Pages

ஞாயிறு, மார்ச் 30, 2025

காதல் கல்யாணம் சர்ச்சும் சர்ச்சையும்



காலம் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கடந்து போய்விட்டது. இணையர் டி.ஏ.லதாவுடனான நிறைவான திருமண வாழ்வு 36 ஆண்டுகளை 36 மாதங்கள் போல் கடந்து 37 ஆம் ஆண்டில் குதூகலத்துடன் அடி எடுத்து வைத்துள்ளது. 1989ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி எங்கள் இருவரின் திருமணம் நடந்தது. சொர்க்கத்திலோ, சர்ச்சிலோ நிச்சயிக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியால் நிச்சயிக்கப்பட்டது. கட்சிக்குள் நான் காலடி எடுத்து வைத்து 46 ஆண்டுகள் ஆகின்றன. 36 ஆண்டுகள் கட்சி வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும் இணைந்தே நாங்கள் நடத்தி இருக்கிறோம்.

1978ல் நான் மார்க்சிஸ்ட் கட்சியில் பரீட்சார்த்த உறுப்பினரானேன் (Candidate Member). அப்போது ஆதரவாளர் குழு என்றெல்லாம் இல்லை.  1979இல் கட்சி உறுப்பினராகி 1983 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அப்போது செய்து வந்த அரசுப் பணியை விடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக ஆனேன். தற்போது ஆறு தொகுதி குழுக்களாக இருக்கக்கூடிய மேற்கு சென்னை பகுதி குழுவிற்கு தோழர் கே. கிருஷ்ணன் செயலாளராக இருந்தார். நான் அந்த பகுதிக் குழுவிற்கான முழுநேர ஊழியனாக சென்னை பெரம்பூர் குக்ஸ் சாலையில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றத் தொடங்கினேன். மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட  சென்னை மாவட்டக்குழு அலுவலகமும் (ஏ.பி.நினைவகம்) அதுதான்.

1985 ஆம் ஆண்டு எனது இணையர் டி.ஏ. லதா அதே அலுவலகத்தில்  இருந்த சிஐடியு மாவட்ட குழுவிற்கு அலுவலகப் பணிக்காக வந்தார். தோழர் வி.பி. சிந்தன்தான் லதாவை அலுவலகப் பணிக்காக அழைத்து வந்தார்.  மார்க்சிஸ்ட் கட்சியில் எனக்கு பிடித்த தலைவர்களில் தோழர் வி.பி.சிந்தனும் ஒருவர். அவரே எனக்கு பிடித்தமான பெண்ணையும் அழைத்து வந்திருக்கிறார் என்று லதாவுடன் காதல் வயப்பட்ட பொழுதில் நான் நினைத்திருக்கிறேன்.

பொதுவாகவே காதல் வயப்பட்டால் எந்த அறிவுரையும் காதில் ஏறாது. தடைகளை தாண்டுவதும், முட்டுக்கட்டைகளை முட்டித் தள்ளுவதும் காதலில்தான் காரிய சாத்தியம்.  எதிர்ப்புகளை தகர்க்கும் சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு. இதற்கு செல்வ செழிப்போ, உடல் பலமோ, படை பலமோ தேவை இல்லை. உண்மைக் காதல் என்ற சக்தி ஒன்றே போதும்.  எங்கள் காதலிலும் அதுதான் நடந்தது. மதம் வேறு, சாதி வேறு, உணவு முறைகள் வேறு, வாழ்விடம் அமைந்த சூழல் வேறு என்று வேறு வேறாக இருந்தாலும் எங்கள் மனம் ஒன்றாக இருந்தது. காதலை வாழ வைப்போம் என்ற உன்னதமான உணர்வு இதற்கெல்லாம் வேராக இருந்தது. இனிப்புக் கடலையுடன் எங்கள் மாலைப் பொழுதுகள் இனிதே கழிந்தது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) மாநில செயலாளராக அப்போது தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் இருந்தார். நான் ஒன்றுபட்ட சென்னை மாவட்டக்குழு வாலிபர் சங்க மாவட்ட  தலைவராக செயல்பட்டேன். பொதுவாக திருமணமாகாத முழுநேர ஊழியர்களுக்கு மூத்த தோழர்கள் ‘அலயன்ஸ்’ பார்ப்பது வழக்கம். எனக்கும் அப்படி பெண் பார்க்கும் படலத்தை தோழர் அகத்தியலிங்கம் நடத்திக் கொண்டே இருந்தார். நான் பிடிகொடுக்காமல் மறுத்துக் கொண்டே இருந்தேன். நானும் லதாவும் காதல் வயப்பட்டதால், அவர் திருமணம் பற்றிய பேச்சை எடுக்கும்போதெல்லாம் கழுவிய மீனில் நழுவிய மீனாக இருந்தேன். அவரே விடாக்கண்டனாக இருந்தார். நானோ கொடாக்கண்டனாக இருந்தேன். ஒரு கட்டத்தில் அவரிடம் எங்கள் காதலை போட்டுடைத்து விட்டேன். நீயா என்று  வியப்பாக பார்த்தவருக்கு என் காதல் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. என் திருமணத்திற்கு சம்மதம் பெற  லதாகுடும்பத்தில் பேசுவதற்கு  உதவினார்.   

லதா மடிப்பாக்கத்தில் குடியிருந்தார். நான் வியாசர்பாடி சாஸ்திரி நகரில் குடிசைப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தேன். எனது குடும்பம் மிக மிகப் பெரியது. தலைக்கட்டு என்று உட்கார வேண்டும் என்றால் ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு பிடிக்க வேண்டும். நான் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தை கடைபிடிக்க கூடிய குடும்பத்தை சேர்ந்தவன். எங்கள் குடும்பம் குடியிருந்த சாஸ்திரி நகரில் 90 சதவீதம் பேர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 75 சதவீதத்தினர் எனது உறவினர்களாக இருந்தார்கள். இதில், உறவினர்கள் பலர் மார்க்சிஸ்ட் கட்சியிலும் இருந்தார்கள்.

கிறிஸ்தவ மதத்தின் கடிவாளம், பிடிமானம் அனைவருக்கும் தெரிந்ததுதான். கருவில் இருந்து கல்லறை வரை மத சடங்குகளையும் வாழ்க்கை முறைகளையும் இணைத்து இருப்பார்கள். குழந்தைக்கு பெயர் வைத்து ஞானஸ்நானம் கொடுப்பது, பைபிள் அடிப்படை போதனைகள் கற்றப்பிறகு புது நன்மை கொடுத்து முழு கிறிஸ்துவனாக மாற்றுவது, திருமணம், இறப்பு, கல்லறை என தொடக்கத்தில் இருந்து இறுதி வரை எல்லாவற்றிலும் ஒரு இணைப்பு இருக்கும். சர்ச் வரி, கல்லறைக்கான வரி என வசூலிப்பார்கள். இந்த சங்கிலி பிணைப்பை அந்த சபையில் இருக்கும் கிறிஸ்தவர்கள் யாரும் மீறமுடியாது. அதாவது ஒப்புதலுடன் கூடிய கட்டுப்பாடுகள். இதில் என் குடும்பத்தை சேர்ந்தவர்களும் விதிவிலக்கல்ல.

கட்சி சார்பில்தான் காதல் திருமணம். சர்ச் சார்பில் இல்லை என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதிலும் என் இரண்டு தங்கைகளுக்கு திருமணம் செய்துவிட்டு அதன்பிறகுதான் நான் திருமணம் செய்து கொள்வது என்று இருந்தேன். காரணம் நான் சர்ச்சை விட்டு வெளியில் திருமணம் செய்தால் கண்டிப்பாக எனது தங்கைகளுக்கு சர்ச்சில் திருமணம் செய்ய மறுத்து விடுவார்கள். அது அன்றைக்கு இருந்த எழுதப்படாத சட்டம். இன்று நிலைமை மாறி இருக்கிறது.

கட்சியின் மூத்த தோழர்கள் பலரும் என் திருமணத்தில் அக்கறை காட்ட ஆரம்பித்தனர். அப்போது மாவட்ட செயலாளராக இருந்த தோழர்.வி.எம்.எஸ்.(வி.மீனாட்சி சுந்தரம்), தோழர்களுடன் கலந்து பேசி கல்யாண தேதி குறித்து ஒரு முடிவு எடுங்கள் என்று என்னிடம் ஆலோசனை கூறினார். அதன்படி,  சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு டீக்கடை-ஓட்டலில் தோழர்கள் டபிள்யூ.ஆர்.வரதராஜன், சு.பொ.அகத்தியலிங்கம், கே.கிருஷ்ணன், கேஎன்ஜி என்று எங்களால் அன்புடன் அழைக்கப்படும் கே. என். கோபாலகிருஷ்ணன், லதாவின் அண்ணன் டி.ஏ.விஸ்வநாதன்  ஆகியோரோடு நானும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, தலைவர்கள் கிடைக்கக்கூடிய தேதியில் எங்கள் திருமணத்தை நடத்துவது, குறிப்பாக தோழர் ஏ.நல்லசிவன் கிடைத்தால் அவர் தலைமையில் திருமணத்தை நடத்துவது என்று முடிவு செய்தோம். இப்படியாக தேநீர் கடையில் திருமணதேதி நிச்சயிக்கப்பட்டது. இந்த தகவலை தோழர் விஎம்எஸ்சிடமும் கூறினேன். அவரும் ஏ.நல்லசிவனை ஃபிக்ஸ் செய்யும் ஏற்பாட்டை செய்தார். திருமணத்தை பாரிமுனையில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான மண்டபத்தில் நடத்துவது என்று பேசி முடித்தோம். அதே நேரத்தில் 1989ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வில்லிவாக்கம் தொகுதியில் தோழர் டபிள்யூ. ஆர். வரதராஜன் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். வில்லிவாக்கம் தொகுதியில்  ஒரு பகுதி (அதாவது இன்றைய வில்லிவாக்கம் தொகுதி) மேற்கு சென்னையில் வருவதால் நான் முழுமையாக தேர்தல் பணியாற்ற சென்றுவிட்டேன். தேர்தல் நடந்தது ஜனவரி 21. எனது திருமணம் நடந்தது ஜனவரி 30.

இதுஒரு புறமிருக்க எனது திருமணத்திற்காக கட்சியின் சார்பில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு (போஸ்ட் கார்டு சைஸ்) தோழர்களிடம் கொடுக்கப்பட்டது. அச்சிட்ட பிறகுதான் அழைப்பிதழையே நான் பார்த்தேன் என்ற தகவல் உங்களுக்கு வியப்பூட்டலாம்.  கட்சியின் வழக்கமான வினியோக முறையில் அழைப்பிதழ் வினியோகிக்கப் பட்டது. நான் குடியிருக்கும் சாஸ்திரி நகரில் சுமார் ஆயிரம் குடும்பங்கள்  வரை இருக்கும். எல்லா குடும்பங்களுக்கும் அழைப்பிதழ் கொடுப்பது என்ற முறையில் என் சகோதரர், மைத்துனர் மற்றும் கட்சித் தோழர்கள் சிலர் சேர்ந்து திருமண அழைப்பிதழை கொடுத்து முடித்தார்கள். நான், தேர்தல் பணி செய்த வில்லிவாக்கம் பகுதியில் மட்டும் அழைப்பிதழ்களை கொடுத்தேன்.

சர்ச்சுக்கு வெளியே எங்கள் ஊரில் திருமணம் நடந்ததே இல்லை.அப்படி நடந்தால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அங்கு நமது இயக்கம் உருவான பிறகு எங்களைப் போன்றவர்களை இயக்கத்தில் சேர்த்த தோழர் லூர்து அவர்களின் திருமணம் அவரது வீட்டில் பந்தல் போட்டு நடைபெற்றது. அதன் பிறகு எனது திருமணம்தான் ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து சர்ச்சுக்கு வெளியில் நடைபெற்றது.

என் திருமண  அழைப்பிதழ் கொடுக்கப்பட்டவுடன் எங்கள் பங்கு சாமியாருக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்து விட்டது. அழைப்பிதழ் கொடுக்கும் பொழுதே வைதீக கிறிஸ்தவர்கள் பலரும் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்திருக்கிறார்கள். எனது உறவினர்களுக்குகூட இந்த திருமணத்தை சர்ச்சிற்கு வெளியே நடத்துவதில் முழுமையான உடன்பாடு இல்லை.  ஆனாலும் எனது முடிவுக்கு அனைவரும் ஒத்துழைத்தார்கள். கட்சியிலிருந்த கணிசமான தோழர்கள் உறவினர்களாகவும் இருந்தார்கள் என்பதும் இதற்கு ஒரு காரணம். இந்த நேரத்தில் எனது தாயின் முடிவு உறவினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது. அவர் பெயர் ஜெபமாலை மேரி. கையில் எப்போதும் ஜெபமாலையை உருட்டிக் கொண்டே இருப்பார். கைகளுக்கு வேறு பணி இருக்கும்போது ஜெபமாலை அவர் கழுத்தில் தொங்கும்.  கழுத்தையும் கையையும் தவிர அந்த ஜெபமாலை எப்பொழுதும் அவரை விட்டு அகன்றதே இல்லை. அவரது பெயரை போலவே இறுதிவரை அவருடனே இருந்தது. இறைபக்தி மிக்கவர் அவர்.

கிறிஸ்துவ மத அடிப்படையில் திருமணம் செய்ய வேண்டும் என்றால் தேவாலயத்திற்கு சென்று ஓலை எழுதி அதாவது ஒப்பந்தம் செய்து அவற்றை மூன்று வாரங்கள் தொடர்ந்து வாசிப்பார்கள். அப்போது மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கலாம். இந்த நடைமுறை இன்றுவரை அமலில் உள்ளது. மேற்கண்ட சடங்குகள் எதையும் நீ செய்யவேண்டாம்; எவ்வித சடங்குகளும் வேண்டாம். நீ சர்ச்சில் நடைபெறும் பூசைக்கு வந்து ஒரு மணி நேரம் அமர்ந்து தாலி கட்டக் கூடிய வேலையை மட்டும் செய் என்று என் தாய் என்னிடம் கேட்டுக் கொண்டார். நான் தாலியே கட்டப் போவதில்லை என்று கூறி அதற்கான காரணத்தை சொன்ன பொழுது அவரும் அதை ஏற்றுக் கொண்டார். அது மட்டுமல்ல மற்றவர்களையும் திருமணத்திற்கு வரவேண்டும் என்று  கூறி பிரச்சனையை முடித்து வைத்தார். மதத்தை, கடவுளைவிட தம் மக்களை (குழந்தைகளை) நேசிப்பவர்களாகத்தான் எல்லா தாயும் இருக்கிறார்கள். இதில் என் தாயும் அடக்கம் என்பதில் எனக்கு எப்போதும் பெருமைதான்.

எங்கள் வீட்டில் ஒப்புக் கொண்டாலும், பங்கு சாமியார் விடுவதாக இல்லை. பிரச்னையை பெரிதாக்கி கொண்டே போனார்.  என் திருமண அழைப்புக் கிடைத்தவுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் பூசைகளில் பிரசங்கம் செய்யும்போது, ‘‘இயேசுவிற்கு விரோதமாக ஒரு திருமணம் (என் திருமணம்) நடைபெற உள்ளது. இதற்கு யாரும் செல்லக்கூடாது’’ என்று கட்டளை பிறப்பிப்பார். மத பிடிமானம் அவர் கண்ணை மறைத்தது. அந்த பூசையில் கலந்து கொண்டிருக்கும்  எனது அம்மா உட்பட சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்களை  மற்றவர்கள் திடுக்கிட்டு திரும்பிப் பார்ப்பார்கள்; திகைத்துப் போவார்கள். திருமணம் நின்றுவிடும் அல்லது திருமண முறை மாறிவிடும் என்று பலரும் நினைத்தார்கள். பாதிரியாரும் அவர் ‘பங்கு’க்கு அடுத்தடுத்த வாரங்களில் ஓலை வாசிப்பதற்கு பதிலாக என் திருமணத்திற்கு எதிராகவே பேசிக் கொண்டிருந்தார். அவர் மட்டுமல்ல... தேவாலய நிர்வாகிகளும் அவரவர் பங்குக்கு திருமணத்திற்கு செல்லக்கூடாது என்ற பிரசங்கத்தை-பிரச்சாரத்தை தனித்தனியாக செய்து கொண்டிருந்தனர்.

இவை எல்லாவற்றையும் மீறி இயக்கம் - உறவினர் என்று அது இணைந்த காலமாக இருந்ததால் திருமணத்திற்கு அனைவரும் கூட்டமாக வந்தனர். அப்பகுதி பொதுமக்களும் வந்து வாழ்த்தினர். கட்சித் தோழர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.  திருமண மண்டபம் நிறைந்து வழிந்து அதே அளவிற்கு வெளியே கூட்டம் நின்றது. மாலை நேரத்தில் நடைபெற்ற அந்தத் திருமணத்தில் மிக்சர், தேநீருடன் விருந்து முடிந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் அதுவும் பலருக்கு கிடைக்கவில்லை. நான் வயிறார விருந்து போடவில்லை என்றாலும் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் எங்களை வாயாற, மனதார வாழ்த்திச் சென்றனர்.

தோழர் விஎம்எஸ்சின் முன்முயற்சியால் எங்களது திருமணம் இனிதே நடந்தது. தோழர் ஏ. நல்லசிவன் திடீரென்று டெல்லி சென்று விட்டதால் தோழர் பி. ஆர். பரமேஸ்வரன் தலைமையில் நடந்த திருமணத்தில் தோழர்கள் விஎம்எஸ், மைதிலி சிவராமன், சவுந்திரராசன், வரதராசன், சு.பொ. அகத்தியலிங்கம், கே. கிருஷ்ணன், சா. செந்தில்நாதன், கே. என். கோபாலகிருஷ்ணன்,கே,கங்காதரன்  உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்திப் பேசினர்.

இதில் மேலும் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் திருமணத்தை பாரிமுனையில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது அந்த மண்டபத்தை வங்கி ஊழியர்களுக்கு மட்டும் கொடுத்து வந்தார்கள். குறைவான செலவில் நடத்த வேண்டும் என்பதை தெரிவித்த அடிப்படையில் ஜிடிசி வங்கியின் தலைவராக இருந்த தோழர் வேணுகோபாலின் குடும்ப நிகழ்வு என்று அனுமதி பெற்று என் திருமணம் நடைபெற்றது. இதுபோன்ற பல நிகழ்வுகள் அங்கு மட்டுமல்ல... எல்லா இடங்களிலும் சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயங்கள் தான். அந்த வங்கியின் அதிகாரியாக, ஆடிட்டராக இருந்தவர் இந்த விஷயத்தை போட்டுக் கொடுத்துவிட்டார். அவர் எங்கள் வீட்டின் அருகில் குடியிருந்தவர்தான். ஒருவகையில் தூரத்து உறவும் கூட. சர்ச்சுக்கு வெளியே திருமணம் நடப்பதில் அவருக்கும் விருப்பமில்லை என்பதால்,  தோழர் வேணுகோபாலை போட்டுக் கொடுத்துவிட்டார். நிர்வாகமும் வேணுகோபாலுக்கு ‘மெமோ’ கொடுத்தது. சங்கம் அதை எதிர்கொண்டு சமாளித்து தீர்த்தது. திருமணம் நடந்த இடத்தைக்கூட பிரச்னைக்கு உள்ளாக்கப்பட்டது.

திருமணம் முடிந்து அடுத்த நாள் எங்கள் வீட்டிற்கு நானும் எனது இணையர் லதாவும் இருசக்கர வாகனத்தில் (அப்பொழுது லேம்பி போலோ என்ற ஸ்கூட்டர். இதை தோழர் டபிள்யூ. ஆர்.வரதராஜன் பயன்படுத்திக் கொண்டிருந்தார். பின்னர் அது வாலிபர் சங்க வேலைகளுக்காக சென்னை மாவட்டத்திற்கு அளிக்கப்பட்டு இருந்தது) ஊருக்குள் சென்றோம். அனைவரும் வேடிக்கை பார்த்தார்கள். பார்வைகள் பலவிதமாக இருந்தது. ஒவ்வொன்றும் விதவிதமான அர்த்தங்களை கொண்டிருந்தது. மழை விட்டும் தூவானம் விட்டபாடில்லை என்ற கதையாக எங்கள் திருமணம் நடந்து முடிந்தாலும், ‘பாதிரியார் பிரச்னை’ விடுவதாக இல்லை.  மீண்டும் தேவாலயத்தில் நடைபெற்ற பிரசங்கத்தின் போது இயேசுவுக்கு விரோதமாக நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டவர்களை கடுமையான முறையில் சாடினார். இது பாவச்செயல் என்று அவர்களுக்கு சாபமிட்டார்.

நான் இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்தாமல் சகஜம் ஆக்குவதற்காக முடிவு செய்தேன். அதற்காக என்னுடைய மிகப்பெரிய நட்பு வட்டத்தை பயன்படுத்தினேன். அவர்களில் ஒருவர் தவிர மற்றவர்கள் யாரும் கட்சியில் இல்லை. சர்ச்சின் செயல்பாடுகளில் இருந்தார்கள். இந்த நட்பு வட்டம் இன்றும் தொடர்கிறது. அவர்களுடன் ஆலோசித்தபின், நானும் லதாவும் இணைந்து நண்பர்கள் வீட்டுக்கு தேநீர் அருந்தச் செல்வது என்று முடிவு செய்தோம்.

அதன்படி, வெற்றிராஜன், நீலமேகம், பங்குராசு, நோவேல், முனியாண்டி, மனோகரன், பிலவேந்திரன், அல்போன்ஸ், அந்தோணி, சில்வஸ்டர், வேதமுத்து, ஆச்சரியம், குழந்தைராஜ், சுந்தர், ராஜன் என நண்பர்கள் புடைசூழ நானும் லதாவும் ஒவ்வொரு தெருவிலும் உள்ள வீடுகளுக்கு சென்று தேநீர் அருந்தி வந்தோம். வழியில் எதிர்படுபவர்களை எல்லாம் விசாரித்து சகஜமாகப் பேசி சென்றோம். அந்த அனுபவம் அலாதியானது. இந்த நண்பர்கள் அனைவரும் இன்றும் என்னுடன் நட்பு பாராட்டுகிறார்கள். இவர்கள் அனைவரும் அரசு ஊழியராக பணியில் சேர்ந்து தற்போது ஓய்வு பெற்று யிரக்கணக்கில் பென்ஷன் வாங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், கட்சி முழுநேர ஊழியராக இருக்கிற என் பணியைத்தான் அவர்கள் பெருமையாக கருதுகிறார்கள்.  

ஊரில் உள்ளவர்கள் என்னோடு சகஜமாகிவிட்டாலும், பாதிரியார் மட்டும் பாடாய்படுத்திக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் நானும் என் நண்பர்களும் சேர்ந்து முடிவெடுத்து பாதிரியாருக்கு மட்டுமல்ல... தேவாலய நிர்வாகிகளுக்கும் புரிகிற பாஷையில் சில விஷயங்களைப் பேசினோம். தொடர்ந்து பேசினால் பொதுக்கூட்டம் நடத்தி பேசவேண்டிவரும் என்று எச்சரித்த பிறகு அவர்கள் யாரும் வாய் திறப்பதில்லை.  பத்து வேர்க்கடலையை எடுத்து சாப்பிடும்போது அதில் ஒரு வேர்க்கடலை சொத்தையாக இருந்துவிட்டால் எப்படியோ அதுபோல்தான் அந்த பாதிரியாரும், என் திருமண நிகழ்வில் அவர் மறக்க முடியாதவராகி விட்டார்.

எனது இணையர் லதா வீட்டில் உள்ளவர்களில் அவரது அண்ணன் விஸ்வநாதன் கட்சியில் இருந்ததால் திருமணத்திற்கான முழு ஒப்புதல் கொடுத்தார். லதாவின் தாயார் ஆரம்பத்தில் தயக்கம் இருந்தாலும் பிறகு முழுமையாக திருமணத்திற்கான ஒப்புதலுடன் திருமணத்தில் கலந்து கொண்டார். லதாவின் சகோதரிகளை திருமணம் செய்து கொடுத்த கொடுத்த இடத்தில் கடுமையான எதிர்ப்பு வந்தது திருமணத்துக்கு செல்லக்கூடாது என்ற தடையும் ஏற்பட்டது அதையும் மீறி அவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டார்கள். காலப்போக்கில் அனைத்தும் சகஜம் ஆகிவிட்டது.

என் திருமண நாளைக் குறித்துப் பேசும்போது, கட்சி முழுநேர ஊழியராக ஆனபின் நான் எந்தெந்த பகுதியில், யார்,யாருடன் பணியாற்றினேன்; களப்பணியில் எனக்கு கிடைத்த அனுபவங்கள்; தோழர்களுடன் நான் களமாடிய பொழுதுகள், களித்திருந்த பொழுதுகள் எல்லாம் சாரை சாரையாக நினைவுகளாக அணிவகுத்து வருகின்றன. முழுநேர ஊழியராக மாறும் யாரும் மலர்ப்பாதையை எதிர்பார்த்து வருவதில்லை. கரடு முரடான பாதையாகத்தான் இருக்கும் என்பதை எதிர்பார்த்தே வருகிறார்கள். காலில் குத்திய முட்களை நாங்கள் எடுத்துப் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கிறோம். சிலநேரங்களில் மனதில் குத்தும்போதும் அதையும் கடந்து போய்க் கொண்டே களமாடி வருகிறோம். சாதி,மதத்தை கடந்த காதல் திருமணத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளை முறியடித்து சந்தோஷமாக வாழும் சாட்சிகளாக நானும், என் இணையர் லதாவும் இருக்கிறோம்.

1.நேர்படபேசு எதிர்மறை எதிர்கொள்

லுங்கியும் வியாசர்பாடி இன்ஸ்பெக்டரும்

 




1980 ஆம் ஆண்டுகளில் சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புயல் வேகத்தில் செயல்பட்ட காலம்.  சென்னை வியாசர்பாடி சாஸ்திரிநகர், பக்தவச்சலம் காலனி ஆகிய பகுதிகளில் வாலிபர் சங்கம் மிக வலுவாக செயல்பட்டது. தெருவாரியாக அறிவிப்பு பலகை வைத்து அன்றாட செய்திகளை, அரசியல் பிரச்சனைகள் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரை எழுதிப் போட்டு சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலம்.  வாலிபர் சங்க அறிவிப்பு பலகையில் எழுதி உள்ளதை நின்று படித்துச் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருந்தது.   சாஸ்திரிநகர் அண்ணா தெரு பிரதான தெருவாகவும், அதன் இரு புறத்திலும் மற்ற தெருக்கள் வரிசையாக பிரிந்து செல்லும். ஒவ்வொரு தெருமுனையிலும் அறிவிப்பு பலகை இருக்கும். இதேபோன்று பக்தவச்சலம் காலனியிலும் அமைந்திருக்கும்.  ஒவ்வொரு தெருமுனையிலும் மாலை நேரங்களில் இளைஞர்கள் அந்த அறிவிப்பு பலகை இருக்கும் இடத்தில் கூடுவார்கள். அப்பொழுது லுங்கி (கைலி) கட்டுவதுதான் பேஷன். கேரளாவில் இஎம்எஸ் உள்ளிட்ட பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் லுங்கி கட்டிக் கொண்டிருப்பார்கள் என்பதெல்லாம் அந்த இளைஞர்களுக்கு தெரியாது. அவர்கள்  ஓய்வு நேரத்தில் மட்டும் லுங்கி கட்ட மாட்டார்கள். விழாக்களுக்கு செல்வது, சினிமாவுக்கு போவது, உள்ளூரில் நடைபெறும் எந்த விழாவாக இருந்தாலும் லுங்கி கட்டிக் கொண்டுதான் செல்வார்கள். இதற்காகவே விதவிதமான லுங்கிகள் வாங்கி வைத்திருப்பார்கள். அது ஒரு கலாச்சாரமாகவே இருந்தது.

அந்த சூழ்நிலையில்தான் வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு புதிதாக ஒரு இன்ஸ்பெக்டர் வந்தார். போலீஸ் அதிகாரி என்றால் சிவ சிவா என்றா இருப்பார். அப்பாவி மக்களை மிரட்டுவது, அயோக்கியர்களுடன் கைகோர்த்து செயல்படுவது என அத்தனை கல்யாண குணங்களும் அந்த இன்ஸ்பெக்டருக்கு உண்டு. ஊரை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் இரவில் மப்ட்டியில் நகர்வலம் போல் ஊர்-வலம் வருவார். கையில் வைத்திருக்கும் டார்ச் லைட்டை முகத்தில் அடித்து போவோர் வருவோரை எல்லாம் டார்ச்சர் செய்வார்.

அவர் ஜீப்பில் சாஸ்திரி நகர் பக்தவச்சலம் காலனிக்கு வந்தால் மன்னருக்கு கட்டியம் கூறுவதுபோல் ஜீப்புக்கு முன்னால் சில போலீஸ்காரர்கள் ஓட்டமும் நடையுமாகச் சென்று கையில் இருக்கும் இரும்புபூண் போட்ட லட்டியால் ரோட்டில் தட்டி சத்தம் எழுப்புவார்கள். மின்கம்பத்தில் டமால் டமால் என்று ஓங்கி அடிப்பார்கள். டெர்ரர் இன்ஸ்பெக்டரை பார்த்தாலே எல்லோரும் பயப்பட வேண்டுமாம். தெருக்களில் நிற்கக்கூடிய பலரும் இன்ஸ்பெக்டரைப் பார்த்தவுடன் பவ்யமாக செல்வதும், சிலர் ‘எதையோ’ பார்த்து ஒதுங்குவது போல் ஒதுங்குவதும், துஷ்டனைக் கண்டால் தூர விலகுவது நல்லதுதானே என சிலர் விலகிச் செல்வதும் அன்றாட காட்சிகளாக நடந்து கொண்டிருந்தது. எவனாவது லுங்கி கட்டி இருந்தால் அவனை உடனே தட்டி தூக்குவது என்ற முறையில் அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார். லுங்கி கட்டிக் கொண்டு கோயிலுக்கு வரக்கூடாது என்ற அறிவிப்பு இருப்பது போல், லுங்கி கட்டிக் கொண்டு ஊருக்குள் தெருக்களில் நடக்க கூடாது என்று அவர் வாய்மொழி உத்தரவு போட்டிருந்தார். என்னையும் சேர்த்து நாங்கள் அனைவரும் லுங்கி தான் கட்டிக் கொண்டிருப்போம். காரணம் எங்களிடம் லுங்கி ஆடை தான் இருந்தது. சொல்லப்போனால் இன்று வரை எனக்கு வேட்டிக் கட்டத் தெரியாது. ஓட்டிக்கோ, கட்டிக்கோ வேட்டியெல்லாம் அப்போது கிடையாது.

இன்ஸ்பெக்டரை பார்த்தவுடன் வாலிபர் சங்கத் தோழர்கள் யாரும் நடையைக் கட்ட மாட்டார்கள். பம்மவும் மாட்டார்கள். இதுவே அந்த இன்ஸ்பெக்டருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஊர் மக்களிடம் உண்டாக்கி இருந்த பய பிம்பத்தை இந்த இளவட்டங்கள் ‘உடை’த்து விடுகிறார்களே என்று அவர் ஆத்திரப்பட்டார். வாலிபர் சங்கத் தோழர்கள் நின்று பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் ஜீப்பை மோதுவது போல் கொண்டு வந்து நிறுத்துவார். அப்படியாவது சிதறி ஓடுவார்களா என்று பார்ப்பார். ஆனால், யாரும் அவரை சட்டை செய்யமாட்டார்கள். தேவை இல்லாமல் ஆக்ஸிலேட்டரை ரைஸ் பண்ணுவார். வாயுக்கோளாறு உள்ளவனைப் போல ஜீப்பும் டர்ரு.. புர்ரு என்று உறுமிக் கொண்டு இருக்கும்.  லுங்கி கட்டக் கூடாது என்ற அந்த சங்கியின் டார்ச்சர் தாங்க முடியாத வாலிபர் சங்கத் தோழர்கள் இதை கண்டித்து கையெழுத்து போஸ்டர் ஒட்டினார்கள். லுங்கி கட்டியவனை விடு; குற்றவாளியைப் பிடி என்று இன்ஸ்பெக்டரை வறுத்தெடுத்தார்கள்.

வாலிபர் சங்கத்தின் சார்பில் சாஸ்திரி நகரில் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்தார்கள்.  அப்போது மாநிலத் தலைவராக இருந்த தோழர் அகத்தியலிங்கம் பங்கேற்றுப் பேசினார். லுங்கி என்பது சாதாரண ஏழை எளிய உழைப்பாளி மக்களின் உடை சில நாடுகளில் அது தேசிய உடையாகவும் உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் லுங்கி என்பது அவர்களின் ஆடை கலாச்சாரத்தின் தவிர்க்க முடியாத பகுதி. இந்தப் பகுதி மக்களும் அப்படித்தான். நாங்கள் லுங்கி கட்டக் கூடாது என்று சொல்வதற்கு இவர் யார்? இன்ஸ்பெக்டர் வேண்டுமானால் லுங்கி கட்டிக் கொள்ளட்டும் என்று அகத்தியலிங்கம் தனக்கே உரிய பாணியில் சங்கி இன்ஸ்பெக்டரை வார்த்தைகளால் வெளுத்துக் கட்டினார். அதுவரை லுங்கி கட்டியவர்களை பிடித்து கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டரை கூட்டத்தில் லுங்கியின் மகிமை பற்றி பேசி கிழி கிழி என்று கிழித்ததில் இன்ஸ்பெக்டர் தனது வாய்க்கு தையல் போட்டுக் கொண்டார். சட்டம் ஒழுங்கை காப்பதும், குற்றங்களை தடுப்பதும் ஒரு காவல்துறை அதிகாரியின் வேலைலுங்கி கட்டியதை குற்றமாகப் பார்த்த அந்த இன்ஸ்பெக்டர் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

லுங்கி தெற்காசிய நாடுகளில் பரவலாக பயன்படுத்தக்கூடிய ஒரு ஆடை கலாச்சாரமாக. ஆண்களும் பெண்களும் லுங்கி அணிந்து கொள்வார்கள். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் லுங்கி அணிவது அவர்களது ஆடை கலாச்சாரமாகும். சீனாவில் இருந்து பைஜாமா அறிமுகமானது போல்  தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து லுங்கியும் அறிமுகமானது.

லுங்கி இந்துக்களுக்கான ஆடை அல்ல என்று தமிழகத்தில் இருந்த பெரியவாள் சொன்னது நினைவுக்கு வருகிறது. இதற்கான அர்த்தம் அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன். அன்றைய ஜாவா தீவுகளில்  (இந்தோனேசியா மலேசியா)   நடைபெற்ற போராட்டங்களை அடக்குவதற்கு காலனி நாடுகளில் இருந்து அழைத்துச் சென்ற படைகளிடம்  பிரிட்டிஷார் லுங்கி கட்டியவர்களை சுடுங்கள் என்று அடையாளப்படுத்தினார்கள் காரணம் அவர்கள் இஸ்லாமியர்கள் என்ற துவேஷத்தை உருவாக்குவதற்காக. லுங்கியில் இப்படிப்பட்ட அரசியலும் இருக்கிறது. நான் பெரும் தலைவர்கள் கூட்டங்களில் லுங்கி அணிந்து அமர்ந்திருக்கும் படத்தையும் பார்த்திருக்கிறேன். நேரிலும் பார்த்து இருக்கிறேன்.

வேஷ்டி சாதாரண மக்களுக்கு செலவு நிறைந்தது. பலருக்கு அதை கட்டவும் கடினமானது. அவ்வாறு கட்ட தெரியாதவர்கள் வேஷ்டி கட்டி பொது இடத்தில் உட்காரும் பொழுது அது விலகிக் கொள்ளும் . எதிரில் இருப்பவர்களுக்குத்தான் பிரச்சனை. சில நேரங்களில் மானம் காக்கவும் லுங்கி பயன்பட்டு இருக்கிறது. இன்று பல மாற்று உடைகள் வந்துவிட்டதால் வங்கிக்கான மவுசும் குறைந்து வருகிறது.லுங்கியை கேவலமாகவும் யாராவது பார்த்தால், அது அவர்களுடைய பார்வைக் கோளாறு.

அ.பாக்கியம்

2. நேர்பட பேசு எதிர்மறை எதிர்கொள்

 

 

வியாழன், மார்ச் 27, 2025

13.சீன சோஷலிசத்தில் மதமும் – அதிதீவிர இடதுசாரி தவறுகளும்

 



மார்க்சிய தத்துவம் அறிவியலை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம். எந்த ஒரு மத சித்தாந்தங்களையும் மார்க்சியம் அறிவியல் பூர்வமானது என்று ஏற்றுக் கொள்வது இல்லை. மார்க்சிய சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் புதிய ஜனநாயக புரட்சியை நடத்தி புரட்சிகரமான சமூக அமைப்பை நிறுவியது. மார்க்சிய சித்தாந்தத்திற்கு எதிர்மறையாக இருக்கக்கூடிய மதத்தை ஏற்றுக்கொண்டு எப்படி ஒரு சோலிச சமூகத்தை உருவாக்க முடியும் என்று பலரும் கேள்விகளை எழுப்பினார்கள். மறுபுறத்தில் சீனப் புரட்சி வெற்றி பெறும் தருவாயில் அமெரிக்கா இரண்டாவது சிகப்பு பயம் (Red  scare) என்ற பிரச்சாரத்தை உலகம் முழுவதும் செய்தது. சீனத்திலிருந்து ஆளும் வர்க்கமும் இந்த பிரச்சாரத்தை வலுவாக செய்தார்கள். கம்யூனிஸ்டுகள் ஆட்சியை பிடித்து விட்டால் மதத்தை அழித்து விடுவார்கள், வழிபாட்டு நிலையங்களை இடித்து விடுவார்கள் என்று பூதாகரமான பிரச்சாரத்தை புரட்சிக்கு எதிராக முன்னெடுத்தார்கள்.

பொறுத்திருந்து பாருங்கள்

சீன நாட்டிலிருந்து பல மதத் தலைவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். சீனாவின் புகழ்பெற்ற மதத்துறவி மாஸ்டர் யுவான் யிங் வெளிநாடு செல்வதற்கான தயார் நிலையில் இருந்தார். அதே நேரத்தில் தேசப்பற்றும் அவரை ஆட்கொண்டது. எனவே நான் என் நாட்டை நேசிக்கிறேன். புரட்சி முடியட்டும். கம்யூனிஸ்டுகள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துவிட்டு முடிவெடுக்கிறேன் என்று தங்கிவிட்டார். இப்படி பலரும் முடிவு எடுத்தார்கள். புரட்சியில் ஈடுபட்டிருந்த மாசே துங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி ‘‘பொறுத்திருந்து பாருங்கள்; எங்களுடைய நிலைப்பாட்டை புரிந்து கொள்வீர்கள்; பிறகு ஆதரிப்பீர்கள்’’ என்று மக்களிடம் புரிய வைத்தார்கள்.

1949ஆம் ஆண்டு புரட்சி முடிந்த பிறகு மேற்கண்ட வாக்குறுதியின் அடிப்படையில் மார்க்சிய சித்தாந்தத்தின் வழிகாட்டுதல் மூலமாகவும் சீனாவில் மதத்தின் மீதான அணுகுமுறை இருந்தது. நிலைமைகள் அவ்வளவு எளிதாக இல்லை. ஒருபுறத்தில் புரட்சிக்கு எதிரானவர்களின் தாக்குதல் கணக்கெடுத்து சரியான முறையில் மத நம்பிக்கையாளர்களை அணுக வேண்டிய கட்டாயம்.

பொதுவாக புதிய சீனா நிறுவப்பட்ட பிறகும் கலாச்சார புரட்சிவரை 17 ஆண்டுகளாக சில இடர்பாடுகள் இருந்த போதும் மதம் தொடர்பாக கட்சி மத்திய குழு எடுத்த சரியான வழிகாட்டுதல் அடிப்படையில் சிறந்த முடிவுகளை அமலாக்கி வெற்றி கண்டது. தேவாலயங்களுக்குள் ஏகாதிபத்திய சக்திகளை ஒழித்து மூன்று சுய இயக்கம் என்ற அடிப்படையில் தேவாலயங்களை இயங்க வைத்தது. கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட் தேவாலயங்கள் ஏகாதிபத்தியத்தின் தளங்களாக இருப்பதை மாற்றி சுதந்திர தன்னாட்சி நிறுவனங்களாக மாற்றியது. மதத்தின் போர்வையில் ஒளிந்திருக்கும் பிற்போக்குவாதிகள், கெட்டகூறுகளை கொண்ட பகுதியை அம்பலப்படுத்தி ஒழித்துக் கட்டியது. பௌத்தம், தாவோயிசம், முஸ்லிம் மத நம்பிக்கையாளர்களை பிற்போக்கு வர்க்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு எடுத்தது. மதத் தலைவர்களை சோசலிசத்திற்கு ஆதரவாக கொண்டு வருவது, அவர்களுடன் ஒன்றுபடுவது, கல்வியை கற்பிப்பது போன்றவை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. மதங்களின் சர்வதேச நட்பை தேடுவது, அவற்றை ஆதரித்த செயல்களும் நல்ல பலனை கொடுத்தது. புரட்சிக்குப் பிந்திய முதல் 17 ஆண்டுகள் கடந்த பிறகு 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற கலாச்சார புரட்சி மிகப் பெரும் பாதிப்புகளை உருவாக்கியது. 1957 ஆம் ஆண்டு ஆரம்பித்த இடதுசாரி தவறுகள் படிப்படியாக வளர்ந்து 1966 இல் கலாச்சாரப் புரட்சியாக வெடித்தது.

அதிதீவிரஇடதுசாரி தவறுகளின் விளைவுகள்

 இதற்கு முன்பு சீனாவில் மதம் தொடர்பான பணிகளில் ஈடுபடுகிற பொழுது ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைத்து முன்னேறினார்கள். குறிப்பாக 1952 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது. கடந்த சில ஆண்டுகளில் மத சிறுபான்மையினர் மத்தியில் பணி செய்யக்கூடிய கட்சியின் தோழர்கள் மதம் தொடர்பான தன்மையை புரிந்து கொள்ள தவறி இருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. மதங்களுக்கு நீண்டகால வரலாறு உண்டு. அதே போன்று இனம் தொடர்பாகவும் அப்படி ஒரு வரலாறு இருக்கிறது. இவற்றை ஆழமாக புரிந்து கொள்ளாமல் உடனடியாக அந்த மக்கள், அதாவது மத சிறுபான்மையினர் தங்கள் மதத்தையும் இனத்தையும் கைவிட வேண்டும் என்ற முறைகளில் வலியுறுத்த ஆரம்பித்தனர். இது எதிர்வினைகளை உருவாக்கி உள்ளது என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதுகுறித்து 1957 ஆம் ஆண்டு தேசிய மக்கள் காங்கிரஸில் பேசிய அன்றைய பிரதமர் சௌ என் லாய் மதம் என்பது நீண்ட காலம் நீடிக்கக் கூடியது. நாம் இப்பொழுது கவலைப்பட வேண்டியது மதம் தொடர்ந்து இருக்குமா இருக்காதா என்பது பற்றி அல்ல. அதற்கு மாறாக, நமது மத இன சிறுபான்மை மக்கள் வாழ்க்கையை செழிப்பாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றுதான் கவலைப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.  நடைமுறையில் இருந்து மதம் தொடர்பான விஷயங்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி பாடமாக எடுத்துக் கொண்டது.

இடதுசாரி அதிதீவிர வாதங்களை முன்வைத்தவர்களில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் சிலரும் அடங்குவார்கள். இந்த கலாச்சார புரட்சி நால்வர் கும்பல் என்பவர்களால் நடத்தப்பட்டது.  துணை பிரதமராக இருந்த லின் பியாவோ ஆதரவுடன், ஜியாங் கிங் (மாசே தூங்கின் மனைவி) ஜாங்  சுன்கி யாவோ, யாவ் வேன் யூ வான், வாங் ஹாங்வென் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இருக்கக்கூடிய வார்த்தைகளை அப்படியே சமூகத்திற்கு நெகிழ்வுத்தன்மையற்ற முறையில் பொருத்த ஆரம்பித்தார்கள். கம்யூனிஸ்ட் புரட்சி என்பது பாரம்பரிய உறவுகளில் இருந்து மிகவும் தீவிரமான முறிவு ஏற்படுத்தக் கூடியது. அதன் வளர்ச்சி பாரம்பரிய கருத்துக்களில் இருந்து மிகவும் தீவிரமான முறையில் துண்டித்துக் கொள்ளக்கூடியது என்று இருப்பதை அதிதீவிரத்துடன் தங்களுடைய நிலைபாட்டிற்கு ஆதரவாக எடுத்துக் கொண்டனர். இதற்குப் பின்னால் சில நோக்கங்கள் இருந்தது என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பீடு செய்தது.

கலாச்சாரப் புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள் அனைத்து மதங்களையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான பிரச்சாரங்களை தீவிரப்படுத்தினர். இதுவே கலாச்சாரத்திற்கு எதிரான ஒரு இயக்கமாக மாற்றப்பட்டது. கலாச்சாரப் புரட்சியின் தலைவர்கள் மார்க்சியம்,லெனினியம் மற்றும் மாசேதுங்கின் சிந்தனைகள் மதம் தொடர்பாக வெளிப்படுத்திய அறிவியல் கோட்பாட்டை வேண்டுமென்றே மறைத்தார்கள். சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட நாளிலிருந்து மதம் குறித்து கட்சி எடுத்த சரியான கொள்கைகளை நிராகரித்தார்கள். 1965ஆம் ஆண்டுகள்வரை கட்சியும், சீன மக்கள் குடியரசும் மதம் தொடர்பாக செய்த மிகச் சிறந்த பணிகளை கைவிட்டார்கள். மதநம்பிக்கை உள்ள மக்கள் சாதாரண மதநடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவை சர்வாதிகாரத்திற்கான  இலக்குகள் என்று கூறி தடை செய்தனர். மதகுருமார்கள் மீதும் மதப் பிரமுகர்கள் மீதும் அவதூறுகளை அள்ளி வீசி அவர்களை நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கினார்கள். மதச் சிறுபான்மையினர் மற்றும் இனக்குழுக்கள் கடைபிடிக்கக் கூடிய சில பழக்கவழக்கங்களையும் நடைமுறைகளையும் மூட நம்பிக்கைகள் என்று தவறாக புரிந்து கொண்டு அவற்றை நடத்தக் கூடாது என்று தடை செய்தார்கள். மதத்துக்கு எதிராக வன்முறை நடவடிக்கைகளை எடுத்ததின் விளைவாக பல ம இயக்கங்கள் ரகசிய அமைப்புகளாக மாறின. இதை பயன்படுத்திக் கொண்டு எதிர் புரட்சியாளர்களும், தீய சக்திகளும் சட்டவிரோத செயல்களிலும், குற்றச் செயல்களிலும் ஈடுபட்டனர்.

சரியான வழிகாட்டும் கொள்கையை நோக்கி…

இந்தப் பின்னணியில் தான் 1975 ஆம் ஆண்டுக்குப் பிறகு  கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்கள் குடியரசும் நால்வர் கும்பலின் செயல்களை தோற்கடித்து அரசு முடிவுகளை அமலாக்கிட முயற்சித்தது. 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 11வது காங்கிரஸில் மதப் பிரச்சினைகள் குறித்தும் அதை அணுகுவது குறித்தும் சரியான வழிகாட்டும் கொள்கை உருவாக்கப்பட்டது. இந்த முடிவின்படி கலாச்சாரப் புரட்சி காலத்தில் இடதுசாரி குழப்பவாதிகளால் சேதப்படுத்தப்பட்ட பௌத்த, தாவோயிச ஆலயங்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள், இதர வழிபாட்டுத் தலங்கள் புதுப்பிக்கப்பட்டன. மூடப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. மதங்களை அழிப்பது என்ற அத்தமான முன்னெடுப்புகளில் இருந்து மீண்டு மார்க்சிய சித்தாந்தத்தின் அணுகுமுறைகளுக்கு மாறும் சூழல் உருவானது. இந்த முயற்சிகள்  சீன சமூகத்தில் அடுத்தடுத்த மாற்றங்களை உருவாக்கியது.

தொடர்ந்து மதம் தொடர்பாக இடதுசாரி குழப்பங்கள் வரக்கூடாது என்பதற்காக 1982 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி மிக விரிவான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தின்படி இப்போதைய முக்கிய பணி இடதுசாரி தவறான போக்குகளை எதிர்த்து உறுதியுடன் போராடுவதாகும். அதே நேரத்தில் தவறான போக்குகளை தடுத்து நிறுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.  கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், அனைத்து மட்டத்தில் உள்ள கட்சிக் குழுக்களும், குறிப்பாக மதப் பணிகளுக்கு பொறுப்பானவர்கள் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட காலத்திலிருந்து மதப் பணிகளில் கட்சியின் வரலாற்றை, அதன் அனுபவத்தை, கற்றுக் கொண்ட பாடத்தை, பலம் பலவீன அடிப்படையில் தொகுத்து இன்றைய நிலைமைக்கு தேவையான வழியில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று அந்த தீர்மானம் வலியுறுத்தியது. அது மட்டுமல்ல மதத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி ஆகியவற்றை புரிந்து கொள்வதுடன் மதத்தின் அழிவு எப்பொழுது ஏற்படும் என்பதை புரிந்து கொள்வதிலும் தேர்ச்சி அடைய வேண்டும். இதில் வரக்கூடிய ஒவ்வொரு கஷ்டங்களையும் கடந்து மார்க்சிசம் லெனினிசம் மாசேதுங் சிந்தனையால் வகுக்கப்பட்ட அறிவியல் போக்கில் கட்சியின் மதக் கொள்கையை உறுதியாக கடைபிடிக்க வேண்டும். இவற்றை புரிந்து கொள்வதற்கு மதம் தொடர்பான ஒரு முன்னுரையை இந்த தீர்மானத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி முன் வைத்துள்ளது.

மதம் ஒரு வரலாற்று நிகழ்வு

மதம் என்பது மனித சமூகத்தின் வளர்ச்சியில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வு. சூனியத்திலிருந்து உருவாகவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மதமும் தோற்றம், வளர்ச்சி, அழிவு ஆகிய சுழற்சியை கொண்டுள்ளது என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும். மத நம்பிக்கை மத உணர்வு இவற்றுடன் தொடர்புடைய மத விழாக்கள் மற்றும் மத அமைப்புகள் அனைத்தும் சமூக வரலாற்றின் விளைபொருட்களாகும். மனிதகுல வரலாற்றின் ஆரம்பகாலத்தில் குறைந்த அளவிலான உற்பத்திதான் இருந்தது. அன்றைய மனிதர்கள் இயற்கை நிகழ்வுகளை கண்டு பிரமித்து போனார்கள். இவர்களின் ஆரம்ப கால மனநிலையின் தோற்றம்தான் மதத்திற்கான அடிப்படை. வர்க்க சமுதாயம் உருவான பிறகு, ஆதிக்கம் செலுத்தக்கூடிய வர்க்கம் மக்களை அந்நியப்படுத்தி கட்டுப்படுத்த ஆரம்பித்தன. இந்த ஒடுக்குமுறை அமைப்பால் உருவாக்கப்பட்ட மிகப் பெரும் துயரத்தை எதிர்கொள்வதில் உழைப்பாளிகளுக்கு பயம்,விரக்தி, உதவியற்ற தன்மை இருந்தது.

ஒடுக்குமுறை செய்யும் வர்க்கங்கள் மதத்தை ஒரு போதைப் பொருளாகவும் மக்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய வழிமுறையாகவும் பயன்படுத்தியது. சீன சோலிச சமூகத்தில் ஒடுக்குமுறை அமைப்பு அல்லது ஒடுக்குமுறை வர்க்கம் ஒழிக்கப்பட்டதனால் வர்க்கத்தின் வேர் அல்லது மதத்தின் இருப்பு கிட்டத்தட்ட இழக்கப்பட்டது. இருந்த போதிலும் மக்களின் உணர்வு சமூக யதார்த்தங்களுக்கு பின்னால் பின்தங்கி உள்ளது. இதனால் பழைய சிந்தனை மற்றும் பழக்க வழக்கங்களை குறுகிய காலத்தில் முழுமையாக அழித்துவிடமுடியாது என்பதை உணர வேண்டும். உற்பத்தி சக்திகளை அதிகரிக்க, பொருள் செல்வத்தின் அளவைப் பெருக்கிட, சோசலிச ஜனநாயகத்தின் உயர்மட்டத்தை அடைந்திட, கல்வி, கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர் மட்டத்தை அடைவதற்கு நீண்டகால போராட்ட செயல்முறை தேவைப்படுகிறது.

வர்க்க போராட்டமும் ஒரு குறிப்பிட்ட வரம்புகளுக்குள் சோசலிச சமூகத்தில் தொடர்ந்து இருப்பதும், அதே நேரத்தில் சிக்கலான சர்வதேச சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு ஒரு சோசலிச சமூகத்தில் ஒரு பகுதி மக்களிடையே மதத்தின் நீண்ட கால செல்வாக்கு இருப்பதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். மதம் இறுதியில் மனித வரலாற்றிலிருந்து மறைந்துவிடும். அது எப்போது நடக்கும்? சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தின் நீண்ட கால வளர்ச்சியின் மூலம் மக்களின் அனைத்து புறநிலை தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் போது மட்டுமே மத உணர்வுகள் மறைந்துவிடும். மதம் தொடர்பான வரலாற்று ரீதியான புரிதலுடன் சீன கம்யூனிஸ்ட் கட்சி முடிவு எடுத்து அமலாக்க ஆரம்பித்தது. சோசலிச அமைப்பு நிறுவப்பட்ட பிறகும்  மதத்தின் நீடித்த தன்னை இருக்கும் என்பதை அனைத்து கட்சி உறுப்பினர்களும் நிதானமான மனதுடன் அங்கீகரிக்க வேண்டும் என்று அந்த தீர்மானம் வலியுறுத்தியது. சோலிச அமைப்பு நிறுவப்பட்டதும், ஒரு குறிப்பிட்ட அளவிலான பொருளாதார கலாச்சாரம் முன்னேற்றம் ஏற்பட்டதும் மதம் குறுகிய காலத்தில் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள்  தார்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்கள். மதசிந்தனை அதன் நடைமுறைகளை நிர்வாக ஆணைகள் மூலமாக அல்லது பிற கட்டாய நடவடிக்கைகள் மூலமோ அழித்துவிடலாம் என்று நினைப்பவர்கள் மார்க்சிய கண்ணோட்டத்தில் இருந்து மிகத் தொலைவில் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். அவை முற்றிலும் தவறானது மட்டுமல்ல, தீங்கு விளைவிக்க கூடியதுமாகும்.

மேற்கண்ட முடிவுகளின் அடிப்படையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் இருக்கக்கூடிய மத நம்பிக்கையாளர்களின் மத அமைப்புகளையும் இடதுசாரி குழப்பங்களுக்கு இடம்தராமல் கையாள ஆரம்பித்தது. 1993ஆம் ஆண்டு க்கிய முன்னணி பணிக்கான தேசிய மாநாட்டில் ஜனாதிபதி ஜியாங் ஜெமீன் உரையாற்றிய பொழுது, " நாட்டின் மத அமைப்பில் நாங்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் அதாவது கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டண்ட் தேவாலயங்களில் ஏகாதிபத்திய கட்டுப்பாட்டை நீக்கியது, தேவாலயங்களை சுயாதீன நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்ததும், பௌத்த மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களில் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை, சுரண்டலை நீக்கியதும் மிக முக்கியமான நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கைகள் சீனாவின் மதங்கள் சோசலிச சமூகத்தை முன்னெடுப்பதற்கு ஒரு படியாக விளங்கியது" என்று கூறினார்.

1998 ஆம் ஆண்டில் மத விவகாரங்களுக்கான தலைமை அதிகாரிகளின் தேசிய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட அறிக்கை கீழ்கண்டவாறு வரையறை செய்கிறது. ‘‘சோசலிசத்தின் ஆரம்ப கட்டத்தில் மதம் தொடர்ந்து இருக்கும் என்பது மட்டுமல்லாமல் அது ஓரளவு சில அம்சங்களில் வளரக்கூடும்" என்று தெரிவித்தது. சீன சமூகத்தில் மதங்களின் நிலைமைகளை ஆய்வு செய்தால் இந்தக் கருத்தின் உள்ளடக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய முன்னணி ணியக மாநாட்டில் ஜனாதிபதி ஜியாங் ஜெமீன் மதம் தொடர்பாக மேலும் அதன் நீடித்த தன்மையை அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். "ஒரு சமூக நிகழ்வாக மதம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் சோலிசத்தின் கீழ், நீண்ட காலம் அது நீடிக்கும். மதத்தின் இறுதி முடிவு நிச்சயமாக ஒரு நீண்ட வரலாற்று செயல் முறையாக இருக்கும். ஒருவேளை வர்க்கம் மற்றும் அரசின் அழிவைவிட நீண்டதாக கூட மதம் இருக்கலாம்"  என்று சுட்டிக்காட்டினார்.    மதம் தொடர்பான விஷயங்களை  சோசலிச சமூகத்தை கட்டி அமைக்கக்கூடிய சூழலில் சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொள்ள எதிர்கொள்ள கூடிய சூழலில் இதைவிட தெளிவான ஒரு விளக்கத்தை கூற முடியாது.

வெள்ளி, மார்ச் 21, 2025

பாசிசத்தின் சமகால வடிவமாற்றங்கள்



எம்.ஏ.பேபி, 

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர். 


பாசிசம் இப்போதும் நம்மைச்சுற்றி உள்ளது. சில நேரம் சாதாரண பிரச்சனைகளில் யாராவது முன்வந்து “நான் வதைமுகாம் (ஓஷிட்ஸ்) மீண்டும் திறக்க விரும்புகிறேன், இத்தாலியின் சதுக்கங்களில் கருப்பு உடை அணி வகுப்பை மீண்டும் நடத்த நான் விழைகிறேன். என்று கூறியிருந்தால் நமக்கு மிக எளிதாகி இருக்கும். 

ஆனால், வாழ்க்கை அத்தனை எளிதானதல்ல. பாசிசம் மிகவும் குற்றமற்ற வேடங்களில் திரும்பி வரலாம். நமது கடமை, அதனை வெளிப்படுத்துவதும் அதன் புதிய வடிவங்களை அனைத்து நாட்களிலும் உலகின் அனைத்து பகுதிகளிலும் சுட்டிக்காட்டுவதுமாகும்.

- இம்பர்ட்டே இக்கோ


இம்பர்ட்டே இக்கோவின் பாசிசம் குறித்தான முன்னறிவிப்பு சமகால அரசியலுக்கான ஒரு சுட்டிக்காட்டலாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் நவ பாசிச நடவடிக்கை தலைதூக்குவதை காணலாம். சிபிஎம் 24 ஆவது அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு கட்சி தயாரித்துள்ள நகல் அரசியல் தீர்மானம் நவபாசிஸம் குறித்து மிகவும் முக்கியமான முன்னறிவிப்பை அளித்தது இந்த பின்னணியில்தான். 


ஆனால், இதில் தவறான விளக்கமளிக்கும் முயற்சிகளும் பெரிய அளவில் நடந்து வருகின்றன. இப்போது கிளாசிக்கல் பாசிசம் குறித்தும் அதன் நவீன வடிவத்தைக்குறித்துமான நமது புரிதல்களை மேலும் தெளிவுபடுத்த வேண்டியதாக உள்ளது.

தீவிர தேசியவாதத்தை ஒரு கருவியாக கொண்டு, இடதுசாரி அரசியலை எதிர்கொள்ள 1920 களில் முசோலினிதான் பாசிஸம் என்கிற அரசியல் திட்டத்தை தொடங்கி வைத்தார். மிக கடுமையான பொருளாதார சிக்கலின் பின்னணியில் (பாஞ்சாத்துவ) முதலாளித்துவம் தோல்வியைத் தழுவியிருந்தது. 


இதே காலத்தில், 1920 களின் இறுதியில் ஜெர்மனியில் ஹிட்லரின் பாசிஸ்ட் அரசியல் பிறந்ததும் அது உலக வரலாற்றிலேயை மிகப்பெரிய அரசியல் துயரங்களுக்கு வழிவகுத்ததுமாகும். தீவிர தேசிய வாதத்துக்கு இணையாக இன பாகுபாட்டை பரவலாக்கி ஹிட்லர் தனது பாசிஸ்ட் அரசியலை நகர்த்தினார். பாசிஸத்தைக் குறித்தான தனது ஆய்வில், டிமிட்ரோ சரியாகவே மதிப்பீடு செய்துள்ளார். நயவஞ்சகமாக சமூக அடிமைத்தனத்தின் திரைமறைவில் “தங்களது வாழ்வாதார வாய்ப்புகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட குட்டி பூர்ஷ்வா பகுதியினர் மற்றும் தொழிலாளி வர்க்கத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சில பகுதியினரின் ஆதரவைப்பெற, பாசிஸத்தால் சாத்தியமானது…. ஒவ்வொரு நாட்டிலும் அதன் வரலாறு, சமூக, பொருளாதார சூழ்நிலைகளுக்கும் தேசிய சிறப்புகளுக்கும் சர்வதேச பதவிகளுக்கும் சாதகமாக பாசிஸத்தின் வளர்ச்சியும் பாசிஸ்ட் எதேச்சதிகாரமும் தனக்கே உரித்தான முறையில் வடிவம் கொள்கிறது”. கிளாசிக்கல் பாசிசத்தை மதிப்பீடு செய்யும் அதேவேளையில், அதன் பன்முக வடிவத்தை டிமித்ரோவ் சுட்டிக்காட்டுகிறார். 

பாசிஸத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணி என்கிற புகழ்பெற்ற கட்டுரையின் முன்னுரையில், இ.எம்.எஸ்.சுட்டிக்காட்டும் கீழ்காணும் பகுதி முக்கியமானதாகும்: “உலக பாசிஸத்தின் முக்கியத்துவமும் அதன் வளர்ச்சிக்கு காரணமான உலக அரசியல் சூழ்நிலைகளும் அதேபோன்று இன்றும் நிலைகொள்ளாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது பாசிஸத்துக்கு வழங்கும் முன்னுரிமை அடிப்படையில் இன்றைய ஏதேனும் ஒரு அரசாங்கத்தையோ, அரசியல் கட்சியையோ மதிப்பீடு செய்ய முற்படுவது பொருத்தமற்றதாக இருக்கும்”.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:“ 


பாசிஸ தன்மைகொண்ட ராஸ்ட்டிரிய சுயம் சேவக் சங்கம் வழிகாட்டுவதாலும் ஆளுமை வகிப்பதாலும் பாஜக சாதாரண முதலாளித்துவ கட்சியல்ல. பாஜக அதிகாரத்தில் இருக்கும்போது, ஆட்சி அதிகாரத்திலும் அரசமைப்பு நிறுவன கருவிகளிலும் தலையிட ஆர்எஸ்எஸ்-ஆல் சாத்தியமாகிறது….. அரசமைப்பு சாசனத்தின் மதச்சார்பின்மை அடித்தளத்தைப் பொறுத்தவரை அதில் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. 

22 ஆவது அகில இந்திய கட்சி மாநாட்டின் (ஏப்ரல் 2018) அரசியல் தீர்மானம், நரேந்திர மோடி ஆட்சியை இவ்வாறு மதிப்பீடு செய்தது: “


ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை அமல்படுத்துவதற்கு மேற்கொள்ளும் தந்திரமான முயற்சிகள் நமது நாட்டின் மதச்சார்பற்ற அரசியல் சட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்; தலித்துகளுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரான வன்முறைகள் பாசிஸ தன்மை கொண்ட நடவடிக்கைகளின் தொடக்கமாகும்; அமெரிக்காவுடனான கொள்கை அளவிலான கூட்டையும் வலுப்படுத்தி அதன் இளைய பங்காளியாக செயல்படுவதும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு கடிவாளமிட்டு அரசமைப்பு சாசன நிறுவனங்களையும் ஜனநாயக உரிமைகளைப் பறித்தும் எதேச்சாதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது”.


ஒரு பாசிஸ அமைப்பான ஆர்எஸ்எஸ் ஹிட்லரின் ஜெர்மனியில் இருந்து ஊக்கம் பெற்று செயல்படுவது கவலையளிப்பதாகும். முசோலினியை நேரடியாக சந்தித்து பாசிஸ்ட் வன்முறை பயிற்சியும் வழிமுறையும் கற்ற டாக்டர் மூஞ்சேயின் செல்வாக்கு ஆர்எஸ்எஸ் பயிற்சி முறைகளில் காணலாம். ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் ஆன நரேந்திர மோடி மூன்றாவது முறையாகவும் பிரதமராக பொறுப்பேற்றதோடு பாசிஸ ஆட்சி முறைக்கு இந்தியா மாறிவிட்டதா என்பதை நமது தீவிரமான துல்லியமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதாகும். பாசிஸ குணம் படைத்த ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் செயல்படும் மோடி அரசு இந்தியாவில் ஒரு பாசிஸ ஆட்சியை வெளிப்படையாக நிறுவுவதை நோக்கி நகர்வதற்கான சாத்தியப்பாடு கடும் அச்சுறுத்தலாக நீடிக்கிறது என்பதுதான் இந்தியாவின் இன்றைய நிலை என சிபிஎம் தெரிவிக்கிறது. அதை தடுக்க வகுப்புவாத – பாசிஸ எதிர்ப்பு சக்திகளின் விரிவான ஒத்துழைப்பை சாத்தியமான தளங்களில் உருவாக்கவேண்டும் எனவும் நகல் அரசியல் தீர்மானம் வலியுறுத்தி கூறுகிறது. 


24 ஆம் அகில இந்திய கட்சி மாநாட்டுக்கு முன்னோடியாக கட்சி முழுமையும் விவாதித்து மாநாட்டில் முன்வைத்து உரிய திருத்தங்களுடன் அங்கீகரிக்க வேண்டிய நகல் அரசியல் தீர்மானத்தில் ‘நவ பாசிஸம்’ என்னும் புதிய வரையறுப்பு மத்தியக்குழு விவாதித்து அங்கீகரித்து அரசியல் தீர்மானத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இதன் மூலம் புரிந்துகொள்வது என்னவென்றால், மேலும் தெளிவுபடுத்த வேண்டும் என கொல்கத்தாவில் ஜனவரி மாதம் கூடிய மத்தியக்குழு கூட்டம் சுட்டிக்காட்டியபடி அரசியல் தலைமைக்குழு ஒரு குறிப்பை தயாரித்து அனைத்து மாநிலக்குழுக்களுக்கும் அனுப்பியது. வாசகர்களின் மிதமான அரசியல் உணர்வுகளை தட்டியெழுப்ப ஒரு ரகசிய ஆவணத்தை தாங்கள் கைப்பற்றி வெளியிடுகிறோம் என்று ஒரு ஊடகம் இதுதொடர்பான செய்தியை வெளியிட்டது. பல்லாயிரக்கணக்கில் அச்சிடும் ‘சிந்தா’ வார இதழ் முழுமையான நகல் அரசியல் தீர்மானத்தோடு நவபாசிஸம் குறித்தான அரசியல் தலைமைக்குழுவின் குறிப்பையும் அச்சிட்டு வெளியிட்ட நிலையில்தான் இந்த செய்தி வந்தது. 


அரசியல் தலைமைக்குழு தயாரித்து வெளியிட்ட குறிப்பு நவபாசிஸத்தை இவ்வாறு விவரிக்கிறது: நவபாசிஸம் என்பதன் பொருள் என்ன? ‘நவம்’ என்பதன் பொருள் புதியது என்றோ ஏதேனும் பழையதன் சமகால வடிவம் என்பதோ ஆகும். ஐரோப்பாவில் முதல் மற்றும் இரண்டாவது உலப்போர்களுக்கு மத்தியில், முசோலினியின் இத்தாலியைப் போலவோ ஹிட்லரின் ஜெர்மனியைப்போலவோ வளர்ந்து வந்த கிளாசிக்கல் பாசிஸத்தில் இருந்து வேறுபடுத்தவே நவபாசிஸம் என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உலக முதலாளித்துவ நெருக்கடி 1929 முதல் 1933 வரை நீடித்த பெரும் பொருளாதார மந்தநிலைக்கு இட்டுச்சென்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்தன. முதலாவது உலகப்போரும் இரண்டாவது உலகப்போரும் ஏகாதிபத்திய முரண்பாடுகளின் விளைவாகும். அதிகாரத்தைக் கைப்பற்றியபின் பாசிஸ சக்திகள் முதலாளித்துவ ஜனநாயகத்தை கைவிட்டதோடு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக போரைப் பயன்படுத்தி ஆயுத உற்பத்தியை அதிகரிக்கவும் செய்தன. இந்த நாடுகளில் ஏகபோக மூலதனம் பாசிஸ்ட்டுகளை முழுமையாக ஆதரித்தது. நெருக்கடியைக் கடக்க மிகத்தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏகபோக முதலாளிகள் பாசிஸ சக்திகளை தூண்டினர். 

நவபாசிஸத்தின் சில கூறுகள் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காணப்பட்ட பாசிஸத்தைப்போன்றதுதான். 


வரலாற்றுப்பூர்வமான தவறுகள் மற்றும்  அநீதிகளின் விளைவு என வரையறுக்கப்படும் உணர்வுகளின் அடிப்படையில் உருவாகும் தீவிர தேசியவாதம், வகுப்புவாதம், மதவாதம், இனவாதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சிறுபான்மையினத்தை குற்றவாளியாக பார்ப்பது, தீவிர வலதுசாரி நவபாசிஸ சக்திகளுக்கும் கட்சிகளுக்கும் பெரும் பூர்சுவாக்கள் அளிக்கும் ஆதரவு போன்றவை முந்தையது போன்றதே. இந்தியாவில் நவபாசிஸத்தை அடையாளப்படுத்துவது ஆர்எஸ்எஸும், இந்துத்துவ அடிப்படைவாதமும் ஆகும். 


இவை பாசிஸ குணம் படைத்தவை என நமது கட்சித் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியின் கீழ் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த அவர்களால் முடிகிறது. இந்துத்துவா அடிப்படைவாதம், புதிய தாராளமய நெருக்கடி, பெருமுதலாளிகளின் விருப்பத்திற்கு இணங்க எதேச்சதிகாரத்தை திணித்தல் போன்றவை நவபாசிஸத்தின் துவக்க வடிவமாகும். 

பாஜக – ஆர்எஸ்எஸின் கீழ் செயல்படும் இன்றைய அரசு இயந்திரம் ‘நவபாசிஸத்தின் போக்குகளை வெளிப்படுத்தும்’ ஆட்சி என நாம் குறிப்பிட்டுள்ளோம். அதேநேரத்தில் இந்தியாவில் இப்போதே ஒரு பாசிஸ ஆட்சிமுறை முழுமையான வடிவில் வந்துவிட்டது என்பது, நுணுக்கமான விளக்கத்திற்கு பொருத்தமற்றது. 

பரவலான ஒடுக்குமுறைகள் ஊடங்கள் மீதும், எதிர்ப்பு போராடங்கள் மற்றும் மாற்றுக்கருத்துகள் மீதும் நடக்கிறது என்பது சரியே. ஆனால், ஹிட்லரும் முசோலினியும் எதிர் குரல்களை ஒரேயடியாக வெளிப்படையாக ஒடுக்கவும், ராணுவ பொது நிர்வாகம், நீதி நியாய செயல்பாடு போன்ற ஆட்சி அதிகார அமைப்புகளை முற்று முழுமையாக கைப்பற்றியதுபோன்ற நிலை இப்போதும் இந்தியாவில் வடிவம் பெறவில்லை. ஆனால் அதை நோக்கிய நகர்வுகளைக் காண முடிகிறது. அவசரநிலை காலத்தின் தீவிர அடக்குமுறையையும் பாசிஸம் என சிபிஎம் குறிப்பிடவில்லை. அதுபோலவே 1972 முதல் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே தலைமையில் நடந்த கொடிய அடக்குமுறையையும் படுகொலைகளையும் தேர்தல் முறைகேடுகளையும் அரை பாசிஸ ஆட்சி என்றே சிபிஎம் மதிப்பீடு செய்தது. 

பொதுசமூகத்தில் இன்றும் ஜனநாயக முறையில் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடிகிறது. சரியாக அனைத்து சக்திகளையும் அணிதிரட்டினால் ஜனநாயக முறையிலான வழிகளில் தோற்கடிக்ககூடியதே நவபாசிஸத்தின் இந்திய பதிப்பு என்கிற உண்மை நிலையை சிபிஎம் சுட்டிக்காட்டுகிறது. மோடி ஆட்சி நவபாசிஸ போக்குகளை வெளிப்படுத்துகிறது என சிபிஎம் முடிவுக்கு வருவது, அது முன்வைக்கும் பாசிஸ அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடாமலும், நிலவரங்களை பயத்தை ஏற்படுத்தும் வகையில் மிகைப்படுத்திக் காட்டாமல் இருப்பதுமாகும். நோயை சரியாக அறிந்துகொள்வது என்பது அதை குணப்படுத்தும் நடவடிக்கையில் முக்கியமான கட்டம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அப்படிச் செய்தால் மட்டுமே இந்திய சமூகத்தில் இன்று மேலோங்கி வந்துள்ள பாசிஸ அச்சுறுத்தலை முழுமையாக புரிந்துகொள்ளவும் அதற்கு எதிரான கலாச்சார – அரசியல் போராட்டங்களில் அதிக அளவில் மக்களையும் அரசியல் அமைப்புகளையும் அணிதிரட்ட முடியும்.   

- மார்ச் 14 சிந்தா மலையாள வார இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்

தோழர் Murugesan Chella

வியாழன், மார்ச் 20, 2025

12.புதிய ஜனநாயக புரட்சியும் மதங்களின் மறு பிறப்பும்

 



1949ஆம் ஆண்டு மாசேதுங் தலைமையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி புதிய ஜனநாயக புரட்சியை நடத்தி வெற்றிக்கொடி நாட்டியது. ஐரோப்பிய தத்துவம் என்று அழைக்கப்பட்ட மார்க்சியம் ஆசிய கண்டத்தில் உலகமே அதிரும் வகையில் ஆட்சி பீடத்தில் அரங்கேறியது. அதுவரை இருந்த அரை-நிலப்பிரபுத்துவ அரை-காலனித்துவ சமூக அமைப்பை புரட்டிப் போட்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது. புரட்சிக்கு முன்பே சீனாவில் பாரம்பரிய மதங்களில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் உருவாகிக் கொண்டு இருந்தது.

அந்நிய மண்ணிலிருந்து சீனாவிற்கு வந்த கிறிஸ்துவ மதம், சுய புதுப்பித்தல் என்ற முறைகளை அவரவர் மத அமைப்புக்குள்ளேயே நடத்த ஆரம்பித்தனர். கம்யூனிஸ்டுகள் தலைமையிலான  புரட்சி வெற்றி பெற்ற பிறகும் சீன மதங்களில் சுய புதுப்பித்தலுக்கான இயக்கம் மாறுபட்ட முறையில் புதிய வேகம் எடுத்தது. இதற்கான அடித்தளத்தை புதிய அரசு உருவாக்கிக் கொடுத்தது.

சீனாவில் இருக்கக்கூடிய  சில மத அமைப்புகள் வெளிநாட்டு கலாச்சார ஏகாதிபத்தியங்களுடனும், சில மதங்கள் நிலப்பிரபுத்துவ முறைகளுடனும், மூடநம்பிக்கைகளின் வலைகளிலும் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை உரத்த குரலில் பேசஆரம்பித்தனர். இதன் காரணமாக சுய புதுப்பித்தலை அந்தந்த மதங்களுக்குள் முன்னெடுத்தவர்கள் தயக்கமின்றி தங்கள் பாதைகளில் பயணப்பட்டார்கள்.

மூன்று சுயங்கள்

ஏனான் மாகாணத்தில் உள்ள லூயோ பாங் என்ற பிரதேசத்தில் இருந்த புராட்டஸ்டண்ட் மதப் பிரிவை சேர்ந்தவர்கள் தங்கள் ஆலயங்களை தாங்களே நடத்திக் கொள்ளக்கூடிய சுயாதீன நிர்வாகங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னெடுத்தனர். மத அமைப்புகளும் ஆலயங்களும் உள்ளூர் மக்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

சீனா விடுதலை பெற்ற பிறகும் ஏகாதிபத்திய சக்திகள் சீனாவை ஆக்கிரமிப்பு செய்ய பல முயற்சிகளை செய்தது. அதற்கு கிறிஸ்துவ மதத்தை பயன்படுத்தியது. ஷாங்காய் மாகாணத்தில் அங்கிருந்து மத விசுவாசிகள் சீனாவிற்கு எதிராக ஆக்கிரமிப்பு செய்யும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளுக்கு உதவி செய்யக்கூடிய மத வியாபாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். இப்படி போராட்டம் நடத்தியவர்கள் தேசபக்த சுயாதீன மத அமைப்புகள் தேவை என்ற முறையிலும், தேவாலயங்களை சுயாதீன அடிப்படையில் நிர்வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

வூ யாவோ சோங் என்பவர் புகழ்பெற்ற பிராட்டஸ்டண்ட் மதகுரு ஆவார். இவர் புரட்சி நடை பெறுவதற்கு முன்பே சுய நிர்வாகம், சுய ஆதரவு, சுய பிரச்சாரம் என்ற மூன்று தேசபக்த கோட்பாட்டின் அடிப்படையில் புராட்டஸ்டண்ட் தேவாலயங்கள் அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்காக மூன்று தேசபக்த இயக்க குழு என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தினார். இவரது தலைமையில் நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களுக்கு மத குருக்கள் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு தேவாலய மக்களுடன் உரையாடி அந்தக் கருத்துக்களை அரசிடம் கொண்டு சென்றனர். 1950 ஆம் ஆண்டு சீனாவின் பிரதமராக பொறுப்பு வகித்த புகழ்பெற்ற தலைவர் சௌ என் லாய் அவர்களை நேரில் சந்தித்து உரையாடல் நடத்தினார்கள்.

மூன்று சுயாதீன கொள்கைகளைப் பற்றி பிரதமரிடம் எடுத்துச் சொன்ன பொழுது அவர் அந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அதற்கான ஆதரவை தெரிவித்தார். சீனாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை ஏகாதிபத்தியங்களின் எச்சங்களிலிருந்தும், செல்வாக்கிலிருந்தும் விடுவிக்க வேண்டும் என்றார். இதன் மூலம் மதங்கள் ஆரோக்கியமான வளர்ச்சி அடையவும் மதத்தின் அசல் நிறத்தை மீட்டெடுக்க முடியும் என்று கூறினார்.

1950 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிராட்டஸ்டண்ட் மத விசுவாசிகள் புதிய இயக்கத்தை தொடங்கினார்கள். புதிய சீனாவை கட்டி எழுப்புவதில் சீன கிறிஸ்துவ மக்களுக்கான வழி என்ற தலைப்பில் கடிதத்தை தயாரித்து சீனா முழுவதிலும் இருந்த புராட்டஸ்டண்ட் மத விசுவாசிகளிடம் கையெழுத்தை வாங்கினார். அடுத்த நான்கு ஆண்டுகளில் 4 லட்சம் விசுவாசிகள் இந்த கடிதத்தில் கையெழுத்துப் போட்டனர். சீனாவில் அன்றைய காலகட்டத்தில் இருந்த புராட்டஸ்டண்ட் மத விசுவாசிகளில் இந்த எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு ஆகும். இந்தக் கடித இயக்கத்தின் மூலம் மூன்று சுயங்கள் என்ற தேசபக்த இயக்கம் நாடு முழுவதும் பிரபலம் அடைந்தது. இந்த நிகழ்வை மதகுரு வூ யாவோ சோங் சீன கிறிஸ்துவத்தின் மறுபிறப்பு என்று விவரித்தார்.

கத்தோலிக்க திருச்சபையில் வாங் லியாங் சுவோ என்ற பாதிரியார் சிச்சுவான் மாகாணத்தில் புகழ்பெற்று இருந்தார். இவர் தனது பத்தாவது வயதிலேயே குரு பட்டம் பெறுவதற்காக கத்தோலிக்க மதத்தில் இணைந்தார். புராட்டஸ்டண்ட் மதத்தை விட இறுக்கமான முறையில் இருந்த கத்தோலிக்க மதத்திற்குள் மூன்று சுயங்கள் என்ற இயக்கத்தை நடத்த ஆரம்பித்தார். அதற்கான பிரகடனங்களையும் அறிவித்தார். சீன கத்தோலிக்க திருச்சபையில் அதுவரை வேறு எங்கும் இவ்வாறு நடைபெறவில்லை. இவர் எடுத்த முயற்சிதான் முதல் முயற்சி என்று வரலாறு பதிவு செய்துள்ளது.

1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தியான்ஜின் பகுதியில் உள்ள கத்தோலிக்க விசுவாசிகள் மூன்று சுயங்கள் என்ற தேச பக்தி இயக்கத்தை வலுவாக நடத்துவதற்காக ஒரு தயாரிப்பு குழுவை அமைத்தனர். 1957 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சீனாவில் இருந்த கத்தோலிக்க திருச்சபை கூட்டங்களை 40 நாட்களுக்கு மேலாக நடத்தி தேசபக்த நிர்வாகத்தின் கீழ் தேவாலயங்களை கொண்டு வருவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்து நிறைவேற்றவும் செய்தனர்.

சீர்திருத்தத்தின் சவாலாக திபெத்திய பௌத்தம்

திபெத்திய பௌத்தம் அங்கு இருந்த தெய்வீக ராஜ்ஜியம் என்ற பெயரில் நிலப்பிரபுத்துவ அமைப்பில் கட்டுண்டு கிடந்தது. இனக்குழுக்களையும் மத நம்பிக்கையாளர்களையும் நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு தங்குதடையின்றி பயன்படுத்தி வந்தார்கள். இதை எதிர்த்து திபெத்திய மத அமைப்புக்குள்ளேயே ஜனநாயக சீர்திருத்தத்திற்கான குரல் எழும்பியது. புதிய அரசும் இணைந்து எடுத்த சீர்திருத்த முயற்சிகள் திபெத்திய பௌத்தத்தை ஜனநாயகப் படுத்தியது. பௌத்த மடாலயங்கள் நீதிமன்றங்களுக்கு சமமான தீர்ப்பாயங்களை நடத்தினார்கள். மத அடிப்படையில் தண்டனைகள் வழங்குவதும், சிறைகளில் அடைப்பதும் மடாலயங்கள் பெயரால் நிலப்பிரபுத்துவ உடமையாளர்கள் செய்து வந்தார்கள். ஜனநாயக சீர்திருத்த இயக்கம் அரசு ஆதரவுடன் இவற்றை ஒழித்தார்கள்.

திபெத்தியப் பகுதிகளில் இருந்த எண்ணற்ற பழங்குடிகளின் சமூகத்தில் அதன் தலைவர்களை நியமிப்பதையும், அந்தப் பகுதியின் மதகுருமார்களை நியமிப்பதையும் மடாலயங்கள் தங்கள் அதிகாரங்களாக வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த முறை ஜனநாயக சீர்திருத்த இயக்கங்களால் ஒழிக்கப்பட்டது. மடாலயங்களில் ஆயுதங்களை தங்கு தடையின்றி வைத்திருப்பதும் தடை செய்யப்பட்டது. மடாலயங்கள் சிவில் வழக்குகளில் தலையிடுவது, குடிமக்களின் திருமண சுதந்திரங்களில் தலையிடுவது, பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளை கையாள்வது, கல்வி முறைகளில் மடாலயங்கள் தலையிடுவது போன்றவை அனைத்தும் ஒழிக்கப்பட்டன. குறிப்பாக நிலப்பிரபுத்துவ ஆட்சி முறையின் சிறப்பு உரிமைகள் மூலமாக அனுபவித்த அனைத்தும் ஒழிக்கப்படுவதற்கு திபெத்திய பௌத்த மதத்தில் நடத்திய ஜனநாயக சீர்திருத்த இயக்கம் வழி வகுத்தது. மடாலயங்கள் நடத்திய வட்டி தொழில், இலவச உழைப்பு முறை மற்றும் பிற சுரண்டல் முறைகள் ஒழிக்கப்பட்டன. இதேபோன்று இஸ்லாம் மதத்தில் இருந்த நிலப்பிரபுத்துவ சொத்துடமை சலுகைகள் மதத்துடன் இணைக்கப்பட்டிருந்ததை முழுவதுமாக அகற்றினார்கள்.

திபெத்திய பௌத்தத்தில் நடைபெற்ற ஜனநாயக சீர்திருத்த இயக்கம் என்பது சீன மக்கள் குடியரசும், கம்யூனிஸ்டுகளும் மதத்தின் மீதும், அதை நம்புகிற மக்களையும் எப்படி அணுகுகிறார்கள் என்பதற்கான ஒரு உதாரணமாக திகழ்கிறது. மேற்கண்ட சீர்திருத்தங்கள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையான முறையிலும், அமைதியான முறையிலும் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் நடத்தப்பட்டது என்பதையும், அதை நடத்துவதை மிகப் பொறுமையான முறையில் காலஅவகாசம் எடுத்து இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை சீன வரலாறு பதிவு செய்துள்ளது.

திபெத்திய பகுதியில் இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்கிற பொழுது இனத்தையும், மதத்தையும் ஒன்றாக இணைத்து மக்களை சீர்திருத்தங்களுக்கு எதிராக நிறுத்தக்கூடிய வேலைகளை உள்ளூர் நிலப்பிரபுத்துவ சக்திகள் முயற்சி செய்தார்கள். சீர்திருத்தத்தினை மேற்கொண்ட மதவிசுவாசிகளும், அரசும் இனம் வேறு, மதம் வேறு என்பதை எடுத்துரைத்தார்கள். ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ மடாலயங்கள் இனக்குழுக்களை மதத்தின் பெயரால் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு சுரண்டுவதை அம்பலப்படுத்தினார்கள். மிகவும் நிதானமாக தலையிட்டு இந்த செயலை செய்தார்கள். இனக்குழுக்களுக்கான வழிபாட்டு முறைகள், நம்பிக்கை ஆகியவற்றை மடாலயங்களுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதை புரியவைத்து இந்த சீர்திருத்தத்தை முன்னெடுத்தனர்.

மேலும் மத நம்பிக்கைக்கும், மத அமைப்பிற்கும் வேறுபாடு இருக்கிறது என்பதை மக்களிடம் தெளிவு பெற எடுத்துரைத்தார்கள். மத நம்பிக்கை என்பது சிந்தனை சார்ந்த ஒன்று. மத அமைப்பு என்பது சமூக அமைப்பின் ஒரு அம்சமாகும். இந்த அமைப்பு நிலப்பிரபுத்துவ இயல்புகளை தன்னகத்தே உள்ளடக்கி இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தினார்கள். எனவே மத நம்பிக்கையும், மத அமைப்புகளையும் வேறுபடுத்தி படிப்படியாக சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதில் உறுதிபட இருந்து செயல்பட்டனர். சீனாவில் புரட்சி நடந்து ஆறு ஆண்டுகள்வரை திபெத்திய பௌத்த மடாலயங்களில் எவ்விதமான தலையீடுகளும் செய்யவில்லை. நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து ஆய்வுகளுக்கு உட்படுத்தி அந்த ஆய்வின் அடிப்படையில் தலையீடு செய்தனர்.

1959 ஆம் ஆண்டு திபெத்திய உள்ளூர் அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான உயர்மட்ட குழுக்கள் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிகளை சீர்திருத்தங்களுக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவ உறவுகளை பாதுகாப்பதற்காகவும் நடத்தினார்கள். இந்த காலகட்டத்தில்தான் கிளர்ச்சிகளை வெற்றி கொள்வதற்கு நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டன. அதே நேரத்தில் சீர்திருத்தங்களையும் அமல்படுத்துவதற்கான கொள்கைகளை உருவாக்கி அமலாக்கம் செய்தனர். கிளர்ச்சியில் ஈடுபடாத சாதாரண மத விசுவாசிகள் இந்த சீர்திருத்தங்களை உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. அதற்கு மாறாக உள்ளூர் அளவிலான மடாலயங்கள் ஜனநாயக ரீதியிலான நிர்வாக குழுக்களை அமைத்துக் கொள்வதற்கும், அந்த நிர்வாக குழு ஜனநாயக ரீதியான முறையில் தேர்ந்தெடுப்பதற்குமான விதிகளை உருவாக்கிக் கொள்வதற்கும் அனுமதிக்கப்பட்டார்கள். திபெத்திய நிலப்பிரபுத்துவ மத அமைப்பு முறையின் மிருகத்தனமான பிடியில் சிக்கி இருந்த பௌத்த மத நம்பிக்கையாளர்களை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள் குடியரசும் ஜனநாயக சீர்திருத்தவாதிகளை இணைத்து விவேகமான முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

மறுபுறத்தில் சீனாவில் ஹான்-சீனபௌத்தத்திலும், தாவோயிசத்திலும் மத சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த மடாலயங்களில் மத நம்பிக்கை கொண்ட விசுவாசிகள் அங்கீகரிக்கப்பட்டனர். மடாலயங்கள் நிர்வகிக்கக்கூடிய சொத்துக்கள் போன்றவற்றில் கடைபிடிக்கப்பட்ட ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ கூறுகள் முழுவதுமாக அகற்றும் பணியை செய்து முடித்தனர். அதேபோன்று இந்த மடாலயங்களில் மத குருமார்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய வகைகளில் பல்வேறு பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப்பட்டன. இதற்கான விதிமுறைகளும் ஒழிக்கப்பட்டது. கோயில்களிலும் மடாலயங்களிலும் பரவலாக பின்பற்றப்பட்ட தீங்கு விளைவிக்கக் கூடிய மூடநம்பிக்கைகளை பரப்பக்கூடிய நிகழ்வுகள் தடை செய்யப்பட்டன.

சீனாவில் நடைபெற்று முடிந்த புதிய ஜனநாயக புரட்சி மத அமைப்புகளை சந்திப்பதில் பெரும் சவால்களை மேற்கொண்டது. பாரம்பரிய மதங்கள், திபெத்திய பௌத்தம், அந்நிய மதங்கள் என இவைகளின் ன்மைக்கு ஏற்ப தலையீடுகளை செய்தனர். பொதுவாக மத நம்பிக்கைகளுக்கும், மத அமைப்புகளுக்கும் இடையிலான உறவுகளைப் பற்றி சரியான முறையில் மதிப்பீடு செய்து தலையீட்டுக்கான வழிகளை கண்டுபிடித்தார்கள். இந்த தலையீடுகளுக்கு மத விசுவாசிகளிடமிருந்த அல்லது மத குருக்களிமிருந்த ஜனநாயக சீர்திருத்த முயற்சிகளையும் உரிய முறையில் இணைத்துக் கொண்டார்கள்.

இந்த சீர்திருத்த முறையில் ஒரு வடிவமாக அரசு மத விகாரங்களுக்கான ஒரு துறையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் மூன்று சுய தேசபக்த கொள்கைகளை ஆதரித்து செயல்படவைத்தது. 1953ஆம் ஆண்டு பௌத்தம், இஸ்லாம் ஆகிய மதங்களுக்கான குழு 1954 ஆம் ஆண்டு புராட்டஸ்டண்ட் மதத்திற்கான குழு 1957 ஆம் ஆண்டு தாவோயிசம், கத்தோலிக்க மதம் ஆகியவற்றையும் சேர்த்து ஐந்து மதங்களை நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் தேசபக்த மத சங்கங்கள் உருவாக்கப்பட்டன.

மீட்டெடுக்கப்பட்ட அசல் நிறம்

சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அமைந்த சீன மக்கள் குடியரசு மத அமைப்பில் ஜனநாயக சீர்திருத்த இயக்கங்களின் மூலமாக மிக முக்கிய அம்சங்களை செய்து முடித்தது. நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களின் ஒடுக்கு முறைகளுக்கும், சுரண்டலின் சிறப்பு உரிமைகளையும், மக்கள்மீது ஆட்சியாளர்கள் திணித்த மனரீதியிலான அடிமைத்தனத்தையும், அகற்றியது. மறுபுறம் நிலப்பிரபுத்துவ ஒழுக்கங்களின் குப்பைகளை நிராகரித்தது கலாச்சார மட்டத்தில் சீர்திருத்த நெறிமுறைகள் மீதான முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் செயல்பட்டது. இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது கன்பியூசியம் தொடர்பான அணுகுமுறைகள்.

சீனாவில் கன்பியூசியம் என்பது ஒரு மதமாக இல்லை. அதே நேரத்தில் வாழ்க்கை நெறிமுறையாக அது அங்கீகரிக்கப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது. கன்பூசியத்தில் உள்ள அதிகார கட்டமைப்புகள், அதிகார வர்க்கம் தொடர்பான விஷயங்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி புறம் தள்ளியது. மறுபுறத்தில் கன்பியூசியம் வலியுறுத்திய ஒவ்வொரு நபரின் பொறுப்பாக நாட்டுப்பற்று, குடும்ப பொறுப்பு, சுய பண்பாடு ஆகியவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையும் நல்லொழுக்கங்கள் மீதான அதன் பாரம்பரியத்தையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தது.

மேலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது இந்த சீர்திருத்தங்கள் தேவாலய நிர்வாகத்தில் புதிய சுதந்திரத்தை கொடுத்தது. சீன மதங்கள் ஏகாதிபத்தியத்தின் ஒரு இணைப்பாக இருந்ததையும் முன்னாள் ஆளும் வர்க்கத்தின் கருவியாக இருந்ததும் நீக்கப்பட்டது. அன்றைய பிரதமர் சௌ என் லாய் குறிப்பிட்டது போல் மதங்கள் அவற்றின் அசல் நிறத்திற்கு மீட்டெடுக்கப்பட்டன. மதங்கள் அவற்றின் அடிப்படையில் நம்பிக்கைகளையும், மத நிறுவனங்கள் அவற்றிற்கு உண்டான சடங்குகள் தொடர்பான சாதாரண நடவடிக்கைகளையும் சுயமாக மேற்கொள்வதற்கான திறனையும் இந்த சீர்திருத்தங்கள் மூலமாக பெற்றன.

இந்த சீர்திருத்தங்களை தொடர்ந்து நடத்திய பிறகுதான் சீன மக்கள் குடியரசு சீனாவின் மத அமைப்புகளும் இனிமேல் எந்த வெளிநாட்டு ஆதிக்கத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டதாக இருக்காது என்று அறிவித்தது. பொது ஒழுங்கை சீர்குலைக்கவும், குடிமக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய முறையிலும், மதத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அரசின் கல்வி முறைகளை சிதைக்கக் கூடிய வகையில் மத அமைப்புகளின் செயல்பாடுகள் இருக்கக் கூடாது என்றும் தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மேற்கண்ட இரண்டு கூற்றுக்களையும் உள்ளடக்கி தான் சீனாவில் மத நம்பிக்கை சுதந்திரம் என்ற கொள்கையுடன் சேர்த்து சீன அரசியல் அமைப்பு பிரிவு 36 எழுதப்பட்டது.

நாத்திகத்தை முன் வைக்கும் ஒரு கட்சி அதன் ஆட்சியில் மத நம்பிக்கை சுதந்திரம் என்ற அம்சங்களை எப்படி அனுமதிக்க முடியும் என்ற கேள்விகள் எழுவது இயற்கைதான். இதற்கான விளக்கங்களை அடுத்து காண்போம்.

 

காதல் கல்யாணம் சர்ச்சும் சர்ச்சையும்

காலம் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கடந்து போய்விட்டது. இணையர் டி.ஏ.லதாவுடனான நிறைவான திருமண வாழ்வு 36 ஆண்டுகளை 36 மாதங்கள் போல் கடந்து 3...