Pages

புதன், அக்டோபர் 29, 2025

44 திபெத்:உழவும் தொழிலும் உயர்ந்த விதம்

 



அ.பாக்கியம்

உலகின் கூரை என்று அழைக்கப்பட்ட திபெத்தில் மக்களை அடிமை நுகத்தடியில் அழுத்தி வைத்திருந்தார்கள். இன்றோ திபெத் மக்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி உலகின் கூரைக்கு மேலே உயர்த்தி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. “தத்துவமும், அரசியலும் போதனைகளாக மட்டும் இருக்க முடியாது. அது போதனைகளாக இருக்கிற வரை வெற்றி பெறாது, அது மட்டுமல்ல வரலாற்றால் புறக்கணிக்கவும் பட்டுவிடும்”. தத்துவமும், அரசியலும் நடைமுறைக்கானது. அந்த நடைமுறை மக்களின் வாழ்வாதாரத்தை, அவர்களின் அறிவுத்திறனை, புதிய கண்டுபிடிப்புகளை உயர்த்துவதாக அமைய வேண்டும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிசம் லெனினிசத்தை சீனத் தன்மைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தியதை அறிய முடியும். அதையும் கடந்த சீனாவின் சில பிரதேச சூழ்நிலைகளையும், வரலாற்று அம்சங்களையும் கணக்கில் கொண்டு மார்க்சியத்தை கையாண்டார்கள்.

திபெத் சீனாவின் ஒரு மாறுபட்ட பகுதியாகும். மதமும் இயற்கை சூழலும் பூகோள அமைப்பும் மக்களின் வரலாற்று வழி வளர்ச்சியும் வேறுபட்டது என்பதால் அங்கு மார்க்சியத்தை மிகவும் நெளிவுசுளிவுடன் அமலாக்கி வெற்றி பெற்றனர். இந்த முறையில் தான் 4000 மீட்டருக்கு மேல் உயர்ந்த ஒரு பகுதியில் சீனாவின் சமவெளி பிரதேசத்தில் என்ன வெற்றியை பெற்றார்களோ அதே அளவு பொருளாதார வசதிகளையும் வெற்றியையும் இந்தப் பகுதியிலும் அடைய முடிந்தது.

உள்நாட்டு உற்பத்தியும் செலவழிப்பு வருமானமும்

 

1951 ஆம் ஆண்டு திபெத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 129 மில்லியன் ஆர்எம்பி. அதாவது 12 கோடியே 90 லட்சம் ரூபாயாகும். (RMB – Renmibi சீன நாணயத்தின் பெயர். ஒரு ஆர்எம்பி இன்றைய தேதியில் 12.40 ரூபாய்க்கு சமம்). 2020 ஆம் ஆண்டு திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 190 பில்லியன் RMB யை தாண்டியது. அதாவது 19,000 கோடியை தாண்டிச் சென்றது. 2018 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படுத்திய அதிநவீன மாற்றங்கள் மேலும் வளர்ச்சியை துரிதப்படுத்தியது. 2022 ஆம் ஆண்டு திபெத் மொத்த உள்நாட்டு உற்பத்தி 213.26 பில்லியன் RMB யை எட்டியது. இது 2012 இல் இருந்ததை விட 2.8 மடங்கு அதிகமாகும். மலைப் பிரதேசத்தில் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 8.6 சதவீதமாகும். இதன் பொருளாதார வளர்ச்சி விகிதம் சீனாவில் மிக உயர்ந்த ஒன்றாக இருந்தது மட்டுமல்ல பொதுவான ஒரு செழிப்பை திபெத்தில் உருவாக்கியது.

இந்த வளர்ச்சி மக்களின் நுகர்விலும் வெளிப்பட்டது. 2020 ஆம் ஆண்டு திபெத் பிரதந்தியத்தின் நுகர்வோர் பொருட்களின் சில்லறை விற்பனை 74.6 பில்லியன் RMB யை தாண்டியது. இது 1959 ஆம் ஆண்டு இருந்த நிலைமையை விட 2000 மடங்கு அதிகமாகும். மறுபுறத்தில் பொருளாதார கட்டமைப்பிலும் பெரும் மாற்றங்களை உருவாக்கியது. 1994 முதல் 2000 வரை அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் (எஸ் ஓ இ) 6,330 திட்டங்களை திபெத் பிராந்தியத்தில் நிறைவேற்றினார்கள். இந்தத் திட்டங்களின் மூலம் திபெத் 52.7 பில்லியன் RMB யை பெற்றது. இந்த பிராந்தியத்தில் திட்டங்களை அமுலாக்கி வெற்றி பெறச் செய்வதற்காக சுமார் 9,682 சிறந்த அதிகாரிகளை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்கள்.

திபெத் மக்களிடம் வருமானம் வேகமாக உயர்ந்தது. 2022 ஆம் ஆண்டு நகர்புறத்தில் வசிக்கக்கூடிய தனி நபர்களின் செலவழிப்பு வருமானம் 48,753 ஆயிரம் ஆரஎம்பியாக உயர்ந்தது. இது 2012 ஆம் ஆண்டில் 18,363 ஆயிரமாக இருந்தது. மறுபுறம் கிராமப்புறத்தில் வசித்தவர்களின் தனிநபர் செலவழிப்பு வருமானம் 2012 இல் 5,698 ஆயிரம் RMB இலிருந்து 2022 ஆம் ஆண்டு 18,209 ஆயிரம் RMB ஆக மூன்று மடங்கிற்கு மேலாக அதிகரித்தது. அதே நேரத்தில் கிராமப்புறத்திற்கும் நகர்ப்புறத்திற்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை குறைக்கக்கூடிய முயற்சியும் வெற்றி பெற்றது. கிராமப்புறம் நகர்ப்புறம் இடையிலான வருமான விகிதம் 2012 இல் 3.2 சதமாக இருந்தது.

இதுவே 2022 ஆம் ஆண்டு 2.67 சதவீதமாக இடைவெளி குறைந்தது. நகர்ப்புறம் கிராமப்புறம் இரண்டையும் இணைத்து ஒட்டுமொத்த குடியிருப்பாளர்களின் தனிநபர் செலவழிப்பு வருமானம் மதிப்பீடு செய்தால் 2012 இல் 8,568 ஆயிரம் RMB யிலிருந்து 2022 இல் 26,675 ஆயிரம் RMB யாக உயர்ந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நாட்டின் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதத்தை திபெத் பிராந்தியம் ஏற்படுத்தி உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் திபெத்தின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியுள்ளது. 2012 முதல் 2020 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தி 110% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த ஒரு பகுதியில் சந்தைகளின் விரிவாக்கம் வளர்ந்துள்ளது. மக்கள் கூடி வாங்குகின்ற சந்தைகள் ஒரு பக்கம் அதிகமாகி கொண்டுள்ளது. நுகர்வோர் சந்தை சில்லறை விற்பனை 2012 ஆம் ஆண்டு 31.84 பில்லியன் RMB யிலிருந்து 2022 ஆம் ஆண்டு 72.65 பில்லியனாக அதாவது 2.3 மடங்கு அதிகரித்து உள்ளது. உற்பத்தி செய்யக்கூடிய மையத்திற்கும் நுகர்வு மையங்களுக்கும் இடையிலான இணைப்பை வலுவாக இக்காலத்தில் ஏற்படுத்தி உள்ளார்கள். அதைவிட குறிப்பிட வேண்டிய முன்னேற்றம் சமநிலை அற்ற பிரதேசத்தில் அஞ்சல் சேவைகள் பல மடங்கு உயர்ந்துள்ளது அஞ்சல் சேவையின் நேரடி வருமானம் 744 மில்லியன் RMB யும் 2022 இல் கூரியர் வருமானம் 178.83 மில்லியன் பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் 19 பெரிய தேசிய மின் வணிக நிலையமும் எக்ஸ்பிரஸ் டெலிவரி வணிக அமைப்புகளும் உருவாகியுள்ளது.

மேலும் பொருட்களை சேமித்து வைப்பதற்காக 1,13,000 சதுர மீட்டர் குளிர்சாதன வசதிகள் கொண்ட கிடங்குகளை உருவாக்கி இருக்கிறார்கள். திபெத் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு சந்தை நிறுவனங்களின் எண்ணிக்கை 2012ல் 1,24,400 லிருந்து 2022 ஆம் ஆண்டு 4,37,600 என்ற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்தின் கூடுதல் மதிப்பு 10 சதவீதத்தை விட அதிகமாக உயர்ந்துள்ளது. நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும், டவுன்ஷிப்களிலும் மின்வணிக சேவைகளை கிடைக்க செய்திருக்கிறார்கள். ஆன்லைன் சில்லறை விற்பனையும் 9.14 பில்லியன்களை 2022 ஆம் ஆண்டு தாண்டி இருக்கிறது. பொருள் உற்பத்தி சில நிலப்பிரபுக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததை உடைத்து அனைத்து மக்களின் வாய்ப்பாக மாற்றிவிட்டார்கள்.

தொழில்துறையும் அரசின் நிதிக்கொள்கையும்

 

தொழில்துறை கணிசமான அளவு வளர்ச்சி அடைந்து உள்ளது. உள்ளூர் பண்புடன் கூடிய நவீன தொழில் துறையும் கணிசமான அளவுக்கு நிறுவப்பட்டுள்ளது. 2012 மற்றும் 2022 ஆண்டுகளுக்கு இடையில் தொழில் துறையின் கூடுதல் மதிப்பு 2.77 மடங்கு அதிகரித்து உள்ளது. தொழில்துறைகளின் சங்கிலிகள் நீண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பல தொழில்துறை நிறுவனங்கள் ஆண்டுக்கு 20 மில்லியனுக்கு அதிகமான RMB வருவாய் கொண்ட நிறுவனங்களாக உள்ளது.
உயர் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை 15 அதிகரித்துள்ளது. திபெத் பிராந்தியத்தில் அரசின் மூலதனத்தை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் விசேஷ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2022 ஆம் ஆண்டு திபெத் பிராந்தியத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் மொத்த சொத்துக்கள் 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகிற பொழுது 14 .05 மடங்கு அதிகரித்து உள்ளது.

திபெத் பிராந்தியத்தில் விசேஷமான திட்டமிடல் மூலம் மத்திய அரசு நிதி மானியங்களை அதிகப்படுத்தி உள்ளது. நிலையான சொத்துக்களில் அரசு முதலீடு செய்து 2012-2022 ஆம் ஆண்டுக்கு இடையில் 3.33 அடங்கு அதிகரித்துள்ளது. நீண்டகால வளர்ச்சியுடன் தொடர்புடைய ஏராளமான பெரிய பொறியியல் திட்டங்கள் அமைக்கப்பட்டதன் விளைவாக மக்களின் வேலைவாய்ப்பு பெருகியது. வாழ்க்கை நிலையும் மிகப்பெரும் அளவுக்கு மேம்பட்டு உள்ளது. மொத்தமாக இக்காலத்தில் 465 பில்லியன் RMB க்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றால் அதன் சமூக தாக்கத்தை அறிந்து கொள்ள முடியும். அரசு முதலீடுகள் செய்யக்கூடிய இதே காலத்தில் தனியார் முதலீடுகளையும் திபெத் பிராந்தியத்தில் அதிகரித்து உள்ளார்கள். நிதி நிறுவன அமைப்புகளை உருவாக்கி மேம்படுத்தி வருவது, வங்கி, பத்திரங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், பல செயல்பாட்டு நிதி அமைப்புகள், என பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி உள்ளார்கள். பொருளாதார வளர்ச்சியையும் சமூக வளர்ச்சியும் மேம்படுத்துவதில் இந்த நிதியின் உதவியும், மானியமும் முக்கியமான பங்கு வகித்து உள்ளது.

உலகளாவிய வணிகத் தொடர்பு

 

தலாய்லாமா நாடு கடத்தப்பட்ட சில ஆயிரம் திபெத்தியர்களை பகடைக்காயாக வைத்து அமெரிக்க ஏகாதிபத்திய உதவியுடன் உலக நாடுகளில் தொடர்பு ஏற்படுத்தி திபெத் பிராந்தியத்தியத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறார். ஆனால் சீன மக்கள் குடியரசு சீன கம்யூனிஸ்ட் கட்சியும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் மக்களின் மேம்பாட்டின் மூலம் சீனாவின் இதர பகுதிகளுடன், பல நாடுகளுடன் வலுவான உறவை இக்காலத்தில் ஏற்படுத்தி உள்ளது.

அண்டை மாநிலங்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தக்கூடிய முறையில் செங்டு-சோங்கிங் பொருளாதார வட்டம், பெரிய ஷாங்க்ரி-லா பொருளாதார வட்டம், ஷான்சி-கான்சு-நிங்சியா-கிங்காய் பொருளாதார வட்டம் மற்றும் யாங்சே நதி பொருளாதார பெல்ட் உள்ளிட்ட பிராந்திய பொருளாதார வட்டங்களில் திபெத் பிராந்தியம் தன்னை தீவிரமாக ஒருங்கிணைத்துள்ளது. தெற்காசியாவில் பொருளாதார உறவுகளுக்கான ஒரு முக்கிய பகுதியாக திபெத் உருவாகி உள்ளது.

தெற்காசிய தரப்படுத்தல் (லாசா) ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. மாநில கவுன்சிலின் ஒப்புதலுடன் கைரோங் எல்லை தாண்டிய பொருளாதார ஒத்துழைப்பு மண்டலம் அமைக்கப்பட்டது. திபெத் பிராந்தியத்தில் அதன் வர்த்தக பங்காளிகளாக அதாவது ஏற்றுமதி இறக்குமதி முறைகளில் 95 நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளது. 2022 ஆம் ஆண்டில் திபெத் பிராந்தியத்தில் வெளிநாட்டு வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 4.6 பில்லியன் RMB யாக உயர்ந்துள்ளது. இவை தவிர தெற்காசிய தரப்படுத்தல் (லாசா) ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டுள்ளது.
மாநில கவுன்சிலின் ஒப்புதலுடன் கைரோங் எல்லை தாண்டிய பொருளாதார ஒத்துழைப்பு மண்டலம் அமைக்கப்பட்டது. திபெத் பிராந்தியத்தில் வளர்ச்சிக்கான மன்றம், ஜிசாங் சிந்தனைக் குழுவின் சர்வதேச கருத்தரங்கு, சீன ஜிசாங் சுற்றுலா மற்றும் கலாச்சார கண்காட்சி மற்றும் டிரான்ஸ்-இமயமலை சர்வதேச தீவிர சைக்கிள் ஓட்டுதல் பந்தயம் போன்ற நிகழ்வுகள் ஜிசாங்கிற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் இடையே பரிமாற்றங்கள், பரஸ்பர கற்றல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முக்கியமான தளங்களாக மாறியுள்ளன.

 

திபெத் என்ற திபெத்தில் சீனாவின் இதர பகுதி மாநிலங்கள் மிகப்பெரும் உதவியை செய்து முன்னேற்றத்திற்கு வழி வகுத்தார்கள். இந்த மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட அதிகாரிகள் நிபுணர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தியது மட்டுமல்ல அவர்களை பத்துக்கு மேற்பட்ட குழுக்களாக பிரித்து களம் இறக்கினார்கள். 2016-2020 காலகட்டத்தில் 13 ஆவது ஐந்தாண்டு திட்டம் போடப்பட்டது. இந்தத் திட்டத்தின் படி திபெத்தில் சீனாவில் உள்ள 17 மாகாணங்கள் 1,260 திட்டங்களை உருவாக்கி நடத்தினார்கள். இந்த மாநிலங்களில் இருந்து முதலீடு செய்யப்பட்ட தொகை மட்டும் 20 பில்லியன் RMB ஆகும். 1951 ஆம் ஆண்டில் திபெத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 114 யுவானாக இருந்தது. 2023 ஆம் ஆண்டிற்கான திபெத் தன்னாட்சிப் பகுதிக்கான தனி நபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 75,237 ஆயிரம் சீன நாணயமாகும்.

காணாமல் போன கலப்பைகள்- கால் நடைப்பொருளாதாரமும்

 

திபெத்தில் விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த கால் நடைகளையும் மேம்படுத்துவதில் சீனப் புரட்சிகர அரசு சிறப்பு கவனம் செலுத்தியது. விவசாயத்தை சமதளத்தில் எளிதாக கையாளலாம். நவீனங்களை பயன்படுத்த முடியும். மகசூலை மலை என குவிக்கலாம். ஆனால் ஒரு பீடபூமி பகுதியில் அவ்வளவு எளிதாக அது சாத்தியமில்லை. எனினும் மக்களின் உதவியோடு மகத்தான மாற்றங்களை திபெத் பிராந்தியத்தில் கண்டுள்ளது. 1974 ஆம் ஆண்டில் திபெத் பிராந்தியத்தின் வரலாற்றில் முதல் முறையாக தனது மாநிலத்துக்கு போதுமான தானியங்களை பயிரிட்டுக் கொண்டது என்றால் அது மிகையாகாது. 1975 ஆம் ஆண்டு 8% தானியத்தின் அறுவடைகள் அதிகமாகியது. 1958 ஆம் ஆண்டைவிட இது 2.7 மடங்கு அதிகமாகும். இதுவரை கலப்பை மட்டுமே திபெத்திய விவசாயிகள் கண்டிருந்தார்கள். தற்போது அது வரலாற்றுக் கருவியாக மாறிவிட்டது. டிராக்டர்களையும், கதிரடிக்கும் இயந்திரங்களையும் எல்லா இடங்களிலும் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.

திபெத் பிராந்தியத்தில் பல பத்தாண்டுகளாக ஹைலேண்ட் பார்லி மட்டுமே வளர்க்க முடியும். அதை நம்பி மட்டுமே அந்த விவசாயிகள் பணி செய்தார்கள். சீன மக்கள் குடியரசு பார்லியின் மகசூலை அதிகரித்தது உண்மைதான். ஆனால் புதிய ரகமான விவசாயத்தை கொண்டு வந்தது. குளிர்காலம் அதிகமாக இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் குளிர்கால கோதுமையை பயிரிட ஆரம்பித்தார்கள். இது பெரும் வெற்றியையும் மாற்றத்தையும் கொடுத்தது ஒரு சில இடங்களில் ஒரு ஹெக்டருக்கு 10.5 டன் குளிர்கால கோதுமை அறுவடை செய்யப்பட்டது என்றால் புதிய பயிரின் மகசூலை புரிந்து கொள்ள முடியும். பயிரிடப்படும் முக்கிய பயிர்களாக பார்லி, கோதுமை, பக்வீட், கம்பு, உருளைக்கிழங்கு, ஓட்ஸ், ராப்சீட்ஸ், பருத்தி மற்றும் வகைப்படுத்தப்பட்ட பழங்கள் காய்கறிகள் இருந்தன.

திபெத்தில் நிலங்கள் மக்களுக்கு சொந்தமாக இருப்பதும் அதில் உழைப்பின் பயனை அடைய முடியும் என்ற சூழ்நிலை சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிக் கொடுத்தது. எனவே திபெத் பிராந்தியத்தில் மக்கள் இயற்கையின் தயவில் வாழ்ந்த காலம் மலை ஏறி மறைந்து போனது. உயர்தர உயர்நில பார்லி சாகுபடி, சமையல் எண்ணெய் உற்பத்தி, மாசு இல்லாத காய்கறி பயிரிடுவது, தரப்படுத்தப்பட்ட பால் தயாரிப்பது, போன்றவற்றில் நவீன முறைகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

காட்டு எருது மற்றும் திபெத்திய செம்மறி ஆடுகளை வளர்ப்பதன் மூலமாகவும் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ற விவசாயத்தையும் செய்து வந்தார்கள். இந்த முறை விவசாயத்திற்கு உதவி செய்வதற்காக ஏராளமான தொழில்துறை தளங்கள் கட்டப்பட்டு இந்த விவசாய முறைகளுக்கு உதவினார்கள். இதன் விளைவாக 2015 ஆம் ஆண்டில் தானிய மகசூல் ஒரு மில்லியன் டன்களுக்கு மேல் அறுவடை செய்யப்பட்டது. உயர்தர உயர்நில பார்லியின் மகசூல் 7,95,000 டன்களை தாண்டியது. விவசாயத் துறையில் என்ன முடியுமோ அந்த அளவுக்கு சாதனையை நோக்கி திபெத் பிராந்தியத்தியம் முன்னேறிக்கொண்டு இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு வரலாற்று சிறப்பு நடவடிகையாக விவசாயிகளுக்கும் கிராம மக்களுக்கும் நிலச் சான்றிதழ் வழங்கி சாதனை படைத்தனர்.

மேலும் நில ஒப்பந்தங்களின் மேலாண்மை அமைப்புகள், கிராமப்புற நிலப் பயன்பாட்டு உரிமைகளை மாற்றுவதும், உரிமைப் பதிவு செய்வதும் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறியது. இவை தவிர கிராமப்புற சீர்திருத்தத்தில் குடும்ப பண்ணைகள், தொழில் முறை கூட்டுறவுகளின் செயல்பாடுகள் முன்னணி பங்கு வைக்கிறது.

விவசாயத்திற்கு அடிப்படை தேவையாக இருக்கிற நீர்வள மேம்பாட்டில் நிலையான முயற்சிகளை மேற்கொண்டார்கள். 13 ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அதாவது 2016-2020 இல் நீர்வள பாதுகாப்பிற்கான முதலீட்டில் 52% அதிகப்படுத்தி உள்ளார்கள். பல முக்கிய நீர் பாதுகாப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. சீனாவில் முதல் 10 நீர் பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றாக லால் ஹோ திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது. திபெத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்சாரத்தை பயன்படுத்துவதற்கும் மறுபுறத்தில் நீர்ப்பாசனத்திற்கு விரிவான முறையில் விநியோகிப்பதற்குமான இன்னும் இதுபோன்ற சில திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுகின்றன. இவை தவிர மேலும் பல கட்டுமான திட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. நீர் பாதுகாப்பால் அதிகமான உள்ளூர் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். வெள்ள கட்டுப்பாடு, பேரிடர் இழப்புகளும் மிகப்பெரிய அளவிற்கு தடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளின் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமப்புறங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது. விவசாயம் மற்றும் நீர் பாதுகாப்பின் முக்கிய அம்சங்கள் இவற்றை உயர்த்தி உள்ளது.

திபெத் வரலாற்றிலும் வாழ்க்கையிலும் பிரிக்க முடியாத அங்கமாக மேய்ச்சல் நிலங்களும் கால்நடைகளும் இருக்கின்றன. கால் நடைவளர்ப்பு முக்கியமாக திபெத்திய பீடபூமியில் முதன்மையான தொழிலாகும். அவற்றில் செம்மறி ஆடுகள், கால்நடைகள், ஆடுகள், ஒட்டகங்கள், யாக்ஸ், கழுதைகள் மற்றும் குதிரைகள் ஆகியவை அடங்கும். தலாய்லாமா ஆட்சி காலத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையும் மக்கள் தொகை எண்ணிக்கையும் குறைந்து வந்திருந்தது.

 

1958 ஆம் ஆண்டை விட 1975 ஆம் ஆண்டில் கால்நடைகளின் எண்ணிக்கை அதாவது வளர்ச்சி 2.3 மடங்காக உயர்ந்துள்ளது. 1965 ஆம் ஆண்டில் திபெத்தில் விவசாயம், வனவியல், கால்நடை வளர்ப்பு, மீன்வளம் ஆகியவற்றின் மொத்த உற்பத்தி மதிப்பு 264 மில்லியன் RMB-யாக இருந்தது. 2020 ஆம் ஆண்டில் இது 23.4 பில்லியன் RMB-யாக உயர்ந்தது.

திபெத் 1959 ஆம் ஆண்டு வரை மிகவும் பின்தங்கிய ஒரு பிராந்தியமாக இருந்தது. உற்பத்தி சக்திகளை நிலப்பிரபுக்களும் மதத்துறவிகளும் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். தங்களின் சுரண்டலுக்கு மட்டுமே அதனை பயன்படுத்தினார்கள். சீன மக்கள் குடியரசு அமைந்த உடன் உற்பத்தி சக்திகளை கட்டுடைத்தது. ஒட்டுமொத்த மக்களையும் சீன சோசலிசத்தின் பயனை அடையக்கூடிய முறையில் வளர்ச்சியில் ஈடுபடுத்தினார்கள். இதன் விளைவாக பொருளாதாரம் உயர்ந்தது. மக்களின் வாழ்க்கைத் தரம் மிகப்பெரும் மாற்றங்களை கண்டு முன்னேறியது..

அ.பாக்கியம்

 

வியாழன், அக்டோபர் 23, 2025

43 திபெத்: அடிமை முறை ஒழிப்பும் ஜனநாயக சீர்திருத்தமும்

 



அ.பாக்கியம்

திபெத் உலகத்தின் கூரையாக மட்டுமல்ல, இக்காலமாற்றத்தின் மகுடமாகவும், வளர்ச்சியின் உச்சமாகவும் உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அடிமை நுகத்தடியில் அழுந்தி கிடந்த சமுதாயம் விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசித்தது மட்டுமல்ல, சமூக பொருளாதார வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்கள் குடியரசும் அந்த அடிமை நுகத்தடிகளை அறுத்தெறிந்ததுடன், மக்களையே திபெத்தின் எஜமானர்களாக மாற்றி இருக்கிறார்கள். ஆட்சி முறையில் துவங்கி அனைத்து துறைகளிலும் அடிமட்டம் வரை இம்மாற்றத்தின் பலன்கள் சென்றடைந்துள்ளன.

இந்த இரண்டு கைகளும்

என்னுடையதாக இருந்தால்

நான் வானத்திலிருந்து

சந்திரனை பறிக்க முடியும்,

 

 இந்த இரண்டு கைகளும்

தங்கள் சங்கிலிகளை

அசைத்து விட்டால்,

திபெத்தை பூமியின்

சொர்க்கமாக மாற்ற முடியும்

 

என்று அன்றைய நிலைமையில் அடிமை சமுதாய காலக்கட்டத்தில் அடிமைகளால் பாடப்பட்ட பாடல் இன்றைய நிதர்சன உண்மையாக மாறிவிட்டது. திபெத்தின் வளர்ச்சியும் சமூக மாற்றமும் மூன்று கட்டங்களாக நடைபெற்றது.

1949 ஆம் ஆண்டு முதல் 1959 ஆம் ஆண்டு வரை திபெத்தில், சீனாவில் இதர பகுதியில் துவங்கிய ஜனநாயக சீர்திருத்தம் துவங்கவில்லை. காரணம் திபெத்தில் இருந்தது சாதாரண அடிமை முறை அல்ல. மதத்தின் பெயரால், தேவராஜியத்தின் உத்தரவால் மக்களை மயக்கி வைத்திருந்த அடிமை முறையாகும்.இந்த வரலாற்றுச் சூழலை கவனத்தில் எடுத்து அவர்களை அரசியல் ரீதியாக வென்றெடுக்கக்கூடிய இடைப்பட்ட காலமாக இந்த பத்தாண்டுகள் இருந்தது. மாசேதுங் திபெத்தை விடுதலை செய்வது மட்டும் நம்முடைய நோக்கம் அல்ல, திபெத்திய மக்களை அரசியல் ரீதியாக வென்றெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் சீர்திருத்தத்தை மேற்கொள்ள உள்ளூர் மக்களின் ஆதரவை திரட்ட கூடிய பணிகளை செய்தார்கள். இவற்றை சீர்குலைக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு தலாய்லாமா அமெரிக்க ஏகாதிபத்திய சிஐஏ உதவியுடன் செயல்பட்டார். 1959 ஆம் ஆண்டு தலாய்லாமா நாட்டை விட்டு ஓடிய பிறகு ஜனநாயக சீர்திருத்தம் துரித வேகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

1960 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டுகள் வரை சீர்திருத்தத்துக்கான அடித்தளங்கள் வலுவாக உருவாக்கப்பட்டன. 1978 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுகள் வரை டெங் சியோ பிங் காலத்தில் சீன நாட்டின் நவீன மயமாக்களும் திறந்தவெளி (பொருளாதரத்தை திறத்து விடுதல்) கொள்கையும் வளர்ச்சியை மேலும் முன்னெடுத்தது. கலாச்சாரப் புரட்சியின் காயங்கள் ஆற்றப்பட்டன. 2012 க்குப் பிறகு தற்காலம் வரை சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசம் என்ற திட்டத்தின் அடிப்படையில் மக்கள் பங்கேற்க கூடிய வளர்ச்சியை இவ்விடத்தில் உருவாக்கினார்கள்.

சீன தேசத்தைப் புத்துயிர் பெறச் செய்வதற்கும், நாட்டின் பிறப்பகுதிகளுடன் சேர்ந்து ஜிசாங் தன்னாட்சிப் பகுதி மிதமான செழிப்பையும், நவீன மயமாக்கலையும் அடைவதை உறுதி செய்வதற்கும் ஒரு மூலோபாய தொலை நோக்குப் பார்வையுடன், CPC மத்தியக்குழு ஜிசாங்கின் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, பிராந்தியத்தில் உள்ள மக்கள் மீது தனது கவனத்தை செலுத்தியுள்ளது.  இந்த மூன்று காலகட்டத்தையும் உள்ளடக்கி தான் திபெத்தின் வளர்ச்சியை காண வேண்டும்.

மக்களிடமிருந்து துவங்கிய சீர்திருத்தம் 

சீர்திருத்தத்தின் முதல்படி அடிமைத்தனத்தை எதிர்த்து மக்கள் நடத்திய கிளர்ச்சிகள் ஆகும். புதிய அரசியல் மாற்றத்தை அறிந்த உடன் மக்கள் திபெத்திலிருந்த மிகக் கொடுமையான இலவச உழைப்புக்கு எதிராகவும், கடன்கள் என்ற பெயரால் சாமானிய மக்களை அடிமைகளாக்கிய அடிமைத்தனத்தை எதிர்த்தும், கடன்களுக்கான வட்டியை குறைக்க வேண்டும் என்று மக்களிடமிருந்து கிளர்ச்சிகள் வெடித்து கிளம்பியது. மக்களே மாற்றத்திற்கான முதல் அடித்தளத்தை துவக்கினார்கள். இதன் விளைவாக கிராமப்புறங்களில் கிளர்ச்சியில் ஈடுபட்ட விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நிலத்தில் அறுவடை செய்த பயிர்களை நிலப்பிரபுக்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தங்களுக்கு சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.

சில பகுதிகளில் மக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபடவில்லை. நிலப்பிரபுக்களின் அச்சுறுத்தலில் அடங்கிக் கிடந்தனர். அந்த இடங்களில் நில உடமையாளர்கள் அறுவடை தானியங்களில் 80 சதவீதத்தை விவசாயிகளிடமும் 20% நில உடமையாளர்களும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. திபெத்தில் கால்நடை மேச்சலில் கணிசமான மக்கள் ஈடுபட்டிருந்தார்கள் அதுவே அவர்களுக்கான வாழ்வாதாரம். கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட்ட மக்கள் அந்த கால்நடைகள் மூலம் வருகின்ற வருமானத்தை தாங்களே சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்ற உத்தரவை பிறப்பித்தது அரசு. வீட்டு வேலைகளுக்காக இலவசமாக வைக்கப்பட்டிருந்த அடிமை முறையை ஒழித்து உத்தரவிட்டனர். அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது மட்டுமல்ல அவர்களுக்கான வாழ்வாதாரமும் வழங்கப்பட்டது. முதல் படியாக திபெத் வளர்ச்சியில் அடிமை முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டது.

1959 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி சீன பிரதமர் சௌ என் லாய் திபெத்திய உள்ளூர் அரசாங்கத்தை கலைத்து உத்தரவிட்டார். அதே நேரத்தில் திபெத்தை வழி நடத்துவதற்காக திபெத் தன்னாட்சி பகுதிக்கான தற்காலிக தயாரிப்பு குழு என்ற ஒரு குழுவை அறிவித்தார். இந்தக் குழுவிற்கு பஞ்சன்லாமா செயல் தலைவராக இருப்பார் என்றும் சீன அரசு அறிவித்தது. சுமார் பத்து லட்சம் திபெத்திய மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர். பண்ணை அடிமைத்தனத்திலிருந்து விடிவித்தது மட்டுமல்ல, தேவராஜ்ஜியம் என்ற பெயரில் படிநிலை அடிப்படையிலான சமூக அமைப்பையும் ஒழித்துக் கட்டும் அறிவிப்பை சீன அரசாங்கம் வெளியிட்டது. அடிமை ஒழிப்பை அறிவித்த மார்ச் 28 திபெத்தில் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.

தேர்தலும் தன்னாட்சி உரிமையும்

ஜனநாயக சீர்திருத்தத்தின் இரண்டாவது படியாக சீர்திருத்தத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி கிளர்ச்சியில் ஈடுபட்ட நிலப்பிரபுக்களின் நிலம் உட்பட அணைத்து வகை  உற்பத்தி சாதனங்களையும் அரசு பறிமுதல் செய்து வறுமையில் வாழக்கூடிய விவசாயிகளுக்கும் கால்நடை மேற்பவர்களுக்கும் கொடுத்தது. சீர்திருத்தத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடாத நிலப்பரப்புகளின் நிலத்தில் பணி செய்த விவசாயிகளுக்கு விடுதலையை அளித்ததுடன் அவர்கள் நிலத்தில் வேலை செய்வதற்கான நவீன கருவிகளையும் அரசு கொடுத்து உதவி செய்தது. இதன் விளைவாக திபெத்திலிருந்த ஏழை மக்களும், அடிமையாய் இருந்தவர்களும் மிகப் பெரும் பலன் அடைந்தார்கள். சீர்திருத்தத்தை மனம் குளிர வரவேற்றார்கள். திபெத்தில் இருந்த சில உயர் வர்க்க பிரிவினரும் இந்த சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்டனர். திபெத் வரலாற்றில் முதன்முதலாக அடிமைகள் நிலம் மற்றும் உற்பத்தி சாதனங்களையும் சொந்தமாக பெற்றதுடன் சுதந்திரத்தையும் பெற்றார்கள்.

சீர்திருத்தத்தின் மற்றொரு இன்ப அதிர்ச்சி திபெத்திய மக்களுக்கு காத்திருந்தது. தேர்தல் என்பதை பற்றி அறியாத, கேள்விப்பட்டிராத மக்களிடம் முதல் முறையாக திபெத்தின் அனைத்து மட்டத்திற்கும் 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. சீன மக்கள் குடியரசின் அரசியல் அமைப்பு அடிப்படையில் தேர்தலில் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையும் போட்டியிடக்கூடிய உரிமைகளும் வழங்கப்பட்டது. எண்ணற்ற விடுதலை பெற்ற அடிமைகள் ஒரே நேரத்தில் வாக்காளர்களாகவும், வேட்பாளர்கள் ஆகவும் களமிறங்கினார்கள். அவர்கள் வெற்றி பெற்று உள்ளூர் அரசாங்கத்தின் பொறுப்புகளில் அமர்ந்தனர். உள்ளூர் அரசின் முடிவுகளையும், தேசிய அரசின் முடிவுகளையும் நிறைவேற்றினார்கள். அதைவிட அரிதான ஒரு சம்பவம் திபெத்திய வரலாற்றில் முதல் முறையாக அடிமைப்படுத்திய நிலப்பிரபுவும், அடிமையாக இருந்த விவசாயிகளும் சமமான முறையில் சட்டசபையில் அமர்ந்தார்கள் என்றால் இதைவிட அவர்களுக்கு மகிழ்வான தருணம் எதுவாக இருக்க முடியும்.

அடிமைச் சங்கிலிகள் அறுத்தறியப்பட்ட பிறகு 10 ஆண்டுகளில் பின் தங்கிய  ஒரு சமூகத்தில் ஒரு செழிப்பான சமூகத்தை உருவாக்க முடிந்தது. 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி தன்னாட்சி பகுதி அமைப்பதற்கான சட்டத்தை சீன மக்கள் காங்கிரஸ் நிறைவேற்றியது. தலாய்லாமா இருந்த காலத்தில் ஒரு தீப்பெட்டியை வாங்குவதற்கு ஒரு விவசாயி ஒரு ஆட்டுக்குட்டியை கொடுக்க வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் 10 ஆண்டுகளில் தீப்பெட்டி தொழிற்சாலைகளையே சொந்தமாக ஆரம்பித்தது மட்டுமல்ல 250 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளையும் உருவாக்கினார்கள்.

சட்டத்தின் ஆட்சியில் பிராந்திய அரசியல் வளர்ச்சி

சீன நாட்டில் இருக்கிற ஐந்து தன்னாட்சி பிரதேசங்களில் திபெத்தும் ஒன்றாகும். இதற்கு ஜிசாங் தன்னாட்சி பிராந்தியம் என்று பெயர் மாற்றப்பட்டது. ஜிசாங் என்றால் மேற்கின் புதையல் என்று அர்த்தம். பண்டைய காலத்தில் அப்பகுதி இப்பெயரால் அழைக்கப்பட்டது. ஜிசாங் தன்னாட்சி பிரதேசம், அதற்கு உட்பட்ட 7 மாகாணங்கள், 74 மாவட்டங்கள், 692 நகராட்சி நிர்வாகங்கள், 11,948 கிராம நிர்வாகங்களையும் அமைத்துள்ளது. மேற்கண்ட நான்கு நிலைகளில் ஒவ்வொரு அமைப்பிற்கும் மக்களால், மக்கள் காங்கிரஸ் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஐந்து ஆண்டும் பிராந்திய மக்கள் காங்கிரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அனைத்து மட்டத்திலும் நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும் தேர்தல்களில் 90% க்கு அதிகமான வாக்காளர்கள் சில இடங்களில் 100% வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.

ஜிசாங் என்ற தன்னாட்சி பிராந்திய மக்கள் காங்கிரசிற்கு 428 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களில் 280 பேர் அதாவது 65.42 சதவிகிதம் திபெத்திய மற்றும் இதர சிறுபான்மையினராகும். மேற்கண்ட தன்னாட்சி பிராந்தியத்தில் நான்கு நிர்வாக அமைப்புகளிலும் மக்கள் காங்கிரஸ் பிரதிநிதிகள் மொத்தம் 42,153       உள்ளனர். இவர்களில் 89.2 சதவீதத்தினர் திபெத்திய இன சிறுபான்மையினர் மற்றும் இதர சிறுபான்மையினர் ஆவார்கள். மேற்கண்ட மக்கள் காங்கிரஸ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது நாட்டுப் பாராளுமன்றம் போன்று மேலிருந்து கீழ் வரை செயல்படக்கூடிய நாட்டின் உயர்ந்த அதிகாரம் படைத்த அமைப்பாகும்.

 

சீன ஜனநாயகத்தின் மற்றொரு அமைப்பு சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு ( CPPCC) என்பதாகும். சமூகத்தின் பல்வேறு வட்டாரங்கள் சேர்ந்தவர்கள், பல சமூக குழுக்களை சேர்ந்தவர்கள், பல்துறை நிபுணர்கள், இனக்குழு சார்ந்த பிரதிநிதிகள் என பரந்து பட்ட மக்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பாகும். இந்த அமைப்பு பொருளாதாரத் திட்டங்கள், சமூக மேம்பாடு தொடர்பான திட்டங்கள், அதை அமலாக்குகிற பொழுது வரக்கூடிய பிரச்சினைகள், அவற்றை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும், சட்ட ரீதியான முறையில் நடவடிக்கை எடுப்பதற்கும், அதிகாரம் படைத்த ஆலோசனை அமைப்பாகும்.

இவற்றில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அதிகமாக இருக்க மாட்டார்கள். ஜீசாங் தன்னாட்சிப் பிரதேசத்தில் இந்த ஆலோசனை குழுவில் 440 உறுப்பினர்கள் உள்ளார்கள். இவர்களில் 59.3 உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்லாதவர்கள். பிராந்தியத்தில் உள்ள 74 மாவட்டங்களிலும் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இவற்றில் 8,000 க்கு மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிகள்உள்ளார்கள். இவர்களில் 85.7 சதவீதம் பேர் இன சிறுபான்மையை சேர்ந்தவர்கள்.

இந்த அமைப்பின் மூலம் 4356 திட்டங்கள் இக்காலங்களில் உருவாக்கப்பட்டு பிராந்திய மக்கள் காங்கிரசால்அமலாக்கப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸில் இந்த மாநிலத்தில் இருந்து 24 பிரதிநிதிகள் அதாவது எம்.பி.க்களை போல் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களில் 66 சதவீதம் இன சிறுபான்மையினர் ஆவார்கள். சீன மக்கள் ஆலோசனை காங்கிரஸில் ஜிசாங் மாநிலத்திலிருந்து 29 தேர்வு செய்யப்படுகிற உறுப்பினர்களில் 93.1 உறுப்பினர்கள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்

ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தில் 790 இடங்களில் மக்கள் காங்கிரஸ் கூடும் சட்டமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் நகராட்சி பிரதிநிதிகளில் 70 சதவீதம் பேர் அடிமட்ட மக்களிலிருந்து நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். சீன ஜனநாயகத்தை அடித்தள ஜனநாயகம் என்ற முறையில் அமுலாக்குவது என்ற கொள்கையின் விளைவாக இது நடைபெறுகிறது. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் மக்கள் காங்கிரஸ் மற்றும் அதன் நிலைக்குழு 160 உள்ளூர் விதிமுறைகளையும், சட்டபூர்வமான சட்டங்களையும் ஒழுங்குமுறை விதிகளையும் உருவாக்கி செயல்படுத்தி உள்ளது.

ஜிசாங் தன்னாட்சிப் பிராந்தியத்தில் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு தரவுகளின்படி இந்த முழுபிராந்தியத்திலும் 8,821 தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. இவற்றில் 6,07,000 சங்க உறுப்பினர்கள் உள்ளார்கள். நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் உள்ள ஊழியர்களும், தொழிலாளர்களும் மாநாடுகளை நடத்துவது அதன் மூலம் ஜனநாயக மேலாண்மையை உயர்த்திப் பிடிக்கிறார்கள். தங்களது உடனடி நலன்கள் தொடர்பான அதாவது கோரிக்கைகளை உருவாக்குவது இயக்கங்கள் நடத்துவது வேலைநிறுத்தங்கள் உட்பட முக்கிய விஷயங்களில் முடிவெடுக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்தவும் முடிகிறது

சட்டம் சார்ந்த சமூகம் உருவாக்கப்பட்டது

திபெத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றங்களில் மக்களை சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்துவதும், மக்கள் சட்டத்தை மதித்து நடக்கக்கூடிய ஒரு முறைகளை உருவாக்குவதிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொது அலுவலகமும், மாநில கவுன்சிலின் அதாவது மாநில அமைச்சரவை இணைந்து பொதுசட்ட சேவையை அதற்கான அமைப்பை உருவாக்கியது. மாவட்ட அளவிலும் அனைத்து நீதித்துறை நிர்வாக அலுவலர்களிலும் பொது சட்ட சேவை நிறுவனத் தலங்களை தொடங்கி படிப்படியாக அவற்றை செயல்படுத்த ஆரம்பித்தது.

2021 ஆம் ஆண்டில் மட்டும் 27,300 க்கும் மேற்பட்ட சட்ட ஆலோசனைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளது. மக்களிடம் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவது சட்டத்தின் ஆட்சி குறித்த கல்வியை போதிப்பது மேலும் அரசியல் அமைப்பை மையமாகக் கொண்ட சில சோசலிச சட்ட அமைப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சாரம் செய்வது போன்ற அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜிசாங் மாநிலம் முழுவதும் சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை செலுத்தும் கலாச்சாரத்தை உருவாக்க கிராமப்புறங்களில் பள்ளிகள் மற்றும் மத வசதிகளில் சட்டத்தின் ஆட்சி குறித்து பயனுள்ள பொதுக் கல்விகள் நடத்தப்பட்டு மக்களை மேம்படுத்தினார்கள்.

இதில் சட்டங்களை விளக்கவும், நிஜ வாழ்க்கை வழக்குகளில் பயன்படுத்தவும், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான தேசிய முன்னோடி கிராமங்கள் மற்றும் சமூக நிறுவனங்களையும் உருவாக்கினார்கள். இந்த நடவடிக்கைகள் மக்கள் அனைவரும் சட்டபூர்வமான ஆட்சியில் நேரடியான பங்கேற்பதற்கான பெரும் உந்துதலை உருவாக்கியது. இந்த செயல்முறைகள் அடுத்தடுத்த பொருளாதார வளர்ச்சியும் வெளிப்பட்டது.

சீனாவில் ஜனநாயகம் இல்லை என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் தலாய்லாமாவின் காலத்தில் தான் ஜனநாயகம் இல்லை என்பதையும், சீன கம்யூனிஸ்ட் கட்சி திபெத்தில் தேர்தலை நடத்தி ஜனநாயக அமைப்புகளை தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல, சீனாவில் பங்கேற்பு ஜனநாயக முறைகளை விரிவான முறையில் ஆழமான முறையில் நடத்தி வருகிறது. இதன் விளைவாகத்தான் திபெத்அனைத்தும் மக்களின் பங்கேற்புடன் செழிப்பான ஒரு மாநிலமாக உருவெடுத்து வருகிறது

 அ.பாக்கியம்

வியாழன், அக்டோபர் 16, 2025

42 திபெத்∶கனிம வளங்களை வட்டமடிக்கும் வல்லூறுகள்

 

அ.பாக்கியம்

பசுமையால் போர்த்தப்பட்ட வானுயர்ந்த மலைகளும், மலைமுகடுகளில் பொங்கி வரும் ஆறுகளும், மடிப்புகள் நிறைந்த பசுமையான பள்ளத்தாக்குகளும், பல்லாயிரக்கணக்கான ஏரிகளும், கண்ணுக்கு எட்டிய தூரங்களைக் கடந்து காணப்படும் மேச்சல் நிலங்களும், கணக்கில் அடங்கா வெள்ளிப் பனி மலைகளும் நிறைந்து,உலகின் கூரையாக பூமிக்குமேலே காட்சிதரும் திபெத் பூமிக்கு அடியிலே கணக்கிலடங்கா பொக்கிஷங்களைக் கொண்டிருக்கிறது.

நிலம், மலை, மழை, கனிமங்கள் என வளங்கள் நிறைந்து காணப்படும் திபெத்,கிங்காய், கன்சூ, யுன்னான் என திபெத்தை சுற்றியுள்ள மாநிலங்களை சூறையாடுவதற்கு ஏகாதிபத்திய வல்லூறுகள் வட்டமடித்து வருகின்றன.

வறண்ட பகுதிகளை வளமாக்குவதற்கு என்றுமே ஏகாதிபத்தியம் நினைத்தது கிடையாது. ஆப்பிரிக்கா தொடங்கி மத்திய கிழக்கு நாடுகள் வரை மண்ணுக்கு அடியில் உள்ள தாதுப் பொருட்களையும், எண்ணெய் மற்றும் எரிசக்தி வளங்களையும் கொள்ளையடித்தே பழக்கப்பட்ட ஏகாதிபத்தியம்,திபெத்  என்ற பொக்கிஷ பூமியை சும்மா விட்டு விடுமா?

ஆகவேதான் சிறிய துரும்பு கிடைத்தாலும் அதை வைத்துக்கொண்டு திபெத்தை உலக சர்ச்சையாக மாற்றி வருகிறது. ஆனாலும் அமெரிக்காஎடுக்கும்  ஒவ்வொரு முயற்சிகளும் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தோல்வியில் முடிந்துள்ளன.

சீனாவைப் பொறுத்தவரை திபெத் என்பது அந்த நாட்டின் எல்லை பாதுகாப்பு அரணாகும். உலகத்தின் கூரை என்ற மிக உயரமான பகுதியை அந்நிய சக்திகளிடம் விட்டுவிடுவது ஒட்டுமொத்த சீனாவையே அழித்துக் கொள்வதற்கு சமமாகும் என்பதை சீன அரசு புரிந்து கொண்டுள்ளது. சீனாவின் தென்மேற்கு எல்லைகள் குறிப்பாக இந்தியாவுடன் நீண்ட அளவு உள்ளது. அதே நேரத்தில் பல சர்ச்சைக்குரிய பகுதிகளும் இதில் உள்ளடக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் திபெத் என்பது சீனாவிற்கு புவிசார் அரசியலின் முக்கிய மையமாக மாறிவிடுகிறது.

 

அது மட்டுமல்ல திபெத்பீடபூமி இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளின் பொருளாதாரத்தை இணைப்பதற்கான ஒரு நுழைவாயிலாக இருக்கிறது. இந்திய பெருங்கடலை அணுகக் கூடிய பாதையாகவும் அமைந்துள்ளது. அண்டை நாடான நேபாளமும் பூட்டானும் மலையக தனி நாடுகளாக இருக்கிற பொழுது திபெத் சீனாவின் பாதுகாப்பிற்கு மிக முக்கிய இடமாக மாறிவிடுகிறது. எனவே திபெத் என்பது தலாய்லாமாவின் சுதந்திரம் என்ற போலி வார்த்தைகளுக்கு பின்னால் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள் உள்ளடங்கி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

பொக்கிஷங்களின் பூமி

ஜிசாங் திபெத் தன்னாட்சி பிரதேசம்  என்று திபெத்தை உள்ளடக்கிய மாநிலத்திற்கு சீனா பெயரிட்டுள்ளது. இதற்கு மேற்கின் பொக்கிஷம் என்று அர்த்தமாகும். திபெத் பீட பூமியில் குரோமியம், லித்தியம், தாமிரம், இரும்பு, துத்தநாகம், போராக்ஸ், ஈயம், வெள்ளி மற்றும் அரிதான மண் தாதுக்கள் என 126 க்கும்  மேற்பட்ட தாதுப்பொருட்கள் உள்ளன.

குறிப்பாக நாகரிசிகாட்ஷே பகுதிகளில் கணிசமான தாமிர தாது பொருட்கள் உள்ளது. உலகின் மிகப்பெரிய தாமிர உற்பத்தியாளராக சீனா திகழ்கிறது. சீனாவின் தாமிர இருப்புகளில் சுமார் ஆறில் ஒரு பங்கு திபெத்தில் உள்ளது. நாகரிசிகாட்ஷே தன்னாட்சி பகுதிகளில் சமீபத்தில் மிகப்பெரிய அளவிலான செப்பு இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக திபெத் தாமிரத்திற்கான மையமாக மாறி உள்ளது. இது இந்த பிராந்தியத்தின் தாமிர இருப்புகளில் 150 மில்லியன் டன்கள் வரை சேர்க்க வாய்ப்புள்ள உலகின் மிகப்பெரிய தாமிரவளம் நிறைந்த பகுதியாகும்.

இங்கு நான்கு முக்கியமான தாமிரவளத் தளங்கள் உருவாகியுள்ளன. இந்த தாதுப்பொள் சீனாவின்  உற்பத்தி மற்றும் பசுமை ஆற்றல் போன்ற தொழில்களுக்கான முக்கிய மூலப்பொருளாக உள்ளது.இது சீனாவின் உள்நாட்டு விநியோகத்தை கணிசமான அளவுக்கு அதிகரிக்கின்றது. இந்த தாமிர அல்லது செப்பு கண்டுபிடிப்புகள் திபெத்தை வளங்கள் நிறைந்த பகுதியாக மாற்றி உள்ளன.

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 மில்லியன் டன் புதிய தாமிர கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புகள் திபெத்தை உலகளாவிய செப்பு ஆய்வுக்கான ஒரு முக்கியமான மையமாக நிலைநிறுத்தி உள்ளது. அதே நேரத்தில் சீனாவில் முக்கியமான பொருளாதாரத் தாக்கங்களையும் ஏற்படுத்தி உள்ளது. உலகில் உள்ள செப்பு சந்தையில் சீனாவை முன்னிலைப்படுத்தி இருக்கிறது.

தொழில்நுட்ப சகாப்தத்தின் கனிமம்

மற்றொரு முக்கியமான கனிமம் லித்தியம் ஆகும். உலக அளவில் ஆற்றல் மாற்றத்திற்கு லித்தியம் மிகவும் இன்றியமையாத கனிமம். மின்சார வாகனங்கள், எரிசக்தி சேமிப்பு அமைப்புகள், மொபைல் தகவல் தொடர்பு, மருத்துவ சிகிச்சைகள், அணு உலை எரிபொருள்கள்,குறை கடத்திகள் என பல்வேறு வளர்ந்து வரும் தொழிலுக்கு லித்தியம் மிக முக்கியமான அங்கம் ஆகும். சீன மக்கள் குடியரசில் லித்தியத்தின் இருப்பு உலக அளவில் 6 சதவீதத்திலிருந்து தற்பொழுது 16.5% ஆக அதிகரித்து உள்ளது. இது லித்தியம் இருப்பில் சீனாவை உலகத் தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு உயர்த்தியுள்ளது. ஜின்ஜியாங் என்ற மத்திய ஆசியா மாநிலத்தில் துவங்கி 2,800 கிலோமீட்டர் நீளமுள்ள பகுதியில் படர்ந்து திபெத்திய குடியிருப்புகள் வரையிலான இடங்களில் இந்த லித்தியம் காணப்படுகிறது.

திபெத்தியே பீடபூமியில் உள்ள உப்பு ஏரிகளில் லித்திய வளங்களும் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய உப்பு ஏரி திபெத்தில் உள்ளது. இது லித்தியத்தின் வளமயை வெளிப்படுத்துகிறது. உப்பு ஏரியிலிருந்து லித்தியத்தை பிரித்து எடுப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உகந்ததாகும்.அதே நேரத்தில் உப்பு ஏரியிலிருந்து லித்தியத்தை பிரித்தெடுப்பது குறைந்த செலவு கொண்டதாகும். இது சீனாவிற்கு மிகப் பெரும் லித்திய வளத்தை கொடுக்கிறது. சீனாவின் உள்நாட்டின் பயனுக்காகவும், ஆய்வு செய்வதற்கும் அதிக லித்தியம் தேவைப்படுகிறது. கடந்த காலங்களில் வெளிநாட்டின் இறக்குமதியை நம்பி இருந்தனர். தற்போது லித்தியத்தை தங்களது நாட்டிலேயே கண்டுபிடித்து இருப்பதால் சீனா லித்தியத்தை உலக சந்தைக்கு அனுப்பக்கூடிய அளவிற்கு தன்னிறைவை அடைந்து வருகிறது.

காடுகளும் புல்வெளிகளும் மேச்சல் நிலங்களும் மலைகளின் மீது பார்லி விவசாயமும் மிகப் பெரும் செழிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பீடபூமிக்குள் 64.8 மில்லியன் ஹெக்டேர் மலைத்தொடர் நிலங்கள் உள்ளன. அவற்றில் 59.5 மில்லியன் ஹெக்டேர் பயன்படுத்தக்கூடிய மேய்ச்சல் நிலங்களாகும். கால்நடை பராமரிப்பு திபெத்தில் ஒரு அடிப்படைத் தொழிலாகும.இது உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தின் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. குறிப்பாக யாக்ஸ், செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளை வளர்ப்பதன் மூலம். இந்தக் காடுகளும் புல்வெளிகளும் இந்த பிராந்தியத்தின் பல்லுயிர் தன்மைகளையும், சுற்றுச்சூழல்களையும், சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்காற்று கிறது. இந்த பீடபூமி பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு தாயகமாக உள்ளது, இதில் திபெத்திய மான் மற்றும் கருப்பு கழுத்து கொக்கு போன்ற பாதுகாக்கப்பட்ட இனங்களும் அடங்கும்.

திபெத்தின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க சொத்துக்களில் ஒன்று சூரிய சக்தி.  பசுமையும் பள்ளத்தாக்கும் பரந்து கிடந்தாலும் சூரியகதிர்களின் உக்கிரமும் இங்கு இருக்கத்தான் செய்கிறது.இந்தப் பகுதி ஆண்டுக்கு 5,852 முதல் 8,400 MJ/m² வரையிலான சூரிய கதிர்வீச்சைப் பெறுகிறது.இந்த வெப்பத்தின் அளவின் அடிப்படையில்  மேற்கு திபெத்தை உயர்மட்ட (வகுப்பு I) சூரியவள வகையிலும், தென்கிழக்கு திபெத்தை  இரண்டாம் வகுப்பிலும் வைக்கிறது.சுவாரஸ்யமாக, உலகளவில் மிகவும் வெயில் மிகுந்த பகுதிகளில் திபெத்தும் ஒன்றாகும்.  பல மேற்குப் பகுதிகளில் ஆண்டுக்கு 3,000 மணிநேரத்திற்கும் அதிகமான சூரிய ஒளியும் இருக்கும்.லாசாவில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 8,160 MJ/m² சூரிய ஒளி உள்ளது.

கனிம வளம் மட்டுமல்ல திபெத்தின் தனித்துவமான நிலப்பரப்பு அமைப்பும், கலாச்சாரமும் சுற்றுலா பயணிகளை லட்சக்கணக்கில் ஈர்க்கிறது இது ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக அமைந்துள்ளது.2023ல் 55.17 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமான அதிகரிப்பாகும்.இதில் வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் 20000 பேர்களும் அடங்கும.

ஆசியாவின் நீர் கோபுரம்

திபெத் மற்றும் கிங்காய் பகுதிகளை ஆசியாவின் நீர் கோபுரம் என்று அழைப்பார்கள். திபெத்திய பீடபூமி ஆசியா முழுவதும் பகிர்ந்து கொள்ளப்படும் இன்றியமையாத நன்னீர் வளங்களின் வளமான களஞ்சியமாகும்.ஆசிய கண்டத்தில் உள்ள 100 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு நீர் ஆதாரத்தை வழங்குகிறது. இவற்றின் பணிப்பாறைகளும், இங்கே உருவாகிற ஆறுகளும் கீழ்நிலை நாடுகளுக்கு நீர் வளத்தை வழங்குகிறது. இந்த பிராந்தியத்தின் நீர் பாதுகாப்பிற்கு மிகவும் இன்றியமையாத பகுதியாக திபெத்தும் கிங்காயும் உள்ளது. திபெத் நீர் வளம் மிக மிக முக்கியமானது. பிரம்மபுத்திரா, திபெத்திய மொழியில் யார்லுங் சாங்போ என்று அழைக்கப்படும். பிரம்மபுத்திரா, திபெத், இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு முக்கிய சர்வதேச நதியாகும்.

இது மேற்கிலிருந்து கிழக்கு வரை மொத்தம் 1,800 மைல்கள் (2,900 கிமீ) நீளத்திற்கு நீண்டுசெல்கிறது.இந்த பிரமபுத்திரா நதி திபெத்திய பீடபூமியில் அதன் மூலமான புனித கைலாஷ் மலைக்கு அருகிலுள்ள செமாயுங்டங் பனிப்பாறைகளிலிருந்து தொடங்குகிறது. கங்கை, மீகாங், யாங்சே உள்ளிட்ட ஆசியாவின் மிகப்பெரிய ஆறுகளின் பிறப்பிடமாக திபெத் உள்ளது. திபெத் மற்றும் கிங்காய் பகுதி  நதிகளிலிருந்து வெளியேறும் 90 சதவீதமான நீரானது சீனா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, மியான்மர், பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பூட்டான், பாகிஸ்தான் ஆகிய  நாடுகளுக்கு செல்கிறது.

இவை உணவு உற்பத்திக்கும், நன்னீர் பயன்பாட்டிற்கும், ஆற்றல் விநியோகத்திற்கும், மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. திபெத் கிங்காய் பகுதிகள் ஆசியாவின் முக்கிய நன்னீர் களஞ்சியம். அதே நேரத்தில் மிகப்பெரும் அளவு மழை உற்பத்தியாளராகவும் விளங்குகிறது. இந்தியாவிற்கு மட்டுமல்ல, ஆசியாவின் கிழக்குப் பகுதி முழுவதும் உள்ள நீர் பாதுகாப்பு திபெத்தின் ஆறுகளையே சார்ந்து உள்ளது.

உலகில் உள்ள அரிசி உற்பத்தியில் சரிபாதி இந்தியா மற்றும் சீனாவால் உற்பத்தி செய்யப்பட்டு நுகரப்படுகிறது. அதே நேரத்தில் மியான்மர், பங்களாதேஷ், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம், மற்றும் இந்தோனேசியாவிலும் அரிசி பிரதான உணவாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படி அடுத்த 30 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 2 பில்லியன் அதிகரிக்கும். தற்போது 7.7. பில்லியனிலிருந்து 2050 இல்  9.7. பில்லியனாக இருக்கும். அரிசி உலகின் குறிப்பாக ஆசியாவின் மிகவும் பரவலாக நுகரப்படும் தானியமாக இருப்பதால் 2050 ஆம் ஆண்டு அரிசி அதிகமாக தேவைப்படும். அரிசி உற்பத்திக்கு நீர் அதிகமாக தேவைப்படும். இதற்கு திபெத்தின் நீர் ஆதாரம் மிகவும் முக்கிய தேவை.

திபெத்தின் பரந்த பணி வளங்கள் ஆர்டிக், அண்டார்டிகாவிற்கு அடுத்து வெளியே உள்ள மூன்றாம் துருவ பகுதி ஆகும்.திபெத் சில நேரங்களில் மூன்றாவது துருவம் என்று அழைக்கப்படுகிறது,ஏனெனில் அதன் பனி வயல்களில் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களுக்கு வெளியே மிகப்பெரிய நன்னீர் இருப்பு உள்ளது.

 

2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் திபெத்தின் ஏரிகள் பற்றி விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக திபெத்திய பீடபூமியை மையமாகக் கொண்டு இந்த ஆய்வறிக்கை அமைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டில் பீடபூமியில் மொத்தம் 4,385 ஏரிகள் இருந்தது. இவை 0.1 சதுர கிலோமீட்டரை விட பெரியதாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளத.அவற்றில் 4.2 சதவீதம் 10 முதல் 50 சதுர கிலோமீட்ட ருக்கும் இடைப்பட்ட இடங்களில் அமைந்துள்ளது.அவற்றில் 2.9 சதவீதம் ஏரிகள் 50 சதுர கிலோமீட்டரை விட பெரியதாக இருக்கிறது. இந்த ஏரிகள் கூட்டாக 37,471 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக் கியது.இதுவடஅமெரிக்காவில்உள்ளஐந்துபெரியஏரிகளில்நான்காவதுபெரியஏரியாக உள்ள எரி ஏரியை விட பெரியது. 2023 ஆம் ஆண்டு களில் பீடபூமியின் 53,267 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய 6,159 க்கும் மேற்பட்ட ஏரிகள் இருப்பதாக  ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர்.இது இது அமெரிக்காவில் அமைந்துள்ள மிச்சிகன் நன்னீர் ஏரியைப் போன்ற பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது.

திபெத்திய நதிகள் சீனாவின் பிரதேசத்துக்குள் இருப்பதை ஏகாதிபத்திய சக்திகள் விரும்பவில்லை இது சீனா தனது பிராந்திய மற்றும் சர்வதேச செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளும் என்று அச்சப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல அதிக நதிகள் மலைப்பிரதேசங்களில் இருந்து கீழ்நோக்கி பாய்கிற பொழுது நீர் மின்சக்தியை சீனாவால் அதிகமாக உற்பத்தி செய்ய முடிகிறது. இதன் மூலம் நீர் மின்சக்தியில் உலகில் முதன்மையான இடத்தை சீனா நிலை நிறுத்திக்கொள்கிறது. சீனாவை பொறுத்த வரை நீர் மின்சக்தி கொள்கை அதன் தொழில் துறைக்கு மிக மிக அவசியமானது என்பதால் அதன் மீது கவனம் செலுத்துகிறது.

திபெத்து சீனாவின் தேசிய பாதுகாப்பு மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வைக்கிறது என்பதையும் கடந்து தெற்காசியாவிற்கான வர்த்தக பாவிகளை உருவாக்குவதற்கு திபெத் முக்கிய பங்காற்றுகிறது. belt and road போன்ற மிகப்பெரும் கட்டமைப்புகளின் கீழ் திபத்தின் பொருளாதாரம் சீனாவின் பொருளாதாரமும் உயர்கின்றது. இதனால் இதனால் ஏகாதிபத்திய சக்திகள் அச்சப்படுகின்றனர்.

திபெத் மற்றும் கிங்காய் மாகாணங்களின் வளங்களை கணக்கில் கொண்டு தான் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் இவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துடிக்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பது போல், திபெத் பகுதிகள் கிங்காய் பகுதிகளுக்கு கீழே உள்ள கனிம வளங்களை  கொள்ளையடிக்கவும், திபெத்தின் மேலே உள்ள நீர் வளங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பலநாடுகளை நீருக்கு தடை விதித்து கட்டுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று கருதுகின்றனர். இவ்வளவு இயற்கை வளங்களை அரிய வகைத் தாதுப் பொருட்களை சீனா கொண்டிருப்பதன் மூலம் அது சர்வதேசச் சந்தைகளிலும் உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் மிகப்பெரும் பலத்தை அடையும்.

அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் வானியல் போன்ற துறைகளிலும் சீனா வியக்கத் தக்க முன்னேற்றத்தை அடைந்து வருவதை இந்த ஏகாதிபத்திய சக்திகள் தங்களின் மேலாதிக்க கொள்கைக்கு பெரும் அச்சுறுத்தல் என்று கருதுகிறார்கள். எனவே தான் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசத்தை சீனாவில் இருந்து துண்டாட ஏகாதிபத்திய சக்திகள் கடும் முயற்சியை மேற்கொள்கின்றனர்.

அ.பாக்கியம்

திங்கள், அக்டோபர் 13, 2025

வாலிபர் சங்க மாநாடும் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த திரிசூல மலையும்

 

அ .பாக்கியம்

    




(தமிழகத்தில் வாலிபர் சங்கம் வேர் வைக்க நீர் வார்த்த ஏராளமான தோழர்களைப் பற்றி… வாலிபர் சங்கத்தின் ஸ்தல, அரசியல் போராட்டங்களைப் பற்றி… ரத்த தான முகாம், விளையாட்டுக் கழகம் நடத்தியதைப் பற்றி வாலிபர் சங்கத்தின் பன்முக கலாச்சார நடவடிக்கைகளைப் பற்றி ‘‘ஞாபகங்கள் தீ மூட்டும்’’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருந்தேன். 2022ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற வாலிபர் சங்கத்தின் 17வது மாநில மாநாட்டில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 2025ஆம் ஆண்டு அக்டோபர் 12,13,14 தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட்டத் ஓசூரில்  நடைபெறும் வாலிபர் சங்கத்தின் 12வது மாநாட்டையொட்டி இந்த பதிவு. ஞாபகங்களும் தீ மூட்டும் இரண்டாம்பதிப்பிற்காக எழுதப்பட்டது)

 

டிசம்பர் 15 1987.  சென்னை திரிசூலம் மலையின் எதிரே இருக்கும் பழைய மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு விமானம் தரையிறங்கியது.  அந்த விமானத்தில் ஒரு இளைஞர் வந்திறங்கினார். சென்னை வடபழநியில் உள்ள விஜய சேஷ மஹாலில் (குர்ணாம் சிங் உப்பல் நினைவரங்கம்) நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) 3வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்று வாழ்த்துரை வழங்குவதற்காக அந்த இளைஞர் வந்திருந்தார். உலக இளைஞர் ஜனநாயக அமைப்பின் பொதுச்செயலாளரான அவர் அவர் அன்றைய செக்கோஸ்லோவேகியா நாட்டின் பிராக் நகரில் இருந்து வந்திருந்தார்.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உலக ஜனநாயக இளைஞர் அமைப்பின் உறுப்பினராகும். மாநாட்டு அரங்கில் வாழ்த்துரை வழங்கிய அவர், ‘‘நான் விமானத்தில் பறக்கிற பொழுதே டி ஒய் எஃப் ஐ என்ற நான்கு எழுத்து விளம்பரத்தை பார்த்து விட்டேன். திரிசூலம் மலையில் DYFI என்ற நான்கு எழுத்தை வானத்தில் இருந்தே தரிசித்தேன்’’ என்றார்.  கர ஒலிகளாலும், குரல் ஒலிகளாலும் மாநாட்டு அரங்கம் சில நிமிடங்கள் அதிர்ந்தது.

 

டிஒய்எப்ஐ அகில இந்திய மாநாடு நடந்த சில மாதங்களுக்குப் பிறகு அதாவது1988ஆம் ஆண்டு மே மாதம்  டெல்லியில் இருந்து ஒரு விமானம் மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த ஒரு காங்கிரஸ் பிரமுகரின் கண்ணிலும் திரிசூலம் மலையில் இருந்த DYFI என்ற 4 எழுத்து கண்ணில் பளிச்செனப்பட்டது. அவருடன் பயணித்த மற்ற விமானப் பயணிகளும் அந்த நான்கு எழுத்தை பார்த்தனர்; மலை உச்சியில் இவ்வாறு எழுதியிருக்கிறார்களே என்று வியந்தனர்; ரசித்தனர். ஆனால், அந்த காங்கிரஸ் பிரமுகரின் கண்களுக்கு மட்டும் அந்த DYFI என்ற 4 எழுத்து உறுத்தலாக இருந்தது. உச்சகட்ட எரிச்சல் அடைந்தார். அந்த பிரமுகர் வேறு யாருமில்லை. ராஜீவ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ப.சிதம்பரம்தான் அவர்.

 

1988 ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி சென்னைக்கு அருகில் காங்கிரஸ் மகாசபை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்ட ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ப.சிதம்பரம் டெல்லியில் இருந்து வந்த போதுதான், திரிசூலம் மலையில் எழுதப்பட்டிருந்த DYFI என்ற நான்கு எழுத்து கண்ணில் பட்டுள்ளது. அதனால் மிகுந்த எரிச்சலடைந்தார். காரணம் DYFI என்ற அந்த நான்கு எழுத்து இந்தியா முழுவதும் அறிமுகமாகி இருந்தது. மக்கள் விரோத செயலில் ஈடுபடும் மத்திய, மாநில அரசுகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது. அன்றைய ஆட்சியாளர் களை அச்சப்பட வைத்த போராட்ட களத்தின் பொன் எழுத்துக்களாக DYFI என்ற நான்கெழுத்து இருந்தது.  ராஜீவே ராஜினாமா செய் என்ற கோஷம் மாநாட்டு பேரணிகளில் எதிரொலித்தது.

 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) 3வது அகில இந்திய மாநாடு முடிந்தவுடன் அதன் முக்கிய தீர்மானங்களில் ஒன்றான  18 வயது வந்தோருக்கு வாக்குரிமை என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும்  இயக்கங்களை நடத்தியது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இந்தப் போராட்ட அலை வீசியது. 18 வயதானோருக்கு வாக்குரிமை என்ற கோரிக்கையை வைத்தபோது, அன்று தமிழகத்தில் இருந்த ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 18 வயது இளைஞனுக்கு என்ன பக்குவம் இருக்கும் என்று கேள்வி எழுப்பினர்; கேலி பேசினர்; கிண்டல் செய்தனர். இது வயதால் முதிர்ச்சி அடைந்து, அறிவால் முதிர்ச்சியடையாதவர்களின் அலப்பறையாகும். ஆனால், வாலிபர் சங்கத்தின் போராட்ட அலை கேலி பேசியவர்களின் வாயை அடைத்தது; கோரிக்கை வென்றெடுக்கப்பட்டது.   

 

இது நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் தான் ப.சிதம்பரம் டெல்லியில் இருந்து சென்னக்கு வரும் போது, திரிசூலம் மலையில் இருந்து DYFI என்ற நான்கு எழுத்தைப் பார்த்து எரிச்சல்பட்டார். காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி உள்பட டெல்லிவாலாக்கள் விமானத்தில் சென்னைக்கு வருகிற பொழுது அவர்கள் கண்ணை மூடிக் கொண்டிருந்தாலொழிய DYFI என்ற இந்த நான்கு எழுத்துக்களை தரிசிக்காமல் இருக்கமுடியாது என்பதை சிதம்பரம் அறிந்து கொண்டார். விமானத்தில் இருந்து பார்த்தால் தெரியும் அளவிற்கு DYFI விளம்பரமா? என்று கடுப்பானார்.  எனவே அந்த எழுத்துக்களை அழிப்பதற்கு சிதம்பரம் உத்தரவிட்டார். வாலிபர் சங்கத் தோழர்களின் விலை மதிப்பில்லாத உழைப்பால்,  சுமார் ரூ.2000 செலவு செய்து எழுதிய DYFIயின் இரண்டு விளம்பரங்களில் ஒன்றை அழிப்பதற்கு மட்டும் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கிறார்கள்.  சிதம்பரம் அந்த எழுத்துக்களை அழித்தது மட்டுமல்ல... திரிசூலம் மலையை சுற்றி ராணுவ பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி என்று வேலியை அமைக்க உத்தரவு பெற்று வேலியும் போடப்பட்டது.

 

திரிசூலம் மலையின் மேலே இருந்த ஒரு விளம்பரத்தை - DYFI என்ற எழுத்துக்களை அவர்களால்  அழிக்க முடிந்ததே தவிர பக்கவாட்டில் எழுதிய பிரம்மாண்டமான DYFI மாநாடு என்று எழுதப்பட்டிருந்த விளம்பரத்தை அவர்களால் அழிக்க முடியவில்லை. அது விமானத்தில் பறப்பவர்களின் கண்களில் படாது என்பதால் விட்டுவிட்டார்கள் போலும்.  ஆனால், அதுதான் மிக முக்கியமான விளம்பரமாகும். ரயிலிலும் சாலைகளிலும் போவோர் வருவோர் கண்களில் எல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அந்த பிரம்மாண்டமான விளம்பரம் கண்ணில்  பட்டுக்கொண்டே தான் இருந்தது.  திரிசூலம் மலையின் பக்கவாட்டில் செதுக்கப்பட்டிருந்த மிக உயரமான இடத்தில் இந்த எழுத்துக்கள் அமைந்து இருந்தது. 

 

DYFI மூன்றாவது அகில இந்திய மாநாட்டின் வீச்சு சென்னையிலும், தமிழகத்திலும், நாடு முழுவதும் பரவலாக இருந்தது. ஒன்றிய காங்கிரஸ் அரசுக்கு எதிரான போராட்ட அறைகூவல் நாடு முழுவதும் எதிரொலித்தது. இதையொட்டி ராஜீவ் காந்தி சென்னைக்கு வருகிற பொழுது வாலிபர் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடைபெறலாம் என்று ஊகம் செய்து வாலிபர் சங்கத்தின் முன்னணி ஊழியர்கள் பலர் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.  அத்துடன், மயிலாப்பூரில் இருந்த வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகியான தோழர் மாதவ் மத்திய ரிசர்வ் போலீசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை  பெரிய மேட்டில் மறைந்த வாலிபர் சங்கத் தோழர் ராமமூர்த்தியை கைது செய்ய போலீஸ் கும்பலாக வந்த பொழுது , அங்கு கூடிய மக்கள் கூட்டம், போலீசாரை சுற்றிவளைத்து போராட்டம் நடத்தினர். இதனால் தோழர் ராமமூர்த்தியை கைது செய்ய முடியாமல் போலீசார் வெறும் விலங்குடன் சென்றனர்.

 

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரில் என் வீடு இருக்கும் பகுதியில் இரண்டு தெருக்கைளயும் போலீசார் முற்றுகையிட்டனர்.  என் குடிசைவீட்டுக்குள்ளும் நுழைந்து வலைவீசி தேடினர். வீட்டில் இரவு கட்டியிருந்த கொசுவலைகளை அறுத்துப்போட்டனர். அப்போது  மதுரை கம்பத்தில் நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஒருநாள் காலதாமதமாக சென்னைக்கு வந்தேன்.  அதனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினேன்.  ஜனநாயக ரீதியாக போராடக்கூடிய ஒரு இயக்கத்தை  ஒடுக்குவது என்பது அன்றைய கால கட்டங்களில் இருந்து இன்றைய கால கட்டத்திலும் ஒடுக்குவது என்பது ஒன்றிய, மாநில  அரசு இயந்திரங்களுக்கு புதிதல்ல. அதை தொடர்ந்து சந்தித்து வரும் வாலிபர் சங்கத்திற்கும் இந்த அடக்குமுறை புதிது அல்ல.

 

ராஜீவ் காந்தி சென்னைக்கு வந்தார்; மாநாட்டில் பங்கேற்றார். அவரும் திரிசூல மலையை கடந்துதான் வந்திருக்க வேண்டும்.  மீண்டும் டெல்லிக்குச் சென்றார். ஆனால், வாலிபர் சங்கத்தின் 18 வயது வந்தோருக்கு வாக்குரிமை கோரிக்கை அவரை ஏதோ ஒரு வகையில் பாதித்து இருந்தது. காரணம், DYFI 3வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  அந்த கோரிக்கை முழக்கம், வாலிபர் சங்கத்தின் குரலாக மட்டுமல்ல... ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களின் குரலாக இருந்தது. எனவே அவரால் அந்த கோரிக்கையை புறந்தள்ள முடியவில்லை. எனவே, 18 வயது வந்தோருக்கு வாக்குரிமை என்பதற்கான 61வது அரசியல் சட்ட திருத்த மசோதாவை  டிசம்பர் 13, 1988 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.  டிசம்பர் 15ஆம் தேதி இந்த மசோதா மக்களவையிலும், டிசம்பர் 20ஆம் தேதி ராஜ்ய சபாவிலும் நிறைவேற்றப்பட்டு 1989 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை கொண்டு வந்தது என்னவோ ராஜீவ்காந்தியாக இருக்கலாம். 18 வயதானோருக்கு வாக்குரிமை என்பதை இந்திய இளைஞர்களின் கோரிக்கையாக மாற்றி அதை வெற்றி பெறச் செய்தது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) என்பதை யாரும் மறுக்க முடியாது. 

 

DYFI சிகரம் தொட்டது எப்படி 

அரசியல் ஆர்வமும், மாற்றங்களை நோக்கிப் பயணமும், எத்தகைய கடின வேலைகளையும் செய்து முடிக்க முடியும் என்ற நிலையிலிருந்து இளைஞர்கள் களத்தில் இறங்கினார்கள். 1987 டிசம்பர் 15 முதல் 19 வரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) மூன்றாவது அகில இந்திய மாநாடு சென்னையில் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. மிகப் பெரும் அளவு பிரதிநிதிகள் மாநாடும், பேரணியும் நடத்துவதற்கான திட்டமிடலில் முதல் வேலையாக மண்டபத்தை நிச்சயிக்கக்கூடிய பணி முடிந்தது. வடபழனியில் உள்ள விஜய சேஷ மகால், அதனுடன் இணைந்த ராணி மகால் இரண்டு மண்டபங்களும் மாநாடு நடத்துவதற்காக நிச்சயிக்கப்பட்டது. 

 

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி, தோழர்கள் மீனாட்சி சுந்தரம், சு.பொ.அகத்தியலிங்கம், பா.கருணாநிதி மற்றும் நான் (பாக்கியம்) ஆகிய நால்வரும் விஜய சேஷ மகாலை மாநாடு நடத்த புக்கிங் செய்வதற்காக சென்றோம். துவக்கமே உணர்ச்சிப் பெருக்காக தான் இருந்தது. தோழர் பி. ஆரைப் பார்த்த மண்டபத்தின் உரிமையாளர் நாகி ரெட்டி கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டார்.   இளமைக் கால ஒன்றிணைந்த போராட்டங்களை இருவரும் நினைவு கூர்ந்து கொண்டார்கள். அதன் பிறகு பி.ஆர். காசோலை மூலமாக மாநாடு நடத்துவதற்காக மண்டபத்தை நிச்சயித்தார்.  பி.ஆர். மற்றும் நாகி ரெட்டி ஆகியோரின் தழுவலில் இருந்த முந்தைய வரலாறுகளை பின்னர் நான் அறிந்து கொண்டேன்.  

 

அதன் பிறகு மாநாட்டுக்கான வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. வரவேற்பு குழு தலைவராக மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் பி. ஆர்.,  பொதுச் செயலாளராக தோழர் சு.பொ.அகத்தியலிங்கம், பொருளாளராக தோழர் நம்பிராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுடன் வாலிபர் சங்க மாநில நிர்வாகிகள், சென்னை மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும்  முக்கிய பிரமுகர்கள் பலரும் வரவேற்பு குழுவில் இடம் பெற்றனர். அத்துடன் மாநாட்டுப் பணிகளுக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. 

 

DYFI சென்னை மாவட்ட நிர்வாகிகளாக இருந்த பா. கருணாநிதி, நான் (பாக்கியம்), க.மாதவ்,  ராமச்சந்திரன், வீர அருண், புஷ்பராஜ், ராமையன், , பொன்னுச்சாமி, ராயபுரம் முத்து, சிவக்குமார், தேவபிரகாஷ் இவர்களுடன் DYFI மாநில பொருளாளர் மறைந்த தோழர் சின்னையா, மறைந்த அம்பத்தூர் வேலாயுதம், பாலச்சந்தர் உட்பட இன்னும் பலருக்கு (பெயர் குறிப்பிடாதவர்கள் மன்னிக்கவும்) மாநாட்டு பணி குழுக்களுக்கான பொறுப்பு கொடுக்கப்பட்டது.

எனக்கு விளம்பரக் குழு பணி  ஒதுக்கப்பட்டிருந்தது. அன்று நமக்கு குறைவான செலவில் விளம்பரப் படுத்தக்கூடிய இரண்டு வகைப் பிரசாரங்கள் மட்டுமே இருந்தன. ஒன்று சுவரெழுத்து. இன்னொன்று ‘டயர்’ தட்டிகள் வைப்பது. (டயர் தட்டிகள் மூலம் செய்யும் விளம்பரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் நாம்தான் என்றே கூறலாம்.) மாநாடு நெருக்கத்தில் டயர் தட்டிகள் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டு முதலில் சுவரெழுத்து எழுதுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக  ஓவியர்களுக்கான குழு ஒன்று அமைக்கப்பட்டது.  ஆங்காங்கே சுவர் எழுத்துக்கள் எழுதப்பட்டாலும், இதை பிரம்மாண்டமாக மாற்றுவது எப்படி என்று ஆலோசிக்கப்பட்டது.  சுவர் எழுத்துக்களில் ஓவியர் திருவொற்றியூர் சோலையின் பங்கு மிக மிக முக்கியமானது. அவர்தான், DYFI என்று எங்கெல்லாம் பெரிய அளவில் எழுதலாம் என்று முதலில் சுற்றிப் பார்ப்போம் என்று ஆலோசனை கூறினார். அதன்படியே அவரும், நானும் எங்கெங்கெல்லாம் பெரும் எழுத்துக்களை எழுதலாம் என்று பல இடங்களை சுற்றிப் பார்த்தோம். அவற்றில் ஒன்றுதான் சென்னை மின்சார ரயில் போக்குவரத்தின் பாதைகளின் இரு பக்கமும் எழுதலாம் என்று முடிவு செய்தாம்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வரை வாசற்படியில் நின்று கொண்டே பக்கவாட்டு சுவர்களை பார்த்துக் கொண்டு பயணித்தோம். திரிசூலம் மலையை கடக்கிற பொழுது பக்கவாட்டில் இருக்கக்கூடிய மலை, குவாரிக்காக உடைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்  உயரமான பகுதியில் எழுதலாம் என்று ஆலோசனை சொன்னார். நான் இது சாத்தியமா என்று கேட்ட பொழுது சாத்தியம்தான் என்றார். ‘‘அதிக செலவாகுமா’’ என்று நான் கேட்டபோது,  அவரோ,  ‘‘இல்லை குறைந்த செலவில் முடிப்போம். சுண்ணாம்பில் மிக நேர்த்தியான பசையை கலந்து அதன் மூலம் எழுதலாம்’’ என்றார். அவர் கூறியபடியே அந்த மாபெரும் ‘மலை’ எழுத்துப்பணி சாத்தியமானது. அவர் உள்ளிட்ட தோழர்களின் மகத்தான உழைப்பால் அது சாத்தியமானது.  சென்னை முழுவதும் நடந்து கொண்டிருந்த சுவரெழுத்து பணியின் ஒரு பகுதியாக திரிசூலத்தில் ‘மலைஎழுத்து’பணி துவக்கப்பட்டது.

 

அந்த மலை அடியில் உள்ளடங்கியும் மேலே வர வர வெளித்தள்ளியும் இருந்தது. அதில் சாரம் கட்டுவதே மிகப்பெரிய சவாலான விஷயமாக மாறியது. ஆனாலும், 70 அடி உயரத்திற்கு சாரம் கட்டப்பட்டது. இந்தப் பணிகளில் கிண்டி-தாம்பரம் பகுதியில இருந்த தோழர்கள், பகுதி நிர்வாகிகளாக இருந்தவர்கள் என 75 பேர் ஈடுபட்டார்கள்.  70 அடி சாரத்தை கட்டுகிற பொழுது மலையில் இருந்த விஷப் பூச்சிகளால் கடிக்கப்பட்டு பலரும் பாதிக்கப்பட்டனர். சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தொழில் முறையில் சாரம் கட்டக் கூடியவர்கள் அல்லர். சாதித்துக் காட்ட வேண்டும் என்பதற்கான சாரம் கட்டியவர்கள்; சாதித்தும் காட்டியவர்கள். 70 அடி சாரம் கட்டிய பிறகு 35 அடிக்கு மேலே 40 அடி உயரத்திற்கு 40 அடி அகலத்திற்கு ஒரு எழுத்து என்ற முறையில் பிரம்மாண்டமான DYFI என்ற எழுத்துக்களும் அதன் கீழே மாநாடு என்ற வார்த்தையும் அமைக்கப்பட்டது. சாரம் கட்டுவதில் துவங்கி ஒரு எழுத்து உருவாக சில நாட்கள் ஆகும். தினசரி, மின்சார ரயிலில் செல்லக்கூடியவர்கள், இதை வியப்பாகவும், வேடிக்கையாகவும் பார்த்து சென்றனர்.  இது என்ன என்று கேள்வி அவர்களின் மனதில் தொக்கி நிற்கும். DYFI மாநாட்டு விளம்பரம் எழுதி முடித்த பிறகுதான் ரயிலில் பயணித்தவர்களுக்கு முழுமையான அர்த்தம் புரிந்தது. ஆனால், என்னதான் எழுதுகிறார்கள் என்று பார்க்கும் ஆர்வம் ஒவ்வொரு நாளும், அவர்கள் மனதில் இருந்தது. பின்னாட்களில் வணிக உலகில் சஸ்பென்ஸ் வைத்து விளம்பரம் வெளியிடும் உத்திக்கு டிஒய்எப்ஐ மலை விளம்பரமே முன்னோடியாக இருந்தது என்று கூறலாம்.

 

இந்தப் பணி நடந்து கொண்டிருக்கும்போதே தோழர் சோலை இன்னொரு கருத்தையும் முன் வைத்தார். திரிசூலம் மலையின் மேல் பகுதி மிகவும் பசுமையாக உள்ளடங்கி இருக்கிறது. அங்கு DYFI என்று எழுதினால், பரங்கிமலையை தாண்டியவுடன் ரயிலில் வரும் அனைவருக்கும் அது தெரியும் என்று கூறினார். அதற்கான எளிய வழி முறையையும் அவர்   கண்டுபிடித்தார். அங்கிருந்த பெரிய பாறைகளையும் சிறிய கற்களையும் இணைத்து DYFI  என்ற முறையில் அடுக்கினார்கள். அவ்வாறு  அடுக்கிய பிறகு சுண்ணாம்பு, பசை இரண்டையும் கலந்து கரைத்து பக்கெட், பக்கெட்டாக ஆக ஊற்றி விட்டார்கள். அப்போது பெரிய அளவிலான கட்டிடங்கள் இல்லாத காலம் என்பதால் தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதாவது பரங்கிமலை ரயில் நிலையத்தை தாண்டியவுடன், டிஒய்எப்ஐ மாநாடு என்று திரிசூலம் மலையில் எழுதி இருப்பது தெரியும். பக்கவாட்டிலும் பளிச்சென்று தெரிவதற்கு அலுமினிய பெயின்டை வாங்கி பயன்படுத்தி இருந்தனர். அதனால் ‘‘டிஒய்எப்ஐ மாநாடு’’ விளம்பரம், சுதை சிற்பமாகவும், புடைப்பு சிற்பமாகவும் அவரவர் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தது. தோழர் சோலை என்கிற மகத்தான கலைஞன் மற்ற தோழர்களுடன் இணைந்து படைத்த பிரம்மாண்டமான, இதுவரை யாரும் செய்யாத, செய்ய முடியாத விளம்பரம் அது.

சென்னையில் நடைபெற்ற DYFI 3வது அகில இந்திய மாநாட்டின்   சுவரெழுத்து பிரச்சாரத்தின் துவக்கமே மிகப் பிரம்மாண்டமாக அமைந்தது.  அனுமன் ‘வால்’ போல் நீண்ட சுவர்களில் நீண்ட அளவில் சுவரெழுத்தை எழுதி அறிமுகப்படுத்தியது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல முடியும்.  அது மட்டுமல்ல... சென்னையில் இருக்கக்கூடிய முக்கிய பாலங்கள் உட்பட எங்கெல்லாம் நான்கு அங்குலத்துக்கு மேல் சுவர் கிடைத்ததோ அங்கெல்லாம் டி ஒய் எப் ஐ மாநாடு என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான தோழர்கள் கையில் ஒரு பெயின்ட் டப்பாவுடனும் ஒரு தூரிகையுடனும் கிடைத்த இடத்தில் எல்லாம் மாநாட்டை விளம்பரப்படுத்தினார்கள். சென்னையின் இண்டு, இடுக்குகளில், சந்து, பொந்துகளில் எல்லாம் வாலிபர் சங்கத்தை அறிமுகப்படுத்தினார்கள்.  இந்த மாநாடுதான் நூற்றுக்கணக்கான ஓவியர்களை உருவாக்கியது என்றால் அது மிகையாகாது.

 

வாலிபர் சங்க அகில இந்திய மாநாட்டையொட்டி இன்னும் பல விளம்பர உத்திகள் கடைபிடிக்கப்பட்டன. மின்சார ரயிலுக்குள் போஸ்டர்கள் ஒட்டுவது கடினமான விஷயமாக இருந்தது. காவல்துறை அவ்வப்போது கெடுபிடி செய்தது. எனவே மாவட்ட நிர்வாகி (ராமச்சந்திரன்) ஒருவரின் ஆலோசனையின் படி பயணிகளின் இருக்கையின் வெளிப்புற ஓரத்தில்  ஆறு அங்குலம் அளவிற்கு இடம் இருந்தது. அந்த இடத்தில் டிஒய்எப்ஐ மாநாடு என்று பெரிய அளவில் ரப்பர் ஸ்டாம்ப் செய்யப்பட்டு வெள்ளை மையினால் ரயில் இருக்கைகளில் அச்சிடப்பட்டு பரபரப்பாக்கப்பட்டது.

 

சென்னையில் முதல்முறையாக ஒரு இயக்கத்தின் மாநாட்டு விளம்பரம் திரையரங்குகளில் ஸ்லைட் ஷோவாக காட்டப்பட்டது. வாலிபர் சங்க மாநாடு விளம்பரம் போடுவதா என்று திரையரங்க உரிமையாளர்கள் தயங்கிய காலகட்டம் அது. இந்த சூழ்நிலையில், சென்னை சூளையில் இருந்த தோழர் ‘ஹால்டா’ குமார் என்பவர் மூலமாக திரு.கிரி என்பவர் அறிமுகமானார். அன்று அவர் பிரபலமான சில திரைக்கலைஞர்களுக்கு மேலாளராக இருந்தார். அவரின் உதவியால் மிகக்குறைந்த கட்டணத்தில் திரையரங்குகளில் சினிமா இடைவேளையின் போது டிஒய்எப்ஐ அகில இந்திய மாநாட்டு விளம்பர ஸ்லைட் ஷோ காட்டப்பட்டது.

 

சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான மிகப்பெரும் சுவர் எழுத்துக்களும், 10,000க்கும் அதிகமான சுவரொட்டிகளும், தெருவெல்லாம் டயர் தட்டிகளும், 100க்கும் அதிகமான இடங்களில் பெரிய தட்டிகளும் வைக்கப்பட்டன. 150 தெருமுனை கூட்டங்களும் 108 பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. 

 

மாநாட்டை விளம்பரப்படுத்த கலை குழுக்களின் பிரசாரங்கள், வீதி நாடகங்கள், இசைக்குழுக்களின் மாலை நேர நிகழ்வுகள் என்று நூற்றுக்கணக்கில் நடைபெற்றது. சென்னையில் கட்சித் தோழர்களிடம் ஏற்கனவே அறிமுகமாகி இருந்த சென்னை கலைக்குழு தவிர ஒவ்வொரு பகுதியிலும் கலைக்குழுவும், இசைக்குழுக்களும் உருவானது. விபிசி கலைக்குழு, புதுயுக கலைக்குழு, என பத்துக்கும் மேற்பட்ட கலை குழுக்கள் உருவாகின. இவை தவிர இசைக்குழுக்களும் உருவாயின. இவை தவிர, பல மாவட்டங்களில் இருந்த கலை குழுக்களும், ஆந்திராவின் பிரஜா நாட்டிய மண்டலி  கலைக்குழுவும் மாநாடு விளம்பர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. 

 

மாநாட்டின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் நிதி வசூல் பிரச்சாரம் ஆகும். ஆயிரம்தான் இருந்தாலும் நிதி இல்லையென்றால் எதற்குமே கதி இல்லை, இல்லையா? நிதி வசூலிலும் நூற்றுக்கணக்கான தோழர்கள் ஈடுபட்டு மாபெரும் சாதனை புரிந்தார்கள். சுவர் எழுத்துக்கள் ஓவியர்களை உருவாக்கியது; கலை குழுக்கள் நூற்றுக்கணக்கான இளைஞர்களை கலைஞர்களாக மாற்றியது; அதேபோன்று நிதி வசூல், ஊழியர்களையும் தலைவர்களையும் உருவாக்கியது.

 

சென்னையில் அப்பொழுது 10,094 உறுப்பினர்களும், 140 கிளைகளும், ஏழு இடைக்கமிட்டிகளும் இருந்தன. திருவொற்றியூர் – மணலி, ஆவடி – அம்பத்தூர்,  கிண்டி – தாம்பரம், வடசென்னை, மத்திய சென்னை, மேற்கு சென்னை, தென் சென்னை என்ற ஏழு பகுதி குழுக்கள் செயல்பட்டன. மாநாட்டிற்காக வீடு வீடாக வசூல் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டு சென்னையில் 100 வசூல் குழுக்கள் பல்வேறு தலைவர்களின் பெயரில் உருவாக்கப்பட்டது. வாலிபர் சங்கத்தில் சேர்ந்த பல இளைஞர்கள், முதல் முறையாக மக்களை சந்திக்க செல்கிறார்கள் என்பதால், மக்களிடம் செல்வது தொடர்பாக, வீடுகளில் இருக்கக்கூடிய பெரியவர்கள், பெண்களிடம் அணுகுவது தொடர்பாக, என்ன பேச வேண்டும் என்பதற்கான கூட்டங்கள் நடத்தி பயிற்சி அளிக்கப்பட்டது. வணக்கம் சொல்வதில் ஆரம்பித்து, நன்கொடை கொடுக்கவில்லை என்றாலும் கூட மாநாட்டிற்கு அவர்களை இன்முகத்தோடு அழைக்க வேண்டும் என்ற அணுகுமுறை வரை சொல்லித் தரப்பட்டது.

 

தோழர்களும் தீவிர வசூலில் இறங்கினார்கள். 78 நாட்கள் வசூல் நடைபெற்றது. மூன்று நாட்கள் முழு நாள் வசூல்; ஐந்து நாட்கள் அரைநாள் வசூல் என்று பல்வேறு வகைகளாக இந்த 78 நாட்களும் வசூல் நடந்தது. சென்னையில் 1.40 லட்சம் குடும்பங்களை இந்த குழுக்கள் சந்தித்து விதவிதமான அனுபவங்களோடு திரும்பினார்கள். அனுபவப் பகிர்வு என்ற முறையில் நடைபெற்ற கூட்டங்கள் மேலும் உற்சாகத்தை அளித்தது. வசூல் தொகை என்பது பத்து பைசாவில் ஆரம்பித்து ஐந்து ரூபாய் வரை இருந்தது. ஐந்து ரூபாய் என்பது மிக அதிகபட்ச நன்கொடையாக இருந்தது. சராசரியாக 98 சதவீதம் 2 ரூபாய் வசூல் ஆகத்தான் இருந்தது. ஒரு சிலர் நூறு ரூபாய் கொடுத்தது மாவட்டத்தின் பேசு பொருளாக மாறியது. சென்னை மாவட்டத்தில் வீடுகள் வசூல் மூலம் ரூ.3,89,000 கிடைத்தது. மாநிலம் முழுவதும் ரூ.8.5 லட்சம் வசூலிக்கப்பட்டது. 

 

சென்னை தவிர தமிழகம் முழுவதும் பிரசாரமும் விளம்பரமும் அதுவரை இல்லாத அளவிற்கு நடைபெற்றது. 4 லட்சம் குடும்பங்களை 1100 குழுக்கள் சந்தித்தன. மாநிலம் முழுவதும் 13 லட்சம் துண்டு பிரசுரங்கள், 20,000 சுவரொட்டிகள், 8000 இடங்களில் பெரிய சுவர் எழுத்துக்கள் திரும்பிய பக்கம் எல்லாம் டயர் தட்டிகள், 270க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள் என்று எண்ணிலடங்கா மாநாட்டு விளம்பர பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

 

மாநாட்டின் முத்தாய்ப்பாக பேரணியும் பொதுக்கூட்டமும் சென்னை மெரினா சீரணி அரங்கத்தில் நடைபெற்றது. இந்தப் பேரணியில் தமிழகத்தில் இருந்து 38 ஆயிரம் இளைஞர்களும் சென்னையிலிருந்து மட்டும் ஏழாயிரம் இளைஞர்களும் கலந்து கொண்டனர். இவை தவிர ஆந்திராவிலிருந்து பத்தாயிரம் பேரும் கர்நாடகாவில் இருந்து ஐந்தாயிரம்  பேரும், மகாராஷ்டிராவில் இருந்து ஆயிரம் பேரும் கலந்து கொண்டனர். மொத்தமாக 70 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்ட இளைஞர்களின் எழுச்சிமிகு பேரணி 2.30 மணி நேரம் கட்டுப்பாடுடன் மெரினாவில் நடைபெற்றது. தூறல் மழை பெய்து அவர்களுக்கு வரவேற்பு கொடுத்தது.  

 

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் பி.ஆர்., மாநாட்டிற்கு முதல் நாள் இறந்ததால், மாநாட்டுப் பேரணி ரத்து என்று அறிவிக்கப்பட்டது. அதனால் பேரணிக்கு வரவிருந்த பலரும், வாகனங்களை கேன்சல் செய்துவிட்டனர்.  அதன் பிறகு மீண்டும் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  அன்றைய தினம் வாகனங்களை ஏற்பாடு செய்வது மிகவும் கடினமான வேலைகளில் ஒன்று என்பதால் மீண்டும் வாகனங்களை ஏற்பாடு செய்து பல மாவட்டங்களில் இருந்து தோழர்கள் வர முடியாமல் போனது. பேரணியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.  குறிப்பாக கேரளாவில் இருந்து  இளைஞர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து வர இயலாமல் போனது. இதனால் மேலும், பல ஆயிரம் இளைஞர்கள் பேரணியில் பங்கு கொள்ள இயலவில்லை. ஆனால், பத்திரிகைகள் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற கட்டுக்கோப்பான பேரணி என்று தலைப்பு செய்திகளாக வெளியிட்டனர்.  21.12.87 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னை பதிப்பில் "வெடவெடக்கும் குளிரிலும் அவர்களை உந்தி தள்ளியது டி ஒய் எப் ஐ யின் இலட்சிய முழக்கங்கள் என்றும், அரைத்த மாவையே அறைக்காத புதியவர்கள் என்றெல்லாம் பாராட்டி எழுதியது ஊர்வலம் முடிந்த மறுநாள் ஆங்கில இந்து பத்திரிக்கை தினமணி இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அனைத்து மாலை பத்திரிகைகளும், ஆனந்த விகடனும் கொட்டை எழுத்தில் படத்துடன் செய்திகளை வெளியிட்டது மட்டுமல்ல இளைஞர்கள் ஊர்வலம் மிகவும் கட்டுப்பாடாக சில மணி நேரங்கள் நடைபெற்றதையும் மக்கள் கடந்து செல்வதற்கான வழிகளை உருவாக்கி கொடுத்ததையும் பாராட்டி எழுதினார்கள். வழக்கம்போல் துக்ளக் என்ற பத்திரிக்கை குதர்க்கமாக எழுதி இருந்தது. குதர்க்கமாக எழுதுவதற்கு ஒரு பக்கத்தை ஒதுக்கி இருந்தது.

 

வரவேற்பு குழு அமைக்கப்பட வேண்டிய காலத்தில் தொழிற்சங்க பிதாமகன், அருமை தோழர் வி. பி சிந்தன் ரஷ்யாவில் காலமானார். மாநாடு நடைபெற்ற அந்த காலகட்டத்தில் பல மாவட்டங்களில் சாதிய மோதல்கள் நடந்ததால்,  ஊரடங்கு உத்தரவுகளும் போடப்பட்டது. அப்போது இடதுசாரி கட்சிகளின் வெகுஜன அமைப்புகளின் பிரசாரப் பயணமும், அகில இந்திய அளவில் விவசாயிகளுடைய மறியலும் நடந்த காலம் அது. மேலும், மாநாட்டை மழைக்காலமான டிசம்பர் மாதம் நடத்த வேண்டிய சூழலும் உருவானது. தோழர் வி.பி.சிந்தன் மறைந்த துயரம், மழைக்காலம் என்ற இயற்கை இடர்பாடு ஆகியவற்றை எதிர்கொண்டுதான் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற நம்பிக்கையோடுதான் வாலிபர் சங்கம் களம் இறங்கியது. மாநாடு துவங்கிய முதல் நாள் மார்க்சிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவரும், வரவேற்புக்குழு தலைவருமான தோழர் பி ஆரின் மரணம் தலையில் இடியாய் இறங்கியது.  மாநாட்டு மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுத்து பிள்ளையார் சுழி போட்ட தோழர் பி.ஆரின் மரணம் மிகப்பெரிய சோகத்தை கொடுத்தது.

 

இந்த சோகத்துக்குப் பிறகும் பிரதிநிதி மாநாடும் பேரணி, பொதுக்கூட்டமும் சிறப்பாக நடந்து முடிந்தது. மாநாடு முடிந்த பிரதிநிதிகள் ஊர் திரும்புவதற்குள் அன்றைய முதலமைச்சர் எம். ஜி.ஆரின் மறைவு ஏற்பட்டதால், பலர் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி ஊர் திரும்ப முடியவில்லை. அதையும் சந்தித்து, உரிய முறையில் பிரதிநிதிகள் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

 

சென்னையில் நடந்த டிஒய்எப்ஐயின் அகில இந்திய மாநாடு தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இயக்கத்திலும் அது எதிரொலித்தது. மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்ட 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட தோழர்கள், முன்னணி ஊழியர்களாகவும், தலைவர்களாகவும் மாறினார்கள். இந்த மாநாடு ஓவியர்களை உருவாக்கியது; கலைஞர்களை உருவாக்கியது; பேச்சாளர்களையும், தலைவர்களையும் உருவாக்கியது. இவை அனைத்தும் சீனத்தை சிவப்பாக்கி, 21ஆம் நூற்றாண்டிலும் அமெரிக்காவுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிற நாடாக மாற்றிய மாவோ சொன்னபடி நடந்தது. மக்களிடம் செல்லுங்கள்; மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்றார் மாவோ. அவருடைய வார்த்தைகளின் படியே மக்களிடம் சென்றோம்; கற்றுக் கொண்டோம். மாநாட்டினை வெற்றிகரமாக்கினோம். 

 

டிஒய்எப்ஐ அகில இந்திய மாநாட்டின் விளைவாக சென்னையில் வாலிபர் சங்க உறுப்பினர் எண்ணிக்கை 109 சதவீதம் அதிகமானது. அதாவது சென்னையில் 10,100 இல் இருந்த உறுப்பினர் எண்ணிக்கை  21 ஆயிரத்து நூறாக உயர்ந்தது. தமிழகம் முழுவதும் 39 ஆயிரம் உறுப்பினர்கள் அதிகரித்தனர். இதே போல் கிளைகள் சென்னையில் 218 ஆகவும் தமிழகத்தில் 2600 இல் இருந்து 3500 ஆகவும் அதிகரித்தது.

 

சென்னையில் நடைபெற்ற இந்த மாநாடு, ஸ்தாபன ரீதியாக, அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. இவையெல்லாம் மெல்லக் கனவாய், பழங்கதையாய் போய்விடவில்லை. இன்றும் வாலிபர் சங்கம் மக்கள் பிரச்னைகளில் வீறுகொண்டு போராட்டக் களத்தில் நிற்கிறது. 

-அ .பாக்கியம்

44 திபெத்:உழவும் தொழிலும் உயர்ந்த விதம்

  அ.பாக்கியம் உலகின் கூரை என்று அழைக்கப்பட்ட திபெத்தில் மக்களை அடிமை நுகத்தடியில் அழுத்தி வைத்திருந்தார்கள். இன்றோ திபெத் மக்களை சீன கம்யூ...