Pages

வியாழன், மே 29, 2025

22 அவமானங்களின் நூற்றாண்டு


சீன வரலாற்றில் 1848 முதல் 1949 வரை அவமானங்களின் நூற்றாண்டு என்று சீன மக்கள் அழைக்கிறார்கள். தற்போதைய சீனத்தலைவர்கள் பலரும் பேசுகிற பொழுது மீண்டும் சீனா ஒரு அவமானங்களின் நூற்றாண்டில் நுழைந்து விடக்கூடாது என்பது பற்றி அடிக்கடி எச்சரிக்கிறார்கள். மேற்கண்ட நூற்றாண்டில் பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், ஜாரிஸ்ட் ருஷியா  ஆகிய அந்நிய நாடுகளின் வேட்டைக்காடாக சீனா மாற்றப்பட்டு இருந்தது. அபினி யுத்தம் முடிந்த பிறகு சீனாவிற்கு தோல்வி ஏற்பட்டதால் அந்நிய நாடுகளுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் ஒருதலைப்பட்சமாக, சமமற்ற முறையில், சீன தேசத்தின் இறையாண்மையை பலி கொடுக்கும் ஒப்பந்தமாக இருந்தது.

மேற்கண்ட நாடுகள் சீனாவின் பல்வேறு பகுதிகளை துண்டு துண்டாக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒப்பந்தங்களுக்கு மேல் ஒப்பந்தம் செய்து கொண்டு சீன மக்களை சுரண்டினார்கள். அடிமைகளாக நடத்தினார்கள். சீனாவிற்கு எதிரா அரசியல் துறைகளிலும், பொருளாதாரத் துறைகளிலும் ஆதிக்கத்தை செலுத்தினார்கள். இந்த ஆக்கிரமிப்பு சீனாவில் இருவகை விளைவுகளை உருவாக்கியது. முதலாவதாக சீனாவின் இயற்கை பொருளாதாரத்தை சீர்குலைத்தது. முதலாளித்துவத்தின் தோற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல முதலாளித்துவ வளர்ச்சியையும் தீவிரப்படுத்தியது.

சீனாவில் இருந்த பத்தாம் பசலித்தனமான நிலப்பிரபுத்துவ சமுதாயத்தை ஒரு அரை நிலப்பிரபுத்துவ சமுதாயமாக மாற்றிக்கொண்டிருந்தது. சீனாவில் மூலப்பொருட்களை அபகரித்துக் கொள்வதன் மூலமாக, சரக்குகளை கொண்டு வந்து சீனாவில் குவிப்பது மூலமாக இயற்கை பொருளாதாரத்தை நிர்மூலமாக்கியது. சீன விவசாயிகளை சந்தையை சார்ந்து இருக்கும்படி செய்தது. இந்த விதத்தில் ஒரு சரக்கு சந்தை சீனாவில் நிர்மாணிக்கப்பட்டது. இயந்திரப் பொருட்களால் கைவினை தொழில் நசுக்கப்பட்டது. கடுமையான கடன் சுமை மற்றும் வரிகளாலும் விவசாயிகளும் கைவினை தொழிலாளர்களும் ஓட்டாண்டிகளாக மாறினார்கள். இவை தவிர சீன நாட்டின் கலாச்சார துறையில் பெரும் ஆக்கிரமிப்பை இந்த அந்நியர்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

குட்டி ஜப்பானிடம் பேரரசின் தோல்வி

1893 ஆம் ஆண்டு முதலாவது சீன ஜப்பான் போர் வெடித்தது. கொரிய தீப கற்பத்தை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதில் மோதல் துவங்கி, போராக மாறியது. இந்தப் போரில் ஜப்பான் கொரியாவை கைப்பற்றியது மட்டுமல்லாமல் சீனாவையும் வெற்றி கொண்டது. சீன நாட்டின் பல்வேறு பகுதிகளை ஜப்பான் கைப்பற்றிக் கொண்டது. சீனாவிற்கும் ஜப்பானுக்கு இடையில் ஷிமோனோக்கி என்ற இடத்தில் 1895ல் ஒப்பந்தம் நடைபெற்றது. இந்த ஒப்பந்த விதிகளின்படி

·       கொரியாவின் இறையாண்மையை சீனா அங்கீகரிக்க வேண்டும்.

·       சீனாவின் தென்கிழக்கில் உள்ள பார்மோசா, பெஸ்க்கா ஸ்டோரீஸ் தீவையும் மஞ்சூரியாவில் உள்ள லியோடுங் தீபகற்பத்தையும் சீனா, ஜப்பானிடம் கொடுத்து விட வேண்டும்.

·       யுத்தத்தில் ஏற்பட்ட நஷ்ட ஈடாக சுமார் 20 கோடி ரூபாயை 5 சதவீத வட்டியுடன் ஏழு வருஷத்திற்குள் ஜப்பானுக்கு செலுத்த வேண்டும்

·       ஜப்பான் வணிகம் நடத்துவதற்கு நான்கு துறைமுகங்களை திறந்து விட வேண்டும் என்று ஒப்பந்தமானது.

·       ஏற்கனவே சீனாவில் ஒப்பந்தம் போடுகிற ரத்துகளில் முக்கியமான ஒரு ரத்து சேர்க்கப்பட்டிருந்தது. பல நாடுகள் சீனாவை ஆக்கிரமித்து உள்ளதால் எந்த ஒரு நாட்டுடனும் தான் (சீனா) ஒப்பந்தம் போட்டு அந்த நாட்டிற்கு உரிமை அளித்தால் அந்த உரிமை ஆக்கிரமித்துள்ள மற்ற நாடுகளுக்கும் பொருந்தும் என்பதாகும். வலிமை இழந்தால் எதையும் செய்வார்கள் என்ற அடிப்படையில் ஜப்பானின் துறைமுகங்களில் மற்றவர்களும் வணிகம் செய்யலாம் மற்றவர்கள் துறைமுகத்தில் ஜப்பான் வணிகம் செய்யலாம் என்ற முறையில் இந்த ஒப்பந்தம் தானாகவே அமலாகியது.

சின்னஞ்சிறிய நாடான ஜப்பானிடம் சீனா தோல்வி அடைந்ததை பெரும் அவமானமாக சீன மக்கள் கருதினார்கள். அதே நேரத்தில் சீனாவை ஜப்பான் வெற்றி கொண்டதை மற்ற நாடுகள் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டன. காரணம் ஜப்பானும் சீனாவைப் போன்று பல நாடுகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இருந்தது. 1853 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை ஜப்பானுக்கு சென்று வணிக உரிமையை பெற்று தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினார்கள். அதன் பிறகு மற்ற நாடுகளும் சீனாவில் எப்படி நுழைந்தார்களோ அதே போன்று அங்கேயும் நுழைந்தார்கள்.

ஆனால் ஜப்பானில் வெகு விரைவான மாற்றங்கள் ஏற்பட்டு 1867 ஆம் ஆண்டு மெய்ஜி மன்னன் அதிகாரத்திற்கு வந்தார். நாட்டை நவீன தொழிற்சாலைகள், பொருள் உற்பத்திகள் என மாற்றத்தை ஏற்படுத்தி உலக சந்தையில் இடம்பிடித்தது மட்டுமல்ல ஆக்கிரமிப்பாளர்களும் வெளியேறினார்கள். ஜப்பான் வரலாற்றில் இதற்கு மெய்ஜி சகாப்தம் என்று பெயர். இந்த வளர்ச்சியும், சீனாவின் மீது ஏற்படுத்திய வெற்றியும் தான் சீன மக்களை லைகுனிய வைத்தது.

ஜப்பானின் வெற்றியை காரணமாக வைத்து பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் சீனாவில் மேலும் பல பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். சீனாவில் அந்நியர்களுக்கு எதிரான உணர்வுகள் மேலோங்கி இருந்தது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவர் சீனர்களால் படுகொலை செய்யப்பட்டால் உடனே அதை காரணம் காட்டி ஒரு துறைமுகத்தையோ அல்லது வணிகவளாகத்தையோ எழுதி வாங்கக்கூடிய முறைகளில்தான் ஜெர்மனி மற்றும் இதர நாடுகள் செயல்பட்டன. இவை மிக சாதாரணமாக நடந்து கொண்டிருப்பதை சீன மக்களால் தாங்கமுடியாமல் எதிர்க்க ஆரம்பித்தனர். 1898 ஆம் ஆண்டுகளில் அந்நிய சக்திகளின் ஊடுருவல் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியது. சீனா ஒரு அரை காலனித்துவ நாடாக இருப்பதிலிருந்து முழுமையான காலனி நாடாக மாறிவிடுமோ என்ற கேள்வியை சீன மக்கள் எதிர்கொண்டார்கள்.

சதிகள் செய்வதற்கு சளைக்கவில்லை

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் இருக்கக்கூடிய  காஷ்கர் பிரதேசத்தை தனிமைப்படுத்தி ஒரு தனி நாடாக மாற்றி விட முயற்சி செய்தார்கள். இந்தப் பகுதி சீனாவின் மேற்கு திசையில் உள்ளது. கிர்கிஸ்தான், தஜிகீஸ்தான் உடனான எல்லையில் அமைந்திருப்பது மட்டுமல்ல உலகின் மிகப் பழமையான பகுதிகளில் ஒன்று. பட்டுச் சாலையின் முக்கிய இணைப்புகளில் ஒன்றாக இருக்கக்கூடிய இந்தப் பகுதியை தனி நாடாக்குவதன் மூலம் இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிவெடுத்தார்கள். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு தோல்வி அடைந்தார்கள்.

1878 ஆம் ஆண்டுகளில் உய்குர் பிரதேசத்தில் யாகூப் பெக்கின் தலைமையில் தேசிய இன போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தை அன்றைய சீனப் பேரரசுக்கு எதிராக துருக்கி ஓட்டோமான் அரசும், பிரிட்டிஷ் நாடும் இணைந்து தூண்டி விட்டன. சீனாவின் யுன்னான் பகுதிகளில் இஸ்லாமியர்கள் கிளர்ச்சி நடத்துவதற்கு  அன்றைய பர்மாவில் தம் அமைத்துக் கொடுத்து பிரிட்டன் உதவி செய்தது. ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மக்களை சுரண்டுவது மட்டுமல்ல... சீனாவின் நீண்ட கால பூகோள அமைப்பை துண்டு துண்டாக்கி தனி நாடுகளை உருவாக்க கூடிய வேலைகளையும் இவர்கள் தங்களின் சதி கொள்கையின் மூலமாக செய்து கொண்டிருந்தார்கள்.

சொந்த மக்களுக்கு எதிராக சுய வலிமைப்படுத்தல்

ந்நிய அரசுக்கு எதிராகவும், ஆட்சியில் இருக்கும் நிலப்பிரபுத்துவ மஞ்சு பேரரசுக்கு எதிராகவும் மக்கள் போராடிக் கொண்டிருந்தனர். இந்தப் பின்னணியில் மஞ்சு பேரரசு ஒரு வலுவான ராணுவத்தை அமைத்தது. இதன் முக்கிய நோக்கம் நாட்டில் தங்கள் அரசுக்கு எதிராகவும் அந்நியர்களின் செயல்பாட்டுக்கு எதிராகவும் நடைபெறக்கூடிய விவசாய கிளர்ச்சிகளையும் இதர கிளர்ச்சிகளையும் அடக்க வேண்டும் என்பதுதான். இக்காலத்தில் நியான் கிளர்ச்சியாளர்கள் மூன்று மாநிலங்களில் கிளர்ச்சி செய்து கொண்டிருந்தனர்.  தைப்பிங் கிளர்ச்சியை அடக்கியது போன்று அந்நிய சக்திகளின் ஆதரவுடன் இந்த கிளர்ச்சிகளையும் அடக்கினார்கள். சீனாவை மேற்கத்திய நாடுகள் வெற்றி கொள்வதற்கு அவர்களின் நவீன ஆயுதங்கள் தான் அடிப்படை காரணம் என்று முடிவு எடுத்து நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து  பீரங்கிகள், நீராவி கப்பல்கள், வெடி மருந்துகள் போன்றவற்றையும் ராணுவத்தில் கொண்டுவர ஆரம்பித்தனர். 1893 ஆம் ஆண்டு ஜப்பானிய யுத்தம் துவங்கும் வரை இந்த சுய வலிமைப்படுத்தல் நடைபெற்றது.

மஞ்சு பேரரசின் திட்டத்தின் படி சுய வலிமைப்படுத்தல் வெற்றி பெறவில்லை. நவீன மயமாக்கல் துரிதமாக நடைபெறவில்லை. நிர்வாக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. சிந்தனை மாற்றங்கள் சிறிய முறையில் நடைபெறவில்லை. எனவே பலமான ராணுவம் என்பது ஜப்பானுடன் நடந்த யுத்தத்தில் பலவீனமான ராணுவமாக மாறியது. இவ்வாறு மாற்றம் செய்வதற்கு மஞ்சு பேரரசுக்கு நிதி ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இக்காலத்தில் சீனாவிற்கு முதலாளித்துவத்தின் முக்கிய அம்சமாக பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக மூலதனத்தை ஏற்றுமதி செய்யக்கூடிய நிகழ்வுகள் நடந்து கொண்டு இருந்தது. அதாவது தொழில் முதலாளித்துவம் நிதி முதலாளித்துமாக மாற்றப்பட்டது. வங்கி கடன்கள் மூலமாக கணிசமான அளவு மூலதன வருகை இருந்தது. 1895க்கும் முன்பு வெளிநாட்டு சக்திகளுக்கு சீனாவின் கடன் மிக மிகக் குறைவு. 1895 ஆம் ஆண்டுகளை தொடர்ந்து வந்த ஐந்து ஆண்டுகளில் சீன அரசாங்கம் ஜப்பானுக்கு கொடுக்க வேண்டிய போர் இழப்பீட்டுத் தொகை 50 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் ரஷ்யா, ஜெர்மன், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் இருந்து கடனாக பெற்று கொடுத்தார்கள். வெளிநாடுகளால் நிர்வகிக்கப்படும் சுங்க வரிகளின் வருவாய் சீன அரசாங்கத்திற்கு வரவில்லை. எனவே தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கு போதுமான நிதி இல்லாத பொழுது மக்கள் மீது வரிகளை சுமத்தினார்கள். அதற்கான எதிர்வினையாக மக்கள் மஞ்சு பேரரசையும் அந்நியர்களையும் எதிர்த்து களம் கண்டார்கள்.

இரு வேறு சீர்திருத்த முயற்சிகள்

ஜப்பானிடம் தோல்வி அடைந்த பிறகு மஞ்சு பேரரசில் இரு வேறு விதமான குழுக்கள் உருவாகி மோதல் ஆரம்பித்தது. இக்காலத்தில் சீர்திருத்த இயக்கம் முக்கிய அரசியல் நிகழ்வாக முன்னுக்கு வந்தது. நிலப்பிரபுத்துவ மஞ்சு அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகளும், சீனாவிற்கும் அந்நிய சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடுகளும் முன்பைவிட அதிகமாக கூர்மை அடைந்தது. தைப்பிங் என்ற பிரம்மாண்டமான விவசாய கிளர்ச்சியை மஞ்சு பேரரசு அந்நிய சக்திகளின் ஆதரவுடன் அடக்கி விட்டாலும் சீன மக்களிடம் எதிர்ப்பின் தரம் குறையவில்லை. கனன்று கொண்டிருந்தது. அடுத்தடுத்த காலங்களில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. 1870 ஆம் ஆண்டுகளில் அந்நியர்களுக்கு எதிராகவும் மஞ்சு ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் பல ரகசிய சங்கங்கள் உருவானது. இவன் தொடர்ச்சியாக கியாங்சு, கியாங்சி, சிக்கி யாக் ஆகிய இடங்களில் உருவான விவசாயிகளின் கிளர்ச்சிகள் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது.

இதே காலத்தில் சீனாவில் புதிதாக உருவாகியிருந்த முதலாளித்துவ சக்திகளுடன் இணைந்து ஆட்சியில் இருந்த நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைச் சேர்ந்த  அறிவுஜீவிகள் சீர்திருத்தங்களுக்கான முன் முயற்சிகளை எடுத்தனர். இந்த சீர்திருத்தம் மேலிருந்து துவங்கியது. நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் தற்போதைய அரசியல் பொருளாதாரம் கொள்கைகளில் மாற்றங்களை முன்வைப்பதற்கு, மேற்கத்திய நாடுகளில் இருந்து புதிய அம்சங்களை கற்றுக் கொள்வதற்கும், பழைய முறையிலான கன்பியூசியஸ் கற்றல் முறையை நீக்குவதற்கும் தீர்மானித்தார்கள். இந்த சீர்திருத்த முயற்சி தங்களின் வர்க்க நலனை பாதுகாப்பதற்காக அவர்கள் முன்னெடுத்தனர். சீன மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிரான மோதல் தீவிரமான காலத்தில் அந்நிய சக்திகளுக்கு எதிராக சீன மக்களின் தாக்குதல்கள் அதிகமான பின்னணியில் இவற்றை தடுக்கக்கூடிய முறையில் இந்த சமரச முயற்சிகள் உதவும் என்று இதில் ஈடுபட்டார்கள்.

இதே காலத்தில் இளைஞர் சக்தி வெளிக்கிளம்ப ஆரம்பித்தது. மக்களின் நலன் காக்க சீர்திருத்தங்கள் வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். 1895 ஆம் ஆண்டு சுமார் 1300 அறிஞர்கள் கையொப்பமிட்டு சீர்திருத்தங்களை முன்வைத்து பேரரசிடம் மனுவை அளித்தார்கள். இந்த மனுவில்

·       ஜப்பானுடன் ஏற்பட்ட ஷிமோனோக்கி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்,

·       அதற்குப் பொறுப்பான ராணுவ அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும்,

·       ராணுவம் சீரமைக்கப்பட வேண்டும்,

·       நாணயம் வங்கி மற்றும் அஞ்சல் துறைகள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

·       மேலும் வணிகத்திற்கு சலுகை அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுக்கு துணைப் பள்ளிகள் நூலகங்கள் போன்றவற்றை உருவாக்கி தேசியப் பெருமைக்கு சமீபத்தில் ஏற்பட்ட அவமானங்களை போக்கக்கூடிய முறையில் மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

மேற்கண்ட சீர்திருத்த கருத்துக்களை 1896 முதல் 1898 வரையில் சுமார் 25 முக்கியமான பத்திரிகைகளில் வெளியிட்டார்கள்.

சீர்திருத்த இயக்கம் நாடு முழுவதும் வேகமாக பரவி வந்தது. சீனாவின் சிந்தனையாளர்கள் சீர்திருத்தத்திற்கு தேவையான சித்தாந்தங்களையும், வழிமுறைகளையும் வடிவமைத்து கொடுத்தனர். அவர்களில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர் காங் யூ வெய் என்பவர் ஆவார். இவர் ஒரு அதிகாரத்தில் இருந்த  நில உரிமையாளர் குடும்பத்தில் பிறந்தவர். கன்பியூசிய வழியில் கல்வி கற்றவர். 1891 ஆம் ஆண்டு கேன்டன் நகரில் கன்பியூசிய முறையில் ஒரு பள்ளியை துவக்கினார். கன்பூசிய சிந்தனைகளை சீர்திருத்த முறையில் போதிக்க ஆரம்பித்தார்.

இவரின் எழுத்துக்கள் நவீன சீனாவின் அறிவுசார் பரிணாம வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரைப் பற்றி மாசேதுங் தனது எழுத்துக்களில் குறிப்பிடுகிறார். எதிர்கால கம்யூனிச சமுதாயம் பற்றிய ஒரு கற்பனவாத சித்தாந்தத்தை இவர் வழங்கினார் என்று மாவோ குறிப்பிடுகிறார். வேறு சில கம்யூனிஸ்டுகள் இவர் கன்பியூசியம் மற்றும் பேரரசின் சீர்திருத்த செயல்களை சார்ந்து இருந்தார் என்பதாக விமர்சிக்கிறார்கள். சீர்திருத்தவாதிகள் மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பழமைவாதிகளை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு இருந்தனர்.

நூறு நாள் சீர்திருத்தம்

சீனாவில் அந்நிய சக்திகளால் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள் மூலமாக தோன்றிய முதலாளித்துவ வர்க்கமும், வணிகர்களும், வங்கியாளர்களும் சீர்திருத்த இயக்கத்தை ஆதரித்தார்கள். கிராமப்புற அறிஞர்கள் அறிவு ஜீவிகளாக மாறத் தொடங்கினர். மக்களும் போராட்டக் களத்தில் இருந்தனர். எனவே 1898 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி வரை நூறு நாட்கள் சீர்திருத்தம் நடத்துவது என்று ஆணைகள் வெளியிடப்பட்டது. நிர்வாகம், கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பயனற்ற அலுவலகங்கள் மூடப்பட்டது. தேவையற்ற பதவிகள் நீக்கப்பட்டன. மஞ்சுக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட மானியங்கள் ரத்து செய்யப்பட்டன. மஞ்சு பேரரசின் அனைத்து அதிகாரிகளும் பேரரசிடம் நேரடியாக பரிந்துரை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டார்கள். பயன்பாட்டில் இல்லாதபோன கோயில்கள், பள்ளிகளாக மாற்றப்பட்டன. பீகிங் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. பள்ளிகளில் அறிவியல் மற்றும் அரசியல் பாடங்களாக கற்பிக்கப்பட்டன. ஆய்வு சங்கங்கள் அனுமதிக்கப்பட்டது. செய்தித்தாள்கள் செயல்படுவதற்கும் பட்ஜெட்டை தயாரிப்பதற்கும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

இவற்றையெல்லாம் அமல்படுத்துவதற்கும், மஞ்சு அரசுக்கு எதிரான உணர்வுகள் மக்களிடம் வெடிக்காமல் இருக்கவும் பேரரசர் குவாங்சுவிடம் பேரரசி சூ சி அதிகாரத்தை ஒப்படைத்தார்.

அதிகாரத்தை ஒப்படைத்த பேரரசி சூ சி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றக் கூடிய தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பேரரசர் குவாங்சு தன்னை கொலை செய்ய திட்டமிட்டார் என்றும், வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறார் என்றும் வதந்தியை பரப்பி அவரை சிறை பிடித்தது மட்டுமல்ல பல சீர்திருத்த அறிஞர்களையும் பேரரசி சூ சி  தூக்கிலிட்டார். அத்துடன் நிற்கவில்லை, சீர்திருத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட பீகிங் பல்கலைக்கழகத்தை தவிர மற்ற அனைத்தையும் ரத்து செய்தார். 100 நாள் சீர்திருத்தத்தின் இந்த தோல்வி மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தியது. சீர்திருத்தத் திட்டம் விவசாயத்தை முற்றிலுமாக குறைத்து இருந்தாலும் எதிர்காலத்தில் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த மேல் தட்டு வர்க்கத்தின் மீது கவனம் செலுத்தியது.

சீர்திருத்தவாதிகள் ஒரு பக்கம் அந்நியர்களை எதிர்த்தார்கள். மறுபுறம் மேற்கத்திய மயமாக்கல் அமலாக்க வேண்டும் என்று விரும்பினார்கள். இவை இரண்டுக்குமான முரண்பாடுகள் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியது. ஒரு பெரிய சக்தி வாய்ந்த மக்கள் இயக்கத்தை உருவாக்க முடியவில்லை என்றாலும் அந்த இயக்கத்தின் தலைவர்கள் தொலைநோக்குப் பார்வையை கொண்டிருந்ததால்  பேரரசியுடன் மோதலை தவிர்த்து இருக்கலாம் என்று பலரும் பிற்காலத்தில் கருத்து தெரிவித்தார்கள்.

மிகக் குறுகிய காலமாக இருந்தாலும் 100 நாட்கள் என்ற சீர்திருத்த முயற்சி நாட்டில் ஒரு ஆழமான அடையாளத்தை விட்டுச் சென்றது. காரணம் படித்த மக்களிடத்தில் அரசியல் மாற்றம் மற்றும் புதிய முயற்சிகள் போன்ற அம்சங்களை விட்டுவிட்டு சென்றது. எனவே பலரும் நவீன பள்ளிகளை நிறுவுவது, உள்ளூர் சமூகங்களுக்கு ஏற்ற வகையில் செயல்படுவது என்று இறங்கினர். அமைதியான மாற்றம் தோல்விக்கு வழிவகுக்கும் என்பதை சீர்திருத்தவாதிகள் உணர்ந்தனர் புரட்சியை நோக்கி திரும்பினர்.

குத்துச்சண்டை வீரர்களின கிளர்ச்சி

நூறு நாள் சீர்திருத்த தோல்விக்கு பிறகு மக்கள் போராட்ட வழிக்கு திரும்பினார்கள். வட சீனாவில் மஞ்சள் நதியில் வெள்ளமும் அடுத்து  வறட்சியும் ஏற்பட்டது. வரிகளை பல மடங்கு உயர்த்தினார்கள். இவற்றுக்கு எல்லாம் அந்நிய சக்திகள் தான் காரணம் என்று குத்துச்சண்டை கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டினார்கள். 1899 ஆம் ஆண்டு முதல் 1901ஆம் ஆண்டு வரை சீனாவில் குத்துச்சண்டை கிளர்ச்சி தீவிரமாக பரவியது.  இந்த கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் குத்துச்சண்டை தற்காப்பு பயிற்சியில் ஈடுபட்டதால் இந்த பெயரில் அழைக்கப்பட்டார்கள். அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், சீன கலாச்சாரத்துக்குள் ஆதிக்கம் செலுத்தும் கிறிஸ்துவ பிரச்சாரங்கள் எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டார்கள். கிறிஸ்துவ மெஷினரிகளுக்கு சலுகைகள் தொடர்ந்து நீடிக்கப்படுவதை எதிர்த்தார்கள். 1899 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இயக்கம் ஷான்டாங் மற்றும் வடசீனாவின் சமவெளி பகுதிகளில் பரவியது. ரயில் பாதைகள் உட்பட வெளிநாட்டு சொத்துக்களை அழிப்பதும் வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்தக்கூடிய வேலைகளையும் செய்தார்கள்.

1900 ஆம் ஆண்டு குத்துச்சண்டை கிளர்ச்சியாளர்கள் பெய்ஜிங் நகரத்தில் ஒன்று கூடினார்கள். இது கிளர்ச்சியின் உச்சகட்டத்தை எட்டிய செயலாகும். பெய்ஜிங் நகரில் உள்ள அந்நிய நாட்டு ராஜதந்திரிகள், கிறிஸ்துவ மிஷனரிகள், அந்நிய வீரர்கள் போன்ற பலரும் குத்துச்சண்டை கிளர்ச்சியாளர்களுக்கு பயந்து ஒரு இடத்தில் ஞ்சம் அடைந்தனர். அந்த இடத்தை குத்துச்சண்டை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டார்கள். இந்த முற்றுகை 55 நாட்கள் நீடித்தது. அமெரிக்கா, ஆஸ்ட்ரோ-அங்கேரியா, பிரிட்டிஷ், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய எட்டு நாடுகளின் கூட்டணி படை முற்றுகையிலிருந்து ராஜதந்திரிகளை பாதுகாக்க சீனாவிற்குள் நுழைந்தது. ஜூன் மாதம் 17ஆம் தேதி தியான்ஜினில் உள்ள டாகு கோட்டையை தாக்கினார்கள். சீனப் பேரரசி முதலில் பாக்ஸர்களை ஆதரித்தார். அவரது உத்தரவை ராணுவம் முழுமையாக ஆதரிக்கவில்லை. இதனால் மஞ்சு அரசின் ஜெனரல் ரோங்கலு வெளிநாட்டு பிரஜைகளை பாதுகாக்க செயல்பட்டார். தெற்கு மாகாணங்களின் அதிகாரிகள் வெளிநாட்டிற்கு எதிராக போராடும் உத்தரவை புறக்கணித்தனர்.

எட்டு நாடுகளின் கூட்டணிகள் முதலில் குத்துச்சண்டை வீரர்களின் கிளர்ச்சியை வெற்றிகொள்ள முடியவில்லை. மீண்டும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆயுதமேந்திய துருப்புகளை சீனாவிற்கு கொண்டு வந்தார்கள். முதலில் தியான்ஜெனில் சீன ராணுவத்தை தோற்கடித்து ஆகஸ்ட் 14 அன்று பெய்ஜிங்கை வந்தடைந்தனர். வெளிநாட்டின் பிரதிநிதிகள் 55 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்கள். அந்நிய படைகள் பெய்ஜிங் தலைநகரம், அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களையும் கொள்ளை அடித்து சூறையாடினார்கள். கிளர்ச்சியாளர்களை பழிவாங்க யாரையெல்லாம் சந்தேகப்படுகிறார்களோ அவர்களையெல்லாம் தூக்கிலிட்டனர். இதேபோன்று 1901 செப்டம்பர் ஏழாம் தேதி குத்துச்சண்டை கிளர்ச்சியாளர்களின் கிளர்ச்சியை ஆதரித்த அரசாங்க அதிகாரிகளை தூக்கிலிட்டனர். வெளிநாட்டு துருப்புகளை பெய்ஜிங் நகரில் நிறுத்துவதற்கும், 1901 செப்டம்பர் 7ஆம் தேதி மஞ்சு பேரரசுக்கும் எட்டு நாடுகளின் கூட்டணிக்கும் பாக்ஸர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி குத்துச்சண்டை கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்த 10 உயர் அதிகாரிகளையும், வெளிநாட்டினரை படுகொலை செய்தற்காக குற்றவாளிகளாக கண்டறியப்பட்ட பிற அதிகாரிகளையும் தூக்கிலிட உத்தரவிடப்பட்டது. சீனா போர் இழப்பீடாக எட்டு நாடுகளுக்கு 450 மில்லியன் நல்ல வெள்ளி அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த இழப்பீடுகள் 39 ஆண்டுகளுக்குள் செலுத்தப்பட வேண்டும். இந்த இழப்பீடுகளை எப்படி கட்ட வேண்டும் என்பதையும் அந்நிய சக்திகள் உத்தரவிட்டன. ஏற்கனவே உள்ள வரி 3.18 சதவீதத்திலிருந்து 5% ஆக அதிகரிக்க வேண்டும். இதற்கு முன் எந்த பொருட்களுக்கு எல்லாம் வரி இல்லையோ அதன் மீது வரிகள் விதிக்கப்பட வேண்டும். சீன அரசாங்கத்தின் ஆண்டு வருவாயை விட அபராத தொகை அதிகமாக இருந்தது.

இதன் விளைவாக சீன மக்களும் அறிவு ஜீவிகளும் மேற்கத்திய கல்வியால் பயன்பெற்ற பலரும் அரசுக்கு எதிராக அன்னியருக்கு எதிராக புதிய களம் அமைத்தனர். சீன வரலாற்றில் புரட்சிகளுக்கும் கிளர்ச்சிகளுக்கும் முடிவே இல்லை என்ற தொடர்கள் மீண்டும் அரங்கேறியது.

அ.பாக்கியம்

 

வியாழன், மே 22, 2025

ஐரோப்பாவில் மதம்-சீனாவில் அபினி

 

– அ.பாக்கியம்  

மேற்கத்திய முதலாளித்துவம் எந்த இடத்திற்கெல்லாம் சென்றதோ அந்த  இடத்தில் உள்ள மக்களை சுரண்டுவதற்கு மதத்தை பயன்படுத்தியது. மக்கள் துன்பப்படுவதற்கும், மணிக்கணக்கில் உழைப்பதற்கும், நாங்கள் (முதலாளிகள்) காரணம் அல்ல, இறைவன் வகுத்த விதி என்று மக்களை மூட நம்பிக்கையில் மூழ்கடித்தார்கள்.

காரல் மார்க்ஸ் மதத்துடன் அபினியை அடையாளப்படுத்தி எழுதி இருப்பார். “மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு. இதயமற்ற உலகின் இதயம். ஆன்மா இல்லாத உலகின் ஆன்மாவாக இருப்பது போல அது மக்களின் அபின்” என்றார். முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், தொழிலாளி வர்க்கத்தை ஒடுக்கவும் பயன்படும் ஒரு கருவியாக மதத்தை, மார்க்ஸ் கருதினார்.

அதாவது முதலாளித்துவ சமூகத்தில் வாழ்க்கையின் கடுமையான நிலைமைகளிலிருந்து, தற்காலிகமாக தப்பிக்கவே மதம் உதவுகிறது. அதே நேரத்தில் மதம் ஆறுதலை அளிப்பதுடன், தவறான மகிழ்ச்சி உணர்வுகளையும் வழங்குகிறது என்று மார்க்ஸ் கருதினார். இந்த தவறான மகிழ்ச்சி உணர்வுகள் மக்கள் தங்கள் துன்பத்திற்கான மூல காரணங்களை கண்டுபிடிப்பதிலிருந்து திசை திருப்பப்படுகிறது என்பதை காரல் மார்க்ஸ் திட்டவட்டமாக நிரூபித்தார். போதைப்பொருளான அபினி, அதை உட்கொள்ளுபவரின் மூளையில் மாயத் தோற்றங்களை உருவாக்கி சிந்தனைகளை சிதைப்பது போல், மதம் ஒரு சிதைந்த உலக கண்ணோட்டத்தை அளிக்கிறது. பூமியில் உள்ள துயரங்களுக்கு எந்த தீர்வையும் வழங்காமல், மறுமை வாழ்க்கையின் மகிழ்ச்சிக்காக வாக்குறுதியை வழங்குகிறது.

மேற்கத்திய முதலாளித்துவம் ஐரோப்பாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் வணிகத்தின் வழியாக நுழைந்து இங்கிருந்த மத மோதல்களை பயன்படுத்திக் கொண்டு தங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள். பிரித்தாளும் சூழ்ச்சி என்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கி இந்தியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சீனாவில் மதம் என்பது மாறுபட்ட முறையில் உருவாகி வளர்ந்தது. அங்கு உருவான வாழ்க்கை நெறிமுறைகளே பிற்காலத்தில் மதம் என்ற வரையறைக்குள் பேரரசுகள் கொண்டு வந்தனர். அங்கு உருவான சில மதங்களும், சீனாவிற்குள் சென்ற பௌத்தமும் கடவுள் என்ற கொள்கையை முன் வைக்கவில்லை. சீனத் தன்மைகளை உள்வாங்கிய பிறகு தான் பௌத்தமும் சீனாவில் செல்வாக்கு பெற முடிந்தது.  தாவோயிசமும், பௌத்தமும் பல நேரங்களில் அரசை எதிர்த்த கிளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்தது. எனவே பிரிட்டிஷார் மற்றும் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் சீனாவிற்கு வணிகம் வழியாக உள்ளே நுழைந்தாலும் மதத்தை பயன்படுத்த முடியவில்லை.

அதே நேரத்தில் தங்களுக்கு ஏற்பட்ட வணிக தடைகளை எதிர்கொள்வதற்கு உடனடியாக படையெடுப்பையும் நடத்தவில்லை. காரணம் 19 ஆம் நூற்றாண்டு வரை சீனா ஒரு வலிமை வாய்ந்த நாடு என்ற எண்ணம் பிரிட்டிஷாரிடம் மட்டுமல்ல, மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளிடம் வலுவாக இருந்தது. எனவே ஐரோப்பாவில் மதத்தை அபினிபோன்று பயன்படுத்தியவர்கள் சீனாவில் அபினியை பயன்படுத்தி அந்த நாட்டை சீர்குலைத்து தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.

சமூகத்தையும், அந்நிய எதிர்ப்புணர்வையும், அரசு கட்டமைப்பையும் சீர்குலைத்த பிறகு தங்களது படைகளை கொண்டு சீனாவை வெற்றி கொண்டனர். சீன நாட்டை பிரிட்டிஷார் மட்டுமல்ல, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின், பிற்காலத்தில் ஜப்பான் என்று அனைவரும் கூறு போட்டனர். அபினி என்ற போதை வஸ்துகளை அறியாத சீனாவின் மீது அபினியை திணித்து சீனாவின் ஆணிவேரையே அசைத்து விட்டார்கள்.

முதல் அபினி போர் 

முதல் அபினி போர் 1839 ஆம் ஆண்டு முதல் 1842 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. இந்தப் போரை ஆங்கிலோ-சீனப் போர் என்று அழைப்பார்கள்.  காரணம் சீனா மற்றும் பிரிட்டிஷ் படைகளுக்கு இடையில் மட்டுமே இந்த போர் நடந்தது. இரண்டாவது அபினி போர் பல நாடுகளின் கூட்டணியுடன் நடந்தது. முதல் அபினி போர் மூன்றாண்டுகள் கான்டன் துறைமுகத்தை மையப்படுத்தியும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் நடைபெற்றது.

கான்டன் துறைமுகத்தில் மட்டும்தான் அந்நிய நாடுகள் வணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த வணிக முறைகளும் மிக மிகக் கடுமையான நிபந்தனைகளால் கட்டுப்படுத்தப்பட்டது. சீன மக்களும், சீன அரசும் அந்நியர்களின் வருகையை ஆதரிக்கவில்லை. அதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லை என்ற நிலை இருந்தது. கட்டுப்பாடுகளின் விதிகளே இதை நமக்கு விளக்கும்.

  1. அந்நியர்களின் யுத்தக் கப்பல் துறைமுகத்திற்குள் வரக்கூடாது.
  2. கான்டன் துறைமுகப் பகுதியில் உள்ள கிடங்குகளுக்கு பீரங்கி, ஈட்டி முதலிய ஆயுதங்களை கொண்டு வரக்கூடாது.
  3. சீன வியாபாரிகள் அந்நியர்களிடம் கடன் வாங்க கூடாது.
  4. சரக்கு கிடங்குகளை அந்நியர்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது.
  5. அந்நிய வியாபாரிகள் சீனர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளக் கூடாது.
  6. எந்த ஒரு சீனனும் அந்நியர்களை டோலி என்ற மனிதர்களை தூக்கிச் செல்லும் வண்டியில் வைத்து தூக்கிச் செல்லக்கூடாது.
  7. கான்டன் துறைமுகப் பகுதியில் இருக்கும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அன்னியர்கள் செல்ல வேண்டும்.
  8. அவ்வாறு செல்லுகிற பொழுது ஒரு சீனரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.
  9. ஐரோப்பியர்கள் வியாபாரம் செய்யக்கூடிய நாட்களைத் தவிர மற்ற காலங்களில் கான்டன் துறைமுகத்தில் தங்கியிருக்கக் கூடாது. அவர்கள் மக்காவ்வுக்கு சென்று விட வேண்டும். இது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் ஐரோப்பியர்களை கடுப்பாக்கியது.

இத்தனை கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தான் பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்து அபினி போதை வஸ்துகளை பெட்டி பெட்டியாக கடத்திக் கொண்டு இருந்தார்கள். சீன அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும், மற்ற வகைகளிலும் இந்த வேலையை பிரிட்டிஷார் செய்தனர். பிரிட்டிஷாரின் நோக்கம் சீனா முழுவதும் வர்த்தகம் செய்ய வேண்டும், அபினி வர்த்தகத்தை சட்டபூர்வமாக்க வேண்டும். சுதந்திர வாணிபம் என்ற கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள்.

இதே காலத்தில் பிரிட்டிஷ் வணிகர்களின் செல்வாக்கிற்கு உட்பட்ட அதிகாரிகள் சீன மன்னருக்கு ஆலோசனைகளை முன் வைத்தார்கள். அபினி வியாபாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும். அதற்கு வரி விதித்தால் வருமானம் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர். அன்றைய தினம் ஆட்சி செய்த அரசர் இந்த ஆலோசனைகளை நிராகரித்தது மட்டுமல்ல அபினி கடத்தலை தடுப்பதற்கு  நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அந்நியர்கள் வணிகம் செய்யும், அபினி கடத்தலின் மையமாக இருக்கக்கூடிய கான்டன் துறைமுகப் பகுதிக்கு லின் என்ற சிறப்பு தளபதியை மன்னர் அனுப்பி வைத்தார். அவர் கான்டன் பகுதிக்குச் சென்று அங்கு இருந்த பிரிட்டிஷார் உட்பட இதர அந்நிய நாட்டு வியாபாரிகளிடம் அபினி கடத்தினால் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்தார். அத்துடன் நிறுத்தவில்லை. கிடங்குகளில் வந்து இறங்கிய சுமார் 1420 டன் அபினி பெட்டிகளை பறிமுதல் செய்தார். அவற்றை மீண்டும் பயன்படுத்தாத வகையில் அங்கிருந்த கடற்கரையில் மிக பிரம்மாண்டமான குழியை வெட்டி அதில் போட்டு எரித்தார். பின்னர் அவற்றை கடலில் கலக்க விட்டார். இந்த செயல் அதிகளவில் அபினி கடத்திய பிரிட்டிஷாரை மிகப் பெரிய அளவிற்கு பாதித்தது. இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் இதைப் பற்றி அந்நாட்டினுடைய தலைவர்கள் பேசினார்கள். சீனா தங்கள் நாட்டு வணிகர்களை அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டினார்கள்.

பிரிட்டிஷார், உடனடியாக  படையெடுப்பை நடத்தாமல் பறிமுதல் செய்யப்பட்ட தங்களின்  சரக்குகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சீனாவில் இருக்கக்கூடிய அந்நிய நாட்டு வணிகப் பிரதிநிதிகளை சமமாக நடத்த வேண்டும் என்றும், நாடு முழுவதும் வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்கள். இந்தக் கோரிக்கை பிரிட்டிஷார் சீனாவுக்குள் நுழைந்ததிலிருந்து தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். ஏற்கனவே 1793 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னன் சீனாவில் வணிக உரிமைகளுக்காக அனுமதி வழங்க வேண்டும் என்று 100 பேர் அடங்கிய பெரும் தூதுக்குழுவை அனுப்பி வைத்தார்.

  1. பீகிங் நகரத்தில் பிரிட்டிஷ் பிரதிநிதிகள் தங்க வேண்டும்.
  2. அவர்கள் சீன அதிகாரிகளுடன் சமமாக நடத்தப்பட வேண்டும்.
  3. கிறிஸ்துவ மதத்தை பிரச்சாரம் செய்யவும், கிறிஸ்துவ மத நிறுவனங்கள் சொத்துக்களை வாங்கவும் அனுமதிக்க வேண்டும்.
  4. வேறு சில துறைமுகங்களையும் வணிகத்திற்கு பயன்படுத்த திறந்து விட வேண்டும் என்று கடிதம் எழுதினார்கள்.

இவை எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

எனவே தற்போதைய சீன அரசின் நடவடிக்கைகள் பிரிட்டிஷாரின் கொள்ளையடிக்கும் காலனித்துவ ஆதிக்கத்தை தடுப்பதாக இருந்தது. எனவே 1840 ஆம் ஆண்டு ஹாங்காங் வழியாக பெரும் கடற்படைகளை அதாவது 6000 க்கும்  மேற்பட்ட பிரிட்டிஷ் ராயல் படை, 5000 க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்களையும் போருக்கு  அனுப்பி வைத்தார்கள். பிரிட்டிஷாரின் நவீன ஆயுதங்களும், கப்பற்படையும் சீனாவை சிதறடித்தது. மூன்றாண்டுகள் நடைபெற்ற யுத்தத்தில் பிரிட்டிஷ் படைகள் வெற்றி பெற்றன. சீனா முழுமைக்கும் அல்ல ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் இந்த வெற்றியின் அடிப்படையில் சீன அரசுடன் நான்கிங் என்ற இடத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

இரண்டாவது அபினி போர் 

இந்த யுத்தம் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய கூட்டுப் படைகளுக்கும், சீனாவிற்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் ஆகும். 1856 முதல் 1860 ஆம் ஆண்டு வரையில் இந்த யுத்தம் நடைபெற்றது. பிரிட்டிஷ் படைகளும், பிரான்ஸ் நாட்டுப் படைகளும் பெரும் தாக்குதலை நடத்தி கான்டன் நகரத்தை முழுமையாக கைப்பற்றினார்கள். கான்டன் நகரத்து ஆளுநர் பிரிட்டிஷ் படையிடம் சரணடைந்தார். பின் இப்படை 1858 ஆம் ஆண்டு சீனாவின் வடக்கு பகுதிகளில் உள்ள கோட்டைகளையும் சில முக்கிய நகரங்களையும் கைப்பற்றியது.

முதல் அபினி யுத்தத்தில் நாட்டை பிடிப்பது நடக்கவில்லை. அதற்கு மாறாக ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. கான்டன் துறைமுகம் உட்பட சில துறைமுகங்களை ஐரோப்பிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. 1858 இல் பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் படைகளுடன் டீன்ட்சின் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பேரரசர் அங்கீகரிக்க மறுத்ததால் மீண்டும் கூட்டணிப் படைகள் தாக்குதலை நடத்தின. அதன் விளைவாக 1860 ஆம் ஆண்டு கூட்டணி படைகளுடன் பீகிங் நகரத்தில் பீகிங் ஒப்பந்தம்ஏற்பட்டதனால் இரண்டாம் அபினி போர் முடிவுக்கு வந்தது.

குட்ட குட்ட குனிந்தார்கள் 

முதல் அபினி போரில் தோல்வி அடைந்த சீனா நான்கிங் என்ற இடத்தில் பிரிட்டிஷாருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் முதன்முதலாக நடைபெற்ற ஏற்றத்தாழ்வான ஒப்பந்தம் இதுவாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீனா, தன்னுடைய எதிர்கால வாழ்வையே ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் அடமானம் வைத்தது என்றால் மிகையாகாது.

தனது இறையாண்மை மற்றும் பொருளாதார சுய நிர்ணயத்தையும் அந்நியர்கள் தான் நிர்ணயிக்க வேண்டும் என்ற அளவிற்கு இடம் கொடுத்து விட்டது. எப்படி ஹாங்கு வணிக முறைகளில் சீனா கடுமையான நிபந்தனைகளை விதித்ததோ, 1793 ஆம் ஆண்டு மூன்றாம் ஜார்ஜ் மன்னர் அனுப்பிய தூதுக்குழுவை நிராகரித்ததோ அந்த நிலையில் இருந்து தலைகீழ் மாற்றம் இந்த ஒப்பந்தத்தில் இருந்தது.

சீன அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்ட அபினிக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமல்ல, பிரிட்டிஷார் நடத்திய போருக்கு ஆன செலவுகளுக்கும் சீனா பணம் கொடுக்க வேண்டும் என்ற சரத்தை திணித்தார்கள். அதன்படி 21.10 மில்லியன் டாலர் பணத்தை நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும். இந்தத் தொகையை மூன்று ஆண்டுகளுக்குள் வெள்ளி கட்டியாக ஒப்படைக்க வேண்டும் என்பது முதல் விதி. அத்துடன் மட்டுமல்ல ஹாங்காங் என்ற தீவை பிரிட்டிஷார் தங்களுடைய கப்பல் வந்து செல்வதற்கான இடமாக பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹாங்காங் தீவு முழுவதும் பிரிட்டிஷருக்கு கொடுக்கப்பட்டது.

இதைத் தவிர ஷாங்காய் உட்பட மேலும் 4 துறைமுகங்கள் பிரிட்டிஷாருக்கு கொடுக்கப்பட்டது. மேற்கண்ட துறைமுகங்களில் வியாபாரம் செய்யவும், தங்களுடைய கிடங்குகளை, நிறுவனங்களை அமைத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதுவரை செயலில் இருந்த ஹாங்கு வியாபார முறைகள் ரத்து செய்யப்பட்டது. சுங்க வரிகள் குறைக்கப்பட்டது மட்டுமல்ல, பிரிட்டிஷ் வணிக பிரதிநிதிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் சீன அரசில் சமமாக நடத்த வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.

எனினும் அந்நியர்களுக்கு எதிரான வலுவான போராட்டங்கள் சீனாவில் பல இடங்களில் நடந்து கொண்டே இருந்தன. சீன அரசும் வேறு சில பகுதிகளில் அந்நியர்களை நுழைய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. இதன் விளைவாக நடைபெற்ற இரண்டாவது அபினி போரின் முடிவில் அதாவது 1858 ஆம் ஆண்டு டீன்ட்சின் என்ற ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் சீன அரசுடன் தங்கள் பகுதிகளுக்கான முறையில் தனித்தனியான ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டார்கள். ஆனாலும் இவை அனைத்துமே ஒரே விதமான சரத்துகளை கொண்டிருந்தன.

இந்த ஒப்பந்தத்தின் படி ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பிரஜைகள் பீகிங் நகரத்தில் வசிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களுக்கான பாதுகாப்பை சீன அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் போடப்பட்டது. கிறிஸ்துவ மதத்தை போதிக்கிறவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், அவர்களின் விவகாரங்களில் சீன அரசு தலையிடக்கூடாது என்று ஒப்பந்தத்தில் சேர்த்தனர். அந்நிய நாட்டினர் வியாபார நிமித்தமாக உள்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் அனுமதி சீட்டுடன் தங்கலாம்.

அவர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டால் அவர்களை அந்நிய நாட்டு நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமே தவிர சீன சட்டங்களில் தண்டிக்க கூடாது. “முதல் அபினி யுத்தத்தின் முடிவில் ஏற்பட்ட நான்கிங் ஒப்பந்தத்திற்கு இதற்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உள்ளது. முதல் ஒப்பந்தத்தில் அபினி வியாபாரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தில் அபினியை வியாபாரம் செய்வது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது என்பது தான் மிக முக்கிய அம்சம்”. 

சீன மக்களை அபினிக்கு அடிமையாக்கி, காலப்போக்கில் சீனாவின் அதிகாரத்தைகைப்பற்றி, போதை வஸ்துவையும் சட்டபூர்வமாக்கிவிட்டார்கள் காலனித்துவவாதிகள்.

இரண்டாம் அபினி யுத்தம் நடைபெற்று முடியும் தருவாயில் 1860 ஆம் ஆண்டு பிரிட்டனும், பிரான்சும் சீனாவுடன் தனித்தனியான பீகிங் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டன. இந்த ஒப்பந்தத்தின் படி ஹாங்காங் தீவுக்கு எதிரே உள்ள இரண்டு முக்கிய தீவுகள் பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 11 துறைமுகங்கள் பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த இரு நாடுகளும் கொண்டு வரும் வணிகப் பொருட்களுக்கு இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் மற்றொரு முக்கிய சரத்து சேர்க்கப்பட்டது. சீனர்கள் அந்நியர்களை விட மேலானவர்கள் என்ற நடைமுறையை இந்த ஒப்பந்தம் தகர்த்தது. இது நாள் வரை சீனர்கள் அந்நிய நிறுவனங்களில் வேலை பார்ப்பது கௌரவ குறைச்சலாக பார்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அதற்கான தடை நீக்கப்பட்டு அந்நியர்களின் நிறுவனங்களில், வணிக கப்பல்களில், கிடங்குகளில் சீனர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சீனர்களை வெளிநாடுகளுக்கு கூலி அடிமைகளாக அழைத்துச் செல்வதை சீன மன்னர்கள் தடுத்திருந்தார்கள். 1857 ஆம் ஆண்டு இது கடுமையாகவே அமல்படுத்தப்பட்டது. ஆனால் பீகிங் ஒப்பந்தத்தின் மூலம் இந்த தடைகள் நீக்கப்பட்டு சீன கூலிகளை சட்ட ரீதியாகவே ஏற்றுமதி செய்ய அனுமதித்தனர். 3 ஆயிரத்துக்கு அதிகமான சீனர்களை மேற்கத்திய தீவுகளுக்கு கூலிகள் ஆக அழைத்துச் சென்றனர். இத்துடன் விடவில்லை சீன அரசாங்கம் பிரான்சுக்கும், பிரிட்டனுக்கும் இக்காலத்தில் ஏற்பட்ட இழப்பிற்கு நஷ்ட ஈடு தொகை வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. 1861 ஆம் ஆண்டு மஞ்சூரியாவிற்கு வெளியே உள்ள பெரும் பகுதி அனைத்தும் ரஷ்யப்படைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போடுகிற இடத்திற்கு சீனா வந்து சேர்ந்தது. மேற்கண்ட முக்கிய ஒப்பந்தங்கள் தவிர பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் வெற்றி பெற்ற அந்நிய சக்திகள் ஆங்காங்கே தனித்தனியான ஒப்பந்தங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தன. இவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது 1876 ஆம் ஆண்டு சாங்டோம் மாகாணத்தில் உள்ள சே பூ  என்ற இடத்தில் நடைபெற்ற ஒப்பந்தம் ஆகும்.

சீனாவில் உள்ள யுன்னான் மாகாணத்திற்கும் பர்மாவிற்கும் வியாபாரம் நடைபெறுவதற்கான திட்டங்கள் உருவாக்க ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியாவிலிருந்து மேலும் ஒரு பிரதிநிதி குழு யூன்னான் வருவதற்கும், பிரிட்டிஷர்கள் யுன்னானில் மேலும் 5 வருடம் தொடர்ந்து தங்குவதற்கும் அனுமதிக்கப்பட்டது.

மோதல்களில் சீனர்களால் படுகொலை செய்யப்பட்ட பிரிட்டிஷருக்கு நஷ்டஈடு தொகையாகவும், பிரிட்டிஷ் தூதுக்குழு வந்து போன செலவுகளுக்காகவும் சுமார் பத்து லட்சம் ரூபாய் சீன அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. இதைவிட கீழான ஒரு நிகழ்வு சீனா பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு மன்னிப்பு கடிதம் எழுதி லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இப்போது பிரிட்டிஷார் கையில் அதிகாரம் இருப்பதால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை சீன அரசு எப்படி வரவேற்க வேண்டும் என்ற விதிகளை அவர்கள் உருவாக்கினார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் மேலும் நான்கு துறைமுகங்கள் அந்நியர்களின் வணிகத்திற்கு தாரை வார்க்கப்பட்டது. சீனாவில் உள்நாட்டு கலகம் ஏற்படுகிறது என்ற காரணத்தைச் சொல்லி ரஷ்யா உட்பட பல நாடுகள் ஏராளமான படைகளை இறக்கி தங்கள் பகுதிகளை பலப்படுத்திக் கொண்டன.

மேற்கண்ட முக்கிய ஒப்பந்தங்கள் தவிர இன்னும் பல துணை ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சீனாவில் வணிகம் செய்வது என்ற பெயரில் பல நாடுகள் சீனாவின் மீது படையெடுத்து வந்து ஆக்கிரமித்தார்கள். சீனாவின் பல பகுதிகளில் யுத்த பிரபுக்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டினார்கள். சீனா ஒரு குறிப்பிட்ட நாட்டின் காலனியாக மட்டும் இல்லை, பல நாடுகளின் காலனியாக துண்டு துண்டாக இருந்தது. சீன நாடு முழுவதும் காலனித்துவத்திற்கு உள்ளாக்கப்படவில்லை. கடற்கரை ஓரம் துறைமுகங்கள், நதிக்கரை பகுதிகள் போன்ற இடங்களில் அந்நியர்கள் ஆட்சி நடைபெற்றது.

மேற்கத்திய முதலாளித்துவ சக்திகள் தங்களுடைய சுரண்டலுக்காக எத்தகைய செயல்களை எல்லாம் செய்வார்கள் என்பதற்கு வரலாற்று நெடுகிலும் கரை புரண்டு ஓடக்கூடிய ரத்த ஆறுகளே சாட்சியங்களாக  உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சீனாவிற்குள் மேற்கத்திய முதலாளித்துவம் நுழைந்த முறைகள். மனிதத் தன்மையற்ற முறையில் சீன மக்களை சுரண்டியது, கொடுமைப்படுத்தியது, அவமானப்படுத்தியது என எத்தகைய இழிச்செயல்களையும் அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். பாரம்பரிய சீனாவின் போராட்ட முறைகள் இவற்றை எதிர்த்து வெடிக்க ஆரம்பித்தது.

அ.பாக்கியம்

தொடர் 22 மே மாதம் 28 புதனன்று வெளியாகும் 

வெள்ளி, மே 16, 2025

மனித வரலாற்றில் ஒரே மிகப்பெரிய கல்வி முயற்சி

2021 ஆம் ஆண்டில், சீனாவில் வயதுவந்தோர் கல்வியறிவு விகிதம் 97% ஆக உயர்ந்துள்ளது, இது உலகின் மிக உயர்ந்த ஒன்றாகும். கடந்த ஏழு தசாப்தங்களில் சீனா பெற்ற பெரும் இலாபங்களை 'ஒருவேளை மனித வரலாற்றில் ஒரே மிகப்பெரிய கல்வி முயற்சியாக இருக்கலாம். 






வியாழன், மே 15, 2025

20.ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அசிங்கங்கள்


சீன தேசம் சுயசார்பின் சின்னம். தமிழ் இலக்கியங்கள் கூறும் ஐந்து வகை நிலங்களின் சங்கமம். பட்டுத் துணிகளின் விரிப்புகளில் பசுமைத் தேயிலையின் போர்வைகளை போர்த்திய அழகிய தேசம். அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் அரசன். கிழக்குலகத்தின் அறிவுக் களஞ்சியம். நெடிய நாகரிக வரலாறும்   பேரரசுகளின் ஒருங்கிணைந்த வம்ச வரலாறுகளும் நிறைந்த தேசம்.  பழமையும் பாரம்பரியமும் நிறைந்த இந்த அழகிய தேசத்தில் மேற்கத்திய முதலாளித்துவத்தின் ஊடுருவல் பல மாற்றங்களை உருவாக்கியது.

அடுத்தடுத்து வந்த மேற்கத்திய உலகம்

மேற்கத்திய உலகில் உருவான எந்திர தொழிலின் வளர்ச்சியும், வணிகத்தின் பெருக்கமும் உலகம் முழுவதும் சந்தைகளை தேடி பயணப்பட்டது. இதன் விளைவாக ஐரோப்பிய நாடுகள் புதிய புதிய காலனி நாடுகளை தங்களுக்கு அடிமையாக்கினார்கள். இந்தியாவிற்கு கிழக்கு இந்திய கம்பெனி மூலமாக வணிகம் செய்ய வந்தவர்கள் எளிதான முறையில் இருந்த வேறுபாடுகளை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு அடிமையாக்கினார்கள். சீனத்தின் வரலாறும் அதன் பாரம்பரியமும் அவ்வளவு எளிதாக அந்நியர்களை உள்வாங்கவில்லை. வரலாற்று ரீதியிலான ஒவ்வாமை நீடித்தது. ஆனால் முதலாளித்து வர்க்கம் லாபவெறி கொண்டு பேய்த்தனமாக அலைந்தது.

மஞ்சு அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால் மக்கள் அதிருப்தியில் வாழ்ந்தார்கள். ஆள்வோர்கள் மஞ்சூரியாவை சேர்ந்தவர்கள் என்பதால் சீனத்து மக்கள் அந்நிய எதிர்ப்பு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அத்துடன் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அமைதியின்மையை உருவாக்கியது. இக்காலத்தில் சீனாவின் கடல் மார்க்கமாக ஐரோப்பியர்கள் உள்ளே நுழைந்தார்கள். 1514-இல் போர்த்துகீசியர்கள், 1575-இல் ஸ்பெயின் நாட்டவரும் 1604 - இல் ஹாலந்து நாட்டை சேர்ந்தவர்களும், 1637 - இல் ஆங்கிலேயர்களும், 1660 - இல் பிரெஞ்சுக்காரர்களும் 1784 - இல் அமெரிக்கர்களும் ஒருவர் பின் ஒருவராக க்கணை நிறைந்த வார்த்தைகளுடன் வணிக மூட்டைகளை சுமந்து கொண்டு சீனாவிற்குள் வந்தனர். இப்படி வந்தவர்கள் போதாது என்று இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், தென் அமெரிக்காவை சேர்ந்த பலரும் சீனாவிற்கு வாணிபப்படை எடுத்தனர்.  ஏற்கனவே 1567 முதல் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் தரை மார்க்கமாக வணிக தொடர்புகள் உண்டு.

 

ஹாங்கு வணிக முறைகள்

மேற்கத்திய முதலாளித்துவ ஊடுருவல் முதலாவதாக 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி 1842 ஆம் ஆண்டு வரை அதாவது முதல் அபினி யுத்தம் நடைபெறும்வரை இருந்தது. இக்காலத்தில் வணிக முதலாளித்துவம் செய்யக் கூடியவர்கள் உள் நுழைந்தார்கள். 1842 முதல் 19ஆம் நூற்றாண்டு இறுதிவரை சுதந்திர வாணிகம் கொள்கை உடையவர்கள் வந்தனர் அல்லது தொழில்துறை முதலாளித்துவம் சீனாவிற்குள் வந்தது. மூன்றாவதாக 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் தொழில்துறையை சேர்ந்தவர்களும், நிதித்துறை சேர்ந்த முதலாளிகளும் சீனாவில் முதலீடு செய்ய தொடங்கினார்கள்.

சீனாவில் காண்டன் துறைமுகம்தான் முதன் முதலில் ஐரோப்பியர்களின் வணிகத்திற்காக திறக்கப்பட்டது. அதிலும் அவர்கள் நேரடியாக மக்களிடம் வியாபாரத்தில் ஈடுபட முடியாது. இந்த காண்டன் துறைமுகப் பகுதியில் சீனர்கள் கிடங்குகளை வைத்திருந்தார்கள். இந்தக் கிடங்குகளுக்கு ஹாங்கு என்று பெயர். ஐரோப்பியர்கள் சரக்குகளை இந்த கிடங்குகள் வைத்திருக்கக் கூடிய சீனர்களிடம் விற்பனைசெய்ய வேண்டும். இவர்கள் மற்ற இடங்களுக்கு சரக்குகளை அனுப்பி விற்பனை செய்வார்கள். இவர்களுக்கு ஹாங்கு என்று பெயர். இவர்கள் தங்களுக்கென சங்கத்தை அமைத்துக் கொண்டனர். ஐரோப்பியர்கள் எந்த காரணத்தை கொண்டும் நேரடியாக வியாபாரம் செய்ய முடியாது. நகரத்துக்குள் நுழைந்து ஜனங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. ஐரோப்பியர்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்த ஹாங்கு பொறுப்பேற்க வேண்டும் என்று விதி உருவாக்கப்பட்டது.

ந்த சீன பிரதேசத்தையும் அங்கு இருக்கக்கூடிய சந்தைகளையும் மிகப்பெரிய வாய்ப்பாக கருதிய ஐரோப்பிய முதலாளித்துவத்துக்கு இந்த கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட வணிகம் ஒத்து வரவில்லை. பிரிட்டிஷார் சீன அரசாங்கத்தோடு நேரடியான ஒப்பந்தம் செய்து கொண்டு தங்கள் வியாபாரத்தை நாடு முழுவதும் விஸ்தரிக்க முயன்றனர். காரணம் கொள்ளை கொள்ளையாக லாபத்தை ஈட்ட முடியும் என்பதுதான். பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க நாட்டு முதலாளிகள் காண்டன் துறைமுகத்தை கடந்து சில நதிகளையும் வேறு போக்குவரத்துகளையும் பயன்படுத்தி சீனாவுக்குள் வணிகத்தை விரிவு படுத்தினார்கள். மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. சீனாவிற்கு முதன் முதலாக வந்த போர்த்துக்கீசியர்கள் அவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறி ஆயுதங்களுடன் சீன கிராமத்திற்குள் புகுந்து கொள்ளையடித்ததுடன், அங்கு உள்ள பெண்களையும் தூக்கி வந்தனர். இந்த செயல் கடும் கோபத்தை ஏற்படுத்தி சீன மக்கள் சுமார் 800 போர்த்துக்கீசியர்களை கொலை செய்தது மட்டுமல்ல, அவர்களுடைய 36 வணிகக் கப்பல்களை எரித்து சாம்பலாக்கினார்கள்.

இருந்தாலும் ஐரோப்பியர்கள் சீனாவை விடுவதாக இல்லை. சீன மக்களுக்கு ஐரோப்பாவில் இருந்து எதுவும் தேவைப்படவில்லை. எனவே அவர்கள் ஐரோப்பியர்களின் வணிகத்தை நம்பவில்லை. அது மட்டுமல்ல அவர்களின் கிறிஸ்துவ மத வழிபாட்டு முறைகளையும் விரும்பவில்லை. சீன மக்கள் மரபுவழியற்ற வழிபாட்டு முறைகளை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே எதிர்ப்புகள் கடுமையாக இருந்தது. ஆனாலும் ஐரோப்பியர்களுக்கு சீனா தேவைப்பட்டது. காரணம் ஐரோப்பாவின் தொழிற் வளர்ச்சிக்கு சந்தைகளும் காலனிகளும் தேவைப்பட்டன. இந்தியாவில் செய்து முடித்ததை ஏன் சீனாவில் செய்யக்கூடாது? தங்களது உற்பத்தி பொருட்களை ஏன் திணிக்க கூடாது? அதற்காக சீனாவின் அதிகாரத்தை ன் கைப்பற்ற கூடாது என்றும் முடிவெடுத்து வேறு வழிகளைத் தேடினார்கள். சீனாவை சந்தையாக மாற்றுவது மட்டுமல்ல அன்றைய காலகட்டத்தில் சீனப்பட்டும், தேயிலையும் ஐரோப்பியர்களுக்கு தேவைப்பட்டது, அதை குறைந்த விலைக்கு வாங்கி ஐரோப்பாவில் அதிக விலைக்கு விற்பனை செய்தார்கள்.

இதன் காரணமாக சீனாவின் ஆட்சியாளர்களுக்கு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கர்கள் அதிக அழுத்தத்தை கொடுத்தனர். முதலில் தாங்கள் சீனாவில் இருந்து அதிக கொள்முதல் செய்வது பிறகு இறக்குமதியை அதிகப்படுத்தி சமன் படுத்துவது அதன் பிறகு முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்துவது என்ற கொள்கைகளை உருவாக்கினர். சீன மக்களோ, மேற்கத்திய தயாரிப்பில் ஆர்வம் காட்டவில்லை. எனவே சந்தையில் பொருட்களை குவிப்பது சாத்தியமற்றதாக இருந்தது. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த செயல்பாடுகள் எதையும் செய்யத் துணியும் என்று காரல் மார்க்ஸ் மூலதனத்தில் குறிப்பிட்டிருப்பார். அதன்படியே மேற்கத்திய முதலாளிகள் செயல்பட்டார்கள். தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி துணிகளை சீனாவில் குவித்தனர். ஆனால் விற்பனை நடக்காமல் பணத்தை இழந்தனர். எனவே சீனாவிற்குள் செல்வதற்கான வேறொரு முயற்சியை மேற்கொண்டனர். முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள லாபம் அவசியம். அதற்கு மக்களை மரணக் குழியில் தள்ளுவதற்கும் தயங்கியது இல்லை. சீனாவிற்கு  புகுந்திட புதிய வழிகளை கண்டுபிடித்தார்கள் அபினி என்ற போதை கடலுக்குள், சீனாவை மூழ்கடிக்க முயற்சி எடுத்தார்கள்.

இழிவான செயலின் மறுபெயர் முதலாளித்துவம்

அனைத்து கொடூரமான அசிங்கங்களையும் தங்க முலாம் பூசி தன்னை ஒரு நாகரீக மனிதனாக காட்டிக் கொள்வதில் முதலாளித்துவத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. எனவே அபினி என்ற போதைப் பொருளை சீனாவிற்குள் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க வணிகர்கள் இறக்குமதி செய்தனர். அதுவரை சீனாவில் அபின் என்ற போதைப் பொருள் அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. அதை அறிந்தவுடன் அவற்றை மருத்துவ பயன்பாட்டை தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்று சீன அரசாங்கம் தடை விதித்தது. பிரிட்டிஷார் அதையும் மீறி சீனாவிற்குள் அபின்  போதைப் பொருட்களை இறக்குமதி செய்தார்கள் என்பதைவிட கடத்திச் சென்றார்கள் என்பதுதான் நடந்தேறியது.

அபினி செடியின் முக்கிய சாகுபடி மையங்களாக இருந்தது இந்தியா மற்றும் ஆசியா மைனர் பகுதி ஆகும். 1767 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பிரிட்டிஷ் ஏற்றுமதி செய்யப்பட்ட அபினியின் அளவு குறைவாகத்தான் இருந்தது. சீன சந்தையைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக 1773 ஆம் ஆண்டு சீனாவிற்கு அபினியை கடத்திச் செல்வது என்ற கொள்கையை பிரிட்டிஷ் அரசு ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில் இந்தியாவில் அபினி வர்த்தகத்தை செய்வதற்கான ஏகபோக உரிமையை கிழக்கிந்திய நிறுவனத்திடம் வழங்கினார்கள். 1797 ஆம் ஆண்டில் இந்தியாவில் அபினி உற்பத்தி செய்யும் முழு உரிமையும் இந்த நிறுவனம் பெற்றது. இந்தியாவில் உள்ள விவசாயிகளை பாரம்பரிய பயிர்களை எல்லாம் தடை செய்ய சொல்லிவிட்டு அபினியின் பாப்பி செடிகளை பயிரிடும்படி  கட்டாயப்படுத்தினார்கள்.

இது மட்டுமல்ல சீன நாட்டு மக்களை போதைக்கு அடிமையாக்குவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் போதைப் பொருட்களை தயாரிப்பதற்கு ஒரு பெரும் தொழிற்சாலையை இந்த நிறுவனம் கல்கத்தாவில் ஆரம்பித்தது. பிரிட்டிஷ் இந்திய அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கிழக்கிந்திய கம்பெனி அபினியை ஏல முறைகள் மூலம் வெளிப்படையாக விற்பனை செய்ய முடிந்தது. அதை பிரிட்டிஷ்  வணிகர்கள் வாங்கி சீனாவிற்கு கடத்தினார்கள். அபினி கடத்தல் அமோகமாக நடைபெற்றது. பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகள் சீனாவில் இருந்து வாங்கிய பொருட்களுக்காக டாலர்களை செலவு செய்தது தற்போது குறைந்து. அபினி கடத்தலால் 300 மடங்கிற்கு மேல் லாபம் கிடைத்தது. அபினி கடத்தல்களால்  அவர்கள் வரி கட்ட வேண்டியது இல்லை. சீனாவில் இருந்த அபினி வாங்கும் வியாபாரிகள் பணத்தை முன்கூட்டியே கொடுத்து விடுவதும் இந்த பெரும் லாபத்திற்கு காரணமாக அமைந்தது.

அபினி கடத்தும் வியாபாரிகளில் மேன்மைதங்கிய பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். அதிக கடத்தல் செய்து சாதனை படைத்தவர்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் ‘நைட்’ அதாவது மாவீரர் பட்டத்தை வழங்கியது. அபினியை கடத்திய ஜேம்ஸ் மேத்சன் என்ற கடத்தல்காரன்  ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரையில் ஒரு தீவையே விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு சீன மக்களை போதை கடலில் மூழ்கடித்தான். அந்த மாபெரும் கடத்தல் வியாபாரிக்கு விக்டோரியா மகாராணி நைட் என்ற மாவீரன் பட்டத்தை வழங்கினார். அவர்கள் மட்டுமா? இன்றைய இந்திய முதலாளிகளின் முன்னோர்களும் அபின் கடத்தலில் அள்ளி குவித்தவர்கள் தான். சீனாவிற்கு அபினை கடத்துவதற்கு இந்திய வணிகர்களை பயன்படுத்தினார்கள். பார்சி, மார்வாரி, குஜராத்தி மற்றும் பிற வணிக சமூகங்களில் இருந்த பலர் தரகு வேலைகளை செய்தார்கள். அபினி  ஊக வணிகத்தில் ஜே.என். டாட்டா, ஜி.டி.பிர்லா ஹர்துத்ராய் சமாரியா, கோவாஸ் ஜி ஜஹாங்கீர் போன்ற பெரும் புள்ளிகளும் அடங்குவார்கள்.

பிரிட்டிஷார் மஞ்சு வம்ச அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சீனாவின் பல்வேறு பகுதிகளில் அபினி சரக்குகளை வைத்துக் கொள்வதற்கான கிடங்குகளை கட்டிக் கொண்டார்கள். 1820 ஆம் ஆண்டு முதல் 1835 ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷார் பல்வேறு வழிகளில் கட்டுப்பாடற்ற முறைகளில் அபினியை கடத்திக் கொண்டிருந்தார்கள். இதன் விளைவாக சீன நகரங்களில் உள்ள 40 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆண்களிடமும் இந்த போதைப் பழக்கம் தீவிரமாக பரவியது. இந்த பழக்கம் வியாபாரிகள், சேவைத்துறை மற்றும் ராணுவத்தையும் கடுமையாக பாதித்தது. 1835ஆம் ஆண்டில் முழு ராணுவத்திலும் 95 சதவீதம் பேர் அபினி போதைப் பழக்கத்திற்கு அடிமையாய் இருந்தனர் என்றால் இதன் தீவிரத்தை புரிந்து கொள்ள முடியும். பிரிட்டிஷாரின் இலக்கு சீனாவை கைப்பற்றுவதற்கு யாரை குறி வைத்தார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடியும். இதனால் சீனாவின் வாழ்க்கைத் தரம் சரிந்தது. பொது சேவைகள் அனைத்தும் சீர்குலைந்தன. 1837 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமான சீன இறக்குமதியில் அபினியின் இறக்குமதி மட்டும் 57 சதவீதமாக இருந்தது. சீனாவின் வெள்ளி இருப்பு காலியாகிப் போனது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் புதிய சட்டம் இதை மேலும் தீவிர படுத்தியது. 1734 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாட்டில் வளர்ந்து வரும் தொழில்துறை முதலாளிகள் சீனாவிற்கு அபினி வியாபாரத்தை நடத்துவதற்கு கிழக்கிந்திய கம்பெனிக்கு மட்டும் ஏகபோக உரிமை கொடுத்திருப்பதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பிரிட்டிஷ் அரசும் தடை செய்தது. இதன் மூலமாக அனைத்து முதலாளிகளும் சீனாவை போதை பொருட்களின் விற்பனை செய்வதற்கான வேட்டைக்காடாக மாற்றினார்கள். 2000 ஆண்டுகளுக்கு மேலாக  நாகரீகத்தின் வளர்ச்சி, அறிவியல் கண்டுபிடிப்புகள், தத்துவம், என பல துறைகளில் சீனா ஏற்படுத்தியிருந்த வளர்ச்சிக்கு பாதகம் ஏற்பட்டது. இந்த சூழலை பயன்படுத்தி அமெரிக்காவும், பிரிட்டனும்  அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக சவால் விட்டனர்.

மேற்கத்திய முதலாளித்துவ ஊடுருவல் சீன சமூகத்தில் அதுவரை இல்லாத சில அடிப்படையான மாற்றங்களை உருவாக்கியது. முழுமையான நிலப்பிரபுத்துவ சீனாவாக இருந்தது, அரை-நிலப்பிரபுத்துவ அரை-காலனித்துவ சீன சமூகமாக மாறியது.

சீனத்து மக்களின் சீற்றம்

சீனாவில் பிரிட்டிஷார் உள்ளே நுழைந்த பிறகு தங்களது அபினி கடத்தலை நாடு முழுவதும் பரவலாக கொண்டு சென்று மக்களை போதைக்கு அடிமையாக்கி விட்டார்கள். ஏகாதிபத்தியவாதிகள் சீன மக்களை ஏமாற்றுவதற்கு தங்களது பிரச்சார கருவிகளை கச்சிதமாக  பயன்படுத்துவார்கள். சீனர்களை அடிக்கடி படம் எடுத்து பத்திரிகைகளில் வெளியிடுவார்கள். எப்படி தெரியுமா? அபினி போதையில் சீரழியும் சீனனின் படத்தையும், சூதாட்டக் கூடங்களிலும், அபினி போதை விற்பனை செய்கிற கடைகளிலும், சீனர்கள் குவிந்து சண்டை போட்டுக் கொள்ளக்கூடிய காட்சிகளை படமெடுத்து போடுவார்கள். அது மட்டுமல்ல பாடப்புத்தகங்களிலும், குழந்தைகளின் சித்திர புத்தகங்களிலும் சீனர்கள் போதைக்கு அடிமையானவர்கள், நாகரீகமற்றவர்கள் என்று படத்தை வெளியிட்டு பிரச்சாரம் செய்வார்கள். பிரிட்டிஷாரும், அமெரிக்காவும் நாங்கள் நாகரிகமானவர்கள் உங்களுக்கு நல்வாழ்வை தருவதற்காக வந்திருக்கிறோம் என்று பிரச்சாரம் செய்வார்கள். அதாவது அபினியை கடத்தி வந்து அந்த போதைப் பொருளை நாடு முழுவதும் பரவச் செய்து, கொள்ளை லாபம் ஈட்டிய இந்த மகானு‘பாவர்கள்’ தங்களை யோக்கியர்கள் போல் காட்டிக் கொள்வதற்காக, சீனர்களை மோசமானவர்களை, நாகரிகமற்றவர்களாக பத்திரிகைகளில் சித்தரித்தனர்.  இப்படி செய்து ஒட்டுமொத்த சீனாவையும் கைப்பற்றலாம் என்று நினைத்தார்கள்.  இது காலனித்துவ அரசுகளின் மமதையை வெளிப்படுத்தக்கூடிய செயலன்றி வேறில்லை. ஆப்பிரிக்காவை இருண்ட கண்டம் என்றும், அங்கு வசிப்பவர்கள் நாகரீகமற்ற  காட்டுமிராண்டிகள் என்றும் கற்பிதம் செய்தார்கள். இந்தியாவில் இருப்பவர்கள் ஆட்சி செய்யத் தெரியாத அறிவிலிகள் என்று கற்பிதம் செய்தனர். இதையே சீனாவிலும் செய்தனர். சீன மக்களின் தேசபக்த உணர்வை இவர்கள் அசிங்கப்படுத்தினார்கள். அவமானத்துக்கு உள்ளாக்கினார்கள். இதனால் சீன மக்கள் வெகுண்டெழுந்தனர்.

மேற்கத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக சீன மக்கள் அமைதியாக இருக்கவில்லை அவர்களை எதிர்த்து போராடினார்கள். காண்டன் துறைமுகத்துக்கு அருகில் இருந்த விவசாயிகள் பெரும்படை திரட்டி பிரிட்டிஷ் யுத்த கப்பல் மீது கெரில்லா தாக்குதலை தொடங்கினார்கள். நீர் மூழ்கி வீரர்களை இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தினார்கள். காண்டன் துறைமுக பகுதிக்கு சற்று தொலைவில் உள்ள சன்யுவான்லி கிராமத்தில் அந்நிய படையெடுப்புகளின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் போராடினார்கள்.  1841 மே மாதம் 30ஆம் தேதி பிங் யிங் துவானில் பிரிட்டிஷார் தங்கி இருந்த கோட்டையை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தாக்கினார்கள். நாலா பக்கத்தில் இருந்தும் தாக்குதல் நடைபெற்றது. பெரும் உயிரிழப்புகளுடன் பிரிட்டிஷார் இந்த தாக்குதலை தோற்கடித்தனர் பெண்களும் குழந்தைகளும் இதில் தீவிரமாக பங்கேற்றனர். சன்யுவான்லி  நவீன காலத்தில் சீன மக்கள் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக நடத்திய முதல் தன்னிச்சையான போர் என்று வரலாற்று ஆசிரியர்கள் விவரித்தார்கள். தங்கள் நாட்டின் அரசை மக்கள் நம்பி இருக்கவில்லை. எதிர்ப்பதற்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் துணிச்சல் காட்டினார்கள். இதன் தொடர்ச்சியாக முதல் அபினி யுத்தம் துவங்கியது. 

ஞாயிறு, மே 11, 2025

ஆசிய கம்யூனிஸ்ட் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய ‘‘சீன பண்புகள்’’


(கடந்த மே 4ம் தேதி, சோசலிசம்:சீன பண்புகள் புத்தகத்தை சிந்தன் புக்ஸ் லீலாவதி அரங்கில் வெளியிட்டு நான் ஆற்றிய உரையின் சுருக்கம்.)

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் வணக்கம். 

சீனா தொடர்பான இன்றைய காலத்தின் தேவையை முன்வைத்து சிந்தன் புக்ஸ் இந்த புத்தகத்தை வெளியிட்டு இருப்பது பாராட்டுக்குரியது. தொடர்ந்து சீனா குறித்த சில புத்தகங்களையும் கொண்டு வர இருப்பதும் வரவேற்கத்தக்கது. 

இந்தப் புத்தகத்தில் 280 பக்கம் உள்ளது. சீன ஜனாதிபதி, கட்சியின் பொதுச்செயலாளர் ஜி ஜின் பிங் உரைகள் 184 பக்கங்கள் உள்ள. மீதமுள்ள 100 பக்கங்கள் பிரபல பேராசிரியர் ரோலண்ட் போயர் என்பவர் எழுதியபுத்தகத்தின் சுருக்கமான தொகுப்பாகும். இந்தப் புத்தகத்தை தோழர்கள் மாதவ், சுகுமார், சிவரஞ்சனி ஆகியோர் தமிழில் மொழி பெயர்த்துள்ளனர். 

புத்தகத்தைப் பற்றிய சில கருத்துக்களை முன்வைப்பதற்கு முன்பாக சீனா தொடர்பான சில பொதுவான தகவல்களை கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய வெற்றி ரகசியத்தை சீன நாட்டின் தலைவர்களில் ஒருவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிசம் லெனிசம் மற்றும் மாவோ சிந்தனைகளை கடைப்பிடிப்பதும்,மக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதும்,கட்சியில் அனுபவம் வாய்ந்த தேசபக்த அறிவிஜீவிகள் நிறைந்திருப்பதும் மட்டுமே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு காரணமல்ல. அதைவிட முக்கியமான அம்சம்என்னவென்றால் சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் எடுத்த முடிவுகளில் தவறு இருந்தால், அதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்வதோடு, திருத்திக் கொள்வதற்கு தயக்கமே காட்டுவதில்லை. அதன் விளைவாகத்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக  டெங் ஷியோ பிங் காலத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் இரு முறை என்று மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. எந்தவிதமான சமரசம் இன்றி அமல்படுத்தி வந்தார்கள். 2012 ஆம் ஆண்டு ஜி ஜின் பிங் பொறுப்புக்கு வந்த பிறகு இன்றைய உலக சூழலில் தலைமையின் தொடர்ச்சி தேவைப்படுகிறது என்பதை மக்கள் முன்னாலும் கட்சியின் அகில இந்திய காங்கிரசிலும் முன்வைத்து திருத்தத்தை ஏற்றுக் கொண்டு அமல்படுத்தினார்கள். பொறுப்பில் நீடிப்பதற்கு வேறு எந்த விதமான குறுக்கு வழியையும் கடைபிடிக்கவில்லை.உலகிலேயே தனது முடிவுகளிலும் அதன் அமலாக்கத்தில் இருக்கக்கூடிய தவறுகளை பகிரங்கமாக பட்டியல் போட்டு அறிவித்து அதை ஏற்றுக்கொண்டு நிவர்த்தி செய்து அதில் கிடைத்திருக்கக்கூடிய சாதக பாதக அம்சங்களைஉலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய ஒரே கம்யூனிஸ்ட் கட்சியாக சீன கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது.கட்சியை நடத்துவதிலும், கட்சியை வளர்த்து மக்களின்வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொண்டிருப்பதற்கும் கண் முன் உள்ள உதாரணமாக சீன கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது.

மார்க்சியம் லெனினியம் மற்றும் மாவோ சிந்தனைகள் என்று சீன நாட்டுக்கு தேவையான தலைவர்களின் சிந்தனை முறைகளையும் இணைத்தார்கள். மாவோவின் றைவுக்கு பிறகு மிகப் பெரும் பங்காற்றிய தலைவர்களின் தனித்துவத்தையும் இணைத்துக் கொண்டே வருகிறார்கள். இது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாரம்பரியங்களில் ஒன்றாகவே இருக்கிறது. மார்க்சிய லெனினியசித்தாந்தங்களை சீனாவின் சூழலுக்கு ஏற்ப பொருத்திக் கொள்வதில் மேற்சொன்ன தலைவர்களின் சிந்தனைகள் முக்கிய பங்காற்றுகிறது.  சீன விடுதலைப் போராட்டத்தில் களத்தில் நின்று தலைமை தாங்கிய பெரும் தலைவர்களை சீன பாமர மக்களும் நன்கு அறிவார்கள். எனவே அவர்களின்பண்போடு, சோலிசத்திற்கான பாதையை இணைத்தார்கள். இது சீனாவில் மட்டுமல்ல கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் இந்த பண்புகளை பார்க்கலாம். இந்தியாவில் அப்படிப்பட்ட நிலை இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழகத்தில் கூட தோழர் சிங்காரவேலர் சிந்தனை சிற்பியாக மட்டுமல்ல அடித்தள மக்கள்,தொழிலாளர்கள், சட்டம் என பல்வேறு தளங்களில் செயல்பட்டவர். அவரை முன்னிறுத்தி இணைக்கப்படவில்லை. தோழர் சங்கரய்யா அவர்கள் பேசுகிற கூட்டத்தில் சிங்கார வேலரை இணைக்காமல் அவருடைய பேச்சை முடித்ததில்லை என்பதை தவிர குறிப்பிட்டு சொல்கிறபடி எதுவும் இல்லை. கடந்த 2015ம் ஆண்டு தென்சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாடு நடத்தப்பட்டபோது சிங்காரவேலர்,பி.ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ், வி.பி.சிந்தன் ஆகிய நான்கு தலைவர்களின் அடையாளங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டது. ஆசிய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகளில் இதுபோன்ற அம்சத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என நான் கருதுகிறேன்.

இந்தப் புத்தகத்தின் முதல் பகுதியில் இன்றைய ஜனாதிபதி ஜி ஜின் பிங், சீனா ஐந்தாயிரம் வருடங்கள் வரலாற்றை கொண்ட நாகரிகம் என்பதை வலியுறுத்தி பேசியிருக்கிறார். இவர் மட்டுமல்ல இதற்கு முந்தைய தலைவர்களும் அதை வலியுறுத்துகின்றனர்இதன் மூலம் பிற நாகரிகங்களில் இருந்து சீனா பல அம்சங்களில் மாறுபட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.தற்பொழுது நான் தமிழ் மார்க்ஸ் இணையதளத்தில் எழுதி வருகின்ற தொடரில் இதைப் பற்றி விரிவாக குறிப்பிட்டு உள்ளேன். 

சீன விவசாயிகளின் வர்க்கப் போராட்டத்தை தனித்துவமான முறையில் அதாவது ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற முறைகளில் இருந்து மாறுபட்டது என்பதை முன்வைத்து, அதன் மீது வரலாற்று அறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மாசேதுங் அறைகூவல் விடுத்தார். காரணம் வேறு எங்கும் இல்லாத அளவில் சீனாவில் விவசாயிகளின் எழுச்சியும்கிளர்ச்சியும் நடைபெற்றுள்ளது. இதனால் பெரும் பேரரசுகளின் மகுடங்கள் மாண்டு போனது மட்டுமல்ல, பல கோடி விவசாய பெருங்குடி மக்கள் மரணமடைந்த ஒரு வர்க்கப் போராட்டமாகவே இதை கருத வேண்டும் என்று கூறினார். கடைசியாக நடைபெற்ற தைப்பிங் விவசாயிகளின் எழுச்சியில் 2 கோடி பேர் மரணமடைந்தார்கள். 

இதை நான் குறிப்பிடுவதற்கு காரணம் என்னவென்றால், புரட்சி வெற்றி பெற்ற சோலிச நாடுகளைப் பற்றி படிக்கக் கூடியவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினுடைய செயல்பாடுகளில் இருந்துதான் படிக்கத் தொடங்குகிறார்கள். இது இடதுசாரி கட்சி ஊழியர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. அதற்கு முந்தைய சமூக அமைப்புகள் அனைத்தும் பிற்போக்குத்தனமானது, தேவையற்றது என்ற கருத்தும்உள்ளது. இது ஒரு இயங்கியல் பார்வையாகாது. நானும் அப்படித்தான் வாசித்துக் கொண்டிருந்தேன். சீன வரலாற்றை அதன் நாகரீகத் தோற்றத்திலிருந்து வாசிக்கும் பொழுது ஏற்படக்கூடிய மாற்றங்களிலிருந்து பல விஷயங்களை அறிய முடிகிறது. இந்தப் பின்னணியோடு புரட்சி வெற்றி பெற்றதும், அதன் பிறகு இப்பொழுது நடக்கக்கூடிய மாற்றங்களையும் வெற்றியோ தோல்வியோ இரண்டையும் புரிந்து கொள்வதற்கு இந்த வரலாற்று பார்வை அவசியமாகிறது.

இந்த புத்தகத்தின் முதல் பகுதியில் (அதாவது 180பக்கங்களில்) இன்றைய சீன ஜனாதிபதியின் உரைகள்,நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி பேசியவைகள்,விமர்சன சுயவிமர்சன பார்வையில் இதை அவர் முன் வைத்துள்ளார். புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் உள்ள பேராசிரியர் ரோலண்ட் போயரின் நூலில் 12 துணை தலைப்புகள் உள்ளன. 

முதல் பிரிவில் சீனாவின் சிறப்பு திறனாக மார்க்சிய தத்துவம் உள்ளது என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். சீனா, சோசலிச நாடு என்றும், சோசலிச நாடு இல்லை, முதலாளித்து நாடு என்றும் பரவலான விவாதம் நடந்து கொண்டு வருகிற பொழுது சீனா, சோசலிச பாதையில் செல்லும் நாடு என்று பொருத்தமாக எழுதியுள்ளார். சிந்தனைக்கு பொருந்தும் தத்துவார்த்தஅமைப்பாக இயங்கியல் பொருள்முதல் வாதமும்ஒரு நாட்டின் சூழலுக்கு ஏற்ப புரிந்து கொள்வதற்கு வரலாற்று இயல் பொருள் முதல் வாதமும் உள்ளது. வரலாற்று இயல்பொருள்முதல் வாதத்தையும் மார்க்சியத்தையும் சீன சூழலுக்கு ஏற்ப எவ்வாறு அமல்படுத்துகிறோம் என்பது வலியுறுத்தப்படுகிறது. இந்த அமலாக்கத்தின் வெளிப்பாடாக சீன மார்க்சிய அனுபவத்தை உலகம் அறிந்திட செய்ய வேண்டும் என்று ஜி ஜின் பிங் வலியுறுத்துகிறார். 

இரண்டாவது பிரிவில் டெங் ஷியோ பிங் சிந்தனையை விடுவித்தல் என்ற செயலை வலியுறுத்துகிறார். நாம் மார்க்சிய வாதிகள் எனும்போது மற்ற சித்தாந்தங்களைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும் என்ற கேள்வி எழுவதுஉண்டு. இந்த கேள்விக்கு டெங் ஷியோ பிங் சம்மட்டி அடி கொடுக்கிறார். ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் மற்றும் அரசியல் பாதையை பின்பற்றினால் சிந்தனை எப்படி விடுதலை அடையும் என்று கேள்விகள் எழும். சீன மார்க்சியத்தை பொறுத்தவரை இது அல்லது அது என்று இரண்டில் ஒன்றை முடிவு செய்வது அல்ல. சிந்தனையை விடுவித்தல் என்ற பாதையை முன் வைக்கிற பொழுது தன் மூளையை ஆக்கபூர்வமான ஈடுபாட்டுடன் இயங்க வைப்பது மூலமாகத்தான் சிந்தனையை விடுவிக்க முடியும். அதாவது சிந்தனையை சூழலுடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். சோலிசத்திற்கான சிந்தனை சுதந்திரம். கட்டமைப்பிற்கு தேவையான புதுமைகளுக்கான சுதந்திரம். சிந்தனையை விடுவித்தல் என்பது புதுமையை உந்துதல் ஆகும். புதிய சிந்தனைகள் புதிய வழிமுறைகளின் உருவாக்கம். சோசலிச அமைப்புகளை சீர்திருத்தம் செய்வதற்கு, திறந்து விடுதல், உற்பத்தி சக்திகளை விடுவிப்பது, சந்தை நிறுவனங்களை வளர்ச்சி அடைய செய்வது என்ற உறுதியான திட்டங்களுடன் சிந்தனை விடுவித்தலை இணைத்துப் பார்க்க வேண்டும் என்று டெங் ஷியோ பிங் முன்வைக்கிறார். மார்க்சிய சூத்திரங்களுக்குள் அடங்கிக் கிடந்து சிந்தனைகளை சிறைபிடித்து விட்டுசெயல்பட்டால் சூழல்களை உடைத்துக் கொண்டு வெளியே வர முடியாது. 

மூன்றாவது பிரிவில்மார்க்சிய தத்துவத்தில் எதிர்மறைகளும் முரண்பாடுகளும் ஒரு கோட்பாடு ஆகும்.இதை எவ்வாறு சீன சமூகத்திற்கு பொருத்துகிறார்கள் என்பது தான் இந்த பிரிவின் செய்தி. எதிர்மறைகளும் முரண்பாடும் ஒன்று அல்ல சோலிசத்தில் எதிர்மறைகள் மறைந்துவிடும் முரண்பாடு நீடிக்கும் என்பதை லெனின் எடுத்துரைக்கிறார். சீனாவில் வெவ்வேறு காலகட்டங்களில் முன்னுக்கு வந்த முரண்பாடுகளைப் பற்றி இந்தப் பகுதி விவரிக்கிறது. 

ஒருவேளை வளர்ச்சி அடைந்த சோசலிச சமூகத்தில் முரண்பாடு... (உற்பத்தி சக்தி-உற்பத்தி உறவு, உற்பத்திதேவை-தொழில்நுட்ப வளர்ச்சி....) இல்லையானால் சோலிசத்தின் வளர்ச்சி சாத்தியமற்றதாக இருக்கும்.இதனால் தேக்க நிலை ஏற்படும். எனவே சோலிசத்தில் உள்முரண்பாடுகளின் ஒழுங்கு ஒரு கட்டத்தில் மற்றொரு உயர்ந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும். முரண்பாடுகளை சரியாக கையாண்டு தீர்வு காணும் இடைவிடாத செயல்முறைகளின் மூலம் சோலிச சமூகம் மேலும் ஐக்கியப்பட்டு, மேலும் உறுதிப்பட்டு வளர்கிறது என்று மாவோ எழுதுகிறார். 

மாவோ புறக்காரணங்களின் ங்கையோ அகம்புறம்இயங்கியலையோ மறுக்கவில்லை. பண்பு மாற்றத்தின் அவசியத்தை உள்காரணிகளே தீர்மானிக்கின்றன என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். இதை வெளிக்காரணிகள் தீர்மானிக்கவில்லை என்பதையும் வலியுறுத்துகிறார். இது சீன சமூகத்தில் சோலிசத்தை நிர்மாணிப்பதில் மார்க்சிய பார்வையின் அடிப்படையில் வரக்கூடிய முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வழிகாட்டியாகும். ஏற்படக்கூடிய தோல்விகளுக்கும்,நெருக்கடிகளுக்கும் மற்றவர்கள் மீது காரணங்களை சுமத்தி விட்டு உள்காரணிகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது அழிவுக்கு வழிவகுக்கும். 

இதனால்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டெங் ஷியோ பிங் சீர்திருத்தத்தை ஆரம்பிக்கிற பொழுது அககாரணிகளை முதலில் நாம் கவனத்தில் கொண்டு தீர்க்க வேண்டும் என்று முதன்மைப்படுத்துகிறார். நமது செயல்பாட்டில் வெற்றி, தோல்விகள், போராட்டங்கள் அனைத்திற்கும் உள்காரணிகளை பரிசீலிப்பதுஅடிப்படையானது. புறக்காரணிகள் மீது பழி போட்டுவிட்டு தப்பித்துக் கொள்ளக்கூடிய செயல் அழிவு பாதை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார்கள்.

நான்காவது பிரிவில் சீர்திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார்கள். சீர்திருத்தம் குறித்து மார்க்சிய அடிப்படையை விளக்குகிறார்கள். சீர்திருத்தத்திற்கு புரட்சியுடன் இருக்கும் உறவை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வியுடன் இதற்கான விடை காணப்படுகிறது. அனைத்தும் புரட்சியினால் மாறிவிடும் என்ற கருத்தும், படிப்படியான சீர்திருத்தத்தினால் மட்டும்தான் புரட்சி ஏற்படும் என்ற கருத்தும் இருக்கிறது. சீர்திருத்தம் என்பது பாட்டாளி வர்க்க புரட்சிக்குப் பிறகு மிகவும் அவசியமானது. எந்த அளவிற்கு என்றால் சீர்திருத்தம் புரட்சிகர செயல் முறையில் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும் என்று லெனின் அவர்களின் கருத்துக்களை இந்த பிரிவில் முன்வைத்து விளக்குகிறார்கள். சீர்திருத்தங்களின் வரலாறுகள் இந்த பிரிவில் கொண்டுவரப்படுகிறது. சீர்திருத்தம் ஆரம்பித்து பத்து ஆண்டுகளில் 1990களில் கடும் நெருக்கடிகளை சந்தித்தார்கள். இதற்கு "90-ன் நெருக்கடி" என்று பெயர். இதை பரிசீலனை செய்த சீன கம்யூனிஸ்ட் கட்சி, எழுந்த முரண்பாடுகளை உள்வாங்கிக் கொண்டு சீர்திருத்தத்தை கைவிடுவதில்லை ஆழப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததுடன் சுயசார்பு, இரட்டை சுழற்சி முறை போன்ற கொள்கைகளை உருவாக்கினார்கள். 

ஐந்தாவது பகுதியில் திட்டமிடலும், சந்தையும் பற்றிய அணுகுமுறை துல்லியமாக விளக்கப்பட்டுள்ளது. சந்தை என்பது எல்லா காலத்திலும் இருந்தது. முதலாளித்துவ சமூகத்தில் மட்டுமே சந்தை இருந்ததாக சொல்வது தவறு. சில சந்தைகள் இந்தப் பகுதியில் சுட்டிக் காட்டப்படுகிறது.சந்தை பொருளாதாரம் என்பதை முதலாளித்துவத்தால்மட்டும் வரையறுக்கப்பட்டது என்று சொல்ல முடியாது.அதேபோல் திட்டமிட்ட பொருளாதாரம் என்பது சோலிச அமைப்புக்கு மறு பெயர் அல்ல. சந்தை பொருளாதாரம் என்பது ஒரு சுதந்திரமான அமைப்பு என்ற மாயை நிலவுகிறது. சீனா சந்தைப் பொருளாதாரம், திட்டமிட்ட பொருளாதாரம் இரண்டு வடிவங்களையும் கொண்டுள்ளது. சந்தை பொருளாதாரத்தின் நிறுவன வடிவம் உற்பத்தி சக்திகளையும், உறவுகளையும் ஒழுங்கமைக்கிறதுதிட்டமிட்ட பொருளாதாரம் வளங்களை ஒதுக்குவதும்,சரக்குகளை விநியோகிப்பதிலும், மதிப்பு விதிகள்,விலைகளின் போட்டிகள் போன்றவற்றிலும் திட்டமிட்ட பொருளாதாரம் கடைபிடிக்கப்படுகிறது. இது பற்றிய ஆழமான விளக்கம் புத்தகத்தில் உள்ளது. 

ஆறாவது பகுதியில் நவீன மயம் குறித்த அணுகுமுறைகள் உள்ளதுவிவசாயம், தொழில் துறை,தேசிய பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்ஆகியவற்றை நவீன மயமாக்குவது என்ற கொள்கை மாவோ காலத்தில் உருவாக்கப்பட்டாலும் டெங் ஷியோ பிங் காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான கொள்கையாக மாற்றப்பட்டது. இந்த செயல்பாட்டின் மூலம் 2021 இல் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டது.சூழலியலில் பெரும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. கோவிட்(கொரோனா தொற்று) போன்ற அபாயங்களை எதிர்கொண்டு முறியடித்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. 

ஏழாவது பகுதியில் சோலிச ஜனநாயகம் பேசப்பட்டுள்ளது. ஜனநாயகம் என்ற ஒன்று இல்லை. ஜனநாயகம் என்பதன் வடிவம் மட்டும்தான் உள்ளது. அதில் மேற்கத்திய பாணி முதலாளித்துவ ஜனநாயகம்,வாக்களிப்பதற்காக மட்டுமே என்று சுருக்கப்பட்டுள்ளது.சீனாவில் செயல்பாட்டு ஜனநாயகம் உள்ளது. இங்கு ஏழு வகையான ஜனநாயக செயல்முறைகள் கடைபிடிக்கப்படுவது விளக்கப் பட்டுள்ளது. தேர்தல் முறைகளும் விரிவாக விளக்கப் பட்டுள்ளது. 

எட்டாவது பகுதியில் மனித உரிமை குறித்த மார்க்சிய அணுகுமுறை அடிப்படையானது. மேற்கத்திய இறையாண்மை என்பது மற்ற நாடுகளை காலனி படுத்திய இறையாண்மையை அடிப்படையாகக் கொண்டது. சீனாவோ காலனித்துவத்தை திர்க்கும் மரபுகளைக் கொண்ட இறையாண்மையை தன்னிடம் கொண்டுள்ளது. எனவே சீனாவின் அடிப்படை மனித உரிமை என்பது, சமூக பொருளாதார நல்வாழ்வு உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது. சித்தாந்த அடிப்படையில் இதுதான் சீனா கடைபிடித்து வருகிறது. 

ஒன்பதாவது பகுதியில் சிறுபான்மை தேசியஇனங்களின் கொள்கை விளக்கப்படுகிறது. சீனாவில் மாநிலங்கள் உட்பட மொத்தம் 160 தன்னாட்சி பிரதேசங்களையும் உள்ளடக்கி உள்ளது. 56 தேசிய இனங்கள் உள்ளன. தேசிய இனம் என்பது இனத்தால் மட்டும் தீர்மானிக்கப்படுவது அல்ல. பண்பாடு, பிரதேசம்,பொதுமை, மதம் அல்லது அடையாளம் போன்ற பல காரணங்களால் தீர்மானிக்கப்படுகிறது. நான்கு விதமான கொள்கைகள் இந்த பிரிவில் விளக்கப்படுகிறது. கல்வியில் உள்ளூர் தேசிய இன மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, தேசிய மொழிகளையும் கற்றுக் கொடுப்பது,சிறுபான்மை மக்களின் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை பராமரிப்பது போன்றவைகள் இந்த கொள்கைகள் ஆகும். நவ ஏகாதிபத்திய சக்திகள் சீனாவிற்குள் தைவான், திபெத், ஜின்ஜியாங்ஹாங்காங் போன்ற பகுதிகளில் சீர்குலைவை செய்ய முயற்சிக்கிறார்கள். இதுதான் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல்ஆகும். இவற்றை சீனா வெற்றி கொண்டு வருவதையும் குறிப்பிடுகிறார்கள்.

மிக அடிப்படையானது சீன தேசிய இனங்கள் பின்தங்கிய நிலைமையை மாற்றுவது. அந்தப் பகுதியில் மேம்பாட்டு திட்டங்களை அமலாக்கி வளர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது முக்கிய அம்சமாகும். இதனால் அவர்கள் சீனாவின் பொது சமூகத்தோடு இணைந்திருக்கிறார்கள். தேசிய இனங்களை நிர்வகிக்கிற பொழுது அதிக தன்னாட்சி, அதிக ஒற்றுமை, அதிக பொருளாதார முன்னுரிமை கொள்கைகள் போன்றவைகள் மக்களின் வாழ்நிலைகளை மேம்படுத்துகிறது. எனவே, அவர்கள் சீன சமூகத்தின் முழுமையின் ஒரு பகுதியாக தங்களை காண்கிறார்கள். 

அடுத்த மூன்று மூன்று பகுதிகளில் சட்டத்தின் ஆட்சி,கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, மார்க்ஸ்எங்கல்ஸ்சித்தாந்தங்களை சீன நிலைமைக்கு ஏற்ற வகையில் இன்றைய ஜனாதிபதி விளக்கியுள்ளார்.

சீனாவைப் பற்றிய மேற்கத்திய ஊடகங்களால் தவறான முறையில் அறிவியல் பூர்வமாக முலாம் பூசப்பட்ட பொய்களையும், பிரச்சாரங்களையும் இந்த புத்தகம் உடைத்தெரிகிறது. அதே நேரத்தில் சீன சமூகத்தை உள்நுழைந்து புரிந்து கொள்வதற்கான பேராயுதமாக இருக்கிறது. 

புத்தகம் மிக முக்கியமான கருத்துக்களை காலத்துக்கு ஏற்ற சூழலில் முன் வைப்பதால் இதன் வடிவமைப்பு உட்பட தயாரிப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

அ.பாக்கியம்.

 

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம்-1

  1948 மே 14 சியோனிச இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் பெ ன் குரியன் இன்று முதல் இஸ்ரேல் என்ற நாடு உதய மா கிறது என ஆரவாரத்துடன் அறிவித்தார் ....