Pages

வெள்ளி, ஜனவரி 23, 2026

சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும்



நூல் மதிப்புரை

வறுமையின் நிறமல்ல வளர்ச்சியின் நிறமே சிவப்பு

அன்பான தோழர். அ.பாக்கியம்  அவர்களுக்கு வணக்கம்..

 19.01.26 வெளிவந்த தங்களது-14 வது புத்தகம் சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும் என்ற புத்தகம் படிக்க துவங்கினேன்.. சோர்வின்றி தூக்கம் இன்றி நிறுத்த முடியாமல் -188 பக்கங்கள் முடிந்தது..

புதிய விவரங்கள்..

இது வரை அறியாத தகவல்கள் ஆதாரங்கள் உடன் எளிய தமிழில் பிழைகள் இன்றி மடை திறந்த வெள்ளம் போல் வேகமாக போகிறது..

தூவல் பெருமாள், தவத்திரு. பாலபிரஜாபதி அடிகளார், பத்திரிக்கை யாளர் விஜயசங்கர், சிபிஎம் மாநில செயலாளர் தோழர். பெ. சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் ஆகியோர் அணிந்துரை யும் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது..

சின் வம்சம் ஆட்சியின் நினைவாக சீனா என்ற பெயர் உருவானது..

வறுமை நிறம் சிவப்பு அல்ல அதை மாற்றும் நிறமே சிவப்பு.

வளர்ச்சியின் நிறமே சிவப்பு என்று கூறும்  வகையில் இன்று சீனா முற்றிலும் வறுமை ஒழித்து உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அறிவியல் வளர்ச்சி பெற்று கம்பீரமாக நடந்து வருகிறது...

சீனா சர்வாதிகார நாடு, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சி.. மதம் நம்பிக்கை வழிபாடுகள் மறுக்கும் நாடு என்ற நீண்டகால பேச்சு களுக்கு இந்த புத்தகம் முற்று புள்ளி வைக்கிறது..

சீன மக்கள் அவர்களது மூதாதையர்கள் மற்றும் இயற்கை யை வழி பட்டு வந்தனர்.

மனிதன் பட்டினியாய் இருந்தால் சோறு போடு..

குளிரால் அவதி பட்டால் போர்வை கொடு..

நோயால் பாதிக்கப்பட்டால் மருத்துவம் செய் என்பதே சீனாவின் அடிப்படை..

சீனாவில் மத நம்பிக்கைகள் இருக்கின்றன..

பெளத்தம்

தாவோயிசம்

இஸ்லாம்

கத்தோலிக்

புராட்டஸ்டன்ட்

ஆகிய மதங்கள் அரசு அங்கீகரித்துள்ளது..

மத விசுவாசிகள்

1997 ல் 10கோடி

2018 ல் 20 கோடி..

 

மத கல்வி நிறுவனங்கள்.. 91

பெளத்தம்-41

புராட்டஸ்டன்ட்-21

தாவோயிசம்-10

இஸ்லாம்-10

கத்தோலிக்-9

என செயல் பட்டு வருகிறது..

 

17 லட்சம் இஸ்லாமிய உரைகள்.

160 மில்லியன் பைபிள்.

ஓவ்வொரு ஆண்டும்-10,000 இஸ்லாமியர்கள் மக்காவிற்கு சென்று வருகிறார்கள்..

 

1,44,000 வழி பாட்டு தளங்கள்..

மசூதிகள்-35, 000

பெளத்தம்-33, 500

தாவோயிசம்-9, 000

புரோட்டஸ்டென்ட்-60, 000

கத்தோலிக்-6000

உள்ளது..

 

மத குருமார்கள்

பெளத்தம்-2, 22,000

இஸ்லாம்-57, 000

புராட்டெஸ்டன்ட்-57, 000

தாவோயிசம்-40, 000

கத்தோலிக்-8, 000

என மொத்தம் -3, 80,000 மத குருமார்கள் உள்ளனர்..

 

மத நம்பிக்கை அற்றவர்கள்-52 %

பெளத்தம்-18 %

தாவோயிசம்-3%

புராட்டெஸ்டன்ட்-3.8 கோடி..

இஸ்லாம்-2.5 கோடி

கத்தோலிக்-60 லட்சம்

இந்து மதம் உள்ளிட்ட இதர மத நம்பிக்கை உடையவர்களும் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்..

 

இந்த நிலையில்..

மதம் குறித்து கம்யூனிஸ்ட் மமேதைகள் சொன்ன கருத்துக்கள் வலிமையாக எளிமையாக பதிவு செய்து.. அதன் வழியில் சீனா கம்யூனிஸ்ட் அரசு தற்போது எப்படிசெயல்பட்டு வருகிறது என்று சொன்னது சிறப்பு...

மதம் ஒரு அபின் என்று மார்க்ஸ் சொன்னதை மதவாதிகள் மிகை படுத்தி பிரச்சாரம் செய்தற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் தரப்பட்டுள்ளது...

மத நம்பிக்கை உடைய மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சீன மக்கள் அரசு... சோசலிச அமைப்பு நிறுவபட்டாலும் நமது பொருளாதாரம் , கலாச்சாரத்திலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டாலும் மதம் விரைவில் வாடி விடும் என்று நினைப்பது யதார்த்தத்திற்கு மாறானது என்று முடிவு செய்து கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது..

மத வழிபாட்டு தளங்களை அரசே கட்டி தருகிறது...

மத குருமார்களுக்கு மாத சம்பளம், மருத்துவ காப்பீடுகள் வழங்கி வருகிறது...

நம்பிக்கை உடைய மக்கள் எந்த தடை இன்றி வாழ்ந்து வருகின்றனர்...

ஆனால் கட்சி உறுப்பினர்கள் மத கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை..

மத வழிபாட்டு தளங்களுக்கு கண்காணிக்கும் பொறுப்பு கட்சி உறுப்பினர்களுக்கு வழங்க பட்டு உள்ளது...

இப்படி மதங்களையும் வழிபாட்டு தளங்களையும் மத கடவுள் நம்பிக்கை உள்ள மக்களையும் சீன கம்யூனிஸ்ட் அரசு பாதுகாத்து வருகிறது..

 எங்கள் கடவுள் சீன தேசத்தின் உழைப்பாளிகளும் , வெகுஜனங்களே தவிர வேறு யாரும் இல்லை என்று மாவோவின் வார்த்தைகளும் உருவம் கொடுத்து உள்ளது சீன சோசலிசம்.. சீன கம்யூனிஸ்ட் அரசுமே..

 

இந்த புத்தகத்தை கட்சி உறுப்பினர்கள் அனைவரும் படிப்பதும்... இன்றைய சூழலில் சீன கம்யூனிஸ்ட் அரசு செயல்படும் நிலை குறித்து கட்சி உறுப்பினர்களுக்கும் மத கடவுள் நம்பிக்கை உள்ள மக்களுக்கும் நாம் சொல்ல வேண்டிய தேவை உள்ளது..

ஏ.ஜி.கண்ணன்

மாவட்ட செயற்குழு உப்பினர்

திருவள்ளுர் மாவட்டம்

புதன், ஜனவரி 21, 2026

56 தேசிய இனங்கள்: இன வர்த்தகத்தின் சாதனைகள்

 

அ.பாக்கியம்

சீன மக்கள் குடியரசின் ஆரம்ப கட்டம் என்பது 1949 நிறுவப்பட்டதிலிருந்து 1958 வரையாகும். இக்காலங்களில் இன சிறுபான்மையினர் தொடர்பாக எடுக்கப்பட்ட கொள்கைகளும், இன வர்த்தகம் தொடர்பாக அமலாக்கப்பட்ட நடைமுறைகளும் சீனாவில் இன சிறுபான்மையினரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. துவக்க காலத்திலேயே போடப்பட்ட இந்த அடித்தளம் சீனாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது.

துவக்க காலத்தில் சிறுபான்மையினர் வாழ்ந்த எல்லைப்புற இனப் பகுதிகளில் ஒப்பீட்டு அளவில் மெதுவான பொருளாதார வளர்ச்சி தான் இருந்தது. வரலாற்று நிலமைகள் காரணமாக மிகவும் சிக்கலான சமூக சூழ்நிலைகளைக் கொண்டிருந்தன. இனக் குழுக்களுக்கு இடையிலான உறவுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறவில்லை. இக்காலத்தில் இனச் சிறுபான்மையினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும், சீன மக்கள் குடியரசின் கொள்கைகளையும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.

இத்தகைய கஷ்டங்களும் ஆபத்துகளும் நிறைந்த சூழலில்தான், இன வர்த்தகத்தின் முன்னோடிகளும் மக்கள் விடுதலை ராணுவமும் இப்பகுதிகளுக்கு ஆழமாக ஊடுருவிச் சென்றனர். இப்பகுதியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இனக் கொள்கைகளை பிரச்சாரம் செய்தது மட்டுமல்ல, அம்மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதற்காக பல்வேறு உதவிகளை செய்தார்கள். இப்பகுதிகளில் பல்வேறு சாதகமான நிலைமைகளை உருவாக்கினார்கள். இந்த நடவடிக்கை இன ஒற்றுமையை மேம்படுத்துவதிலும் சமூக ஒழுங்கை நிலை நிறுத்துவதிலும் தேசிய கட்டுமானத்தை ஆதரிப்பதிலும் மிக முக்கிய பங்கு வகித்தது என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

வளர்ந்த வணிக நிறுவனங்கள்

இன வர்த்தகத்திற்காக எடுத்த முயற்சிகளின் விளைவாக இனச் சிறுபான்மை பகுதிகளில் அரசு நடத்தும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கையானது 1951 ஆம் ஆண்டு 841-ல் இருந்து 1955-ல் 3609 என உயர்ந்தது. அதாவது நான்கு ஆண்டுகளில் 3.3 மடங்கு அதிகரித்தது. வாய்ப்புள்ள இடங்களில் விநியோகத்திற்காகவும், சந்தை நடவடிக்கைகளுக்காகவும் கூட்டுறவு அமைப்புகள் நிறுவப்பட்டன. 1953 ஆம் ஆண்டு 43 மாவட்டங்களில் இன வர்த்தக பகுதிகளை அடையாளம் கண்டு கூட்டுறவு அமைப்புகள் உருவாக்ககினார்கள். குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியில் வர்த்தக நிறுவன அமைப்பு உருவாக்கப்பட்டது மட்டுமல்ல அதன் கீழ் மாவட்ட, வட்டார அளவிலான வர்த்தக இனக்குழு அலுவலகங்கள் அமைக்கப்பட்டது. இனப் பகுதிகளில் வணிக நிறுவனங்களும், வணிக நடவடிக்கைகளும் கணிசமான அளவிற்கு முற்போக்கான முறையில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

1956ஆம் ஆண்டில் இப்பகுதியில் 2,800க்கும் மேற்பட்ட இன வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டன. இன சிறுபான்மை பகுதிகளில் படிப்படியாக பொருளாதார மையங்கள் வடிவம் பெற்று வளர்ந்தது. அரசு நடத்தும் வர்த்தக நிறுவனங்கள் ஏராளமான நடமாடும் வர்த்தக குழுக்களை உருவாக்கினார்கள். கிராமங்களுக்கு பயணித்து விற்பனை செய்யக் கூடியவர்களையும் அதிகமாக்கினார்கள். இந்தப் பயண விற்பனையாளர்களும் நடமாடும் வர்த்தக குழுக்களும் பறந்த மேய்ச்சல் நிலங்களுக்கும், உயரமான மலைப்பகுதிகளுக்கும் சென்று விற்பனை செய்தார்கள், அது மட்டுமல்ல அந்தந்த பகுதிகளில் ஒரு பொருளாதார மையங்களை உருவாக்கினார்கள். இதன் மூலம் இன சிறுபான்மை மக்களின் பொருட்களை கொள்முதல் செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் எளிமையான நிலைமைகள் உருவானது.

எடுத்துக்காட்டாக ஜின் ஜியாங் மாகாணத்தில் குறிப்பாக மேய்ச்சல் நிலப்பகுதியில் அரசு நடத்தி வந்த வர்த்தகத்தின் மூலமாகவும் கூட்டுறவு அமைப்புகள் மூலமாகவும் ஆறு ஆண்டுகளில் 1300க்கும் மேற்பட்ட நடமாடும் வர்த்தக குழுக்களை உருவாக்கி அப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகப்படுத்தினார்கள். சியான்சி மியாவா என்ற தொலைவில் இருக்கக்கூடிய மாவட்டத்தில் 1955 ஆம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களில் மட்டும் 840 பயண விற்பனையாளர்களை உருவாக்கி உட்பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு பொருட்களை கொண்டு சேர்த்தார்கள். உள் மங்கோலியாவின் ஜீலின் கோல் லீக் என்ற பகுதி சுமார் 7000 மக்கள் தொகை கொண்டது. இது ஒரு புல் வெளிப்பிரதேசம். இந்தப்பகுதியை பொருளாதார மையங்களாக மாற்றினார்கள். மேலும் புதிதாக கட்டப்பட்ட சாலைகள் மூலமாக புதிய நகரங்களும், அதன் மூலமாக சந்தைகளும் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருந்தன. இந்த மாற்றம் இன சிறுபான்மை பகுதிகளில் பொருளாதாரக் கண்ணோட்டத்தை பெரும் மாற்றத்திற்கு உள்ளாக்கியது.

 

அரசு வர்த்தகத்தை வளர்த்து வந்த அதே வேளையில் தனியார் வர்த்தக நிறுவனங்கள் செயல்படுவதற்கான முழுமையான வாய்ப்புகளும் வழங்கப்பட்டது. சீனா கம்யூனிஸ்ட் கட்சி கூட்டுறவு கொள்கைகளை பின்பற்றுவதை தொடர்ந்து படிப்படியாக சோசலிச மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டிய பணிகளையும் துவக்கி வைத்தது. இன சிறுபான்மை பகுதியில் தனியார் வணிகங்களின் சோசலிச மாற்றம் 1956 ஆம் ஆண்டு தொடங்கி 1958 ல் நிறைவடைந்தது. திபெத்தில் மட்டும் இது 1962 வரை நீடித்தது.

உதாரணமாக குவாங்சி மாகாணத்தில் உள்ள 44 இன மாவட்டங்களில் 12,006 தனியார் வணிக நிறுவனங்கள் செயல்பட்டன. இவற்றில் 16,704 ஊழியர்கள் பணிபுரிந்தனர். 1956ஆம் ஆண்டு இறுதியில் 9,882 தனியார் நிறுவனங்கள் சோசலிச மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டன. இது மொத்தத்தில் 82 சதவீதம் ஆகும். இவை அனைத்தையும் அரசு பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக நேரடியாக வர்த்தகத்தை நடத்துவது என்ற முறையில் அமலாக்கப்பட்டது. மீதமுள்ள 2124 தனியார் வணிக நிறுவனங்களும் அவற்றில் பணிபுரிந்த 20,084 ஊழியர்களையும் தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் நடத்துவதற்கு அனுமதித்தனர்.

ஊழியர்கள் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இன வர்த்தகத்தின் வளர்ச்சியின் காரணமாக ஊழியர்களின் எண்ணிக்கையையும், அதிகாரிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக இன சிறுபான்மை மக்கள் மத்தியிலிருந்து இன வணிகத்திலும், ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாடுகளுக்குமான ஊழியர்கள் உருவானார்கள். இதன் மூலம் தனித்திருந்த இனச் சிறுபான்மை குழுக்கள் ஒட்டுமொத்த சீன பொருளாதார அரசியல் வளர்ச்சியுடன் இணைந்தனர். 1951 ஆம் ஆண்டு 10,000 ஆக இருந்த அதிகாரிகள் எண்ணிக்கை 1955 ஆம் ஆண்டு 60,563 என்ற அளவுக்கு அதிகரித்தது.

இவர்களில் இன சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்த அதிகாரிகளின் எண்ணிக்யை மட்டுமே சுமார் 1700 லிருந்து 12,098 ஆக உயர்ந்தது. இது ஒட்டுமொத்த வர்த்தக அதிகாரிகளில் 20% ஆகும். குவாங்சி மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள 31 இன மாவட்டங்களிலும், நகரங்களிலும் 8500 க்கு மேற்பட்ட இன வர்த்தக அதிகாரிகள் இருந்தனர். இது மொத்த அதிகாரிகளில் சுமார் 50.5% ஆகும்.

 

தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது. இனச் சிறுபான்மை அதிகாரிகளின் அரசியல், தொழில் முறைகள் கலாச்சார நிலைகள் ஆகிய அனைத்தும் மேம்படுத்தப்பட்டது. பல இனச் சிறுபான்மை அதிகாரிகள் மேலாளர்களாக, முக்கிய பிரிவின் தலைவர்களாக, பல்வேறு துணை நிறுவனங்களின் தலைவர்களாக பயிற்சிகளை பெற்று பொறுப்புக்களுக்கு வந்தனர். இதன் தொடர்ச்சியாக பலரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதன் இளைஞர் அமைப்புகளிலும் இணைந்தனர். இவ்வாறு சிறுபான்மை இன அதிகாரிகள் ஊழியர்கள் இனப் பகுதிகளில் வணிகப் பணிகளை மேற்கொள்வதற்கும் அனைத்து இனக்குழு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்ததுடன் இனக்குழு மக்களிடையேயான உறவுகளையும் ஒற்றுமைகளையும் பலப்படுத்தினார்கள் அது மட்டுமல்ல சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை அந்த மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பெரும் பங்காற்றினார்கள்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்த இதர ஹான் இன அதிகாரிகளும் சில கம்யூனிஸ்ட் கட்சியை சிறுபான்மை மக்களிடம் எடுத்துச் செல்வதில் பெரும்பங்காற்றினார்கள். உள்ளூர் இன குழுக்களுடன் நட்புறவை ஏற்படுத்துவதற்கும் இனக்குழுக்கள் இடையே ஒற்றுமையை உருவாக்குவதற்கும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தலைவர்கள் என்ற முறையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களும் பெரும் பங்காற்றினார்கள். இவை அனைத்தும் சேர்ந்து இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சி பலமடைவதற்கான அடித்தளத்தில் உருவாக்கியது.

பூர்வீக பொருட்களும் புதிய பொருட்களும்

இனச் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதியில் அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய பாரம்பரியமான பொருட்களையும் விவசாய பொருட்களையும் அரசு இன வணிக குழு மூலமாக கொள்முதல் செய்து வந்தது. அதே நேரத்தில் அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்து வந்தார்கள். இன சிறுபான்மையினரின் உற்பத்தி பொருட்களின் வகைகள் ஒரு சில மட்டுமே இருந்ததால் போதுமான அளவு அவர்களின் வர்த்தகம் மேம்பட வில்லை. எனவே அவர்களின் உற்பத்திப் பொருட்களின் வகைகளை அதிகப்படுத்திட விநியோகம், ஏற்றுமதிகளை உறுதி செய்வது, தொழில்துறை கட்டுமானத்தை அந்த பகுதியில் அமைப்பது, ஆகியவற்றின் மூலம் புதிய பொருட்களின் உற்பத்திக்கு வழி வகுத்தார்கள். 1955 ஆம் ஆண்டு இனச் சிறுபான்மையினர் பகுதிகளில் உற்பத்தியான பொருட்களை கொள்முதல் செய்த பொழுது 1130.70 மில்லியன் யுவான்கள் மதிப்புள்ள பொருட்களை கொள்முதல் செய்தார்கள்.

அதேபோன்று 1704.39 மில்லியன் யுவான்கள் மதிப்புள்ள பொருட்களை அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்தார்கள். இந்த இரண்டையும் 1951 ஆம் ஆண்டு கொள்முதல் மற்றும் விநியோகத்துடன் மதிப்பிட்டால் ஏழு மடங்கு அதிகமாகும் என்பதை அறிய முடியும். இந்த நடவடிக்கை இன சிறுபான்மையினரின் வாழ்க்கையில் மேம்பாடு அடைந்ததை வெளிக்காட்டுகிறது. மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்பது உற்பத்தி செய்யும் பொருட்களின் வகைகளை அதிகப்படுத்த எடுத்த முயற்சியாகும். குய்சோ மாகாணத்தில் 1951 ஆம் ஆண்டு மூன்று வகையான பாரம்பரிய பொருட்களையே உற்பத்தி செய்தார்கள். ஆனால் 1955ஆம் ஆண்டு 115 வகையான பாரம்பரியமான பொருட்களை உற்பத்தி செய்து வணிகத்தை பல மடங்கு அதிகப்படுத் தினார்கள்.

சீன மக்கள் குடியரசு இனச் சிறுபான்மை மக்கள் உற்பத்தி செய்கின்ற பாரம்பரிய பொருட்களை வாங்குவதற்காக கூடுதல் முதலீடுகளை செய்தது. 1952 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 3.1 பில்லியன் யுவான்களுக்கு மேல் முதலீடு செய்தனர். இந்த முதலீட்டின் மூலமாக அதிகமான பொருட்களை வாங்கியதால் இனச் சிறுபான்மை மக்களின் குடும்ப வருமானம் ஏற்கனவே இருந்ததைவிட பல மடங்கு உயர்ந்தது. மற்றொரு உதாரணம், யுன்னான் மாகாணத்தில் 1953 ஆம் ஆண்டு சிறுபான்மை மக்கள் உற்பத்தி செய்த பொருட்களின் வகைகள் 1000 என்ற அளவில் இருந்தது. இதுவே 1955 ஆம் ஆண்டு 5000 வகையான பொருட்களை உற்பத்தி செய்யக் கூடியதாக மாறியது.

இன சிறுபான்மையினர் வாழக்கூடிய பகுதிகளில் அவர்களின் வாழ்க்கை தேவைகளுக்கு பற்றாக்குறையாக உள்ள பொருட்களை விற்பனை செய்வதற்கு சிறப்பு விற்பனை பிரிவுகள் துவக்கப்பட்டன. தேயிலை, பட்டு போன்ற பொருட்களை அதிகமாக இப்பகுதிகளுக்கு வழங்கினார்கள். பருத்தித் துணி இன சிறுபான்மை மக்களுக்கு அதிகமாக தேவைப்பட்டது. கணிசமான அளவிற்கு துணிகளை வழங்கியது மட்டுமல்ல அவர்கள் சுயமாக துணிகளை நெய்து கொள்வதற்கான நூல்களையும் வழங்கினார்கள். இது அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் துணிகளை தயாரித்துக் கொள்ள பயன்பட்டது. உப்பு, சர்க்கரை, புகையிலை, கருவாடு, ஆல்கஹால் போன்ற பொருட்களுக்கு சிறுபான்மையர் பகுதியினருக்கு முன்னுரிமை கொடுத்து அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவைகளில் ஜரிகைகள், பட்டு நூல்கள், வெள்ளி நகைகள், இசைக்கருவிகள், துப்பாக்கி பொடி, வேட்டை உபகரணங்கள் போன்ற பொருட்களின் மதிப்பு அதிகமாக இருந்தாலும், இனச் சிறுபான்மையர் வாழக்கூடிய பகுதிகளில் இருந்து வெகு தொலைவில் உற்பத்தி செய்யப்பட்டாலும் அவற்றை அரசின் உதவியோடு இன வணிக குழு கொள்முதல் செய்து இனச் சிறுபான்மையின் பகுதியில் விநியோகம் செய்தார்கள். விநியோகத்தை ஒழுங்கமைப்பதற்காக மக்கள் கமிட்டிகள் அமைக்கப்பட்டது. இது போன்ற முயற்சிகள் எல்லைப்புற மாகாணத்தில் இருந்த இனச் சிறுபான்மையினரின் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்தியது மட்டுமல்ல அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளையும் அதிகப்படுத்தியது. இக்காலத்தில் 1956 ஆம் ஆண்டில் இறுதியில் குவாங்சி மாகாணத்தில் இனக்குழுக்கள் வசிக்கும் 31 மாவட்டங்கள் மற்றும் நகரங்களின் கொள்முதல் விநியோகத்தின் மதிப்பு 1952 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது 5.5 மடங்கு கொள்முதலும் 3.2 மடங்கு விநியோகமும் அதிகரித்தது. மேலும் குறிப்பிடத்தக்க அம்சம் இந்தப் பகுதிகளில் உற்பத்திகள் அதிகமானதால் வெளிநாட்டுப் பொருட்களின் ஆதிக்கம் குறைந்துவிட்டது. தொடர்ச்சியான முயற்சிகள் தொழில் துறை மற்றும் விவசாய பொருட்கள விலை விகிதத்தை குறைத்தது.

75 கிலோமீட்டர் மலை உயரத்தில், கிபைனோங், சன்யியாங் மற்றும் பான்ஷெங் ஆகிய நகரங்களில் வாழ்ந்த இனச் சிறுபான்மையினருக்கு சந்தை கிடையாது. பல நாட்கள் பயணத்தில் சந்தையை அடைய வேண்டும். இவர்களிடம் பெரும்பான்மையாக இருந்த ஹான் இன வணிகர்கள் கடுமையாக சுரண்டினார்கள். அரைகிலோ மரக் காளான்களை கொடுத்து அரை கிலோ உப்பு வாங்கினார்கள். ஒரு முட்டையை கொடுத்து ஒரு தையல் ஊசியை வாங்கினார்கள். ஒரு கொளுத்த பன்றியை கொடுத்து பழைய போர்வையை வாங்க முடிந்தது. இவையே 1946 ஆம் ஆண்டு நடந்தது. 1952 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நகரங்களில் விற்பனை குழுக்கள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டன. இதனால் இம்மக்கள் அரை கிலோ மரக்காளான்களை கொடுத்து ஹான் இன வணிகர்களிடமிருந்து 15 கிலோ உப்பு பெற முடிந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி இனச் சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு விதமான திட்டங்களை அமல்படுத்தி வந்தாலும் பொருளாதாரத் துறையில் இன வணிகம் என்ற ஒரு சிறப்பு திட்டத்தை சக்தியான முறையில் அமுலாக்கி வெற்றி கண்டது.

சீன மக்கள் குடியரசின் ஆரம்ப நாட்களில் இனச் சிறுபான்மை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் மிக முக்கியமானதாக இன வர்த்தகம் இருந்தது. அவற்றுடன் இணைந்து மருத்துவத்தையும் சுகாதார பராமரிப்பையும் மேற்கொண்டார்கள் . இன வர்த்தகப் பணி மூலமாக இன சிறுபான்மை மக்கள் மத்தியில் இதர பணிகளை செய்வதற்கு எளிதான சூழ்நிலைகளை உருவாக்கியது. மேலும் இன சிறுபான்மையினரிடையே சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசாங்கத்தின் அங்கீகாரத்தை ஊக்குவிப்பதிலும், மத்திய அரசுக்கும் இன சிறுபான்மைப் பகுதிகளுக்கும் இடையே நெருக்கமான உறவுகளை வளர்ப்பதிலும், இன ஒற்றுமையை பலப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தது. உண்மையான வேலைகளில் சில குறைபாடுகள் இருந்தபோதிலும், சீன மக்கள் குடியரசின் ஆரம்ப நாட்களில் இன வர்த்தகப் பணியின் செயல்திறன் மற்றும் முக்கியத்துவம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.

சீன மக்கள் குடியரசின் ஆரம்ப நாட்களில் இன வர்த்தகப் பணியின் நடைமுறை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் இன சமத்துவம் மற்றும் இன ஒற்றுமை பற்றிய கருத்துக்களை உள்ளடக்கியதோடு மட்டுமல்லாமல், நவீன ஒருங்கிணைந்த பல இன சமுகத்தை கட்டியெழுப்புவதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசாங்கத்தின் மகத்தான முயற்சிகளையும் நிரூபிக்கிறது.

இன வர்த்தகப் பணியின் தாக்கம் இன சிறுபான்மை பகுதிகளின் வளர்ச்சியை ஏற்படுத்தியதுடன் நாட்டின் நவீன மயமாக்களுக்கு அவை துணை புரிந்தன இவை இரண்டுக்கும் இடையிலான இயங்கியல் உறவை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். சீன தேசத்தின் பன்மைத்துவ இனங்களின் ஒற்றுமை, மக்களை மையமாகக் கொண்ட ஆட்சி தத்துவம், சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்கள் குடியரசு ஆகியவற்றின் வளர்ச்சி தத்துவம், வாழ்வாதாரம் சார்ந்த வளர்ச்சி தத்துவம் ஆகிய மூன்று அம்சங்களை இந்த இன வர்த்தகப் பணிகளில் செலுத்திய கவனங்களின் மூலம் புரிந்து கொள்ள முடியும் இந்த மூன்றும் பிரிக்க முடியாத உறவுகள் என்பதின் புற நிலை எதார்த்தம் என சீன கம்யூனிஸ்ட் கட்சி வரையறுத்தது.

 

சுருக்கமாகச் சொன்னால் சீனாவின் மக்கள் குடியரசு நிறுவப்பட்ட காலத்திலிருந்து 1958 ஆம் ஆண்டு வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இனக் கொள்கைகளை உருவாக்குவதிலும் அவற்றை அமல்படுத்துவதிலும் அனைத்து இனக்குழுக்களிடையே பரிமாற்றங்களை எளிதாக்குவதிலும் இன வர்த்தகத்தை பிற இன பணிகளுடன் இணைத்து வெற்றிகரமான முறையில் அமலாக்கியது.

அ.பாக்கியம்

வியாழன், ஜனவரி 15, 2026

55 மாற்றம் கண்ட இன வர்த்தக மாநாடுகள்

 

அ.பாக்கியம்

இன வர்த்தக மாநாடு என்பது மாறுபட்ட மாநாடாகும். கடைநிலை மனிதனின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான துல்லியமான முறையில் திட்டமிடக்கூடியவை இம்மாநாடுகள். இன வர்த்தகத்தில் சீன மக்கள் விடுதலை இராணுவம், சீன கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டுதல் அடிப்படையில் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முடித்திருந்தது. அவ்வாறு ஆரம்பத்தில் அமலாக்கியவற்றில் உள்ள நடைமுறை பிரச்சனைகளை விவாதிப்பதற்காக பிரதேச அளவில் சிறுபான்மை இன மக்கள் கலந்து கொள்ளும் வர்த்தக மாநாடுகளை நடத்தினார்கள். இந்த மாநாடுகளில் பங்கேற்ற இனச் சிறுபான்மை மக்கள் வர்த்தகம் பற்றி விவாதித்தார்கள். இன வர்த்தக நடவடிக்கையில் 1950 ஆம் ஆண்டு முக்கியத்துவம் நிறைந்த ஆண்டாக கருதப்படுகிறது. இன வர்த்தகத்தின் வளர்ச்சியை சிறப்பாக வழிநடத்தும் வகையில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட உடனேயே உள்ளூர் அரசாங்கங்களுக்கான விதிமுறைகளையும் நடவடிக்கை களையும் தெளிவாக வரையறுத்தது.

ஜனவரி 1 1950ஆம் ஆண்டு கிங்காய் மாகாண மக்கள் அரசாங்கம் நிறுவப்பட்ட உடன், முதல் நடவடிக்கையாக அம்மாகாணத்தில் உள்ள அனைத்து இனக்குழுக்களின் வணிகத்திற்காக பெல்லோஷிப் அசோசியேசன் உடனடியாக கூட்டப்பட்டது. இந்த அசோசியேஷன் மூலம் கால்நடை மேய்ப்பர்கள் வாழும் பகுதிகளில் இன வர்த்தகத்தின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. 1950 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி ஜிகாங் மாகாணம் இன வர்த்தக கொள்கைகளை அமலாக்குவதற்கான நடைமுறைகளை விவாதித்தது.

இதற்காக அதே ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு வர்த்தக மாநாட்டை நடத்தினார்கள்.  இனச் சிறுபான்மை பகுதியில் கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அவற்றை சாகடிக்க சில கட்டுப்பாடுகள் இருந்தன. அதாவது கால்நடைகளை கொல்ல (உணவுக்காக ) வேண்டும் என்றால் அதற்கு    வரிக் கட்ட வேண்டும். இந்த விதி இருந்தாலும் தங்களின் பண்டிகைகாலத்தில் கால்நடைகளை சாகடிப்பதற்காக போடப்படும் வரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.குறிப்பாக 3 முக்கிய இஸ்லாமிய பண்டிகளின் போது இஸ்லாமியர்கள் உண்ணக்கூடிய கால்நடைகளுக்கும் செம்மறி ஆடுகளுக்கும் உணவுக்காக கொல்லும் பொழுது அவற்றுக்கு வரி விலக்கை அளித்தார்கள்.

1950 டிசம்பர் 10 அன்று சீன வர்த்தக அமைச்சகம் இனச்சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பெரிய நிர்வாகப் பகுதிகளாக இருக்கக்கூடிய ஆறு பகுதிகளை தேர்வு செய்து பிராந்திய வர்த்தக அமைச்சர்கள் மற்றும் தொழில் முறை நிறுவன மேலாளர்களின் கூட்டுக் கூட்டத்தை நடத்தினார்கள். இந்தக் கூட்டத்தில் எல்லையோர மாகாணங்களில் தொலைதூரத்தில் உள்ள பகுதிகளில் வர்த்தக நிறுவனங்களின் தொகுப்பை உடனடியாக நிறுவ வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். மிகப்பெரிய மாநிலமாக இருந்த குவாங்சி மாகாணத்தில் இனக்குழுக்களின் கொள்முதலுக்கான முன்னுரிமை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிறுபான்மை மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் வர்த்தகத்தை எளிதாக்குவதற்காகவும் இடைத்தரகர்களின் சுரண்டலை ஒழிக்கவும் அரசு நேரடியாக இன வர்த்தக தொடர்பான விற்பனையாளர்களின் நியமித்தது. இதேபோன்று சிறுபான்மை பகுதி மக்கள் தயாரிக்க கூடிய பாரம்பரிய பொருட்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் பொருத்தமான விலையில் அவர்களின் பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்குமான அலுவலகங்களை அமைத்தனர். இவை உடனடியாக சாத்தியப்படாத இடங்களில் கூட்டுறவு சங்கங்களை ஏற்பாடு செய்தார்கள். தொலைதூரத்தில் உள்ள இனக்குழுக்களை சகோதர இன குழுக்கள் என்று அழைத்தார்கள். இதே பகுதியில் இருந்த பெரும்பான்மையான ஹான் இனக்குழு வர்த்தகர்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படவில்லை.

ஆரம்ப முன்னேற்றம்: விலையின் விதிகள்

1951 ஆம் ஆண்டு ஜூலை 29 அன்று சீன அரசின் வர்த்தக அமைச்சகம் உள்நாட்டு வர்த்தக துறையின் பிரிவின் கீழ் வேறு எங்கும் இல்லாத இன வர்த்தக பிரிவை புதிதாக அமைத்தது. இந்த அமைச்சகத் துறையின் சார்பில் ஆகஸ்ட் 5 முதல் 9 வரை வடமேற்கு வர்த்தகப் பணியகம் சார்பில் ஐந்து வடமேற்கு மாகாணங்களிலும் இன சிறுபான்மை வர்த்தக மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. இந்த மாநாட்டில் இன சிறுபான்மை வர்த்தகத்திற்கான பல வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்டது.

1951 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள இன சிறுபான்மை பகுதிகளில் குறிப்பாக அரசு நடத்தும் வர்த்தக அமைப்புகளில் சில துவக்கட்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இக்காலத்தில் அரசின் சார்பில் 750 வர்த்தக நிறுவனங்களை அமைத்தனர். அது மட்டுமல்ல ஏராளமான நடமாடும் வர்த்தக அமைப்புகளை உருவாக்கி சிறுபான்மை மக்கள் வாழும்  கடை கோடி வரை வர்த்தகத்தை கொண்டு சென்றனர். அரசு நடத்தும் வர்த்தக நிறுவனங்களில் சில்லறை விற்பனை நிலையங்களும், கொள்முதல் நிலையங்களும் பதப்படுத்தும் தொழிற்சாலைகளும் அடங்கும்.

சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் அரசு நியாயமான விலைக் கொள்கைகளை அமலாக்கியது. இன சிறுபான்மை மக்கள் அவர்கள் தயாரித்து கொடுக்கும் பொருட்களுக்கு அரசு பொருத்தமான விலை கொடுத்து வாங்கியது. அதே நேரத்தில் இன சிறுபான்மை மக்களுக்கு அன்றாட தேவைகளுக்கான பொருட்களின் விலைகள் குறைத்து கொடுக்கப்பட்டது. இந்த பரிமாற்றங்களின் மூலம் இன சிறுபான்மை மக்களின் வாங்கும் திறன் கணிசமாக உயர்ந்தது.

இதனால் இன சிறுபான்மை பகுதிகளில் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் இந்த விலைக் கொள்கை பெரும் பங்களிப்பை செய்தது. மக்கள் வெறும் தத்துவத்தை நம்பி வர மாட்டார்கள் அந்த தத்துவத்தை அமலாக்க கூடிய முறைகளில் இருந்து தான் அதை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். மேற்கண்ட செயலின் விளைவாக இன சிறுபான்மையினர் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் தீவிரமான ஆதரவாளர்களாக மாறினார்கள்.

1950 ஆம் ஆண்டு குவாங்சி மாகாணத்தில் வூஜோ மாவட்டத்தில் மக்களின் விளைப்பொருட்களை கொள்ளையர்கள் அபகரித்து செல்வார்கள். இவற்றை தடுப்பதற்கான மக்கள் விடுதலை ராணுவம் இந்தப் பகுதிகளில் கொள்முதல் மற்றும் வர்த்தகப்பணி குழுக்களை அமைத்தது. இதன் மூலம் ராணுவம் இங்குள்ள யாவ் இன மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக கடலை எண்ணெய், துணிகள், நூல்கண்டுகள், உப்பு, ஆகியவற்றை ஆயிரக்கணக்கான கிலோக்கள் எடுத்துச் சென்றனர். இம்மக்கள் வாழக்கூடிய பகுதியில் உப்பு கிடைக்காததால் அவர்கள் அன்சிலோஸ்டோமியாசிஸால் (Ancylostomiasis ) என்ற நோயால் பாதிக்கப்பட்டனர். ராணுவம் இதை கொண்டுசென்றதால் அவர்கள் உப்பிற்காக மலைகளில் இருந்து இறங்கி அலைய வேண்டிய தேவை குறைந்தது.

அவர்களுக்கு அடிப்படையான பொருட்களை எடுத்துச் சென்றது மட்டுமல்ல அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களையும் அவர்களுக்கு நியாயமான வருமானம் கிடைக்கக்கூடிய முறையில் உருவாக்கப்பட்ட வணிக குழுக்கள் கொள்முதல் செய்தது. குறிப்பாக 45 மில்லியன் யுவான்களுக்கு மேல் மதிப்புள்ள பன்றிகளையும், ஒன்பது மில்லியன் யுவான்களுக்கு மேல் மதிப்புள்ள உலர்ந்த காளான்களையும், குளிர்கால காளான்களையும் வாங்கினார்கள். இந்தச் செயல் யாவ் இன மக்களின் வாழ்வை மாற்றியது மட்டுமல்ல சீன அரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியது.

இதற்கு மேலும் இன வர்த்தக குழுக்களும், மக்கள் விடுதலை படையும் மலைகளின் உட்பகுதிக்கு சென்று மக்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்து அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களையும் வாங்கி வந்தனர். நாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் அழிந்து போவதும், கொள்ளையர்கள் அபகரித்துச் செல்வதும் என்ற நிலையிலிருந்து மாறி அதே பூர்வீக பொருட்களின் உற்பத்திகள் எங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவி இருப்பதற்கு கம்யூனிஸ்ட் கட்சி காரணம் என்று பெருமிதம் கொண்டனர்.

உரக்கப் பேசப்பட்ட குறைபாடுகள்

இவ்வாறு அமலாக்கக் கூடிய முடிவுகளில் இருக்கக்கூடிய கணிசமான சிக்கல்களை களைவதற்கான மாநாடுகள் நடத்தப்பட்டது. தென்மேற்கு சீன பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு மாநாட்டில் கீழ்க்கண்ட பலவீனங்களை கண்டறிந்தார்கள். தென்மேற்கு பிரதிநிதிகள் மூன்று முக்கிய பலவீனங்களை வலியுறுத்தினார்கள்.

குறிப்பிட்ட பணிகளுக்குள்ளேயே மூழ்கி இருப்பது உள்ளூர் நிலைமைகளுக்கு தேவையான பொதுப்பணி பின்தங்குகிறது.

பொருளாதார வளர்ச்சியில் இன வர்த்தகத்தின் பங்கு பற்றிய தெளிவற்ற பார்வை பலரிடம் நீடிக்கிறது.

இன வர்த்தகத்திற்கும் பிற பணிகளுக்கும் இடையிலான போதுமான ஒத்துழைப்பு இல்லை என்று கண்டறிந்தார்கள்.

தென்மேற்கு சீனாவைப்போல் தென் மத்திய சீனாவின் பிரதிநிதிகள் கீழ்க்கண்ட அம்சங்களை குறைபாடுகளாக கண்டுபிடித்து ஆலோசனைகளை முன்வைத்தார்கள்.

இன சிறுபான்மையினர் பகுதிகளில் வர்த்தகத்தை மேம்படுத்துவதில் ஒட்டுமொத்த பிராந்திய பொருளாதார வளர்ச்சியை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இனச் சிறுபான்மை பகுதிகளில் வர்த்தக சேவைகளுக்கு பொருத்தமான நிதியை ஏற்பாடு செய்வதும், குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப தொழில்முறை மேலாண்மையை ஏற்றுக் கொண்டும் செயல்பட வேண்டும்.

இன சிறுபான்மை வர்த்தகத்தில் நடைபெறும் மோசடி மற்றும் அதிகப்படியான சுரண்டலை நிறுத்துவதற்கு தொழில் மற்றும் வணிக நிர்வாகத்தை பலப்படுத்த வேண்டும்.

பெரும்பான்மை ஹான் வணிகர்களுக்கு எதிரான நிலைகள் ஒரு சார்பாக உருவாவதை தடுக்க வேண்டும்.

கண்காட்சிகள் கூட்டங்கள் பேரணிகள் போன்றவற்றின் மூலம் முதன்மை சந்தைகளை நிறுவுவதும் அவற்றை அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்க வேண்டும்.

இன சிறுபான்மை பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்துவதும், இன மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதும், கலாச்சாரத்தை பரிமாறி கொள்வதும் வேகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்கள்.

வடமேற்கு சீனாவின் பிரதிநிதிகள் ஒன்பது பிரச்சனைகளை முன்வைத்து அதற்கான பரிந்துரைகளை உருவாக்கினார்கள்.

பூர்வீக மக்கள் தயாரிக்கும் பொருட்களின் விலைகளும் விற்பனைகளும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

அரசு மற்றும் தனியார் துறை உறவுகள் மேம்படுத்துதல், சந்தை மேலாண்மையை தரப்படுத்த வேண்டும்.

எடைகள் அளவீடுகள் வளங்கள் மற்றும் தேவைகளை சரி செய்ய வேண்டும். போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும்.

அரசு நடத்தும் நிறுவனங்களின் இயக்க முறைகளை மேம்படுத்துவது சிறுபான்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பது இனக்குழு உறுப்பினர்களால் கூட்டுறவுகளை நிர்வகிப்பது போன்ற மிக முக்கியமான கருத்துக்களை முன் வைத்தார்கள்.

மேற்கண்ட 3 பிராந்திய மாநாடுகளிலும் இன வர்த்தகம் குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகளைப் பற்றி மட்டும் விவாதிக்கவில்லை. அதற்கு மேலும் போக்குவரத்து, விலை தீர்மானம், பொருட்களை வழங்கும் முறைகள், மக்களின் தேவைகள், பணியாளர்களுக்கான பயிற்சி போன்ற அடிப்படையான தேவைகளில் ஆலோசனைகளும் முன்மொழிக்கப்பட்டன.

யதார்த்தத்திலிருந்து முன்னேறுவது.

மேற்கண்ட ஆலோசனைகள் விவாதங்கள் அதன் மூலம் கிடைத்த தரவுகள் மேலும் இன சிறுபான்மையினரின் வர்த்தகத்திற்கான அடித்தளத்தை அதிகமாக்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து வேலைகளிலும் யதார்த்தத்தில் இருந்து முன்னேற வேண்டும் என்று தீர்மானித்தது. நிர்வாகத்தில் துவங்கி மக்களின் வாழ்வாதார வரையிலான பணிகள் ஒவ்வொன்றும் அந்தந்த பிராந்தியத்தின் அல்லது அந்த இனக்குழுவின் நிலைமைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரே மாதிரியான முடிவுகளும் அமலாக்கமும் பயன்தராது என்பதை சுட்டிக்காட்டினார்கள்.

இன சிறுபான்மையினரின் விருப்பங்கள் தேவைகளைப் பற்றிய விரிவான புரிதல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தேசிய கட்டுமான நடவடிக்கைகளில் இன சிறுபான்மை மக்களை பங்கேற்பதற்கான செயல்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும்.

பிரம்மாண்டமான கொண்டாட்டங்களில் அவர்களை பங்கேற்க வைப்பதும், பிற நகரங்களுக்கு செல்லுவதற்கும் இன சிறுபான்மை பிரதிநிதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இன சிறுபான்மையினர் வாழக்கூடிய பகுதிகளை பார்வையிடு வதற்கும், அவர்களின் பணிகளை பாராட்டுவதற்கும், குறைகளை அறிந்து கொள்வதற்கும் அரசின் தலைவர்களை இனக்குழுக்கள் வாழக்கூடிய பகுதிகளில் பங்கேற்க வைக்க கூடிய செயல்களை செய்ய வேண்டும்.

தேசிய தினக் கொண்டாட்டத்தில் இனக்குழுக்களின் பிரதிநிதிகளை அவசியம் கலந்து கொள்ள வைப்பது.

இவை அனைத்தும் தேசிய கட்டுமான நடவடிக்கைகளில் இனச் சிறுபான்மையினரின் பங்களிப்பை உறுதி செய்யும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி முடிவு எடுத்த அமலாக்கியது.இதன் தொடர்ச்சியாக இன சிறுபான்மையர் பகுதியில் சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாடுகள் குறித்த தொழில் முறை மாநாடுகள் மூன்று முறை நடத்தப்பட்டது.

தேசிய மாநாடுகளை நோக்கி

உள்ளூர் மட்டத்திலும் பிராந்திய அளவிலும் இன வர்த்தகம் தொடர்பாக விரிவான சந்திப்புகளையும் அனுபவங்களையும் புதிய ஆலோசனைகளையும் உருவாக்கி அமலாக்கி வந்த சூழலில் அடுத்த கட்டமாக இன வர்த்தகத்திற்கான தேசிய மாநாட்டை நோக்கி அந்த கொள்கை நகர்த்தப்பட்டது.

1951 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் 31 ஆம் தேதி வரை முதல் தேசிய இன வர்த்தக மாநாடு சீனத் தலைநர் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 149 பேர்கள் கலந்து கொண்டார்கள். இந்த மாநாடு 15 நாட்கள் நடைபெற்று பல முடிவுகளை மேற்கொள்ளக்கூடிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் உள்மங்கோலியா தன்னாட்சிப் பகுதி, மத்திய அரசாங்கத்தின்  கீழ் உள்ள வட சீனாவில் உள்ள மாகாணங்கள், ஹூய், திபெத், உய்குர்,  மியாவோ, யாவோ, ஜுவாங்கு, லி, டோங் இனக்குழுக்களும்  அரசாங்கத்தின் தொடர்புடைய துறைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இன வர்த்தகத்தின் வழிகாட்டுதல்களையும் கொள்கைகளையும் விவாதிப்பதற்கும், பரிமாறிக் கொள்வதற்கும், பணியாளர்கள் குறித்தும் வணிகப் பிரச்சனைகள் குறித்தும் பகுப்பாய்வு செய்யவும், இந்த மாநாடு நடைபெறுகிறது என்று வர்த்தக துணை அமைச்சர் ஷா கியான்லி பேசினார். இனக் கொள்கை குறித்த அறிக்கையை மத்திய இன விவகார ஆணையத்தின் துணை இயக்குனர் லியூ கேபிங் சமர்ப்பித்தார். மற்றொரு துணை அமைச்சர் நாடு முழுவதும் 1951 ஆம் ஆண்டில் அரசு நடத்தும் இன வர்த்தக குழுக்களின் நிலைமைகளை பற்றி அறிக்கையை வழங்கினார்.

தேசம் முழுவதும் இருக்கக்கூடிய இன சிறுபான்மையினர் மக்கள் தொகை அடிப்படையில் குறைவாக இருந்தாலும் அவர்களின் அனைத்து உரிமைகளையும் மேம்படுத்துவதற்கான பணிகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சி, சீன மக்கள் குடியரசு மிகக் கவனத்தோடும் விடாப்பிடியான தொடர்ச்சியுடன் செயல்பட்டார்கள். மாநாட்டின் முன் வைக்கப்பட்ட அறிக்கைகள் மீது இனச் சிறுபான்மை பகுதி பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் ஏற்படுகிற பிரச்சனைகள், தேவைகளை குறித்தும் விவாதித்தார்கள். மாநாடு நடைபெறக்கூடிய காலத்திலேயே இன சிறுபான்மையினர் முன்வைத்த தேவைகளை அமலாக்கம் செய்வதற்காக வன மீட்பு, விவசாயம், போக்குவரத்து, அஞ்சல், மற்றும் தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் வரிவிதிப்பு போன்ற துறைகள் விவாதித்து எழுத்துப்பூர்வமான அறிக்கையை மாநாட்டிலே வழங்கினார்கள். 15 நாள் மாநாட்டிற்காக தேவையை இப்போது புரிந்துகொள்ள முடியும். இதற்கான முக்கியத்துவம் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் அதிகமாக கொடுக்கப்பட்டது என்பதற்கு அடையாளமாக  நாட்டின் துணை பிரதமர், இன சிறுபான்மை வர்த்தகத்தின் முக்கிய பங்காற்றியவர் சென் யுன் கலந்து கொண்டார்.

இன சிறுபான்மை பகுதிகளில் இன வர்த்தகம் நல்ல பலன் அளித்துள்ளது என்றும் சகோதர இனக்குழுக்கள் என்று அழைக்கப்படுகிற எல்லைப்புற இனக்குழுக்களால் நன்கு வரவேற்கப்பட்டுள்ளன என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார். இன வர்த்தகத்தில் உள்ள சிக்கல்கள் படிப்படியாக உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். 15 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு அரசு நடத்தும் வர்த்தகத்தின் வழிகாட்டுதல்களையும் கொள்கைகளையும் மேலும் தெளிவாக முன்னெடுத்துச் செல்வதற்கு பெரும் பயனாக அமைந்தது. பல முக்கிய பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு இந்த மாநாடு உதவிகரமாக அமைந்தது.

1952, 1955 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் இரண்டாவது மூன்றாவது நான்காவது இன சிறுபான்மையினர் வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதே காலத்தில் பிராந்திய அளவிலான இன வர்த்தகக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. முந்தைய மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமலாக்குவது மேம்படுத்துவது என்ற முறையில் இன வளர்ச்சியின் நிலைமைகளை மதிப்பீடு செய்தனர்.

1957-க்கு பிறகு தேசிய சூழ்நிலைகள் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இன வர்த்தகத்திற்கான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன வர்த்தக மாநாடுகள் தேசிய அளவில் நடைபெறவில்லை. ஐந்தாவது தேசிய இன வர்த்தக வேலை மாநாடு மீண்டும் அக்டோபர் 20 1962 ஆம் ஆண்டு கூட்டப்பட்டது. இவற்றில் முக்கிய கொள்கைகளையும் தேவையான அமைப்புகளையும் உருவாவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு அமலாக்கப்பட்டது. கிடைத்த அனுபவங்கள் அடிப்படையில் இனச் சிறுபான்மையின் பகுதிகளை பொதுப்பகுதிகள், மேய்ச்சல் நிலப் பகுதிகள், தொலைதூர மலைப் பகுதிகள் என்று மூன்றாவது பிரித்தார்கள். இவற்றின் தேவைகளுக்கு ஏற்ப நிர்வாக அமைப்புகளை உருவாக்கி அமலாக்கினார்கள்.

இன வர்த்தக நிறுவனங்களில் 80% நிதி அரசும் 20% வங்கிகள் மூலமும் அளிக்கப்படும். இவற்றின் மூலம் கிடைக்கின்ற லாபத்தை இந்த நிறுவனங்கள் உடனடியாக திரும்ப செலுத்த வேண்டியது இல்லை. அவற்றை இன வர்த்தக வளர்ச்சி ஏற்படுவதற்கான நிதி ஆதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அமலாக்கினார்கள். இவை இன சிறுபான்மையினர் பகுதியில் வர்த்தகம் வளரும் வரை அனுமதிக்கப்பட்டது. விலைக் கொள்கையில் தரம் என்ற பெயரால் விலையை சகட்டுமேனிக்கு உயர்த்துவது தடை செய்யப்பட்டது.

இந்த மாநாடுகளில் எடுக்கப்பட்ட மற்றொரு முக்கியமான முடிவு இன வர்த்தக பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களை உயர்மட்ட பொறுப்புகளுக்கு உயர்த்துவதாகும். இதற்காக கற்பித்தல், கற்றல் நடைமுறைகளை மேம்படுத்தினார்கள். வணிகக் கேடர் பள்ளிகள் நீண்டகால, குறுகிய கால பயிற்சிகளை துவக்கினார்கள். இந்தப் பயிற்சியின் மூலம் ஹான் பேரின வாதத்தையும் உள்ளூர் பேரினவாதத்தையும் முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இன சிறுபான்மையினர் வர்த்தக பிரதிநிதிகள் தேசிய உணர்வோடு இணைப்பதற்கான தேசிய பணி மாநாடு நடத்தப்பட்டது. நியமனங்களை பொறுத்தவரை இனச் சிறுபான்மை மக்கள் தொகை அதிகமாக உள்ள பகுதிகளில் 70 முதல் 80 சதவிகித இன சிறுபான்மை சார்ந்த அதிகாரிகளையும், இன சிறுபான்மை மக்கள் குறைவாக இருக்கக்கூடிய இடத்தில் 40 முதல் 50 சதவீத அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும் என்ற முடிவை அமல்படுத்தினார்கள். மேலும் தன்னாட்சிப் பகுதி மாகாணம் மாவட்டத்தில் நடத்தப்படும் ஒவ்வொரு இன வர்த்தக நிறுவனத்திலும் மேலாளர், துணைத் தலைவர் போன்றவற்றை நிர்வகிக்க இனச்சிறுபாமையினரை நியமிக்க வேண்டும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியும், மக்கள் குடியரசும் இனச் சிறுபான்மையினரை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான மிகப் பிரம்மாண்டமான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சி கடைபிடித்த இனக் கொள்கை என்பது உண்மையிலேயே புரட்சிகரமானது மட்டுமல்ல இதற்கு முன்பு வேறு எங்கும் கடைபிடிக்காத சீனப் பண்புகளுடன் கூடிய கொள்கையாகும். உலகம் முழுவதும் உள்ள இனச் சிறுபான்மையினரின் வாழ்க்கை முன்னேற்றத்தில் சீனாவின் இன சிறுபான்மையினர் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பதை உலகம் மறுக்க முடியாது.

அ.பாக்கியம்

வியாழன், ஜனவரி 08, 2026

54 இன வர்த்தகமும் வளர்ச்சிக் கொள்கையும்

 

அ.பாக்கியம்

சீனாவில் கடந்த 75 ஆண்டுகளில் இன சிறுபான்மை மக்கள் அனைத்து வகையிலும் வளர்ச்சி அடைந்து உள்ளனர். மிகச்சிறிய இனக்குழுக்கள் உட்பட சீனா என்ற நீரோட்டத்தில் இணைந்து செயல்படக்கூடிய அளவிற்கு அவர்களின் தனித்தன்மைகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கான அடித்தளம் 1949 ஆம் ஆண்டு புரட்சி வெற்றி பெற்றவுடன் மா சே துங் தலைமையில் உருவாக்கப்பட்ட சீன மக்கள் குடியரசால் போடப்பட்டது. சீன நாட்டின் மக்கள் தொகையில் இனச் சிறுபான்மை மக்கள் எண்ணிக்கை மட்டும் 12.5 கோடி ஆகும். அதாவது மொத்த மக்கள் தொகையில் 9 சதவீதம் சிறுபான்மை மக்கள் இருந்தாலும் தேசத்தின் ஒட்டுமொத்த பரப்பளவில் 64 சதவீத நிலப்பரப்பில் இவர்கள் வாழ்கிறார்கள். சீனா 14 நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்துள்ளது. பெரும்பாலான எல்லைப் பகுதிகளில் இன சிறுபான்மையினர் வாழ்கின்றார்கள். இவர்களின் வாழ்விடம் சமவெளி பகுதிகளை விட மலைகளும், பள்ளத்தாக்குகளும், காடுகளும், ஆற்றுப்படுகைகளும் நிறைந்த சிக்கலான பூகோள அமைப்பை கொண்டிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் 1949 ஆம் ஆண்டு புரட்சி வெற்றி பெறுவதற்கு முன்பு இன சிறுபான்மையினர் மன்னர் ஆட்சி காலத்தில் மிகக் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். இன ஒடுக்குமுறை தலைதூக்கி இருந்தது.

புரட்சியை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய காலத்திலேயே இன சிறுபான்மையினருடைய பிரச்சனையை சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்து கொண்டு அதற்கான தீர்வுகளைப் பற்றி சிந்தித்தார்கள். எனவே புரட்சி நடைபெற்றவுடன் சிறுபான்மை மக்களுக்கான கொள்கைகளை உருவாக்கினார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்ட கொள்கைகளில் இன வர்த்தகம் என்ற கொள்கை மிக முக்கியமான வடிவமாக அமலாக்கப்பட்டது. “இன சிறுபான்மையினரின் பங்கேற்பு இல்லாமல் நமது நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சி அடையாது” என்று மாசேதுங் கூறினார். சீன தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் இன சிறுபான்மையினரின் முன்னேற்றம் அவசிய தேவையாக இருந்தது. விடுதலைக்கு முன்பு இந்த பகுதியில் நசிந்து போயிருந்த வர்த்தகத்தை வளர்ப்பதற்கான கடுமையான முயற்சிகளை சீன மக்கள் குடியரசு மேற்கொண்டது. இதற்காக இன வர்த்தகக் கொள்கை என்ற கொள்கையை உருவாக்கினார்கள்.

இன வணிகம் என்றால் என்ன?

சீனாவில் இன வர்த்தகம் என்பது அங்குள்ள இன சிறுபான்மையினரின் பகுதிகளில் அல்லது இன சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்படும் முக்கிய வர்த்தக நடவடிக்கையாகும். அதாவது இன சிறுபான்மையினரை குறி வைத்து ஏற்பாடு செய்யப்படுகின்ற வணிக வடிவம். சிறப்பு கூறுகள் உடன் தயாரிக்கப்பட்ட இந்தக் கொள்கை இன சிறுபான்மை பகுதிகளில் நுகர்வு பொருட்களின் உற்பத்தியையும் விநியோகத்தையும் உத்தரவாதப்படுத்தியது. இந்தக் கொள்கையால் இன சிறுபான்மை மக்களின் வருமானம் அதிகமானது மட்டுமல்ல, தேசிய கட்டுமானத்தை இன சிறுபான்மை மக்கள் ஆதரிப்பதற்கான அடித்தளத்தையும் உருவாக்கியது. இயற்கையாக இருந்த இனப் பிரிவினை போக்குகளையும் சீன விரோத சக்திகள் இனப்பகையை தூண்டிவிட்டதை நீக்குவதற்கும் இன ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும் இந்த இன வர்த்தக பரிமாற்றங்கள் பெருமளவு உதவி செய்தது. புதிதாக உருவாக்கப்பட்ட சீன மக்கள் குடியரசில் சிறுபான்மை மக்களைப் பற்றிய அடையாளத்தை ஒட்டுமொத்த சீனாவும் அறிந்து கொள்வதற்கான ஒரு வடிவமாக இன வர்த்தக வடிவம் அமைந்தது.

சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட உடன் இன சிறுபான்மையினர் வாழ்ந்த பகுதிகளில் நிர்வாக அமைப்புகள் இல்லாத சூழலை மாற்றி புதிய நிர்வாகத்தை கட்டி எழுப்புவது, அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுப்பது, கலாச்சாரம், கல்வி, சுகாதார பராமரிப்பு, பொருளாதார, வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று சீன மக்கள் குடியரசு உறுதி ஏற்றுக் கொண்டது. இவற்றில் பிரதான அம்சமாக பொருளாதாரப் பணி இருக்க வேண்டும். அந்த பொருளாதாரப் பணியின் முக்கிய அங்கமாக இன வர்த்தகம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். மக்களை மையமாகக் கொண்ட நிர்வாக தத்துவத்தையும், வளர்ச்சியை ஏற்படுத்தும் வாழ்வாதார தத்துவத்தையும் உள்ளடக்கிய அரசியல் பணியை போலவே இந்த இன வர்த்தகத்தையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது நிர்வாக தத்துவமாக ஏற்றுக்கொண்டது.

ஆரம்ப காலகட்டத்தில் சீன மக்கள் குடியரசிற்கு இன வர்த்தகம் குறித்த போதுமான தரவுகள் கிடைக்கவில்லை. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதற்கு முன்னதாக நடைபெற்ற சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு (CPPCC) மக்கள் அரசாங்கம் அனைத்து இன சிறுபான்மையினரின் மக்களுக்கும் அரசியல் பொருளாதார கலாச்சார மற்றும் கல்வி வளர்ச்சியில் ஆதரவு அளிப்பதே மாநாட்டின் பொதுத்திட்டமாக இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தது. அப்போது இருந்தே சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசாங்கம் இன சிறுபான்மையினரின் பல்வேறு சேவைகளில் கவனம் செலுத்துவதே நிலையான நிலைப்பாடாக இருந்து வருகிறது. இருப்பினும் புதிய திட்டங்களை உருவாக்குவதற்கான தரவுகள் மேலும் அதிகமாக தேவைப்படுவதை அறிந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள். இன வர்த்தகம் குறித்த தரவுகளை சேகரிப்பதற்கு முன்னுரிமை கொடுத்தார்கள். வரலாற்று ரீதியாக இன வர்த்தகத்தின் பங்கு என்ன என்பதை ஆய்வு செய்தனர். மிக வெகு தொலைவில், மலைகளின் உச்சிகளில் வாழக்கூடிய இன சிறுபான்மையினர் பகுதிகளுக்கு எவ்வாறு வர்த்தகம் நடைபெற்றது என்பதை பற்றியும் தரவுகளை சேகரித்தார்கள்.

வாங் வென்சாங் எழுதிய இன வர்த்தக அறிமுகம் , யாங் கிங்சென் எழுதிய இன வர்த்தகம், ஹுவாங் குவாங் சூ தொகுத்த சமகால சீனாவில் இனப் பணி, வுசியாவோடாவோ எழுதிய சீன மக்கள் குடியரசின் ஆரம்ப நாட்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இனப் பணி குறித்த ஆராய்ச்சி , லின் வீ ரன் எழுதிய உள் மங்கோலியாவில் இரண்டு தசாப்த கால இன வர்த்தகம் (1946–1965) , டாங் செங் கென் மற்றும் சென் பாவோஷெங் ஆகியோரால் தொகுக்கப்பட்ட கன்சுவில் இன வர்த்தக வரைவு வரலாறு, ம மு சியாங்லின் எழுதிய ஜின்ஜியாங்கில் இனப் பணி போன்ற வரலாற்று ரீதியான புத்தகங்களையும் ஆய்வுகளையும் பரிசீலனைக்கு உட்படுத்தி புதிய திட்டங்களை உருவாக்கினார்கள்.

இன வர்த்தகத்தின் இடர்பாடுகள்

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட காலத்தில் அதன் பொருளாதாரத்தின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. 1949 ஆம் ஆண்டில் தொழில்துறை உற்பத்தி சரிபாதியாக குறைந்தது. விவசாய உற்பத்தி 1937 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகிற பொழுது 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இதே காலத்தில் 1937 ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு வரைக்கும் பணவீக்கம் 140 மடங்கு அதிகமாகியது. இக்காலத்தில் ஷாங்கே ஷேக் தலைமையிலான காமிங்டாங் ஆட்சியும், ஜப்பானிய படையெடுப்பும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது.

சமதளத்தில் இருந்தவர்களைவிட இன சிறுபான்மையினர் பெரும்பாலும் பீடபூமிகளிலும் மலைப்பகுதிகளிலும் கடுமையான இயற்கை இடர்பாடுகள் நிறைந்த பகுதிகளில் பெரும் நெருக்கடிகளை சந்தித்தார்கள். சமூக ரீதியில் பின்தங்கிய நிலைமை, வறுமை, போக்குவரத்து வசதியின்மை, இதனால் வர்த்தகம் வளர்ச்சி அடையாத நிலை, சந்தை இல்லாத சூழலில், பண்டமாற்று முறையில் இவர்கள் வாழ்ந்ததால் நெருக்கடியின் உச்சத்திற்கு சென்றார்கள். ஒருங்கிணைந்த நாணயம் இல்லை என்பதால் பொருட்களின் பரிமாற்றம் தடை ஏற்பட்டது. இதனால் உணவு பற்றாக்குறை உருவாகி பட்டினிச்சாவை எதிர்கொண்டனர்.

இதே போன்ற நிலைமை தென் மத்திய சீனாவிலும் உருவாகியது. இக்காலத்தில் தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள திபேத், ஹைனன் போன்ற பகுதிகள் செம்படைகளால் விடுவிக்காத சூழலில் ஷாங்கே ஷேக் காமிங்டாங் கட்சியினரின் சுரண்டலும், கொள்ளையர்களின் செயல்களாலும் இப்பகுதி சூறையாடப்பட்டது. இதே காலத்தில் இந்தப் பகுதியில் வெளிநாட்டு சக்திகள் நேரடியாகவோ ரகசியமாகவோ தலையிட்டு குழப்பங்களையும் கலவரங்களையும் ஏற்படுத்தினார்கள். இதனால் சமூக பொருளாதார நிலைமைகளும் தேசத்தின் ஸ்திரத்தன்மையும் கடுமையாக பாதித்தது. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டாலும் இன சிறுபான்மையர் பகுதியில் ஏற்பட்ட நெருக்கடிகளால் புதிய சீனா எழுந்து நிற்க முடியுமா? முடியாதா? என்று சந்தேகம் அனைத்து மட்டத்திலும் உருவானது.

பல்வேறு காரணங்களால் இனச் சிறுபான்மையினரின் மக்கள் தொகை குறைவாக இருந்தது. இவர்கள் மத்தியில் பொருளாதார வளர்ச்சியும் கலாச்சார மேம்பாடும் மிகவும் பின்தங்கி இருந்தது. தொழிலாளர்கள், ஊழியர்கள், அறிவுஜீவிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்தனர். இதனால் இனச் சிறுபான்மையர் பகுதியை முன்னேற்ற வேண்டும் என்றால் அரசின் உதவியும் பெரும்பான்மையான மக்களின் ஆதரவும் இல்லையென்றால் இவற்றை செய்ய முடியாது என்று கட்சி தலைமை முடிவுக்கு வந்தது. இந்த நெருக்கடியான நிலைமைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு மாசேதுங், லியூ ஷாவோகீ, சௌ என் லாய் , சென் யூன் ஆகிய தலைவர்கள் இன சிறுபான்மையினரின் அரசியல் பொருளாதாரம் மற்றும் கலாச்சார சேவைகளை வளர்ப்பதற்கு பெரும் உதவிகள் தேவை என்பதற்கான திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

விரிவான அளவிலும் முழுமையான கண்ணோட்டத்திலும் இனச் சிறுபான்மையினர் தங்களது பொருளாதாரங்களை வளர்க்க உதவுவது என்பது அவர்களுக்கான தேவை மட்டுமல்ல தேசிய கட்டுமானத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற முறையில் செயல்பட்டார்கள். இனச் சிறுபான்மையினர் வாழ்கின்ற பகுதி வளங்கள் நிறைந்தது மட்டுமல்ல பரந்த பகுதியாகவும் உள்ளது என்றும் எனவே இனச் சிறுபான்மையினரின் ஈடுபாடு இன்றி நமது தேசிய பொருளாதாரம் வளர்ச்சி அடையாது என மாசேதுங் தெரிவித்தார். இன சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கு ஊக்குவிப்பது, இன சமத்துவம், இன ஒற்றுமையை அடைவதற்கு மட்டும் அல்லாமல் சீன மக்கள் குடியரசில் தேசிய கட்டுமானத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறுவதற்கான மிகவும் அவசியமான தேவை என்றார். சீன கம்யூனிஸ்ட் கட்சியும் மாசேதுங்கும் மேற்கண்ட முயற்சிகளை திடமான முறையில் மட்டுமல்ல சீனப் பண்புகளுக்கு ஏற்ற வகையில் அமல்படுத்தினார்கள். இதன் மூலமாக தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சியில் இனச் சிறுபான்மை பகுதிகளின் இயற்கை வளங்கள் பெரும் பங்கை கொண்டுள்ளது என்பதை நடைமுறை நிரூபித்து காட்டியது.

இனச் சிறுபான்மை பகுதிகளில் சேவைகளின் உருவாக்கம்

மேலே விவாதிக்கப்பட்ட வழிகாட்டுதல் அடிப்படையில் முழு நாட்டின் விடுதலையுடன் இனச் சிறுபான்மை பகுதிகளில் பல்வேறு பணிகள் துவக்கப்பட்டன. இவற்றில் சீன மக்கள் குடியரசு துவக்கத்தில் எடுத்த பொருளாதார கட்டுமானங்களும் குறிப்பாக இன வர்த்தக நடவடிக்கையும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் துணை பிரதமராகவும் முதல் ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய வருமான சென்-யுன் இன வர்த்தகத்தை பலப்படுத்துவதிலும் விரிவு படுத்துவதிலும் மிக முக்கிய பங்காற்றி இருக்கிறார் என வரலாறு பதிவு செய்துள்ளது. இனச் சிறுபான்மை பகுதிகளில் வர்த்தகத்துக்கான கட்டமைப்பை உருவாக்குவதில் மையப் புள்ளியாக செயல்பட்டு உள்ளார். வர்த்தக நிறுவனங்களை அரசு நடத்துவதற்கும் அவற்றை பலப்படுத்துவதற்கும் விநியோகத்தையும் சந்தைப்படுத்தும் செயல்களையும் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக செய்ய வைத்தார்.

இதே காலத்தில் இவர் தனியார் வர்த்தகங்களை ஊக்கப்படுத் துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். உருவாக்கப்பட்ட சந்தைகளில் இந்நியாயமான விலை முறைகளை அமலாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்களை குறிப்பாக இனச் சிறுபான்மையினரை பரந்த சந்தைகளுடன் இணைத்து விநியோகத்தையும் நுகர்வையும் அதிகப் படுத்தினார்கள். இன சிறுபான்மை அதிகாரிகளுக்கு பொருளாதாரப் பணிகளை மேம்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கக்கூடிய முக்கியமான அடித்தளத்தை சென் யூன் உருவாக்கினார்.

நவீன சீனாவில் சீர்திருத்தத்தின் சிற்பியாக விளங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் தலைவர் டெங் ஷியோ பிங் 1949 முதல் 52 ஆம் ஆண்டு வரை தென்மேற்கு சீனாவின் பணியகத் தலைவராக செயல்பட்டார். அப்பொழுது இந்தப் பகுதியில் ஏழு கோடி மக்கள் தொகைக்கான கட்சிக்கு தலைமை தாங்கினார். சீனாவின் உள்நாட்டு போருக்கு பிறகு புரட்சிகரமான திட்டங்களை அமல்படுத்தியது மட்டுமல்ல பெரும் சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி கண்டார். இனச் சிறுபான்மையினரின் பொருளாதார வளர்ச்சியில் இவர்காலத்தில் இந்தப் பகுதியில் முக்கியமான அடித்தளம் போடப்பட்டது.

முதலாவதாக இன சிறுபான்மை பகுதிகள் பேரழிவுகளாலும் பஞ்சம் போன்றவற்றாலும் பாதிக்கப்படும் பொழுது அவர்களுக்கு முழுமையான உதவி செய்ய வேண்டும். அவ்வாறு ஏற்படும் பாதிப்புகளில் உற்பத்திகள் தடைபடும். தடைபட்ட உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு உத்திரவாதமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இரண்டாவதாக உற்பத்தி வழிமுறைகளை மேம்படுத்துவது, வாழ்க்கை சாதனங்களின் விநியோகத்தையும் உள்ளூர் பொருட்களை மக்கள் வாங்குவதற்கான முறைகளையும் உறுதி செய்து விட்டால் இன சிறுபான்மை பகுதியில் வர்த்தகத்தை மேம்படுத்த முடியும் என்பதற்கான உத்திகளை அமல்படுத்தினார். இனச் சிறுபான்மை யினரின் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்துவதற்கு இன வர்த்தகம் மிக முக்கியமானது. எனவே பொருளாதாரப் பணிகளில் மிக மையமான அம்சமாக இன வர்த்தகம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். இன வர்த்தகத்தில் இடைநிலை சுரண்டல் அடுக்குகளை தடுக்க வேண்டும்.

இதனால் மக்கள் சிறிய இழப்புகளை சந்திக்க நேரிடலாம். ஆனால் இந்த வழிமுறைகள் மூலமாக அவர்களின் பொருளாதாரம் செழித்து வாழ்க்கை மேம்படும் என்பதில் டெங் ஷியோ பிங் உறுதியாக இருந்து அமல்படுத்தினார். இதேபோன்று இனச் சிறுபான்மையினர் அதிகம் வாழ்ந்த வடமேற்கு பகுதிகளுக்கு தலைமை தாங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தலைவர்கள் ஒருவரான ஜி ஜோங்சன், இனச் சிறுபான்மையினரின் பகுதிகளில் வர்த்தகத்தை மேம்படுத்துவதும் சுகாதாரத்தை ஏற்படுத்துவதும் கட்சியின் மிக முக்கியமான வெகுஜன பணியும் அரசியல் பணியும் ஆகும் என்று வலியுறுத்தினார். எல்லைப்புறங்களில் வாழ்ந்த இனப் பகுதிகளில் வர்த்தகத்தை வளர்க்க அனைத்து சாத்தியமான சக்திகளையும் அணி திரட்டினார்.

இன சிறுபான்மை மக்களிடம் ராணுவ பணிகள்

யுன்னான் மாகாணம் பிப்ரவரி 24 1950 ஆம் ஆண்டு மக்கள் விடுதலைப் படையால் விடுவிக்கப்பட்டது. அடுத்த மாதமே யுன்னான் மாகாண அரசின் மூலமாக இன வர்த்தக கழகம் ஆரம்பிக்கப்பட்டது. சீன மக்கள் விடுதலை ராணுவமும், உருவாக்கப்பட்ட இனப் பணி குழுவும் சேர்ந்து அந்த மாநிலத்தின் விடுதலை பெறாத எல்லைப் புற இனப் பகுதிகளுக்கு சென்றனர். அங்கு அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறை கடுமையாக இருந்தது. எனவே வழக்கம் போல் மக்கள் விடுதலை ராணுவம் அந்தப் பகுதிகளுக்குள் சென்ற பொழுது உப்பு, பருத்தி, நூல், துணி வகைகள், தீப்பெட்டி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற அன்றாட பொருட்களை எடுத்துச் சென்றார்கள். இங்கு கொள்ளையர்களின் ஆதிக்கம் இருந்ததால் ராணுவம் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு குதிரைகளை பயன்படுத்தினார்கள்.

ராணுவம் எங்கு சென்றாலும் வர்த்தக குழுக்களையும் கடைகளையும் உடனடியாக அமைத்து விடும். அது இங்கேயும் நடைபெற்றது. யுன்னானின் பல்வேறு பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் அதிகாரங்கள் நிறுவப்பட்டது மட்டுமல்ல, பொதுமக்களுக்கு கொள்முதல் மற்றும் விற்பனை சேவைகள் வழங்க முக்கிய நகரங்களில் வர்த்தக கிளைகளையும் உருவாக்கியது. வர்த்தக பிரிவின் அமைப்புகளையும் உருவாக்கினார்கள்.

    1949 செப்டம்பர் மாதம் சீன மக்கள் விடுதலை ராணுவம் கிங்காய் மாகாணத்திற்குள் சென்று அப்பகுதியை விடுவித்து அங்கும் வணிகத்திற்காக ஒரு அமைப்பை உருவாக்கி கடைகளையும் ஏற்படுத்தினார்கள். இந்த மாகாணத்தில் கோலாக் என்ற பகுதி சமூக ரீதியாக மிகவும் சிக்கலான பகுதியாக இருந்தது மட்டுமல்ல கிங்காய் மாகாணத்தில் செம்படையால் விடுவிக்கப்படாத கடைசி பகுதியாகவும் இருந்தது. அவற்றை வெற்றி கொள்வதற்கு முன்பாக பிப்ரவரி 1952 இல் கோலாக் பகுதிக்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழுவையும் வடமேற்கு ராணுவ அரசியல் குழுவையும் நிறுவினார்கள். இந்த இரண்டு அமைப்பும் கிங்காய் மாகாணத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்களின் ஆதரவுடன் செயல்பட்டு ஆகஸ்ட் 1952 ஆண்டு அமைதியான முறையில் கோலாக் பகுதியை விடுதலை செய்தனர்.

1952 மற்றும் 53 ஆம் ஆண்டுகளில் கோலார் பகுதியில் இருந்த கட்சி மற்றும் செம்படையின் பிரதான பணியாக கொள்ளையர்கள் ஒழித்துக் கட்டுவது, ஒழுங்கை பராமரிப்பது, புதிய பணியாளர்களை பயிற்றுவிப்பது, உயர்மட்ட அமைப்புகளை ஒன்றிணைப்பது போன்றவை சவாலாக முன்வந்த பிரச்சனைகளை தீர்த்தார்கள். இதன் பிறகு 1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிங்காய் மாகாண வர்த்தக நிறுவனத்தின் கோலாக் கிளை உருவாக்கப்பட்டது. இங்கிருந்த 290 பழங்குடியினரில் 210 பேரை ஐந்து இன வர்த்தக பணியின் துணைக் குழுக்காக அமைத்தனர்.

அங்கு பாதிக்கப்பட்டு இருந்த விவசாயம் உட்பட உற்பத்திகளை மீண்டும் தொடங்கிடவும் அவற்றை மேம்படுத்திடவும் ஆதரவளித்தனர். சீன கம்யூனிஸ்ட் கட்சி இன சமத்துவம் ஒற்றுமை குறித்த கொள்கைகளை மக்கள் வரவேற்றனர். இந்தப் பகுதிகளில் 11,145 ஏழைகளுக்கு அதாவது சுமார் 3,175 வீடுகளுக்கு தேநீர் உற்பத்தி கருவிகள், ஆடைகள் மற்றும் அடிப்படையான உணவுப் பொருட்களை தொடர்ந்து வழங்கினார்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நடவடிக்கைகள் இந்த பிராந்தியங்களில் சுயாட்சியை அமைப்பதற்கான சாதகமான நிலைமைகளை உருவாக்கியது.

அ.பாக்கியம்

சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும்

நூல் மதிப்புரை வறுமையின் நிறமல்ல வளர்ச்சியின் நிறமே சிவப்பு அன்பான தோழர். அ.பாக்கியம்   அவர்களுக்கு வணக்கம்..   19.01.26 வெளிவந்த தங்...