தலைவர் ஆகியவர்களே அடங்கிய அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் கீழ் உள்ளூர் கட்சி குழுக்கள், அரசாங்கத் துறைகள் ஒருங்கிணைந்து கூட்டாக முடிவுகளை நிறைவேற்றுகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பொது நல வழக்குகளை கையாளவும், சட்ட அமலாக்கத்திற்கான திறனை மேம்படுத்தவும், 11 தேசிய இயற்கை இருப்பு பகுதிகளில் 35க்கு மேற்பட்ட வழக்கறிஞர்களின் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கான அலுவலகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

சுற்றுச்சூழல் நடவடிக்கைகள், அதனால் ஏற்படக்கூடிய மாற்றங்களை தொடர்ந்து பகுப்பாய்வு செய்வதற்கு மத்தியஅரசு அறிவியல் ஆய்வு தொழில் நுட்பத் துறையின் மூலமாக கண்காணித்து வரக்கூடிய அமைப்புகளை உருவாக்கியது. இதன் மூலம் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும், காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கும், இயற்கை பேரழிவுகளை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், பசுமை வளர்ச்சியை ஊக்குவிப் பதற்குமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து இவை செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி முடிவுகளின் படி தொழில்நுட்ப வசதிகளை மத்திய மற்றும் பிராந்திய அரசு ஏற்படுத்திக் கொடுக்கிறது.

திபெத்திய தலைநகரம் லாசாவில் முதல் முறையாக ஜெர்ம்பிளாசம் வள மையத்தை நிறுவி உள்ளார்கள்.(ஜெர்ம்பிளாசம் என்பது ஒரு இனம், மக்கள் தொகை, நில இனம், கலப்பினம் அல்லது சாகுபடி மரபனுவை குறிக்கலாம் ) இந்த மையத்தில் 2,047 இனங்களை உள்ளடக்கிய 8,458 ஜெர்ம் பிளாசம் பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது பல்லுயிர் பாதுகாப்பிற்கு மிக மிக அடிப்படையான ஆதரவாகும். அதிக கார்பன்களை வெளியிடாத குறைந்த அளவு கார்பன் ஆற்றலுடன் பீடபூமியில் திடக்கழிவு மற்றும் உயிர் பொருட்களை பயன்படுத்துவதற்கான ஒரு அமைப்பை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். இந்தத் திட்டம் 15 சதவீதம் செலவுகள் குறைந்தது மட்டுமல்ல சுற்றுச்சூழல் மாசுபாட்டை 75 சதவீதத்திற்கு மேல் குறைத்து விடும்.

இதன் மூலம் அதாவது ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு 300 மில்லியன் யுவான் வருமானம் ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு பசுமை பாதுகாப்பு ஒருங்கிணைந்த திட்டத்திற்கு 4.93 பில்லியன் யுவான்கள் முதலீடு செய்யப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் இழப்பீட்டிற்காக 3.7 பில்லியன் இழப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டது. இது 2022 இல் 16.1 பில்லியன் அளவில் அதிகரித்து உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான அதன் பாதிப்புகளை சரி செய்வதற்கான தொடர் முயற்சியின் காரணமாக இந்த இழப்பீட்டுத் தொகை பயன்படுத்தப் படுகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பை மேம்படுத்துகிற பொழுது அது வறுமை ஒழிப்பிற்கான ஒரு காரணியாகவும் செயலாற்றுகிறது. 2016 முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5,37,700 வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றது. இவற்றுடன் கூடவே உள்ளூர் மக்கள் பசுமை வணிகங்களை துவங்குவதற்கும், பசுமை வேலைகளை கண்டறியவும் உதவி செய்யப்படுகிறது.

திபெத்திய பகுதியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை பிரபலமாகிவிட்டது. மனித குலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்தை மக்கள் பின்பற்றி நிலையான வளர்ச்சியை மதிக்கும் ஒரு புதிய பீடபூமி சூழல் கலாச்சாரத்தை உருவாக்கி உள்ளார்கள். திபெத்திய பிராந்தியத்தில் உள்ள நியின்ஜி நகரம் தேசிய அளவிலான வன நகரமாக(நகரமே வனமாக) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. போமி மாவட்டம் , ஷானன் நகரத்தில் உள்ள கோங்கியாய் மாவட்டம், காம்போ நகரத்தில் உள்ள ஜூம்டு மாவட்டம் உள்ளிட்ட 11 நகரங்கள் தேசிய சுற்றுச்சூழல் நாகரீக நகரங்களின் மாதிரிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று லாசா உட்பட சில நகரங்களில் உள்ள பல கிராமங்கள், சிறு நகரங்கள் தெளிவான நீர் நிலைகளும் பசுமையான மலைகளும் விலைமதிப்பற்ற சொத்துக்கள் என்ற, சுற்றுச்சூழல் தத்துவத்தை உள்ளடக்கிய தளங்களாக பட்டியலிடப் பட்டுள்ளன.

திபெத்திய பிராந்தியத்தில் சீன அரசு இயற்கையும் மனிதனையும் இணைந்து வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்கி வருகிறது. சீன ஜனாதிபதி சி ஜின் பிங் “ஒருவர் புயலுக்கு பயந்து துறைமுகத்திற்கு திரும்பக் கூடாது அவ்வாறு திரும்பினால் அது நம்மை கடலின் மறுபக்கத்திற்கு அழைத்துச் செல்லாது” என்று கூறினார். திபெத்தில் ஏகாதிபத்திய சக்திகளால் உருவாக்கப்பட்ட புயல்களை எல்லாம் கடந்து திபெத் உலகின் உயரமான கூரை மட்டுமல்ல அந்த மக்களின் வாழ்க்கையும் உயரமானது என்று நிருபித்திருக்கிறார்கள். காரல் மார்க்ஸ் தெரிவித்தது போல் இயற்கையின் ஒரு பகுதி மனிதன். அதிலிருந்து அவன் பிரிந்தவன் அல்ல என்ற கோட்பாட்டை சீன பண்புகளுடன் கூடிய சோஷலிசத்தில் வெற்றிகரமாக அமலாக்கி வருகிறார்கள்.

அ.பாக்கியம் 

வியாழன், டிசம்பர் 04, 2025

49 திபெத்: கலாச்சார பாதுகாப்பும் வளர்ச்சியும்


அ.பாக்கியம்

திபெத்திய மக்களின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் சீன கம்யூனிஸ்ட் அரசு அழித்து வருகிறது என்றும், சீனாவின் ஹான் இன கலாச்சாரத்தை புகுத்தி வருகிறது என்றும், திபெத்திய அடையாளங்களை ஒட்டுமொத்தமாக சூறையாடி வருவதாக சீன எதிர்ப்பு சக்திகளும், ஏகாதிபத்திய நாடுகளும் இடைவிடாது ஊளையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒட்டுமொத்த சீன மக்கள் தொகையில் சிறுபான்மை தேசிய இனங்கள் மிகச்சிறிய அளவே இருந்தாலும் அவர்களை சீனாவின் மக்கள் குடியரசு தனித்தன்மையுடன், அவர்களின் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை, பாதுகாப்பதிலும் வளர்த்தெடுப்பதிலும் முக்கிய கவனம் செலுத்துகிறது. சீன பண்புகளுடன் கூடிய சோஷலிச சமூகத்தை உருவாக்குவதில் திபெத்தின் பங்களிப்பை உள்ளடக்கி வளர்க்கிறது. இந்தக் கொள்கையின் வெளிப்பாடு தான் திபெத்திய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அதன் பாரம்பரியங்களையும் அழிந்து விடாமல் பாதுகாப்பதுடன் தேவையான வளர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18 ஆவது காங்கிரஸில் அனைத்து இனக்குழுக்களின் மன உறுதியையும் நம்பிக்கையையும் அதிகரிக்க ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அமுலாக்கி வருகின்றனர். திபெத்திய பிராந்தியத்தில் சீன பண்புகளுடன் கூடிய சோஷலிசத்தின் மதிப்புகளை தீவிரமாக உயர்த்துவதற்கும், அதே நேரத்தில் திபெத்திய பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாத்து கலாச்சார அமைப்புகளின் சேவைகளை வளர்த்தெடுக்கவும் செய்கிறார்கள். இதன் காரணமாக திபெத்திய கலாச்சார நிறுவனங்களும், கலாச்சாரம் தொடர்பான தொழில்களும் மேம்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கைகள் திபெத்திய மக்களின் இதயங்களில் சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசத்தின் மதிப்பை உயர்த்தியுள்ளது.

வளரும் மொழியும் எழுத்தும்

திபெத்திய மொழியையும் எழுத்து முறைகளையும் பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், அஞ்சல் சேவைகள், தகவல் தொடர்புகள், போக்குவரத்து துறைகள், நிதித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பரவலாக திபெத்திய மொழிகள்தான் பயன்படுத்தப்படுகிறது. பொது இடங்களில் அறிவிப்பு பலகைகளில் திபெத்திய மொழியையும் சீன மொழியையும் பயன்படுத்துகின்றார்கள். இரு மொழிக் கொள்கை கல்வி நிலையங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

2015 ஆம் ஆண்டில் திபெத்திய மொழியில் சொற்களஞ்சியமும், தேசிய தர நிலை தகவல் தொழில்நுட்பமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி திபெத்திய மொழி வளர்ச்சிக்காக குறிப்பான சில திட்டங்களை உருவாக்கி அமுல்படுத்த ஆரம்பித்தது. மொழி வளர்கிறது என்று சொல்லுகிற பொழுது இக்காலத்தில் 1500 புதிய சொற்களை கண்டுபிடித்து திபெத்திய மொழிகளை வளர்த்தார்கள். 2020 ஆம் ஆண்டு திபெத்திய மொழிகளில் 2200 புதிய சொற்களை சேர்த்து திபெத்திய மொழியின் பயன்பாட்டு தளத்தை விரிவு படுத்தினார்கள். மொழி வளர்ச்சியிலும் எழுத்து சீர்திருத்தத்திலும் திபெத்திய அடையாளத்தை அழிக்காமல் வளர்த்தெடுக்கும் பணியினை இந்த செயல்கள் பறைசாற்றுகின்றன.

மற்றொரு முக்கியமான அம்சம் திபெத்திய மொழியில் வெளிவரக்கூடிய பத்திரிக்கைகள், புத்தகங்கள் ஆகியவையாகும். இவை அனைத்தும் திபெத்திய மொழிகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் பத்திரிகைகளும் கிடைத்தாலும் திபெத்திய மொழிகளில் வெளிவருவது என்பது எளிய மக்களையும் சென்றடைவதற்கான ஒரு வடிவமாக உள்ளது.

திபேத்தில் 40 அரசு வெளியீட்டு நிறுவனங்களும், பல்வேறு வகையான வெளியீடுகளை வெளியிடக்கூடிய 219 வெளியீட்டு நிறுவனங்களும் உள்ளன. இக்காலத்தில் இந்த வெளியீட்டு நிறுவனங்கள் 2.71 மில்லியன் புத்தகங்களை அச்சடித்து வெளியிட்டு இருக்கிறார்கள். இதேபோன்று 2.32 மில்லியன் பருவ இதழ்களை (வார மாத இரு மாத) வெளியிட்டு உள்ளார்கள். 2015 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு திபெத்தில் புத்தகம் மற்றும் பருவ இதழ்களின் விற்பனை 1.29 பில்லியன் யுவானை கடந்துள்ளது. திபெத்திய மொழியில் 17 பருவ இதழ்களும் 11 தினசரி செய்தித்தாள்களும் வெளிவந்து கொண்டிருக் கிறது.

 

மேலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு முன்னேற்றம் புரட்சிக்கு முந்திய காலத்தில் கிடைக்காத முக்கிய கட்டமைப்பாக நூலகங்கள் மாறி உள்ளது. நிர்வாக கிராமங்களில் 5,400க்கும் மேற்பட்ட நூலகங்கள் செயல்படுகிறது. திபெத்தில் மடாலயங்கள் எண்ணிக்கை அதிகம். மடாலயங்களில் 1700 க்கு மேற்பட்ட நூலகங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவை மதம் சார்ந்த நூலகங்கள் என்பதை கடந்து பொது அறிவுக்கான நூலகமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த இரண்டு நூலக கட்டமைப்புகள் மூலம் திபெத்திய கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகளும் மேய்ப்பர்களும் அறிவியல் மற்றும் கலாச்சார அறிவை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார்கள். இந்த பிராந்தியத்தில் பத்திரிக்கை மற்றும் வெளியீட்டு நிறுவனங்களின் வணிகமும் செழிப்படைந்து வருகின்றன.

திபெத்திய பாரம்பரிய மருத்துவத்தின் மகிமை

புரட்சிக்குப் பிறகு சீனா முழுவதும் பாரம்பரியமான மருந்துகள் சிகிச்சை முறையில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இந்த மருத்துவ முறைகள் பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு விதமான சிகிச்சை முறைகளையும் கொண்டுள்ளது. இதேபோன்று திபெத்திய பிராந்தியத்தில் பாரம்பரிய மருத்துவமும் சிறப்பு வாய்ந்தது. திபெத்தில் ஏற்கனவே திபெத்திய மருத்துவ பல்கலைக்கழகம் இருக்கிறது. இவற்றில் புதிய வளாகங்களை உருவாக்குவதற்கு ஒரு பில்லியன் யுவான்களை அரசு முதலீடு செய்து, திபெத்திய பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திபெத்தில் 49 திபெத்திய மருத்துவ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டன.

திபெத்தில் இருக்கக்கூடிய கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் 42.4 சதவீதம் திபெத்திய மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய மருந்துகளுக்கு நவீன காலத்தில் மகத்துவம் இருக்காது. மதிப்பு குறைவாக இருக்கும் என்ற பொதுவான கருத்து மாற்றப்பட்டு சீன மக்கள் குடியரசு திபெத்திய மருந்துகளை தரப்படுத்தி முறையாக அளவீடு செய்து மேம்படுத்தி உள்ளது. இந்த மருந்துகள் வணிக அடிப்படையில் தயாரித்து வழங்கப்படுகிறது. வணிக தரத்தை வருகிற பொழுது அது பல்வேறு பகுதிகளுக்கு பயன்படக்கூடிய மருந்தாக மாறுகிறது.

 

மற்றொரு முன்னெடுப்பு திபெத்திய மருத்துவம் குறித்த 300க்கும் மேற்பட்ட பழங்கால ஆவணங்களை பல ஆண்டுகளாக தொகுத்து அவற்றை வெளியிட்டு உள்ளார்கள். திபெத்திய மருத்துவம் குறித்த பண்டைய புத்தகங்கள் 600க்கும் மேற்பட்டவை சேகரிக்கப்பட்டு பயன்படுத்தக்கூடிய முறையில் வெளியிடப்பட்டுள்ளது. மற்றொரு குறிப்பிடத்தக்க செயல் திபெத்திய மருத்துவத்தின் தலைசிறந்த படைப்பான நான்கு மருத்துவ க்ளாசிக் என்ற புத்தகம் உலக ஆசிய பசிபிக் பிராந்திய பதிவேட்டு துறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

நினைவுச் சின்னங்கள் வழியே கலாச்சார பயணம்

பாரம்பரிய கலாச்சாரத்தை உயிர்ப்பிக்க கூடிய முறையில் அவற்றை பயனுள்ள பாதுகாப்பில் வைத்துள்ளார்கள். திபெத்திய பிராந்தியத்தில் தற்போது மாநில அளவிலான மூன்று கலாச்சார மையங்களும், மாவட்ட அளவில் ஐந்து முக்கிய கலாச்சார நகரங்களும், 80க்கும் மேற்பட்ட கிராமங்கள், பாரம்பரியமான சீன கிராமங்கள் என்று திபெத்திய கிராமங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றில் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இன சிறுபான்மை கிராமங்கள் என்ற பட்டத்தை 29 கிராமங்கள் பெற்றுள்ளன.

பொதுவாக கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை தாங்கி நிற்கக்கூடிய பல இடங்கள் அனைத்து நாடுகளிலும் இருக்கும். அவற்றை பல நாடுகள் பாதுகாப்பார்கள் பல நாடுகள் பராமரிப்பற்று கைவிட்டு விடுவார்கள். அமெரிக்காவின் படையெடுப்பால் ஈராக், லிபியா, சிரியா போன்ற பல நாகரிகத் தொட்டில்கள் சிதைக்கப்பட்டது. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் சுடுகாடாக மாற்றி வருகிறது. திபெத்தில் இப்படிப்பட்ட இடங்களை உள்ளூர் அரசும் மாவட்ட நிர்வாகமும் ஆய்வு செய்து கண்டுபிடித்து பதிவு செய்து உள்ளன. திபெத்திய பிராந்தியத்தில் 4468 வரலாற்று தளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று 2373 கலாச்சார நினைவுச் சின்னங்கள் அரசாங்க அமைப்பின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 70 கலாச்சார சின்னங்கள் மத்திய அரசின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. திபெத்தில் இருக்கக்கூடிய எந்த விதமான கலாச்சார வரலாற்றுச் சின்னங்களும் இதுவரை அழிக்கப்படவில்லை. இதற்கு மேலாக பொட்டலா அரண்மனை வரலாற்று குழுமம் அமைக்கப்பட்டது. இந்த அரண்மனை குழுமம் பட்டியலிடப்பட்டுள்ள அரண்மனைகளை உலக பாரம்பரிய பட்டியலில் பதிவு செய்து உள்ளனர். எண்ணற்ற மடாலயங்கள் கட்டிடக்கலையிலும் ஓவியங்களிலும் சிறந்து விளங்குகிறது வரலாற்றை காட்சிப்படுத்துகிறது. அவற்றை சீரமைத்து புதுப்பித்து பாதுகாக்கும் வேலைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு செய்து வருகிறது.

இந்தப் பணியின் தொடர்ச்சியாக நவீன வசதிகளை பயன்படுத்தி 2013 ஆம் ஆண்டு முதல் 1,00,000க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற கலாச்சார நினைவு சின்னங்களை டிஜிட்டல் காப்பகத்தின் மூலம் பாதுகாத்து வருகின்றனர். மேலும் மிக முக்கிய கண்டுபிடிப்பாக விளங்குகிற தேயிலை இலைகளில் எழுதப்பட்ட மார்கிஸ் எழுத்து முறைகளையும், அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட 1800 ஆண்டுகளுக்கு முந்தைய பறவை, சில விலங்குகள் திபெத் பிராந்தியம் பட்டு சாலைகள் மூலமாக சீனாவின் இதரப் பகுதிகளுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தி இருந்தது என்ற வரலாற்றையும் பாதுகாத்து வருகிறார்கள். திபெத்தில் இருக்கக்கூடிய அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பில் ஒரு இடத்தை சீனாவின் பத்து முக்கிய அகழ்வாராய்ச்சி இடங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. சீன நாகரிகத்தின் சிறப்பின் ஒரு பகுதியாக பிரிக்க முடியாத அங்கமாக இருப்பதை வரலாற்றின் சின்னமாக போற்றி வருகிறார்கள்.

திபெத்தில் மில்லியன் கணக்கான அடிமைகளை விடுதலை செய்யப்பட்டதின் நினைவாக பெரும் நினைவு மண்டபத்தை உருவாக்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து உள்ளனர். வரலாற்றின் நினைவுகள் அழிந்து போகாமல் நினைவு கூறுவதாக அவை உள்ளது. திபெத் பிராந்தியத்தின் இரண்டு பீடபூமிகளை இணைக்கும் பெரும் சாலைகளை அமைப்பதில் இறந்தவர்களுக்காக நினைவு மண்டபத்தையும், திபெத் வரலாறு பற்றிய கண்காட்சி மண்டபத்தையும், பொட்டலா அரண்மனையின் கண்காட்சி, அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதற்கான நினைவுச் சின்னமாக சியான்சியில் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து மடிந்த திபெத்தியர்களின் நினைவுச் சின்னங்களையும், புரட்சிகர போராளிகளின் தியாக சின்னத்தை லின்ஸோவிலும் அமைத்து உள்ளார்கள். திபெத்திய விடுதலையிலும் வளர்ச்சியிலும் சீன விடுதலை ராணுவத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் நினைவு கூறக்கூடிய பல்வேறு விதமான நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் கூடவே சீனபண்புகளுடன் கூடிய சோஷலிசத்தை முன்னெடுத்த செல்லக்கூடிய முறையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, சீன மக்கள் குடியரசின் வரலாறு, 1978ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட சீர்திருத்தம் மற்றும் திறப்பு கொள்கையின் வரலாறு, சோஷலிச வளர்ச்சியின் வரலாறு என அனைத்தும் கல்வி கலாச்சார நடவடிக்கையில் மூலமாக திபெத்திய மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. திபெத்தில் உள்ள அனைத்து இனக்குழுக்களின் அதிகாரிகளும், மக்களும் நமது தேசம், நமது நாடு, நமது வரலாறு, கலாச்சாரம் ,நமது மதம், பற்றிய புரிதலை சரியான முறையில் வளர்த்துக் கொள்ள மேற்கண்ட கலாச்சார நடவடிக்கைகள் பெரும் உதவி செய்துள்ளது.

திபெத்திய மக்கள் பயன்படுத்திய பொருட்கள், கலாச்சார பொருட்கள், பாரம்பரியமாக பயன்படுத்திய கருவிகள், அனைத்தையும் பாதுகாப்பதற் காக சீன மக்கள் குடியரசு 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 325 மில்லியன் யுவான்களை ஒதுக்கீடு செய்து பாதுகாக்கும் ஊழியர்களுக்கான பயிற்சி அளித்து பாதுகாத்து வருகிறது. சீனாவின் நூலகங்களில் திபெத்திய வரலாறு, கலாச்சாரம், பொருளாதாரம் என அனைத்தும் அடங்கிய தொகுதிகள் முழுமையாக வைக்கப்பட்டுள்ளது. திபெத்தை 618 ஆம் ஆண்டுகளிலிருந்து ஆட்சி செய்தவர்கள் முதல் செம்படைகளால் விடுதலை செய்யப்பட்ட காலம் வரையிலான பிரம்மாண்டமான வரலாறும் பாதுகாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பெரும் நகரங்கள் அருங்காட்சியங்கள் மண்டபங்களைக் கடந்து, திபெத்தில் ஐந்து அடுக்கு பொது கலாச்சார சேவை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக திபெத்திய பிராந்தியத்தின் அனைத்து நகரங்களிலும். மாவட்டங்களிலும் நூலகங்கள். மக்கள் கலை அரங்குகள். அருங்காட்சியங்கள். கலாச்சார மையங்கள். கலாச்சார செயல்பாட்டு நிலையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

திவ்ய பிராந்தியத்தில் பத்துக்கு மேற்பட்ட தொழில் முறை நிகழ்த்து கலை குழுக்கள் இருக்கிறது. மாவட்ட அளவில் 76 கலை குழுக்களும், பகுதி நேர அளவில் செயல்படக்கூடிய திபெத்திய ஒபேரா நாடகக் குழுக்களும் செயல்படுகிறது. இதற்கு அடுத்து டவுன்ஷிப்களில் 395 கலைக் குழுக்கள் உள்ளது. நிர்வாக கிராமங்களில் 5492 மக்கள் கலை குழுக்கள் செயல்படுகிறது. கலைகுழுக்கள் மூலமாக கலாச்சார நடவடிக்கைகள் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. இந்த குழுக்களில் மொத்தம் ஒரு லட்சம் தொழில் முறை மற்றும் அமெச்சூர் கலைஞர்கள் உள்ளனர்.

வானொலி தொலைக்காட்சி திரைப்படம்

திபெத்திய பிராந்தியத்தில் திரைப்படங்கள் வெளியிடுவதும், தொலைக்காட்சி பயன்படுத்தக்கூடியவர்களும், வானொலி பயன்படுத்தக் கூடியவர்களும் வேகமாக அதிகரித்து வருகிறார்கள். திபெத்திய மக்கள் தொகையில் 99 சதவீதம் மக்கள் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பயன்படுத்துகிறார்கள். 2022 ஆம் ஆண்டின் இறுதியில் திபெத்தில் 191 திரையரங்குகள் இருக்கிறது. இவை தவிர 478க்கு மேற்பட்ட டிஜிட்டல் திரைப்பட வசதிகள் செயல்படுகிறது. திபெத்திய சிறுபான்மை மொழியிலிருந்து 80க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பிரதான மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்லது டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது. வானொலி தொலைக்காட்சி திரைப்படங்களின் மூலமாக திபெத்திய மக்களின் வருமானம் அதிகமாகி உள்ளது

கலாச்சார துறைகளில் வேலை வாய்ப்பு

கலாச்சார துறைகளின் செயல்பாட்டால் அவை நிறுவனப் படுத்தப்படுகிற பொழுது வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது. தனித்துவமான பண்புகளைக் கொண்ட கலாச்சார துறையின் வளர்ச்சியை விரிவு படுத்துவதற்காக கலாச்சார மற்றும் சுற்றுலாவை ஆழமான முறையில் ஒருங்கிணைத்து உள்ளார்கள். 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 8,000 மேற்பட்ட கலாச்சார நிறுவனங்களை பதிவு செய்து உள்ளார்கள். இந்த நிறுவனங்கள் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளது. கலாச்சாரம் மற்றும் அது தொடர்புடைய தொழில்களில் இந்தக் காலத்தில் மட்டும் 6.3 பில்லியன் யுவான் வருமானம் பெறப்பட்டுள்ளது. திபெத்திய பிராந்தியத்தில் நான்கடுக்கு முறைகளில் 344 கலாச்சார மாதிரி பூங்காக்களும், தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 13 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் 91 கலாச்சார திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தினார்கள். இவற்றின் மொத்த முதலீடு 50 பில்லியன் யுவான் ஆகும். திபெத்திய கலாச்சாரத்தை அனைத்து வகைகளிலும் மேம்படுத்தி பாதுகாத்து வளர்ச்சி அடையக்கூடிய செயலை சீன மக்கள் குடியரசு சீன பண்புகளுடன் கூடிய சோஷலிச அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது.

விளையாட்டில் வீரர்களின் வருகை

திபெத்திற்கென்று பாரம்பரிய விளையாட்டுக்கள் இருக்கிறது. இந்த விளையாட்டுகளை மேம்படுத்தி வருகிறார்கள். மலை விளையாட்டுக்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. இவற்றுக்கான அனைத்து விதமான வசதிகளையும் திட்டமிடலில் கொண்டு வந்து செயல்படுத்துகிறார்கள். இதர விளையாட்டுப் போட்டிகளிலும் திபெத்திய விளையாட்டு வீரர்கள் படிப்படியாக தங்களது செயல் திறனை அதிகப்படுத்தி வருகின்றனர்.

 

சர்வதேச விளையாட்டுக்கள் மற்றும் உள்நாட்டு நிகழ்வுகளில் திபெத்திய பிராந்திய விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டங்களின் மூலம் திபெத்திய இளைஞர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு நிகழ்வுகளில் 241 பதக்கங்களை பெற்றனர். 2018 ஆம் ஆண்டு ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள வீரர் டோப்ஜி ஆண்கள் தொடர் ஓட்டத்தில் வெண்கல பதக்கத்தை வென்றார். சீனா இதுவரை அடைந்த வெற்றிகளில் இதுவும் முக்கியமானதாகும். இவர் திபெத்திய விளையாட்டு வீரர். இதேபோன்று பனி சறுக்கு, மலை ஏறுதல், ஓட்டப்பந்தயம் போன்றவற்றிலும் திபெத்திய வீரர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். 2021 ஆண்டு நடைபெற்ற 14 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் திபெத்திய பிராந்திய விளையாட்டு வீரர்கள் 3 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களையும் வென்றனர். திபெத் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் அவர்கள் திபெத்திற்கு வெளியில் நடைபெறக்கூடிய விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற ஆரம்பித்து விட்டனர். புரட்சிக்கு முந்தைய திபெத்தில் இவையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

திபெத்திய வளர்ச்சிகளில் உள்கட்டமைப்பு. வேலைவாய்ப்பு. பொருளாதார வளர்ச்சி. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன். திபெத்தின் கலாச்சார வளர்ச்சி மிக முக்கியமான தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. பாரம்பரிய கலாச்சார மதிப்புகளை முதலாளித்துவ அரசுகள் அழித்தும் வருகிற பொழுது அதை பாதுகாக்க கூடிய பணியை சீன மக்கள் குடியரசு செய்து வருவதுடன் திபெத்தை சீன சோஷலிசத்தின் ஒரு பகுதியாக சிறப்பு கவனம் செலுத்தி மேம்படுத்தி வருகிறது.

அ.பாக்கியம்

 

வியாழன், நவம்பர் 27, 2025

48 திபெத்: உலகின் கூரையில் ஒழிக்கப்பட்ட வறுமை

 



அ.பாக்கியம்

வருமானத்தை சமமாக

பங்கிடாமல்

வறுமை ஒழிப்பு பற்றி

பேசுவது பயனற்றது.-

 ஜி சின் பிங்

 

சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீன மக்கள் குடியரசின் வெற்றியின் மூலம் உலகின் கூரை என்று அழைக்கப்படுகிற திபெத்தில் வறுமை ஒழிப்பின் ஒளி பிரகாசமாக எரியத் தொடங்கியது. உயிர் வாழ்க்கை மலைகளின் உச்சியில் இருந்தாலும், வாழ்வாதாரம் படு பாதாளத்தில் கிடந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வறுமையே வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள் புரட்சிக்கு பிறகு வளமையின் செழிப்பை அறியத் தொடங்கி விட்டார்கள்.

2012 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18 வது தேசிய காங்கிரஸ் நடைபெற்றது. இந்த காங்கிரஸில் சீனா முழுவதும் வறுமை ஒழிப்பை தீவிர படுத்துவதற்கான விரிவான திட்டம் தீட்டப்பட்டது. அதிலும் குறிப்பாக மிகவும் பின்தங்கிய திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் வறுமையை ஒழிப்பதற்காக கூட்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கட்சி காங்கிரஸ் முடிவெடுத்தது. இதற்காக சிறப்பு திட்டங்களை உருவாக்கினார்கள். தொடர்ந்து ஐந்தாண்டு காலம் உருவாக்கிய திட்டங்கள் அமுலாக்கிய விதங்கள் பற்றியும், தேசிய அளவில் கூட்டங்களை நடத்தி பரிசீலனை செய்து மேலும் காலத்துக்கேற்ற மாற்றங்களை செய்து வந்தனர். மேற்கண்ட கட்சி காங்கிரஸில் சீன நாட்டில் இருக்கக்கூடிய அரசுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் திபெத்தின் வளர்ச்சிக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தது. இதனைத் தொடர்ந்து 13-வது ஐந்தாண்டு திட்டத்தில் (2016-2020) விபத்தில் வறுமை ஒழிப்பதற்காக குறிப்பான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு அதை நோக்கிய முன்னெடுப்புகள் தீவிர படுத்தப்பட்டன

திபெத் பிராந்தியத்தில் வறுமையில் வாழக்கூடிய மக்களின் துல்லியமான கணக்கு எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து. இதற்கான அதிகாரிகளை ஒருங்கிணைக்க அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அதிகாரிகள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு திபெத்தின் மூளை முடுக்கெல்லாம் சென்று வறுமையின் உண்மையான நிலைமையை சேகரித்தனர். மிகவும் சவால் நிறைந்த பகுதிகளுக்கு இந்த அதிகாரிகள் சென்று விவரத்தை சேகரிக்கிற பொழுது சிலர் தங்கள் உயிரையும் விட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை மூலமாக 70 பக்கத்திற்கான செயல்திட்டத்தை திபெத்திய பிராந்தியத்தில் அமுலாக்க வரையறுத்தனர்.

வறுமை என்பது வாய்க்கும் வயிற்றுக்குமான பிரச்சனை மட்டுமல்ல. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள குடியரசு வறுமை ஒழிப்பு என்பது பொருளாதார நடவடிக்கைகளை அதிகப்படுத்துவது, வாழ்வதற்கு தகுதியற்ற இடங்களை கைவிட்டு புதிய இடங்களுக்கு செல்வது, கல்வியின் மேம்பாடு சுற்றுச்சூழல் மேம்பாடு சமூக பாதுகாப்பு என ஐந்து தளங்களில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்று துல்லியமாக முடிவெடுத்தது. வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி, மிகவும் இணக்கமான வாழ்க்கை, வேலை வாய்ப்புகள், வசதியான உள்கட்டமைப்பு, மிகவும் அடிப்படையான பொது சேவைகள் ஆகிய அனைத்தும் கிடைக்கும் பொழுதுதான் ஒருவர் முழுமையாக வறுமையில் இருந்து விடுபடுகிறார் என்று அர்த்தமாகும் என சீன மக்கள் குடியரசு முடிவெடுத்து அமலாக்கியது. ஆகவே திபெத்தில் வறுமையை ஒழித்து விட்டார்கள் என்றால் இந்த அனைத்து வசதிகளுடனும் கூடிய வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று தான் அர்த்தம்.

இந்தத் திட்டத்தை அமல்படுத்த களத்தில் இறங்கிய பொழுது திபெத்தில் உள்ள 74 மாவட்டங்களில் 6,28,000 லட்சம் ஏழைகள் வறுமையில் வாடுகிறார்கள் என்று கணக்கிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு இறுதியில் முற்றிலுமான வறுமை ஒழிக்கப்பட்டது. திபெத்திய வரலாற்றில் முதல்முறையாக வறுமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இஷ்டப்பட்ட இடமாற்றம் 

 

திபெத்திய வறுமை ஒழிப்பு திட்டத்தில் இதுவரை எங்கும் கடைப்பிடிக்காத ஒரு பகுத்தறிவு பூர்வமான திட்டம் கடைபிடிக்கப்பட்டது. கணிசமான மக்கள் மிக உயர்ந்த, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழ்ந்தார்கள். சீதோஷன நிலை மிகவும் துன்புறுத்தக் கூடியதாக இருந்தது. இந்த மக்களுக்கு வறுமை ஒழிப்பு என்றால் உணவை எளிதில் வழங்கி விடலாம். ஆனால் அது மட்டும் வறுமையை ஒழித்து விடாது என்ற நோக்கத்தில் செழிப்பான பகுதிகளுக்கு கிராமங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். சிறந்த உள் கட்டமைப்புகளும் வேலை வாய்ப்புகளும் உருவாகக்கூடிய பகுதிகளுக்கு மாற்றினார்கள். இந்த இடம் மாற்றத் திட்டத்தில் 965 கிராமங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் 2,66,000 லட்சம் மக்கள் புதிய இடங்களில், புதிய வீடுகளில், புதிய வசதிகளுடன் குடியமர்த்தப்பட்டார்கள். இந்தத் திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அமலாக்கினார்கள்.

திட்டத்தைப் பற்றி தெரிவிக்கிற பொழுது கிராமத்தில் இருந்த சில பெரியவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியே வருவதற்கு மறுத்து விட்டனர். கிராமத்திலிருந்து வயது குறைவானவர்கள் வேறு இடங்களுக்கு செல்வதில் ஆர்வமாக இருந்தனர். எனினும் வரமறுத்த பெரியவர்களையும் மற்றவர்களையும் புதிய இடங்களை காண்பித்தும், அங்கு இருக்கக்கூடிய வசதிகளையும், வேலை வாய்ப்புகளையும் தெளிவான முறையில் எடுத்துரைத்த பிறகு தன்னார்வத்துடன் இடம்பெயர ஒத்துக் கொண்டார்கள். விவசாயிகளும், மேய்ப்பர்களும் திபெத்திற்கு உள்ளேயோ அண்டை மாநிலங்களிலோ வேலை செய்வதற்கு ஆர்வமாக இருந்தார்கள். உள்ளூர் மக்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த ஊருக்கு வெளியே வேலை செய்து புதிய திறமைகளை கற்றுக் கொள்வதற்கும் விருப்பத்தை தெரிவித்தார்கள்.

இதற்கான உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்போது மக்கள் கூடுதலான முறையில் இடமாற்றம் தேவை என்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அரசு அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான வாழ்வாதாரத்தையும் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அரைகுறையான பணிகள் மக்களின் வறுமையை ஒழிக்காது என்ற காரணத்தினால் முழுமையான முறையில் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தீபத்திய தலைவர் தெரிவிக்கிறார். வறுமை ஒழிப்பில் இது ஒரு புதிய முயற்சியாகும். இந்த இடப்பெயர்வுகளை முதலாளித்துவ பத்திரிகைகள் மக்களை சொந்த ஊர்களில் இருந்து வெளியேற்றுகிறார்கள் என்று ஊதி தள்ளுகிறார்கள் உண்மை இதற்கு நேர்மாறானது.

தரமான விவசாயமும் வருமானமும்

 

வறுமையை ஒழிக்க மற்றொரு முயற்சி விவசாயத் துறையில் எடுக்கப்பட்டது. பாரம்பரியமான விவசாய கருவிகளை வரலாற்றின் ஒரு பகுதியாக ஒதுக்கி வைத்துவிட்டு புதிய இயந்திரங்களின் மூலம் விவசாயத்தில் ஈடுபட்டனர். இதன் பிரதான அம்சமாக நிலங்களின் தரத்தை உயர்த்தினார்கள். உயர்தரமான விவசாய நிலங்களை உருவாக்கினார்கள். இக்காலத்தில் பிரதான பயிர்களை வளர்ப்பதற்கு ஏற்ற நிலங்கள் 65% இயந்திரமயமாகியது.

இதன் விளைவாக தரப்படுத்தப்பட்ட கால்நடை பண்ணைகளும், கோழி வளர்ப்புக்கான பண்ணைகளும் அனைத்து மாவட்டங்களிலும் உருவானது. இவை இரண்டுக்குமான சேவை மையங்களும் அனைத்து மட்டத்திலும் அமைக்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சிக்கான சரியான பாதையை கண்டறிய உள்ளூரில் இருக்கும் கச்சா பொருட்களை முதலில் பயன்படுத்தி தொழிலை உருவாக்கினார்கள்.

பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க சாங் கிங்2000, ஜிமாலா22 போன்ற உயர்நில பார்லி இனங்களை நவீன முறையில் பயிரிட்டு விளைச்சளை அதிகரித்தார்கள். இவற்றுடன் கூடவே கால்நடை எண்ணிக்கைகளை அதிகப்படுத்துவதற்காக குறிப்பாக பகிரியாக், ரிவோக் யாக் போன்ற காட்டு எருதுகளும், செம்மறி ஆடுகள் ஆகியவற்றின் வளர்ப்பிலும் புதிய முறைகளை புகுத்தி நவீனப்படுத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக புதிய கிராமப்புற கூட்டு பொருளாதார அமைப்புகளின் எண்ணிக்கை 6,172 என்ற அளவு உயர்ந்தது. கூட்டுறவு அமைப்புகளின் உயர்வு விவசாய உற்பத்தியையும் உயர்ந்தது.

வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 4 தொழில் துறை க்ளஸ்ட்ரஸ், ஏழு தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. விவசாயம் சார்ந்த தொழில்களை உருவாக்குவதற்காக 18 நகரங்களை தேர்ந்தெடுத்து அதில் இருக்கக்கூடிய மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினார்கள். விவசாயம் சார்ந்த தொழிற்கருவிகளை உற்பத்தி செய்யக் கூடியதாக இந்த 18 தொழில் நகரங்களும் அமைந்தது. வறுமையால் வாடிய கிராமப்புறத்தில் மக்கள் தங்கள் சொந்த கிராமத்தில் இருந்து வெளிப்பகுதிகளுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். மேற்கண்ட தொழிற்துறை பூங்காக்கள், விவசாயம் சார்ந்த தொழில்களின் மூலமாக இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு வேலை கிடைத்தது. இதற்கு மேலாக வெளியில் வந்து வேலை செய்ய முடியாத மக்களுக்காக வீடுகளிலோ அல்லது அதற்கு அருகாமையிலோ வேலை செய்யக்கூடிய வகையில் வாய்ப்புகளை வழங்கும் விதமாக 173 பாரம்பரியமான கலாச்சார தொழிற்பட்டறைகள் கட்டி வேலைவாய்ப்பை வழங்கினார்கள்

உற்பத்தியையும் விநியோகத்தையும் இணைக்க கூடிய வகையில் தொழில்துறை சங்கிலிகளை விரிவு படுத்தினார்கள். 2020 ஆம் ஆண்டில் 162 முன்னணி விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு நிறுவனங்கள் இருந்தன. இவற்றின் செயல்படும் முதலீட்டு மதிப்பு 5.7 பில்லியன் யுவான் ஆகும். இது 2015 ஆம் ஆண்டை விட இரு மடங்கு அதிகமான தொகையாகும்.

பொருள் விநியோகத்திற்கு வழக்கமான சந்தைகளைக் கடந்து மின் வணிகத் திட்டங்களை மேம்படுத்தினார்கள். வறுமை ஒழிப்பின் மற்றொரு வேலைவாய்ப்பாகவும், பொருட்களின் விற்பனைகளை அதிகப்படுத்து வதற்கும் இந்த ஆன்லைன் விற்பனை முறைகள் பெரும் பங்காற்றியது. இவற்றை மேம்படுத்துவதற்காக திபெத் பிராந்திய அரசு தனது பட்ஜெட்டில் 897 மில்லியன் யுவான்களை ஒதுக்கியது. தொற்றுநோய் காலத்தில் மட்டும் திபெத் பிராந்தியத்தில் 27 மாவட்டங்கள் மின் வணிக தளங்களை உருவாக்கி 200 மில்லியன் யுவானுக்கு மேல் வணிகம் செய்தார்கள். இந்த வணிகத்தில் 263 க்கு மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்தப் பொருட்களை வறுமை ஒழிப்பு திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்று பட்டியலிட்டு விற்பனை செய்தனர். நகர்ப்புறங்களில். அருகாமை மாநிலங்களில் நுகர்வோர்கள் வறுமை ஒழிப்பிற்காக இந்த பொருட்களை வாங்க வேண்டும் என்ற முறையில் பொருட்களை வாங்கினார்கள். மேற்கண்ட 263க்கும் மேற்பட்ட வறுமை ஒழிப்பு தயாரிப்பு பொருட்கள் 150 மில்லியன் யுவான்களுக்கு மேல் குறிப்பிட்ட ஆண்டில் விற்பனையானது.

2016 ஆம் ஆண்டு முதல் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் வறுமை ஒழிப்புக்காக மட்டும் 75.4 பில்லியன் யுவான்கள் ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்பட்டது. உள்ளூர் வணிகங்களை மேம்படுத்துவதற்காக 307 வணிகத் திட்டங்களை அமலாக்கினார்கள். இந்த வகையில் 2,38000 பதிவு செய்யப்பட்ட ஏழைகள் மறுமையில் இருந்து மீட்கப்பட்டனர்.

சூரியனின் விதி மட்டும் அல்ல

 

கிழக்கில் உதித்து மேற்கில் மறைவது சூரியனின் நிகழ்வு.. சோசலிச பொருளாதாரத்தில் திட்டமிட்ட பொருளாதாரம் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை குறைப்பதற்கான ஒரு வடிவமாகும். வளர்ச்சி அடைந்த பகுதிகளை வளர்ச்சி அடையாத பகுதிகளுக்கு உதவி செய்வது என்பது திட்டமிட்ட பொருளாதரத்தின் பணிகளில் ஒன்று. இதன் மூலம் பிரதேச அளவிலான ஏற்றத்தாழ்வை குறைக்க முடியும். 1990 ஆம் ஆண்டின் நடுப்பகுதிகளில் சீனாவின் கிழக்குப் பகுதிகள் பெரும் வளர்ச்சி அடைந்தன. ஷாங்காய் உட்பட அவற்றை சுற்றி இருக்கக்கூடிய 10 பெருநகரங்கள் இந்த வளர்ச்சியின் மையமாக இருந்தது. இந்த வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் உதவியுடன் மேற்குப் பகுதியாகிய திபெத் பிராந்தியத்திற்கு உதவி செய்வதற்கான வறுமை ஒழிப்பு சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 19.52 பில்லியன் யுவான் மதிப்புடைய 313க்கு மேற்பட்ட திட்டங்களை திபத்தில் நிறைவேற்றினார்கள். கிழக்குப் பகுதியில் இருந்து நூற்றுக் கணக்கான மருத்துவர்கள், ஆசிரியர்களும் திபெத்திய பிராந்தியத்திற்கு வந்து உதவி செய்தார்கள். இந்த இணைப்பின் தொடர்ச்சியாக திபெத் பிராந்தியத்தை சேர்ந்த 8,000க்கு மேற்பட்டவர்கள் கிழக்கில் உள்ள நகரங்களுக்கு வேலைக்கு சென்றார்கள். இவர்களில் 5000 பேர்கள் பட்டதாரி இளைஞர்கள். இந்தத் திட்டத்தின் மூலம் திபெத்திலிருந்து படித்தவர்கள் கிழக்கில் இருக்கும் நகரங்களுக்கு வேலைக்கு செல்வது வாடிக்கையாக மாறியது. இது அவர்களின் பொருளாதார வளத்தை மேம்படுத்தியது.

மற்றவர்களின் நுகர்வும் ஏழைகளின் வயிறும்

 

Covid-19 காலத்தில் ஒட்டு மொத்த சீனாவிலும் மக்களை அதிகம் வாங்க வைப்பதற்காக கைகளில் பணத்தை கொடுத்து செலவழிக்க வைத்தார்கள் இதன் மூலம் கோவிட் காலத்தில் இயங்காமல் இருந்த தொழிற்சாலைகள் விவசாய தொழில்கள் அனைத்தும் இயங்கத் துவங்கியது. மீண்டும் பொருளாதார சுழற்சி ஏற்பட்டது. எனவே இதன் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணங்களில் உள்ள அரசு நிறுவனங்கள் மேற்குப் பகுதியில் உள்ள திபெத் உட்பட சில மாநிலங்களில் இருந்து பொருட்களை வாங்குவதன் மூலமாக திபெத்திய பொருளாதார சுழற்சியும் வேலை வாய்ப்பு பாதுகாக்கப்பட்டது. இதற்காக மேற்குப் பகுதியில் உற்பத்தியாக கூடிய பொருட்களின் தரச் சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டது அவற்றையே கிழக்கு மாகாண அரசு நிறுவனங்கள் வாங்கினார்கள் இதன் மூலம் 26. 43 பில்லியன் யுவான் பொருட்கள் விற்பனையானது.

வறுமை ஒழிப்பு திட்டத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உள்கட்டமைப்பு இருந்தாக வேண்டும். நீர், மின்சாரம், சாலைகள், தொலைத்தொடர்பு, இணைய வசதிகள்இ உள்ளிட்டவைகள் மேம்படுத் தப்பட்டன. திபெத்திய பிராந்தியத்தில் 17,581 குடிநீர் திட்டங்களை இக்காலத்தில் கட்டியிருக்கிறார்கள் இதனால் 20 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளும் கால்நடை வளர்ப்பும் பயனடைந்தார்கள். அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் கொடுப்பது, அனைத்து கிராமங்களையும் இணைக்கு வகையில் 38200 km புதிய சாலைகள், கிராமங்கள் தோறும் 5g இணையதளம் வழங்கக்கூடிய முறையில் பிராட் பேண்ட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தீபத்தில் உண்மையான வறுமை ஒழிப்பு என்பது இந்த அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாகும்.

வறுமை ஒழிப்பின் மற்றொரு நடவடிக்கை கல்வி வசதிகளை வழங்குவது. கட்டாய கல்விக்கு வரக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும் அனைத்தும் இலவசம் ஆகும். இடைநிலை தொழிற்கல்விக்கு ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்பட்டு இதுவரை 3,40,500 மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

தீபத்தில் வளர்ச்சியின் காரணமாக மக்கள் தொகையும் வளர்ந்து வருகிறது தற்போது 36 லட்சம் மக்கள் தொகை இந்த பிராந்தியத்தில் இருக்கிறது பழமையான கலாச்சாரங்களின் காரணமாக பெண்கள் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்ல மறுத்தனர். இதனால் தாய் சேய் இறப்பு விகிதம் பல மடங்கு அதிகமாகியது. திபெத்திய பிராந்திய அரசாங்கம் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு மருத்துவ வசதிகளை கர்ப்பிணிப் பெண்களுக்கு மானியங்களை வழங்குவதன் மூலம் பெண்கள் மருத்துவமனைக்கு செல்வதை ஊக்குவித்தார்கள். விஞ்ஞானபூர்வமான காரணங்களை விளக்கினார்கள். இதனால் மருத்துவமனையை நோக்கிய பிரசவங்களின் எண்ணிக்கை அதிகமானது. தாய் சேய் இறப்பு விகிதம் குறைந்தது

சில காலங்களில் மக்கள் பாதிக்கப்படுகிற பொழுது கூட அவர்கள் வறுமையில் வாழக்கூடாது என்பதற்காக இந்த பிராந்தியத்தில் மட்டும் 110 000 மக்கள் தேசிய குறைந்தபட்ச வாழ்வாதார மானிய திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கான குறைந்தபட்ச மானியங்கள் ஒரு நபருக்கு 4713 யுவானிலிருந்து 7070 யுவானாக உயர்ந்து தற்போது 13213 யுவான் என்ற அளவிற்கு வழங்கப்படுகிறது. காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ற முறையில் இந்த மானியங்களின் தொகை மாற்றி அமைக்கப்படுகிறது.

திபெத் என்றால் சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய இடம். எனவே இந்தத் துறையும் வேலை வாய்ப்பை வழங்க கூடிய துறை ஆகும். வறுமை ஒழிப்பின் ஒரு திட்டமாக பின்தங்கிய சில பகுதிகளில் சுற்றுலா தலங்களை மேம்படுத்தினார்கள். திபெத்திய கலாச்சார சுற்றுப்பயணம், சுய ஓட்டுனர் சுற்றுப்பயணம், குளிர்கால சுற்றுப்பயணம் போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்ட அமுலாகியது. இந்தத் திட்டங்கள் மூலம் கிராமப்புறங்களில் சுற்றுலாவின் வருகை அதிகமாகியது. கிராமங்களில் இருக்கக்கூடிய மக்கள் தங்கள் வீடுகளை குடும்ப விடுதிகளை திறந்து சுற்றுலாப் பயணிகளை தங்குவதற்கான உணவளித்து உபசரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான வசதிகளையும் பிராந்திய அரசாங்கம் செய்து கொடுத்தது. இதன் விளைவாக ஆண்டுக்கு 86 000 வேலை வாய்ப்புகள் உருவாகியது. தனிநபர் வருமானம் பல மடங்கு அதிகமாகியது. திபெத் பிராந்தியத்திற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு மூன்று கோடியே தாண்டுகிறது. கிராமப்புற சுற்றுலா மூலம் அடுத்த அடுத்த ஆண்டுகளில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளது. திபெத்திய பாரம்பரிய கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இருக்கக்கூடிய சிற்பக் கலைகள், ஜவுளி உடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், பிற கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை தயார் செய்வதன் மூலம் இருவகையான தேவைகளை பூர்த்தி செய்தார்கள் ஒருபுறம் இவைத்திய பாரம்பரியத்தை பாதுகாப்பது மறுபுறத்தில் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவது இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கலாச்சார தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பிற்காக கிராமங்களை வளமான பகுதிக்கு இடமாற்றம் செய்வதை மேலே படித்தோம். இதே நேரத்தில் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய பாழடைந்த வீடுகளை புதுப்பித்து வழங்குவதும், வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்தவர்களை மேம்படுத்துகிற அதே நேரத்தில் ஊனமுற்றவர்கள், அனாதைகள், விதவைப் பெண்கள் போன்றவர்களுக்கும் சிறப்பு குடியிருப்பு திட்டங்களை வழங்கினார்கள். திபெத்போன்ற பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய காலகட்டத்தில் அவற்றை தாங்கக் கூடிய முறையில் பழைய பாணியிலான வீடுகள் இல்லை. எனவே அவ்வாறு இருந்த வீடுகளை புதுப்பித்து சில கிராமங்களில் முற்றிலுமாக அகற்றிவிட்டு பூகம்பத்தை தாங்கும் சக்தி உடைய வீடுகளை கட்டினார்கள்.

2016 ஆம் ஆண்டு முதல் 2900 விற்கும் மேற்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களில் 39.89 பில்லியன் யுவான்களை செலவழித்து 2.5 லட்சம் மக்களை தீவிர வறுமையில் இருந்து மீட்டுள்ளார்கள். சராசரி ஆண்டு தனிநபர் செலவழிப்பு வருமானம் 2022 ஆம் ஆண்டு 13,800 யுவான்களை தாண்டி சென்றது.

தற்பொழுது திபெத்தில் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டு இருக்கிறது. துல்லியமாக எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி 628000 மக்கள் வறுமையிலிருந்து மீட்டெடுத்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். அனைத்து விதமான நவீன வசதிகளுடன் கூடிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் வறுமை ஒழிப்பு திட்டத்தின் அடிப்படையான தீர்வு என்பதை முடிவெடுத்து அவற்றை கடைநிலை மக்களுக்கும் கொண்டு சேர்த்து மேம்படுத்தி இருக்கக்கூடிய சாதனையை சீன சோஷலிசம் நிகழ்த்தியுள்ளது.

திபெத்திய சுதந்திரத்தைப் பற்றி உலகம் முழுவதும் பேசக்கூடிய ஏகாதிபத்தியவாதிகள், அங்கு இடம் மாற்றம் செய்யக் கூடிய விஷயத்தையும், வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுகிற பொழுது திபெத்திய மக்களை அடக்குகிறார்கள், வெளியேற்றுகிறார்கள் இயற்கையை சுரண்டுகிறார்கள் என்று பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள். உண்மை நிலைமை இதற்கு மாறாக இருப்பதினால் திபெத்திய மக்களை ஏகாதிபத்தியவாதிகளால் திசை திருப்ப முடியவில்லை.

அ.பாக்கியம்

 

தேசிய இனங்கள் : ஒரு நாடு 56 கலாச்சாரங்கள்

  அ.பாக்கியம் சீனாவில் இன சிறுபான்மையினரை பாதுகாப்பதிலும் வளர்த்தெடுப் பதிலும் ஒன்றுபட்ட சீனா என்ற உணர்வை உருவாக்குவதிலும் சீன கம்யூனிஸ்...