Pages

புதன், மே 18, 2022

சென்னை: சாக்கடை கணக்கு

 


              கமுக்கமாகவும், கச்சிதமாகவும் கணக்குபண்ணுவதில் கைதேர்ந்த வர்கள் நம்மை ஆண்டவர்கள். இப்போது ஆளுகிறவர்கள் அப்படியெல்லாம் நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து வந்திருக்கிறார்கள். அதற்கான அறிகுறிகள் அருகமையில் தென்படவில்லை. காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

         தற்போது சென்னையில் தினசரி 250 மில்லியன் லிட்டர் (MLD) கழிவுநீர் பாதாள சாக்கடைக்கு செல்லாமல் நேரடியாக ஆறுகளில் கலப்பதாக அறிக்கை வந்துள்ளது. இவற்றில் பெருங்குடி குப்பைகிடங்கிலிருந்தும், கொடுங்கையூர் குப்பைகிடங்கிலிருந்தும், குப்பைகளிலிருந்து கசிந்து வரக்கூடிய விஷத்தன்மை வாய்ந்த  கசிவு நீர்கள் 30 மில்லியன் லிட்டர் ஆகும்.இவை அனைத்தும் பாதாள சாக்கடைவழியாக கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு செல்ல வேண்டும்.

        கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து அனுப்புவதற்காக சென்னையில்  கொடுங்கையூர், கோயம்பேடு, நெசப்பாக்கம், பெருங்குடி, ஷோலிங்கநல்லூர், ஆலந்தூர் ஆகிய இடங்களில் 12 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (sewage treatment plants) உள்ளது. இந்த 12சுத்திகரிப்பு நிலையங்களிலும் தினசரி 745 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் திறன் படைத்தது. சரியான பராமரிப்பு இல்லாமல், தவறான நிர்வாகத்தால், ஊழல் காரணமாக இவற்றை முழுமையாக பயன்படுத்த முடியாமல் தினசரி 599 மில்லியன் லிட்டர் மட்டுமே கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது மீதம் இருக்கக்கூடிய கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் கால்வாய்களில் திறந்துவிடப்படுகிறது.

                  சென்னையில் கழிவுநீர் எவ்வளவு உற்பத்தி ஆகிறது என்பதில் மெட்ரோ வாட்டர் நிறுவனத்திற்கு ஒரு தெளிவான கணக்கில் இல்லை. தற்போது தினசரி குடிநீர் வாரியம் மூலம் 850 (MLD) மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.இவற்றிலிருந்து 80 சதவீதம் கழிவுநீராக திரும்பி வருகிறது என்று கணக்குப்போட்டு 680 மில்லியன் லிட்டர்  தீர்மானிக்கிறார்கள்.

                     சென்னையில் மெட்ரோ வாட்டர் குடிதண்ணீரை மூன்றில் ஒரு பகுதியினர்தான் பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான் கிடைக்கிறது. மற்ற இருபங்கு பகுதியினர் ஆழ்துளைகிணறு மூலமாக நீரை பயன்படுத்துகிறார்கள். இவற்றை கணக்கிட்டால் அவை மட்டும் 1300 மில்லியன் லிட்டர் ஆகும். இவை இரண்டையும் சேர்க்கும் பொழுது சுமார் 2150 மில்லியன் லிட்டர் நீர் நுகரப்படுகிறது.  இவற்றில் 1500 முதல் 1800 மில்லியன் லிட்டர் வரை தினசரி கழிவுநீர்களாக வெளிவருகின்றது. 

            இவற்றுக்கு ஏற்றவகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்திருக்க  வேண்டுமா இல்லையா.?ஆட்சிக்காலத்தில் அள்ளிக்குவித் தார்களே  தவிர அமைக்கவில்லை.

           ஏற்கெனவே சென்னையில் பாதாள சாக்கடைகள் போதுமான அளவிற்கு இல்லை, மழைக்காலத்தில் பாதாள சாக்கடைகளில் மழைநீர் செல்வதால் அதன் செயல்திறன் குறைந்து விடுகிறது.

           இவை தவிர சென்னை குடியிருப்புகளில் 50 முதல் 60 சதவீதம் வரை தான் பாதாள சாக்கடை இணைப்பு உள்ளது. மற்ற குடியிருப்புகளில் அவ்வாறான ஏற்பாடுகள் இல்லை. அவை சட்டபூர்வமற்ற இணைப்புகளாகவோ அல்லது நேரடியாக கால்வாயில் விடக்கூடிய ஏற்பாடுகளில் இயங்குகிறது

            இவை தவிர தொழிலகங்கள், பல நிறுவனங்கள் நேரடியாக கால்வாய் களில் கழிவுநீர் விடுகின்ற நிலைமை இருக்கிறது.

                  தற்போது தான் அரசு மேலும் 350 மில்லியன் லிட்டர்  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை புதிதாக கட்டவும் 498 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இவை யெல்லாம் முடிந்த பிறகுதான் சென்னையில் சாக்கடை பாதாள சாக்கடை வழியாக சென்று சுத்திகரிக்கப்பட்டு வருகின்ற நிலைமை ஏற்படும்.

          அதுவரை அதுவரை சிங்காரச் சென்னையில் பூமிகள் சாக்கடை கழிவுநீர் களால் நிரம்பி வழியும். குழாய்களில்.ஆழ்துளை குழாய்களில் வருகின்ற தண்ணீர் பல வண்ணத்தில் வரும்.

       அரசின் செயல்பாட்டு தேவை ஆமை வேகத்தைவிட முயல் வேகத்தில் இருக்க வேண்டும் என்பதை இப்படி எத்தனையோ அவலங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. மண்வளம் கெட்டு மாடிமேல மாடிகட்டினால் அது சிங்கார சென்னையாகிவிடுமா?

அ.பாக்கியம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...