Pages

சனி, ஜூலை 23, 2022

அ... புளுகு,! ஆ..... புளுகு!! இது அமீத்ஷா புளுகு....,!


 --------------------------------------------------


 அண்ட புளுகு ஆகாச புளுகு இவற்றையெல்லாம் மிஞ்சிவிடும் அமித்ஷா புளுகு.......

     ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் தேசிய மாநாட்டில் கிராமப்புற பொருளாதாரம் பற்றி பேசினார்.

       சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 70 ஆண்டுகளில் 64 லட்சம் ஹெக்டேர் நிலம் மட்டும்தான் சாகுபடி செய்யக்கூடிய நிலமாக மாற்றப்பட்டது. 

ஆனால் பாஜகவின் 8 ஆண்டு கால ஆட்சியில் மட்டும் 64 லட்சம் ஹெ்டேர் விவசாய நிலம் அதிகரித்து உள்ளது என்று பிரகடனப்படுத்தியிருக்கிறார். 

இது பிரதான் மந்திரி க்ரிஷ்  சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் மூலமாக சாதிக்கப்பட்டுள்ளது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார்.

இது ஒரு விவரங்கெட்ட புளுகுனியாக உள்ளது. ஒன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமும் பொருளாதாரம் மற்றும் புள்ளியல் இயக்குனரகம் மூலமாக நில பயன்பாடு குறித்து 2021  ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் 2018 19 வரையிலான விவரங்கள் அடங்கியுள்ளது.

      1950-51 இல், நாட்டில் 1,897 லட்சம் ஹெக்டேராக இருந்த சாகுபடி நிலப்பரப்பு, 2013-14ல் 1,819 லட்சம் ஹெக்டேராக சுருங்கியது.  

அதாவது, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றபோது, ​​அமித் ஷா கூறியது போல் இந்தியாவின் சாகுபடி நிலம் 64 லட்சம் ஹெக்டேர் அல்ல, 1,819 லட்சம் ஹெக்டேராக இருந்தது.

சுதந்திரத்துக்கும் 2013-14க்கும் இடைப்பட்ட காலத்தில் விவசாய நிலம் 78 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது.  இருப்பினும் சாகுபடி நிலம் குறைந்து கொண்டே போவது நிற்கவில்லை. தொடர்கிறது.  

     சமீபத்திய தரவு, 2018-19 முதல், இந்தியாவின் விவசாய நிலத்தின் அளவு 1,809 லட்சம் ஹெக்டேராக உள்ளது.  அதாவது  பாஜக ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் சாகுபடி நிலம் 10 லட்சம் ஹெக்டேர் சுருங்கி விட்டது.

     விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஏப்ரல் 2022 இல் ராஜ்யசபாவில் அளித்த பதிலின்படி, 62.4 லட்சம் ஹெக்டேர் நிலம்,   நுண்ணீர் பாசனத்தின் (சொட்டுநீர் மற்றும் தெளிப்பான்) பர் ட்ராப் மோர் க்ராப்' (Per Drop More Crop) கூறு மூலம் சாகுபடி செய்யப்படுகிறது.  

இத்திட்டத்தின் 'நீர்நிலை மேம்பாடு' கூறுகளின் கீழ், 5.6 லட்சம் ஹெக்டேர் பாதுகாப்பு நீர்ப்பாசன திறன் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் தோமர் கூறினார். 

     இவை அனைத்தும் ஏற்கனவே செய்யப்படும் சாகுபடி நிலத்தில் நீர்ப்பாசன முறைகளில் ஏற்பட்டு இருக்க கூடிய மாற்றம் மட்டுமே. அமித்ஷா கூறியிருப்பது போல் 8 ஆண்டுகளில் 64 லட்சம் ஹெக்டேர் புதிதாக சேர்த்து விட்டோம் என்று கூறுவது உண்மை அல்ல.

 நீர்வள ஆதாரம் ஒரு கண்ணோட்டம் 2022 என்று அறிக்கையின் படி 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

       2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 64. 14 லட்சம் ஹெகடேர் நீர் பாசன வசதிகள் செய்யப்பட்டு ள்ளது.11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் (2007-2012) முடிவில் நாட்டில் உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனத் திறன் ஏற்கனவே 1,135 லட்சம் ஹெக்டேராக இருந்தது என்றும் அறிக்கை  குறிப்பிட்டுள்ளது. 

       1950-51 இல் 17.1%  நீர்ப்பாசனம் செய்யப்படும் மொத்த பயிர்ப் பகுதியாக இருந்தது. 2013-14 இல் 47.7% ஆக அதிகரித்துள்ளது.  இது மோடி அரசாங்கத்தின் கீழ் முதல் ஐந்து ஆண்டுகளில் சுமார் 4 சதவீதம் மட்டுமே  வளர்ச்சியடைந்து, 2018-19ல் 52% ஆக உயர்ந்துள்ளது.  அதாவது இந்தியாவில் 48% விளைச்சல் நிலம் இன்னும் மழையை நம்பியே உள்ளது.

அ.பாக்கியம் 

https://www.factchecker.in/fact-check/amit-shahs-claim-on-increase-in-agricultural-land-doesnt-check-out-827381

வெள்ளி, ஜூலை 22, 2022

குடிமைப் பணிகளால் குலைந்து போய் கிடக்கும் சென்னை:


பாதுகாப்பான நகரம் என்றால் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெறாத அச்சமற்ற வாழ்க்கை இருப்பதற்கு அர்த்தம் தான் பாதுகாப்பான நகரம் என்பது நமது பொது புத்தியில் பதிவாகி இருக்கிறது. 

இவையெல்லாம் சென்னையில் குறைவாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. மழை நீர் வடிகால்வாய் பள்ளத்திலும், மெட்ரோவாட்டர் பள்ளத்திலும், இரு சக்கர வாகனங்கள், கார்கள், மாடுகள், மனிதர்கள், விழுந்து செத்துக் கொண்டிருப்பது அன்றாட நிகழ்வுகளாக மாறிக்கொண்டே இருக்கிறது.

 இதுவும் பாதுகாப்பற்ற நகரம் என்பதற்கான அடையாளங்களே. இதன் முலம் நடைபெறும் விபத்துகளும் அதிகமாக உள்ளன.

தற்போது சென்னையில் குடிமராமத்து பணிகளை அரசு தீவிரமாக நடத்தி வருகிறது வரவேற்கக் கூடியது தான். 

ஆனால் மராமத்து பணிகள் சரியான திட்டமிடல் இல்லாததால் சென்னை சீர்குலைந்து கிடக்கிறது. அதே நேரத்தில், ஒப்பந்தக்காரர்கள், அதிகாரிகள், உள்ளூர்கவுன்சிலர்கள் பணிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தாத நிலையில் இந்த விபத்துகள் தொடர்கின்றன.

ஒரே நேரத்தில் ஆறுக்கும் மேற்பட்ட துறைகள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீர்வடிகால்வாய் அமைப்பது, பாதாள சாக்கடை, நிலத்தடியில் மின்சார கேபிள்கள் பதிப்பு, சாலைகள் அமைத்தல், பாலம் கட்டுதல், மெட்ரோ ரயில் திட்டங்கள் என பணிகள் நடைபெற்று வருகின்றன. 

சென்னை தாம்பரம் ஆவடி மாநகராட்சிகளில் 170 சாலைகள் துண்டிக்கப்பட்டு கிடக்கிறது, மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக 644 இடங்களில் பள்ளங்கள் வெட்டப்பட்டு கிடக்கிறது. மெட்ரோ வாட்டர் 250 இடங்களில் குழிகளை வெட்டியுள்ளது. வடசென்னை தண்டையார்பேட்டை பகுதியில் 251 சாலைகள், ஆலந்தூரில் 209 பெருங்குடியில் 186 சாலைகள் படுமோசமாக உள்ளன. 

சென்னை மாநகராட்சியில் உள்ள பெரிய நீளமான சாலைகளில் 80 சதவீதம் வேலைகள் முடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

 அதே நேரத்தில் 2000 க்கும் மேற்பட்ட உட்புற சாலைகள் சீரமைக்க வேண்டிய தேவை உள்ளது. இவற்றில் 1737 உட்புற சாலைகள் அதாவது 257.9 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலைகளை சீரமைக்க அரசு 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதில் 169.3 கோடி முதல் கட்டமாக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவையெல்லாம் விதிகளை கடைபிடிக்காமல், வெட்டப்படும் மண் கற்களை சாலையில் போடுவதும் பள்ளங்களை சுற்றி தடுப்பரணங்களை அமைக்காமல் இருப்பதும் அன்றாட நிகழ்வுகளாக உள்ளது. 

விதிகளை கடைபிடிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்தாலும் அது முழுமையாக அமலாவதில்லை. 

அதிகாரிகள் மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படுவதில்லை.

உதாரணமாக, நெற்குன்றத்தில் தடுப்பணைகளை வைக்காத ஒப்பந்ததாரர்களிடம் தினசரி 500 ரூபாய் என்று நான்கு நாளைக்கு 2000 மட்டும் வசூலித்து அபராதத்தை முடித்துக் கொண்டார்கள். இவையெல்லாம் அதிகாரிகளின் சித்து விளையாட்டுக்கள்.

மின்வாரியம் மின்சார கேபிள்களை புதைப்பதில் எந்த விதிகளையும் கடைபிடிப்பது இல்லை. மின்னழுத்த கேபிள்களை ஒரு அடி ஆழத்துக்கு கீழே பதிக்க வேண்டும் என்ற விதியை கடைப்பிடிக்காமல் அரை அடி கூட பள்ளம் தோண்டாமல் பதித்து விடுவது, நடைபாதைகளில் மேலே போட்டு செல்வதும் அன்றாட காட்சிகள். 

இதைவிட ஆபத்தானது உயர் மின்னழுத்த கேபிள்களை ஒரு மீட்டர் ஆழத்தில் பதிக்க வேண்டும் என்று விதி இருந்தாலும் அதை அடிஆழத்தில் கூட பதிக்காமல் தரையில் மேலேயே போட்டிருக்கக்கூடிய காட்சிகளை நாம் அனைவரும் பல இடங்களில் காணலாம்.

சாலைகளை வெட்டுவதற்கு முன்பாக அதை மீண்டும் சீரமைப்பதற்கு முன் மாநகராட்சிக்கு முன் தொகை செலுத்திய தான் வெட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. பிரதான சாலைகளில் வெட்டுவதற்கு சென்னை மாநகராட்சியும், உட்புற சாலைகளை வெட்டுவதற்கு மண்டல அலுவலகத்திலும் பணம் செலுத்த அனுமதி பெற வேண்டும்.

மழை நீர் வடிகால்வாய் துறை, மெட்ரோ வாட்டர், மின்வாரியம் என யாரும் அனுமதி பெறுவதில்லை என்ற புகார்கள் தான் உள்ளது. சமீபத்தில் மாநகராட்சி பொறியாளர்கள் ஒரு புகாரை மேல் இடத்திற்கு தெரிவித்துள்ளனர்.

 தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் அனுமதியின்றி சாலைகளை வெட்டுவதற்கு உதவிசெய்கின்றனர்.

பணிகள் முடிந்த இடத்தில் இருக்கக்கூடிய கழிவுகளை அப்புறப்படுத்தாத நிலைமை உள்ளது. எங்கு பள்ளம் வெட்டப்பட்டது என்பது எங்கு மூடி இருக்கும் அன்றாட விஷயங்களை அறிந்து கொள்ள கூடிய அளவுக்கு மாநகராட்சியின் செயல்பாடுகள் இல்லை.

திட்டங்கள் அமலாவதற்கு முன்பாக துறைகளுக்கிடையிலான கூட்டங்களை நடத்தி அவற்றில் முறையான திட்டமிடலை உருவாக்காதது இந்த நிலைமைக்கு காரணம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஒருங்கிணைப்பு குறைபாடுகளால் விபத்துக்கள் அதிகமாகியுள் ளது. 2021-ம் ஆண்டு மாதம் தோறும் 300 சாலை விபத்துகள் நடந்தது. இதில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு சிறிய காயங்கள் ஏற்படுத்தக்கூடிய விபத்துகள். 2022 ஆம் ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில் 2400 க்கு மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. 

சாலைகளில் அள்ளிப் போடப்பட்டுள்ள மராமத்து பணிகளின் கழிவுகளால் விபத்துகள் ஏற்படுகிறது. அத்தனை பணிகளும் ஏக காலத்தில் நடப்பதால் சென்ற ஆண்டைவிட குறைவான வாகனங்கள் சாலைகளில் சென்றாலும் சென்றடையும் நேரம் அதிகமாக உள்ளது உயிர் காக்கும் ஆம்புலன்சுக்கும் இந்த நிலைதான்.



அரசின் முடிவுகளை அமுலாக்குவதற்கான துறைகள் சீர் கெட்டுப்போய் கிடக்கிறது. இவற்றை சரிபடுத்தாமல் மக்கள் திட்டங்கள் முழுமையாக நிறைவேறாது. அத்தனை திட்டங்களும் அறைகுறையாக நடந்து பெண்கள் பணம் கொள்ளையடிக்கப்படும்.

அ.பாக்கியம்

குப்புறவிழுந்தாலும் ..... இல்லை தலை குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை......


அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு படுபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் ரூபாயின் வீழ்ச்சி ஏற்பட்ட பொழுது மோடி வீர வசனம் பேசினார். மன்மோகன் சிங் அரசு பலவீனமான அரசு, பலவீனமான ரூபாய் என்றார்.

இப்போது 56 இன்ச் பலமான ஆட்சியில் ஏன் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது என்றால் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார்கள்.

டிசம்பர் 31, 2014 அன்று ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு 63.33 இந்திய ரூபாயாக இருந்தது. ஜூலை 11, 2022 அன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.41 ஆகக் குறைந்தது. இன்று ரூபாயின் வீழ்ச்சி 80.03 என்ற அளவில் விழுந்து விட்டது.

டிசம்பர் 2014 முதல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது

ரஷ்யா-உக்ரைன் மோதல்,கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக நிதி நிலைமைகள் இறுக்கம்

போன்ற உலகளாவிய காரணிகள் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள். ." என்று நிதி அமைச்சர் நிம்மி காரணம் கூறுகிறார்.அது காரணமாக தெரியவில்லையா?

பிரிட்டிஷ் பவுண்ட், ஜப்பானிய யென் மற்றும் யூரோ போன்ற நாணயங்கள் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயை விட வலுவிழந்துள்ளன, என்று நொண்டிச்சாக்கு சொல்கிறார் நிதி அமைச்சர் நிம்மி.

நாணயத்தின் தேய்மானம் ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிக்க வாய்ப்புள்ளது, இது பொருளாதாரத்தை சாதகமாக மாற்றும் என்று 56 அங்குல அரசின் வெட்டிப்பேச்சு.

RSS தலைவர் ரூபாயின் மதிப்பு குறைத்தால் நமக்கு வெளிநாட்டு நன்கொடை அதிகம் கிடைக்கும் என்று பேசி வெந்தபுண்ணில் வேல் பாச்சுகிறார்.

2022-23 நிதியாண்டில் இதுவரை இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு போர்ட் ஃபோலியோ முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 14 பில்லியன் டாலர்களை பெற்றுள்ளனர் என்று நிதி அமைச்சர் கூறினார். (ANI). உலகமெல்லாம் சுற்றி சுற்றி மோடி கொண்டுவந்தார் என்பது இதுதானா?


மோடி அரசின் பொருளாதார வீழ்ச் சிதான் ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம் 28இன்ச் மார்புள்ள மனிதனும் புரிந்து கொள்வார்.

அ. பாக்கியம்

மோடியின் இந்தியா வளர்கிறது.....

உலகின் 4வது பணக்காரர் கவுதம் அதானி.

        இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான கௌதம் அதானி, போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார் . மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடந்த வாரம் தனது செல்வத்தில் 20 பில்லியன் டாலர்களை தனது இலாப நோக்கற்ற நிறுவனமான பில் & மெலிண்டா கேட்ஸுக்கு நன்கொடையாக வழங்குவதாக கூறியதை அடுத்து இது வந்துள்ளது.

         இதற்கிடையில், இந்தியதொழில் அதிபர் கெளதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 114 பில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 மற்றும் 2022 க்கு இடையில், அவரது நிகர மதிப்பு $ 50 பிலியனில் இருந்து $ 90 பிலியனாக வளர்ந்துள்ளது.

         கௌதம்அதானி , அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார், இது இந்தியாவின் முதல் மூன்று கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. “அதானி குழுமம், ஆற்றல், துறைமுகங்கள் மற்றும் தளவாடங்கள், சுரங்கம் மற்றும் வளங்கள், எரிவாயு, பாதுகாப்பு மற்றும் விண்வெளி மற்றும் விமான நிலையங்கள் என பல்வேறு வணிகங்களுடன் $197.49 பிலியனுக்கு அதிகமான (ஜூலை 19, 2022 இல்) ஒருங்கிணைந்த சந்தை மூலதனத்துடன் பொதுவில் பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. 

     ஃபோர்ப்ஸ் பட்டியலில், எ




லான் மாஸ்க் 230 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளார், லூயிஸ் உய்ட்டனின் பெர்னார்ட் அர்னால்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அமேசான் முதலாளி ஜெஃப் பெசோஸ் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அண்ணா சாலை..அமெரிக்க தூதரகம்…வாலிபர் சங்கம்…. அ. பாக்கியம்



யுத்த எதிர்ப்பு யுத்தகளமானது.

அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால்நிலையத்தையும்,. அமெரிக்க தூதரகத்தையும், வாலிபர் சங்க போராட்ட களத்திலிருந்து பிரிக்க முடியாது.

 அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து 90-ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் யுத்த எதிர்ப்பு பேரணிகள் நடந்த வண்ணம் இருந்தன. தூதரகம் இருக்குமிடமெல்லாம் இயக்கம் நடந்துகொண்டே இருக்கும் என்று நாம் அமெரிக்காவின் யுத்தவெறியை உணர்ந்து கொள்ள முடியும். 

இந்தியாவில் சென்னையில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகத்தை எதிர்த்து அதிகமான அளவுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் சமாதானத்தை நேசித்த இடதுசாரிகள் மட்டுமே.

1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்மிது ஆக்கிரமிப்பு தாக்குதலை நடத்தியது. ஈராக் நாட்டிற்கும் குவைத் நாட்டிற்கும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் பிரச்சனைகள் இருந்தன.

 நிச்சயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமான முறையில் உற்பத்தி செய்து ஈராக் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கிய பொழுது ஈராக் குவைத் மீது 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி தாக்குதலை நடத்தியது.

ஈராக் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் திட்டத்தை ஈராக் அதிபர் சதாம் உசேன் ஏற்கவில்லை. 

எனவே குவைத் முலமாக அடிபணிய வைத்திட அமெரிக்கா திட்டம் தீட்டி அமுலாக்கியது. 

குவைத்தை மீட்கிறேன் என்ற பெயரில் குவையிலிருந்து ஈராக் படைகள் வெளியேறிய பிறகு, அமெரிக்கா ஈராக் நாட்டை தாக்கியது. 

இது தன்னை எதிர்க்கும் ஈராக் மட்டுமலல ஒட்டுமொத்த அரபுநாடுகளையும் கபளீகரம் செய்ய திட்டமிட்டது. 35 நாடுகளை ஒன்றிணைத்து சவுதி அரேபியாவில் படைகளை குவித்து ஈராக் மீது தாக்குதலை கொடுத்தது. 

யுத்தசெலவு மொத்தம் 60 பில்லியன் டாலரில் 32 பில்லியன் டாலர்களை குவைத் மற்றும் சவுதி அரேபியாவிடம் இருந்து அமெரிக்கா பறித்துக் கொண்டது.

ஒரு கட்டம் வரை குவைத்தை விடுவிப்பதற்கான தாக்குதல் என்று அறிவித்த அமெரிக்கா தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்துள்ளது ஈராக்கின் மீது கொடூரமான படையெடுப்பை துவங்கியது.

அமெரிக்காவின் இந்த அடாவடி படையெடுப்பை கண்டித்து 29.1.1991 அன்று சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சென்னை மாவட்ட குழு முன்முயற்சியால் தொழிற்சங்கம், மாணவர் சங்கம், மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் இணைந்து உடனடியாக அமெரிக்க தூதரகத்தை நோக்கி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

யுத்த எதிர்ப்பு பேரணி அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

 அமெரிக்கத் தாக்குதல் கொடூரமானது என்று உணர்ந்த வாலிபர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள், மாதர்கள் என ஆயிரக்கணக்கில் ஒன்று கூட ஆரம்பித்து விட்டனர் 3500 பேர் வரை அங்கு திரண்டு விட்டனர்.

கைகளில் கொடிகள் இருந்ததை விட அமெரிக்காவின் கொடுமைகளை விளக்கிய கையெட்டைகள், பல்வேறு வகையான உருவபொம்மைகள், ஜார்ஜ் புஷ்ஷின் உருவ பொம்மைகள், அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்தும் பேரழிவு ஆயுதங்கள் போன்ற அட்டைகளில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள், குண்டுகள் போன்றவற்றையும், நாய்களுக்கு அமெரிக்க கொடியையும் போர்த்தியும் என விதவிதமான எதிர்ப்புணர்வோடு அந்த கூட்டம் காட்சியளித்தது.

கூட்டம் வந்தது முதல் அமைதியாக இருக்கவில்லை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள். யுத்தத்தை எதிர்த்து அமெரிக்காவின் அட்டூழியங் களை அம்பலப்படுத்தியும், சமாதானத்தை வலியுறுத்தியும், விண்ணதிர கோஷங்கள் இடைவிடாது எழும்பி கொண்டே இருந்தது. 

அவ்வளவு உணர்ச்சிகரமான எழுச்சிகரமான ஒரு கூட்டத்தை அதுவரை கண்டதில்லை. ஊர்வலத்தை நடத்தவிடக்கூடாது என்று திட்டமிட்டிருந்த காவல்துறை இந்த கூட்டத்தை கண்டவுடன் மேலும் அச்சிடப்பட்டது.

 எங்கே அமெரிக்க எஜமானர்கள் எரிச்சலைடைவார்கள் என்று கவலை கொண்டனர்.  

இந்தியாவில் நவ தாராளமய அமுலாக்கம் துவங்கியிருந்த காலகட்டம். அமெரிக்காவின் அடிவருடிகளாக ஆட்சியாளர்கள் மாறத்துவங்கிய காலகட்டம். எனவே காவல்துறை அமெரிக்க தூதரகத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்க தூதரக சுவர்களில் கூட எதிர்ப்புக் குரல் கேட்கக்கூடாது என்று முடிவெடுத்து ஊர்வலத்தை செல்ல விடாமல் தடுக்க ஆரம்பித் தனர். 

முதலில் கொடி எடுத்துச் செல்லக்கூடாது, பிறகு கையடக்கக் கூடாது என்று ஒவ்வொரு ஏற்பாடுகளையும் செல்லக்கூடாது என்று சொல்லி தடுத்து கோபத்தையும் குழப்பத்தையும் உருவாக்க ஆரம்பித்தனர். 

ஒரு கட்டத்தில் காவல்துறையின் இந்த உத்திகளை தெரிந்து கொண்டு ஊர்வலத்தை மீறி நடத்துவது என்று முடிவெடுத்தோம். அகத்தியலிங் கம், பாக்கியம், பி.ஜி.கே.கிருஷ்ணன், டி.நாராயணன், மாணவர் சங்க கோவிந்தராஜன், மாதர்சங்க செயலாளர் தலைமை ஏற்றுச் சென்றோம்.

அமைதியாக ஊர்வலம் செல்ல ஆரம்பித்தவர்கள் மீது, பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என பார்க்காமல் கண்மூடித்தனமான தாக்குதலை போலீசார் ஆரம்பித்தார்கள். 

நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மண்டைஉடைந்து. இரத்த காயங்கள் ஏற்பட்டன. இன்னும் பல நூறு பேருக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்படக்கூடிய அளவிற்கு தாக்குதலை நடத்தினார்கள்.

காவல்துறை கூட்டத்தை கலைப்பது என்பது உறுதியானது. எனவே அவ்வளவு பெரிய இடத்தில் நூறு பேர்கள் அல்லது 200 பேர்கள் என்ற வகையில் வட்டத்தை கட்டி உள்ளே இருந்தவர்களை தாக்க ஆரம்பித்தார்கள். 

சாலை ஓரத்தில் ஒதுங்கியவர்கள் எல்லாம் காவல்துறை கூட்டமாக சேர்ந்து தாக்கிய பொழுது அதை தடுக்க வேண்டிய கட்டாயம் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு ஏற்பட்டது.

 நடைபாதையில் பதிக்கப்பட்ட இரண்டடி கற்களை எந்த ஆயுதமும் இல்லாமல் பெயர்த்து எடுத்து, காவல்துறை தடியடிகளையும் அவர்கள் வீசிய கற்களையும் தடுத்தார்கள்.

பெண்களை காவல்துறை குறிவைத்து தாக்கிய பொழுது அரிஹரன் என்ற வங்கி ஊழியர் பல காவலர்கள் கையில் இருந்த தடிகளை புடுங்கி தூரமாக வீசி பலபெண்ணை பாதுகாத்தார்.

மிக அகலமான நான்கு முனை சந்திப்பில் பிற்பகல் 4 மணிக்கு இந்த தாக்குதல் அரங்கேறிக் கொண்டிருந்தது. வாலிபர் சங்கத்தின் மாநில தலைவராக இருந்த அகத்தியலிங்கம், சென்னை மாவட்ட செயலாளராக இருந்த நான், சிஐடி யூ மாவட்ட செயலாளராக இருந்த பிஜிகே கிருஷ்ணன், டி.நாராயணன், மாணவர் சங்க செயலாளர் கோவிந்தராஜன் உட்பட பல பேர் நான்கு முனை சந்திப்பின் மையத்தில் காவல் துறையினர் சுற்றி வளைத்து தாக்கப்பட்டுக்கொண்டிருந்தோம்.

 தோழர் பி.ஜி கே.கிருஷ்ணன் அவர்களின் மண்டையைப் பார்த்து காவல்துறை தடியால் தாக்க முற்பட்டபொழுது நான் எனது கரங்களை குறுக்கே செலுத்தி அந்த அடியை கையிலை தாங்கினேன். 

இது நடந்து கொண்டிருக்கும் பொழுது எனது தலையை குறி வைத்து காவல்துறை தடியை ஓங்கி தாக்கிய பொழுது மாணவர் சங்கத் தோழர் கோவிந்தராஜன் தனது கரத்தை உள்ளே நுழைத்து அதை தடுத்தார். அவர் கைஉடைந்தது, என் மண்டையோ உயிரோ பிழைத்தது. 

மாவட்ட தலைவராக இருந்த தோழர் மாதவ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

காவல்துறை மண்டையை உடைப்பது அவர்களின் குறிக்கோளாக இருக்கும். அச்சத்தை உருவாக்குவது அவர்களின் செயல்.

எனவே மண்டை உடைவதை குறைப்பதற்கு சில வழிகளை நாங்களும் கையாளுவோம். அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் இதை உணர்த்தியது. 1985 ஆகஸ்ட் 5-ம் தேதி ராஜா முத்தையா செட்டியார் அவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரி ஆரம்பிப்பதற்கு எம்ஜிஆர் தலைமையிலான அரசு அனுமதி வழங்கி அதற்கான விழா கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சென்னை மாவட்ட குழு சார்பில் விழா நடைபெறுகிற இடத்தில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்து களம் இறங்கினோம். 

அண்ணா சாலையில் தலைமை தபால் நிலையத்தில் ஒன்று கூடி போராட்டத்தை துவங்குவது என்றும் திட்டமிட்டு திடீரென சேர்வது என்றும் பிரிந்து நின்றோம். 

காவல்துறை தலையில் அடிப்பார்கள் என்று அறிந்து கொண்டதால் அனைத்து தோழர்களும் கனமான டர்க்கிடம் தலையில் கட்டிக்கொண்டு போராட்டத்தில் இறங்க வேண்டும் என்று முடிவெடுத்து அமுலாக்கினோம். தலையில் அடித்தாலும் காயம் குறைவாகத்தான் இருந்தது.

 மேலும் காவல்துறையினரை தடுப்பதில் பெண்களும் முன்னணியில் இருந்தனர். இது அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டத்தில் 67 பேர் கைது செய்யப்பட்டனர்.

 யுத்த எதிர்ப்பு பேரணியில் பலருக்கும் தலையில் காயம் பட்டிருப்பதை அறிந்தால் காவல்துறையின் தாக்குதலை புரிந்து கொள்ளமுடியும். பெரும் கூட்டம் சேர்ந்ததால் இந்த டர்கி டவல் உத்தியை அமுலாக்க முடியவில்லை.

மற்றொரு இடத்தில் என்னை அடையாளப்படுத்தி வேறு ஒருவரை இன்சுரன்ஸ் அரங்கத்தில் வேலை செய்த விஜயானந்தன் அவர்களை காவல்துறை கடுமையாக தாக்கியது. 

அவரும் என் அளவு உயரம் என்னைப் போன்றே தாடியும் வைத்திருந்தார் அவரை நான் என்று காவல்துறை தவறாக அடையாளப்படுத்தி கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கி விட்டனர். காவல்துறை செருப்பு இல்லாதவர்களை தேடிப்பிடித்து அடித்தார்கள். 

சாலையின் மையத்தில் சுற்றி வளைக்கப்பட்டிருந்த பிஜிகே கிருஷ்ணன் அகத்தியலிங்கம், பாக்கியம், கோவிந்தராஜன் உட்பட 32 பேர் கைது செய்யப்பட்டனர். காவல் நிலையத் திற்கும் அழைத்துச் செல்கிற பொழுது கோவிந்தராஜன் வாகனத்திற்குள் கோஷம் போட்டார் ஒரு காவலர் வாகனத்துக்குள்ளேயே அவரைத் தாக்கினார்.மீண்டும் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. 

அன்று இரவு நாங்கள் 32 பேர் சென்னை மத்திய சிறையில் காலதாமதமாக அடைக்கப்பட்டோம். இரவு 6 மணிக்கு மேல் சென்றதால் உணவு இல்லை. எனினும் அங்கு எங்களுக்கு சிறைக்கைதிகள் உணவளித்தனர்.

அண்ணா சாலையின் அந்த இடம் போர்க்களம் பூண்டது .யுத்த எதிர்ப்பே ஒரு யுத்தமாக மாறியது. செருப்புகளை வண்டி வண்டியாக எடுத்துச் சென்றனர். 

ஜார்ஜ் புஷ்ஷின் உருவ பொம்மைகள் சிதைந்து கிடந்தது. காவலர்கள் அவற்றை அள்ளி ஜார்ஜ் புஷ்ஷின் யுத்த வெறிக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள்.

 கிளைகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பேரழிவு ஏவுகணை பெரிய அளவாக இருந்ததால் அவர்கள் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள காவல்துறை வண்டியை ஏற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். 

காவலர்கள் வீசிய கற்களும் பாதுகாப்பிற்காக நடைபாதை கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டதும் சாலைகளில் சிதைந்து கிடந்தது. இவற்றையெல்லாம்

 அப்புறப்படுத்த சில மணி நேரம் தேவைப் பட்டது. போக்குவரத்து தடை பட்டது. அமெரிக்க தூதரகம் அதன் விசுவாசிக ளின் பாதுகாப்பு வளையத்தில் சென்றது.

அன்று இரவு, அடுத்த நாள் காலையில் அனைத்து பத்திரிக்கைகளிலும் இது தலைப்புச் செய்தியாக மாறியது.

 அமெரிக்கா ஈராக் மீது கொடுத்த தாக்குதலை எதிர்த்து நடைபெற்ற யுத்த எதிர்ப்பு பேரணிகளில் உலகில் எங்குமே இப்படிப்பட்ட தாக்குதல் நடைபெறாத காரணத்தினால் இது இந்திய செய்தியாக மட்டுமல்ல, உலகச் செய்தியாகவும் மாறியது. அன்றைய பிபிசி செய்தியில் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டது.

நாங்கள் அனைவரும் சிறைச்சாலையில் இருந்தோம். யுத்த எதிர்ப்பு பேரணி நடத்தியவர்கள் மீது காவல்துறையின் கடுமையான தாக்குதலை கண்டித்து அமெரிக்க தூதரத்துக்கு முன்னால் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்ட குழு முடிவு எடுத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. 

அடுத்த நாள் காலை (30.1.1991) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தமிழக அரசு ஒன்றிய அரசின் பிரதமராக இருந்த சந்திரசேகர் 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி கலைத்தார்.. 

கலைஞர் தலைமையிலான அரசு கலைக்கப்பட்ட பொழுது அன்றைய தினம் காவல்துறையால் அடி வாங்கியவர்கள் அனைவரும் தங்களது இப்படி செய்தால் இப்படித்தான் நடக்கும் என்று சிலர் கோபத்தை வெளிப்படுத்தினர்.

 சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத செயலை எதிர்த்து, திமுக அரசை கலைத்ததை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்கு உள்ளானவர்களும் கலந்து கொண்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.

மறுபக்கம் இப்படி ஒரு தடியடி நடத்துவதற்கு காவல்துறை காரணமாக இருந்தாலும் நாம் அதற்கு இடம் கொடுக்க வேண்டுமா என்ற விவாதம் நடக்கத்தானே செய்யும். 

இந்த நேரத்தில் டெல்லியில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மத்திய கமிட்டி சுதந்திர இந்தியாவில் குறிப்பாக சென்னையில் இவ்வளவு பெரிய யுத்த எதிர்ப்பு பேரணியும், எழுச்சியும் இதுவரை ஏற்பட்டதில்லை என்றும் இந்த இயக்கத்தை நடத்திய அமைப்புகளுக்கு பாராட்டும், காவல்துறை தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இது நாடுமுழுவதும் எதிர்ப்புணர்வை ஏற்படுத்துவது என்பதும் யுத்தம். இந்தத் தகவல் பத்திரிக்கைகளுக்கு வரும் முன்னாள் அன்றைய மத்தியக் குழு உறுப்பினராக இருந்த தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் அவர்கள் கூட்டத்தில் நேரடியாகத் தெரிவித்த பொழுது போராட்டக் களத்தில் நின்றவர்களுக்கு சிறை சென்றவர்களுக்கு மிகுந்த உற்சாகம் இருந்தது. 

இந்தப் போராட்டத்திற்குப் பிறகு கல்கத்தாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு மிகப்பெரும் மோதல் ஏற்பட்டது. நாடு முழுவதும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம் அலைகள் எழுந்தது.

அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக அடிக்கடி இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டங்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தனியாகவும் கூட்டாகவும் நடத்திக் கொண்டே இருக்கும்.

 பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை கண்டித்தும், காஷ்மீரில் அமெரிக்கா தலையிட்டு கண்டித்தும், டைகோ கார்சியாவில் அமெரிக்காவின் கப்பற்படை தளத்தை எதிர்த்தும், அமெரிக்க இந்திய கப்பற்படை பயிற்சிகளை எதிர்த்தும், எண்ணற்ற ஏகாதிபதிக்கு எதிரான போராட்டங்களை வாலிபர்களும் மாணவர்களும் நடத்திக் கொண்டே இருந்தனர்.

சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட துரை என்பவர் அண்ணா சாலையில் ஊர்வலம் எதையும் நடத்தக்கூடாது என்று உத்தரவு போட்டார். அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவை காவல்துறை ஆணையர் வெளியிட்டார்.

இந்த இரண்டையும் எதிர்த்து வாலிபர் சங்கமும் மாணவர் சங்கமும் அண்ணா சாலையிலும் அவதிக்கு தூதரகம் அருகிலும் அடுத்தடுத்த போராட்டங்களை நடத்திக் கொண்டே இருந்தோம்.தடியடிகளும் கைதுகளும் தொடர்ந்து கொண்டே இருந்தன.

 வருடத்திற்கு சக்திமிக்க பலநூறு, இளைஞர்கள் மாணவர்கள் பங்கேற்கும் போராட்டங்கள் நடந்தது.

இதன் உச்சகட்டமாக அண்ணா சாலையில் தலைமை தபால் நிலையம் எதிரில் தோழர்.உமாநாத் தலைமையில் உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவு எடுத்து பெருந்திரள் உண்ணாவிரதம் தடையை மீறி நடத்தப்பட்டது. 

 ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தொடர் போராட்டத்தினை அண்ணாசாலை இரு பக்கத்தின் இருப்புகளும், அமெரிக்க தூதரகத்தின் சுவர்களும் என்றென்றும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

அதுவரை அண்ணா சாலையில் நடைபெறக்கூடிய இயக்கங்களுக்கு அனுமதி கொடுப்பது அதை மறுப்பது இயல்பான விஷயமாக இருந்து வருகிறது.

 இந்த தடை உத்தரவுக்கு பிறகு அனுமதி கொடுக்காமல் அண்ணா சாலையில் உரிமை குரல் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இருக்கிறது.

(தோழர்களே பின்னூட்டங்கள் மூலம் மேம்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.)


அ,பாக்கியம்.

சனி, ஜூலை 16, 2022

ஆ.....இது புதுசா இல்ல... இல்ல... பழசுதான்..


தமிழகத்தில், 25 மாவட்டங்களில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டிய, 138 ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடம், 61 கோடி ரூபாய்க்கு அரசால் விற்கப்பட்டுள்ளது.

நகர ஊரமைப்புச் சட்டத்தின்படி, 2,500 சதுர மீட்டருக்கு அதிக பரப்பிலான அனைத்து லே-அவுட்களிலும், மொத்தப் பரப்பில் 10 சதவீத இடத்தைப் பொது ஒதுக்கீட்டு இடமாக ஒதுக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. 

  இதற்கு விலக்கு அளிக்கும் வகையில், 2019ல், அ.தி.மு.க., ஆட்சியில், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் கொண்டு வரப்பட்டன.

இந்த விதிகளின்படி, 3000 சதுர மீட்டருக்கு உட்பட்ட லே-அவுட்களுக்கு, திறந்தவெளியிடம் ஒதுக்க வேண்டியதில்லை. 

3,000 சதுர மீட்டரில் 10 ஆயிரம் சதுர மீட்டர் வரையிலான பரப்பிலான திட்டங்களுக்கு, 10 சதவீத இடத்தை ஒதுக்கலாம்; அல்லது அந்த நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பை, அரசுக்குச் செலுத்தலாம். 

இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டபோதே, சூழல் ஆர்வலர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2019 பிப்ரவரியில், இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தபின், 2021 நவம்பர் வரை, தமிழகத்தில் எத்தனை லே-அவுட்களில், எவ்வளவு ஏக்கர் பரப்பில் வெளியிடப்பட்ட தானப்பத்திரத்துக்கு பதிலாக வழிகாட்டி மதிப்பு வாங்கப்பட்டது என்ற விபரம் வரும்.25 மாவட்டங்களில் 34 மாதங்களில், 1367 லே-அவுட்களில், 219 லே-அவுட்களில், 194 பெரிய கட்டடங்களில் 63 கட்டடங்களிலும் மட்டுமே 10 சதவீத திறந்த வெளியீடு 110 ஏக்கர் தானமாக வாங்கப்பட்டுள்ளது. 

வெளியே 1148 லே-அவுட்களிலும், 131 கட்டடங்களிலும் 'திறந்த வெளியீடு' ஒதுக்குவதற்குப் பதிலாக, 138 ஏக்கர் 31 சென்ட் இடத்துக்கு, அரசு வழிகாட்டி மதிப்பாக ரூ.60 கோடியே 83 லட்ச ரூபாய், அரசுக்குச் செலுத்தப்பட்டது.

அதாவது பூங்கா, விளையாட்டு மைதானம் போன்றவற்றை அமைப்பதற்கான அரசின் இடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக ரூ.31 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 925 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. 


இதேபோல எல்லா இடங்களையும் அரசே விற்று விட்டால், எதிர்காலத்தில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மரங்கள் வைக்க இடம் எதுவுமே இருக்காது. சுற்றுச் சூழல் எப்படி பாதுகாக்க படும்

எனவே, இந்த விதிமுறையை மாற்றி, 10 சதவீத இடம் ஒதுக்குவதைக் கட்டாயமாக்க வேண்டியது அவசர அவசியம்.

இதனால் குறைந்த விலையும் நடைபெறுகிறது.

தேனியில் ஓரிடத்தில் நான்கு சென்ட் இடத்துக்குப் பதிலாக வழிகாட்டி மதிப்பாக வெறும் 1,500 ரூபாய் மட்டும் செலுத்தப்பட்டுள்ளது. 


அதே நேரத்தில், சேலத்தில் மாநகரப் பகுதியில் ஆறு சென்ட் இடத்துக்குப் பதிலாக ஒரு கோடியே 94 லட்ச ரூபாயும், கோவையில் 16 சென்ட் இடத்துக்குப் பதிலாக ஒரு கோடியே 46 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயும் மதிப்பாக அரசுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. உண்மையில் அந்த இடங்களின் மதிப்பு, இதை விட பல மடங்கு அதிகம்.

ஆக்கிரமிப்பில் இதுவொரு வகை. அதிமுக அரசால் பொது இடம் பயன்பாட்டு சட்டத்தில் (OSR) கொண்டுவரப்பட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.பொது இடம் சூறையாடலை தடுக்க வேண்டும்.

அ. பாக்கியம்.

பார்க்கவே முடியாது... 138 ஏக்கர் நிலத்தை விற்ற தமிழக அரசு!

dinamalar.com | ஏப்ரல் 28, 2022 08:06 PM


திங்கள், ஜூலை 11, 2022

மோடியின் ராஜ்யத்தில் சிவனே யானாலும் சிறை தான்.



      அசாமில் இரண்டு சமூக ஆர்வலர்கள், பிரிஞ்சி போரா மற்றும் சக பெண், பரிஷ்மிதா, சமூக பிரச்சனைகள் பற்றிய ஒரு சிறு நாடகத்திற்காக சிவபெருமான் மற்றும் அவரது மனைவி பார்வதி தேவியாக உடையணிந்தனர்.

     'சிவா' மற்றும் 'பார்வதி' இருவரும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ​​எரிபொருள் தீர்ந்ததால் வாகனம் நின்றது.  "சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே இந்த பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்பட்டது, அங்கு 'சிவா' எரிபொருள் விலை உயர்வு மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து மோடி அரசாங்கத்தை விமர்சிக்க தொடங்குகிறார்" .

    அப்போது, ​​விலைவாசி உயர்விலிருந்து விடுபட நரேந்திர மோடி அரசுக்கு எதிராக பொதுமக்கள் வெளியே வந்து போராட்டம் நடத்துமாறு ‘சிவா’ வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த காணொளி வலைத்தளத்தில் வைரலானது.

      சங்கிகளுக்கு பயம்  வந்துவிட்டது. எங்கே மக்கள் மோடிக்கு எதிராக திரும்பி விடுவார்களோ என்ற அச்சத்தில் கோழைத்தனத்தில், கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாமல் கைது செய்து உள்ளனர்.

      பாரதிய ஜனதா கட்சியின் (BJP) இளைஞர் பிரிவு  புகார்  செய்தனர்.

விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டங்களை நடத்தி பின்னர் புகார் அளித்துளனர். 

 நாடகத்தில் சிவபெருமானாக நடித்த பிரிஞ்சி போராவை கைது செய்தனர்.

பின்னர் அவர்  பிணையில் விடுவிக்கப்பட்டார்.

https://m.thewire.in/article/rights/assam-activist-arrested-shiva-street-play-rising-prices/amp

ஞாயிறு, ஜூலை 10, 2022

உணவு உண்டு சத்துணவு இல்லை:


 

    அரசு அறிவிப்புகளுக்கும் பல்வேறு சிறந்த அமைப்புகளின் ஆய்வு அறிக்கைகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உள்ளது.

      இந்தியாவில் இருக்கும் சாதாரண மனிதனால் நாடு முழுவதும் உள்ள நிலைமைகளை அறிந்து கொள்ள முடியாது. நிலமைகள் உணர்த்த வேண்டிய ஊடகங்கள் பெரும்பாலானவை ஆள்வோரின் ஊதுகுழலாக உள்ளது.

      உலகின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை 2022: உணவு மற்றும் விவசாயக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல் ஆரோக்கியமான உணவுகளை மிகவும் மலிவு விலையில் மாற்றுவது' என்ற தலைப்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட FAO அறிக்கை....

        ஆரோக்கியமான உணவுகள் மலிவு விலையில் கிடைப்பது நாடு முழுவதும் ஒப்பிடுகையில், 97 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அல்லது நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 71 சதவீதம் பேர் சத்தான உணவை வாங்க முடியாமல் உள்ளனர். 

     ஒட்டுமொத்த ஆசியாவில் 43.5 சதவீதம், மற்றும் ஆப்பிரிக்காவில் 80 சதவீதம் இதே நிலையில் உள்ளது.

       ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 307 கோடி மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை. தொற்றுநோயின் பொருளாதார தாக்கங்கள் காரணமாக உணவு விலை, பணவீக்கம் மேலும் 11.2 கோடி மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாமல் போய்விட்டது.

     உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, இந்த உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

எது ஆரோக்கியமான உணவு.

       முழு தானியங்கள், கொட்டைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் மிதமான அளவு மாமிச புரதம் உள்ளிட்ட உணவுக் குழுக்களில் சமநிலையுடன் கூடிய குறைந்த பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அடிப்படையாகக் கொண்டவை ஆரோக்கியமான உணவுகள் என FAO அறிக்கை வரையறுக்கிறது.

    FAO இன் கூற்றுப்படி, இந்தியாவில் ஒரு ஆரோக்கியமான உணவுக்கு ஒரு நாளைக்கு (2020 இல்) $2.97 செலவாகும். வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில், நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு ரூ.7,600 உணவுச் செலவு ஆகும்.

     வாங்கும் திறன் சமநிலை என்பது வெவ்வேறு நாடுகளில் குறிப்பிட்ட அளவு பொருட்களின் விலை எவ்வளவு என்பதைக் கணக்கில் கொண்டு நாணயங்களை ஒப்பிட்டுப் பயன்படுத்தப்படும் அளவீடு ஆகும்.

     70.5 சதவீத இந்தியர்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலையில், சீனா (12 சதவீதம்), பிரேசில் (19 சதவீதம்), மட்டுமே. இலங்கை (49 சதவீதம்).

   நேபாளம் (84 சதவீதம்) மற்றும் பாகிஸ்தான் (83.5 சதவீதம்) ஆகியவை இந்தியாவை விட  மோசமாக உள்ளது.

    சுமார் 80 கோடி , அல்லது 60 சதவீத இந்தியர்கள், அரசாங்கத்தால் வழங்கப்படும் மானிய உணவுப் பொருட்களை நம்பியிருக்கிறார்கள்

     உணவு மானியத் திட்டம் பெரும்பாலும் தானியங்கள் போதுமான கலோரிகளை வழங்குகிறது ஆனால் போதுமான ஊட்டச்சத்து இல்லை.

அ.பாக்கியம் 

https://theprint.in/india/with-97-cr-people-unable-to-afford-healthy-diet-india-closer-to-africa-un-report-says/1029316/


  


வெள்ளி, ஜூலை 08, 2022

"கழிப்பறை". பிரதமரின் துல்லியமற்ற தாக்குதல்:



        செல்கிற இடம் எல்லாம் துல்லிய தாக்குதல் பற்றி வாய் நிறைய பேசிக் கொண்டிருக்கும் பிரதமர் ஜெர்மனி சென்ற பொழுது கழிப்பறை பற்றியும் துல்லியமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு 100% வீடுகளுக்கு கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டு சாதனை நிகழ்த்தி விட்டதாக பேசி இருக்கிறார்.

       2019 ஆம் ஆண்டு அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டு விட்டது என்று ஒன்றிய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

        அதாவது திறந்தவெளி மலம் கழித்தல்(ODF) முற்றிலுமாக்  ஒழிக்கப்பட்டது என்று பெருமை பேசப்பட்டது.

        இது உண்மை அல்ல என்பதையும் ஊடகங்கள் ஆய்வு செய்து நிரூபித்திருக்கின்றனர். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS)  அறிக்கை 2022 -ம் ஆண்டு  19 சதவீதம் வீடுகளுக்கு கழிப்பறை இல்லை என்பதையும் அவர்கள் திறந்தவெளி மலம் கழித்தல் முறையை கடைப்பிடிக்கிறார்கள் என்பதையும் வெளியிட்டுள்ளது.

     2014 ஆண்டு பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் 61% வீடுகளுக்கு கழிப்பறை வசதி இருந்துள்ளது. மீதமுள்ள 39 சதவீத வீடுகளுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுப்பதற்கான சட்டத்தை ஒன்றிய அரசு ஸ்வாச் பாரத் மூலம் அமலாக்க திட்டமிடப்பட்டது. 2015-16 முதல் 2021 வரை 20% வீடுகளுக்கு மட்டும்தான் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.

     மேலும் தற்போது 19 சதவீதம் வீடுகளுக்கு கழிப்பறை இல்லை என்பதுதான் உண்மை.

       தேசிய அளவில் 81% கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டிருக் கிறது என்று ஆய்வுகள் தெரிவித்தாலும் பீகாரில் 62% வீடுகளுக்கும் ஜார்கண்டில் 70% வீடுகளுக்கும் ஒரிசாவில் 71% வீடுகளுக்கும் மட்டும்தான் அதாவது தேசிய சராசரியை விட மிக குறைவான அளவிற்கு தான் கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

      2021 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனமும் யுனிசெப் நிறுவனமும் ஜூலை மாதம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வின் படி இந்தியாவில் 15 சதவீத மக்கள் திறந்தவெளி மலம் கழித்தல் கடைபிடிக்கின்றனர் என்றும் இதில் கிராமப்புற மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் இருக்கின்றனர் என்றும் நகர்புறத்தில் ஒரு சதவீதம் பேர் இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

     ஆனால் இந்திய மக்களை மட்டும் அல்ல உலகம் முழுவதும் துணிச்சலாக உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரியும் விஷயங்களை மறைத்து துல்லியமான பொய்களை பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது பாஜகவின் மோடி தலைமையிலான அரசு.

அ.பாக்கியம்.

https://www.factchecker.in/fact-check/pm-modi-claims-india-open-defecation-free-all-villages-electrified-but-data-show-otherwise-824267



செவ்வாய், ஜூலை 05, 2022

எரியிற வீட்ல புடுங்குனது லாபம்: இல்லை எல்லாமே லாபம்தான். அ.பாக்கியம்

 


பெருந்தொற்று காலத்தில் பெரும் நிறுவனங்களின் பெரும்கொள்ளை இந்த சொலவடையின்  அர்த்தத்தை மாற்றி அமைத்திருக்கிறது. நாடேபொது முடக்கத்தினால் செயலற்று கிடந்த பொழுது, இந்த பெரு நிறுவனங்கள் மட்டும் எப்படி இவ்வளவு லாபத்தை சம்பாதித்தார்கள் என்பது பலருக்கும் புரிபடாத கேள்வியாக இருக்கிறது.

முதலாளித்துவ பொருளாதார சுரண்டலை அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த செயல்பாடு இதுதான் என்பதை காரல் மார்க்ஸ் தனது மூலதனத்தில் புட்டு புட்டு வைத்திருப்பார். சென்டர் ஃபார் மானிட்டரின் இந்தியன் எகனாமிக்ஸ் (CMIE) வெளியிட்டுள்ள தரவுகள் இதை அம்பலப்படுத்துகிறது.

முன்பு பம்பாய் பங்கு சந்தை என்று அழைக்கப்பட்ட தற்போது  BSE என்று அழைக்கப்படுகிற அமைப்பின் பட்டியலிடப்பட்ட 4700 பெரும்  நிறுவனங் களில்  3288 நிறுவனங்கள் இரண்டாவது பெரும் தொற்று காலமான 2021-22 ல் ருபாய் 9.3 லட்சம் கோடி லாபத்தை சம்பாதித்து இருக்கிறார்கள். இது பெரும் தொற்றின் முதலாம் ஆண்டு விட 70% அதிகமாகும்.  பெரும் தொற்றின்  முதல் ஆண்டாகிய 2020 -21 ல்  ரு.5.5 லட்சம் கோடி லாபத்தை சம்பாதித்தார் கள்.

பெரும் தொற்று ஏற்படு வதற்கு முந்தைய புத்தாண்டு களில் அதாவது 2010 -11 முதல் 2019-20ம் ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டிய சராசரி லாபத்தை விட மூன்று மடங்கு அதிகமாக பெருந்தொற்று  காலத்தில் பெரு முதலாளிகள் லாபம் அடைந்திருக்கிறார்கள் என்று சொன்னால் முதலாளித் துவத்தின்  கோர முகத்தை புரிந்து கொள்ள முடியும்.

பெரும் தொற்றுக் காலத்தில் இந்தியாவிலுள்ள 84 சதமான குடும்பங்க ளின் வருமானம் குறைந்து போனது என்று ஆக்ஸ்பாமின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை இதேகாலத்தில் 102 லிருந்து 142 ஆக உயர்ந்தது மட்டுமல்ல, அவர்களின் கூட்டு லாபம் 23.14 லட்சம் கோடியிலிருந்து 53.16 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் 4.6 கோடி இந்திய மக்கள் தீவிர வறுமைக்குள் தள்ளப்பட்டனர்

எப்படி இந்த லாபத்தை சம்பாதித்தார்கள்?

தொற்று நோய் மற்றும் பொதுமுடக்க காலத்தில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. புதிய நியமனங்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டது. ஒப்பந்த தொழிலாளர்களை அதிகரித்தனர். குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஒரே வேலையை செய்ததால் தொழிலாளர்கள் உற்பத்தி திறனை அதிகரித்து உழைப்பை மலிவாக்கி விட்டனர். இது முதலாளிகளின் லாபத்தை அதிகப்படுத்தியது.

இக்காலத்தில் கச்சா பொருள் விலை 40.1% மின்சாரம் மற்றும் எரிபொருள் 47% மற்றும் பொருட்கள் வாங்குவது 30% அதிகரித்தது. இவற்றுக்கான செலவுகளை நிறுவனங்கள் கூடுதலாக செய்தாலும் தொழிலாளர்களின் ஊதியத்தில் 13.3%  மட்டும் தான் உயர்ந்துள்ளது. இதுவும் இக்காலத்தில் ஏற்பட்ட 7.8% பணவீக்கத்தால் அடிபட்டு போகிறது.

பெரும் தொற்றுக்குப் பிறகு பொருட்களின் விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிற. இக்காலத்தில் பொருட்களை விலையை பல மடங்கு உயர்த்தி பெரு நிறுவனங்கள் கொள்ளையடித்தது இந்த லாபத்திற்கு முக்கிய காரணம்.

இத்துடன் நரேந்திர மோடியின் அரசாங்கம் பெரும் தொற்று நோய்கள் காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்த வரி குறைப்புகள், தள்ளுபடிகள், சலுகைகள் மற்றும் விலக்குகள் ஆகியவை இந்த லாபத்தை மேலும் தீவிர படுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டு கார்ப்பரேட் வரி விகிதம் 30 சதவீதத்திலிருந்து 22 சதமா குறைக்கப்பட்டது. சில பொருட்களுக்கு அதிக கட்டணம் இருந்தால் 35 சதம் வரி குறைப்பு செய்யப்பட்டது. இது முதலீட்டை ஊக்குவிக்கும் என்று அரசு சொன்னாலும் அது நடக்கவில்லை. அதற்கு மாறாக  பெருந்தொற்றின் முதல் ஆண்டில் மட்டும்  1.45 லட்சம் கோடி வழங்கப்பட்ட  வரி சலுகையை தங்களுடைய லாபமாக மாற்றிக் கொண்டார்கள்.

2014.15 மற்றும் 2020-21ம் ஆண்டுகளின்  மத்திய பட்ஜெட் ஆவணங்களின் படி கார்ப்பரேட் வரி செலுத்துவோர்களுக்கு 6.15 லட்சம் கோடி மதிப்பில் உள்ள வரிகளை தள்ளுபடி செய்து சலுகைகளை வழங்கியது. மேலும் அரசு பொதுத்துறை வங்கிகளால் இக்காலத்தில கார்பொரேட் முதலாளிகளுக்கு  10.72 லட்சம் கோடி  கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும் தொற்றின் முதல் ஆண்டின் அதாவது 2020-21 ஆம் ஆண்டுகளில் ரூபாய் 2.03 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 மோடி அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு சட்டரீதியிலான மாற்றங்கள் செய்து மிகவும் சாதகமான சூழ்நிலை உருவாக்கி கொடுத்தது.  தொழிலாளர்களுடைய சட்டங்களை மாற்றி பணியமர்த்தல். பணி நீக்கம், குறைந்தபட்ச ஊதியம் போன்றவற்றின் தொழிலாளர்களுக்கு சாதகமான அம்சங்களை நீக்கி முதலாளிகளுக்கு  ஆதரவான சட்ட திருத்தங்களை செய்து கொள்ளை லாபத்தை தூக்கி விட்டது.

இந்தியாவில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள விலைஉயர்விற்கு, வேலையின்மைக்கு, வறுமைக்கு பட்டினி சாவிற்கு  பின்னால் மோடி அரசின் கொடுமையான மக்கள்விரோத, கார்பொரேட் ஆதரவு  கொள்கைதான் காரணம். எரிகிற வீடென்ன எங்கும் லாபம் எதிலும் லாபம் மட்டுதான் முதலாளித்துவத்தின் தாரக மந்திரம்.

அ.பாக்கியம்

https://janataweekly.org/record-profits-boost-indias-corporate-sector/?utm_source=pocket_mylist

 

 

திங்கள், ஜூலை 04, 2022

மதுரை ராஜாஜி அரசு பொதுமருத்துவமனையும் DYFI போராட்டமும். அ.பாக்கியம்.

 


(பின்னூட்டங்கள் இணைத்து மேம்படுத்தப்பட்டபதிவு)

          மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு மார்ச் மாதம் 30,31, மற்றும் ஏப்ரல் 1 மூன்று நாட்கள் நடை பெற்றது. இந்த மாநாட்டில் கலந்து   கொண்டேன். மாநாடு நடை பெற்ற ராஜா முத்தையா மன்றத்தில் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு தினசரி காலை மாலை சென்று வந்து கொண்டிருந்தோம்.

மதுரை கோரிப்பாளையத்தை கடந்துதான் செல்ல வேண்டும். ஒரு முறை சென்ற பொழுது சில நினைவுகள் வந்தது. மீண்டும் மீண்டும் அந்த இடத்தை கடந்து செல்கிறது பொழுதெல்லாம் பழைய நினைவுகளை அசைபோட ஆரம்பித்தது. கோரிப்பாளையத்தில் ஒவ்வொரு கோணத்திலும் அன்று நடைபெற்ற அந்த மிகப்பெரும் போராட்டம் எனது எண்ணத்தில் நிழலாடியது.

1995-மே மாதம் 31-ம் தேதி மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்கி மருத்துவ சேவையை விரிவுபடுத்த வேண்டும், மேம்படுத்த வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக் குழு பெரும் திரள் ஊர்வலத்தை அறிவித்தது.

மதுரை நகரில் உள்ள இந்த மருத்துவமனைதான் தென்மாவட்டங்கள் அனைத்திற்கும் எளிய மக்கள் சிகிச்சை பெறவேண்டிய மருத்துவமனையாக இருந்தது. ஆனால் அந்த மருத்துவமனை மிக மிக மோசமான நிலையில், மருத்துவர்கள் குறைவு, மருந்துகள் குறைவு, இட வசதி இன்மை, போதிய அளவு மருத்துவ கருவிகள் இல்லை, சுகாதாரமற்ற நிலைமை, என்று எண்ணற்ற குறைபாடுகளோடு காட்சியளித்தது. இருந்தாலும் ஏழை மக்களின் ஒரே ஆதாரமாக இந்த மருத்துவமனைதான் வந்தது. நீண்ட நாட்கள் மனு கொடுத்து, கையெழுத்து இயக்கம் நடத்தி, சுவரொட்டி இயக்கம் நடத்தி அரசு போதிய நடவடிக்கை எடுக்காததால் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

காவல்துறை இந்த இயக்கத்திற்கு அனுமதி மறுத்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஊர்வலம் தொடங்கும் இடமான கோரிப்பாளையத்தில் குவிந்தனர். கோரிப்பாளைய சதுக்கம் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. இந்த இயக்கத்திற்கு அப்போதைய மாவட்ட நிர்வாகிகள் விக்கிரமன், அண்ணாதுரை, மா.கணேசன் விஜயராஜன், இரா.லெனின் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலைமை ஏற்றனர். மாநிலத் தலைவராக செயல்பட்ட நான் (பாக்கியம்) ஊர்வலத்தை துவக்கிவைத்திருந்தேன். தோழர் நன்மாறன் அவர்களும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

மே-31 அக்னி வெயில் சுட்டெரித்தது. தார் சாலைகள் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த வெப்பத்தை விட இளைஞர்கள் எழுப்பிய கோஷங்களின் வெப்பம் உயர்ந்து நின்றது. பொறுக்கமா காவல்துறை? அனுமதி மறுத்தும் நடத்துவதா? நடத்தினால் ஜனநாயகம் அல்லவா வென்றுவிடும்? என்ற கேள்வி அரசின் அடக்குமுறை கருவியான காவல்துறைக்கு எழுந்தது. கண்மூடித்தனமாக ஆளுயர இரும்புபூண் அணிந்த தடிகளால் வெறிகொண்டு தாக்கினார்கள்.

காவல்துறை தடியால் அடித்ததை விட அந்தப் பகுதியில் கடைகள் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த செங்கற்களை எடுத்து வீசினர். தடியால் அடிப்பதையும் இளைஞர்கள் தடுத்து நிறுத்தி தாக்குதலை மட்டுப்படுத்திய பொழுது காவல்துறை கற்களை பயன்படுத்தியது. நிராயுதபாணியாக இருந்த இளைஞர்கள் அதையும் எதிர்கொண்டார்கள். பலதோழர்களே கல்லடியில் இருந்து காப்பதற்காக முயற்சிகளை எடுத்தார்கள்.

நானும், நன்மாறன் மற்றும் தியாகி லீலாவதி உட்பட   கல்லெறிகளுக்கும் தடியடிகளுக்கும் நடுவில் அதிகாரிகளோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். இந்த தாக்குதல் சம்பவம் கேள்விப்பட்டு அப்போது மதுரை மாநகர மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த தோழர்   பி.மோகன் அவர்கள் சம்பவ இடத்திற்கு சைக்கிளில் வந்து சேர்ந்தார்.

தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கிற பொழுது சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே வந்து என்னிடம் சாவியை கொடுத்து சைக்கிளை எடுத்துக்கொண்டு அலுவலகத்தில் நிறுத்திவிட்டு மாநில தலைமைக்கு தகவல் சொல்லிவிட்டு நீங்கள் சென்னைக்கு புறப்படுங்கள் என்று சாவியை என்னிடம் கொடுத்தார். நான் வாங்க மறுத்து விட்டேன் இந்த போராட்டத்தில் நான் இங்கே தான் இருப்பேன் என்று சொல்லி மறுத்துவிட்டதால் தோழர் நன்மாறன் அவர்களிடம் சைக்கிள் சாவியை ஒப்படைத்து மாவட்ட குழு அலுவலகத்திற்கு சென்று தகவல் தெரிவிக்க அனுப்பி வைத்தார்.

தோழர் வன்னியன் என்ற வாலிபர் சங்க தோழரை பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சூழ்ந்து கொண்டு அரண் அமைத்து தார் சாலையில் போட்டு அடித்துக் கொண்டிருந்தனர். நானும் மோகனும் தடுப்பதற்கு முயற்சி செய்த பொழுது, தோழர் லீலாவதி உட்பட பல பெண்கள் காவல்துறையின் அரணை உடைத்து உள்ளே புகுந்து வன்னியனை அடித்ததடிகளை தடுத்திட அவர்மேலே படுத்து முறியடித்தனர்.

வன்னியனின் சட்டையை கழட்டிப் பார்த்தால் கழுத்தில் இருந்து உள்ளங்கால் வரை வரியாக இரத்தக் கலரில் காயங்கள் இருந்தன. அந்தக் காட்சி என் கண் முன் இன்று வரை அகலவில்லை அவர் மேலே படுத்த பெண்கள் மீதும் தடியடிகள் விழுந்தது. மோகனுக்கும் எனக்கும் கால்களில் தடியடி விழுந்தது.

தோழர் விக்ரமன் மண்டை உடைந்து தையல் போடப்பட்டது. சிம்மக்கல் வீரமுத்துவிற்கு மண்டை அடிபட்டது, அண்ணா தோப்பு முத்து கைஉடைந்து ஆறு மாத காலம் அவருக்கான வைத்தியத்தை அந்த கிளை பார்த்துக் கொண்டது. தோழர்கள் அண்ணாதுரை முருகேசன், செல்வகுமார், சிவகுமார் உட்பட 25 தோழர்களுக்கு  பலத்த ரத்தகாயம் ஏற்பட்டது. 28 பெண்கள் உட்பட 72 தோழர்கள் கைது செய்யப்பட்ட பெண்கள் தவிர பாக்கியம், மோகன் உட்பட 44 தோழர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 9 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டு செல்லூர் காவல் நிலையத்தில் கையெழுத்து போடப்பட்டது.

சிறைச்சாலையில் 9 நாட்களும் மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. தோழர் மோகன் மதுரை சிறையில் இருந்து நமது தலைவர்கள் அனுபவித்த கொடுமைகளை விரிவாக எடுத்துப் பேசினார். அப்போது சிறைச்சாலையில் இருந்து ஒருவரை விடுதலை செய்தால் சிறைச்சாலையின் பிரதான வாயில் வரை இரு பக்கமும் காண்விக்ட் வார்டர்களும், காவலர்களும் தடியை வைத்து அடித்து துரத்துவார்கள். இனிமேல் இங்கு வரக்கூடாது என்று சொல்லி அடிப்பார்கள். அடி குறைவாக விழுவதற்காக பலரும் வேகமாக ஓடி வருவார்கள். நமது தலைவர்கள் அதை எதிர்த்து நடத்திய போராட்டத்தை மோகன் விளக்கினார். சிறைச்சாலையின் கொடுமைகளை உள்ளே இருக்கும் நிலைமைகளை பலரிடம் நான் உட்பட பேசிய போது இது எல்லாம் வெளியே பேச வேண்டாம் என்று சிறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

சிறையில் இருந்து எங்களுக்கு பிணையில் வெளி வருவதற்கான முயற்சிகளை மாநில   செயலாளர் டி.ரவீந்திரன் அவர்களும் தோழர் இரா.லெனின் அவர்களும் மேற்கொண்டனர்.

இந்த தடியடி காவல்துறை தாக்குதல்கள் அனைத்து பத்திரிகைகளின் பேனர் செய்திகளாக மாறியது. தடியடி நடந்த உடனேயே நெல்லை, ஓசூர் மற்றும் பல தாலுகாக்களில் மறியலும் ஆர்ப்பாட்டமும் தன்னெழுச்சியாக நடைபெற்றது. பெரும்பாலான இடைக்கமிட்டிகளில் கையெழுத்து போஸ்டர்கள் பேருந்துகளில் நிரம்பி வழிந்தது.

மாநில குழு அறைகூவலுக்கு இணங்க ஜூன் 5-ம்தேதி 153 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 15000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

நீண்ட காலத்திற்குப் பிறகு மதுரை மண்ணில் வாலிபர் சங்கம் நடத்திய மாபெரும் போராட்டம் முத்திரை பதித்த போராட்டமாக அமைந்தது. அந்த போராட்டம் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனையின் சீர்கேடுகளை கண்டித்து இயக்கம் நடத்துவதற்கான தூண்டுகோலாக அமைந்தது. போராட்டத்திற்குப் பிறகு ராஜாஜி மருத்துவமனைக்கு அரசு கூடுதலாக நிதி ஒதுக்கி மேம்படுத்தப்பட்டது. மதுரை மக்களின் மறக்க முடியாத நினைவாக இது மாறியது.

தோழர் மோகன் அவர்கள் கட்சியின் மாநில குழு உறுப்பினராக, மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக, இருந்து பணியாற்றியவர். மாநில வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர், நிர்வாகியாக செயல்பட்டவர். அவரது பணிகள் எத்தனை முகநூல் பக்கத்தில் எழுதினாலும் அது நிறைவடையாது. காரணம் மோகன் அவர்கள் முகநூல் வழியாக கட்டமைக்கப்படாத, மக்களின் நேரடி தொடர்புகளால் கட்டமைக்கப்பட்ட தலைவராக செயல்பட்டார்.

கோரிப்பாளையத்தை கடந்து செல்கிறது அந்த சதுக்கத்தில் இரண்டு மணி நேரம் நடைபெற்ற அந்த போராட்ட களத்தில் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஓடிக்கொண்டே இருந்தது.இந்த சம்பவம் நடந்த பிறகு அந்த மாத இளைஞர் முழக்கத்தில் வசந்த கோகிலன் எழுதிய கவிதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அ. பாக்கியம்.

"அது" களுக்கு தெரியாது

நம் தோழர்கள் சிந்திய ரத்தம்

எத்தனை உயிர்களை

எமனிடமிருந்து மீட்டிருக்கும் என்று.

 

முறிந்த எம் தோழர்களின்

முழங்கைகள்

வெள்ள நிவாரணப் பணிகளில்

எத்தனை குடும்பத்தை

கரை சேர்த்து இருக்குமென்று.

 

போக்குவரத்து நெரிசலில்

நசுங்கி செத்தால் என்ன

எங்கள் முதல்வர்

ஹெலிகாப்டரில் அல்லவா

தோழியோடு பயணிக்கிறார்.

 

அரசு ஆஸ்பத்திரியில்

மருந்து இல்லாவிட்டால் என்ன

எங்கள் முதல்வர்

மருத்துவம் பார்க்க

அமெரிக்கா செல்வார்

 

போக்குவரத்து நெரிசலில்

அரசு ஆஸ்பத்திரிகளில்

பாதிக்கப்படுவது போலீசும் தான்

"அது"களுக்கு தெரியாதா என்ன?

 

ஏசி கக்கூசை

காவல் காப்பவர்களுக்கு

ரத்தவாடை

ரசிக்கும்படி இருந்திருக்கிறது

 

மாதர்களின் உடல்

லட்டியால் உரித்து எடுக்கப்பட்டது

உள்ளமோ

வார்த்தைகளால்

மானபங்கப் படுத்தப் பட்டது

 

பன்றியின் மலக்குடலில்

ஜனித்த ஜென்மங்களுக்கு

தாய்மையின் மகத்துவம்

தெரிந்திருக்க நியாயமில்லை

 

சட்டமும் ஒழுங்கும்

கெடவே கூடாது

டான்சி நிலத்தை

சுருட்டிய சட்டமும்

ஜெ சசி உறவின்

ஒழுங்கும்

கெடாமல் இருக்க

தொடர்ந்து பாதுகாப்பு கொடுங்கள்.

 

ஒன்று மட்டும் உறுதி

இந்த ஆட்சியின்

இறுதி யாத்திரைக்கு

மே 31 மதுரையில்

மரண ஓலை வாசிக்கப்பட்டு விட்டது.

வசந்தகோகிலன்

 

 

நிரூபன் கணேசன்

உறுதிமிக்க போராட்ட வரலாறை படிக்கும்போது புரட்சிகரமான உணர்வால் எழுப்பபட்ட நமது இயக்கத்தின் பாரம்பரியத்தை புரிந்துகொள்ள முடிகிறது. நெகிழ்ச்சியான அனுபவ பகிர்வு. மகத்தான போராளிகள் மோகன், நன்மாறன் போன்றோரின் தியாகத்தால் உருவாக்கப்பட்ட வரலாற்றை தொடர்ந்து முன்னெடுப்போம். சிறை அனுபவத்தையும் எழுதுங்கள் தோழர்..

 சிம்மக்கல் வீரமுத்து சிம்மக்கல் வீரமுத்து

அந்த மாபெரும் போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுடன் நானும் ஒருவன் என்றுமே மறக்க முடியாத போராட்டக் களம் அதுஏனென்றால மே மாதம் 31ந்தேதி எனது பிறந்த நாளில் நடந்த போராட்டம்எனது உடலிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிய கட்சி அலுவலகம் வந்து சேர்ந்தேன் தோழர்களின் உதவியோடு இந்த பதிவு செய்த உங்களுக்கு

வாழ்த்துக்கள் தோழர்

 ஆண்டனி பால்

பாடப்படாத ஹீரோக்கள். மோகன், நன்மாறன் போன்ற அண்மைக்காலத் துணிச்சலான தலைவர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதப்பட வேண்டும். அவசியம் பதிவு.

 தினேஷ் குமார் எஸ்

இப்படிப்பட்ட வரலாற்று போராட்டங்களை இன்று நாங்கள் முகநூல் பதிவு மூலம் அறிய முடிகிறது தோழர்.... அடுத்து வரும் புதிய தோழர்களை அறியச் செய்வோம்

எம் பாரதி

அன்றைக்கு சிறையிலிருந்து 45தோழர்களில் எத்தனை பேர் தற்போது கட்சியின் உறுப்பினர்களாக உள்ளனர்? தோழர் விக்ரமனிற்க்கு அடி பட்டது உண்மை. தையல் போடும் அளவிற்கு கிடையாது.மேலும் பல தோழர்கள் போலீஸ் தாக்குதலுக்கு ஆளாகி கைதாகாமல் வீட்டில் மருத்துவ சிகிச்சையில் இருந்தனர்

 எம் சுந்தரம் தரம்

௮து சரி . கட்சியின்23 வது மாநில மாநாடுமதுரையில் ௭ந்த இடத்தில் நடைபெற்றது விளம்பரத்திலும் பதிவிலும் இடம் பெறவில்லையே ஏன் ?

 தனராஜ்

நீங்கள் எழுதுகிற எழுத்துகள் நாளைய

தலைமுறைக்கு அனுபவத்தையும் போராட்ட குணம் ஏற்படும் எனவே நாளைய தலைவர்களை உருவாக்க உங்கள் பதிவுகள் முக்கியமாக பார்க்கிறோம் தோழர் ...

 கார்த்தி ரெட்கார்த்தி

விளம்பர யுக்தி மற்றும் சினிமா நடிகர்களால் தான் திராவிட கட்சிகள் ஆட்சி யை பிடித்தன

கம்யூனிஸ்டுகள் நடிகர்கள் அல்ல என்பதை 1995 ஆம் ஆண்டு மதுரை மக்கள் அறிந்து தான் வெற்றி தான் மறைந்த எம்.பி மோகன் அவர்களை மக்கள் மக்களவைத் தலைவராக/

 Vasudevan Arimuthu அப்போதய ஆட்சி யாளர்பற்றியும் கூறுக

 Kandasamy Kumaravel இந்த போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு கோரி தொடர் போராட்டம் நடந்தது . போராட்டத்தினால் தலைவர்கள் உருவானார்கள்.

 ராமச்சந்திரன் எஸ் போன்ற பதிவுகள் தொடரட்டும் தோழர்.

சுவாமிநாதன் ராமன் மிகவும் நெகிழ்ச்சியான பதிவு தோழர். வரலாற்று அனுபவங்களை விரிவாக எடுத்துச் செல்ல வேண்டும். நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

 ரமேஷ் பாபு தொடர்ந்து உங்கள் அனுபவங்கள் எழுத்துக்கள் தோழர்

 Narasimhan Sankariah தமிழகத்தில் நடந்த வாலிபர் இயக்கத்தின் போராட்டங்களில் ஓருமழை கல் இந்த போராட்டம்.போராட்ட களத்தில் நின்றவர்கள் பின் சிறந்த மக்கள் ஊழியர்களாக உருவாகினர்

 Thangaraj Woodwork வரலாறு படைத்த தோழர்களை வாழ்த்துவோம்

B R முரளி சிறப்பான பதிவு தோழர்

சு போ அகத்தியலிங்கம் மிக நல்ல பதிவு

ராஜா கலைஞர் இந்திராய தெய்வானை பதிவு !

 அருள்ராஜ் இளங்கோவன் அந்த போராட்டத்தில் தாக்குதலுக்குள்ளான தோழரை மாநில மாநாட்டு அரங்கத்தில் பார்த்தேன் அப்போது இந்த போராட்டம் நினைவுக்கு வந்தது. நீ அந்த போராட்டத்தை நினைவுபடுத்திவிட்டாய், இந்த போராட்டத்தின் போது நானும் ரவீந்திரனும் dyfi cec கூட்டத்திற்கு சென்றிருந்தோம்.நீ விமானம் மூலம் கூட்டத்திற்கு வந்தாய் போராட்ட களத்தில் இருந்து வருகிறார் என சலீம் cec கூட்டத்தில் கூறினார்

 மோகன்ராஜ் மாணிக்கம் வரலாற்றின் அடிச்சுவடுகள் பின்னோக்கி பார்க்கும் போது மனதிற்கு மகிழ்வை அளிக்கிறது. களம் பல கண்டுகளப் போராளியாகத் திகழ்வது மட்டற்ற மகிழ்ச்சியே,தங்கள் பணி இன்னும் இச் சமூகத்திற்கு தேவைபடுகிறது. அவ்வகையில் தாங்கள் மார்க்ஸ் லெனின் காட்டிய பாதையில் புதிய பாரதம் படைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் பலம் வயந்த கட்சியாக திகழ்ந்த சபதம் ஏற்று லட்சிய பாதையில் பணியாற்றி வாழ்கிறோம்.

 நெல்சன் பாபு ஆண்டனி கண்காட்சியில் இடம் பெறச் செய்ய வேண்டிய நிகழ்வு

கருமலையான் தொடர்ந்து இந்த மாதிரியான போராட்டத்தை பற்றி எழுத வேண்டும் தோழரே

தங்கமணி.மு. போராட்டம் இல்லாமல் யாராட்டமும் செல்லாது! 

கந்தசாமி குமரவேல் இளைஞர் முழக்கம் A8 சைசுக்கு மாற்றி கலர் அட்டையில் கொண்டு வருவது என முடிவு எடுக்கப்பட்டது பழனியில் 1991 ஜனவரியில் நடந்த பிராக்ஷன் கூட்டத்தில் அன்றுதான்.நான் மறைந்த சக்தி கணபதியும் பாண்டியும் தொண்டராக வர சொன்னார்கள். ஈராக் போர் துவங்கியது இந்த கூட்டத்தில் அகத்தியலிங்கம் ரவி நீங்கள் பாண்டி ராஜகோபால் கருமலையன் ஜீஆர் தஞ்சை மார்க்ஸ் கலந்து கொண்டனர்

 மீனாட்சி சுந்தரம் அருமையான அந்த பதிவு இளைஞர்களை திரட்டும் கருவியாக இளைஞர் முழக்கம் இருந்தது. அதுபற்றியும் குறிப்பிடவும்

 ராஜமாணிக்கம் வரதராஜன் நேரடி தொடர்புகளால் கட்டமைக்கப்பட்ட மக்கள் தலைவர் மோகன். அருமையானபதிவு தோழர்.

 ஆனந்தன் நந்தன் பணியைத் துவக்கிவிட்டீர்கள் தோழர் ஈபி. மகிழ்ச்சி .வாழ்த்துக்கள் களப்போராட்டத்தாலும் அர்ப்பணிப்பு மிக்க தோழர்க ளின் தியாகத்தினாலும் கட்டமைக்கப் பட்டது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்கிற வரலாற்றுத் தரவுகளைத் தொடர்ந்து எழுதுங்கள் தோழர். நன்றி.

 லெனின் சகாப்தம் தோழரே! தேதி மாறவேண்டும். நடந்தது மே - 31-ம் தேதி

 Hari Krishnan இளம் தலைமுறைக்கு பயனுள்ளதாக அமையும். காலத்தின் தேவை அறிந்து உணர்வு பெற்ற போராளிகளாக களம் காண தொடர்ந்து எழுதுங்கள் தோழர் எங்களை அர்ப்பணித்துக் கொள்வோம்.

 புஷ்பராஜ் வாலிபர் சங்கம் 80, 90 ஆண்டு வளர்ச்சியில் தோழர் நன்மாறன் K.CK தோழர் SP தோழர் பாக்கியம் தோழர் திராவிடன் மேலும் பல என் போன்ற குட்டி தலைவர்களுக்கு பங்குண்டு என்று நினைக்கும்போது தோழர் V.MSஉந்துசக்தியாக செயல்பட்டார் என்பதை மறக்கமுடியாது தோழர் SP நீங்கள் தொடர்நது DYFI ன் வரலாற்றை எழுதினால் இப்போது உள்ள இளம் தோழர்களுக்கு இது பயன்படும்.

தாரைப்பிதா சிறப்பு... எங்கும் நோக்கினும், எதிலும் அர்ப்பணிப்புமிக்க பணிகளால் கடந்த 40 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது தங்களைப்போன்றோரின் வாழ்க்கை. வீரமிகு நினைவலையிது.

 மணிவண்ணன் மணி நீங்கள் தமிழ் மாநில செயலாளராக இருந்தபோது 1991-ல் புதுச்சேரி அமைச்சர்களுக்கு எதிராக வாலிபர் சங்கம் கறுப்பு கொடிப்போராட்டம் .. அப்போது தோழர். புவனேசன் புதுச்சேரி செயலாளர்.தடியடி ...சிறை... தேசிய அளவில் செய்தி பரவியது...

 கோபால்சாமி அப்பாசாமி தோழர் நன்மாறன் அவர்கள்சொற்போரில் எறினா ரெயில் இறங்கின ஜெயில் என்பார் பெருமையில்லா தோழர்

ராஜன்குமார் இரு பெரும் தலைவர்களும் மக்கள் மனதை வென்றவர்கள்

KG Baskaran வரலாறுகளை பதிவு செய்வது முக்கியம். தொடர்ந்து எழுதுங்கள்

ரமேஷ்பட் பேசுவோம் வாங்க போராட்டத்தழும்பேறிய தியாகிகளுக்கு நெஞ்சார்ந்த வீரவணக்கம்

RTMuthu லால்சலாம்.இந்த சம்பவம் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்ததா? காவல்துறையின் அரணை உடைத்த லீலாவதி, சிறைவாசத்தில் கனல் மூட்டிய தோழர் மோகன், தோழர் நன்மாறன் போன்ற தோழர்களுக்கு வீரவணக்கம்.நீங்கள் இதை தெளிவாக பின்னணி சொல்லி, செய்தி நறுக்குகள் படங்கள் இருந்தால் பயன்படுத்தி சிறு நூல் ஒன்றை எழுதுங்கள்

 

Mevai Raja அருமை, தோழர்...இது போன்ற ஏராளமான வரலாறு சம்பவங்கள் மறைந்து போய் விடும். எழுதுங்கள், புதியதலைமுறைக்கு தெரியாமலே போய் விடும்.

Balasupramaniyan Vnr மறக்க முடியாத தோழர்கள் எத்தனையோ நினைவுகள் வீரவணக்கம் தோழர்களே Rama Moorthy தியாகத்தால் வளர்ந்த தியாகிகள்

எம் துரைப்பாண்டியன் முத்துசாமி போராட்டமே வாழ்க்கையாக வாழ்க்கையே போராட்டமாக புதிய புதிய இலக்குகளும் புதிய புதிய போராட்டங்களுமாக வாழ்க்கை நீண்டு கொண்டே போகிறது. வீரஞ்செரிந்த அனுபவங்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டன.

Vijayakumar.M "களப்போராட்டங்கள்" எனும் தலைப்பில் புத்தகமாக் குங்கள்

வாசுதேவன்

தோழர் பாக்கியம் அவர்கள் பதிவுக்கு நன்றி!

1ம் தேதி மாநாடு முடிந்து தோழர்கள் இரவு ரயில் நிலையம் போக காத்திருந்தனர். பல தோழர்கள் மாநாட்டு நுழைவாயில் படிகளில் அமர்ந்து இருந்தனர். , என்னோடு வெள்ளை வேஸ்டிகட்டிய, தடித்த தேகமுடைய இடதுகாலை ஊன்ற முடியாமல் ஊன்றி நடந்துவந்தார் |மாநாட்டு கொடிமரத்தை கழட்டி வேனில் ஏற்றி போக்குவரத்து TNSTC அலுவலகத்திற்க்கு அனுப்பப்பட்ட அந்த இரவு நேரத்திலும் உதவி செய்துகொண்டிருந்தார்.

அந்த தோழர். அங்கே அமர்ந்து இருந்த வெளிமாவட்ட தோழர்களை தோழரே எழுந்திருங்க |கொடி மரம் சாய்ந்து மேலே விழுந்துவிட்டால் ஆபத்து என்று செல்லிக்கொண்டே உட்காரவே முடியாமல் உட்கார்ந்து கீழே கட்டப்பட்ட கட்டை அவிழ்த்துகொண்டே நான்தான் நேற்றும் கட்ட வெண்புறாவுக்கு உதவினேன் என கூறி, அந்த கொடிமரத்தை ஓரமாக தூக்கி வைக்க.உதவினார். நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் நான் வேனில் அனுப்பிவிட்டு போகிறேன் என சொன்னார். என் மனம் கேட்கவில்லை. 9 மணிதானே ஆகிறது. டீ சாப்பிடலாம் என சாப்பிட்டுவிட்டு விடைபெற்றேன்.அந்த நபர்தான் வன்னியன். முதுகெல்லாம் வார், வாராய் காவலர்களால் தாக்கப்பட்டவன்னியன். வன்னி என்று எங்களால் அழைக்கப்படும் நரிமேடு பகுதியை சேர்ந்த வன்னியன்.





தனராஜ்

நீங்கள் எழுதுகிற எழுத்துகள் நாளையதலைமுறைக்கு அனுபவத்தையும் போராட்ட குணமும் ஏற்படும் எனவே நாளைய தலைவர்களை உருவாக்க உங்கள் பதிவுகளை முக்கியமாகப் பார்க்கிறோம் தோழர் ...

 

 

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...