Pages

புதன், செப்டம்பர் 17, 2025

சமத்துவ சமுதாயம் நோக்கி

 

தோமஸ் பிக்கெட்டி எழுதிய


சமத்துவ சமுதாயம் நோக்கி என்ற புத்தக அறிமுக கூட்டத்தில், புத்தகத்தின் மொழிபெயர்ப் பாளர் அக்களூர்இரவி அவர்களை கௌரவித்த பொழுது .....

தோழர் இரவி 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த் திருக்கிறார். ஆரவாரம் அற்ற அவரது மொழிபெயர்ப்பு பணிகள் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

தாமஸ் பிக்கெட்டின்யின் இந்த புத்தகம் புதிய முறையில் எழுதப்பட்டுள்ளது. அரசியல் களத்தில் களமாடுபவர்களும் தொழிற்சங்கத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களும் படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான புத்தகமாக நான் கருதுகிறேன்.

இன்றைய உலகமய சூழலில் தொழிற்சங்கம் பொருளாதார வாதத்திற்குள் சிக்கித் தவிக்கிறது. முதலாளித்துவக் கட்சிகள் தொழிற்சங்கத்தை தொழிலாக மாற்றி வரக்கூடிய செயல்கள், பல தொழிற்சங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

புத்தகத்தை அறிமுகப்படுத்திய கோமதி சங்கர் அவர்கள் மிக முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார்.

தோழர் பீட்டர் துரைராஜ் அவர்களின் முன்முயற்சியால் 35க்கு மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது.

தாமஸ் பிக்கெட்டின்யின் இந்தப் புத்தகம் சொல்லக்கூடிய தீர்வுகளில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் முன் வைக்கக்கூடிய ஏராளமான தரவுகள் மிக முக்கியமான நடைமுறை சார்ந்த முடிவுகள் ஆகும் . தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன் முடித்த பிறகு முழுமையான மதிப்புரை எழுதுவேன்.

எதிர் வெளியீடு

விலை 450/=

 

கைத்தட்டி கொண்டே இருக்கிறேன் ........

 



அ. பாக்கியம்

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வெளியிட்ட ஒரு நினைவு மலரில் வாலிபர் சங்கத்தின்  முன்னத்தி ஏர்களிடம் வாழ்த்துச் செய்தி பெறப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த வாழ்த்து செய்திகளில் நான் படித்தது என்றும் நினைவில் நின்றது மட்டுமல்ல சில இடங்களில் தொடர்ந்து பயன்படுத்திய வார்த்தைகளும் ஆகும். முன்னத்தி ஏரில் ஒருவர்  நான் மைதானத்தில் ஓடி முடித்து விட்டேன் தற்பொழுது அடுத்த தலைமுறை ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து கேலரியில் அமர்ந்து கொண்டு கைதட்டிக் கொண்டிருக்கிறேன் என்ற வார்த்தைகளில் அவரது வாழ்த்து செய்தி முடித்திருந்தார். தோழர் அகத்தியலிங்கம் பொறுப்பில் இருந்த பொழுது நான் உட்பட அவருடன் மையப் பணிகளில் இருந்த காலத்தில் இந்த நினைவு மலரை அவரின் முன்முயற்சியால் சிறப்பாக வெளியிடப்பட்டது. அந்த மலரில் பலரின் கருத்துக்களோடு மேற்கண்ட வரிகளை எழுதி இருந்தவர் கே வி எஸ் என்று அன்புடன் அழைக்கக்கூடிய கே வி எஸ் இந்துராஜ் ஆகும்.

திருச்சி மாவட்டத்தின் கட்சித் தலைவர்களின் ஒருவராக திகழ்ந்தவர் மட்டுமல்ல தொடர்ந்து சாத்தியமான அளவு இயங்கிக் கொண்டும் இருக்கிறார்.

 நேற்றைய தினம்(14.09.25)  திருச்சியின்  புறநகர் மாவட்ட பயிற்சி முகாமில் அவரை சந்தித்து பேசியது இதமான நிகழ்வாக அமைந்தது. நான் திருச்சிக்கு வாலிபர் சங்க வேலைகளுக்காக தொடர்ந்து வந்த பொழுதெல்லாம் மாவட்ட அலுவலகத்தில் கலகலப்பான ஒரு மனிதராக இருந்தவர் தோழர் கே வி எஸ் ஆவார்.

அவர் இல்லை என்றால் வெற்றிடத்துடன் திரும்புவதான ஒரு மெல்லிய உணர்வு ஏற்படும். அனைத்தையும் மிக சாதாரணமாக செய்வது மட்டுமல்ல அவருடைய பேச்சுக்களும் அவ்வாறே அமைந்திருக்கும். இளைஞர்கள் கட்சிக்குள் வந்த பொழுது அவர் திருச்சி மாநகர் கட்சியின் செயலாளராக இருந்தார். பல இளைஞர்களை எதிர்கொண்டார். இளைஞர்களின் கிண்டல் கேலிகளை புன்னகையுடன் கடந்து செல்வார். சில நேரங்களில் நான் அவரை சந்திக்கிற பொழுது பாக்கியம் இந்த பயலுகளை சொல்லிவை ரொம்பத்தான் பிரச்சனை பண்ணுகிறார்கள் என்று செல்லமாக கடிந்து கொள்வதும் பதிலுக்கு பல இளைஞர்கள் அவரை நகைச்சுவையுடன் பேசுவதும் நெருக்கத்தை உருவாக்குவதாக இருந்தது. இன்று 73 வயதை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். வாய்ப்புள்ள போது நிகழ்ச்சிகளில் அனைத்திலும் பங்கு பெறுகிறார். அந்த மாவட்ட குழுவும் அவரையும் இதர மூத்த தோழர்களையும் அரவணைப்போடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரோடு சிறிது நேரம் உரையாடினேன்.

திருச்சி மாநகரில் 21 ஆண்டுகள் கட்சியின் இடைக்கமட்டி செயலாளராக பணியாற்றி இருக்கிறார். 1981ம் ஆண்டு முதல் கட்சியின் மாவட்ட குழுவிலும், 1985 முதல் 2022 ஆண்டு வரை மாவட்ட செயற்குழுவிலும் இருந்து பணியாற்றிருக்கிறார்.

தோழர் பி ஆர் சி என்று அன்புடன் அழைக்கக்கூடிய பி இராமச்சந்திரன் அவர்கள் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தின் செயலாளராக அதாவது புதுக்கோட்டை கரூர் பெரம்பலூர் அரியலூர் திருச்சி புறநகர் திருச்சி மாநகர் இவை அனைத்தும் ஒன்றாக இருந்த பொழுது அதன் செயலாளராக பணியாற்றிய காலத்தில் தோழர் கே வி எஸ் அவர்களை  இயக்கத்தில் ஈடுபடுத்தியதை  நினைவு கூர்ந்தார்.

திருச்சியில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆரம்பிப்பதற்கு முன்பே தோழர் பி ஆர் சி மாவட்ட அளவில் 1972 ஆம் ஆண்டுகளில் ஒன்பது பேர் கொண்ட ஒரு அமைப்புக்குழுவை உருவாக்கினார் அதில் நானும் ஒருவன் என்று குறிப்பிட்டார்.

 தோழர் பி ஆர் சி வாலிபர் அமைப்பை கட்டுவதற்கு திருச்சியில்  விதை போட்டவர் என்பது மட்டுமல்ல அதை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றினார். என்னைப் போன்றவர்கள் வாலிபர் சங்கத்தின் மாவட்ட மாநில பணிகளில் இயங்கத் துவங்கிய பொழுது அதன் பொறுப்பாளராக இருந்து வழிகாட்டியவர் தோழர். பி ஆர் சி.இதன் தொடர்ச்சியாக தான் 1974 ஆம் ஆண்டு தோழர் பிஆர்சி போன்றவர்களின் முன் முயற்சியால் முதல் ஜனநாயக வாலிபர் சங்கம் மாநாடு திருச்சி முனிசிபல் மண்டபத்தில் நடைபெற்றது என்றும் இந்த மாநாட்டில் தோழர்கள் ஆர். உமாநாத், தணிகைச் செல்வன், தஞ்சை மணியரசன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் முத்துக்கிருஷ்ணன் தலைவராகவும், தோழர் வி பரமேஸ்வரன் செயலாளராகவும், தோழர் கே வி எஸ்  துணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதை நெகிழ்வோடு தெரிவித்தார்.

இந்த ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 1975 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி #இளைஞர் முழக்கம் என்ற பத்திரிக்கை வெளியிடப்பட்டது.முதல் இதழை தோழர் பிஆர்சி பெற்றுக் கொண்டார். இந்த பத்திரிக்கையை வெளிமாநிலத்தில் இருந்த தமிழ் இளைஞர்கள் உட்பட வாங்கினார்கள்.  பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவாக தோழர் முத்துகிருஷ்ணன், பரமேஸ்வரன், ஜெகதீசன் மற்றும் நான் உட்பட ஆசிரியர் குழுவில் இருந்தேன் என்றும்,  எனக்கு பாசறை செய்திகள் என்று ஒரு பிரிவை ஒதுக்கி அது தொடர்பாக தொடர்ந்து எழுதி வந்தேன் என்பதையும் மன நிறைவோடு கே வி எஸ் அவர்கள் குறிப்பிடு கிறார்கள்.

தோழர்.ஜெகதீசன் தனது வருமானத்தை முழுவதும் கட்சிக்காகவும், வாலிபர் இயக்கத்திற்காகவும் செலவழித்தார் என்பதை நினைவு கூர்ந்தார் .சங்கம் ஆரம்பித்த காலத்தில் மிகப்பெரிய நெருக்கடியான அரசியல் சூழல் இருந்தது என்றும் ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் அதனைத் தொடர்ந்து,  அவசர கால நிலை பிரகடனம் என்று நீடித்தது. பத்திரிக்கையை தொடர்ந்து நடத்த இயலவில்லை என்பதையும் தெரிவித்தார்

1977 ஆம் ஆண்டு சோசலிச வாலிபர் முன்னணி கோவை மாவட்டம் இடிகரையில் அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக்குழு ஒன்பது பேர்களில் கே வி எஸ்  ஒருவராக இருந்துள்ளது மட்டுமல்ல அவசர நிலை காலத்தில் பிரிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி மாவட்டத்திற்கு வாலிபர் சங்கத்திற்கு பொறுப்பாக இருந்து பணியாற்றியதையும் தெரிவித்தார். அதன் பிறகு நடைபெற்ற மாநாட்டில் வாலிபர் சங்க மாநில குழு உறுப்பினராக பணியாற்றியதை கவனப்படுத்தினார்.

கட்சியில் உறுப்பினரான பிறகு திருச்சி வட்டாரக் குழு என்று அமைக்கப்பட்டு அதன் செயலாளராக தோழர் டி கே ரங்கராஜன் அவர்கள் பணியாற்றி இருக்கிறார். இது எனக்கு புது செய்தியாக தான் இருந்தது. இவர்கள் எல்லாம் கட்சியின் அடிமட்டு அமைப்புகளில் பொறுப்புகளில் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அறிகிற பொழுது மகிழ்ச்சியாக தான் இருக்கிறது.  இவ்வாறு அடித்தள அனுபவம் அற்ற முறையில் வளர்வது இயக்கத்திற்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதையும் எனது அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டேன். அதன் பிறகு கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப திருச்சி வட்டாரக்குழு இரண்டாக பிரிக்கப்பட்டு திருவரும்பூர் பகுதி,பெல் தொழிற்சாலை, பொன்மலை, ரயில்வே போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வட்டாரக் குழுவிற்கு தோழர் டி கே ரங்கராஜன் அவர்கள் கிடைக்கும் செயலாளராக தொடர்ந்து செயல்பட்டு இருக்கிறார். திருச்சி மாநகரப் பகுதியை ஒட்டிய வட்டாரக் குழுவிற்கு தோழர்.கஸ்தூரி ரங்கன் அவர்கள் இடைக்கமிட்டி செயலாளர்களாக செயல்பட்டு உள்ளார். இந்த கமிட்டியிலும் தோழர் கே வி எஸ் அவர்கள் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார்.

83 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இடைக்கம்டி செயலாளராக பொறுப்பேற்று 21 ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார்.

திருச்சி எரிசாராய தொழிற்சாலையில் 1966 ஆம் ஆண்டு ஒரு தொழிலாளியாக பணியில் சேர்ந்து பணியாற்றினார் என்றும் 1969 ஆம் ஆண்டு சங்கம் அமைத்து அதன் பிறகு சங்கத்தை பலப்படுத்திய பணிகளிலும் , 1973 ஆம் ஆண்டு வேலை நிறுத்தம் 28 நாட்கள் நடைபெற்று அன்றைக்கு இருந்த அரசு வேலை நிறுத்தத்தை உடைத்து பழி வாங்கியது. அதன் பிறகு கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட்ட வரலாற்று எடுத்துரைத்தார்.

1973 ஆம் ஆண்டு முதல் தோழர் பி ஆர் சி அவர்கள் கே வி எஸ் அவர்களை முழு நேர ஊழியராக கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து, அவசரநிலை காலம், ரயில்வே வேலை நிறுத்தங்கள், 77 ஆம் ஆண்டு தேர்தல், 80 ஆம் ஆண்டு தேர்தல  என்று தொடர் பணிகளின் காரணமாக  உடனடியாக முழு நேர ஊழியராக வர இயலவில்லை.

 தோழர் பி ஆர் சி 1980 ஆம் ஆண்டு அவரை ஒரு நேர ஊழியராக கொண்டு வந்ததை நெகிழுடன் குறிப்பிடுகிறார். அத்துடன் கம்பெனி வேலையும் விட்டுவிட்டார்.

தோழர் பி ஆர் சி யை தொடர்ந்து தோழர்.கே. வரதராஜன் தன்னை எவ்வாறு வழிநடத்தினார் என்பதையும் அரசியல் படுத்தினார் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

திருச்சி சுமை பணி தொழிலாளர் சங்கப் போராட்டத்தில் ஆறு நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்ததை குறிப்பிட்டார்.

தோழர்.கே வரதராஜன் பொறுப்புகளில் இருக்கிற பொழுது திருச்சியில் நவரத்தினங்கள் என்று சொல்லக்கூடிய அரசியல் தலைமை குழு உறுப்பினர்களில் தோழர் பிரமோத் தாஸ் குப்தா தவிர அனைத்து அரசியல் தலைமை குழு உறுப்பினர்களும் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்ததுடன் இந்த கூட்டங்கள் முழுவதும் கட்சி என்னை தலைமை ஏற்க வைத்தது என்பதை மிகப் பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். குறிப்பாக அவசர நிலை காலத்தில் தோழர் பி ஆர் அவர்களின் பொதுக்கூட்டத்தை குறிப்பாக சுட்டிக்காட்டினார்.

தோழர் பிஆர்சி மீதும் தோழர் கே வி மீதம் அளவு கடந்த மரியாதையுடன் தனது ஆசானாகவும் நினைவு கூறுகிறார். தோழர் கே வரதராஜன் கொரோனா இல்லையென்றாலும்  கொரோனா காலத்தில் மரணம் அடைந்தார். மரணம் அடைந்து அவருடைய பூத உடல் வாகனத்தில் எடுத்துச் செல்லும் பொழுது அந்த பூத உடலுடன் அவரது மகன் மருமகள் பேரன் ஆகியோர் வாகனத்தில் ஏறி அமர்ந்தார்கள். மற்றவர்கள் எல்லாம் தயங்கிய பொழுது உடல்நிலை சரியில்லை என்றாலும் கொரோனா அச்சம் இருந்த சூழ்நிலையிலும் அந்த வாகனத்தில் அனைத்தையும் மீறி ஏறிச் சென்று  பூத உடலை சிதையில் எரிக்கும் வரை இருந்து விட்டு வந்தேன் என்று அந்த தலைவரின் இறுதி நிகழ்வை குறிப்பிடுகிற பொழுது சற்றே உணர்ச்சி வசப்பட்டார்.

தோழர் கே வி எஸ் அவர்கள் தேர்தல் காலத்திலும் கே ஜி எஃப் உட்பட பல இடங்களுக்கு சென்று சென்று பணியாற்றியிருக்கிறார். மாநாடுகளில் சமையல் பொறுப்பில் ஆரம்பித்து பல பொறுப்புக்களை நிறைவேற்றி இருக்கிறார்.

என்னை போன்றவர்கள் அலுவலகத்திற்கு வருகிற பொழுது அவரின் நெருக்கமான, உரிமையான, அரவணைப்பு எப்போதும் கிடைத்துக் கொண்டே இருந்தது. நேற்று நான் அவரை சந்தித்து பொழுது அதே உணர்வு என்னை ஆட்கொண்டது.

இந்த உணர்வை வெளிப்படுத்துவதற்காக தான் இந்த பதிவை இங்கு பதிவிடுகிறேன். இதமான சந்திப்பும் உரையாடலில் புதிய உணர்வுகளுடன் அங்கிருந்து புறப்பட்டேன்

அ. பாக்கியம்

"நாம்_அறியாத_அலி முகமதலி"



பள்ளிப்பருவத்தில் இருந்தே விளையாட்டு என்றால் எனக்குக் பிடிக்காது; அதற்கான காரணம்... அதெல்லாம் நமக்கு எதற்கு? அதனால் என்ன பயன்? என்ற அறியாத பருவ மனநிலையில் இருந்து உருவானது எனலாம். விளையாட்டுகளைப் பொருத்தவரை இன்றும் அந்த மனநிலை தொடர்வது ஆச்சரியம் தரக்தக்கதாக இருக்கிறது.

அது கிரிக்கெட் முதல் அனைத்து விளையாட்டுகளுக்கும் பொருந்தும். இந்தியா பாகிஸ்தான் போட்டிகளில் இந்தியா தோற்றுவிட்டால், எதோ நாட்டை அடமானம் வைத்து தோற்றமாதிரி ஒரு சித்திரம் கட்டப்படும் பாருங்க. அய்யய்யோ அது, இன்னும் விளையாட்டுகள்மீது வெறுப்பைத்தான் என்னுள் உண்டுபண்ணி இருக்கிறது.

சினிமா, டிவி வந்தப்பின் அவற்றை அதில் பார்க்கிறபோது, அது ஏற்படுத்தும் உணர்வு இருக்கிறதே... அது அதைவிட மோசம். அந்த மனநிலையை சிவகார்த்திகேயனின் "கனா" திரைப்படம் என்னுள் இருந்த வெறுப்பை கொஞ்சம் தணித்தது! அதிலும் குத்துச்சண்டையை பார்க்கும்போது முகமெல்லாம் உடைக்கப்பட்டு, ரத்தம் சிந்துவதைப் பார்த்தால், 'ச்சைய்...' என்று தோன்றும்!

அப்படித்தான் தோழர் ஏ.பாக்கியம் அவர்களின் 'நானே மகத்தானவன்' என்கிற நூலையும் "அவரென்ன குத்துச்சண்டை வீரர்; அவ்வளவுதானே. அதிலென்ன நமக்கு இருக்க போகுது; அவரது வாழ்க்கை வரலாறு இருக்கும்" என அசால்ட்டாக படிக்க துவங்கினேன்.

படித்து முடிக்கும்போதுதான் தெரிந்தது... மறைந்த மார்க்சீய நூலாசிரியர் என்.ராமகிருஷ்ணன் அவர்கள், 'நாம் அறியாத அம்பேத்கர்' என்ற நூலை கம்யூனிஸ்ட்கள் மத்தியில் அம்பேத்கரைப் பற்றிய மறுவாசிப்புக்கு, இட்டு சென்றாரோ... அதுபோல், "நாம் அறியாத அலியை... ஆம், முகமது அலியை 'நானே மகத்தானவன்' என நூலின் வாயிலாக கம்யூனிஸ்ட்களுக்கு மட்டுமல்ல, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக யாரெல்லாம் போராடுகிறார் களோ... அல்லது சமூக சமத்துவ விடுதலைக்காக யாரெல்லாம் போராடுகிறார்களோ... அவர்களுக் கான மறுவாசிப்பிற்காகவும், அதையும் மார்க்சீய கோணத்தில் அரிய கொடையாக அரும்பாடுபட்டு வழங்கியிருப்பது, இந்த நூல் படித்து முடித்தப் பிறகுதான் தெரிந்தது...

ஆம், விளையாட்டையும் சமூக விடுதலைக்கான 'வெப்பனாக' (ஆயுதமாகப்) பயன்படுத்த முடியும் என்ற யதார்த்தத்தை இந்த நூல் எனக்கு புரிய வைத்தது என்றால்... அதுமிகையல்ல... எனக்கு மட்டுமா? படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வை அள்ளித்தர தவறாது இந்நூல். ஆம், தமிழ்கூறும் நல்லுலகுக்கு இந்த நூல் அரிய, அறிய நல்கொடையே.

அமெரிக்கா என்றாலே... அதொரு ஏகாதிபத்திய நாடு; அதாவது உலகை சுரண்டி கொழுக்கிற நாடு; இப்படித்தான் பொதுப்புத்தியில் இருக்கிறது. வேறு வார்த்தையில் சொன்னால்... அது பணக்கார நாடு; அங்கு கக்கூஸ் கழுவும் வேலை செய்பவர்கள்கூட கோட், சூட் போட்டுக்கொண்டு, டை கட்டிக்கொண்டு, காரில்தான் வந்து இறங்கி, வேலை செய்துவிட்டு, திருப்பி காரில்தான் செல்வார்கள் என்று இந்தியா போன்ற நாடுகளில் பொதுபுத்தியில் ஏற்றி வைத்திருக்கிறார்கள்.

சாதி கிடையாது; மதம் கிடையாது; இன ஒதுக்கல் கிடையாது; பாலினம் பாகுபாடு கிடையாது; இருந்தால் அமெரிக்கா மாதிரி இருக்கணும்; வாழ்ந்தால் அமெரிக்காவில் வாழணும் என்று இன்றும் டமாரம் அடிப்போர் உண்டு. ஆனால், அமெரிக்கா என்பது நிறவெறி, போர்வெறி, மதவெறி, பணவெறி என அத்தனை வெறிகளையும் கொண்ட நாடு என்பதை இந்த நூலில் அட்டகாசமாக முகமதுஅலி வாழ்க்கை ஊடே துள்ளல் நடையில் தூரிகையால் எழுதி உள்ளார் தோழர் பாக்கியம்.

இந்தியாவில் இந்துத்துவா சனாதன கோட்பாட்டை எப்படி தமது அறிவுகூர்மையால் அடித்து நொறுக்கி, அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவினார்

 அதுபோல் அமெரிக்காவில் அங்கிருந்த அன்றைய ஆளும் வர்க்கத்திற்கு நிறவெறி வாயிலாக உருவாக்கப்பட்ட, இன ஒதுக்கலை ஒழிக்க குத்துச்சண்டையை கேசியஸ் கிளே என்ற இயற்பெயர் கொண்ட முகமது அலி... களமாக கொண்டு களமாடி இஸ்லாத்தை இளமையிலேயே தழுவிட்டார்.

தமது 39 வயதிலேயே குத்துச்சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற உலக நாடுகள் எல்லாம் சென்று, எவ்விதம் தமது வாழ்க்கையை, கருப்பின மக்கள் விடுதலைக்கு அர்ப்பனித்துக் கொண்டார் என்பதை அணுஅணுவாக நுணுகி மிக நுட்பமாக படைத்துள்ளார் இந்நூலை பாக்கியம் அவர்கள். அதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நூலுக்குள் ஒன்றிரண்டு நுகர்வோமா... "குத்துச்சண்டை அரங்கில், வளையத்தில், வெள்ளை நிறவெறி வீரர்களின் முகத்தின்மீது விழும் ஒவ்வொரு 'பஞ்ச்'சும் (Punch), நிறவெறிக்கு எதிராக கருப்பின மக்கள் வெளிப்படையாக தங்கள் வலிமையும், மேன்மையும் காட்டுவதற்குக் குத்துச்சண்டை ஒரு களமாக அமைந்தது" (76-2).

என்றாலும் முகமதலிக்கு, "குத்துச்சண்டையைவிட இனவெறிக்கு எதிர்வினை ஆற்றக்கூடியது இஸ்லாம் மதம்தான்" (87-3) என்ற கருத்தில் உறுதியாக இருந்தார்; அதையே தழுவினார்.

ஆனால், வீட்டுக்கு ஒருவர் சோசலிச வியட்நாம்மீது அமெரிக்க படையெடுப்புக்கு ஆள்களை சேர்த்தபோது அதை ஏற்க மறுத்தார். "வியட்நாம் யுத்தம் எவ்வளவு நாள் நடக்கும் என்பது பிரச்சனை அல்ல. ஆனால், நான் வியட்நாமியர்களுடன் சண்டையிட மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளேன்" (104-3) உறுதியாக இருந்தார்.

அதனால் அமெரிக்க அரசால் தரப்பட்ட நெருக்கடிகள் ஏராளம். அதை இன்முகத்துடனே எதிர்கொண்டார். ஒருபோதும் சமரசத்திற்குப் போகவில்லை. மேலும், அதற்கு எவ்விதம் பதிலடி கொடுத்தார் பாருங்கள்... "வியட்நாமியர்களோ, சீனர்களோ, ஜப்பானியர்களோ எனது எதிரிகள் அல்ல; எனது எதிரிகள் வெள்ளைநிற வெறியர்கள். எனது நாட்டில் என்னுடன் நிற்காத நீங்கள், நான் எங்காவது சென்று சண்டையிட வேண்டும் என்று மட்டும் விரும்புகிறீர்கள்" (104-4).

அன்றைய சூழலை அந்நாட்டின் பிரபல பத்திரிக்கை ஒன்று விவரிக்கிறது... "போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தங்கள் உயிரை நிச்சயம் இழப்போம் என்று தெரியாது; ஆனால், முகமது அலியோ புகழ் பறிப்பு, பண இழப்பு, சிறைக்குச் செல்வது உறுதி என்பன தெரிந்தும், அதை செய்தார் என்றால், அது தியாகத்தின் மற்றொரு நிலை" (111-1).

குத்துச்சண்டையைப்பற்றி பிற்காலத்தில் அவரே சிலாகிப்பதைப்பாருங்கள். என்றாலும் அவர் அடித்தால் அந்த அடி இடிபோல் இறங்குமாம். ஆம், அதைப்பற்றி நூலாசிரியர் கூறுகிறார்...

"தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியப்பிறகு, 1974ஆம் ஆண்டில் அவர், குத்துச்சண்டைக் களத்தில், வேகத்தைக் குறைத்து, ரோப்-ஏ-டோப் நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தார். அதற்குமுன் முகம்மது அலியின் குத்துக்கள் தோராயமாக 1000 பவுண்டு சக்தி கொண்டது" (118-1).

ஒரு கட்டத்தில் சீனாவில் சுற்றுபயணம் மேற்கொண்டபோது, தமது குத்துச்சண்டை விளையாட்டு பழைய வீடியோ ஒன்றைப் பார்க்க கூறியபோது, அலி சொல்கிறார்..."அந்த நரகத்திற்குள் மீண்டும் நான் செல்ல விரும்பவில்லை" (147-1).

எளியோருக்கு கொடை வழங்குவதில் அவர் வள்ளல்தான். ஆனாலும் அதை எவ்வளவு தன்னடக்கமாக சொல்கிறார்..."ஒரு பிரச்சனை இருப்பதாக என்னிடம் கூறப்பட்டால் என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன்" (172-2).

முகமது அலி அமெரிக்க கம்யூனிஸ்ட்களுடன் நட்பு பாராட்டி வந்துள்ளார். ஆனாலும், வர்க்க அடிப்படையில் மக்களைத் திரட்டுவதில் கம்யூனிஸ்ட்களோடு இணைந்து செயலாற்றுவதில் அவரின் ரோல் என்ன? என்பது வெற்றிடமாகத்தான் இருக்கிறது. இக்காலத்தில் கம்யூனிஸ்ட்களின் பணிகளைத் தனி அத்தியாயமாக தரப்பட்டிருப்பது சிறப்பு என்றாலும் அது நூலோடு ஒட்டவில்லை!

இங்கே மதம் மாறுவதால் சமூகம் சமநிலை அடையும் என்று அண்ணல் அம்பேத்கர் நினைத்தைப்போல, அங்கே அலியும் நினைத்துவிட்டார் போலும்!

எது எப்படியோ... கறுப்பின மக்களின் விடிவெள்ளியான முகமது அலி... உலக வரலாற்று பக்கங்களில் அழிக்கமுடியாத முத்திரைப் பதித்துள்ளார் என்பதை இந்த நூல் நன்கு படம் பிடித்து காட்டி உள்ளது எனலாம்.

நூலைப்பற்றியும், நூலாசிரியரைப் பற்றியும் அணிந்துரை எழுதிய புலவர் பா.வீரமணி வார்த்தைகளோடு நிறைவு செய்கிறேன்... "இப்படி எல்லோராலும் எழுதிவிட முடியாது. அரசியல் வித்தகம் வாய்ந்தவர்களால்தான் இப்படி எழுத முடியும். அந்த வித்தகம் வாய்ந்தவர்தான் தோழர் பாக்கியம். அந்த வித்தகத்தை நூலில் காணலாம். மொத்தத்தில் இந்த நூல் கருத்து களஞ்சியம்".

நூல் வடிவமைப்பு வாசிப்பைத் தடையின்றி கொண்டு செல்கிறது. அட்டைபடம் முதல் அச்சாக்கம் வரை அனைத்தும் அருமை! வெளியீட்டகத்திற்கு ஆயிரம் நன்றிகள்!

தான் வாழும் சமூகம் சமத்துவமடைய வேண்டுமென களமாடுவோர்கள் மட்டுமல்ல, சமூக சீர்திருத்தவாதிகள் உள்ளிட்டு அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்தான் "நானே மகத்தானவன்!"

தாரைப்பிதா... 16.09.2025.

'பஞ்ச்'சால் பதில் சொல்லியவன்

 

கடந்த வாரம் தோழர் Bakkiam  அவர்களை நாமக்கல் கட்சி அலுவலகத்தில் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது.

தோழர் பழகுவதற்கு இனிமையானவர் வேறு என்ன கம்யூனிஸ்ட்களின் பண்புகளை குறித்து சொல்லவா வேண்டும்.

உரையாடலூடனான தோழரின் வார்த்தைகள் இளைஞர்களை அரசியல் படுத்த வேண்டும், வாசிக்க வைக்க வேண்டும் என்ற கனவுகளை தாங்கியே இருந்தன.

முகமது அலியின் வாழ்க்கையை சமூக நடவடிக்கைகளை குறித்தான புத்தகம் மேலும் தோழர் பாக்கியம் அவர்கள் முகமது அலியின் வாழ்க்கை வரலாற்றை எழுதாமல் உலக வரலாற்றில் இருந்து முகமது அலியின் வாழ்க்கையை எழுதிவுள்ளார்.

ஒரு இடதுசாரி தன்னுடைய படைப்புக்கு எப்படி இதுபோன்ற தலைப்பை தேர்வு செய்தார் என்று கூட சிலர் கேட்ககூடும்.

தலைப்பு தோழரின் சிந்தனையில் உதித்தது அல்ல

ஆயிரம் ஆண்டுகளாக நிறத்தை வைத்து சுரண்டப்பட்ட மக்களின்

எல்லாவற்றிலும் புறக்கணிப்பை மட்டுமே பார்த்த சமூகத்தின்

கேவலமானவன் அசிங்கமானவர்கள் பலவீனமானவர்கள் என்பவர் களின் பிரதிநிதியாக

வெள்ளை நிறவெறியர்களுக்கு பாக்ஸிங் ரிங்யில் தனது 'பஞ்ச்'சால் பதில் சொல்லி கர்ஜித்த அலியின் வார்த்தைகளே #நானே_மகத்தானவன்

முகமது அலி அமெரிக்க போர் கைதிகளை மீட்டு வருவது போன்ற அதீத செயல்பாடாக உடையவராக

தன்னை எளிதில் வெல்ல முடியாது என்ற அதீத தன்னம்பிக்கை என அனைத்தும் தானாக உருவானது அல்ல ஒடுக்கப்பட்ட  கறுப்பின மக்களின் ஓராயிரம் ஆண்டு கோபம் தான் அலியின் செயல்பாடு

தன்னுடைய வாழ்க்கை புகழ் எதை இழந்தாலும் கருப்பின மக்களின் விடுதலையில் சமரசம் செய்துகொள்ளாத விளையாட்டு வீரன்

வெள்ளை நிறவெறி எதிர்பாளராக மட்டுமே அறிமுகமான முகமது அலியை அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியாக கட்டமைப்பது தான் புத்தகத்தின் ரகசியம்.

கேசியஸ் கிளே முகமது அலியாக பரிணாமம் அடைந்தது. முகமது அலியின் சோவியத், சீனா, இந்தியா, சோசலிச கியூபா பயணம் ஆகியவை ஆசிரியரின் தேடலை வாசகர்களுக்கு கடத்துக்கிறது.

நிற வெறிக்கு எதிராக அமெரிக்க கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகளை குறிப்பாக வெள்ளை நிறைவெறிக்கு எதிராக கறுப்பின மக்களை மட்டும் ஒருங்கிணைக்காமல் வெள்ளைநிற மக்களையும் களத்தில் போராட வைத்தது தான் கம்யூனிஸ்ட்களின் வரலாறு என்ற பதிவு.இந்தியாவில் சாதிய சுரண்டல்களுக்கு எதிராக அனைத்து சாதியினரையும் ஒருங்கிணைத்து போராடுகின்ற இந்திய  கம்யூனிஸ்ட்கள் செயல்பாடுகளை புரிந்துகொள்ள முடியும்.

புத்தகத்தில் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு களம் அமைத்தது கம்யூனிஸ்ட்கள் என்று படித்த பொழுது  இந்தியாவில் இயங்ககூடிய தலித் மற்றும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராட கூடிய இயக்கங்ளுக்கு களத்தை தயார் செய்தது கம்யூனிஸ்ட்கள் தான் " என்பதை பொருத்திப் பார்க்க முடிந்தது

இறுதியாக, தோழன் #மரடோனா மூலம்

" Football " பிடித்த விளையாட்டாக மாறியது அந்த பட்டியலில் குத்து சண்டையும் இணைந்தது தோழன் #முகமது_அலியால் ....

அரிய-அறிய வேண்டிய வரலாற்று பதிவுகள் இவை.


"நானே  மகத்தானவன்" 🥊


தோழர் அ. பாக்கியத்திற்கு நன்றிகள் வாழ்த்துக்கள் .

மெனக்கெடல் என்று சொல்லுவார்கள் - நிறைய விஷயங்களை தேடி தேடி மெனக்கிட்டு நல்ல முயற்சியை மேற்கொண்டு இந்த புதையலை  எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றிகள்.

ஆரம்பமே அமர்க்களம் .

நானே மகத்தானவன்-  மட்டுமல்ல தனித்துவமான பன்முகம் கொண்ட உயர்ந்த களப்போராளி குத்துச்சண்டையின் நிகரற்ற மாவீரன். நிறவெறிக்கு எதிராக ஆங்காரமாக குரல் எழுப்பியவன் முகமது அலி.

அமெரிக்காவின் முதல் குடிமக்களான செவ்விந்தியர்களை அழித்து ஒழித்திடவும். தங்களை வளப்படுத்திக் கொள்ளவும் கருப்பின மக்களை அடிமைகளாக்கி மிருகங்களிலும் கீழாக நடத்திய அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய வீரன் அவன்.

வீர வியட்நாம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து- எந்த விளைவுகள் ஏற்பட்ட போதிலும்,  குத்துச்சண்டை விளையாட்டிற்கு தடை போட்ட போதிலும் போர்வெறிக்கு அடிபணிய மாட்டேன் என்று சமர்ப்புரிந்த மாவீரன் அவன்.

பல நேரங்களில்  உயிருக்கு ஆபத்தான பயணங்களிலும் அரசியல் பினைக்கைதிகளை  மீட்டெடுப்பது எளிய மக்களுக்கு மருத்துவ உதவி நிதி அளிப்பது என பல நல்ல காரியங்களை செய்த கருணை நிறைந்தவன்.

கியூபா மக்களுக்கு எதிராக பொருளாதார தடை விதித்த போதும் அமெரிக்காவுக்கு எதிராக கியூபா மக்களுக்கு ஆதரவாக பல்வேறு பொருளாதார உதவிகளை செய்த மகத்தானவன்.

நிறவெறி அமெரிக்காவில் இன்றும் தலை விரித்தாடும் சூழ்நிலையில் பல்வேறு படுபாதக கொடுமைகள் நடந்தன   1955 ஆம் ஆண்டு வாக்கில் எம்மெட்  என்ற 14 வயது கருப்பின சிறுவன் கரோலின் என்ற 21 வயது வெள்ளை நிற பெண்ணுடன் பேசுகிறான் இருவரும் சிரித்து பேசி அரட்டை அடிப்பதை பொறுக்க முடியாத நிறவெறியர்கள் அந்த சிறுவனின் வீட்டுக்குள் புகுந்து   அடித்து சித்திரவதை செய்து துப்பாக்கியில் சுட்டு ஆற்றில் வீசி விட்டார்கள்.

 சிறுவனின் தாய் அந்த கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்து தொடர்ந்து போராடுகிறாள். விசாரணை முடிவில் அந்த கொடூர குற்றவாளி குற்றமற்றவன் என்று நீதிமன்றம் அநீதியாக அறிவிக்கிறது. மக்கள் தொடர்ந்து கொந்தளித்து போராடுகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக 2006 ஆம் ஆண்டில் அவன் உடல் சிதைக்கப்பட்ட இடத்திலும் மற்ற எட்டு இடங்களிலும்  நினைவுச்சின்னம் உருவாக்கினார்கள். வெள்ளை நிற வெறியர்கள் அந்த நினைவுச் சின்னங்களை உடைத்து நொறுக்கினார்கள். அதற்கு எதிராக கருப்பின மக்கள் மீண்டும் நினைவுச் சின்னத்தை எழுப்பினார்கள் அவர்கள் மீண்டும் உடைத்தார்கள் மீண்டும் மீண்டும் நினைவுச் சின்னங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தார்கள்.

 இறுதியில் 230 கிலோ எடை இரும்பை கொண்டு நினைவு சின்னத்தை பலமாக உருவாக்கினார்கள். இது ஒரு நினைவுச் சின்னத்தின் அடையாளம் மட்டுமல்ல நிறவெறியர்களுக்கு எதிராக  கருப்பின மக்களின் ஒற்றுமையை பலப்படுத்தினார்கள் இந்த நிகழ்வு நமக்கு பல நினைவுகளையும் கதைகளையும் உணர்த்தும் அடையாள சின்னமாகும்.

குத்துச்சண்டையில் பல சாம்பியன்களையும் மண்டியிட வைத்தவன். போர்வெறிக்கு காரணமான அமெரிக்க  ஏகாதிபத்திய வெறியையும் மண்டியிட வைத்தவன்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் கம்யூனிஸ்ட் இடதுசாரிகள் ஜனநாயக சக்திகளுக்கு எதிராக எந்த அபாயகரமான காரியங்களையும் சூழ்ச்சிகளையும் செய்யும் அத்தகைய அமெரிக்க நாட்டில்  கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக - எத்தகைய வன்மங்கள் சூழ்ச்சிகள் தடைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது அதை எதிர்த்து கம்யூனிஸ்ட் ஜனநாயக சக்திகள் தொடர்ந்து வீர நடை போடுகிறது. இந்த வரலாற்றை சுருக்கமாக ஆனால் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

"நானே மகத்தானவன்" என்ற  நூல் மூலம் ஒவ்வொரு மனிதனும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் மூலமாக  நாமும் மகத்தானவர்களாக மாற முடியும் என்கிற மனநிலையை ஏற்படுத்துகிறது.

எழுத்தாளரின் எழுத்துக்கள் முகமது அலியுடன் நாமும் சேர்ந்து பயணித்த உணர்வை அளிக்கிறது. உங்களின் எழுத்துக்களின் பயணம் மீண்டும் மீண்டும் பயணப்பட வேண்டும்.

உங்கள் எழுத்துக்களையும் தாண்டி சிறந்த மனிதாபிமானமிக்க கம்யூனிஸ்ட் கட்சி ஊழியன் என்பதை நானும் நிறைய நண்பர்களும் தோழர்களும் அறிவார்கள்.

 அனைவரும்  வாங்கி படித்து அறிய வேண்டிய பொக்கிஷத்தின் அனுபவத்தை நீங்களும் அனுபவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

13.09.2025

சமத்துவ சமுதாயம் நோக்கி

  தோமஸ் பிக்கெட்டி எழுதிய சமத்துவ சமுதாயம் நோக்கி என்ற புத்தக அறிமுக கூட்டத்தில் , புத்தகத்தின் மொழிபெயர்ப் பாளர் அக்களூர்இரவி அவர்களை கௌரவ...