Pages

புதன், நவம்பர் 12, 2025

ஞாபகங்களின் தீ…..

 

ராஜாராம்

(தோழர் ராஜாராம் மாணவர் சங்கம் வாலிபர் சங்க மாவட்ட தலைவர்களில் ஒருவராக இருந்து பணியாற்றியவர். பணியில் சேர்ந்தவுடன் தொழிற்சங்க தலைவராக இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர். சில ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகத்தை படித்து தனது கருத்தை பதிவு செய்து உள்ளார்- அ.பாக்கியம்)

தோழர் அ.பாக்கியம் அவர்கள் எழுதிய "ஞாபகங்கள் தீ மூட்டும் DYFI போராட்டங்கள் சில துளிகள்"  என்ற தனது புத்தகத்தை எனது பணி நிறைவு விழாவிற்கு வந்திருந்து வாழ்த்தி வழங்கினார். இது ஒரு பொருத்தமான நினைவு பரிசு என்று நினைத்து நெகிழ்கிறேன்.

45 வருடங்களுக்கு எனது வாழ்க்கையை பின்னோக்கி நகர்த்தி என்றென்றும் எனது நினைவில் கனன்று  கொண்டிருக்கிற DYFI போராட்ட நினைவுகளை உண்மையிலேயே தீயாக மூட்டிவிட்டது இந்த புத்தகம். இந்த புத்தகத்தின் முதல் கட்டுரை "பூணூலும் அரைஞாண் கயிறும் DYFI கொடி கயிறாக மாறியது" வீரஞ்செறிந்த மறியல் போராட்ட நிகழ்விலும், கடைசி கட்டுரையான DYFI SPORTS CLUB  டி.ஒய்.எப்.ஐ விளையாட்டு கழகம் நடத்திய வண்ணமயமான திருவிழாவில் பங்கேற்ற பாக்கியம் பெற்றவன் நான். 

DYFI துவக்கப்பட்ட 1980 இல் உறுப்பினராக சேர்ந்து வாலிபர் சங்கத்தில் 2000 வரை 20 வருடங்கள் பணியாற்றியவன். புத்தகத்தின் இரண்டாவது கட்டுரை துவக்க வரிகளில் .... காதலும், வீரமும், சாதனைகளும், சாகசங்களும் மாற்றங்களும், தியாகங்களும் இணைந்தது தான் இளமை என்ற வரிகளுக்கு ஏற்ப எனது அன்றைய இளமை வயதில் சாதனைகளையும் சாகசங்களையும் செய்ய வைத்தது SFI- DYFI அமைப்புகள் தான். 1991 அக்டோபர் 23ஆம் தேதி அந்த வீரஞ்செறிந்த மறியல் போராட்டத்தில் வடசென்னை மாவட்ட குழு, ஆவடி பகுதி செயலாளராக நானும் குறளகம் எதிரில் கைது செய்யப்பட்டேன்.

அன்று மாலை ரிமாண்ட் செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் செல்லும்போது  நான் ... பணியில் சேர்ந்து சரியாக ஆறு மாதம்தான் ஆகிறது என்னுடைய பணிக்கான அடையாள அட்டை எனது பேண்ட் பாக்கெட்டில் உள்ளது. அடையாள அட்டையும் பர்சும் போலீஸிடம் மாட்டப் போகிறது வேலை பறிபோகும் நெருக்கடி எதிர்கொள்ளப் போகிறேன் என்கிற ஒரு வித பதட்டமும் அப்படியே ஆனால் என்ன தோழர் பாக்கியம், தோழர் அ.சௌந்தர்ராஜன், தோழர் வி. மீனாட்சி சுந்தரம், தோழர் சி. சுந்தர்ராஜ் போன்ற எண்ணற்ற தோழர்களைப்போல முழு நேர புரட்சி காரனாக மாறும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று ஆறுதல் மறு பக்கம் என மனம் அலை பாய்ந்த நேரத்தில்...

"அதற்கு வாய்ப்பில்ல ராஜா" என்று சொல்லும் பாணியில் சென்னை மத்திய சிறைச்சாலை வாசலில் நின்றிருந்தார் நூலாசிரியர் DYFI மாநிலத் தலைவர் தோழர் அ.பாக்கியம். சிறை செல்லும் தோழர்களின் பணம், மோதிரம், வாட்ச் போன்ற மதிப்புமிக்க உடைமைகளை வாங்கி சிறை மீண்ட பிறகு பத்திரமாக திருப்பித் தர வேண்டும் என்ற அக்கறையுடன் சிறை வாசலில் காத்திருந்த காட்சி இப்போதும் என் நினைவில் தீ மூட்டுகிறது. இந்த மறியல் போராட்டத்தில் சிலிர்க்க வைக்கும் பெருமைமிகு நிகழ்வு ஒன்று நடந்தது. அன்று சென்னை மத்திய சிறைக்கு சென்ற 2800 பேரில் ஒரே ஒரு துணிச்சல் மிக்க டிஓய்எஃப்ஐ வீராங்கனை ஒருவர் இருந்தார்.

 சென்னை வில்லிவாக்கம் பகுதியை சார்ந்த பெண் தோழர்( இன்றைய சிபிஐஎம் வில்லிவாக்கம் பகுதி குழு உறுப்பினர் தோழர் அன்பழகன் அவர்களின் மனைவி). தன்னந்தனியாக துணிச்சலாக சகத் தோழர்கள் வேண்டாம் வீட்டுக்கு சென்று விடுங்கள் என்று தோழர்கள் மற்றும் போலீஸ்சே கூறிய போதும் சிரித்த முகத்துடன் இல்லை நான் சிறைக்கு செல்வதில் உறுதியாக உள்ளேன் என்று தன்னந்தனியாக சிறைக்குள் சென்றதைப் பார்த்தபோது நாங்கள் அனைவரும் சிலிர்த்துப் போய் உறைந்து நின்றோம். இந்த DYFI பெண் வீராங்கனை பற்றி அடுத்த புத்தகப் பதிவில் குறிப்பிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

       தோழர் பாக்கியம் எழுதியதில் ஒவ்வொரு தலைப்பில் ஆன போராட்டமும் ஒவ்வொரு காவியம் என்று படிக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது நானும் அன்றைய DYFI தோழன் என்று.

       குறும்பனை : டி ஒய் எப் ஐ எழுச்சி- அடக்குமுறை- மீட்சி. வீடுகள் தரைமட்ட பார்க்கப்பட்டு குடும்ப்பத்தோடு ஊரை விட்டு வெளியேற்றப்பட்டு அதன்பிறகு உறுதிமிக்க தொடர் போராட்டத்தால் மீண்டும் கடல் மார்க்கமாக ஊருக்குள் கம்பீரமாக நுழையும் காட்சி ஒரு புரட்சிகர திரைப்படமாக மனத்திரையில் ஓடுகிறது. படிக்கும் தோழர்களின் நெஞ்சமெல்லாம் பெருமை பூரிக்கும்.. இப்படி எல்லா கட்டுரையும் DYFI இன் பெருமைமிகு வரலாறுதான்.

      கடைசி கட்டுரை பற்றி டி இ ஒய் எஃப் ஐ விளையாட்டு கழகத்தில் நான் மாநில பொருளாளராக பொறுப்பேற்று என் தனிப்பட்ட பொறுப்பில் சில குறிப்பிடத் தகுந்த பங்கை ஆற்றியுள்ளேன். அதுவும் சுவாரஸ்யம் கலந்த மதிப்புமிக்க நிகழ்வாகும். அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்.... அதுவரை தோழர் பாக்கியம் அவர்களுக்கு எனது ரெட் சல்யூட்.

46 திபெத் சவாலான சாலை கட்டமைப்புகள்

 

அ.பாக்கியம்

பெருக்கெடுக்கும் ஆறுகள், சிதறிய பாறைகள், கரடு முரடான மலைப்பாதைகள் ஆகியவற்றால் திபெத் மக்களுக்கும்  இதர மாகாணங்களுக்கும் இடையிலான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவது  கடினமாக இருந்தது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களைக் கொண்டு செல்வது மனிதர்களின் கைகளையும், கால்நடைகளையுமே நம்பி இருந்தார்கள்.

சில நேரங்களில் பொருட்களை பிரதான நிலப் பகுதிகளுக்கும், அருகில் உள்ள மாகாணங்களுக்கும் கொண்டு செல்வதற்கு ஒரு வருடம் கூட ஆகும். ஆறுகளைக் கடப்பதற்கு பெரிய பாலங்கள் இல்லை. 10 பேரை ஏற்றி செல்லும் தோல் படகுகள் மட்டுமே அதுவும் சிறு ஆறுகளை கடப்பதற்கு மட்டுமே உதவி செய்யும். வர்த்தக பாதை எப்பொழுதும் இருந்தது. ஆனால் அவை மிகவும் கரடு முரடானவை. நல்ல சாலைகளுக்கான எந்த அறிகுறியும் திபத்தில் இருந்தது இல்லை.

1950 ஆம் ஆண்டு வரை திபத்தில் நெடுஞ்சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. 1959ஆம் ஆண்டு ஜனநாயக சீர்திருத்தங்களுக்குப் பிறகு போக்குவரத்தில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட்டது. 1959 இல் மிக பாதைகள் 7,300 கிலோ மீட்டர் மட்டும்தான் அதுவும் மிக மோசமானவையாக இருந்தது.  சீன மக்கள் குடியரசின் தொடர் முயற்சியின் காரணமாக 2021 ஆம் ஆண்டு திபெத் பிராந்தியத்தில் 1,20,000 கிலோமீட்டர் நீளத்திற்கு தரமான சாலைகள் அமைக்கப்பட்டன. இது 1,543 சதவீதம் வளர்ச்சியாகும். இந்த வளர்ச்சியில் திபெத்தின் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை இணைக்கும் சாலைகளும் உருவாக்கப்பட்டன.

அதாவது 1959 முதல் தினசரி தோராயமாக 4.93 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிங்காய் மாகாணத்தில் துவங்கி லாசாவில் முடிவடையும் ஒரு சாலை 4000 மீட்டருக்கு அதிகமான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக உயரமான தார் சாலையாகும். மேலும் இது மிக உயரமான இரண்டு மலைகளை இணைக்கக்கூடிய சாலையாக இருக்கிறது.

மக்கள் தொகை குறைவாக இருக்கக்கூடிய காடுகளும் மலைகளும் நிறைந்த இடங்களில் சாலைகள் செல்வதற்கு அதை பராமரிப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற முறையில் சில முடிவுகளை மேற்கொண்டார்கள். 3700 மீட்டருக்கு அதிகமான உயரத்தில் உள்ள சிச்சுவான் திபெத் நெடுஞ்சாலையை பராமரிக்க 1996 ஆம் ஆண்டு சாலை பராமரிப்பு படை முதல் முதலாக நிறுவப்பட்டது. இந்த சாலைகளில் படைவீரர்கள் நிறுத்தப்பட்டார்கள். இவர்களின் கீழ் 782.5 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டது பாதுகாக்கப்பட்டது. இக்காலத்தில் இந்த சாலை 200க்கும் மேற்பட்ட முறை பேரழிவுகளை சந்தித்த போதும் மீண்டும் மீண்டும் அது புதுப்பிக்கப்பட்டு பாதிப்பின்றி பயணிக்க உதவியது.

இதே காலத்தில் கிராமப்புறங்களிலும் சாலை மேம்பாட்டிற்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டது. வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்க 4500 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகளை உருவாக்கி இணைத்தனர். 2018 ஆம் ஆண்டு கிராமப்புற சாலை திட்டங்களுக்காக 37.29 பில்லியன் யுவான் சுமார் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்து போக்குவரத்து துறையை மேம்படுத்தினார்கள்.  கிராமப்புற சாலைகள் மட்டுமே 68, 863 கிலோ மீட்டர் நீலத்தை கடந்து சென்றது.

மிகவும் இடர்பாடு நிறைந்த இடங்களில் இருந்த 34 டவுன்ஷிப்புகள் 533 கிராமங்களுக்கு தார்சாலை அல்லது கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டன. கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய உள்ளூர் விவசாயிகளும் கால்நடை மேய்ப்பர்களும் சாலை போக்குவரத்து சிரமங்களை தவிர்ப்பதற்கு கிராமப்புற பயணிகள் போக்குவரத்து வழித்தடங்களும் தொடங்கப்பட்டன. விவசாயிகள் கால்நடை மேய்ப்பர்கள் 2,44,000 லட்சம் பேர்கள் கிராமப்புற சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டு வருமானத்தையும் பெற்றனர்.

திபெத்தில் உள்கட்டமைப்பு இணைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசு பெருமளவு முதலீடு செய்திருந்தது. சீனாவின் மேற்குப் பகுதியை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மேற்கே செல்லுங்கள் என்ற பிரச்சாரத்தை 1999 ஆம் ஆண்டிலிருந்து துவக்கி திட்டங்களை விரிவு படுத்தியது. பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் 117, பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் 188 என்ற வகையில் கட்டமைப்பு திட்டங்களை மேற்கொண்டனர். இதற்காக பல பில்லியன் யுவான்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இன்று இன்று திபத்தின் சாலை அமைப்புகள் ஷாங்காய், பெய்ஜிங் நகரத்துடன், தொலைதூரமான வடக்கு சீனாவின் ஜின்ஜியான் நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் சாலை போக்குவரத்து இணைக்கப்பட்டுள்ளது.

கூரையின் மேலே ரயில் ஓட்டம்

திபெத்திய பீடபூமியில் ரயில் வலை அமைப்பை உருவாக்கக்கூடிய முதல் வடிவமைப்பு 1911 ஆம் ஆண்டு உருவான குடியரசு ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டது . அன்றைய ஜனாதிபதி டாக்டர் சன் யாட் சென் லாசாவை சீனாவுடன் இணைக்க ஒரு ரயில்வே திட்டத்தை முன்மொழிந்தார். பலரும் இந்தத் திட்டத்தை கற்பனையானது என்று விமர்சித்தார்கள். ஆனால் இந்தத் திட்டம் அமலாகவில்லை.

1950 ஆம் ஆண்டு கொரியா போர் காரணமாகவும், சீன சோவியத் உறவுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு ராணுவ தொழில்களை மத்திய சீனாவிற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சூழலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல்கள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. எனவே சிச்சுவான், குவஷோ, யுனான் ஆகிய இடங்களில் ரயில் பாதைகளை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதற்கான பணிகளை அவசர அவசரமாக தொடங்க வேண்டும் என்று மாவோ உத்தரவிட்டார். அதே நேரத்தில் உற்பத்திக்கான மூலப் பொருட்களை  ஜின்ஜியாங், திபெத், உள் மங்கோலியா, மஞ்சூரியா போன்ற இடங்களில் இருந்து வரவைக்க வேண்டிய நிலைமை இருந்தது. சீனப் பிரதமர் சௌ என் லாய் 1957ஆம் ஆண்டு இதற்கான விரிவான திட்டத்தை தெரிவித்தார்.

திபெத் பூமியை சீனாவுடன் இணைக்கும் முதல் ரயில் திட்டம் சீனாவின் இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் போது 1958 முதல் 1962 ல் நிறைவேற்றப்பட்டது. திபெத்தின் ஒரு பகுதியாக இருந்த அம்டோ நகர்வரை இது அமைக்கப்பட்டது. முதல் ரயில் இணைப்பு இதுதான். இத்திட்டம் நிறைவேற்றுவதில் தடங்கள் ஏற்பட்டு 1977 ஆம் ஆண்டு மீண்டும் உயிர்பிக்கப்பட்டு 1984 ஆம் ஆண்டு 845 கிலோ மீட்டர் ரயில் பாதை செயல்பாட்டுக்கு வந்தது. இந்த ரயில் பாதையை கோர்மோ நகரத்தில் வழியாக திபெத்தின் தலைநகரான லாசா வரை நீட்டித்தார்கள்.

இந்த ரயில்வே கட்டுமானம் மிக புகழ்பெற்ற ஒன்றாகும். மொத்த நீளம் 1,118 கிலோ மீட்டர் ஆகும். இவற்றில் 960 கிலோமீட்டர் ரயில்வே தண்டவாளங்கள் கடல் மட்டத்திலிருந்து 13,000 அடிக்கு மேல் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 560 கிலோமீட்டர் அதிகமான ரயில் பாதை நிரந்தர உறை பணி பூமியில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு வெப்பநிலை மைனஸ் ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மிகக் குறைந்த வெப்ப நிலை மைனஸ் 40 டிகிரி வரை செல்லும்.

திபத் ரயில்வே நெட்வொர்க்கின் பெரும் பகுதி நிரந்தர உறைப்பணியில் கட்டப்பட்டுள்ளது. அதன் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்த புதுமையான பொறியியல் தேர்வுகளை பயன்படுத்தினார்கள். பணி உருகி தண்டவாளங்களை சீர்குலைப்பதை  தடுக்க பாறை மற்றும் காங்கிரீட் தடிமனான அடுக்குகளில் பாதைகளை அமைத்து உருவாக்கி இருக்கிறார்கள். விலங்குகள் இடம்பெயர்வு பாதைகளில் கடந்து செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது.

மண்ணரிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான தொழில் நுட்பங்களும் இணைக்கப்பட்டுள்ளது.  இந்தப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மிகக் கடுமையான சவால்களை சந்தித்தனர். இவர்களுக்கான பொருட்களை கொண்டு போய் சேர்ப்பதே மிகப்பெரும் பணியாக இருந்தது. இத்தனை சவால்கள் இருந்த பொழுதும் 2006 இல் கட்டி முடிக்கப்பட்ட கிங்காய் திபெத் ரயில்வே ஒரு குறிப்பிடத்தக்க பொறியியல் சாதனையாகும். இது உலகின் மிக உயரமான அதாவது 5,072 மீட்டர் உயரம் உள்ள ரயில் பாதை ஆகும். இதேபோன்று உலகின் உயரமான ரயில் சுரங்கப் பாதையும் இங்கு தான் அமைந்துள்ளது.

இந்த ரயில்வே திட்டங்கள் திபெத்தின் பொருளாதாரத்தை கணிசமாக உயர்த்தி உள்ளன. பொருள் போக்குவரத்தையும், மக்கள் போக்குவரத்தையும் எளிதாக்கியது மட்டுமல்ல சுற்றுலாவையும் கணிசமான அளவிற்கு மேம்படுத்தியுள்ளது. நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளுடனும் ரயில் பாதைகளை உருவாக்கி போக்குவரத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

தற்போது திபத்தில் உள்ள ரயில் பாதைகள் அனைத்தையும் மின்மயமாக்கும் திட்டத்தை 2022 ஆம் ஆண்டு அறிவித்து மூன்று ஆண்டுகளில் முடிப்பதற்காக 14.84 பில்லியன் யுவான்களை ஒதுக்கி மின்மயம் ஆக்கி வருகிறது சீன கம்யூனிஸ்ட் அரசு. இதேபோல் மற்றொரு முக்கிய போக்குவரத்தான விமான நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 13 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன. ஏராளமான ஹெலிகாப்டர் இறங்குதலங்களும் அமைக்கப்பட்டுள்ளது. லாசா சர்வதேச விமான நிலையம் மிகப்பெரிய விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் ஆண்டுதோறும் ஒன்பது மில்லியன் பயணிகளை கையாளுகிறது.

சுற்றுலா பயணிகளின் சொர்க்கம்

சீன மக்கள் குடியரசு அதிசயதக்க வகையில் குறுகிய காலத்தில்  அடிப்படைக் கட்டுமானத்தை உருவாக்கியது. மின்சாரம், டிஜிட்டல் அமைப்பு முறைகள், சாலை, ரயில், விமான போக்குவரத்து போன்றவற்றால் திபெத்தில் சுற்றுலா பயணிகள் உலகம் முழுவதுமிருந்து வந்து குவிகிறார்கள். சீன அரசு திபெத் பிராந்தியத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்றி வருகிறது.

2015 ஆம் ஆண்டில் இந்த பிராந்தியம் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது. இதன் மூலம் ஆண்டுக்கு 20 பில்லியன் ஆரம்பி யுவான் வருவாய் கிடைத்தது. திபத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த வருவாய் 25% ஆகும். அதே நேரத்தில் இந்த பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலா 20% மேல் பங்களிக்கிறது.

2006 ஆம் ஆண்டு கிங்காய்-திபெத் ரயில் பாதை நிறைவடைந்த பிறகு திபெத் என்பது சுற்றுலாவின் சொர்க்கமாக மாறியது. மக்கள் விரைவாக திபெத்தை சென்றடைய முடிந்தது. 2006ம் ஆண்டு மட்டும் 1.5 லட்சம் சர்வதேச பார்வையாளர்கள் உட்பட 25 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வந்தனர். 2007 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 40 லட்சமாக உயர்ந்தது. இந்த வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க தூண்டுதலோடு தலாய்லாமாவின் ஆதரவாளர்கள் 2008 இல் பெரும் கலவரத்தை நடத்தினார்கள். ஆனால் அவை கட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் தீபத்தின் சுற்றுலா எழுந்து நின்றது.

2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை திபெத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10.58 மில்லியனிலிருந்து அதாவது ஒரு கோடியில் இருந்து 30.03 மில்லியன்கள் வரை மூன்று கோடி வரை அதிகரித்தது.  மேலும் சுற்றுலாவின் மூலமான திபெத்தின் வருவாயும் 3.2 மடங்கு அதிகரித்தது.

விடுமுறை காலத்தில் லாசா,  திபெத்தின் பல்வேறு நகரங்களில் கலாச்சார சுற்றுலா திருவிழாக்கள் நடத்தப்படுகிறன. இவற்றில் நடைபெறும் ஓபரா நாடகத்தின் நிகழ்வுகள் பெரும்பாலான மக்களை ஈர்க்கிறது. ஓபரா என்பது இசையின் மூலம் முழுக்க முழுக்க ஒரு கதையைச் சொல்லும் நாடக வடிவம், இதில் பாடலும் நடிப்பும் இசைக்குழுவின் துணையுடன் மற்றும் அரங்குகள், உடைகள் மற்றும் ஒளியமைப்புகள் போன்ற மேடைக் கலைகளுடன் ஒருங்கிணைக்கப் படுகின்றன. ஒரு நாடகத்தைப் போலன்றி, ஓபராவில் உரையாடல் பேசப்படுவதற்குப் பதிலாகப் பாடப்படுகிறது.

ஒரு ஓபரா நாடக கலைஞர் கடந்த காலங்களில்  நாங்கள் அடிமை உரிமையாளர்களை மகிழ்விக்க திபெத்திய ஒபாரா நிகழ்ச்சிகளை நடத்தினோம். இன்று நாமும் மற்றவர்களும் சிறந்த வாழ்க்கை வாழ உதவுவதற்காக ஒபரா நாடகத்தை நடத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். திபெத்தில் மட்டும் 4,277 கலாச்சார பாரம்பரிய தளங்கள் உள்ளன. லாசாவின் மையப் பகுதியில் உள்ள பொட்டாலா அரண்மனை 1994 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டது.

திபெத்தின்  வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மிகப்பெரும் அடித்தளமாக அமைந்தது. எரிசக்தி வீடுகள் தோறும் கொண்டு சேர்த்தது மட்டுமல்ல, மின்சாரப் போக்குவரத்து அமைப்புகளை உருவாக்குவதற்கும், ரயில், சாலை, விமானப் போக்குவரத்து, ஆறுகளின் போக்குவரத்து ஆகியவற்றை ஒன்றிணைத்து திபெத்தை வளர்ச்சியின் உச்சத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய முறையில் உள்கட்டமைப்பு தரமான முறையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. சீன சோசலிசம் கடை கோடி மக்களுக்கும் சென்றடைய கூடிய முறையில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.

அ.பாக்கியம்

திங்கள், நவம்பர் 10, 2025

நானே மகத்தானவன் புத்தகத்தைப் பற்றி போக்குவரத்து தொழிலாளியின் கடிதம்.





(தோழர்.பி.சுந்தர்ராஜன் மூலம் இந்த புத்தகத்தை வாங்கினேன். படித்து முடித்தவுடன் எனக்கு ஏற்பட்ட உணர்வை உங்களுக்கு கடிதமாக எழுதுகிறேன் என்று தொலைபேசியில் பேசினார். உங்களது தொலைபேசி இந்த புத்தகத்தில் இல்லை எனவே நீங்கள் இதற்கு முன்பு வெளியிட்ட வேலை நாள் என்ற புத்தகத்தை படித்ததனால் அதிலிருந்து எடுத்து உங்களிடம் பேசுகிறேன் என்றார். எனக்கு ஸ்மார்ட் போன் கிடையாது எனவே நான் காகிதத்தில் எழுதியதை அப்படியே உங்களுக்கு அனுப்புகிறேன் என்று அனுப்பி வைத்தார். அவரின் எழுத்துக்களில் எந்த மாற்றமும் செய்யாமல் இங்கே கொடுக்கிறேன். வாசிப்பின் அவசியம் செயலுக்கான ஊக்க மருந்து என்பதை இவரின் மதிப்புரை வெளிப்படுத்துகிறது.)

நானே மகத்தானவன் புத்தகத்தின் ஆசிரியர் தோழர் அ.பாக்கியம் அவர்களுக்கு வணக்கம்

உங்கள் புத்தகத்தை படித்தேன் என்னுடைய கருத்துக்களை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். நானே மகத்தானவன் புத்தகத்தை படித்து பல விஷயங்களை தெரிந்து கொண்டதை என் பாக்கியமாக கருதுகிறேன்.

நானே மகத்தானவன் அட்டைப்படத்தில் முகமது அலி எதிரிகளை வீழ்த்துகிறார். நடைமுறை வாழ்க்கையில் வெள்ளையர்களால் கருப்பர் களுக்கு உண்டாகும் கொடுமையை வீழ்த்துகிறார் என்ற பதிவு அருமை. அட்டை படத்தில் இருக்கும் அமெரிக்க சுதந்திரசிலை இரண்டு கண்களையும் மூடி கொள்வது போல் இருப்பது சிந்திக்க வைக்கிறது.

வெள்ளையர் பெண்ணை கருப்பரான எம்மெட் காதலிக்கிறார் என்று வெள்ளையர்கள் எம்மெட் முகத்தை கொடுமையாக சிதைத்து சாகடிக்கிறார்கள். அந்த முகத்தை உலகமே பார்க்க வேண்டும் என்று எம்மெட்டின் தாய் கிறிஸ்தவ மரபையும் மீறி எம்மெட்டின் உடலை சவப்பெட்டிக்குள்ளே வைக்காமல் சவப்பெட்டியின் மேலே தனது மகனின் உடலை வைத்துக் கொண்டு ஊர்வலமாக செல்வது அந்தத் தாயின் மன வேதனையையும் எம்மட்டின் முகத்தை சிதைத்த கொடூரத்தையும் புத்தகத்தை படித்த எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியது

பேருந்திலே வெள்ளையர்களுக்கும் கருப்பொருளுக்கும் உட்காரு வதிலேயே பிரச்சனை இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் போக்கு வரத்து தொழிலாளர்களுக்கும் தமிழக அரசுக்கு மேல் பிரச்சனை இருக்கிறது.

அமெரிக்காவிலே வெள்ளையர்களுக்கும் கருப்பர்களுக்கும் பிரச்சனைகளால் பல கொலைகள் நடக்கிறது. தமிழ்நாட்டிலேயே மேல் ஜாதி, கீழ் ஜாதி என கௌரவ கொலைகளையும், ஆணவக் கொலையும் நடக்கிறது.

முகமது அலி குத்துச்சண்டையிலே பதக்கம் வெல்கிறார். சந்தோஷப்படுகிறார். ஆனால் அவர் கருப்பர் என்பதால் ஓட்டலில் சாப்பிட அனுமதிக்கவில்லை. அவருக்கு உணவும் பரிமாறுவதில்லை. ஆகையால் அவர் வேதனைப்பட்டு கருடப்பர்களுக்கு நடக்கும் கொடுமைக்கு எதிராக அந்தப் பதக்கத்தையும் அதன் மூலம் பெற்ற சந்தோஷத்தையும் நீரோடையில் வீசி எறிவது அவரின் ஆழ்ந்த மன வேதனையை காட்டுகிறது. அந்த வேதனை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகளே இல்லை.

வியட்னாமுக்கு சென்று போர் செய்யும் வேண்டுமென்று அமெரிக்கா கட்டளை இருக்கும்போது, நான் வியட்நாமுக்கு செல்ல மாட்டேன் வியட்நாமுக்கு எதிராக போர் செய்ய மாட்டேன் என்று அமெரிக்காவின் கட்டளையை பாடையில் ஏற்றுவது, முகமது அலியின் தைரியத்தை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை.

அவர் குத்துச்சண்டையில் வெற்றி பெற்று வரும் பணத்தை தர்மம் செய்கிறார். அனாதை இல்லத்திற்கு கொடுக்கிறார். பசியால் வாடுபவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்கிறார். உடை இல்லாதவர்களுக்கு உடை எடுத்துக் கொடுக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது புத்தகத்தை எழுதிய ஆசிரியர் முகமது அலி மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தியை புத்தகத்தில் பதிவு செய்யக்கூடாது என்ற ஏக்கம் கொண்டு புத்தகத்தை படிக்கும் போது பதட்டம் தோன்றுகிறது. அவரைப் போல் நாமும் நம்மால் முடிந்தவரை தர்மம் செய்ய வேண்டும் என்று எண்ணம் நானே மகத்தானவன் என்ற புத்தகம் என் சிந்தனைக்கு வேலை கொடுத்தது. என்னை செயல்படவும் வைத்தது

கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவர்களைவிட கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லாதவர்கள் அதிகமாக மக்களைப் பற்றி யோசிக்கிறார்கள். மக்களுக்காக போராடுகிறார்கள். மக்களுக்கு உதவி செய்கிறார்கள். மக்கள் சிந்தனையாலேயே வாழ்கிறார்கள் என்ற செய்தி முகமது அலி நடைமுறை வாழ்க்கை எனக்கு புரிய வைத்தது

அவர் மதர் தெரேசாவை சந்தித்து, நெல்சன் மண்டேலாவை சந்தித்தது, மக்களுக்கு பண உதவி செய்வது போன்ற செயல்கள் முகம்மது அலி கருப்பாக இருந்தாலும் அவருடைய தூய்மையான வெள்ளை மனதை காட்டுகிறது

மகத்தானவர்களின் மகத்தானவன் என்ற வார்த்தை நூலுக்கு நூறு சதம் பொருத்தமே

திருக்குறள் எழுதினார் திருவள்ளுவர் நின்றார்.

விடுதலை தழும்புகள் எழுதினார் அகத்தியலிங்கம் நின்றார்.

நீங்கள் நானே மகத்தானவன் புத்தகத்தை எழுதினீர்கள். ஆசிரியர்கள் வரிசையில் நின்று விட்டீர்கள்

நானே மகத்தானவன் புத்தகத்தை படிப்பவர்களை ஓரளவுக்காவது இந்த புத்தகம் மகத்தானவர்களாக மாற்றும்

இப்படிக்கு

Aதோழமையுடன்

 

எம்.செல்வராஜ்

 

சிபிஐஎம் காக்காவாக்கம் கிராமம்

 தண்டலம் அஞ்சல்

 பெரியபாளையம் வழி

 திருவள்ளூர் மாவட்டம்

பின்கோடு 61108

வியாழன், நவம்பர் 06, 2025

45 திபெத் நீர் மின்சக்தி உள்கட்டமைப்பின் உச்சம்




அ.பாக்கியம்

முதலாளித்து சமூக அமைப்பு எப்பொழுதும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை மையப்படுத்தியே இருக்கும். கச்சா பொருட்கள், போக்குவரத்து வசதிகள், வரி சலுகைகள், சீதோசன நிலைகள், குறைந்த கூலிக்கான தொழிலாளர்கள் கிடைக்கக்கூடிய பகுதிகளில்  தான் முதலாளிகள் தங்களது மூலதனத்தை கொட்டுவார்கள். சந்தை பொருளாதாரத்தின் விதிகளில் ஒன்றாகவே இதை மாற்றி விட்டார்கள்.

சோசலிச சமூக அமைப்பை உருவாக்கும் கடமையை செய்யும் கம்யூனிஸ்ட்கள் திட்டமிட்ட பொருளாதாரம், சந்தை பொருளாதாரம் ஆகியவற்றை கடைப்பிடிக்கக்கூடிய அதே நேரத்தில் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை சமநிலைப்படுத்துவதற்கான திட்டங்களையும் உருவாக்குவார்கள்.

திபெத்தில் அவ்வளவு எளிதாக அடிப்படை உள்கட்டமைப்புகளை உருவாக்கிவிட முடியாது. ஏனெனில் அது உயரமான மலைகளும், கரடுமுரடான நிலப்பரப்பு, பனியும் பனிப்பாறைகளும் குளிரும் நிறைந்த பிரதேசமாகும். இங்கு உள்கட்டமைப்பை உருவாக்குவது மிக சவாலான பிரச்சனை மட்டுமல்ல மிகப்பெரும் அளவு லாபம் தராத முதலீடுகளை செய்ய வேண்டி இருக்கும். அதிலும் மிகவும் பின்தங்கிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற பிரதேசத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மிக மிக பின்தங்கிய நிலைமையில் இருந்த திபெத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீன மக்கள் குடியரசு உலகமே ஆச்சரியப்படும் வகையிலான மாற்றங்களை  உருவாக்கியது.

எரிசக்தி துறைக்கான கட்டமைப்புகள்

உள்கட்ட அமைப்பின் மிக முக்கிய அங்கமாக இருக்கக்கூடிய எரிசக்தி, சாலை, ரயில், விமான போக்குவரத்து போன்றவற்றை அங்கு உருவாக்கினார்கள். சீன சோசலிசத்தை அடைய வேண்டும் என்ற இலக்கோடு அளப்பெரிய பணிகளை சீன மக்கள் குடியரசு பல தடைகளையும் தகர்த்தெறிந்து அங்கு உட்கட்டமைப்பை உருவாக்கியது. இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியில் உருவான உள்கட்டமைப்பு சாதனைகளாகவும் அதிசய நிகழ்வுகளாகவும் காணப்படுகிறது.

 

மனித தேவைகள் உட்பட அனைத்து தேவைகளுக்கும் மின்சாரம் மிகவும் அடிப்படையானது. 1950 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு திபெத்தில் ஒரு நீர் மின் நிலையம் மட்டும்தான் இருந்தது. இதிலிருந்து பெறப்படும் மின்சாரம் நிலப்பிரபுக்களின் வீடுகளுக்கு மட்டும்தான் பயன்படுத்தப்பட்டது. புரட்சிக்குப் பிறகு தான் நீர் மின் சக்தி சூரிய, மின் சக்தி, காற்றாலை மின் சக்தி என பல புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களை உருவாக்கி திபெத்தில் எரிசக்தி வலை அமைப்பை வெற்றிகரமாக நிர்மானித்து விட்டார்கள்.

இந்த உள்கட்டமைப்பு திபெத்தின் பொருளாதார வளர்ச்சியில் சிறப்பான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் அதே நேரத்தில் அண்டை நாடுகளுடனும் பொருளாதார இணைப்பை எளிதாக மாற்றி உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

திபெத்தின் புவியியல் நிலைமைகளை ஆய்வு செய்து இங்கு பிரதானமாக நீர் மின்சாரத்தை உருவாக்க முடியும் என்று அரசு தீர்மானித்தது. காரணம் வானுயர்ந்த மலைகளில் இருந்து பல ஆறுகள் பாய்ந்து ஓடுகிறது. இது பல பிரதேசங்களையும் சில நாடுகளையும் கடந்து செல்கின்றது. ஆயிரக்கணக்கான ஆறுகள் உள்ளன. 20க்கும் மேற்பட்ட ஆறுகள் 10,000 சதுர கி.மீ.க்கு மேல் வடிகால் பரப்பளவையும், 100 க்கும் மேற்பட்டவை 2,000 சதுர கி.மீ.க்கு மேல் பெரியதாகவும், மேலும் பல ஆயிரக்கணக்கான ஆறுகள்  100 சதுர கி.மீ.க்கு மேல் பரப்பளவையும் கொண்டவை.

நீர் மின் நிலையங்கள் கட்டமைப்புகள் அதிகரிப்பு

இங்கு நீர் மின் நிலையங்களை அமைத்தால் அவை நம்பகத் தன்மை உடையதாகவும், நிலையானதாகவும் இருக்கும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு முடிவு செய்தது. நீர் மின் திட்டங்களை உருவாக்குவதற்கு பெரும் அளவு முதலீடுகளை மக்கள் சீன குடியரசு செய்தது. 1950 ஆம் ஆண்டு ஒரே நீர் மின் நிலையத்தைக் கொண்டிருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு மொத்த மின்சார உற்பத்தியில் நீர் மின் நிலையங்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் 94 சதவீதம் ஆகும். மீதம் உள்ள 6 சதவீதம் காற்றாலை மூலமாகவும், சூரிய சக்தி மூலமாகவும் பெறப்படுகிறது.

 

2024 ஆம் ஆண்டு தரவுகளின் படி திபத்தில் 193 நீர் மின் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது. இவற்றில் நூற்றுக்கு மேற்பட்டவை சிறிய மின் உற்பத்தி நிலையங்கள். பத்து நீர் மின் நிலையங்கள் 50 மெகா வாட்டுக்கு மேல் உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்றது. மேலும் பலமெகா நீர் மின் நிலையங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டில் 11 திட்டங்களை தொடங்கி 700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அதிகப்படுத்தியது. தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிலும் 15 திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் கூடுதலாக 860 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தொடர்ச்சியாக சீனா திபெத்தில் கவனம் செலுத்துகிறது.

பரந்த அளவிலான மின் உற்பத்தி நிலையங்கள் முதல் மிதமான மின் உற்பத்தி நிலையங்களையும் உள்ளூர் முக்கியத்துவம் வாய்ந்த முறையில் நிறுவி வருகிறது. இந்தத் திட்டங்களில் சில திட்டங்கள் முழுமையான மானிய விலையில் மக்களுக்கு கொடுக்கப்படுகின்றன. பல்வேறு விதமான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இராணுவ வசதிகளுக்கும் இந்த மின் நிலையங்கள் உதவி செய்கின்றன.

சூரிய மின்சக்தி உற்பத்தி

திபெத்தின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க சொத்துக்களில் ஒன்றாக சூரிய மின்சக்தி உற்பத்தி முறையும் உள்ளது. லாசா பகுதி ஆண்டுக்கு 5,852 முதல் 8,400 MJ/m2 வரையிலான சூரிய கதிர்வீச்சை பெறுகின்றது. சுவாரஸ்யமான ஒரு அம்சம் திபெத்தின் உயர்ந்த பகுதிகளில் வெயில் மிகுந்த பகுதியும் ஒன்றாகும். மேற்கு பகுதிகளில் ஆண்டுக்கு 3000 மணி நேரத்திற்கும் அதிகமான சூரிய ஒளி கிடைத்தாலும் லாசாவில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 8,160 MJ/m2 சூரிய ஒளியும் கிடைக்கிறது. இதனால் யாங்பாஜிங் சூரிய பண்ணை நிறுவி 1.1 ஜிகா வாட் மின்சார தயாரிப்பை செய்ய முடிகிறது

திபெத்தில் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரம் உயர் மின்னழுத்த மின்மாற்றிகள் மூலமாக ஏற்றத்தாழ்வான பிரதேசங்களில் உள்ள இடங்களுக்கு இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மின்சாரத்தை சீரான முறையில் விநியோகிக்கிறார்கள். மற்றொரு குறிப்பிட்ட தக்க சிறப்பம்சம் மின்விநியோகத்தில் இயற்கை சீற்றத்தால் தடை ஏற்படுகிற பொழுது மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்காக மிகப்பிரமாண்டமான பேட்டரி அமைப்புகளை உருவாக்கி அவற்றில் மின் சக்தியை சேமிப்பு செய்து விநியோகத்தை தொடர்கிறார்கள். இதற்காக ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பங்களில் அரசு மிகப் பெரும் முதலீடுகளை செய்கிறது.

திபெத்தில் உள்ள மொத்த கிராமங்களில் 96.5% கிராமங்களுக்கு மூன்று கட்டு மின்சார விநியோகத்தை கொடுக்கிறார்கள். இதனால் மின்சார நுகர்வு 2012 ஆம் ஆண்டு 2.88 பில்லியன் கிலோவாட் மணி நேரத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டு 11.98 பில்லியன் கிலோவாட் மணி நேரமாக பெருமளவு அதிகரித்து உள்ளது. இதனால் தொலை தூரத்தில் உள்ள மலைப்பிரதேசங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் வாழக்கூடிய மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைக்கிறது. 2020 ஆம் ஆண்டு தரவுகளின்படி சீனா முழுவதும் 14.9 நிமிடங்கள் சராசரி மின் வெட்டாகும். ஆனால் மாறுபட்ட புவியியல் அமைப்பில் இருக்கிற திபெத்தின் மின்வெட்டு 5.5 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இவையெல்லாம் நாம் அறிந்திடாத, இந்தியாவில் நாம் அனுபவிக்க முடியாத மின்சார சேவையாகும்.

உலக நாடுகளின் மின் தேவையை பூர்த்தி செய்யும்

மிக முக்கியமாக இரண்டு நீர் மின் திட்டங்களை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். திபெத்திலிருந்து உருவாகிற யார்லோங் சாங்போ நதியில் பிரம்மாண்டமான நீர்மின் திட்டம் இந்த ஆண்டு (2025) கட்டப்படுகிறது. இது லீகியாங்க் சீனாவின் பிரதமராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட நூற்றாண்டு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதன் முதலீடு 1.2 ட்ரில்லியன் யுவான் ஆகும். அதாவது 168 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சமமானது. இந்தத் திட்டமானது  சீனாவில் யாங்சே நதியில் 254.2 பில்லியன் யுவான் செலவில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள மூன்று கோர்ஜஸ் அணையின்  மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்ற 88.2 மில்லியன் மெகாவாட் மின்சாரத்தை விட அதிகமாக 300 மில்லியன் மெகாவாட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இந்தத் திட்டம் நிறைவேறுகிற பொழுது திபெத்திற்கு மட்டுமல்ல தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து போன்ற மின் பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கும் மின்சாரம் வழங்க முடியும். இந்தியா உட்பட இந்த மின்சாரத்தை பெறுகிற பொழுது மலேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதியை குறைக்க முடியும் என்று இந்தத் திட்டத்திற்கான அறிக்கை கூறுகிறது.

 

மற்றொரு முக்கியமான திட்டம் தென்மேற்கு சீனாவில் உள்ள யுன்னான் மாகாணம் வழியாக கிழக்கு மியான்மரில் பாய்ந்து அந்தமான் தீவுக்கடலில் கலக்கும் நூ நதியின் துணை  நதியில் செயல்படுகின்ற நீர் மின் நிலையம் ஆகும். இங்கு இருக்கிற நீர்மின் நிலையத்தில் தற்போது 80 டன் எடையுள்ள டர்பனை சீனா சொந்தமாக தனது நாட்டில் வடிவமைத்து பொருத்தி உள்ளது. இது உலகத்திலேயே மிகப்பெரிய டர்பன் ஆகும். இந்த மின் நிலையம் மொத்தம் ஒரு மில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டதாகும். ஆண்டுதோறும் சுமார் 4 பில்லியன் கிலோவாட் மணி நேரங்களை உற்பத்தி செய்யும் வகையில் இந்த ராட்சச டர்ன் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1.3 மில்லியன் டன் நிலக்கரிகளை எரிப்பது குறையும். அதேபோல கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம் 3.4 மில்லியன் டன் குறையும். சீனா 2060 ஆம் ஆண்டு கார்பன் நடுநிலையை அடைய வேண்டும் என்ற இலக்கை வெற்றிகரமாக முடிக்க திட்டமிட்டுள்ளது. திபெத்தில் நீர்மின் சக்தி உற்பத்தி மிக முக்கியமான எரிசக்தியாக உள்ளது. ஏனெனில் இது திபெத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது என்பதையும் கடந்து சீனாவின் கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டை பெருமளவு குறைக்க உதவுகிறது. சீனாவின் மின்சார உற்பத்தியில் 25 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரமாக 2030 ஆம் ஆண்டு மாற்ற வேண்டும் என்ற இலக்கு அதற்கு முன்பாகவே நிறைவேறுவதற்கான கட்டமைப்பை துரிதப்படுத்தி உள்ளது.

தன்னளவில் அனைத்தையும் பெற முடியாத ஒரு பிரதேசமாக இருளில் உலர்ந்து கொண்டிருந்த திபெத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, இன்று உலகின் பல பகுதிகளுக்கு மின்சாரத்தையும், இதர உற்பத்திகளையும் வழங்கக்கூடிய அளவிற்கு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதில் இருந்து  சீன சோசலிசத்தின் மகிமையைப் புரிந்து கொள்ள முடியும்.

டிஜிட்டல் யுகத்தில் திபெத்

உள்கட்டமைப்புகளில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக டிஜிட்டல் வசதிகள் மாறிவிட்டன. உள்ளூர் துவங்கி உலகம் முழுவதும்   இணைக்க கூடிய ஒரு தொழில் நுட்பமாக டிஜிட்டல் தொழில் நுட்பம் கோலோச்சுகிறது. திபெத்தின் மலைக் கிராமங்களில், தொலைதூர வீடுகளுக்கும் டிஜிட்டல் வசதியை செய்து கொடுப்பதில் சீன மக்கள் குடியரசு குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்தி உள்ளது.

 

தன்னாட்சிப் பிராந்தியத்தில் மின்-அரசு வலைதளங்கள், ஒருங்கிணைந்த அடிப்படை கிளவுட்தளம், பெரிய அளவிலான தரகட்டுப்பாட்டுமையம் ஆகியவை பெரும்பாலும் திபெத்தின் அனைத்துப்  பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளது. திபெத்தின் கிழக்குப் பகுதிகளிலிருந்து வளர்ச்சிக் குறைவான மேற்குப் பகுதிக்கு அதிக கணினி அமைப்புகளை உருவாக்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தி சாதித்து இருக்கிறார்கள்.

5ஜி இணைப்புகளை வழங்கக்கூடிய 8,099 நிலையங்களை அமைத்திருக்கிறார்கள். இதன் மூலமாக 3,12,600 கிலோமீட்டர் தூரத்திற்கு பைபர் ஆப்டிக்கேபிள்கள் அமைக்கப்பட்டு இணைப்புகள் தடையின்றி கிடைக்கின்றது. திபெத் தன்னாட்சிப்  பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் முக்கிய நகரங்களுக்கும் 5ஜி நெட்வொர்க் இணையதளம் வழங்கப்பட்டுள்ளது. இதனையும் கடந்து இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு அதன் உட்பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் மொபைல் சிக்னல் கிடைக்கக்கூடிய அளவுக்கு கோபுரங்கள் நிறுவப்பட்டு உள்ளது.

பைபர் பிராட்பேண்ட், 4ஜி, ரேடியோ, தொலைக்காட்சி சிக்னல்கள் திபெத் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நிர்வாக கிராமங்களுக்கும் கிடைக்கிறது. இவை அனைத்தும் உள்ளூர் மக்களை உலகத்துடன் ஆன்லைனில் இணைத்து உள்ளது.

ஆப்டிகல் கேபிள்களும், செயற்கைக் கோள்களை கொண்ட நவீன தகவல் தொடர்பு வலை அமைப்புகளும் தகவல் விரைவுச் சாலையின் ஒரு மிகப்பெரிய பகுதியாகும். திபெத் முழுவதும் இந்தத்  தகவல் விரைவுச் சாலை முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆப்டிகல் பிராட்பேண்ட் கவரேஜ் திபெத்தில் 99 சதவீதத்தை அடைந்துள்ளது. இதனால் சேவை தொழில்கள் பரவலான வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலமாக மின் வணிக சேவை அதாவது ஆன்லைன் சில்லறை விற்பனை மிகப்பெரும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இக்காலத்தில் ஆன்லைன் சில்லறை விற்பனை 20 பில்லியன் ஆர்எம்பி யுவானை கடந்துள்ளது. திபெத்தில் டிஜிட்டல் பொருளாதரத்தின் அளவு 33 பில்லியன் ஆர்எம்பி யுவான் ஆகும். 2019 ஆம் ஆண்டு 5ஜி நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பொருளாதார வளர்ச்சியின் வேகம் அதிகபட்டுள்ளது.

 

கல்வி வட்டாரங்களிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. கலாச்சாரத்துறையை மேம்படுத்துவதற்கும் டிஜிட்டல் அருங்காட்சியகங்கள், டிஜிட்டல் கலாச்சார மையங்கள் போன்றவை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. திபெத்தில் டிஜிட்டல் மையம் என்பது தகவல் பரவலை விரிவுபடுத்துவதுடன், அறிவுவளர்ச்சியும் ஏற்படுத்துகிறது. உழைப்பு, மூலதனம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற உற்பத்திக் காரணிகளில் மேம்பாட்டை உருவாக்குகிறது. நகர்ப்புற கிராமப்புற இடைவெளியை குறைக்கிறது.

அ.பாக்கியம்

 

 

சனி, நவம்பர் 01, 2025

நௌஜவான் பாரத் சபா கொள்கையும்-செயல்பாடுகளும்

 

 


அ.பாக்கியம்

 


வெறுப்பு அரசியலின் அமைப்புகள் தங்களது நூற்றாண்டை போற்றுகிறார்கள். வகுப்புவாத கலவரத்தின் ரத்த ஆற்றில் மிதந்து  நூற்றாண்டை கடக்கிறார்கள். ஆனால் 1926 ஆம் ஆண்டு சாகித் பகத்சிங் மற்றும் அவரது தோழர்களால் நிறுவப்பட்டநௌஜவான் பாரத் சபாஇந்திய இளைஞர்கள் மத்தியில் சுதந்திரம் சமத்துவம் மதசார்பின்மை மற்றும் நீதியின் உணர்வை உருவாக்குவதில் வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பை செய்தது ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிராகவும் சுரண்டலுக்கு எதிராகவும் சமரசமற்ற போராட்டத்துடன் நிறுவப்பட்ட நௌஜவான் பாரத் சபா  இந்திய இளைஞர்களையும் மக்களுக்கும் ஒரு நீடித்த மரபை விட்டுச் சென்றுள்ளது. 

இந்த மரபின் தொடர்ச்சியாக 1980 ஆம் ஆண்டு நவம்பர் 3 ம் தேதி லூதியானாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பகத்சிங்கின் சக தோழன் கிஷோரிலாளால் துவக்கி வைக்கப்பட்டு வெறுப்பு அரசியலுக்கு எதிராகவும், இளைஞர்களின் எதிர்காலத்திற்காகவும், தேச நலனுக்காகவும் களமாடி வருகிறது. அதே லூதியானாவில் நிறுவப்பட்டநௌஜவான் பாரத் சபா வின் நூற்றாண்டு துவக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கொண்டாட இருக்கிறது. 

பகத்சிங் என்ற இளைஞனைப் பற்றி இந்த தேசம் அறிந்திருக்கும். அறியாமலும் அனேகம் பேர் இருக்கக்கூடும். ஆனால், பகத்சிங்கை அறிந்திருக்கும் சிலர்கூட அவர் ஒருவெடிகுண்டு வீச்சாளர் என்ற தவறான கருத்தோடு நின்றுவிடுகின்றனர். அவர் ஒரு வீர புருஷன் மட்டுமல்ல; விடுதலை வேட்கையை வேகமாக வெளிப்படுத்தியவர். விரைவில் சுதந்திர தாயகத்தை தரிசிக்க புதிய பாதையை தேடியவர். அதற்காக அவர் செய்தது தீவிரமான செயல்கள் மட்டுமல்ல.. இந்திய இளைஞர்களை அணிதிரட்ட அமைப்புகளை உருவாக்கி, அதற்கு தலைமை ஏற்று வழி நடத்தியவர் பகத்சிங். அவர் முயற்சி எடுத்து உருவாக்கிய அமைப்புகளில் நிறுவப்பட்டநௌஜவான் பாரத் சபா " என்ற அமைப்பு பிரதானமானது. இந்த சங்கம் பகிரங்மாக செயல்படக்கூடிய வெகுமக்கள் அமைப்பாக இருந்தது. இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கம் அமைக்கவும் பகத்சிங் காரணமாக இருந்தார்.

1920ம் ஆண்டுகளில் முதல் உலக யுத்தம் முடிந்தவுடன் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இந்தியாவில் அதுவரை கண்டிராத அளவில் மக்கள் எழுச்சியை எதிர்கொண்டனர். கிலாபத் இயக்கம், ஜாலியன்வாலாபாக், ஒத்துழையாமை இயக்கம், சௌரி சௌரா சம்பவம் என மக்கள் எழுச்சி தொடர்ந்தது. அதோடு ரஷ்யப் புரட்சியை தொடர்ந்து ஏற்பட்ட நம்பிக்கையின் தாக்கமும் இருந்தது. இந்தச் சூழலில் காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தை திடீரென திரும்பப் பெற்றதால் வெகுண்டெழுந்த மக்கள் குறிப்பாக இளைஞர்கள் விரக்தியுற்றனர்.

ஒத்துழைப்பு, ஒத்துழையாமை, சுயராஜ்யம் - டொமினியன் அந்தஸ்து என இரண்டிற்கும் இடையில் காங்கிரஸ் தலைமை ஊசலாடிக் கொண்டு இருந்தது. இக்காலத்தில் 1922ம் ஆண்டுக்குப் பிறகு மக்களிடம் சோர்வும் அவநம்பிக்கையும் மேலோங்கி இருந்தது. மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்த வேண்டும் என்ற தீவிர வேட்கையுடன், தீவிரவாத தேச பக்தர்கள் பலர், பல்வேறு அமைப்புகளை பல இடங்களில் உருவாக்கி மாற்றுப் பாதையை தேடினார்கள். இச்சூழலில்தான் நிறுவப்பட்டநௌஜவான் பாரத் சபாவும் உருவானது.

1926 மார்ச் மாதம் நிறுவப்பட்ட நௌஜவான் பாரத் சபா என்ற அமைப்பை தனது 19-வது வயதில் பகத்சிங் உருவாக்கினார். அந்த அமைப்பு சுதந்திர போராட்ட வீரர் சத்தியபால் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது என்ற தகவல் இருந்தாலும் வரலாற்று ஆதாரப்படி பகத்சிங் சொந்த முயற்சியால் இது தொடங்கப்பட்டது என்றே தெரியவருகிறது. பகவதி சரண் வோரா, தன்வந்தி மற்றும் பலர் இதை உருவாக்க பகத்சிங்கிற்கு உதவி புரிந்தனர். இதன் முதல் செயலாளர் பகத்சிங், தலைவர் ராமகிருஷ்ணரன், கொள்கை பரப்பு பிரச்சார செயலாளர் பகவதி சரண் வோரா என நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அன்றைய சூழலில் இடதுசாரி மனோபாவம் கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் சைபுதீன் கிச்சுலு, சத்தியபால், கேதர்நாத் சேகல், லாலா பிண்டி தாஸ் போன்றவர்கள் இந்த அமைப்பை உருவாக்க ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கினர்.

அமைப்பின் நோக்கம்

·         சமூக மேம்பாடு மற்றும் அரசியல் நிலைகளை அந்த அமைப்பின் நோக்கமாக வரையறுத்தனர்.

·         சுதேசி பொருட்களை வாங்குவது; தேக ஆரோக்கியத்தை காப்பது: சகோதரத்துவம் வளர்ப்பது: இந்திய மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படச் செய்வது.

·         தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தலைமையில் முழுமையான விடுதலை பெறுவது.

·         இந்திய இளைஞர்களின் இதயத்தில் தேசபக்தி மற்றும் இந்திய ஒற்றுமை உணர்வை உருவாக்குவது.

·         வகுப்புவாத சக்திகளின் கருத்துக்களுக்கு மாற்றாக, தொழிலாளர் விவசாயி தலைமையில் பூரண விடுதலை என்ற கருத்தை நோக்கி மக்களை அணிதிரட்டுவது.

·         தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அணி திரட்டுவது.

·         பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மட்டுமல்ல.. அனைத்து ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்தும் நாட்டை விடுவிப்பது என்ற வகையில் தங்கள் அமைப்பின் கொள்கை பாதையை அவர்கள் உருவாக்கிக் கொண்டனர்.

வகுப்புவாதத்திற்கு எதிராக பகத்சிங் கடுமையாக போராடினார். நவ ஜவான் பாரத் சபாவில் உறுப்பினர் ஆவதற்கு முன்னால், என் சமூக நலனை விட இந்த நாட்டின் நலனை முன்னிறுத்தி செயல்படுவேன்" என உறுதிமொழி ஏற்க வேண்டும். பெரும் தலைவர்களாக இருந்தால் கூட அவர்கள் வகுப்புவாத செயல்பாட்டில் ஈடுபட்டால் நிறுவப்பட்டநௌஜவான் பாரத் சபா கடுமையாக விமர்சனம் செய்தது.

தீவிர தேசியவாதியான லாலா லஜபதிராய், பின்னாட்களில் இந்து மகாசபையுடன் நெருங்கி செயல்பட்ட போது கடுமையாக விமர்சிக்கப்பட்டார். குறிப்பாக, பகத்சிங் அதிகமாக மதித்ததலைவர் லாலா லஜபதிராய் ஆவார். ஆனால் அவரின் வகுப்புவாத அணுகுமுறையை பகத்சிங் கடுமையாக சாடினார். மக்களிடையே சமபந்தி இயக்கம் நடத்தி பல தரப்பட்ட மக்களை ஒன்றுபடுத்தும் வேலையை நவ ஜவான் பாரத் சபா செய்தது. காங்கிரஸின் சர்வ மதத்தையும் தாஜா செய்யும் போக்கை நிறுவப்பட்ட நௌஜவான் பாரத் சபா எதிர்த்தது. சுதந்திரம், மதச்சார்பின்மை, சோசலிசம் அல்லது மக்கள் பங்குபெறும் பொருளாதாரம் என்ற கோஷத்தை நிறுவப்பட்ட நௌஜவான் பாரத் சபா முழங்கியது.

களப்பணியில்

நிறுவப்பட்டநௌஜவான் பாரத் சபா தனது கொள்கைகளை வரையறுத்த பின்பு நடவடிக்கையிலும் இறங்கியது. லாகூரில் புரட்சியாளர் சுத்தார்சிங் சராபா நினைவு தினத்தை அனுஷ்டித்தனர். லாகூர் பிராட்லக் மண்டபத்தில் அவரின் படத்தை திறந்து வைத்து பகத்சிங் மற்றும் பகவதி சரண் வோரா ஆகியோர் பேசினார்கள். அதேபோல் லாகூரில் இளைஞர்களை அணிதிரட்டி வங்க புரட்சியாளர் பூபேந்திரநாத்தை அழைத்து, "மேற்கில் இளைஞர்கள் இயக்கம்" என்ற தலைப்பில் பேச வைத்தனர்.

முதல் தாக்குதலும் முடிவற்ற போராட்டமும்

1925 மார்ச் முதல் 1927 மார்ச் வரை சபாவின் செயல்பாடுகள் லாகூர் நகரையும் அதைச் சுற்றியுமே இருந்தது. ஆனாலும் இதன் செயல்பாடும் இதற்கு கிடைக்கும் மக்கள் செல்வாக்கும் பிரிட்டிஷ் அரசின் கண்ணை உறுத்தியது. தீவிர அரசியல் போராட்டத்தையும், கம்யூனிச கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இந்த அமைப்பு இருக்கிறது என்று வெள்ளை அரசாங்கம் பார்த்தது.1927 ஜூலையில் தசரா விழாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பை பயன்படுத்தி நிறுவப்பட்டநௌஜவான் பாரத் சபா வை ஒழித்துக் கட்ட வெள்ளை அரசு திட்டம் தீட்டியது. நௌஜவான் பாரத் சபாவின் அமைப்பாளரும் இளைஞர்களை கவர்ந்தி ழுத்துக் கொண்டிருந்தவருமான பகத்சிங் மீது பழியை போட்டு அவரைக் கைது செய்தது. இதன்மூலம் மக்களிடம் நிறுவப்பட்டநௌஜவான் பாரத் சபா வுக்கு இருந்த செல்வாக்கை சீர்குலைத்து விடலாம் என்று வெள்ளை அரசாங்கம் நினைத்தது. சபா, கடுமையான பின்னடைவை சந்தித்தது என்றாலும், பிரிட்டிஷ் அரசின் நோக்கம் நிறைவேறவில்லை. பகத்சிங் மிக உயர்ந்த அளவு ஜாமீன் தொகை செலுத்தி (ரூ.80000) விடுதலை பெற்றார்.

1958 மார்ச் மாதம் லாகூதில் 'தேசிவாரம்" சபாவால் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்கட்சி தலைவர் ஃபிலிப் பிராட், எஸ்.ஏ.டாங்கே இருவரும். பங்குபெற்று இந்திய விடுதலை பற்றி எழுச்சிமிகு உரையாற்றினார்கள். அடுத்து கிருதி கிசான் கட்சியின் சார்பில்  ஏப்ரல் 11 முதல் 13 வரை ஜாலியன் வாலாபாக்கில் இளைஞர்கள் மாநாடு நடத்த விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. மாநாடு நடக்கும் சில தினங்கள் முன் பகத்சிங், சோகன்சிங் ஜோஷை சந்தித்து இந்த மாநாட்டில் நவ ஜவான் பாரத் சபாவும் பங்கெடுப்பது பற்றி விவாதித்து, சபாவும் பங்கெடுப்பது என்ற முடிவாயிற்று. இந்த மாநாட்டிற்கு லாகூரில் சபா உறுப்பினராக இருந்த கேதர்நாத் சேகல் தலைமையில் இளைஞர்கள் மாநாடு கூடியது. மாநாட்டில் அமைப்பு பற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

அமைப்பு இனிமேல் "பஞ்சாப் மாநில நௌஜவான் பாரத் சபா " என்று அழைக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. இதன் தலைமையகம் லாகூரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு மாற்றப்பட்டது. புரட்சியின் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது; பல வழிகளிலும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளை திரட்டுவது என கொள்கையில் சில ஷரத்துக்களை சேர்த்தனர். அமைப்பை மாவட்ட, வட்ட, கிராம அளவில் விரிவுபடுத்த திட்டங்களைத் தீட்டினார்கள்.

ஜாலியன் வாலாபாக் மாநாட்டிற்கு பின்பு விவசாயிகள் மத்தியில் நௌஜவான் பாரத் சபா தனது வேலைகளை தீவிரப்படுத்தியது. பஞ்சாபில் கோதுமை சாகுபடி நடக்காததை கண்டித்து விவசாயிகளை அணிதிரட்டி போராடியது. 1908 மே 2 லாகூரில் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தை நடத்தியது. இதில் காங்கிரசில் இருந்த தீவிரவாத தலைவர்கள் சத்தியபால், மஜீத், கேதர்நாத் சேகல் போன்றவர்கள் பங்கு கொண்டு பேசினார்கள். விவசாயிகளின் போராட்டத்தை காங்கிரஸ் தலைமை ஆதரித்தாலும் மக்களை அணிதிரட்டக் கூடிய வேலையையும் கூலி விவசாயிகளை இதில் பங்கு பெறச் செய்ததும் நௌஜவான் பாரத் சபா தான் செய்தது.

1928 செப்டம்பரில் லியால்பூரில், விவசாயிகள் தொழிலாளர்கள் மாநாட்டை சபா நடத்தியது. இதில் பிரிட்டிலஷ் சும்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஸ்பார்ட், பிராட்லி மற்றும் டாங்கே நௌஜவான் பாரத் சபா வின் தலைவர் கேதர்நாத் சேகல். சோசலிச சிந்தனையாளர் ஷபில்தாஸ் ஆகியோர் பேசினார்கள். வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அறைகூவல் விடுத்தனர்.

1928 நௌஜவான் பாரத் சபா வால் "ருஷ்ய வாரம்" கொண்டாடப்பட்டது. இதில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சோவியத்தை ஆதரித்தும் பிரிட்டிஷ் அரசை எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்றினர். இந்தியாவில் முதலாளித்துவத்தை அழித்து விவசாய தொழிலாளர் தலைமையில் அரசை அமைப்போம் என்று சபதம் ஏற்றனர்.

இதே காலத்தில் இளைஞர்களுக்கு அரசியல் கல்வி போதிக்கும் பிரசுரங்களை வெளியிட்டனர். இந்த கல்வி குழுவிற்கு லாகூர் தேசிய கல்லூரி முதல்வராக இருந்த ஷபில் தாஸ் பொறுப்பாக இருந்தார். லாகூரில் நௌஜவான் பாரத் சபா செயல்படுவதற்கும், இளைஞர்கள் மத்தியில் தேசப்பற்று, சோசலிச கருத்துக்கள் பரவுவதற்கும் முக்கிய காரணமாக அவர் இருந்தார்.

1928 ஜூன் மாதம் பகத்சிங் மற்றும் சுகதேவ் முயற்சியால் அமைந்த லாகூர் மாணவர் சங்கம் சார்பில் "மாணவர் வாரம்" கொண்டாடப்பட்டது. இதில் "இளைஞர்களுடன் சில வார்த்தை " என்ற பிரசுரத்தை அச்சிட்டு வெளியிட்ட சபா, தேச விடுதலைப் போராட்டத்தில் மற்ற பல நாடுகளை போல் இங்கும் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்று அறை கூவி அழைத்தது.

இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கம்:

சபாவின் செயல்பாடுகள் வளர்ந்து வருகிற சூழலில் பகத்சிங், சோசலிச கருத்துக்களை அறியவும் புரிந்துகொள்ளவும் தொடங்கினார். அதே நேரத்தில் இந்தியாவின் இதர பகுதியிலும் இளைஞர்களை அணிதிரட்ட சிந்தித்து உத்தரபிரதேசம் நோக்கி தனது கவனத்தைத் திருப்பினார் அங்கு ஏற்கனவே சில குழுக்கள் செயல்பட்டு வந்தன.

ராம் பிரசாத் பிஸ்மில், ஜோகோஷ் சட்டர்ஜி, சசீந்திரநாத் சன்யால் ஆகியோர் கான்பூரில் 1924ம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்தித்து இந்துஸ்தான் குடியரசு சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். ஆயுதப் புரட்சியின் மூலமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது, இந்திய ஐக்கிய குடியரசை அமைப்பது போன்றவ்ற்றை லட்சியமாக அறிவித்தனர். இச்சங்கத்தின் முதல் நடவடிக்கை சந்திச்சேகர் ஆசாத் தலைமையில் லக்னோவிற்கு அருகிலுள்ள காகோரி கிராந்தி ரயில் மீது தாக்குதல் சம்பவம் நடந்தது. அரசின் பணம் ரயிலில் செல்வதை எடுத்து தங்களது. ஆயுதகொள்முதலுக்கு பயன்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினர். இதற்கு பணநடவடிக்கை என்று பெயரிட்டனர். இதைத்தொடர்ந்து பிரிட்டிஷ் அரசு சுமார் 8 பேரை கைது செய்தது. சந்திரசேகர், குண்டன்லால், இருவரும் தப்பிச்சென்றனர். அஸ்வக்ஹூல்லாகான், ராம் பிரசாத் பிஸ்மில், ரோஷன்சிங், ராஜேந்திர லகிரி தூக்கிலிடப்பட்டனர், 4 பேர் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 17 பேருக்கு நீண்ட கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த அமைப்பின் செய்ல்பாடு பலவீனம் அடைந்தது இந்த அமைப்பை புதியமுறையில் புனரமைக்கவும் அகில இந்திய அமைப்பாக உருவாக்கவும் பகத்சிங் முயற்சித்தார்.

இதே காலத்தில் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிஜய் குமார் சின்கா, சிவவர்மா. ஜெய்தேவ் பஞ்சாபிலிருந்து பகத்சிங், பகவதி சரண் வோரா, சுகதேவ் ஆகியோர் முயற்சி செய்து 1928 செப்டம்பர் 8, 9 தேதிகளில் இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கம் என்ற அமைப்பை டெல்லி கோட்லா மைதானத்தில் உருவாக்கினார்கள். இதன் கொள்கையாக சோஷலிசத்தை ஏற்றுக் கொள்வது என்பதை பகிரங்கமாக அறிவிககி முடிவு செய்தனர். வங்கம் தவிர இதர பிரதேசத்தில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் 

தலைமறைவாக இருந்த ந்திரசேகரி ஆசாத், குண்டன் லால் உட்பட பலரும், இந்த அமைப்பின் உருவாக்கத்திலும், கொள்கை உருவாக்கத்திலும் பங்குகொண்டனர். அமைப்பின் மத்திய கமிட்டியில் கூட்டு செயல்பாடு கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்அமைப்பை உருவரக்குவதற்கு பகத்சிங் எடுத்த முயற்சி மிக முக்கிய பங்காக இருந்தது. பகத்சிங்கின் செயல் தளம் இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு இதை நோக்கி கூடுதலாக நகர்ந்தது.

1928-ம் ஆண்டில் சைமன் கமிஷன் வருகையையொட்டி நாடு கழுவிய அளவில் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. சைமன் கமிஷனில் ஒரு காங்கிரஸ்தாரர் கூட இல்லை என காங்கிரஸ் கட்சி எதிர்த்தது இந்திய மக்கள் தகுதியை அளப்பதற்கு பிரிட்டிஷ் அரசுக்கு ந்த அருகதையும் இல்லை என் அறிவித்து நௌஜவான் பாரத் சபா எதிர்த்தது

1928 அக்டோபர் 25 அன்று முடிவெடுத்து 30ம் தேதி லாகூரில் 'ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அறைகூவல் விடுத்தது. 9ம் தேதி, காவல்துறை அதிகாரி, மக்கள் கூடுவதற்கு தடை விதித்தார். இதையும் மீறி மக்கள் கூடினார்கள். மக்கள் எழுச்சி கண்டு காங்கிரஸ் கட்சியும் இதில் பங்கு கொண்டது. கூடியிருந்த கூட்டத்தின் மீது காவல்துறை கொடூரமாக தடியடி நடத்தியது. இதில் பலர் படுகாயமடைந்தனர். லாலா லஜபதிராய் தலையில் படுகாயம் அடைந்து அடுத்த பதினைந்தாவது நாளில் மரணமடைந்தார். இதைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் சபா, பொதுக் கூட்டங்களை நடத்தியது. டிசம்பர் 16, 1928 அன்று லாகூரிலும், அமிர்தசரஸிலும், 'காகோரி தினத்தை சபா  அனுஷ்டித்து. புரட்சியாளர்களை கௌரவித்தது.

அடுத்தநாள் காலை டிசம்பர் 17 தேதி அன்று லாலா லஜபதிராய் மரணத்திற்கு காரணமான அதிகாரி சௌந்தர் மற்றும்

ஒரு போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜபதிராய் மீதுள்ள மதிப்பாலும், தேசத்தின் மீதுள்ள பற்றாலும் பகத்சிங் இதைசெய்தார். இதையொட்டி 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

நௌஜவான் பாரத் சபா தனது தொடர் நீடவடிக்கையால் விரிவாகிக் கொண்டே வந்தது.1928  ல உத்தரபிரதேசத்தில் மீரட், கராச்சி, சிந்து போன்ற இடத்திலும் மற்றும் ஜலந்தரிலும் சபாவின் அமைப்புகள் உருவாகி எழுச்சியுடன் செயல்ட ஆரம்பித்தது. இந்த சூழலில்தான் பிரிட்டிஷ் அரசு, சுதந்திரப் போரை நசுக்கும். வகையிலும், இதொழிற்சங்க உரிமைகளை முடக்கவும் இரு மசோதாக்களை 1929 ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வேலையில் ஈடுபட்டது. ஆக்ராவில் இருந்த பகத்சிங் உடனடியாக லாகூர் சென்று இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்க மத்திய கமிட்டி கூட்டத்தை கூட்டி தனது ஆ             லோசனையை கூறினார்.

மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் உயிர்ச்சேதமற்ற முறையில் வெடிகுண்டை நாடாளுமன்றத்தில் வீசுவது இதை செய்து முடித்து தப்பிக்காமல் கைதாகி நீதிமன்றத்தில் நமது கருத்தை வெளிப்படுத்துவது; இருவர் செல்வது என முடிவாகியது.இரண்டு நாள் விவாதித்து முடிவெடுத்தனர். 1920 ஏப்ரல் சம் தேதி இரு மசோதாவும் நிறைவேறுகிறது என கவர்னர் ஜெனரல் அறிவிக்கிற போது பகத்சிங்கும். பட்டுகேஸ்வர தத்தும் குண்டு வீசினார்கள். இதையொட்டி கைது செய்யப்பட்டனர்.

லாகூர் சிறைச்சாலையில் ஏராளமான புரட்சியாளர்கள் அடைக்கப்பட்டு இருந்தனர். பகத்சிங் சிறைக்கு சென்றபிறகு அரசியல் கைதிகளுக்கான உரிமைகோரி பகத்சிங் தலைமையில் அரசியல் கைதிகள் அணிதிரட்டப்பட்டு உண்ணாவிரதம் நடைபெற்றது. 1929 ஜூனில் நௌஜவான் பாரத் சபா சார்பில் லாகூரில், அமிர்தசரஸில் உண்ணாவிரதத்தின் வெற்றிக்காக பாராட்டுக் கூட்டம் நடத்தினார்கள். லாகூரில் நடைபெற்ற கூட்டத்தில் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன் சிங் கலந்து கொண்டு பேசினார்.

     நௌஜவான் பாரத் சபா அகில இந்திய அளவில் பசுத்சிங் மற்றும் பட்டு கேஸ்வர தத் தினத்தை அனுஷ்டிக்க அறைகூவல் விட்டது. உண்ணாவிரதம் ஊர்வலம் பொதுக்கூட்டம் என மக்கள். இளைஞர்கள் திரளாக பங்குபெற்றனர். 1929 டிசம்பர் 29ல் லாகூரில் நடைபெற்ற கூட்டத்தில் சுதந்திர போராட்ட வீராங்கனை சுகாசினி நம்பியார் தலைமை தாங்கினார். உண்ணாவிரதம் இருந்து மறைந்த ஜதீன் தாசுக்கு வீர அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சமரச போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

1930-ல் காந்தி சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கியபோது அதில் சபா, இளைஞர்களை ஈடுபடச் செய்தது. பஞ்சாப் காங்கிரஸ்: கட்சி 1930 பிப்ரவரியில் உண்ணாவிரதம் அனுஷ்டித்தது. இதில் சபாவும் கலந்துகொண்டு லாகூர் சதி வழக்கு நிதி திரட்டியது: காங்கிரஸ் இதை எதிர்த்தது.

1930 மார்ச் 20-ல் நௌஜவான் பாரத் சபா 'மீரட் தினம் அனுஷ்டித்தது. பிரிட்டிஷ் அரசு, கம்யூனிஸ்டுகள் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்ததை கண்டித்து இந்த தினத்தை கடைபிடித்தனர். ஊர்வலம், பொதுக்கூட்டம், நிதி வசூலும் நடத்தினர்.

இந்த நடவடிக்கைகள் மூலம் நௌஜவான் பாரத் சபா விற்கு மக்கள் செல்வாக்கு பெருகியது. காங்கிரஸ் கட்சி என்ன முடிவெடுத்தாலும் பஞ்சாபிலும் மற்றும் உத்தரபிரதேசத்தின் ஒரு பகுதியிலும் மக்கள் சபாவின் பின்னால் அணி திரண்டனர். இது பிரிட்டிஷ் அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் பிரிட்டிஷ் அரசு 1930 ஜூன் 23 அன்று நவ ஜவான் பாரத் சபாவை தடை செய்தது. அதன் அலுவலகங்களை சோதனையிட்டு தலைவர்களை கைது செய்தது.

இதைத்தொடர்ந்து 1930ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பகத்சிங், ராஜகுரு. சுகதேவ் ஆகியோருக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி மக்கள் போராடினார்கள். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி, நௌஜவான் பாரத் சபா சார்பில் 'மனு கமிட்டிகள்' அமைக்கப்பட்டன. அந்த கமிட்டிகள் சார்பில் சுமார் 15 மாவட்டங்களுக்கும் மேல் மக்களிடம் 3 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தும் மனுக்களை பெற்று வெள்ளை அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்தனர். 1931 பிப்ரவரி 17ம் தேதி பகத்சிங் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பஞ்சாப் குறிப்பாக லாகூரில் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன. ஏராளமான மக்கள் திரண்ட, சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடிய கூட்டங்களில் தலைவர்கள் பேசினார்கள். பகத்சிங் உள்ளிட்ட 3 பேரையும் விடுதலை செய்ய அவர்கள் வலியுறுத்தினார்கள். நாளுக்கு நாள் மக்கள் போராட்டம் அதிகமாகியது. ஆனாலும் வெள்ளை அரசு புரட்சியாளர்களை தீவிரமாக அடக்கியது. கடைசியில் 1931 மார்ச் 23 அன்று பகத் சிங் உட்பட மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

இக்காலத்தில் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது, பகத்சிங் உள்ளிட்ட மூன்று பேரையும் தூக்கிலிடக் கூடாது என காந்தி கோரிக்கை வைத்திருந்தால், மூன்று பேரையும் மரண தண்டனையில் இருந்து காப்பாற்றி இருக்கலாம். ஆனால், காந்தி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சட்ட மறுப்பு இயக்கத்தை ஒத்தி வைப்பது; அரசியல் கைதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்களை தவிர மற்றவர்களை விடுவிப்பது என்று ஒப்பந்தம் போட்டார். இதை நௌஜவான் பாரத் சபா மட்டுமல்ல.. காங்கிரஸ் தலைவர்களே கடுமையாக விமர்சித்தனர்.இதனால் 1901 மார்ச் 25 காங்கிரஸ் மகா சபைக்கு வந்த காந்திக்கு நௌஜவான் பாரத் சபா கருப்புக் கொடி காட்டியது. அதேநேரத்தில் நௌஜவான் பாரத் சபா மாநாடு நேதாஜி தலைமையில் கூடியது; காங்கிரஸ் தலைமையை இந்த மாநாடு கண்டித்தது.

ஏப்ரலில் நௌஜவான் பாரத் சபா வின் பஞ்சாப் தலைவர்கள் லாகூரில் சந்தித்தனர். பகத்சிங், ராஜகுரு சுகதேவ் நினைவு கமிட்டி அமைத்தனர். அது உழைப்பாளிகள் இல்லம், கூட்ட அரங்கம், நூலகம் கட்டவும், அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்யவும் திட்டமிட்டது. இந்த திட்டத்தை கூட காந்தி ஏற்கவில்லை.

இதன்பிறகு நௌஜவான் பாரத் சபா வின் செயல்பாட்டு தளம் சுருங்கியது; சூழல்களும் மாறிவிட்டன.மாற்றுக் கொள்கையில் தெளிவின்மை; நடுத்தர வர்க்க இளைஞர்களின் குணாம்சம்; தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள முரண்பாடு ஆகியவை சபாவின் பலவீனத்திற்கு காரணமாக அமைந்ததுப்

மகாத்மா காந்திக்கு சுதந்திர போராட்ட காலத்தில் மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு பேரும் புகழும் இருந்ததோ அதே அளவிற்கு பகத்சிங் இருக்கும்போது அவருக்கு பேரும் புகழும் இருந்தது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பட்டாபி சீத்தாராமையா குறிப்பிடுகின்றார். அப்படிப்பட்ட பகத்சிங், சிறை வாழ்க்கை காலத்தில் தனிநபர் வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது என உணர்ந்து மக்களை திரட்டி போராட இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்த நோக்கத்துடனே சிறையில் இருந்து நவ ஜவான் பாரத் சபாவை இயக்க ஆரம்பித்து வழிகாட்டினார். ஜனங்களுக்காக நடத்தப்படும் புரட்சி பொதுஜனங்களை திரட்டி நடத்தப்படவேண்டும் என்று அறைகூவி அழைத்தார். 

பகத்சிங் ஒரு சிறந்த புரட்சியாளன் மட்டுமல்ல.. புரட்சியை நடத்துவதற்கு அமைப்பு  அவசியமானது; அந்த அமைப்பிற்கு கொள்கை மிக அவசியமானது; அந்த கொள்கையை நிறைவேற்றுவதற்கு மக்கள் சக்தியை வென்றெடுக்க அமைப்பு மிக மிக அவசியமானது என்பதை உணர்ந்து தனது குறுகிய கால வாழ்க்கையில் மிகப் பெரும் சாதனையை நிகழ்த்தி சென்றிருக்கிறார்.

அ.பாக்கியம்

 

 

ஞாபகங்களின் தீ…..

  ராஜாராம் ( தோழர் ராஜாராம் மாணவர் சங்கம் வாலிபர் சங்க மாவட்ட தலைவர்களில் ஒருவராக இருந்து பணியாற்றியவர். பணியில் சேர்ந்தவுடன் தொழிற்சங்...