Pages

வியாழன், ஜூன் 26, 2025

26 உய்குர்∶ வரலாறும் வளர்ச்சியும்




சீனாவின் மதத்தைப் பற்றி எழுதி முடிக்கிற பொழுது உய்குர் இன மக்களின் பிரச்சனையை எழுதாமல் முடிக்க முடியாது. காரணம் மதமும் இனமும் இரண்டறக் கலந்து இருக்கக்கூடிய பிரச்சனை இது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பது போல், சீனாவில் பல இடங்களில் இனக்குழுவும், மதமும் பழக்கவழக்கங்களிலும், வழிபாட்டு முறைகளிலும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். து மட்டுமல்ல, இன்றைய சீன விரோத சக்திகளால் குறிப்பாக அமெரிக்காவால் புவிசார் அரசியலில் முன்னெடுக்கப்படுகிற பல புள்ளிகளில் மத்திய ஆசியாவின் முக்கிய புள்ளியாக உய்குர் இனப் பிரச்சனை இருக்கிறது.

சீனாவின் வளர்ச்சியை தடுப்பதற்கு அமெரிக்கா ல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதோடு, பல்முனை தாக்குதல்களையும் தொடுத்து வருகிறது. தைவான் ஜலசந்தியில் யுத்தத்தை உருவாக்குவது, தென் சீனக்கடலில் பிலிப்பைன்ஸ் நாட்டை சீனாவுக்கு எதிராக தூண்டிவிடுவது, இந்தியாவின் எல்லைப்புறங்களில் முரண்பாடுகளுக்கு கொம்பு சீவிவிடுவது போன்று சீனாவுக்கு எதிராக  பல செயல்களில் அமெரிக்கா ஈடுபடுகிறது.  இதேபோன்று சீனாவில் உள்நாட்டு கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் ஆட்சியாளர்களை பலவீனப்படுத்தவும் பல நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது. ஹாங்காங் தன்னாட்சி பிரதேசத்தில் போராட்டங்களை தூண்டி விடுவதும், தியான்மென் சதுக்கத்தில் எடுத்த முயற்சிகளும் ஜனநாயக மீட்பு என்ற போர்வையில் அமெரிக்கா நடத்திய நாடகம் ஆகும். சீனாவில் மத சுதந்திரம் இல்லை என்று கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பை அமெரிக்கா தூண்டி விடுகிறது. இதற்கு போப் ஆண்டவரை கருவியாக பயன்படுத்தவும் முயற்சிக்கிறது.

இதேபோன்று வடமேற்கு சீனாவில் இருக்கக்கூடிய உய்குர் இன மக்களின் பிரச்சனைகளை முன் வைத்து தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் அமெரிக்க மற்றும் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் தூண்டி விடுகிறார்கள். சீனாவில் உய்குர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள். அவர்களின் உரிமைகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் ஈரான், ஈராக், லிபியா, ஏமன், பாலஸ்தீனம், சிரியா உட்பட எண்ணற்ற நாடுகளில் இஸ்லாமிய மக்களை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து வருகிறது. எனவே இவர்களின் மனித உரிமை, மத சுதந்திரம் அனைத்தும் தங்களுக்கு ஆதரவான, மக்களை சுரண்டுவதற்கான அமைப்பை உருவாக்குவதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

ய்குர் என்றால் என்ன?

சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது ஜின்ஜியாங் மாநிலம். இந்த மாநிலத்தில் உய்குர் இன மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். இவர்கள் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள். ஆனால் துருக்கி மொழிகுடும்பத்தை சேர்ந்த உய்குர் மொழியை பேசக்கூடியவர்கள். துருக்கி, உஸ்பெக்,கசன் கலந்து உய்குர் உருவானது. வரிவடிவத்திற்கு அதாவது எழுதுவதற்கு அரபிக் மொழி வடிவத்தை பயன்படுத்துகின்றனர். வேறுசில இடங்களில் வாழக்கூடிய உய்குர் இன மக்கள் லத்தின் வடிவத்தை பயன்படுத்து கின்றனர்.  1949 ஆம் ஆண்டு வரை அதாவது புரட்சி வெற்றி பெறுகிற வரை இது ஜின்ஜியாங் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. இங்கு உய்குர் மக்கள் அதிகமாக வாழ்ந்ததால் அவர்களின் தனித்தன்மையை பாதுகாப்பதற்கா சீன மக்கள் குடியரசு 1955 ஆம் ஆண்டு ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி மாநிலம் என்று இதன் பெயரை மாற்றியது. அது மட்டுமல்ல... அதற்கான திட்டங்களையும் உருவாக்கியது.

இந்த மாநிலம் யுரேசிய கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. சீனாவில் இருக்கக்கூடிய மாகாணங்களில் மிகப் பெரியது. சீன நிலப்பரப்பில் ஆறில் ஒரு பகுதியை இந்த மாநிலம் மட்டும் கொண்டுள்ளது. சுமார் 1.6649 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளது. இந்த மாநிலத்தின்  மற்றொரு முக்கியத் தன்மை சீனாவின் மொத்த எல்லைப் புறத்தில் 5700 கிலோ மீட்டருக்கு அதிகமான நீளம் உள்ள எல்லையை இந்த மாநிலம் பெற்றுள்ளது. மொத்த எல்லையில் கால்பங்கு எல்லை இந்த மாநிலத்தில் மட்டும் வருகிறது. மற்றொரு குறிப்பிடத்தக்க புவிசார்ந்த அம்சம் மங்கோலியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு நாடுகளின் எல்லைப்புறங்கள் இந்த மாநிலத்தை ஒட்டி உள்ளன. அது மட்டுமல்ல இந்த பகுதி பண்டைய காலத்திலிருந்து சீனாவின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது.

உய்குர் இன மக்கள் மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவின் பொதுவான பகுதியிலிருந்து தோன்றியவர்கள். இவர்கள் கலாச்சார ரீதியாக துருக்கிய இனக்குழுக்களில் இருந்து உருவானவர்கள். உய்குர் என்பது பண்டைய இனக்குழுக்களின் பெயர்களை குறிக்கக்கூடியது. 19ஆம் நூற்றாண்டில்தான் இம்மக்களுக்கு உய்குர் என்ற பெயர் பொதுவாக வழங்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளியான இந்தியா மற்றும் கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவின் என்சைக்ளோபீடியா என்ற கலைக்களஞ்சியம் உய்குர் மக்கள் துருக்கிய பழங்குடியினர்களில் மிகவும் பழமையானவர்கள் என்று பதிவு செய்வதுடன், இவர்களின் முன்னோர்கள் சீன டார்டோரியன், ஜின்ஜியாங் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. சீன மக்கள் குடியரசு தெரிவித்திருப்பது போல் இந்தப் பிரதேசம் பண்டைக்காலம் முதல் சீனாவின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் பல உள்ளன.

உய்குர் மக்கள் பற்றியும், அவர்களின் வாழ்வாதாரம் பற்றியும் பொது ஆண்டுகள் 4 மற்றும் 5 நூற்றாண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உய்குர் மக்கள் காலங்காலமாக இஸ்லாமிய மக்களாக இருக்கவில்லை. 15ஆம் நூற்றாண்டு வரை இவர்களின் பெரும்பாலானோர் பௌத்த மதங்களை தழுவியவர்களாக இருந்தார்கள். 10ம் நூற்றாண்டில் தான் ஒரு பகுதியினர் இஸ்லாம் மதத்தை ழுவ ஆரம்பித்தனர். 16ஆம் நூற்றாண்டில் பெரும் பகுதி உய்குர் மக்கள் இஸ்லாமிய மதத்தை ழுவினார்கள். இந்த நிகழ்வுகள் 17ஆம் நூற்றாண்டு வரை நடந்து கொண்டுதான் இருந்தது. 17 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு உய்குர் மக்களின் பிரதான அடையாளமாக இஸ்லாம் மதம் மாறியது. இதற்குப் பிறகு இம்மக்களின் கலாச்சாரம், அவர்களின் அடையாளம் அனைத்திலும் இஸ்லாம் முக்கிய பங்கு வகித்தது. இக்காலத்திலிருந்து இம்மக்கள் அதற்கு முந்தைய பௌத்த மரபு வழியிலான செயல்களை துண்டித்துக் கொண்டனர்.

ஜின்ஜியாங் மாநிலத்தில் உள்ள தாரிம் வண்டல் படுகையில்தான் இம்மக்களில் 80 சதவீதம் பேர் வாழ்கிறார்கள். இந்தத் தாரிம் படுகை தக்கல்மான் பாலைவனம் முழுவதும் சிதறி கிடக்கக்கூடிய சோலைவனமாகும். இது ஒரு வளமானபடுகை. சுமார் 8,88,000 கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கி உள்ளது. வடமேற்கு சீனாவில் மிகப்பெரிய படுகைகளில் ஒன்று. இவை தவிர உய்குர் மக்கள் தலைநகர் உரும்கியிலும், அதிகமாக வாழ்கிறார்கள்.

1765 ஆம் ஆண்டு மஞ்சு வம்சத்தினர் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் பொருளாதாரக் கொள்கையும், அடக்கு முறையும் ஜின்ஜியாங் மாநிலத்தை கடுமையாக பாதித்தது. இதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. பெரும்பாலும் உய்குர் இன மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மன்னர் அந்தப் போராட்டங்களை கடுமையாக அடக்கினார். போராட்டக்காரர்களை படுகொலை செய்ய உத்தரவிட்டார். ஆண்களை தூக்கில் போடுவதும், பெண்களையும் குழந்தைகளையும் அடிமையாக்கிடவும் உத்தரவிட்டார். இது உய்குர் மக்கள் மத்தியில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தின.

1911 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு புரட்சிக்கு பிறகு சீனாவை ஆட்சி செய்த கோமிங்டாங் கட்சி, சீனாவில் உள்ள ஒட்டுமொத்தமான முஸ்லிம் மக்களுடன் இணைத்து உய்குர் மக்களையும் பார்த்தனர். இதற்கு முன் ஆட்சி செய்த மஞ்சு அரசாங்கமும் இவர்களை இஸ்லாமிய மக்களின் ஒரு பிரிவாக மட்டுமே பார்த்தனர். இந்நிலையில், 1944 ஆம் ஆண்டில் சீனாவில், யுத்த பிரபுக்களின் ஆட்சி நடைபெற்றது. பல்வேறு மாகாணங்களில் யுத்த பிரபுக்கள் அந்தந்த பிரதேசங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இதன் ஒரு தொடர்ச்சியாக ஜின்ஜியாங் மாநிலத்தில் மூன்று நான்கு மாவட்டங்களை இணைத்து உய்குர் மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியை கிழக்கு துர்கிஸ்தான் குடியரசு என்று அறிவித்து யுத்த பிபுக்கள் ஆட்சி நடத்தினர். இந்த அறிவிப்பிற்கு உய்குர் மக்களிடம் எதிர்ப்பு இருந்தது. ஒரு பகுதியினர் சீன குடியரசை ஆதரித்தனர்.

இதே காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மாவோ தலைமையில் நடந்த சீனப் புரட்சி, பல பிரதேசங்களை விடுவித்து மக்கள் விடுதலைப் படையின் கீழ், சோவியத்துக்களாக அமைத்து வந்தது. ஜின்ஜியாங் பகுதியில் உள்ள யுத்த பிபுக்களை தோற்கடித்து சிஞ்சியான் பகுதியில் மக்கள் விடுதலைப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதற்கான சோவியத்துக்களையும் அறிவித்தார்கள்.

1949 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மாவோ தலைமையில் நடந்த புரட்சி வெற்றி பெற்று சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டது. ஜின்ஜியாங் பிரதேசம் சீனாவின் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் உய்குர் மக்கள் அதிகமாக வாழ்வதால் அவர்களின் இனத்தை அங்கீகரிக்கக் கூடிய வகையில் 1955 ஆம் ஆண்டு ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசம் என்று பெயர் மாற்றப்பட்டது. சீன மக்கள் குடியரசு சிறுபான்மை மக்களுக்கான சிறப்பு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தது.

 

சோவியத் வீழ்ச்சியும் இனக்குழு எழுச்சியும்

1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு இனவாதங்கள் பரவலாக தலைதூக்கியது. சோவியத் நாட்டிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்ட இன மோதல்களால் பல நாடுகள், பல துண்டுகளாக மாறின. ஏகாதிபத்திய நாடுகள் இந்த மோதல்களை அதிகப்படுத்தி ஏற்கனவே துண்டான நாடுகளை மேலும் பல துண்டுகளாக உடைத்து தங்களது பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்குவதற்கான களமாக மாற்றிக் கொண்டன. இந்த சகுனி வேலையை சீனாவிலும் தொடங்கின.  சீனாவின் எல்லைப்புற மாகாணமான உய்குர் மக்களை தனிநாடு கோரிக்கையை முன்வைத்து போராடத் தூண்டின. அவர்களின் போராட்டத்திற்கான  அனைத்து உதவிகளையும் செய்தன. கிழக்கு துர்கிஸ்தான் என்ற நாட்டிற்கான வடிவத்தை உருவாக்கி பிரிவினைவாத கோஷத்தை ஏகாதிபத்திய  நாடுகள் உயர்த்திப் பிடித்தன.

இதற்காக கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற ஒரு பயங்கரவாத அமைப்பை அமெரிக்கா ஊட்டி வளர்த்தது. சீனாவில் ஒரு சுதந்திரமான கிழக்கு துர்கிஸ்தானை நிறுவ வேண்டும் என்று இந்த அமைப்பு அறிக்கைகளை வெளியிட்டு மக்களை அணி திரட்டியது. இது மட்டுமல்ல துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் இருந்தும் தீவிரவாத குழுக்களை இவர்களோடு இணைக்க கூடிய வேலைகளையும் செய்தார்கள். பிரிவினைவாத இயக்கமான கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தை மிகவும் போர்க்குணம் மிக்க மக்கள் இயக்கம் என்று அமெரிக்கா பாராட்டியது. சீனா உட்பட உலக நாடுகள் பலவும், இந்த பயங்கரவாத இயக்கத்தை கண்டித்த பொழுது, அமெரிக்கா வேறு வழியில்லாமல் பயங்கரவாத பட்டியலில் இந்த இயக்கத்தை சேர்ப்பதாக அறிவித்தது. ஆனால், அமெரிக்கா தனது வெளியுறவுத் துறையில் உள்ள பயங்கரவாத பட்டியலில் இந்த அமைப்பை சேர்க்கவில்லை. காரணம் அந்த அமைப்பிற்கான  எல்லா உதவிகளையும் வெளியுறவுத்துறை செய்து கொண்டிருந்தது. இந்த மக்கள் சட்டபூர்வமாக போராடுகிறார்கள்; இவர்களை சீன அரசாங்கம் அடக்குகிறது என்று பிரச்சாரம் செய்து பிரிவினைவாதிகளுக்கு கலவரத் திட்டங்களை வகுத்துக் கொடுத்தனர். இதன் விளைவாக அடுத்தடுத்த கலவரங்கள் நடந்து கொண்டே இருந்தது.

கலவரமே பிரிவினை இயக்க கலாச்சாரம்:

சீனாவில் உய்குர் மக்களிடம் வஹாபிஷம் என்று பொதுவாக அறியப்படும் தீவிர பழமைவாத இஸ்லாமிய விழுமியங்களின் வடிவம் ஒருபோதும் இருந்ததில்லை. இப்பொழுதும் இருக்கவில்லை. இம்மக்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருமானம் ஈட்டக் கூடியவர்கள். அவர்கள் இஸ்லாமிய மதத்தின் அணுகுமுறைகளிலும் நடைமுறைகளிலும் மிதமானவர்கள். இவர்களது உலக கண்ணோட்டங்கள் மதச்சார்பற்றவைகளையும் உள்ளடக்கியவைகளாக இருக்கிறது. இப்படிப்பட்ட மக்களை வன்முறை பாதையை நோக்கி பிரிவினை இயக்கம் இழுக்க முயற்சித்தது. பிரிவினைவாதிகளின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் இந்த மக்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கவில்லை.

ஜின்ஜியாங் மாநிலம் மத்திய ஆசியாவின் புவிசார் அரசியலின் மையப் புள்ளியாக இருந்தது. இந்த மாநிலம் வளமான பகுதிகளையும் மலைப்பாங்கான இடங்களையும், பாலைவனங்களையும் எண்ணெய், எரிசக்தி வளங்களையும் எட்டு நாடுகளின் எல்லைப்புறங்களையும் தன்னகத்தே கொண்டு இருப்பதால் இவற்றை தனி நாடாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் சீனா உட்பட ஒட்டுமொத்த மத்திய ஆசிய நாடுகளை கபளீகரம் செய்ய முடியும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசைப்பட்டது.  அதற்காக பிரிவினைவாதிகளை உருவாக்கி, அவர்களுக்கு உதவி செய்து, கலவரங்களை நடத்தியது.

1991 ஆம் ஆண்டில் இந்த பிரிவினைவாத இயக்கம் சில கலவர முயற்சிகளை மேற்கொண்டது. 1997 ஆம் ஆண்டு குல்ஜா என்ற இடத்தில் பிரிவினைவாத இயக்கம் நடத்திய கலவரத்தில் சிலர் கொல்லப்பட்டனர். 50 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். இதே ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி பிரிவினை வாதத்தை சித்தாந்த ரீதியாக ஏற்றுக் கொண்ட ஒரு படை ஜின்ஜியாங் மாநிலத்தின் தலைநகர் உரும்கியில் கலவரத்தை உருவாக்கியது.

1989 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற தியான்மென் சதுக்க போராட்ட மாதிரியில் ஒரு கலவரத்தை 20 ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் தேதி ஜின்ஜியாங் மாநிலத்தின் தலைநகர் உரும்கியில் நடத்த திட்டமிட்டார்கள். இங்கு நடத்தப்பட்ட பிரிவினைவாதிகளின் தாக்குதலால் உலகமே அதிர்ச்சிக்கு உள்ளானது. இந்த நகரத்தில் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரிவினைவாதிகள் நூற்றுக்கணக்கான இடங்களில் காவல்துறையினர், பொதுமக்கள் மீது தாக்குதலை தொடுத்தனர்.  அரசு அலுவலகங்களையும், குடியிருப்பு வளாகங்களையும் சூறையாடினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 197 பேர்,  படுகொலை செய்யப்பட்டார்கள். 1700 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். 331 கிடங்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 1325 வாகனங்களையும் பொதுமக்களின் சொத்துக்களையும் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவில் ஒட்டுமொத்த சேதாரத்தை பிரிவினைவாதிகள் ஏற்படுத்தினார்கள். ஜின்ஜியாங் மாநிலத்தின் அரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் உய்குர் மக்களின் ஆதரவுடன் இந்த பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டெடுத்தது. பிரிவினைவாதிகளின் நோக்கம் நிறைவேறவில்லை.

இந்த நிகழ்வுக்கு முந்தைய 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் தலைநகரத்தில் உலகமே வியந்து பார்க்கும் அளவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை சீர்குலைப்பதற்கான மிகப் பிரம்மாண்டமான திட்டங்களை உருவாக்கி அமலாக்குவதற்காக முயற்சி செய்யப்பட்டது. சீன மக்கள் குடியரசு இதை முறியடித்து விட்டது.

2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி இந்த மாநிலத்தின் எச்சென் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 20 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். இதே ஆண்டு ஜூன் மாதம் ஒரு விமானத்தை கடத்துவதற்கான முயற்சியில் பிரிவினைவாதிகள் ஈடுபட்டனர். அதை விமான பணியாளர்களும், பயணிகளும் முறியடித்தனர். 2013 ஆம் ஆண்டு ஷான் ஷான் மாவட்டத்தில் உள்ளூர் அரசாங்கக் கட்டிடங்களை வெடிவைத்து தகர்க்கும் நாச வேலையில் பிரிவினைவாதிகள்  ஈடுபட்டனர். இதில், 27 பேர் மரணமடைந்தனர். இதே வருடம் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியான்மன் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருக்கிற நேரத்தில் 31 பெட்ரோல் டேங்கர்கள் மூலமாக பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். 2014 ஆம் ஆண்டு மே மாதம் ஜின்ஜியாங் மாநிலத்தின் தலைநகர் உரும்கியில் பிரிவினைவாதிகள் வெடிகுண்டு வீசியதில் 30க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 90க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதே ஆண்டு புனித போர் என்ற அறிவிப்பை செய்து பிரிவினைவாதத்தை எதிர்த்த இஸ்லாமிய மதத் தலைவர்களையும் அறிஞர்களையும் ஆசிரியர்களையும் படுகொலை செய்தார்கள். சர்வதேச பத்திரிகைகளிலும் சீன அரசாங்கத்தின் அறிக்கைகளிலும் இவையெல்லாம் வெளிவந்த செய்திகளாகும். 1990 முதல் 2016 வரை மதவெறி தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் ஆயிரத்துக்கும் அதிகமான தாக்குதலை நடத்தி பொதுமக்களை படுகொலை செய்தார்கள் என்பதை சீன அரசாங்கம் ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அ.பாக்கியம்

புதன், ஜூன் 18, 2025

ஈரான் அணுசக்தியின் வரலாறும் அமெரிக்க வஞ்சகமும்

 


அ. பாக்கியம்

இன்று 18.06.25. வெளிவந்துள்ள செய்தியில் ஈரான் இதுவரை ஒரு அணுகுண்டு கூட தயாரிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அமெரிக்காவின் உளவுத்துறை ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை என்றும் 2003 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முயற்சிகளைகூட ஈரானின் உச்ச தலைவர் கமேனி அங்கீகரிக்கவில்லை என்று அறிக்கை கொடுத்துள்ளது. உளவுத்துறையின் உயர்ந்த அதிகாரியான கப்பார்ட், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை என்றும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் கூடுதலாக இருக்கிறது என்பது மட்டும்தான் தீர்க்க வேண்டிய பிரச்சினை என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். இந்த அறிக்கை பற்றி டொனால்ட் ட்ரம்ப், எனக்கு உளவுத்துறை அறிக்கை பற்றி கவலை இல்லை,( I don’t care what she said,”) நான் முடிவெடுத்து விட்டேன். இஸ்ரேலின் தலைவர் நேதயான்குவும் நானும் ஒரே இடத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்துவிட்டார். அமெரிக்காவும் இஸ்ரேலுடன் சேர்ந்து தாக்குதலை ஆரம்பிக்கப் போகிறோம் என்பதுதான் இதற்கான அறிகுறியாகும். அவர்கள் அணுகுண்டை தயாரிக்கவில்லை என்றாலும் அணுகுண்டை தயாரிப்பதற்கான அருகில் இருக்கிறார்கள் எனவே அவர்களை தாக்குவோம் என்று இஸ்ரேலும், டிரம்பும் அறிவித்து தாக்குதலை நடத்துகின்றனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு இதுவரை இல்லாத அளவு எதிர் தாக்குதலை ஈரான் நடத்தி இஸ்ரேலுக்கு பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இஸ்ரேல் இப்படி ஒரு பேரழிவை இதுவரை சந்தித்தது இல்லை.

உலகில் அணு ஆயுத நாடுகள்:

ஈரான் நாடு மட்டும்தான் அணுகுண்டு மூலம் ஆபத்து ஏற்படுத்த இருக்கிறது என்று அமெரிக்க பிரச்சாரங்கள் உலாவந்து கொண்டிருக்கிறது. பூமியில் உள்ள நாடுகளில் ஒன்பது நாடுகள் அணுஆயுதங்களை சொந்தமாக தயாரித்து ராணுவ தாக்குதலுக்கு ஏற்ற வகையில் பொருத்தி வைத்திருக்கிறார்கள். ரஷ்யா(5449), அமெரிக்கா(5277), சீனா(600), பிரான்ஸ்(290), பிரிட்டன்(225), இந்தியா(180), பாகிஸ்தான்(170), இஸ்ரேல்(90), வடகொரியா(50) ஆகிய 9 நாடுகள் ஆகும். இந்த ஒன்பது நாடுகள் தவிர இத்தாலி (25) துருக்கி(20) பெல்ஜியம்(15) ஜெர்மனி(15) நெதர்லாந்து(15) ஆகிய ஐந்து நாடுகளும் அமெரிக்காவிடமிருந்து அணுஆயுதங்களை  வாங்கி வைத்துள்ளன. பெலாரஸ்(வெளியிடவில்லை) நாடு ரஷ்யாவிடம் இருந்து அணுஆயுதங்களை வாங்கி வைத்துள்ளது. இந்த 15 நாடுகள் தவிர அமெரிக்காவின் கூட்டணிகள் மேலும் 28 நாடுகளில் அணு ஆயுதங்களை தாக்குதலுக்கு ஏற்ற வகையில் பொருத்தி வைத்துள்ளது. மொத்தமாக 43 நாடுகளில் அணு ஆயுதங்கள் இப்போது இருக்கிறது. இஸ்ரேலில் மட்டும் 200க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் ராணுவ ஆயுதங்களில் பொருத்தி தாக்குதலுக்கு தயார் நிலையில் இருக்கிறது என்பது உலகம் அறிந்த செய்தி. தோராயமாக 12,331 ஆயுதங்கள் உள்ளன இவற்றில் 9600க்கும் மேற்பட்டவை செயலில் உள்ள ராணுவ இருப்புகளில் உள்ளன என்று விஞ்ஞானிகளின் கூட்டமைப்பின் விஞ்ஞானிகள் 2025 ஆம் ஆண்டு அணுசக்தி படைகளின் நிலையை பற்றி கூறுகிறது பொழுது இவற்றை தெரிவித்து இருக்கிறார்கள். பனிப்போர் காலத்தை ஒப்பிடும்பொழுது அணு ஆயுதங்கள் குறைந்து இருப்பதற்கான தகவல்களையும் தெரிவிக்கிறார்கள். வருங்காலத்தில் இது அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்கள்

இத்தனைக்கு மத்தியிலும் ஈரான் மட்டும் அணு ஆயுத ஆபத்தை உருவாக்கும் என்று சொல்வதற்கு பின்னால் இருக்கக்கூடிய புவிசார் அரசியலை இதற்கு முன் எழுதிய கட்டுரையில் விலக்கி இருக்கிறேன்.

ஈரானின் அணுசக்தி கொள்கை

ஈரான் அணு சக்தியை ஆக்கபூர்வமான வழிகளில் மட்டுமே பயன்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது, வந்துள்ளது. இன்றும் அதே நிலைப்பாட்டை தான் சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்து வருகிறது. 1950 ஆம் ஆண்டுகளில் ஈரான் அறிவியல் ரீதியாகவும், தொழில் துறையிலும் வளர்ச்சி அடைய தொடங்கி இருந்தது. நாட்டை மேலும் தொழில்மயம் ஆக்குவதற்கு அணு சக்தி அவசியமாக தேவைப்பட்டது. மின்சாரம் உட்பட பல தேவைகளை அணுசக்தியின் மூலம் உருவாக்க முடியும் என்று இதர நாடுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு அணுசக்தி வளர்ச்சிக்கு ஆர்வம் காட்டினார்கள். 1953ஆம்ஆண்டு முகமதுமெசாடேக் ஆட்சி கவிழ்க்கப் பட்டவுடன், ஈரான் அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. இந்த ஆட்சி கவிழ்க்க உதவி செய்த அமெரிக்க ஜனாதிபதி ஐசெனோவர் 1957 ஆம் ஆண்டு அமைதிக்கான அணுசக்தி கொள்கையை அறிவித்தார். ஈரான் அன்றைய தினம் இந்தக் கொள்கையை முழுமையாக ஆதரித்தது. எனவே ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்திற்கு அணுசக்தி உருவாக்க வேண்டும் என்று அன்றைய மன்னரும் முக்கிய அரசியல் தலைவர்களும் கருதினார்கள்.

ஈரான் அணுசக்தியின் தந்தை

இந்தப் பின்னணியில் ஈரான் நாட்டைச் சேர்ந்த அக்பர் எடமெட் என்ற மின் பொறியியல்,லை இயற்பியல் மற்றும் எம்எஸ்சி பட்டங்களை முடித்த ஒரு விஞ்ஞானி சுவிட்சர்லாந்தில் உள்ள கல்லூரியில் ஆராய்ச்சி பொறியாளராக பல ஆண்டுகள் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் ஒரு அணு விஞ்ஞானி என்பதால் சுவிட்சர்லாந்து நாட்டின் அணுக்கரு பாதுகாப்பு குழுவின் தலைவராக 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார். 1960 ஆம் ஆண்டுகளில் ஈரான் மன்னர் ஷா மேற்கத்திய பாணியில் பல நடவடிக்கைகளை ஈரானில் எடுத்து வந்தார். மன்னர் ஷாவின் சிலர் அம்சங்கள் அக்பர் எடமெட்  கவனத்தை ஈர்த்த து. எனவே அவர் 1965 ஆம் ஆண்டு ஈரானுக்கு திரும்பினார். அன்றைய ஈரான் நாட்டு பிரதமருடன் ஒரு ஆலோசனையை நடத்தி ஈரானுக்கு என்று தனியான அறிவியல் ஆராய்ச்சி துறை தேவை என்பதையும், அதற்கான ஒரு அமைப்பை நிறுவவேண்டும் என்று முன்மொழிந்தார். அப்பொழுது பிரதமராக இருந்த அமீர் அப்பாஸ் ஹூவைடா இந்த ஆலோசனை ஏற்றுக்கொண்டார். நாட்டில் ஏராளமான கார்பன் வளங்கள் இருந்த பொழுதும், ஈரான் நாட்டுக்கு என்று சொந்தமாக எண்ணெய் தொழில் கிடையாது. இது வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என்று அவர் கருதினார். ஈரானில் இருந்த என்னை கம்பெனிகள் முழுவதும் ஆங்கிலோ ஈரானிய நிறுவனமான பிரிட்டிஷுக்கு சொந்தமாக இருந்தது. எனவே ஈரானின் வளர்ச்சிக்கு மின்சாரம் அவசியம். மின்சாரத்திற்கு அணுசக்தி அவசியம். அணுசக்திக்கு ஈரானின் தனித்துவமான அணுக் கொள்கை தேவை என்று முன்மொழிந்தார்.

ஈரான் அரசு 1968 ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் அறிவியல் மற்றும் உயர்கல்வி அமைச்சகத்தின் ஆராய்ச்சிக்கான துணை அமைச்சராக எடமெட் ஈரான் நியமித்தது 1972 ஆம் ஆண்டு இவர் லண்டனுக்கு பயணம் செய்து அணுசக்தி தொடர்பான விவரங்களை அறிந்து கொண்டது மட்டுமல்ல, ஈரான் மன்னர் அணுசக்தி குறித்த வளர்ச்சிக்கு எந்த அளவு ஆர்வமாக உதவி செய்கிறார் என்பதையும் எடுத்துரைத்து வந்தார். இதே காலத்தில் ஈரானில் எண்ணெய் வருவாய் மூலம் கிடைத்த நிதியை அணு சக்திக்கான திட்டங்களை உருவாக்குவதற்கு செலவழிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். இதற்காக அக்பர் எடமெட் ஐ உடனடியாக இந்த பணியில் இறங்க அழைத்தார்கள். ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்த அக்பர் ஈரானில் உருவாக்கப்பட்ட புதிய அணுசக்தி அமைப்பின் தலைவராக மன்னர் நியமித்தார். மேலும் ஈரானின் திட்டமிடல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டு ஈரானின் துணைப் பிரதமராகவும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்த உயர் அதிகாரங்கள் மூலம் அணுசக்தி துறைக்கான அதிக நிதிகளை ஒதுக்கீடு செய்து கொள்வதற்கும், அதன் வரவு செலவுகளை அரசாங்கத்திற்கு கொடுக்கத் தேவையில்லை, கருவூலத்திற்கு ஒப்படைத்தால் போதும் என்ற அதிகாரத்தையும் அவரால் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதன் விளைவாக அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கான பணிகள் தீவிரம் அடைந்தன.

அமெரிக்க வஞ்சகம் ஆரம்பம்

ஈரான் ஆக்கப்பூர்வமான முறையில் அணுசக்தி பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையை கடைப்பிடித்ததினால் 1970 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்பட்ட அணு ஆயுத பரவல் தடை சட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதே காலத்தில் இந்தியா 1974 மே மாதம் அணுகுண்டு சோதனை நடத்தி ஒரு அணு ஆயுத நாடாக தன்னை உயர்த்திக் கொண்டது. இன்னும் சில நாடுகளும் அணுகுண்டு சோதனைகளை நடத்தியதனால் ஈரான் மக்களிடமும் ஆட்சியாளர்களும் இயற்கையாகவே அணுசக்தி வளர்ச்சிக்கு அந்நிய நாடுகளை சார்ந்தே இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இருந்தாலும் அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் 1970 ஆம் ஆண்டு கையெழுத்து போட்டு இருப்பதால் குறைந்தபட்சம் செறிவூட்டும் யுரேனியத்தை வைத்துக் கொள்வதற்கு உரிமை இருக்கும் என்று ஈரான் அரசு கருதியது.

ஆனால் நிலைமை தலைகீழாக மாறியது. அமெரிக்கா யுரேனியம் செறுவூட்டலை நீங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்தது. ஈரானில் செறிவூட்டல் தொழில் நுட்ப திட்டத்தை உருவாக்கக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. இதற்கு மாற்றாக ஈரான் அணுசக்தியின் சர்வதேச கூட்டமைப்பிலிருந்து தனக்கான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அன்றைய மன்னர் அமெரிக்க சார்பில் இருந்ததால் வேறு வழி இல்லை. இதற்கெல்லாம் காரணம் ஈரானின் முதலீடுகளை அந்நிய நாடுகள் நோக்கி இருக்க வேண்டும் என்பதுதான். குறிப்பாக அமெரிக்கா மேற்கத்திய நாடுகளை நோக்கி ஈர்க்க வேண்டும் என்பதுதான் திட்டம். எனவே ஈரான் மன்னரும் அதற்கு ஏற்ற வகையில் வெளிநாட்டு அணுசக்தி துறையில் முதலீடுகளை செய்தார். ஈரானில் இருந்த விஞ்ஞானிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இது பெரும் விரக்தியை ஏற்படுத் தியது.

இதனால் அக்பர் எடமெட் பிரிட்டனுடன் இருந்த தனிப்பட்ட தொடர்புகளை பயன்படுத்தி ஈரான் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கினார்கள். 1977ஆம் ஆண்டு ஈரானுக்கும் பிரிட்டனுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி ஈரான் பிரிட்டனில் உள்ள அணுசக்தி துறைகளில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய வேண்டும். அதற்கு ஈடாக பிரிட்டனின் அணுசக்தி துறை 1984 ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அணு உலைகள் என்று 20 அணு உலைகளை கொடுத்து விடும். இது 1994 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று முடிவாகியது. இப்போதும் ஈரானுக்கான அணுசக்தி மின்சாரம் தயாரிக்க யுரேனிய செறிவூட்டலை கொடுக்கவில்லை. அதற்கு மாறாக நீங்கள் பணத்தை எங்கள் அணுஉலையில் முதலீடு செய்யுங்கள், நாங்கள் உங்களுக்கு அணு உலை தயாரித்து தருகிறோம் என்று தான் முடிவாகியது. பிரிட்டன் ஒப்பந்தப்படி 1994 ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க கூடிய அணு உலைகளை கொடுக்க வேண்டும் என்பதும் இது ஈரானின் எரிசக்தி சேவையில் மூன்றில் ஒரு பங்காக அமையும் என்றும் முடிவாகியது.

புரட்சியால் தடைபட்டு போன திட்டங்கள்

1978 ஆம் ஆண்டு இத்திட்டம் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்தத் திட்டத்தின் தலைவர் பதவியை அக்பர் எடமெட் ராஜினாமா செய்தார். நிர்வாக சீர்குலைவு மற்றும் ஊழல் காரணமாக அரசு அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. இதே காலத்தில் ஈரானில் மன்னர் ஷாவுக்கு எதிராக அனைத்து மக்களும் புரட்சியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக 1979 ஆம் ஆண்டு கொமேனி தலைமையில் இஸ்லாமிய புரட்சி மன்னரின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு புதிய ஆட்சி பொறுப்புக்கு வந்தது. புதிய அரசாங்கம் அணுசக்தி திட்டங்கள் அனைத்தும் பண விரயம் மேலை நாட்டு முறைகள் என்று கைவிட்டு விட்டது. அணுசக்தி துறையின் தந்தை என்று அழைக்கப்பட்ட அக்பர் எடமெட் பிரான்சுக்கு சென்று விட்டார். 1984 ஆம் ஆண்டு கால கட்டத்தில் அவரை மீண்டும் அழைத்த பொழுது வர மறுத்துவிட்டார்.

1980 முதல் 1988 வரை சுமார் 8 ஆண்டுகள் ஈரான் ஈராக் யுத்தம் நடைபெற்றது. இக்காலகட்டத்தில் ஈரானின் அரசவைத் தலைவர்கள் அணுசக்தியின் தேவையை அவசியம் என்று உணர்ந்தார்கள். சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல அணு விஞ்ஞானிகளை விடுவித்து அணுசக்தி திட்டங்களை முன்னெடுத்தார்கள். அமெரிக்கா ஈராக்கிற்கு ஆயுதம் கொடுத்து உதவி கொண்டு இருந்த சூழலில், ஈரானை அணுசக்தி முன்னேற விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக தனது பிடியை இறுக்கியது. அணு ஆயுதத்தால் உலக மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று சாத்தான் வேதம் ஓதியது. இதற்கான இதற்கான அடுத்தடுத்த சில சம்பவங்களையும் முன் வைத்தார்கள்.

1979 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் முள்று மயில் தீவு என்ற இடத்தில் அணுமின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டு அதனுடைய உள் வட்டாரங்களில் கதிர்வீச்சுகள் காணப்பட்டது. இது ஒரு கடுமையான விபத்தாக கருதப்பட்டது. 1986 ஆம் ஆண்டு செர்னோபியில் ஏற்பட்ட பெரும் விபத்து அணுசக்தி தொடர்பான அச்சத்தை உருவாக்கியது. அமெரிக்கா தனக்கு எதிரான நாடுகளை அணுசக்தி தயாரிக்க கூடாது என்பதற்காக இந்த விபத்துக்களை பெரும் பிரச்சாரமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஈரானின் இஸ்லாமிய குடியரசின் அணு ஆயுத பாதுகாப்பு என்பது மன்னர் ஷா காலத்து கொள்கையில் இருந்து மாறுபட்டதாக இருக்கவில்லை. அதையே தான் பிரதிபலித்தது. ஆனாலும் அமெரிக்கா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஈரான் ஆயுத தயாரிப்பில் முன்னேறுவது மட்டுமல்ல பிரச்சனை, பொருளாதார ரீதியாக அமெரிக்காவிற்கு எதிராக இருக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டு ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை. 1979 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா ஈரானுக்கு எதிராக செய்து வரக்கூடிய செயல்கள் அனைத்தும் ஈரானிய தலைவர்களிடம் கோபத்தையும் எதிர்ப்பையும் ஏன் கணிசமான பதட்டங்களையுமே உருவாக்கியது.

இயற்கையாகவே அமெரிக்கா எதிர்ப்புணர்வு இதனால் மக்களிடமும் உருவாகியது. ஆகவே 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஈரானிய தேசிய வாதி என்று கருதப்பட்ட மஹ்மூத் அஹ்மதிநெஜாத் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக 2013 ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார். இவர் சித்தாந்த ரீதியாக ஒரு தேசியவாதியாக இருந்தது மட்டுமல்ல, ஈரானின் அணுசக்தி திட்டத்தில் வலுவான ஆதரவாளராகவும் இருந்தார். அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உட்பட பல நாடுகளை கடுமையாக விமர்சித்தார். அணு பரவல் தடைச் சட்டத்தின் பிரிவு நான்கில் உள்ள சரத்தை மேற்கோள் காட்டி ஈரானுக்கு யுரேனியத்தை செறிவூட்டும் உரிமை உள்ளது என்று அறிவித்தார். இவரின் பேச்சுக்கள் அனைத்தும் தேசிய உரிமைகள் பற்றியதாக மாறியது. இதனால் ஈரானின் உள்ளேயும் ஈரானுக்கு வெளியேயும் இவருக்கு ஆதரவு கிடைத்தது. அமெரிக்கா,  பிரிட்டன்,இஸ்ரேலும் ஆகிய நாடுகளுக்கு 1951 ஆம் ஆண்டு முகமது மெசாடேக் எண்ணெய் உரிமைகளை தேசியமயமாக்கிய செயல் நினைவுக்குவந்தது. அது மட்டுமல்ல ஈரானில் பூஷேரில் ஒரு மின் உற்பத்தி நிலையம் ஜெர்மனியர்களால் கட்டப்பட்டு கைவிடப்பட்டதை ரஷ்யர்கள் கட்டிக் கொடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தார்கள். எனவே மீண்டும் ஈரானின் அணுசக்தி விஷயத்தை சர்வதேச அணு சக்தி முகமை தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக 2012 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தியது.

 

தெளிவும்,நிலையும் இல்லாத டிரம்ப்

ஈரானுடன் அமெரிக்க  முரண்பாடுகள் முற்றிக் கொண்டிருந்ததால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்க கொள்கைகளில் சில இலக்குகளை தீர்மானித்தார். இவர் 2009 முதல் 2017 வரை அமெரிக்காவில் 44 வது ஜனாதிபதியாக இருந்தார். எனவே ஈரானுடன் பேச்சு வார்த்தை நடத்தி 2015 ஆம் ஆண்டு கூட்டு (the joint comprehensive plan of action)  செயல்திட்டத்திற்கு உட்படுவது என்று ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த பேச்சு வார்த்தைகளை பின்னடைவு செய்வதற்காக இஸ்ரேலும் அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலிய ஆதரவாளர்களும் பல சதிதிட்டங்களை தீட்டினார்கள்.

2018 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த டொனால்ட் ட்ரம்ப் தான்தோன்றித்தனமான முடிவுகளை அறிவித்துக் கொண்டே இருந்தார். ஈரானுடன் நடைபெற்ற அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் இருந்து ஒரு தலைபட்சமாக வெளியேறி ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார். மீண்டும் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்தவுடன் பல அதிரடி அறிவிப்புகள் செய்தார். மார்ச் மாதம் ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று பொதுவெளியில் பகிரங்கமாக அறிவித்தார். ஈரானும் இது பொதுவெளியில் அறிவிக்கப்பட்டாலும் இவற்றை நிராகரிக்கவில்லை. பேச்சுவார்த்தை தயாராக இருந்தது.

 

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி அமெரிக்க ஈரான் பேச்சு வார்த்தைகள் முதல் சுற்று ஓமானின் நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் ஒப்பந்தம் செய்வதற்கான மூன்று அம்சங்களை முடிவு செய்தார்கள்.

1 ஈரான் தற்காலிகமாக யுரேனிய செறிவூட்டலை 3.67 சதவீதம் குறைத்துக் கொள்வது என்றும், அதற்கு ஈடாக, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள நிதி முடக்கத்தை தளர்த்துவது, கச்கா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிப்பது.

2. ஈரான்  உயர்மட்ட யுரேனிய செறிவுகளை நிரந்தரமாக நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும், சர்வதேச அணுமுகமை மீண்டும் ஆய்வுகளை தொடங்குவதற்கும் ஈரானில் வேறு ஏதேனும் அறிவிக்கப்படாத அணுசக்தி தளங்கள் இருந்தால் அவற்றை நெறிமுறை படுத்துவதற்குமான திட்டங்களை உருவாக்குவது.

3. இதன்படி அமெரிக்க காங்கிரஸ்  அணுசக்தி ஒப்பந்தத்தை அங்கீகரித்து ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதும், ஈரானில் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்தால் அவற்றை மூன்றாவது நாட்டிற்கு மாற்றுவது என்றும் முடிவாகியது.

          இந்தப் பேச்சு வார்த்தையின் இரண்டாவது சுற்று ரோம் நகரத்தில் நடந்து கொண்டிருந்த பொழுது இஸ்ரேலிய விமானப்படைகள் ஈரான் மீது ஏவுகணை தாக்குதலை நடத்துவதற்கான பயிற்சிகள் நடைபெறுகின்றன என்ற தகவல் கிடைத்தது. எனவே இந்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது என்பதை காட்டியது. இதனால் பேச்சு வார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது. மறுபுறத்தில் ஈரானில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் பூஜ்ஜியம் சதவீதமாகத் தான் இருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் பின்னணியில் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் எந்த யுரேனியத்தையும் செறிவூட்ட நான் அனுமதிக்க மாட்டேன் என்று அச்சுறுத்தி பேசினார். காரணம் இஸ்ரேலின் எதிர்ப்பாகும். அனேகமாக இஸ்ரேலில் தாக்குதலுக்கு அமெரிக்கா ஏப்ரல் மாதமே பச்சைக்கொடி காட்டிவிட்டது. இது டிரம்ப் நிர்வாகத்தில் இருந்த வஞ்சக நடவடிக்கையாகும்.

ஜூன் ஒன்பதாம் தேதி ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஸ்மாயில் பகாயி ஓமான் வழியாக ஒரு திட்டத்தை சமர்ப்பித்தார். ஈரான் குறித்து நெதயாகுன்வுடன் பேசியதாகவும், நேர்மறையான நல்ல முன்னேற்றம் அடைந்ததாகவும் டிரம்ப்  கூறினார். ட்ரம்ப் இவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, ஜூன் 12-ம் தேதி இஸ்ரேலிய தாக்குதல் நடக்க இருப்பதாக ஊடகத்தில் செய்திகள் கசிந்தன. அடுத்த நாள் இஸ்ரேல் அதாவது ஜூன் 13ஆம் தேதி தாக்குதலை நடத்தியது.

ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கும், ஈரானை தாக்குவதற்கும் இஸ்ரேலுக்கு பச்சைக்கொடி காட்டுகிற முறைகளிலும், பிறகு ஈரானை எச்சரிப்பதும், என மாறி மாறி எந்த திட்டவட்டமான கொள்கையின் அடிப்படையிலும் டொனால்டம் இந்த விஷயத்தை அணுகவில்லை. எதையும் கணிக்க முடியாத நபர் என்று அவரைச் சொல்லுவதை விட புவிசார் அரசியலில் இஸ்ரேலுடன் இணைந்து வளைகுடா நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது தான் உகந்தது என்ற முடிவின் அடிப்படையில் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார். பாலஸ்தீன படுகொலைகளுக்காக பேசாதவர் இஸ்ரேலின் பாதுகாப்புகளை உலகத்தின் பாதுகாப்பு போல் உச்ச குரலில் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்.

ஈரானின் அணுசக்தி கொள்கை என்பது ஆக்கபூர்வமான பணிகளுக்கு தான் என்பதை கடைசி வரை கடைபிடித்தார்கள். பல நாடுகள் அணுகுண்டு சோதனைகள் வைத்திருந்த பொழுதும் ஈரான் அது பற்றி கவலை கொண்டாலும் அந்த தயாரிப்பில் இறங்கவில்லை. உக்ரைனிலும் அணு உலைகள் இருக்கிறது ஆனால் அது தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்துகிறது. ஈரான் முழுக்க முழுக்க அணுசக்தி மற்றும் எரிசக்தியில் அமெரிக்காவை சார்ந்து தான் இருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்து நிற்பது தான் மிகப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. ஏப்ரல் 12ஆம் தேதி அமெரிக்க ஈரானுக்கு இடையில் நடைபெற்ற அணுசக்தி செறிவூட்டும் ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் ஜூன் 13ஆம் தேதி தாக்குதலை நடத்துவதின் வஞ்சகத்தை புரிந்து கொள்ள முடியும். போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பிரச்சனை அல்ல, பேரழிவுகளின் வெளிப்பாடாக இந்தப் போர் இருக்கும். இஸ்ரேல் இதுவரை காசாவை அழிக்க முடியவில்லை, லேபனானை, சிரியாவை, ஈராக்கின் ஒரு பகுதியை, ஏமனின் அவுத்தியை அழிக்க முடியவில்லை. அதுபோல் ஈரானும் எதிர்ப்பு சக்தியின் தொடர்ச்சியாக இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

அ. பாக்கியம்

 

 

திங்கள், ஜூன் 16, 2025

ஈரான் மீது தாக்குதல்: பின்னணி என்ன?

 


ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கிறது. ஈரானும் பதில் தாக்குதலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இஸ்ரேல் காசாவின் மீது நடத்தும் தாக்குதல், உக்ரைன் ரஷ்ய யுத்தம் இந்திய பாகிஸ்தான் மோதல் இப்போது இஸ்ரேல் ஈரான் யுத்தம் ஆகியவை உலக ஒழுங்கு முறையில்(World Order) ஏற்பட்டுக் கொண்டிருக்கிற மாற்றங்களின் வெளிப்பாடாகும். இஸ்ரேல் என்ற தனி ஒரு நாட்டின் படையெடுப்பு அல்ல இது. அமெரிக்கா, பிரிட்டன் தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளின் திட்டங்களில் ஒன்றுதான் இந்த தாக்குதல். இந்தத் திட்டத்தை அமலாக்குகிற கூலிப்படையாகத்தான் இஸ்ரேல் என்ற நாட்டின் ஜியோனிஸ்டுகள் இருக்கிறார்கள்.

தற்பொழுது ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவிற்கு செய்தி அனுப்பிவிட்டு தான் செய்கிறோம் என்று இஸ்ரேல் கூறுகிறது. எங்களிடம் ஒப்புதல் பெறவில்லை ஆனால் தகவல் தெரிவித்தார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவிக்கிறார். இது எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்பொழுதாவது ஈரான் திருந்த வேண்டும் என்று அறிக்கை கொடுக்கிறார் என்றால் யார் தாக்குதலை நடத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தாக்குதலுக்கான காரணமாக பிரச்சாரம் செய்யப்படுவது ஈரான் அணு ஆயுதத்தை தயார் செய்கிறது என்றும், அதுக்கான செறிவூட்டுப் பொருட்களை அதிகமாக வைத்திருக்கிறது என்றும், ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் உலகத்திற்கு நல்லது இல்லை என்று, உலகத்தில் பெரும்பாலான நாடுகளில் குண்டு மழைகளையும்  , அணு அணுகுண்டுகளையும்  பொழிந்த அமெரிக்கா தெரிவிக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களை காலம் காலமாக கொள்ளையடித்து வந்த மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் அதற்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதை அறிந்த பிறகுதான் இது போன்ற தாக்குதலை தொடுக்கிறார்கள். முதலில் ஈராக் என்ற நாட்டை தாக்கியதற்கும், அடுத்தடுத்து லிபியா சிரியா, ஏமன் என தாக்குதலை தொடர்வதற்கும் எண்ணெய் வளத்தை சூறையாடுவதற்குத்தான்.

மத்திய கிழக்கு நாடுகளில் அரபு தேசியம் எழுச்சி பெற்ற போதெல்லாம் அவர்களுக்கு எதிராக இஸ்லாமிய அடிப்படை வாதிகளை அமெரிக்காவும் பிரிட்டனும் தூண்டி விட்டார்கள். அமெரிக்க ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களின் நிர்பந்தத்தினால் தங்கள் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை தாங்களே தீர்மானித்துக் கொள்வோம் என்று நடவடிக்கை எடுத்தால் அது அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளின் சுரண்டலை பாதிக்கிறது என்ற காரணத்தினால் அந்த நாடுகள் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருக்கிறது என்று தாக்குதல் நடத்தினார்கள். அல்லது தீவிரவாதிகளை உருவாக்குகிறது அது ஒரு தீவிரவாத நாடு என்று பிரச்சாரம் செய்து தாக்குதல் நடத்துவதை கொள்கையாக வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நஜிபுல்லா அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக தாலிபான்களை, பின் லேடன்களை உற்பத்தி செய்தவர்கள் தீவிரவாதம் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். 

மத்திய கிழக்கு நாடுகளில் இடதுசாரி கருத்துக்கள் வளர்ந்து, மக்கள் செல்வாக்கு பெற்ற பொழுது அவற்றையெல்லாம் அழித்து ஒழிப்பதற்காக மத அடிப்படை வாதத்தை உற்பத்தி செய்தவர்கள் இந்த ஏகாதிபத்தியவாதிகள். எகிப்து, துனீசியா, ஈராக், ஈரான், ஏமன், ஆப்கன் போன்ற இடங்களில் இடதுசாரி இயக்கத்திற்கு எதிராக சிஐஏ செய்த சதிராட்டங்கள் எண்ணில் அடங்காதவை. ஈரானும் அதற்கு விதிவிலக்கு அல்ல. மாறி வருகின்ற உலக ஒழுங்கில் ஈரான் ரஷ்யாவுடனும், சீனாவுடனும் தனது உறவை மேம்படுத்திக் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல சவுதி அரேபியாவுடன் ஈரான் உறவை மீண்டும் ஏற்படுத்தியது மேற்குலகத்தையே அச்சத்துக்கு உள்ளாக்கியது. மேலும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் முக்கிய நாடாக இடம்பெற்று உலகில் என்னை வளம் அதிகமாக உள்ள நாடுகளில் வெனிசுலா முதல் இடத்திலும், அதற்கு அடுத்து சவுதி அரேபியாவும் மூன்றாவதாக ஈரானும் இருக்கிறது. இவை தவிர வளைகுடா நாடுகளில் மட்டும் உலகில் உள்ள எண்ணெய் வளங்களில் 55 சதவீத முதல் 57 சதவீதம் வரை இருக்கிறது. ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் வலுமிக்க ஒரு நாடாக வரலாற்று வேர்களுடன் இருக்கிறது. மக்கள் தொகையிலும் சரி, பரப்பளவிலும் சரி உலக அளவில் 17 வது இடத்திலும், ஆசிய கண்டத்தில் ஆறாவது பெரிய நாடாகவும் இருக்கிறது. மற்ற வளைகுடா நாடுகளை விட அதிக அளவு மலைப்பாங்கான பகுதிகளையும் ஈரான் தன்னகத்தே கொண்டுள்ளது.

எனவே ஈரானின் வளர்ச்சியும், எழுச்சியும் ராணுவ படைகளின் உயர்வும் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் எண்ணெய்வள கனவுகளை தகர்த்து விடும். ஏற்கனவே உலக ஒழுங்கில் வீழ்ந்து கொண்டிருக்கிற அமெரிக்கா அதல பாதாளத்திற்கு சென்று விடும் என்ற அச்சத்துடன் இஸ்ரேல் என்ற அடியானை கண்மூடித்தனமாக இறக்கி விட்டுள்ளது. வரலாறு நெடுகிலும் அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு எதிரான, இடதுசாரி அரசியலை, ஏன் முற்போக்கு அரசியலைக் கூட, ஏன் அதையும் கடந்து வெகு மக்களுக்கான நலன்யக்கக்கூடிய அரசியலை கூட அமெரிக்கா அனுமதித்ததே கிடையாது. ஈரானிலும் அது நிகழ்ந்துள்ளது.

ஈரானில் முகமது  மெசாடெக்  என்பவர் 19 பேர்களுடன் இணைந்து 1949 ஆம் ஆண்டு ஈரானின் தேசிய முன்னணி என்ற கட்சியை துவங்கினார். இவர் அரசியல்வாதி மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆவார். ஈரானில் 1905 மற்றும் 1911 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட  புரட்சியின் விளைவாக நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டது. முகமது மெசோடெக் 1923 ஆம் ஆண்டிலேயே இந்த பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். மன்னர் ஆட்சியின் கீழ் இந்தப் பாராளுமன்றம் இருந்தது. ஈரான் அரசியலில் ஜனநாயகத்திற்காகவும், அந்நிய சக்திகள் தலையிடுவதற்கு எதிராகவும் தொடர்ந்து களம் கண்டவர் முகமது மெசோடக் மற்றும் அவரது ஈரான் தேசிய முன்னணி என்ற கட்சியும் ஆகும்.

1951 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது மெசோடக்கை மன்னர் பிரதமராக பதவி ஏற்க செய்தார். மக்கள் செல்வாக்கு மிக்க ஈரான் தேசிய முன்னணியின் தலைவராக இவர் இருந்தார். இவரது செல்வாக்கை, புகழை மன்னர் நன்கு அறிந்திருந்தார். முகமது மேசாடெக் ஆட்சி பீடம் ஏறியவுடன் மக்களுக்கு செய்த பணிகளைக் கண்டும், அவரது செல்வாக்கு உயர்வதைக் கண்டும் மன்னர் அவரை பிரதமர் பதவியில் இருந்து 1952 இல் நீக்கம் செய்தார். மக்களின் எழுச்சியினால் வேறு வழியில்லாமல் மீண்டும் அவரை மன்னர் பிரதமராக அமர்த்திவிட்டார்.

முகமதுமெசாடெக் ஆட்சியில் இருந்த பொழுது, வேலையின்மைக்கு இழப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் காயம் அடைந்த தொழிலாளர்களுக்கும், நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று உத்தரவு கொண்டுவரப்பட்டது. விவசாயத் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் நில உரிமையாளர்களின் தோட்டங்களில் அடிமை வேலை செய்வது தடை செய்யப்பட்டது. 1952 ஆம் ஆண்டு முகமது மெசோடெக் நிலச் சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றினார். இந்த சட்டத்தின்படி நில உரிமையாளர்கள் தங்கள் வருவாயில் 20 சதவீதத்தை மேம்பாட்டு நிதிக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது இந்த நிதியின் மூலமாக கிராமப்புறத்தில் விவசாயிகளுக்கு வீட்டு வசதிகளும் நீர்வள ஏற்பாடுகளும் பூச்சிகளிலிருந்து மக்களை பாதுகாக்கவும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

தேசத்தின் சொத்துக்களை குறிப்பாக எண்ணெய் வளங்களை 1913 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் அரசு கொள்ளை அடித்துச் சென்று கொண்டிருந்தது. அன்றைய மன்னர்கள் மூலமாக ஆங்கில-ஈரானிய என்னை நிறுவனத்தை உருவாக்கி எண்ணெய் வளத்தை கொள்ளை அடித்தார்கள். ஈரான் நாட்டில் ஒரு பிரிட்டிஷ் அரசு போலவே இந்த நிறுவனம் செயல்பட்டது. முகமது மெசாடக் இந்த நிறுவனத்தை தேசிய மயமாக்கினார். இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல ஒப்பந்தங்கள் காலாவதியாகிப் போன பிறகும் அவர்கள் கையிலே இருந்தது. அவற்றையெல்லாம் ரத்து செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தார். மேற்கண்ட நிறுவனத்தால் நடத்தப்படும் பெட்ரோலிய தொழில் மக்களின் நல் வாழ்விற்கோ அல்லது நமது நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கோ அல்லது தொழில்துறை வளர்ச்சிக்கு எந்த பங்களிப்பையும் செய்யவில்லை என்று பிரதமர் முகமது மெசாடேக் அறிவித்தார்.

இந்த ஒரு நிறுவனத்தின் வருவாய்  முலமாக ஈரான் நாட்டின் முழு பட்ஜெட்டையும் பூர்த்தி செய்து, வறுமை மற்றும் பின் தங்கிய நிலைமைகளை சரி செய்ய முடியும் என்று அறிவித்தார். மேற்கண்ட ஆங்கிலோ-ஈரானிய நிறுவனம் ஈரான் நாட்டிற்குள் ஊழல்களையும், சதி செயல்களையும் பல்கி பெருகச்செய்கிறது. வற்றையும் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று அறிவித்தார். இந்த திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் ஈரான் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரம் அடைய முடியும் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

ஆங்கிலோ ஈரானிய என்னை நிறுவனத்தில் பிரிட்டிஷார் தலையிடமுடியாமல்  தடுக்கப்பட்டதனால் அவர்களின் கப்பற்படைக்கு சேர வேண்டிய எண்ணெய்கள் கிடைக்கவில்லை. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பட்ஜெட் பற்றாக்குறையை சரி செய்யக்கூடிய நிதியையும் இதிலிருந்து எடுத்துச் சென்றார்கள். அதிலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. இதன் விளைவாக பிரிட்டிஷ் உதவிக்கு அமெரிக்காவையும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையையும் அணுகியது. முதலில் அமெரிக்கா மறுத் தது.1952 ஆம் ஆண்டு ஐஸ்னேவர் ஜனாதிபதியாக வெற்றி பெற்றவுடன் அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியது. பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரிகள் ஈரானிய பிரதமரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க உளவுத்துறைக்கு பரிந்துரை செய்தனர்.இதற்கு கூறிய காரணம் இதுதான்? பிரிட்டிஷ் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில், முகமது மெசாடெக் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை யென்றாலும், கம்யூனிஸ்ட் கட்சி என்று கருதப்பட்ட டுடே கட்சியை சார்ந்து செயல்படுகிறார். எனவே அவர் விரைவில் ஈரானை கம்யூனிஸ்ட் ஆட்சியை நோக்கி திருப்பி விடுகிற அபாயம் இருக்கிறது. பனிப்போர் காலத்தில் ஈரான் அவ்வாறு மாறினால் மிகப் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை வின்சென்ட் சர்ச்சில் தெரிவிக்கிறார்.

இதை ஏற்றுக் கொண்ட அமெரிக்க சிஐஏ நிறுவனம் மக்கள் செல்வாக்கு மிக்க முகமது மெசோடக்கை பிரதமரிலிருந்து நீக்க திட்டங்களை உருவாக்குகிறது. ஈரான் மன்னர் ஷா ஏற்கனவே சூடு பட்டுள்ளதால் பதவி நீக்கம் செய்ய மறுத்துவிட்டார். அமெரிக்க உளவுத்துறை ஆபரேஷன் அஜாக்ஸ் இந்தத் திட்டத்தை உருவாக்கி, ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கீடு செய்து, பிரதமர் முகமது மெசாடெக்கை பதவி நீக்கம் செய்வதற்காக இந்த பணத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். அமெரிக்காவின் சி..ஏ உளவுத்துறையும், பிரிட்டனின் M16 உளவுத்துறையும், ஈரானின் தலைநகர் டெஹாரனில்  தளத்தை அமைத்துக் கொண்டு ஆட்சி அமைப்பில் ஈடுபட்டார்கள். பிரதமர் முகமது மெசாடேக்கிற்கு எதிராக பெரும் கலவரங்களை உருவாக்கினார்கள்.

அது மட்டுமல்ல கருப்பு பிரச்சாரம் என்ற பெயரில் ஒரு பிரச்சாரத் திட்டத்தை உருவாக்கி முஹம்மது மெசாடெக் தொடர்ந்து இழிவு படுத்தி, மக்களுக்கு விரோதமானவர் என்ற பொய்பிம்பத்தை உருவாக்கினார்கள்.இறுதியில் 1953 ஆம் ஆண்டு டிசம்பர் 21 தேதி பிரதமர் மெசாடெக் பதவி நீக்கம் செய்யப்பட்டு ராணுவ சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் தனிமை சிறை. தேசபக்தனுக்கு, அன்னிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடியவருக்கு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்ன தெரியுமா? தேச விரோதி என்ற குற்றச்சாட்டை சுமத்திதான் சிறையில் அடைத்தார்கள். முகமது மெசாடெக் இந்த தீர்ப்பை கேட்ட பிறகு நீதிமன்றத்தின் தீர்ப்பு எனது வரலாற்று பெருமைகளை அதிகரித்து உள்ளது நீங்கள் என்னை குற்றவாளி என்று தீர்ப்பளித்ததற்கு நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் உண்மையிலேயே இன்று இரவு ஈரானிய நாடு அரசியல் அமைப்பின் அர்த்தத்தை புரிந்து கொண்டது என்று கூறினார் 1967 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் தேதி புற்றுநோயால் இறக்கும் வரை அவர் தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ஈரான்-இஸ்ரேல் இணைபிரியா கூட்டாளிகள்

இதன்பிறகு அமெரிக்காவின் கைப்பாவையாக ஈரான் மாறியது. மன்னர் ஷாவின் ஆட்சி 1979 ஆம் ஆண்டுகள் வரை, அதாவது இஸ்லாமிய புரட்சி நடக்கிற வரை இருந்தது. இதே காலத்தில்தான் ஈரான் அமெரிக்காவின் அடியாளாகிய இஸ்ரேலின் நெருக்கமான நாடாக செயல்பட்டது. 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு உருவான பிறகு ஈரானும் அதை அங்கீகரித்தது. இஸ்ரேல் அரபு நாடுகளுக்கு எதிராக ஈரானை தனது நட்பு நாடாக கருதியது. ஈரானிய விவசாய நிபுணர்களுக்கு இஸ்ரேல் பயிற்சி கொடுத்தது. தொழில் நுட்ப அறிவையும் வழங்கியது. ஈரானுக்கான ஆயுதப் படைகளின் கட்டமைப்பை செய்வதற்கு உதவியது. ஈரான் மன்னர் இஸ்ரேலுக்கு எண்ணெய் வழங்கினார். காரணம் இஸ்ரேலின் வளர்ச்சிக்கு எரிபொருள் மிக அடிப்படையான தேவையாக இருந்தது. அது மட்டுமல்ல இஸ்ரேலுக்கு வெளியே இரண்டாவது பெரிய யூத சமூகம் ஈரானில் தான் அன்று இருந்தது. இஸ்லாமிய புரட்சிக்கு பிறகும் 20 ஆயிரம் யூதர்கள் ஈரானில் இருக்கிறார்கள்.

1979 ஆம் ஆண்டு அய்துல்லா கோமேனி தலைமையில் இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டவுடன் இஸ்ரேல் நாட்டுடன் முந்தைய அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தார்கள். பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்ததற்கு ஈரானிய அதிபர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். இதனால் ஈரானுக்கு மத்திய கிழக்கு பிராந்தியங்களில் செல்வாக்கு வளர்ந்தது. 1982 ஆம் ஆண்டு இஸ்ரேல் தெற்கு லெபனானுக்குள் நுழைந்து உள்நாட்டு கலவரத்தை பயன்படுத்த ஆரம்பித்த பொழுது ஈரானிய அரசு புரட்சிகர காவல் படையை லெபனானுக்கு அனுப்பி  இஸ்ல்லா போராளி குழுக்களுக்கு உதவியது. ஈரான் பிராந்திய செல்வாக்கின் அளவை அதிகரித்துக் கொண்டது.

எனவே அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ஈரான் இவ்வாறு வளர்வதை விரும்பவில்லை. ஈரான் நாட்டிற்கு எதிராக ஈராக்கை தூண்டி விட்டார்கள். சதாம் உசேனுக்கு ஈரான்-ஈராக் யுத்தம் நடக்கிற பொழுது அனைத்து ரசாயன ஆயுதங்களையும் அமெரிக்கா கொடுத்து உதவியது. ஈரான் மீது தாக்குதலில் நடத்துவதற்கு ஈராக்கை முழுமையாக பயன்படுத்தியது அமெரிக்கா என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆயுதம் கொடுத்தவர்களே பிறகு அபாயகரமான ஆயுதம் என்று சொல்லி ஈராக்கை அழித்துவிட்டார்கள்.

தற்பொழுது ஈரானின் வளர்ச்சி உலக ஒழுங்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் சீனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். உக்ரைன் யுத்தத்தில் ரஷ்யாவின் மீது அமெரிக்கா அறிவித்த தடைகளை எல்லாம் தவிடு பொடி யாக்கி ரஷ்யா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ரஷ்ய சீன உறவுகளும் மேம்பட்டு வருகிறது. ரஷ்ய, சீன, ஆப்பிரிக்க நாடுகளின் நெருக்கமும், பொருளாதார உறவுகளும் புதிய மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் ராணுவ பலம்மிக்க, பொருளாதார பலமிக்க ஒரு நாடாக பரிணமித்தால் என்னவாகும்? ஏகாதிபத்தியத்தின் எண்ணெய் கனவுகள் எண்ணெய் கிணறுகளுக்குள் மூழ்கிவிடும். எனவே தான் ஈரான் மீது இந்த தாக்குதல் நடைபெறுகிறது.

சர்வதேச அணுசக்தி நிறுவனம்

ஈரானிய அணுசக்தி திட்டம் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. அது மட்டுமல்ல ஈரானிய தலைமை இஸ்ரேல் அரசை அங்கீகரிக்கவில்லை. ஈரான் அணுசக்தி திட்டம் அமைதி நோக்கங்களுக்காக மட்டுமே என்று அதிகாரப்பூர்வமாக வலியுறுத்தி வருகிறது. ஈரான் நாடு அணு ஆயுதம் வைத்துக் கொள்ளாத நாடுகளை விட அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டுகிறது என்று சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குனர் தெரிவிக்கிறார். அதுமட்டுமல்ல ஜூன் 12ஆம் தேதி ஐ நா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு 20 ஆண்டுகளில் இப்போது ஈரான் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தை மீறியதாக அறிவிக்கிறார்கள். ஈரான் மட்டும் அணு ஆயுதத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்ற நியதியை எங்கே கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஈரானிய வெளியுறவு அமைச்சகமும் அணுசக்தி நிறுவனமும் கூட்டாக மூன்றாவது யுரேனியம் செறிவூட்டும் வசதியை பாதுகாப்பான இடத்தில் கட்டுவதை அறிவித்தார்கள். இஸ்ரேல் அணுசக்தி செறிவூட்டும் இடங்களை திட்டமிட்டு தாக்கி வருகிறது. எங்கள் சுய பாதுகாப்பிற்காக நாங்கள் ஈரானின் அணுசக்தியை தாக்குகிறோம் என்று இஸ்ரேல் கூறுவது நியாயமற்ற விவாதம் ஆகும். அமெரிக்கா தாக்குதலை கண்டிக்க வேண்டும் என்று மற்ற நாடுகள் கூறிய போது அதன் வெளியுறவு செயலாளர் அமெரிக்கா தாக்குதல்களை ஆதரிக்கவும் இல்லை ஏற்பாடு செய்வதில் ஈடுபடுவதும் இல்லை என்று கழுவுகிற மீனில் நழுவுகிறவராக அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.

அமெரிக்காவின் பங்கு என்ன?

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடந்தவுடன் தனது சமூக வலைதளத்தில் ஈரானிய தலைமை உடனே வந்து ஒப்பந்தம் செய்ய வேண்டும் இல்லை என்றால் இன்னும் கொடூரமான தாக்குதல் நடக்கும் என்று எச்சரிக்கிறார். ஏற்கனவே பெரும் உயிரிழப்பும் அழிவும் ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலையை முடிவுக்கு கொண்டு வர இன்னும் நேரம் இருக்கிறது. இல்லையென்றால் ஏற்கனவே திட்டமிட்ட தாக்குதல்கள் இன்னும் கொடூரமானவை என்று டிரம்ப் எச்சரிக்கிறார். இஸ்ரேலிய தாக்குதல் மிகவும் வெற்றிகரமான தாக்குதல் என்று புகழாரம் சூட்டிய டொனால்ட் ட்ரம்ப் இதில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்பதையும் வெளியிறவுத்து துறை அமைச்சர் மூலம் சொல்ல வைக்கிறார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்களை முற்றிலுமாக அழிக்க, அமெரிக்காவால் வழங்கக்கூடிய ஆயுதங்களைக் கொண்டுதான் இஸ்ரேல் அவற்றை செய்ய முடியும். அவ்வாறு நிலைமை ஏற்பட்டால் ஈரானின் தாக்குதல் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் வளைகுடா நாடுகளில் இருப்பதை நோக்கி திரும்பலாம். இது மேலும் பல பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் பல இடங்களில் உள்ளது என்றும், சில நிலத்தடி பதுங்கு குழிகளில் உள்ளன என்றும் இதனால் முழுமையாக அழிப்பது கடினம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஈரானும் இஸ்ரேலை தாக்குவதற்கான விரிவான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது இஸ்ரேல் அடுத்ததாக ஈரானின் மின்சாரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை தாக்குவதற்கு திட்டமிடுகிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதில் ஈரானுக்கு எந்த  கட்டுப்பாடும் இல்லை என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கிறார். ஈரான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலிங் அவசர கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேல் சுற்றியுள்ள நாடுகளை தாக்கிய பொழுது இது ஈரானை நோக்கியும் வரும் என்ற எதிர்பார்ப்புடன்தான் ஈரான் இருந்தது. இன்றைய சூழலில் சீனா யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறது இஸ்ரேலை கடுமையாக கண்டித்து சீனா அறிக்கை விட்டது மட்டுமல்ல ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மூலமும் அறிக்கை கொடுத்துள்ளது. இந்தியா நடுநிலை வேடம் தரித்து கொண்டிருக்கிறது.

அமெரிக்கா இந்த எண்ணெய் வளத்தை பாதுகாப்பதற்கும், உலக மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கும், மத்திய கிழக்கு நாடுகளில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அமெரிக்க படை வீரர்களை வைத்துள்ளது. சுமார் 21 க்கு மேற்பட்ட ராணுவ தளங்களை அமைத்துள்ளது. ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார், பகரைன், குவைத், ஈராக், ஜோர்டான், சிரியா, சைப்ரஸ், லெபனான், காசா பகுதிகளில் இவை இருக்கிறது. கத்தார் என்ற சிறிய நாட்டில் மட்டும் 60 ஏக்கர் நிலப்பரப்பில் நூறு யுத்த விமானங்களை நிறுத்தி உள்ளது. சுமார் 10,000 வீரர்களை இங்கு முகாமிடச் செய்துள்ளது.

எனவே இந்த யுத்தத்தின் சூத்திரதாரி அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தான். அமெரிக்க ராணுவதளங்கள் தான் இஸ்ரேலுக்கு ராணுவ வலுவை கொடுக்கிறது. ரொனால்ட் ட்ரம்பின் ஆதரவு இஸ்ரேலுக்கு இருக்கிற வரை யுத்தம் நீடிக்கும். மத்திய கிழக்கு நாடுகளில் மக்களின் ரத்த ஆறுகள் ஓடினாலும், அதில் மூழ்கி எண்ணெய் கிணறுகளின் ஆதிக்கத்தை தக்கவைக்க ஏகாதிபத்திய வெறியர்கள் களம் இறங்கி இருக்கிறார்கள்.

அ.பாக்கியம்.

வியாழன், ஜூன் 05, 2025

வாடிகனின் புனித பீடமும் சீன சோசலிசமும்

 அ.பாக்கியம்

புனித பீடம் என்பது வாடிகன் நகர அரசின் தலைமையகம் ஆகும். சின்னஞ்சிறிய நாட்டின் தலைமையகமான புனித பீடம் உலகில் 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைமையகமாக இருக்கிறது. வரலாற்றில் பல மன்னர்களுக்கு மகுடம் சூட்டியதும், பல மன்னர்களின் அரியாசனத்தை ஆட்டம் காண செய்ததும் இந்த புனிதபீடம்தான். அரசியலும் மதமும் தனித்தனியானது என்று ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் எழுந்த அறிவொளி எழுச்சியின் மூலமாக புனித பீடத்தின் அதிகாரம் மத அமைப்புகளை கட்டுப்படுத்துவதாக சுருங்கி விட்டது. ஆனாலும் அதற்கான அரசியல் களம் இன்றும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

புதிய போப் 14-ம் லியோவின் சவால்கள் 

முதல் முறையாக வட அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் புதிய போப்பாக பொறுப்பேற்றுள்ளார். மற்றொரு முக்கியமான காரணம் இவருக்கு முன்பு  போப் ஆக இருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்ட போப் பிரான்சிஸ், தென் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்தவர். அதே நேரத்தில் எளிதில் திரும்ப முடியாத சில சீர்திருத்தங்களை அவர் திருச்சபையில் பதித்துவிட்டு சென்றுள்ளார். இதுவரை இல்லாத பல குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை அவர் செய்துள்ளார்.

ஓரினசேர்க்கையாளர்களை அங்கீகரித்தது, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கார்டினல்கள் மீது நடவடிக்கை எடுத்தது ஆகியவற்றை குறிப்பிடலாம். அதோடு, ஐரோப்பா அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதிக்கம் தான் போப்பாண்டவரை தேர்ந்தெடுக்கும் கார்டினல்கள் எண்ணிக்கையில் அதிம் இருந்தது.இதில் மாற்றத்தை ஏற்படுத்தி 48 நாடுகளில் மட்டும் இருந்த கார்டினல்களை  78  நாடுகளுக்கு விரிவுபடுத்தினார். இதற்கெல்லாம் மேலாக 1951 ஆம்  ஆண்டு சீனாவுடன் முறிந்து போன உறவை புதுப்பிக்க செய்தார். இவை தவிர கோட்பாடு ரீதியான சில விஷயங்களில் துணிச்சலான முறையில் உத்தரவுகளை பிறப்பித்தார்.

ஐரோப்பியர்கள் 500 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உட்பட பல நாடுகளின் மீது வணிகம் என்ற பெயரால் உள்நுழைந்து காலனி நாடுகளாக மாற்றினார்கள். புதிய நிலங்களை நாங்கள் கண்டுபிடித்து புதிய வளர்ச்சிகளை ஏற்படுத்தினோம். பூர்வகுடி மக்களுக்கு நாகரிகங்களை கற்றுக் கொடுத்தோம். இவையெல்லாம் எங்களின் அற்புதமான கண்டுபிடிப்புகள் என்று பறை சாற்றினார்கள். இதற்கு காலனித்துவ கண்டுபிடிப்பு கோட்பாடு (doctrine of  discovery) என்று பெயர். இவர்கள் பூர்வகுடி மக்களின் நிலங்களை சட்டம் என்ற அடிப்படையிலும், மதத்தை பயன்படுத்தி, வன்முறை மூலமாக அபகரித்துக் கொண்டார்கள். பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மக்களை நிலத்தை விட்டு விரட்டி அடித்தார்கள். இந்த நடவடிக்கைக்கு அன்று இருந்த புனித பீடம் உறுதுணையாக இருந்ததுமட்டுமல்லஅதிகாரபூர்மானஉத்திரவையும்வழங்கினார்கள்.

1452 ஆம் ஆண்டு போப் ஐந்தாம் நிக்கோலஸ் என்பவர் போர்ச்சுகல் மன்னன் ஐந்தாம் அல்போன்சோவிற்கு இஸ்லாமியர்களையும், கருப்பர்களையும் பல்வேறு கடவுள்களை வழிபடுபவர்களையும், கடவுள் நம்பிக்கையற்றவர்களையும் அடிமையாக்கி கொள்ளலாம் என்ற உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவு சம்பந்தப்பட்டவர்களின் நிலங்களை சட்டபூர்வமாக அபகரிக்க வழிவகை செய்தது.50 ஆண்டுகள் கடந்த பிறகு இவை செல்லுபடி ஆகாது என்று அறிவித்தாலும், அதற்குள் பூர்வ குடி மக்களின் நிலங்கள் அனைத்தும் அபகரிக்கப்பட்டுவிட்டது. அடிமை வியாபாரம், கடவுளின் பெயரால் கடல் கடந்து பரவியது.

19ஆவது நூற்றாண்டில் இந்த கோட்பாட்டை அமெரிக்கா தனது செவ்விந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்திக் கொண்டது. பூர்வகுடி மக்களாக இருந்தாலும் சரி அவர்களிடம் உரிமை பத்திரம் இல்லை என்றால் அந்த நிலங்கள் கைப்பற்றியவர்களுக்கு சொந்தம் என்று அறிவித்தது. அதற்கு மேலாக 1823 ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் பூர்வகுடி மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்த நிலமாக இருந்தாலும் அதன் மீது அவர்களுக்கு உரிமை இல்லை என்றும் அவை வெறுமனே குடியிருப்பு உரிமை மட்டுமே என்று கூறியது. இதன் மூலம் சட்டபூர்வமாக நிலத்தை கைப்பற்றுவது துரிதமாக நடைபெற்றது.

திருச்சபையினால் 1452 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட இந்த உத்தரவை திருச்சபையின் மூலமாகவே திரும்ப பெற வேண்டும் என்று காலனிநாடுகளில்வசித்தபூர்வகுடி மக்கள் போராடினார்கள். தனிப்பட்ட முறையில் சில போப்பாண்டவர்கள் மன்னிப்பு கேட்பது பிரச்சனைக்கு தீர்வாகாது என்று தெரிவித்தார்கள். இத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் இதற்கு முந்தைய போப்பாண்டவர்கள் சில முற்போக்கான கருத்துக்களை தெரிவித்து இருந்தாலும் போப் பிரான்சிஸ் அவர்கள்அதிகாரப்பூர்வமாக கத்தோலிக்க திருச்சபை பூர்வகுடி மக்களின் உள்ளார்ந்த மனித உரிமைகளை அங்கீகரிக்காத எந்த கருத்தையும் நிராகரிக்கிறது என்றும், காலனித்துவ கண்டுபிடிப்பு கோட்பாடுகளை புனித பீடம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் உறுதிப்பட தெரிவித்தார். இதே காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை பூர்வகுடி மக்களின் உரிமைகளைப் பற்றிய விரிவான அறிக்கை தயார் செய்து அளித்ததை புனித பீடம் வரவேற்றது.

2023 ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ் கனடாவிற்கு சென்ற பொழுது பூர்வகுடி மக்களின் கலாச்சாரத்தையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்ட காலனித்துவ கண்டுபிடிப்பு கோட்பாடுகள் கத்தோலிக்க நம்பிக்கையின் ஒரு பகுதி அல்ல என்று திட்டவட்டமாக அறிவித்தது மட்டுமல்ல பூர்வகுடி மக்களிடம் மன்னிப்பையும் கேட்டார். இதையும் கடந்து நவ காலனித்துவத்தை  ஒரு குற்ற செயல் என்றும் சமாதானத்துக்கு எதிரானது என்றும்போப்பிரான்சிஸ் அறிவித்தார்.

இதன் விளைவாக போப் பிரான்சிஸ் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்; எதிர்ப்புகளை சந்தித்தார். இவர் லத்தீன் அமெரிக்காவின் அர்ஜென்டைனா நாட்டைச் சேர்ந்தவர். பெரோனிச கலாச்சாரத்தை சார்ந்தவர் (அர்ஜென்டைனாவில்இருக்கும்அரசியல்சிந்தாந்தம்இயக்கம்) இயற்கையாகவே அமெரிக்க எதிர்ப்பாளர் என்று அமெரிக்க ஆதரவு சக்திகள் குற்றம் சாட்டினார்கள். அத்துடன் நிற்கவில்லை. சீனாவின் எதிர்மறை கூறுகளை இவர் கவனிக்க தவறுகிறார்  அல்லது கண்டிக்க தவறுகிறார் என்று குற்றம் சாட்டினார்கள்.திபெத் பிரச்சனை, தலாய்லாமா பிரச்சனை, உய்கூர்,ஜின்ஜியாங், ஹாங்காங் போன்றவற்றில் கருத்து சொல்ல மறுக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்கள். இவற்றையெல்லாம் எதிர்கொண்டு தான் அவர் சீர்திருத்தங்களை முன் வைத்தார்.

போப் 14-ம் லியோ, சீனாவுடனான உறவை தொடர்வார் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையில் ஐரோப்பிய ஒன்றியம் சிக்கிக் கொண்டது போல் புனிதபீடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று நினைக்கிறார் என பத்திரிக்கையாளர்கள் எழுதுகிறார்கள். மற்றொரு செய்தியும் பரவலாக பேசப்படுகிறது. இவர் போப் 13ம் லியோவின் பெயரை தேர்ந்தெடுத்து இருப்பதே ஒரு செய்தியை வெளிப்படுத்துகிறது என்று எழுதுகிறார்கள். இந்தப் பெயர் பழமைவாதிகளுக்கு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

13ம் லியோ சீர்திருத்தவாத முன்னோடியாக இருந்தார். அவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். 1878 முதல் 1903 வரை பொறுப்பில் இருந்தார். நீண்ட வருடங்கள் பொறுப்பில் இருந்தவர்களில் இவரும் ஒருவர். பதிமூன்றாம் லியோ 1891 ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் தொழிலாளர்களுக்கான நியாயமான ஊதியம், அவர்களுக்கு பாதுகாப்பான வேலை, தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமை ஆகியவற்றிற்காக தேவாலயங்கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். தாராளவாத முதலாளித்துவத்திற்கும் மார்க்சியத்திற்கும் இடையே நடந்தார் என்று கூட பதியப்பட்டுள்ளது.

நான் சோசலிசத்தை எதிர்க்கவில்லை நாத்திக சோசலிசத்தை எதிர்க்கிறேன் என்ற முறையில் பேசினார். இந்த நடவடிக்கை காரணமாக அவரை தொழிலாளர்களின் போப்பாண்டவர் அல்லது சமூகபோப்பாண்டவர் என்று அழைத்தார்கள். கத்தோலிக்க திருச்சபையின் சமூக கோட்பாடுகளில் சில நவீன சிந்தனைக்கான அடித்தளங்களை உருவாக்கினார். இந்த உருவாக்கம் அடுத்தடுத்து வந்தவர்களின் மீது செல்வாக்கு செலுத்தியது. இவரின் பெயரை தான் 14-ம் லியோ என்று தற்போதைய போப் சூட்டிக்கொண்டார்.

புதிய போப்பின் சீனக் கொள்கையும் அமெரிக்க தலையிடும் 

1951 ஆம் ஆண்டு சீனா வாடிகன்அரசுடனான  ராஜதந்திர உறவை துண்டித்துக் கொண்டது. தைவானுடன் வாடிகன் அரசு உறவு கொண்டிருப்பதால் சீனாவில் இருந்த போப்பாண்டவரின் தூதுவரை வெளியேற்றினார்கள். சீனாவில் கத்தோலிக்க மத செயல்பாடுகள் தேசபக்தி மத செயல்பாடுகளில் ஒன்றாக இருந்தாலும், அமெரிக்க மற்றும் வாடிகன் தலையீடு மூலமாக தலைமறைவு செயல்பாடுகளையும், சீர்குலைவு வேலைகளையும்தொடர்ந்துசெய்துகொண்டிருந்தனர். சீனாவுடனான உறவை புதுப்பிப்பதற்கு போப் பிரான்சிஸ்க்கு முன்பு இருந்த போப் பெனெட்டிக்  சில கடிதங்களை எழுதியிருந்தார். 2012 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு  ஜி ஜின்பிங் பொறுப்பேற்றவுடன் சீன தன்மைக்கு ஏற்ற வகையில் மதங்களின் செயல்பாடுகளில் புதிய கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில்  2018 ஆம் ஆண்டு சீனாவிற்கும் போப்பிரான்சிஸ் தலைமையிலான புனித பீடத்திற்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் விதிகள் ரகசியமாக வைத்திருப்பது என்று இரு தரப்பின் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஒரு முக்கியமான அம்சம் சீனாவில் உள்ள கத்தோலிக்க மறை மாவட்டங்களுக்கு (90 மாவட்டங்கள்உள்ளன) பிஷப்புகளை இதுவரை சீனாவின் தேசபக்த கத்தோலிக்க மதசபை நியமித்து வந்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீன அரசு சார்பில் பிஷப்களின் பெயர்கள் முன்மொழியப்படும் அவற்றை போப் அங்கீகரிப்பார் என்ற முறையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்ட பிஷப்கள்நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். போப்பின் வீட்டோஅதிகாரத்தை அவர் இதுவரை பயன்படுத்தவில்லை.

முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு போடப்பட்ட ஒப்பந்தம் 2020 ஆம் ஆண்டு நான்காண்டுகள் என்று விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 2024 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக இந்த ஒப்பந்தம் போப் பிரான்சிஸ் தலைமையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கண்டு அச்சப்பட்டு சீனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. முதல் முறை டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் இருக்கிற பொழுது சீனாவில் கம்யூனிஸ்ட் அரசு சிறுபான்மையினரை துன்புறுத்துகிறது என்று காரணத்தைச் சொல்லி கத்தோலிக்க திருச்சபை  இருதரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். மீண்டும் 2020 ஆம் ஆண்டு நான்காண்டுகள் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான பொழுது புதுப்பிக்க கூடாது என்று புனிதபீடத்தை வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமலும் ரோம் அரசின் வேண்டுகோளை ஏற்காமலும் வாடிகன்அரசு ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பித்தது. புனித பீடத்தின் செய்தி குறிப்பு கத்தோலிக்க திருச்சபையின் வாழ்க்கையையும், சீன மக்களின் நன்மையும் மேம்படுத்த திறந்த மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலை தொடர வாடிகன் விரும்புகிறது என்று தெரிவித்தது.

தற்பொழுது இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் சீனாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற வேலையை ஆரம்பித்து உள்ளது. வாடிகனுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க தூதர் பிரைன் பர்க் ஒரு தனியார் மத நிறுவனத்தின் தலைமையை தேர்ந்தெடுப்பதில் வெளிநாட்டு அரசாங்கத்திற்கு எந்த பங்கும் இல்லை என்பதை வாடிகன் உறுதிபட தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான வாடிகன் ராஜதந்திர உறவை புதுப்பிக்கவில்லை. ஆனால், கத்தோலிக்க மதம் தொடர்பான சில விஷயங்களில் போடப்பட்ட ஒப்பந்தத்தை கூட அமெரிக்காவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சீனாவை சீர்குலைக்க கத்தோலிக்க மதத்தை பயன்படுத்த துடிக்கிறது. அதற்கு புனித பீடத்தை தன் வலைக்குள் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிடுகிறது.ஆனால்,சீனமக்கள்குடியரசு,மதம்அரசியலுக்குபயன்படுத்தக்கூடாது, ஏகாதிபத்தியசக்திகள்எந்தமதத்தையும்பயன்படுத்திசீனாவில்சீர்குலைவுசெய்யமுடியாதுஎன்பதில்உறுதியாகஉள்ளது.

அமெரிக்கா மற்றும் சீன எதிர்ப்பு சக்திகள் சீனாவில் செயல்படக்கூடிய சில கத்தோலிக்க அமைப்புகளை தூண்டிவிட்டு கலவரத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சிக்கிறது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் சாங்காய் மறை மாவட்டத்தின் பிஷப் நியமிக்கப்பட்டதை ஒரு பிரச்சினையாக மாற்றினார்கள். சீனா போப் பிரான்சிஸிடம் கலந்தால் ருசிக்காமலேயே சாங்காய் மாவட்டத்தின் பிஷப்பை நியமித்து விட்டது என்று பிரச்சாரம் செய்தார்கள் சீன அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்கள்.

போப் பிரான்சிஸ் இந்த நியமனத்தை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல ஒப்பந்தத்தில் தனக்கு இருக்கக்கூடிய வீட்டோ அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை. இதிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் தான் இந்த நியமனம் நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பொய் செய்திகளை பரப்பி ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான

ஹாங்காங் பிரதேசத்தில் பல சீன எதிர்ப்பு சக்திகள் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கு இடையில் பல போராட்டங்களை தூண்டி விட்டார்கள்.கத்தோலிக்கபடிப்பு மிஷின் என்ற பெயரால் பல கத்தோலிக்க பாதிரியார்களை போராட்டங்களில் இறக்கி விட்டனர்.

தைவானும் புனித பீட ஒப்பந்தமும் 

தைவானை சீனாவின் ஒரு பகுதியாக அறிவித்ததை அமெரிக்காஉட்படஉலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. இன்று வரை 12 நாடுகள்தான் தைவானை அங்கீகரித்து உள்ளன. அவற்றில் ஒன்று வாடிகன்அரசு.

வாடிகனுக்கும்சீனாவிற்கும் உறவு பலமானால் அது தைவானின் நிலைமையை பலவீனமாக்கும் என்று அமெரிக்கா அச்சப்படுகிறது. டொனால்ட்டிரம்ப் போன்றவர்கள் ஜப்பான் மற்றும் சில நாடுகள் உதவியுடன் தைவானைசீனாவுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு முயற்சிக்கிறது.தைவான் நாடும் வாடிகனின்சீனாவுடனான உறவுகளையும், ஒப்பந்தங்களையும் கடுமையாக எதிர்க்கிறது.

ஆனால் ஆசியாவின் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், ஒப்பந்தம் ஏற்படுத்துவதிலும் இரண்டாவது சிந்தனை இல்லை என்பதை வாடிகன் தெரிவித்துவிட்டது. 

இருந்தாலும் புதிய போப் ஆண்டவர் அமெரிக்க கண்டத்தை சேர்ந்தவர் என்பதால் அமெரிக்க அதிபரின் அழுத்தம் அதிகமாகவே இருக்கும். இவர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர் என்று கூற முடியாது. ட்ரம்ப் முன்வைத்த மகா கொள்கையை இவர் ஆதரிக்கவில்லை. ஆனாலும் அமெரிக்காவின் புவிசார் அரசியல் என்பதை நிலை நிறுத்துவதற்கு டொனால்ட் ட்ரம்பும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

ஆனால் சீனாவில் கத்தோலிக்க மதத்தை காலம் காலமாக அந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அன்னிய சக்திகள் ஆட்சியைப்பிடித்த பொழுதிலிருந்து பயன்படுத்தி வருகிறார்கள். நான்கிங் ஒப்பந்தத்தில் இருந்து ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் கத்தோலிக்க மத செயல்பாடுகளுக்கு தடை இருக்கக் கூடாது என்று ஷரத்துக்களை சேர்த்துக் கொண்டே வந்தார்கள்.

இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்துள்ள ட்ரம்ப் சீனாவில் ஜனநாயகம் இல்லை என்றோ, மக்கள் பட்டினியில் வாடுகிறார்கள் என்றோ, சுதந்திரம் இல்லை என்றோ இப்பொழுது பேச முடியாது. எனவே சீனாவின் சீர்குலைவு சக்திக்கு ட்ரம்பின் குழு திட்டமிட்டு இருப்பது மத சுதந்திரம் என்ற பெயரில் உள்நாட்டில் தலையிடுவது மட்டும் தான். இதைத்தான் இன்று சீன அரசாங்கம் சாதுரியமான முறையில் எதிர்கொண்டு வருகிறது.சீனா கடந்த கால அனுபவத்திலிருந்து குறிப்பாக அவமானங்களின் நூற்றாண்டின் அனுபவத்திலிருந்து மதம் தொடர்பான விஷயங்களில் விஞ்ஞான பூர்வமான மார்க்சிய அணுகுமுறைகளை கடைபிடித்து வருகிறது.

அ.பாக்கியம்

தொடர் 24 ஜூன் 11 புதனன்று வெளியாகும்

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம்-1

  1948 மே 14 சியோனிச இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் பெ ன் குரியன் இன்று முதல் இஸ்ரேல் என்ற நாடு உதய மா கிறது என ஆரவாரத்துடன் அறிவித்தார் ....