Pages

செவ்வாய், அக்டோபர் 24, 2023

அமைதிக்கான பணிகள் விடுதலைக்கான ஆதரவு

 

தொடர் 27



முகமதுஅலி சமாதானத்தை விரும்பினார். யுத்தத்தால் யார் பாதிக்கப்பட்டாலும், பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டாலும் அவர்களை விடுவிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். 1973ல் வியட்நாம் நாட்டிற்கு சென்றார். வியட்நாமில் யுத்த காலத்தில் காணாமல் போனவர்களை தேடுவதற்காகவே ஒரு அலுவலகம் திறக்கப்பட்டு, அதற்கு வூ சி காங் என்ற இயக்குனரும் நியமிக்கப் பட்டிருந்தார்.  அவரை முகமது அலி சந்தித்தார். அப்போது வூ சி காங்,  ‘‘வியட்நாம் மக்கள் உங்களை ஒரு குத்துச்சண்டை சாம்பியனாக மட்டுமல்ல… அமைதிக்கான போராளியாகவும் அறிந்திருக்கி றார்கள். அதன் அடிப்படையில் நான் உங்களை வரவேற்கிறேன்’’ என்று கூறினார்.

ஈராக் - அமெரிக்க யுத்தம் நடக்கக்கூடாது என்று அலி விரும்பினார். நெருக்கடியான சூழலில் ஈராக்கில் இருந்தும், லெபனானில் இருந்தும், பிணைக் கைதிகளை மீட்டு வந்தார். அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்ட இஸ்ரேலில் இருந்த லெபனான், பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க முயற்சி எடுத்தார். ஈரான் நாட்டில் சிறைப்பட்டிருந்த பத்திரிக்கையாளர்களை மீட்டு வர  ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க பிரமுகர்களை கையெழுத்திட வைத்து வேண்டுகோளை அனுப்பி வைத்தார்.

1980-88 காலங்களில் ஈராக் - ஈரான் போரில் சிறையில் அடைக்கப்பட்ட 25ஆயிரத்துக்கும் அதிகமான போராளி கைதிகளை இரு நாடுகளும் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும் அவர்களை விடுதலை செய்வதற்குமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரு நாடுகளுக்கும் விஜயம் செய்தார்; பேச்சு வார்த்தை நடத்தினார். இது அவரது சொந்த நல்லெண்ண தூதுவர் முயற்சியாக இருந்தது. அமைதிக்கான குழந்தைகள் அமைப்பை நடத்தி 50க்கு மேற்பட்ட குழந்தைகளை உலக தலைவர்களை சந்தித்து அமைதிக்காக பாடுபடுமாறு வேண்டுகோள் விடுக்க உதவிசெய்தார். இது போன்ற எண்ணற்ற முயற்சிகளை அவர் தனக்கு இருந்த பார்க்கின்சன்ஸ் நோயையும் பொருட்படுத்தாமல் செய்து கொண்டிருந்தார்.

உதவி செய்யக் கூடியவர், சமாதானத்திற்காக போராடக் கூடியவர் என்பதுடன் விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவாளராகவும் இருந்தார். பாலஸ்தீனர்களுடைய போராட்டத்தை அடக்குவதில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழு உதவியும் செய்கிறது. ஐநா சபையில் பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறாமல் தனது வீட்டோபவரை பயன்படுத்தி தடுக்கிறது. இந்த சூழலில் முகமது அலி லெபனானிலிருந்த பாலஸ்தீன அகதிகள் முகாம்களுக்கு நேரடியாக விஜயம் செய்கிறார். பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாக அறிவித்தார். 1988ல் பாலஸ்தீனத்தில் முதல் இன்டிபடாவின் (INTIFADA)  எழுச்சியின்போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற பேரணியில் முகமது அலி பங்கேற்றது பெரும் எழுச்சியை உருவாக்கியது.

அமெரிக்காவில் உள்ள பூர்வீக குடிமக்கள் ( செவ்விந்தியர்கள்) தங்களது உரிமைகளுக்காக அமெரிக்கன் இந்தியன் இயக்கம் என்ற பழங்குடி மக்கள் இயக்கத்தை உருவாக்கியிருந்தனர். நகர்ப்புறத்தில் குடியேறிய பழங்குடி வம்சாவழி மக்களின் பிரச்சினைகளை கையில் எடுத்து போராடினர். கருப்பின மக்களை எப்படி ஒதுக்கினார்களோ அதே போன்று செவ்விந்தியர்களையும் வெள்ளை நிறவெறி கொடும் தாக்குதலுக்கு உள்ளாகியது. இதை எதிர்த்து ‘தி லாங்கஸ்ட் வாக்’ என்ற போராட்ட அணிவகுப்பை நடத்தினார்கள். இந்த அணிவகுப்பில் முகமது அலியும், அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகரான மார்லன் பிராண்டோவும் கலந்து கொண்டனர். முகமது அலி, வியட்நாம் யுத்தத்தை எதிர்த்து அமெரிக்காவில் நடந்த போராட்டங்களிலும், சிவில் உரிமை போராட்டங்களிலும், கருப்பின மக்களுக்கான அடக்குமுறைகளை எதிர்த்த நடவடிக்கைகளிலும் நேரடியாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

உதவிகள் செய்வது, சமாதான செயல்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான களப்போராளி என்ற தளங்களில் முகமது அலி தன்னுடைய பணிகள் மூலமாக முத்திரை பதித்துள்ளார்.

முகமது அலிக்கு குத்துச்சண்டை பதக்கங்களை கடந்து, உலகம் தழுவிய அளவில் ஏராளமான விருதுகளை வழங்கி இருக்கிறார்கள். பங்களாதேஷ் உட்பட பல நாடுகள் குடியுரிமை வழங்கியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் அவரின் பெயரால் சாலைகள், மிகப்பெரிய நிறுவனங்களுக்கான பெயர்களை சூட்டி இருக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதிகளின் விருது, ஐநா சபையின் தூதுவர் பட்டங்களையும் அவருக்கு வழங்கியிருக்கிறார்கள். இப்படி நூற்றுக்கணக்கான விருதுகளை குறிப்பிட்டாலும் ஒரே ஒரு விருதை மட்டும் இந்த நேரத்தில் குறிப்பிடுவது அவசியமானது.

அமெரிக்காவில் இயங்கி வரக்கூடிய அரபு அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பின் சார்பில் முகமது அலிக்கு உலக பெரும் கவிஞன் கலீல் ஜிப்ரான் பெயரால் ‘‘ஸ்பிரிட் ஆஃப் ஹியூமானிட்டி’’ (Sprit of Humanity) என்ற வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார். தனது போர் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காகவும், வியட்நாம் போருக்கு எதிராக போராடியதற்காகவும், பாலஸ்தீன மனித உரிமைகள் பிரச்சாரத்தின் ஆலோசனை குழுவில் பணியாற்றியதற்காகவும், அமெரிக்காவால் சீர்குலைக்கப்பட்டு மரணப்படுக் கையில் பசியால் வாடிய ஈராக் மக்களுக்கு நிதி திரட்டி கொடுத்ததற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது.

உலக மக்களால் நேசிக்கப்பட்டு, ஆப்பிரிக்க மக்களின் விடிவெள்ளி யாக பார்க்கப்பட்டு, அமெரிக்காவின் கருப்பின மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தார் முகமது அலி. அவர் பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கடைசி வரை செயல்பட்டுக் கொண்டிருந்தார்.  சிலரது மரணங்கள் மட்டும்தான் உலகப் பேரிழப்பாக மாறிவிடுகிறது. அலியின் மரணமும் அப்படித்தான். அரிசோனாவின் ஸ்காட்ஸ்டெல் மருத்துவமனையில் சுவாச நோய் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றுவந்த முகமது அலி, 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி அன்று  இறந்தார். அப்போது அவருக்கு வயது 74. அவரது விருப்பத்தின் அடிப்படையிலேயே மரணத்திற்குப் பிறகு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது. ஜூன் 9ஆம் தேதி அவரது சொந்த மாநிலமான கெண்டகியில் உள்ள எக்ஸ்பொசிஷன் சென்டர் மைதானத்தில் முகமது அலியின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 10ஆம் தேதி முகமது அலியின் சொந்த ஊரான லூயிஸ்வில்லியின் தெருக்களில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு கேவ் ஹில் என்ற கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

நிறவெறிக்கு எதிராக குத்துச்சண்டை வளையத்தின் உள்ளேயும், வெளியேயும் களமாடிய கருப்பின போராளிக்கு உலகத் தலைவர்கள்,  விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் தங்களது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கினர். 

இறக்கும் போது எவரும் எதையும் எடுத்துச் செல்வதில்லை. தங்கள் உடலைக்கூட நெருப்புக்கோ, மண்ணுக்கோக தாரைவார்த்து செல்கிறார்கள். ஆனால், போராளிகள் இறக்கும்போது தங்கள் லட்சியங்களை விட்டுச் செல்கிறார்கள். முகமது அலியும் அப்படித்தான். நிறவெறிக்கு எதிரான போராட்டத்தை விட்டுச் சென்றிருக்கிறார். 2020ம் ஆண்டு மே 25ம் தேதி டெரிக் சாவின் என்கிற வெள்ளை போலீஸ் அதிகாரியால், கழுத்தில் கால்முட்டியால் அழுத்தப்பட்டு மூச்சுவிட முடியாமல் கொல்லப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் ப்ளாயிட் மரணம், அமெரிக்க நிறவெறியின் கொடூரத்தை இன்னமும் நிரூபித்துக் கொண்டுதான் உள்ளது.

 

சனி, அக்டோபர் 14, 2023

உதவி செய்வது உடன் பிறந்தது


 

தொடர் 26

அடிப்படையில் முகமது அலி ஒரு மனிதாபிமானி. அவருடைய பன்முகத்  தன்மை வாய்ந்த வாழ்க்கையில் அவர் செய்த உதவிகள் குறிப்பிடத்தக்கது. துன்பப்படுபவர்களை கண்டு அவர் மனம் கலங்கினார். அவரது வார்த்தைகளில் குறிப்பிட்டால் "ஒரு பிரச்சனை இருப்பதாக யாராவது என்னிடம் கூறினால், என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன்" என்று தன்னடக்கத்துடன் கூறியுள்ளார். ஏழைகளின் துன்பங்களுக்கு யார் காரணம் என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்காவிட்டாலும் ஏழைகளைக் கண்டு மனம் இரங்கி நிறைய உதவிகளை செய்துள்ளார்.

முகமது அலியின் மகள் ஹானா பெல்லட்டர். அவர் ஒரு குத்துச்சண்டை வீரரை மணந்து கொண்டவர். தன் தந்தை முகமது அலியைப் பற்றி அவர் பதிவு செய்துள்ளார்.  "ஏழை எளிய மக்கள் மீதான அவரது அன்பு அசாதாரணமானது. வீடற்ற குடும்பங்கள் எங்கள் வீட்டு விருந்தினர் அறையில் தூங்குவதை நான் பள்ளியில் இருந்து வரும் பொழுதெல்லாம் காண்பேன். தெருவில் அவர்களைப் பார்த்தவுடன் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் அள்ளிப்போட்டு வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவார். அவர்களுக்கு ஆடைகளை வாங்கித் தருவார். ஓட்டலுக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கித் தருவார். அவர்கள் பல நாட்கள் உணவு அருந்துவதற்கான கட்டணத்தையும் ஓட்டலில் செலுத்தி விடுவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முகமது அலி 1996 மற்றும் 98 ஆண்டுகளில் கியூபா நாட்டிற்கு பயணம் செய்தார். இரண்டு முறையும் கியூப மக்களுக்கான மருத்துவ உதவி உபகரணங்களை வழங்குவதற்காக அவர் சென்றார். 1996ம் ஆண்டு, ஹவானா மருத்துவமனைக்கு 20,000 கண் கண்ணாடிகளை வழங்கினார். பழுது நீங்கி தெளிவான பார்வை பெற்று மகிழ்ந்த மக்களுடன் முகமது அலியும் கலந்துரையாடி மகிழ்ந்தார். ஹவானா  மருத்துவமனைக்கு 1.2 மில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்துகளை கொடுத்தார். அவர் மேற்கொண்ட 2 பயணங் களின்போதும் சுமார் 5 லட்சம்டாலர் மதிப்புள்ள மருத்துவ உதவிகளை கியூபாவுக்கு வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கியூப அரசின் உயர்நிலை அதிகாரி பாப் ஸ்வார்ட்ஸ் கூறுகையில், ‘‘முகமது அலி வழங்கிய மருத்துவ உதவி என்பது கியூபா மீதான அமெரிக்க பொருளாதார தடையை எதிர்ப்பதற்கும், அதன் பொருளாதார நெருக்கடியை தளர்த்துவதற்கும் ஒரு வழியாகும்" என்று கூறினார். இரண்டாவது பயணத்தின் போது முகமது அலி கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்துப் பேசினார். அமெரிக்கா கியூபாவை தனது ஜென்ம விரோதியாக கருதி பொருளாதாரத் தடைகளை விதித்து, கியூபாவுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று உலக நாடுகளை அச்சுறுத்தும் நிலைமை இருந்த போதும் முகமது அலி கியூபாவுக்கு மருத்துவ உதவிகள் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1963டிசம்பர்6ம் தேதி பென்சில்வேனியா ரோபெனா நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன்வாயு கசிவுஏற்பட்டு 84 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 37 தொழிலாளர்கள் இறந்து விட்டனர். முகமது அலி அப்போது சார்லி பாவெல் என்பவருடன் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கிடைத்த தொகையில் ஒரு பகுதியை இறந்த 37 தொழிலாளர் களின் குடும்பங்களுக்கும் கொடுத்தார்.   

முகமது அலி ஆரம்ப காலத்தில் இளைஞர்களுக்கான கல்வியில் கவனம் செலுத்தினார். கருப்பின கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசியிருக்கிறார். கருப்பின மாணவர்களுக்காக உதவி செய்வதற்கு என்று ஒருங்கிணைந்த நீக்ரோ கல்லூரி நிதி என்ற அமைப்பு உள்ளது. அந்த அமைப்பிற்கு 1967ஆம் ஆண்டு 10,000 டாலர் நன்கொடையாக கொடுத்தார். அதுவரை அளிக்கப்பட்ட தனிநபர் நன்கொடையில் இதுவே மிக அதிகமாக இருந்தது. இதுபோன்று யுனிசெப்க்கு பல நிதி உதவிகளை செய்திருக்கிறார். இந்த நன்கொடைகள் பற்றி விளம்பரம் செய்யக்கூடாது என்று அவர் நிபந்தனையும் விதித்துள்ளார்.

1975 மார்ச் 24 மேற்கு ஆப்பிரிக்காவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சஹெல் பகுதிக்கு ஒரு குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த மொத்த தொகையும் வழங்கினார். 1975 டிசம்பர் 2 நியூயார்க் நகரில் ஹில் சைட் ஏஜ்டு சென்டர் என்ற முதியோர் இல்லம் பணம் இல்லாமல் இருந்த பொழுது அதைக் கேள்விப்பட்ட முகமது அலி உடனடியாக நேராக சென்று ஒரு லட்சம் டாலர் நன்கொடை கொடுத்து அங்கிருந்து முதியவர்களுக்கு நம்பிக்கையூட்டி பேசினார்.

இதை அறிந்த பத்திரிகையாளர்கள் அங்கு கூடி விட்டார்கள். முகமது அலியை மொய்த்துக் கொண்டார்கள். அவர்களிடம் ஒரு விஷயத்தை மட்டும் கூறிவிட்டு முகமது அலி விடைபெற்றுக் கொண்டார். ‘‘இது போன்ற விஷயங்களை நீங்கள் வெளியிட வேண்டாம். இவை விளம்பரத்திற்காக அல்ல. மற்றவர்களுக்கு சேவை செய்வது என்பது இந்த பூமியில் நான் வாழ்வதற்காக கொடுக்கப்படும் வாடகை என்று வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார். இயலாதவர்களுக்கு உதவி செய்வதை அவர் தன் கடமையாக கருதினார்.

1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் வடகிழக்கு இங்கிலாந்துக்குச் சென்று சிறுவர்களுக்கான குத்துச்சண்டை பள்ளிகளுக்கு  நிதி  திரட்டினார். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பள்ளிக்குச் சென்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயணிப்பதற்கான பேருந்துகளை வழங்கினார். கென்யாவிற்கு சென்ற பொழுது அங்குள்ள ஏழை குழந்தைகள், அனாதை குழந்தைகள், வீடற்ற சிறுவர்களுக்கான பள்ளிகளை நடத்துவதற்கு ஒரு கண்காட்சி குத்துச்சண்டை போட்டி நடத்தி ஏராளமான நிதி உதவிகளை செய்தார். 1988 ஆகஸ்ட்  மாதம் சூடான் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம்,போர் ஆகியவற்றால் இடம்பெயர்ந்த அகதிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் முகாம்களுக்குச் சென்று நேரடியாக உதவிகளை செய்தார்; நிதி வழங்கினார். அன்றைய சூடான் பிரதமர் சாதிக் அல் மஹதி, முகமது அலியை நாட்டு மக்கள் சார்பாக மனதார வாழ்த்தினார்.

1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  ஆப்பிரிக்காவின் லைப்ரிய நாட்டில் அகதிகளுக்கு மருந்து, உடைகள், குழந்தைகளுக்கான பொம்மைகள், ஊனமுற்றவர்களுக்கான கருவிகளை வழங்கினார். சகோதரி பெல்ட்ரான் மிஷனரி முகாமில் இருந்த 105 லைப்ரியா குழந்தைகளையும், அங்கு போதுமான நிதி உதவி இல்லாமல் தங்கி இருந்த 400 பேர்களையும் முகமது அலி பராமரித்துக் கொள்வதற்கான பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். இந்த இடத்தில்தான் அவர், ‘‘ஒரு பிரச்சனை இருப்பதாக என்னிடம் கூறப்பட்டால் என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன்’’ என்ற வாசகத்தை கூறினார்.

 

திங்கள், அக்டோபர் 09, 2023

சே: சித்தாந்தமும் செல்வாக்கும்.

 அக்டோபர் 9: சே நினவு தினம்

சேகுவேரா , வீர மரணம் அடைந்து இன்றுடன் 56 ஆண்டுகள் ஆகிறது. இன்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் உள்ள புரட்சியாளர்களுக்கும் போர் வீரர்களுக்கும் உந்து சக்தியாக இருக்கிறார் போராளிகளுக்கு மட்டுமல்ல அரசியல்,அர்ப்பணிப்பு,சித்தாந்தம், செயல்பாடு போன்றவற்றால் 21 ஆம் நூற்றாண்டு இளைஞர்களையும் ஈர்க்க கூடியவராக சேகுவேரா இருக்கிறார். முடிவுகளை எடுத்து அறிவிப்பதை விட நான் முன்னே செல்கிறேன் என்னை பின் தொடருங்கள் என்ற முறையில் களப்போராட்டங்களை அமைத்து வாழ்ந்து காட்டியவர்.

மார்க்சியம் , ஏகாதிபத்திய எதிர்ப்பு முதலாளித்துவ எதிர்ப்பு ஆகியவற்றின் கூறுகளை ஒன்றிணைத்து அவரது அரசியல் சித்தாந்தம் இருந்தது. அவர் பல்கலைக்கழக பாடங்களால் மட்டும் அரசியல் சித்தாந்தத்தை அமைத்துக் கொண்டவர் அல்ல. லத்தீன் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து அதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் அடிப்படையில் அவரது சித்தாந்தம் வடிவமைக்கப்பட்டது. தனது பயணத்தின் போது அவர் கண்ட காட்சிகள் வறுமை, சமத்துவமின்மை, அடக்குமுறைகள் போன்ற எண்ணற்ற ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி வரும் முதலாளித்துவ சமூகத்தை தூக்கி எறிந்து சோசலிச சமூகத்தை அமைப்பதன் மூலமாகத்தான் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று நம்பினார்.

சோவியத் சோசலிச பாணியில் அவர் முழுமையாக திருப்தி அடையவில்லை. தன்னலமற்ற தார்மீக மற்றும் புரட்சிக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒரு புதிய சோசலிச மனிதனை உருவாக்குவது பற்றி சிந்தித்தார். புரட்சியாளர் அன்பின் சிறந்த உணர்வால் வழிநடத்தப்பட வேண்டும். இந்த குணம் இல்லாத ஒரு உண்மையான புரட்சியாளரை நினைத்துப் பார்க்க முடியாது. முன்னணி புரட்சியாளர்கள் மக்கள் மீதான தங்களது அன்பை இலட்சியப்படுத்த வேண்டும். புரட்சிக்கு வெளியே வாழ்க்கை இல்லை. புரட்சிகர தலைவர்கள் மனித நேயத்தின் ஒரு பெரிய அளவை, பெரிய அளவிலான நீதி மற்றும் உண்மை உணர்வுகளை கொண்டிருக்க வேண்டும் (கியூபாவில் சோசலிசமும் மனிதனும் 1965 சேகுவேரா)என்று வலியுறுத்தியதுடன் வாழ்ந்தும் காட்டினார்.

சேகுவேராவின் சோசலிஸ்ட் சித்தாந்தம் மற்றும் அவரது கெரில்லா ராணுவ நடவடிக்கை போன்றவற்றை கடைபிடிக்கக் கூடியவர்களை "குவேரிஸ்மோ" என்று அழைத்துக் கொள்கிறார்கள். சேகுவேராவின் புதிய சோசலிச மனிதன் என்ற தலைப்புகளில் விவாதங்களை முன்னெடுத்து லத்தின் அமெரிக்க நாடுகளில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 56 ஆண்டுகளுக்கு பிறகும் அவரது செல்வாக்கு நீடித்துக் கொண்டே இருக்கிறது. கேள்வி கேட்கும் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்ற சேகுவேராவின் சிந்தனைகள் அவர் நடைமுறைப் படுத்திய திட்டங்கள் கியூபா உட்பட பல லத்தீன் நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.

சிலி நாட்டில் சேகுவாராவின் சாதனைகளை பள்ளி பாட புத்தகங்களில் இருந்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக கியூப புரட்சியில போர் குற்றங்கள் என்ற பாடத்திட்டங்களை சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட வலதுசாரிகளை கம்யூனிஸ்டுகளும் இடதுசாரிகளும் தோற்கடித்தார்கள்.

நிகரகுவா நாட்டில் புரட்சியில் வெற்றி பெற்ற டேனியல் ஓர்டெகா தலைமையிலான சாண்டினிஸ்டா அமைப்பில் சேகுவாராவின்( குவேரிஸ்மோ")தாக்கம் இருந்தது. இதே போன்று குவதிமாலா, எல் சால்வடார் நாடுகளில் நடைபெற்ற புரட்சிகளுக்கும் சேகுவாராவின் தாக்கம் இருந்தது

பொலிவியா நாட்டின் தலைவராக இருந்த இவோ மொரெல்ஸ் பொலிவியாவில் சேகுவாரா சுட்டு புதைக்கப்பட்ட வாலே கிராண்ட் சென்று "சே வாழ்கிறார்" என்று அறிவித்தார். மேலும் சேகு வேராவின் உருவப்படத்தை உள்ளூர் கோகோ இலைகள் மூலம் ஜனாதிபதி அறையில் நிறுவினார்.

2006 ஆம் ஆண்டு வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் சேகுவேரா ஓர் எல்லையற்ற புரட்சியாளர் என்று சேகுவேராவின் டீ சர்ட் அணிந்த லட்சக்கணக்கான கூட்டங்களுக்கு மத்தியில் அறிவித்தார். அவரும் காஸ்ட்ரோவும் அர்ஜென்டினாவில் உள்ள சேகுவேராவின் இளம் வயது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

கொலம்பியாவில் நடைபெறுகிற கொரில்லா இயக்கத்திற்கு, மெக்சிகோவில் சப்கமாண்டர் மார்க்கோஸ் தலைமையிலான ஜபடிஸ்டாஸ் இயக்கத்தின் எழுச்சியிலும் குவேரிஸ்மோ தாக்கம் இருந்தது.

சேகுவேரா ஜனநாயக வடிவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் மக்கள் விருப்பத்தின் வெளிப்பாடுகள், மக்களால் உருவாக்கப்படக்கூடிய நீதிமன்றங்கள் புரட்சிக்கான பாதுகாப்பு குழுக்கள் போன்ற முறைகளை வெனிசுலாவிலும் பொலிவியாவிலும் கடைபிடித்தனர்.

சேகுவேரா எழுதிய மோட்டார் சைக்கிள் டைரி கல்லூரி மாணவர்களிடையே, இளம் அறிவிஜீவிகள் மத்தியில் மிகப்பெரும் விருப்ப நூலாக ஏன் வழிபாட்டு நூலாகவே மாறி உள்ளது.

சேகுவேராவின் கருத்துக்கள் புரட்சியாளர்களின் தலைமுறையை ஊக்குவிக்க உதவியது. புதிய சோசலிச மனிதன் என்ற அவரது கருத்துக்கள் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படுகிறது.

அவரது எழுத்துக்களும் புரட்சிகர நடவடிக்கைகளும் இன்றளவும் மக்களை திரட்டுவதற்கு தொடர்ந்து பயன்பட்டு வருகிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா சுரண்டுவதற்கு எதிராக அமெரிக்க நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்று அவர் எடுத்த முயற்சிகள் இன்று மேலும் முன்னேறி உள்ளது. 12க்கும் மேற்பட்ட லத்தின் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி தலைமை அமைந்து அமெரிக்க அடக்குமுறைகளுக்கு எதிராக அணி திரண்டு உள்ளன.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் நடைபெற்ற ஒவ்வொரு புரட்சியிலும், மக்கள் எழுச்சியிலும், சேகுவேராவின் தாக்கமும் செல்வாக்கும் இருந்தது. அவர் அடக்குமுறைகளை எதிர்ப்பதில் சின்னமாகவே விளங்குகிறார். இன்றைய இளைய தலைமுறையினருக்கு சேகுவேரா உந்து சக்தியின் வற்றாத ஜீவ நதியாக இருந்து கொண்டிருக்கிறார்.

நாடக பாணியிலான அரசியல் நர்தனமாடுகிற இக்காலத்தில், அவரது போர் முறைகளுக்காக மட்டுமல்ல, அவரது அர்ப்பணிப்பு, என்றென்றும் மக்களுடன் இணைந்து உழைப்பது, அடக்குமுறைகளுக்கு எதிராக சமரசம் அற்ற களம் காண்பது,எளியவர்கள் மீது அவர் காட்டும் அன்பு என எண்ணற்ற காரணங்களுக்காக இன்றும் சே தேவைப்படுகிறார்.
அ.பாக்கியம்.



https://www.internationalmagz.com/articles/che-guevra-continuing-influence-in-latin-america?utm_source=pocket_saves

https://www.cheguevara.org/impact.jsp?utm_source=pocket_saves

ஞாயிறு, அக்டோபர் 08, 2023

இந்தியாவில் அலி பேசிய அரசியல்


 

தொடர்: 25

முகமது அலி 1980ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிற்கு வருகை தந்தார். டெல்லி, சென்னையில் நடைபெற்ற கண்காட்சி போட்டிகளில் பங்கேற்றார். பம்பாய் (மும்பை) மற்றும் ஆக்ராவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த பயணத்தின்போது அவர் பத்திரிகை யாளர்களையும் சந்தித்தார். மேலும், குத்துசண்டை வீரர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். அப்போது பிரதமராக இருந்த  இந்திரா காந்தியுடனான முகமது அலியின் சந்திப்பு, கருத்துப் பரிமாற்றம் மற்றும் நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டதாக இருந்தது. முகமது அலி பங்கேற்ற வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு இந்திய பத்திரிகைகள் ‘‘மகத்தானவர்களில் மகத்தானவர்’’ என்று ஒரு பொதுவான தலைப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தலைப்பே முகமது அலிக்கு மகுடம் சூட்டியது போல் இருந்தது.

இரட்டிப்பு மகிழ்ச்சி

முகமது அலி, தலைமுறைக்கான குத்துச்சண்டை வீரர் மட்டுமல்ல, வியட்நாமுக்கு எதிரான யுத்தத்தில் பங்கேற்க மாட்டேன் என்று கூறி அமெரிக்காவை அதிர வைத்ததினால் அவர் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் என்று அவர் வருகை தந்தபோது இந்திய பத்திரிகைகள் பாராட்டுப் பத்திரம் வாசித்தன. பம்பாயில்  நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘நான் பம்பாயில் இருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். நான் விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ‘‘முகமது அலி சாலையின்’’ வழியாக வந்தேன். ஏற்கனவே ஒரு சாலைக்கு நீங்கள் எனது பெயரை சூட்டி பெருமை படுத்தியிருப்பது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.  இங்கு மேலும் ஒரு சிறப்பான வரவேற்பு அளித்து எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்து விட்டீர்கள்’’ என்றார்.

டெல்லியில் ஜனவரி 22ம் தேதி, தேசிய ஹெவி வெயிட் சாம்பியன் கவுர் சிங்குடன் நடந்த கண்காட்சி போட்டியில் முகமது அலி பங்கேற்றார். 50 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு களித்த அந்தப் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் சில மணி நேரத்திலே விற்றுத் தீர்ந்துள்ளன.

எம்ஜிஆர், கருணாநிதியுடன் சந்திப்பு

சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடந்த கண்காட்சிப் போட்டியிலும் முகமது அலி பங்கேற்றார். இந்தப் போட்டியை 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கண்டு களித்தார்கள். அன்றைய முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன், சென்னை விமான நிலையத்தில்  முகமது அலியை வரவேற்றார். அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்து தன்னை வரவேற்றதைக் குறிப்பிட்டு முகமது அலி மகிழ்ச்சி தெரிவித்தார்.

நேரு ஸ்டேடியத்தில் நடந்த முதல் காட்சிப் போட்டியில் முகமது அலி அவருடன் வந்திருந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஜிம்மி எல்லிசுடன் மோதினார். அடுத்ததாக அன்றைய தினம் தமிழ்நாட்டின் குத்துச்சண்டை சாம்பியனாக இருந்த ராக்கி பிராஸ் என்பவரிடம் மோதினார். ராக்கி பிராஸ் எட்டாம் வகுப்பு கூட முடிக்காதவர். அவர், முகமது அலியுடன் காட்சிப் போட்டியில் பங்கேற்றதால், தெற்கு ரயில்வேயில் அவருக்கு வேலை கிடைத் தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எம்ஜிஆர் பேசும்போது, எனக்கு மிகவும் பிடித்த குத்துச்சண்டை வீரர் முகமதுஅலி என்று குறிப்பிட்டு பாராட்டினார்.

இந்த காட்சிப் போட்டி முடிந்த பிறகு கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரேசா அறக்கட்டளைக்கு முகமது அலி நன்கொடை வழங்கினார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியையும் முகமது அலி சந்தித்தார்.

மனோதிடம் முக்கியம்

இந்திய குத்துச்சண்டை வீரர்களுடனான சந்திப்பின்போது, அவர்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முகமது அலி பதிலளித்தார். "களத்தில் விளையாடும்போது, சக்தி வாய்ந்த நேரான குத்துக்களை வீச வேண்டும். அப்போதுதான் அதிக புள்ளிகளைப் பெற முடியும்’’ என்று கூறிய அவர், குத்துச்சண்டை வளையத்தில் எதை செய்யக்கூடாது என்பதையும் விளக்கினார். புதிதாக வரும் வீரர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன என்று கேட்ட பொழுது "வீரர்கள் உடற்பயிற்சி கூடங்களில் மட்டும் உருவாக முடியாது. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு இருக்க வேண்டும்; ஒரு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும்; அதீதமான விருப்பம் இருக்க வேண்டும். அதேபோல் அவர்களுக்கு திறமையும் முக்கியம்; மனோதிடமும் முக்கியம். இவற்றில் மனோதிடம் முதன்மையானது’’ என்று பதிலளித்தார்.

டீஸன்ட்சி பாக்ஸர்

முகமது அலியை நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள் என்று இந்திய குத்துச்சண்டை வீரர்களிடம் கேட்டபோது, அவர்கள் அளித்த பதில்: முகமது அலி, ஃபவுல் பஞ்ச் எனப்படும் விதிமுறைகள் மீறிய குத்துக்களையோ, எதிராளிகளை ஏமாற்றி குத்துவது, களைப்பானது போல் நடித்து ‘மவுத் கார்டை’ (mouthguard - பற்கள் மற்றும் தாடைகள் பாதுகாப்புக்காக வாய்க்குள் பொருத்தப்படும் ரப்பர் தட்டை) கீழே துப்புவது போன்ற விரும்பத்தகாத செயல்களை, குத்துச்சண்டை வளையத்தில் எப்பொழுதுமே செய்யாத, விளையாட்டில் ஒழுக்கமும் நேர்மையையும் கடைபிடித்த "டீஸன்ட்சி பாக்ஸர்" (decency boxer) என்ற பெயர் முகமது அலிக்கு இருந்ததால் அவரை நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

எடக்கு மடக்கு கேள்வி புத்திசாலித்தனமான பதில்

இந்திய சுற்றுப்பயணத்திற்காக முகமது அலி, முதலில் மும்பையில் வந்திறங்கியபோது நடந்த  பத்திரிகையாளர் சந்திப்பில், ‘‘ஒரு மூத்த பத்திரி கையாளர் அலியிடம் கேட்டார். ‘‘எப்போதும் தாமதமாக பறக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று. அந்தக் கேள்வியை நாசூக்காக கையாண்ட  முகமது அலி, ‘‘இந்த சுற்றுப்பயணத் தின்போது, பத்திரிக்கையாளரின் முதல் கேள்வி இந்தியாவைப் பற்றி எதிர்மறையாக இருக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை’’ என புத்திசாலித்தனமாக பதில் அளித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளரின் வாயை அடைத்தார்.  ‘‘குத்துச்சண்டை போன்ற உடல் பாதிப்பு அதிகம் இருக்கிற விளையாட்டுப் போட்டியில் ஒரு முஸ்லிமாக உங்களது ஆன்மீக  நிலைக்கும், அமைதிக்கான பணியை மேற்கொள்கிற போதும், நீங்கள் எவ்வாறு சமரசம் செய்து கொள்கிறீர்கள்’’ என்று கேட்ட பொழுது ‘‘இரண்டிலும் நான் எந்த முரண்பாட்டையும் காணவில்லை’’ என்று பதிலளித்தார்.

4 மனைவிகள் நரகம்தான்

ஆண்கள் நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிப்பது குறித்த கேள்விக்கு முகமது அளித்த பதில்: நான்கு என்பது வெறுமனே நரகம். 3 என்பது நரகத்தைப் போலவே மோசமானது. இரண்டு என்பது அதிக பிரச்சனை உள்ளது. ஒன்று மட்டுமே மகிழ்ச்சி என்று தெரிவித்தார். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை இந்த பதிலை கட்டம் கட்டி வெளியிட்டிருந்தது. முகமது அலியின் இந்த பதில், இஸ்லாம் பற்றிய காலத்துக்கு பொருந்தாத பிரச்சாரத்தை முறியடிப்பதாக இருந்தது.

அதிர்ந்தார் இந்திரா

பிரதமர் இந்திரா காந்தியுடனான முகமது அலியின் சந்திப்பு ஜனவரி 25ம் தேதி காலை நிகழ்ந்தது. சந்திப்பு அறைக்கு  பிரதமர் இந்திரா காந்தி வந்தவுடன் மேற்கத்திய கலாச்சாரப்படி முகமது அலி அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.  இதை சற்றும் எதிர்பாரததால், முதலில் அதிர்ச்சி அடைந்த பிரதமர் இந்திரா காந்தி பிறகு நிதானமாகி முகமது அலியுடன் சகஜமாக உரையாடலை தொடர்ந்தார். எனக்கும் என் மனைவிக்கும் எப்போதும் இந்தியாவின் மீது அதிக ஆர்வம் உள்ளது. இந்திய ரசிகர்கள் கொடுத்த வரவேற்பில் நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன் என்று இந்திரா காந்தியிடம் முகமது அலி கூறினா்.  பாரம்பரியமும், வசீகரமும் நிறைந்த எங்கள் நாட்டுக்கு நீங்கள் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திரா காந்தி கூறினார்.

நான் இப்போது குத்துச்சண்டை விளையாடுவதை விட்டுவிட்டு, உலகில், அன்பையும் நட்பையும் மேம்படுத்துவதற்காக எனது பெரும்பகுதி நேரத்தை செலவிடுகிறேன் என்று கூறிய அலியிடம், இந்தியாவில் நாங்களும் அதைத்தான் செய்கிறோம் என்று இந்திரா காந்தி பதிலளித்தார்.

தோல்விக்குப் பிறகு வெற்றி பெறுவதில் நான்தான் பெரிய நிபுணன் என்று இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். உங்களைப் பார்த்தவுடன் அது தவறு என்று புரிந்து கொண்டேன். அமெரிக்க அதிபர் கார்ட்டர், சோவியத் அதிபர் பிரஷ்நேவ், சீன அதிபர் டெங் ஜியோ பிங் போன்ற தலைவர்களை நான் சந்தித்து இருக்கிறேன். ஆனால் உங்களின் மறுபிரவேசம் (இந்தியாவில் அவசரகால பிரகடனத்திற்கு பிறகு 1977-இல் இந்திரா காந்தி தோல்வியடைந்து ஜனதா கட்சி அரசாங்கம் அமைந்தது. அந்த ஆட்சி கவிழ்ந்த உடன் 1980 ஆம் ஆண்டு இந்திரா காந்தி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இந்திய பிரதமராக பதவி ஏற்றார்)  மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. குத்துச்சண்டையில் என்னுடைய மறுபிரவேசத்தை விட உங்கள் துறையில் நீங்கள் சாதித்து இருப்பது முக்கியமானது. நீங்கள்தான் தி கிரேட்டஸ்ட் என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

முகமது அலியின் ரஷ்ய, சீன பயணங்களை போலவே இந்திய பயணமும் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது. இந்தியாவில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை உருவாக்கியது.

 

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...