Pages

வியாழன், மார்ச் 05, 2026

தோழர்.தயா உங்கள் வாழ்வும் மரணமும் ஒரு படிப்பினை தான்

 


,----------------------

35 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்த இயக்கப் பயணம், கனிவான நட்பு, உறவுகளைக் கடந்த குடும்ப இணைப்புகள் என அத்தனையும் ஒரு நொடியில் அறுந்து போனது. எங்களை எல்லாம் அதிர்ச்சியில் உறைய வைத்து மறைந்து போனாயே

தோழர் அய்யலு அவர்களின் இளைய புதல்வன் விஜயசாரதியின் மரண அதிர்வலைகள் எங்கள் நெஞ்சங்களில் இருந்து நீங்கும் முன்பாக இடியாய் இறங்கி மீளா துயரில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டாயே...

மரண ராஜ்ஜியவாசிகளுடன் உரையாடுவது பகுத்தறிவுக்கு பொருத்தமற்றதுதான். ஆனால் உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அது ஒரு வடிவம் என்பதால் உன்னோடு உரையாட விரும்புகிறேன்...

ஜனவரி 17ஆம் தேதி நாம் சந்திப்பதினால் நான் எழுதி வெளிவர இருந்த சீன சோசலிசத்தில் மதங்களும் மத வழிபாடுகளும் என்ற புத்தகத்தை எடுத்துவரச் சொன்னீர்கள். நானும் எடுத்து வந்தேன். கலந்துரையாடிவிட்டு மாலை கடந்து சென்றாய் ....

18 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி, அதன் பிறகு அறுவை சிகிச்சை சென்னையில் செய்ய வேண்டும் என்ற செய்தியும் கவலை அளிப்பதாக இருந்தாலும், அறுவை சிகிச்சையின் மூலம் அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் நகர்ந்தேன்...

உங்களின் குடும்பமும் உறவினர்களின் விருப்பப்படி சென்னையில் உள்ள எம் ஜி எம் மலர் மருத்துவமனையில் 22 ஆம் தேதி பரிசோதனை முடித்து, 27 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 28ஆம் தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, பிப்ரவரி 3ஆம் தேதி வீட்டிற்குச் சென்று பிப்ரவரி 10ஆம் தேதி செக்கப் வருகை புரிந்து மிக விரைவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவர்களும் நமது தோழர்களும் மகிழ்ச்சியாக அறிந்து கொண்டு சென்றார்கள்.

எம்ஜிஎம் மலர் மருத்துவமனை தோழர்கள் தென் சென்னை மாவட்ட குழு உறுப்பினர், மயிலாப்பூர் பகுதி செயலாளர் மலர் மருத்துவமனை சங்கத்தின் தலைவர் ரவி அவர்களும், தற்போதைய செயலாளர் இன்பரசி மற்றும் விஜியா, இமானுவேல் போன்ற தோழர்களும், தோழமையும் பாசமும் நிறைந்த முறையிலே உங்களை கவனித்துக் கொண்டதை நீங்கள் உணர்வு பூர்வமாக தெரிவித்தீர்கள்.....

 அறுவை சிகிச்சை முடித்த பிறகும் நமது தோழர் விஜயா பணியாற்றக்கூடிய ஏழாவது தளத்திலேயே உங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டு 24 மணி நேரமும் தோழர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.

மலர் தோழர்கள் குறிப்பாக ரவி உட்பட பணத்திற்கு என்ன செய்வார்கள், இருவரும் முழுநேர ஊழியர்கள் என்று பலரும் உங்களிடம் கேட்காத ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார்கள்.

 அறுவை சிகிச்சை நடந்தால் தோழர் சங்கரி அவர்களும் சுகி அவர்களும் எங்கு தங்குவார்கள், அருகாமையிலே தங்க வேண்டும் என்ற தேவையுடன் அங்கு இருக்கக்கூடிய லாட்ஜை அணுகிய பொழுது பணம் அதிகமாக இருப்பதால் தோழர் ரவி அவருடைய இல்லத்தில் தோழர் சுகி அவர்களையும், மருத்துவமனையின் அருகாமையில் இருந்த தோழர் இமானுவேல் இல்லம் சிறியதாக இருந்தாலும் அங்கு தோழர் சங்கரியையும் தங்க வைத்து கவனித்துக் கொண்டார்கள்.

 காலையும் மாலையும் தோழர் ரவி அவர்கள் உடன் இருந்தார். இது போன்ற தோழர்களின் ஆதரவு பலருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்று என்னிடம் தெரிவித்தாயே தோழா....

தோழர் ராஜப்பா பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்பட்டு கடினமான சூழலில் அங்கு அனுமதிக்கப்பட்ட குணமடைந்தார்.தோழர் கிருஷ்ணமூர்த்தி உட்பட 20க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு அங்கே இந்த அறுவை சிகிச்சை நடத்தி அதற்கான உதவிகளையும் இந்த தோழர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

அவர்களின் பாசமும் தோழமையும் நிறைந்த அந்த உணர்வு எல்லையற்றது....

அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிகமான தோழர்களை அனுமதிக்க கூடாது என்பதில் நானும் உறுதியாக இருந்தது மட்டுமல்ல தோழர் ரவி அங்கிருந்து முடிந்தவரை அதை அமலாக்கினார். தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் எஸ் குமார் மற்றும் பத்திரிகையாளர் பெருமாள் போன்றவர்கள் அடிக்கடி வந்த பொழுதும் அவர்களை பார்க்க அனுமதிக்கவில்லை.

மாநில குழு உறுப்பினர் தோழர் வனஜா அவர்கள் பல தோழர்களுடன் வந்த பொழுதும் அவர்களை எல்லாம் நிறுத்திவிட்டு வனஜா அவர்களை மட்டும் அனுமதித்தார்.... நீங்கள் அறையில் இருந்த பொழுது உங்களை பாதுகாப்பதில் மருத்துவமனை தோழர்கள் கண்ணும், கருத்துமாக இருந்தார்கள்....

பிப்ரவரி 28ஆம் தேதி இரவு 12 மணிக்கு நான் மரண செய்தியை கேட்டவுடன் ரவி அவர்களுக்கு தெரிவித்தேன். அவரும் எழுந்து அதிகாலையில் என்னுடன் வந்து விட்டார். அதன் பிறகு மருத்துவமனை தோழர்கள் மரணத்தை அறிந்து கொண்டு பார்த்து பார்த்து சிகிச்சை அளித்தோமே, பாதுகாப்பாக பார்த்துக் கொண்டோமே இப்படி ஆகிவிட்டது என்று  உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

சிறந்த முறையில் அறுவை சிகிச்சை, தோழர்களின் கவனிப்பும் உங்களை அதிவேகமாக குணமடைய செய்தது. அதுவே உங்களுக்கு உங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக நம்பிக்கை அளித்து உங்கள் உயிரைப் பறித்து விட்டது. அதீத நடை பயிற்சியும் விரைவில் பணிகளில் இறங்க வேண்டும் என்று உங்கள் ஆர்வமும் எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டது? உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உங்கள் இணையர் தோழர். சங்கரி அவர்களுக்கும் அந்த நம்பிக்கை வந்தது மட்டும் அல்ல, மற்ற சிலருக்கும் அப்படிப்பட்ட நம்பிக்கை வந்திருப்பதை நான் அறிந்தேன். விரைவான குணமடைதல், அதன் மீது ஏற்பட்ட அதே நம்பிக்கையும் உங்களை எங்களிடமிருந்து பிரித்து விட்டது...

நீங்கள் எந்த அளவு களப்பணியாற்றும் தோழர்களின் உணர்வுகளில் கலந்து இருக்கிறீர்கள் என்பதை உங்களின் இறுதி நிகழ்ச்சி சாட்சியமாக அமைந்தது. பல தோழர்களின் அழு குரல்களை கேட்க முடிந்தது மாவட்ட அளவிலான தோழர்கள் தங்கள் துக்கத்தை அடக்க முடியாமல் வெளிப்படுத்திய வண்ணமே இருந்ததை பார்த்தேன்....

நீங்கள் தோழர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வதும், அவர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதும், அதை தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பதும், எண்ணற்ற தோழர்களை உங்களை நோக்கி ஈர்த்துள்ளது... கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதற்கான அடையாளமாக உங்ளது பணியை இருந்துள்ளது.இதை நீங்கள் அறியாமல் நாங்கள் அறிய முடிந்தது.

நான் மட்டுமல்ல இன்னும் பல தோழர்கள் நெருக்கடிகளை சந்தித்த பொழுது நியாயத்தின் பக்கம் நின்று எடுத்த நிலைப்பாடுகள் பலரைப் மனபலத்தை பாதுகாத்து உள்ளது...

மைசூரில் குடியிருக்கும் குடியாத்தம் ரமேஷ் குடும்ப மங்களுர் சென்று இருந்த தால்வர முடியவில்லை என்று என்னிடம் கதறி அழுது விட்டார்கள்....

 திருவண்ணாமலை மாவட்டம் தோழர் குமரேசனின் தங்கை மகள் பிருந்தா காலதாமதமாக செய்தி கிடைத்தாலும் பெங்களூரில் இருந்து ஓடி வந்து விட்டார்...

 1990 ஆம் ஆண்டுகள் மத்தியில் சென்னையில் கட்சியின் மத்திய கமிட்டி கூட்டத்தை ஒட்டி நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு இரவு லாரி விபத்தில் சிக்கி தனது மனைவியையும், மகளையும் கண்ணெதிரே பறிகொடுத்தது மட்டுமல்ல தனது இரண்டு கால்களையும் இழந்த தோழர் ஜெயக்குமார், அவர்களின் குடும்பத்தை சந்தித்தேன். தற்போது பக்கவாதத்தால் படுத்து கொண்டிருப்பவர். கட்டிலோடு என்னை தூக்கிச் செல்லுங்கள் என்று கதறி அழுவதை தெரிவித்த பொழுது நான் கலங்கி விட்டேன்.

சேலத்தில் இருந்து தோழர் தங்கவேல் அவர்களும், குழந்தைவேலு சண்முகராஜா செய்தி கேட்டு தொலைபேசியிலேயே கதறி அழுதுவிட்டார்கள்.

இது போன்று எத்தனை குடும்பங்களோடு நீங்கள் கலந்து இருக்கிறீர்கள் உங்களுக்கு தெரியாமலே போய்விட்டது.....

பல நேரங்களில் நாம் அஞ்சலி கூட்டங்களில் கலந்து கொள்கிற பொழுது நமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தது உங்களது அஞ்சலி நிகழ்வில் நினைவுக்கு வந்து தொலைந்தது..... ஆனால் அஞ்சலி செலுத்த வந்தவர்களின் உணர்ச்சி பிழம்புகள் உணர்வுகளை வாட்டி எடுத்தது......

நூறு முறைக்கு மேல் ரத்த தானம் செய்து குருதி கொடை வள்ளலாக வாழ்ந்தீர்கள், வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளர், இடைக்கமட்டி நிர்வாகி, மாவட்ட செயலாளர,மாநில துணை நிர்வாகி, இளைஞர் முழக்கம் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவராக, வாலிபர் சங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட உடன் வேலூர் மாவட்டத்தில் முதல் ஆட்டோ சங்கத்தின் மாவட்டச் செயலாளர், அதன் பிறகு கட்டுமான சங்கம் அமைக்கப்பட்டு அதன் மாவட்டச் செயலாளர்,விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளராக, மாநில நிர்வாகியாக, கட்சியின் மாவட்ட குழு, மாவட்ட செயற்குழு, மாவட்ட செயலாளர் என்று பல்வேறு களப்பணிகளான அனுபவங்களோடு உங்களது இயக்க பயணம் தொடர்ந்தது... இந்த அனுபவம் அரிதாக கிடைக்கப்படக்கூடியதாகும்..... .

பல தோழர்களும் நீங்கள் கட்சியின் மாநில குழுவில் இல்லையே என்று ஆதங்கப்பட்ட பொழுது அவையெல்லாம் இயக்கத்திற்கான அளவுகோல்கள் அல்ல களப்பணிகள் மட்டும்தான் உயர்ந்த அளவுகோல் என்று புறம் தள்ளிவிட்டு களம் கண்ட காட்சிகள் எல்லாம் கண்முன்னே வந்து செல்கிறது தோழா....

நான் உட்பட பல தோழர்கள் மாவட்டங்களுக்கு இயக்கப் பணிகளுக்காக வருகின்ற பொழுது உங்கள் வீட்டிலே தான் தங்க வைக்கப்பட்டோம். ஆரம்பத்தில் போதுமான வசதி இல்லாத காலத்தில் இது நடந்தது தோழர் சங்கரி அவர்களின் உபசரிப்பும் உங்களது சகோதரர் சுகி எண் பணிகளும் வந்த தோழர்களை பெரும் மகிழ்வாக அமைந்திருக்கும்....

கணவன் மனைவி இருவரும் முழுநேர ஊழியராக எந்தப் பின்னணியும் இல்லாமல் இத்தனை ஆண்டு காலம் பயணிப்பது எளிதான விஷயம் அல்ல..... பொருளாதார ரீதியாக எந்தப் பின்புலமும் இல்லாமல் ஒரு (இன் செக்யூரிட்டி) பாதுகாப்பற்ற உணர்வுகளிலேயே அனைத்தையும் எதிர்கொள்வது எவ்வளவு கடினமானது என்பதை அனுபவித்தவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதையும் விவாதித்து இருக்கிறோம்..

 பிழைப்பு வாதமோ சந்தர்ப்பவாதமோ யாரிடம் வந்தாலும் உங்களிடம் வந்து விடக்கூடாது என்பதற்கான போராட்டத்தை வலுவாக கடைசி வரை நடத்தினீர்கள்.....

மூன்று முறை மாவட்ட செயலாளர் ஆக இருந்து நான் மேலே சொன்ன அத்தனை அமைப்புகளையும் பொறுப்பு வகித்து அனுபவத்தின் தொகுப்பாக இருந்து செயல்பட்டீர்கள். உங்களுக்குப் பிறகு தோழர் சங்கரி அவர்களும் மாவட்டச் செயலாளரான பிறகு உரிய முறையில் உங்களது பணியை தொடர்ந்தீர்கள்

குணமடைந்த பிறகு உங்களுடைய பூர்வீக கிராமமான கோனே பால்ஸ் அருகில் உள்ள ஸ்ரீராமபுரம் செல்ல வேண்டும் என்ற உனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளாமலே சென்று விட்டீர்களே...

ஊத்துக்கோட்டை வட்டம் வள்ளியூரில் பத்தாவது படிக்கிற பொழுது முதல் மாணவனாக வந்ததினால் இன்றுவரை அந்தப் பள்ளியின் பெயர் பலகையில் உங்களது பெயரையும் தாங்கி நிற்கிறது என்பதை ஒரு முறை கூட பெருமையாக எங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் சென்று விட்டாயே.....

நானும் ரவீந்திரனும் அதற்கு முன்பு அகத்தியலிங்கமும் உங்கள் மாவட்டத்தில் இயக்கப் பணிகளுக்காக வந்திருக்கிறோம். மாவட்ட பொறுப்பு என்ற முறையில் மிகக் கூடுதலான முறையில் இயக்கம் கட்டக்கூடிய பணியில் உங்களோடு இணைந்து பயணித்திருக்கிறேன்....

1987 ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட ஆற்காடு மாவட்ட மாநாடு நடைபெற்ற பொழுது வழக்கறிஞர் தோழர் சம்பத்குமார் மாவட்ட தலைமை பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மறைந்த தோழர் ரங்கராஜன் தலைவராகவும் நீங்கள் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டீர்கள்.  இவரைச் செயலாளராக மாற்றி விட்டால் யாரு சுவரெழுத்துக்களை எழுதுவது என்று ஒரு தலைவர் கேட்ட பொழுது இரண்டையும் செய்வார் என்று நான் பதிலளித்தேன். நீங்கள் பக்கத்தில் நின்று கொண்டு சிரித்துக்கொண்டிருந்தீர்கள்.

அவர் கேட்டதற்கு காரணம் உண்டு. உங்களின் சுவரெழுத்துக்கள் மக்கள் மனதில் பதியப்பட்டவை. உங்களது தூரிகைகள் மூலம் இடதுசாரி சிந்தனைகள் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. சென்னையில் நடந்த அகில இந்திய மாநாடு மட்டுமல்ல, அடுத்தடுத்து நடைபெற்ற அரசியல் மாநாடுகளும், தேர்தலிலும் உங்களுடைய தூரிகை இல்லாமல் இருந்ததில்லை. ஓவியக் கலைஞனாகவும் வளம் வந்தீர்கள்.

உங்களின் வருகைக்குப் பிறகு நகர்ப்புறங்களில் குறிப்பாக வேலூரைச் சுற்றி பல கிளைகளை உருவாக்க முயற்சி எடுத்தீர்கள். அந்த முயற்சியின் ஒருவனாக நானும் பங்கு பெற்றேன். அப்பொழுது பிள்ளையார் கோவில் தெருவில் இடதுசாரி இயக்கத்தின் அலுவலகம் இருந்தது . 1

988 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட மாநாட்டில், ஆரணியின் சேவூரிலிருந்து வறுமையின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருந்த தோழர் வீரபத்திரன் இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு வட ஆற்காடு மாவட்டத்தின் தலைவராகவும், நீங்கள் செயலாளராகவும் பொறுப்பை ஏற்றுக் கொண்டீர்கள்.

 அதன் பிறகு நீங்கள் இருவரும் வாலிபர் சங்கத்தின் அந்த மாவட்டத்தின் பெரும் அடையாளமாக மாறிவிட்டீர்கள்.

மாவட்டம் பிரிக்கப்பட்ட பொழுது மறைந்த சக்திவேல் தலைவராகவும் நீங்கள் செயலாளராகவும் பணியாற்றினீர்கள்.

மாநில நிர்வாகிகள் யாராக இருந்தாலும் கிளை அளவில் உறுப்பினர் சேர்ப்பதும், கிளைகளை உருவாக்குவதும், சென்ற ஊர்களில் கிடைக்கும் இடங்களில் தங்கி விட்டு வாய்ப்பிருந்தவற்றை சாப்பிட்டுவிட்டு இயக்கம் கட்டிய காலம். களத்திற்கு செல்வது மட்டுமே மிகப்பெரும் இயக்கப் பணி கலாச்சாரமாக அன்றைய தினம் இருந்தது.

அதன் தொடர்ச்சியாக உங்களின் மூலமாக மாவட்டத்தின் முழுவதும் களத்தில் இறங்குவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அந்த இடங்களும் முன்னணி தோழர்களும் பெயர்களும் மறக்காமல் இருக்கிறது என்று சொன்னால் நடைமுறை கற்றுத் தந்த பாடமாகும். இதோ சில உதாரணங்கள்......

வேலூரில் சத்துவாச்சாரி உடற்பயிற்சி கூடத்தின் மூலமாக உருவான வாலிபர் சங்க கிளைகள், சைதாப்பேட்டை விருப்பாச்சிபுரம், காட்பாடி, பெருமுகை போன்ற பகுதிகளிலும், மேல்மோணவூர் பகுதிகளில் தோழர் பரசுராமன் மூலமாக அமைக்கப்பட்ட கிளைகள் நடைபெற்ற இயக்கங்கள்...

அரக்கோணம் ரயில்வே காலனியில் செம்மலர் சீனிவாசன், தாமோதரன், சிவக்குமார் போன்றவர்களும் ஏற்கனவே இயக்கம் இருந்த மங்கம்மாள் பேட்டையில் தோழர்கள் வேணு, நகரத்தில் சிட்டிபாபு, தற்போது சிட்கோவில் குடியிருக்க கூடிய அன்பழகனின் சகோதரரும் அன்பழகனும் செய்த பணிகள் அவர்களோடு நீங்கள் என்னை இணைத்த இயக்கங்கள்...

ஆற்காட்டில் வாலிபர் சங்கத்தின் அடையாளமாக பணியாற்றிய தோழர் சந்திரன், ஆடழரசு, வாலாஜாவின் கோவர்தனன், மணி அனைவரும் மாற்றுத்திறனாளியாக இருந்து தீக்கதிரை விநியோகித்து வந்த தோழர் கிட்டப்பாவின் கடைகளில் இருந்து இயக்கப் பணிகளை தொடங்கிய நிகழ்வுகள்....

காவேரிப்பாக்கத்தில் தோழர் வடிவேலு அவர்களின் மகள் உமா மற்றும் அவர் குடும்பத்தினரும் அருகாமையில் இருந்த பணப்பாக்கம் போன்ற கிராமங்களில் வாலிபர் சங்கம் நடத்திய போராட்டங்களின் மூலமாக நமக்கு கிடைத்த தொடர்புகள்..

குடியாத்தம் நகரத்தில் வலுவான கிளைகள் இருந்த பொழுதும் கிராமங்களில் கிளைகள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தோழர் சம்பத்குமார், உடற்பயிற்சி கூடம் நடத்திய தோழர் முருகானந்தம், நந்தகுமார், குணசேகரன், குழந்தைவேலு, ஆனந்தன், சாமிநாதன், காத்தவராயன்... இன்னும் ஒரு சில தோழர்கள் உதவியோடு கிராமக் கிளைகளை அமைப்பதற்கு அன்றைய சொகுசுப் பயணமான சைக்கிளில் டபுள்ஸ் சென்ற நினைவுகள் முட்டி மோதுகிறது...

 நாம் இருவரும் சென்றது மட்டுமல்ல முதுபெரும் தலைவர் தோழர் ஆர் பரமசிவம் அவர்கள் என்னை ஒரு சைக்கிளில் அமர வைத்தும், உங்களை வேறொரு தோழர் அமர வைத்தும் கிராமங்களுக்கு அழைத்துச் சென்றார்களே அந்த அனுபவங்கள் எல்லாம் உங்களால் எனக்கு கிடைத்த பெரும் அனுபவமாகும்... வேறு யாருக்கு கிடைக்கும் என்று கேள்வியும் எழத்தான் செய்கிறது....

திருச்சி அரசியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதிதாக வந்த வேலூர் நகரத்தில் இருந்த இளைஞர்கள் சென்றார்கள். காவிரி ஆற்றில் குளிக்கும் பொழுது வேலூர் நகரத்திலிருந்து ஒரு வாலிபர் சங்கத் தோழரும், தோழர் அருள் சீனிவாசன் அவர்களின்  தம்பியும் மரணமடைந்தார்கள். இந்த இரண்டு மரணமும் சங்கத்திற்கு பெரும் சவாலாக மாறியது. தோழர் அருள் சீனிவாசன் அத்தகைய துன்பங்களையும் கடந்து இயக்கத்தில் இன்றும் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் மூலமாக ஆம்பூரிலும், தோழர் சிவாஜி மூலமாக வாணியம்பாடியிலும், ஆலங்காயத்திலும் அமைப்புகள் உருவாகியது. ஆலங்காயத்திற்கு நாம் வேலூரில் இருந்து சென்று வந்த பெரும் பயண நினைவுகள்.....நீங்கதவை

தோழர் வீரபத்திரனுடன் இணைந்து ஆரணியில் வாலிபர் சங்கம் கட்டக்கூடிய பணிகளுக்காக இரண்டு நாட்கள் தங்கி செயலாற்றினோம். தோழர் தாஸ் வீட்டின் திண்ணையில் பல தோழர்கள் படுத்து உறங்கினோம். தாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உணவளித்தார்கள். திண்ணையில் உறங்குவதும், பம்பு செட்டில் குளிப்பதும், கூட்டங்களுக்கு செல்வதும் அன்றைய ஒரு சொகுசான வாழ்க்கையாகத்தான் தோன்றியது. காரணம் களத்தில் இளைஞர்களையும் மக்களையும் சந்திக்கிற பொழுது கிடைக்கிற அந்த உற்சாகம் வேறு எதிலும் கிடைப்பதில்லை...

போளூர் நமக்கு இயக்கம் இல்லை. ஆனால் கலசப்பாக்கத்தில் வெங்கடேசன் உட்பட சிலரின் முயற்சியால் வீரபத்திரனும் நீங்களும் நானும் மாவட்ட நிர்வாகிகளும் கலசப்பாக்கத்தில் தங்கி ஆற்றில் குளித்துவிட்டு இரு பக்கத்திலும் இருந்த கிளைகளுக்கும் இயக்கங்களுக்கும் சென்ற நினைவுகள்....

திருவண்ணாமலை நகரத்தில் அரங்கத் தோழர்கள் சிலர் முன் முயற்சி எடுத்தாலும் தோழர் பாலாஜி , கருப்பு கருணா இன்னும் பல தோழர்கள் அமைப்பில் உருவாக்கினார்கள். வீரபத்திரனின் விடாமுயற்சி அமைப்புகளை உருவாக்குவதில் அரும்பணியாக அமைந்தது.

செங்கம் தாலுகாவில் சமீபத்தில் மறைந்த புரட்சி நடராஜன் போன்றவர்கள் இடது சாரிய இயக்கத்தை உருவாக்கி வளர்த்திருந்தாலும், வாலிபர் சங்கம் என்பது மூங்கில்துறை பட்டு போகிற வழியில் இருக்கக்கூடிய ராதாபுரத்தில் தான் சிவலிங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு செங்கம் நகரத்துக்குள் தோழர் குமரேசன், சிவக்குமார், ஷங்கர் இன்னும் சில தோழர்கள் துடிப்போடு வந்து செயலாற்றினார்கள். அங்கு நடைபெற்ற ஒவ்வொரு இயக்கத்திலும் நானும் கலந்து கொண்டு இருக்கிறேன்.

திருவண்ணாமலை முதல் மாவட்ட மாநாடு திருவண்ணாமலையிலும், இரண்டாவது மாவட்ட மாநாடு செங்கத்திலும் நடந்த பொழுது அதன் பணிகளில் முழுமையாக நானும் வீரபத்திரனும் ஈடுபட்டோம். முதல் மாநாட்டை உருவாக்கிக் கொடுப்பதில் உங்களுடைய பங்கு மகத்தானது. சேத்துப்பட்டு வந்தவாசி போன்ற இடங்களுக்கு நான் கூடுதலாக வரவில்லை. காலப்போக்கில் அங்கேயும் ஏற்கும் மலர்ந்தது.

இவ்வளவு பெரும் களப்பணியில் ஈடுபடுத்துவதற்கு எனக்கான வாய்ப்பு கிடைத்ததற்கு உங்கள அயராத களப்பணிகாரணமாகும். வேலூர் சம்பந்தமான உள்ளூர் வரலாறுகளை எண்ணற்ற கூட்டங்களில் பேசுவதற்கான ஒரு முயற்சி நான் எடுப்பதற்கு இந்த களப்பணிகள் உதவிகரமாக இருந்தது...

இன்னும் முடிவில்லாமல் எழுதிக்கொண்டே போகலாம் ஆனால் நீங்கள் முடித்துக் கொண்டு விட்டீர்கள் . உங்களின் பணிகளை இன்னும் விரிவாக எழுதி இயக்கத்திற்கு பயனுள்ள வகையில் கொண்டு வருவதற்கான முயற்சியில் உங்களால் உருவாக்கப்பட்ட தோழர்கள் மேற்கொள்வார்கள்...

 நானும்தான்.

இன்னும் எண்ணற்ற சம்பவங்கள் வந்து மோதினாலும் காலங்கள் இருக்கிறது. முடிந்த வரை பதிவு செய்வேன்...

அ.பாக்கியம்

62 ஆக்கிரமிப்பு எதிர்ப்பில், இனக் கல்வியின் இருத்தல்-

 

அ.பாக்கியம்

சீனாவின் இனச் சிறுபான்மை கல்வியில் திபெத் பகுதி தனித்தன்மை வாய்ந்தது போன்றோ, ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்த இஸ்லாமிய மதத்தை கடைபிடித்த உய்கூர், கசாக், கிர்கிஸ், டாடர், உஸ்பெக், தாஜிக், டோங்சியாங், சலார் மற்றும் போனன் ஆகிய இனச் சிறுபான்மை பகுதியைப் போன்றோ, இதர இனக்குழுக்கள் இல்லை.

குறிப்பிட்ட அளவு மாறுபட்ட தன்மையுடன் இதர இனக்குழுக்கள் இருந்தன. ஒரு சில இனக்குழுக்கள் தவிர மற்றவை முன்னோர் வழிபாட்டிலும், இதரவை சடங்கு ரீதியிலான உள்ளூர் மதங்களை பின்பற்றினார்கள். இவர்களுக்கும் கல்வி முறை மத ரீதியிலாக இருந்தாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு ரீதியாக இல்லை. இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இரண்டு இன குழுக்கள் ஹுய் இனக்குழுவும், கொரிய(சாவோக்சியன்) இனக்குழுவும் ஆகும்.

வேத மண்டபக் கல்வி

ஹுய் இனச் சிறுபான்மையினர் சீனாவின் மூன்றாவது பெரிய இனச் சிற்பான்மையினராவர். சுமார் ஒரு கோடியே 13 லட்சம் மக்கள் தொகை உள்ளனர். இவர்கள் சீனா முழுவதும் பரவி இருந்தாலும் சீனாவின் வடமேற்கு மாகாணங்களிலும், மத்திய மாகாணங்களிலும் குவியலாக வாழ்கின்றார்கள். சீன நாட்டைத் தவிர இந்த இனத்தவர்கள் கஜகஸ்தான், துர்க்கிஸ்தான், மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் வாழ்கிறார்கள்.

இவர்கள் மத வழியில் இஸ்லாமியர்கள் என்றாலும் சீன மொழி பேசக் கூடியவர்கள். சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கூர் இன மக்கள் பேசக்கூடிய துருக்கிய இஸ்லாமியர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டிக் கொள்வதற்காக ஹான்ஹுய் என்று அழைத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கான நிங்சியா ஹுய் தன்னாட்சிப் பகுதி அமைக்கப் பட்டுள்ளது.

இவர்கள் இஸ்லாமிய வழிபாட்டுமுறைகளை கடைபிடித்தாலும் சீன மொழி பேசக்கூடியவர்கள் என்பதால் இவர்களுக்கான கல்வி கற்பித்தலில் இரண்டுக்குமான முரண்பாடு வெளிப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பல நூற்றாண்டுகளாக மத அடிப்படையிலான கல்வி முறைகளைதான் இவர்கள் கற்றுக் கொண்டார்கள். மிங் வம்ச காலத்திலும், கிங் வம்ச காலத்திலும் வேத மண்டபக் கல்வி என்று கல்வி முறைகள் பரவலாக்கப்பட்டன. வேத மண்டபக் கல்வி என்பது மசூதிகளுடன் இணைக்கப்பட்ட அரங்குகள் அல்லது பள்ளிகள் ஆகும்.

அரபு மற்றும் பாரசீக நூல்களை சீன மொழிக்கு மொழிமாற்றம் செய்து அதன் மூலமாக இஸ்லாமிய கருத்துக்களை கொண்டு சென்றனர். இந்த வேத மண்டபம் கல்வியில் அரபு இலக்கணம், குர்ஆன் பற்றிய விளக்கம், அவுத்தீஸ், தத்துவம், நீதித்துறை ஆகியவற்றைப் பற்றிய பாடத்திட்டமாகதான் இருந்தது. இஸ்லாமிய அறிவை பலப்படுத்துவதற்காக கன்பூசியஸ் சிந்தனைகளில் கல்வி பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் வேத மண்டபக் கல்வியை பிரபலப்படுத்தினார்கள்.

ஆனால் பெரும்பாலும் கல்வி நிலையங்கள் மசூதிகளை சார்ந்து இருந்ததால் மதகுருக்களால் மட்டுமே இந்த கல்வி போதிக்கப்பட்டது. மதம்சார்ந்த அடையாளத்தையே முன்னிலைப்படுத்தினார்கள். சீன மொழிகள் மூலமாக கற்பித்தல் என்று வருகிற பொழுது காலப்போக்கில் அரபு மொழிகள், ஹுய் மொழிகள் மறக்கப்பட்டதை மீண்டும் புதுப்பிக்கும் நோக்கத்தோடு மத குருக்கள் கல்வி போதனைகளை அரபு மற்றும் ஹுய் மொழிக்கு மாற்றினார்கள். இதற்கான பள்ளிகளையும் அமைக்க தொடங்கினார்கள். இஸ்லாமிய கோட்பாட்டை போதிப்பதன் மூலம் முஸ்லிம் ஆசிரியர்களையும் மதகுருமார்களையும் பயிற்றுவிப்பதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

1911 ஆம் ஆண்டு சன் யாட் சன் தலைமையில் நடைபெற்ற குடியரசு புரட்சி வெற்றி பெற்ற பிறகு கல்வியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. கிங் வம்ச ஆட்சியின் கடைசி காலத்தில் இருந்தே இவைகள் துவக்கப்பட்டன. மதக்கல்வியுடன் இணைத்து மதத்திற்கு அப்பாற்பட்ட சில பொது தலைப்புகளையும் கற்பிக்க வேண்டும் என்று முயற்சித்தார்கள். உதாரணமாக கணிதம், வரலாறு, சீன மொழி போன்றவற்றையும் சேர்த்தனர். இந்த முயற்சியின் தொடர்ச்சியாக அரசு ஆதரவு பெற்ற தனியார் பள்ளிகளை நவீன கல்வி அளிப்பதற்கான முறையில் உருவாக்கினார்கள்.ஆனால் இஸ்லாமிய மதகுருக்களிடம் இருந்து வெளிப்பட்ட பெரும் எதிர்ப்பு இவற்றை செயல்பட வைக்க முடியவில்லை.

 

1933 ஆம் ஆண்டில் குடியரசு ஆட்சியின் அரசு ஆசிரியர்களுக்கான பயிற்சி பள்ளியை அரசாங்க விதிமுறைகளின் படி அதாவது மத போதனைகளுக்கு அப்பாற்பட்ட பாடத்திட்டங்களுடன் அரசு நடத்தும் என்ற முடிவை அறிவித்தது. இதேபோன்று இதர தனியார் பள்ளிகளும் இவற்றை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் மசூதிகளில் நடைபெற்று வந்த வேத மண்டபக் கல்வி முறையில் நடைபெற்று வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் இந்த விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவித்தார்கள்.

காரணம் கோமிங்டாங் கட்சி தலைவர் சியாங் கை-ஷேக் தனது ஆட்சியின் செல்வாக்கை மேற்கு சீனாவில் இருந்த ஜின்ஜியாங் மாகாணத்தின் முஸ்லிம்களின் செல்வாக்கை பெறுவதற்காக இந்த சந்தர்ப்பவாத நிலையை எடுத்தார். இதனால் மதத்தின் பிடியிலிருந்து மாற்ற வேண்டிய கல்வி முறைகள் மீண்டும் மத செல்வாக்கின் உள்ளே மாட்டிக் கொண்டது. கோமிங்டாங் கட்சி ஆளும் வர்க்கத்தை பாதுகாக்க கூடிய முறையிலேயே தங்களது கல்வி திட்டங்களை செயல்படுத்தினார்கள். எனவே ஹுய் இன மக்கள் மத்தியில் மதக் கல்வியின் பிடிகளை தளர்த்த முடியவில்லை.

ஆக்கிரமிப்பு எதிர்ப்பில் இனக் கல்வியின் இருத்தல்

சீனாவில் தற்போது இருக்கின்ற 55 இன சிறுபான்மையினர்களில் கொரிய இன சிறுபான்மையும் ஒன்றாகும். இவர்களை சீனாவில் சாவோக்ஸியன் என்று அழைக்கிறார்கள். 2020 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் படி 17.2 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். சீனாவின் வடகிழக்கு பகுதியில் வடகொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் இவர்கள் வாழக்கூடிய பகுதி இருக்கிறது. சீன மக்கள் குடியரசு கொரிய சிறுபான்மை மக்களை சிறுபான்மை இனமாக அங்கீகரித்து மாவட்ட அளவிலான தன்னாட்சி உரிமைகளை வழங்கி இருக்கிறது.

1880 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை கொரிய இன மக்கள் வாழ்ந்த பகுதிகளில் கல்விக்கான கட்டமைப்புகள் பெரிதாக இல்லை. 20-ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் கூட பாரம்பரியமான சில அறிஞர்களும் குறிப்பிட்ட சில பள்ளிக்கூடங்களும் தான் இருந்தன. காலப்போக்கில் கொரிய மொழியிலான சில ஆரம்ப நிலை அல்லது துவக்க பள்ளிகளை உருவாக்கினார்கள். கிறிஸ்துவ மதம் குறிப்பாக பிராட்டஸ்டண்ட் மற்றும் கத்தோலிக்க மதம் ஆரம்ப காலகட்டத்தில் கொரிய இன மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. இம்மக்கள் நாத்திகம், கிருத்துவம், மகாயான பௌத்தம் ஆகிய மதங்களை பின்பற்றக் கூடியவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்துவ மதம் கொரிய இனத்திற்கான தனி தேவாலயங்களை நடத்தி வந்தனர்.

ஜப்பான் சீனாவை ஆக்கிரமித்த பொழுது மிக நீண்ட காலத்திற்கு ஜப்பானின் ஆக்கிரமிப்பில் சீனாவில் இருந்த இந்த கொரிய இனம் அடிமைப்பட்டுக் கிடந்தது. இவர்கள் ஜப்பானின் ஆக்கிரமிப்பை எதிர்த்து பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். 1927 ஆம் ஆண்டுகளில் 191 துவக்கப் பள்ளிகளை கொரிய மொழிகளில் நடத்தி வந்தார்கள். இந்தப் பள்ளிகள் அனைத்தும் தங்களின் நாட்டுப்பகுதியை ஜப்பான் பேரரசுடன் இணைப்பதற்கு நடைபெற்ற முயற்சிகளுக்கு எதிராக பள்ளிக்கூடங்களின் வாயிலாகவே பெரும் எதிர்ப்புகளை உருவாக்கினார்கள்.இவர்களின் கல்வி முறை ஆக்கிரமிப்பை எதிர்த்த கல்வி முறையாக இருந்தது.

அதே நேரத்தில் இந்தப் பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த ஜப்பான் பள்ளிக்கூடங்களை ஜப்பானிய முறையிலேயே உருவாக்கினார்கள். இந்தப் பள்ளிக்கூடங்களில் ஜப்பானின் மேன்மையை உயர்த்தியும், கொரிய இனத்தை இழிவு படுத்தியும் போதனைகளை செய்தார்கள். ஜப்பானியர்கள் கொரியர்கள் நடத்திய பள்ளிக்கூடங்களை கைப்பற்றி ஜப்பானிய பள்ளிக்கூடங்களாக மாற்றினார்கள். இதற்காக சிறப்பு மானியங்களையும் கொடுத்தார்கள். அனைத்து பள்ளிகளிலும் ஜப்பானிய மொழி மட்டுமே போதிக்கக் கூடிய பாட புத்தகங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது மட்டுமல்ல, கொரிய மொழி பாட புத்தகங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன.

ஜப்பானிய முறையில் ராணுவ பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜப்பானியர் ராணுவ தளபதிகள் இந்த பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். அதைவிட கொடூரமானது கொரிய மாணவர்களின் பெயர்களை ஜப்பானிய பெயர்களாக மாற்றி பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். அவ்வாறு பெயர்களை மாற்றிக் கொள்ளாதவர்கள் கல்விச்சாலைகளில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

இதே காலத்தில் சீனாவில் புரட்சியை நடத்தி வந்த மாசேதுங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி கொரிய இன மக்களின் சுயாட்சி போராட்டத்திற்கான முழுமையான ஆதரவை கொடுத்தது. ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளிகளுக்கு பதிலாக கொரிய மொழிகளிலேயே தற்காலிகமாக பள்ளிக்கூடங்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவியது.

கொரிய மொழியை பயிற்று மொழியாகவே அவற்றில் பயன்படுத்தினார்கள். கற்பித்தல் தொடர்பான பாடபுத்தகங்கள் உட்பட முக்கிய பொருட்கள் அனைத்தையும் தருவித்து கொடுத்தார்கள். இந்த நடவடிக்கையின் மூலம் ஜப்பானின் அழித்தொழிப்புகளுக்கு மத்தியில் கொரிய மொழியையும், அதன் கலாச்சாரத்தையும் உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளக்கூடிய செயல்களை புரட்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி செய்தது. இக்காலத்தில் ஜப்பானிய பள்ளிக்கூடத்தில் படித்த கொரிய மாணவர்கள் ஜப்பானின் அடக்குமுறைக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஜப்பான் இருவிதமான முயற்சிகளை மேற்கொண்டது. ஒரு தேசிய இனத்தை இழிவு படுத்தி அழிக்க நினைத்தது. மறுபுறத்தில் ஜப்பானிய பேரரசின் பெருமையை திணிக்க முயன்றது. இந்த இரண்டு முயற்சிகளிலும் ஜப்பான் தோல்வி அடைந்தது. கொரிய இனக்குழுவின் கல்வி முறைகள் கொரிய தேசிய இனத்தை முன்பைவிட பல மடங்கு பலம் படுத்தியது.

சீன ஜப்பான் போரின் முடிவில் ஜப்பான் தோல்வி அடைந்தது. இக்காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் விடுதலை படை கொரிய இனக்குழு பகுதிகளை ஜப்பானிடம் இருந்து மீட்டது. உடனடியாக ஜப்பானிய பள்ளிகளை மாற்றி கொரிய மொழியை கற்பிக்கக் கூடிய பள்ளிகளையும், கொரிய கலாச்சாரங்களை கடைபிடிப்பதற்குமான கொள்கைகளை வகுத்துக் கொடுத்தது. எழுத்தறிவு, கணிதம், பொது அறிவை மேம்படுத்துவதற்கான முறைகளில் கொரிய இன மக்கள் வாழ்ந்த மாவட்டங்களில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தினார்கள். 1949 இல் சீன மக்கள் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்ட நேரத்தில் கொரிய இனக்குழு மக்கள் அதிகமாக வாழ்ந்த மாவட்டத்தில் 31 இடைநிலைப் பள்ளிகளும், 647 தொடக்கப் பள்ளிகளையும் செம்படை உருவாக்கி இருந்தது. இதனால் சீனாவில் இருந்த சிறுபான்மை மக்களிடையே கொரிய இன மக்களின் கல்வி வசதி மேம்பட்டதாக அறியப்படுகிறது.

குடியரசின் முயற்சிகளும் சவால்களும்

1911 ஆம் ஆண்டு டாக்டர் சன் யாட் சன் தலைமையில் ஆட்சிக்கு வந்த கோமிங்டாங் கட்சி கல்வித் துறையில் சில மாற்றங்களை உருவாக்க முயற்சித்தது. சன் யாட் சன் சீனாவை ஐந்து தேசிய இனங்களின் குடியரசு என்று அறிவித்தார். அதாவது ஹான், மஞ்சு, மங்கோலியா, திபெத்தியன், ஹுய்(அனைத்து முஸ்லிம்களையும் உள்ளடக்கிய) ஆகியவையே அந்த ஐந்து பெரிய தேசிய இனங்களாகும். இந்த கோட்பாட்டின் அடிப்படையிலேயே மங்கோலிய திபெத்திய கல்வி பிரிவை கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைத்தார். இந்தக் கொள்கையின் படி தேசிய இனங்களுக்கிடையே சமத்துவம் என்ற கொள்கைக்கு கீழ்ப்படிந்து மங்கோலியர் மற்றும் திபெத்திய மக்களின் மொழி மற்றும் ஒற்றுமை நோக்கத்திற்காக கல்வியை பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்தார்கள்.

இந்த முறை தேசிய இனங்களின் அடையாளங்களை, அதன் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாத்து வளர்ப்பதற்கு மாற்றாக சீனாவின் அடையாளங்களை முன்னிறுத்துவதை பிரதானமாக வைத்திருந்தது. இந்த ஆலோசனைகளை தேசிய இனங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேற்கண்ட திட்டத்தின்படி 1947 ஆம் ஆண்டு இறுதியில் கூட தேசிய அரசாங்கத்தின் தொடக்கப் பள்ளிகள் 16 மட்டுமே இருந்தன என்றால் இந்தத் திட்டத்தின் தோல்வியை புரிந்து கொள்ள முடியும். இந்தத் திட்டத்தினால் உருவாக்கப்பட்ட பள்ளிகளில் நில உரிமையாளர்கள், வணிகர்கள், ராணுவ தளபதிகள், அரசியல் தலைவர்களின் பிள்ளைகள், முதலாளிகளின் பிள்ளைகள் என 90% பேர் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் .

இதேபோன்று குடியரசு ஆட்சி காலத்தில் பெண்கள் கல்விக்கான முயற்சியில் சில கிறிஸ்துவர் மிஷனரிகள் ஈடுபட்டார்கள். ஆனாலும் பெண்களின் வருகை ஒரு சில இனக் குழுக்களில் மட்டும் அதுவும் பெயரளவிற்கு மட்டுமே இருந்தது. 1929 ஆம் ஆண்டு. கோமிங்டாங் கட்சியின் ஷாங்-கை-ஷேக் பெண்களுக்கான கல்விக் கொள்கையை அறிவித்து, அனைத்து தேசிய இனங்களிலும் பெண் கல்விக்கு சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்ற கருத்துக்கள் உருவாவதற்கு முன்பாகவே பிற்போக்கு தனத்தின் உள்ளடக்கத்தையும் அறிவித்தார்.

அதாவது பெண்களுக்கான பாடத்திட்டத்தில் தாய்மையும், குடும்பத்திற்கு சேவை செய்ய வேண்டிய குணங்களையும், சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டியதையும் போதிக்க வேண்டும் என்றும், நல்ல மனைவிகளாகவும், நல்ல தாய்மார்களாகவும் இருப்பதற்கு கற்றுக் கொடுக்கும் அடிப்படையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டது.

 

1898 ஆம் ஆண்டு நடைபெற்ற நூறுநாள் சீர்திருத்தத்த இயக்கத்திற்கு பிறகு பிராட்டஸ்டண்ட் மற்றும் கத்தோலிக்க மிஷனரிகள் தங்கள் சொந்த பள்ளிகளை அமைத்தனர். அவை குறைந்த கல்வி கட்டணத்தின் அடிப்படையில் இருந்தது. பள்ளிகள் கிறிஸ்துவமிஷனரிகளின் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாக அமைந்திருந்தது. பள்ளிகளின் தலைவர்கள் அனைவரும் வெளிநாட்டு மிஷனரிகளாக மட்டுமே இருந்தனர். அதே நேரத்தில் ஆசிரியர்களாக வரக்கூடிய எந்த சீனரும் முதலில் கிறிஸ்தவராக மாற வேண்டும் என்ற நிபந்தனைகளும் இருந்தது. கிறிஸ்துவ மிஷனரிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்களோ அதற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டமும் மாறுபட்டு இருந்தது. குறிப்பாக பிரெஞ்சுக்காரர்கள் இலத்தீன் மொழியை அதிகம் சேர்த்தனர்.

ஐரோப்பிய மொழிகள், கணிதம், வரலாறு, புவியியல், அறிவியல் இவற்றுடன் பைபிள் கல்வி ஆகியவையும் போதிக்கப்பட்டது. எனவே 1925 இல் கோமிங்டாங் கட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்க விதிகள் மிஷினரி பள்ளிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. மாணவர்களை மத வகுப்புகளில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்துவதும் தடை செய்யப்பட்டது.

1912 ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சீனாவை ஆண்ட பல்வேறு அரசாங்கங்கள் கல்வித்துறையில் மேற்கொண்ட முயற்சிகள், தீர்க்க முடியாத பல சிக்கல்களை எதிர் கொண்டன. ஒவ்வொரு அரசும் அதன் ஆளும் வர்க்க நோக்கங்களுக்காக கல்வியை பயன்படுத்த முயன்றனர். ஆனால் எதுவும் அவர்கள் விரும்பிய அளவிற்கு வெற்றி பெறவில்லை. 1949 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனத்தில் இனச் சிறுபான்மையினர் கல்வி என்பது மதத்தின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. மதங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே மக்களை வைத்திருந்தார்கள். இஸ்லாமிய மதங்கள் தவிர இன்னும் பல இன குழுக்களில் மூதாதையர்களின் வழிபடக்கூடிய பூர்வீக மதங்களின் வழியாக கல்வி முறைகள் கற்பிக்கப்பட்டது. எந்த வகையிலும் சீனாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்கள் இனச் சிறுபான்மையினர் வாழ்ந்த பகுதிகளில் ஏற்படவில்லை.

எனவே தான் புரட்சி நடைபெறுகிற காலம் வரை அதாவது 1950 ஆம் ஆண்டுகள் வரை ஒட்டுமொத்த இன சிறுபான்மையினர் கல்வி நிலைமை பின் தங்கிய நிலைமையாகவே இருந்தது. 1950 ஆம் ஆண்டுகளில் ஒட்டுமொத்தமான இன சிறுபான்மையினரில் 80 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தார்கள். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற புதிய ஜனநாயக புரட்சி சீன மக்கள் குடியரசை நிறுவியது. அதன் பிறகு சிறுபான்மை மக்களுக்கான கல்வி வளர்ச்சியில் சிறப்பான கவனம் செலுத்தப்பட்டது.

அ.பாக்கியம்

வியாழன், பிப்ரவரி 26, 2026

61 மடாலயங்களில் முடக்கப்பட்ட இனக்கல்வி

 


அ.பாக்கியம்

மதம்” எவ்வாறு ஒரு மனிதனின் மனப்பான்மைகளையும் மன வடிவங்களையும் உருவாக்குகின்றதோ அதேபோன்று தான் ”கல்வியும்” மனிதனின் மனப்பான்மைகளையும் மன வடிவங்களையும் உருவாக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. மதங்களின் பிடியில் இருந்த காலங்களில் கல்வி மாற்றத்தை ஏற்றுக் கொள்ள தயங்கினாலும், மதம் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதைவிட கல்வி மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய பயணத்தில் ஒரு படி முன்னே தான் இருந்தது.

சீனாவில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி முதல் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி வரை சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வி என்பது மத பிற்போக்குவாதிகளிடம் மாட்டிக் கொண்டிருந்தது. அனேகமாக மடாலயங்கள்தான் கல்வியை கட்டுப்படுத்தினார்கள். இக்காலத்தில் இருந்த கல்வி முறைகள் எவ்வாறு இருந்தன. அவற்றின் மீது மாற்றத்தை கோரிய தலையீடுகளும், அதை எதிர்த்த பிற்போக்குவாதிகளின் செயல்பாடுகளையும் அறிந்து கொண்டால்தான், 1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அமையப்பெற்ற சீன மக்கள குடியரசு எவ்வாறு கல்வியை ஒரு மதசார்பற்ற கல்வியாகயும், சிறுபான்மை மக்கள் மத்தியில் எவ்வாறு நிலை நிறுத்தியது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

இனச் சிறுபான்மையினர் மத்தியில் பாரம்பரியமான கல்வி அறிவு என்பது ஒவ்வொரு தேசிய இனங்களுக்கு இடையிலும், வேறுபாடுகளுக்கு ஏற்ப செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு தேசிய சிறுபான்மை இனத்திற்கு இடையிலும் வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்து இனச் சிறுபான்மை பிரிவிடமும் ஒரு பொதுவான தன்மைகளும் காணப்பட்டது. அங்கு மடாலயங்கள்தான் கல்விச்சாலைகளாக செயல்பட்டன. மத குருக்கள் தான் கல்வி கற்பிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். பாடத்திட்டங்கள் பிரதானமாக மத போதனைகளாகத்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. மற்றொரு முக்கியமான பொது அம்சம் என்னவென்றால் கல்வி முறைகள் எப்படி இருந்தாலும், அது பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இனச் சிறுபான்மையினர் அனைவருக்கும் கல்வி பெறுவது தடுக்கப்பட்டிருந்தது.

 

1911 ஆம் ஆண்டு ”சன் யாட் சன்” தலைமையில் நடைபெற்ற குடியரசு புரட்சிக்கு முன்பு மிங் வம்சமும் அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த குயிங் வம்சமும் தங்களது வர்க்க நலன்களுக்கு ஏற்ற வகையில் கல்வி முறைகளை மாற்றி அமைத்தார்கள். குறிப்பாக மஞ்சு வம்சத்தினர் தாங்கள் அன்னியர் என்பதால் பெரும்பான்மையாக இருந்த ஹான் சீனர்களின் எதிர்ப்பை எதிர்கொள்வதற்காக இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வியின் மூலம் செல்வாக்கு செலுத்த முயற்சி செய்தார்கள்.

1911 ஆம் ஆண்டு குடியரசு ஆட்சி அமைந்த பிறகு ஷாங்-கய்-ஷேக் தேசிய அரசாங்கத்தின் மூலமாக சில பொதுவான முயற்சிகளை கல்வித்துறையில் மேற்கொண்டனர். இவை முழுமையாக வெற்றி பெறவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் சீனாவை காலனிபடுத்திய பிறகு கிறிஸ்துவ மிஷனரிகளின் செயல்பாடு அதிகரித்தது. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த கிறிஸ்துவ மிஷனரிகள் குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த அமைப்புகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சிறுபான்மை மக்களை மதமாற்ற முயற்சி செய்தனர்.

ஆனால் இவர்களது முயற்சி வெற்றி பெறவில்லை. சீனாவின் பெரும்பான்மை இனமாக இருந்த  ஹான்  மக்களிடம் கிறிஸ்துவம் பரவிய அளவிற்கு சிறுபான்மை மக்களிடம் பரவவில்லை. இதற்கு மாறாக ஏற்கனவே சிறுபான்மை மக்களிடம் வளர்ந்திருந்த திபெத்திய பௌத்தமும், இஸ்லாமியமும் கிறிஸ்துவத்தின் செல்வாக்கை மிக வலுவான முறையில் எதிர்த்து பின்னுக்கு தள்ளியது. இந்தப் பின்னணியில் தான் சிறுபான்மை மக்களிடம் மடாலய மதக் கல்விகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.

இதனைப் பற்றி தெரிந்துக்கொள்ளா அனைத்து சிறுபான்மை இனங்களின் கடந்த கால வளர்ச்சிப் போக்குகளை அறிவதைவிட சிறுபான்மை மக்கள் மத்தியில் வெகுவாக செல்வாக்கு செலுத்தக்கூடிய இனச் சிறுபான்மையாக இருக்கும் திபெத், ஜின்ஜியாங், ஹுய் மற்றும் கொரிய இனங்களுடைய உதாரணங்களை அறிந்து கொண்டாலே போதுமானதாக இருக்கும்.

மதமே கல்வி” “கல்வியே மதம்”

திபெத்தில் மதத்தின் ஆதிக்கம் பல்வேறு துறைகளில் இருந்தது போல்  கல்வியின் மீதும் அதன் ஆணிவேர் வரை இருந்தது. மடாலயங்களே பள்ளிகளாக இருந்ததும், மதம் கல்வி இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாத அன்றைய அசாதாரண சூழலில் திபெத்திய கல்வியின் மீது லாமாயிச மதத்தின் ஆதிக்கம் இருந்தது. திபெத்திய பௌத்த துறவிகள் மட்டுமே அறிவு ஜீவிகளாக கட்டமைக்கப்பட்டனர். கல்வியில் மடாலயங்களின் செயல்பாட்டை மட்டுமே இந்த துறவிகள் வலியுறுத்தினார்கள். மடாலயங்களுக்கு வெளியே இருக்கக்கூடிய மக்களைப் பற்றியோ, அவர்களுக்கான கல்வியைப் பற்றியோ கவலைப்படவில்லை.

திபெத்தில் இருந்த பீக் மற்றும் எக்லேசியாஸ்டிகள் ஆகிய இரண்டு கல்வி நிலையங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த இரண்டு பள்ளிகளும் அரசாங்கத்தில் பணிபுரியக்கூடிய துறவிகளுக்கான பயிற்சி அளிக்க கூடியதாகவே இருந்தன. அரசின் பணிகள் அனைத்தையுமே துறவிகள்தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.  என்பதை இந்தக் கல்வி முறைகளில் இருந்து அறிய முடியும். இந்தப் பள்ளிகளில் முன்னாள் பட்டதாரிகளின் வாரிசுகளும் பரம்பரையாக நிலப்பிரப்புக்களாக இருப்பவர்களின் மகன்களும் மட்டுமே படிப்பை மேற்கொள்ள முடியும். 1949 ஆம் ஆண்டுகளுக்கு முன்புவரை திபெத்திய கல்விமுறையின் பாடத்திட்டம் என்பது மத போதனைகளை மையமாக வைத்ததுடன், அரசு அலுவலகங்களில் பணி புரிவதற்கான சில பாடத்திட்டங்களும், மருத்துவத்தை கற்றுக் கொள்வதற்கான பாடத்திட்டம் மட்டுமே இருந்தது.இவற்றை ஐந்து பிரிவுகளாக பிரித்து வைத்திருந்தனர்.

முதல் பிரிவு: மத அமைப்புகளின் செயல்பாடுகள் அது சார்ந்த நிர்வாக முறைகளுக்காக லாசா அரண்மனையிலேயே பள்ளிக்கூடம் இயங்கியது.

இரண்டாவதுவகை: ஆவணங்களை பராமரிப்பதற்கும் கையெழுத்து பயிற்சியை கொடுத்து அதிகாரப்பூர்வமான ஆவணங்களை எழுதுவதற்கும் இதில் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

மூன்றாவது: இப்பிரிவு கணிதம், எண் கணிதம் ஆகியவற்றை சொல்லிக் கொடுத்தது. அதாவது அரசாங்கத்தின் வருவாய் சேகரிப்பு வரவு செலவுகளை கவனிக்க கூடிய நபர்களை உருவக்கும் கல்வியாக இருந்தது.

நான்காவது: இது மதங்கள் தொடர்பான சிறப்பு பாடங்களையும் அதற்கான நூல்களையும் படிக்க வைப்பது.

 

ஐந்தாவது: இக்கல்வி பாரம்பரிய திபெத்திய மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க கூடியது.

மற்ற இனச் சிறுபான்மையிடம் இல்லாத ஒன்று திபெத்திய இனத்தில் இருந்தது. இவர்களின் கல்வி முறைகள் மடாலயங்களில் சொல்லிக் கொடுத்தாலும் திபெத்திய மொழி, மருத்துவம், வானியல், நாட்காட்டி, கணக்கீடு, ஓவியம் போன்ற சிலவற்றையும் சேர்த்தே சொல்லிக் கொடுத்தார்கள். திபெத்திய மொழி தொடர்பான அச்சு பிரிவுகளும் மடங்களில் இருந்தது.

அதாவது இந்த திபெத்திய மடாலயங்களில் நடத்தப்பட்ட பாடத்திட்ட முறைகளும், பள்ளிகளும் அரசை நடத்துவதற்கும், மதத்தை கடத்துவதற்குமான கல்வி முறையாக மட்டுமே இருந்தது. இது இரண்டையும் பெறக்கூடியவர்களாகவும் செய்யக்கூடியவர்களாகவும் சமூகத்தில் வசதி படைத்த வர்க்கம் மட்டுமே இருந்தது.

நவீன மதசார்பற்ற கல்வியையும், ஆங்கில பாணி பள்ளிகளையும் அறிமுகப்படுத்திய போது இந்த பள்ளிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். திபெத் பிராந்தியத்தில் இருந்த பள்ளிகளில் பெரும்பாலும் தனியார் பள்ளிகளே இருந்தன. திபெத்தில் மதத்தலைவரே, அரசுத் தலைவராகவும் இருந்ததால் சீன நாட்டின் மத்திய அரசிலிருந்து அரசுக்கான ஒரு துணைத் தலைவரை அனுப்பி வைப்பது வழக்கம். அப்படி அனுப்பி வைக்கப்படுபவர் அங்கிருக்கும் ஆட்சி முறைகளை மத்திய அரசின் சார்பில் மேற்கொள்வார்.

1906 ஆம் ஆண்டு திபெத்திற்கு சீன மத்திய அரசிலிருந்து அனுப்பப்பட்ட ஜாங் யின் டாங் திபெத்திய கல்விமுறையில் சீர்திருத்தங்களை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அவரின் முயற்சிகளில் ஒன்று மடங்களை கடந்து மதச்சார்பற்ற கல்விகளை கொடுப்பதாகும். ஆனால் அவருடைய சீர்திருத்தத்தை நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் திபெத்திய துறவிகளும் நிலப்பரப்புகளும் அவரை அங்கிருந்து வெளியேற்றினார்கள்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் நவீன கல்வி, ஆங்கில வழிக் கல்வி, மதச்சார்பற்ற கல்வி என அனைத்து விதமான புதிய முயற்சிகளும்  தங்களின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தது என மடாலய துறவிகள்  அதை எதிர்த்தார்கள். தலாய்லாமா திபெத்தின் சிகரமாகவும், துறவிகளின் எஜமானராகவும், மதஆதிக்க நிலப்பிரப்புத்துவ அரசின் உயிராகவும் இருந்தார். திபெத்திய ஆளும் வர்க்கம் குறிப்பாக துறவிகளும், நிலப்பிரபுக்களும் நவீன கல்வி முறையை போதிக்க கூடிய பள்ளிகளுக்கு தங்களுடைய குழந்தைகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால்  புதிய முறையை எதிர்த்தார்கள்.

இதைவிட மிக மோசமான ஒரு சிந்தனை போக்கு தலாய்லாமாவிடமும், துறவிகளிடமும் காணப்பட்டது. நவீன, முறையான கல்வி பயனற்றது. நேரத்தை வீணடிக்க கூடியது. அதனை கற்பவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்று பேசியது மட்டுமல்ல  அக்கல்வி முறையை கடுமையாக எதிர்த்தார்கள். அது மட்டுமல்ல கல்வி என்பது முடிந்தால் தவிர்க்கப்படவும் வேண்டிய ஒரு கடமை என்று இந்த மத குருக்களால் கருதப்பட்டது.

நவீன கல்வி முறையில் சில  பள்ளிகள் உருவானபோது தங்களது குழந்தைகளை கட்டாயம் அனுப்ப வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட நிலையில் வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மாற்றாக ஏழைக் குழந்தைகளுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைக்கக்கூடிய செயலையும் செய்தார்கள் என்று வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கிறது. இந்த கல்வி முறைகளைப் பற்றி அறிஞர்கள் பதிவு செய்யும் பொழுது மடாலயங்கள் என்பவை கலாச்சாரத்தையும் மதத்தையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்ற துறவிகள் மற்றும் நிறுவனங்களின் தொகுப்பாக இருந்தது என்று குறிப்பிடுகிறார்கள். இந்தியாவில் வேதங்கள் புனிதமானது மற்றவர்கள் படிக்க கூடாது என்று வர்ணாசிரம சித்தாந்தத்தை போதித்து கல்வியை தங்களுடையதாக்கிக் கொண்டார்கள். இதேபோன்று திபெத்திய லாமாக்கலும் புரட்சி நடைபெறுகிற வரை அதிகாரத்தைக் கொண்டு மக்களை கல்வி அறிவற்றவர்களாக மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

மதக்கல்வி-பொதுக்கல்வி முரண்களின் களம்

சோவியத் யூனியனுடன் அதிக எல்லைப் பகுதிகளை பகிர்ந்து கொண்ட சீனாவின் ஜின்ஜியாங்க் பிராந்தியம் இஸ்லாமிய சிறுபான்மையினர்கள் அதிகம் வாழக்கூடிய தன்னாட்சி பிரதேசமாகும். இங்கு மட்டும் 13-க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் ஒரே மாகாணத்தில் வாழ்கிறார்கள். இந்த பிராந்தியத்தில் ஹுய், உய்குர், கசாக், கிர்கிஸ், டாடர், உஸ்பெக், தாஜிக், டோங்சியாங், சலார் மற்றும் போனன் குழுக்களின் உறுப்பினர்கள் இஸ்லாமிய மத நம்பிக்கையைப் பின்பற்றுபவர்கள்.

இங்கு உய்குர் இனக் குழு அதிகமாக வாழ்கின்றனர். இவர்கள் துருக்கிய மொழி பேசக்கூடிய இஸ்லாமியர்கள். திபெத்  பிராந்தியத்திலும், ஹுய் இனத்தவர்கள் மத்தியில் அறிவு சார்ந்த துறைக்கு அவர்களின் வர்க்க நலன் கருதி அக்கறை எடுத்தது போன்று ஜின்ஜியாங்க் பிராந்தியத்தில் இருந்த இஸ்லாமியர்கள் அவ்வாறு எடுக்கவில்லை என்று இங்கு பிரிட்டிஷ் தூதராக இருந்த பி.டி கர்னல் குறிப்பிடுகின்றார். இந்த மதிப்பீடு மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு என்றும் அல்லது பிரிட்டிஷார் காலனி படுத்தக்கூடிய நாடுகளைப் பற்றி தெரிவிக்கின்ற வழக்கமான கருத்துக்கள் என்றும் சில அறிஞர்கள் பதிவிட்டுள்ளனர். ஆனாலும் இந்த பிராந்தியத்தில் இருந்த இனச் சிறுபான்மை மக்களுக்கான புத்தகங்கள் கூட வெளியில் இருந்து தான் வந்தது என்ற தரவுகளும் உள்ளன. இதனால் கல்விகற்பதற்கான  முயற்சிகள் உயர்வர்க்க மக்களிடம் கூட போதுமான அளவிற்கு இல்லை என்ற ஒரு நிலைமைதான் அங்கு இருந்தது.

1930 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு ஜின்ஜியாங்கில் ஒட்டுமொத்த கல்வியும் இஸ்லாமிய மயமாகத்தான் இருந்தது. குர்ஆன், இஸ்லாமிய கோட்பாடுகள், இஸ்லாமிய மத நடைமுறைகள், மற்றும் அது தொடர்பான வரலாற்று ஆவணங்கள் மட்டுமே பாடத்திட்டங்களாக இருந்தன. கல்வி கற்றுக் கொடுக்கக்கூடிய இடமாக மசூதி மட்டுமே இருந்தது. முல்லாக்கள்தான் அனைத்து பாடத்திட்டத்தையும் தீர்மானித்தார்கள். மசூதிக்கு வெளியே இயங்கிய சில பள்ளிகளும் மதம் சார்ந்த போதனைகளாக இருந்தாலும் அவற்றிலும் கூட வசதி படைத்தவர்கள் மட்டுமே படிக்க முடிந்தது. சிறுவர்கள் குர்ஆனை படிக்க எழுத மற்றும் ஓத கற்றுக் கொடுக்கும் இடங்களாகத்தான் மசூதிகள் இருந்தன. இத்தகைய பழமையான பாடத்திட்டத்தையும், கல்வி முறையையும் எதிர்த்து மாற்றுக்கல்விக்கான  ஆலோசனைகளை முன்வைத்தால் அவை அனைத்தும் கடுமையான முறையில் நசுக்கப்பட்டன. அவ்வாறு எழும் குரல்கள் தங்கள் மதஆதிக்க ஏகபோகத்திற்கு ஊறு விளைவிக்கும் என்று கருதினார்கள்.

முதலாம் உலகப் போர் நடந்த காலத்தில் உலகின் மிகப்பெரிய பேரரசாக துருக்கிய ஓட்டோமான் பேரரசு விளங்கியது. இவர்களின் உதவியுடன் ஜின்ஜியாங்கின் காக்ஸ்கார் நகரில் ஒரு பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பள்ளியின் பாடத்திட்டம்  துருக்கியப் பேரரசின் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இங்கு படித்த மாணவர்களை துருக்கிய சுல்தானை தங்களின் ஆன்மீக தலைவராகவும், உலகத்தின் தலைவராகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பாடதிட்டங்களும் அவ்வாறே அமைந்திருந்தது. இதனால் சீனத்தின் பகுதியில் துருக்கி அடையாளத்தை வலிந்து திணிப்பது மட்டுமல்ல துருக்கி நாட்டிற்கு விசுவாசம் உள்ளவர்களாக மாற்றப்படுகிறார்கள் என்று சீன அரசு அஞ்சியது. சீனாவை குறித்த அடையாளங்களும் அழிக்கப்பட்டது. இது இன ரீதியிலான மோதல்களை ஊக்குவிப்பதாக சீன அதிகாரிகள் கருதினார்கள். எனவே இந்தப் பகுதியில் நீண்ட காலம் ஆளுநராக இருந்த யான் செங் அந்தக் குறிப்பிட்ட பள்ளியை மூடினார். அது மட்டுமல்ல பள்ளியின் பொறுப்பாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். துருக்கி நாட்டிற்கு விசுவாசமான முறையிலும், அடிபணியக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்டு இருந்த சின்னங்களை எல்லாம் அகற்றினார். பின் உள்ளூர் மொழி மற்றும் சீன மொழி, சீன ராணுவ பயிற்சி ஆகியவற்றை கற்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அந்தப் பள்ளியை மீண்டும் திறந்து செயல்பட வைத்தனர்.

முதல் உலகப்போரின் முடிவில் துருக்கிய ஓட்டோமான் பேரரசு வீழ்ச்சி அடைந்ததால் ஜின்ஜியாங்கில் அதன் பலம் குறைந்தது. ஜின்ஜியாங்கில் சில பகுதிகள் சோவியத்தில் எல்லையில் இருந்ததால் சோவியத் செல்வாக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதே காலத்தில் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய புரட்சிகரமான போராட்டங்கள் இந்தப் பகுதிகளிலும் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தது. இக்காலத்தில் குறிப்பாக 1933 ஆம் ஆண்டு செங் ஷிகாய் என்பவர் பொறுப்பேற்றார். இவர் கல்வியில் புதிய பல திட்டங்களை அமலாக்கினார். இந்த கல்வித் திட்டத்தில் சோவியத் புரட்சியின் தாக்கம் இருந்தது. இவர் ஆரம்பித்த பள்ளிகளில் இடைநிலைப் பள்ளிகள், தொழில் முறை பள்ளிகள், பல்வேறு இனச் சிறுபான்மையர்கள் ஒன்றாக படிக்கும் வகையிலான பொது தொடக்கப் பள்ளிகள், உள்நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே தனியான பள்ளிகள், மழலையர் பள்ளிகள் போன்ற பல பள்ளிகளை இவர் ஆரம்பித்தார். பாடத்திட்டமும் சோவியத் செல்வாக்கை பிரதிபலித்தது. கல்விகள் அனைத்தும் தாய்மொழி வழியாகவே கற்பிக்கப்பட்டாலும், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளும் இவர் ஆரம்பித்த பள்ளிகளில் விருப்ப மொழியாக அறிமுகப்படுத்தப்பட்டன.

இக்காலத்தில் ஜின்ஜியாங் பொருளாதாரத்தை மேம்படுத் தக்கூடிய முறையில் கல்வி கற்பித்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பல்வேறு வகையான தொழில்நுட்ப பயிற்சியாளருக்கு பயிற்சி அளிப்பது பொருளாதார மேம்பாட்டுக்கான முக்கிய கருவியாக கருதப்பட்டது. இதற்காக அவர் விவசாயம், மேய்ச்சல் நிலம், கால்நடை அறுவை சிகிச்சை, பொறியியல், கணக்குகள், நிதியியல், ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட பள்ளிகளும் துவக்கப்பட்டன. 1936 முதல் 1942 வரை செங் ஷிகாய் ஆட்சி காலத்தில் கல்வி வியத்தகு விரிவாக்கத்தை பெற்றது. குறிப்பாக 1935 இல் 425 மாணவர்களைக் கொண்ட சாதாரண நடுநிலைப் பள்ளிகள் மட்டுமே இருந்தன. 1943 இல் 2590 மாணவர்களைக் கொண்ட ஏழு நடுநிலைப் பள்ளிகள் இருந்தது. 1937 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளிகள் 215 ஆக இருந்தது 1942 ஆம் ஆண்டில் 556 பொது தொடக்கப் பள்ளிகள் உருவானது. இக்காலத்தில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 2.66 லட்சமாக உயர்ந்தது.

செங் ஷிகாய் அடிப்படை கல்வி, அறிவை எளிதில் அடையவும் அதன் மூலம் சமூகத்தில் தங்கள் சொந்த செல்வாக்கை விரிவுபடுத்த முடியும் என்று நம்பி கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இவர் இன, கலாச்சாரம், மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அங்கீகரித்தார். தங்களது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கான முயற்சிகளாக இருந்தாலும், இயற்கையாகவே அவை முற்போக்கானதாகவும் விரும்பத்தக்கதாகவும் இருந்தது. இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வியை விரிவு படுத்தியதற்காக செங் ஷிகாய் பாராட்டப்பட்டார். எனினும் முல்லாக்கள் அனைவரும் இவரின் செல்வாக்கை அகற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்தார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்று புதுக் கல்வியை மீண்டும் மதக் கல்விக்கான அடித்தளமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இன்றும் கூட ஜின்ஜியாங்கில் உள்ள இஸ்லாமிய முல்லாக்கள் செங் ஷிகாய் ஆட்சியைப்பற்றி பாராட்டி பேசுவது கிடையாது.  தூற்றுவார்கள்.

எனவே ஜின்ஜியாங் பகுதிகளில் மதக் கல்வியின் ஆதிக்கம், அதன் பாடத்திட்டம் தொடர்ந்தாலும் எல்லை நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும், உள்ளூரில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டின் தாக்கமும் கல்விக் கொள்கையில் ஏகபோகத்திற்கு எதிரான குரலாக வெளிப்பட ஆரம்பித்தது.

அ.பாக்கியம்

வியாழன், பிப்ரவரி 19, 2026

60 இனக்கல்வியும் மத மரபும்


அ.பாக்கியம்

இன்றைய உலகில் கல்வியானது மக்களின் வாழ்வில் ஒரு அத்தியாவசியமான அங்கமாக மாறிவிட்டது. கல்வி ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றுகிறது. மனிதர்களுக்கு கல்வி வெறுமனே ஒரு ஆன்மீக உரிமைகள் என்ற நிலைமையில் இருந்து, சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு சட்டபூர்வமான உரிமையாக மாற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளைப் பற்றிய உலகளாவிய பிரகடனத்தில் 26 ஆவது பிரிவு கல்வியைப் பற்றி குறிப்பாக சொல்லி இருக்கிறது. கல்வியானது மனித ஆளுமையின் முழுமையான வளர்ச்சிக்கும் மனித உரிமைகளுக்கும் அடிப்படையான சுதந்திரங்களுக்கும் மரியாதையை ஏற்படுத்துவதற்கு வழி வகுக்க வேண்டும் என்று கல்வி எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்க எவ்வாறு இருக்க வேண்டுமென எடுத்துச் சொல்லி இருக்கிறது.

ஆனால் இன்றைய உலகில், கல்வி வணிகமயத்தின் உச்சத்தை எட்டியுள்ளது. பணம் இல்லாதவர்கள் சிறந்த கல்வியை பெற முடியாது என்ற நிலைமை உலகை ஆட்சி செய்கிறது. மறுபுறத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கக்கூடிய சிறுபான்மை தேசிய இனங்கள் அல்லது மதச் சிறுபான்மையினர் அல்லது மொழிச் சிறுபான்மையினர் கல்வி தளத்தில் கணிசமான அளவு புறக்கணிக்கப்படுகின்றனர். உலகம் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து துறை வளர்ச்சியால் சுருங்கி வருகிறது. ஆனால் உலக மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் விரிவடைந்து செல்கிறது. வறுமையில் வாடுபவர்கள் வசதியாக வாழ்பவர்களுக்கு இடையிலான இடைவெளி மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியாக மாறிக் கொண்டிருக்கிறது.

2025 ஆம் ஆண்டு தரவுகளின்படி, உலகளவில் 73 – 77 கோடி வரையிலான வயது வந்தவர்களுக்கு படிக்கவும் தெரியாது எழுதவும் தெரியாது. மேலும் 200 கோடி மக்களுக்கு ஒரு வாக்கியத்தை முழுமையாக படிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். உலகம் முழுவதும் எழுத்தறிவற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள். தற்போது கல்வி பெற முடியாதவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2.2 சதவீதம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக வளர்ந்த நாடுகளில்தான் கல்வி அறிவை பெற்றவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கல்வி பெறுவதற்கான சட்டபூர்வமான உரிமைகளை பெற முடியாத மக்கள் கணிசமான அளவில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சீன எழுத்தறிவின் அளவுகோல்….

உலகில் மக்கள் தொகையில் மட்டுமல்ல பொருளாதாரத்திலும் மிகப்பெரிய நாடாக சீனா விளங்குகிறது . 1949 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவைப் போன்று பல காலனித்துவ நாடுகள் சந்தித்த அனைத்து விதமான கொடுமைகளையும் சீனாவும் சந்தித்தது. சீனாவில் அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட்டிருப்பது அசாதாரண சாதனையாகும். இதே காலத்தில் விடுதலை அடைந்த பல நாடுகளில் முதலாளித்துவ கொள்கைகள் கோலோச்சியதால் கல்வி அறிவின் நிலைமைகள் பின்தங்கி இருந்தது. சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைமையிலான அரசு அனைத்து மக்களுக்குமான கல்வியை சாத்தியப்படுத்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டு சீனாவின் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி வயது வந்தவர்களுக்கான அதாவது 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் எழுத்தறிவு விகிதம் 97.33 சதவிகிதமாகும். இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் எழுத்தறிவு சதவீதம் 76 சதவிகிதமாகும். சீன நாட்டில் 2.67 சதவிகிதம் எழுத்தறிவு பெற முடியாத நிலைமை நீடிப்பதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் இருக்கிறது. புரட்சிக்கு முந்திய காலத்திலும், புரட்சி முடிந்த ஆரம்ப கட்டத்திலும் சீனாவில் கட்டாய கல்வி முறை அமலாக்கத்தில் இல்லை. எனவே இக்காலத்தில் பலர் கல்வி கற்பதற்கு செல்லவில்லை. குறிப்பாக பெண்கள் அதிகம் கல்விச்சாலைக்கு செல்லாதவர்களாக இருந்தார்கள். தற்போது சீனாவில் கல்வி அறிவு இல்லாதவர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். சீனாவில் கட்டாய கல்வி முறை கொண்டு வந்த பிறகு அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு உட்பட்ட குடிமக்களில் 99 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர்கள். 15 வயது முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்கள் மத்தியில் எழுத்தறிவின் விகிதம் 99.9 சதவிகிதமாக இருக்கிறது. இந்த இளையோர்கள் முழுமையான கல்வியை பெறுவதற்கு மிகவும் அடிப்படை காரணமாக இருப்பது ஒன்பது ஆண்டுகள் கட்டாய கல்வி முறையை சீன அரசாங்கம் சட்டமாக கொண்டு வந்தது. இதன் மூலம் அனைவரும் கல்வி அறிவை பெற்றார்கள்.

 

சீனாவின் 14 ஆவது ஐந்து ஆண்டு திட்டத்தில் (2021-2025) கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இருக்கக்கூடிய எழுத்தறி வின்மையை முற்றிலும் ஒழிப்பதன் மூலம் வயது வந்தோருக்கான எழுத்தறிவு விகிதத்தை 100% மாற்றுவது என்றும் இலக்கு தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு சீனாவின் எழுத்தறிவு விகிதம் 99 சதவீதம் வரை இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். தரவுகள் சில ஆண்டுகளில் வெளியிடப்படும். சீனாவில் எழுத்தறிவு என்பதற்கான அளவுகோல் 1500 முதல் 2000 வரை உள்ள பொதுவான சீன எழுத்துக்களை படிக்கவும் எழுதவும் உள்ள திறனை எழுத்தறிவு பெற்றவர்கள் என்ற அளவுகோலுக்கு உட்படுகிறார்கள். இது ஒரு செயல்பாட்டுக்கான எழுத்தறிவு அளவுகோலாகும். சீனாவின் பொதுவான கல்வி அளவிலிருந்து இனச் சிறுபான்மை மக்களின் கல்வி முறைகள் மாறுபட்டதாக இருந்தது மட்டுமல்ல, அவற்றை வெற்றி கொள்வதும் மிகப்பெரும் சவாலாக அமைந்தது.

சீனா பெரும்பாலும் ஒற்றைத் தன்மை கொண்ட சமூகமாகவே வெளி உலகத்தில் இருந்து பார்க்கப்படுகிறது. சீன மக்கள் தொகையில் 91 சதவீதம் பேர் ஒரே கலாச்சாரத்தை (கன்பியூசியம்) பின்பற்றுவர் களாகவும் ஒரே மொழியை (மாண்டரின்) பேசுகின்றவர்களாகவும் இருப்பதினால் ஒற்றைத் தன்மை கொண்ட சமூகம் என பார்க்கப்படுகிறது. ஆனால் இது உண்மை அல்ல. சீன சமூகம் வரலாற்று ரீதியாக பன்முக இனச் சமூகங்களை கொண்டதாகும். சுமார் 12 முதல் 13 கோடி வரை உள்ள இனச் சிறுபான்மை மக்கள் 9 சதவீதம் வரை உள்ளனர். இவர்களில் 55 இனச் சிறுபான்மையினர் உள்ளார்கள். சீனாவின் மொத்த நிலப்பரப்பில் 64 சதவிகித நிலப்பரப்பில் இவர்கள் வாழ்கிறார்கள்.

இந்தப் பின்னணியில்தான் சீனா தன்னை பல்வேறு கலாச்சாரங் களையும் இனங்களையும் கொண்ட ஒருங்கிணைந்த பல இனநாடு (பல்லினநாடு) என்று பிரகடனப்படுத்தி உள்ளது. உலகில் சில நாடுகள் பல்வேறு மொழி கலாச்சார இனங்களைக் கொண்டிருந்தாலும், ஓரளவு பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இனத்தால் அல்லது மதத்தின் பெயரால் ஒற்றைத் தன்மை கொண்ட சமூகமாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அதற்காக அடக்குமுறைகளையும் கையாளு கின்றனர். ஆனால் சோசலிச கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சீனா ஒன்பது சதவீதம் இருக்கக்கூடிய இனச் சிறுபான்மையினர்களை உள்ளடக்கிய பல இன நாடு என்று தன்னை அழைத்துக் கொள்வது மட்டுமல்ல அனைத்து இனப் பகுதிகளுக்கும் சமத்துவமான உரிமைகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த வரலாற்று பின்னணியின் அடிப்படையில் தான் சீனாவில் இனச் சிறுபான்மையினருக்கான கல்வியை கடின முயற்சி எடுத்து கற்பித்து வருகிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் இனச் சிறுபான்மையினர் இருந்தாலும் அவர்களுக்கான கல்வி வழங்குவது ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் சவாலான பிரச்சனையாக உள்ளது. இதற்கு காரணம் இருக்கிறது. அதாவது இனச் சிறுபான்மையினரின் இனங்களுக்கு மத்தியில் சமூக சமத்துவம், சமூக இயக்கம், பரந்த அளவில் தேசிய அடையாளம் போன்ற உணர்வுகள் அழுத்தமாகவும் நெருக்கமான தொடர்புகளையும் கொண்டு இருக்கிறது. இவர்களுக்கு கல்வி வழங்கினால் தொழிலாளர்கள் சந்தையில் தங்கள் தொழில் முறை திறன்களை மேம்படுத்திக் கொள்வதும், பரந்த சமூகத்தில் தங்கள் குழு அடையாளத்தையும் அரசியல் நிலைபாடுகளையும் உறுதிப்படுத்திக் கொள்வார்கள் என்ற அச்சம் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

எனவே ஒரு குறிப்பிட்ட தேச உணர்வை உருவாக்குதல், தேசபக்தி உருவாக்குதல், தேச ஒற்றுமையை பேணுவது ஆகிய ஒட்டுமொத்தமான இலக்குகளுக்கு இவற்றின் மூலம் சிக்கல்கள் ஏற்படலாம். இவற்றை எதிர்கொள்ள முடியாத இடத்தில் சிறுபான்மை மக்கள் மீது அடக்குமுறைகளோ அல்லது கல்வி ரீதியான புறக்கணிப்பு களோ மேலோங்கி வருகிறது. இதுதான் பல முதலாளித்துவ நாடுகளில் காணக்கூடிய நிகழ்வாக அமைந்திருக்கிறது. இதே பிரச்சனைகள் சீனாவிலும் இருந்தது. கல்விக்கான பணிகளை ஆரம்பிக்கிற பொழுது இந்த இடர்பாடுகளை எதிர்கொண்டனர். சீனா சீன தேசம் என்ற தேசிய உணர்வை வளர்ப்பது என்பதைவிட இனச் சிறுபான்மை மக்களுக்கு கல்வி போற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த சோசலிச பாதையை நோக்கி முன்னேறுவதற்கான ஒரு அடித்தளமாக இந்த இனச் சிறுபான்மையின ருக்கான கல்வி அமையும் என்று கருதினார்கள். ஒரு சோசலிச சமூகம் நோக்கிய பயணத்தின் தொடர்ச்சியாகதான் சிறுபான்மை மக்களுக்கான கல்வி கொள்கைகள் உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்ட அனுபவத்தை பெற்றார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் இன்றும் சீனாவைப் போன்ற ஒரு வெற்றி சாத்தியப் படாததாக இருக்கிறது.

1949க்கு முந்தைய கல்வி….

மார்க்சியம் என்பது சூனியத்திலிருந்து உருவானதில்லை. அதே போன்று சோசலிச சமூகம் என்பது அதற்கு முந்தைய சமூகத்தை வெட்டி துண்டாகி விட்டு உருவாக்கப்படக்கூடிய சமூகமல்ல. கடந்த கால சமுதாயத்தின் ஒரு தொடர்ச்சியாக தான் சோசலிச சமுதாயத்தை உருவாக்க வேண்டி இருக்கிறது. கடந்த கால சமூகத்தின் தகுதி வாய்ந்தவைகளை தக்கவைத்து கொண்டு, தகுதியற்றவைகளை அழித்து ஒழிப்பது தான் சோசலிச பயணத்திற்கு அடிப்படையானது என்பதை அனைத்து மார்க்சியங்களும் அறிவார்கள். இந்த வகையில் தான் மார்க்சியத்தின் வரலாற்றியல் பொருள் முதல்வாத அடிப்படையில் 1949 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உலகின் பல நாடுகளை விட சீனாவில் நிலப்பிரபுத்துவ காலத்திலேயே கல்வி முறைகள் மாறுபட்டு இருந்தது. பொது ஆண்டுகளுக்கு முன்பு (2070-1600) சியா வம்ச ஆட்சி காலத்திலேயே பள்ளிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அடுத்தடுத்து வந்த வம்ச ஆட்சிகளும் கல்விக்கான தலையீடுகளை தொடர்ந்து செய்துள்ளார்கள். வம்ச ஆட்சி காலத்திலேயே சீனாவில் மிகவும் பிரசித்தி பெற்றது கல்வியில் நடத்தப்பட்ட தேர்வு முறைகள் ஆகும். குறிப்பாக ஆட்சி பணி தேர்வு முறை குறிப்பிடத்தக்கது. ஐரோப்பா உட்பட பல நாடுகளில் வாரிசு அடிப்படையில் தேர்வுகள் நடந்த பொழுது சீனாவில் தகுதியின் அடிப்படையில் நடத்தப்பட்டது. கன்பூசியம் அடிப்படையில்தான் பாடத்திட்டங்களும் தேர்வு முறைக ளும் இருந்தது.

இப்படி பல விஷயங்களை குறிப்பிட்டுச் சொன்னாலும் இவை அனைத்தும் சீனாவில் வாழ்ந்த சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வி அறிவை மேம்படுத்துவதற்கான நடவடிக் கையாக அமையவில்லை. ஹான் இன சீனர்கள் மத்தியில் தான் இந்த கல்வி அறிவு வளர்ந்து இருந்தது.

1949க்கு முன்பு இனச் சிறுபான்மை மக்கள் வாழ்ந்த பகுதிகள் சமூக ரீதியிலும், பொருளாதார அடிப்படையிலும் மிகவும் பின்தங்கி இருந்தன. பல்வேறு பகுதிகளில் நிலபிரபுக்களின்கீழ் அடிமைகளாகவும், பண்ணை அடிமைகளாகவும் மக்கள் இருந்தார்கள். இந்த நிலையில் அன்றாட நிகழ்வுகளை மரங்களில் குறியிடுவதன் மூலமும், சில கயிறுகளை கட்டி வைப்பதன் மூலமாகவே தங்களது கணக்குகளை பதிவு செய்து கொண்டிருந்தார்கள். பெரும்பகுதி மக்களிடம் நவீன கல்வி முறைகள் எதுவும் இல்லை.

1950 ஆம் ஆண்டுகளில் புரட்சி முடிந்த அடுத்த ஆண்டு சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உயர்நிலை கல்வி கற்கும் மாணவர்களில் 0.9 சதவீதம், இடைநிலைப் பள்ளி மாணவர்களில் 0.4 சதவிகிதம், தொடக்கப்பள்ளி மாணவர்களில் 0.2 சதவீதம் என்ற அளவில்தான் இனச் சிறுபான்மை மாணவர்கள் இருந்தார்கள். திபெத் பிராந்தியத்தில் பள்ளி சேர்க்கை விகிதம் 2 சதவீதம் மட்டுமே இருந்தது. இந்த இரண்டு சதவீதத்திலும் உயர்குடி வகுப்பைச் சேர்த்த மாணவர்களும் நிலப்பிரபுக்களும் இடம் பெற்றிருந்தார்கள். 1930 மற்றும் 40 ஆம் ஆண்டுகளில் சீனாவில் இருந்த 55 இனச் சிறுபான்மையினரில் 22 இன சிறுபான்மை குழுக்களின் கல்வி அறிவின்மை என்பது 95% க்கு அதிகமாகவே இருந்தது. 1950 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட தரவுகளின் ஒரு பொதுவான அம்சம் ஒட்டுமொத்த இன சிறுபான்மை யினர்கள் 80 சதவீதம் பேர் கல்வியறி இல்லாதவர்களாக இருந்தார்கள். சிறுபான்மை பகுதிமக்கள் வாழ்ந்த இடங்களில் மதம் கல்வியின் மீது பெரும் மேலாதிக்கும் செய்தது. அதே நேரத்தில் கடினம் முயற்சி எடுத்து தீர்வு காண வேண்டிய பிரச்சனையாக ஆட்சியாளர்களுக்கு இருந்தது.

வலுவான மத மரபில் சிறுபான்மையினர்…

பொதுவாக ஹான் சீனர்களின் கலாச்சாரம் உறுதியாக மதசார்பற்றது. அவற்றின் கல்வி முறைகள் வரலாற்று ரீதியாக கன்பியூசியத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. இது ஒரு மதசார்பற்ற சித்தாந்தம் ஆகும். இது ஒட்டுமொத்தமாக மதசார்பற்ற வழிகளில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான மிக முக்கியமான வழிமுறையாக கன்பியூசிய தேர்வு முறைகள் இருந்தது. எனவே மத விஷயங்களில் கன்பியூசியம் கூடுதல் அக்கறை செலுத்தவில்லை. இக்காலத்தில் பௌத்தமும் தாவோயிச பாதிரிமார்களும் பெயரளவிற்கு பள்ளிகளையும் நடத்தினார்கள். பொதுவாக கல்வி முறையில் கூடுதல் பங்களிப்பு இல்லை என்று கூறலாம். ஹான் சீனர்கள் வாழக்கூடிய பகுதியில் மதம் சமூகத்தில் செல்வாக்கு மிக்கதாக இருந்தாலும், சமூக ஒழுக்கத்தை அமுல்படுத்துவதற்கு எந்த ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரமும் இல்லாமல் இருந்தது. இருந்த மத அமைப்புகளும் முக்கியமாக மதசார்பற்ற நெறிமுறைகளுக்கும், மதிப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டிய நிலைமை நீடித்தது. இதற்கு கன்பியூசியம் அடிப்படை காரணமாகும். சிறுபான்மை பகுதிகளில் குறிப்பாக கொரிய இனச் சிறுபான்மை மக்களிடம் இந்த மதசார்பற்ற தன்மை.

சீனாவில் இருந்த பெரும்பாலான இனச் சிறுபான்மையினருக்கு ஒரு வலுவான மத மரபு இருந்தது. மதம் அவர்களின் கலாச்சாரங்களில் ஊடுருவி, அவர்களின் சித்தாந்தங்கள், வாழ்க்கை முறைகள், மற்றும் சமூக நடத்தைகளை வடிவமைப்பதில் ஒரு ஆழமான பங்கை வகித்துள்ளது. இன சிறுபான்மையினர் இடையே மத நம்பிக்கைக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் இருந்த பல்வேறு இனக்குழுக்கள் நாம் அறிய முடியும். சீனாவில் இருந்த இன சிறுபான்மையினரின் முக்கிய மதங்களாக இஸ்லாம், பௌத்தம், லாமயிசம் போன்றவைகள் இருந்தன. ஹுய் இனத்தவர்களுக்கு இஸ்லாம் முக்கிய அடையாளமாக இருந்தது.

ஹுய், உய்குர், கசாக், கிர்கிஸ், டாடர், உஸ்பெக், தாஜிக், டோங்சியாங், சலார் மற்றும் போனன் குழுக்களின் உறுப்பினர்கள் இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றுபவர்கள். திபெத்திய, மங்கோலிய, யுகூர் மற்றும் து குழுக்கள் லாமாயிசத்தைப் பின்பற்றுபவர்கள். டாய், புலாங் மற்றும் பெங்லாங் இனத்தவர்கள் ஹீனயானா பௌத்தத்தை பின்பற்றுபவர்கள். ஓரோகென், டௌர் மற்றும் எவென்கி ஆகியோரால் ஷாமனிசம் (ஆவிகளுடன் தொடர்பு) பின்பற்றப்படுகிறது. ட்ரங், நு, வா, ஜிங்போ மற்றும் காவ்ஷான் இனத்தவர்கள் பலதெய்வ வழிபாடு மற்றும் டோட்டெமிசம் (இதில் மக்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட விலங்கு, தாவரம் அல்லது இயற்கை பொருளுடன் நெருங்கிய, புனிதமான உறவு) மற்றும் மூதாதையர் வழிபாட்டைப் பின்பற்றுகிறார்கள். கொரியர்கள், மியாவோ, லாஹு மற்றும் யி ஆகியோரிடையே கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்களின் ஒரு சிறிய குழுவைக் காணலாம்.

குடும்பத்திற்கு வெளியே ஒரு ஒழுங்கு அமைக்கப்பட்ட மதக்கல்வியை கொடுப்பதற்கு மடாலயங்கள் பாரம்பரியமாக வடிவமாக இருந்து வருகிறது. அரசு உருவாக்குகிற மதசார்பற்ற பள்ளிகளுக்கு மிகப்பெரிய சவாலாகவும் இந்த மடாலயங்களின் பள்ளிகள் இருந்தன. அரசு சிறுபான்மை மொழிகளை விட சிறுபான்மை மதங்களைப் பற்றிய சவால்களை அதிகம் சந்திக்க வேண்டி இருந்தது. அரசு ஆரம்பித்த பள்ளிகளின் வருகைக்காக நிதி பங்களிப்பை செய்தது மட்டுமல்ல குடும்பங்களின் ஆதரவை பெறுவதற்காகவும் மடாலயங்களின் கட்டுப்பாடுகளுடன் போட்டியிட வேண்டியது இருந்தது.

அ.பாக்கியம்

தோழர்.தயா உங்கள் வாழ்வும் மரணமும் ஒரு படிப்பினை தான்

  ,---------------------- 35 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்த இயக்கப் பயணம் , கனிவான நட்பு , உறவுகளைக் கடந்த குடும்ப இணைப்புகள் என அத்தனையும் ...