Pages

வியாழன், நவம்பர் 27, 2025

48 திபெத்: உலகின் கூரையில் ஒழிக்கப்பட்ட வறுமை

 



அ.பாக்கியம்

வருமானத்தை சமமாக

பங்கிடாமல்

வறுமை ஒழிப்பு பற்றி

பேசுவது பயனற்றது.-

 ஜி சின் பிங்

 

சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீன மக்கள் குடியரசின் வெற்றியின் மூலம் உலகின் கூரை என்று அழைக்கப்படுகிற திபெத்தில் வறுமை ஒழிப்பின் ஒளி பிரகாசமாக எரியத் தொடங்கியது. உயிர் வாழ்க்கை மலைகளின் உச்சியில் இருந்தாலும், வாழ்வாதாரம் படு பாதாளத்தில் கிடந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வறுமையே வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள் புரட்சிக்கு பிறகு வளமையின் செழிப்பை அறியத் தொடங்கி விட்டார்கள்.

2012 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18 வது தேசிய காங்கிரஸ் நடைபெற்றது. இந்த காங்கிரஸில் சீனா முழுவதும் வறுமை ஒழிப்பை தீவிர படுத்துவதற்கான விரிவான திட்டம் தீட்டப்பட்டது. அதிலும் குறிப்பாக மிகவும் பின்தங்கிய திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் வறுமையை ஒழிப்பதற்காக கூட்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கட்சி காங்கிரஸ் முடிவெடுத்தது. இதற்காக சிறப்பு திட்டங்களை உருவாக்கினார்கள். தொடர்ந்து ஐந்தாண்டு காலம் உருவாக்கிய திட்டங்கள் அமுலாக்கிய விதங்கள் பற்றியும், தேசிய அளவில் கூட்டங்களை நடத்தி பரிசீலனை செய்து மேலும் காலத்துக்கேற்ற மாற்றங்களை செய்து வந்தனர். மேற்கண்ட கட்சி காங்கிரஸில் சீன நாட்டில் இருக்கக்கூடிய அரசுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் திபெத்தின் வளர்ச்சிக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தது. இதனைத் தொடர்ந்து 13-வது ஐந்தாண்டு திட்டத்தில் (2016-2020) விபத்தில் வறுமை ஒழிப்பதற்காக குறிப்பான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு அதை நோக்கிய முன்னெடுப்புகள் தீவிர படுத்தப்பட்டன

திபெத் பிராந்தியத்தில் வறுமையில் வாழக்கூடிய மக்களின் துல்லியமான கணக்கு எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து. இதற்கான அதிகாரிகளை ஒருங்கிணைக்க அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அதிகாரிகள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு திபெத்தின் மூளை முடுக்கெல்லாம் சென்று வறுமையின் உண்மையான நிலைமையை சேகரித்தனர். மிகவும் சவால் நிறைந்த பகுதிகளுக்கு இந்த அதிகாரிகள் சென்று விவரத்தை சேகரிக்கிற பொழுது சிலர் தங்கள் உயிரையும் விட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை மூலமாக 70 பக்கத்திற்கான செயல்திட்டத்தை திபெத்திய பிராந்தியத்தில் அமுலாக்க வரையறுத்தனர்.

வறுமை என்பது வாய்க்கும் வயிற்றுக்குமான பிரச்சனை மட்டுமல்ல. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள குடியரசு வறுமை ஒழிப்பு என்பது பொருளாதார நடவடிக்கைகளை அதிகப்படுத்துவது, வாழ்வதற்கு தகுதியற்ற இடங்களை கைவிட்டு புதிய இடங்களுக்கு செல்வது, கல்வியின் மேம்பாடு சுற்றுச்சூழல் மேம்பாடு சமூக பாதுகாப்பு என ஐந்து தளங்களில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்று துல்லியமாக முடிவெடுத்தது. வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி, மிகவும் இணக்கமான வாழ்க்கை, வேலை வாய்ப்புகள், வசதியான உள்கட்டமைப்பு, மிகவும் அடிப்படையான பொது சேவைகள் ஆகிய அனைத்தும் கிடைக்கும் பொழுதுதான் ஒருவர் முழுமையாக வறுமையில் இருந்து விடுபடுகிறார் என்று அர்த்தமாகும் என சீன மக்கள் குடியரசு முடிவெடுத்து அமலாக்கியது. ஆகவே திபெத்தில் வறுமையை ஒழித்து விட்டார்கள் என்றால் இந்த அனைத்து வசதிகளுடனும் கூடிய வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று தான் அர்த்தம்.

இந்தத் திட்டத்தை அமல்படுத்த களத்தில் இறங்கிய பொழுது திபெத்தில் உள்ள 74 மாவட்டங்களில் 6,28,000 லட்சம் ஏழைகள் வறுமையில் வாடுகிறார்கள் என்று கணக்கிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு இறுதியில் முற்றிலுமான வறுமை ஒழிக்கப்பட்டது. திபெத்திய வரலாற்றில் முதல்முறையாக வறுமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இஷ்டப்பட்ட இடமாற்றம் 

 

திபெத்திய வறுமை ஒழிப்பு திட்டத்தில் இதுவரை எங்கும் கடைப்பிடிக்காத ஒரு பகுத்தறிவு பூர்வமான திட்டம் கடைபிடிக்கப்பட்டது. கணிசமான மக்கள் மிக உயர்ந்த, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழ்ந்தார்கள். சீதோஷன நிலை மிகவும் துன்புறுத்தக் கூடியதாக இருந்தது. இந்த மக்களுக்கு வறுமை ஒழிப்பு என்றால் உணவை எளிதில் வழங்கி விடலாம். ஆனால் அது மட்டும் வறுமையை ஒழித்து விடாது என்ற நோக்கத்தில் செழிப்பான பகுதிகளுக்கு கிராமங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். சிறந்த உள் கட்டமைப்புகளும் வேலை வாய்ப்புகளும் உருவாகக்கூடிய பகுதிகளுக்கு மாற்றினார்கள். இந்த இடம் மாற்றத் திட்டத்தில் 965 கிராமங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் 2,66,000 லட்சம் மக்கள் புதிய இடங்களில், புதிய வீடுகளில், புதிய வசதிகளுடன் குடியமர்த்தப்பட்டார்கள். இந்தத் திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அமலாக்கினார்கள்.

திட்டத்தைப் பற்றி தெரிவிக்கிற பொழுது கிராமத்தில் இருந்த சில பெரியவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியே வருவதற்கு மறுத்து விட்டனர். கிராமத்திலிருந்து வயது குறைவானவர்கள் வேறு இடங்களுக்கு செல்வதில் ஆர்வமாக இருந்தனர். எனினும் வரமறுத்த பெரியவர்களையும் மற்றவர்களையும் புதிய இடங்களை காண்பித்தும், அங்கு இருக்கக்கூடிய வசதிகளையும், வேலை வாய்ப்புகளையும் தெளிவான முறையில் எடுத்துரைத்த பிறகு தன்னார்வத்துடன் இடம்பெயர ஒத்துக் கொண்டார்கள். விவசாயிகளும், மேய்ப்பர்களும் திபெத்திற்கு உள்ளேயோ அண்டை மாநிலங்களிலோ வேலை செய்வதற்கு ஆர்வமாக இருந்தார்கள். உள்ளூர் மக்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த ஊருக்கு வெளியே வேலை செய்து புதிய திறமைகளை கற்றுக் கொள்வதற்கும் விருப்பத்தை தெரிவித்தார்கள்.

இதற்கான உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்போது மக்கள் கூடுதலான முறையில் இடமாற்றம் தேவை என்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அரசு அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான வாழ்வாதாரத்தையும் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அரைகுறையான பணிகள் மக்களின் வறுமையை ஒழிக்காது என்ற காரணத்தினால் முழுமையான முறையில் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தீபத்திய தலைவர் தெரிவிக்கிறார். வறுமை ஒழிப்பில் இது ஒரு புதிய முயற்சியாகும். இந்த இடப்பெயர்வுகளை முதலாளித்துவ பத்திரிகைகள் மக்களை சொந்த ஊர்களில் இருந்து வெளியேற்றுகிறார்கள் என்று ஊதி தள்ளுகிறார்கள் உண்மை இதற்கு நேர்மாறானது.

தரமான விவசாயமும் வருமானமும்

 

வறுமையை ஒழிக்க மற்றொரு முயற்சி விவசாயத் துறையில் எடுக்கப்பட்டது. பாரம்பரியமான விவசாய கருவிகளை வரலாற்றின் ஒரு பகுதியாக ஒதுக்கி வைத்துவிட்டு புதிய இயந்திரங்களின் மூலம் விவசாயத்தில் ஈடுபட்டனர். இதன் பிரதான அம்சமாக நிலங்களின் தரத்தை உயர்த்தினார்கள். உயர்தரமான விவசாய நிலங்களை உருவாக்கினார்கள். இக்காலத்தில் பிரதான பயிர்களை வளர்ப்பதற்கு ஏற்ற நிலங்கள் 65% இயந்திரமயமாகியது.

இதன் விளைவாக தரப்படுத்தப்பட்ட கால்நடை பண்ணைகளும், கோழி வளர்ப்புக்கான பண்ணைகளும் அனைத்து மாவட்டங்களிலும் உருவானது. இவை இரண்டுக்குமான சேவை மையங்களும் அனைத்து மட்டத்திலும் அமைக்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சிக்கான சரியான பாதையை கண்டறிய உள்ளூரில் இருக்கும் கச்சா பொருட்களை முதலில் பயன்படுத்தி தொழிலை உருவாக்கினார்கள்.

பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க சாங் கிங்2000, ஜிமாலா22 போன்ற உயர்நில பார்லி இனங்களை நவீன முறையில் பயிரிட்டு விளைச்சளை அதிகரித்தார்கள். இவற்றுடன் கூடவே கால்நடை எண்ணிக்கைகளை அதிகப்படுத்துவதற்காக குறிப்பாக பகிரியாக், ரிவோக் யாக் போன்ற காட்டு எருதுகளும், செம்மறி ஆடுகள் ஆகியவற்றின் வளர்ப்பிலும் புதிய முறைகளை புகுத்தி நவீனப்படுத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக புதிய கிராமப்புற கூட்டு பொருளாதார அமைப்புகளின் எண்ணிக்கை 6,172 என்ற அளவு உயர்ந்தது. கூட்டுறவு அமைப்புகளின் உயர்வு விவசாய உற்பத்தியையும் உயர்ந்தது.

வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 4 தொழில் துறை க்ளஸ்ட்ரஸ், ஏழு தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. விவசாயம் சார்ந்த தொழில்களை உருவாக்குவதற்காக 18 நகரங்களை தேர்ந்தெடுத்து அதில் இருக்கக்கூடிய மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினார்கள். விவசாயம் சார்ந்த தொழிற்கருவிகளை உற்பத்தி செய்யக் கூடியதாக இந்த 18 தொழில் நகரங்களும் அமைந்தது. வறுமையால் வாடிய கிராமப்புறத்தில் மக்கள் தங்கள் சொந்த கிராமத்தில் இருந்து வெளிப்பகுதிகளுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். மேற்கண்ட தொழிற்துறை பூங்காக்கள், விவசாயம் சார்ந்த தொழில்களின் மூலமாக இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு வேலை கிடைத்தது. இதற்கு மேலாக வெளியில் வந்து வேலை செய்ய முடியாத மக்களுக்காக வீடுகளிலோ அல்லது அதற்கு அருகாமையிலோ வேலை செய்யக்கூடிய வகையில் வாய்ப்புகளை வழங்கும் விதமாக 173 பாரம்பரியமான கலாச்சார தொழிற்பட்டறைகள் கட்டி வேலைவாய்ப்பை வழங்கினார்கள்

உற்பத்தியையும் விநியோகத்தையும் இணைக்க கூடிய வகையில் தொழில்துறை சங்கிலிகளை விரிவு படுத்தினார்கள். 2020 ஆம் ஆண்டில் 162 முன்னணி விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு நிறுவனங்கள் இருந்தன. இவற்றின் செயல்படும் முதலீட்டு மதிப்பு 5.7 பில்லியன் யுவான் ஆகும். இது 2015 ஆம் ஆண்டை விட இரு மடங்கு அதிகமான தொகையாகும்.

பொருள் விநியோகத்திற்கு வழக்கமான சந்தைகளைக் கடந்து மின் வணிகத் திட்டங்களை மேம்படுத்தினார்கள். வறுமை ஒழிப்பின் மற்றொரு வேலைவாய்ப்பாகவும், பொருட்களின் விற்பனைகளை அதிகப்படுத்து வதற்கும் இந்த ஆன்லைன் விற்பனை முறைகள் பெரும் பங்காற்றியது. இவற்றை மேம்படுத்துவதற்காக திபெத் பிராந்திய அரசு தனது பட்ஜெட்டில் 897 மில்லியன் யுவான்களை ஒதுக்கியது. தொற்றுநோய் காலத்தில் மட்டும் திபெத் பிராந்தியத்தில் 27 மாவட்டங்கள் மின் வணிக தளங்களை உருவாக்கி 200 மில்லியன் யுவானுக்கு மேல் வணிகம் செய்தார்கள். இந்த வணிகத்தில் 263 க்கு மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்தப் பொருட்களை வறுமை ஒழிப்பு திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்று பட்டியலிட்டு விற்பனை செய்தனர். நகர்ப்புறங்களில். அருகாமை மாநிலங்களில் நுகர்வோர்கள் வறுமை ஒழிப்பிற்காக இந்த பொருட்களை வாங்க வேண்டும் என்ற முறையில் பொருட்களை வாங்கினார்கள். மேற்கண்ட 263க்கும் மேற்பட்ட வறுமை ஒழிப்பு தயாரிப்பு பொருட்கள் 150 மில்லியன் யுவான்களுக்கு மேல் குறிப்பிட்ட ஆண்டில் விற்பனையானது.

2016 ஆம் ஆண்டு முதல் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் வறுமை ஒழிப்புக்காக மட்டும் 75.4 பில்லியன் யுவான்கள் ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்பட்டது. உள்ளூர் வணிகங்களை மேம்படுத்துவதற்காக 307 வணிகத் திட்டங்களை அமலாக்கினார்கள். இந்த வகையில் 2,38000 பதிவு செய்யப்பட்ட ஏழைகள் மறுமையில் இருந்து மீட்கப்பட்டனர்.

சூரியனின் விதி மட்டும் அல்ல

 

கிழக்கில் உதித்து மேற்கில் மறைவது சூரியனின் நிகழ்வு.. சோசலிச பொருளாதாரத்தில் திட்டமிட்ட பொருளாதாரம் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை குறைப்பதற்கான ஒரு வடிவமாகும். வளர்ச்சி அடைந்த பகுதிகளை வளர்ச்சி அடையாத பகுதிகளுக்கு உதவி செய்வது என்பது திட்டமிட்ட பொருளாதரத்தின் பணிகளில் ஒன்று. இதன் மூலம் பிரதேச அளவிலான ஏற்றத்தாழ்வை குறைக்க முடியும். 1990 ஆம் ஆண்டின் நடுப்பகுதிகளில் சீனாவின் கிழக்குப் பகுதிகள் பெரும் வளர்ச்சி அடைந்தன. ஷாங்காய் உட்பட அவற்றை சுற்றி இருக்கக்கூடிய 10 பெருநகரங்கள் இந்த வளர்ச்சியின் மையமாக இருந்தது. இந்த வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் உதவியுடன் மேற்குப் பகுதியாகிய திபெத் பிராந்தியத்திற்கு உதவி செய்வதற்கான வறுமை ஒழிப்பு சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 19.52 பில்லியன் யுவான் மதிப்புடைய 313க்கு மேற்பட்ட திட்டங்களை திபத்தில் நிறைவேற்றினார்கள். கிழக்குப் பகுதியில் இருந்து நூற்றுக் கணக்கான மருத்துவர்கள், ஆசிரியர்களும் திபெத்திய பிராந்தியத்திற்கு வந்து உதவி செய்தார்கள். இந்த இணைப்பின் தொடர்ச்சியாக திபெத் பிராந்தியத்தை சேர்ந்த 8,000க்கு மேற்பட்டவர்கள் கிழக்கில் உள்ள நகரங்களுக்கு வேலைக்கு சென்றார்கள். இவர்களில் 5000 பேர்கள் பட்டதாரி இளைஞர்கள். இந்தத் திட்டத்தின் மூலம் திபெத்திலிருந்து படித்தவர்கள் கிழக்கில் இருக்கும் நகரங்களுக்கு வேலைக்கு செல்வது வாடிக்கையாக மாறியது. இது அவர்களின் பொருளாதார வளத்தை மேம்படுத்தியது.

மற்றவர்களின் நுகர்வும் ஏழைகளின் வயிறும்

 

Covid-19 காலத்தில் ஒட்டு மொத்த சீனாவிலும் மக்களை அதிகம் வாங்க வைப்பதற்காக கைகளில் பணத்தை கொடுத்து செலவழிக்க வைத்தார்கள் இதன் மூலம் கோவிட் காலத்தில் இயங்காமல் இருந்த தொழிற்சாலைகள் விவசாய தொழில்கள் அனைத்தும் இயங்கத் துவங்கியது. மீண்டும் பொருளாதார சுழற்சி ஏற்பட்டது. எனவே இதன் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணங்களில் உள்ள அரசு நிறுவனங்கள் மேற்குப் பகுதியில் உள்ள திபெத் உட்பட சில மாநிலங்களில் இருந்து பொருட்களை வாங்குவதன் மூலமாக திபெத்திய பொருளாதார சுழற்சியும் வேலை வாய்ப்பு பாதுகாக்கப்பட்டது. இதற்காக மேற்குப் பகுதியில் உற்பத்தியாக கூடிய பொருட்களின் தரச் சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டது அவற்றையே கிழக்கு மாகாண அரசு நிறுவனங்கள் வாங்கினார்கள் இதன் மூலம் 26. 43 பில்லியன் யுவான் பொருட்கள் விற்பனையானது.

வறுமை ஒழிப்பு திட்டத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உள்கட்டமைப்பு இருந்தாக வேண்டும். நீர், மின்சாரம், சாலைகள், தொலைத்தொடர்பு, இணைய வசதிகள்இ உள்ளிட்டவைகள் மேம்படுத் தப்பட்டன. திபெத்திய பிராந்தியத்தில் 17,581 குடிநீர் திட்டங்களை இக்காலத்தில் கட்டியிருக்கிறார்கள் இதனால் 20 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளும் கால்நடை வளர்ப்பும் பயனடைந்தார்கள். அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் கொடுப்பது, அனைத்து கிராமங்களையும் இணைக்கு வகையில் 38200 km புதிய சாலைகள், கிராமங்கள் தோறும் 5g இணையதளம் வழங்கக்கூடிய முறையில் பிராட் பேண்ட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தீபத்தில் உண்மையான வறுமை ஒழிப்பு என்பது இந்த அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாகும்.

வறுமை ஒழிப்பின் மற்றொரு நடவடிக்கை கல்வி வசதிகளை வழங்குவது. கட்டாய கல்விக்கு வரக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும் அனைத்தும் இலவசம் ஆகும். இடைநிலை தொழிற்கல்விக்கு ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்பட்டு இதுவரை 3,40,500 மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

தீபத்தில் வளர்ச்சியின் காரணமாக மக்கள் தொகையும் வளர்ந்து வருகிறது தற்போது 36 லட்சம் மக்கள் தொகை இந்த பிராந்தியத்தில் இருக்கிறது பழமையான கலாச்சாரங்களின் காரணமாக பெண்கள் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்ல மறுத்தனர். இதனால் தாய் சேய் இறப்பு விகிதம் பல மடங்கு அதிகமாகியது. திபெத்திய பிராந்திய அரசாங்கம் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு மருத்துவ வசதிகளை கர்ப்பிணிப் பெண்களுக்கு மானியங்களை வழங்குவதன் மூலம் பெண்கள் மருத்துவமனைக்கு செல்வதை ஊக்குவித்தார்கள். விஞ்ஞானபூர்வமான காரணங்களை விளக்கினார்கள். இதனால் மருத்துவமனையை நோக்கிய பிரசவங்களின் எண்ணிக்கை அதிகமானது. தாய் சேய் இறப்பு விகிதம் குறைந்தது

சில காலங்களில் மக்கள் பாதிக்கப்படுகிற பொழுது கூட அவர்கள் வறுமையில் வாழக்கூடாது என்பதற்காக இந்த பிராந்தியத்தில் மட்டும் 110 000 மக்கள் தேசிய குறைந்தபட்ச வாழ்வாதார மானிய திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கான குறைந்தபட்ச மானியங்கள் ஒரு நபருக்கு 4713 யுவானிலிருந்து 7070 யுவானாக உயர்ந்து தற்போது 13213 யுவான் என்ற அளவிற்கு வழங்கப்படுகிறது. காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ற முறையில் இந்த மானியங்களின் தொகை மாற்றி அமைக்கப்படுகிறது.

திபெத் என்றால் சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய இடம். எனவே இந்தத் துறையும் வேலை வாய்ப்பை வழங்க கூடிய துறை ஆகும். வறுமை ஒழிப்பின் ஒரு திட்டமாக பின்தங்கிய சில பகுதிகளில் சுற்றுலா தலங்களை மேம்படுத்தினார்கள். திபெத்திய கலாச்சார சுற்றுப்பயணம், சுய ஓட்டுனர் சுற்றுப்பயணம், குளிர்கால சுற்றுப்பயணம் போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்ட அமுலாகியது. இந்தத் திட்டங்கள் மூலம் கிராமப்புறங்களில் சுற்றுலாவின் வருகை அதிகமாகியது. கிராமங்களில் இருக்கக்கூடிய மக்கள் தங்கள் வீடுகளை குடும்ப விடுதிகளை திறந்து சுற்றுலாப் பயணிகளை தங்குவதற்கான உணவளித்து உபசரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான வசதிகளையும் பிராந்திய அரசாங்கம் செய்து கொடுத்தது. இதன் விளைவாக ஆண்டுக்கு 86 000 வேலை வாய்ப்புகள் உருவாகியது. தனிநபர் வருமானம் பல மடங்கு அதிகமாகியது. திபெத் பிராந்தியத்திற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு மூன்று கோடியே தாண்டுகிறது. கிராமப்புற சுற்றுலா மூலம் அடுத்த அடுத்த ஆண்டுகளில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளது. திபெத்திய பாரம்பரிய கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இருக்கக்கூடிய சிற்பக் கலைகள், ஜவுளி உடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், பிற கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை தயார் செய்வதன் மூலம் இருவகையான தேவைகளை பூர்த்தி செய்தார்கள் ஒருபுறம் இவைத்திய பாரம்பரியத்தை பாதுகாப்பது மறுபுறத்தில் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவது இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கலாச்சார தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பிற்காக கிராமங்களை வளமான பகுதிக்கு இடமாற்றம் செய்வதை மேலே படித்தோம். இதே நேரத்தில் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய பாழடைந்த வீடுகளை புதுப்பித்து வழங்குவதும், வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்தவர்களை மேம்படுத்துகிற அதே நேரத்தில் ஊனமுற்றவர்கள், அனாதைகள், விதவைப் பெண்கள் போன்றவர்களுக்கும் சிறப்பு குடியிருப்பு திட்டங்களை வழங்கினார்கள். திபெத்போன்ற பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய காலகட்டத்தில் அவற்றை தாங்கக் கூடிய முறையில் பழைய பாணியிலான வீடுகள் இல்லை. எனவே அவ்வாறு இருந்த வீடுகளை புதுப்பித்து சில கிராமங்களில் முற்றிலுமாக அகற்றிவிட்டு பூகம்பத்தை தாங்கும் சக்தி உடைய வீடுகளை கட்டினார்கள்.

2016 ஆம் ஆண்டு முதல் 2900 விற்கும் மேற்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களில் 39.89 பில்லியன் யுவான்களை செலவழித்து 2.5 லட்சம் மக்களை தீவிர வறுமையில் இருந்து மீட்டுள்ளார்கள். சராசரி ஆண்டு தனிநபர் செலவழிப்பு வருமானம் 2022 ஆம் ஆண்டு 13,800 யுவான்களை தாண்டி சென்றது.

தற்பொழுது திபெத்தில் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டு இருக்கிறது. துல்லியமாக எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி 628000 மக்கள் வறுமையிலிருந்து மீட்டெடுத்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். அனைத்து விதமான நவீன வசதிகளுடன் கூடிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் வறுமை ஒழிப்பு திட்டத்தின் அடிப்படையான தீர்வு என்பதை முடிவெடுத்து அவற்றை கடைநிலை மக்களுக்கும் கொண்டு சேர்த்து மேம்படுத்தி இருக்கக்கூடிய சாதனையை சீன சோஷலிசம் நிகழ்த்தியுள்ளது.

திபெத்திய சுதந்திரத்தைப் பற்றி உலகம் முழுவதும் பேசக்கூடிய ஏகாதிபத்தியவாதிகள், அங்கு இடம் மாற்றம் செய்யக் கூடிய விஷயத்தையும், வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுகிற பொழுது திபெத்திய மக்களை அடக்குகிறார்கள், வெளியேற்றுகிறார்கள் இயற்கையை சுரண்டுகிறார்கள் என்று பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள். உண்மை நிலைமை இதற்கு மாறாக இருப்பதினால் திபெத்திய மக்களை ஏகாதிபத்தியவாதிகளால் திசை திருப்ப முடியவில்லை.

அ.பாக்கியம்

 

புதன், நவம்பர் 19, 2025

47 திபெத்: மக்களுக்கான கல்வி, மருத்துவம், வேலை சமூக பாதுகாப்பு

 

அ.பாக்கியம்

சோஷலிச கொள்கையை ஏற்றிருக்கக் கூடிய ஒரு அரசு உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக என்றென்றும் பாடுபடும். திபெத்தில் உள்ள அனைத்து மக்களுக்கான சமூக பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தக்கூடிய கட்டமைப்புகளை சோஷலிச கொள்கையை ஏற்றுள்ள ஒரு அரசு உருவாக்கி உள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம், பொது சுகாதாரம், வாழ்விடம் என அனைத்து வகையிலும் ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்பை சீன மக்கள் குடியரசு திபெத்திய மக்களுக்கு வழங்கி உள்ளது. திபெத்திய பகுதியில் மிக உயர்ந்த தரமான உள்கட்டமைப்பை உருவாக்கிய அரசு மக்களின் உதவியுடன் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பையும் ஏற்படுத்தி உள்ளது

பூஜ்ஜியத்தில் இருந்து சதத்தை நோக்கி

திபெத்தை செம்படை விடுதலை செய்த பொழுது 95 சதவீதம் மக்கள் கல்வி அறிவற்றவர்களாக இருந்தார்கள். குறிப்பிடத்தக்க அல்லது விரல்விட்டு எண்ணக்கூடிய சில பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருந்தது. குறிப்பாக திபெத் பிராந்தியம் முழுவதும் வெறும் பத்து பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருந்தன. இந்தப் பள்ளிக்கூடங்களும் நிலப் பிரபுக்களுக்காக உருவாக்கப்பட்டவை.

அவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக மட்டும்தான் இந்த பள்ளிக்கூடம் பயன்பட்டது. ஏன் அவர்கள் படிக்க வேண்டும் ? எழுத்தறிவை தெரிந்து கொள்வதற்கும், கணக்குகளை புரிந்து கொள்வதற்கும், அரசுப் பணிகளை செய்வதற்கும் கடிதப் போக்குவரத்திற்காகவும் அடிப்படை கல்வி தேவைப்பட்டது தான். இதற்காக இந்தப் பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட்டன.

மேற்கண்ட பள்ளிக்கூடங்கள் தவிர ஆயிரக்கணக்கான திபெத்திய பௌத்த மடாலயங்கள் இருந்தன. இந்த மடாலயங்களில் கல்வி சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க மத தத்துவங்களை கற்றுக் கொடுப்பதாக இருந்தது. மதத் தத்துவத்துடன் திபெத்திய மருத்துவம், ஜோதிடம் போன்றவைகளையும் கற்றுக் கொடுத்தார்கள். இந்தக் கல்வியை கற்றவர்கள் தான் புத்த துறவிகளாகவோ அல்லது லாமாக்களாகவோ பட்டம் பெற்றார்கள். மடாலயங்கள் நடத்தும் இந்த கல்விக்கும் பொது மக்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அது நவீன மதசார்பற்ற கல்வியும் அல்ல. எனவே மடாலயங்கள் கல்வி கற்றுக் கொடுக்கும் இடங்கள் என்று இருந்தாலும் நடைமுறையில் பொதுமக்களுக்கான கல்வியறிவு பூஜ்ஜியமாகவே இருந்தது.

1950 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு புரட்சி வெற்றி பெற்றவுடன் சீன மக்கள் குடியரசு திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் ஒரு நவீன கல்வி முறையை உருவாக்கியது. பாலர் பள்ளிகள், தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள், தொழிற்கல்விகள், தொழில்நுட்ப பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், சிறப்பு கல்விகளை கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் என நவீன முறைகளை உள்ளடக்கிய கல்வி வலைய மைப்பை ஏற்படுத்தியது.

2023 ஆம் ஆண்டு தரவுகளின் படி திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் தேவையான அளவிற்கு கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. பாலர் பள்ளிகள் 2,399 இருந்தன. சீனாவில் கட்டாய கல்வித் திட்டத்தின் அடிப்படையில் தொடக்க கல்வி ஆறு ஆண்டுகளும் நடுநிலைக் கல்வி மூன்று ஆண்டுகள் என ஒன்பது ஆண்டுகள் கட்டாய கல்வி படிக்க வேண்டும். இதற்காக திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் 1,531 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. தொழில் வல்லுனர்களை உருவாக்கக்கூடிய உயர்நிலைப் பள்ளிகள் 93 பள்ளிகளும், 7 பல்கலைக்கழகங்களும் அதன் கீழ் செயல்படும் பல கல்லூரிகளும் இருக்கின்றன. மொத்தமாக 36 லட்சம் மக்கள் தொகை கொண்ட திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் 4,300 க்கு மேற்பட்ட கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் சுமார் 9.44 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள்.

2012 ஆம் ஆண்டு முதல் திபெத்தில் மாணவர்களின் விடுபடுதல் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு மாணவருக்கும் கல்வியின் அனைத்து நிலைகளிலும் அரசு நிதி உதவி செய்கிறது. பாலர் கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதம் 89.52% ஆகும். கட்டாய கல்விக்கான நிறைவு சதவீதம் 97.73 ஆகும். சீனியர் உயர்நிலைப் பள்ளிகளில் மொத்த சேர்க்கை விகிதம் 91.07% ஆகும். 2010 ஆம் ஆண்டு ஆண்டு நடத்தப்பட்ட அந்நாட்டின் ஏழாவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திபெத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு 5,507 பட்டதாரிகள் இருந்தனர். இதுவே 2020 ஆம் ஆண்டு 11,019 என்ற அடிப்படையில் உயர்ந்தது. இந்த பிராந்தியத்தில் புதிதாக பணியில் சேருபவர்கள் 13.1 ஆண்டுகள் முறையான கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.

2012 முதல் 2022 வரை சீன அரசு திபெத் பிராந்தியத்தில் கல்வியை மேம்படுத்துவதற்காக 251.51 பில்லியனுக்கும் அதிகமான ஆர்எம்பி யுவான் பணத்தை ஒதுக்கியது.

திபெத்தில் உள்ள கல்வி நிலையங்களில் சீன மொழி, திபெத்திய மொழி என இரு மொழிக் கொள்கை கற்பிக்கப்படுகிறது. திபெத்திய மொழி குறித்த தனி பாடங்களும் உள்ளன. திபெத்திய கல்வி நிலையங்களில் கணிதம், அறிவியல், இலக்கியம், திபெத்திய வரலாறு, மற்றும் திபெத்திய கலாச்சாரம் ஆகிய பாடத்திட்டங்கள் உள்ளன. இவற்றுடன் கூடவே கருத்தியல் கல்வி அதாவது தேசபக்தி, மக்களின் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த கல்வியும் பாடத்திட்டங்களாக கற்பிக்கப்படுகிறது.

திபெத்திய பிராந்தியத்தில் தொலைதூரத்தில் வாழக்கூடிய மக்களுக்காகவும் நாடோடி வாழ்க்கை நடத்தக்கூடிய கால்நடை மேய்ப்பவர்களுக்காகவும் போர்டிங்(விடுதி) பள்ளிகளை திபெத் அரசாங்கம் நடத்துகிறது. இதற்கான அனைத்து விதமான செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. திபெத் கல்விக்கு அரசாங்கம் பொது மானியத்தை வழங்குகிறது. கிராமப்புற மாணவர்களின் கட்டாய கல்வி படிக்கிற காலகட்டத்தில் படிப்பு செலவுகளும், புத்தகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்தும் அரசு ஏற்றுக்கொள்கிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவியும், ஊக்கத்தொகையும் அரசாங்கம் அளித்து வருகிறது.

திபெத்தில் மற்றொரு வகையான சிறப்புப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. நடுநிலைப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயில்வதற்காக, பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. 1985 ஆம் ஆண்டு முதல் இந்த முறை செயல்படுகிறது. இதனை நெய்டி கல்வி முறை என்று அழைக்கிறார்கள். இதில் தேர்ச்சிப் பெறக்கூடிய மாணவர்கள் திபெத்திய பகுதியிலிருந்து பெய்ஜிங், ஷாங்காய், செங்டு போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உயர்தரம் வாய்ந்த கல்வியை பெறுகிறார்கள். இங்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தரமாக மேம்ப்படுத்தக்கூடிய முறையில் திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகிறார்கள்.

 

மேற்கண்ட விடுதி அடிப்படையிலான கல்வி முறைகளையும், நெய்டி சிறப்பு கல்வி திட்டத்தையும் பிற்போக்கு வாதிகள், தலாய்லாமா ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். காரணம் விடுதிக்குச் சென்றபிறகு, உயர்கல்வி கற்றவர்கள் பிற்போக்கு கருத்துக்களில் இருந்து விடுபடுகிறார்கள் என்பதுதான். குறிப்பாக திபெத்தில் தொலைதூரத்தில் இருக்கக்கூடிய மாணவர்களில் 70 சதவீதத்திற்கு மேல் அரசு நடத்தக்கூடிய விடுதிகளில் தங்கி படிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது அடிமை சமுதாயத்திலிருந்து அறிவுப்பூர்வமாக திபெத் மக்களை விடுதலை செய்வதற்கான ஒரு வடிவமாக இன்று இருக்கிறது. ஆகவேதான் இந்த கல்வி முறைகளை கடுமையாக பிற்போக்கு வாதிகள் எதிர்க்கின்றனர்.

சீன மக்கள் குடியரசின் மூலம் நவீன கல்வி முறைகள் திபெத்திற்குள் வளர்ந்த பிறகு திபெத்தில் நவீன அறிவும், அறிவியல், மற்றும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டவர்கள் அதிகமாய் இருக்கிறார்கள். இது இவர்களின் வாழ்க்கைத் தரத்தை பல மடங்கு மேம்படுத்தி உள்ளது. இரு மொழி கல்விக் கொள்கையும் சீனாவில் எங்கு சென்றாலும் வெற்றி பெற முடியும் என்ற முறையில் நடத்தக்கூடிய நெய்டி பள்ளிகளும் புதிய நம்பிக்கையை உருவாக்கி உள்ளது. திபெத்திய மொழியையும் கலாச்சாரத்தையும் கல்வி முறைக்குள்ளேயே பாதுகாத்து அவற்றின் மேம்படுத்தக்கூடிய பணிகளையும் சீன மக்கள் குடியரசு செய்து வருகிறது.

மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்

மருத்துவமும், பொது சுகாதாரமும் திபெத் மக்களின் வாழ்நாளை அதிகப்படுத்தியது மட்டுமல்ல மக்கள் தொகையையும் வீழ்ச்சியிலிருந்து வளர்ச்சியை நோக்கி கொண்டு வந்து உள்ளது. 1950 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு திபெத் மக்களுக்கு எந்தவிதமான மருத்துவமனைகளோ பொது சுகாதார முறைகளோ இல்லை. குறிப்பாக பண்ணை அடிமைகள் சிகிச்சை பெறுவதற்கான உரிமைகள் கூட இல்லை. 1950 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக சீர்திருத்தம் ஆரம்பித்தவுடன் மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனைகளை திட்டமிட்டு உருவாக்கினார்கள். அடிப்படை மருத்துவ சேவைகள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, திபெத்திய மருத்துவ முறை அவற்றின் சிகிச்சை முறை ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான மருத்துவ கட்டமைப்பும், பொதுசுகாதார அமைப்பையும் சீன மக்கள் குடியரசு நிறுவியது. சீனாவின் இதர பகுதிகளில் இருந்தும், அருகாமையில் இருந்த நகரங்களில் இருந்தும் மருத்துவ நிபுணர்களின் குழுக்கள் திபெத்திய பிராந்தியத்திற்குள் அனுப்பப்பட்டு மருத்துவத் துறையை மேம்படுத்தினார்கள். இதனால் பல மருத்துவமனைகள் தரத்துடன் செயல்பட தொடங்கியது. புதிய மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டன.

திபெத்திய பிராந்திய மக்கள் மாவட்ட தலைநகர சிறப்பு மருத்துவமனைகளில் மிகக் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய 400 கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மேலே சுமார் 2,400 சாதாரண நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகள் அனைத்திற்கும் தாங்கள் வாழக்கூடிய உள்ளூர் அளவிலான மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான மருத்துவ அமைப்புகளும், மருத்துவர்களும், மருந்துகளும் கிடைக்கக் கூடிய முறையில் மருத்துவ துறைகள் மேம்பட்டது.

1950ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் பிரசவத்தின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 5000 ஆக இருந்தது. 2022 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 45.8 என்ற அளவில் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டது. மேலும் இதே கால இடைவெளியில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 430% லிருந்து 7% என்ற அளவில் குறைந்துள்ளது. திபெத் மக்களின் சராசரி ஆயுள் காலம் 1950 களில் 35 ஆண்டுகள் என்பதிலிருந்து இன்று 72.19 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.

இப்பிராந்திய மக்கள் செய்து வந்த தொழில், வேலை காரணமாக பிறக்கும் பொழுதே அவர்களை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான நோய்களான இதய நோய், கண் புரை நோய் உள்ளிட்ட அனைத்தும் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன. நீரின் தரத்தையும், உணவு முறைகளை மாற்றியதும், உள்ளூரில் குடியிருப்புகளை மேம்படுத்தியதும், இந்த நோய்களை கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகித்தது.

தற்போது திபெத்தில் பல்வேறு வகையான 1642 மருத்துவ நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 11 நிறுவனங்கள் உயர்ந்த தரம் கொண்ட மருத்துவ நிறுவனங்களாகும். ஆயிரம் பேருக்கு 4.9 மருத்துவ படுக்கைகள் உள்ளது. ஆயிரம் பேருக்கு 5.89 மருத்துவ ஊழியர்கள் இருக்கிறார்கள். இந்த மருத்துவ சேவைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பொது சுகாதாரத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

1950 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய 200 ஆண்டுகளில் திபெத்திய மக்கள் தொகையில் எண்ணிக்கை 10 லட்சம் பேர் குறைந்து போனார்கள். மருத்துவ வசதியும், பொது சுகாதார சீர்கேடுகளும் மக்கள் தொகையில் பெரும் சரிவை ஏற்படுத்தியது. ஆனால் ஜனநாயக சீர்திருத்தம் ஆரம்பித்து 15 ஆண்டுகளில் 4 லட்சம் மக்கள் தொகை அதிகரிப்பு நடந்தது. மிகவும் உட்புறப் பகுதியான காடுகளில் வாழ்ந்த மான்பாஸ், லோபாஸ், டெங்ஸ் போன்ற சிறிய இனக்குழுக்களின் மக்கள் தொகை உட்பட இக்காலத்தில் அதிகரித்துள்ளது.

சமூக பாதுகாப்பின் மற்றொரு முக்கிய அம்சம் காப்பீட்டு முறைகள் ஆகும். முதியோர்களுக்கான காப்பீடு, மருத்துவ காப்பீடு, வேலையின்மைக்கால காப்பீடு, வேலைஇடங்களில் ஏற்படும் காயம் தொடர்பான காப்பீடு, மகப்பேறு காப்பீடு என ஐந்து வகையான காப்பீட்டு முறைகளை திபெத் பிராந்தியத்தில் அமல்படுத்துகிறார்கள். இந்தத் திட்டங்களின் மூலம் திபெத் மக்கள் தொகையில் 3.43 மில்லியன் மக்கள் அதாவது 36 லட்சம் மக்கள் தொகையில் 34 லட்சம் மக்கள் காப்பீட்டு முறையில் பாதுகாக்கப்படுகிறார்கள். இது மொத்த மக்கள் தொகையில் 95% க்கு மேலாகும்.

சமூக பாதுகாப்பின் மற்றொரு அம்சம் மதம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு செய்யக்கூடியதாகும். திபெத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து துறவிகளுக்கும் கன்னியாஸ்திரிகளுக்கும் மருத்துவ காப்பீடு ஓய்வூதிய திட்டங்கள் வாழ்வாதார உதவித்தொகை விபத்து காயம் காப்பீடு சுகாதார சோதனை செலவுகள் போன்றவற்றை ஈடுகட்ட அரசாங்கம் காப்பீடு திட்டத்தை வழங்கி உள்ளது. துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கான படிப்பு வாழ்க்கை நிலைமைகளை நவீன மயமாக்குவதற்கு மதங்களையும் கோயில்களின் உள்கட்டமைப்பையும் மேம்படுத்தி உள்ளது.

திபெத்தில் பாரம்பரியமாக மருத்துவ முறைகள் மக்களால் பயன்படுத்தப்பட்டது. அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவம் கிடைக்காதபோது அவர்களால் இவை கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டன. அவற்றையும் சிகிச்சைக்கு பயன்படுத்துவது என்ற முறையில் சீன மக்கள் குடியரசு மிகவும் அத்தியாவாசிய மருந்துகள் பட்டியலில் அதிகமான திபெத் மருந்துகளை சேர்த்துள்ளது. எந்த ஒரு மருத்துவ முறைகளும் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் இருந்தால் அதை அழிந்து விடாமல் மேம்படுத்தக்கூடிய செயலின் ஒரு வெளிப்பாடு தான் பாரம்பரிய திபெத்திய மருத்துவத்தை பயன்படுத்துவதாகும்.

மேற்கண்ட முறையில் பல அடுக்கு சமூக பாதுகாப்பு முறை திபெத் சமூகத்தில் பரவலாக அமுலாக்கப்படுவதால் மக்களின் வாழ்க்கை தரம், சராசரி வாழ்நாள் மேம்பட்டு வந்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற குடியிருப்பாளர்களின் அடிப்படை மருத்துவ காப்பீட்டு முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. இந்த காப்பீட்டு அட்டைகளை மாகாணங்கள் கடந்து செல்கிற பொழுதும் பயன்படுத்தலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்திற்கு நிலையான மானியம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு ஆண்டுக்கு 585 ஆர்எம்பி யுவான் அதாவது சுமார் 8000 ருபாய் வழங்கப்படுகிறது. தொடர்ந்து சமூக பாதுகாப்புக்கான முறைகளில் குறைகள் வரும்பொழுது களைந்து முன்னேறுகிறார்கள்.

முழுமையான வீட்டு வசதி

சோஷலிஸ்ட் சமூகத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று வாழ்விட வசதி. திபெத் மக்களுக்கு வாழ்விட வசதியை செய்வதற்கு சீன மக்கள் குடியரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. நகர்ப்புறங்களில் மலிவு விலை வீடுகளை அரசாங்கம் கட்டிக் கொடுத்தது. கிராமப்புறங்களில் மக்கள் வாழமுடியாத இடங்களில் இருந்து வாழத் தகுதியான இடங்களுக்கு மாறுவதற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தனர்.

இது மட்டுமல்ல ஏற்கனவே பாழடைந்து போன வீடுகளையும் புதுப்பித்துக் கொள்வதற்காக நிதி உதவியை செய்து புதுப்பித்துக் கொடுத்தார்கள். 2016 ஆம் ஆண்டு முதல் விவசாயம் மற்றும் மேய்ச்சல் நிலப் பகுதிகளில் உள்ள சுமார் 43,600 வீடுகளுக்கு அரசு மானிய உதவிகளை வழங்கி புதுப்பித்துக் கொடுத்துள்ளது. இவை தவிர வீடுகளின் தரத்தை, சுகாதாரத்தை உயர்த்தக்கூடிய முறையில் குறைந்த வருமான குழு உள்ளிட்ட பகுதிகளை கணக்கில் எடுத்து புதுப்பித்துக் கொடுத்தார்கள். மற்றொரு முக்கிய அம்சம் வீடுகள் பூகம்பத்தின் அதிர்வுகளை தாங்க கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத வீடுகளை பட்டியல் எடுத்து பூகம்ப அதிர்வுகளை தாங்கக்கூடிய வீடுகளாக மாற்றி அமைத்தனர்.

 

நகர்ப்புறங்களில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு இவற்றின் வளர்ச்சி அதிகமான பொழுது தீவிரமான நகர்மய வளர்ச்சி ஏற்பட்டது. நகர்ப்புறங்களில் குடியிருப்பவர்களின் தனிநபர் ஒருவருக்கு 2020 ஆம் ஆண்டு 33.4 சதுர மீட்டர் வாழ்விடமாக இருந்தது. கிராமப்புறத்தில் விவசாயிகள் மற்றும் மேய்ப்பர்களின் வாழ்விடம் 41.46 சதுர மீட்டராக இருந்தது. இந்த வளர்ச்சி வாழ்விடத்திற்கான ஒரு நிலையான முன்னேற்றத்தை குறிக்கிறது. 1950 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு 90% மக்களுக்கு தனி குடியிருப்புகள் கிடையாது.

வீட்டு வசதிகளில் ஏற்படுத்தி இந்த மாற்றம் பல முன்னேற்றங்களை அடைந்தது. 2019 ஆம் ஆண்டு திபெத் நகர்மயமாக்கல் 31.5% உயர்ந்தது. 2020 ஆம் ஆண்டில் மக்களின் தனிநபர் செலவழிப்பு வருமானத்தை 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகிற பொழுது அது இரட்டிப்பாகி உள்ளது. இவை அனைத்தும் தனி நபர்களின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்தியது மட்டுமல்ல திபெத் பிராந்தியத்தில் உள்ள 95% மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. குடும்பத்துக்கு ஒருவர் வேலையில் இருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்றைய உலகமய சமூக சூழலில் ,உலகம் சார்ந்த பொருளாதார வளைய அமைப்புகள் உருவான காலத்தில், சோஷலிசத்தின் கொள்கையை நோக்கி செல்வதற்கு பெரும் முயற்சிகள் செய்ய வேண்டி உள்ளது. இந்தக் கொள்கையில் பற்றுடைய சீன கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியதையும் கடந்து, அடிப்படை கட்டுமானத்தை உருவாக்கியதையும் கடந்து, பல அடுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

அ.பாக்கியம்

 

 

புதன், நவம்பர் 12, 2025

ஞாபகங்களின் தீ…..

 

ராஜாராம்

(தோழர் ராஜாராம் மாணவர் சங்கம் வாலிபர் சங்க மாவட்ட தலைவர்களில் ஒருவராக இருந்து பணியாற்றியவர். பணியில் சேர்ந்தவுடன் தொழிற்சங்க தலைவராக இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர். சில ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகத்தை படித்து தனது கருத்தை பதிவு செய்து உள்ளார்- அ.பாக்கியம்)

தோழர் அ.பாக்கியம் அவர்கள் எழுதிய "ஞாபகங்கள் தீ மூட்டும் DYFI போராட்டங்கள் சில துளிகள்"  என்ற தனது புத்தகத்தை எனது பணி நிறைவு விழாவிற்கு வந்திருந்து வாழ்த்தி வழங்கினார். இது ஒரு பொருத்தமான நினைவு பரிசு என்று நினைத்து நெகிழ்கிறேன்.

45 வருடங்களுக்கு எனது வாழ்க்கையை பின்னோக்கி நகர்த்தி என்றென்றும் எனது நினைவில் கனன்று  கொண்டிருக்கிற DYFI போராட்ட நினைவுகளை உண்மையிலேயே தீயாக மூட்டிவிட்டது இந்த புத்தகம். இந்த புத்தகத்தின் முதல் கட்டுரை "பூணூலும் அரைஞாண் கயிறும் DYFI கொடி கயிறாக மாறியது" வீரஞ்செறிந்த மறியல் போராட்ட நிகழ்விலும், கடைசி கட்டுரையான DYFI SPORTS CLUB  டி.ஒய்.எப்.ஐ விளையாட்டு கழகம் நடத்திய வண்ணமயமான திருவிழாவில் பங்கேற்ற பாக்கியம் பெற்றவன் நான். 

DYFI துவக்கப்பட்ட 1980 இல் உறுப்பினராக சேர்ந்து வாலிபர் சங்கத்தில் 2000 வரை 20 வருடங்கள் பணியாற்றியவன். புத்தகத்தின் இரண்டாவது கட்டுரை துவக்க வரிகளில் .... காதலும், வீரமும், சாதனைகளும், சாகசங்களும் மாற்றங்களும், தியாகங்களும் இணைந்தது தான் இளமை என்ற வரிகளுக்கு ஏற்ப எனது அன்றைய இளமை வயதில் சாதனைகளையும் சாகசங்களையும் செய்ய வைத்தது SFI- DYFI அமைப்புகள் தான். 1991 அக்டோபர் 23ஆம் தேதி அந்த வீரஞ்செறிந்த மறியல் போராட்டத்தில் வடசென்னை மாவட்ட குழு, ஆவடி பகுதி செயலாளராக நானும் குறளகம் எதிரில் கைது செய்யப்பட்டேன்.

அன்று மாலை ரிமாண்ட் செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் செல்லும்போது  நான் ... பணியில் சேர்ந்து சரியாக ஆறு மாதம்தான் ஆகிறது என்னுடைய பணிக்கான அடையாள அட்டை எனது பேண்ட் பாக்கெட்டில் உள்ளது. அடையாள அட்டையும் பர்சும் போலீஸிடம் மாட்டப் போகிறது வேலை பறிபோகும் நெருக்கடி எதிர்கொள்ளப் போகிறேன் என்கிற ஒரு வித பதட்டமும் அப்படியே ஆனால் என்ன தோழர் பாக்கியம், தோழர் அ.சௌந்தர்ராஜன், தோழர் வி. மீனாட்சி சுந்தரம், தோழர் சி. சுந்தர்ராஜ் போன்ற எண்ணற்ற தோழர்களைப்போல முழு நேர புரட்சி காரனாக மாறும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று ஆறுதல் மறு பக்கம் என மனம் அலை பாய்ந்த நேரத்தில்...

"அதற்கு வாய்ப்பில்ல ராஜா" என்று சொல்லும் பாணியில் சென்னை மத்திய சிறைச்சாலை வாசலில் நின்றிருந்தார் நூலாசிரியர் DYFI மாநிலத் தலைவர் தோழர் அ.பாக்கியம். சிறை செல்லும் தோழர்களின் பணம், மோதிரம், வாட்ச் போன்ற மதிப்புமிக்க உடைமைகளை வாங்கி சிறை மீண்ட பிறகு பத்திரமாக திருப்பித் தர வேண்டும் என்ற அக்கறையுடன் சிறை வாசலில் காத்திருந்த காட்சி இப்போதும் என் நினைவில் தீ மூட்டுகிறது. இந்த மறியல் போராட்டத்தில் சிலிர்க்க வைக்கும் பெருமைமிகு நிகழ்வு ஒன்று நடந்தது. அன்று சென்னை மத்திய சிறைக்கு சென்ற 2800 பேரில் ஒரே ஒரு துணிச்சல் மிக்க டிஓய்எஃப்ஐ வீராங்கனை ஒருவர் இருந்தார்.

 சென்னை வில்லிவாக்கம் பகுதியை சார்ந்த பெண் தோழர்( இன்றைய சிபிஐஎம் வில்லிவாக்கம் பகுதி குழு உறுப்பினர் தோழர் அன்பழகன் அவர்களின் மனைவி). தன்னந்தனியாக துணிச்சலாக சகத் தோழர்கள் வேண்டாம் வீட்டுக்கு சென்று விடுங்கள் என்று தோழர்கள் மற்றும் போலீஸ்சே கூறிய போதும் சிரித்த முகத்துடன் இல்லை நான் சிறைக்கு செல்வதில் உறுதியாக உள்ளேன் என்று தன்னந்தனியாக சிறைக்குள் சென்றதைப் பார்த்தபோது நாங்கள் அனைவரும் சிலிர்த்துப் போய் உறைந்து நின்றோம். இந்த DYFI பெண் வீராங்கனை பற்றி அடுத்த புத்தகப் பதிவில் குறிப்பிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

       தோழர் பாக்கியம் எழுதியதில் ஒவ்வொரு தலைப்பில் ஆன போராட்டமும் ஒவ்வொரு காவியம் என்று படிக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது நானும் அன்றைய DYFI தோழன் என்று.

       குறும்பனை : டி ஒய் எப் ஐ எழுச்சி- அடக்குமுறை- மீட்சி. வீடுகள் தரைமட்ட பார்க்கப்பட்டு குடும்ப்பத்தோடு ஊரை விட்டு வெளியேற்றப்பட்டு அதன்பிறகு உறுதிமிக்க தொடர் போராட்டத்தால் மீண்டும் கடல் மார்க்கமாக ஊருக்குள் கம்பீரமாக நுழையும் காட்சி ஒரு புரட்சிகர திரைப்படமாக மனத்திரையில் ஓடுகிறது. படிக்கும் தோழர்களின் நெஞ்சமெல்லாம் பெருமை பூரிக்கும்.. இப்படி எல்லா கட்டுரையும் DYFI இன் பெருமைமிகு வரலாறுதான்.

      கடைசி கட்டுரை பற்றி டி இ ஒய் எஃப் ஐ விளையாட்டு கழகத்தில் நான் மாநில பொருளாளராக பொறுப்பேற்று என் தனிப்பட்ட பொறுப்பில் சில குறிப்பிடத் தகுந்த பங்கை ஆற்றியுள்ளேன். அதுவும் சுவாரஸ்யம் கலந்த மதிப்புமிக்க நிகழ்வாகும். அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்.... அதுவரை தோழர் பாக்கியம் அவர்களுக்கு எனது ரெட் சல்யூட்.

46 திபெத் சவாலான சாலை கட்டமைப்புகள்

 

அ.பாக்கியம்

பெருக்கெடுக்கும் ஆறுகள், சிதறிய பாறைகள், கரடு முரடான மலைப்பாதைகள் ஆகியவற்றால் திபெத் மக்களுக்கும்  இதர மாகாணங்களுக்கும் இடையிலான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவது  கடினமாக இருந்தது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களைக் கொண்டு செல்வது மனிதர்களின் கைகளையும், கால்நடைகளையுமே நம்பி இருந்தார்கள்.

சில நேரங்களில் பொருட்களை பிரதான நிலப் பகுதிகளுக்கும், அருகில் உள்ள மாகாணங்களுக்கும் கொண்டு செல்வதற்கு ஒரு வருடம் கூட ஆகும். ஆறுகளைக் கடப்பதற்கு பெரிய பாலங்கள் இல்லை. 10 பேரை ஏற்றி செல்லும் தோல் படகுகள் மட்டுமே அதுவும் சிறு ஆறுகளை கடப்பதற்கு மட்டுமே உதவி செய்யும். வர்த்தக பாதை எப்பொழுதும் இருந்தது. ஆனால் அவை மிகவும் கரடு முரடானவை. நல்ல சாலைகளுக்கான எந்த அறிகுறியும் திபத்தில் இருந்தது இல்லை.

1950 ஆம் ஆண்டு வரை திபத்தில் நெடுஞ்சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. 1959ஆம் ஆண்டு ஜனநாயக சீர்திருத்தங்களுக்குப் பிறகு போக்குவரத்தில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட்டது. 1959 இல் மிக பாதைகள் 7,300 கிலோ மீட்டர் மட்டும்தான் அதுவும் மிக மோசமானவையாக இருந்தது.  சீன மக்கள் குடியரசின் தொடர் முயற்சியின் காரணமாக 2021 ஆம் ஆண்டு திபெத் பிராந்தியத்தில் 1,20,000 கிலோமீட்டர் நீளத்திற்கு தரமான சாலைகள் அமைக்கப்பட்டன. இது 1,543 சதவீதம் வளர்ச்சியாகும். இந்த வளர்ச்சியில் திபெத்தின் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை இணைக்கும் சாலைகளும் உருவாக்கப்பட்டன.

அதாவது 1959 முதல் தினசரி தோராயமாக 4.93 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிங்காய் மாகாணத்தில் துவங்கி லாசாவில் முடிவடையும் ஒரு சாலை 4000 மீட்டருக்கு அதிகமான உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக உயரமான தார் சாலையாகும். மேலும் இது மிக உயரமான இரண்டு மலைகளை இணைக்கக்கூடிய சாலையாக இருக்கிறது.

மக்கள் தொகை குறைவாக இருக்கக்கூடிய காடுகளும் மலைகளும் நிறைந்த இடங்களில் சாலைகள் செல்வதற்கு அதை பராமரிப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற முறையில் சில முடிவுகளை மேற்கொண்டார்கள். 3700 மீட்டருக்கு அதிகமான உயரத்தில் உள்ள சிச்சுவான் திபெத் நெடுஞ்சாலையை பராமரிக்க 1996 ஆம் ஆண்டு சாலை பராமரிப்பு படை முதல் முதலாக நிறுவப்பட்டது. இந்த சாலைகளில் படைவீரர்கள் நிறுத்தப்பட்டார்கள். இவர்களின் கீழ் 782.5 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டது பாதுகாக்கப்பட்டது. இக்காலத்தில் இந்த சாலை 200க்கும் மேற்பட்ட முறை பேரழிவுகளை சந்தித்த போதும் மீண்டும் மீண்டும் அது புதுப்பிக்கப்பட்டு பாதிப்பின்றி பயணிக்க உதவியது.

இதே காலத்தில் கிராமப்புறங்களிலும் சாலை மேம்பாட்டிற்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டது. வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்க 4500 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகளை உருவாக்கி இணைத்தனர். 2018 ஆம் ஆண்டு கிராமப்புற சாலை திட்டங்களுக்காக 37.29 பில்லியன் யுவான் சுமார் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்து போக்குவரத்து துறையை மேம்படுத்தினார்கள்.  கிராமப்புற சாலைகள் மட்டுமே 68, 863 கிலோ மீட்டர் நீலத்தை கடந்து சென்றது.

மிகவும் இடர்பாடு நிறைந்த இடங்களில் இருந்த 34 டவுன்ஷிப்புகள் 533 கிராமங்களுக்கு தார்சாலை அல்லது கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டன. கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய உள்ளூர் விவசாயிகளும் கால்நடை மேய்ப்பர்களும் சாலை போக்குவரத்து சிரமங்களை தவிர்ப்பதற்கு கிராமப்புற பயணிகள் போக்குவரத்து வழித்தடங்களும் தொடங்கப்பட்டன. விவசாயிகள் கால்நடை மேய்ப்பர்கள் 2,44,000 லட்சம் பேர்கள் கிராமப்புற சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டு வருமானத்தையும் பெற்றனர்.

திபெத்தில் உள்கட்டமைப்பு இணைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசு பெருமளவு முதலீடு செய்திருந்தது. சீனாவின் மேற்குப் பகுதியை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மேற்கே செல்லுங்கள் என்ற பிரச்சாரத்தை 1999 ஆம் ஆண்டிலிருந்து துவக்கி திட்டங்களை விரிவு படுத்தியது. பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் 117, பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் 188 என்ற வகையில் கட்டமைப்பு திட்டங்களை மேற்கொண்டனர். இதற்காக பல பில்லியன் யுவான்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இன்று இன்று திபத்தின் சாலை அமைப்புகள் ஷாங்காய், பெய்ஜிங் நகரத்துடன், தொலைதூரமான வடக்கு சீனாவின் ஜின்ஜியான் நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் சாலை போக்குவரத்து இணைக்கப்பட்டுள்ளது.

கூரையின் மேலே ரயில் ஓட்டம்

திபெத்திய பீடபூமியில் ரயில் வலை அமைப்பை உருவாக்கக்கூடிய முதல் வடிவமைப்பு 1911 ஆம் ஆண்டு உருவான குடியரசு ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டது . அன்றைய ஜனாதிபதி டாக்டர் சன் யாட் சென் லாசாவை சீனாவுடன் இணைக்க ஒரு ரயில்வே திட்டத்தை முன்மொழிந்தார். பலரும் இந்தத் திட்டத்தை கற்பனையானது என்று விமர்சித்தார்கள். ஆனால் இந்தத் திட்டம் அமலாகவில்லை.

1950 ஆம் ஆண்டு கொரியா போர் காரணமாகவும், சீன சோவியத் உறவுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு ராணுவ தொழில்களை மத்திய சீனாவிற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சூழலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல்கள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. எனவே சிச்சுவான், குவஷோ, யுனான் ஆகிய இடங்களில் ரயில் பாதைகளை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதற்கான பணிகளை அவசர அவசரமாக தொடங்க வேண்டும் என்று மாவோ உத்தரவிட்டார். அதே நேரத்தில் உற்பத்திக்கான மூலப் பொருட்களை  ஜின்ஜியாங், திபெத், உள் மங்கோலியா, மஞ்சூரியா போன்ற இடங்களில் இருந்து வரவைக்க வேண்டிய நிலைமை இருந்தது. சீனப் பிரதமர் சௌ என் லாய் 1957ஆம் ஆண்டு இதற்கான விரிவான திட்டத்தை தெரிவித்தார்.

திபெத் பூமியை சீனாவுடன் இணைக்கும் முதல் ரயில் திட்டம் சீனாவின் இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் போது 1958 முதல் 1962 ல் நிறைவேற்றப்பட்டது. திபெத்தின் ஒரு பகுதியாக இருந்த அம்டோ நகர்வரை இது அமைக்கப்பட்டது. முதல் ரயில் இணைப்பு இதுதான். இத்திட்டம் நிறைவேற்றுவதில் தடங்கள் ஏற்பட்டு 1977 ஆம் ஆண்டு மீண்டும் உயிர்பிக்கப்பட்டு 1984 ஆம் ஆண்டு 845 கிலோ மீட்டர் ரயில் பாதை செயல்பாட்டுக்கு வந்தது. இந்த ரயில் பாதையை கோர்மோ நகரத்தில் வழியாக திபெத்தின் தலைநகரான லாசா வரை நீட்டித்தார்கள்.

இந்த ரயில்வே கட்டுமானம் மிக புகழ்பெற்ற ஒன்றாகும். மொத்த நீளம் 1,118 கிலோ மீட்டர் ஆகும். இவற்றில் 960 கிலோமீட்டர் ரயில்வே தண்டவாளங்கள் கடல் மட்டத்திலிருந்து 13,000 அடிக்கு மேல் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 560 கிலோமீட்டர் அதிகமான ரயில் பாதை நிரந்தர உறை பணி பூமியில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு வெப்பநிலை மைனஸ் ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மிகக் குறைந்த வெப்ப நிலை மைனஸ் 40 டிகிரி வரை செல்லும்.

திபத் ரயில்வே நெட்வொர்க்கின் பெரும் பகுதி நிரந்தர உறைப்பணியில் கட்டப்பட்டுள்ளது. அதன் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்த புதுமையான பொறியியல் தேர்வுகளை பயன்படுத்தினார்கள். பணி உருகி தண்டவாளங்களை சீர்குலைப்பதை  தடுக்க பாறை மற்றும் காங்கிரீட் தடிமனான அடுக்குகளில் பாதைகளை அமைத்து உருவாக்கி இருக்கிறார்கள். விலங்குகள் இடம்பெயர்வு பாதைகளில் கடந்து செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது.

மண்ணரிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான தொழில் நுட்பங்களும் இணைக்கப்பட்டுள்ளது.  இந்தப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மிகக் கடுமையான சவால்களை சந்தித்தனர். இவர்களுக்கான பொருட்களை கொண்டு போய் சேர்ப்பதே மிகப்பெரும் பணியாக இருந்தது. இத்தனை சவால்கள் இருந்த பொழுதும் 2006 இல் கட்டி முடிக்கப்பட்ட கிங்காய் திபெத் ரயில்வே ஒரு குறிப்பிடத்தக்க பொறியியல் சாதனையாகும். இது உலகின் மிக உயரமான அதாவது 5,072 மீட்டர் உயரம் உள்ள ரயில் பாதை ஆகும். இதேபோன்று உலகின் உயரமான ரயில் சுரங்கப் பாதையும் இங்கு தான் அமைந்துள்ளது.

இந்த ரயில்வே திட்டங்கள் திபெத்தின் பொருளாதாரத்தை கணிசமாக உயர்த்தி உள்ளன. பொருள் போக்குவரத்தையும், மக்கள் போக்குவரத்தையும் எளிதாக்கியது மட்டுமல்ல சுற்றுலாவையும் கணிசமான அளவிற்கு மேம்படுத்தியுள்ளது. நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளுடனும் ரயில் பாதைகளை உருவாக்கி போக்குவரத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

தற்போது திபத்தில் உள்ள ரயில் பாதைகள் அனைத்தையும் மின்மயமாக்கும் திட்டத்தை 2022 ஆம் ஆண்டு அறிவித்து மூன்று ஆண்டுகளில் முடிப்பதற்காக 14.84 பில்லியன் யுவான்களை ஒதுக்கி மின்மயம் ஆக்கி வருகிறது சீன கம்யூனிஸ்ட் அரசு. இதேபோல் மற்றொரு முக்கிய போக்குவரத்தான விமான நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 13 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன. ஏராளமான ஹெலிகாப்டர் இறங்குதலங்களும் அமைக்கப்பட்டுள்ளது. லாசா சர்வதேச விமான நிலையம் மிகப்பெரிய விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் ஆண்டுதோறும் ஒன்பது மில்லியன் பயணிகளை கையாளுகிறது.

சுற்றுலா பயணிகளின் சொர்க்கம்

சீன மக்கள் குடியரசு அதிசயதக்க வகையில் குறுகிய காலத்தில்  அடிப்படைக் கட்டுமானத்தை உருவாக்கியது. மின்சாரம், டிஜிட்டல் அமைப்பு முறைகள், சாலை, ரயில், விமான போக்குவரத்து போன்றவற்றால் திபெத்தில் சுற்றுலா பயணிகள் உலகம் முழுவதுமிருந்து வந்து குவிகிறார்கள். சீன அரசு திபெத் பிராந்தியத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்றி வருகிறது.

2015 ஆம் ஆண்டில் இந்த பிராந்தியம் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது. இதன் மூலம் ஆண்டுக்கு 20 பில்லியன் ஆரம்பி யுவான் வருவாய் கிடைத்தது. திபத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த வருவாய் 25% ஆகும். அதே நேரத்தில் இந்த பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலா 20% மேல் பங்களிக்கிறது.

2006 ஆம் ஆண்டு கிங்காய்-திபெத் ரயில் பாதை நிறைவடைந்த பிறகு திபெத் என்பது சுற்றுலாவின் சொர்க்கமாக மாறியது. மக்கள் விரைவாக திபெத்தை சென்றடைய முடிந்தது. 2006ம் ஆண்டு மட்டும் 1.5 லட்சம் சர்வதேச பார்வையாளர்கள் உட்பட 25 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வந்தனர். 2007 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 40 லட்சமாக உயர்ந்தது. இந்த வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க தூண்டுதலோடு தலாய்லாமாவின் ஆதரவாளர்கள் 2008 இல் பெரும் கலவரத்தை நடத்தினார்கள். ஆனால் அவை கட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் தீபத்தின் சுற்றுலா எழுந்து நின்றது.

2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை திபெத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10.58 மில்லியனிலிருந்து அதாவது ஒரு கோடியில் இருந்து 30.03 மில்லியன்கள் வரை மூன்று கோடி வரை அதிகரித்தது.  மேலும் சுற்றுலாவின் மூலமான திபெத்தின் வருவாயும் 3.2 மடங்கு அதிகரித்தது.

விடுமுறை காலத்தில் லாசா,  திபெத்தின் பல்வேறு நகரங்களில் கலாச்சார சுற்றுலா திருவிழாக்கள் நடத்தப்படுகிறன. இவற்றில் நடைபெறும் ஓபரா நாடகத்தின் நிகழ்வுகள் பெரும்பாலான மக்களை ஈர்க்கிறது. ஓபரா என்பது இசையின் மூலம் முழுக்க முழுக்க ஒரு கதையைச் சொல்லும் நாடக வடிவம், இதில் பாடலும் நடிப்பும் இசைக்குழுவின் துணையுடன் மற்றும் அரங்குகள், உடைகள் மற்றும் ஒளியமைப்புகள் போன்ற மேடைக் கலைகளுடன் ஒருங்கிணைக்கப் படுகின்றன. ஒரு நாடகத்தைப் போலன்றி, ஓபராவில் உரையாடல் பேசப்படுவதற்குப் பதிலாகப் பாடப்படுகிறது.

ஒரு ஓபரா நாடக கலைஞர் கடந்த காலங்களில்  நாங்கள் அடிமை உரிமையாளர்களை மகிழ்விக்க திபெத்திய ஒபாரா நிகழ்ச்சிகளை நடத்தினோம். இன்று நாமும் மற்றவர்களும் சிறந்த வாழ்க்கை வாழ உதவுவதற்காக ஒபரா நாடகத்தை நடத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். திபெத்தில் மட்டும் 4,277 கலாச்சார பாரம்பரிய தளங்கள் உள்ளன. லாசாவின் மையப் பகுதியில் உள்ள பொட்டாலா அரண்மனை 1994 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டது.

திபெத்தின்  வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மிகப்பெரும் அடித்தளமாக அமைந்தது. எரிசக்தி வீடுகள் தோறும் கொண்டு சேர்த்தது மட்டுமல்ல, மின்சாரப் போக்குவரத்து அமைப்புகளை உருவாக்குவதற்கும், ரயில், சாலை, விமானப் போக்குவரத்து, ஆறுகளின் போக்குவரத்து ஆகியவற்றை ஒன்றிணைத்து திபெத்தை வளர்ச்சியின் உச்சத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய முறையில் உள்கட்டமைப்பு தரமான முறையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. சீன சோசலிசம் கடை கோடி மக்களுக்கும் சென்றடைய கூடிய முறையில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.

அ.பாக்கியம்

திங்கள், நவம்பர் 10, 2025

நானே மகத்தானவன் புத்தகத்தைப் பற்றி போக்குவரத்து தொழிலாளியின் கடிதம்.





(தோழர்.பி.சுந்தர்ராஜன் மூலம் இந்த புத்தகத்தை வாங்கினேன். படித்து முடித்தவுடன் எனக்கு ஏற்பட்ட உணர்வை உங்களுக்கு கடிதமாக எழுதுகிறேன் என்று தொலைபேசியில் பேசினார். உங்களது தொலைபேசி இந்த புத்தகத்தில் இல்லை எனவே நீங்கள் இதற்கு முன்பு வெளியிட்ட வேலை நாள் என்ற புத்தகத்தை படித்ததனால் அதிலிருந்து எடுத்து உங்களிடம் பேசுகிறேன் என்றார். எனக்கு ஸ்மார்ட் போன் கிடையாது எனவே நான் காகிதத்தில் எழுதியதை அப்படியே உங்களுக்கு அனுப்புகிறேன் என்று அனுப்பி வைத்தார். அவரின் எழுத்துக்களில் எந்த மாற்றமும் செய்யாமல் இங்கே கொடுக்கிறேன். வாசிப்பின் அவசியம் செயலுக்கான ஊக்க மருந்து என்பதை இவரின் மதிப்புரை வெளிப்படுத்துகிறது.)

நானே மகத்தானவன் புத்தகத்தின் ஆசிரியர் தோழர் அ.பாக்கியம் அவர்களுக்கு வணக்கம்

உங்கள் புத்தகத்தை படித்தேன் என்னுடைய கருத்துக்களை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். நானே மகத்தானவன் புத்தகத்தை படித்து பல விஷயங்களை தெரிந்து கொண்டதை என் பாக்கியமாக கருதுகிறேன்.

நானே மகத்தானவன் அட்டைப்படத்தில் முகமது அலி எதிரிகளை வீழ்த்துகிறார். நடைமுறை வாழ்க்கையில் வெள்ளையர்களால் கருப்பர் களுக்கு உண்டாகும் கொடுமையை வீழ்த்துகிறார் என்ற பதிவு அருமை. அட்டை படத்தில் இருக்கும் அமெரிக்க சுதந்திரசிலை இரண்டு கண்களையும் மூடி கொள்வது போல் இருப்பது சிந்திக்க வைக்கிறது.

வெள்ளையர் பெண்ணை கருப்பரான எம்மெட் காதலிக்கிறார் என்று வெள்ளையர்கள் எம்மெட் முகத்தை கொடுமையாக சிதைத்து சாகடிக்கிறார்கள். அந்த முகத்தை உலகமே பார்க்க வேண்டும் என்று எம்மெட்டின் தாய் கிறிஸ்தவ மரபையும் மீறி எம்மெட்டின் உடலை சவப்பெட்டிக்குள்ளே வைக்காமல் சவப்பெட்டியின் மேலே தனது மகனின் உடலை வைத்துக் கொண்டு ஊர்வலமாக செல்வது அந்தத் தாயின் மன வேதனையையும் எம்மட்டின் முகத்தை சிதைத்த கொடூரத்தையும் புத்தகத்தை படித்த எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியது

பேருந்திலே வெள்ளையர்களுக்கும் கருப்பொருளுக்கும் உட்காரு வதிலேயே பிரச்சனை இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் போக்கு வரத்து தொழிலாளர்களுக்கும் தமிழக அரசுக்கு மேல் பிரச்சனை இருக்கிறது.

அமெரிக்காவிலே வெள்ளையர்களுக்கும் கருப்பர்களுக்கும் பிரச்சனைகளால் பல கொலைகள் நடக்கிறது. தமிழ்நாட்டிலேயே மேல் ஜாதி, கீழ் ஜாதி என கௌரவ கொலைகளையும், ஆணவக் கொலையும் நடக்கிறது.

முகமது அலி குத்துச்சண்டையிலே பதக்கம் வெல்கிறார். சந்தோஷப்படுகிறார். ஆனால் அவர் கருப்பர் என்பதால் ஓட்டலில் சாப்பிட அனுமதிக்கவில்லை. அவருக்கு உணவும் பரிமாறுவதில்லை. ஆகையால் அவர் வேதனைப்பட்டு கருடப்பர்களுக்கு நடக்கும் கொடுமைக்கு எதிராக அந்தப் பதக்கத்தையும் அதன் மூலம் பெற்ற சந்தோஷத்தையும் நீரோடையில் வீசி எறிவது அவரின் ஆழ்ந்த மன வேதனையை காட்டுகிறது. அந்த வேதனை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகளே இல்லை.

வியட்னாமுக்கு சென்று போர் செய்யும் வேண்டுமென்று அமெரிக்கா கட்டளை இருக்கும்போது, நான் வியட்நாமுக்கு செல்ல மாட்டேன் வியட்நாமுக்கு எதிராக போர் செய்ய மாட்டேன் என்று அமெரிக்காவின் கட்டளையை பாடையில் ஏற்றுவது, முகமது அலியின் தைரியத்தை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை.

அவர் குத்துச்சண்டையில் வெற்றி பெற்று வரும் பணத்தை தர்மம் செய்கிறார். அனாதை இல்லத்திற்கு கொடுக்கிறார். பசியால் வாடுபவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்கிறார். உடை இல்லாதவர்களுக்கு உடை எடுத்துக் கொடுக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது புத்தகத்தை எழுதிய ஆசிரியர் முகமது அலி மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தியை புத்தகத்தில் பதிவு செய்யக்கூடாது என்ற ஏக்கம் கொண்டு புத்தகத்தை படிக்கும் போது பதட்டம் தோன்றுகிறது. அவரைப் போல் நாமும் நம்மால் முடிந்தவரை தர்மம் செய்ய வேண்டும் என்று எண்ணம் நானே மகத்தானவன் என்ற புத்தகம் என் சிந்தனைக்கு வேலை கொடுத்தது. என்னை செயல்படவும் வைத்தது

கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவர்களைவிட கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லாதவர்கள் அதிகமாக மக்களைப் பற்றி யோசிக்கிறார்கள். மக்களுக்காக போராடுகிறார்கள். மக்களுக்கு உதவி செய்கிறார்கள். மக்கள் சிந்தனையாலேயே வாழ்கிறார்கள் என்ற செய்தி முகமது அலி நடைமுறை வாழ்க்கை எனக்கு புரிய வைத்தது

அவர் மதர் தெரேசாவை சந்தித்து, நெல்சன் மண்டேலாவை சந்தித்தது, மக்களுக்கு பண உதவி செய்வது போன்ற செயல்கள் முகம்மது அலி கருப்பாக இருந்தாலும் அவருடைய தூய்மையான வெள்ளை மனதை காட்டுகிறது

மகத்தானவர்களின் மகத்தானவன் என்ற வார்த்தை நூலுக்கு நூறு சதம் பொருத்தமே

திருக்குறள் எழுதினார் திருவள்ளுவர் நின்றார்.

விடுதலை தழும்புகள் எழுதினார் அகத்தியலிங்கம் நின்றார்.

நீங்கள் நானே மகத்தானவன் புத்தகத்தை எழுதினீர்கள். ஆசிரியர்கள் வரிசையில் நின்று விட்டீர்கள்

நானே மகத்தானவன் புத்தகத்தை படிப்பவர்களை ஓரளவுக்காவது இந்த புத்தகம் மகத்தானவர்களாக மாற்றும்

இப்படிக்கு

Aதோழமையுடன்

 

எம்.செல்வராஜ்

 

சிபிஐஎம் காக்காவாக்கம் கிராமம்

 தண்டலம் அஞ்சல்

 பெரியபாளையம் வழி

 திருவள்ளூர் மாவட்டம்

பின்கோடு 61108

தேசிய இனங்கள் : ஒரு நாடு 56 கலாச்சாரங்கள்

  அ.பாக்கியம் சீனாவில் இன சிறுபான்மையினரை பாதுகாப்பதிலும் வளர்த்தெடுப் பதிலும் ஒன்றுபட்ட சீனா என்ற உணர்வை உருவாக்குவதிலும் சீன கம்யூனிஸ்...