Pages

வியாழன், மே 26, 2022

சென்னை:உட்புற சாலைகள் ஊழலுக்கு வழி வகுக்குமா? அ. பாக்கியம்

 


     சென்னையில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சாலை சீரமைப்பு செய்வது என்று முடிவெடுத்து நடைபெற்று வருகிறது.

      பல ஆண்டு காலமாக சென்னை யின் சாலைகள் போடப்படாமல் சிதிலமடைந்து கிடந்தது. ஊழல் சாரை சாரையாக நடைபெற்றதால் சாலை சிதிலமடைந்தது. 

         தற்போது பேருந்துகள் செல்லக் கூடிய சாலைகளில் 90% சாலைகள் போடப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள் ளது.

     ஆனாலும் உட்புற சாலைகள் போடப் படாமல் கைவிடப்படும் நிலையில் உள்ளது. சுமார் 800 சாலைகள் ஒப்பந்தம் செய்த  ஒப்பந்தக்காரர்கள் விலை ஏற்றத்தால் போட முடியாது என்று கைவிடுகிறார்கள். 

        ஒரு டன் தாரின்(bitumen) விலை  ஜனவரி மாதம் 46,022 ரூபாயிலிருந்து  57,662ரூபாயாக உயர்ந்துவிட்டது.  ஓராண்டுகள்   வரையிலான விலையேற்றத்தை பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால் தற்பொழுது ஐந்து மாதங்களாகியும் விலையேற்ற பில் தொகை கொடுக்க மறுக்கிறது. 

     ஏது எப்படியோ  சாலைகள் கணிசமான அளவு போடப்படவில்லை.

2021-22 ஆண்டுகளில் 1654 புதிய சாலைகள் 311km போடுவதற்கு 202.08 கோ டிகள் சிங்கரசென்ன2.0 மற்றும் இரு திட்டங்கள் மூலம் நிதி    ஒதுக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன. 

       இதுவரை 1098 சாலைகள் போடப் பட்டு உள்ளது. 540 சாலைகள் போடப்படவில்லை. 16 சாலைகள் முடியாது என்று கைவிடப்பட்டுள்ளது.

      2019-21 ஆண்டுகளில் 7395 உட்புற சாலைகளை போடுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. இவற்றில் 7037 உட்புற சாலைகள் போடப்பட்டன.135 சாலைகள் முடிக்கப்படவில்லை. 223 சாலைகளில் கைவிடப்பட்டன. 

        மணலி மண்டலத்தில் 108 சாலைகளில் 18 உட்புற சாலைகளில் தான் முடிக்கப்பட்டுள்ளது. 90 உட்புற சாலைகள் முடிக்கப்படவில்லை. மாதவரம் மண்டலத்தில் 108 உட்புற சாலைகளில் 41 சாலையில்தான் முடிக்கப்பட்டுள்ளது. 

      மீதம் 67 சாலைகள் அமைக்கப் படவில்லை. இவை தவிர 240 சாலைகள் மழைநீர் வடிகால்வாய் துறையும், மற்ற துறைகலும் பள்ளம் தோண்டி உள்ளதால் சாலைகள்போடப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.

         மொத்தத்தில் உட்புற சாலைகள் போடுவதில் முயற்சி எடுக்கவில்லை ஒதுக்கப்பட்ட நிதிகள்எங்கே போகும் என்று தெரியாது. 

       இப்பணிகளை கண்காணிப்பதற்கு பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏற்பாடுகள் இல்லை. முடிக்கப்பட்ட சாலைகள், முடிக்கப்படாத சாலைகளில் எடுக்க வேண்டிய முயற்சிகள் என்று எதுவும் நடக்கவில்லை. 

   பல புகார்கள் அளிக்கப்பட்டும் அதன் மீது நடவடிக்கை இல்லை.

         எனவே பெருநகர சென்னை மாநகராட்சி யின் உட்புற சாலைகள் அனைத்தும் சீரமைப்புக்கான வாய்ப்புகள் இல்லாமல் ஒதுக்கப்பட்ட பணங்கள் கொள்ளை போவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

      ஒப்பந்தக்காரர்கள்,கமிஷன்காரர்கள் கூட்டுக் கொள்ளையாக  மாறிவிடக் கூடாது.

அ. பாக்கியம் 

புதன், மே 25, 2022

உழைப்புச் சக்தியின் வீழ்ச்சி உயர்ந்து வரும் வேலையின்மை:

 



    இந்தியாவில் உழைப்பு சக்தி வீழ்ச்சியடைந்து வருகிறது என்பதை இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

         15 வயதிற்கு மேற்பட்டவர்கள் உழைப்பில் ஈடுபடுவது  2016- 17 ஆம் ஆண்டு 46 சதமாக இருந்தது. 2021-22 ஆம் ஆண்டு இது 40 சதமாக குறைந்துள்ளது.

          வேலை செய்ய தகுதி படைத்த 100 பேர்களில் 40 பேர்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள் அல்லது வேலை தேடுகிறார்கள்.மீதி இருக்கும் 60 பேர்கள் உழைப்பில் ஈடுபடுவதற் கான வேலைவாய்ப்புகள் இல்லை.

      இதை எண்ணிக்கை அடிப்படையில் தெரிவித்தால் 44.5 கோடியில் இருந்து  43.5 கோடியாக குறைந்திருக்கிறது. இந்தியாவில் 108.5 கோடி பேர் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள். சட்டப்படி வேலை செய்ய தகுதி படைத்தவர்கள்.

       இதுவே உலக நாடுகளில் உழைப்பு சக்தி பங்கேற்பு 57 சதம் முதல்  60 சதம் வரை உள்ளது.

         உழைப்பு சக்தியில்  பெண்களின் பங்கேற்பு  ஏற்கனவே இந்தியாவில் குறைவாக இருக்கிறது.

        தற்போது 2016-17 ஆம் ஆண்டு 15 சதவீதம் பெண்கள் வேலை செய்தார்கள் அல்லது வேலை தேடினார்கள். 2021-22 ஆம் ஆண்டு இது 9.2 சதவீதமாக குறைந்திருக் கிறது.

      ஆண்கள் உழைப்பு சக்தியில் பங்கேற்பு 74 சதவீதத்திலிருந்து 67 சதவீதமாக குறைந்திருக்கிறது.

     நகர்ப்புறங்களில் 44.7 சதவிகிதத்தி லிருந்து 37.5 சதமாக குறைந்திருக்கி றது. கிராமப்புறத்தில் 46.9 சதத்தில் இருந்து 41.4 சதமாக குறைந்திருக்கிறது.

      இந்தியாவில் 24 மாநிலங்களில் கணக்கெடுத்தால் 23 மாநிலங்களில் உழைப்பு சக்தி வீழ்ச்சி அடைந்திருக்கி றது

    ஆந்திராவில் உழைப்பு சக்தி பங்கேற்பு 54 சதமும் தமிழ்நாட்டில் 56 சதமும் இருந்தது. ஆறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 20 சதவீதமும் ஆந்திராவில் 17%  உழைப்பு சக்தி வீழ்ச்சி அடைந்திருக்கிறது. பெரும் வீழ்ச்சியாகும்

     இந்தியாவில் 100க்கு 60பேர்கள் வேலை இல்லாமல்  வேலை செய்ய வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்.

அ.பாக்கியம்.


     

செவ்வாய், மே 24, 2022

ருஷ்யாவின் கச்சா எண்ணெய் எங்கே? அ. பாக்கியம்

 

      ரஷ்யா உக்ரேன் யுத்தத்தில்  ரஷ்யாவின் மீது அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தது. 

     குறிப்பாக ரஷ்யாவிட மிருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று முடிவெடுத்தார்கள். 

        ஆனால் ஒன்றிய மோடி அரசு இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் என்று அறிவித்தார். நமக்கெல்லாம் அதிசயமாக இருந்தது.

      அமெரிக்காவின் சொல் பேச்சை கேட்காமல் இந்திய மக்கள் மீது அக்கறை கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கி றார். எனவே நமது நாட்டில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை குறையும் என்று எதிர்பார்த் தோம். நடந்ததோ வேறு விஷயம்.

       கச்சா எண்ணெய் குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து வந்தது உண்மை.

       ஆனால் அவை அனைத்தும் அகமதாபாத்தில் உள்ள அம்பானியின் சுத்திகரிப்பு ஆலைக்கு சென்று அங்கு சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல், டீசல், எரிவாயுவாக மாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு சந்தை விலையில் ஏற்றுமதி செய்யும் பணிகள் அமோகமாக நடந்து வருகிறது. 

    இந்த  குறைந்த விலையில் ரஷ்யாவின் எண்ணெய் இந்திய  மக்களுக்கு கிடைக்கவில்லை.  மாறாக அம்பானிக்கு கிடைத்து அவர் கடந்த மூன்று மாதங்களில் அதாவது 90 நாட்களில் 16000 கோடி ரூபாய் ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் சம்பாதித்து இருக்கிறார்.

       யுத்தமே நடந்தாலும் சரி அதில் கிடைக்கிற லாபம் அம்பானிக்கும் அதானிக்கும் தான் என்பதை மோடி அமுல் படுத்தி வருகிறார்.

அ. பாக்கியம்


.

எம்.ஜி.ஆரின் உண்டியல் தடையைதகர்த்து களம் கண்டவர். அ.பாக்கியம் . .

 அஞ்சலி∶ கே.என்.வெங்கடேசன்


       தாம்பரம் தோழர். கே.என். வெங்கடேசன் அவர்களின் மரணம் அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல தாம்பரம் பகுதி கட்சிக்கும் பேரிழப்பாகும். இவரது மகன் தோழர் கே.வி.ராதாகிருஷ்ணன் தாம்பரம் பகுதி செயலாளர்,மாவட்டக்குழு உறுப்பினர், பீர்க்கங்கரளை பேருராட்சி துணைத்தலைவர் போன்ற பொறுப்புகளிலிருந்து பணியாற்றியவர். இவர் கடந்த ஆண்டு கொரோனாவில் இறந்தபொழுது பேரதிர்ச்சி ஏற்பட்டது. தற்போது தோழர்.வெங்கடேசன் அவரது மரணமும் தாம்பரம் பகுதி தோழர்களையும் மாவட்ட தோழர்களையும் நிலைகுலையச் செய்தது. செங்கை மாவட்டம் மதுராந்தகம் தாலுக்கா கருகப்பட்டு கிராமத்தில் பிறந்து 7 வயதில் தாய் மரணம், 20 வயதில் தந்தை மரணம். சென்னை தியாகராஜ கல்லூரியில் BSC  படித்து முடித்து  1965 ல் DTCP (Town & Country planing ) பணியில்   சேர்ந்தார்.

        தோழர் வெங்கடேசன் அவர்களின் துணைவியார், இரு மகன்கள், மருமகள், பேரப்பிள்ளைகள் அனைவரும் கட்சியின் உறுப்பினராக மட்டுமல்ல, தாம்பரம் பகுதி கட்சியோடு இரண்டற கலந்து விட்ட குடும்பம். அவர்களது இல்லமே கட்சியில் அடையாளமாக மாறியது.

     தோழர் வெங்கடேசன் அரசு ஊழியராக இருந்தாலும் அதற்கான வரைமுறை களை எல்லாம் மீறி அடித்தட்டு மக்களோடு இணைந்து செயல்பட்டு இயக்கத் தை வளர்த்தவர்.அவர் அரசு ஊழியராக சேர்ந்த பிறகு  சென்னை தண்டையார் பேட்டையில் குடியிருந்தார். அரசு ஊழியராக இருந்தாலும் அதற்கான அகம்பாவம் எதுவும் இல்லாமல் சாலை ஓரத்தில் இருக்கக்கூடிய ரிக்சா ஓட்டக்கூடிய தொழிலாளிகளுடன் அமர்ந்து பழகக்கூடியவராக  இருந்துள் ளார். அவர்களே இவருடைய நெருங்கிய சகாக்கள் இருக்கின்ற அளவிற்கு  தன்னை அவர்களுடன் இணைத்துக் கொண்டவர்.

           அவரின் பணிகளை மூன்று அம்சங்களை ஒட்டி நினைவு கூறலாம். பணியில் நேர்மை, சங்கத்தின் துணிச்சலான செயல்பாடு, அரசு ஊழியர் என்ற எல்லையை கடந்து பொதுமக்களுக்காக் தான் வாழக்கூடிய பகுதியில் செயல்பட்டது.

           தோழர்.வெங்கடேசன் தனது சர்வேயர்பணியில் நேர்மையானவராக இருந்தார் என்பதற்கு எடுத்துக்காட்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி காலத்தில் கோலோட்சிய தொழில்அதிபர் உடையார் மின்உற்பத்தி நிலையம் ஆரம்பிப்பதற்காக பக்கிங்காம் கெனால் ஆக்கிரமித்து power project approval கேட்டார்.. 

       இதற்கு தோழர்.வெங்கடேசன் இணங்க மறுத்தார். இதனால் அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. வீட்டிற்கு வந்து குடும்பத்தை அழித்துவிடுவோம் என்று மிரட்டிச் சென்றார்கள். உடையாரின் ஆட்களை பார்த்து அச்சப்படாமல் அவர் பொது நிலத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டார். இன்றுவரை அந்த நிலம் பொது நிலமாகவே உள்ளது என்று அறியமுடிகிறது. ஆனால் அவருடைய நிர்ப்பந்தத்துக்கு இணங்க மறுத்ததால் அடுத்த நாள்காலை சேலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

          அரசு ஊழியர் என்ற முறையில் அரசு ஊழியர் சங்கத்தில் இருந்த பொழுது அன்றையதினம் ஆட்சியில் இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்து அரசு ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அரசு ஊழியர் சங்கம் தோழர் எம் ஆர் அப்பன் தலைமையில் வீறு கொண்டு எழுந்தது. முதலமைச்சர் எம்ஜிஆர் இதைக்கண்டு அச்சப்பட்டார். கோபப்பட்டார்.

              அரசு ஊழியர் சங்கத் தலைவர்கள் உண்டியல் வசூல் செய்வது வழக்கம். அலுவலகங்களுக்கு உள்ளேயே உண்டியல் வசூல் செய்வார்கள். இது தான் இவர்கள் வளர்ச்சிக்கு காரணம் என்று கருதிய எம்ஜிஆர் உண்டியல்வசூல் செய்யக்கூடாது என்றும், உண்டியல் வசூலுக்கு வந்தால் யாரும் பணம் போட கூடாது என்றும்,  அவ்வாறு பணம் போட்டால் அவர்கள் மீது நடவடிக்கை வரும் என்று மிரட்டினார்.

            தோழர் வெங்கடேசன் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்க நிர்வாகியாக இருந்த பொழுது இந்த தடையை எதிர்த்து துணிச்சலாக வசூலை நடத்தினார். இது மாவட்டம் முழுவதும் பரவியது எம்ஜிஆரின் தடை தகர்க்கப்பட்டது. தோழர் வெங்கடேசன் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டார்.

              சிவகங்கையில் இருந்தபொழுது எஸ்.ஏ.பெருமான் அவர்களை சந்தித்து மார்க்சிய அரங்கில் இணைந்தார். தோழர்.கந்தர்வன் இவரை  எஸ்.ஏ.பெருமாளிடம் அறிமுகப்படுத்தி இயக்கத்தில் இணைந்தார்.

         தோழர் கந்தர்வனும் இவரும் மாவட்ட தலைவர் செயலாளராக இருந்த பொழுது இருவர் மீதும் நடவடிக்கை வந்தது.தோழர். ரகந்தர்வன் அவர்கள் 19 மாதங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு ஊதியமின்றி இருந்தார். அந்த நேரத்தில் தோழர் வெங்கடேசன் அரசு ஊழியரிடம் பணம் வசூலித்தும் தனது சொந்த பணத்திலும்  மாதா மாதம் கந்தர்வன் வீட்டிற்குச் நேரடியாக சென்று அவர்கள் பணத்தை கொடுத்து வந்தார். இந்த நிகழ்வு அவருடைய சொந்த முயற்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட நிகழ்வாகும். 19 மாதங்களும் மாஇது நடைபெற்றுள்ளது.

          சிவகங்கையில் இருந்து மதுரைக்கு வந்து கிளை கூட்டங்களில் கலந்து கொண்டு அடுத்தநாள் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தோழர் எஸ் ஏ பெருமாள் அவர்கள் இரவு 7 மணி ஆரம்பித்து காலை 5 மணிவரை நடைபெற்ற 25 வகுப்புகளிலும் தோழர் வெங்கடேசன் அவர்கள் கலந்து கொண்டதை நினைவு கூறினார்.

              தனது பணியில் நேர்மையாக இருப்பதுடன் அரசு ஊழியர் சங்கத்தை கட்டி வளர்த்தது மட்டுமல்ல பொது மக்களுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அரசு ஊழியர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் தோழர் வெங்கடேசன் அவர்கள். 2004ல் ஓய்வு பெறும் இரண்டு நாட்கள் முன்பு அரசு ஊழியர் சங்கம் நடத்திய போராட்டதில் பலர்தடுத்தும் கலந்து கொண்டார்.

              மதுராந்தகத்தில் விவசாய சங்கத்தை அமைத்து அவர்களுடைய வாழ்வுக்கு பாடுபட்டிருக்கிறார. அமைப்பையும்  உருவாக்கி இருக்கிறார். 1980 களில் தனது சொந்த ஊரில் கடுகப்பட்டு கிராமத்தில் விவசாயிகளை திரட்டி விவசாய கூலி உயர்வு போராட்டத்தை தலித் மக்களோடு இணைந்து  நடத்தினார். அப்போதைய விவசாய சங்க மாவட்ட செயலாளர் தோழர் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டார். தனது சொந்த கிராமத்தில் முதல் செங்கொடி ஊர்வலம் நடத்தினார். பெருமாள்கோவிலில் தலித் மக்களை திரட்டி கோவில் நுழைவு போராட்டம் நடத்தினார் இதனால் ஊரில்ஒதிக்கி வைக்கபட்டார்

            தாம்பரத்தில் குடியேறிய பிறகு தேவநேசன்நகர் அமைப்பதற்கும்  குடியிருப்போர் நல சங்கத்தை உருவாக்கி அந்தப் பகுதியின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைத்திருக்கிறார்.

             தேவநேசன் நகர் பகுதியில் பாரதமாதா தெருவில் பொது இடத்தை ஆக்கிரமித்த அரசியல் பிரமுகரை எதிர்த்து போராடினார். அவரையும் அவரது மகன் ரவி நாராயணனையும் அந்த அரசியல் பிரமுகர் பெட்ரோல் நிலையத்தில் வைத்து ஆயுதங்கள் மூலமாக கொலைசெய்யும் அளவில் மிரட்டியபோதும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அந்த நிலத்தை ஆக்கிரமிக்காமல் தடுத்துவிட்டார். தற்பொழுது அந்த நிலம் பொதுப்பயன்பாட்டில் உள்ளது.

      தேவனேசன் பகுதியில் உள்ள கோயிலில் நிர்வாகிகள் முறையாக கணக்குகளை பராமரிக்காமல்  இருந்தபொழுது அவற்றில் தலையிட்டு அதை ஒழுங்கு படுத்துவதில் நல்லவர்களை நிர்வாகிகளாக மாற்றியதில் முக்கிய பங்காற்றி மக்களிடம் பெயர் பெற்றவர்.

தீக்கதிர் போடக்கூடிய தோழருக்கு மாதம்தோறும் தனது சொந்த பணத்தை கொடுத்து உதவி செய்துள்ளார்.இளைஞர்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது, மற்ற தோழர்களுக்கு வாய்ப்புள்ள உதவிகளை செய்வது, தங்களது வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளிப்பது, என்று அந்த பகுதியில் கட்சித் தோழர்களின் குடும்பமாகவே தோழர் வெங்கடேசன் அவர்களின் குடும்பம் இருந்துள்ளது, இப்போதும் இருந்து வருகிறது.

              மொத்தத்தில் தோழர் வெங்கடேசன் அவர்கள் பல தோழர்களை அமைப்பாளர்களை உருவாக்கிய ஆசிரியனாக மார்க்சிய சித்தாந்தத்தில் பற்று உள்ளவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.இப்படி எண்ணற்ற தோழர்கள் அர்ப்பணிப்பு நிறைந்த தியாகங்களால் தான் இந்த இயக்கம் இன்னும் வேர்பிடித்து வளர்ந்து கொண்டிருக்கிறது.

அ.பாக்கியம்.



ஞாயிறு, மே 22, 2022

ரஷ்யாவின் யுத்தம் ஞாயமானதா ? இல்லையா.... | Ukraine | Bookrelese | War | ...

மந்தகதியில் மழைநீர்வடிகால்வாய் பணிகள். சென்னை மீண்டும் வெள்ளத்தில் மிதக்குமா ? அ. பாக்கியம்


 


        சென்னையில் மழைநீர்வடிகால்வாய் கட்டும் பணிகள் மந்த கதியில் நடைபெறுகிறது. அடுத்த 5 மாதத்தில் வடகிழக்கு பருவ மழை வருகிற பொழுது அவற்றை எதிர்கொள்ளும் முறையில் பணிகள் தீவிரமாக நடை பெறவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

       இதுவரை 70 சதவீதம் பணிகள் முடிவடையவில்லை. ஒப்பந்ததாரர்கள் போதிய அளவிற்கு பணியாளர்களை நியமித்து பணிகளை முடிக்காமல் ஏமாற்றி வருகிறார்கள்.

       இவர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 

      2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் வடிகால்வாய் 11.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு இணைப்பு ஏற்படுத்தவும் (Missing Links) , 32 கிலோமீட்டர் தூரத்திற்கு வடிகால்வாய் களை இடித்துவிட்டு புதிதாக கட்டவும் ரூபாய் 120 கோடி ஒதுக்கப்பட்டது.

     அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையார் ஆகிய பகுதிகளில் இந்த 120 கோடி செலவில் மழைநீர் வடிகால்வாய் இணைப்பு இல்லாத பகுதிகளில் (Missing links) இணைப்பை ஏற்படுத்துவதற்கான பணிகளில் 30% மட்டுமே பணிகள் முடிந்துள்ளது.

       இவற்றில் சில பகுதிகளில் 10 சதவீதம் பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. அடுத்த ஐந்து மாதத்தில் இது முடிவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

     சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் கே.கே. நகர், விருகம்பாக்கம், தேனாம்பேட்டை பகுதிகளில் மழைநீர்வடிகால்வாய் அமைப்ப தற்காக மார்ச் மாதம் டெண்டர் விடப்பட்டது. பருவ மழைக்கு முன்பாக பணிகளை முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த பணிகளும்  ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.  

      வடசென்னையில் உள்ள எட்டு மாநகராட்சி மண்டலங்களில் கொசஸ்தலை ஆறு வடிகால்வாய் திட்டத்தின் கீழ் பணிகளை முடிக்க 3225 கோடி ஒதுக்கப்பட்டது. இவற்றிலும் 20 சதவீதம் மட்டுமே பணிகள் முடிந்து உள்ளன.

      இந்தத் திட்டத்தில் 1800 கோடி ரூபாய்க்கான பணிகளை 6 ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தம் எடுத்துள்ளனர். இதில் பணமோசடி களுக்கான வழிவகை தெரிகிறது. பல பணிகளை எடுத்த ஒப்பந்தக்காரர்கள் போதுமான தொழிலாளர்களை அமர்த்தாமல் 50 சதவீதத்திற்கு குறைவான தொழிலாளர்களை வைத்து பணிகளை நடத்துகின்றனர்.

        26,33,64,66 ஆகிய வார்டுகளில் 157 தொழிலாளர்கள் இந்த பணிகளை நிறைவேற்ற தேவை. ஆனால் 34 பணியாளர்களை மட்டுமே வைத்து வேலை நடத்தப்படுகிறது.

       24,26,82,83 ஆகிய  வார்டுகளில் 50 சதவிகிதத்திற்கு குறைவான பணியாளர்களை வைத்து பணி செய்யப்படுகிறது. 22 வார்டில் 11 பணியாளர்களுக்கு பதிலாக ஒருவர் கூட பணியமர்த்த படவில்லை.

       ஒப்பந்ததாரர்கள் பணிகளை தொடங்குவதற்கும், இயந்திரங்களைக் கொண்டு வருவதற்கும் தேவையான கட்டணத்தை செலுத்தி விட்டதால் அனைவரையும் ஒரே நேரத்தில் நாங்கள் மாற்ற முடியாது. 

       ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்தில் பணிகளை முடிக்கவில்லை என்றால் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

        குறைந்த ஆட்களை வைத்து பணிகளை செய்தால் மழைநீர்வடிகால் வாய் தரம் படு மோசமாக இருக்கும் என்பதை பலரும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மூன்று மாதத்தில் முடிப்போம் என்று சென்னை மாநகராட்சி வாக்குறுதி கொடுத்துள் ளது.

       சென்னையில் 33 374 உட்புற சாலைகள் உள்ளன இவற்றின் நீளம் 55 25 கிலோ மீட்டர் ஆகும் இவற்றில் 20 58 கிலோ மீட்டர் தூரத்திற்கு தான் மழைநீர்வடிகால்வாய் அமைக்கப் பட்டுள்ளது. 

        சென்னை பெருநகரில் சரி பாதி அளவிற்கு மழைநீர்வடிகால்வாய் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பதை சரி படுத்துவதற்கும் இல்லாத இடங்களில் மழைநீர்வடிகால்வாய் அமைப்பதற்கான திட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே சென்னை நீரில் மூழ்காமல் பாதுகாக்க முடியும்.

      எது எப்படியோ? மீண்டும் சென்னை மழை நீரால் சூழப் படும் அபாயம் இருக்கிறது. புயல் வேக செயல்பாடு தேவையில்லை ஆனால் திட்டமிட்ட வேலையை முடிக்கும் வேகத்துடன் சென்னை மாநகராட்சி செயல்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் சென்னை மிதக்கும். மக்கள் வாழ்வு தவிக்கும்.

அ. பாக்கியம்.


புதன், மே 18, 2022

உக்ரைனில் என்ன நடக்கிறது? அ.பாக்கியம்.

 

                 எழுத்தாளர் இ.பா. சிந்தன் எழுதிய 112 பக்கங்களைக் கொண்ட புத்தகம். பாரதி புத்தகாலயம் சிறந்த முறையில் வெளியிட்டுள்ளது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் புத்தகம் சிறியதாக இருந்தாலும் உக்ரைன் ரஷ்ய போரை மையமாக வைத்து உலக அரசியலை அமெரிக்க ஏகாதிபத் தியத்தின்  மேல் ஆதிக்க வெறியை அங்குலம் அங்குலமாக எண்ணற்ற தரவுகள் மூலமாக அம்பலப்படுத்தி உள்ளார் சிந்தன்.  அவசர அவசியமாக படிக்கவேண்டிய ஒரு புத்தகம்.

    உக்ரைன்-ரஷ்ய போர் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. ரஷ்யாவின் யுத்தம் நியாயமானதா? உக்ரைனில் நடக்கக்கூடிய குழப்பங்களுக்கு யார்காரணம்? இது உலக யுத்தமாக மாறுமா? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நாட்டின் மீது இப்படிப்பட்ட தாக்குதல் நடந்ததே இல்லை? என்பது உண்மையா? அமெரிக்காவும் ஐரோப்பாவும் நடத்தக்கூடிய ஊடக பிரச்சாரத்தில் எந்த அளவு உண்மை இருக்கிறது? போன்ற ஏராளமான கேள்விகளுக்கு இந்த புத்தகம் தெளிவாக பதில் அளிக்கிறது.

                    இரண்டாம் உலகயுத்தத்தில் ஈடுபடாத அமெரிக்கா பாதிக்கப்பட்ட ஐரோப்பாவை பயன்படுத்தி எப்படி மேலாதிக்கம் பெற்றது. 90-ம் ஆண்டுகளுக்குப்பிறகு சோவியத் யூனியன் சிதைந்தவுடள்  அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை உலகம் முழுவதும் நேட்டோ ராணுவ பலத்தால் எப்படி அதிகரித்துக் கொண்டது. சோவியத் யூனியனை சிதைத்தபிறகு ரஷ்யாவை அமெரிக்கா எப்படி தனது நாட்டு ராணுவ பலத்தால் சுற்றி வளைத்தது. இதற்கான அரசியல் பொருளாதார காரணிகளை புத்தகம் ஆய்வு செய்கிறது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு யுத்தமற்ற உலகை உருவாக்க வேண்டுமென்று அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை அதில் எவ்வாறு தோல்வி கண்டது என்பதையும் இப்புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

           அமெரிக்கா உலகை கபளீகரம் செய்யக்கூடிய முயற்சியின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளில் பலவற்றை அழித்து ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் சிக்கி கொண்டதையும், அதனால் உலகின் மேலாதிக்கத்தின் ஏற்பட்ட மாற்றங்களையும் புத்தகம் ரத்தினச் சுருக்கமாக அறிவிக்கிறது.

                    சிதைந்துபோன ரஷ்யா மீண்டும் அரசியல் பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்திக் கொண்டது அமெரிக்காவிற்கு மிகப் பெரும் சவாலாக அமைந்தது. அதேநேரத்தில் சப்தமின்றி, அமைதியான முறையில் சீனாவின் முன்னேற்றம் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு மேலும் ஒரு அச்சுறுத்தலாக அமைந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நேட்டோ இராணுவத்தை பயன்படுத்தியது. குறிப்பாக ஐரோப்பாவில் பலம்பொருந்திய ஜெர்மானியின் முன்னேற்றத்தை அமெரிக்கா திட்டமிட்டு தடுத்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு எடுத்த முயற்சிகளை ஜெர்மன் எதிர்கொண்டது. இந்த விஷயங்களை பொருளாதார ரீதியிலான ஒப்பந்தங்களுடன் இணைத்து  இப்புத்தகம் அமெரிக்கா வின் சதி வேலைகளை அம்பலப்படுத்தி இருக்கிறது.

                   அமெரிக்காவினால் அடிக்கடி விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளும், பெட்ரோ டாலர் மூலமாக வணிகத்தின் மீது செலுத்தும் ஆதிக்கத்தையும் ரஷ்யா, சீனா, ஜெர்மனியும் பங்குபெற்று பின்னுக்குத் தள்ளியது. என்பதையும் அன்னிய செலவாணி பரிமாற்றத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றத்தையும் இப் புத்தகத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.

                    இந்தப் பின்னணியுடன் தான் உக்ரைன் ரஷ்ய போரை இந்தப் புத்தகம் விளக்குகிறது.யுத்தம் நேரடியாகவும், தகவல்தொழில்நுட்ப வழியாகவும், பொருளாதாரஅடிப்டையிலும் எனமூன்று தளங்களில் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் சேர்ந்து உலகம் முழுவதும் ஒரு தரப்பான செய்தியையே வெளியிடுவதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

                 ஐரோப்பா கண்டத்திலேயே ரஷ்யாவிற்கு அடுத்து அதிக நிலப்பரப்பைக் கொண்ட நாடுஉக்ரைன். இதன் பூகோள எல்லைகள் எப்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் யாரால் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது என்பதையும் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

                சோவியத் நாட்டின் சிதைவுக்கு பிறகு ரஷ்யாவிற்கு அருகாமையில் இருக்கக்கூடிய உக்ரைனை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக எடுத்த முயற்சிகளின் ஒரு விளைவுதான் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அடிப்படையான காரணமாகும்.

                  உக்ரேனில் வாழக்கூடிய மக்களில் ரஷ்யஇனமக்கள் 30% பேர் வாழ்கிறார்கள். இந்த ஒற்றுமையில் கை வைப்பதற்கான வழக்கமான சதி வேலைகளை, ரஷ்ய ஆதரவு ஆட்சியாளர்களுக்கு எதிராக என்பதைவிட தன்னுடைய திட்டத்திற்கு அடிபணியாத ஆட்சியாளருக்கு எதிராக, ஜனநாயகம் இல்லை என்ற போர்வையில் பல கோடி டாலர்களை ஒதுக்கி கலவரத்தை தூண்டிவிட்டு குழப்பத்தை உருவாக்கினார்கள்.

                தனக்குப் பிடிக்காத ஆட்சியை எதிர்ப்பதற்காக நவபாசிச சக்திகளை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதங்களையும், நிதி உதவிகளையும், அண்டை நாட்டில் புகழ் இடங்களையும், ஏற்படுத்திக் கொடுக்க கூடிய வேலைகளை அமெரிக்காவின் ஆட்சி கவிழ்ப்பு கும்பல் அற்புதமாக செயல்படுத்தி கொண்டிருந்தது இதனால் உக்ரேனில் பெரும் குழப்பமும் ரஷ்ய இன மக்களை அழித்தொழிக்கும்  நிகழ்வுகளும் நடந்தது.

                   அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர் பதவிக்கு வந்தவுடன் நவ பாசிச பயங்கரவாத அமைப்புகளை துணை இராணுவமாக அங்கீகரித்து மக்களை அழித்து ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வுகளை இந்தியாவில் இந்துத்துவா அமைப்புகளில் செயல்பாடுளுடன் இணைத்து புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.

              கம்யூனிஸ்ட் கட்சி தடை, சுத்தியல் அரிவாள் சின்னம் பயன்படுத்தக்கூடாது, லெனின் சிறை தகர்ப்பு போன்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் குழி தோண்டி புதைப்பதாக அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர்களின் செயல்பாடு இருந்தடிதை புரிந்து கொள்ள முடிகிறது.

                ஐரோப்பாவின் எரிவாயு தேவையை ரஷ்யாவின் மூலம் பூர்த்தி செய்யப்படுவதை தடுப்பதன் மூலம், அமெரிக்கா ஒரே நேரத்தில் ரஷ்யாவையும், ஐரோப்பாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுத்த முயற்சிகள் என்ன விளைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

                 உக்ரைன் பிரச்சனைகளை துல்லியமாக விளக்குவதற்கு சிரியாவை சிதைத்த தன்மைகள், ஈராக் மற்றும் ஏமன் நாடுகளை எப்படி ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்துக்காக பகடைக்காயாக பயன்படுத்தி, ஜனநாயகத்தையும் அழித்தொழித்து தனது கட்டுக்குள் கொண்டுவந்தது என்பதை ஒரு சர்வதேச அரசியல் நிகழ்ச்சி போக்குவதோடு விளக்கப்பட்டுள்ளது.

              எனவே உக்ரேன் யுத்தம், உக்ரைன்-ரஷ்யாவிற்குமான யுத்தம் மட்டுமல்ல. அது பல வழிகளில் பல கோணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு யுத்தம் என்பதை இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

             புத்தகத்தின் இறுதிப் பகுதியில் யுத்தம் தொடர்பான பதிவுகள் உழைக்கும் மக்களை முன்னிறுத்தி  அறைகூவல் விடப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் அவசியமாக படிக்கவேண்டியது மட்டுமல்ல நிலை மையை புரிந்து கொள்வதற்கு அவசரமாகவும் படிக்க வேண்டும்.

அ.பாக்கியம்.

 

 





 

 

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...