Pages

சனி, ஜூன் 17, 2023

ஏன் இந்தத் தொடர்?

 


தொடர்-1

 அ.பாக்கியம்

வெறுப்பு அரசியல் பல்வேறு நாடுகளில் பல வடிவங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகள் முற்றி முதலாளித்துவம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. தன்னை நிலை நிறுத்தி கொள்வதற்காகவும், மூலதனத்தின் சுரண்டலை தீவிரப்படுத்து வதற்காகவும், உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி வைத்திருப்பது, முதலாளித்துவத்தின் உத்திகளில் ஒன்று. அதில் ஒரு வடிவமாக வெறுப்பு அரசியலை விதைத்துக் கொண்டும்,  வளர்த்துக் கொண்டும்இருக்கும்.

அமெரிக்கா மிகப்பெரிய ஜனநாயக நாடு, அதிக சுதந்திரம் உள்ள நாடு என்று பறைசாற்றி கொண்டாலும் நடைமுறையில் சர்வாதிகாரத்தை அமல்படுத்தி வருகிறது. ஜனநாயகம் என்பது பொய் முகமூடி ஆகும். முதலாளித்துவ வர்க்க சமுதாயத்தில் அவர்களுக்கான (முதலாளி) ஜனநாயகம் இருக்குமே தவிர அனைத்து மக்களுக்குமான ஜனநாயகம் இருக்காது. சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள உழைப்பாளி மக்களை வர்க்க ரீதியாக சேரவிடாமல் தடுப்பதற்கு அரசின் அடக்குமுறை கருவிகளை மட்டும் பயன்படுத்துவதில்லை. மக்களிடையே உருவான இயற்கையான வேறுபாடுகளை பயன்படுத்தி அவற்றை பகை வேறுபாடுகளாக மாற்றி விடுவது ஆளும் வர்க்கத்தின் செயல்களில் ஒன்று. இதற்காக நிறம், இனம், சாதி,மதம்,மொழி என எதைக்கொண்டும் இந்தப் பகை உணர்வுகளை உருவாக்கி விடுகிறார்கள். அவற்றை தொடர்ந்து நீடிக்க வைப்பதிலும் சுரண்டும் வர்க்கம்  செயலாற்றும்.

அவ்வாறு அமெரிக்காவில் நிறவெறி என்பது மக்களை பிளவுபடுத்த சமூகத்தில் ஆளும் வர்க்கம் பயன்படுத்தும் மிகப்பெரும் கருவியாகும். கருப்பர்களின் அடிமை வணிகம் அதிகமாக நடைபெற்றது அமெரிக்காவின் தென் மாநிலங்களில்தான். ஆப்பிரிக்காவிலிருந்து கூட்டம் கூட்டமாக பிடிக்கப்பட்டு, அமெரிக்க தென் மாநிலங்களில் விவசாய பண்ணைகளில் ,பருத்திக் காடுகளில், குதிரை லாயங்களில் என அடிமைகளாகவே கருப்பர்கள் நடத்தப்பட்டவர்கள். அமெரிக்காவில் நாடு தழுவிய முறையில் அடிமை ஒழிப்பு சட்டம் நிறைவேறிய பிறகும், தென் மாநிலங்களில் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் அடிமைகளை பல வழிகளில் பயன்படுத்தினார்கள். வெள்ளையர்களின் வேலைகளுக்கு மட்டுமல்லஅவர்களின் கேளிக்கை களுக்கும், அடிமைகளையே பயன்படுத்தினர்.

கருப்பின மக்களுக்கான விடுதலைப் போராட்டம் அமெரிக்காவில் நூற்றாண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த விடுதலைப் போராட்டங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது மட்டுமல்ல, கருத்து ரீதியான பிரச்சாரங்களையும் அமெரிக்க வெள்ளை உலகம் செய்து வந்தது. கருப்பு என்பதே நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனமான வெறுக்கத்தக்க நிறம் என்றும், ஆப்பிரிக்காவும் அங்குள்ள மனிதர்களும் மிருகங்களாகவே கருதப்படக்கூடிய முறையில் ஒரு கற்பிதத்தை உலகம் முழுவதும் அமெரிக்க மற்றும் மேற்குலக வெள்ளை உலகம் கட்டமைத்தது.

நிறவெறிக்கு எதிராக தொடர் இயக்கங்கள் நடந்தாலும் இன்றும் கருப்பின அமெரிக்கர்களுக்கு எதிரான தாக்குதல் குறையவில்லை. 2020 ம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரத்தில் ஜார்ஜ் ஃப்ளாயிட்(46) என்ற கருப்பினத்தவர் "என்னால் மூச்சு விட முடியவில்லை ப்ளீஸ் காலை எடுங்கள் என்று நடுரோட்டில் தொண்டையில் முட்டி காலை வைத்து 9 நிமிடங்களாக அழுத்திக் கொண்டிருந்த ஒரு வெள்ளை போலீஸ் அதிகாரியிடம் ஈனக்குரலில் இறைஞ்சி கொண்டிருந்தார். ஜார்ஜ் ஃப்ளாயிடின் மூச்சு நின்ற பிறகே தொண்டைக் குழியில் இருந்து முட்டிகாலை எடுத்தான் அந்த நிறவெறி போலீஸ். அமெரிக்காவில் வீசும் காற்றில் எல்லாம் நிறவெறியின் ரத்தவாடை வீசுகிறது. ஜார்ஜ் ஃப்ளாயிட் மட்டுமல்ல நிறவெறிக்கு இன்றும் நிறைய பேர் அமெரிக்காவில் இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

2022 ம் மே 14 அன்று நியூயார்க் நகரின் பஃபல்லோ என்ற இடத்தில் சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது நிரம்பிய எஸ். ஜென்றான் என்ற வெள்ளை இளைஞன் கருப்பர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 கருப்பர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்தார்கள். மூன்று பேர் காயம் அடைந்தனர். வெள்ளை நிறவெறி அமைப்பின் செயல் திட்டத்தாலும் தூண்டுதலாலும் இது நடைபெற்றது. ‘‘கருப்பர்களை எனக்குப் பிடிக்காது; அவர்கள் வெள்ளையர்களை ஒழிக்க சதி செய்கிறார்கள். எனவே அவர்களை அழித்தேன்’’ என்று அவன் பேசினான்.

அமெரிக்க மக்கள் தொகையில் 13.6 சதம் கருப்பின மக்கள் இருக்கிறவர்கள்.76.6சதம் வெள்ளை இனத்தவர்கள். ஸ்பானிக் என்று அழைக்கக்கூடிய மற்றவர்கள் 10% இருக்கிறார்கள். அமெரிக்க சிறைச் சாலைகளில் கருப்பு நிற ஆண்கள் மொத்த கைதிகளில் 37 சதவீதமாகவும், வெள்ளையர்கள் 32 சதவீதமாகவும் உள்ளனர். கருப்பர்கள் மீது சட்டரீதியான பாரபட்சம் அதிகமாகவே இருக்கும். நிறவெறி தாக்குதல் 2020 ம் ஆண்டு மட்டும 6% அதிகமாகி உள்ளது. 2008 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டுதோறும் நடைபெறும் வன்முறைகளில் இதுவே அதிகம்.  இக்காலத்தில் கருப்பர்கள் மீதான தாக்குதல்கள் 40 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும், ஆசியர்கள் மீதான தாக்குதல்  மேலும் பல மடங்கு அதிகரித்திருப்பதாக  புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன. அமெரிக்க சமூகத்தில்  நிறவெறி நீடித்துக் கொண்டு இருக்கிறது.

பல ஐரோப்பிய நாடுகளில் நவபாசிச சக்திகள் இனவெறியை கையில் எடுத்து அரசியல் களமாட துவங்கி விட்டனர். இவற்றை ஆளும் வர்க்கம் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவைப் போலவே ஐரோப்பிய நாடுகளிலும் ஆப்பிரிக்க ஆசியர்கள் மீதான தாக்குதல் அதிகமாகி உள்ளது. இந்தியாவில் மத வெறியை கையில் எடுத்து வெறுப்பு அரசியலை ஆயுதமாக்கி தெருக்களிலே படுகொலைகளை நடத்தி ரத்தஆறுகளை ஓட விடுகின்றனர் இந்துத்துவா வகுப்புவாதிகள். ஹிட்லரின் தேசியவாதத் தையும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவாவாதிகள் கையில் எடுத்து நல்லிணக் கத்தை நாசம் செய்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் நிறவெறி, இனவெறி, மத வெறியால் அப்பாவி மக்கள் உடமைகளை இழந்து, உயிரிழந்து வருவது அதிகமாகி உள்ளது. இந்தப் பின்னணியில் நிறவெறி அரசியலை எதிர்த்து அமெரிக்காவில் களமாடிய எண்ணற்ற வீரர்கள் மக்கள் தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அரசியல், இலக்கியம், சட்டத்துறை, கல்வித்துறை என பல தளங்களில் போராடி இருக்கிறார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கது விளையாட்டு  அரங்கம். அமெரிக்க நிறவெறி ஆதிக்கத்தை எதிர்த்து விளையாட்டு மைதானங் களிலும், தடகள கோடுகளுக்கு இடையிலும், குத்துச்சண்டை மேடைகளிலும் ஆக்ரோஷமான முறையில் எதிர்வினையாற்றப்பட்டது. அந்த வீரர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் முகமது அலி. ஒரு குத்துச்சண்டை வீரராக மட்டும் அதிகமான பேருக்கு அறிமுகமாகி இருந்தவர். ஆனால் அவர் கருப்பின மக்களின் விடுதலை தொடங்கி பல தளங்களில் தனது போராட்டக் களத்தை அமைத்துள்ளார். கருப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்திலும், அமெரிக்காவின் யுத்த எதிர்ப்பிலும் முகமது அலியின் நிலைப்பாடும், செயல்பாடும் குறிப்பிடத்தக்க அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. முகமது அலி ஒரு குத்துச்சண்டை வீரன் என்பதை சிறிதும் குறைத்து விடாமல், அவரது அரசியல் களத்தை வாசகர் முன் சமர்ப்பிப்பது தான் இந்தத் தொடரின் நோக்கம்.

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...