Pages

வியாழன், ஏப்ரல் 10, 2025

15 சீனாவில் மதகுருமார்களும் மத வழிபாட்டுத் தலங்களும்

 



மத நம்பிக்கைச் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்ற கொள்கையை கடைபிடிக்கிற ஒரு நாட்டில் மத அமைப்புகள் எப்படி நடத்தப்படுகின்றன என்று கேள்விகள் எழுத்தான் செய்யும். சீன மக்கள் குடியரசு மத நம்பிக்கைக்கும் மத அமைப்புகளுக்குமான வேறுபாடுகளை துல்லியமான முறையில் தெளிவுபடுத்தி உள்ளது. அரசின் அணுகுமுறையும் இந்த அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவர்கள் மதப் பணிகளில் ஈடுபடலாமா என்ற கேள்வியும் மிக முக்கியமானதாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சி மத நிபுணர்களின் குழுக்களை உருவாக்கி உள்ளது. இந்த மத நிபுணர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஆவர். இவர்கள் சீனாவில் உள்ள மதகுருமார்களின் பணிகளை ஒழுங்கமைக்கின்றனர். மதகுருமார்கள் மத்தியில் செயல்படுகின்றனர். மத நிபுணர்களின் மிக முக்கியமான பணி மத வட்டாரங்களில் உள்ள நபர்களை சீன மதக் கொள்கைக்கு ஏற்ற வகையில் வென்றெடுப்பது, அவர்களை ஒன்றிணைப்பது அவர்களுக்கு தேவையான கல்விகளை கற்பிப்பது. இந்த எல்லைக்குள் மத நிபுணர்கள் பணியாற்ற வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் பணியாற்றுகிறார்கள். இவர்களின் மிக முக்கியமான பணி தொழில் முறை மதகுருக்களை கையாள்வதாகும்.

மத குருமார்களின் எண்ணிக்கை அன்றும் இன்றும்

1975 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 59000 தொழில்முறை மதகுருமார்கள் இருந்தார்கள். இது ஒரு குறை மதிப்பீடு என்று கணிக்கப்படுகிறது. காரணம் பௌத்தம் மற்றும் தாவோயிச குருமார்களின் வழிபாட்டு முறைகள் பல்வேறு வடிவங்களில் இருந்ததின் விளைவாக துல்லியமாக எடுத்த எண்ணிக்கை அல்ல என்பதை தரவுகள் தெரியப்படுத்துகின்றன. இவர்களில் பௌத்த துறவிகள் மற்றும் லாமாக்கள் சுமார் 27,000 பேர். தாவோயிச குருமார்கள் 2,600 பேர், இஸ்லாமிய குருமார்கள் 20,000 பேர், கத்தோலிக்க மதகுருமார்கள் 3,400 புராட்டஸ்டன்ட் போதகர்கள் 5,900 என்று எண்ணிக்கையில் இருந்தனர். மத குருமார்களை கையாள்வதற்காக, அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், செயல்பாட்டுக்காகவும், இந்த தரவுகள் தோராயமாக மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த தரவுகளின் அடிப்படையில் திட்டங்களை அமலாக்கும் பொழுது அதன் எண்ணிக்கைகள் கூடுதலாக இருப்பதை அறிய முடிந்து. அதற்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

1997 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு மதம் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஓரளவு இந்த கணக்குகள் சரி செய்யப்பட்டன. இருப்பினும் 2017 ஆம் ஆண்டு நவீன வசதிகளை பயன்படுத்தி அனைத்து விதமான வழிபாட்டு தலங்களையும் வீடுகளில் இருக்கக்கூடிய சிறிய வழிபாட்டுத் தலங்களையும் உள்ளடக்கி விவரங்கள் பெறப்பட்டு 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு வெள்ளை அறிக்கை மதம் குறித்து வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் உள்ள மத குருமார்களின் எண்ணிக்கையும் மத வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கையும் மிக துல்லியமாக இறுதி செய்யப்பட்டது.

2018 ஆம் ஆண்டு மதம் குறித்த வெள்ளை அறிக்கையின் படி சீனாவில் 20 கோடி (200 மில்லியன்) மத விசுவாசிகள் இருக்கிறார்கள். அனைத்து மதங்களையும் உள்ளடக்கி மொத்தமாக 3,80,000 மத குருமார்கள் உள்ளனர். பாரம்பரிய மதங்கள் என்ற முறையில் பௌத்தம், தாவோயிசம் என இரு மதங்களிலும் மத குருக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பௌத்தத்தில் 2,22,000 குருமார்களும், தாவோயிசத்தில் 40,000க்கும் மேற்பட்ட குருமார்களும் உள்ளனர். சீனாவில் 156 இனக்குழுக்கள் இருந்தாலும் 10 இன குழுக்களில்  இஸ்லாம் மதத்தை நம்புபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இஸ்லாம் மதத்தில் இரண்டு கோடி  மத விசுவாசிகளும் 57,000 மதகுருமார்களும் உள்ளன. கத்தோலிக்க மதத்தில் 60 லட்சம் மத விசுவாசிகளும் 8000 மதகுருமார்களும், புராட்டஸ்டன்ட் மதத்தில் மூன்று கோடியே 80 லட்சம் விசுவாசிகளும் 57,000 மத போதகர்களும் இருக்கிறார்கள். இதைத் தவிர சீனாவில் உள்ளூர் கலாச்சாரங்களையும், மரபுகளையும், பழக்க வழக்கங்களுடன் நெருக்கமான தொடர்புடைய பல நாட்டுப்புற நம்பிக்கைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்து 5500 மத குழுக்கள் மொத்தமாக சீனாவில் இருக்கிறது என்று சீன மக்கள் குடியரசின் அமைச்சரவை தகவல் அலுவலகம் விரங்களை வெளியிட்டுள்ளது

மத குருமார்களுக்கான சமூக பாதுகாப்பு

கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் மதகுருமார்கள் அடக்கப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள், சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்று தினசரி மேற்கத்திய உலக பத்திரிகைகள் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை நிலை அதுவல்ல என்று ஓங்கி ஒலிக்க வேண்டியுள்ளது. ஒடுக்குமுறை உண்மை என்றால் மத குருமார்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்குமா? தொழில்முறை குருமார்களுக்கு அரசு பொருத்தமான ஊதியத்தை வழங்கி வருகிறது. அது மட்டுமல்ல மத குருமார்களுக்கு எதிராக எத்தகைய தீங்கு இழைக்கப்பட்டாலும் அதை கவனத்துடன் பரிசீலனை செய்து தீர்த்து வைக்கக்கூடிய பணி துரிதமாக கையாளப்படுகிறது.

இருந்தாலும் மதகுருமார்களுக்கு பொருளாதார ரீதியிலான சமூக பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. இதற்கு முந்தைய சட்டங்களில் அவை இணைக்கப்படவில்லை. 2010, 2011 ஆம் ஆண்டுகளில் இவர்களுக்கு சமூக பாதுகாப்பு தேவை என்பதற்கான விவாதங்கள் பரவலாக முன்னுக்கு வந்தன. இதன் தொடர்ச்சியாக 2013 ஆம் ஆண்டின் இறுதியில் மத குருமார்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல அமலாக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் படி 96.5% மதகுருமார்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்திலும், 89.6 சதவீதம் மதகுருமார்கள் முதியோர் காப்பீட்டு திட்டத்திலும், மற்றும் அனைத்து தகுதி வாய்ந்த மதப் பணியாளர்களும் வாழ்வாதார உதவித் தொகை மூலமாகவும் சமூகபாதுகாப்பு திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டனர்.

பொதுவாக தொழில் முறை மதகுருமார்கள் மத விசுவாசிகளுடன் மிக நெருக்கமான ஆன்மீக உறவுகளை வைத்துள்ளார்கள். அது மட்டுமல்ல மக்களின் ஆன்மீக வாழ்க்கையில் மிக முக்கியமான செல்வாக்கையும் இந்த மத குருமார்கள் செலுத்துகிறார்கள். மேலும் இந்த தொழில் முறை குருமார்கள் சில நேரங்களில் மக்களுக்கு சேவை செய்கிறார்கள். பௌத்த தாவோயி குருமார்கள் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பதிலும், சில இடங்களில் விவசாயத்தின் வளர்ச்சியிலும், காடுகளை வளர்ப்பதிலும் ஈடுபடுகிறார்கள். இந்த அம்சத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி கவனத்தில் கொண்டு தான் அவர்களை சீன சமூக வளர்ச்சியோடு இணைப்பதற்கான திட்டங்களை உருவாக்கி செயல்பட்டு வருகிறது. மார்க்சியம் எந்த இறையியல் உலக கண்ணோட்டத்துடனும் பொருந்தாது என்பதை மார்க்சிஸ்டுகள் அறிவார்கள். ஆனால் அரசியல் நடவடிக்கைகளை பொறுத்தவரை மார்க்சிஸ்டுகள் மக்கள் எந்த மத நம்பிக்கையில் இருந்தாலும் அவர்களை சோசலிசத்தின் நவீனமயமாக்களுக்கான பொதுவான முயற்சிகளை மேற்கொள்வதற்கு தேச பக்தி கொண்டவர்களை இணைத்து ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்படுகிறார்கள். இதன் ஒரு பகுதி தான் மத நிபுணர்களின் மத பணிகள் ஆகும். இந்த ஐக்கிய முன்னணியில் ஒரு அங்கமாக மதம் சார்ந்த மக்களையும் வென்றெடுப்பது பிரதான பணியாகும் என்பதை புரிந்து கொண்டு மத விசுவாசிகளை கையாளுகிறார்கள்.

வழிபாட்டுத் தலங்களும் அரசின் அரவணைப்பும்

மத நம்பிக்கை சுதந்திரம், மத குருமார்களின் செயல்பாட்டு முறைகள் போன்றவற்றை அமலாக்கக்கூடிய சீன மக்கள் குடியரசு, இந்த மத நடவடிக்கைகளுக்கான வழிபாட்டுத் தலங்களையும் முறைப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குகிறது. 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு வழிபாட்டுத் தலங்களின் நிலைமைகளில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல வழிபாட்டு தலங்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதை சீன அரசாங்கம் மேலும் உறுதிப்படுத்தி உள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களும் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் பெரும்பாலும் அமலானாலும் அவற்றில் இருக்கக்கூடிய குறைகளை நிவர்த்தி செய்து 2018 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பதிவு செய்வதை முழுமைப்படுத்தி உள்ளார்கள். 2018 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் அமைச்சரவை தகவல் அலுவலகம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி சுமார் 1,44,000 வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இவற்றில் பௌத்த கோயில்கள் 33,500 ஆகும். (இதற்குள்  ஹான் பௌத்த கோயில்கள் 28,000, திபெத்திய பௌத்த லாமாக்கள் 3,800, தேரவாத பௌத்த கோயில்கள் 1,700 ஆகியவை அடங்கும்.) தாவோயிச கோயில்கள் 9,000, இஸ்லாமிய மசூதிகள் 35,000, கத்தோலிக்க தேவாலயங்கள் 98 மறை மாவட்டங்களில் 6000, புராட்டஸ்டன்ட் தேவாலயங்கள் மற்றும் ஒன்று கூடும் இடங்கள் 60,000 என்ற அளவில் இருக்கிறது.

அனைத்து மதங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களை சமமான முறையில் செய்து கொடுப்பதே அரசின் மத கொள்கையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. பெரிய நகரங்களில், மதநம்பிக்கையாளர்கள் அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில், புகழ்பெற்ற கோயில்களும், தேவாலயங்களும், பௌத்த மடாலயங்களும், புதுப்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளிலும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மதிப்பைப் பெற்ற புகழ்பெற்ற கோயில்கள் மற்றும் கலாச்சார மையங்களையும் படிப்படியாக சீரமைத்து மேன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான நிதியை அரசே ஒதுக்கீடு செய்கிறது.

வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்தவோ, புதிய வழிபாட்டுத் தலங்களை கட்டவோ கூட்டு நிதி ஆதாரங்களை பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.  கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும் கண்மூடித்தனமான முறையில் தேவையற்ற வகையில் கோயில்களை கட்டுவது  தடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் அனைத்து மட்டத்திலும் உள்ள அரசாங்கங்கள், மத குழுக்களுக்கு மத வழிபாட்டு தலங்களுக்கு பொது சேவைகள் அனைத்தையும் வழங்க வேண்டும் என்று விதி உருவாக்கப்பட்டது. அதாவது வழிபாட்டுத் தலங்களுக்கு சாலைகள் அமைத்து தருவது, மின்சாரம், நீர், வானொலி வசதிகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு போன்ற அனைத்தும் மத வழிபாட்டு தலங்களுக்கு அரசு செய்து கொடுக்க வேண்டும். நகர்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் நிலங்களை பயன்படுத்துவது தொடர்பான மாஸ்டர் பிளான் தயாரிக்கும்பொழுது இதுவரை மத ஸ்தலங்களுக்கான இடங்கள் சேர்க்கப்படவில்லை. தற்போது புதிய விதிகளின் அடிப்படையில் வழிபாட்டுத் ங்களுக்கான கட்டுமான இடமும் சேர்க்கப்படுகிறது. அதாவது மத நம்பிக்கை கொண்டவர்கள் மத நடவடிக்கைகளுக்கு போதுமான இடத்தை பெற முடியும் என்பதை இந்த திருத்தம் சாத்தியமாக்கி உள்ளது.

வழிபாட்டு முறைகள் அல்லது சடங்குகள் வழிபாட்டு தலங்களிலும் வீடுகளிலும் சட்டத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது. வேறு யாரும் இதில் தலையீடு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் துறையின் ஒப்புதலுடன் வழிபாட்டுத் தலங்களில் கலை படைப்புகள், பூசைக்குரிய பொருட்கள், மேலும் சில பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம். பொதுவாக வீடுகளில் புராட்டஸ்ட்டன்ட் மத போதனை நடைபெறுவது பல நாடுகளில் வழக்கமாக உள்ளது. சீனாவில் இந்த முறை கொள்கை அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தடையை படிப்படியாக அமலாக்கிட தேசபக்த மத நம்பிக்கையாளர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவற்றை அமலாக்கி வருகிறார்கள்.

வழிபாட்டுத் தலங்கள் சீன அரசாங்கத்தின் மதவிவகாரத் துறையின்கீழ் செயல்படும். ஒவ்வொரு வழிபாட்டு தலத்திலும் நிர்வாகம் ஒழுங்காக நடைபெறுவதற்கு அங்கு உள்ள தொழில் முறை குருமார்கள் பொறுப்பேற்க வேண்டும். மதம் தொடர்பான நிகழ்ச்சிகள், மக்கள் பணிசெய்யக்கூடிய நேரங்களில் நடத்தக்கூடாது. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சி நாத்திகத்தை பிரச்சாரம் செய்தாலும், வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று நாத்திகத்தைப் பற்றி பேசுவதோ, கடவுள் இருப்பு குறித்து சர்ச்சைகளை உருவாக்குவதோ கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளது. மற்றொரு மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் எந்த ஒரு மத அமைப்பும் அல்லது மத விசுவாசியும் மத சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு வெளியே மதத்தை பரப்புவதோ அல்லது பிரசங்கம் செய்வதோ, இறையியலை பற்றி பிரச்சாரம் செய்வதோ தடை செய்யப்பட்டுள்ளது.

மதக் கல்வி, மத இலக்கியம்

சீனாவில் மதக் கல்வி முறை சட்டத்துக்கு உட்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு தரவுகளின்படி சீனாவில் மொத்தம் 91 மதப் பள்ளிகள் உள்ளன. இந்த கல்வி நிலையங்கள் மாநில மத விவகார நிர்வாகத்தால் (SARA) அங்கீகரிக்கப்பட்டு செயல்படுகிறது. இவற்றில் முறையே 41 பௌத்த பள்ளிகளும் 10 தாவோயிஸ்ட், 10 இஸ்லாமிய, 9 கத்தோலிக்க, 21 புராட்டஸ்டன்ட் என்ற எண்ணிக்கையில் இந்த பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் தேசிய அளவில் செயல்படக்கூடிய புகழ்பெற்ற கல்லூரிகளும் அடங்கும். குறிப்பாக பௌத்த அகடாமி, சீன உயர்நிலை திபெத்திய பௌத்த மதக் கல்லூரி, சீன தாவோயிஸ்ட் கல்லூரி, சீன இஸ்லாமிய நிறுவனம், கத்தோலிக்க திருச்சபையின் தேசிய செமினரி, நான்சிங் யூனியன் இறையியல் செமினரி ஆகிய ஆறு தேசிய அளவிலான கல்லூரிகள் உள்ளன. தற்போது 10,000க்கு அதிகமான மாணவர்கள் இந்த மதப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இவற்றின் மூலம் பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை 47,000 க்கும் அதிகமாகும்.

மதநூல்களும், இலக்கியங்களும் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டபடி வெளியிடப்படுகின்றன. இவற்றில் வெவ்வேறு மொழிகளில் வெளியிடுவதும், அச்சிடுவதும், ஆடியோ மற்றும் காணொலி என அனைத்து வகைகளிலும் இந்த வெளியீடுகள் நடைபெறுகிறது. இது மத விசுவாசிகளின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளன. பௌத்தம், தாவோயிசம் தொடர்பான நியதிகளை தொகுத்து மிகப்பெரும் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன.  திபெத்திய புத்த கோயில்கள் பாரம்பரியமான சூத்திரங்களை வெளியிடுவார்கள். இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்டு 60க்கும் மேற்பட்ட அச்சிடும் இடங்கள் மூலமாக அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது. குர்ஆன் போன்ற இஸ்லாமிய கிளாசிக் சீன, உய்குர், கசாக், கிர்கிஸ் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. 17 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய உரைகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் வெவ்வேறு மொழிகளில் 160 மில்லியனுக்கும் அதிகமான பைபிள் பிரதிகள் இக்காலத்தில் சீனாவில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதில் சீன மொழியில் அச்சிடப்பட்ட 80 மில்லியன் பிரதிகளும் 11 இன சிறுபான்மை மொழிகள் மற்றும் தேவாலயங்களுக்கான பிரைலி மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான வழிபாட்டு தலங்கள் வலைதளங்களை தொடங்கியுள்ளன. சீன இஸ்லாமிய சங்கம், சீன மற்றும் உய்குர் மொழிகளில் ஒரு வலைதளத்தை நீண்ட காலமாக நடத்தி வருகிறது. சீனாவில் மதங்களின் வெளியீட்டுக்கும், வழிபாட்டிற்கும் தடை என்று பிரச்சாரம் செய்யப்படும் ஊடகங்களுக்கு இவையெல்லாம் தெரிவதில்லை.

சீன இஸ்லாமிய சங்கம் ஒவ்வொரு ஆண்டும் சவுதி அரேபியாவிற்கு புனித யாத்திரை செல்ல ஏற்பாடு செய்கிறது. இதில் 2007 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 10,000க்கு மேற்பட்டவர்கள் மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள் கிறார்கள்.

தற்போது மத வட்டாரங்களில் இருந்து சுமார் 20,000 முக்கிய நபர்கள் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டிலும், மக்கள் மாநாடுகளிலும், குழுக்களின் அனைத்து மட்டங்களிலும் பிரதிநிதிகளாகவும் உறுப்பினராகவும் இருந்து பொது சேவையில் பணியாற்றுகிறார்கள். மாநில அளவிலான நடைபெறக்கூடிய விவாதங்களிலும், ஜனநாயக முறைகள் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்று மேற்பார்வை செய்வதிலும் பங்கு பெறுகிறார்கள்.

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் நடைபெற்ற உலக மத மற்றும் ஆன்மீக தலைவர்களின் மில்லினியம் உச்சி மாநாட்டில் சீனாவை சேர்ந்த ஐந்து தேசிய மதங்களின் சார்பில் ஏழு தேசிய மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் குழுவின் தலைவர் பிஷப் பூ வைஷான் உலக அமைதியை பாதுகாப்பதற்கான சீனாவில் உள்ள மதங்களின் திட்டங்களை தெளிவாக முன் வைத்தார்.

மத நம்பிக்கை சுதந்திரத்தை மிகவும் சரியான முறையில் அமலாக்கிக்கொண்டு, மறுபுறத்தில் மதம் அரசியலிலும், கல்வியிலும் கலந்து விடக்கூடாது என்பதில் சீன மக்கள் குடியரசும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் மிக நுணுக்கமான முறையில் செயல்பட்டு வருகிறார்கள்.

 

 

வியாழன், ஏப்ரல் 03, 2025

14. மத நம்பிக்கை சுதந்திரம் என்றால் என்ன?



சீன வரலாற்றில் மாற்றங்களின் மகுடமாக 1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்த புதிய ஜனநாயக புரட்சி அமைந்தது. புரட்சி, வெறும் வார்த்தைகளோடு வலுவிழந்து போகவில்லை; மாறாக, சீன நாட்டின் பொருளாதார அமைப்பை அடியோடு மாற்றி அமைத்தது.  புரட்டிப் போடப்பட்ட பொருளாதார மாற்றங்களால் அதன் மேல்கட்டுமானமாக இருந்த மதமும் மாற்றங்களுக்கு உள்ளானது. மதஅமைப்புகளுக்குள் சீர்திருத்த சிந்தனையாளர்கள் சிரம் உயர்த்த ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் மதத்தின் முந்தைய ஆளும் வர்க்க வேர்கள் பிடுங்கி எறியப்பட்டது. நிலப்பிரபுத்துவ சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு இருந்த பௌத்தமும், தாவோயிசமும் சங்கிலியை அறுத்துக் கொண்டு வெளியே வந்தன. சீனத்திலிருந்த கத்தோலிக்க மதம், புராட்டஸ்ட்டென்ட் மதம், இஸ்லாம் மதம் ஆகியவற்றை ஏகாதிபத்தியம் தனது ஏவல் அமைப்பாக நடத்தி வந்தது. இந்த மதங்கள் சீனாவின் சுயாதிபத்ய தன்மையைத் தேடி எழுச்சி கொள்ள ஆரம்பித்தன. அதன் விளைவாக ஏகாதிபத்திய கட்டுப்பாட்டில் இருந்து விடுக்கப்பட்டது. ஒருபுறம் நிலப்பிரபுத்துவ வர்க்கமும், மறுபுறம் முதலாளித்து வர்க்கமும் சீனத்தில் மதங்களை தங்கள் பிடியில் வைத்திருந்தன. அவற்றில் இருந்து மதங்களை விடுவித்தது  அடிப்படையான மாற்றமாகும்.

விடுவிக்கப்பட்ட மத அமைப்புகள் எப்படி செயல்படுவது? மக்களின் மத நம்பிக்கைகளுக்கான செயல்பாட்டு வடிவங்கள் என்ன? என்பன போன்ற கேள்விகளை  புதிய அரசு எதிர்கொண்டது. மதம் என்பது திட்டவட்டமா வகையில்  வெகுமக்கள் தன்மையை கொண்டுள்ளது. மதப் பிரச்சினைகள் ஒரு வரம்புக்கு உட்பட்டு மிகவும் நீண்ட காலம் நீடித்திருக்கக் கூடியது. குறுகிய காலத்தில் அவை அழிந்து போகக் கூடியது அல்ல. சீனாவைப் பொறுத்தவரை மேலும் சில விசேஷமான காரணிகள் இருந்தன. சீனாவின் சில பகுதிகளில் மதம் என்பது இனப்பிரச்சினையுடன் இரண்டறக் கலந்து மதச் சடங்குகளும், நம்பிக்கைகளும், இனங்களின் பழக்க வழக்கங்களும், பிரிக்க முடியாத அளவிற்கு பிணைந்து கிடந்தது. சர்வதேச சூழலில் ஏற்படக்கூடிய மாற்றங்களாலும் சில காரணிகளாலும் உள்நாட்டில் மத செயல்பாட்டில் தாக்கங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. சீனத்தின் பல பகுதிகளில் வர்க்கப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த இடங்களில் எல்லாம் மதம் குறித்த கேள்விகளை ஊழியர்களும் மக்களும் எழுப்ப ஆரம்பித்தனர். அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான விடைகளை அரசு தேடிக்கொண்டிருந்தது.

1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு சீர்திருத்த கொள்கைகள் அமலாக்கத்திற்கான தயாரிப்புகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. 1978 ஆம் ஆண்டு அவற்றின் பணிகள் கீழ் மட்டம் வரை கொண்டு செல்லப்பட்டது. 1982 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி மதம் குறித்த ஒரு விரிவான தீர்மானத்தை நிறைவேற்றியது. "நமது நாட்டின் சோலிச காலத்தில் மதப்பிரச்சினை குறித்த அடிப்படை கண்ணோட்டம் மற்றும் கொள்கை" என்று தலைப்பிட்ட அந்த தீர்மானம் இதுவரை இல்லாத அளவு மிக விரிவான வகையில் மதக் கொள்கைகளை உருவாக்கிக் கொடுத்தது. சீன மக்களிடையே உள்ள முரண்பாடுகளில் முதன்மையான முரண்பாடாக மதம் இருக்கிறது என்ற முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வந்தது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் சீன மக்கள் குடியரசு தனது கொள்கைகளை உருவாக்கிக் கொண்டது. கட்சி உறுப்பினர்கள், கட்சி கமிட்டிகள் மதப் பிரச்சினையில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மிகத் துல்லியமான வரையறுப்புகளை தீர்மானம் முன் வைத்தது. "மதப் பிரச்சினையில் குறிப்பான எச்சரிக்கையுடனும் கூர்மையான விவேகத்துடனும் சிந்தனை மிக்க பரிசீலனை தன்மையுடனும் கட்சி உறுப்பினர்களும் கட்சி குழுக்களும் இருக்க வேண்டும்" என்று லெனின் எழுதியதை தீர்மானம் சுட்டிக்காட்டியது. சோலிசம் வந்துவிட்டது; பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மதம் சீக்கிரம் அழிந்துவிடும் என்ற கருத்து மேலோங்கி இருந்தது. இந்த கருத்தை மாற்றுவதற்கான செயலை  சீனக் கம்யூனிஸ்ட் கட்சி செய்தது. "சோஷலிச அமைப்பு நிறுவப்பட்டதாலும், நமது பொருளாதாரத்திலும், கலாச்சாரத்திலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டு விட்டதாலும் மதம் விரைவில் வாடிவிடும் என்று நினைப்பது எதார்த்தத்திற்கு மாறானது" என்று தீர்மானத்தின் மையஅம்சமாக முன்வைக்கப்பட்டது.

மத நம்பிக்கை சுதந்திரம்

சீனாவில் மதப் பிரச்சினைகளை அணுகுவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள் குடியரசும் ஏற்றுக்கொண்ட அடிப்படையான கொள்கை என்பது மத நம்பிக்கை சுதந்திரத்தை மதித்து பாதுகாப்பது என்பதாகும். மத நம்பிக்கையின் சுதந்திரத்தை மதித்தால் மட்டும் போதுமா? மதம் தொடர்பான அமைப்புகள், அதன் சடங்குகள் மற்றும் மதவிசுவாசிகளுக்கான பாதுகாப்பையும் மக்கள் குடியரசு உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். இந்த முடிவு புரட்சிக்குப் பிறகு உடனடியாக எடுக்கப்பட்டாலும் 1982 ஆம் ஆண்டு இன்னும் துல்லியமாகவே வரையறுக்கப்பட்டது. இந்தக் கொள்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. மதம் மறைந்து போகும் வரை இந்தக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று ஆணித்தரமான முறையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி முடிவு எடுத்து அமலாக்கி வருகிறது.

இப்போது மத நம்பிக்கை சுதந்திரம் என்ற அடிப்படைக் கொள்கைகளை பார்ப்போம். சீனாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் மதத்தில் நம்பிக்கை கொள்வதற்கும், நம்பிக்கை இல்லாமல் இருப்பதற்கும் முழுமையான சுதந்திரம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட மதத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கலாம். அவற்றில் எந்த ஒரு பிரிவை வேண்டுமானாலும் நம்புவதற்கான உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது.  ஒருவர் மத நம்பிக்கையற்றவராக இருந்து மத நம்பிக்கையாளராக மாறுவதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது என்பதைப்போல் மத நம்பிக்கையாளர் ஒருவர் மத நம்பிக்கையற்றவராக மாறுவதற்கும் முழுமையான சுதந்திரம் உண்டு. இதுதான் சீன மக்கள் குடியரசு மத நம்பிக்கை சுதந்திரம் தொடர்பாக அரசியல் சட்டத்தில் சேர்த்து இருக்கக்கூடிய கொள்கையாகும்.

இயக்கவியல் பொருள் முதல்வா அடிப்படையிலான நாத்திகத்தை கடைபிடிக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தலைமையிலான அரசு இந்த மத நம்பிக்கை சுதந்திரத்தை எப்படி அமல்படுத்துவது என்ற சிக்கலான கேள்விகளை எதிர்கொண்டது. முடிவெடுப்பதும், போதனை செய்வதும் மிக எளிதானது. அமலாக்கம் கடினமானது. அதிலும் மக்களின் நம்பிக்கை தொடர்பான விஷயங்களை அமலாக்குவது எளிதான காரியம் அல்ல. மக்களின் விருப்பத்தையும் தேர்வையும் மாற்ற முடியாது. புறநிலை சட்டம் மற்றும் வரலாற்று உண்மைகளையும் மாற்ற முடியாது. இந்த இரண்டு கொள்கைகளும் சீரற்ற முறையில் அல்ல, கவனமாக பரிசீலித்த பிறகு உருவாக்கப்படுகின்றன.  நாத்திகத்தை கடைபிடிக்கும் கம்யூனிஸ்டுகள் இடைவிடாமல் தங்களது அறிவியல் பிரச்சாரத்தையும் பகுத்தறிவு பிரச்சாரத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும். அதற்கு எந்த தடையும் இல்லை. அவை ஊக்குவிக்கப்படும். அதே நேரத்தில் வெகுமக்களின் ஆன்மீகம் சார்ந்த பிரச்சினைகளை கையாளுகிற பொழுது அவற்றை கருத்தியல் ரீதியாக வென்றெடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். எடுத்த எடுப்பிலேயே நாம் அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற எண்ணத்தில் மக்கள் நாத்திகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது பயனற்றது மட்டுமல்ல மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து நிலை உறுப்பினர்களும் இவற்றை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அமலாக்கியது.

சீனாவில் நாத்திகக் கொள்கைகளை கடைபிடிக்கக் கூடிய கட்சி ஆட்சியில் இருப்பதால் அவை ஆத்திகக் கொள்கைகளுக்கு எதிரான செயல்பாடுகள் முன்னிலை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இன்றைய வரலாற்று காலகட்டத்தில்  மத நம்பிக்கை சுதந்திர கொள்கை அறிவிக்கிற பொழுது சீன மக்களிடையே மதம் தொடர்பான பிரச்சனைகள்தான் முதல்நிலை முரண்பாடு என்று அறிவித்தது. நாத்திகர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் ஒப்பீட்டு அளவில் இரண்டாம் பட்சமானது என்பதை கம்யூனிஸ்டுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். நாத்திக மற்றும் ஆத்திகம் இடையிலான வேறுபாடுதான் பிரதான வேறுபாடு என்று கருதி கம்யூனிஸ்டுகள் ஒருதலைபட்சமாக நாத்திக கருத்துக்களை திணிக்க ஆரம்பிக்கக் கூடாது. இது கட்சிக்கு மட்டுமல்ல வெகுமக்களையும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கும். இந்த வேறுபாடுகளை பிரதான முரண்பாடாக மாற்றினால் மதவெறி மேலோங்கி சோலி நிர்மாணத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். மத நம்பிக்கையாளர்களுக்கும் மத நம்பிக்கைற்றவர்களுக்கும் அரசியல் பொதுவானது. பொருளாதாரப் பிரச்சினைகள் பொதுவானது. இந்த இரண்டிலும் இருக்கக்கூடிய பொதுத் தன்மைகளை கவனத்தில் எடுக்க வேண்டும். கட்சியின் அடிப்படைப் பணி அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதாகும். இந்த ஒன்றிணைப்பின் மூலமாகத்தான் ஒரு நவீன சக்திவாய்ந்த சோலிச அரசை கட்டியெழுப்ப முடியும் என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிச, லெனினிச கோட்பாட்டின் அடிப்படையில் மதநம்பிக்கை சுதந்திர கொள்கையை உருவாக்கி உள்ளது. இதுதான் மக்களின் நலன்களுடன் உண்மையாகவே ஒத்துப் போகிறது. இதுவே சரியான கொள்கை என்று  முடிவெடுத்து களத்தில் இறங்கியுள்ளனர்.

ஒரு கேள்வியின் இரு அம்சங்கள்

சோலிச சமூக கட்டமைப்பில் ஒரே நேரத்தில் எதிர்மறைகளின் இரு அம்சங்களை கையாள வேண்டி இருக்கிறது. ஒரு புறத்தில் மக்களின் மத நம்பிக்கை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். இது மக்கள் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமைகள் ஆகும். அதே நேரத்தில் மக்கள் மதத்தை நம்பாமல் இருக்கவும் மத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்கவும் பிரச்சாரத்தை நடத்த வேண்டும். இந்த இரண்டையும் ஏக காலத்தில் சீன மக்கள் குடியரசு செய்ய வேண்டிய புறச்சூழல் ஆகும். இது மிகவும் நுணுக்கமான முறையில் அமலாக்க வேண்டிய செயல். தரம்வாய்ந்த, மதங்களின் வரலாற்றை அறிந்த, சிறந்த ஊழியர்களால் மட்டுமே இதை செய்து முடிக்க முடியும். ஒரு கேள்விக்கு எதிர் எதிரான இரு அம்சங்களை கையாள வேண்டி இருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்த முடிவை பெரும் பகுதி சிறப்பான முறையில் அமலாக்கி வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மத நம்பிக்கை உள்ள மக்களை வென்றெடுப்பதற்கு என்ன வழி என்ற கேள்விகள் எழுகிறது. அது உத்தரவு மூலமாகவோ, நிர்பந்தம் மூலமாகவோ சாத்தியமில்லை என்பதை மார்க்சிய சித்தாந்தம் தெளிவுபடுத்தி உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி அறிவியல் கல்வியை பரப்புவது, மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரப்படுத்துவது போன்ற நடவடிக்கையில் மூலமாக மத நம்பிக்கையாளர்களை வென்றெடுக்க முடியும். இது மட்டும்தான் எதிர்காலத்தில் மக்கள் மத நம்பிக்கையிலிருந்து வெளிவருவதற்கு காரணமாக அமையும் என்பதை சீன மக்கள் குடியரசு தெளிவுபடுத்தி அமலாக்கி வருகிறது.

மத நம்பிக்கை சுதந்திரம் என்றால் அவற்றை எப்போதும் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும் மனம் போன போக்கில் பயன்படுத்தலாம் என்ற நடவடிக்கைகளுக்கு சீனாவில் அனுமதியில்லை. மத நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். குடிமக்களின் தனிப்பட்ட சுதந்திரமான தேர்வுதான் மத நம்பிக்கை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, சீனாவில் உள்ள மதங்கள் அரசு நிர்வாகத்திலோ, நீதித்துறை விவகாரங்களிலோ, பள்ளிக்கூடங்களிலோ, பொதுக்கல்வியின் பாடத்திட்டங்களிலோ தலையிடக்கூடாது என்பது கட்டாயமான சட்டமாகும். மிக முக்கியமான அறிவியல் பூர்வமான நடவடிக்கை என்பது,  குழந்தைகள், சிறார்கள் ஆரம்பத்தில் எந்த மதத்தையும் அவர்களாக தேர்ந்தெடுப்பதில்லை என்பது அனைவரும் அறிந்தது. 18 வயது வந்த பிறகுதான் அவற்றை தேர்ந்தெடுக்க முடியும் என்பதும் அறிவியல்பூர்வமானது. ஆனால் மதவாதிகள் குழந்தை பிறந்தவுடன் அதைச் சடங்குகளில் ஆரம்பித்து சுடுகாடு செல்லுகிற வரை மத நம்பிக்கை சங்கிலிகளால் அல்லது மத அமைப்புகளின் சங்கிலிகளால் கட்டி போடுகிறார்கள். இது இயற்கைக்கு விரோதமானது என்பதை கவனத்தில் கொண்டு செயற்கையான முறையில் சிறார்கள் மீது மதம் தொடர்பான போதனைகளை திணிக்க கூடாது என்றும் 18 வயது வரை உள்ளவர்களை வழிபாட்டுத் தலங்களில் உறுப்பினராக சேர்க்கக்கூடாது என்றும் சட்டம் இயற்றி உள்ளது. தேச ஒற்றுமை, இன ஒற்றுமைக்கு எதிராக மதம் எவ்வித செயல்களிலும் ஈடுபடக்கூடாது அவ்வாறு ஈடுபட்டால் அவை தண்டனைக்குரிய குற்றமாகும்.

சோலிச கொள்கைகளை கடைபிடிக்கும் அரசின் கீழ், மத நம்பிக்கைகள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளை, நடைமுறை சடங்குகளை சாதாரணமாக நடத்துவதற்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு மதத்தை ஊக்குவிக்கவும் மற்றொரு மதத்தை புறக்கணிக்கவும் சோஷலிச அரசு அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது என்று தெளிவாக செயல்படுகின்றனர். மத அமைப்புகள் சோலிச அமைப்பை எதிர்க்கக் கூடாது என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது.

 

15 சீனாவில் மதகுருமார்களும் மத வழிபாட்டுத் தலங்களும்

  மத நம்பிக்கை ச் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்ற கொள்கையை கடைபிடிக்கிற ஒரு நாட்டில் மத அமைப்புகள் எப்படி நடத்தப்படுகின்றன என்று கேள்வ...