Pages

புதன், மே 18, 2022

உக்ரைனில் என்ன நடக்கிறது? அ.பாக்கியம்.

 

                 எழுத்தாளர் இ.பா. சிந்தன் எழுதிய 112 பக்கங்களைக் கொண்ட புத்தகம். பாரதி புத்தகாலயம் சிறந்த முறையில் வெளியிட்டுள்ளது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் புத்தகம் சிறியதாக இருந்தாலும் உக்ரைன் ரஷ்ய போரை மையமாக வைத்து உலக அரசியலை அமெரிக்க ஏகாதிபத் தியத்தின்  மேல் ஆதிக்க வெறியை அங்குலம் அங்குலமாக எண்ணற்ற தரவுகள் மூலமாக அம்பலப்படுத்தி உள்ளார் சிந்தன்.  அவசர அவசியமாக படிக்கவேண்டிய ஒரு புத்தகம்.

    உக்ரைன்-ரஷ்ய போர் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. ரஷ்யாவின் யுத்தம் நியாயமானதா? உக்ரைனில் நடக்கக்கூடிய குழப்பங்களுக்கு யார்காரணம்? இது உலக யுத்தமாக மாறுமா? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நாட்டின் மீது இப்படிப்பட்ட தாக்குதல் நடந்ததே இல்லை? என்பது உண்மையா? அமெரிக்காவும் ஐரோப்பாவும் நடத்தக்கூடிய ஊடக பிரச்சாரத்தில் எந்த அளவு உண்மை இருக்கிறது? போன்ற ஏராளமான கேள்விகளுக்கு இந்த புத்தகம் தெளிவாக பதில் அளிக்கிறது.

                    இரண்டாம் உலகயுத்தத்தில் ஈடுபடாத அமெரிக்கா பாதிக்கப்பட்ட ஐரோப்பாவை பயன்படுத்தி எப்படி மேலாதிக்கம் பெற்றது. 90-ம் ஆண்டுகளுக்குப்பிறகு சோவியத் யூனியன் சிதைந்தவுடள்  அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை உலகம் முழுவதும் நேட்டோ ராணுவ பலத்தால் எப்படி அதிகரித்துக் கொண்டது. சோவியத் யூனியனை சிதைத்தபிறகு ரஷ்யாவை அமெரிக்கா எப்படி தனது நாட்டு ராணுவ பலத்தால் சுற்றி வளைத்தது. இதற்கான அரசியல் பொருளாதார காரணிகளை புத்தகம் ஆய்வு செய்கிறது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு யுத்தமற்ற உலகை உருவாக்க வேண்டுமென்று அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை அதில் எவ்வாறு தோல்வி கண்டது என்பதையும் இப்புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

           அமெரிக்கா உலகை கபளீகரம் செய்யக்கூடிய முயற்சியின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளில் பலவற்றை அழித்து ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் சிக்கி கொண்டதையும், அதனால் உலகின் மேலாதிக்கத்தின் ஏற்பட்ட மாற்றங்களையும் புத்தகம் ரத்தினச் சுருக்கமாக அறிவிக்கிறது.

                    சிதைந்துபோன ரஷ்யா மீண்டும் அரசியல் பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்திக் கொண்டது அமெரிக்காவிற்கு மிகப் பெரும் சவாலாக அமைந்தது. அதேநேரத்தில் சப்தமின்றி, அமைதியான முறையில் சீனாவின் முன்னேற்றம் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு மேலும் ஒரு அச்சுறுத்தலாக அமைந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நேட்டோ இராணுவத்தை பயன்படுத்தியது. குறிப்பாக ஐரோப்பாவில் பலம்பொருந்திய ஜெர்மானியின் முன்னேற்றத்தை அமெரிக்கா திட்டமிட்டு தடுத்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு எடுத்த முயற்சிகளை ஜெர்மன் எதிர்கொண்டது. இந்த விஷயங்களை பொருளாதார ரீதியிலான ஒப்பந்தங்களுடன் இணைத்து  இப்புத்தகம் அமெரிக்கா வின் சதி வேலைகளை அம்பலப்படுத்தி இருக்கிறது.

                   அமெரிக்காவினால் அடிக்கடி விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளும், பெட்ரோ டாலர் மூலமாக வணிகத்தின் மீது செலுத்தும் ஆதிக்கத்தையும் ரஷ்யா, சீனா, ஜெர்மனியும் பங்குபெற்று பின்னுக்குத் தள்ளியது. என்பதையும் அன்னிய செலவாணி பரிமாற்றத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றத்தையும் இப் புத்தகத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.

                    இந்தப் பின்னணியுடன் தான் உக்ரைன் ரஷ்ய போரை இந்தப் புத்தகம் விளக்குகிறது.யுத்தம் நேரடியாகவும், தகவல்தொழில்நுட்ப வழியாகவும், பொருளாதாரஅடிப்டையிலும் எனமூன்று தளங்களில் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் சேர்ந்து உலகம் முழுவதும் ஒரு தரப்பான செய்தியையே வெளியிடுவதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

                 ஐரோப்பா கண்டத்திலேயே ரஷ்யாவிற்கு அடுத்து அதிக நிலப்பரப்பைக் கொண்ட நாடுஉக்ரைன். இதன் பூகோள எல்லைகள் எப்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் யாரால் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது என்பதையும் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

                சோவியத் நாட்டின் சிதைவுக்கு பிறகு ரஷ்யாவிற்கு அருகாமையில் இருக்கக்கூடிய உக்ரைனை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக எடுத்த முயற்சிகளின் ஒரு விளைவுதான் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அடிப்படையான காரணமாகும்.

                  உக்ரேனில் வாழக்கூடிய மக்களில் ரஷ்யஇனமக்கள் 30% பேர் வாழ்கிறார்கள். இந்த ஒற்றுமையில் கை வைப்பதற்கான வழக்கமான சதி வேலைகளை, ரஷ்ய ஆதரவு ஆட்சியாளர்களுக்கு எதிராக என்பதைவிட தன்னுடைய திட்டத்திற்கு அடிபணியாத ஆட்சியாளருக்கு எதிராக, ஜனநாயகம் இல்லை என்ற போர்வையில் பல கோடி டாலர்களை ஒதுக்கி கலவரத்தை தூண்டிவிட்டு குழப்பத்தை உருவாக்கினார்கள்.

                தனக்குப் பிடிக்காத ஆட்சியை எதிர்ப்பதற்காக நவபாசிச சக்திகளை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதங்களையும், நிதி உதவிகளையும், அண்டை நாட்டில் புகழ் இடங்களையும், ஏற்படுத்திக் கொடுக்க கூடிய வேலைகளை அமெரிக்காவின் ஆட்சி கவிழ்ப்பு கும்பல் அற்புதமாக செயல்படுத்தி கொண்டிருந்தது இதனால் உக்ரேனில் பெரும் குழப்பமும் ரஷ்ய இன மக்களை அழித்தொழிக்கும்  நிகழ்வுகளும் நடந்தது.

                   அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர் பதவிக்கு வந்தவுடன் நவ பாசிச பயங்கரவாத அமைப்புகளை துணை இராணுவமாக அங்கீகரித்து மக்களை அழித்து ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வுகளை இந்தியாவில் இந்துத்துவா அமைப்புகளில் செயல்பாடுளுடன் இணைத்து புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.

              கம்யூனிஸ்ட் கட்சி தடை, சுத்தியல் அரிவாள் சின்னம் பயன்படுத்தக்கூடாது, லெனின் சிறை தகர்ப்பு போன்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் குழி தோண்டி புதைப்பதாக அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர்களின் செயல்பாடு இருந்தடிதை புரிந்து கொள்ள முடிகிறது.

                ஐரோப்பாவின் எரிவாயு தேவையை ரஷ்யாவின் மூலம் பூர்த்தி செய்யப்படுவதை தடுப்பதன் மூலம், அமெரிக்கா ஒரே நேரத்தில் ரஷ்யாவையும், ஐரோப்பாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுத்த முயற்சிகள் என்ன விளைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

                 உக்ரைன் பிரச்சனைகளை துல்லியமாக விளக்குவதற்கு சிரியாவை சிதைத்த தன்மைகள், ஈராக் மற்றும் ஏமன் நாடுகளை எப்படி ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்துக்காக பகடைக்காயாக பயன்படுத்தி, ஜனநாயகத்தையும் அழித்தொழித்து தனது கட்டுக்குள் கொண்டுவந்தது என்பதை ஒரு சர்வதேச அரசியல் நிகழ்ச்சி போக்குவதோடு விளக்கப்பட்டுள்ளது.

              எனவே உக்ரேன் யுத்தம், உக்ரைன்-ரஷ்யாவிற்குமான யுத்தம் மட்டுமல்ல. அது பல வழிகளில் பல கோணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு யுத்தம் என்பதை இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

             புத்தகத்தின் இறுதிப் பகுதியில் யுத்தம் தொடர்பான பதிவுகள் உழைக்கும் மக்களை முன்னிறுத்தி  அறைகூவல் விடப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் அவசியமாக படிக்கவேண்டியது மட்டுமல்ல நிலை மையை புரிந்து கொள்வதற்கு அவசரமாகவும் படிக்க வேண்டும்.

அ.பாக்கியம்.

 

 





 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...