Pages

வியாழன், டிசம்பர் 04, 2025

49 திபெத்: கலாச்சார பாதுகாப்பும் வளர்ச்சியும்


அ.பாக்கியம்

திபெத்திய மக்களின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் சீன கம்யூனிஸ்ட் அரசு அழித்து வருகிறது என்றும், சீனாவின் ஹான் இன கலாச்சாரத்தை புகுத்தி வருகிறது என்றும், திபெத்திய அடையாளங்களை ஒட்டுமொத்தமாக சூறையாடி வருவதாக சீன எதிர்ப்பு சக்திகளும், ஏகாதிபத்திய நாடுகளும் இடைவிடாது ஊளையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒட்டுமொத்த சீன மக்கள் தொகையில் சிறுபான்மை தேசிய இனங்கள் மிகச்சிறிய அளவே இருந்தாலும் அவர்களை சீனாவின் மக்கள் குடியரசு தனித்தன்மையுடன், அவர்களின் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை, பாதுகாப்பதிலும் வளர்த்தெடுப்பதிலும் முக்கிய கவனம் செலுத்துகிறது. சீன பண்புகளுடன் கூடிய சோஷலிச சமூகத்தை உருவாக்குவதில் திபெத்தின் பங்களிப்பை உள்ளடக்கி வளர்க்கிறது. இந்தக் கொள்கையின் வெளிப்பாடு தான் திபெத்திய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அதன் பாரம்பரியங்களையும் அழிந்து விடாமல் பாதுகாப்பதுடன் தேவையான வளர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18 ஆவது காங்கிரஸில் அனைத்து இனக்குழுக்களின் மன உறுதியையும் நம்பிக்கையையும் அதிகரிக்க ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அமுலாக்கி வருகின்றனர். திபெத்திய பிராந்தியத்தில் சீன பண்புகளுடன் கூடிய சோஷலிசத்தின் மதிப்புகளை தீவிரமாக உயர்த்துவதற்கும், அதே நேரத்தில் திபெத்திய பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாத்து கலாச்சார அமைப்புகளின் சேவைகளை வளர்த்தெடுக்கவும் செய்கிறார்கள். இதன் காரணமாக திபெத்திய கலாச்சார நிறுவனங்களும், கலாச்சாரம் தொடர்பான தொழில்களும் மேம்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கைகள் திபெத்திய மக்களின் இதயங்களில் சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசத்தின் மதிப்பை உயர்த்தியுள்ளது.

வளரும் மொழியும் எழுத்தும்

திபெத்திய மொழியையும் எழுத்து முறைகளையும் பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், அஞ்சல் சேவைகள், தகவல் தொடர்புகள், போக்குவரத்து துறைகள், நிதித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பரவலாக திபெத்திய மொழிகள்தான் பயன்படுத்தப்படுகிறது. பொது இடங்களில் அறிவிப்பு பலகைகளில் திபெத்திய மொழியையும் சீன மொழியையும் பயன்படுத்துகின்றார்கள். இரு மொழிக் கொள்கை கல்வி நிலையங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

2015 ஆம் ஆண்டில் திபெத்திய மொழியில் சொற்களஞ்சியமும், தேசிய தர நிலை தகவல் தொழில்நுட்பமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி திபெத்திய மொழி வளர்ச்சிக்காக குறிப்பான சில திட்டங்களை உருவாக்கி அமுல்படுத்த ஆரம்பித்தது. மொழி வளர்கிறது என்று சொல்லுகிற பொழுது இக்காலத்தில் 1500 புதிய சொற்களை கண்டுபிடித்து திபெத்திய மொழிகளை வளர்த்தார்கள். 2020 ஆம் ஆண்டு திபெத்திய மொழிகளில் 2200 புதிய சொற்களை சேர்த்து திபெத்திய மொழியின் பயன்பாட்டு தளத்தை விரிவு படுத்தினார்கள். மொழி வளர்ச்சியிலும் எழுத்து சீர்திருத்தத்திலும் திபெத்திய அடையாளத்தை அழிக்காமல் வளர்த்தெடுக்கும் பணியினை இந்த செயல்கள் பறைசாற்றுகின்றன.

மற்றொரு முக்கியமான அம்சம் திபெத்திய மொழியில் வெளிவரக்கூடிய பத்திரிக்கைகள், புத்தகங்கள் ஆகியவையாகும். இவை அனைத்தும் திபெத்திய மொழிகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் பத்திரிகைகளும் கிடைத்தாலும் திபெத்திய மொழிகளில் வெளிவருவது என்பது எளிய மக்களையும் சென்றடைவதற்கான ஒரு வடிவமாக உள்ளது.

திபேத்தில் 40 அரசு வெளியீட்டு நிறுவனங்களும், பல்வேறு வகையான வெளியீடுகளை வெளியிடக்கூடிய 219 வெளியீட்டு நிறுவனங்களும் உள்ளன. இக்காலத்தில் இந்த வெளியீட்டு நிறுவனங்கள் 2.71 மில்லியன் புத்தகங்களை அச்சடித்து வெளியிட்டு இருக்கிறார்கள். இதேபோன்று 2.32 மில்லியன் பருவ இதழ்களை (வார மாத இரு மாத) வெளியிட்டு உள்ளார்கள். 2015 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு திபெத்தில் புத்தகம் மற்றும் பருவ இதழ்களின் விற்பனை 1.29 பில்லியன் யுவானை கடந்துள்ளது. திபெத்திய மொழியில் 17 பருவ இதழ்களும் 11 தினசரி செய்தித்தாள்களும் வெளிவந்து கொண்டிருக் கிறது.

 

மேலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு முன்னேற்றம் புரட்சிக்கு முந்திய காலத்தில் கிடைக்காத முக்கிய கட்டமைப்பாக நூலகங்கள் மாறி உள்ளது. நிர்வாக கிராமங்களில் 5,400க்கும் மேற்பட்ட நூலகங்கள் செயல்படுகிறது. திபெத்தில் மடாலயங்கள் எண்ணிக்கை அதிகம். மடாலயங்களில் 1700 க்கு மேற்பட்ட நூலகங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவை மதம் சார்ந்த நூலகங்கள் என்பதை கடந்து பொது அறிவுக்கான நூலகமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த இரண்டு நூலக கட்டமைப்புகள் மூலம் திபெத்திய கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகளும் மேய்ப்பர்களும் அறிவியல் மற்றும் கலாச்சார அறிவை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார்கள். இந்த பிராந்தியத்தில் பத்திரிக்கை மற்றும் வெளியீட்டு நிறுவனங்களின் வணிகமும் செழிப்படைந்து வருகின்றன.

திபெத்திய பாரம்பரிய மருத்துவத்தின் மகிமை

புரட்சிக்குப் பிறகு சீனா முழுவதும் பாரம்பரியமான மருந்துகள் சிகிச்சை முறையில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இந்த மருத்துவ முறைகள் பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு விதமான சிகிச்சை முறைகளையும் கொண்டுள்ளது. இதேபோன்று திபெத்திய பிராந்தியத்தில் பாரம்பரிய மருத்துவமும் சிறப்பு வாய்ந்தது. திபெத்தில் ஏற்கனவே திபெத்திய மருத்துவ பல்கலைக்கழகம் இருக்கிறது. இவற்றில் புதிய வளாகங்களை உருவாக்குவதற்கு ஒரு பில்லியன் யுவான்களை அரசு முதலீடு செய்து, திபெத்திய பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திபெத்தில் 49 திபெத்திய மருத்துவ நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டன.

திபெத்தில் இருக்கக்கூடிய கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் 42.4 சதவீதம் திபெத்திய மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய மருந்துகளுக்கு நவீன காலத்தில் மகத்துவம் இருக்காது. மதிப்பு குறைவாக இருக்கும் என்ற பொதுவான கருத்து மாற்றப்பட்டு சீன மக்கள் குடியரசு திபெத்திய மருந்துகளை தரப்படுத்தி முறையாக அளவீடு செய்து மேம்படுத்தி உள்ளது. இந்த மருந்துகள் வணிக அடிப்படையில் தயாரித்து வழங்கப்படுகிறது. வணிக தரத்தை வருகிற பொழுது அது பல்வேறு பகுதிகளுக்கு பயன்படக்கூடிய மருந்தாக மாறுகிறது.

 

மற்றொரு முன்னெடுப்பு திபெத்திய மருத்துவம் குறித்த 300க்கும் மேற்பட்ட பழங்கால ஆவணங்களை பல ஆண்டுகளாக தொகுத்து அவற்றை வெளியிட்டு உள்ளார்கள். திபெத்திய மருத்துவம் குறித்த பண்டைய புத்தகங்கள் 600க்கும் மேற்பட்டவை சேகரிக்கப்பட்டு பயன்படுத்தக்கூடிய முறையில் வெளியிடப்பட்டுள்ளது. மற்றொரு குறிப்பிடத்தக்க செயல் திபெத்திய மருத்துவத்தின் தலைசிறந்த படைப்பான நான்கு மருத்துவ க்ளாசிக் என்ற புத்தகம் உலக ஆசிய பசிபிக் பிராந்திய பதிவேட்டு துறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

நினைவுச் சின்னங்கள் வழியே கலாச்சார பயணம்

பாரம்பரிய கலாச்சாரத்தை உயிர்ப்பிக்க கூடிய முறையில் அவற்றை பயனுள்ள பாதுகாப்பில் வைத்துள்ளார்கள். திபெத்திய பிராந்தியத்தில் தற்போது மாநில அளவிலான மூன்று கலாச்சார மையங்களும், மாவட்ட அளவில் ஐந்து முக்கிய கலாச்சார நகரங்களும், 80க்கும் மேற்பட்ட கிராமங்கள், பாரம்பரியமான சீன கிராமங்கள் என்று திபெத்திய கிராமங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றில் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இன சிறுபான்மை கிராமங்கள் என்ற பட்டத்தை 29 கிராமங்கள் பெற்றுள்ளன.

பொதுவாக கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை தாங்கி நிற்கக்கூடிய பல இடங்கள் அனைத்து நாடுகளிலும் இருக்கும். அவற்றை பல நாடுகள் பாதுகாப்பார்கள் பல நாடுகள் பராமரிப்பற்று கைவிட்டு விடுவார்கள். அமெரிக்காவின் படையெடுப்பால் ஈராக், லிபியா, சிரியா போன்ற பல நாகரிகத் தொட்டில்கள் சிதைக்கப்பட்டது. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் சுடுகாடாக மாற்றி வருகிறது. திபெத்தில் இப்படிப்பட்ட இடங்களை உள்ளூர் அரசும் மாவட்ட நிர்வாகமும் ஆய்வு செய்து கண்டுபிடித்து பதிவு செய்து உள்ளன. திபெத்திய பிராந்தியத்தில் 4468 வரலாற்று தளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று 2373 கலாச்சார நினைவுச் சின்னங்கள் அரசாங்க அமைப்பின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 70 கலாச்சார சின்னங்கள் மத்திய அரசின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. திபெத்தில் இருக்கக்கூடிய எந்த விதமான கலாச்சார வரலாற்றுச் சின்னங்களும் இதுவரை அழிக்கப்படவில்லை. இதற்கு மேலாக பொட்டலா அரண்மனை வரலாற்று குழுமம் அமைக்கப்பட்டது. இந்த அரண்மனை குழுமம் பட்டியலிடப்பட்டுள்ள அரண்மனைகளை உலக பாரம்பரிய பட்டியலில் பதிவு செய்து உள்ளனர். எண்ணற்ற மடாலயங்கள் கட்டிடக்கலையிலும் ஓவியங்களிலும் சிறந்து விளங்குகிறது வரலாற்றை காட்சிப்படுத்துகிறது. அவற்றை சீரமைத்து புதுப்பித்து பாதுகாக்கும் வேலைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு செய்து வருகிறது.

இந்தப் பணியின் தொடர்ச்சியாக நவீன வசதிகளை பயன்படுத்தி 2013 ஆம் ஆண்டு முதல் 1,00,000க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற கலாச்சார நினைவு சின்னங்களை டிஜிட்டல் காப்பகத்தின் மூலம் பாதுகாத்து வருகின்றனர். மேலும் மிக முக்கிய கண்டுபிடிப்பாக விளங்குகிற தேயிலை இலைகளில் எழுதப்பட்ட மார்கிஸ் எழுத்து முறைகளையும், அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட 1800 ஆண்டுகளுக்கு முந்தைய பறவை, சில விலங்குகள் திபெத் பிராந்தியம் பட்டு சாலைகள் மூலமாக சீனாவின் இதரப் பகுதிகளுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தி இருந்தது என்ற வரலாற்றையும் பாதுகாத்து வருகிறார்கள். திபெத்தில் இருக்கக்கூடிய அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பில் ஒரு இடத்தை சீனாவின் பத்து முக்கிய அகழ்வாராய்ச்சி இடங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. சீன நாகரிகத்தின் சிறப்பின் ஒரு பகுதியாக பிரிக்க முடியாத அங்கமாக இருப்பதை வரலாற்றின் சின்னமாக போற்றி வருகிறார்கள்.

திபெத்தில் மில்லியன் கணக்கான அடிமைகளை விடுதலை செய்யப்பட்டதின் நினைவாக பெரும் நினைவு மண்டபத்தை உருவாக்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து உள்ளனர். வரலாற்றின் நினைவுகள் அழிந்து போகாமல் நினைவு கூறுவதாக அவை உள்ளது. திபெத் பிராந்தியத்தின் இரண்டு பீடபூமிகளை இணைக்கும் பெரும் சாலைகளை அமைப்பதில் இறந்தவர்களுக்காக நினைவு மண்டபத்தையும், திபெத் வரலாறு பற்றிய கண்காட்சி மண்டபத்தையும், பொட்டலா அரண்மனையின் கண்காட்சி, அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதற்கான நினைவுச் சின்னமாக சியான்சியில் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து மடிந்த திபெத்தியர்களின் நினைவுச் சின்னங்களையும், புரட்சிகர போராளிகளின் தியாக சின்னத்தை லின்ஸோவிலும் அமைத்து உள்ளார்கள். திபெத்திய விடுதலையிலும் வளர்ச்சியிலும் சீன விடுதலை ராணுவத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் நினைவு கூறக்கூடிய பல்வேறு விதமான நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் கூடவே சீனபண்புகளுடன் கூடிய சோஷலிசத்தை முன்னெடுத்த செல்லக்கூடிய முறையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, சீன மக்கள் குடியரசின் வரலாறு, 1978ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட சீர்திருத்தம் மற்றும் திறப்பு கொள்கையின் வரலாறு, சோஷலிச வளர்ச்சியின் வரலாறு என அனைத்தும் கல்வி கலாச்சார நடவடிக்கையில் மூலமாக திபெத்திய மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. திபெத்தில் உள்ள அனைத்து இனக்குழுக்களின் அதிகாரிகளும், மக்களும் நமது தேசம், நமது நாடு, நமது வரலாறு, கலாச்சாரம் ,நமது மதம், பற்றிய புரிதலை சரியான முறையில் வளர்த்துக் கொள்ள மேற்கண்ட கலாச்சார நடவடிக்கைகள் பெரும் உதவி செய்துள்ளது.

திபெத்திய மக்கள் பயன்படுத்திய பொருட்கள், கலாச்சார பொருட்கள், பாரம்பரியமாக பயன்படுத்திய கருவிகள், அனைத்தையும் பாதுகாப்பதற் காக சீன மக்கள் குடியரசு 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 325 மில்லியன் யுவான்களை ஒதுக்கீடு செய்து பாதுகாக்கும் ஊழியர்களுக்கான பயிற்சி அளித்து பாதுகாத்து வருகிறது. சீனாவின் நூலகங்களில் திபெத்திய வரலாறு, கலாச்சாரம், பொருளாதாரம் என அனைத்தும் அடங்கிய தொகுதிகள் முழுமையாக வைக்கப்பட்டுள்ளது. திபெத்தை 618 ஆம் ஆண்டுகளிலிருந்து ஆட்சி செய்தவர்கள் முதல் செம்படைகளால் விடுதலை செய்யப்பட்ட காலம் வரையிலான பிரம்மாண்டமான வரலாறும் பாதுகாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பெரும் நகரங்கள் அருங்காட்சியங்கள் மண்டபங்களைக் கடந்து, திபெத்தில் ஐந்து அடுக்கு பொது கலாச்சார சேவை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக திபெத்திய பிராந்தியத்தின் அனைத்து நகரங்களிலும். மாவட்டங்களிலும் நூலகங்கள். மக்கள் கலை அரங்குகள். அருங்காட்சியங்கள். கலாச்சார மையங்கள். கலாச்சார செயல்பாட்டு நிலையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

திவ்ய பிராந்தியத்தில் பத்துக்கு மேற்பட்ட தொழில் முறை நிகழ்த்து கலை குழுக்கள் இருக்கிறது. மாவட்ட அளவில் 76 கலை குழுக்களும், பகுதி நேர அளவில் செயல்படக்கூடிய திபெத்திய ஒபேரா நாடகக் குழுக்களும் செயல்படுகிறது. இதற்கு அடுத்து டவுன்ஷிப்களில் 395 கலைக் குழுக்கள் உள்ளது. நிர்வாக கிராமங்களில் 5492 மக்கள் கலை குழுக்கள் செயல்படுகிறது. கலைகுழுக்கள் மூலமாக கலாச்சார நடவடிக்கைகள் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. இந்த குழுக்களில் மொத்தம் ஒரு லட்சம் தொழில் முறை மற்றும் அமெச்சூர் கலைஞர்கள் உள்ளனர்.

வானொலி தொலைக்காட்சி திரைப்படம்

திபெத்திய பிராந்தியத்தில் திரைப்படங்கள் வெளியிடுவதும், தொலைக்காட்சி பயன்படுத்தக்கூடியவர்களும், வானொலி பயன்படுத்தக் கூடியவர்களும் வேகமாக அதிகரித்து வருகிறார்கள். திபெத்திய மக்கள் தொகையில் 99 சதவீதம் மக்கள் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பயன்படுத்துகிறார்கள். 2022 ஆம் ஆண்டின் இறுதியில் திபெத்தில் 191 திரையரங்குகள் இருக்கிறது. இவை தவிர 478க்கு மேற்பட்ட டிஜிட்டல் திரைப்பட வசதிகள் செயல்படுகிறது. திபெத்திய சிறுபான்மை மொழியிலிருந்து 80க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பிரதான மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்லது டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது. வானொலி தொலைக்காட்சி திரைப்படங்களின் மூலமாக திபெத்திய மக்களின் வருமானம் அதிகமாகி உள்ளது

கலாச்சார துறைகளில் வேலை வாய்ப்பு

கலாச்சார துறைகளின் செயல்பாட்டால் அவை நிறுவனப் படுத்தப்படுகிற பொழுது வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது. தனித்துவமான பண்புகளைக் கொண்ட கலாச்சார துறையின் வளர்ச்சியை விரிவு படுத்துவதற்காக கலாச்சார மற்றும் சுற்றுலாவை ஆழமான முறையில் ஒருங்கிணைத்து உள்ளார்கள். 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 8,000 மேற்பட்ட கலாச்சார நிறுவனங்களை பதிவு செய்து உள்ளார்கள். இந்த நிறுவனங்கள் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளது. கலாச்சாரம் மற்றும் அது தொடர்புடைய தொழில்களில் இந்தக் காலத்தில் மட்டும் 6.3 பில்லியன் யுவான் வருமானம் பெறப்பட்டுள்ளது. திபெத்திய பிராந்தியத்தில் நான்கடுக்கு முறைகளில் 344 கலாச்சார மாதிரி பூங்காக்களும், தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 13 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் 91 கலாச்சார திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தினார்கள். இவற்றின் மொத்த முதலீடு 50 பில்லியன் யுவான் ஆகும். திபெத்திய கலாச்சாரத்தை அனைத்து வகைகளிலும் மேம்படுத்தி பாதுகாத்து வளர்ச்சி அடையக்கூடிய செயலை சீன மக்கள் குடியரசு சீன பண்புகளுடன் கூடிய சோஷலிச அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது.

விளையாட்டில் வீரர்களின் வருகை

திபெத்திற்கென்று பாரம்பரிய விளையாட்டுக்கள் இருக்கிறது. இந்த விளையாட்டுகளை மேம்படுத்தி வருகிறார்கள். மலை விளையாட்டுக்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. இவற்றுக்கான அனைத்து விதமான வசதிகளையும் திட்டமிடலில் கொண்டு வந்து செயல்படுத்துகிறார்கள். இதர விளையாட்டுப் போட்டிகளிலும் திபெத்திய விளையாட்டு வீரர்கள் படிப்படியாக தங்களது செயல் திறனை அதிகப்படுத்தி வருகின்றனர்.

 

சர்வதேச விளையாட்டுக்கள் மற்றும் உள்நாட்டு நிகழ்வுகளில் திபெத்திய பிராந்திய விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டங்களின் மூலம் திபெத்திய இளைஞர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு நிகழ்வுகளில் 241 பதக்கங்களை பெற்றனர். 2018 ஆம் ஆண்டு ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள வீரர் டோப்ஜி ஆண்கள் தொடர் ஓட்டத்தில் வெண்கல பதக்கத்தை வென்றார். சீனா இதுவரை அடைந்த வெற்றிகளில் இதுவும் முக்கியமானதாகும். இவர் திபெத்திய விளையாட்டு வீரர். இதேபோன்று பனி சறுக்கு, மலை ஏறுதல், ஓட்டப்பந்தயம் போன்றவற்றிலும் திபெத்திய வீரர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். 2021 ஆண்டு நடைபெற்ற 14 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் திபெத்திய பிராந்திய விளையாட்டு வீரர்கள் 3 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களையும் வென்றனர். திபெத் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் அவர்கள் திபெத்திற்கு வெளியில் நடைபெறக்கூடிய விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற ஆரம்பித்து விட்டனர். புரட்சிக்கு முந்தைய திபெத்தில் இவையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

திபெத்திய வளர்ச்சிகளில் உள்கட்டமைப்பு. வேலைவாய்ப்பு. பொருளாதார வளர்ச்சி. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன். திபெத்தின் கலாச்சார வளர்ச்சி மிக முக்கியமான தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. பாரம்பரிய கலாச்சார மதிப்புகளை முதலாளித்துவ அரசுகள் அழித்தும் வருகிற பொழுது அதை பாதுகாக்க கூடிய பணியை சீன மக்கள் குடியரசு செய்து வருவதுடன் திபெத்தை சீன சோஷலிசத்தின் ஒரு பகுதியாக சிறப்பு கவனம் செலுத்தி மேம்படுத்தி வருகிறது.

அ.பாக்கியம்

 

வியாழன், நவம்பர் 27, 2025

48 திபெத்: உலகின் கூரையில் ஒழிக்கப்பட்ட வறுமை

 



அ.பாக்கியம்

வருமானத்தை சமமாக

பங்கிடாமல்

வறுமை ஒழிப்பு பற்றி

பேசுவது பயனற்றது.-

 ஜி சின் பிங்

 

சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீன மக்கள் குடியரசின் வெற்றியின் மூலம் உலகின் கூரை என்று அழைக்கப்படுகிற திபெத்தில் வறுமை ஒழிப்பின் ஒளி பிரகாசமாக எரியத் தொடங்கியது. உயிர் வாழ்க்கை மலைகளின் உச்சியில் இருந்தாலும், வாழ்வாதாரம் படு பாதாளத்தில் கிடந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வறுமையே வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள் புரட்சிக்கு பிறகு வளமையின் செழிப்பை அறியத் தொடங்கி விட்டார்கள்.

2012 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18 வது தேசிய காங்கிரஸ் நடைபெற்றது. இந்த காங்கிரஸில் சீனா முழுவதும் வறுமை ஒழிப்பை தீவிர படுத்துவதற்கான விரிவான திட்டம் தீட்டப்பட்டது. அதிலும் குறிப்பாக மிகவும் பின்தங்கிய திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் வறுமையை ஒழிப்பதற்காக கூட்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கட்சி காங்கிரஸ் முடிவெடுத்தது. இதற்காக சிறப்பு திட்டங்களை உருவாக்கினார்கள். தொடர்ந்து ஐந்தாண்டு காலம் உருவாக்கிய திட்டங்கள் அமுலாக்கிய விதங்கள் பற்றியும், தேசிய அளவில் கூட்டங்களை நடத்தி பரிசீலனை செய்து மேலும் காலத்துக்கேற்ற மாற்றங்களை செய்து வந்தனர். மேற்கண்ட கட்சி காங்கிரஸில் சீன நாட்டில் இருக்கக்கூடிய அரசுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் திபெத்தின் வளர்ச்சிக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தது. இதனைத் தொடர்ந்து 13-வது ஐந்தாண்டு திட்டத்தில் (2016-2020) விபத்தில் வறுமை ஒழிப்பதற்காக குறிப்பான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு அதை நோக்கிய முன்னெடுப்புகள் தீவிர படுத்தப்பட்டன

திபெத் பிராந்தியத்தில் வறுமையில் வாழக்கூடிய மக்களின் துல்லியமான கணக்கு எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து. இதற்கான அதிகாரிகளை ஒருங்கிணைக்க அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அதிகாரிகள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு திபெத்தின் மூளை முடுக்கெல்லாம் சென்று வறுமையின் உண்மையான நிலைமையை சேகரித்தனர். மிகவும் சவால் நிறைந்த பகுதிகளுக்கு இந்த அதிகாரிகள் சென்று விவரத்தை சேகரிக்கிற பொழுது சிலர் தங்கள் உயிரையும் விட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை மூலமாக 70 பக்கத்திற்கான செயல்திட்டத்தை திபெத்திய பிராந்தியத்தில் அமுலாக்க வரையறுத்தனர்.

வறுமை என்பது வாய்க்கும் வயிற்றுக்குமான பிரச்சனை மட்டுமல்ல. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள குடியரசு வறுமை ஒழிப்பு என்பது பொருளாதார நடவடிக்கைகளை அதிகப்படுத்துவது, வாழ்வதற்கு தகுதியற்ற இடங்களை கைவிட்டு புதிய இடங்களுக்கு செல்வது, கல்வியின் மேம்பாடு சுற்றுச்சூழல் மேம்பாடு சமூக பாதுகாப்பு என ஐந்து தளங்களில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்று துல்லியமாக முடிவெடுத்தது. வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி, மிகவும் இணக்கமான வாழ்க்கை, வேலை வாய்ப்புகள், வசதியான உள்கட்டமைப்பு, மிகவும் அடிப்படையான பொது சேவைகள் ஆகிய அனைத்தும் கிடைக்கும் பொழுதுதான் ஒருவர் முழுமையாக வறுமையில் இருந்து விடுபடுகிறார் என்று அர்த்தமாகும் என சீன மக்கள் குடியரசு முடிவெடுத்து அமலாக்கியது. ஆகவே திபெத்தில் வறுமையை ஒழித்து விட்டார்கள் என்றால் இந்த அனைத்து வசதிகளுடனும் கூடிய வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று தான் அர்த்தம்.

இந்தத் திட்டத்தை அமல்படுத்த களத்தில் இறங்கிய பொழுது திபெத்தில் உள்ள 74 மாவட்டங்களில் 6,28,000 லட்சம் ஏழைகள் வறுமையில் வாடுகிறார்கள் என்று கணக்கிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு இறுதியில் முற்றிலுமான வறுமை ஒழிக்கப்பட்டது. திபெத்திய வரலாற்றில் முதல்முறையாக வறுமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இஷ்டப்பட்ட இடமாற்றம் 

 

திபெத்திய வறுமை ஒழிப்பு திட்டத்தில் இதுவரை எங்கும் கடைப்பிடிக்காத ஒரு பகுத்தறிவு பூர்வமான திட்டம் கடைபிடிக்கப்பட்டது. கணிசமான மக்கள் மிக உயர்ந்த, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழ்ந்தார்கள். சீதோஷன நிலை மிகவும் துன்புறுத்தக் கூடியதாக இருந்தது. இந்த மக்களுக்கு வறுமை ஒழிப்பு என்றால் உணவை எளிதில் வழங்கி விடலாம். ஆனால் அது மட்டும் வறுமையை ஒழித்து விடாது என்ற நோக்கத்தில் செழிப்பான பகுதிகளுக்கு கிராமங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். சிறந்த உள் கட்டமைப்புகளும் வேலை வாய்ப்புகளும் உருவாகக்கூடிய பகுதிகளுக்கு மாற்றினார்கள். இந்த இடம் மாற்றத் திட்டத்தில் 965 கிராமங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் 2,66,000 லட்சம் மக்கள் புதிய இடங்களில், புதிய வீடுகளில், புதிய வசதிகளுடன் குடியமர்த்தப்பட்டார்கள். இந்தத் திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அமலாக்கினார்கள்.

திட்டத்தைப் பற்றி தெரிவிக்கிற பொழுது கிராமத்தில் இருந்த சில பெரியவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியே வருவதற்கு மறுத்து விட்டனர். கிராமத்திலிருந்து வயது குறைவானவர்கள் வேறு இடங்களுக்கு செல்வதில் ஆர்வமாக இருந்தனர். எனினும் வரமறுத்த பெரியவர்களையும் மற்றவர்களையும் புதிய இடங்களை காண்பித்தும், அங்கு இருக்கக்கூடிய வசதிகளையும், வேலை வாய்ப்புகளையும் தெளிவான முறையில் எடுத்துரைத்த பிறகு தன்னார்வத்துடன் இடம்பெயர ஒத்துக் கொண்டார்கள். விவசாயிகளும், மேய்ப்பர்களும் திபெத்திற்கு உள்ளேயோ அண்டை மாநிலங்களிலோ வேலை செய்வதற்கு ஆர்வமாக இருந்தார்கள். உள்ளூர் மக்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த ஊருக்கு வெளியே வேலை செய்து புதிய திறமைகளை கற்றுக் கொள்வதற்கும் விருப்பத்தை தெரிவித்தார்கள்.

இதற்கான உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்போது மக்கள் கூடுதலான முறையில் இடமாற்றம் தேவை என்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அரசு அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான வாழ்வாதாரத்தையும் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அரைகுறையான பணிகள் மக்களின் வறுமையை ஒழிக்காது என்ற காரணத்தினால் முழுமையான முறையில் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தீபத்திய தலைவர் தெரிவிக்கிறார். வறுமை ஒழிப்பில் இது ஒரு புதிய முயற்சியாகும். இந்த இடப்பெயர்வுகளை முதலாளித்துவ பத்திரிகைகள் மக்களை சொந்த ஊர்களில் இருந்து வெளியேற்றுகிறார்கள் என்று ஊதி தள்ளுகிறார்கள் உண்மை இதற்கு நேர்மாறானது.

தரமான விவசாயமும் வருமானமும்

 

வறுமையை ஒழிக்க மற்றொரு முயற்சி விவசாயத் துறையில் எடுக்கப்பட்டது. பாரம்பரியமான விவசாய கருவிகளை வரலாற்றின் ஒரு பகுதியாக ஒதுக்கி வைத்துவிட்டு புதிய இயந்திரங்களின் மூலம் விவசாயத்தில் ஈடுபட்டனர். இதன் பிரதான அம்சமாக நிலங்களின் தரத்தை உயர்த்தினார்கள். உயர்தரமான விவசாய நிலங்களை உருவாக்கினார்கள். இக்காலத்தில் பிரதான பயிர்களை வளர்ப்பதற்கு ஏற்ற நிலங்கள் 65% இயந்திரமயமாகியது.

இதன் விளைவாக தரப்படுத்தப்பட்ட கால்நடை பண்ணைகளும், கோழி வளர்ப்புக்கான பண்ணைகளும் அனைத்து மாவட்டங்களிலும் உருவானது. இவை இரண்டுக்குமான சேவை மையங்களும் அனைத்து மட்டத்திலும் அமைக்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சிக்கான சரியான பாதையை கண்டறிய உள்ளூரில் இருக்கும் கச்சா பொருட்களை முதலில் பயன்படுத்தி தொழிலை உருவாக்கினார்கள்.

பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க சாங் கிங்2000, ஜிமாலா22 போன்ற உயர்நில பார்லி இனங்களை நவீன முறையில் பயிரிட்டு விளைச்சளை அதிகரித்தார்கள். இவற்றுடன் கூடவே கால்நடை எண்ணிக்கைகளை அதிகப்படுத்துவதற்காக குறிப்பாக பகிரியாக், ரிவோக் யாக் போன்ற காட்டு எருதுகளும், செம்மறி ஆடுகள் ஆகியவற்றின் வளர்ப்பிலும் புதிய முறைகளை புகுத்தி நவீனப்படுத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக புதிய கிராமப்புற கூட்டு பொருளாதார அமைப்புகளின் எண்ணிக்கை 6,172 என்ற அளவு உயர்ந்தது. கூட்டுறவு அமைப்புகளின் உயர்வு விவசாய உற்பத்தியையும் உயர்ந்தது.

வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 4 தொழில் துறை க்ளஸ்ட்ரஸ், ஏழு தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. விவசாயம் சார்ந்த தொழில்களை உருவாக்குவதற்காக 18 நகரங்களை தேர்ந்தெடுத்து அதில் இருக்கக்கூடிய மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினார்கள். விவசாயம் சார்ந்த தொழிற்கருவிகளை உற்பத்தி செய்யக் கூடியதாக இந்த 18 தொழில் நகரங்களும் அமைந்தது. வறுமையால் வாடிய கிராமப்புறத்தில் மக்கள் தங்கள் சொந்த கிராமத்தில் இருந்து வெளிப்பகுதிகளுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். மேற்கண்ட தொழிற்துறை பூங்காக்கள், விவசாயம் சார்ந்த தொழில்களின் மூலமாக இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு வேலை கிடைத்தது. இதற்கு மேலாக வெளியில் வந்து வேலை செய்ய முடியாத மக்களுக்காக வீடுகளிலோ அல்லது அதற்கு அருகாமையிலோ வேலை செய்யக்கூடிய வகையில் வாய்ப்புகளை வழங்கும் விதமாக 173 பாரம்பரியமான கலாச்சார தொழிற்பட்டறைகள் கட்டி வேலைவாய்ப்பை வழங்கினார்கள்

உற்பத்தியையும் விநியோகத்தையும் இணைக்க கூடிய வகையில் தொழில்துறை சங்கிலிகளை விரிவு படுத்தினார்கள். 2020 ஆம் ஆண்டில் 162 முன்னணி விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு நிறுவனங்கள் இருந்தன. இவற்றின் செயல்படும் முதலீட்டு மதிப்பு 5.7 பில்லியன் யுவான் ஆகும். இது 2015 ஆம் ஆண்டை விட இரு மடங்கு அதிகமான தொகையாகும்.

பொருள் விநியோகத்திற்கு வழக்கமான சந்தைகளைக் கடந்து மின் வணிகத் திட்டங்களை மேம்படுத்தினார்கள். வறுமை ஒழிப்பின் மற்றொரு வேலைவாய்ப்பாகவும், பொருட்களின் விற்பனைகளை அதிகப்படுத்து வதற்கும் இந்த ஆன்லைன் விற்பனை முறைகள் பெரும் பங்காற்றியது. இவற்றை மேம்படுத்துவதற்காக திபெத் பிராந்திய அரசு தனது பட்ஜெட்டில் 897 மில்லியன் யுவான்களை ஒதுக்கியது. தொற்றுநோய் காலத்தில் மட்டும் திபெத் பிராந்தியத்தில் 27 மாவட்டங்கள் மின் வணிக தளங்களை உருவாக்கி 200 மில்லியன் யுவானுக்கு மேல் வணிகம் செய்தார்கள். இந்த வணிகத்தில் 263 க்கு மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்தப் பொருட்களை வறுமை ஒழிப்பு திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்று பட்டியலிட்டு விற்பனை செய்தனர். நகர்ப்புறங்களில். அருகாமை மாநிலங்களில் நுகர்வோர்கள் வறுமை ஒழிப்பிற்காக இந்த பொருட்களை வாங்க வேண்டும் என்ற முறையில் பொருட்களை வாங்கினார்கள். மேற்கண்ட 263க்கும் மேற்பட்ட வறுமை ஒழிப்பு தயாரிப்பு பொருட்கள் 150 மில்லியன் யுவான்களுக்கு மேல் குறிப்பிட்ட ஆண்டில் விற்பனையானது.

2016 ஆம் ஆண்டு முதல் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் வறுமை ஒழிப்புக்காக மட்டும் 75.4 பில்லியன் யுவான்கள் ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்பட்டது. உள்ளூர் வணிகங்களை மேம்படுத்துவதற்காக 307 வணிகத் திட்டங்களை அமலாக்கினார்கள். இந்த வகையில் 2,38000 பதிவு செய்யப்பட்ட ஏழைகள் மறுமையில் இருந்து மீட்கப்பட்டனர்.

சூரியனின் விதி மட்டும் அல்ல

 

கிழக்கில் உதித்து மேற்கில் மறைவது சூரியனின் நிகழ்வு.. சோசலிச பொருளாதாரத்தில் திட்டமிட்ட பொருளாதாரம் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை குறைப்பதற்கான ஒரு வடிவமாகும். வளர்ச்சி அடைந்த பகுதிகளை வளர்ச்சி அடையாத பகுதிகளுக்கு உதவி செய்வது என்பது திட்டமிட்ட பொருளாதரத்தின் பணிகளில் ஒன்று. இதன் மூலம் பிரதேச அளவிலான ஏற்றத்தாழ்வை குறைக்க முடியும். 1990 ஆம் ஆண்டின் நடுப்பகுதிகளில் சீனாவின் கிழக்குப் பகுதிகள் பெரும் வளர்ச்சி அடைந்தன. ஷாங்காய் உட்பட அவற்றை சுற்றி இருக்கக்கூடிய 10 பெருநகரங்கள் இந்த வளர்ச்சியின் மையமாக இருந்தது. இந்த வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் உதவியுடன் மேற்குப் பகுதியாகிய திபெத் பிராந்தியத்திற்கு உதவி செய்வதற்கான வறுமை ஒழிப்பு சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 19.52 பில்லியன் யுவான் மதிப்புடைய 313க்கு மேற்பட்ட திட்டங்களை திபத்தில் நிறைவேற்றினார்கள். கிழக்குப் பகுதியில் இருந்து நூற்றுக் கணக்கான மருத்துவர்கள், ஆசிரியர்களும் திபெத்திய பிராந்தியத்திற்கு வந்து உதவி செய்தார்கள். இந்த இணைப்பின் தொடர்ச்சியாக திபெத் பிராந்தியத்தை சேர்ந்த 8,000க்கு மேற்பட்டவர்கள் கிழக்கில் உள்ள நகரங்களுக்கு வேலைக்கு சென்றார்கள். இவர்களில் 5000 பேர்கள் பட்டதாரி இளைஞர்கள். இந்தத் திட்டத்தின் மூலம் திபெத்திலிருந்து படித்தவர்கள் கிழக்கில் இருக்கும் நகரங்களுக்கு வேலைக்கு செல்வது வாடிக்கையாக மாறியது. இது அவர்களின் பொருளாதார வளத்தை மேம்படுத்தியது.

மற்றவர்களின் நுகர்வும் ஏழைகளின் வயிறும்

 

Covid-19 காலத்தில் ஒட்டு மொத்த சீனாவிலும் மக்களை அதிகம் வாங்க வைப்பதற்காக கைகளில் பணத்தை கொடுத்து செலவழிக்க வைத்தார்கள் இதன் மூலம் கோவிட் காலத்தில் இயங்காமல் இருந்த தொழிற்சாலைகள் விவசாய தொழில்கள் அனைத்தும் இயங்கத் துவங்கியது. மீண்டும் பொருளாதார சுழற்சி ஏற்பட்டது. எனவே இதன் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணங்களில் உள்ள அரசு நிறுவனங்கள் மேற்குப் பகுதியில் உள்ள திபெத் உட்பட சில மாநிலங்களில் இருந்து பொருட்களை வாங்குவதன் மூலமாக திபெத்திய பொருளாதார சுழற்சியும் வேலை வாய்ப்பு பாதுகாக்கப்பட்டது. இதற்காக மேற்குப் பகுதியில் உற்பத்தியாக கூடிய பொருட்களின் தரச் சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டது அவற்றையே கிழக்கு மாகாண அரசு நிறுவனங்கள் வாங்கினார்கள் இதன் மூலம் 26. 43 பில்லியன் யுவான் பொருட்கள் விற்பனையானது.

வறுமை ஒழிப்பு திட்டத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உள்கட்டமைப்பு இருந்தாக வேண்டும். நீர், மின்சாரம், சாலைகள், தொலைத்தொடர்பு, இணைய வசதிகள்இ உள்ளிட்டவைகள் மேம்படுத் தப்பட்டன. திபெத்திய பிராந்தியத்தில் 17,581 குடிநீர் திட்டங்களை இக்காலத்தில் கட்டியிருக்கிறார்கள் இதனால் 20 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளும் கால்நடை வளர்ப்பும் பயனடைந்தார்கள். அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் கொடுப்பது, அனைத்து கிராமங்களையும் இணைக்கு வகையில் 38200 km புதிய சாலைகள், கிராமங்கள் தோறும் 5g இணையதளம் வழங்கக்கூடிய முறையில் பிராட் பேண்ட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தீபத்தில் உண்மையான வறுமை ஒழிப்பு என்பது இந்த அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாகும்.

வறுமை ஒழிப்பின் மற்றொரு நடவடிக்கை கல்வி வசதிகளை வழங்குவது. கட்டாய கல்விக்கு வரக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும் அனைத்தும் இலவசம் ஆகும். இடைநிலை தொழிற்கல்விக்கு ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்பட்டு இதுவரை 3,40,500 மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

தீபத்தில் வளர்ச்சியின் காரணமாக மக்கள் தொகையும் வளர்ந்து வருகிறது தற்போது 36 லட்சம் மக்கள் தொகை இந்த பிராந்தியத்தில் இருக்கிறது பழமையான கலாச்சாரங்களின் காரணமாக பெண்கள் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்ல மறுத்தனர். இதனால் தாய் சேய் இறப்பு விகிதம் பல மடங்கு அதிகமாகியது. திபெத்திய பிராந்திய அரசாங்கம் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு மருத்துவ வசதிகளை கர்ப்பிணிப் பெண்களுக்கு மானியங்களை வழங்குவதன் மூலம் பெண்கள் மருத்துவமனைக்கு செல்வதை ஊக்குவித்தார்கள். விஞ்ஞானபூர்வமான காரணங்களை விளக்கினார்கள். இதனால் மருத்துவமனையை நோக்கிய பிரசவங்களின் எண்ணிக்கை அதிகமானது. தாய் சேய் இறப்பு விகிதம் குறைந்தது

சில காலங்களில் மக்கள் பாதிக்கப்படுகிற பொழுது கூட அவர்கள் வறுமையில் வாழக்கூடாது என்பதற்காக இந்த பிராந்தியத்தில் மட்டும் 110 000 மக்கள் தேசிய குறைந்தபட்ச வாழ்வாதார மானிய திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கான குறைந்தபட்ச மானியங்கள் ஒரு நபருக்கு 4713 யுவானிலிருந்து 7070 யுவானாக உயர்ந்து தற்போது 13213 யுவான் என்ற அளவிற்கு வழங்கப்படுகிறது. காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ற முறையில் இந்த மானியங்களின் தொகை மாற்றி அமைக்கப்படுகிறது.

திபெத் என்றால் சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய இடம். எனவே இந்தத் துறையும் வேலை வாய்ப்பை வழங்க கூடிய துறை ஆகும். வறுமை ஒழிப்பின் ஒரு திட்டமாக பின்தங்கிய சில பகுதிகளில் சுற்றுலா தலங்களை மேம்படுத்தினார்கள். திபெத்திய கலாச்சார சுற்றுப்பயணம், சுய ஓட்டுனர் சுற்றுப்பயணம், குளிர்கால சுற்றுப்பயணம் போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்ட அமுலாகியது. இந்தத் திட்டங்கள் மூலம் கிராமப்புறங்களில் சுற்றுலாவின் வருகை அதிகமாகியது. கிராமங்களில் இருக்கக்கூடிய மக்கள் தங்கள் வீடுகளை குடும்ப விடுதிகளை திறந்து சுற்றுலாப் பயணிகளை தங்குவதற்கான உணவளித்து உபசரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான வசதிகளையும் பிராந்திய அரசாங்கம் செய்து கொடுத்தது. இதன் விளைவாக ஆண்டுக்கு 86 000 வேலை வாய்ப்புகள் உருவாகியது. தனிநபர் வருமானம் பல மடங்கு அதிகமாகியது. திபெத் பிராந்தியத்திற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு மூன்று கோடியே தாண்டுகிறது. கிராமப்புற சுற்றுலா மூலம் அடுத்த அடுத்த ஆண்டுகளில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளது. திபெத்திய பாரம்பரிய கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இருக்கக்கூடிய சிற்பக் கலைகள், ஜவுளி உடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், பிற கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை தயார் செய்வதன் மூலம் இருவகையான தேவைகளை பூர்த்தி செய்தார்கள் ஒருபுறம் இவைத்திய பாரம்பரியத்தை பாதுகாப்பது மறுபுறத்தில் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவது இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கலாச்சார தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பிற்காக கிராமங்களை வளமான பகுதிக்கு இடமாற்றம் செய்வதை மேலே படித்தோம். இதே நேரத்தில் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய பாழடைந்த வீடுகளை புதுப்பித்து வழங்குவதும், வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்தவர்களை மேம்படுத்துகிற அதே நேரத்தில் ஊனமுற்றவர்கள், அனாதைகள், விதவைப் பெண்கள் போன்றவர்களுக்கும் சிறப்பு குடியிருப்பு திட்டங்களை வழங்கினார்கள். திபெத்போன்ற பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய காலகட்டத்தில் அவற்றை தாங்கக் கூடிய முறையில் பழைய பாணியிலான வீடுகள் இல்லை. எனவே அவ்வாறு இருந்த வீடுகளை புதுப்பித்து சில கிராமங்களில் முற்றிலுமாக அகற்றிவிட்டு பூகம்பத்தை தாங்கும் சக்தி உடைய வீடுகளை கட்டினார்கள்.

2016 ஆம் ஆண்டு முதல் 2900 விற்கும் மேற்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களில் 39.89 பில்லியன் யுவான்களை செலவழித்து 2.5 லட்சம் மக்களை தீவிர வறுமையில் இருந்து மீட்டுள்ளார்கள். சராசரி ஆண்டு தனிநபர் செலவழிப்பு வருமானம் 2022 ஆம் ஆண்டு 13,800 யுவான்களை தாண்டி சென்றது.

தற்பொழுது திபெத்தில் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டு இருக்கிறது. துல்லியமாக எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி 628000 மக்கள் வறுமையிலிருந்து மீட்டெடுத்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். அனைத்து விதமான நவீன வசதிகளுடன் கூடிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் வறுமை ஒழிப்பு திட்டத்தின் அடிப்படையான தீர்வு என்பதை முடிவெடுத்து அவற்றை கடைநிலை மக்களுக்கும் கொண்டு சேர்த்து மேம்படுத்தி இருக்கக்கூடிய சாதனையை சீன சோஷலிசம் நிகழ்த்தியுள்ளது.

திபெத்திய சுதந்திரத்தைப் பற்றி உலகம் முழுவதும் பேசக்கூடிய ஏகாதிபத்தியவாதிகள், அங்கு இடம் மாற்றம் செய்யக் கூடிய விஷயத்தையும், வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுகிற பொழுது திபெத்திய மக்களை அடக்குகிறார்கள், வெளியேற்றுகிறார்கள் இயற்கையை சுரண்டுகிறார்கள் என்று பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள். உண்மை நிலைமை இதற்கு மாறாக இருப்பதினால் திபெத்திய மக்களை ஏகாதிபத்தியவாதிகளால் திசை திருப்ப முடியவில்லை.

அ.பாக்கியம்

 

புதன், நவம்பர் 19, 2025

47 திபெத்: மக்களுக்கான கல்வி, மருத்துவம், வேலை சமூக பாதுகாப்பு

 

அ.பாக்கியம்

சோஷலிச கொள்கையை ஏற்றிருக்கக் கூடிய ஒரு அரசு உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக என்றென்றும் பாடுபடும். திபெத்தில் உள்ள அனைத்து மக்களுக்கான சமூக பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தக்கூடிய கட்டமைப்புகளை சோஷலிச கொள்கையை ஏற்றுள்ள ஒரு அரசு உருவாக்கி உள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம், பொது சுகாதாரம், வாழ்விடம் என அனைத்து வகையிலும் ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்பை சீன மக்கள் குடியரசு திபெத்திய மக்களுக்கு வழங்கி உள்ளது. திபெத்திய பகுதியில் மிக உயர்ந்த தரமான உள்கட்டமைப்பை உருவாக்கிய அரசு மக்களின் உதவியுடன் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பையும் ஏற்படுத்தி உள்ளது

பூஜ்ஜியத்தில் இருந்து சதத்தை நோக்கி

திபெத்தை செம்படை விடுதலை செய்த பொழுது 95 சதவீதம் மக்கள் கல்வி அறிவற்றவர்களாக இருந்தார்கள். குறிப்பிடத்தக்க அல்லது விரல்விட்டு எண்ணக்கூடிய சில பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருந்தது. குறிப்பாக திபெத் பிராந்தியம் முழுவதும் வெறும் பத்து பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருந்தன. இந்தப் பள்ளிக்கூடங்களும் நிலப் பிரபுக்களுக்காக உருவாக்கப்பட்டவை.

அவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக மட்டும்தான் இந்த பள்ளிக்கூடம் பயன்பட்டது. ஏன் அவர்கள் படிக்க வேண்டும் ? எழுத்தறிவை தெரிந்து கொள்வதற்கும், கணக்குகளை புரிந்து கொள்வதற்கும், அரசுப் பணிகளை செய்வதற்கும் கடிதப் போக்குவரத்திற்காகவும் அடிப்படை கல்வி தேவைப்பட்டது தான். இதற்காக இந்தப் பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட்டன.

மேற்கண்ட பள்ளிக்கூடங்கள் தவிர ஆயிரக்கணக்கான திபெத்திய பௌத்த மடாலயங்கள் இருந்தன. இந்த மடாலயங்களில் கல்வி சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க மத தத்துவங்களை கற்றுக் கொடுப்பதாக இருந்தது. மதத் தத்துவத்துடன் திபெத்திய மருத்துவம், ஜோதிடம் போன்றவைகளையும் கற்றுக் கொடுத்தார்கள். இந்தக் கல்வியை கற்றவர்கள் தான் புத்த துறவிகளாகவோ அல்லது லாமாக்களாகவோ பட்டம் பெற்றார்கள். மடாலயங்கள் நடத்தும் இந்த கல்விக்கும் பொது மக்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அது நவீன மதசார்பற்ற கல்வியும் அல்ல. எனவே மடாலயங்கள் கல்வி கற்றுக் கொடுக்கும் இடங்கள் என்று இருந்தாலும் நடைமுறையில் பொதுமக்களுக்கான கல்வியறிவு பூஜ்ஜியமாகவே இருந்தது.

1950 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு புரட்சி வெற்றி பெற்றவுடன் சீன மக்கள் குடியரசு திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் ஒரு நவீன கல்வி முறையை உருவாக்கியது. பாலர் பள்ளிகள், தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள், தொழிற்கல்விகள், தொழில்நுட்ப பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், சிறப்பு கல்விகளை கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் என நவீன முறைகளை உள்ளடக்கிய கல்வி வலைய மைப்பை ஏற்படுத்தியது.

2023 ஆம் ஆண்டு தரவுகளின் படி திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் தேவையான அளவிற்கு கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. பாலர் பள்ளிகள் 2,399 இருந்தன. சீனாவில் கட்டாய கல்வித் திட்டத்தின் அடிப்படையில் தொடக்க கல்வி ஆறு ஆண்டுகளும் நடுநிலைக் கல்வி மூன்று ஆண்டுகள் என ஒன்பது ஆண்டுகள் கட்டாய கல்வி படிக்க வேண்டும். இதற்காக திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் 1,531 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. தொழில் வல்லுனர்களை உருவாக்கக்கூடிய உயர்நிலைப் பள்ளிகள் 93 பள்ளிகளும், 7 பல்கலைக்கழகங்களும் அதன் கீழ் செயல்படும் பல கல்லூரிகளும் இருக்கின்றன. மொத்தமாக 36 லட்சம் மக்கள் தொகை கொண்ட திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் 4,300 க்கு மேற்பட்ட கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் சுமார் 9.44 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள்.

2012 ஆம் ஆண்டு முதல் திபெத்தில் மாணவர்களின் விடுபடுதல் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு மாணவருக்கும் கல்வியின் அனைத்து நிலைகளிலும் அரசு நிதி உதவி செய்கிறது. பாலர் கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதம் 89.52% ஆகும். கட்டாய கல்விக்கான நிறைவு சதவீதம் 97.73 ஆகும். சீனியர் உயர்நிலைப் பள்ளிகளில் மொத்த சேர்க்கை விகிதம் 91.07% ஆகும். 2010 ஆம் ஆண்டு ஆண்டு நடத்தப்பட்ட அந்நாட்டின் ஏழாவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திபெத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு 5,507 பட்டதாரிகள் இருந்தனர். இதுவே 2020 ஆம் ஆண்டு 11,019 என்ற அடிப்படையில் உயர்ந்தது. இந்த பிராந்தியத்தில் புதிதாக பணியில் சேருபவர்கள் 13.1 ஆண்டுகள் முறையான கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.

2012 முதல் 2022 வரை சீன அரசு திபெத் பிராந்தியத்தில் கல்வியை மேம்படுத்துவதற்காக 251.51 பில்லியனுக்கும் அதிகமான ஆர்எம்பி யுவான் பணத்தை ஒதுக்கியது.

திபெத்தில் உள்ள கல்வி நிலையங்களில் சீன மொழி, திபெத்திய மொழி என இரு மொழிக் கொள்கை கற்பிக்கப்படுகிறது. திபெத்திய மொழி குறித்த தனி பாடங்களும் உள்ளன. திபெத்திய கல்வி நிலையங்களில் கணிதம், அறிவியல், இலக்கியம், திபெத்திய வரலாறு, மற்றும் திபெத்திய கலாச்சாரம் ஆகிய பாடத்திட்டங்கள் உள்ளன. இவற்றுடன் கூடவே கருத்தியல் கல்வி அதாவது தேசபக்தி, மக்களின் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த கல்வியும் பாடத்திட்டங்களாக கற்பிக்கப்படுகிறது.

திபெத்திய பிராந்தியத்தில் தொலைதூரத்தில் வாழக்கூடிய மக்களுக்காகவும் நாடோடி வாழ்க்கை நடத்தக்கூடிய கால்நடை மேய்ப்பவர்களுக்காகவும் போர்டிங்(விடுதி) பள்ளிகளை திபெத் அரசாங்கம் நடத்துகிறது. இதற்கான அனைத்து விதமான செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. திபெத் கல்விக்கு அரசாங்கம் பொது மானியத்தை வழங்குகிறது. கிராமப்புற மாணவர்களின் கட்டாய கல்வி படிக்கிற காலகட்டத்தில் படிப்பு செலவுகளும், புத்தகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்தும் அரசு ஏற்றுக்கொள்கிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவியும், ஊக்கத்தொகையும் அரசாங்கம் அளித்து வருகிறது.

திபெத்தில் மற்றொரு வகையான சிறப்புப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. நடுநிலைப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயில்வதற்காக, பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. 1985 ஆம் ஆண்டு முதல் இந்த முறை செயல்படுகிறது. இதனை நெய்டி கல்வி முறை என்று அழைக்கிறார்கள். இதில் தேர்ச்சிப் பெறக்கூடிய மாணவர்கள் திபெத்திய பகுதியிலிருந்து பெய்ஜிங், ஷாங்காய், செங்டு போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உயர்தரம் வாய்ந்த கல்வியை பெறுகிறார்கள். இங்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தரமாக மேம்ப்படுத்தக்கூடிய முறையில் திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகிறார்கள்.

 

மேற்கண்ட விடுதி அடிப்படையிலான கல்வி முறைகளையும், நெய்டி சிறப்பு கல்வி திட்டத்தையும் பிற்போக்கு வாதிகள், தலாய்லாமா ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். காரணம் விடுதிக்குச் சென்றபிறகு, உயர்கல்வி கற்றவர்கள் பிற்போக்கு கருத்துக்களில் இருந்து விடுபடுகிறார்கள் என்பதுதான். குறிப்பாக திபெத்தில் தொலைதூரத்தில் இருக்கக்கூடிய மாணவர்களில் 70 சதவீதத்திற்கு மேல் அரசு நடத்தக்கூடிய விடுதிகளில் தங்கி படிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது அடிமை சமுதாயத்திலிருந்து அறிவுப்பூர்வமாக திபெத் மக்களை விடுதலை செய்வதற்கான ஒரு வடிவமாக இன்று இருக்கிறது. ஆகவேதான் இந்த கல்வி முறைகளை கடுமையாக பிற்போக்கு வாதிகள் எதிர்க்கின்றனர்.

சீன மக்கள் குடியரசின் மூலம் நவீன கல்வி முறைகள் திபெத்திற்குள் வளர்ந்த பிறகு திபெத்தில் நவீன அறிவும், அறிவியல், மற்றும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டவர்கள் அதிகமாய் இருக்கிறார்கள். இது இவர்களின் வாழ்க்கைத் தரத்தை பல மடங்கு மேம்படுத்தி உள்ளது. இரு மொழி கல்விக் கொள்கையும் சீனாவில் எங்கு சென்றாலும் வெற்றி பெற முடியும் என்ற முறையில் நடத்தக்கூடிய நெய்டி பள்ளிகளும் புதிய நம்பிக்கையை உருவாக்கி உள்ளது. திபெத்திய மொழியையும் கலாச்சாரத்தையும் கல்வி முறைக்குள்ளேயே பாதுகாத்து அவற்றின் மேம்படுத்தக்கூடிய பணிகளையும் சீன மக்கள் குடியரசு செய்து வருகிறது.

மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்

மருத்துவமும், பொது சுகாதாரமும் திபெத் மக்களின் வாழ்நாளை அதிகப்படுத்தியது மட்டுமல்ல மக்கள் தொகையையும் வீழ்ச்சியிலிருந்து வளர்ச்சியை நோக்கி கொண்டு வந்து உள்ளது. 1950 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு திபெத் மக்களுக்கு எந்தவிதமான மருத்துவமனைகளோ பொது சுகாதார முறைகளோ இல்லை. குறிப்பாக பண்ணை அடிமைகள் சிகிச்சை பெறுவதற்கான உரிமைகள் கூட இல்லை. 1950 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக சீர்திருத்தம் ஆரம்பித்தவுடன் மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனைகளை திட்டமிட்டு உருவாக்கினார்கள். அடிப்படை மருத்துவ சேவைகள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, திபெத்திய மருத்துவ முறை அவற்றின் சிகிச்சை முறை ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான மருத்துவ கட்டமைப்பும், பொதுசுகாதார அமைப்பையும் சீன மக்கள் குடியரசு நிறுவியது. சீனாவின் இதர பகுதிகளில் இருந்தும், அருகாமையில் இருந்த நகரங்களில் இருந்தும் மருத்துவ நிபுணர்களின் குழுக்கள் திபெத்திய பிராந்தியத்திற்குள் அனுப்பப்பட்டு மருத்துவத் துறையை மேம்படுத்தினார்கள். இதனால் பல மருத்துவமனைகள் தரத்துடன் செயல்பட தொடங்கியது. புதிய மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டன.

திபெத்திய பிராந்திய மக்கள் மாவட்ட தலைநகர சிறப்பு மருத்துவமனைகளில் மிகக் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய 400 கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மேலே சுமார் 2,400 சாதாரண நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகள் அனைத்திற்கும் தாங்கள் வாழக்கூடிய உள்ளூர் அளவிலான மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான மருத்துவ அமைப்புகளும், மருத்துவர்களும், மருந்துகளும் கிடைக்கக் கூடிய முறையில் மருத்துவ துறைகள் மேம்பட்டது.

1950ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் பிரசவத்தின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 5000 ஆக இருந்தது. 2022 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 45.8 என்ற அளவில் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டது. மேலும் இதே கால இடைவெளியில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 430% லிருந்து 7% என்ற அளவில் குறைந்துள்ளது. திபெத் மக்களின் சராசரி ஆயுள் காலம் 1950 களில் 35 ஆண்டுகள் என்பதிலிருந்து இன்று 72.19 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.

இப்பிராந்திய மக்கள் செய்து வந்த தொழில், வேலை காரணமாக பிறக்கும் பொழுதே அவர்களை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான நோய்களான இதய நோய், கண் புரை நோய் உள்ளிட்ட அனைத்தும் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன. நீரின் தரத்தையும், உணவு முறைகளை மாற்றியதும், உள்ளூரில் குடியிருப்புகளை மேம்படுத்தியதும், இந்த நோய்களை கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகித்தது.

தற்போது திபெத்தில் பல்வேறு வகையான 1642 மருத்துவ நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 11 நிறுவனங்கள் உயர்ந்த தரம் கொண்ட மருத்துவ நிறுவனங்களாகும். ஆயிரம் பேருக்கு 4.9 மருத்துவ படுக்கைகள் உள்ளது. ஆயிரம் பேருக்கு 5.89 மருத்துவ ஊழியர்கள் இருக்கிறார்கள். இந்த மருத்துவ சேவைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பொது சுகாதாரத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

1950 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய 200 ஆண்டுகளில் திபெத்திய மக்கள் தொகையில் எண்ணிக்கை 10 லட்சம் பேர் குறைந்து போனார்கள். மருத்துவ வசதியும், பொது சுகாதார சீர்கேடுகளும் மக்கள் தொகையில் பெரும் சரிவை ஏற்படுத்தியது. ஆனால் ஜனநாயக சீர்திருத்தம் ஆரம்பித்து 15 ஆண்டுகளில் 4 லட்சம் மக்கள் தொகை அதிகரிப்பு நடந்தது. மிகவும் உட்புறப் பகுதியான காடுகளில் வாழ்ந்த மான்பாஸ், லோபாஸ், டெங்ஸ் போன்ற சிறிய இனக்குழுக்களின் மக்கள் தொகை உட்பட இக்காலத்தில் அதிகரித்துள்ளது.

சமூக பாதுகாப்பின் மற்றொரு முக்கிய அம்சம் காப்பீட்டு முறைகள் ஆகும். முதியோர்களுக்கான காப்பீடு, மருத்துவ காப்பீடு, வேலையின்மைக்கால காப்பீடு, வேலைஇடங்களில் ஏற்படும் காயம் தொடர்பான காப்பீடு, மகப்பேறு காப்பீடு என ஐந்து வகையான காப்பீட்டு முறைகளை திபெத் பிராந்தியத்தில் அமல்படுத்துகிறார்கள். இந்தத் திட்டங்களின் மூலம் திபெத் மக்கள் தொகையில் 3.43 மில்லியன் மக்கள் அதாவது 36 லட்சம் மக்கள் தொகையில் 34 லட்சம் மக்கள் காப்பீட்டு முறையில் பாதுகாக்கப்படுகிறார்கள். இது மொத்த மக்கள் தொகையில் 95% க்கு மேலாகும்.

சமூக பாதுகாப்பின் மற்றொரு அம்சம் மதம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு செய்யக்கூடியதாகும். திபெத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து துறவிகளுக்கும் கன்னியாஸ்திரிகளுக்கும் மருத்துவ காப்பீடு ஓய்வூதிய திட்டங்கள் வாழ்வாதார உதவித்தொகை விபத்து காயம் காப்பீடு சுகாதார சோதனை செலவுகள் போன்றவற்றை ஈடுகட்ட அரசாங்கம் காப்பீடு திட்டத்தை வழங்கி உள்ளது. துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கான படிப்பு வாழ்க்கை நிலைமைகளை நவீன மயமாக்குவதற்கு மதங்களையும் கோயில்களின் உள்கட்டமைப்பையும் மேம்படுத்தி உள்ளது.

திபெத்தில் பாரம்பரியமாக மருத்துவ முறைகள் மக்களால் பயன்படுத்தப்பட்டது. அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவம் கிடைக்காதபோது அவர்களால் இவை கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டன. அவற்றையும் சிகிச்சைக்கு பயன்படுத்துவது என்ற முறையில் சீன மக்கள் குடியரசு மிகவும் அத்தியாவாசிய மருந்துகள் பட்டியலில் அதிகமான திபெத் மருந்துகளை சேர்த்துள்ளது. எந்த ஒரு மருத்துவ முறைகளும் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் இருந்தால் அதை அழிந்து விடாமல் மேம்படுத்தக்கூடிய செயலின் ஒரு வெளிப்பாடு தான் பாரம்பரிய திபெத்திய மருத்துவத்தை பயன்படுத்துவதாகும்.

மேற்கண்ட முறையில் பல அடுக்கு சமூக பாதுகாப்பு முறை திபெத் சமூகத்தில் பரவலாக அமுலாக்கப்படுவதால் மக்களின் வாழ்க்கை தரம், சராசரி வாழ்நாள் மேம்பட்டு வந்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற குடியிருப்பாளர்களின் அடிப்படை மருத்துவ காப்பீட்டு முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. இந்த காப்பீட்டு அட்டைகளை மாகாணங்கள் கடந்து செல்கிற பொழுதும் பயன்படுத்தலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்திற்கு நிலையான மானியம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு ஆண்டுக்கு 585 ஆர்எம்பி யுவான் அதாவது சுமார் 8000 ருபாய் வழங்கப்படுகிறது. தொடர்ந்து சமூக பாதுகாப்புக்கான முறைகளில் குறைகள் வரும்பொழுது களைந்து முன்னேறுகிறார்கள்.

முழுமையான வீட்டு வசதி

சோஷலிஸ்ட் சமூகத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று வாழ்விட வசதி. திபெத் மக்களுக்கு வாழ்விட வசதியை செய்வதற்கு சீன மக்கள் குடியரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. நகர்ப்புறங்களில் மலிவு விலை வீடுகளை அரசாங்கம் கட்டிக் கொடுத்தது. கிராமப்புறங்களில் மக்கள் வாழமுடியாத இடங்களில் இருந்து வாழத் தகுதியான இடங்களுக்கு மாறுவதற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தனர்.

இது மட்டுமல்ல ஏற்கனவே பாழடைந்து போன வீடுகளையும் புதுப்பித்துக் கொள்வதற்காக நிதி உதவியை செய்து புதுப்பித்துக் கொடுத்தார்கள். 2016 ஆம் ஆண்டு முதல் விவசாயம் மற்றும் மேய்ச்சல் நிலப் பகுதிகளில் உள்ள சுமார் 43,600 வீடுகளுக்கு அரசு மானிய உதவிகளை வழங்கி புதுப்பித்துக் கொடுத்துள்ளது. இவை தவிர வீடுகளின் தரத்தை, சுகாதாரத்தை உயர்த்தக்கூடிய முறையில் குறைந்த வருமான குழு உள்ளிட்ட பகுதிகளை கணக்கில் எடுத்து புதுப்பித்துக் கொடுத்தார்கள். மற்றொரு முக்கிய அம்சம் வீடுகள் பூகம்பத்தின் அதிர்வுகளை தாங்க கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத வீடுகளை பட்டியல் எடுத்து பூகம்ப அதிர்வுகளை தாங்கக்கூடிய வீடுகளாக மாற்றி அமைத்தனர்.

 

நகர்ப்புறங்களில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு இவற்றின் வளர்ச்சி அதிகமான பொழுது தீவிரமான நகர்மய வளர்ச்சி ஏற்பட்டது. நகர்ப்புறங்களில் குடியிருப்பவர்களின் தனிநபர் ஒருவருக்கு 2020 ஆம் ஆண்டு 33.4 சதுர மீட்டர் வாழ்விடமாக இருந்தது. கிராமப்புறத்தில் விவசாயிகள் மற்றும் மேய்ப்பர்களின் வாழ்விடம் 41.46 சதுர மீட்டராக இருந்தது. இந்த வளர்ச்சி வாழ்விடத்திற்கான ஒரு நிலையான முன்னேற்றத்தை குறிக்கிறது. 1950 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு 90% மக்களுக்கு தனி குடியிருப்புகள் கிடையாது.

வீட்டு வசதிகளில் ஏற்படுத்தி இந்த மாற்றம் பல முன்னேற்றங்களை அடைந்தது. 2019 ஆம் ஆண்டு திபெத் நகர்மயமாக்கல் 31.5% உயர்ந்தது. 2020 ஆம் ஆண்டில் மக்களின் தனிநபர் செலவழிப்பு வருமானத்தை 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகிற பொழுது அது இரட்டிப்பாகி உள்ளது. இவை அனைத்தும் தனி நபர்களின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்தியது மட்டுமல்ல திபெத் பிராந்தியத்தில் உள்ள 95% மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. குடும்பத்துக்கு ஒருவர் வேலையில் இருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்றைய உலகமய சமூக சூழலில் ,உலகம் சார்ந்த பொருளாதார வளைய அமைப்புகள் உருவான காலத்தில், சோஷலிசத்தின் கொள்கையை நோக்கி செல்வதற்கு பெரும் முயற்சிகள் செய்ய வேண்டி உள்ளது. இந்தக் கொள்கையில் பற்றுடைய சீன கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியதையும் கடந்து, அடிப்படை கட்டுமானத்தை உருவாக்கியதையும் கடந்து, பல அடுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

அ.பாக்கியம்

 

 

புதன், நவம்பர் 12, 2025

ஞாபகங்களின் தீ…..

 

ராஜாராம்

(தோழர் ராஜாராம் மாணவர் சங்கம் வாலிபர் சங்க மாவட்ட தலைவர்களில் ஒருவராக இருந்து பணியாற்றியவர். பணியில் சேர்ந்தவுடன் தொழிற்சங்க தலைவராக இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர். சில ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகத்தை படித்து தனது கருத்தை பதிவு செய்து உள்ளார்- அ.பாக்கியம்)

தோழர் அ.பாக்கியம் அவர்கள் எழுதிய "ஞாபகங்கள் தீ மூட்டும் DYFI போராட்டங்கள் சில துளிகள்"  என்ற தனது புத்தகத்தை எனது பணி நிறைவு விழாவிற்கு வந்திருந்து வாழ்த்தி வழங்கினார். இது ஒரு பொருத்தமான நினைவு பரிசு என்று நினைத்து நெகிழ்கிறேன்.

45 வருடங்களுக்கு எனது வாழ்க்கையை பின்னோக்கி நகர்த்தி என்றென்றும் எனது நினைவில் கனன்று  கொண்டிருக்கிற DYFI போராட்ட நினைவுகளை உண்மையிலேயே தீயாக மூட்டிவிட்டது இந்த புத்தகம். இந்த புத்தகத்தின் முதல் கட்டுரை "பூணூலும் அரைஞாண் கயிறும் DYFI கொடி கயிறாக மாறியது" வீரஞ்செறிந்த மறியல் போராட்ட நிகழ்விலும், கடைசி கட்டுரையான DYFI SPORTS CLUB  டி.ஒய்.எப்.ஐ விளையாட்டு கழகம் நடத்திய வண்ணமயமான திருவிழாவில் பங்கேற்ற பாக்கியம் பெற்றவன் நான். 

DYFI துவக்கப்பட்ட 1980 இல் உறுப்பினராக சேர்ந்து வாலிபர் சங்கத்தில் 2000 வரை 20 வருடங்கள் பணியாற்றியவன். புத்தகத்தின் இரண்டாவது கட்டுரை துவக்க வரிகளில் .... காதலும், வீரமும், சாதனைகளும், சாகசங்களும் மாற்றங்களும், தியாகங்களும் இணைந்தது தான் இளமை என்ற வரிகளுக்கு ஏற்ப எனது அன்றைய இளமை வயதில் சாதனைகளையும் சாகசங்களையும் செய்ய வைத்தது SFI- DYFI அமைப்புகள் தான். 1991 அக்டோபர் 23ஆம் தேதி அந்த வீரஞ்செறிந்த மறியல் போராட்டத்தில் வடசென்னை மாவட்ட குழு, ஆவடி பகுதி செயலாளராக நானும் குறளகம் எதிரில் கைது செய்யப்பட்டேன்.

அன்று மாலை ரிமாண்ட் செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் செல்லும்போது  நான் ... பணியில் சேர்ந்து சரியாக ஆறு மாதம்தான் ஆகிறது என்னுடைய பணிக்கான அடையாள அட்டை எனது பேண்ட் பாக்கெட்டில் உள்ளது. அடையாள அட்டையும் பர்சும் போலீஸிடம் மாட்டப் போகிறது வேலை பறிபோகும் நெருக்கடி எதிர்கொள்ளப் போகிறேன் என்கிற ஒரு வித பதட்டமும் அப்படியே ஆனால் என்ன தோழர் பாக்கியம், தோழர் அ.சௌந்தர்ராஜன், தோழர் வி. மீனாட்சி சுந்தரம், தோழர் சி. சுந்தர்ராஜ் போன்ற எண்ணற்ற தோழர்களைப்போல முழு நேர புரட்சி காரனாக மாறும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று ஆறுதல் மறு பக்கம் என மனம் அலை பாய்ந்த நேரத்தில்...

"அதற்கு வாய்ப்பில்ல ராஜா" என்று சொல்லும் பாணியில் சென்னை மத்திய சிறைச்சாலை வாசலில் நின்றிருந்தார் நூலாசிரியர் DYFI மாநிலத் தலைவர் தோழர் அ.பாக்கியம். சிறை செல்லும் தோழர்களின் பணம், மோதிரம், வாட்ச் போன்ற மதிப்புமிக்க உடைமைகளை வாங்கி சிறை மீண்ட பிறகு பத்திரமாக திருப்பித் தர வேண்டும் என்ற அக்கறையுடன் சிறை வாசலில் காத்திருந்த காட்சி இப்போதும் என் நினைவில் தீ மூட்டுகிறது. இந்த மறியல் போராட்டத்தில் சிலிர்க்க வைக்கும் பெருமைமிகு நிகழ்வு ஒன்று நடந்தது. அன்று சென்னை மத்திய சிறைக்கு சென்ற 2800 பேரில் ஒரே ஒரு துணிச்சல் மிக்க டிஓய்எஃப்ஐ வீராங்கனை ஒருவர் இருந்தார்.

 சென்னை வில்லிவாக்கம் பகுதியை சார்ந்த பெண் தோழர்( இன்றைய சிபிஐஎம் வில்லிவாக்கம் பகுதி குழு உறுப்பினர் தோழர் அன்பழகன் அவர்களின் மனைவி). தன்னந்தனியாக துணிச்சலாக சகத் தோழர்கள் வேண்டாம் வீட்டுக்கு சென்று விடுங்கள் என்று தோழர்கள் மற்றும் போலீஸ்சே கூறிய போதும் சிரித்த முகத்துடன் இல்லை நான் சிறைக்கு செல்வதில் உறுதியாக உள்ளேன் என்று தன்னந்தனியாக சிறைக்குள் சென்றதைப் பார்த்தபோது நாங்கள் அனைவரும் சிலிர்த்துப் போய் உறைந்து நின்றோம். இந்த DYFI பெண் வீராங்கனை பற்றி அடுத்த புத்தகப் பதிவில் குறிப்பிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

       தோழர் பாக்கியம் எழுதியதில் ஒவ்வொரு தலைப்பில் ஆன போராட்டமும் ஒவ்வொரு காவியம் என்று படிக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது நானும் அன்றைய DYFI தோழன் என்று.

       குறும்பனை : டி ஒய் எப் ஐ எழுச்சி- அடக்குமுறை- மீட்சி. வீடுகள் தரைமட்ட பார்க்கப்பட்டு குடும்ப்பத்தோடு ஊரை விட்டு வெளியேற்றப்பட்டு அதன்பிறகு உறுதிமிக்க தொடர் போராட்டத்தால் மீண்டும் கடல் மார்க்கமாக ஊருக்குள் கம்பீரமாக நுழையும் காட்சி ஒரு புரட்சிகர திரைப்படமாக மனத்திரையில் ஓடுகிறது. படிக்கும் தோழர்களின் நெஞ்சமெல்லாம் பெருமை பூரிக்கும்.. இப்படி எல்லா கட்டுரையும் DYFI இன் பெருமைமிகு வரலாறுதான்.

      கடைசி கட்டுரை பற்றி டி இ ஒய் எஃப் ஐ விளையாட்டு கழகத்தில் நான் மாநில பொருளாளராக பொறுப்பேற்று என் தனிப்பட்ட பொறுப்பில் சில குறிப்பிடத் தகுந்த பங்கை ஆற்றியுள்ளேன். அதுவும் சுவாரஸ்யம் கலந்த மதிப்புமிக்க நிகழ்வாகும். அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்.... அதுவரை தோழர் பாக்கியம் அவர்களுக்கு எனது ரெட் சல்யூட்.

49 திபெத்: கலாச்சார பாதுகாப்பும் வளர்ச்சியும்

அ.பாக்கியம் திபெத்திய மக்களின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் சீன கம்யூனிஸ்ட் அரசு அழித்து வருகிறது என்றும் , சீனாவின் ஹான் இன கலாச்சாரத்...