Pages

சனி, ஜனவரி 31, 2026

நவ பாசிச சக்திகளின் வேர்களில் வென்னீராக... நூல் அறிமுகம்:


“மதம் என்பது மனிதனின் அடிப்படை உண்மை அல்ல; மதம் ஒரு மனித படைப்பு. மதம் ஒரு பொய் என்று மட்டுமே கூறி, அதனை அகற்ற முடியாது. மக்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, மதம் தேவையில்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவதன்மூலம் தான் அதை அகற்ற முடியும்”. (32)

இப்படித்தான்... “சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும்” என்கிற அ.பாக்கியம் எழுதிய நூல் விரிகிறது. மொத்தம் பத்தொன்பது தலைப்புகளில் பாமரனும் படிப்பதற்கு இலகுவாக வெளிவந்துள்ளது. அதற்காக எட்டுக்கும் மேற்பட்ட நூல்கள், இருபத்தெட்டுக்கும் மேற்பட்ட வலைதள இணைப்பு களின் கட்டுரைகள் ஆகியவற்றை ஆதாரமாக்கப்பட்டு, சுமார் நூற்றம்பது பக்கங்களில் நம்மை பிரமிக்க வைத்துள்ளார்.

சீனா என்றாலே... பாம்பு, பல்லி, தவளை தின்பவர்கள்; புற்றீசல்போல் மக்கள் தொகை கொண்டவர்கள்; அதொரு சர்வாதிகார... இரும்புத்திரைக் கொண்ட நாடு; ஆட்சியாளர்களை எதிர்ப்பவர்களுக்கு மரணம் நிச்சயம்; சுட்டு தள்ளிவிடுவார்கள்; எந்த சுதந்திரமும் கிடையாது என்றெல்லாம் வாய்கிழிய பிரச்சாரம் செய்யப்பட்ட காலம் ஒன்று உண்டு. அதெல்லாம் எவ்வளவு பெரிய கட்டுக்கதை என்பதையும், மனித சுதந்திரமும் முதல் மத சுதந்திரம் வரை எப்படியெல்லாம் ஜனநாயக புரட்சிக்குப்பின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் கட்டி அமைக்கப்பட்டிருக்கிறது என்கிற தலைப்புகளை வாசித்து கடக்கிறபோது மெய்சிலிர்த்து போகிறது.

அதுபோலத்தான் 5000 ஆண்டு பழமைமிக்க நாகரீகம் சீன நாகரீகம் என்பதை ஐநூறு லிட்டர் பாலை அரைலிட்டர் பாலாக சுண்டவைத்து பரிமாறினால், எப்படி இருக்குமோ, அதுபோல் ஜனநாயக புரட்சிக்கு முன்பான கால கட்டத்தில் மனிதமும் மதமும் எப்படி சீனத்தை ஆண்டது என்பதை மிக அற்புதமாக அவருக்கே உரிய பாணியில் விவரிக்கிறார். நம்மை அப்படியே அந்த லோகத்திற்கு அழைத்து செல்கிறார் என்றால்... பாருங்களே..!

“இன்றைய சீனாவில் பெரும்பான்மையான மக்கள் எந்த ஒரு மதத்தையும் பின்பற்றக்கூடியவர்களல்ல. மத நம்பிக்கை அற்றவர்கள் 52.2 விழுக்காடு. முன்னோர்கள் மற்றும் நாட்டுப்புற நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள் (கம்பியூசியவாதிகள்) 21.9 விழுக்காடு. பௌத்தம் நம்பிக்கையாளர்கள் 18.2 விழுக்காடு. தாவோயிசவாதிகள் 3 விழுக்காடு. புரோட்டஸ்டன்ட் 3.8 கோடி. கத்தேலிக்கர்கள் 60 லட்சம். இஸ்லாமியர்கள் 2.5 கோடி. ஒப்பீட்டளவில் பௌத்தம் மிகப்பெரிய மதம்” என்கிறது இந்நூல்.

சீனத்தில் முளைவிட்ட தத்துவங்களாக... கன்பியூசியம், மென்சியம், தாவோயிசம், மோஷிசம், சட்டவாதம் இருந்துள்ளது. இவைகளே மக்களை ஆட்கொண்ட வாழ்வியல் தத்துவங்களாக இருந்திருக்கிறது. இவைகளை பிற்காலத்தில் பற்பல காலகட்டங்களில் பௌத்தம், கிறித்துவம், இஸ்லாம் எல்லாம் உட்கொள்ள போராடி உள்ளன என்பதை இந்த நூலில் காணமுடிகிறது. ஆம், இவற்றை ஏறக்குறைய நூறுப்பக்கங்களிலேயே அப்படியே பிரித்து மேய்ந்துவிடுகிறது இந்நூல்.

அடுத்து ஒரு அறுபது பக்கங்களில், மதம் என்கிற யானைகளிடமிருந்து சீன மக்களை மீட்பது எப்படி என்கிற போராட்டத்திலேயே பெரும்பகுதி செலவளிக்கப்பட்டதையும், நால்வர் அணியின் தவறான புரட்சியால் ஏற்பட்ட ரணங்களை ஆற்றுப்படுத்துவதிலுமே பெரும்பகுதி காலம் ஆயிரத்து தொல்லாயிரத்து நாற்பத்தொன்பதுக்குப் பிறகு ஓடியிருக்கிறது என்கிறதைக் கடக்கிறபோது கனந்த இதயம், அதிலிருந்து குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றப்பட்டது என்கிற பகுதியை கடக்கிடபோது கனந்த இதயம் மகிழ்ந்தது.

ஆம், 52 விழுக்காட்டுக்குமேல் மதத்தை நம்பாதவர்கள் இன்று சீனத்தில் இருக்கிறார்கள் என்றால், அதென்ன அவ்வளவு சாதாரண விடயமா? சரித்திர சாதனை அல்லவா? நல்லவேளையாக அங்கு இங்கு இருப்பதைப்போன்ற ‘சாதி’ சனியன்கள் தோன்றவில்லை. அது இருந்திருந்தால்... என்னவாகி இருக்கும் சீனம் என நினைத்துப் பார்க்கிறது மனசு..! ஆதிபூர்வீக தத்துவங்கள் என்ன சொல்கிறதென பார்ப்போமா?

கன்பியூசியம்: சீன மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளின்மீது அதன் கோட்பாடு அமைந்திருந்ததனால், மக்கள் அதை விரும்பினார்கள் (56).

மென்சியம்: கன்பியூசியம் கட்டுமானத்தில் இரக்கம், அவமானம், மரியாதை, ஒப்புதல் அல்லது மறுப்பு இவை நான்கும் அடிப்படையாக கொண்டு கட்டப்படுவதாகும். (62).

தாவோயிசம்: கன்பியூசியத்திற்கு முன்பே இது பிறந்திருந்தாலும், கன்பியூசியத்திடமிருந்த மூதாதையர்களின் வழிப்பாட்டு முறைகளுக்கு மாறாக மாற்று தத்துவங்களை இது போதித்தது. (67).

தாவோயிசம் பற்றி நூலாசிரியர் கூறுகிறார்... “கன்பியூசியம் மனித இயற்கையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தது. தாவோயிசம் இதற்கு நேர்மாறாக செயல்பட்டு, இதன் கோட்பாடுகள் மத விஷயமாக உருப்பெற்று, பிற்காலத்தில் மதமாகவே மாறியது” (71).

மோஹிசம்: மேற்காணும் இசங்களுக்கு சவால்விடும் இசமாக இது இருந்து உள்ளது. நூலாசிரியர் பதிவு செய்கிறார்... “ஒரு மனிதன் பட்டினியாக இருந்தால், அவனுக்கு சோறு போடு; அவன் குளிரில் அவஸ்தைப்பட்டால் போர்வை கொடு; நோயால் பாதிக்கப்பட்டால், சிகிச்சை செய்; செத்துப்போனால் குழிதோண்டி புதைத்துவிடு”.

சட்டவாதம்: கன்பியூசியம், மென்சியம், தாவோசியம் போன்ற தத்துவங்கள் மக்கள் தங்கள் ஆட்சியாளரின் நல்லொழுக்கத்தை அங்கீகரிப்பதன் மூலமாக சமூக நல்லிணக்கத்தை உறுதிபடுத்த முடியும் என்று நம்பினார்கள். ஆனால் சட்டவாதம்... இது சாத்தியமில்லை என்றது. வலுவான அரசு கட்டுப்பாடும், அதிகாரத்திற்கு முழுமையான கீழ்படிதலும் மூலமாகத்தான் நாடு வளரும் என்றது (80).

சீனத்தை பௌத்தம், கிறித்துவம், இஸ்லாம் எல்லாம் எப்படி உட்கொண்டன என்பதை நான்கு அத்தியாயங்களில் விரிவாக பேசுகிறார். கடைசி எட்டு அத்தியாயங்களில் புதிய ஜனநாயக புரட்சியால் நிகழ்ந்த பிரமிக்கத்தக்க மாற்றங்களை, அல்லது வளர்ச்சிகளை விளக்குகிறார். நால்வர் அணியால், கலாச்சாரப் புரட்சியால் நேர்ந்த கேடுகளைக் கடந்து, சீனத்தை வளர்ச்சி மேடுகளாக்கி, சோசலிச சீனமாக சாதித்ததை நூலாசிரியர் பதிவிடுகிறார்... “முதியவர்களும், இளைஞர்களும் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கணிச்சமாக குறைந்து இருக்கிறது. அது 2012ல் 53 விழுக்காடாக இருந்தது. 2018ல் 45 விழுக்காடாக விழுந்தது. 2021ல் 35 விழுக்காடாக வீழ்ந்தது. இளைஞர்கள் மத்தியில் இது மிகமிக குறைவாக இருக்கிறது” (152).

பண்டை கால வரலாறுகளை ஆய்வதற்கு பொறுமை தேவை. எந்தளவுக்கு வேண்டுமென்றால், இந்நூலாசிரியர் ஏ.பாக்கியம் அளவிற்கு வேண்டும் என்பேன். காரணம்... சீனம் மற்றும் திபெத் தொடர்பாக தொடர்ந்து வலைதளங்களில் எழுதிவரும் தொடர்களைக்கூட முழுமையாக படிப்பதற்கு சலிப்பு தட்டியிருக்கிறது எனக்கு. ஆனால், சலிப்பு என்றால், அது எங்கே விற்கிறது என்கிற அளவிற்கு இந்நூல் படிப்போரைத் தட்டியெழுப்புகிறது. பண்டைய வரலாறுகளை எழுதுகிறபோது, தரவுகள் மிகமுக்கியம். தரவுகளை மூட்டைகளாக அடுக்கினால், வாசிப்பு அறுந்துவிடும். அத்தகைய ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்பதை உணர்ந்த நூலாசிரியர் அவற்றை அளவோடு படையலிட்டுள்ளார். பாராட்டுக்கள்.

சீன சோசலிசத்தில் மதங்களும், வழிபாடுகளும் என்று நூலின் பெயர் இருந்தாலும், சீன தேசத்தில் மதங்களும், வழிபாடுகளும் என்பதுதான் இந்நூலை ஆக்கிரமித்துள்ளது.  அது அவசியமும்கூட.

நூல் வடிவமைப்பு சிறப்பாக வந்துள்ளது. காற்றின் தீரா பக்கங்களைத் தந்த தூவல் கிரியேஷன்ஸ் மெச்சத்தக்கதே. அட்டைப்படம் அமைப்பு அருமை. தமிழ்கூறும் நல்லுலகுக்கு மேலும் ஒரு அரிய கொடை இந்நூல். மாவோ நெடும்பயணம் படித்திருக்கிறேன். சீனப்பெரும் சுவர் படத்தில் பார்த்திருக்கிறேன். சீனர்களின் நெடும் வாழ்க்கையை கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. அந்த குறையை இந்நூல் போக்கிவிட்டது.

ஐயாயிரமாண்டு பழமை வாய்ந்த சீனம் இன்று எப்படி உலகையே உற்றுப் பார்க்க வைக்கிறது? இத்தகைய பழமையான நாகரீகத்தில் வாழ்ந்த மக்கள் எப்படி சோசலிச பாதையை தேர்ந்தெடுத்தனர் என்பதை இவ்விதமாக நூலாசிரியர் பார்க்கிறார் போல... “சீன நாகரீகம் பெரும் புராணங்கள், இதிகாசங்கள் அடிப்படையிலான வழிப்பாடு, உயிரினங்கள் உள்பட அனைத்தையும் ஆக்கியதும், இயக்குவதும் முழு முதல் கடவுள் என்ற கோட்பாடுகளுக்கு உட்பட்டோ சீனாவில் வழிப்பாட்டு முறைகள் இல்லை”.

“ஒரே நேரத்தில் உண்மையான துன்பத்தின் வெளிப்பாடாகவும், உண்மையான துன்பத்திற்கு எதிரானப் போராட்டமாகவும் மதம் இருக்கிறது” என்கிற காரல்மார்க்ஸ் வார்த்தைகளில் துவங்கி, “எங்கள் கடவுள் சீன தேசத்தின் வெகு மக்களேத் தவிர வேறு யாரும் இல்லை” என்கிற மாவோ வார்த்தைகளோடு நிறைவடைகிறது.

நிறைவடைவது நூல் மட்டுமல்ல, இந்நூலை நுகரும் வாசிப்போரின் மனமும்தான். ஆம், நுகர்ந்து பாருங்கள் தெரியும். இந்நூல் சோசலிச விரும்பிகளுக்கு மட்டுமல்ல, இந்திய தேசத்தில் மக்கள் ஒற்றுமையை பேணிட விழைவோர், நவ பாசிசத்தை வேரறுக்க விரும்புவோர் யாவருக்கும் ஓர் கையேடு. ஆம், இந்திய நவ பாசிச சக்திகளின் வேர்களில் வென்னீரிட்டு வென்றிட இந்நூல் உரமிடுகிறது என்றால் மிகையல்ல!   

-பி.தங்கவேலு, 30.01.2026.

நூல் கிடைக்கும் இடம்

சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும்

ஆசிரியர். அ.பாக்கியம்

விலை 250.

தூவல்கிரியேஷன்ஸ் தமிழ்மார்க்ஸ் பவுண்டேஷன்

Gpay 94863 44333

சிந்தன் புக்ஸ்

327 /1 திவான் சாஹிப் கார்டன்

டிடிகே சாலை, ராயப்பேட்டை

சென்னை 600 014

செல் பேசி: 9445123164

வடசென்னை வாசி புத்தக நிலையம்

எண்:9, G.R. சாலை

பழைய வண்ணாரப்பேட்டை

சென்னை-21

செல் பேசி: 8508698507

 

 

வியாழன், ஜனவரி 29, 2026

சீனப் பொருளாதாரத்தின் புதிய தர்க்கம்

 


Xu Feihong

இந்தியாவுக்கான சீனத் தூதர்

இது சீனா-இந்தியா ஒத்துழைப்புக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிறது.

வெளியிடப்பட்டது - ஜனவரி 29, 2026 01:04 am IST

'சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி போன்ற தளங்களைப் பயன்படுத்தி, சீன சந்தைக்கு அதிக பிரீமியம் இந்திய தயாரிப்புகளைக் கொண்டு வரவும், வர்த்தக பற்றாக்குறையை கூட்டுறவு உபரிகளாக மாற்றவும், அதிகமான இந்திய நிறுவனங்களை நாங்கள் வரவேற்கிறோம்.'

'சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி போன்ற தளங்களைப் பயன்படுத்தி சீன சந்தைக்கு அதிக பிரீமியம் இந்திய தயாரிப்புகளைக் கொண்டு வரவும், வர்த்தக பற்றாக்குறையை கூட்டுறவு உபரிகளாக மாற்றவும் அதிக இந்திய நிறுவனங்களை நாங்கள் வரவேற்கிறோம்.' | புகைப்பட உரிமை: ராய்ட்டர்ஸ்

அஉலகப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கு கடுமையான அடியைச் சந்தித்த நிலையில், சீனப் பொருளாதாரம் என்ற மாபெரும் கப்பல் மீண்டும் அதன் வலுவான மீள்தன்மையை நிரூபிக்கிறது, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025 ஆம் ஆண்டில் 140 டிரில்லியன் யுவானை (தோராயமாக $20 டிரில்லியன்) தாண்டியுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 5% அதிகரிப்பைக் குறிக்கிறது. உலகப் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்களிப்பு சுமார் 30% ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கடின உழைப்பால் பெற்ற சாதனை குறிப்பிடத்தக்க உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய நண்பர்கள் கவலைப்படும் பல குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன காரணம்?

2025 ஆம் ஆண்டில், சீனாவின் பொருளாதாரம் நுகர்வு, ஏற்றுமதி மற்றும் முதலீட்டால் உந்தப்பட்டு முன்னேறியது, ஆனால் அதன் உள் அமைப்பு ஒரு ஆழமான மற்றும் நேர்மறையான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.

 

சீனாவின் வளர்ச்சிக்கான முதன்மை இயந்திரம் உள்நாட்டு தேவை. 2025 ஆம் ஆண்டில், இறுதி நுகர்வு செலவு பொருளாதார வளர்ச்சிக்கு 52% பங்களித்தது. சீன பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உலக சராசரியை விட கணிசமாகக் குறைவாக இருப்பதால் சீனாவில் "போதுமான நுகர்வு இல்லை" என்று சிலர் முடிவு செய்யலாம். உண்மையில், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடல் நுகர்வு தரநிலைகளால் அளவிடப்படும் சீனா, மொத்த அடிப்படை நுகர்வு அடிப்படையில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது. இவற்றில், ஒரு நபருக்கு சொந்தமான சராசரி மொபைல் போன்களின் எண்ணிக்கை 1.28 ஆகும், இது உலகின் முன்னணி நிலைகளில் ஒன்றாகும். சராசரி தினசரி புரத உட்கொள்ளல் 124.6 கிராம் ஆகும், இது அமெரிக்கா மற்றும் ஜப்பானை விட அதிகமாகும். சராசரி ஆண்டு காய்கறி நுகர்வு 109.8 கிலோகிராம் ஆகும், இது உலகிலேயே மிக அதிகம்.

சீனாவின் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதிகள் வலுவான மீள்தன்மையை வெளிப்படுத்தின, பொருளாதார வளர்ச்சிக்கு 32.7% பங்களித்து ஒரு முக்கிய ஊக்கியாக மாறியது. சாதகமற்ற சர்வதேச வர்த்தக சூழல் இருந்தபோதிலும், 'சீனாவில் தயாரிக்கப்பட்டது', குறிப்பாக உயர் தொழில்நுட்ப பொருட்கள், அதன் முழுமையான தொழில்துறை சங்கிலி மற்றும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட புதுமை திறன்கள் காரணமாக பரவலாக பிரபலமடைந்தன, உயர் தொழில்நுட்ப தயாரிப்பு ஏற்றுமதிகள் ஆண்டு முழுவதும் 13.2% வரை வளர்ந்தன. ஆசியான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற முக்கிய சந்தைகளுக்கான ஏற்றுமதிகள் நிலையான வளர்ச்சியைப் பராமரித்தன, மற்ற பிராந்தியங்களில் சந்தை ஏற்ற இறக்கங்களை திறம்பட ஈடுசெய்தன.

இதற்கு நேர்மாறாக, மொத்த மூலதன உருவாக்கம் வளர்ச்சிக்கு 15.3% பங்களித்தது, இது சீனப் பொருளாதாரம் வளர்ச்சி இயந்திரங்களின் கடினமான ஆனால் அவசியமான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது: முதலீடு மற்றும் ஏற்றுமதிகளை நம்பியிருப்பதில் இருந்து உள்நாட்டு நுகர்வு முன்னிலை வகிக்கும் ஒரு சிறந்த மாதிரியாக மாறுதல், அதே நேரத்தில் ஏற்றுமதி மற்றும் புதுமை உத்வேகத்தை சேர்க்கிறது. இந்த மாற்றத்தின் மத்தியில், AI, குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் மூளை-கணினி இடைமுகங்கள் போன்ற அதிநவீன துறைகளில் முன்னேற்றங்கள் தொடர்ந்து அடையப்பட்டுள்ளன. சர்வர்கள் மற்றும் தொழில்துறை ரோபோக்கள் உட்பட உயர்நிலை உற்பத்தியின் வெளியீடு விரைவான வளர்ச்சியைப் பராமரித்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மற்றும் சுத்தமான ஆற்றல் போன்ற பசுமைத் தொழில்கள் செழித்துள்ளன. இந்த வளர்ந்து வரும் இயக்கிகள் சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலப் போக்கை தெளிவாக கோடிட்டுக் காட்டுகின்றன.

ஏன் ஏற்றுமதி உற்பத்தி திறன்?

சீனா "அதிகப்படியான திறனை" ஏற்றுமதி செய்யவில்லை, மாறாக வளரும் நாடுகளால் பரவலாக வரவேற்கப்படும் உயர்தர உற்பத்தி திறன் மற்றும் மேம்பட்ட தீர்வுகளை ஏற்றுமதி செய்கிறது. விநியோகப் பக்கத்திலிருந்து, சீனாவில் "அதிகப்படியான திறன்" இல்லை. 2025 ஆம் ஆண்டில், சீனாவின் நியமிக்கப்பட்ட அளவிற்கு மேல் உள்ள தொழில்துறையின் திறன் பயன்பாட்டு விகிதம் 74.4% ஆக இருந்தது, இது அனைத்து துறைகளிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திறன் பயன்பாட்டு விகிதத்திற்கு சமம். சீன தயாரிப்புகளின் உலகளாவிய போட்டித்தன்மை, மானியங்கள் அல்லது குப்பைகளை விட நீண்ட கால, அதிக தீவிரம் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீடு, வலுவான உள்நாட்டு போட்டி மற்றும் மிகவும் விரிவான தொழில்துறை அமைப்பிலிருந்து உருவாகிறது.

தேவைப் பக்கத்திலிருந்து, சீனாவின் உற்பத்தித் திறனின் செழிப்பான வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள அடிப்படை உந்து சக்தி உலக சந்தையின் உண்மையான தேவையாகும். பல வளரும் நாடுகள் தங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளன, ஆற்றல் மாற்றத்தை அடைந்துள்ளன மற்றும் உயர்தர சீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொழில்மயமாக்கலில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் சுட்டிக்காட்டியபடி, சீன உற்பத்தியை "அதிகப்படியான திறன்" என்று மேற்கத்திய முத்திரை குத்துவது "பொறாமையால்" ஏற்படுகிறது.

சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைத்தல்

சீனாவின் சுங்கத்துறை பொது நிர்வாகத்தின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் சீனா-இந்தியா வர்த்தகம் வரலாற்று உச்சமாக 155.6 பில்லியன் டாலர்களை எட்டியது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்கள் இந்தியாவிற்கு மிகவும் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் கூறுகள் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தவை. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பொருளாதார நிரப்புத்தன்மையையும் ஒத்துழைப்புக்கான பெரும் ஆற்றலையும் முழுமையாக நிரூபிக்கிறது.

இதற்கிடையில், சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதிகள் நேர்மறையான வேகத்தைக் காட்டி, 2025 ஆம் ஆண்டில் $19.7 பில்லியனை எட்டியுள்ளன, மேலும் ஆண்டுக்கு ஆண்டு 9.7% அதிகரிப்பைக் குறிக்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், 2025 ஆம் ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் வளர்ச்சி விகிதங்கள் குறிப்பாக வலுவாக இருந்தன, முறையே 90% மற்றும் 67% ஐ எட்டின. சீனா ஒருபோதும் வேண்டுமென்றே வர்த்தக உபரியைப் பின்பற்றவில்லை, மேலும் உலகின் தொழிற்சாலையாக மட்டுமல்லாமல் உலகின் சந்தையாகவும் இருக்க விரும்புகிறது. சர்வதேச தரத்தின்படி சீனாவின் கட்டண அளவு 7.3% இல் குறைவாகவே உள்ளது. வெளிநாட்டு முதலீட்டு அணுகலுக்கான எதிர்மறை பட்டியல் தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளது, மேலும் சீனாவின் விசா இல்லாத கொள்கை விரிவடைந்து வருகிறது. குறிப்பாக, மத்திய பொருளாதார பணி மாநாடு 2026 ஆம் ஆண்டில் பொருளாதாரப் பணிகளுக்கான முதன்மை முன்னுரிமையாக "உள்நாட்டு தேவை விரிவடைவதை" அடையாளம் கண்டுள்ளது. நடுத்தர வருமானக் குழுவில் 400 மில்லியனுக்கும் அதிகமானோர் உட்பட, 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன், சீனா உயர்தர இந்திய தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது.

சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி போன்ற தளங்களைப் பயன்படுத்தி சீன சந்தைக்கு அதிக பிரீமியம் இந்திய தயாரிப்புகளைக் கொண்டு வரவும், வர்த்தக பற்றாக்குறையை கூட்டுறவு உபரிகளாக மாற்றவும், அதிக இந்திய நிறுவனங்கள் வருவதை நாங்கள் வரவேற்கிறோம். ஒருவருக்கொருவர் நோக்கி நகர்வதன் மூலம், வளர்ச்சியின் ஈவுத்தொகையைப் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் ஆசியாவிற்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை கூட்டாக உருவாக்கலாம்.

இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹாங்

https://www.thehindu.com/opinion/op-ed/the-new-logic-of-the-chinese-economy/article70560664.ece

கூகிள் மூலம் மொழியாக்கம்

 

57 சீனாவின் வறுமை ஒழிப்பு உலகிற்கு வழங்கிய ஞானம்

 

-


அ.பாக்கியம்

 

2021 ஆம் ஆண்டு, சீனா வறுமைக்கு எதிரான போராட்டத்தில் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது என்று சீன ஜனாதிபதி அறிவித்தார். வறுமைக்கு எதிரான பணிகளில் ஈடுபட்ட அனைவருக்குமான பாராட்டு நிகழ்ச்சியில் கீழ்கண்டவாறு தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நெருங்கி வரும் இந்த முக்கியமான ஆண்டில் முழு கட்சி மற்றும் முழு தேசத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் சீனா வறுமைக்கு எதிரான போராட்டத்தில் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது. தற்போதைய காலத்தில் வறுமை கோட்டிற்கு கீழே இருந்த 832 மாவட்டங்களுக்கு உட்பட்டு 1,28,000 கிராமங்களில் இருந்த 98.99 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். இனச் சிறுபான்மை தன்னாட்சி பிராந்திய வறுமை ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்பட்டுள்ளது. முழுமையான வறுமையை ஒழிக்கும் கடினமான பணி முடிக்கப்பட்டுள்ளது. இது மற்றொரு அற்புதமான சாதனையை குறிக்கிறது”( ஜி ஷின் பிங் 2021)

அறிவியல் பூர்வமான திட்டமிடலாலும், அர்ப்பணிப்பு மிக்க உழைப்பாலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன அரசாங்கமும் மக்களை மையப்படுத்திய வளர்ச்சி தத்துவத்தின் அடிப்படைகளை ஏற்றுக் கொண்டு இருந்ததால் இவற்றை சாதிக்க முடிந்தது. சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிச பயணத்தில் இந்த சாதனை குறிப்பிடத்தக்க அளவிற்கு பங்கு வைக்கின்றது.

சீனாவின் வறுமை குறைப்புக்கான நடவடிக்கைகள் உலகம் முழுவதும் வறுமை குறைப்பதற்கான மிகச் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கி உள்ளது. வறுமைக்கு எதிரான தனது வெற்றியின் மூலம் உலகிற்கான சிறந்த ஞானத்தையும் தீர்வையும் முன் வைத்துள்ளார்கள். இவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது தொலைதூரத்தில் உள்ள எளிதில் அணுகமுடியாத பிரதேசங்களில் வாழ்ந்த மக்களிடம் வறுமையை ஒழித்தது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனையாகும்.

அறிவியல் பூர்வமான திட்டமிடல் 

சீன நாடு முழுவதும் வறுமையை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து திட்டமிடப்பட்டது. வறுமை கோட்டிற்கு கீழே வாழக்கூடியவர்கள் யார் என்பதற்கான அளவுகோலை தீர்மானிப்பதில் அறிவியல் பூர்வ நடவடிக்கை மேற்கொண்டார்கள். இதற்கான வருமான வரம்பை உயர்த்தி கொண்டே வருவதன் மூலம் வறுமை கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி அவர்களை அடுத்தடுத்த வசதிகளை நோக்கி நகர்த்திச் சென்றார்கள். இனச் சிறுபான்மையுருக்கான தனியான திட்டங்களும் நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டது. பொருளாதாரம் வளர்ச்சியின் ஏற்ற இறக்கம் மீண்டும் வறுமைக்கோட்டில் தள்ளி விடாமல் இருப்பதற்கான திட்டமிடலும் இதற்குள் கொண்டு வந்தார்கள். இதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை நிறுவனங்களை உருவாக்கினார்கள். இவ்வாறு ஒவ்வொன்றும் துல்லியமாக நுண்ணோக்க அடிப்படையில் அவ்வப்போது ஆய்வுகள் செய்து முடிவுகள் மாற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.

1984 ஆம் ஆண்டு வறுமை கோட்டிற்கு கீழே வாழக்கூடிய மக்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டது. விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு வறுமை கோடு தொடர்பான வருமான வரம்பு உருவாக்கப்பட்டது. இந்த அளவுகோலின் படி 200 யுவான் (28 டாலர்) கீழே வருமானம் உள்ளவர்கள் வறுமையில் வாழ்வதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி 1985 ஆம் ஆண்டு 12.5 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே இருப்பதாக முடிவு எடுக்கப்பட்டு திட்டம் தீட்டப்பட்டது. இந்தத் திட்டத்தின் படி 1993 ஆம் ஆண்டு பரிசீமைக்கு உட்படுத்திய பொழுது 7.5 கோடி மக்கள் வறுமை அளவீடுக்கு கீழே இருந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் சரியாக 60 லட்சம் மக்கள்(6.25 மில்லியன்) வறுமையில் இருந்து மீட்கப்பட்டார்கள்.

மீண்டும் 1994 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பதற்கான திட்டத்திற்கு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 592 மாவட்டங்கள் வறுமையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்று அடையாளம் காணப்பட்டு இந்த மாவட்டங்களுக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் அறிவியல் தொழில்நுட்ப முறைகளையும் அமுலாக்கினர். அரசு சாரா அமைப்புகளை வறுமை ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்கான முடிவெடுக்கப்பட்டு அமலானது. இந்த தொடர்ச்சியான நடவடிக்கையின் மூலமாக கிராமப்புற பகுதிகளில் உணவு உடை கிடைக்காத மக்களுடைய எண்ணிக்கை மூன்று கோடி (32.09 மில்லியன்) என்ற அளவில் குறைக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு மற்றும் சீன அமைச்சரவையும் 2000 ஆண்டு வரை நடைபெற்ற வறுமை ஒழிப்பு திட்டங்களை ஆய்வு செய்து 2001-2010 வரையிலான திட்டத்தை உருவாக்கினார்கள். இந்தத் திட்டத்தின்படி வறுமை கோட்டிற்கு கீழே இருப்பவர்களுடைய வருமானம் 200 யுவான்களிலிருந்து 895 யிவான்களாக உயர்த்தப்பட்டது. வருடாந்திர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 2008 ஆம் ஆண்டு 895 யுவான் வருமானத்திலிருந்து 1196 யுவானாக தீர்மானிக்கப்பட்டது. மீண்டும் 2010 ஆம் ஆண்டு 1196 யுவானிலிருந்து 1274 யுவான்களாக உயர்த்தப்பட்டது.

இதன் காரணமாக வறுமை ஒழிப்பு திட்டத்தில் பயன்பெறும் மக்களின் எண்ணிக்கை கூடுதலானது. 2008 ஆம் ஆண்டு தரவுகளின் படி கிராமப்புறம் ஏழை மக்களின் எண்ணிக்கை 9.5 (94.22 மில்லியன்) கோடியிலிருந்து 2.6 (26.88 மில்லியன்) கோடியாக குறைந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் கணிசமான ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன

மாறிய அளவுகோலும் அடிப்படை மாற்றமும்

2011 ஆம் ஆண்டில் கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முழுமையாக ஆய்வுசெய்து 2011-2020 ஆம் ஆண்டுகளுக்கான 10 ஆண்டு வறுமை ஒழிப்பு திட்டத்திற்கான வரைவு அறிக்கையை தீர்மானித்து வெளியிட்டார்கள். இதன் அடிப்படையில் இரண்டு முக்கிய முன்னேற்றங்களை உத்திகளை மாற்றினார்கள்.

முதலாவதாக வறுமை கோட்டிற்கு கீழே இருக்கக்கூடிய மக்களுக்கான வருமானத் தொகை 2010 ஆம் ஆண்டு இருந்த 1274 யுவான்கள் என்பதை 2300 யுவான்களாக உயர்த்தப் பட்டது. இந்த உயர்வு அசாதாரணமான முடிவாகும். அதாவது வறுமை கோட்டிற்கு கீழே வாழக்கூடிய மக்களின் வருமான வரம்பு 80.5 சதவிகிதம் என்ற அளவுக்கு உயர்ந்தது. இதனால் மீண்டும் வறுமை கோட்டிற்கு கீழே இருந்த சுமார் 2 கோடி மக்களை 10 கோடி மக்களாக உயர்த்தியது.

இரண்டாவதாக, இதுவரை வறுமை ஒழிப்பு என்பது உணவு, உடை என்பதை அடிப்படை அளவுகோலாகவும், இதர அடிப்படை தேவைகளை இரண்டாம் பட்சமாகவும் வைத்திருந்தார்கள். இந்தத் திட்டத்தின்படி வறுமை ஒழிப்பு என்றால், உணவு, உடை, கட்டாய கல்வி, அடிப்படை மருத்துவ வசதி, பாதுகாப்பான வீட்டு வசதி ஆகியவற்றை நிறைவேற்றினால்தான் அந்த மக்கள் வறுமைக்கோட்டில் இருந்து மீட்டெடுக்கப்பட்டவர்களாக கணக்கிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அமலாக்கப்பட்டது. இந்தத் திட்டம் 2014 ஆம் ஆண்டு கிராமப்புற வறுமை ஒழிப்பதற்கான முன்மாதிரியான திட்டமாக மாறியது.

2015 ஆம் ஆண்டு தீவிர வறுமை ஒழிப்பு என்ற திட்டத்தை மேலும் ஆழப்படுத்தி அறிவித்தார்கள். ஏற்கனவே பெருமளவு குறைக்கப்பட்ட வறுமையை முற்றிலும் அகற்றுவதற்கான திட்டமிடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அக்டோபர் 16, 2016 ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் 2020 ஆம் ஆண்டுக்குள் சீனாவில் எஞ்சி இருக்கும் வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று அறிவித்தார். இது சீனாவின் பிரதான பகுதிகளில் வறுமை ஒழிப்பை நடத்தியதை விட மாறுபட்ட உத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். குறிப்பாக மேற்கு சீனாவில் இனச் சிறுபான்மை பகுதிகளில் வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அவற்றை இலக்காக வைத்து இலக்கு தீர்மானிக்கப்பட்ட வறுமை ஒழிப்பு என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை 11 வது ஐந்தாண்டு திட்டத்துடன் (2016-2020) இணைத்து அத்திட்டத்தின் முதன்மையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலாக மாற்றினார்.

தொலைதூர கடுமையான தட்பவெட்ப நிலைகளில் வாழும் இனச் சிறுபான்மை மக்களை மையமாகக் கொண்ட திட்டமாக இது மாற்றப்பட்டது. காரணம், சீனாவில் எஞ்சி இருக்கும் வறுமைசார் மக்களின் அதிகமான பேர் இங்கு இருந்தார்கள் என்பதால் அவற்றை இலக்காகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டது. 2015 முதல் 2017 ஆம் ஆண்டுகள் வரை வறுமை ஒழிப்பிற்கான ஆய்வுகளை மேற்கொண்டு 2018 முதல் 2020 ஆம் ஆண்டுகளுக்கான மூன்றாண்டு வறுமை ஒழிப்பு திட்டம் தீவிரமாக முடுக்கி விடப்பட்டது. மேற்கண்ட இலக்கு சார்ந்த வறுமை ஒழிப்பு பணி பெரும் பயனை கொடுத்தது. 2019 ஆம் ஆண்டில் ஆய்வுக்கு உட்படுத்திய பொழுது கிராமப்புற ஏழை மக்கள் தொகை ஒட்டுமொத்த சீனாவிலும் 1.1 கோடியாக குறைந்தது. அதாவது வறுமையின் சதவீதம் 0.6 என்ற அளவில் வீழ்ந்தது. இந்த மக்களும் அடுத்து இலக்கு தீர்மானிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு வறுமையில் இருந்து மீட்கப்பட்டார்கள். சீன நாட்டின் இந்தத் திட்டத்தின் வெற்றியை ஐக்கிய நாடுகள் சபை மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதுடன் பாராட்டவும் செய்தார்கள். 

சீன பண்புகளுடன் கூடிய சோசலிச வளர்ச்சியில் இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ளாத முதலாளித்துவ சிந்தனையாளர்களும் முதலாளித்துவமும் சீனாவில் வறுமை ஒழிக்கப்படவே இல்லை என்ற பொய் மூட்டைகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மறுபுறத்தில் வறுமை ஒழிக்கப்பட்டு விட்டது இனி அனைத்தும் நல்லதாகவே நடந்து தானாகவே சோசலிசம் வந்துவிடும் என்று நினைக்கக்கூடிய கற்பனாவாத கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சி நிலைமைகளை மாற்றுவதற்கான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதற்கான சில முயற்சிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

1980 ஆம் ஆண்டுகளில் மத்தியில் இருந்து சீனாவில் வறுமை படிப்படியாக குறைய ஆரம்பித்தது என்று ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது. இவ்வாறு குறைந்ததற்கு காரணம் அந்த நேரத்தில் முன் முயற்சி எடுக்கப்பட்ட விரைவான பொருளாதார வளர்ச்சி ஆகும். அதே நேரத்தில் மற்றொரு வளர்ச்சி போக்கு உருவானது. மிகத் தீவிரமான பொருளாதாரம் வளர்ச்சி ஏற்பட்ட பொழுது குறிப்பாக சீனாவின் கிழக்கு பிராந்தியங்களில் வளர்ச்சி அதிகமாக நடந்தது. இந்த வளர்ச்சி முறைகள் பிராந்தியங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தியது. நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான வருமான இடைவெளியை அதிகமாகியது. இதனால் வறுமையில் வாடிய மக்கள் வறுமையில் இருந்து மீள்வதற்கான நிலையில் ஒரு மந்தம் ஏற்பட்டது. அது மட்டுமல்ல எதிர்கால பொருளாதார வளர்ச்சித் திறனையும் இந்த ஏற்றத்தாழ்வான வளர்ச்சி போக்குகள் கடுமையாக பாதிக்கும் என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசாங்கம் உணர்ந்தது. உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி ஏற்றத்தாழ்வை உருவாக்கியது இந்த வளர்ச்சியில் ஏற்படுகிற பொழுது ஏற்றத்தாழ்வு உருவாவது தவிர்க்க முடியாத நிகழ்வு என்று முதலாளித்துவ நாடுகள் தங்களது சித்தாந்தமாக மாற்றிக் கொண்டார்கள். இதுதான் இந்தியா உட்பட பல நாடுகளில் போதிக்கப்படக்கூடிய விஷயம்.

இந்த ஏற்றத்தாழ்வுகளில் ஏழை மக்கள் கசிந்து வரும் பொருளாதார பலன்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று போதிக்கிறார்கள். இந்த நிலையை தொடரசெய்வதற்கு பல நாடுகளில் பொருளாதார காரணங்களும் மற்ற வேறு பல காரணங்கள்களும் இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வை நீடிக்கவைப்பதற்கு மதம், பிரதேசம், இனம் போன்ற பலவற்றையும் காரணிகளாக மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் சீனாவில் இந்த ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை கணக்கில் எடுத்து அதை மாற்றுவதற்காக சீன சமூகத்தை அனைத்து வகையிலும் ஒரு மிதமான பலமான சமுதாயமாக உருவாக்க வேண்டும் என்ற முயற்சிகளை மேற்கொண்டார்கள். இதற்காக நிறுவனத் திறமைகளை பெரும் அளவு உயர்த்தினார்கள். இதன் விளைவு சர்வதேச அளவில் யாரும் சாதிக்க முடியாத அளவிற்கு, மற்றவர்கள் நம்ப முடியாத அளவிற்கு இந்த வறுமை ஒழிப்பு முயற்சி நடந்தேறியது. பொருளாதார செயல்முறைகளில் இந்த போக்குகள் மிகவும் ஒரு சவாலான நிலைமையாகும். இவற்றை முதல் படியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன அரசாங்கமும் வெற்றி கொண்டுள்ளது.

சவால்களும் எதிர்கொள்ளும் முறைகளும்

வறுமையை ஒழித்த பிறகு எழுகின்ற சவால்களையும் ஆய்வு செய்து வறுமையை ஒழிப்பதற்கான வழிகளை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. முடிந்தது வறுமை ஒழிப்பு என்று திட்டங்களை மூடிவிடவில்லை. இதற்கான ஆய்வுகளை மேற்கொண் டார்கள்.

மிகவும் ஏழ்மையான பகுதிகளில் வறுமை ஒழிப்பு கடினமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீண்டும் வறுமையில் விழுவதை தடுக்கும் பணிகளை வலுப்படுத்தவில்லை என்றால் மீண்டும் வறுமை நிலை உருவாகும். திட்டங்களுக்கும் செயல்படுத்தியவைகளுக்கும் இடைவெளிகள் முழுமை அடையவில்லை. இன்னும் இடைவெளி இருக்கிறது என்று கண்டு கொண்டார்கள். இயற்கை சூழலின் சாதகமற்ற அமைப்புகள் தொடர்ந்து நெருக்கடியை உருவாக்கிக் கொண்டு இருக்கும். வறுமை ஒழித்த பகுதிகளில் சிறு தொழில்கள் அடுத்தடுத்த வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கொண்டிருக்கவில்லை. சில ஏழ்மையான பகுதிகள் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொல்லாத நிலை நீடிக்கிறது. வறுமை ஒழிப்பில் இப்போது குறுகிய கால மற்றும் விரைவான தீர்வுகளை மட்டுமே செய்து முடிக்கப் பட்டுள்ளது. நீண்ட கால நன்மைகள் நிலையான வருமான வளர்ச்சியை முழுமையாக கருத்தில் கொள்வதில் கவன குறைவு உள்ளது. இதனால் நீண்ட கால விளைவுகளை அடைவது கடினமாகும். மனித வளங்களும் மற்றும் மூலதனம் ஆகியவை தொழில்களின் நீண்டகால நிலையான வளர்ச்சி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை.

பொருளாதார உலகமயமாக்களின் பின்னடைவுகள் சர்வதேச நிதி சந்தை நெருக்கடிகள் குறிப்பாக சீன அமெரிக்க பொருளாதார வர்த்தக மோதல்கள் அனைத்தும் உற்பத்தியையும் வணிக நிறுவனங்களையும் பாதிக்கிறது. இதனால் கடுமையான சவால்களை சந்திக்கிற பொழுது வறுமையில் இருந்து மீட்ட பகுதிகள் கவனம் செலுத்துவது குறைந்து விட வாய்ப்பிருக்கிறது. இவற்றை எதிர்கொள்வதற்கு செயல்திறன் மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது. சீனாவில் வறுமையில் இருந்து மீட்கப்பட்ட ஒன்பது கோடியே 80 லட்சம் மக்களில் மீண்டும் 20 லட்சம் பேர் வறுமையில் சிக்கும் அபாயம் இருப்பதாகவும் மேலும் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வின் முடிவுக்கு வந்துள்ளனர். அவற்றை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்கள்.

முதலில் வறுமை ஒழிப்புக்கான திட்டங்களும் கொள்கைகளும் குறிப்பிட்ட இந்த பகுதிகளுக்கு தேவைப்படுகிற காலம் வரை நீட்டிக்க வேண்டும் என்று முடிவு செய்து அமுலாக்கி வருகிறார்கள். மீண்டும் வறுமையில் விழுந்து விடாமல் இருப்பதற்கு உள்ளூர் வளங்களை பயன்படுத்தும் தொழில்களின் விகிதத்தை அதிகரிக்க முயற்சித்து வருகிறார்கள். சில தொழில்களில் அடுத்தடுத்த வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இல்லாதவற்றை அடையாளம் கண்டு மாற்று ஏற்பாடுகளை செய்கிறார்கள். வறுமையில் வாடும் மக்கள் நோயின் காரணமாக மீண்டும் வறுமையால் பாதிக்கப்படாமல் இருக்க மருத்துவ காப்பீடு திட்டத்தை தொழில்துறை தலைமையிலான கொள்கையாக மாற்றி இருக்கிறார்கள். இதன் மூலம் குறுகிய கால நீண்டகால நோயின் காரணமாக வறுமையில் வீழும் அபாயம் தடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வறுமை ஒழிக்கப்பட்ட பிரதேசங்களில் தொழில் மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை நிறுவி இருக்கிறார்கள். இவை இரண்டும் வறுமையில் வாழ்ந்த பகுதிகளில் மக்கள் சுய வளர்ச்சி திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான உதவிகளை செய்து பலனும் கிடைத்திருக்கிறது.

கிராமப்புற தொழில் முறை கூட்டுறவுகளின் கூட்டுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தி உள்ளனர். கால்நடை மற்றும் விவசாய பொருளாதாரத்தை நவீன மயமாக்குவதற்கு போதுமான முயற்சிகள் இல்லை என்பதை அறிந்து அவற்றை துரிதப்படுத்தி உள்ளார்கள். தொழில்துறை சார்ந்த வறுமை ஒழிப்பு என்ற இலக்கை மையமாகக் கொண்டு கிராமப்புற கலாச்சார அமைப்புகளையும், கிராமபுற சுற்றுலா தொழிலையும் மேம்படுத்தி இருக்கிறார்கள். இவை அனைத்துமே வறுமை ஒழிப்பிற்கு பிறகு ஆய்வு செய்து நடத்தக்கூடிய முயற்சிகள் ஆகும். இவை அனைத்தும் அற்புத விஷயங்களாக வெற்றி பெறக் கூடியது அல்ல. சில படிகள் முன்னேறி மேலும் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான அடித்தளத்தை இந்த முயற்சிகள் அமைத்துக் கொடுக்கும். வறுமை ஒழிப்பு காலத்திலும் வறுமை ஒழிப்பை நிறைவேற்றிய பிறகும் அடுத்து எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை ஆய்வு செய்து அதை தீர்ப்பதற்கான பாதையில் சீன சோசலிசம் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பொதுவான பின்னணியில் இருந்துதான் இனச் சிறுபான்மையின் பகுதியில் வறுமை ஒழிப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.பாக்கியம்

 

சனி, ஜனவரி 24, 2026

கிரீன்லாந்துக்கு சீனா அச்சுறுத்தலா?

 

2026 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் சீனா மற்றும் ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை தடுக்க கிரீன்லாந்து கட்டுப்பாட்டை அமெரிக்கா எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் ட்ரம்ப் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார். கிரீன்லாந்தை சுற்றி சீன மற்றும் ரஷ்ய கப்பல்கள் எல்லா இடங்களில் இருப்பதாக பிரச்சாரம் செய்கிறார் உண்மை என்ன? சீனாவால் கிரீன்லாந்துக்கு ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா?

கிரீன்லாந்தில் தற்போது வரை சீனாவின் எந்த அதிகாரப்பூர்வமான நிறுவனங்களும் இல்லை. முதலீட்டு திட்டங்களும் இல்லை. குடியிருப்பு நிறுவனங்களும் இல்லை. கிரீன்லாந்தில் இருக்கின்ற கடல்உணவு நிறுவனங்களில் 30 சீனத் தொழிலாளர் மட்டுமே பணிபுரிகின்றனர். சீனாவிற்கும் கிரீன்லாந்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு வர்த்தகத்தில் மட்டுமே உள்ளது. அதிலும் குறிப்பாக கடல் சார் பொருட்களின் வர்த்தகம் மட்டுமே ஆகும்.

2025 ஆம் ஆண்டில் சீனாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மதிப்பீடு 429 மில்லியன் டாலர் ஆகும். இதில் கிரீன்லாந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்த தொகை 420 மில்லியன் டாலர். குறிப்பாக ஆர்டிக் இறால் , ஹாலிபட், காட், சாதாரண இறால் மற்றும் பிற கடல் உணவுகள் மட்டுமே இதில் அடங்கும். சீனாவில் இருந்து கிரீன்லாந்துக்கு சீனா ஏற்றுமதி செய்தது ஒன்பது மில்லியன் டாலர் மட்டுமே. இவற்றில் தினசரி மக்கள் நுகரும் பொருட்கள்தான்.

கிரீன்லாந்துக்கு வருகை தரும் சீன சுற்றுலா பயணிகளும் அதிகம் இல்லை சீனாவில் இருந்து அங்கு சென்று சேர்வதும் எளிதல்ல. 2024 ஆம் ஆண்டில் சுமார் 3500 சீன சுற்றுப்பயணிகள் மட்டுமே கிரீன்லாந்துக்கு சென்றுள்ளனர்.

கிரீன்லாந்துக்கு அருகில் உள்ள கடல் முழுவதும் சீன கப்பல் இருக்கிறது என்று இது கிரீன்லாந்தை அச்சுறுத்துகிறது என்று அப்பட்டமான பொய்யை அமெரிக்கா பிரச்சாரம் செய்கிறது. ஜனவரி 16 அன்று கிரீன்லாந்தில் உள்ள டென்மார்க் கிரீன்லாந்து கூட்டுப் படையின் மேஜர் ஜெனரல் சோரன் ஆண்டர்சன் கிரீன்லாந்துக்கு அருகில் சீன கப்பலோ, ரஷ்ய கப்பல்களோ எதுவும் இல்லை என்று தெளிவுபட கூறினார். கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு தரவுகளும் கிரீன்லாந்துக்கு அருகில் சீன கப்பல்கள் எதுவும் இல்லை என்பதை வெளிப்படுத்தியது. சீனாவில் இருந்து உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லாரஸ் லோக்கே ராஸ்மோசன் ஊடகங்களுக்கு பலமுறை தெளிவுபடுத்தி விட்டார். டென்மார்க்கின் நாடாளுமன்ற பாதுகாப்பு குழுவின் தலைவர் ராஸ்மஸ் ஜார்லோவ் கிரீன்லாந்திருக்கு எதிரான சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து பெரிய அச்சுறுத்தல் என்ற கூற்று மாயையானது என்று விளக்கியுள்ளார்.

கொள்கை அளவிலும் உண்மையின் அடிப்படையிலும் சீனா கிரிலாந்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. இன்னும் தெளிவாக சொல்வதென்றால் கிரின்லாந்தில் விமான நிலைய விரிவாக்கம், சுரங்க திட்டங்களில் சீன நிறுவனங்களின் பங்கேற்பை டேனிஷ் அரசாங்கம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி முழுமையாக தடுத்து விட்டது. மேலும் எதிர்காலத்தில் சீன முதலீட்டை அனுமதிக்க கூடாது என்பதற்கான முடிவுகளை எடுத்து அமலாக்கி வருகிறார்கள். இந்த உண்மையை மறைத்து அமெரிக்கா அப்பட்டமாக பொய்களை ஊதி வருகிறது.

ஆர்டிக் பிரதேசத்தில் அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மற்றும் மற்றும் ஐநா சாசனங்களை மீறி இயற்கை வளங்களை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. சர்வதேச ஒப்பந்தங்களை அமெரிக்கா மதிக்க வேண்டும், ஆர்டிக் நாடுகளின் இறையாண்மை, அதன் உரிமைகளையும், அதிகார வரம்பையும், பழங்குடி பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்தையும் சீனா என்றென்றைக்கும் மதிக்கும் என்று அந்த நாட்டின் ஆர்டிக் கொள்கையில் தெளிவுபட விளக்கி உள்ளது. அதையே நடைமுறைப்படுத்தி வருகிறது. இவை அனைத்தையும் அப்பட்டமாக மீறி வருவது அமெரிக்கா ஆகும்.

சீனாவின் பார்வையில் ஆர்ட்டிகின் எதிர்காலம் புவிசார் அரசியல் போட்டிக்கான போர்க்களமாக இருக்கக் கூடாது மாறாக காலநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்புக் கான பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது.

சீனா கிரீன்லாந்தை அச்சுறுத்துகிறது என்ற கூற்றுக்கள் பொய் பித்தலாட்டம் ஆகும்.

அ.பாக்கியம்

தகவல் ஆதாரம்.

குளோபல் டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் பெய் சி 22.01.26.

வெள்ளி, ஜனவரி 23, 2026

சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும்



நூல் மதிப்புரை

வறுமையின் நிறமல்ல வளர்ச்சியின் நிறமே சிவப்பு

அன்பான தோழர். அ.பாக்கியம்  அவர்களுக்கு வணக்கம்..

 19.01.26 வெளிவந்த தங்களது-14 வது புத்தகம் சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும் என்ற புத்தகம் படிக்க துவங்கினேன்.. சோர்வின்றி தூக்கம் இன்றி நிறுத்த முடியாமல் -188 பக்கங்கள் முடிந்தது..

புதிய விவரங்கள்..

இது வரை அறியாத தகவல்கள் ஆதாரங்கள் உடன் எளிய தமிழில் பிழைகள் இன்றி மடை திறந்த வெள்ளம் போல் வேகமாக போகிறது..

தூவல் பெருமாள், தவத்திரு. பாலபிரஜாபதி அடிகளார், பத்திரிக்கை யாளர் விஜயசங்கர், சிபிஎம் மாநில செயலாளர் தோழர். பெ. சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் ஆகியோர் அணிந்துரை யும் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது..

சின் வம்சம் ஆட்சியின் நினைவாக சீனா என்ற பெயர் உருவானது..

வறுமை நிறம் சிவப்பு அல்ல அதை மாற்றும் நிறமே சிவப்பு.

வளர்ச்சியின் நிறமே சிவப்பு என்று கூறும்  வகையில் இன்று சீனா முற்றிலும் வறுமை ஒழித்து உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அறிவியல் வளர்ச்சி பெற்று கம்பீரமாக நடந்து வருகிறது...

சீனா சர்வாதிகார நாடு, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சி.. மதம் நம்பிக்கை வழிபாடுகள் மறுக்கும் நாடு என்ற நீண்டகால பேச்சு களுக்கு இந்த புத்தகம் முற்று புள்ளி வைக்கிறது..

சீன மக்கள் அவர்களது மூதாதையர்கள் மற்றும் இயற்கை யை வழி பட்டு வந்தனர்.

மனிதன் பட்டினியாய் இருந்தால் சோறு போடு..

குளிரால் அவதி பட்டால் போர்வை கொடு..

நோயால் பாதிக்கப்பட்டால் மருத்துவம் செய் என்பதே சீனாவின் அடிப்படை..

சீனாவில் மத நம்பிக்கைகள் இருக்கின்றன..

பெளத்தம்

தாவோயிசம்

இஸ்லாம்

கத்தோலிக்

புராட்டஸ்டன்ட்

ஆகிய மதங்கள் அரசு அங்கீகரித்துள்ளது..

மத விசுவாசிகள்

1997 ல் 10கோடி

2018 ல் 20 கோடி..

 

மத கல்வி நிறுவனங்கள்.. 91

பெளத்தம்-41

புராட்டஸ்டன்ட்-21

தாவோயிசம்-10

இஸ்லாம்-10

கத்தோலிக்-9

என செயல் பட்டு வருகிறது..

 

17 லட்சம் இஸ்லாமிய உரைகள்.

160 மில்லியன் பைபிள்.

ஓவ்வொரு ஆண்டும்-10,000 இஸ்லாமியர்கள் மக்காவிற்கு சென்று வருகிறார்கள்..

 

1,44,000 வழி பாட்டு தளங்கள்..

மசூதிகள்-35, 000

பெளத்தம்-33, 500

தாவோயிசம்-9, 000

புரோட்டஸ்டென்ட்-60, 000

கத்தோலிக்-6000

உள்ளது..

 

மத குருமார்கள்

பெளத்தம்-2, 22,000

இஸ்லாம்-57, 000

புராட்டெஸ்டன்ட்-57, 000

தாவோயிசம்-40, 000

கத்தோலிக்-8, 000

என மொத்தம் -3, 80,000 மத குருமார்கள் உள்ளனர்..

 

மத நம்பிக்கை அற்றவர்கள்-52 %

பெளத்தம்-18 %

தாவோயிசம்-3%

புராட்டெஸ்டன்ட்-3.8 கோடி..

இஸ்லாம்-2.5 கோடி

கத்தோலிக்-60 லட்சம்

இந்து மதம் உள்ளிட்ட இதர மத நம்பிக்கை உடையவர்களும் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்..

 

இந்த நிலையில்..

மதம் குறித்து கம்யூனிஸ்ட் மமேதைகள் சொன்ன கருத்துக்கள் வலிமையாக எளிமையாக பதிவு செய்து.. அதன் வழியில் சீனா கம்யூனிஸ்ட் அரசு தற்போது எப்படிசெயல்பட்டு வருகிறது என்று சொன்னது சிறப்பு...

மதம் ஒரு அபின் என்று மார்க்ஸ் சொன்னதை மதவாதிகள் மிகை படுத்தி பிரச்சாரம் செய்தற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் தரப்பட்டுள்ளது...

மத நம்பிக்கை உடைய மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சீன மக்கள் அரசு... சோசலிச அமைப்பு நிறுவபட்டாலும் நமது பொருளாதாரம் , கலாச்சாரத்திலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டாலும் மதம் விரைவில் வாடி விடும் என்று நினைப்பது யதார்த்தத்திற்கு மாறானது என்று முடிவு செய்து கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது..

மத வழிபாட்டு தளங்களை அரசே கட்டி தருகிறது...

மத குருமார்களுக்கு மாத சம்பளம், மருத்துவ காப்பீடுகள் வழங்கி வருகிறது...

நம்பிக்கை உடைய மக்கள் எந்த தடை இன்றி வாழ்ந்து வருகின்றனர்...

ஆனால் கட்சி உறுப்பினர்கள் மத கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை..

மத வழிபாட்டு தளங்களுக்கு கண்காணிக்கும் பொறுப்பு கட்சி உறுப்பினர்களுக்கு வழங்க பட்டு உள்ளது...

இப்படி மதங்களையும் வழிபாட்டு தளங்களையும் மத கடவுள் நம்பிக்கை உள்ள மக்களையும் சீன கம்யூனிஸ்ட் அரசு பாதுகாத்து வருகிறது..

 எங்கள் கடவுள் சீன தேசத்தின் உழைப்பாளிகளும் , வெகுஜனங்களே தவிர வேறு யாரும் இல்லை என்று மாவோவின் வார்த்தைகளும் உருவம் கொடுத்து உள்ளது சீன சோசலிசம்.. சீன கம்யூனிஸ்ட் அரசுமே..

 

இந்த புத்தகத்தை கட்சி உறுப்பினர்கள் அனைவரும் படிப்பதும்... இன்றைய சூழலில் சீன கம்யூனிஸ்ட் அரசு செயல்படும் நிலை குறித்து கட்சி உறுப்பினர்களுக்கும் மத கடவுள் நம்பிக்கை உள்ள மக்களுக்கும் நாம் சொல்ல வேண்டிய தேவை உள்ளது..

ஏ.ஜி.கண்ணன்

மாவட்ட செயற்குழு உப்பினர்

திருவள்ளுர் மாவட்டம்

நவ பாசிச சக்திகளின் வேர்களில் வென்னீராக... நூல் அறிமுகம்:

“மதம் என்பது மனிதனின் அடிப்படை உண்மை அல்ல; மதம் ஒரு மனித படைப்பு. மதம் ஒரு பொய் என்று மட்டுமே கூறி, அதனை அகற்ற முடியாது. மக்களைத் துன்பத்த...