அ.பாக்கியம்
திபெத்
உலகத்தின் கூரை என்றால் ஜின்ஜியாங் மாகாணம் கனிம வளங்களின் களமாக பரந்து விரிந்து கிடக்கிறது.
சீனாவின் மொத்த எண்ணெய் இருப்பில் 30 சதவீதமும், இயற்கை எரிவாயு இருப்பில் 34 சதவீதத்தையும், மிகப்பெரிய அளவு நிலக்கரி படிமங்களையும்
இந்த பகுதி கொண்டுள்ளது. சீனா முழுவதும் உள்ள நிலக்கரி இருப்பில் சுமார் 40% ஜின்ஜியாங்கில் உள்ளது. இவை தவிர,வெயில் அதிகமாக இருப்பதால்
புதுப்பிக்கத்தக்க சூரிய சக்திகளும், காற்றாலை சக்திகளும் உற்பத்தி
செய்கிற இடம். எனவேதான் ஜின்ஜியாங் மாகாணத்தை சீனாவின் “எரிசக்திப் பெட்டகம்” (Energy
Treasury) என்று அழைக்கிறார்கள்.
சீனாவில்
உற்பத்தியாகும் பருத்தியில் 85 சதவீதத்தை உற்பத்தி செய்யும் மாகாணமாகும் இதுவே. எனவே தான் ஜின்ஜியாங் சீனாவின்
பருத்தி கூடாரம் (Cotton Basket) என்று அழைக்கப்படுகிறது. அரிய
வகை கனிமங்களான பெரிலியம் (beryllium), மைக்கா (mica),
லித்தியம், கோபால்ட், நிக்கல்,
தாமிரம் (copper), இரும்பு (iron), தங்கம் மற்றும் வெள்ளி போன்ற தாதுக்கள் இங்கு ஏராளமாக கொட்டிக் கிடக்கின்ற
பூமியாகும். மாகாணத்தின் இருப்புடன் இணைந்து இத்தைகைய இயற்கை வளங்களும் உள்ளதால் இது
புவிசார் அரசியலின் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
முதலாவதாக
சீனாவில் இருக்கக்கூடிய மாகாணங்களில் மிகப்பெரிய மாகாணம் இது. சீன நிலப்பரப்பில் ஆறில்
ஒரு பகுதியை இந்த மாகாணம் தன்னகத்தே கொண்டுள்ளது. சுமார் 1.6649 மில்லியன் சதுர
கிலோமீட்டர் பரப்பளவு உள்ளது.
இரண்டாவதாக
சீனாவின் மொத்த எல்லையில்,
சுமார் 5700 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம்
அண்டை நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய மாநிலமாக இது இருக்கிறது அதாவது
சீனாவின் மொத்த வெளிநாட்டு எல்லைகளில் கால்பங்கு எல்லையை இந்த மாநிலம் மட்டுமே பகிர்ந்து
கொள்கிறது.
மூன்றாவதாக, மங்கோலியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான்,
தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு நாடுகளுடன் இந்த மாநிலம்
எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது
நான்காவது
இந்த மாகாணம் யூரேசியா கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. மத்தியஆசியா என்று
அழைக்கப்படக்கூடிய கஜகஸ்தான்,
கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகள் மத்திய
ஆசியா என்று அழைக்கப்படுகிறது. இந்த நாடுகள் ஆசியாவின் மையப் பகுதியில் அமைந்துள்ளன.
மேற்கில் காஸ்பியன் கடலுக்கும் கிழக்கில் சீனாவிற்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த
நாடுகளுக்கு எல்லையிலும் சீனாவின் எல்லைப் பகுதியில் இந்த மாகாணம் அமைந்திருப்பத புவிசார்
அரசியலின் களமாக மாறுகிறது.
ஐந்தாவதாக, இந்த மாகாணம் புகழ்பெற்ற
பட்டுப்பாதை வழியாக பண்டைய சீனாவை உலகின் பிறபகுதிகளுடன் இணைக்கிறது. பல்வேறு கலாச்சாரங்கள்
கூடுகின்ற இடங்களாகவும் இந்த மாகாணம் வரலாற்று நெடுகிலும் இருந்து வந்துள்ளது. இந்தியாவிலிருந்து
பௌத்த மதம் பட்டுப்பாதை வழியாக, அதாவது இந்த மாகாணத்தின் வழியாகத்தான்
சீனாவிற்கு முதல் முதலாக சென்றது.
உய்குர் என்றால் என்ன? அவர்கள் யார்?
சீன
வரலாற்றில் ஆரம்பகால வம்சங்களாக சியா,
சாங், சோவ் இனம் முன்று இன மக்கள் இருந்தனர். இவர்கள்
மஞ்சல் நதியின் மத்தியிலும், கீழ் பகுதிகளிலும் பரந்த சமவெளிகளில்
தோன்றினார்கள். அவர்கள் அருகாமையில் இருந்த பழங்குடியினர்களுடன் இணைந்து பெரிய இனக்குழுக்களாக
மாறினர். இதன் தொடர்ச்சியாக பிற்காலத்தில் ஹான் தேசிய இனம் உருவானது.
இதேபோன்று
உய்குர் இன மக்கள் மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவின் பொதுவான பகுதியிலிருந்து
தோன்றியவர்கள். நீண்டகால இடப்பெயர்வுகளாலும்,
இனக்குழுக்கள் இடையே உருவான ஒருங்கிணைப்பான செயல்முறைகளாலும்,
உருவாகியதுதான் உய்குர் இனக்குழு. உய்குர் இன மக்களின் முக்கிய மூதாதையர்கள்
சூய் மற்றும் டாங் வம்சங்களின் ஆட்சியின்போது மங்கோலிய பீடபூமியில் வாழ்ந்த ஓய்கூர்
மக்கள் ஆவார்கள்.
இந்த
மக்கள் குழுவை குறிக்க வரலாற்றுப் பதிவுகளில் பல்வேறு வேறுபட்ட பெயர்கள் பயன்படுத்தப்பட்டன.
வரலாற்று ரீதியாக, துருக்கியர்களின் அடக்குமுறை மற்றும் அடிமைத்தனத்தை எதிர்க்க, ஓய்கூர் மக்கள் டைல் பழங்குடியினருடன் இணைந்து ஓய்கூர் பழங்குடி கூட்டணியை
உருவாக்கினர். 788 ஆம் ஆண்டில், அப்போதைய
ஓய்கூர் பகுதியில் அதிகாரத்தில் இருந்தவர் சீனாவின் டாங் பேரரசருக்கு கடிதம் எழுதி,
அவர்களின் பெயரை “உய்குர்” என்று மாற்றுமாறு கோரினார். ஆனால் அவை கண்டுகொள்ளப்படவில்லை.
840 ஆம் ஆண்டில் ஒய்கூர் பழங்குடி கூட்டணி அதிகாரத்தை இழந்த பிறகு, சில ஒய்கூர இனக்குழுக்கள் ஹான் மக்களுடன் வாழ்வதற்காக உள்நாட்டிற்கு குடிபெயர்ந்தார்கள்.இவர்களில்
ஒரு பகுதியினர் டர்பன் படுகைக்கும், இன்றைய ஜிம்சார் பகுதிக்கும்
குடிபெயர்ந்தது, அங்கு அவர்கள் கௌச்சாங் என்ற இடத்தில் ஒய்கூர்
இராஜ்சியத்தை நிறுவினர். மற்றொன்று ஹெக்ஸி காரிடாருக்கு குடிபெயர்ந்தது, அங்கு அவர்கள் உள்ளூர் இனக்குழுக்களுடன் ஒன்றிணைந்து பின்னர் யுகூர்கள் என்று
அழைக்கப்பட்டனர்.
மூன்றாவது
துணைக் குழு பாமிரின் மேற்கே நகர்ந்து,
மத்திய ஆசியாவிலிருந்து காஷ்கர் வரையிலான பகுதிகளில் சிதறிக்கிடந்த கார்லுக்
மற்றும் யக்மா மக்களுடன் இணைந்ததும், பிற இனக்குழுக்களுடனும ஒன்றிணைந்து
நவீன உய்குர் இனக்குழுவின் முக்கிய அமைப்பை உருவாக்கினர்.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளியான இந்தியா மற்றும் கிழக்கு,தெற்கு ஆசியாவின் என்சைக்ளோபீடியா என்ற கலைக்களஞ்சியம் உய்குர் மக்களின் முன்னோர்கள்
சீன டார்டோரியன், ஜின்ஜியாங் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் என்றும்
குறிப்பிடுகிறது. சீன மக்கள் குடியரசு தெரிவித்திருப்பது போல் இந்தப் பிரதேசம் பண்டைக்காலம்
முதல் சீனாவின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் பல
உள்ளன.
யுவான்
மற்றும் மிங் வம்சங்களில்,
ஜின்ஜியாங்கில் உள்ள பல்வேறு இனக்குழுக்கள் மேலும் இணைந்தன. மங்கோலியர்கள்,
குறிப்பாக சகதை கானேட்டைச் (ஆட்சிப்பகுதி) சேர்ந்தவர்கள், உய்குர்களுடன் இணைந்தனர். உய்குர் குழுவில் புதிய இரத்தத்தைச் சேர்த்தனர்.
1934 ஆம் ஆண்டில், ஜின்ஜியாங் ஒரு அரசாங்க
உத்தரவை பிறப்பித்தது, உய்குர் என்பது உய்குர்களுக்கான நிலையான
சீனப் பெயராக இருக்கும் என்று விதித்தது, முதல் முறையாக “உய்குர்”
என்பதன் துல்லியமான அர்த்தத்தை வெளிப்படுத்தியது. அதுவரை பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டவர்கள்
உய்குர் என்பதை சட்டப்படி மாற்றினார்கள். உய்குர் என்றால் மக்களிடையே ஒற்றுமையைப் பேணுதல்
என்று பொருள்படும்.
உய்குர்கள் துருக்கியர்களா?
துருக்கியர்களின்
ஆட்சிக்கு உட்பட்டு இருந்த ஒய்கூர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதினால் அந்த ஆட்சிக்கு
எதிராக கலகம் செய்து வந்தனர். சீனாவின் டாங் வம்ச ஆட்சியின் ஆதரவுடன் இந்த கிளர்ச்சி
நடத்தப்பட்டது. அதன் பிறகு துருக்கிய மொழி பேசும் பழங்குடியினர் மேற்கு நோக்கி குடிப்பெயர்ந்தனர்.
இந்தப் பழங்குடியினரில் ஒரு பிரிவினர் ஆசியா மைனரில் குடியேறி அங்கிருந்த உள்ளூர் இனக்குழுக்களுடன்
இணைந்தார்கள். இவர்கள் துருக்கிய மொழி பேசினார்களே தவிர துருக்கியர்களின் வழித்தோன்றல்கள்
அல்ல. சில பான்-துருக்கிய ஆதரவாளர்கள் துருக்கிய மொழி குடும்பத்தின் அனைத்து மக்களையும்
துருக்கிர்கள் என்று வர்ணித்துள்ளார்கள்.
ஒரு
மொழி குடும்பம் என்பதற்கும்,
ஒரு இனக்குழு என்பதற்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது என்பதை மறந்து
விடுகிறார்கள். சீனாவில் துருக்கி மொழிகளை பேசும் இனக்குழுகளில் உய்குர்கள் மட்டுமல்ல
கசாக்ஸ், கிர்கிஸ், உஸ்பெக்ஸ், டாடர்கள், யுகூர்கள் மற்றும் சாலர்கள் என்று பல இனக்குழுக்கள்
உள்ளனர். ஒவ்வொரு இனக்குழுவும் அதன் சொந்த வரலாற்றையும், தனித்துவமான
கலாச்சாரத்தையும் கொண்டுள்ளது. இந்த மக்களை துருக்கியர்கள் என்று குறிப்பிட முடியாது.
உய்குர்கள் பற்றி பொது ஆண்டு 4 மற்றும் 5 நூற்றாண்டுகளில் விரிவான பதிவுகள் செய்யப்பட்டுள்ளது.
ஜின்ஜியாங்
அல்லது உய்குர் பண்பாடு சீன பண்பாட்டின் ஒரு பகுதியாகவே வளர்ச்சி அடைந்தது. பண்டைய
காலங்களில் இருந்து சீனாவின் புவியியல் மாறுபாடுகளாலும், வெவ்வேறு பிராந்தியங்களின்
சமநிலையற்ற வளர்ச்சியின் காரணமாகவும், கலாச்சார தன்மையில் வேறுபட்ட
அம்சங்கள் உருவாகியது. சீன கலாச்சாரம் தெற்கு, வடக்கு,
கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் பன்முகத்தன்மையுடன்
உருவானது. இனப் பன்முகத்தன்மையும், கலாச்சார பன்முகத்தன்மையும்
சீன தேசத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். சீனாவின் தேசிய வளர்ச்சிக்கு இது ஒரு உந்து
சக்தியாக அமைந்தது.
ஜின்ஜியாங் கலாச்சாரமும் சீனக்கலாச்சார
உருவாக்கமும்
சீனாவின்
5000 ஆண்டுகால
வரலாற்றில் அனைத்து இனக்குழுக்களும் ஒரு நீண்ட வரலாற்றையும் ஒரு அற்புதமான கலாச்சாரத்தையும்
உருவாக்கியுள்ளன. வசந்தகாலம் மற்றும் இலையுதிர் காலம் தொடங்கி அதாவது சின் வம்சங்கள்
தொடங்கி ஹான் அம்சங்களின் காலம் வரையும் (பொ. ஆ. மு. 770-476) மற்றும் போரிடும் நாடுகளின் (பொ.ஆ.மு.475-221)) காலங்களின்
ஆரம்ப கட்டத்தில் பெருமபாலான இனக்குழுக்கள் சொந்தமான பிராந்திய கலாச்சாரங்கள் உருவாகி
இருந்தது. இந்த கலாச்சாரங்கள் அனைத்து அம்சங்களையும் உள்ளடங்கி இருந்தது.
இதைத்தொடர்ந்து
வந்த அனைத்து வம்சங்களின் ஆட்சியிலும் சீனாவின் பரந்த பிரதேசம் முழுவதும் அனைத்து இனக்குழுக்களின்
கலாச்சாரங்களும், இடப்பெயர்வுளாலும், ஒன்றுகூடல்களாலும், போர்கள் மூலமும், திருமணம் மற்றும் வர்த்தக மூலம் நிலையான
பரிமாற்றத்திலும் ஒருங்கிணைப்பிலும் ஈடுபட்டன. இதன் வழியாக ஒட்டுமொத்த சீன கலாச்சாரம்
உருப்பெற்றது. ஜின்ஜியாங் மாகாணமும் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
கலாச்சார பரிமாற்றத்தின், தகவல் தொடர்பின் முக்கிய தளமாக இருந்தது
வந்துள்ளது.ஆரம்பத்தில் இருந்து ஜிஞ்சியாங்கில் உள்ள இன கலாச்சாரங்கள் சீன கலாச்சாரத்தின்
கூறுகளை பிரதிபலித்தது.
யுவான்
வம்ச ஆட்சி(1250-1368) காலத்தில் ஏராளமான உய்குர்களும், பிற இன குழுக்களைச்
சேர்ந்த மக்களும், சீனாவில் உள்நாட்டுப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
அவர்கள் அங்கு குடியேறிய பிறகு, சீன மொழியை கற்றுக்கொண்டு அவற்றைப்
பயன்படுத்தினர். இவர்களில் பலபேர் சீனப் பேரரசின் தேர்வுகளை எழுதி பல்வேறு நிலையில்
அரசு அதிகாரிகளாக உயர்ந்தனர். இந்த பொறுப்பில் இருந்தவர்கள் ஜின்ஜியாங்கில் இன கலாச்சாரங்களின்
வளர்ச்சியை தீவிரமாக ஊக்குவித்தனர். அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள்,
கலைஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள், வேளாண் வல்லுநர்கள், மொழிபெயர்ப் பாளர்கள் மற்றும் பிற
வகை நிபுணர்கள் தோன்றினார்கள்.
மிங்(1368-1644)மற்றும் கிங்(1644-1911)
வம்சங்களின் ஆட்சி காலத்தில் இஸ்லாமிய கலாச்சாரத்தின் செல்வாக்கின்கீழ்
ஜின்ஜியாங்கில் உள்ள இன கலாச்சாரங்கள் வளர்ச்சி அடைந்தன. பிராந்தியத்திற்கு வெளியே
உள்ள கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைந்தும், மோதலில் ஈடுபட்டும் வந்தது.
நவீன சீனாவில் 1911 ஆம் ஆண்டு புரட்சி, 1917 ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி, 1919 சீனாவில் மே 4 இயக்கம், 1949 புதிய ஜனநாயக புரட்சி ஆகியவற்றின் செல்வாக்கின்
கீழ் ஜின்ஜாங்கில் இருந்த இன கலாச்சாரங்கள் நவீனமயமாக தொடங்கின.
இஸ்லாமிய கலாச்சார வருகையும்
இணைதலும்
இஸ்லாமிய
கலாச்சாரம் ஜிஞ்சியாங்கில் பரவுவதற்கு முன்பு உய்குர் கலாச்சாரம் உட்பட இப்பகுதியில்
பல்வேறு இனங்களின் கலாச்சாரம் செழித்து இருந்தது. பொது ஆண்டு 9 மற்றும் 10 தாம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில்தான் இஸ்லாம் மதம் இப்பகுதியில் பரவியது.
இக்காலகட்டத்தில் தான் அரபு நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருந்த ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த
இஸ்லாமிய கலாச்சாரம் ஜின்ஜியாங்கில் உள்ள இன கலாச்சாரங்கன் மீது செல்வாக்கு செலுத்த
தொடங்கியது. சீனாவில் இருந்த உய்குர் கலாச்சாரம் உட்பட இன கலாச்சாரங்கள் இஸ்லாமிய கலாச்சாரத்தை
ஒருபுறம் எதிர்த்தும், அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் அவற்றை
ஒருங்கிணைத்து சீன எதார்த்தங்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்தன. எதிர்த்தல் அல்லது உள்வாங்கள்
என்ற முறையின் காரணமாக சீன அம்சங்களுடன் வேரூன்றி இருந்த ஜின்ஜியாங் கலாச்சாரத்தை மாற்ற
முடியவில்லை அல்லது சீன நாகரிகத்திற்குள் உள்ளூர் கலாச்சாரங்களில் ஓட்டத்தை தடுக்கவில்லை.அவை
சீனக்கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அவற்றை தழுவ வேண்டிய சூழல் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு
ஏற்பட்டது.
ஜின்ஜியாங்கில்
உள்ள இன கலாச்சாரங்கள் செழித்து வளர வேண்டும் என்றால் அவை காலத்திற்கு ஏற்ப வேகமாக
செல்ல வேண்டும். சிறந்த மற்றும் உள்ளடக்கங்களை கொண்டதாக இருக்க வேண்டும். சீனாவில்
உள்ள பிற இன கலாச்சாரங்களுடன் பரிமாற்றம் செய்து கொள்வதும் ஒருங்கிணைப்பில் ஈடுபடுவதும்
தேவையா இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பிற கலாச்சார அம்சங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
சீனாவில் உள்ள அனைத்து இனக்குழுக்களும் ஒரு பகிரப்பட்ட சீன கலாச்சாரத்தை வளர்ப்பதில்
தங்கள் பங்கை செலுத்த வேண்டும் என்ற முறையில் சீன அரசு அணுகி வருகிறது.
ஜின்ஜியாங்கில்
இப்போதும் 47 இனக்குழுக்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை உய்குர், ஹான், கசாக், ஹுய், மங்கோலியன், கிர்கிஸ், சிபே,
தாஜிக், உஸ்பெக், மஞ்சு,
டாவர், டாடர் மற்றும் ரஷ்யன் ஆகியவைகளாகும். தற்போது
சீனாவில் உள்ள ஐந்து சிறுபான்மை தன்னாட்சி பிரதேசங்களில் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி
மாகாணம் மிக முக்கியமானதாக திகழ்கிறது.
அ.பாக்கியம்



