Pages

புதன், நவம்பர் 19, 2025

47 திபெத்: மக்களுக்கான கல்வி, மருத்துவம், வேலை சமூக பாதுகாப்பு

 

அ.பாக்கியம்

சோஷலிச கொள்கையை ஏற்றிருக்கக் கூடிய ஒரு அரசு உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக என்றென்றும் பாடுபடும். திபெத்தில் உள்ள அனைத்து மக்களுக்கான சமூக பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தக்கூடிய கட்டமைப்புகளை சோஷலிச கொள்கையை ஏற்றுள்ள ஒரு அரசு உருவாக்கி உள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம், பொது சுகாதாரம், வாழ்விடம் என அனைத்து வகையிலும் ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்பை சீன மக்கள் குடியரசு திபெத்திய மக்களுக்கு வழங்கி உள்ளது. திபெத்திய பகுதியில் மிக உயர்ந்த தரமான உள்கட்டமைப்பை உருவாக்கிய அரசு மக்களின் உதவியுடன் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பையும் ஏற்படுத்தி உள்ளது

பூஜ்ஜியத்தில் இருந்து சதத்தை நோக்கி

திபெத்தை செம்படை விடுதலை செய்த பொழுது 95 சதவீதம் மக்கள் கல்வி அறிவற்றவர்களாக இருந்தார்கள். குறிப்பிடத்தக்க அல்லது விரல்விட்டு எண்ணக்கூடிய சில பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருந்தது. குறிப்பாக திபெத் பிராந்தியம் முழுவதும் வெறும் பத்து பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருந்தன. இந்தப் பள்ளிக்கூடங்களும் நிலப் பிரபுக்களுக்காக உருவாக்கப்பட்டவை.

அவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக மட்டும்தான் இந்த பள்ளிக்கூடம் பயன்பட்டது. ஏன் அவர்கள் படிக்க வேண்டும் ? எழுத்தறிவை தெரிந்து கொள்வதற்கும், கணக்குகளை புரிந்து கொள்வதற்கும், அரசுப் பணிகளை செய்வதற்கும் கடிதப் போக்குவரத்திற்காகவும் அடிப்படை கல்வி தேவைப்பட்டது தான். இதற்காக இந்தப் பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட்டன.

மேற்கண்ட பள்ளிக்கூடங்கள் தவிர ஆயிரக்கணக்கான திபெத்திய பௌத்த மடாலயங்கள் இருந்தன. இந்த மடாலயங்களில் கல்வி சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க மத தத்துவங்களை கற்றுக் கொடுப்பதாக இருந்தது. மதத் தத்துவத்துடன் திபெத்திய மருத்துவம், ஜோதிடம் போன்றவைகளையும் கற்றுக் கொடுத்தார்கள். இந்தக் கல்வியை கற்றவர்கள் தான் புத்த துறவிகளாகவோ அல்லது லாமாக்களாகவோ பட்டம் பெற்றார்கள். மடாலயங்கள் நடத்தும் இந்த கல்விக்கும் பொது மக்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அது நவீன மதசார்பற்ற கல்வியும் அல்ல. எனவே மடாலயங்கள் கல்வி கற்றுக் கொடுக்கும் இடங்கள் என்று இருந்தாலும் நடைமுறையில் பொதுமக்களுக்கான கல்வியறிவு பூஜ்ஜியமாகவே இருந்தது.

1950 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு புரட்சி வெற்றி பெற்றவுடன் சீன மக்கள் குடியரசு திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் ஒரு நவீன கல்வி முறையை உருவாக்கியது. பாலர் பள்ளிகள், தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள், தொழிற்கல்விகள், தொழில்நுட்ப பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், சிறப்பு கல்விகளை கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் என நவீன முறைகளை உள்ளடக்கிய கல்வி வலைய மைப்பை ஏற்படுத்தியது.

2023 ஆம் ஆண்டு தரவுகளின் படி திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் தேவையான அளவிற்கு கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. பாலர் பள்ளிகள் 2,399 இருந்தன. சீனாவில் கட்டாய கல்வித் திட்டத்தின் அடிப்படையில் தொடக்க கல்வி ஆறு ஆண்டுகளும் நடுநிலைக் கல்வி மூன்று ஆண்டுகள் என ஒன்பது ஆண்டுகள் கட்டாய கல்வி படிக்க வேண்டும். இதற்காக திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் 1,531 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. தொழில் வல்லுனர்களை உருவாக்கக்கூடிய உயர்நிலைப் பள்ளிகள் 93 பள்ளிகளும், 7 பல்கலைக்கழகங்களும் அதன் கீழ் செயல்படும் பல கல்லூரிகளும் இருக்கின்றன. மொத்தமாக 36 லட்சம் மக்கள் தொகை கொண்ட திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் 4,300 க்கு மேற்பட்ட கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் சுமார் 9.44 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள்.

2012 ஆம் ஆண்டு முதல் திபெத்தில் மாணவர்களின் விடுபடுதல் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு மாணவருக்கும் கல்வியின் அனைத்து நிலைகளிலும் அரசு நிதி உதவி செய்கிறது. பாலர் கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதம் 89.52% ஆகும். கட்டாய கல்விக்கான நிறைவு சதவீதம் 97.73 ஆகும். சீனியர் உயர்நிலைப் பள்ளிகளில் மொத்த சேர்க்கை விகிதம் 91.07% ஆகும். 2010 ஆம் ஆண்டு ஆண்டு நடத்தப்பட்ட அந்நாட்டின் ஏழாவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திபெத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு 5,507 பட்டதாரிகள் இருந்தனர். இதுவே 2020 ஆம் ஆண்டு 11,019 என்ற அடிப்படையில் உயர்ந்தது. இந்த பிராந்தியத்தில் புதிதாக பணியில் சேருபவர்கள் 13.1 ஆண்டுகள் முறையான கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.

2012 முதல் 2022 வரை சீன அரசு திபெத் பிராந்தியத்தில் கல்வியை மேம்படுத்துவதற்காக 251.51 பில்லியனுக்கும் அதிகமான ஆர்எம்பி யுவான் பணத்தை ஒதுக்கியது.

திபெத்தில் உள்ள கல்வி நிலையங்களில் சீன மொழி, திபெத்திய மொழி என இரு மொழிக் கொள்கை கற்பிக்கப்படுகிறது. திபெத்திய மொழி குறித்த தனி பாடங்களும் உள்ளன. திபெத்திய கல்வி நிலையங்களில் கணிதம், அறிவியல், இலக்கியம், திபெத்திய வரலாறு, மற்றும் திபெத்திய கலாச்சாரம் ஆகிய பாடத்திட்டங்கள் உள்ளன. இவற்றுடன் கூடவே கருத்தியல் கல்வி அதாவது தேசபக்தி, மக்களின் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த கல்வியும் பாடத்திட்டங்களாக கற்பிக்கப்படுகிறது.

திபெத்திய பிராந்தியத்தில் தொலைதூரத்தில் வாழக்கூடிய மக்களுக்காகவும் நாடோடி வாழ்க்கை நடத்தக்கூடிய கால்நடை மேய்ப்பவர்களுக்காகவும் போர்டிங்(விடுதி) பள்ளிகளை திபெத் அரசாங்கம் நடத்துகிறது. இதற்கான அனைத்து விதமான செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. திபெத் கல்விக்கு அரசாங்கம் பொது மானியத்தை வழங்குகிறது. கிராமப்புற மாணவர்களின் கட்டாய கல்வி படிக்கிற காலகட்டத்தில் படிப்பு செலவுகளும், புத்தகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்தும் அரசு ஏற்றுக்கொள்கிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவியும், ஊக்கத்தொகையும் அரசாங்கம் அளித்து வருகிறது.

திபெத்தில் மற்றொரு வகையான சிறப்புப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. நடுநிலைப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயில்வதற்காக, பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. 1985 ஆம் ஆண்டு முதல் இந்த முறை செயல்படுகிறது. இதனை நெய்டி கல்வி முறை என்று அழைக்கிறார்கள். இதில் தேர்ச்சிப் பெறக்கூடிய மாணவர்கள் திபெத்திய பகுதியிலிருந்து பெய்ஜிங், ஷாங்காய், செங்டு போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உயர்தரம் வாய்ந்த கல்வியை பெறுகிறார்கள். இங்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தரமாக மேம்ப்படுத்தக்கூடிய முறையில் திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகிறார்கள்.

 

மேற்கண்ட விடுதி அடிப்படையிலான கல்வி முறைகளையும், நெய்டி சிறப்பு கல்வி திட்டத்தையும் பிற்போக்கு வாதிகள், தலாய்லாமா ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். காரணம் விடுதிக்குச் சென்றபிறகு, உயர்கல்வி கற்றவர்கள் பிற்போக்கு கருத்துக்களில் இருந்து விடுபடுகிறார்கள் என்பதுதான். குறிப்பாக திபெத்தில் தொலைதூரத்தில் இருக்கக்கூடிய மாணவர்களில் 70 சதவீதத்திற்கு மேல் அரசு நடத்தக்கூடிய விடுதிகளில் தங்கி படிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது அடிமை சமுதாயத்திலிருந்து அறிவுப்பூர்வமாக திபெத் மக்களை விடுதலை செய்வதற்கான ஒரு வடிவமாக இன்று இருக்கிறது. ஆகவேதான் இந்த கல்வி முறைகளை கடுமையாக பிற்போக்கு வாதிகள் எதிர்க்கின்றனர்.

சீன மக்கள் குடியரசின் மூலம் நவீன கல்வி முறைகள் திபெத்திற்குள் வளர்ந்த பிறகு திபெத்தில் நவீன அறிவும், அறிவியல், மற்றும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டவர்கள் அதிகமாய் இருக்கிறார்கள். இது இவர்களின் வாழ்க்கைத் தரத்தை பல மடங்கு மேம்படுத்தி உள்ளது. இரு மொழி கல்விக் கொள்கையும் சீனாவில் எங்கு சென்றாலும் வெற்றி பெற முடியும் என்ற முறையில் நடத்தக்கூடிய நெய்டி பள்ளிகளும் புதிய நம்பிக்கையை உருவாக்கி உள்ளது. திபெத்திய மொழியையும் கலாச்சாரத்தையும் கல்வி முறைக்குள்ளேயே பாதுகாத்து அவற்றின் மேம்படுத்தக்கூடிய பணிகளையும் சீன மக்கள் குடியரசு செய்து வருகிறது.

மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்

மருத்துவமும், பொது சுகாதாரமும் திபெத் மக்களின் வாழ்நாளை அதிகப்படுத்தியது மட்டுமல்ல மக்கள் தொகையையும் வீழ்ச்சியிலிருந்து வளர்ச்சியை நோக்கி கொண்டு வந்து உள்ளது. 1950 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு திபெத் மக்களுக்கு எந்தவிதமான மருத்துவமனைகளோ பொது சுகாதார முறைகளோ இல்லை. குறிப்பாக பண்ணை அடிமைகள் சிகிச்சை பெறுவதற்கான உரிமைகள் கூட இல்லை. 1950 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக சீர்திருத்தம் ஆரம்பித்தவுடன் மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனைகளை திட்டமிட்டு உருவாக்கினார்கள். அடிப்படை மருத்துவ சேவைகள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, திபெத்திய மருத்துவ முறை அவற்றின் சிகிச்சை முறை ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான மருத்துவ கட்டமைப்பும், பொதுசுகாதார அமைப்பையும் சீன மக்கள் குடியரசு நிறுவியது. சீனாவின் இதர பகுதிகளில் இருந்தும், அருகாமையில் இருந்த நகரங்களில் இருந்தும் மருத்துவ நிபுணர்களின் குழுக்கள் திபெத்திய பிராந்தியத்திற்குள் அனுப்பப்பட்டு மருத்துவத் துறையை மேம்படுத்தினார்கள். இதனால் பல மருத்துவமனைகள் தரத்துடன் செயல்பட தொடங்கியது. புதிய மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டன.

திபெத்திய பிராந்திய மக்கள் மாவட்ட தலைநகர சிறப்பு மருத்துவமனைகளில் மிகக் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய 400 கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மேலே சுமார் 2,400 சாதாரண நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகள் அனைத்திற்கும் தாங்கள் வாழக்கூடிய உள்ளூர் அளவிலான மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான மருத்துவ அமைப்புகளும், மருத்துவர்களும், மருந்துகளும் கிடைக்கக் கூடிய முறையில் மருத்துவ துறைகள் மேம்பட்டது.

1950ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் பிரசவத்தின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 5000 ஆக இருந்தது. 2022 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 45.8 என்ற அளவில் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டது. மேலும் இதே கால இடைவெளியில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 430% லிருந்து 7% என்ற அளவில் குறைந்துள்ளது. திபெத் மக்களின் சராசரி ஆயுள் காலம் 1950 களில் 35 ஆண்டுகள் என்பதிலிருந்து இன்று 72.19 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.

இப்பிராந்திய மக்கள் செய்து வந்த தொழில், வேலை காரணமாக பிறக்கும் பொழுதே அவர்களை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான நோய்களான இதய நோய், கண் புரை நோய் உள்ளிட்ட அனைத்தும் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன. நீரின் தரத்தையும், உணவு முறைகளை மாற்றியதும், உள்ளூரில் குடியிருப்புகளை மேம்படுத்தியதும், இந்த நோய்களை கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகித்தது.

தற்போது திபெத்தில் பல்வேறு வகையான 1642 மருத்துவ நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 11 நிறுவனங்கள் உயர்ந்த தரம் கொண்ட மருத்துவ நிறுவனங்களாகும். ஆயிரம் பேருக்கு 4.9 மருத்துவ படுக்கைகள் உள்ளது. ஆயிரம் பேருக்கு 5.89 மருத்துவ ஊழியர்கள் இருக்கிறார்கள். இந்த மருத்துவ சேவைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பொது சுகாதாரத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

1950 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய 200 ஆண்டுகளில் திபெத்திய மக்கள் தொகையில் எண்ணிக்கை 10 லட்சம் பேர் குறைந்து போனார்கள். மருத்துவ வசதியும், பொது சுகாதார சீர்கேடுகளும் மக்கள் தொகையில் பெரும் சரிவை ஏற்படுத்தியது. ஆனால் ஜனநாயக சீர்திருத்தம் ஆரம்பித்து 15 ஆண்டுகளில் 4 லட்சம் மக்கள் தொகை அதிகரிப்பு நடந்தது. மிகவும் உட்புறப் பகுதியான காடுகளில் வாழ்ந்த மான்பாஸ், லோபாஸ், டெங்ஸ் போன்ற சிறிய இனக்குழுக்களின் மக்கள் தொகை உட்பட இக்காலத்தில் அதிகரித்துள்ளது.

சமூக பாதுகாப்பின் மற்றொரு முக்கிய அம்சம் காப்பீட்டு முறைகள் ஆகும். முதியோர்களுக்கான காப்பீடு, மருத்துவ காப்பீடு, வேலையின்மைக்கால காப்பீடு, வேலைஇடங்களில் ஏற்படும் காயம் தொடர்பான காப்பீடு, மகப்பேறு காப்பீடு என ஐந்து வகையான காப்பீட்டு முறைகளை திபெத் பிராந்தியத்தில் அமல்படுத்துகிறார்கள். இந்தத் திட்டங்களின் மூலம் திபெத் மக்கள் தொகையில் 3.43 மில்லியன் மக்கள் அதாவது 36 லட்சம் மக்கள் தொகையில் 34 லட்சம் மக்கள் காப்பீட்டு முறையில் பாதுகாக்கப்படுகிறார்கள். இது மொத்த மக்கள் தொகையில் 95% க்கு மேலாகும்.

சமூக பாதுகாப்பின் மற்றொரு அம்சம் மதம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு செய்யக்கூடியதாகும். திபெத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து துறவிகளுக்கும் கன்னியாஸ்திரிகளுக்கும் மருத்துவ காப்பீடு ஓய்வூதிய திட்டங்கள் வாழ்வாதார உதவித்தொகை விபத்து காயம் காப்பீடு சுகாதார சோதனை செலவுகள் போன்றவற்றை ஈடுகட்ட அரசாங்கம் காப்பீடு திட்டத்தை வழங்கி உள்ளது. துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கான படிப்பு வாழ்க்கை நிலைமைகளை நவீன மயமாக்குவதற்கு மதங்களையும் கோயில்களின் உள்கட்டமைப்பையும் மேம்படுத்தி உள்ளது.

திபெத்தில் பாரம்பரியமாக மருத்துவ முறைகள் மக்களால் பயன்படுத்தப்பட்டது. அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவம் கிடைக்காதபோது அவர்களால் இவை கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டன. அவற்றையும் சிகிச்சைக்கு பயன்படுத்துவது என்ற முறையில் சீன மக்கள் குடியரசு மிகவும் அத்தியாவாசிய மருந்துகள் பட்டியலில் அதிகமான திபெத் மருந்துகளை சேர்த்துள்ளது. எந்த ஒரு மருத்துவ முறைகளும் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் இருந்தால் அதை அழிந்து விடாமல் மேம்படுத்தக்கூடிய செயலின் ஒரு வெளிப்பாடு தான் பாரம்பரிய திபெத்திய மருத்துவத்தை பயன்படுத்துவதாகும்.

மேற்கண்ட முறையில் பல அடுக்கு சமூக பாதுகாப்பு முறை திபெத் சமூகத்தில் பரவலாக அமுலாக்கப்படுவதால் மக்களின் வாழ்க்கை தரம், சராசரி வாழ்நாள் மேம்பட்டு வந்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற குடியிருப்பாளர்களின் அடிப்படை மருத்துவ காப்பீட்டு முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. இந்த காப்பீட்டு அட்டைகளை மாகாணங்கள் கடந்து செல்கிற பொழுதும் பயன்படுத்தலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்திற்கு நிலையான மானியம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு ஆண்டுக்கு 585 ஆர்எம்பி யுவான் அதாவது சுமார் 8000 ருபாய் வழங்கப்படுகிறது. தொடர்ந்து சமூக பாதுகாப்புக்கான முறைகளில் குறைகள் வரும்பொழுது களைந்து முன்னேறுகிறார்கள்.

முழுமையான வீட்டு வசதி

சோஷலிஸ்ட் சமூகத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று வாழ்விட வசதி. திபெத் மக்களுக்கு வாழ்விட வசதியை செய்வதற்கு சீன மக்கள் குடியரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. நகர்ப்புறங்களில் மலிவு விலை வீடுகளை அரசாங்கம் கட்டிக் கொடுத்தது. கிராமப்புறங்களில் மக்கள் வாழமுடியாத இடங்களில் இருந்து வாழத் தகுதியான இடங்களுக்கு மாறுவதற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தனர்.

இது மட்டுமல்ல ஏற்கனவே பாழடைந்து போன வீடுகளையும் புதுப்பித்துக் கொள்வதற்காக நிதி உதவியை செய்து புதுப்பித்துக் கொடுத்தார்கள். 2016 ஆம் ஆண்டு முதல் விவசாயம் மற்றும் மேய்ச்சல் நிலப் பகுதிகளில் உள்ள சுமார் 43,600 வீடுகளுக்கு அரசு மானிய உதவிகளை வழங்கி புதுப்பித்துக் கொடுத்துள்ளது. இவை தவிர வீடுகளின் தரத்தை, சுகாதாரத்தை உயர்த்தக்கூடிய முறையில் குறைந்த வருமான குழு உள்ளிட்ட பகுதிகளை கணக்கில் எடுத்து புதுப்பித்துக் கொடுத்தார்கள். மற்றொரு முக்கிய அம்சம் வீடுகள் பூகம்பத்தின் அதிர்வுகளை தாங்க கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத வீடுகளை பட்டியல் எடுத்து பூகம்ப அதிர்வுகளை தாங்கக்கூடிய வீடுகளாக மாற்றி அமைத்தனர்.

 

நகர்ப்புறங்களில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு இவற்றின் வளர்ச்சி அதிகமான பொழுது தீவிரமான நகர்மய வளர்ச்சி ஏற்பட்டது. நகர்ப்புறங்களில் குடியிருப்பவர்களின் தனிநபர் ஒருவருக்கு 2020 ஆம் ஆண்டு 33.4 சதுர மீட்டர் வாழ்விடமாக இருந்தது. கிராமப்புறத்தில் விவசாயிகள் மற்றும் மேய்ப்பர்களின் வாழ்விடம் 41.46 சதுர மீட்டராக இருந்தது. இந்த வளர்ச்சி வாழ்விடத்திற்கான ஒரு நிலையான முன்னேற்றத்தை குறிக்கிறது. 1950 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு 90% மக்களுக்கு தனி குடியிருப்புகள் கிடையாது.

வீட்டு வசதிகளில் ஏற்படுத்தி இந்த மாற்றம் பல முன்னேற்றங்களை அடைந்தது. 2019 ஆம் ஆண்டு திபெத் நகர்மயமாக்கல் 31.5% உயர்ந்தது. 2020 ஆம் ஆண்டில் மக்களின் தனிநபர் செலவழிப்பு வருமானத்தை 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகிற பொழுது அது இரட்டிப்பாகி உள்ளது. இவை அனைத்தும் தனி நபர்களின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்தியது மட்டுமல்ல திபெத் பிராந்தியத்தில் உள்ள 95% மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. குடும்பத்துக்கு ஒருவர் வேலையில் இருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்றைய உலகமய சமூக சூழலில் ,உலகம் சார்ந்த பொருளாதார வளைய அமைப்புகள் உருவான காலத்தில், சோஷலிசத்தின் கொள்கையை நோக்கி செல்வதற்கு பெரும் முயற்சிகள் செய்ய வேண்டி உள்ளது. இந்தக் கொள்கையில் பற்றுடைய சீன கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியதையும் கடந்து, அடிப்படை கட்டுமானத்தை உருவாக்கியதையும் கடந்து, பல அடுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

அ.பாக்கியம்

 

 

புதன், நவம்பர் 12, 2025

ஞாபகங்களின் தீ…..

 

ராஜாராம்

(தோழர் ராஜாராம் மாணவர் சங்கம் வாலிபர் சங்க மாவட்ட தலைவர்களில் ஒருவராக இருந்து பணியாற்றியவர். பணியில் சேர்ந்தவுடன் தொழிற்சங்க தலைவராக இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர். சில ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகத்தை படித்து தனது கருத்தை பதிவு செய்து உள்ளார்- அ.பாக்கியம்)

தோழர் அ.பாக்கியம் அவர்கள் எழுதிய "ஞாபகங்கள் தீ மூட்டும் DYFI போராட்டங்கள் சில துளிகள்"  என்ற தனது புத்தகத்தை எனது பணி நிறைவு விழாவிற்கு வந்திருந்து வாழ்த்தி வழங்கினார். இது ஒரு பொருத்தமான நினைவு பரிசு என்று நினைத்து நெகிழ்கிறேன்.

45 வருடங்களுக்கு எனது வாழ்க்கையை பின்னோக்கி நகர்த்தி என்றென்றும் எனது நினைவில் கனன்று  கொண்டிருக்கிற DYFI போராட்ட நினைவுகளை உண்மையிலேயே தீயாக மூட்டிவிட்டது இந்த புத்தகம். இந்த புத்தகத்தின் முதல் கட்டுரை "பூணூலும் அரைஞாண் கயிறும் DYFI கொடி கயிறாக மாறியது" வீரஞ்செறிந்த மறியல் போராட்ட நிகழ்விலும், கடைசி கட்டுரையான DYFI SPORTS CLUB  டி.ஒய்.எப்.ஐ விளையாட்டு கழகம் நடத்திய வண்ணமயமான திருவிழாவில் பங்கேற்ற பாக்கியம் பெற்றவன் நான். 

DYFI துவக்கப்பட்ட 1980 இல் உறுப்பினராக சேர்ந்து வாலிபர் சங்கத்தில் 2000 வரை 20 வருடங்கள் பணியாற்றியவன். புத்தகத்தின் இரண்டாவது கட்டுரை துவக்க வரிகளில் .... காதலும், வீரமும், சாதனைகளும், சாகசங்களும் மாற்றங்களும், தியாகங்களும் இணைந்தது தான் இளமை என்ற வரிகளுக்கு ஏற்ப எனது அன்றைய இளமை வயதில் சாதனைகளையும் சாகசங்களையும் செய்ய வைத்தது SFI- DYFI அமைப்புகள் தான். 1991 அக்டோபர் 23ஆம் தேதி அந்த வீரஞ்செறிந்த மறியல் போராட்டத்தில் வடசென்னை மாவட்ட குழு, ஆவடி பகுதி செயலாளராக நானும் குறளகம் எதிரில் கைது செய்யப்பட்டேன்.

அன்று மாலை ரிமாண்ட் செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் செல்லும்போது  நான் ... பணியில் சேர்ந்து சரியாக ஆறு மாதம்தான் ஆகிறது என்னுடைய பணிக்கான அடையாள அட்டை எனது பேண்ட் பாக்கெட்டில் உள்ளது. அடையாள அட்டையும் பர்சும் போலீஸிடம் மாட்டப் போகிறது வேலை பறிபோகும் நெருக்கடி எதிர்கொள்ளப் போகிறேன் என்கிற ஒரு வித பதட்டமும் அப்படியே ஆனால் என்ன தோழர் பாக்கியம், தோழர் அ.சௌந்தர்ராஜன், தோழர் வி. மீனாட்சி சுந்தரம், தோழர் சி. சுந்தர்ராஜ் போன்ற எண்ணற்ற தோழர்களைப்போல முழு நேர புரட்சி காரனாக மாறும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று ஆறுதல் மறு பக்கம் என மனம் அலை பாய்ந்த நேரத்தில்...

"அதற்கு வாய்ப்பில்ல ராஜா" என்று சொல்லும் பாணியில் சென்னை மத்திய சிறைச்சாலை வாசலில் நின்றிருந்தார் நூலாசிரியர் DYFI மாநிலத் தலைவர் தோழர் அ.பாக்கியம். சிறை செல்லும் தோழர்களின் பணம், மோதிரம், வாட்ச் போன்ற மதிப்புமிக்க உடைமைகளை வாங்கி சிறை மீண்ட பிறகு பத்திரமாக திருப்பித் தர வேண்டும் என்ற அக்கறையுடன் சிறை வாசலில் காத்திருந்த காட்சி இப்போதும் என் நினைவில் தீ மூட்டுகிறது. இந்த மறியல் போராட்டத்தில் சிலிர்க்க வைக்கும் பெருமைமிகு நிகழ்வு ஒன்று நடந்தது. அன்று சென்னை மத்திய சிறைக்கு சென்ற 2800 பேரில் ஒரே ஒரு துணிச்சல் மிக்க டிஓய்எஃப்ஐ வீராங்கனை ஒருவர் இருந்தார்.

 சென்னை வில்லிவாக்கம் பகுதியை சார்ந்த பெண் தோழர்( இன்றைய சிபிஐஎம் வில்லிவாக்கம் பகுதி குழு உறுப்பினர் தோழர் அன்பழகன் அவர்களின் மனைவி). தன்னந்தனியாக துணிச்சலாக சகத் தோழர்கள் வேண்டாம் வீட்டுக்கு சென்று விடுங்கள் என்று தோழர்கள் மற்றும் போலீஸ்சே கூறிய போதும் சிரித்த முகத்துடன் இல்லை நான் சிறைக்கு செல்வதில் உறுதியாக உள்ளேன் என்று தன்னந்தனியாக சிறைக்குள் சென்றதைப் பார்த்தபோது நாங்கள் அனைவரும் சிலிர்த்துப் போய் உறைந்து நின்றோம். இந்த DYFI பெண் வீராங்கனை பற்றி அடுத்த புத்தகப் பதிவில் குறிப்பிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

       தோழர் பாக்கியம் எழுதியதில் ஒவ்வொரு தலைப்பில் ஆன போராட்டமும் ஒவ்வொரு காவியம் என்று படிக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது நானும் அன்றைய DYFI தோழன் என்று.

       குறும்பனை : டி ஒய் எப் ஐ எழுச்சி- அடக்குமுறை- மீட்சி. வீடுகள் தரைமட்ட பார்க்கப்பட்டு குடும்ப்பத்தோடு ஊரை விட்டு வெளியேற்றப்பட்டு அதன்பிறகு உறுதிமிக்க தொடர் போராட்டத்தால் மீண்டும் கடல் மார்க்கமாக ஊருக்குள் கம்பீரமாக நுழையும் காட்சி ஒரு புரட்சிகர திரைப்படமாக மனத்திரையில் ஓடுகிறது. படிக்கும் தோழர்களின் நெஞ்சமெல்லாம் பெருமை பூரிக்கும்.. இப்படி எல்லா கட்டுரையும் DYFI இன் பெருமைமிகு வரலாறுதான்.

      கடைசி கட்டுரை பற்றி டி இ ஒய் எஃப் ஐ விளையாட்டு கழகத்தில் நான் மாநில பொருளாளராக பொறுப்பேற்று என் தனிப்பட்ட பொறுப்பில் சில குறிப்பிடத் தகுந்த பங்கை ஆற்றியுள்ளேன். அதுவும் சுவாரஸ்யம் கலந்த மதிப்புமிக்க நிகழ்வாகும். அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்.... அதுவரை தோழர் பாக்கியம் அவர்களுக்கு எனது ரெட் சல்யூட்.

46 திபெத் சவாலான சாலை கட்டமைப்புகள்

 

அ.பாக்கியம்

பெருக்கெடுக்கும் ஆறுகள், சிதறிய பாறைகள், கரடு முரடான மலைப்பாதைகள் ஆகியவற்றால் திபெத் மக்களுக்கும்  இதர மாகாணங்களுக்கும் இடையிலான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவது  கடினமாக இருந்தது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களைக் கொண்டு செல்வது மனிதர்களின் கைகளையும், கால்நடைகளையுமே நம்பி இருந்தார்கள்.

சில நேரங்களில் பொருட்களை பிரதான நிலப் பகுதிகளுக்கும், அருகில் உள்ள மாகாணங்களுக்கும் கொண்டு செல்வதற்கு ஒரு வருடம் கூட ஆகும். ஆறுகளைக் கடப்பதற்கு பெரிய பாலங்கள் இல்லை. 10 பேரை ஏற்றி செல்லும் தோல் படகுகள் மட்டுமே அதுவும் சிறு ஆறுகளை கடப்பதற்கு மட்டுமே உதவி செய்யும். வர்த்தக பாதை எப்பொழுதும் இருந்தது. ஆனால் அவை மிகவும் கரடு முரடானவை. நல்ல சாலைகளுக்கான எந்த அறிகுறியும் திபத்தில் இருந்தது இல்லை.

1950 ஆம் ஆண்டு வரை திபத்தில் நெடுஞ்சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. 1959ஆம் ஆண்டு ஜனநாயக சீர்திருத்தங்களுக்குப் பிறகு போக்குவரத்தில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட்டது. 1959 இல் மிக பாதைகள் 7,300 கிலோ மீட்டர் மட்டும்தான் அதுவும் மிக மோசமானவையாக இருந்தது.  சீன மக்கள் குடியரசின் தொடர் முயற்சியின் காரணமாக 2021 ஆம் ஆண்டு திபெத் பிராந்தியத்தில் 1,20,000 கிலோமீட்டர் நீளத்திற்கு தரமான சாலைகள் அமைக்கப்பட்டன. இது 1,543 சதவீதம் வளர்ச்சியாகும். இந்த வளர்ச்சியில் திபெத்தின் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை இணைக்கும் சாலைகளும் உருவாக்கப்பட்டன.

அதாவது 1959 முதல் தினசரி தோராயமாக 4.93 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிங்காய் மாகாணத்தில் துவங்கி லாசாவில் முடிவடையும் ஒரு சாலை 4000 மீட்டருக்கு அதிகமான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக உயரமான தார் சாலையாகும். மேலும் இது மிக உயரமான இரண்டு மலைகளை இணைக்கக்கூடிய சாலையாக இருக்கிறது.

மக்கள் தொகை குறைவாக இருக்கக்கூடிய காடுகளும் மலைகளும் நிறைந்த இடங்களில் சாலைகள் செல்வதற்கு அதை பராமரிப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற முறையில் சில முடிவுகளை மேற்கொண்டார்கள். 3700 மீட்டருக்கு அதிகமான உயரத்தில் உள்ள சிச்சுவான் திபெத் நெடுஞ்சாலையை பராமரிக்க 1996 ஆம் ஆண்டு சாலை பராமரிப்பு படை முதல் முதலாக நிறுவப்பட்டது. இந்த சாலைகளில் படைவீரர்கள் நிறுத்தப்பட்டார்கள். இவர்களின் கீழ் 782.5 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டது பாதுகாக்கப்பட்டது. இக்காலத்தில் இந்த சாலை 200க்கும் மேற்பட்ட முறை பேரழிவுகளை சந்தித்த போதும் மீண்டும் மீண்டும் அது புதுப்பிக்கப்பட்டு பாதிப்பின்றி பயணிக்க உதவியது.

இதே காலத்தில் கிராமப்புறங்களிலும் சாலை மேம்பாட்டிற்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டது. வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்க 4500 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகளை உருவாக்கி இணைத்தனர். 2018 ஆம் ஆண்டு கிராமப்புற சாலை திட்டங்களுக்காக 37.29 பில்லியன் யுவான் சுமார் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்து போக்குவரத்து துறையை மேம்படுத்தினார்கள்.  கிராமப்புற சாலைகள் மட்டுமே 68, 863 கிலோ மீட்டர் நீலத்தை கடந்து சென்றது.

மிகவும் இடர்பாடு நிறைந்த இடங்களில் இருந்த 34 டவுன்ஷிப்புகள் 533 கிராமங்களுக்கு தார்சாலை அல்லது கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டன. கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய உள்ளூர் விவசாயிகளும் கால்நடை மேய்ப்பர்களும் சாலை போக்குவரத்து சிரமங்களை தவிர்ப்பதற்கு கிராமப்புற பயணிகள் போக்குவரத்து வழித்தடங்களும் தொடங்கப்பட்டன. விவசாயிகள் கால்நடை மேய்ப்பர்கள் 2,44,000 லட்சம் பேர்கள் கிராமப்புற சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டு வருமானத்தையும் பெற்றனர்.

திபெத்தில் உள்கட்டமைப்பு இணைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசு பெருமளவு முதலீடு செய்திருந்தது. சீனாவின் மேற்குப் பகுதியை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மேற்கே செல்லுங்கள் என்ற பிரச்சாரத்தை 1999 ஆம் ஆண்டிலிருந்து துவக்கி திட்டங்களை விரிவு படுத்தியது. பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் 117, பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் 188 என்ற வகையில் கட்டமைப்பு திட்டங்களை மேற்கொண்டனர். இதற்காக பல பில்லியன் யுவான்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இன்று இன்று திபத்தின் சாலை அமைப்புகள் ஷாங்காய், பெய்ஜிங் நகரத்துடன், தொலைதூரமான வடக்கு சீனாவின் ஜின்ஜியான் நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் சாலை போக்குவரத்து இணைக்கப்பட்டுள்ளது.

கூரையின் மேலே ரயில் ஓட்டம்

திபெத்திய பீடபூமியில் ரயில் வலை அமைப்பை உருவாக்கக்கூடிய முதல் வடிவமைப்பு 1911 ஆம் ஆண்டு உருவான குடியரசு ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டது . அன்றைய ஜனாதிபதி டாக்டர் சன் யாட் சென் லாசாவை சீனாவுடன் இணைக்க ஒரு ரயில்வே திட்டத்தை முன்மொழிந்தார். பலரும் இந்தத் திட்டத்தை கற்பனையானது என்று விமர்சித்தார்கள். ஆனால் இந்தத் திட்டம் அமலாகவில்லை.

1950 ஆம் ஆண்டு கொரியா போர் காரணமாகவும், சீன சோவியத் உறவுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு ராணுவ தொழில்களை மத்திய சீனாவிற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சூழலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல்கள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. எனவே சிச்சுவான், குவஷோ, யுனான் ஆகிய இடங்களில் ரயில் பாதைகளை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதற்கான பணிகளை அவசர அவசரமாக தொடங்க வேண்டும் என்று மாவோ உத்தரவிட்டார். அதே நேரத்தில் உற்பத்திக்கான மூலப் பொருட்களை  ஜின்ஜியாங், திபெத், உள் மங்கோலியா, மஞ்சூரியா போன்ற இடங்களில் இருந்து வரவைக்க வேண்டிய நிலைமை இருந்தது. சீனப் பிரதமர் சௌ என் லாய் 1957ஆம் ஆண்டு இதற்கான விரிவான திட்டத்தை தெரிவித்தார்.

திபெத் பூமியை சீனாவுடன் இணைக்கும் முதல் ரயில் திட்டம் சீனாவின் இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் போது 1958 முதல் 1962 ல் நிறைவேற்றப்பட்டது. திபெத்தின் ஒரு பகுதியாக இருந்த அம்டோ நகர்வரை இது அமைக்கப்பட்டது. முதல் ரயில் இணைப்பு இதுதான். இத்திட்டம் நிறைவேற்றுவதில் தடங்கள் ஏற்பட்டு 1977 ஆம் ஆண்டு மீண்டும் உயிர்பிக்கப்பட்டு 1984 ஆம் ஆண்டு 845 கிலோ மீட்டர் ரயில் பாதை செயல்பாட்டுக்கு வந்தது. இந்த ரயில் பாதையை கோர்மோ நகரத்தில் வழியாக திபெத்தின் தலைநகரான லாசா வரை நீட்டித்தார்கள்.

இந்த ரயில்வே கட்டுமானம் மிக புகழ்பெற்ற ஒன்றாகும். மொத்த நீளம் 1,118 கிலோ மீட்டர் ஆகும். இவற்றில் 960 கிலோமீட்டர் ரயில்வே தண்டவாளங்கள் கடல் மட்டத்திலிருந்து 13,000 அடிக்கு மேல் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 560 கிலோமீட்டர் அதிகமான ரயில் பாதை நிரந்தர உறை பணி பூமியில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு வெப்பநிலை மைனஸ் ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மிகக் குறைந்த வெப்ப நிலை மைனஸ் 40 டிகிரி வரை செல்லும்.

திபத் ரயில்வே நெட்வொர்க்கின் பெரும் பகுதி நிரந்தர உறைப்பணியில் கட்டப்பட்டுள்ளது. அதன் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்த புதுமையான பொறியியல் தேர்வுகளை பயன்படுத்தினார்கள். பணி உருகி தண்டவாளங்களை சீர்குலைப்பதை  தடுக்க பாறை மற்றும் காங்கிரீட் தடிமனான அடுக்குகளில் பாதைகளை அமைத்து உருவாக்கி இருக்கிறார்கள். விலங்குகள் இடம்பெயர்வு பாதைகளில் கடந்து செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது.

மண்ணரிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான தொழில் நுட்பங்களும் இணைக்கப்பட்டுள்ளது.  இந்தப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மிகக் கடுமையான சவால்களை சந்தித்தனர். இவர்களுக்கான பொருட்களை கொண்டு போய் சேர்ப்பதே மிகப்பெரும் பணியாக இருந்தது. இத்தனை சவால்கள் இருந்த பொழுதும் 2006 இல் கட்டி முடிக்கப்பட்ட கிங்காய் திபெத் ரயில்வே ஒரு குறிப்பிடத்தக்க பொறியியல் சாதனையாகும். இது உலகின் மிக உயரமான அதாவது 5,072 மீட்டர் உயரம் உள்ள ரயில் பாதை ஆகும். இதேபோன்று உலகின் உயரமான ரயில் சுரங்கப் பாதையும் இங்கு தான் அமைந்துள்ளது.

இந்த ரயில்வே திட்டங்கள் திபெத்தின் பொருளாதாரத்தை கணிசமாக உயர்த்தி உள்ளன. பொருள் போக்குவரத்தையும், மக்கள் போக்குவரத்தையும் எளிதாக்கியது மட்டுமல்ல சுற்றுலாவையும் கணிசமான அளவிற்கு மேம்படுத்தியுள்ளது. நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளுடனும் ரயில் பாதைகளை உருவாக்கி போக்குவரத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

தற்போது திபத்தில் உள்ள ரயில் பாதைகள் அனைத்தையும் மின்மயமாக்கும் திட்டத்தை 2022 ஆம் ஆண்டு அறிவித்து மூன்று ஆண்டுகளில் முடிப்பதற்காக 14.84 பில்லியன் யுவான்களை ஒதுக்கி மின்மயம் ஆக்கி வருகிறது சீன கம்யூனிஸ்ட் அரசு. இதேபோல் மற்றொரு முக்கிய போக்குவரத்தான விமான நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 13 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன. ஏராளமான ஹெலிகாப்டர் இறங்குதலங்களும் அமைக்கப்பட்டுள்ளது. லாசா சர்வதேச விமான நிலையம் மிகப்பெரிய விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் ஆண்டுதோறும் ஒன்பது மில்லியன் பயணிகளை கையாளுகிறது.

சுற்றுலா பயணிகளின் சொர்க்கம்

சீன மக்கள் குடியரசு அதிசயதக்க வகையில் குறுகிய காலத்தில்  அடிப்படைக் கட்டுமானத்தை உருவாக்கியது. மின்சாரம், டிஜிட்டல் அமைப்பு முறைகள், சாலை, ரயில், விமான போக்குவரத்து போன்றவற்றால் திபெத்தில் சுற்றுலா பயணிகள் உலகம் முழுவதுமிருந்து வந்து குவிகிறார்கள். சீன அரசு திபெத் பிராந்தியத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்றி வருகிறது.

2015 ஆம் ஆண்டில் இந்த பிராந்தியம் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது. இதன் மூலம் ஆண்டுக்கு 20 பில்லியன் ஆரம்பி யுவான் வருவாய் கிடைத்தது. திபத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த வருவாய் 25% ஆகும். அதே நேரத்தில் இந்த பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலா 20% மேல் பங்களிக்கிறது.

2006 ஆம் ஆண்டு கிங்காய்-திபெத் ரயில் பாதை நிறைவடைந்த பிறகு திபெத் என்பது சுற்றுலாவின் சொர்க்கமாக மாறியது. மக்கள் விரைவாக திபெத்தை சென்றடைய முடிந்தது. 2006ம் ஆண்டு மட்டும் 1.5 லட்சம் சர்வதேச பார்வையாளர்கள் உட்பட 25 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வந்தனர். 2007 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 40 லட்சமாக உயர்ந்தது. இந்த வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க தூண்டுதலோடு தலாய்லாமாவின் ஆதரவாளர்கள் 2008 இல் பெரும் கலவரத்தை நடத்தினார்கள். ஆனால் அவை கட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் தீபத்தின் சுற்றுலா எழுந்து நின்றது.

2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை திபெத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10.58 மில்லியனிலிருந்து அதாவது ஒரு கோடியில் இருந்து 30.03 மில்லியன்கள் வரை மூன்று கோடி வரை அதிகரித்தது.  மேலும் சுற்றுலாவின் மூலமான திபெத்தின் வருவாயும் 3.2 மடங்கு அதிகரித்தது.

விடுமுறை காலத்தில் லாசா,  திபெத்தின் பல்வேறு நகரங்களில் கலாச்சார சுற்றுலா திருவிழாக்கள் நடத்தப்படுகிறன. இவற்றில் நடைபெறும் ஓபரா நாடகத்தின் நிகழ்வுகள் பெரும்பாலான மக்களை ஈர்க்கிறது. ஓபரா என்பது இசையின் மூலம் முழுக்க முழுக்க ஒரு கதையைச் சொல்லும் நாடக வடிவம், இதில் பாடலும் நடிப்பும் இசைக்குழுவின் துணையுடன் மற்றும் அரங்குகள், உடைகள் மற்றும் ஒளியமைப்புகள் போன்ற மேடைக் கலைகளுடன் ஒருங்கிணைக்கப் படுகின்றன. ஒரு நாடகத்தைப் போலன்றி, ஓபராவில் உரையாடல் பேசப்படுவதற்குப் பதிலாகப் பாடப்படுகிறது.

ஒரு ஓபரா நாடக கலைஞர் கடந்த காலங்களில்  நாங்கள் அடிமை உரிமையாளர்களை மகிழ்விக்க திபெத்திய ஒபாரா நிகழ்ச்சிகளை நடத்தினோம். இன்று நாமும் மற்றவர்களும் சிறந்த வாழ்க்கை வாழ உதவுவதற்காக ஒபரா நாடகத்தை நடத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். திபெத்தில் மட்டும் 4,277 கலாச்சார பாரம்பரிய தளங்கள் உள்ளன. லாசாவின் மையப் பகுதியில் உள்ள பொட்டாலா அரண்மனை 1994 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டது.

திபெத்தின்  வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மிகப்பெரும் அடித்தளமாக அமைந்தது. எரிசக்தி வீடுகள் தோறும் கொண்டு சேர்த்தது மட்டுமல்ல, மின்சாரப் போக்குவரத்து அமைப்புகளை உருவாக்குவதற்கும், ரயில், சாலை, விமானப் போக்குவரத்து, ஆறுகளின் போக்குவரத்து ஆகியவற்றை ஒன்றிணைத்து திபெத்தை வளர்ச்சியின் உச்சத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய முறையில் உள்கட்டமைப்பு தரமான முறையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. சீன சோசலிசம் கடை கோடி மக்களுக்கும் சென்றடைய கூடிய முறையில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.

அ.பாக்கியம்

திங்கள், நவம்பர் 10, 2025

நானே மகத்தானவன் புத்தகத்தைப் பற்றி போக்குவரத்து தொழிலாளியின் கடிதம்.





(தோழர்.பி.சுந்தர்ராஜன் மூலம் இந்த புத்தகத்தை வாங்கினேன். படித்து முடித்தவுடன் எனக்கு ஏற்பட்ட உணர்வை உங்களுக்கு கடிதமாக எழுதுகிறேன் என்று தொலைபேசியில் பேசினார். உங்களது தொலைபேசி இந்த புத்தகத்தில் இல்லை எனவே நீங்கள் இதற்கு முன்பு வெளியிட்ட வேலை நாள் என்ற புத்தகத்தை படித்ததனால் அதிலிருந்து எடுத்து உங்களிடம் பேசுகிறேன் என்றார். எனக்கு ஸ்மார்ட் போன் கிடையாது எனவே நான் காகிதத்தில் எழுதியதை அப்படியே உங்களுக்கு அனுப்புகிறேன் என்று அனுப்பி வைத்தார். அவரின் எழுத்துக்களில் எந்த மாற்றமும் செய்யாமல் இங்கே கொடுக்கிறேன். வாசிப்பின் அவசியம் செயலுக்கான ஊக்க மருந்து என்பதை இவரின் மதிப்புரை வெளிப்படுத்துகிறது.)

நானே மகத்தானவன் புத்தகத்தின் ஆசிரியர் தோழர் அ.பாக்கியம் அவர்களுக்கு வணக்கம்

உங்கள் புத்தகத்தை படித்தேன் என்னுடைய கருத்துக்களை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். நானே மகத்தானவன் புத்தகத்தை படித்து பல விஷயங்களை தெரிந்து கொண்டதை என் பாக்கியமாக கருதுகிறேன்.

நானே மகத்தானவன் அட்டைப்படத்தில் முகமது அலி எதிரிகளை வீழ்த்துகிறார். நடைமுறை வாழ்க்கையில் வெள்ளையர்களால் கருப்பர் களுக்கு உண்டாகும் கொடுமையை வீழ்த்துகிறார் என்ற பதிவு அருமை. அட்டை படத்தில் இருக்கும் அமெரிக்க சுதந்திரசிலை இரண்டு கண்களையும் மூடி கொள்வது போல் இருப்பது சிந்திக்க வைக்கிறது.

வெள்ளையர் பெண்ணை கருப்பரான எம்மெட் காதலிக்கிறார் என்று வெள்ளையர்கள் எம்மெட் முகத்தை கொடுமையாக சிதைத்து சாகடிக்கிறார்கள். அந்த முகத்தை உலகமே பார்க்க வேண்டும் என்று எம்மெட்டின் தாய் கிறிஸ்தவ மரபையும் மீறி எம்மெட்டின் உடலை சவப்பெட்டிக்குள்ளே வைக்காமல் சவப்பெட்டியின் மேலே தனது மகனின் உடலை வைத்துக் கொண்டு ஊர்வலமாக செல்வது அந்தத் தாயின் மன வேதனையையும் எம்மட்டின் முகத்தை சிதைத்த கொடூரத்தையும் புத்தகத்தை படித்த எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியது

பேருந்திலே வெள்ளையர்களுக்கும் கருப்பொருளுக்கும் உட்காரு வதிலேயே பிரச்சனை இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் போக்கு வரத்து தொழிலாளர்களுக்கும் தமிழக அரசுக்கு மேல் பிரச்சனை இருக்கிறது.

அமெரிக்காவிலே வெள்ளையர்களுக்கும் கருப்பர்களுக்கும் பிரச்சனைகளால் பல கொலைகள் நடக்கிறது. தமிழ்நாட்டிலேயே மேல் ஜாதி, கீழ் ஜாதி என கௌரவ கொலைகளையும், ஆணவக் கொலையும் நடக்கிறது.

முகமது அலி குத்துச்சண்டையிலே பதக்கம் வெல்கிறார். சந்தோஷப்படுகிறார். ஆனால் அவர் கருப்பர் என்பதால் ஓட்டலில் சாப்பிட அனுமதிக்கவில்லை. அவருக்கு உணவும் பரிமாறுவதில்லை. ஆகையால் அவர் வேதனைப்பட்டு கருடப்பர்களுக்கு நடக்கும் கொடுமைக்கு எதிராக அந்தப் பதக்கத்தையும் அதன் மூலம் பெற்ற சந்தோஷத்தையும் நீரோடையில் வீசி எறிவது அவரின் ஆழ்ந்த மன வேதனையை காட்டுகிறது. அந்த வேதனை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகளே இல்லை.

வியட்னாமுக்கு சென்று போர் செய்யும் வேண்டுமென்று அமெரிக்கா கட்டளை இருக்கும்போது, நான் வியட்நாமுக்கு செல்ல மாட்டேன் வியட்நாமுக்கு எதிராக போர் செய்ய மாட்டேன் என்று அமெரிக்காவின் கட்டளையை பாடையில் ஏற்றுவது, முகமது அலியின் தைரியத்தை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை.

அவர் குத்துச்சண்டையில் வெற்றி பெற்று வரும் பணத்தை தர்மம் செய்கிறார். அனாதை இல்லத்திற்கு கொடுக்கிறார். பசியால் வாடுபவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்கிறார். உடை இல்லாதவர்களுக்கு உடை எடுத்துக் கொடுக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது புத்தகத்தை எழுதிய ஆசிரியர் முகமது அலி மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தியை புத்தகத்தில் பதிவு செய்யக்கூடாது என்ற ஏக்கம் கொண்டு புத்தகத்தை படிக்கும் போது பதட்டம் தோன்றுகிறது. அவரைப் போல் நாமும் நம்மால் முடிந்தவரை தர்மம் செய்ய வேண்டும் என்று எண்ணம் நானே மகத்தானவன் என்ற புத்தகம் என் சிந்தனைக்கு வேலை கொடுத்தது. என்னை செயல்படவும் வைத்தது

கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவர்களைவிட கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லாதவர்கள் அதிகமாக மக்களைப் பற்றி யோசிக்கிறார்கள். மக்களுக்காக போராடுகிறார்கள். மக்களுக்கு உதவி செய்கிறார்கள். மக்கள் சிந்தனையாலேயே வாழ்கிறார்கள் என்ற செய்தி முகமது அலி நடைமுறை வாழ்க்கை எனக்கு புரிய வைத்தது

அவர் மதர் தெரேசாவை சந்தித்து, நெல்சன் மண்டேலாவை சந்தித்தது, மக்களுக்கு பண உதவி செய்வது போன்ற செயல்கள் முகம்மது அலி கருப்பாக இருந்தாலும் அவருடைய தூய்மையான வெள்ளை மனதை காட்டுகிறது

மகத்தானவர்களின் மகத்தானவன் என்ற வார்த்தை நூலுக்கு நூறு சதம் பொருத்தமே

திருக்குறள் எழுதினார் திருவள்ளுவர் நின்றார்.

விடுதலை தழும்புகள் எழுதினார் அகத்தியலிங்கம் நின்றார்.

நீங்கள் நானே மகத்தானவன் புத்தகத்தை எழுதினீர்கள். ஆசிரியர்கள் வரிசையில் நின்று விட்டீர்கள்

நானே மகத்தானவன் புத்தகத்தை படிப்பவர்களை ஓரளவுக்காவது இந்த புத்தகம் மகத்தானவர்களாக மாற்றும்

இப்படிக்கு

Aதோழமையுடன்

 

எம்.செல்வராஜ்

 

சிபிஐஎம் காக்காவாக்கம் கிராமம்

 தண்டலம் அஞ்சல்

 பெரியபாளையம் வழி

 திருவள்ளூர் மாவட்டம்

பின்கோடு 61108

வியாழன், நவம்பர் 06, 2025

45 திபெத் நீர் மின்சக்தி உள்கட்டமைப்பின் உச்சம்




அ.பாக்கியம்

முதலாளித்து சமூக அமைப்பு எப்பொழுதும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை மையப்படுத்தியே இருக்கும். கச்சா பொருட்கள், போக்குவரத்து வசதிகள், வரி சலுகைகள், சீதோசன நிலைகள், குறைந்த கூலிக்கான தொழிலாளர்கள் கிடைக்கக்கூடிய பகுதிகளில்  தான் முதலாளிகள் தங்களது மூலதனத்தை கொட்டுவார்கள். சந்தை பொருளாதாரத்தின் விதிகளில் ஒன்றாகவே இதை மாற்றி விட்டார்கள்.

சோசலிச சமூக அமைப்பை உருவாக்கும் கடமையை செய்யும் கம்யூனிஸ்ட்கள் திட்டமிட்ட பொருளாதாரம், சந்தை பொருளாதாரம் ஆகியவற்றை கடைப்பிடிக்கக்கூடிய அதே நேரத்தில் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை சமநிலைப்படுத்துவதற்கான திட்டங்களையும் உருவாக்குவார்கள்.

திபெத்தில் அவ்வளவு எளிதாக அடிப்படை உள்கட்டமைப்புகளை உருவாக்கிவிட முடியாது. ஏனெனில் அது உயரமான மலைகளும், கரடுமுரடான நிலப்பரப்பு, பனியும் பனிப்பாறைகளும் குளிரும் நிறைந்த பிரதேசமாகும். இங்கு உள்கட்டமைப்பை உருவாக்குவது மிக சவாலான பிரச்சனை மட்டுமல்ல மிகப்பெரும் அளவு லாபம் தராத முதலீடுகளை செய்ய வேண்டி இருக்கும். அதிலும் மிகவும் பின்தங்கிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற பிரதேசத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மிக மிக பின்தங்கிய நிலைமையில் இருந்த திபெத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீன மக்கள் குடியரசு உலகமே ஆச்சரியப்படும் வகையிலான மாற்றங்களை  உருவாக்கியது.

எரிசக்தி துறைக்கான கட்டமைப்புகள்

உள்கட்ட அமைப்பின் மிக முக்கிய அங்கமாக இருக்கக்கூடிய எரிசக்தி, சாலை, ரயில், விமான போக்குவரத்து போன்றவற்றை அங்கு உருவாக்கினார்கள். சீன சோசலிசத்தை அடைய வேண்டும் என்ற இலக்கோடு அளப்பெரிய பணிகளை சீன மக்கள் குடியரசு பல தடைகளையும் தகர்த்தெறிந்து அங்கு உட்கட்டமைப்பை உருவாக்கியது. இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியில் உருவான உள்கட்டமைப்பு சாதனைகளாகவும் அதிசய நிகழ்வுகளாகவும் காணப்படுகிறது.

 

மனித தேவைகள் உட்பட அனைத்து தேவைகளுக்கும் மின்சாரம் மிகவும் அடிப்படையானது. 1950 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு திபெத்தில் ஒரு நீர் மின் நிலையம் மட்டும்தான் இருந்தது. இதிலிருந்து பெறப்படும் மின்சாரம் நிலப்பிரபுக்களின் வீடுகளுக்கு மட்டும்தான் பயன்படுத்தப்பட்டது. புரட்சிக்குப் பிறகு தான் நீர் மின் சக்தி சூரிய, மின் சக்தி, காற்றாலை மின் சக்தி என பல புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களை உருவாக்கி திபெத்தில் எரிசக்தி வலை அமைப்பை வெற்றிகரமாக நிர்மானித்து விட்டார்கள்.

இந்த உள்கட்டமைப்பு திபெத்தின் பொருளாதார வளர்ச்சியில் சிறப்பான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் அதே நேரத்தில் அண்டை நாடுகளுடனும் பொருளாதார இணைப்பை எளிதாக மாற்றி உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

திபெத்தின் புவியியல் நிலைமைகளை ஆய்வு செய்து இங்கு பிரதானமாக நீர் மின்சாரத்தை உருவாக்க முடியும் என்று அரசு தீர்மானித்தது. காரணம் வானுயர்ந்த மலைகளில் இருந்து பல ஆறுகள் பாய்ந்து ஓடுகிறது. இது பல பிரதேசங்களையும் சில நாடுகளையும் கடந்து செல்கின்றது. ஆயிரக்கணக்கான ஆறுகள் உள்ளன. 20க்கும் மேற்பட்ட ஆறுகள் 10,000 சதுர கி.மீ.க்கு மேல் வடிகால் பரப்பளவையும், 100 க்கும் மேற்பட்டவை 2,000 சதுர கி.மீ.க்கு மேல் பெரியதாகவும், மேலும் பல ஆயிரக்கணக்கான ஆறுகள்  100 சதுர கி.மீ.க்கு மேல் பரப்பளவையும் கொண்டவை.

நீர் மின் நிலையங்கள் கட்டமைப்புகள் அதிகரிப்பு

இங்கு நீர் மின் நிலையங்களை அமைத்தால் அவை நம்பகத் தன்மை உடையதாகவும், நிலையானதாகவும் இருக்கும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு முடிவு செய்தது. நீர் மின் திட்டங்களை உருவாக்குவதற்கு பெரும் அளவு முதலீடுகளை மக்கள் சீன குடியரசு செய்தது. 1950 ஆம் ஆண்டு ஒரே நீர் மின் நிலையத்தைக் கொண்டிருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு மொத்த மின்சார உற்பத்தியில் நீர் மின் நிலையங்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் 94 சதவீதம் ஆகும். மீதம் உள்ள 6 சதவீதம் காற்றாலை மூலமாகவும், சூரிய சக்தி மூலமாகவும் பெறப்படுகிறது.

 

2024 ஆம் ஆண்டு தரவுகளின் படி திபத்தில் 193 நீர் மின் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது. இவற்றில் நூற்றுக்கு மேற்பட்டவை சிறிய மின் உற்பத்தி நிலையங்கள். பத்து நீர் மின் நிலையங்கள் 50 மெகா வாட்டுக்கு மேல் உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்றது. மேலும் பலமெகா நீர் மின் நிலையங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டில் 11 திட்டங்களை தொடங்கி 700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகப்படுத்தியது. தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிலும் 15 திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் கூடுதலாக 860 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தொடர்ச்சியாக சீனா திபெத்தில் கவனம் செலுத்துகிறது.

பரந்த அளவிலான மின் உற்பத்தி நிலையங்கள் முதல் மிதமான மின் உற்பத்தி நிலையங்களையும் உள்ளூர் முக்கியத்துவம் வாய்ந்த முறையில் நிறுவி வருகிறது. இந்தத் திட்டங்களில் சில திட்டங்கள் முழுமையான மானிய விலையில் மக்களுக்கு கொடுக்கப்படுகின்றன. பல்வேறு விதமான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இராணுவ வசதிகளுக்கும் இந்த மின் நிலையங்கள் உதவி செய்கின்றன.

சூரிய மின்சக்தி உற்பத்தி

திபெத்தின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க சொத்துக்களில் ஒன்றாக சூரிய மின்சக்தி உற்பத்தி முறையும் உள்ளது. லாசா பகுதி ஆண்டுக்கு 5,852 முதல் 8,400 MJ/m2 வரையிலான சூரிய கதிர்வீச்சை பெறுகின்றது. சுவாரஸ்யமான ஒரு அம்சம் திபெத்தின் உயர்ந்த பகுதிகளில் வெயில் மிகுந்த பகுதியும் ஒன்றாகும். மேற்கு பகுதிகளில் ஆண்டுக்கு 3000 மணி நேரத்திற்கும் அதிகமான சூரிய ஒளி கிடைத்தாலும் லாசாவில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 8,160 MJ/m2 சூரிய ஒளியும் கிடைக்கிறது. இதனால் யாங்பாஜிங் சூரிய பண்ணை நிறுவி 1.1 ஜிகா வாட் மின்சார தயாரிப்பை செய்ய முடிகிறது

திபெத்தில் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரம் உயர் மின்னழுத்த மின்மாற்றிகள் மூலமாக ஏற்றத்தாழ்வான பிரதேசங்களில் உள்ள இடங்களுக்கு இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மின்சாரத்தை சீரான முறையில் விநியோகிக்கிறார்கள். மற்றொரு குறிப்பிட்ட தக்க சிறப்பம்சம் மின்விநியோகத்தில் இயற்கை சீற்றத்தால் தடை ஏற்படுகிற பொழுது மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்காக மிகப்பிரமாண்டமான பேட்டரி அமைப்புகளை உருவாக்கி அவற்றில் மின் சக்தியை சேமிப்பு செய்து விநியோகத்தை தொடர்கிறார்கள். இதற்காக ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பங்களில் அரசு மிகப் பெரும் முதலீடுகளை செய்கிறது.

திபெத்தில் உள்ள மொத்த கிராமங்களில் 96.5% கிராமங்களுக்கு மூன்று கட்டு மின்சார விநியோகத்தை கொடுக்கிறார்கள். இதனால் மின்சார நுகர்வு 2012 ஆம் ஆண்டு 2.88 பில்லியன் கிலோவாட் மணி நேரத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டு 11.98 பில்லியன் கிலோவாட் மணி நேரமாக பெருமளவு அதிகரித்து உள்ளது. இதனால் தொலை தூரத்தில் உள்ள மலைப்பிரதேசங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் வாழக்கூடிய மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைக்கிறது. 2020 ஆம் ஆண்டு தரவுகளின்படி சீனா முழுவதும் 14.9 நிமிடங்கள் சராசரி மின் வெட்டாகும். ஆனால் மாறுபட்ட புவியியல் அமைப்பில் இருக்கிற திபெத்தின் மின்வெட்டு 5.5 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இவையெல்லாம் நாம் அறிந்திடாத, இந்தியாவில் நாம் அனுபவிக்க முடியாத மின்சார சேவையாகும்.

உலக நாடுகளின் மின் தேவையை பூர்த்தி செய்யும்

மிக முக்கியமாக இரண்டு நீர் மின் திட்டங்களை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். திபெத்திலிருந்து உருவாகிற யார்லோங் சாங்போ நதியில் பிரம்மாண்டமான நீர்மின் திட்டம் இந்த ஆண்டு (2025) கட்டப்படுகிறது. இது லீகியாங்க் சீனாவின் பிரதமராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட நூற்றாண்டு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதன் முதலீடு 1.2 ட்ரில்லியன் யுவான் ஆகும். அதாவது 168 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சமமானது. இந்தத் திட்டமானது  சீனாவில் யாங்சே நதியில் 254.2 பில்லியன் யுவான் செலவில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள மூன்று கோர்ஜஸ் அணையின்  மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்ற 88.2 மில்லியன் மெகாவாட் மின்சாரத்தை விட அதிகமாக 300 மில்லியன் மெகாவாட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இந்தத் திட்டம் நிறைவேறுகிற பொழுது திபெத்திற்கு மட்டுமல்ல தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து போன்ற மின் பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கும் மின்சாரம் வழங்க முடியும். இந்தியா உட்பட இந்த மின்சாரத்தை பெறுகிற பொழுது மலேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதியை குறைக்க முடியும் என்று இந்தத் திட்டத்திற்கான அறிக்கை கூறுகிறது.

 

மற்றொரு முக்கியமான திட்டம் தென்மேற்கு சீனாவில் உள்ள யுன்னான் மாகாணம் வழியாக கிழக்கு மியான்மரில் பாய்ந்து அந்தமான் தீவுக்கடலில் கலக்கும் நூ நதியின் துணை  நதியில் செயல்படுகின்ற நீர் மின் நிலையம் ஆகும். இங்கு இருக்கிற நீர்மின் நிலையத்தில் தற்போது 80 டன் எடையுள்ள டர்பனை சீனா சொந்தமாக தனது நாட்டில் வடிவமைத்து பொருத்தி உள்ளது. இது உலகத்திலேயே மிகப்பெரிய டர்பன் ஆகும். இந்த மின் நிலையம் மொத்தம் ஒரு மில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டதாகும். ஆண்டுதோறும் சுமார் 4 பில்லியன் கிலோவாட் மணி நேரங்களை உற்பத்தி செய்யும் வகையில் இந்த ராட்சச டர்ன் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1.3 மில்லியன் டன் நிலக்கரிகளை எரிப்பது குறையும். அதேபோல கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம் 3.4 மில்லியன் டன் குறையும். சீனா 2060 ஆம் ஆண்டு கார்பன் நடுநிலையை அடைய வேண்டும் என்ற இலக்கை வெற்றிகரமாக முடிக்க திட்டமிட்டுள்ளது. திபெத்தில் நீர்மின் சக்தி உற்பத்தி மிக முக்கியமான எரிசக்தியாக உள்ளது. ஏனெனில் இது திபெத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது என்பதையும் கடந்து சீனாவின் கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டை பெருமளவு குறைக்க உதவுகிறது. சீனாவின் மின்சார உற்பத்தியில் 25 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரமாக 2030 ஆம் ஆண்டு மாற்ற வேண்டும் என்ற இலக்கு அதற்கு முன்பாகவே நிறைவேறுவதற்கான கட்டமைப்பை துரிதப்படுத்தி உள்ளது.

தன்னளவில் அனைத்தையும் பெற முடியாத ஒரு பிரதேசமாக இருளில் உலர்ந்து கொண்டிருந்த திபெத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, இன்று உலகின் பல பகுதிகளுக்கு மின்சாரத்தையும், இதர உற்பத்திகளையும் வழங்கக்கூடிய அளவிற்கு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதில் இருந்து  சீன சோசலிசத்தின் மகிமையைப் புரிந்து கொள்ள முடியும்.

டிஜிட்டல் யுகத்தில் திபெத்

உள்கட்டமைப்புகளில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக டிஜிட்டல் வசதிகள் மாறிவிட்டன. உள்ளூர் துவங்கி உலகம் முழுவதும்   இணைக்க கூடிய ஒரு தொழில் நுட்பமாக டிஜிட்டல் தொழில் நுட்பம் கோலோச்சுகிறது. திபெத்தின் மலைக் கிராமங்களில், தொலைதூர வீடுகளுக்கும் டிஜிட்டல் வசதியை செய்து கொடுப்பதில் சீன மக்கள் குடியரசு குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்தி உள்ளது.

 

தன்னாட்சிப் பிராந்தியத்தில் மின்-அரசு வலைதளங்கள், ஒருங்கிணைந்த அடிப்படை கிளவுட்தளம், பெரிய அளவிலான தரகட்டுப்பாட்டுமையம் ஆகியவை பெரும்பாலும் திபெத்தின் அனைத்துப்  பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளது. திபெத்தின் கிழக்குப் பகுதிகளிலிருந்து வளர்ச்சிக் குறைவான மேற்குப் பகுதிக்கு அதிக கணினி அமைப்புகளை உருவாக்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தி சாதித்து இருக்கிறார்கள்.

5ஜி இணைப்புகளை வழங்கக்கூடிய 8,099 நிலையங்களை அமைத்திருக்கிறார்கள். இதன் மூலமாக 3,12,600 கிலோமீட்டர் தூரத்திற்கு பைபர் ஆப்டிக்கேபிள்கள் அமைக்கப்பட்டு இணைப்புகள் தடையின்றி கிடைக்கின்றது. திபெத் தன்னாட்சிப்  பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் முக்கிய நகரங்களுக்கும் 5ஜி நெட்வொர்க் இணையதளம் வழங்கப்பட்டுள்ளது. இதனையும் கடந்து இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு அதன் உட்பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் மொபைல் சிக்னல் கிடைக்கக்கூடிய அளவுக்கு கோபுரங்கள் நிறுவப்பட்டு உள்ளது.

பைபர் பிராட்பேண்ட், 4ஜி, ரேடியோ, தொலைக்காட்சி சிக்னல்கள் திபெத் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நிர்வாக கிராமங்களுக்கும் கிடைக்கிறது. இவை அனைத்தும் உள்ளூர் மக்களை உலகத்துடன் ஆன்லைனில் இணைத்து உள்ளது.

ஆப்டிகல் கேபிள்களும், செயற்கைக் கோள்களை கொண்ட நவீன தகவல் தொடர்பு வலை அமைப்புகளும் தகவல் விரைவுச் சாலையின் ஒரு மிகப்பெரிய பகுதியாகும். திபெத் முழுவதும் இந்தத்  தகவல் விரைவுச் சாலை முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆப்டிகல் பிராட்பேண்ட் கவரேஜ் திபெத்தில் 99 சதவீதத்தை அடைந்துள்ளது. இதனால் சேவை தொழில்கள் பரவலான வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலமாக மின் வணிக சேவை அதாவது ஆன்லைன் சில்லறை விற்பனை மிகப்பெரும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இக்காலத்தில் ஆன்லைன் சில்லறை விற்பனை 20 பில்லியன் ஆர்எம்பி யுவானை கடந்துள்ளது. திபெத்தில் டிஜிட்டல் பொருளாதரத்தின் அளவு 33 பில்லியன் ஆர்எம்பி யுவான் ஆகும். 2019 ஆம் ஆண்டு 5ஜி நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பொருளாதார வளர்ச்சியின் வேகம் அதிகபட்டுள்ளது.

 

கல்வி வட்டாரங்களிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. கலாச்சாரத்துறையை மேம்படுத்துவதற்கும் டிஜிட்டல் அருங்காட்சியகங்கள், டிஜிட்டல் கலாச்சார மையங்கள் போன்றவை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. திபெத்தில் டிஜிட்டல் மையம் என்பது தகவல் பரவலை விரிவுபடுத்துவதுடன், அறிவுவளர்ச்சியும் ஏற்படுத்துகிறது. உழைப்பு, மூலதனம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற உற்பத்திக் காரணிகளில் மேம்பாட்டை உருவாக்குகிறது. நகர்ப்புற கிராமப்புற இடைவெளியை குறைக்கிறது.

அ.பாக்கியம்

 

 

47 திபெத்: மக்களுக்கான கல்வி, மருத்துவம், வேலை சமூக பாதுகாப்பு

  அ.பாக்கியம் சோஷலிச கொள்கையை ஏற்றிருக்கக் கூடிய ஒரு அரசு உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக என்றென்றும் பாடுபடும். திப...