Pages

வியாழன், ஏப்ரல் 16, 2026

68 திருடப்பட்ட தலைமுறைகளும் தொடரப்பட்ட தலைமுறைகளும்

 



அ.பாக்கியம்

சீனாவில் இனச் சிறுபான்மை கல்வி வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வரும் உறைவிட பள்ளி குறித்து மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் உலகெங்கிலும் பொய்ப் பிரச்சாரத்தை நடத்துகிறார்கள். இது அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படும் பொய் பிரச்சாரம் என்பதை சீன நாட்டின் தலைவர்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர். இந்தப் பிரச்சாரத்தின் மையமான இடமாக திபெத் இருக்கிறது. தலாய்லாமா நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தை நீடித்து வைத்திருப்பதற்கு, கிராமங்களிலும், மலைப்பிரதேசங்களிலும், மேய்ச்சல் நிலங்களிலும் வாழ்ந்த மக்களுக்கு கல்வியை கொடுக்காமல் தடுத்து வந்தார். கிராமப்புறங்களில் கல்வி எளிதில் அணுக முடியாத இடங்களில் இருக்கக்கூடிய குடும்பங்கள் அரசு செலவில் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பி வைக்கிறார்கள். இதன் மூலம் தலாய்லாமாவின் கட்டுப்பாடுகள் கலகலத்து போவதுடன் அறிவியல் கல்வியும், அறிவியல் சார்ந்த அறிவும் மேம்படுகிறது. இதை தடுப்பதற்காக உறைவிடப் பள்ளிகள் சிறைக்கூடங்கள் என்று சித்தரிக்கிறார்கள். பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரிப்பது, சிறுபான்மை கலாச்சாரத்தை அழித்து சீன மயமாக்குவது என்பது பிரதான குற்றச்சாட்டாகும்.

முதலாவதாக, இனச் சிறுபான்மை பிரதேசங்களில் அமலாக்கப்படும் உறைவிடப் பள்ளி என்பது முழுக்க முழுக்க தன்னார்வத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. உறைவிட பள்ளியில் சேருவதா அல்லது தினசரி மாணவராக வந்து செல்வதா என்பதை முற்றிலும் மாணவர்களும், அவரது பெற்றோர்களின் விருப்பத்தைச் சார்ந்ததாகும். கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில் இதில் ஏதாவது ஒன்றை கடைபிடிக்க வேண்டும். எனவே தான் உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களிலும் வார விடுமுறைகளிலும் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவது இந்த தன்னார்வத் திட்டத்தின் அடிப்படையில்தான்.

    இரண்டாவதாக, புவியியல் தேவையை சார்ந்தது. திபெத் பகுதியும் வேறு சில சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பிரதேசங்களும் மிக உயரத்திலும் விரிந்த பகுதிகளிலும் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்டதாகவும் உள்ளது. இவர்களுக்கு பள்ளிக் கல்வி கிடைப்பது சிரமமாகும். எனவே அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி உரிமையை உறுதி செய்ய இந்த உறைவிடப் பள்ளி அமைக்கப்பட்டது. உலகில் இதே போன்று நிலப்பரப்பு அமைந்துள்ள பல நாடுகளிலும் இது போன்ற பள்ளிகள் அமைத்துதான் கல்வி கற்பிக்கப்படுகிறது.

மூன்றாவதாக, பாரம்பரிய கலாச்சாரம் ஒழிக்கப்படுகிறது என்பதற்கு மாறாக திபெத்திய மொழி, இலக்கியம், நாட்டுப்புற நடனம் போன்ற பாரம்பரிய பண்பாட்டுப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். உணவுகளிலும் கூட திபெத்திய மற்றும் இதர சிறுபான்மை மக்களின் பாரம்பரிய உணவுகள் வழங்கப்படுகின்றன. ஆசிரியர்களில் இனச் சிறுபான்மை ஆசிரியர்கள் 90% தங்கள் தாய் மொழியில் பாடங்களை நடத்துகிறார்கள். நான்காவதாக, வரலாற்று ரீதியாக மேற்கத்திய காலனித்துவ உறைவிடப் பள்ளிகளுக்கும் சீனாவில் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளுக்கும் அதன் நோக்கத்திலேயே அடிப்படை வேறுபாடு இருக்கிறது என்று சீன நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் உறைவிடப் பள்ளிகளின் நோக்கம் பழங்குடியினரின் கலாச்சாரத்தையே அழிப்பதாக இருந்தது. ஆனால் சீன பள்ளிகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதுடன், கலாச்சாரத்தையும் பாதுகாக்கின்றன. சீன அரசியல் அமைப்பு பன்முக இனங்களுக்கான உரிமைகளை வழங்குகிறது.

திருடப்பட்ட தலைமுறைகள்

எனவே மேற்கத்திய நிபுணர்களின் கருத்துப்படி இந்த விமர்சனங்கள் உண்மை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. மாறாக அமெரிக்காவின் புவிசார் அரசியல் நிலைபாடுகளுக்காக சீனாவுக்கு எதிராக பரப்பப்படும் பொய் பிரசாரங்கள் ஆகும். தங்கள் நாட்டில் செய்த கலாச்சார படுகொலை போன்ற வரலாற்றுக் குற்றங்களை வைத்துக் கொண்டு சீனாவையும் அவ்வாறே இருப்பதாக மற்றவர்களை நம்ப வைக்கக்கூடிய பிரச்சாரமாகும். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடாவில் நடந்த உறைவிடப் பள்ளிகளின் படுகொலைகளை இங்கு கவனத்திற்கு கொண்டு வருவது அவசியமாகிறது.

ஆஸ்திரேலியாவில் 1910 ஆம் ஆண்டு முதல் 1970 வரை அரசு மற்றும் தேவாலயக் கொள்கைகள் காரணமாக பல்லாயிரக் கணக்கான பழங்குடி இனக்குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். பழங்குடி பகுதி மற்றும் டோரஸ் ஜலசந்தி தீவு (Aboriginal and Torres Strait Islander) கூட்டங்களில் குவியலாக பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். உலகின் மிகப் பழமையான, தொடர்ச்சியான கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்கள் இரண்டு தனி குழுக்களாக, 250 க்கும் மேற்பட்ட மொழி குழுக்களாக வாழ்ந்தனர். வளமான பன்முக கலாச்சார மரபுகளை கொண்டிருந்தனர். இவர்களிடம் இருந்து பல்லாயிரக்கணக்கான பழங்குடி இன குழந்தைகளை அவர்களின் குடும்பங்களிலிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் இதரப் பகுதியில் வாழ்ந்த வெள்ளை இனத்தவர் குடும்பங்களில் கட்டாயமாக வளர்க்கப்பட்டனர்.

இந்த செயல் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை அழித்து வெள்ளை இன கலாச்சாரத்துடன் இணைக்கும் நோக்கில் செய்யப்பட்டது. குழந்தைகளின் பாதுகாப்பிற் காகவும், அவர்களை புறக்கணிப்பு வாழ்க்கையில் இருந்து காப்பாற்றுவதற்கும் இதை மேற்கொள்கிறோம் என்று ஆஸ்திரேலியா அரசாங்கத்தால் இந்த நடவடிக்கை நியாயப்படுத்தப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம் தூயஇரத்த பழங்குடியின மக்கள் அழிந்து விடுவார்கள் என்றும், கலப்பு இரத்த குழந்தைகள் சமூகத்துடன் மிக எளிதாக ஒன்றி விடுவார்கள் என்றும் அன்றைய அரசாங்கம் நம்பியது. பழங்குடி இன மக்கள் இன ரீதியாக தாழ்ந்தவர்கள் என்ற வெள்ளை இன மேலாதிக்க கருத்தின் அடிப்படையில் இந்த கொள்கை அமலாக்கப்பட்டது.

இவ்வாறு பழங்குடி குடும்பங்களிடமிருந்து குழந்தைகளை அகற்றுவதற்காக 1869 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் விக்டோரியன் பழங்குடி பாதுகாப்பு சட்டம்(1869) என்ற ஒரு சட்டத்தை இயற்றினார்கள். இந்த சட்டத்தின் மூலம் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்துக் கொண்டுவர அனுமதி அளித்தது. 1915 ஆம் ஆண்டு பழங்குடியினர் பாதுகாப்பு திருத்தச் சட்டம் (நியூ சவுத் வேல்ஸ் 1915) கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் தீங்குகள் நிறைந்தது. 1869 சட்டத்தின்படி பழங்குடியின குழந்தைகள் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இந்த திருத்தம் நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து அகற்றுவதற்கான அதிகா ரத்தை கொடுத்தது.

ஒரு குழந்தை தன் குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்ட உடன் அது வெள்ளையர் சமூகத்துடன் ஒன்றிப்போக கட்டாயப்படுத்தப்பட்டது. வெள்ளையர்களின் குடும்பத்தில் வேலைக்கு சேர்க்கப்பட்டார்கள். அங்கு அவர்கள் பாரம்பரிய மொழியை பேசவோ, சொந்த கலாச்சார பழக்கவழக்கங்களில் பங்கேற்பது தடை செய்யப்பட்டது. அவர்களுக்கு புதிய பெயர்களும், புதிய அடையாளங்களையும் கொடுத்தார்கள். இவ்வாறு கொண்டுவரப்பட்ட குழந்தைகளிடம் அவர்களது குடும்பத்தினர் அவர்களை கைவிட்டு விட்டனர் அல்லது இறந்து விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. பிரித்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆஸ்திரேலியா அரசாங்க அதிகாரிகள் குழந்தைகளை அவர்களின் வாழ்விடங்களில் இருந்தும் குடும்பங்களிலிருந்தும் வெகு தொலைவிற்கு அனுப்பி விடுவார்கள்.

 தங்கள் குடும்பத்தை பற்றி தவறாக கற்பிக்கப்பட்டதால் பிரிக்கப்பட்ட குழந்தைகள் தங்களது பாரம்பரியத்தை பற்றியும் குடும்பத்தை பற்றியும் அவமானமாக கருதினார்கள். பிற்காலத்தில்தான் இந்த திருடப்பட்ட தலைமுறையைப் பற்றி அவர்கள் அறிந்து கொண்டனர். இவ்வாறு பிரிக்கப்பட்ட குழந்தைகளில் பலர் உறைவிட பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இந்தப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாலியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல் உட்பட பல்வேறு வடிவங்களில் கொடுமைகளையும் அனுபவித்தனர். இந்த நிகழ்வு தலைமுறைகளுக்கு இடையேயான மன அதிர்ச்சியை (intergenerational trauma) ஏற்படுத்தி பழங்குடி சமூகங்களில் நீண்டகால இழப்புகளையும் பாதிப்புகளையும் விளைவித்தது.

மன்னிப்பும் தொடரும் தலைமுறை திருட்டும்

2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி அப்போதைய ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் திருடப்பட்ட தலைமுறை உறுப்பினர்களிடம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார். இந்த நிகழ்வு ஆஸ்திரேலிய வரலாற்றில் இருண்ட பக்கமாக கருதப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு இது இன்றும் பெரும் வலியாக உள்ளது. குழந்தைகளை அகற்றும் நடைமுறை இன்றும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு நிறுவனம், மேற்கு ஆஸ்திரேலியா சமூக துறை மற்றும் சுகாதாரத் துறையின் தரவுகளில் இருந்து தொகுக்கப்பட்ட தொகுக்கப்பட்ட விவரங்கள் 2019 வெளியிடப்பட்டது.

2012 மற்றும் 2017 க்கு இடையில் உறைவிட இல்ல பராமரிப்பில் வைக்கப்பட்ட பழங்குடி குழந்தைகளின் எண்ணிக்கை 1000 க்கு 46.6 லிருந்து 1000க்கு 56.6 உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இதே ஆராய்ச்சி தரவுகள் 2013 மற்றும் 2016 க்கு இடையில் இல்ல பராமரிப்பில் வைக்கப்பட்ட ஒரு வயதுக்கு உட்பட்ட கைக்குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் 1000 எனக்கு 24.8 இலிருந்து 29.1 ஆக உயர்ந்ததையும் கண்டறிந்துள்ளனர். பழங்குடி குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக தொடரும் மன அதிர்ச்சியை அனுபவித்து வருகின்றனர். பாரம்பரிய அறிவு, கலாச்சாரம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட முடியாததால் திருடப்பட்ட தலைமுறையினர் பாரம்பரிய அறிவை இழந்துள்ளனர். 1788 ஆம் ஆண்டில் பிரிட்டன் தனது முதல் ஆஸ்திரேலியா காலனியை நிறுவிய பொழுது பழங்குடி மக்கள் தொகை மூன்று லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. 1901 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் நிறுவப்பட்ட போது பழங்குடியின மக்கள் தொகை 90 ஆயிரம் ஆக குறைந்துவிட்டது. எந்த அளவு காலனித்துவ வேட்டை நடந்துள்ளது என்பதை இந்த எண்ணிக்கை புலப்படுத்தும்.

இந்தியரை கொன்று மனிதரை காப்பாற்றுங்கள்

ஆஸ்திரேலியாவில் பிரிட்டன் நடத்தியது போன்று அமெரிக் காவில் பழங்குடி இன மக்களின் குழந்தைகளை பல பத்தாண்டுகளாக கட்டாயப்படுத்தி உறைவிட பள்ளிகளில் சேர்த்தார்கள். இந்த நடவடிக் கைகள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கி 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அமெரிக்க அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொடூரமான கட்டாய ஒருங்கிணைப்புக் கொள்கையாகும். இதன் மிச்ச சொச்சங்கள் 1980 ஆம் ஆண்டு வரை இயங்கி வந்ததாகவும் தரவுகள் தெரிவிக்கிறது. இந்தக் கொள்கையின் நோக்கம் பழங்குடி குழந்தைகளை அவர்களின் குடும்பங்களில் இருந்து பிரித்து வெள்ளை அமெரிக்க சமூகத்தில் ஒருங்கிணைப்பது ஆகும். இந்த செயலின் வழியாக பழங்குடி கலாச்சாரத்தை அழிப்பதாகும். இந்தப் பள்ளியை துவக்குதற்கு முதல் காரணமாக இருந்த ராணுவ அதிகாரியான ரிச்சர்ட் ஹென்றி பிராட் கூறியதுதான் இந்தியனை மனிதனைக் காப்பாற்று என்ற வாக்கியமாகும். அமெரிக்காவிலிருந்து பூர்வகுடி மக்களை செவ்விந்தியர்கள் என்று அழைப்பார்கள். அந்த அடிப்படையிலேயே அனைத்து பூர்வகுடி இன குழந்தைகளையும் கட்டாய உறைவிட பள்ளியில் சேர்த்தார்கள்.

குழந்தைகளை கட்டாயமாக பள்ளிக்கு அனுப்புவதற்கு பல்வேறு முறைகளை பயன்படுத்தினார்கள். 1891ஆம் ஆண்டில் அமெரிக்க காங்கிரஸ் ஒரு சட்டத்தை இயற்றி பழங்குடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை கட்டாயமாக்கியது. பழங்குடி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தால் அந்த பெற்றோருக்கான உணவுப் பொருட்கள் மற்றும் பிற உதவிகளை நிறுத்தி வைக்க அதிகாரிகளுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த முறைகளுக்கு ஒத்துழைக்காத பெற்றோரின் குழந்தைகளை போலீசார் மூலம் நேரடியாக பிடித்துச் செல்லப்பட்டனர். பெற்றோர்கள் எதிர்த்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். உதாரணமாக 1894 ஆம் ஆண்டில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த 29 ஹோபிஇன பெற்றோர்கள் அல்காட்ராஸ் சிறையில் அடைக்கப் பட்டார்கள்.

உறைவிட பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகள் மிகவும் கடுமையான சூழலை எதிர்கொண்டார்கள். குழந்தைகளின் பூர்வீக பெயர்கள் மாற்றப்பட்டு ஆங்கில பெயர்கள் சூட்டப்பட்டன. அவர்களது நீண்ட முடிகள் வெட்டப்பட்டு சீருடை அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். தாய் மொழியில் பேசுவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டு ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றனர். தாய் மொழியில் பேசினால் சோப்புக் கட்டிகளை சாப்பிட வைத்து கடுமையான தண்டனைகள் வழங்கினார்கள். இந்தப் பள்ளிகள் ராணுவ முகாம் போல் இயக்கப்பட்டன. விதிகளை மீறினால் அடித்தல், தனிமை சிறையில் அடைத்தல், மின்சாரத்தை பாய்ச்சுதல் போன்ற தண்டனைகளும் வழங்கப்பட்டன.

மோசமான உணவு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்கள் காரணமான ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தார்கள். 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க அரசாங்க அறிக்கையின்படி 1819 முதல் 1969 வரை 973 பழங்குடி குழந்தைகள் பள்ளிகளிலேயே இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அடையாளம் தெரியாத கல்லறைகளில் புதைக்கப்பட்டார்கள். இந்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமானது மட்டும்தான். மரணமடைந்தது இதைவிட அதிகம்.

அமெரிக்காவில் இருந்த உறைவிட பள்ளி கல்விக்காக மட்டுமல்ல ஒரு முழு சமூகத்தையே ஒடுக்குவதற்கான அரசின் கொள்கையின் வெளிப்பாடாகும். இதன் விளைவாக பல தலைமுறை பழங்குடி மக்கள் மன உளச்சலுக்கு ஆளானார்கள். மொழிகள் அழிந்து போனது, கலாச்சாரம் சீர்குலைந்து போனது, அத்துடன் அவர்களின் அடுத்த தலைமுறையும் மறைந்து போனது. ஆஸ்திரேலியா நாட்டுப் பிரதமர் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார். 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு என்பது நடந்த து உண்மை என்பதை நிருபிக்கிறது. ஆனால் காலனித்துவ வாதிகள்னி சுரண்டல் கொள்கையே இதற்கு காரணம். இன்றும் இது புதிய வடிவில் வெளிப்படுகிறது.

கனடாவில் கலாச்சார இனப்படுகொலை

கனடிய இந்திய உறைவிட பள்ளி அமைப்பு என்பது பழங்குடி மக்களுக்கான உறைவிட பள்ளிகளின் வலையமைப்பாகும். இந்தப் பள்ளிக்கூடங்கள் கனடிய அரசாங்கத்தின், இந்திய விவகாரங்கள் துறையால் நிதியளிக்கப்பட்டு பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களால் நடத்தப்பட்டது. பழங்குடி குழந்தைகளை அவர்களின் சொந்த கலாச்சாரம் மற்றும் அவர்கள் மதத்தின் செல்வாக்கில் இருந்து தனிமைப்படுத்தி அவர்களை மேலாதிக்க யூரோ-கனடிய கலாச்சாரத்தில் ஒருங்கிணைப்பதற்கான ஒரு முயற்சியாகும். இது கனடிய வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகும். 1870 முதல் 1997 வரை அதாவது கடைசி உறைவிட பள்ளிகள் மூடுகின்ற வரை 1,50,000பழங்குடி குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பறிக்கப்பட்டு தேவாலயங்களால் நடத்தப்பட்ட வந்த உறைவிட பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

1894ஆம் ஆண்டு இந்தியன் சட்டத்திருத்தம் பழங்குடி குழந்தைகளை அவர்களது குடும்பங்களில் இருந்து அகற்றி உறைவிட பள்ளிகளில் சேர்க்கும் அதிகாரத்தை உள்ளுர் அதிகாரிகளுக்கு அளித்தது. 1920 ஆம் ஆண்டு இந்தச் சட்டம் மேலும் பலப்படுத்தப்பட்டு 7முதல்16 வயதுடைய ஒவ்வொரு பழங்குடி குழந்தையும் இந்தப் பள்ளிகளில் சேர்வது கட்டாயமாக்கப்பட்டது. இந்திய உறைவிட பள்ளிகள் தீர்வு ஒப்பந்தத்தின் கீழ் (IRSSA) மொத்தம் 139 பள்ளிகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன.

இந்தப் பள்ளிகளின் முதன்மையான நோக்கம் பழங்குடி குழந்தைகளை அவர்களின் குடும்பம், மொழி மற்றும் கலாச்சாரத்தில் இருந்து பிரித்து, அவர்களை வெள்ளையர் சமூகத்தின் பழக்கவழக்கங்கள் கடைபிடிக்க வைப்பது. கிறிஸ்துவ மதத்தை தழுவு செய்வது. ஆங்கில மொழியை கற்கும்படி கட்டாயப்படுத்துவது போன்ற மிகப் பெரும் கலாச்சார இனப்படுகொலையை செய்தனர்.

கன்னடிய நாட்டில் இருந்த உறைவிடப் பள்ளிகளில் கடுமையான உடல் ரீதியான துன்புறுத்தல்களும், மனரீதியான துன்புறுத்தல் களாலும், பாலியல் துன்புறுத்தவர்களாலும் பெரும் பகுதி மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். குழந்தைகள் தங்கள் தாய் மொழியில் பேசவோ பாரம்பரிய பழக்க வழக்கங்களை பின்பற்றுவோ அனுமதிக்கப் படவில்லை. அவ்வாறு செய்தால் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். உறைவிட பள்ளிகளின் மோசமான வாழ்க்கை நிலைமைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நோய்கள் காரணமாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்தனர்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையும் என்ற அமைப்பு இறந்த குழந்தைகளில் இதுவரை 4100 க்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயர்களை அடையாளம் கண்டுள்ளது இருப்பினும் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. சமீப காலங்களில் பல பள்ளி கட்டிடங்களின் வளாகங்களில் அடையாளம் தெரியாத கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உறைவிட பள்ளி மாணவர்களின் கல்லறைகள் என்று யூகிக்கப் படுகிறது.

2008 ஆம் ஆண்டில் கன்னடிய நாட்டின் அப்போதைய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக கலாச்சார இனப்படுகொலைக்காக மன்னிப்பு கோரினார். உண்மை மற்றும் நல்லிணக்க அமைப்பு 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 2015 ஆம் ஆண்டு தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கனடாவின் உறைவிட பள்ளி முறைகள் பழங்குடி சமூகங்களுக்கு ஏற்படுத்திய ஆழ்ந்த துயரத்தையும் அதன் பயனாக இன்றும் தொடரும் வலியை பற்றியும் தெரிவித்திருக்கிறது

மேற்கத்திய நாடுகளில் காலினித்துவ கொள்கையை தீவிரமாக கடைபிடித்த பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பழங்குடி மக்களை அவர்களின் குழந்தைகளை கொடூரமான முறையில் நடத்தியதை இந்தச் சம்பவங்கள் வெளிக்கொணர்ந்து உள்ளது. இதே கண்ணோட்டத்தில் சீனாவில் உறைவிட பள்ளிகள் இருப்பதாக அரசியல் நோக்கத்துடன் பிரச்சாரம் செய்கிறார்கள். சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின் பிங் மேற்கத்திய நாடுகள் காலனித்துவ வரலாற்றை தன்னகத்தை கொண்டுள்ள பொழுது, சீனா காலனித்துவத்தை எதிர்த்த வரலாற்றை ஏற்படுத்தி உள்ளது. எனவே நம் மக்களின் வலியை உணர்ந்தவர்கள் என்றார். எங்கள் கொள்கையும் காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மேம்படுத்துவதாகும் என்பதை திட்டவட்டமாக அறிவித்தார்.

அ.பாக்கியம்

வியாழன், ஏப்ரல் 09, 2026

67 சிறுபான்மையினரின் அறிவுக்களம்


அ.பாக்கியம்

சீனாவில் இனச் சிறுபான்மை மக்களின் கல்வியை வளர்ப்பதில் இரு மொழி கொள்கைகளும், முன்னுரிமை கொள்கைகளும், ஒன்பது ஆண்டுகள் கட்டாய கல்வி முறைகளும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியதைவிட, சீன மக்கள் குடியரசு உருவாக்கிய உறைவிடப் பள்ளிகள் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. சீன மொழியில் இதற்கு நெய்டிபன் அதாவது உள்துறை பள்ளி என்று அழைக்கிறார்கள். இந்த உறைவிடப் பள்ளி தொடர்பாக மேற்கத்திய நாடுகள் அவதூறு மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக திபெத்திய பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள உறைவிடப் பள்ளிகள் தொடர்பாக அதிக பொய் பிரச்சாரங்களை செய்கிறார்கள். திபெத்திய குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதாகவும், கட்டாயமாக உறைவிட பள்ளிக்கு அனுப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட திபெத்துக்கு ஆதரவான சர்வதேச பிரச்சார குழு சுமார் 10 லட்சம் குழந்தைகள் உறைவிடப் பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொய்களை கட்டமைக் கிறார்கள். இந்த உறைவிடப் பள்ளிகள் திபெத்திய குழந்தைகளின் தாய்மொழி, பண்பாடு மற்றும் அவர்களின் அடையாளத்தில் இருந்து பிரித்து சீனமயமாக்குவதற்கு ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் சும்த்துகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டின் மூலக்கர்த்தாவாக இருப்பது 14 வது தலாய்லாமா ஆகும். இது குறித்த உண்மை நிலைமைகளை இதற்கு அடுத்த பகுதியில் காணலாம். சீன சோசலிசத்தில் உறைவிட பள்ளிகள் எவ்வாறு செயல்படுகிறது, எவ்வளவு செயல்படுகிறது என்பதை முதலில் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவைதான் புதிய கண்டுபிடிப்புகளின் தாய்

 

சீன மக்கள் குடியரசும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் இனச் சிறுபான்மை மக்களுக்கு கல்வி வழங்குவதற்கான திட்டங்களை உருவாக்குகிற பொழுது அங்கிருந்த புறச்சூழலைகள் உறைவிடப் பள்ளிகளின் தேவைகளை உணர்த்த ஆரம்பித்தன. 1950 ஆம் ஆண்டுகளிலேயே இதற்கான கருத்துக்கள் உருவாக ஆரம்பித்தது. ஒவ்வொரு இடத்திற்கும் கல்வியை கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பொழுது 1950 ஆம் ஆண்டுகளில் இறுதிப்பகுதியில் இதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது.

ஆரம்ப கட்டத்தில் இனச் சிறுபான்மை மாணவர்கள் பரந்த மேய்ச்சல் நிலப் பகுதிகளிலும், மலைப்பிரதேசங்களிலும் சிதறிக் கிடந்தனர். அவர்களின் வாழ்க்கை மேய்ச்சல் நில வாழ்க்கையாக இருந்தது. முதலில் கூடார பள்ளிகள் (டெண்ட்) அமைத்துக் கற்றுக் கொடுத்தனர். அவ்வாறு அமைக்க முடியாத இடங்களில் நடமாடும் கற்பித்தல் பள்ளிகளை உருவாக்கினார்கள். இவற்றுடன் கூடவே குதிரை ஏற்ற பள்ளிகளும் உருவாக்க உருவாக்கப்பட்டது. ஜின்ஜியாங் பகுதிகளில் குதிரை வளர்ப்பு மற்றும் குதிரை ஏற்றத்தில் திறமையான கசாக், கிர்கிஸ் போன்ற இனக் குழுக்களின் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் பாரம்பரிய குதிரை ஏற்ற கலைகளை பள்ளிகளில் கற்பித்தனர். இவை கல்வி முறையின் ஒரு பகுதியாக மாறியது. இவற்றைத் தொடர்ந்துதான் உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

இவை ஆரம்ப காலத்தில் குறைவாக இருந்தாலும், கலாச்சார புரட்சிக்கு பிறகு 1980 ஆம் ஆண்டுகளில் சீர்திருத்தம், திறந்துவிடுதல் கொள்கையின் காலத்தில் இன சிறுபான்மை மக்கள் தனித்து விடப்படுகிறார்கள் என்ற நிலைமை உருவாகாமல் இருப்பதற்கு தீவிரமான முறையில் உறைவிடப் பள்ளிகளை உருவாக்கினார்கள். குறிப்பாக 1980 ஆம் ஆண்டுகளில் இனச் சிறுபான்மையினரின் கல்வி விரிவாக்கத்திற்காக உள்மங்கோலியா, ஜின்ஜியாங்க், மற்றும் திபெத்திய பகுதிகளில் இருந்த மேய்ச்சல் நிலம் மற்றும் மலைப்பகுதியில் வசித்தவர்களுக்கான தங்குமிட பள்ளிகளை அதிகமாக்கினார்கள். ஆரம்ப காலத்தில் துவக்கப் பள்ளிகள் மட்டும் தங்குமிட பள்ளிகளாக இருந்தது. பிற்காலத்தில் தேவையை கருதி இடைநிலைப் பள்ளிகள் வரை தங்குமிட பள்ளிகளாக மாற்றப்பட்டன. 2011ஆம் ஆண்டுகளில் உறைவிடப் பள்ளிகள் தொழிற்கல்விகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. உறைவிடப் பள்ளிகள் 1950 ஆம் ஆண்டுகளில் துவக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவில் விரிவுபடுத்தப்பட்ட ஒரு மாபெரும் திட்டமாக மாறியது

நவீன கல்விக்கான ஊற்றுக்கண்   

சீனாவில் கட்டாய கல்வி சட்டம் அமலாக்க வேண்டும் என்றால் உறைவிட பள்ளிகளின் தேவை அவசியமாகியது. அதிகாரப்பூர்வமாக தினமும் பள்ளிக்குச் சென்று வருவது தொலைதூரத்தில் இருக்கும் மாணவர்களுக்கு சாத்தியமற்றது. எனவே இப்பள்ளிகள் அமைக்கப் பட்டது. இந்த அமைப்பு கல்வி சமத்துவத்தை மேம்படுத்துவதையும், இன கலாச்சாரத்தை பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. தற்காலத்தில் நவீன கல்வி பாடத்திட்டத்தை கற்றுக் கொள்ளக் கூடிய வகையில் உறைவிடப் பள்ளிகளில் ஆய்வகங்கள், நூலகங்கள், கணினி அறைகள், உணவு கூடங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் உருவாக்கப் பட்டுள்ளன. அரசு அளித்திடும் நிதி உதவி என்பது மாணவர்களின் தங்குமிடம், உவுணக்கானது மட்டுமல்ல கல்விக்கட்டணமும், அத்தியாவசிய வாழ்க்கைச் செலவுகளையும் உள்ளடக்கியதாகும்.

திபெத்திய பகுதியில் மழையர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை 15 ஆண்டுகள் பொது நிதி உதவி மூலமாக கல்வியை வழங்குகிறார்கள். இந்தப் பள்ளியின் சேர்க்கை என்பது முற்றிலும் தன்னார்வமானது. தங்களின் குழந்தைகளை உறைவிடப் பள்ளி மாணவர்களாக சேர்ப்பதா வேண்டாமா என்பதை பெற்றோர்கள்தான் தேர்வு செய்து கொள்கிறார்கள். அருகில் இருக்கக்கூடிய மாணவர்கள் பகலில் படித்துச் செல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள். உறைவிட பள்ளி மாணவர்கள் வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் வீட்டிற்கு சென்று வருகிறார்கள். சீன அரசாங்கத்தின் கண்ணோட் டத்தின்படி புவியியல் சவால்களுக்கு இந்த பள்ளிகள் ஒரு நடைமுறை தீர்வாக உள்ளது. அதுமட்டுமல்ல வறுமை ஒழிப்புக்கான ஒரு கருவியாகவும், சிறுபான்மை மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குவதாகவும் இந்த உறைவிடப் பள்ளிகள் அமைந்துள்ளது. அதே நேரத்தில் சிறுபான்மை மக்களின் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் இந்த பள்ளிகளின் பாடத்திட்டங்களில் இருக் கின்றது.

மேற்கத்திய நாடுகளில் உறைவிட பள்ளிகள் பெரும்பாலும் உயர் குடி, செல்வந்த குடும்பங்களுக்கு சேவை செய்யக் கூடியதாகும். சீனாவில் அரசு நடத்தும் உறைவிட பள்ளி அமைப்பானது சாதாரண குடும்பங்களுக்கு சேவை செய்வதை முதன்மை பணியாக கொண்டுள்ளது. அரசாங்கத்தின் மானியங்கள் தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கான தரமான கல்விக்கு செலவு செய்யப்படுகிறது. இந்த உறைவிட பள்ளிகள் ஒரு நிலைத்த தன்மையை உருவாக்குகின்றன. இதன் மூலம் கல்வியில் வெற்றிபெறுவதும், ஒழுக்கமான சூழலில் வாழ்வதும் நன்கு கட்டமைக்கப்பட்ட கல்விசூழலையும் இந்த உறைவிடப்பள்ளிகள் உருவாக்குகின்றது என்று சீனா மற்றும் உலகமயமாக்கல் மையத்தைச் சேர்ந்த மரியூர் யூஜென்ஸ் கவாலோ தெரிவிக்கின்றார்.

இந்த உறைவிட பள்ளிகள் மூலமாக சிறுபான்மை மாணவர்களின் கல்வி அறிவு மேம்படுகிறது. இதனால் அவர்களின் குடும்பங்கள் மேல்நோக்கிய சமூக இயக்கத்தில் உள் நுழைவதும், சமூகத்தில் உயர் அந்தஸ்து கிடைப்பதும், அதிக வருமானமும் கிடைப்பதற்கான மதிப்பு மிக்க வழிகளை இந்த உறைவிட பள்ளிகள் வழங்கி இருக்கிறது. இதன் காரணமாக இனச் சிறுபான்மை உறைவிட பள்ளிகள் அப்பகுதி பெற்றோர்களால் அதிகம் விரும்பப்பட்ட பள்ளி முறையாகவும் உயர்ந்து நிற்கிறது.

திபெத்திற்கு அறிவு சார் உதவி

 

1980 ஆம் ஆண்டு அன்றைய சீன நாட்டின் பிரதமர் ஹூ யாவோ பாங் திபெத்திற்கு பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் போது திபெத்தின் வளர்ச்சி குறித்து பல்வேறு துறைகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் அடிப்படையில் கல்வித்துறையில் போதுமான வளர்ச்சி ஏற்படவில்லை என்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டு, அரசு சார்பிலும், சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் கூடுதல் கவனம் செலுத்தக்கூடிய முறையில் திபெத் திற்கான அறிவுசார் உதவி என்ற ஒரு சிறப்பு திட்டத்தை உருவாக்கி னார்கள்.இந்தத் திட்டத்தின் படி திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள உள்ளுர் அரசாங்கமும், மத்திய அரசும் இணைந்து பல திட்டங்களை உருவாக்கியது மட்டுமல்ல, சீனாவின் வளர்ச்சி அடைந்த பகுதியான கிழக்கு சீனாவில் இருந்த மாகாண அரசுடன் ஒப்பந் தங்களை ஏற்படுத்தி திபெத்தின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டார்கள்.

கிழக்கு மாகாண அரசுகளின் உதவியுடன், திபெத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக 1984 ஆம் ஆண்டு முதல் பெய்ஜிங், தியான்ஜின், சோங்கிங், ஹெனான், ஹெபே, ஷான்டாங், ஜியாங்சு, ஷான்சி, ஹுனான், ஹூபே, அன்ஹுய், ஷான்சி மற்றும் யுன்னான் ஆகிய இடங்களில் திபெத்தியர்களுக்காக சிறப்பு வகுப்புகளை அரசாங்கம் நடத்தி வருகிறது. திபெத்திற்குத் தேவையான திறமையாளர்களைப் பயிற்றுவிப்பதே இதன் நோக்கம். இந்த உறைவிடப் பள்ளிகளில் இடைநிலைக் கல்வியும், மேம்பட்ட மேல்நிலைக் கல்விகளும் போதிக்கப்படுகிறது. சீனியர் மற்றும் இடைநிலை அளவில் தொழிற்கல்விகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக 11 முதல் 14 வயதுடைய திபெத்திய குழந்தைகள் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இந்த சிறப்பு உறைவிட பள்ளிகளுக்கு வருகிறார்கள். அவர்களின் அனைத்து செலவுகளும் அரசாங்கத்தால் செய்யப்படுகிறது. இந்தப் பள்ளிகளை நடத்துவதற்கு ஒரு கூட்டு நிதி ஒப்பந்தமும் போடப்பட்டது.

இந்தத் திட்டம் நாடு முழுவதும் விரிவடைந்த பொழுது 1985 ஆம் ஆண்டு திபெத்திய தன்னாட்சிப் பகுதி மாணவர்கள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின் மூலமாக பயன் அடைந்தார்கள். இந்த உறைவிட பள்ளிகளில் படித்த ஒட்டுமொத்த திபெத்திய மாணவர்களில் 70% விவசாய குடும்பத்திலிருந்தும் மேச்சல் நில குடும்பத்திலிருந்தும், நாடோடி வாழ்க்கை நடத்தும குடும்பத்திலிருந்தும் வந்தவர்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது. 20% மட்டுமே நகர்ப்புறங்களில் இருந்து உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்தவர்கள். இந்தப் பள்ளிகளில் 10% திபெத்தில் பணியாற்றக்கூடிய பெரும்பான்மை ஹான் இன பிரிவுகளின் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டது. உறைவிடப் பள்ளிகளில் படித்த திபெத்திய மாணவர்களில் 90% பேர் திபெத்திற்கு திரும்பி அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டார்கள். உயர்கல்வி படிக்க விருப்பப்பட்டவர்கள் அதற்கான வாய்ப்புகள் அரசால் வழங்கப்பட்டது. மிகவும் பின்தங்கிய கடுமையான இயற்கை சூழலை கொண்ட திபெத்தில் கல்வி வளர்ச்சிக்கு மத்திய அரசும், வளர்ந்த மாநிலங்களும் செய்த உதவிகள் மூலமாக, சீனாவில் மற்ற பகுதி மாணவர்களுக்கு இணையான கல்வியை திபெத் மாணவர்கள் பெற முடிந்தது.

மற்றொரு முக்கிய மாகாணம் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பகுதியாகும். 2000 ஆண்டு இலையுதிர் காலத்தில் மட்டும் இங்கு உள்ள இனச் சிறுபான்மை மாணவர்களுக்காக 12க்கும் மேற்பட்ட உறைவிட பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஒரு சில மாகாணங்களை தேர்ந்தெடுத்து அந்த மாகாணங்களில் இருந்த 21 நகரங்களில் சிறுபான்மையினருக்கான உறைவிடப் பள்ளிகளை உருவாக்கினார்கள். 2017 ஆம் ஆண்டில் 14 வெவ்வேறு மாகாணங்களில் உள்ள 45 நகரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட உறைவிடப் பள்ளிகளை இனச் சிறுபான்மையினருக்காக மட்டும் அமைத்தனர். இந்த 45 நகரங்களில் இருந்த உறைவிடப் பள்ளிகளில் பல்வேறு இனச் சிறுபான்மையினர் படித்தாலும் ஜின்ஜியாங்க் மாகாணத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்தார்கள். இவர்கள் அனைவரும் வறட்சி நிறைந்த பகுதிகளில் இருந்து படிக்க வந்தவர்கள் குறிப்பாக உய்குர் இஸ்லாமிய இனச் சிறுபான்மையினராக இருக்கக்கூடிய மாணவர்கள் இதில் அதிகமாக சேர்ந்திருக்கிறார்கள்.

இங்குள்ள உறைவிட பள்ளிகளில் படிக்கிறவர்கள் உயர்கல்விக்காக சீனாவின் புகழ்பெற்ற பெய்ஜிங், பூடான் பல்கலைக் கழகங்களில் அதிகமான அளவிற்கு சேர்கிறார்கள். திபெத்தியர்கள், உய்குர் தவிர உய், கசாக், சலார் போன்ற பிற இனச் சிறுபான்மையினரும் உறைவிட பள்ளிகளில் அதிகமான அளவு சேர்கிறார்கள். இந்த உறைவிடப் பள்ளிகளில், துவக்கப்பள்ளி பாடங்கள், இடைநிலைப் பள்ளி பாடங்கள், தொழிற்கல்வி பாடங்களை கடந்து பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான பிரதான கல்வி முறைகளை கற்றுக் கொடுப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

சீனாவில் இனச் சிறுபான்மையினருக்கான உறைவிட பள்ளிகள், ஒழுக்கம் நிறைந்ததாகவும், தேவையான கட்டுப்பாடுகளுடனும், உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடிய முறைகளிலும் நடத்தப்படுகிறது. உறைவிடப் பள்ளிகள் சீன மாணவர்களுக்கு புதிதல்ல. வரலாற்று வழியில் பல்வேறு அனுபவங்கள் அவர்களுக்கு இருக்கிறது. இனச் சிறுபான்மையினருக்கு இது புதிய சூழலாகவும், புதிய முறையாகவும் இருந்தது. அவர்களின் புதிய சூழலை கணக்கில் கொண்டு வார விடுமுறைகளுக்கு குடும்பத்துடன் இருப்பதும், விடுமுறை நாட்களில் வீடுகளுக்கு செல்வதற்கும் போதிய வசதிகளை செய்து கொடுத்தார்கள். இதற்கு ஏற்ற வகையில் உறைவிட பள்ளிகளை மேம்படுத்துகிறார்கள். மற்றொரு குறிப்பிட்ட சொல்லக் கூடிய அம்சம் பெரும்பான்மை இனமான ஹான் இன மாணவர்களும் உறைவிட பள்ளிகளில் படிப்பதால் இன ஒற்றுமைக்கான அடித்தளம் அங்கே உருவாக்கப்படுகிறது.

அ.பாக்கியம்

 

வெள்ளி, ஏப்ரல் 03, 2026

66 இனக்கல்வி சீனாவின் முன்னுரிமை


உலகம் முழுவதும் பின்தங்கிய இனக்குழுக்களை வறுமையில் இருந்தும் சுரண்டலில் இருந்தும், மீட்பதற்கும், சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கும், பொதுவான திட்டங்கள் மட்டும் போதுமானதாக இல்லை. இன அடிப்படையில் பின்தங்கிய மக்களின் வறுமையை போக்குவதற்கும், சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு கையாள வேண்டிய பிரதான ஒரு நடவடிக்கையாக கல்வி முறை தேவைப்பட்டது. இந்த கல்வி முறையை பின்தங்கிய இனக்குழுக்கள் எளிய முறையில் அணுகுவதற்கு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். குறிப்பாக இந்த மக்களுக்கு உயர்தர கல்வியை வழங்குவது மிக மிக அவசியமானதாகும்.

இதற்கான அணுகல்களை அதிகரிக்க வெவ்வேறு இனங்கள் உள்ள நாடுகளும், மாறுபட்ட பொருளாதார நிலைமைகளை உடைய நாடுகளும், கல்வி நிலைமைகளிலேயே ஏற்றத்தாழ்வான சூழல் இருக்கக்கூடிய நாடுகளிலும் இட ஒதுக்கீடு கொள்கை அல்லது முன்னுரிமை கொள்கைள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம்தான் பின்தங்கிய இன மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான அல்லது சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாக்க முடியும்.

ஒரு சமூகத்தின் வறுமை விகிதத்தையும், எதிர்காலத் திறனையும் அளவிடுவதற்கான மிக முக்கியமான குறிகாட்டிகளில் ஒன்றாக உயர்கல்வி அடைவு என்பது இருக்கிறது. இவை நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்க உறுதிப்படுத்தும் நடவடிக்கை

சிறுபான்மைக மக்களுக்கான கல்வியை வழங்குவதற்கு முன்னுரிமை அல்லது இட ஒதுக்கீடு அடிப்படையில் இந்தியா உட்பட பல நாடுகளில் திட்டங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இன பாகுபாடுகள் மிகப் பெரும் அளவிற்கு இந்த நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் உருவானது. இவை மிகப் பெரும் அளவிற்கு இன பாகுபாடுகளையும், குரோதங்களையும் உருவாக்கிய பொழுது கல்வியில் முன்னுரிமை கொள்கைகள் வழங்குவதற்கான கட்டாய தேவை ஏற்பட்டது. 1950 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் பொதுப்பள்ளிகளில் நிலவிய மிக மோசமான இன பாகுபாடு என்பது அரசியல் அமைப்பிற்கு முரணானது என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதற்கும், சமத்துவ கல்வியை வழங்குவதற்கும் மிகப்பெரிய போராட்ட அலைகள் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த போராட்ட அலைகளின் ஊடாக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகள் எழுந்தது.

இக்காலங்களில் அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கும் கருப்பின அமெரிக்கர்களுக்கும் இடையில் கல்வி அறிவைப் பெறுவதில் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. கருப்பின அமெரிக்கர்களில் 33 சதவீதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளி படிப்பை முடித்தவர்களாக இருந்தனர். அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்த வெள்ளை இனத்தவர்களில் 61 சதவீதம் பேர் உயர்நிலை பள்ளிப்பட்டத்தை பெற்றவர்களாக இருந்தார்கள். இந்தக் கல்வி பாகுபாடு மூலமாக பொருளாதாரத்திலும் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் நீடித்தது.

1960 ஆம் ஆண்டு கருப்பின ஆண்கள் வெள்ளை இன ஆண்கள் பெறக்கூடிய ஊதியத்தில் 58 சதவீதத்தை மட்டுமே பெற்றார்கள். இந்தப் பின்னணியில்தான் மக்கள் இனப்பாகுபாடுகளை எதிர்த்தும் சமத்துவத்திற்குமான போராட்டத்தை தொடங்கினார்கள். இதன் விளைவாக 1960 ஆம் ஆண்டு அனைத்து இனங்கள் பாலினங்கள் இனக்குழுக்கள் மதங்கள் மற்றும் தேசிய பின்னணியைச் சேர்ந்த மக்களுக்கு சமமான வாய்ப்பை கல்வியில் உறுதிப்படுத்துவதற்காக அபர்மேட்டிவ் ஆக்சன் என்ற அதாவது உறுதிப்படுத்தும் நடவடிக்கை என்ற பெயரில் திட்டங்களை முன் வைத்தார்கள். இந்த ஆஃபர்மேட்டிவ் ஆக்சன் வழிகாட்டல் அடிப்படையில் கருப்பர்களுக்கான இட ஒதுக்கீட்டு முறைகளை அமலாக்கினார்கள்.

சீனாவின் கல்வி முன்னுரிமை கொள்கை

சீனாவும் பல இனங்களைக் கொண்ட நாடாகும் இங்கு பல்வேறு இன குழுக்கள் இடையே கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் இருந்தது. அமெரிக்காவில் இருந்த அல்லது கடைபிடிக்கப்பட்ட கொள்கைகளுக்கு மாறாக சீனாவில் சிறுபான்மையினருக்கான கல்வி முன்னுரிமை கொள்கை கடைபிடிக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட காலத்திலிருந்து கல்வி முன்னுரிமை கொள்கைகளை உருவாக்க ஆரம்பித்தார்கள்.அமெரிக்காவைப் போல போராட்டங்களின் காரணமாக உருவாக்கப்பட்டது அல்ல. மாறாக சீன கம்யூனிஸ்ட் கட்சி சோசலிச இலக்கை அடைவதற்கு இந்தத் திட்டத்தை இயற்றினார்கள் . 1950 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் இருந்த இனச் சிறுபான்மையினரில் 80 சதவீதத்திற்கு மேல் எழுத்தறிவற்றவர்களாக இருந்ததினால், இந்த பிராந்தியங்களுக்கு கல்வி வளர்ச்சியில் ஒரு முன்னுரிமை என்பது உடனடி தேவையாக இருந்தது. ஏற்றத்தாழ்வை போக்கிட கல்வி என்பது மிக அத்தியாவசியம் என கருதினார்கள்.

சீன மக்கள் குடியரசின் கல்வி முன்னுரிமை கொள்கை பல கட்டங்களில் வளர்ச்சி அடைந்தது மேலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. 1950 இல் முதல் கட்ட வடிவங்கள் உருவாக்கப்பட்டு 1953 மற்றும் 1962 ஆம் ஆண்டு காலகட்டங்களில் செழுமைப்படுத்தப்பட்டது. மீண்டும் கலாச்சார புரட்சி காலத்தில் முன்னுரிமை கல்வி கொள்கை பின்னுக்குத் தள்ளப்பட்டன.

1978 ஆம் ஆண்டு முதல் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்ட பொழுது கல்வி முன்னுரிமை கொள்கை முன்னெடுக்கப்பட்டு 1980, 2004 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களுடன் செழுமைபடுத்தப்பட்டு அமலாக்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டு “இனச் சிறுபான்மை சகோதர சகோதரிகள்” என்ற திட்டத்தில் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

1953 ஆம் ஆண்டு ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் இன சிறுபான்மை மாணவர்களுக்கு உயர்கல்வியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டார்கள். 1962 ஆம் ஆண்டு பெரும்பான்மை இனமாக இருந்த ஹான் இன மாணவர்களை விட சிறுபான்மை மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் கல்வி நிலைய சேர்க்கைகளில் சிறுபான்மை இன மாணவர்களுக்கு தேவைக்கு ஏற்ற வகையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

1978 மற்றும் 80 ஆம் ஆண்டுகளிலும் 2004 ஆம் ஆண்டுகளிலும் இனச் சிறுபான்மை மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொருவருக்கும் 20 புள்ளிகள் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு போட்டித் தேர்வுகளில் அனுமதிக்கப்பட்டார்கள். இதுபோன்ற நடவடிக்கை சீனாவில் இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வியை மேம்படுத்துவதில் முன்னுரிமை கொள்கை மிக முக்கியமான பங்காற்றியது. இதன் மூலம் மக்கள் பெரும் பயனடைந்தார்கள் என்று ஆய்வுகள் நிரூபிக்கிறது. இந்த முன்னுரிமை கொள்கை நோக்கம் என்பது உயர்கல்வியில் சிறுபான்மை மக்களை அதிகரிக்கவும், அதே நேரத்தில் வறுமையின் விகிதத்தை குறைக்கவும் இந்தக் கொள்கை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது.

 

அமெரிக்காவில் நீடிக்கும் பாகுபாடு.

அமெரிக்காவில் இட ஒதுக்கீடு கொள்கை அமல்படுத்துவதற்கு முன்பாக 22 முதல் 28 வயது உடைய கருப்பின ஆண்களில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் 3 சதவீதம் மட்டுமே. 1960 ஆம் ஆண்டுகளில் இட ஒதுக்கீடு கொள்கை அமலாக்கப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை 5 சதவீதம் என்ற அளவில் தான் உயர்ந்து இருந்தது. அதன் பிறகு கருப்பின மக்களுக்கான கல்வி ஓரளவு முன்னேற்றம் கண்டது. இந்த இட ஒதுக்கீடு கொள்கை அமுலாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கான இட ஒதுக்கீடு முறையை படிப்படியாக அந்த நாட்டின் அரசும், நீதிமன்றமும் தடை செய்ய ஆரம்பித்தன. 1996 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாணம் இந்த இட ஒதுக்கீடு கொள்கையை தடை செய்தது. 1998 இல் வாஷிங்டன் மாகாணமும், 1999 இல் ஃப்ளோரிடா, 2006 இல் மெக்சிகன் மாகாணம் என்று பல மாகாணங்கள் அடுத்தடுத்து தடைகளை உருவாக்கின. 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தடைகளுக்கு 2023 ஆம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் தடைவிதிக்கப்பட்டது. இக்காலங்களில் சீனாவில் கல்வி முன்னுரிமை கொள்கை என்பது எந்தவித தளர்வும் இன்றி அமுல்படுத்தப்பட்டது.

அமெரிக்காவில் இட ஒதுக்கீடு தடை செய்யப்பட்ட பிறகு கருப்பின மாணவர்களின் கல்லூரி வருகை 35 சதவீதம் குறைந்தது. இதேபோன்று வெவ்வேறு வகையான உயர்நிலைக் கல்விகளை பொருத்தவரையில் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களிலும் இனப் பன்முகத்தன்மை வாய்ந்த மாணவர்களின் வருகை குறைந்தது. குறிப்பாக உயர்கல்விக்கான அணுகல்கள் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளானது. அமெரிக்காவின் உயர்கல்வியில் கருப்பின மாணவர்களின் விகிதம் இக்காலகட்டங்களில் ஓரளவு அதிகமானாலும் அவர்கள் பின் தங்கிய நிலைமையிலே இருந்தார்கள். 2016 ஆம் ஆண்டு வெள்ளை இன வயது வந்தவர்களில் 47.1 சதவிகிதம் கல்லூரி பட்டங்களை பெற்றிருந்த நிலையில், கருப்பின மாணவர்களில் வயது வந்தவர்களில் 30.8 சதவீத மட்டுமே பட்டங்களைப் பெற்றிருந்தார்கள். அமெரிக்காவில் இட ஒதுக்கீடு கொள்கை சில மாற்றங்களை கொடுத்திருந்தாலும் முழுமையான முன்னேற்றம் இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருகின்றது.

 

தடையின்றி செயல்படும் முன்னுரிமை கொள்கை

அமெரிக்காவில் இட ஒதுக்கீடு கொள்கைகள் தடை செய்யப்பட்ட இக்காலகட்டத்தில் சீனாவில் கல்வி முன்னுரிமை கொள்கை முன்னிலும் துல்லியமாக கணக்கிடப்பட்டு தேவைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்பட்டு அமலாக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு தேசியக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வுகளை மீண்டும் தொடங்கிய பொழுது இன சிறுபான்மையினருக்கு மதிப்பெண்களை சேர்க்கும் முறைகள் மிக விரிவான முறையில் அமல்படுத்தப்பட்டது. திபெத்தில் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு பெரும்பான்மை இனமான ஹான் தேசியஇன மாணவர்களுக்கு மதிப்பெண்கள் 400 என்று தீர்மானிக்கப்பட்டது. சிறுபான்மை மாணவர்களுக்கு 170 என்று தீர்மானிக்கப்பட்டது. மாகாணங்களுக்கு இடையிலான வேறுபட்ட நிலைமைகளுக்கு ஏற்ப இந்தக் கொள்கை நெகிழ்வுத்தன்மையுடன் கடைபிடிக்கப்பட்டது.

பொதுவாக சிறுபான்மை மாணவர்களுக்கு ஐந்து முதல் 20 புள்ளிகள் அதிகமாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. சில மாகாணங்களில் 50 புள்ளிகள் வரை மதிப்பெண்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த நடவடிக்கைகள் பெரும்பான்மை இனமாக இருந்த ஹான் சீனர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அவர்களிடம் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், அரசும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் பிரச்சாரங்களை செய்து நிலைமையில் சரி படுத்தினார்கள். சில பிரதேசங்களில் மதிப்பெண் சேர்க்கும் முறைகளை ரத்து செய்வதற்கான முயற்சியில் சில பிராந்திய அரசுகள் முயற்சி செய்த பொழுது அவற்றை தலையிட்டு சரி செய்தார்கள்.

இந்த மதிப்பெண் சேர்க்கும் முறையால் இன சிறுபான்மை மாணவர்களின் கல்வி அறிவு உயர்ந்தது. 1982 மற்றும் 1990ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எட்டுக்கும் மேற்பட்ட இனச் சிறுபான்மை மாகாணங்களில் இருந்த பட்டதாரிகளுடைய எண்ணிக்கை 120.70 சதவீதமாக அதிகரித்தது. இதே காலத்தில் இனச் சிறுபான்மையினரின் வயது வந்தோரின் எழுத்தறிவின்மை 1982ல் 44.45 சதவீதத்திலிருந்து 1990 இல் 30.81% அளவிற்கு குறைந்தது. இதன் மூலமாக ஹான் தேசிய இனத்திற்கும் சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் பெருமளவு குறைந்தது. இந்த முறைகள் இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வியிலும் இதர வளர்ச்சியிலும் ஒரு நேரடி முன்னேற்றத்தை பெருமளவு ஏற்படுத்தியது.

சீனாவிலும் அமெரிக்காவிலும் அமல்படுத்தப்பட்ட இன சிறுபான்மை மக்களுக்கான கல்வி கொள்கைகளை பகுத்தாய்வு செய்து பல முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கும் வெள்ளை இன மக்களுக்கும் இடையிலான தற்போதைய கல்வி ஏற்றத்தாழ்வுகள் என்பது, சீனாவில் ஹான் இன பெரும்பான்மை மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இடையிலான கல்வி ஏற்றத்தாழ்வுகளை விட பல மடங்கு அதிகமாக உள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் கல்வி ஏற்றத்தாழ்வுகள் மட்டுமல்ல பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் இங்கே அதிகமாக இருப்பதாக தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளை இனத்தவர்களிலேயே வசதியானவர்களுக்கும் ஏழைகளுக்கு இடையிலான கல்வி ஏற்றத்தாழ்வுகள் அமெரிக்காவில் அதிகமாக இருக்கிறது. சீனாவில் இந்த ஏற்றத்தாழ்வுகள் மிக மிக குறைவாக இருப்பதையும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இன்னும் குறிப்பாக கணக்கில் எடுக்க வேண்டியவை, சில இனச் சிறுபான்மை பிரதேசங்களில் இனச் சிறுபான்மை மக்களுக்கும் ஹான் பெரும்பான்மை மக்களுக்குமான வருமான வேறுபாடுகள் சமமான நிலையில் இருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. சிறுபான்மை இன இளைஞர்கள் கல்வியின் மூலமாக பெற்ற திறமையினால் அதிக வளர்ச்சி அடைந்த பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து அங்கு வருமானத்தை ஈட்டுவது மூலமாக மற்ற இனத்திற்கு சமமான அளவில் பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளார்கள். வேலைவாய்ப்பிலும் இனச் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகள் அமெரிக்காவை போன்று குறிப்பிடக்கூடிய அளவிற்கு எதுவும் இல்லை. இனச் சிறுபான்மை மாணவர்கள் தங்கள் தாய் மொழியை கற்று உயர் கல்விக்கு வருகிற பொழுது மாண்டரின் மொழியும் கற்றுக் கொள்வதற்கான மிகப்பெரிய ஆதரவை அரசு வழங்கி இருந்ததனால் இனச்சிறுபான்மையினருக்கு தங்கு தடை இல்லாமல் வேலை வாய்ப்புகளை பெற முடிகிறது. வேலைவாய்ப்பு பெறுவதில் இன ரீதியிலான வேறுபாடுகள் இல்லாத நிலைமை உள்ளது. இவை இனச் சிறுபான்மையினரின் வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாகும்.

அமெரிக்காவில் கருப்பின மக்களுடன் ஒப்பிடும் பொழுது இந்த பாகுபாடு இன்றும் பெருமளவு நீடிக்கிறது. சீனாவில் இனச் சிறுபான்மையினர் பொருளாதார நிலைமையும், கல்வியும் பல ஆண்டுகளாக வியத்தகு முறையில் மேம்பட்டு உள்ள அதே சமயத்தில், அமெரிக்க கருப்பர்களின் கல்வி மற்றும் பொருளாதார இரண்டிலும் ஒப்பிட்டு அளவில் மிகவும் பின்தங்கி உள்ளனர். சீனாவில் இப்பொழுதும் கல்வி முன்னுரிமை கொள்கை வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு கொள்கை தடை செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவைப் போன்று இந்தியாவிலும் இட ஒதுக்கிடை ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சியில் வகுப்புவாத உயர்சாதி ஆதிக்க சக்திகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அ.பாக்கியம்

 

 

அமைப்பின் அடையாளம் தோழர் தயாநிதி.

 


    

அமைப்பின் அடையாளம் தோழர் தயாநிதி.

            ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக,  திருவண்ணாமலை மாவட்டத்தையும் உள்ளடக்கிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக, வேலூர் மாவட்டத் தலைவராக, வாலிபர் சங்கத்தின் மாநில நிர்வாகியாக, இளைஞர் முழக்கம் ஆசிரியர் குழு உறுப்பினராக, விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர், மாநில செயலாளர்களில் ஒருவராக, சி ஐ டி யு ஆட்டோ சங்கத்தின் வேலூர் மாவட்ட முதல் செயலாளராக, கட்டுமான சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் என 45 ஆண்டு கால அரசியல் வாழ்வில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்காகவும்  ஓய்வு ஒழிச்சலின்றி பணியாற்றி இயக்கம் வளர்த்தவர் தோழர் எஸ் தயாநிதி. இருதய அடைப்பிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் மீண்ட உடனே அவர், மீண்டும் ஓய்வு ஒழிச்சலின்றி பணியாற்ற நினைத்தார். அதற்காக மிகவும் சிரத்தை எடுத்தார். இது கால தேவனின் கண்களை உறுத்த, இயற்கை அந்த தோழனை உடனே அழைத்துக் கொண்டது. தோழர் தயாநிதி உடல் நலக்குறைவால் .... அன்று மரணமடைந்தார். அவருடைய படத்திறப்பு நிகழ்ச்சி 30.03.26. திங்கள் கிழமை மாலை வேலூரில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு தோழர் காத்தவராயன் (மாவட்ட செயற்குழு உறுப்பினர்) தலைமை தாங்கினார்.  மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர். வே.மீனாட்சி சுந்தரம், தயாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார். நினைவேந்தல் பாடல்களை சாரல் இசை குழுவினர் பாடினார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்  ரவீந்திரன், மூத்த தோழர் B. சுந்தரராஜன், வாலிபர் சங்க முன்னாள் மாநில தலைவர் அ. பாக்கியம், எஸ். வாலண்டினா (மாநிலக்குழு உளுப்பினர்) ஆறுமுக நைனார் (மாநிலக்குழு உளுப்பினர்) விவசாய சங்கத்தின் மாநிலச் செயலாளர்களில் ஒருவரான பி. துளசி நாராயணன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் தோழர் ரகுபதி, முன்னாள் மாவட்ட செயலாளர் காசிநாதன்,எம் பி ராமச்சந்திரன், செங்கை மாவட்டத்தின் சார்பில் சங்கர் (மாவட்ட செயற்குழு உறுப்பினர்) திருவண்ணாமலை  மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமணன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், திராவிடர் கழகத் தலைவர் மதிமுக வின் செயலாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் செயலாளர் உட்பட பலரும்  நினைவேந்தல் உரையை நிகழ்த்தினார்கள்.

தோழர் தயாநிதியின் தங்கை மகள் பிரித்தீயின் பேச்சில் இருந்து, குடும்ப உறுப்பினர்களால் தயாநிதி, எந்த அளவுக்கு நேசிக்கப்பட்டார் என்பது தெரியவந்தது.  பிரித்தீயின் பேச்சு அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

நிகழ்ச்சியில் பலரும் ஆற்றிய நினைவேந்தல் உரையில் இருந்து…

***

கலை இலக்கியத்துறையில் மிகுந்த திறனும் ஆர்வமும் உடையவர் தோழர் தயாநிதி. அதிலும் குறிப்பாக ஓவியக் கலைஞன் அவர். சிறந்த பாடகர்; நல்ல படைப்பாளி. இத்தனை திறமைகள் இருந்தும் ஊடக வெளிச்சத்திற்காக ஆசைப்பட்டவர் இல்லை. தன் திறமைகளை ஸ்தாபன நலன்களுக்காகவே பயன்படுத்தினார். கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஒரு காலத்தில் சுவரெழுத்துக்களே மிகப்பெரிய பிரசார ஆயுதமாக இருந்தது. அந்த ஆயுதத்தை அருமையாக பயன்படுத்தியவர் தோழர் தயாநிதி. வெள்ளை அடிக்கப்பட்ட சுவர்கள் எல்லாம் தயாநிதியை விரும்பி அழைக்கும். வா! உன் தூரிகையால் வெற்றுச் சுவரான எனக்கு விளம்பரம் கொடு. என்னை படங்களாலும், பிரசார வாக்கியங்களாலும் அழகுப்படுத்து. என் மூலமாக மக்கள் பிரச்னைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்து என்று தயாநிதியை விரும்பி அழைக்காத சுவர்களே இல்லை.

எதிலும் அமைப்பு நலனை பிரதிநிதித்துவப்படுத்தினாரே ஒழிய தன்னை பிரதானப்படுத்திக் கொள்ளாத பெருமகன் அவர். சொந்த வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் அவரிடம் சந்தர்ப்பவாதமோ பிழைப்பு வாதமோ இல்லை. வாழ்க்கையை அவர் நடத்தினார். பொறுப்புகளை ஏற்றுக் கொண்டாரே தவிர எந்த ஒரு பதவிக்கும் அது பொது சேவை பதவியாக இருந்தாலும் அதற்காக அலைந்தது கிடையாது, முன்மொழிந்து கொண்டதும் இல்லை. 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில் ஆடம்பர வாழ்க்கையை அண்டியது இல்லை. அமைப்பை கட்டுவதில் முன்னுரிமை கொடுத்ததினால் அனைத்து தோழர்களாலும் ஆகர்ஷிக்கப்பட்டார்.

****

திருவண்ணாமலை மாவட்டத்தையும் உள்ளடக்கிய தற்போது நான்கு மாவட்டமாக இருக்கக்கூடிய ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் முதல் முழு நேர ஊழியராக 1988 ஆம் ஆண்டு பணியினை துவக்கினார் தோழர் தயாநிதி. அவருடைய இணையர் சங்கரி அவர்களும் முழு நேர ஊழியராக பணியாற்றினார். ஒரு பணியில் இருந்து ஓய்வு பெற்று அடுத்த இயக்கப் பணிகளில் வந்து பணியாற்றுவதற்கும், எந்தப் பின்னணியும் இல்லாமல் முழு நேர ஊழியராக வந்து வாழ்க்கையை எதிர்கொள்வதற்கும் இடையில் மடுவுக்கும் மலைக்குமான வேறுபாடுகள் இருக்கும் என்பதையும்  உணர்ந்து கொண்ட அவர், அதை சிறப்பாக எதிர்கொண்டார். 1992 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பஸ் கட்டணம் உயர்வு எதிர்ப்பு போராட்டத்தில் 350 இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதில் தோழர் சங்கரி அவர்களும் 15 நாட்கள் 7 பெண்களுடன் சிறையில் இருந்தார்கள்.

****

வேலூர் மாவட்டத்தில் சிஎம்சி மருத்துவமனைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து நமது தோழர்கள் சிகிச்சைக்காக வருகிற பொழுது அவர்களுக்கு எல்லாம் எந்தவிதமான தயக்கமும் இன்றி, சலிப்புமின்றி அவர்கள் டிஸ்சார்ஜ்  ஆகி செல்லும் வரை உதவி செய்தார். இந்தக் கருத்தை ஆமோதித்துப் பேசிய தோழர் டி. ரவீந்திரன், ‘‘விவசாயிகள் சங்கத்தின் மாநாடு வேலூரில் நடைபெற்ற பொழுது, எனது இளைய மகள் நோய்வாய்ப்பட்டு 15 நாட்கள் சிஎம்சி மருத்துவமனையில் இருந்தாள். அந்த 15 நாட்களும் தோழர் தயாநிதியும், அவரது இணையர் சங்கரியும் உடனிருந்து  எனது மகளை கவனித்துக் கொண்டார்கள்.  தெரிந்த தோழர், தெரியாத தோழர் என்று ஆள் பார்த்து உதவி செய்ததில்லை அவர். அனைத்து தோழர்களுக்கும் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்த தயாநிதி அவர்’’ என்று உருக்கமாகப் பேசினார்.

***

வேலூர் சிறையில் நான் (பாக்கியம்) உட்பட 85 தோழர்கள் 9 நாட்கள் சிறையில் இருந்தபோது அன்றைய மாவட்டச் செயலாளர் நாராயணனும், தயாநிதியும் வெளியில் இருந்து எங்களை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். வேறு எந்த மாவட்டக் கட்சிக் குழுவுக்கும் இல்லாத ஒரு பணி வேலூர் மாவட்டக் கட்சிக்குழுவுக்கு இருந்தது. அது சிஎம்சி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் தோழர்களையும், மக்கள் பிரச்னைக்காக கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்படும் தோழர்களையும் கவனித்துக் கொள்வதாகும். தயாநிதி கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்த காலகட்டத்தில் இந்தப் பணியை தொடர்ந்து செய்து  வந்தார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்ததான கழகம் வலுவாக செயல்பட்ட மாவட்டங்களில் வேலூர் மாவட்டமும் ஒன்றாகும். இதற்கு தயாநிதி அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. முதன் முதலில் ரத்ததானம் வழங்குவதற்காக சிஎம்சி மருத்துவமனையை அணுகிய பொழுது அவர்கள் இடது சிந்தனை (left oriented) அமைப்புகளிடமிருந்து நாங்கள் ரத்தம் தானம் வாங்கிக் கொள்வதில்லை என்று மறுத்துவிட்டார்கள். தொடர்ந்து பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கும் நோயாளிகளுக்கும் ரத்தம் கொடுக்கும் பணியை தயாநிதி போன்றவர்கள் செய்து வந்ததை அறிந்து வேறு வழியின்றி வாலிபர் சங்கத்திடம் தொலைபேசியில் அழைத்து ரத்தம் கேட்க வேண்டிய நிலைமையை சிஎம்சி மருத்துவமனைக்கு தோழர் தயாநிதி உருவாக்கினார். அவரும் 92 முறைகள் ரத்த தானம் செய்துள்ளார். தன் வாழ்நாளை உழைப்பாளி வர்க்கத்துக்கு அர்ப்பணித்த அவர், ரத்த தானம் மட்டும் செய்யவில்லை. தான் இறந்த பிறகு உடலையும் மருத்துவ உலகிற்கு தானமாக தந்துவிட்டார்.

தோழமையின் சூழலை சுயநலன்கள் ஆக்கிரமித்து விடாமல் தோழமையின் உணர்வுகளை மேம்படுத்துவதில் தோழர் தயாநதி முன்னிலையில் இருந்தார். அவருக்கு எனது கண்ணீர் நிறைந்த அஞ்சலியை காணிக்கையாக்குகிறனே்.

தோழமையுடன்

அ. பாக்கியம்

வியாழன், ஏப்ரல் 02, 2026

சடங்குத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட படத்திறப்பு கூடுகை:





சடங்குகளாகவும் சம்பந்தப்படாதவர்களின் உரைகளாகவும் படத்திறப்பு நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கக் கூடிய காலகட்டத்தில், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சடங்குத்தனத்தை முறியடித்த  படத்துக்காக இது அமைந்தது.

 மறைந்த தோழரின் சமகாலத்தில் களத்தில் பணியாற்றிய தோழர்களாலும், அவர்களால் உருவாக்கப்பட்ட தோழர்களின் பங்கேற்பாலும் , மறைந்த தோழர்களின் உறவுகளாலும் அரங்கம் நிரம்பி வழிந்த நிகழ்வாக தோழர். S.M. லூர்து அவர்களின்  படத்திறப்பும், அவரோடு பணிபுரிந்தவர்களும், அதற்குப் பிறகு இயக்கத்தில் பயணித்து மறைந்து போன 35 தோழர்களின் பட திறப்பும், 28.03.26 அன்று மாலை 5:30 மணி அளவில் வியாசர்பாடி சர்மா நகரில் என் பி மகாலில் நடைபெற்றது. 

நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து நிறைவுறுகிற வரை இறுக்கமும், நெகிழ்ச்சியும், சில பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த தோழர்களின் உணர்வுகளும் அரங்கத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் திட்டமிட்ட முறையில் துவங்கி குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டது.

தோழர். லூர்து அவர்களின் குடும்பம் முழுமையாக நிகழ்வில் பங்கு பெற்றனர். 120 தோழர்களின் பெயர் பட்டியலை எடுத்து அழைப்பு கொடுத்திருந்தாலும் 180 இருக்கையில் போடக்கூடிய அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் 240 தோழர்கள் கலந்து கொண்டது மறைந்த தோழர்களின் மகத்தான பணிகளை வெளிப்படுத்தியது.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை தோழர்கள். அ. பாக்கியம்-மு. துரைப்பாண்டியன் இருவரும் முன்னெடுத்திருந்தாலும், தோழர்கள். எஸ் ஏ. வெற்றி ராஜன், திருவேட்டை, ஜபருல்லா, விஜயன், சந்தியாகு, மோகன், போன்றவர்கள் களத்தில் நின்று எங்களுடன் இணைந்து நிகழ்ச்சியை சிறப்புற அமைத்துக் கொடுத்தார்கள். நிகழ்ச்சிக்கான நிதி உதவியை தானே முன்வந்து பல தோழர்கள் உதவி செய்தது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய செயலாகும்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் எஸ்.ஏ வெற்றி ராஜன் முதலில் பேச, தோழர் எம்.துரை பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி 1980 ஆம் ஆண்டுகளில் துவங்கி பல தோழர்களின் பணிகளை குறிப்பிட்டு முடித்தார். தோழர் அ .பாக்கியம், லூர்து அவர்களின் பணியும் அப்பகுதியில் இயக்கம் எதிர்கொண்ட சவால்களையும் சுருக்கமாக எடுத்துரைத்தார். Repco வங்கியின் தலைவர் E .சந்தானம் அவர்கள் தனது இந்த உயர்வுக்கு லூர்து போன்றவர்களின் செயல்கள் காரணம் என்பதையும் நினைவு கூர்ந்தார். தோழர்கள் கலைச்செல்வன், திருவேட்டை, டி கே சண்முகம் போன்ற தோழர்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.

தோழர். எஸ் எம் லூர்து அவர்களுடன் இணைந்து பயணித்த தோழர், சிறுவயதிலிருந்தே நண்பர்களாகவும், வாழ்விடத்திலும் பணியிடத்திலும், இயக்கத்திலும் இணைந்தே பயணித்த தோழர்.A. ராமு அவர்கள் மறைந்த தோழர் லூர்து அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையை நிகழ்த்தினார்.

 அரங்கத்தில் இருந்த பலரின் கண்கள் கண்ணீரால் நனைந்தது. உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு நடக்க முடியாத சூழ்நிலையிலும் தோழர் ராமு அவர்களும் அவர்களது குடும்பமும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இக்காலத்தில் மறைந்த தோழர்கள் 35 பேர்களின் படத்தை தோழர் அ.சௌந்தரராஜன் திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். நான் நிகழ்வுக்கு வருவதற்கு முன்பாக வழக்கமான ஒன்று என நினைத்துக் கொண்டு வந்தேன். ஆனால் இங்கு வந்தவுடன் இந்த அரங்க சூழலும், மறைந்த தோழர்களின் படங்களும் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. ஒரு விதமான உணர்வுகளின் நடுக்கம் என்னை ஆட்கொள்கிறது என்று பேசினார். அவசரநிலை காலத்தில் இருந்து தோழர் லூர்து ராமு மற்றும் முக்கிய தோழர்களுடன் பணியாற்றியதை நினைவு கூர்ந்தார்.

தோழர் வே மீனாட்சி சுந்தரம் இக்காலங்களில் மாவட்டச் செயலாளராக இருந்து வழிகாட்டியவர். வடசென்னை பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு வியாசர்பாடி தோழர்களின் பங்கு என்பது மிக முக்கியமானது. தோழர் லூர்து போன்ற மிகத் துணிச்சலான, அர்ப்பணிப்பு மிக்க, அடுத்தவர்களை ஈர்த்து செயல்படக்கூடிய வல்லமை நிறைந்தவரின் பணியை நினைவு கூர்ந்தார். தோழர் லூர்து அவர்களின் மூத்த சகோதரர் மகள் செல்வி கவிதை வாசித்தார்.

நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் தோழர். எம் ராமகிருஷ்ணன், மாநில குழு உறுப்பினர் தோழர் L.சுந்தர்ராஜன், முன்னாள் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் கே மகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராணி பகுதி செயலாளர் எம் விஜயகுமார் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜ்குமார் நித்யராஜ், எம். பகவதி போன்ற தோழர்களும் கலந்து கொண்டார்கள். செங்குன்றத்திலிருந்து தோழர் லூர்து அவர்களின் பணியால் ஈர்க்கப்பட்ட எம் வீ நக்கீரன் அவர்களும், பெரியமேட் பகுதியில் இருந்து தோழர்கள் மனோகரன், சரளா, ராஜாமணி, உட்பட பல தோழர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் முதுகுளத்தூர் தாலுகாவின் செயலாளராக பணியாற்றி தற்போது மாவட்ட குழு உறுப்பினராகவும் முழு நேர ஊழியராகவும் செயல்படக்கூடிய தோழர். முருகன் அவர்களும் வருகை தந்து கலந்து கொண்டார்.

தோழர். பாக்கியம் அவர்கள் நிகழ்வு நிறைவடைவதற்கு முன்பாக ஒரு வேண்டுகோளை முன் வைத்தார் தோழர் லூர்து, அமலதாஸ், சூசை மைக்கேல், சந்தியாகு என பல தோழர்கள் ஓட்டுநர் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்ற பொழுது சாஸ்திரி நகர் பக்தவச்சலம் காலனி சத்தியவாணி முத்து நகர் பகுதிகளில் இருக்கும் கிளைகள் பயன்படுத்தக்கூடிய முறையில் ஒரு நூலகம் கட்ட வேண்டும் என்று நிதி வசூல் செய்து 1986 ஆம் ஆண்டு பணம் அனுப்பி வைத்தார்கள். அந்தப் பணத்தின் மூலம் சாஸ்தி நகர் 3வது தெருவில் தோழர் ராமு அவர்களின் தந்தையார் நடத்தி வந்த கடையை விலை கொடுத்து வாங்கி எனது பெயரில் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அடுத்தடுத்து வந்த பகுதி குழு தோழர்கள் அந்த இடத்தை விற்பனை செய்து சர்மா நகர் பிரதான சாலையில் பகுதி குழுவிற்கான இடம் வாங்கினார்கள். காலப்போக்கில் அதையும் விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த அதிக தொகை வைத்து தற்பொழுது புது நகர் எட்டாவது தெருவில் செயல்படக்கூடிய பெரம்பூர் பகுதி குழு அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்துக்கான அடித்தளம் பழைய தோழர்களால் போடப்பட்டது. எனவே அரங்கத்தில் தோழர் ராமு அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தோழர் லூர்து அவர்களின் பெரும் படத்தை பகுதி குழு அலுவலகத்திற்கு கொடுப்பது என்றும், அங்கு மறைந்த தோழர்களின் நினைவாக அவர்கள் எந்த நோக்கத்திற்காக நூலகம் அமைக்க வேண்டும் என்று விரும்பினார்களோ அதன் ஒரு பகுதியாக நூலகத்தை அமைக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

நிறைவாக மறைந்த தோழருக்கான மௌன அஞ்சலியுடன் நிகழ்ச்சி முடிவடையும் முன்பாக, சாஸ்திர நகர் கிளைச் செயலாளர் ஜபருல்லா அவர்கள்  கடந்த கால தோழர்களின் பணியினை முன்னெடுப்போம், தடம் பதித்து வரலாற்றின் வடம் பிடிப்போம் என்று சபதம் ஏற்றார்.

லூர்து அவர்களின் படத்தையும் 35 மறைந்த தோழர்களின் படத்தையும் உயிர்ப்புடன் உருவாக்கிக் கொடுத்து, அழைப்பிதழ், டிஜிட்டல் பேனர், சுவரொட்டிகள் போன்ற வற்றை கலை நுட்பத்துடன் வடிவமைத்து கொடுத்த ஓவியர் வசந்த் அவர்களுக்கு, வீடியோ பதிவு செய்த தோழர் சரவணன் அவர்களுக்கும், தீக்கதிர் ராம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு படத்திறப்பு அவரின் பணியினை மட்டும் நினைவு படுத்தாமல் அவரோடு இணைந்து இருந்த வரலாற்று நிகழ்வுகளையும் அவர்களுடன் பயணித்த தோழர்களின் பணிகளையும், பல்வேறு இடங்களில் பிரிந்து கிடந்த தோழர்களின் இணைப்பையும் ஏற்படுத்தியதாக பன்முகத்தன்மையுடன் அமைந்தது. இந்த நிகழ்வை சிறப்புடன் அமைத்துக் கொடுக்க உழைத்திட்டவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் நிதி உதவியை வழங்கியவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர். அ. பாக்கியம்

68 திருடப்பட்ட தலைமுறைகளும் தொடரப்பட்ட தலைமுறைகளும்

  அ.பாக்கியம் சீனாவில் இனச் சிறுபான்மை கல்வி வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வரும் உறைவிட பள்ளி குறித்து மேற்கத்திய நாடுகளும் அமெரிக்...