மார்தட்டுகிறது சென்னை மாநகராட்சி:

மாநகராட்சியின் அனைத்து துறைகளும் மக்கள்மீது அக்கறையற்று வணிகமயமாகி வருகிறது. சென்னையில் மர்ம காய்ச்சல் மரணம் துவங்கிவிட்டது. டெங்கு காய்ச்சல் அதிமாகி வருகிறது.
காரணம் கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை தண்ணீரை பிடித்து வைக்கின்றனர். இதில் ஆபத்தான கொசுக்கள் பரவுகிறது.
டெங்கு காய்ச்சல் பற்றி மாநகராட்சி மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்தால் மண்டல சுகாதார அதிகாரிக்கு மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று உத்திரவு,
சென்னையின் அனைத்து தனியார் பரிசோதனைக் கூடங்களுக்கும் டெங்கு காய்ச்சல் கண்டுபிடித்தால் மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதலில் தெரிவிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை உத்திரவு. இது உண்மை அறிந்து மக்களை காப்பாற்ற அல்ல. மாறாக எண்ணிக்கை குறைத்து காட்டி சாதனை பெருமை பீற்றிட.
சென்னை மாநகராட்சியில் 3200 மலேரியா ஊழியர்கள் நியமித்திருப்பதாக அறிக்கை விட்டுள்ளனர். 17 லட்சம் வீடுகளுக்கு இவர்களை பங்கிட்டால் 531 வீடுகளுக்கு ஒருவர். ஒரு நாளைக்கு 18 வீடுகள் கொசு மருந்து அடிக்க வேண்டும். இந்த கணக்குபடி பார்த்தால் தெருவெல்லாம் நம் கண்களுக்கு கொசுக்களைவிட அவர்களே தென்படுவர்.
ஒவ்வொரு வட்டத்திற்கும் 5 முதல் 8 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர் என்று பலர் கூறுகின்றனர். இவர்களில் சுமார் 700 பேர்கள் தான் நிரந்தர தொழிலாளர்கள். மற்றவர்கள் ரூ 200 தினக்கூலிக்கு பணியாற்றுபவர்க்ள்.
ஒவ்வொரு வட்டத்திலும் குறைந்தபட்சம் 210 தெருக்கள் முதல் அதிகபட்சமாக 280 - 300 தெருக்கள் வரை உள்ளது. கண்டிப்பாக இந்த பணியாளர்களை வைத்து இந்த பணியை நடத்த முடியாது.
சுகாதார அலுவலர், ஆய்வாளர், அடிப்படை சுகாதார ஆய்வாளர், பணியாளர் என அனைத்திலும் பணியிடங்கள் போதுமான அளவு நிரப்பப்படவில்லை.
தற்போதைய இந்த பற்றாக்குறை பணியாளர்களே புகை மருந்து அடித்தல், தெளிப்பான், சம்ப், டேங்க், கிணறு போன்றவற்றிற்கு மருந்து அடித்தல், மாடுபிடித்தல் போன்ற பணிகளும் செய்கின்றனர். ஆய்வாளர்கள் பல நேரங்களில் இவர்களை இதர பணிகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
அடையாள அட்டை இல்லாததால் பலவீடுகளில் உள்ளே செல்ல முடியவில்லை.
போதுமான அளவிற்கு மருந்துகள் இல்லை என்றும் குறைபடுகின்றனர். மருந்து கொள்முதல் செய்ய இன்னும் டெண்டர் முடியவில்லை என்பது தனிக்கதை.
சென்னை மாநகராட்சி டெங்கு காய்ச்சலை உத்திரவு போட்டோ, உண்மையை மறைத்தோ ஒழித்துவிட முடியாது.புள்ளி விபர சாதனை முக்கியமில்லை. மக்களின் வேதனையும் உயிரும்தான் முக்கியம்.உண்மை ஒரு நாள் வெளியாகும், உலகம் அதிலே தெளிவாகும்.
சென்னையின் மறுபக்கம்:
ஏ.பாக்கியம்