Pages

வியாழன், ஜூலை 10, 2025

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம் - 5

 


இந்துத்துவா- சியோனிஸ்டுகள் இணையும் புள்ளி

இந்தியாவில் பாஜகவின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் ஆர்எஸ்எஸ் இன் நவபாசிச கூறுகளை அம்பலப்படுத்த கூடியவர்களை இந்து விரோதிகள் என்று பிரச்சாரம் செய்வது மட்டுமல்ல, வேட்டையாடுவதும் நடக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெய்வங்களை கையில் எடுத்துக் கொண்டு அந்தந்த ஊரில் இருக்கக்கூடிய மதசார்பற்ற ஜனநாயக சக்திகளை இந்து விரோதிகள் என்று சித்தரித்து, தங்களது இந்துத்துவா கொள்கைகளை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள். இதேபோன்றுதான் இஸ்ரேலின் சியோனிஸ்டுகள் தங்களது சியோனிச கொள்கைகளை பாதுகாக்க அவர்களை விமர்சிப்பவர்களை யூதவிரோதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

மிகக் கொடுமையான விஷயம் ஒன்று அரங்கேறி இருந்தது. மே மாதம் 2024 இல். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகு மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டிற்கு கைது வாரண்ட்களை பிறப்பித்தது. அவ்வாறு பிறப்பித்த நீதிபதியை முன்னாள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருந்த ஒருவர் நவீன காலத்தில் மிகப்பெரிய யூத எதிர்ப்பாளர்களில் ஒருவர் என்று அந்த நீதிபதியை சைபாடினார். உலகம் முழுவதும் பொங்கி எழும் யூதவிரோத நெருப்பில் இரக்கமின்றி பெட்ரோல் ஊற்றுகிறார் என்றும் யூதர்களுக்கு எதிரான நாஜிகளின் இனச் சட்டங்களை அங்கீகரித்த ஜெர்மன் நீதிபதிகளுடன் அவரை ஒப்பிட்டு அவதூறு செய்தார். இஸ்ரேலின் பிரதமர் நெதயான்கு இஸ்ரேலிய கொள்கைகளை எந்த மேற்கத்திய தலைவர் விமர்சித்தாலும் அவர்களை யூத விரோதிகள் என்றும் இழிவானவர்கள் என்றும் சாடினார்.

காசா மக்களை இனப்படுகொலை செய்த பொழுது நெதயான்கு இனப்படுகொலையாளர் என்று விமர்சித்தவர்களுக்கு  நாங்கள் யூதர்களாக இருக்கிறோம் என்ற எளிய உண்மையின் காரணமாக எங்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டு என்றுநெதயான்கு திசைதிருப்பினார். இஸ்ரேலுக்கு எதிரான ஒவ்வொரு விமர்சனமும் யூத எதிர்ப்பு அல்ல, நீங்கள் அதை யூத எதிர்ப்பு வெறுப்பு என்று சொல்லும் தருணம் விமர்சனத்தின் நியாயத்தன்மைகளை நீக்கிவிட்டு மற்றவர்களை நசுக்குவதற்காக முயற்சிக்கிறீர்கள் என்று இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியர் டாம் செகவ் குற்றம் சாட்டுகிறார். அது மட்டும் அல்ல நெதயான்கு நீண்ட காலமாக யூத நெருக்கடிகளை தனது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தி வருகிறார் என்று விமர்சிக்கிறார்.

புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் ஜெர்மி போவன் , பிரிட்டிஷ் நாட்டின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி லார்ட் சம்பசன் கூறியதை விளக்கியுள்ளார். இஸ்ரேலிய அதிபர் நெதயான்கு மற்றும் அவரது அமைச்சரவை பாலஸ்தீனத்தில் இருந்து அரபுமக்களை கொலை செய்வது மூலமாகவும், பட்டினி போடுவது மூலமாகவும் 100 சதவீதம் அப்புறப்படுத்துவது. மேலும் ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதியை இடித்து விட்டு யூதர்களின் மூன்றாவது புனித கோவிலை கட்டுவது என்ற திட்டமும் வைத்திருக்கிறார்கள் என கூறுகிறார். யூதர்களின் புனித கோவில் பொஆமு 10  மற்றும் 6ம்  நூற்றாண்டு களுக்கு இடையில் சாலமன் கோயில் என்ற பெயரில் இருந்ததாக எபிரேய மொழியிலான பைபிளில் கதைகளில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரம் இல்லை. இரண்டாவதாக பொஆமு 516-ல் கோயில் கட்டப்பட்டது. இது யூதர்களின் இரண்டாவது கோயில் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் ஏரோது மன்னனால் மேம்படுத்தப்பட்டது. பொஆ 70களில் போரினால் இந்த கோயில் சிதளம் அடைந்தது. தற்போது அல் அக்சா என்ற மசூதி இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலம். 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அவற்றை இடித்துவிட்டு மூன்றாவது யூத கோயிலை கட்ட வேண்டும் என்ற திட்டம் தொடர்ந்து மேற்காசிய நாடுகளை பதட்டத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. மசூதி இடிப்பு இந்துத்துவா வாதிகளுக்கும் சியோனிஸ்டிகளுக்கும் ஒத்த நிலைப்பா டாக இருக்கிறது.

ஐரோப்பிய உலகம்தான் ஹிட்லர் காலத்திலும், அதற்கு முன்பும்- பின்பும் யூதர்களுக்கு எதிரான கொடுமைகளை செய்தது. எந்த விதத்திலும் பாலஸ்தீனர்களும், அரேபியர்களும் அதை செய்யவில்லை. ஆனால் இஸ்ரேலிய தேசம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்த பொழுது ஐரோப்பாவில் ஒரு அங்குல இடத்தை கூட பரிந்துரைக்க மறுத்தது ஐரோப்பிய வலதுசாரி தலைமை.

மக்களின் எதிர்ப்பும் மகுடங்களின் தள்ளாட்டமும்

ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் இஸ்ரேலை எதிர்த்து பிரம்மாண்டமான மக்கள் இயக்கங்கள் உருவாகி வருகிறது. நடந்து கொண்டு இருக்கிறது. அமெரிக்காவின் 18க்கு மேற்பட்ட தலைநகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். இத்தாலியில் நவபாசிச மெலோனிஅரசாங்கத்தின் இஸ்ரேல் சார்பு நிலைப்பாட்டை எதிர்த்து மூன்று லட்சம் மக்கள் ஜூன் மாதம் ரோம் நகரில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு மெலோனி அரசு இஸ்ரேல் காசாவில் தன்னுடைய ராணுவ நடவடிக்கை நிறுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனாலும் மக்கள் இந்த நடிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையான எதிர்ப்புக்கு வரவேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசின் லண்டன் மாநகரில் பல போராட்டங்களை காண முடிகிறது. பிரிட்டிஷ் அரசின் வெளியுறவு அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காசாவின் மோதலில் அரசாங்கத்தின் அணுகுமுறையை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் புறக்கணித்து வருவதை அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், உலகளாவிய விதிமுறைகளை இஸ்ரேல் குழி தோண்டி புதைத்து வருகிறது என்றும் கூறுகிறார்கள். சின்னஞ்சிறிய நெதர்லாந்து நாட்டின் தலைநகரங்களில் மனித தலைகளால் மூடுகிற அளவிற்கு மக்கள் திரண்டு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதை வாபஸ் வாங்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டங்கள் ஐரோப்பிய தலைவர்கள் மத்தியில் ஆட்டம் காண செய்துள்ளது

மே மாதம் 19 ஆம் தேதி மக்கள் எழுச்சியின் காரணமாக பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய மூன்று நாடுகளும் இஸ்ரேலின் மிக மோசமான செயல்களை கண்டித்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டார்கள். இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை சகிக்க முடியாது என்று அவர்கள் விவரித்தார்கள். இது நீடித்தால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று வீராவேசத்துடன் மக்களுக்கு பயந்து அறிக்கை விட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைத் தலைவரும் காசாவில் இஸ்ரேல் செய்வது பேரழிவு என்றும் தங்கள் ஒப்பந்தத்தை ரத்துசெய்வது பற்றி  பரிசீலனை செய்து வருவதாகவும் அறிக்கை விட்டார். ஒப்பந்தங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை இஸ்ரேலின் ஆராய்ச்சி துறை, தொடர்பாகவும் கல்வித்துறை தொடர்பாகவும் இருக்கக்கூடிய ஒப்பந்தங்கள் ரத்து செய்வோம் என்றார்கள். மக்களின் எழுச்சியால் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான ஸ்பெயின், அயர்லாந்து பாலஸ்தீன அரசு அங்கீகரித்தன. ஏற்கனவே நார்வே பாலஸ்தீனத்தை அங்கீகரித்து உள்ளது. வேறு வழி இல்லாமல் ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் பொது தொலைக்காட்சியில் காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தின் குறிக்கோள் என்னவென்று எனக்குப் புரியவில்லை என்ளும்  மாஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்று இதை  நியாயப்படுத்த முடியாது என அறிக்கை விட்டார். உள்நாட்டில் மக்களின் எழுச்சி அலைகளை அதிகரித்து வந்ததால் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மூன்று நாடுகளும் ஜூன் 10ம் தேதி இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அமைச்சர்கள் இடாமர் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் பாலஸ்தீனுக்கு எதிரான வன்முறை, பாலஸ்தீன உரிமைகளை துஷ்பிரயோகம் செய்தல், குடியேறிகளின் வன்முறையை தூண்டுதல், யூத குடியேற்றங்களை விரிவுபடுத்தல் ஆகியவற்றை மீண்டும் மீண்டும் செய்ததால் அவர்கள் மீது தடை விதித்ததாக அறிவித்தன.

நிறைவாக.....

போரைப் போல் பெரிய லாபகரமான தொழில் மற்றொன்று மில்லை. அதன் கிளர்ச்சிகளை பரப்பும் ஊடகங்களுக்கு அமைதி கவர்ச்சியாக தெரிவதில்லை. அமைதி என்று எழுந்து நிற்கும் என்ற ஏக்கம் உலகத்தின் ஏக்கமாக மாறிக் கொண்டிருக்கிறது.

போரின் லாபகரமான தொழிலுக்கு புனித இடங்கள் எல்லாம் ரத்தக் களரியாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் சரி வேறு சில இடங்களிலும் இந்த நிகழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராஜ்யத்தை துறந்து காட்டுக்குச் சென்ற ராமனுக்கு இடம் வேண்டுமென்று ஒரு பெரும் போரையும், லட்சக்கணக்கான மக்களின் உயிர்களையும், ரத்தங்களையும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெருசலேம் என்றால் அமைதியான நகரம் என்று பொருள். இந்த நகரம் 1000 ஆண்டுகளாக அமைதியை கண்டதே இல்லை. 1096  ஆண்டு அப்போதைய  போப் இரண்டாம் அர்பன் புனித போருக்கு அழைப்பு விடுத்தார். போரில் என்ன புனிதம் இருக்கிறது என்று கேட்காதீர்கள். கிறிஸ்துவின் புனித நகரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்க வேண்டும் என்று சிலுவைபடையினருக்கு அறைகூவல் விடுத்தார். ஜெருசலேமை நோக்கி குருசேடர்கள்(சிலுவைபடை) புறப்பட்டார்கள். ஜெருசலேமில் இருந்த யூதர்களையும், இஸ்லாமியர்களையும் ரத்த வெள்ளத்தில் போப் அனுப்பி வைத்த குருசேடர்கள் (சிலுவைபடை) மூழ்கடித்தார்கள். இங்கிருந்த யூதர்களையும் முஸ்லிம்களையும் ஒழித்துக் கட்டினார்கள்.

ஜெருசலேமில் இருக்கும் மலையின் மீது முஸ்லிம்களுக்கு எல் குட்ஸ் ன்ற புனித இடம், யூதர்களுக்கு அவர்களின் அரசன் தாவீது காலத்திலிருந்து இந்தமலை தலைநகரம். கிறிஸ்தவர்களுக்கு இயேசுபிரான் சிலுவை ஏறிய மலை இது. இவற்றை யாருக்கென்று பகிர்ந்து கொடுப்பது. பகிர்ந்து கொள்வதற்காக ஆயிரம் ஆண்டுகளாக எருசலேம் கண்ணீராலும் இரத்தத்தாலும் மிதந்து கொண்டு இருக்கிறது.ஆயிரக்கணக்கான நவீனரக ஆயுதம் தாங்கிய வீரர்களுக்கு மத்தியில் அமைதியை போதிக்க வந்தவர்கள்  உயிரும் உடலும் அற்றவர்களாக சிறைபட்டுக் கிடக்கிறார்கள்.

மோதிக் கொண்டிருப்பவர்கள் யார்? ஒரே பகுதியை சேர்ந்த மக்கள். யூதர்களின் புனித நூல் டோராவின் கதையும், பைபிளின் கதையும், குர்ஆனின் கதையும் ஒன்றாகத்தான் பயணித்திருக்கிறது. மூன்றும் மோசஸ் ஆபிரகாம் கதைகளை தான் சொல்கிறது. மோசஸ் மூசாவாகவும், டேவிட் தாவுத்தாகவும், சாலமன் சுலைமானாகவும், ஐசக் இஷாகாகவும் ஜேக்கப் யாக்கூப்பாகவும் மாறி இருக்கிறார்கள். விரிந்து பறந்த பாலஸ்தீனப் பகுதியில் ஒரு மக்களிடம் இருந்து தோன்றிய இந்த மதங்கள் நவீன உலகத்தில் ரவேட்டை ஆடக்கூடிய ஏகாதிபத்திய கொள்கைகளின் இரத்தம் படிந்த கைக்ளில் சிக்கிகொண்டுள்ளது.

யூதர்கள் நாஜிகளால் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பது உலகறிந்த வரலாறு. கொடுமைக்கு பலியான இனம் எழுந்து வலுவாக நிற்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த எழுச்சி மீண்டும் அப்படி ஒரு கொடுமையை எந்த இனத்திற்கும் ஏற்படக் கூடாது என்பதற்கான எழுச்சியாக இருந்தால் அது மனித சமூகத்திற்கும்  அவர்களது மதம் போதிக்கும் சமாதானத்திற்கு உதவி செய்வதாக இருக்கும். இனப்பகையின் நெருப்பில் வெந்துமடிந்த யூத மக்கள் மற்றொரு இனத்தை அதே வடிவத்தில் அழித்தொழிப்பது எழுச்சியின் அடையாளமாகாது அழிவுக்கு போடக்கூடிய அடித்தள மாகும்.

பாலஸ்தீன மண் என்றாவது ஒரு நாள் மனிதர்களுக்கு கிடைக்க வேண்டும்.

அ. பாக்கியம்

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம் - 4

 


வதை முகாமிலிருந்து மரண முகாமிற்கு

பாலஸ்தீனத்தின் காசாமீது இஸ்ரேல் போர் தொடங்கி ஒரு வருடம் எட்டு மாதங்கள் முடிந்து விட்டது. சுமார் 55,000பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களின் வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட சமன்படுத்தப்பட்டு விட்டது. மோதல் துவங்கி முதல் ஐந்து மாதத்தில் 12,300 குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். இது உலகில் எந்தப் போர்களிலும் குறுகிய காலத்தில் இவ்வளவு குழந்தைகள் சாகடிக்கப்பட்டது இல்லை. 2025 ஜனவரி மாதம் காசாவில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 14,500 மேலும் 17000 குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டார்கள். குறைவான மக்கள் தொகை இருந்தாலும் உலகிலேயே அதிக மாற்றுத்திறனாளிகள் உள்ள பகுதியாக தற்போது காசா பகுதி மாறியுள்ளது. 2007 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகையிட்டு இருந்தது. தரைவழி, வான்வழி, கடல்வழி அனைத்தும் அடைக்கப்பட்டு திறந்தவெளி சிறைச்சாலையாக காசாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் துவங்கிய யுத்தத்தின் மூலமாக காசா ஒரு மரண முகமாக மாறி உள்ளது.

இவ்வளவு சிறிய முற்றுகையிடப்பட்ட பகுதியில் இவ்வளவு நீண்ட காலமாக ( காசாவில்) சிக்கித் தவிக்கும் மக்களை நான் பார்த்ததில்லை. கண்முடித்தனமான குண்டு வெடிப்புகளும், அவர்களுக்கு மறுக்கப்படுகிற சுகாதாரமும், பத்திரிகைகளை நடத்த விடாமல் தடுக்கக்கூடிய முறைகளும் மிகக் கொடூரமானது என்று மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் ஜான் எக்லான்ட் குறிப்பிட்டுள்ளார். காசாவின் உள்கட்டமைப்பு, சுகாதார அமைப்பு, நகராட்சி அமைப்புகள், கல்வி நிலைய வலை அமைப்புகள், மசூதிகள், தேவாலயங்கள், சுருக்கமாக மனித வாழ்க்கையை ஒழுங்கமைத்த ஒவ்வொரு கட்டமைப்பையும் அழிப்பதில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளது என்று அரசியல் ஆர்வலர், பத்திரிக்கையாளர் அபெத் அபு சாதே குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் ஓர் இயந்திரம் காசாவையும் அதன் மக்களையும் தூசியாக அரைத்து அழித்து வருகிறது. உலகம் பார்வையாளராகவே காட்சி தருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இரட்டை நிலை

2025 ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த பொழுது, ஹமாசை முற்றிலும் அகற்றுவதுடன் இணைத்து அறைகூவல் விடுத்தது. இதன் மூலம் இஸ்ரேல் அந்தப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை ஆதரித்தது. ஜெர்மனியும், நெதர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் இல்லாத இங்கிலாந்தும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்த பொழுது, அனைத்து சர்வதேச சட்டங்களையும் மீறியதாகவும், ரஷ்யாவுக்கு எதிரான மிகப்பெரும் பொருளாதார தடைகளை விதித்த ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா பற்றிய எந்த செய்தியையும் ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினராக இருக்கக்கூடிய நாடுகளில் ஒளிபரப்ப கூடாது என்று தடைவிதித்தும், மிகப்பெரிய ஆக்கிரமிப்பாளனாக சித்தரித்தார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று ஈரானின் ஆதரவுடன் ஹமாஸ் இஸ்ரேலை அழிக்கத் துடிப்பது போல் ரஷ்யா உக்ரைனை வரைபடத்தில் இருந்து அழிக்க விரும்புவதாக பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள்.

ஐரோப்பிய தலைவர்கள் ஹிட்லரின் ஹாலோகாஸ்ட் கொடுமைகளை புறம் தள்ளிவிட்டு அரேபியர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் ஒரு வெறுப்புணர்வை உருவாக்கக்கூடிய பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். ஹிட்லரின் ஹாலோகாஸ்டின்போது ஐரோப்பிய நாடு முழுவதும் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். குறிப்பாக ஜெர்மனியில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் உலகம் மறக்க முடியாது, ஆனால் இன்று அந்த யூத மதத்தை கேடயமாக வைத்துக் கொண்டு சியோனிஸ்டுகள் நடத்தக்கூடிய புவிசார் அரசியலுக்கு ஜெர்மனி அப்பட்டமான ஆதரவை தெரிவித்து வருகிறது. ஆயுதங்களை வழங்கி வருகிறது. இஸ்ரேலின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்கிறது என்று முன்னாள் ஜெர்மனியினுடைய சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் கருத்து இதை வெளிப்படுத்தியது.  சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா உட்பட இஸ்ரேல் மீது வழக்கு தொடுத்த பொழுது ஜெர்மனி இஸ்ரேலை ஆதரித்தது

எனவே ஐரோப்பா ஒன்றியநாடுகள் யூதர்களுக்கு எதிராக மிகப்பெரும் தாக்குதலை நடத்தியவர்கள். தற்பொழுது பாலஸ்தீனர்களை அழிப்பதற்கு, தங்களால் அழிக்கப்பட்டயூதர்களை  உயிர்த்தெழ வைக்கிறார்கள். பாலஸ்தீனமும் தீவிரவாதிகளை உருவாக்குகிறது என்று உரக்க கத்துகிறார்கள் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள். தீவிரவாதிகளை தாலிபான் முதல் காலிஸ்தான் வரை மூளை முடுக்கெல்லாம் உற்பத்திசெய்தவர்கள் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும். 1930 ஆம் ஆண்டுகளில் பாலஸ்தீனத்தில் சியோனிஸ்டுகள் தீவிரவாதிகளாக அழைக்கப்பட்டார்கள். ஜெர்மனியில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது அதற்கு எதிராக போராடிய யூதர்களை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று அழைத்தார்கள். பிற்காலத்தில் இஸ்ரேலின் பிரதமரான  பெகின் 1940 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் தீவிரவாதி என்று அறிவித்தது. பாலஸ்தீனத்தில் இருந்து கொண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இஸ்ரேலில் ஆரம்பிக்கப்பட்ட படையின் கமாண்டராக போராடினார். 1946 ஆம் ஆண்டு ஜெருசலேமில் ஆங்கிலேய ராணுவ முகாமை அதன் பிரதான அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்தார். அவரை சிறை பிடிப்பதற்கு உதவினால் 50 ஆயிரம் டாலர் பரிசாக அளிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு அறிவித்தது. அதே பெகின் பிரிட்டிஸ் அரசின் நண்பர் ஆனது மட்டுமல்ல, அமைதிக்கான நோபல் பரிசையும் மேற்கத்திய நாடுகள் அவருக்கு வழங்கியது. இப்போது பாலஸ்தீன இயக்கத்தை தீவிரவாதிகள் என்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

எதிர்ப்பு அச்சை அழிப்பது

இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு அச்சை அழிப்பது முக்கிய குறிக்கோளாக மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் கொண்டுள்ளன. ராணுவ சக்தியாக விளங்கும் ஈரானை அழித்து விடுவதும், ஆசிய கண்டத்திலிருந்து பாலஸ்தீனம் என்ற கடைசி மனிதனையும் துடைத்தெறிந்து எறிவது என்றும் இஸ்ரேலின் மெதன்யாகுவும், அமெரிக்காவின் ட்ரம்பும் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கி இருக்கிறார்கள். இதற்கு யூதமக்களை தன்பக்கம் நிறுத்துவதற்கான முயற்சிகளில் சியோனிஸ்டுகள் ஈடுபட்டிருக் கிறார்கள். இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய ஊடகங்களில், இஸ்ரேல் ரத்த வெள்ளத்தில் காசா மக்களை மூழ்கடிக்கும் எந்த செய்தியும், படங்களும் வெளியிடுவது இல்லை. அதற்கு மாறாக இஸ்ரேலியர்களுக்கு ஹமாஸ் அமைப்பு செய்கிற அட்டூழியங்கள் என்ற பெயரில் படங்களையும் மற்ற கதைகளையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் இருக்கக்கூடிய யூதர்களுக்கு தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ஆழமான உணர்வை உருவாக்குகிறது. இதனால் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டின் அந்தஸ்து அதிகரித்து வருவதையும் அதன் நடத்தை குறித்த விமர்சனங்களை தவிர்த்து பெருமை கொள்கின்றனர். இஸ்ரேலின் சியோனிஸ்டுகள் நடத்தும் மிருகத்தனமான தாக்குதல்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

28 திபெத்: பீடபூமியின் அரசியல் ஆடுகளம்

திபெத் பீடபூமி. உலகின் கூரை என்பது உலகறிந்த விஷயம். புவியியல் ஆய்வாளர்களுக்கு இமயலையைப்போன்றே இது ஒரு ஆய்வுப் பொருள். மானிடவியல் அறிஞர்களுக்கு உயிரின பரிணாம வளர்ச்சியின் படிமங்களை ஆய்வுக்கு உட்படுத்துகிற இடம். மலையேறிகளுக்கு தங்களது சாகசங்களை வெளிப்படுத்துவதற்கான சாகசபூமி. பறந்து விரிந்து உயர்ந்து கிடக்கும் இதன் அழகு காண்போரின் கண்களை கொள்ளை கொள்ளும்.  திபெத் என்றால் இந்திய மக்களுக்கு தலாய்லாமாவின் பிரதேசம் என்ற கற்பிதம் கவனத்திற்கு வரும். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இந்த பீடபூமி சீனாவை சிதறடிப்பதற்கான ஒரு அரசியல் கருவி.

சீனாவிற்கோ சீன வரலாற்றின் பிரிக்க முடியாத பகுதியாகவும், இனக்குழு ஒற்றுமையின் சின்னமாகவும், புவிசார் அரசியலின் பிரத்யேக பிரதேசமாகவும் இருக்கக்கூடியது திபெத்பீடபூமி ஆகும். திபெத் ன்றால் சீன் மொழியில் மேலே என்றும், திபெத்திய மொழியில் கீழே என்றும் பொருள்படும். 4,70,000 சதுரமைல் பரப்பளவு கொண்டது. இந்த பீடபூமி 14 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இங்கு மங்கோலியர்கள் மொன்பா, தமாங், கியாங், ஷேரபா, லோபா, ஹான் சீனர்கள், ஹுய் சீனர்கள் மற்றும் பிற இன குழுக்கள் வசிக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆறாம் தேதி 14ஆவது தலாய் லாமாவின் 90 வது பிறந்தநாள். ஒரு வாரம் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்த நாளின் செய்தியாக தலாய்லாமா தனது மறுபிறவி வாரிசை கடைபிடிக்கப் போவதாக அறிவித்தார். எனது மறுபிறவி வாரிசு சுதந்திரப் பிரதேசத்தில் நடக்கும் என்றார். சீன அரசாங்கம் இதை உடனடியாக கண்டித்தது. அமெரிக்க அரசாங்கம் சீனா இதில் தலையிடக்கூடாது என்று அறிவித்தது. இந்தியாவின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜு தனது மறுபிறவி வாரிசை தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமையும் தலாய்லாமாவிற்கு மட்டுமே உள்ளது என்று அறிவித்தார். சீனா இதற்கும் கண்டனம் தெரிவித்தது. இந்திய வெளியுறவுத்துறை இந்தியா மத சுதந்திரத்தை மதிக்கும் என்று அறிக்கை விட்டு முடித்தது. தற்பொழுது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலாய் லாமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார், தலாய்லாமாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜு ராஜூ, ரஞ்சன் சிங், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, சிக்கிம் அமைச்சர் சோனம் லாமா போன்றவர்கள் கலந்து கொண்டதும் நடந்துள்ளது.

மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளையும் சீனாவின் வெளியுறவுத்துறை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. திபெத்திய மத தலைவர் தலாய்லாமா மதத்தின் பெயரால் சீனாவில் இருந்து ஜி சாங்கை அதாவது திபேத்தை பிரிக்கிற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தலாய்லாமா சீன எதிர்ப்பு பிரிவினைவாத நபர் என்றும் குற்றம் சாட்டி உள்ளது. பிரிவினை சக்திகளுக்கு இந்தியா துணை போகக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். பிறந்தநாளை கடந்தும் மறுபிறவி வாரிசு என்பது முக்கிய விவாப் பொருளாக மாறி இருக்கிறது. இது வாரிசை நியமிப்பது மட்டுமல்ல, சீனாவில் இருந்து திபெத் சுதந்திரம் அடைய வேண்டும், தனி நாடாக வேண்டுமென்ற கோரிக்கை சார்ந்த அம்சங்களும் இருக்கிறது . இதன் பிரச்சனைகளை அறிந்து கொள்ள வரலாற்று ரீதியான தரவுகளை அணுக வேண்டும். அதன் மூலம்  திபெத்திய பிரச்சனை புரிந்து கொள்ள முடியும்.

தொன்மத்தின் தொடர்ச்சிகள்..

சுமார் 40 முதல் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியா மற்றும் யுரேசிய தட்டுகளின் மோதலால் திபெத் பீடபூமி மேல் எழுந்து வந்துள்ளதாக புவியியல் விஞ்ஞானம் மதிப்பீடு செய்துள்ளது. பழைய கற்காலத்தில் அதாவது முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. புதிய கற்காலங்களில் விவசாயம், மண்பாண்டம் போன்றவற்றை இப்பகுதியில் இருந்த மக்கள் பயன்படுத்திய தற்கான தரவுகள் கிடைத்து இருக்கின்றன. இதற்கு மேலும் திபெத் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட நுண்கற்கள் வடக்கு சீன கருவியின் கலாச்சாரம் திபெத்திய கற்காலம் ஆகியவற்றின் இணைப்பை வெளிப்படுத்துகின்றன. ஹோலோசீன் காலத்தின் நடுப்பகுதியில் வடக்கு சீனாவில் இருந்து வந்தவர்களும்  திபெத்திய பிரதேசங்களில் குடியிருந்தவர்களும் இரண்டற கலந்து விட்டனர். ஹோலோசீன் காலம் என்பது புவியியல் அட்டவைணைப்படி பனியுகத்தின் முடிவில் அதாவது சுமார் 11,700 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய சகாப்தம் ஆகும். இக்காலகட்டம் மனித நாகரீகம் விவசாயம் போன்ற முக்கிய நிகழ்வுகளை பயன்படுத்த ஆரம்பித்த காலகட்டமாகும்.

வரலாற்று வளர்ச்சி விதிகளின்படி துண்டு துண்டான சிற்றரசுகள் தான் பண்டைய காலத்தில் அதிகாரத்தில் இருந்தார்கள். உலகம் முழுவதும் நிலப்பிரபுத்துவம் விரிவடைந்த பொழுது தன்னுடைய பொருளாதாரத் தேவைகளுக்காக பேரரசுகளை உருவாகியது. இக்காலகட்டத்தில் எண்ணற்ற சிற்றரசுகள்ழிக்கப்பட்டு பேரரசுகளின் ஆட்சியின் கீழ் வந்தன. திபெத்தியப் பகுதியும் இதற்கு விதிவிலக்கு அல்ல. வரலாற்றின் பல காலங்களில் இன்றைய திபெத் என்று சொல்லக்கூடிய பகுதிகள் தனித்தனியான சிற்றரசுகளாகவும், பல நேரங்களில் சீனாவின் பேரரசின் கீழும் இருந்து வந்துள்ளது.

சீனாவின் பிரிக்க முடியாத பகுதி

சீனா திபெத்தியர் உட்பட 56 இனக்குழுக்களைக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த நாடு. டாங் வம்ச காலத்தில் (618-907), திபெத் மற்றும் டாங் வம்சம், அரச குடும்பங்களுக்கு இடையிலான திருமண உறவுகள் ஏற்பட்டது. இதன் மூலம் அரசியல் மற்றும் கலாச்சார , பொருளாதார   உருவானது. 1271 ஆம் ஆண்டில், யுவான் வம்சம் (1271-1368) நிறுவப்பட்டபோது, ​​திபெத் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசாங்கத்தின் நேரடி அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஒரு நிர்வாகப் பகுதியாக மாறியது. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில், சீனா மிங் வம்சம் (1368-1644), கிங் வம்சம் (1644-1911) மற்றும் சீனக் குடியரசு (1912-1949) ஆகிணு காலங்களில் திபெத் மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது

        7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், டாங் வம்சம் (618-907) மத்திய சமவெளியில் நிறுவப்பட்டது. இது ஒரு சக்திவாய்ந்த மற்றும் அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட ஆட்சியாகும். இது மத்திய சமவெளிகளில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய குழப்பமான,நிலையற்ற  சூழ்நிலைகளை மாற்றி ஒழுங்கை நிலைநாட்டியது. அதே நேரத்தில், டுபோ இனத்தின்  தலைவர் சாங்ட்சன் காம்போ திபெத் பீடபூமியில் பழங்குடியினரை ஒன்றிணைத்து, திபெத் என்று அறியப்பட்ட பெரும் பகுதியை உள்ளடக்கிய டுபோ இராச்சியத்தை நிறுவினார்.

640 ஆம் ஆண்டில், டூபோ மன்னர் சாங்ட்சன் காம்போ தனது "பிரதம மந்திரி" கார் டோங்ட்சனை டாங் வம்சத்தின் தலைநகரான சாங்'ஆனில் உள்ள டாங் அரண்மனைக்கு அனுப்பி, பேரரசின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறும் இதறகாக  டோங்ட்சன் 5,000 தங்கத் காசுகள், நூற்றுக் கணக்கான நகைகள், பிற விலையுயர்ந்த ஆபரண கற்களை டாங் பேரரசருக்கு பரிசாகக் கொடுத்தார். பேரரசர் தைசோங்கின் குடும் பத்தைச் சேர்ந்த இளவரசி வென்செங், டூபோவிற்கு அனுப்பப் பட்டார். அவர் டூபோவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக

வாழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில், டாங் வம்சத்தின் சிறந்த கலாச்சாரம், மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம் டூபோவிற்கு கொண்டு வரப்பட்டது, இது டூபோவின் பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு பெரும் உதவி செய்தது.

இளவரசி வென்செங், டூபோவிற்கு எழுத்து மொழியின் முக்கியத்துவத்தை சாங்ட்சன் காம்போவிடம் கூறியபோது, ​​டூபோ மன்னர் 30 திபெத்திய எழுத்துக்களை உருவாக்கவும், வாக்கியங்களை உருவாக்குவதற்கான இலக்கணங்களை உருவாக்கவும் உரிய ஏற்பாடுகளை செய்து எழுத்தை உருவாக்கி, டூபோவிற்கு எழுத்து மொழி இல்லாத வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இளவரசி வென்செங் டூபோவிற்கு கொண்டு வந்த ஹான் சீன படைப்புகள் திபெத்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட. அவற்றில் கவிதைகள், விவசாயம், வரலாறு, மருத்துவம், நாட்காட்டி மற்றும் பௌத்தம் ஆகியவை அடங்கும். டூபோ மக்கள் படிப்படியாக மத்திய சமவெளிகளின் மேம்பட்ட தொழில்நுட்பமான தானியங்களை அரைத்தல், பருத்தி நூற்பு மற்றும் நெசவு, மட்பாண்டங்கள் தயாரித்தல், காகிதம் தயாரித்தல் மற்றும் ஒயின் தயாரித்தல் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றனர். இளவரசி வென்செங் புத்த மதத்தை வணங்கியதால், சாங்ட்சன் காம்போ டூபோவில் பௌத்தம் பரவுவதை ஆதரித்தார், மேலும் இந்த நோக்கத்திற்காக ஜோகாங் மடாலயத்தை கட்டினார். இது திபெத்தியர்களின் ஆன்மீக வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மிக முக்கிய பங்காற்றியதால் இளவரசி வென்செங், சாங்ட்சன் காம்போவின் சிலைகள் இன்னும் பொட்டாலா அரண்மனையில் வழிபடப்படுகின்றன. அவர்களின் மணமகள் அறை இன்னும் பார்வையிடப்படுகிறது. திபெத்தின் பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு இளவரசி வென்செங் ஆற்றிய பங்கைப் பாராட்ட திபெத்தியர்கள் பாடல்களையும் பாடுகிறார்கள்

பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட காலத்தில் திபெத்

1271 ஆம் ஆண்டில், மங்கோலியர்களின் குப்லாய் கான் தனது வம்சத்தின் பெயராக யுவானையும், டுபஸ்-க்ட்சாங் (இன்றைய மத்திய மற்றும் மேற்கு திபெத் மற்றும் அதன் மேற்குப் பகுதி) மற்றும் எம்டோ-காம்ஸை யுவான் வம்சத்தின் ஒரு பகுதியாகவும் அமைத்தார். திபெத் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் முழுமையாக கொண்டுவரப்பட்டது. யுவான் சீனா முழுவதையும் ஒன்றிணைத்தபோது, ​​யுவான் வம்சம் திபெத்தை திறம்பட நிர்வகிப்பதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை..

       1288 ஆம் ஆண்டில் சுவான்செங் கவுன்சில் என மறுபெயரிடப்பட்ட சோங்சி கவுன்சில், சீனாவில் யுவான் வம்சத்தின் போது நிறுவப்பட்ட ஒரு மத்திய அரசு அமைப்பாகும். இது ஆரம்பத்தில் மத மற்றும் நிர்வாக விஷயங்கள் உட்பட புத்த விவகாரங்கள் மற்றும் திபெத்திய விவகாரங்களை நிர்வகிப்பதற்கு பொறுப்பாக இருந்தது.

திபெத்தில் வீட்டு கணக்கெடுப்புகளை நடத்துதல், தபால் நிலையங்களை அமைத்தல், வரி வசூலித்தல், துருப்புக்களை நிறுத்துதல், அதிகாரிகளை நியமித்தல் மற்றும் யுவான் குற்றவியல் சட்டம் மற்றும் காலண்டரை வழங்குதல்.

பிராந்திய அளவிலும்,மத்திய மட்டங்களில் திபெத்திய துறவிகள், சாதாரண உயர் அதிகாரிகளை நியமித்தல், மத்திய அரசின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர் அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

யுவான் வம்ச அரசு திபெத்தில் நிர்வாகப் பிரிவை உருவாக்கி மூன்று தனித்தனி அமைதி ஆணையர்களை அமைத்தது, அவர்கள் நேரடியாக சுவான்செங் கவுன்சிலின் கீழ் செயல்பட்டனர். மேலும் திபெத்தில் உள்ள இந்த நிர்வாகப் பிரிவு திபெத்தில் கீழ்மட்ட நிர்வாக பிரிவை அமைக்க வழிவகுத்தது 

        யுவான் வம்சத்தை வீழ்த்தி ஆட்சிபீடமேறிய மிங் வம்சம் (1368-1644) திபெத்தை ஆட்சி செய்வதில் அடிப்படையில் யுவான்வம்ச முறைகளை பின்பற்றியது. லாசா, சிகேஸ் பகுதிகள், காம்டோ,நகாரி பகுதிகளின் இராணுவ மற்றும் நிர்வாக விவகாரங்களைப் பொறுப்பேற்பதற்கான அமைப்புகளை உருவாக்கியது.  மாவட்ட நீதிபதிகள் உட்பட (சோங்போயின்) உயர் மட்டங்களில் உள்ள அதிகாரிகள் அனைவரும் மிங் அரசால் நியமிக்கப்பட்டனர்.

1644 ஆம் ஆண்டில், கிங் (1644-1911) நீதிமன்றம், சீனா முழுவதையும் ஒன்றிணைப்பதற்காக அதன் தலைநகரை பெய்ஜிங்கிற்கு மாற்ற முடிவு செய்தது. வரலாற்று முன்னுதாரணத்தைத் தொடர்ந்து, கிங் நீதிமன்றம் திபெத்தின் மீது அதிகார வரம்பைப் பயன்படுத்தியது

திபெத்தை ஆட்சி செய்த யுவான் வம்சம் மிங் வம்சங்களைத் தொடர்ந்து கிங் வம்சம் பல மாற்றங்களை திபெத்பகுதியில் செய்தது. எல்லை பாதுகாப்பு, மாநில எல்லையை வரையறுத்தல், வெளிவிவகாரம், திபெத் பகுதிக்கு அதிகாரிகளை நியமிப்பது, தலாய்லாமா, பஞ்சன் லாமா இருவருக்கும் இருக்கக்கூடிய மத அதிகாரம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றை பீகிங்கிலிருந்து கிங் அரசாங்கம் முடிவு செய்வது.       

            1911 ஆம் ஆண்டு சீனாவில் சன் யாட் சன் தலைமையில் புரட்சி ஏற்பட்டு, கிங் வம்சத்தின் ஆட்சியைத் தூக்கியெறிந்தது. 1912 ஆம் ஆண்டு சீனக் குடியரசு (1912-1949) நிறுவப்பட்டபோது, ​​அது அதன் முதல் அரசியலமைப்பை - தற்காலிக அரசியலமைப்பை – வெளியிட்டது. இதன்படி திபெத் சீனக்குடியரசின் 22 மாகாணங்களில் ஒன்று என்பதை தெளிவாகக் குறிப்பிட்டது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட அரசியலமைப்பு மற்றும் பிற சட்டங்கள் அனைத்தும் திபெத் சீனக் குடியரசின் ஒரு பகுதியாகும் என்பதைக் குறிப்பிட்டன.

ஜூலை 1912 இல், சீனக் குடியரசு திபெத்திய உள்ளூர் விவகாரங்களைப் பொறுப்பேற்க மங்கோலிய மற்றும் திபெத்திய விவகார பணியகத்தை (மே 1914 இல் மங்கோலிய மற்றும் திபெத்திய கவுன்சில் என மறுபெயரிடப்பட்டது) அமைத்தது. கிங் வம்சத்தின் போது கிங் உயர் ஆணையர்கள் செய்ததைப் போலவே மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதன் அதிகாரிகள் பிரதமரின் நேரடிக் கீழ் பணியாற்றினர். 1929 ஆம் ஆண்டில், மங்கோலிய மற்றும் திபெத்திய கவுன்சில் மங்கோலிய மற்றும் திபெத்திய விவகாரங்களுக்கான ஆணையமாக மாறியது, இது ஏப்ரல் 1940 இல் திபெத் தலைநகரம் லாசாவில் அதன் அலுவலகத்தை அமைத்தது. 14 வது தலாய் லாமாவே சீனக் குடியரசின் மத்திய அரசின் ஒப்புதலுடன் பதவியேற்றார். 

       சீனக் குடியரசின் காலத்திலிருந்து 14 வது தலாய்லாமா,10வது பஞ்சன்லாமா குடியரசின் உச்ச அதிகார அமைப்பான தேசிய காங்கிரசிலும்(பாராளுமன்றம்), மற்றும் பல அதிகாரிகள் தேசிய அரசு நிறுவனங்களிலும்  பிரதிநிதிகளைக் கொண்டிருந்தனர்.  வரலாறு இவ்வாறு இருக்கையில் ஏகாதிபத்திய அரசுகளும் மேற்கத்திய அரசுகளும் 1949 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திர திபெத்தை கைப்பற்றி விட்டார்கள் என்ற பொய் பிரச்சாரத்தை கிளப்பி வருகிறார்கள். அதனால் சீனாவிடமிருந்து திபெத்தை விடுவிக்க வேண்டும் என்ற விஷயத்தை பிரகடனம் செய்கிறார்கள்.

திபெத்திய பௌத்தம் இந்தியவழி பௌத்தம் அல்ல.

ஜாங்சுங் வம்சம் ஆட்சி செய்த காலத்தில் திபெத்தில் போன் என்ற பூர்வீகமதம் இருந்தது. இந்த மதம் ஏழாம் நூற்றாண்டில் பௌத்தம் வருவதற்கு முன்பு ஒழுங்கமைக்கப்பட்ட, செல்வாக்கு மிக்க உள்ளூர் மதமாக இருந்தது. ஏழாம் நூற்றாண்டில் சாங்ட்சென் காம்போ  மன்னர் காலத்தில் திபெத்திற்குள் பௌத்தம் நுழைந்தது. எட்டாம் நூற்றாண்டில் அரசர் இட்ரிசங் தட்சன் காலத்தில் பௌத்தம் செழித்து வளர்ந்தது..பௌத்தத்திற்கும் போன் மதத்திற்கும் கடுமையான போட்டி இருந்தது. பௌத்த மதத்தால் போன் மதத்தை மாற்றியமைக்க முடியவில்லை.அதற்கு  மாறாக பௌத்தம் ஒரு ஆழமான சமய கலப்பிற்கு உட்படுத்திக் கொண்டது.

போன் மதம், மேற்கு திபெத்தில் ஜாங்ஜூங் எந்த இடத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்த மதத்தை ஞானி டொன்பா ஷென்ரப் மிவோச்சே  என்பவர் உருவாக்கியதாகவும் இம்மக்கள் நம்புகிறார்கள். இம்மதத்தின் நம்பிக்கைப்படி அண்டவியலில் தெய்வங்கள் மட்டுமல்ல ஆவிகளும் இருக்கிறது. மலைகளும், வானமும், மூதாதையர்களுடன் தொடர்புடையது. இயற்கை வளங்கள் வாழ்க்கை செழிப்புக்கு உதவுகிறது. அதே நேரத்தில் கோபம்நிறைந்தது. தெய்வங்களும் ஆவிகளும் கோபங்கள் வந்தால் பலி கொடுக்கும் வழக்கம் இவர்களிடையே காணப்பட்டது. சில நேரங்களில் மனிதர்களையும் பலி கொடுத்தார்கள்.

சடங்குகள் நடத்துவது, அன்றாட நடவடிக்கையாகவும் எதிர்காலத்தை கணிப்பதற்காக குறி சொல்லுதலும் இவர்களின் வழக்கத்தில் இருந்தது. எண்ணற்ற மூடநம்பிக்கைகள், சடங்கு நிறைந்து காணப்பட்டாலும் மக்களிடம் செல்வாக்கு பெற்ற மதமாக இருந்தது. இந்த சடங்குகளை நடத்துவதற்கு நிபுணர்கள், மற்றும் மருத்துவர்கள், ஆவிகளை ஓட்டக் கூடியவர்களும் இருந்திருக் கிறார்கள்.

தற்பொழுதும் திபெத்தில் பரவிய பௌத்தம் இந்த மதத்தின் சடங்குகளை தழுவிக் கொண்டது, திபெத்திய பௌத்த மதத்தில் இருக்கக்கூடிய மலைகளையும், நீர் மற்றும் இயற்கை வழிபாட்டு முறைகள் இதனைச் சார்ந்தது. சடங்குகள், மைய ஆன்மீக நம்பிக்கை, குறி சொல்லுதல், பாதுகாப்பு சடங்குகள், உள்ளூர் தெய்வங்களுக்கான மரியாதை போன்றவை அனைத்தும் இதிலிருந்து திபெத்திய பௌத்தம் உள்வாங்கிக் கொண்டது.

அதே நேரத்தில் போன் மதமும் சில மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு துறவற கட்டமைப்புகளையும், தத்துவ கட்டமைப்புகளையும் பௌத்தத்திலிருந்து ஏற்றுக்கொண்டு இன்று வாழும் ஒழுங்கமைக்கப்பட்ட யுங்ட்ருங்போன் மதமாக உருவெடுத்தது. தலாய்லாமா திபெத்திய பௌத்தத்தின் ஐந்தாவது பள்ளியாக போன் மதத்தை அங்கீகரித்தார். நியிங்மா, காக்யு, சாக்யா, கெலுக் என்பவை திபெத்திய பௌத்தத்தின் நான்கு முக்கிய பள்ளிகளாகும்(மரபு). ஐந் தாவது பள்ளியில் சில பிரிவுகள் உள்ளன. அவற்றில் போன் மற்றும் ஜோனாங் ஆகும். எனினும் போன் மதம் தங்களை தனித்துவமாகவும் கருதுகிறார்கள்.

திபெத்திய பௌத்தம் என்பது போன் மதத்தின் ஆழமான வேர்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட அதிநவீன கலவையாகும். இதன் காரணமாகத்தான் திபெத்திய பௌத்தம் சீனாவின் இதர பௌத்தத்திலிருந்து மாறுபட்டு இருக்கிறது. திபெத்திய மதம் சீனத்தில் உருவானது. அதற்கும் மற்ற இடங்களில் உருவான மதத்திற்கும் வேறுபாடு உண்டு என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்பொழுது மறுபிறவி வாரிசை தேர்ந்தெடுக்கிற பொழுது இதர நாடுகளின் தலையீடு கூடாது என்ற கருத்தை சீனாவின் வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வ பேச்சாளர்  திபெத்திய மதம் சீனாவில் உருவானது என்பதை ஆணித்தரமாக தெரிவித்திருக்கிறார்.

 திபெத்தில் நிலப்பிரப்புத்தும் வளர்ந்த பொழுது அதன் பிரதிநிதிகளாக நிலப்பிரபுக்களும் அவர்களின் மதத் தலைவர்களாக, ஆட்சியாளர்களாக லாமாக்கள் மாறினார்கள். லாமாக்களுக்கும், நிலப்பிரபுகளுக்கும் மக்களை அடிமைப்படுத்தி சுரண்டுவதற்கு ஏற்ற வகையில் திபெத்திய பௌத்தம் மாற்றி அமைக்கப்பட்டது. எனவே அந்த மத நம்பிக்கையை பயன்படுத்தி மக்களை அடிமையாக வைத்திருந்தனர். புரட்சிக்குபிறகு இவை அனைத்தும் மாற்றப்பட்டது.

அ.பாக்கியம்

 

 

 

 

 


இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம் - 5

  இந்துத்துவா - சியோனிஸ்டுகள் இணையும் புள்ளி இந்தியாவில் பாஜகவின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் ஆர்எஸ்எஸ் இன் நவபாசிச கூறுகளை அம்பலப்படுத்த க...