Pages

புதன், டிசம்பர் 27, 2023

இஸ்ரேல்-காசா யுத்தம் இந்தியா யார் பக்கம்?

 

அ.பாக்கியம்.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல்-காசா எல்லைப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் உலகின் சக்திவாய்ந்த இஸ்ரேல் ராணுவம் நிலைகுலைந்து போனது. உலகின் தலைசிறந்த உளவுத்துறை மொசாட் இதற்கான அறிகுறிகளைகூட அறியாமல் இருந்தது பெரும்அதிர்ச்சியாகும். இந்த தாக்குதலில் சுமார் 1200 பேர் இறந்ததாக தகவல் உள்ளது. இந்த தாக்குதலை ஒரு பயங்கரவாத தாக்குதலாக கட்டமைக்கும் முயற்சிகளை இஸ்ரேல் ஆதரவு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா தலைமையில் உள்ள நாடுகள் மேற்கொண்டுள்ளன.

இஸ்ரேலின் 75 ஆண்டுகால தாக்குதல்கள், சட்டவிரோத குடியேற்றங்கள், ஆக்கிரமிப்புகளை எதிர்த்து நடைபெற்ற தாக்குதல் தான் ஹமாசின் தாக்குதல். இதற்கு எதிர்வினையாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் மிக பயங்கரமான தாக்குதலை நடத்தி வருகிறது. யுத்த விதிமுறைகளை எல்லாம் மீறி பொதுமக்களையும், குழந்தைகளையும், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என அனைத்தையும் தரைமட்டம் ஆக்கிவிட்டன. காசா பகுதியில் ஒவ்வொரு நகரும் அகதிகள் முகாமாக மாறிவிட்டது. இதுவரை 18,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த யுத்தத்தில் இந்தியாவின் நிலைபாடு பாரம்பரியமான கொள்கைகளுக்கு எதிரான முறையில் இருக்கிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு நிலையை அப்பட்டமாக மேற்கொண்டு வருகிறது நரேந்திரமோடியின் தலைமையிலான பாஜக அரசு. இதுவரை அணிசேரா இயக்கத்தின் தலைமையில் இருந்த இந்தியா, எப்பொழுதுமே தெற்கு உலகத்துடன் இணைந்துதான் பாலஸ்தீனத் திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்துள்ளது.

அக்டோபர் 7 தாக்குதல் நடந்து சில மணி நேரத்தில் இந்தியாவின் பிரதமர் பயங்கரவாதத்தை வலுவான மொழியில் கண்டித்ததுடன் இஸ்ரேலுடன் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். தொடர்ச்சியாக "இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இஸ்ரேலுடன் ஒற்றுமையாக நிற்கிறோம் என்று பிரதமர் பேசினார். திரு நரேந்திர மோடியின் இந்த அனுதாப ஆதரவு திடீரென்று வந்தது அல்ல. இந்தியாவில் கடைபிடிக்கக் கூடிய வெறுப்பு அரசியலின் அடித்தளத்தில் இருந்தும், அமெரிக்க சார்பு கொள்கையில் இருந்தும் வெளிவந்தது.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் 26 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் காசா பகுதியின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்த வேண்டும் என்ற முறையில் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது. இதுவரை கடைபிடித்து கொள்கைக்கு எதிராக இந்தியா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் வெளியேறியது. 120 நாடுகள், குறிப்பாக தெற்குலகநாடுகள், மேற்குஆசியா, தெற்கு ஆசியாவின் அனைத்து நாடுகளும், தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகள் அனைத்தும் போர் நிறுத்தம் வேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

இந்தியா போர்நிறுத்தத்திற்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக நிலை எடுத்தது மிகப்பெரிய அவமானம் ஆகும். இந்தியா சில நாட்கள் கழித்து இதற்கு கொடுத்த விளக்கம் வினோதமாக இருந்தது. அடுத்த டுத்த தீர்மானத்தை இந்தியாவால் எதிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே முதல் தீர்மானத்திற்கு விளக்கத்தை தானாக முன்வந்து அளித்தனர்.

ஏழாம் தேதி நடைபெற்ற ஹமாஸ் அமைப்பின் தாக்குதல் பற்றி வெளிப்படையான குறிப்பு எதுவும் இல்லாததால் அந்த தீர்மானத்திற்கு வாக்களிக்கவில்லை என்று ஒரு சொத்தை காரணத்தை கூறினார்கள். பாலஸ்தீனர்களுக்கான ஐநாவின் நிவாரண மற்றும் பணிகள் தொடர்பான அமைப்பு, பாலஸ்தீன அகதிகளுக்கு உதவி செய்வது, பாலஸ்தீன அகதிகளின் சொத்துப் பிரச்சனை, இஸ்ரேல் ஆக்கரமித்த கோலோன் குன்று பகுதி, பாலஸ்தீன்களுக்கு சொந்தமான கிழக்கு ஜெருசலேமில் யூதர்களை குடியேற்றுவது போன்ற தீர்மானங்கள் ஐநா சபையில் கொண்டு வந்த பொழுது இந்தியா அவற்றை ஆதரித்தது.

 அக்டோபர் 26 ஆம் தேதி கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்தில் இந்தியா எந்தவித திருத்தமும் கொடுக்கவில்லை. தீவிரவாத தாக்குதல் பற்றி இந்த தீர்மானத்தில் வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்பதற்காக வாக்களிக்காத இந்தியா, அடுத்து வாக்களித்த ஐந்து தீர்மானங்களிலும் மேற்கண்ட தீவிரவாத தாக்குதல் பற்றி எந்த குறிப்பு இல்லை. பிறகு இதற்கு மட்டும் ஏன் வாக்களிக்க வேண்டும். இந்தியா கொடுத்தது பொருத்தப்பாடற்ற விளக்கமாக இருந்தது.

மேற்கண்ட 5 தீர்மானங்களையும் நிராகரிக்க வேண்டும் என்று இஸ்ரேல் நாட்டின் தூதுவர் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் இதர நாட்டு தூதுவர்களை பகிரங்கமாக கேட்டுக் கொண்டார். காரணம் இஸ்ரேலின் இன்றைய நிலைமை பற்றி அதில் எந்த குறிப்பும் இல்லை என்று தெரிவித்தார். உடனடியாக கியூபா நாட்டின் தூதுவர் தலையிட்டு பாலஸ்தீனத்திலும் 4000 குழந்தைகள் உட்பட 11 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு 10 லட்சம் பேர் வரை இடம்பெயர்வு செய்துள்ளனர். இது பற்றியும் எந்த குறிப்பு இல்லை.இதை காரணமாக கூறி தீர்மானத்தை தடுக்க கூடாது. ஆகவே தீர்மானத்தை அனைவரும் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். இந்த தீர்மானத்திலும் இந்தியா எந்தவித திருத்தங்களையும் கொடுக்க வில்லை.

ஐக்கிய நாடுகள் சபையில் 15 நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு கவுன்சில் உள்ளது. இவற்றில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் சிறப்பு ரத்து அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்கள். மற்ற பத்து நாடுகள், அல்பேனியா, பிரேசில், ஈக்குவடார், கோபன், கானா, ஜப்பான், மால்டா, மொசாம்பிக்,, சுவிட்சர்லாந்து ஐக்கியஅரபுஎமிரேட்ஸ் ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த பத்து நாடுகளும் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படும். இந்தப் பாதுகாப்பு குழு கூட்டத்தில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை முன்மொழிகிறது. அதில் ஹமாஸ் தாக்குதலை கண்டித்தும், தற்காலிக தாக்குதல் நிறுத்தம் (pause) மனிதாபிமான உதவி என்று குறிப்பிட்டு முன்மொழிகிறது. இந்த தீர்மானம் ஹமாஸ் விடுதலைக்கான போராடக்கூடிய அமைப்பு அல்ல என்பதையும், இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதற்கான முறையில் சட்டபூர்வமான ஒப்புதலை பெறக்கூடிய முறையில் உள்ளார்ந்த விஷயங்கள் இருந்தது எனவே சீனா, ரஷ்யா தனது ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோற்கடித்தனர்.

ரஷ்யா மனிதாபிமான உதவி, நிரந்தர போர் நிறுத்தம் என்ற வரிகளுடன் தீர்மானத்தை முன்மொழிந்தது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர நாடுகளை இணைத்த  தீர்மானத்தை ஏற்க விடாமல் தடுத்தது. பிரேசில் நிரந்தர போர் நிறுத்தம் அல்லது தற்காலிக நிறுத்தம் என்ற விஷயங்களை தவிர்த்து, மனிதாபிமான உதவி உடனடியாக வழங்க வேண்டும் என்று தீர்மானத்தை முன்மொழிந்ததை ரஷ்யா, சீனா உட்பட பெரும்பாலான நாடுகள் ஆதரித்தது. எங்கே தீர்மானம் நிறைவேறி விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோற்கடித்தது. 1948 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் பாலஸ்தீனம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் 36 தீர்மானங்கள் முன்மொழிபட்டுள்ளது. இவற்றில் இரண்டே இரண்டு தீர்மானங்கள் மட்டும்தான் ரஷ்யாவும், சீனாவும் ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளன. மீதமுள்ள 34 தீர்மானங்களும் அமெரிக்காவின் ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்கப்பட்டதாகும். அமெரிக்காவின் இந்த செயல்கள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவான செயல்களாகும்

நிரந்தர போர் நிறுத்தத்திற்காக உலகமே ஒன்று திரண்டு நிற்கிற பொழுது இந்தியா மேற்கண்ட தீர்மானம் குறித்து கூட எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை நிரந்தரமான போர் நிறுத்தம் தேவை என்று இதுவரை அறிவிக்கவில்லை.



பல்வேறு நாடுகள் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு எதிராக கண்டனத்தை தெரிவிப்பதுடன் பல அமைப்புகள் போர் நிறுத்தத்திற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். குறிப்பாக இந்தியா முக்கிய பங்குசெலுத்தக்கூடிய பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு போர் நிறுத்தத்திற்காக மெய்நிகர் கூட்டத்தை நடத்தியது. சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உட்பட 11 நாடுகளுக்கு மேற்பட்ட ஜனாதிபதிகள் கலந்து கொண்டார்கள். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கூட்டத்தை தவிர்த்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை கலந்து கொள்ள வைத்தார். அவரும் போர் நிறுத்தம் பற்றி பேசவில்லை நிவாரண உதவிகளைப் பற்றி பேசி முடித்தார். பிரிக்ஸ் நாடுகள் போர் நிறுத்தத்திற்கான உடனடி தீர்மானத்தை நிறைவேற்றியது. தென்னாப்பிரிக்கா நாடு இஸ்ரேலின் போர் குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கடுமையான நிலை எடுத்தது.

பயங்கரவாதம் தொடர்பான விஷயத்தில் பூஜ்ஜியம் சகிப்புத்தன்மையுடன் தான் இருப்பதாக இந்திய பிரதமர் அடிக்கடி பேசினாலும், ஹமாஸ் அமைப்பின் தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக அறிவித்த இந்தியா, இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன குழந்தகள் உட்பட பொதுமக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவிப்பதை பயங்கரவாதம் என்று கண்டிக்க தயாராக இல்லை. இந்தியாவில் இருந்து 18,000 தொழிலாளர்கள் இஸ்ரேலின் பணி புரிவதும், இந்திய வம்சாவளியினர் 85 ஆயிரம் பேர்கள் (குறிப்பாக மணிப்பூர் பஞ்சாப் மகாராஷ்டிரா) அங்கு இருப்பதும் இதற்கு காரணமாக கூறமுடியாது. அங்கு பணிக்கு சென்றுள்ள தொழிலாளர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் ஏற்பாடுகள் நடந்து விட்டது.

ஹமாஸ் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்று இந்தியா இதுவரை சட்டரீதியாக எந்த முடிவும் செய்யவில்லை. அந்த அமைப்பை இந்தியா தடை செய்யவும் இல்லை. அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உட்பட பல நாடுகள் அந்த அமைப்பை தடை செய்யவில்லை. அவ்வாறு இருக்கிற பொழுது ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற முத்திரை குத்துவது ஏன்? இந்தியா அதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இஸ்ரேல் முயற்சி செய்கிறது. அதன் ஒரு காரணியாக மும்பையில் 26/11 நடைபெற்ற தாக்குதலில் தொடர்புடைய லஸ்கர்--தொய்பா அமைப்பை பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தமாதம் இஸ்ரேல் தடை செய்துள்ளது. இந்தியாவின் நரேந்திர மோடி அவர்களும் ஜி-20 நாடுகளின் நிறைவு அமர்வு, உலகளாவிய தெற்கு நாடுகளின் உச்சி மாநாடு என்ற இரண்டு மெய்நிகர் நிகழ்ச்சியில் இஸ்ரேல் ஹமாஸ் மோதல் பற்றி பேசினார்.  இந்த உரையும், அதன் பிறகு வெளியுறவுதுறை அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரும் கொடுத்த கூட்டு அறிக்கையின் சாராம்சங்கள் மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பாக இருந்தது.

இந்தியா தெற்கு உலகில் உள்ள முக்கியமான நாடுகள் என்ற முறையில் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றி இருக்க முடியும். காரணம் ஏற்கனவே அணிசேரா நாடு என்ற முறையில் பல முயற்சிகளை எடுத்த ஒரு நாடு இந்தியா. ஆனால் இஸ்ரேலில் கொடூர தாக்குதலை தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் அதற்கான வாய்ப்பை இழந்தது. அது மட்டும் அல்ல ரஷ்ய உக்ரைன் போரில் யுத்தத்திற்கு எதிராக இருக்கிறோம் என்ற முறையில் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் இஸ்ரேலின் யுத்த்தை ஆதரிப்பதன் மூலம் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு தெற்கு உலகத்திலிருந்து இந்தியாவை தனிமைப்படுத்தி உள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் உருவாக்கி இருந்த சிறப்பு உறவுகள் சீர்குலைந்துள்ளது. இந்தியா மத்திய கிழக்கு ஐரோப்பா ஆகியவற்றை இணைக்க கூடிய முறையில் உருவாக்கப்பட்ட பொருளாதார தாழ்வாரம் கேள்விக்குறியாக மாறி உள்ளது.

மகாத்மா காந்தியின் காலத்தில் இருந்து அடுத்தடுத்து வந்த இந்திய நாட்டின் தலைவர்கள், அரசு தலைவர்கள் பாலஸ்தீன மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தனர். 1974 ஆம் ஆண்டு பி எல் ஓ அமைப்பை ஐநா சபையின் பார்வையாளராக அங்கீகரித்ததில் இந்தியா முக்கிய பங்காற்றியது.1988 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் தூதரகத்தைத் திறந்த முதல் நாடு இந்தியா.

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இஸ்லாமியர் மீதான வெறுப்பு அரசியலின் தொடர்ச்சியாக இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்தது. எனவேதான் ஆயுதம் வாங்குவதிலிருந்து அனைத்து விதமான ஒப்பந்தத்திலும் இஸ்ரேலுடன் உறவுகளை உருவாக்கியது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலின் யுத்தத்திற்கு ஆதரவாக சங்கிகள் இந்தியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க விசுவாசத்தை நிரூபிப்பதற்காக சீன எதிர்ப்பு நிலை எடுக்கிறார். அதன் தொடர்ச்சியாக தெற்கு உலகின் தலைவன் தான்தான் என்று ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயற்சி செய்வதன் மூலமாக பாலஸ்தீன மக்களுக்கு மட்டும் அல்ல இந்திய மக்களுக்கும் துன்பத்தை வரவழைத்துக் கொண்டிருக்கிறார். உலக மக்கள் பாலஸ்தீனம் பக்கம் இருக்கிறார்கள். அமெரிக்காவும் இஸ்ரேலும் இது வரை இல்லாத வகையில் தனிமை பற்றிருக்கிறார்கள் இந்தியா தனிமைப்படாமல் இந்திய மக்களை பாதுகாப்பதற்காக உலக மக்களோடு இணைந்து இருக்க வேண்டும் வெறுப்பு அரசியலுக்கு இறுதி முடிவு கட்டுவதன் மூலமாகத்தான் இது சாத்தியமாகும்.

அ.பாக்கியம்.

எதிரொலி டிசம்பர் 23

சென்னை மூழ்கிட "காலநிலை" மாற்றம் மட்டும்தான் காரணமா?

 



அ. பாக்கியம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் பெருமழையால் வெள்ளக்காடானதற்கு காலநிலை மாற்றத்தை காரணமாக கூறுகின்றனர். அதிக மழை பெய்து விட்டது; ஆகவே வெள்ளம் வந்தது. கடந்த காலத்தை விட ஒரே நாளில் மழைக்கொட்டி தீர்த்ததால் வெள்ளம் ஏற்பட்டது. இவை தவிர கடந்த ஆட்சி (அதிமுக) திறமையாக செயல்பட்டது இந்த ஆட்சி (திமுக) திறமையாக செயல்படவில்லை அல்லது இந்த ஆட்சி திறமையாகவும் கடந்த ஆட்சி திறமையற்றதாக செயல்பட்டதாகவும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

நகர்ப்புற வளர்ச்சிக்கான திட்டமிடலில் இருக்கக்கூடிய குறைபாடுகளும் அதை அமலாக்கக்கூடிய நடைமுறைகளும் ஊழல் நிறைந்த செயல்பாடுகளும் மிகப்பெரிய காரணம் என்ற அம்சம் சாவகாசமாக பின்னுக்கு தள்ளப்படுகிறது. உலகம் வெப்பமயமாவதும் காலநிலை மாற்றமும் இயற்கை சீற்றங்களையும் வறட்சிகளையும் ஏற்படுத்துவது உண்மைதான். பல்வேறு விதமான பாதிப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் சென்னையை சுற்றி நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும், மழைநீர் வடிகால்வாய் போதுமான அளவிற்கு அமைப்பதற்கும், தூர்வாருவதற்கும், அடைப்புகளை அகற்றுவதற்கும், காலநிலை மாற்றத்திற்கும் தொடர்பு படுத்த முடியாது.


நீரில் மூழ்கிட அடிப்படை காரணம்.

சென்னையில் உள்ள வடிகால் அமைப்புகள் மிக குறைந்தபட்ச மழை அளவை எதிர்கொள்ளும் வகையில் தான் உள்ளது. சுமார் 5 சென்டிமீட்டர் மழை அளவை தாங்க கூடியது தான் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. இவற்றை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் துரிதமாகவும் தேவைப்படக் கூடிய அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை. வளர்ச்சி திட்டங்கள் அவசியமானவை. அவற்றை யாரும் புறக்கணிக்க முடியாது. ஆனால் அவை அனைத்தும் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் திட்டங்களை நிறைவேற்றுவது இந்த நெருக்கடிக்கு காரணமாகிறது. இருக்கிற நீர் நிலைகளை எல்லாம் வளர்ச்சி திட்டங்கள் அழித்து விடுகிறது. சில திட்டங்களை ஆட்சியாளர்கள் வாக்கு சேகரிப்பதற்கான நோக்கத்தோடு அவசரகதியில் முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கிற பொழுது மாற்று ஏற்பாடுகள் தோல்வி யடைகிறது.

சென்னையில் உள்ள மூன்று ஆறுகளில் கொசஸ்தலை, அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாயில் நீர் வந்து சேர்வதற்கான 52க்கும் மேற்பட்ட நீர் வழி தடங்களும் 512 இடங்களில் துளைகளும் கழிவு நீர் வந்து விழுகின்ற இடங்களாகவும் இருந்தன. கூவம் ஆற்றின் மூலம் 27 சதவிகிதமும், பக்கிங்காம் கால்வாய் மூலம் 29 சதவிகிதமும் அடையாறு கால்வாய் மூலமாக 19 சதவிகிதமும் மழை நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது இந்த மூன்று ஆறுகளும் வளர்ச்சி திட்டங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சென்னையில் அமைக்கப்பட்ட பறக்கும் ரயில் திட்டம் பக்கிங்காம் கால்வாய் மீது கட்டப்பட்டது. 5600 கனஅடி தண்ணீர் செல்லக்கூடிய பக்கிங்காம் கால்வாயில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டதால் 600 கன அடி மட்டுமே செல்லக்கூடியதாக மாறியது 25 மீட்டர் அகலம் உள்ள கால்வாய் ரயில் நிலையங்கள் தூண்களின் ஆக்கிரமிப்பால் 10 மீட்டராக குறுக்கப்பட்டது. இதன் மூலமாக செல்லும் 5000 கனஅடிநீர் தற்போது குடியிருப்புகளுக்கு உள்ளே தானே வரும். இதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை.

இதேபோன்று சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை உயர் விரைவுச்சாலை அமைப்பதற்கான திட்டங்கள் வெள்ள நீர் செல்லக்கூடிய கால்வாய்கள் மீது கட்டப்பட்டு நீரின் இயல்பான போக்கை தடுத்து கால்வாயின் அகலத்தை சுருக்கி விட்டது. இந்த நீரும் வீடுகளுக்கு வராமல் வேறு எங்கு செல்லும்?

சென்னைக்கு சாலைகள் முக்கியமானது. அவற்றை அமைக்க வேண்டியது தான். ஆனால் சாலைகள் அமைக்கிற பொழுது நீரோட்டங்களுக்கு இயல்பான பாதைகளை ஏற்பாடு செய்யாமல், பெரும் சாலைகளை அமைத்து விடுவது வெள்ளப்பெருக்கு ஏற்பட முக்கிய காரணம். ஐடி காரிடார் அதாவது ராஜீவ் காந்தி சாலை - பழைய மாமல்லபுரம் சாலையில் அமைக்கப்பட்டது. சாலை அமைத்தது வளர்ச்சிக்கு உதவியது. ஆனால், நீர் செல்லக்கூடிய இடங்களில் மதகுகளை அமைக்காமல் நீர் தடுக்கப்பட்டதால் வேளச்சேரியில் ஆரம்பித்து மடிப்பாக்கம் வரை நீரில் மூழ்கும் நிலைதான் உள்ளது.

பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி அமைக்கப்பட்டுள்ள ரேடியல் சாலை வடிகால்களும், மதகுகளும் போதுமான அளவிற்கு அமைக்கப்படாமல் பல்லாவரம் குரோம்பேட்டை அஸ்தினாபுரம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குகிறது.

மதுரவாயல் பைபாஸ் சாலையிலும் இதே போன்ற பிரச்சனைதான். திருநீர்மலை, அனகாபுத்தூர், கோவூர், அம்பத்தூர் போன்ற இடங்களில் குறுக்கே செல்லும் சாலைகளில் தான் இந்த மழை நீர் அனைத்தும் செல்கிற நிலை உள்ளது. இடைப்பட்ட பகுதிகளில் மதகுகள் அமைக்கப்படவில்லை. இதனால் கிழக்கு நோக்கிய வடிகால்கள் பாதிக்கப்பட்டது. அண்ணா நகர், போரூர், மதுரவாயல், முகப்பேர், வானகரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்படுகிறது.

வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை அமைக்கப்பட்ட 400 அடி பைபாஸ் சாலைகளும் இதே நிலைமை உள்ளது. தாம்பரத்தில் வரதராஜபுரம் ராயப்பா நகர் அதை ஒட்டிய பகுதிகள் முழுவதும் மூழ்குவதற்கு இந்த பெரும் நெடுஞ்சாலையில் மதகுகள் அமைக்கப்படாது முக்கிய காரணம். தற்போது வரதராஜபுரத்தில் சாலைகளை வெட்டி மதகு அமைப்பதற்கான வேலைகள் துவங்கி மந்தகதியில் நடக்கிற பொழுது வெள்ளம் வந்து பெரும்பாலான வீடுகளை சேதப்படுத்தியது.

சென்னையின் மூன்று ஆறுகளைப் போலவே வெள்ள தடுப்பில் மிக முக்கிய பங்காற்றியது பள்ளிக்கரணை நன்னீர் சதுப்பு நிலமாகும். இந்த சதுப்பு நிலத்தின் உண்மையான பரப்பளவு 5500 ஹெக்டேர் ஆகும். தற்போது அரசிடம் இருப்பது 695 ஹெக்டேர் மட்டுமே. இந்த 695 ஹெக்டரில் 84. 57 சென்னை மாநகராட்சியின் குப்பை கொட்டுவதற்காக ஒதுக்கப்பட்டு குப்பை கொட்டப்படுகிறது. இப்போது அரசிடம் இருக்கிற 695 ஹெக்டேர் எவ்வளவு நாள் இருக்கும் என்று தெரியாது. நகரங்கள் வளர்கிற பொழுது கட்டிடங்களை மட்டும் அனுமதித்து விட்டு மற்ற அனைத்தையும் புறக்கணித்து செயல்படுத்தியதற்கு யார் காரணம்?

சென்னைக்குள் மட்டும் நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, வியாசர்பாடி, ஓட்டேரி, வேளச்சேரி, சேத்துப்பட்டு, மாம்பலம், கோடம்பாக்கம், அரசினர் தோட்டம், வேப்பேரி, விருகம்பாக்கம், கோயம்பேடு, அல்லிக்குளம் என்ற வகையில் நகரத்தின் மையப் பகுதிகளில் ஏரிகள் இருந்தன. இவையெல்லாம் நகரங்கள் விரிவடையும் பொழுது காணாமல் போய்விட்டது. இதற்காக நகரங்களை விரிவாக்காமல் இருக்க முடியாது. ஆனால் இந்த ஏரிகளை பாதுகாத்து நகரங்களை விரிவாக்கி இருக்க முடியும். அதற்கான செயல் திட்டம் அரசிடம் இல்லை. அரசே எதிர்கால பார்வையின்றி அருகில் இருப்பதை பிரதான விஷயமாக கருதி தான் தோன்றித்தனமான வளர்ச்சிக்கு வித்திட்டுவிட்டது. அனைத்து ஏரிகளையும் பாதுகாக்க முடியாவிட்டாலும் சென்னைக்கு தேவையான ஏரிகளையாவது பாதுகாத்து இருக்க முடியும். சென்னை குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கும் வெள்ளம் ஏற்படுவதற்கும் நிலத்தடி நீர் குறைவதற்கும் இது ஒரு காரணமாக இருக்கிறது. 

தற்பொழுது சேத்துப்பட்டு ஏரி ஒரு குளம் போல் காட்சியளிக்கிறது. போரூர் ஏரியும், கொளத்தூர் அட்டை ஏரியும் சுருங்கி போய்விட்டது. மிக முக்கியமாக வேளச்சேரி ஏரி இருந்தது. 107.48 இதன் பரப்பளவாகும். பல ஏரிகள் அழிந்த பிறகும் இந்த ஏரி நீராதாரமாக இருந்தது. அரசு திட்டங்களுக்காக இந்த ஏரி பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு 21.44ஹெக்டரும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு 56.39 ஹெக்டரும், நெடுஞ்சாலை துறைக்கு 3.17 ஹெக்டரும் ஒதுக்கப்பட்டு ஏரி ஏரியாவாகிவிட்டது. தற்பொழுது ஏரியாக இருப்பது 22.4 ஹெக்டர் மட்டுமே.

சென்னையும் அதன் புறநகர் பகுதியும் வெள்ள பாதிப்பிற்கு உள்ளாவதற்கு ஒரு காரணம் அருகில் உள்ள மாவட்டங்களில் பெய்கின்ற மழையும் சென்னையை நோக்கி பாய்கிறது. சென்னையின் சுற்றுப்புறங்களில் உள்ள தற்போது செயல்பாட்டில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தாமல் இருப்பதும், வாய்ப்புள்ள இடங்களில் புதிய நீர் நிலைகளை போர்க்கால அடிப்படையில் உருவாக்காமல் இருப்பதும் வெள்ளம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. இவற்றுடன் கூடவே மழை வெள்ளம் அதிகமாக வருகிறபோது ஆதனூர், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் இருந்து பல ஏரிகள் உடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இந்த ஏரிகளை பாதுகாப்பது, கரைகளை பலப்படுத்துவது என்று நடவடிக்கை எடுத்தால் வெள்ளப்பெருக்கை தடுக்கலாம்.

இதற்கெல்லாம் மேலாக மழை நீர் வடிகால்வாய், கழிவுநீர் அகற்றும் கால்வாய் போதுமான அளவுக்கு இல்லை. சராசரி மழை பொழிவை வெளியேற்றுவதற்கு கூட சக்தி வாய்ந்ததாக இல்லை. சென்னையில் மழை நீரை வெளியேற்றுவதற்கு கடந்த காலங்களில் 84 சதவிகிதம் கழிவு நீர் குழாய்களும் 11 சதவிகிதம் மழை நீர் வடிகால்வாய்களும் பயன்பட்டன. சென்னையில் உள்ள கழிவுநீர் குழாய்கள் கட்டமைப்பு 50 முதல் 100 ஆண்டுகள் பழமையானது. கழிவுநீர் நீரேற்று நிலையம் உருவாகிற கழிவு நீர்களை வெளியேற்றக் கூடிய அளவிற்கு திறன் கொண்டதாக இல்லை. மழைக்காலங்களில் வெள்ள நீரும் சேருகிற பொழுது நீரேற்று நிலையங்கள் செயல்பட முடியாத அளவிற்கு பாதிக்கப்படுகிறது. இதனால் சாக்கடையும் மழை நீரும் இரண்டற கலந்து சென்னை வீதிகளிலும், வீடுகளிலும் வாசம் செய்கிறது. இந்த மாதம்  (டிசம்பர்-23) ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னையின் பெரும்பாலான வீடுகளிலும், கிணறுகளிலும் சாக்கடைகள் குடியேறிவிட்டன. சென்னையில் உள்ள சாலைகளின் நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படவில்லை. மேலும் ஒரு மதிப்பீட்டின்படி, சரிபாதி வீடுகள் கழிவு நீர் குழாய்கள் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இவையெல்லாம் திறந்தவெளி ஆறுகளில் கலக்கிறது. மழை நீர் வெளியேற்றக் காலத்தில் கழிவு நீர் குழாய்கள் செயல்படாமல் போய்விடுவது முக்கிய காரணமாகும்.

தற்போது திமுக ஆட்சியில் சென்னையில் கூடுதலான அளவு மழை நீர் வடிகால் வாய் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும் அவை தேவைக்கு ஏற்ற அளவில் இல்லை. சென்னையில் 33,374 உட்புற சாலைகள் உள்ளன. இவற்றின் நீளம் சுமார் 5525 கிலோமீட்டர். இவற்றில் 2058 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டும்தான் மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு வரை 615 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும்தான் மழை நீர் வடிகால்வாய் இருந்தது என்றால் நிலைமையை புரிந்து கொள்ளலாம். அசுர வேகத்தில் நகரம் வளர்கிறது. ஆமை வேகத்தில் கட்டமைப்பு நடைபெறுகிறது.

மழை நீர் வடிகால்வாய் தரமான முறையில் அமைக்கப்படவில்லை. பெரும்பாலான சாலைகளில் செல்வாக்கு படைத்த நபர்களின் ஆக்கிரமிப்புகளை தவிர்த்து பல வளைவுகளை உருவாக்கி நீரோட்டத்தை குறைக்கும் வகையில் உள்ளது. பல மழை நீர் வடிகால் அமைப்புகள் முக்கிய இடங்களில் இணைப்புகள் இல்லாமல்( Missig Link) உள்ளது. 2021 ஆம் ஆண்டு இணைப்பு ஏற்படுத்துவதற்காக சுமார் ரூ.120 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு சில இடங்களில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. கால்வாய்களில் பெரும்பாலான இடங்களில் இணைப்புகள் ஏற்படுத்தாமல் மழைநீர் சாலைக்கு வந்து விடுகிறது. வடபழனி, கேகே நகர் பகுதிகளில் ராஜமன்னார் சாலை வழியாக சிவன் பார்க்கில் கடந்து அடையாறுக்கு செல்லக்கூடிய சிறிய ஆற்றில் சிவன் பூங்கா அருகில் ஆக்கிரமிப்பு இருக்கிறது. இது போன்று நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்புகளும், இணைப்பு இல்லாதவைகளும் இருப்பதன் காரணமாக வெள்ளம் சாலைகளிலும் வீடுகளிலும் குடியேறுகிறது காலநிலை மாற்றத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்க முடியாது.

சென்னை நகரம் கடல் மட்டத்திலிருந்து 6.7 மீட்டர் உயரத்தில் உள்ளது. எனவே முகத்துவாரத்தில் மழைநீர் கடலில் சேர்வதற்கான ஏற்பாடுகளை உரிய முறையில் செய்திட வேண்டும். இயற்கையான முறையில் கடலில் கலந்து விடும் என்ற மெத்தனப் போக்கில் மாற்றம் தேவை. மழை நீர் கடலில் கலக்க நான்கு முக துவாரங்கள் உள்ளது. கொசஸ்தலை ஆறு முகத்துவாரம் 120 மீட்டர் அகலமும், கூவம் 150 மீட்டர், அடையார் 300 மீட்டர், முட்டுக்காடு 100 மீட்டர் அகலம் உடைய முகத்துவாரங்களாக உள்ளது. புயல் வீசுகிற பொழுது முகத்துவாரங்கள் மழை நீரை கடலுக்குள் வாங்காது. எனவே இவற்றை ராட்சச எந்திரங்கள் மூலம் புயல் காலங்களில் வெளியேற்ற வேண்டும்.

சென்னை மாநகரமும் அதன் புறநகர்களும் வெள்ளத்தில் மிதப்பதற்கு மேற்கண்ட காரணங்கள் எல்லாம் மிக அடிப்படையான காரணங்களாகும். காலநிலை மாற்றமும் எதிர்பாராத மழை பொழிவும் என்ற காரணங்களை மட்டும் முன்னிறுத்தி கட்டமைப்பு குறைகளை கடந்து செல்லக்கூடாது. சென்னை வெள்ளத்தில் மிதக்காமல் இருப்பதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

திருப்புகழ் குழு தந்த ஆலோசனைகளை வெளியிட்டு அவற்றை செழுமைப்படுத்த வேண்டும். 

ஏரிகளை ஆழப்படுத்துவதும் கரைகளை பலப்படுத்துவதும் உடனடி கடமை. அடிக்கடி உடைந்து போகிற அல்லது உடைக்கப்படுகிற ஏரிகளின் கரைகளை பலப்படுத்துவதுடன் பாதுகாப்பு ஏற்பாடும் செய்ய வேண்டும்.

 புதிய நீராதார ஏரிகளை வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் உருவாக்க வேண்டும். வெள்ளம் ஏற்படுகிற பொழுது அவற்றை குறிப்பிட்ட அளவு இந்த ஏரிகள் உள்வாங்கிட முடியும். 

நன்னீர் சதுப்பு நிலத்தை தற்போது இருக்கக்கூடிய அளவை பாதுகாப்பதுடன், அங்கு அமைந்துள்ள குப்பைமேட்டை முறைப்படுதிட வேண்டும். 

சென்னையில் 3 ஆறுகளிலும் தொழிற்சாலை கழிவுகளும்  இதர கழிவுகளும் எந்த வரைமுறையும் இன்றி திறந்து விடப்படுகிறது. இவற்றை தடுத்து நிறுத்தி நீரோட்டம் இயல்பாக செல்வதற்கான முறைகளை ஏற்படுத்த வேண்டும். 

நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி அகற்றிட வேண்டும். மழை நீர் வடிகால்வாய் மழை நீர் வடிவதற்கு ஏற்ற முறையில் அடைப்புகள் இல்லாமல் இணைப்புகளை ஏற்படுத்தி அமைத்திட வேண்டும். 

கழிவுநீர் குழாய்களை முழுமைப்படுத்தி கழிவுநீர் வெளியேற்றுவதற்கான நீரேற்று நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும்.

 சிறிய சிறிய ஆறுகளில் பிளாஸ்டிக் குப்பைகள் மிகப்பெரும் தடைகளை ஏற்படுகிறது. இவற்றை தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

சென்னையில் புறநகர் பகுதிகளில் கழிவுநீர் குழாய் அமைப்புகள், மழை நீர் வடிகால்வாய், ஆறுகளில் தடுப்பணைகள் போன்ற அடிப்படையான கட்டமைப்பை உருவாக்கிட வேண்டும்.

மேலே முன் வைத்துள்ள அனைத்துமே அரசியல் உறுதிப்பாட்டுடன் ஊழலையும், கமிஷனையும் புறம்தள்ளி மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி அமல்படுத்தினால் மட்டுமே சென்னை நகரை தொடர் வெள்ளத்தில் இருந்து மீட்க முடியும். காலநிலை மாற்றமும் பூமி வெப்பமடைதல் காரணங்களால் கூடுதலான இயற்கை காரணிகள் அடுத்தடுத்து ஏற்படலாம் அவற்றையெல்லாம் எதிர்கொள்வதற்கு அடிப்படையான கட்டமைப்பு கூட இல்லை என்றால் அழிவு பேரழிவாக மாறும். இயற்கையின் மீதும் கால நிலையின் மீதும் காரணங்களை போட்டுவிட்டு கடந்து செல்ல முடியாது. மனித குலம் அவ்வாறு செய்யக்கூடியவர்களை மன்னிக்காது.


அ. பாக்கியம்




 

தொழிற்சங்க ஊழியர்களுக்கு சிறப்பான கையேடு

 தோழர்.ஏ.கே. பத்மநாபன்

(சிபிஐஎம் மத்திய குழு உறுப்பினர்,
சி ஐ டி யு முன்னாள் அகில இந்திய தலைவர், முன்னாள் அரசியல் தலைமை குழு உறுப்பினர் "வேலை நாள்" புத்தகம் பற்றி)




தோழர் பாக்கியம்
"வேலை நாள்" படித்து முடித்தேன்.

வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.
தொழிற்சங்க ஊழியர்களுக்கு சிறப்பான கையேடு இந்த நூல்...

திருத்தம்
----------------
83 வது பக்கம் கடைசி இரண்டு வரிகளில் எழுத்து பிழை உள்ளதை கவனிக்கவும்.

பக்கம் 119.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு உருவானது பற்றி எழுதியதில் ஐ.நா.சபை என்று உள்ளது. சரியல்ல.லீக் ஆப் நேஷன்ஸ் என்ற அதன் முன்னோடி அமைப்பு.

ஆலோசனைகள்.
-----------------------------
பக்கம் 122
சிங்காரவேலர். அவரது மே தின கொண்டாட்டம் மட்டுமல்ல,8 மணி நேர வேலை, சங்கம் சேரும் உரிமை,வேலை நிறுத்த உரிமை,விடுப்பு உட்பட்ட ஒரு மானிபெஸ்டோ அவர் வெளியிட்டார் . அது நீண்ட கோரிக்கை பட்டியல். ஓரிரு வாசகங்கள் சேர்க்கலாம்.

பக்கம் 123
கிர்ணி காம்கர் யூனியன் என்பது பஞ்சாலை தொழிலாளர்களுக்கானது என போடலாம்

பக்கம் 124
6 வது வரியில் பொது நுகர்வு என்பது பொதுப் பயன்பாட்டு துறை என போடலாம்.(Public Utility service )

இவை எல்லாம் திருத்தி தான் ஆகவேண்டும் என்பதற்கு அல்ல. பெரும் குறைபாடும் அல்ல.
இவ்வளவு சிரமப் பட்டு செய்த வேளையில் கண்ணில் பட்ட சிறு விசயங்களை சுட்டினேன். அவ்வளவு தான்.
வாழ்த்துக்கள்
மனமார்ந்த பாராட்டுக்கள்.

அடிமைத்தளையை அறுத்தெறிந்த அரிய வரலாறு!

 

Aram Online

பீட்டர் துரைராஜ்

December 24, 2023

உழைப்பைத் தவிர தருவதற்கு ஏதுமற்ற உழைப்பாளிகள் எப்படியெல்லாம் சக்திக்கு மீறி வேலை வாங்கப்பட்டு உருக்குலைந்தார்கள்! ஈவிரக்கமற்ற உழைப்புச் சுரண்டல்கள், ஆபத்தான வேலைகளை செய்து மரணித்த குழந்தைகள்.. என கடந்து வந்த பாதை நெஞ்சை உலுக்குகிறது..! பெற்ற உரிமைகளை இழப்போமா..?

இன்றைய இந்தியாவில் மீண்டும் நேரங்காலமற்று தொழிலாளர்களை வேலை வாங்கும் முயற்சிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், உழைப்பாளி வர்க்கம் என்ன செய்வதென்று தவித்துக் கொண்டுள்ளது. வரலாற்றில் பல இழப்புகளை சந்தித்து நாம் பெற்ற உரிமைகளையும், சட்ட பாதுகாப்பையும் தவறவிடப் போகிறோமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில் சென்னையில்தான் 1923 ல் முதலில் மேதினப் பேரணி நடைபெற்றது. தமிழக அரசுதான் 1967 ல் முதலில் தொழிலாளர் தினமான மே ஒன்றாம் நாள் விடுமுறை அறிவித்து, அரசு விழாவாக கொண்டாடியது. இப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்மண்ணில்தான் நாளொன்றுக்கு எட்டுமணி நேரத்திற்கும் அதிகமாக வேலை வாங்கலாம் என்ற சட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த எழுச்சியைக் கண்டு, அந்த சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில் தோழர். அ.பாக்கியம் ‘வேலை நாள் ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற நூலை எழுதியிருக்கிறார். இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியைத் தொடர்ந்து, தொழிற்சாலைகள் உருவான காலங்களில், வேலைநேர வரையறையின்றி வேலை வாங்கிய காலமெல்லாம் உண்டு. இதனை எதிர்த்து தொழிலாளர்கள் எப்படியெல்லாம்  போராடியிருக்கிறார்கள். தொழிலாளர்களின் விடிவெள்ளியாக இருந்த காரல் மார்க்ஸ் இதனை எப்படி பார்த்தார். அவர் கொடுத்த தத்துவ விளக்கம் உலகை எப்படி திரும்பிப் போட்டது என்பதை இந்த நூல் அழகாக விவரிக்கிறது.

குறைந்த பட்ச ஊதியம், ஆண்டுக்கணக்கில் ஒப்பந்த வேலை, ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், பணித்தளங்களில் பாலியல் சீண்டல், மகப்பேறு வசதி, ஆலை விபத்து, வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி, நீதிமன்ற தலையீடுகள் என பல பிரச்சினைகள் தொழிலாளர்களுக்கு உள்ளன. நாளிதழ்களில் தற்போது தொழிலாளர்களின் சந்திக்கும் அவலங்கள் குறித்து செய்திகள் வருவதில்லை.


கட்டட வேலை, மூட்டை தூக்கும் வேலை, வாட்ச்மேன் வேலை செய்வோர் நிலைமை இன்னும் மோசம். ஆலை நிர்வாகங்கள் தரும் செய்திகள்தான் பொதுவெளியில் வருகின்றன. கொரோனா கால ஆலைமூடலால், பொதுமுடக்கத்தால் தொழிலாளர்களின் தற்கொலைகள் பற்றிய செய்திகள் வெளிவரவில்லை.  புலம் பெயர்ந்த தொழிலாளர் பற்றி கேட்கவே வேண்டாம். இந்த நிலையில் தொழிலாளர் இயக்கங்களே தங்களின் வாழ்நிலை நிலைகுறித்து எழுத வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட தேவையின் விளைவாக வந்ததுதான்  தோழர். அ.பாக்கியம் எழுதியுள்ள ‘வேலைநாள் ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற நூல்.

14 ஆம் நூற்றாண்டில் பிளேக் நோயால் மக்கள் கொத்துகொத்தாக மடிந்த நிலையில் (கறுப்பு மரணம்)  வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. எனவே 60 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும்; முன்பிருந்த ஊதியத்தைவிட அதிகமாக கேட்கக் கூடாது, வேலையைவிட்டு வேறு இடங்களுக்கு சென்றால் கைது செய்யப்படுவார்கள் என்று இங்கிலாந்து நாட்டில் முதலில்  சட்டம் (1351)வந்தது. அதாவது உலகத்தில் உருவான முதல் தொழிலாளர் சட்டமே முதலாளிகளுக்கு ஆள்  சேர்க்கும் நோக்கோடுதான் பாராளுமன்றத்தால் கொண்டுவரப்பட்டது. பண்ணைநிலங்களில் வேலை செய்யமுடியாமல் வெளியேறுபவர்களை தடுக்கும் நோக்கோடு ‘வழிப்பறி & பிச்சைக்காரர்கள் சட்டம்’ 1494 ல் வந்தது என்று வரலாற்று பார்வையோடு பதிவாகியுள்ளது. அரசாங்கம் சட்டம் மூலம் தங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதை தெரிந்துகொண்ட தொழிலாளிகள், தங்களுக்கான கோரிக்கைகளை அடைவதற்காகவதற்காக, படிப்படியாக அதே சட்டங்களை தங்களுக்கு ஆதரவாக மாற்றிய கதைகளும் விவரிக்கபடுகிறது..!

இதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, காரல் மார்க்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்டு அறிக்கை (1848) வேலை நேரத்தை எட்டு மணிநேரமாக ஆக்குவதற்கான போராட்டங்களை விரைவுபடுத்தியது. இந்த நூலின் ஆரம்ப பக்கங்களில் காரல் மார்க்சின் கருத்துகளை குறிப்பிட்டு முதலாளிகள் எப்படி தொழிலாளர்களின் உழைப்புகளை திருடி வருகிறார்கள் என விவரிக்கப்படுகிறது. கார்வி வேலை முறை என்பதன் மூலம் நிலப்பிரபுக்கள் எப்படி கட்டாய உழைப்பு வாங்கினார்கள் என விவரிக்கப்படுகிறது. தெலுங்கானா, தஞ்சை பகுதிகளில் ‘வெட்டி வேலை’ மூலம் இலவசமாக உழைப்பு  நிர்பந்திக்கப்பட்டதை பதிவு செய்துள்ளார்.

ஆலை புகைபோக்கியை சுத்தம் செய்யும் சிறார்கள் (chimney sweepers) குறித்த பகுதி நம்மை கண்ணீர் சிந்த வைக்கும். ஆறு வயது குழந்தையை தொழிலாளி என்று சட்டமே கூறியதை என்னென்பது? ஏழைக் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் கொடுமை நடந்தது. இத்தகைய சுரண்டல்களுக்கு திருச்சபையும் ஆதரவாக இருந்திருக்கிறது என்பதெல்லாம் நெஞ்சை ரணமாக்குகிறது.

இந்த நூலில் 13 அத்தியாயங்கள் உள்ளன. ஆசிரியர் தனது நோக்கத்தில் இருந்து சிறிதும் விலகாமல், வேலை நேரம் குறித்த பல தகவல்களை தருகிறார். நாளொன்றுக்கு 15 மணிநேரமாக இருந்த நிலை எப்படி படிப்படியாக குறைந்தது. வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் இந்தியாவில் எப்படியெல்லாம் தொழிலாளர் சட்டங்கள் உருவாயின என்ற விவரங்களை பல நூல்களை ஆய்வு செய்து தருகிறார்.

பிரெஞ்சுகாரர்கள் ஆட்சி செய்த பாண்டிச்சேரியில் தான் தெற்கு ஆசியாவிலேயே முதன்முதலாக எட்டு மணி நேர வேலை 1937 ல் அமலானது. தற்போது 40 சத நாடுகளில் வாரத்திற்கு 40 மணிநேர வேலை நேரம் என்றும், 44 சத நாடுகளில் வாரத்திற்கு 48 மணிநேர வேலைநேரம் என்று உள்ளது; ஜெர்மனியில் வாரத்திற்கு 26 நேரம் வேலை என்கிறார்.

இப்படி பெற்ற உரிமைகளைப் பறிக்கத் தான், புதிய தொழிலாளர் சட்டங்கள் மூலம் பல பிரிவினரை தொழிலாளர் என்கிற வரையறையில் இருந்தே நீக்க ஒன்றிய அரசு சட்டம் இயற்றியுள்ளது என்கிறார். தொண்டு நிறுவனங்கள், மதம் சார்ந்த கல்வி நிறுவனங்கள், பாதுகாப்பு, ஆராய்ச்சி, அணுசக்தி, அங்கன்வாடி, தகவல் தொழில்நுட்ப  ஊழியர்கள் அனைவரும் தொழிலாளர்களாக கருதப்படமாட்டார்கள். நமக்கு உணவுப் பொருட்களை வீட்டிற்கு வந்து தரும் இளைஞர்களை ‘டெலிவரி பார்ட்னர்’ அல்லது ‘கேப்டன்’ என்று அழைப்பதன் நோக்கம், தொழிலாளர்களுக்கு உரிய சட்டப்பூர்வ உரிமைகளைப் பறிப்பதுதான் என்கிறார். தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்கள் உருவாவதை தடுக்கும் நோக்கோடு, வேலைநிறுத்தங்களை கட்டுப்படுத்தும் வகையில் பல திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளதை கவனப்படுத்துகிறார்.

தொழிற்சங்க ஊழியர்களுக்கு வகுப்பு எடுப்பது நூலாசிரியரின் நடவடிக்கைகளில் ஒன்று. அத்தகைய குறிப்புகளை, நூலாக உருவாக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தந்திருக்கிறார். வேலை நேரம், வேலை நாள் என்ற எல்லைக்குள் செறிவான பல தகவல்களை, சம்பவங்களை வரலாற்றுத் தொடர்ச்சியோடு தருகிறார் நூலாசிரியர். அனைவரும் படிக்கலாம்.

இதனை பார்வை நூலாகவும் கருதலாம்; வரலாற்று நூலாகவும் கருதலாம்; தொழிற்சங்க ஊழியர்களுக்கான கையேடாகவும் கருதலாம். மெச்சத்தகுந்த ஒரு சமூகப் பணியை அ.பாக்கியம் நிறைவேற்றி இருக்கிறார்.

நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

நூல்; வேலை நாள் ஒரு வரலாற்றுப் பார்வை

ஆசிரியர்; அ.பாக்கியம்

வெளியீடு; தூவல் பதிப்பகம்,

ஆர்.ஏ.புரம், சென்னை – 28/

கைபேசி;  9486344333

பக்கங்கள்; 160

விலை; ரூ200

 

 

 

செவ்வாய், டிசம்பர் 19, 2023

சீனாவின் மின்னணு (EV) கார்: அலறும் அமெரிக்கா.


உலகில்  நுகர்வோர் நடத்தையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் 2035 ஆம்


ஆண்டு புதிய கார் உற்பத்தியில் மின்னணு கார்கள் 50 சதவீதம் உற்பத்தி ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு புதிய கார்களின் உற்பத்தியில் மின்னணு  கார்களின் உற்பத்தி 18 சதவீதமாகும். 


2023 தரவுகளின் படி, உலகில் உற்பத்தி செய்யப்படக்கூடிய ஒன்பது முக்கிய கார் நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் சீனாவை சேர்ந்தது. டெஸ்லா மாடல் Y ,டெஸ்லா மாடல் 3 அமெரிக்காவை சேர்ந்த இரு நிறுவனங்கள் முதல் இடத்தில் உள்ளது. BYD Atto 3 / யுவான் பிளஸ்,

 BYD டால்பின், GAC Aion S , Wuling HongGuang Mini EV , GAC Aion Y , ஐயா ஆகிய சீனாவின் ஐந்து நிறுவனங்கள் அதற்கு அடுத்து உள்ளது. எட்டாவது இடத்தில் ஜெர்மனியின்VW ஐடி.4 நிறுவனமும்,மீண்டும் ஒன்பதாவது இடத்தில் சீனாவின் BYD சீகல் நிறுவனமும் உள்ளது.


 சீனாவின் வளர்ச்சி வேகத்தை கண்டு அமெரிக்கா தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட மற்ற நாடுகளை மிரட்டும் போக்கை கடைபிடிக்கிறது. 


மெக்சிகோ நாட்டில் சீனா தனது 3 மின்னணு கார் நிறுவனங்களை நிறுவுவதற்கான ஒப்பந்தங்களை போட்டு சுமார் 200 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. சீனாவில் உற்பத்தி செய்து மெக்சிகோவிற்கு ஏற்றுமதி செய்வதை விட, மெக்சிகோ நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உதவக்கூடிய முறையில், வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய வகையில் இந்த தொழிற்சாலையை அங்கு நிறுவுவதாக சீன நாடு தெரிவித்துள்ளது.


அமெரிக்கா தனது அண்டை நாடான மெக்ஸிகோவை இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற கூடாது என்றும், ரத்து செய்ய வேண்டும் என்றும் மிரட்டி வருகிறது. காரணம் தனது நாட்டு கார் கம்பெனிகளின் வீழ்ச்சியை கண்டு பயப்படுகிறது. 


சீனாவின் மின் கார்களின் தரம் உயர்ந்ததாகவும், புதிய செயல் திறன் கொண்டதாகவும், விலை குறைவாகவும் உள்ளது. சந்தை விதிகளின்படி போட்டிக்கு தயாராக இல்லாத அமெரிக்கா , படைபலம் மூலமாக மிரட்டி வருகிறது.சீனக் கார்கள் ஏற்கனவே ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. 


சீனா மெக்சிகோவில் கால் ஊன்றுவதன் மூலம் மெக்சிகோ சந்தையை பிடிப்பது  மட்டுமல்ல , அமெரிக்க சந்தையிலும் நுழைந்து விடும் என்ற அச்சம் உருவாகி இருப்பதினால மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. 


இது மட்டுமல்ல உலக அளவில் மின்னணு கார்களுக்கான பேட்டரி தயாரிப்புகளில் சீனா செல்வாக்கு செலுத்துகிறது. முதல் இடத்தில் உள்ளது.


 உலகமயத்தை பேசிய அமெரிக்கா தற்போது  வணிக விதிகளை எல்லாம் மீறி  பாதுகாப்பு (Productionism) கொள்கையை தனது நாட்டிற்கு அமுலாக்குகிறது. மற்ற நாடுகள் இதை செய்த பொழுது அந்த நாடுகளை மிரட்டி உலக மயத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அமலாக்க வைத்தது.


அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரே நோக்கம் ஆயுத பலத்தையும், வணிகத்தையும் தனது சுரண்டலுக்கு பயன்படுத்துவது மட்டும்தான். மற்ற நாடுகளில் வேலை வாய்ப்பு உருவாக்குவது தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவது என்பதெல்லாம் போலியானது.

அ.பாக்கியம்.

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...