உலக அரங்கில் சீனா-8
அ.பாக்கியம்"சீனப் பொருளாதாரம் சிறிய குளம் போன்றது அல்ல. அது பெருங்கடல்
போன்றது. கடல் அமைதியான நாட்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் பெரிய காற்றும் புயல்களை
மட்டுமே கடல் சந்திக்கும். எண்ணற்ற காற்றும் பெரும் புயல்களும் சந்திக்கிற அனுபவம்
இருப்பதால் மட்டுமே கடல் இருக்கிறது. கடல் போன்றது தான் சீனாவும்" - ஜி
ஜின்பிங்.
சீனாவின் பொருளாதாரத்தைப் பற்றியும் அதன்
கடந்த காலத்தில் சீனா சந்தித்த நெருக்கடியின் அனுபவங்கலிருந்துதான் சீனா இன்றைக்கும் வளர்ந்து கொண்டிருக்கிறது. சீனா வேகமான
வளர்ச்சிகளையும் நெருக்கடிகளையும் சந்திக்கவில்லை என்றால் சீனாவாக இருக்க முடியாது
என்பதை அழுத்தமாக சீன ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
உலகின் பொருளாதாரம் குறித்து அமெரிக்கா
என்றைக்குமே உண்மைகளை ஏற்றுக் கொள்வது இல்லை.
காரணம் ஒரு முதலாளித்துவ நாட்டைவிட சோசலிச நாட்டின் பொருளாதார மேன்மையை ஏற்றுக்
கொள்வதாக அது அமைந்து விடும் என்பதால் அமெரிக்கா உண்மையை புறக்கணிக்கும். அமெரிக்க
அரசியல் என்பது உலக யதார்த்தத்தில் ஏற்பட்டிருக்க கூடிய மாற்றங்களை உள்வாங்கிக்
கொள்ளாமல் மலைக்கும் மடுவுக்கும்மான இடைவெளியுடன் செயல்படுகிறது. இதற்கு சீனா பற்றிய
அதன் பொய் பிரச்சாரங்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். சீனாவின்
வளர்ச்சி பற்றிய உண்மைகளை மறைத்து பட்டவர்த்தமான பொய் பிரச்சாரங்களை தீவிரமாக
மேற்கொண்டு வருகிறது. சீனாவின் பொருளாதாரம் வேகமாக சரிந்து வருகிறது என்ற பொய்
பிம்பத்தை அமெரிக்கா சுனாமி வேகத்தில் கட்டமைக்கிறது.
பெரியபொய் என்ற வார்த்தையை பொய்களின்
பிதாமகன் பாசிச கோயபல்ஸ் பயன்படுத்தவில்லை. அதற்கு மாறாக ஒரு பொய்யை அரசு
இயந்திரங்கள் மூலமாக,
ஊடகங்கள் வாயிலாக திரும்பத் திரும்பக் கூறினால் அதை ஏராளமான மக்கள் உண்மை என்று
நம்பி விடுவார்கள். அது மட்டுமல்ல மீண்டும் மீண்டும் ஒரு பொய்யை பிரச்சாரம்
செய்பவரே அந்தப் பொய்யை உண்மை என்று நம்பி விடுவார். கோயபல்சை
மிஞ்சிய விதமாக அமெரிக்கா,
பெரிய பொய்யை உலகம் முழுவதும் பரப்புகிறது. சீன பொருளாதார நிலைமைகளை காண்பதற்கு
முன்பாக அமெரிக்காவின் பொய் பிரச்சாரத்தின் சில கருத்துக்களை பார்க்கலாம்.
சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
பேசுகிற பொழுது, சீனாவின்
வளர்ச்சி இரண்டு சதவீதம் என்று கூறினார். அடுத்ததாக, சீனாவில் உழைக்கும் வயதினரைவிட ஓய்வு பெறும் வயதினரின்
எண்ணிக்கை அதிகமா உள்ளது என்று தெரிவித்தார். இவை இரண்டும்
உண்மைக்கு மாறானது. மேலும் சீனப் பொருளாதாரம் ஒரு டிக்கிங் டைம் பாம் (Ticiking Time Bomb) அதாவது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வெடிகுண்டு என்று
பயமுறுத்தினார். மேற்கத்திய ஊடகங்களும், அமெரிக்க
அதிகாரிகளும், பொருளாதார அறிஞர்களும், சீன சரிவு கோட்பாடு என்ற ஒரு தலைப்பை உருவாக்கி ஊதி
பெரிதாக்குகின்றனர். சீனா ஏன் இவ்வளவு நெருக்கடியில் இருக்கிறது, நம்பிக்கையின்
நெருக்கடி சீனாவின் பொருளாதாரத்தை வாட்டி வதைக்கிறது, சரிவின்
விளிம்பில் சீனா, சீனாவின் சரிவை அமெரிக்கா எவ்வாறு
எதிர்கொள்வது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் ஆரம்பித்து மேற்கத்திய
ஊடகங்கள் அனைத்தும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதி வருகிறார்கள். அந்த செய்திகளை இந்தியாவில் இருக்கக்கூடிய ஊடகங்களும் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறது. பிரபலமான முதலாளித்துவ பொருளாதாரவாதி பால் க்குருக்மேன்
ஜப்பானைமாதிரி சீனா தேக்க நிலையை அடையாது அழிந்துவிடும் என்று அவரது ஆசையை வெளியிட்டார்.இன்றைய உலக பொருளாதாரத்தின் உண்மையான போக்குகள் என்ன? அமெரிக்கா ஏன் ஒரு
திட்டமிட்ட பொய் பிரச்சாரத்தை அதி வேகமாக தொடங்கியிருக்கிறது?
சீன வளர்ச்சி ஒரு வரலாற்று சாதனை.
கடந்த 30 ஆண்டுகளில் சீனாவின் மனதைக் கவரும்
வளர்ச்சி உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகில் உள்ள அனைத்து
மெகா தொழிற்சாலைகளும் சீனாவில் தங்களது ஆலைகளை நிறுவி உள்ளனர். 1990 ஆம் ஆண்டு உலக
ஒட்டுமொத்த உற்பத்தியில் சீனாவின் பங்கு 3% ஆகும். 2018 ஆம் ஆண்டு இது 25% உயர்ந்தது.உலகின்
மிகப்பெரிய 500 நிறுவனங்களில்
129 நிறுவனங்கள்
சீனாவை தலைமையிடமாகக் கொண்டது.
2017ஆம் ஆண்டு இது 109
ஆக இருந்தது. 1978 ஆம் ஆண்டுக்கு முன்பு சீனா ஆண்டுக்கு 6% வளர்ச்சியை
ஏற்படுத்தியது. 1978ஆம் ஆண்டுக்குப் பிறகு வருடத்திற்கு 9% அதிகமான சராசரியான
வளர்ச்சியை ஏற்படுத்தியது. சில ஆண்டுகளில் வளர்ச்சியின் உச்சமாக 13% வரை வளர்ச்சியை
கண்டது. கடந்த 15 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் 4 மடங்காக
அதிகரித்துள்ளது . கடந்த 20 ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம்
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை விட இரண்டரை மடங்கு வேகமாகவும் தனிநபர் ஜிடிபி
வளர்ச்சி மூன்று மடங்கு வேகமாகவும் வளர்ந்தது என்பதை மறுக்க முடியாது. சீனா இன்று
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம்.கடந்த 30 ஆண்டுகளில் உலகில் அமெரிக்கா
உட்பட வேறு எந்த நாடும் வளர்ச்சி அடையாத வரலாற்றுச் சாதனையை
நிகழ்த்தி உள்ளது.
2019 பெரும்
தொற்று காலத்தில் சீனா பொது முடக்கத்தை முழுமையாகவும், மற்ற நாடுகளை விட நீண்டநாட்கள் அமல்படுத்தியது.
இதனால் அங்கு மரணங்கள் குறைவாக ஏற்பட்டது. மற்ற நாடுகளை விட பொருளாதார முடக்கம்
அதிக நாட்கள் இருந்தது சீனாவில் தான். என்றாலும் தொற்றுக்குப் பிறகு பொருளாதார
மீட்சியை முயற்சியை மற்ற நாடுகளை விட சீனா துரிதமாக ஏற்படுத்தியது. 2018 ஆம் ஆண்டு சீனாவில்
உற்பத்தி 91.9 ட்ரில்லியன் யுவான்.(12.6 டிரில்லியன் டாலர்). 2022 ஆம் ஆண்டு சீனாவில் உற்பத்தி 121 ட்ரில்லியன் யுவான்
ஆகும். 2023 ஆம் ஆண்டு உலக பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்கு 34.9% ஆக இருக்கும்.சீனா பொருளாதார சரிவின்
உச்சியில் உள்ளது என்று எந்த நியாயமான சிந்தனையாரும் கூற முடியாது. பகுத்தறிவு
சிந்தனையற்ற முதலாளித்து சுரண்டல் முறைகளை ஆதரிக்க கூடிய பொருளாதார அறிஞர்கள் மட்டும்தான் இவ்வாறு கூற முடியும்.
பெரிய பொய்யின் பிரதிநிதி ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுக்கு வருவோம்.
அவர் சீனா இந்த ஆண்டு இரண்டு சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று பொய்யான தகவலையே
தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு முதல் பாதியில் சீனா 5.5 வளர்ச்சி அடைந்துள்ளது என்ற உண்மையை மறைத்துள்ளார். சர்வதேச
நாணய நிதியத்தின் அறிக்கையில் இந்த
ஆண்டு சீனா 5% வளர்ச்சி
அடையும் என்று மதிப்பீடு செய்துள்ளது. சீன அரசு 5.5 சதவீதம் வளர்ச்சி
அடைய வேண்டும் என்று இலக்கை தீர்மானித்து உள்ளது. அமெரிக்காவில்தான் இதுவரை உலகில்
அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மூன்று பெரிய வங்கிகள் திவாலாகி டிக்கிங்
டைம் பாம்
ஆக இருந்ததை அமெரிக்க ஜனாதிபதி
மறந்துவிட்டார்.
தொற்று
நோய் காலங்களிலும் அதற்குப் பிறகும் மற்ற பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்
பொழுது சீனாவின் வளர்ச்சி பிரம்மாண்டமானது. 2023 இரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதாரம்
19.2% வளர்ச்சி அடைந்தது. ஜி 7 நாடுகளை சேர்ந்த, அமெரிக்காவின்
வளர்ச்சி 7.5% கனடாவின் வளர்ச்சி 4.77% இத்தாலியின்
வளர்ச்சியை 1.5 % பிரான்சின் வளர்ச்சி 1.3 % ஜப்பானின் வளர்ச்சி 0.8% ஜெர்மனி வளர்ச்சி 0.5% இங்கிலாந்தின் வளர்ச்சி 0.3 % சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவை விட இரண்டு மடங்கு வேகமாகவும்
கனடாவை விட நான்கு மடங்கும் இத்தாலியை விட 13 மடங்கும் பிரான்சை
விட 15 மடங்கு
ஜப்பானை விட 24 மடங்கு
ஜெர்மனியைவிட 38 மடங்கு
இங்கிலாந்தைவிட 64 மடங்கு வேகமாக
இக்காலத்தில் வளர்ந்துள்ளது.
இக்காலத்தில் சீனாவில் மக்கள் தொகை
வளர்ச்சியால்தான் மொத்த பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது என்ற ஒரு கருத்தையும் முன் வைக்கிறார்கள். இது தவறானது என்பதை
சீனாவின் பொருளாதார வளர்ச்சி வெளிப்படுத்துகிறது. 2019 ஆம் ஆண்டு சீனாவின் சராசரி மக்கள் தொகை
வளர்ச்சி அல்லது அதிகரிப்பு 0.1%
ஆகும். உள்நாட்டில் மக்கள் தொகை
வளர்ச்சியுடன் வெளிநாடுகளில் இருந்து குடியேறுகிறவர்களையும் இணைத்து பார்த்தால்
கனடாவின் மக்கள் தொகை 2019 ஆம்
ஆண்டு 1.2% அதிகரித்து உள்ளது. அமெரிக்காவின் அதிகரிப்பு 0.5% இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிப்பு 1.2% என உள்ளது. எப்படி பார்த்தாலும் சீனாவின் மக்கள் தொகை 0.1% என்ற வகையில் மிக மிக குறைவாகவும் அதே நேரத்தில் மேற்கண்ட
நாடுகளை விட பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்தது.
மக்கள் தொகை மாற்றங்களினால் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி)
வளர்ச்சி அடையவில்லை. சீனா பொருளாதார வளர்ச்சிக்கு அதாவது ஜிடிபி வளர்ச்சிக்கு
குறிப்பிடத்தக்க வகையில் உற்பத்தி திறன்வளர்ச்சியும்,
வாழ்க்கைதர மேம்பாடும்தான் இந்த வளர்ச்சிக்கு காரணமாகும். இந்த செயல் திறனை அளவிடுவதற்கு சீனாவில் தனிநபர் மொத்த
உள்நாட்டு உற்பத்தி 4.4% அதிகரித்து உள்ளது. இதுவே இந்தியாவில் 2.5%, அமெரிக்காவில் 1.3%
என்ற அளவில் தான் உள்ளது. இக்காலத்தில்
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி என்பது சீனாவின் ஜிடிபி வளர்ச்சியில் 56 சதவீதத்தைதான்
எட்டிப் பிடிக்க முடிந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி சீனாவில் வேலைசெய்யும் வயதினரைவிட ஓய்வு பெறும் வயதினர்
எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று மாற்றங்களை கணக்கில் எடுக்காமல் மறைத்து பேசி
உள்ளார்.
சீனாவில் 2021 ஆம் ஆண்டு தரவுகளின்படி சீன மக்கள்
தொகையில் 0-14 வயதுக்கு உட்பட்டவர்கள் 17.5%, 15-64 வயதுக்கு உட்பட்டவர்கள் 68.3%, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 14.2% சதவீதமாக
உள்ளது. சீனாவில் உழைக்கும் திறன் உள்ளவர்கள் 68.3 சதவீதம்
இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சீனா கடந்த காலங்களில் மக்கள் தொகை
கட்டுப்பாட்டை திட்டமிட்ட முறையில் அமுலாக்கியதால் மக்கள் தொகை வளர்ச்சி
குறைந்தது. சீனாவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல்
பெற்றுக் கொள்ளலாம் என்ற சட்டங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்ததிலிருந்து
மக்கள் தொகை வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு 14 வயதிற்கு
உட்பட்டவர்கள் 16.9 சதத்தில் இருந்து 2021 ஆம் ஆண்டில் 17.5% உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் வேலைசெய்யும் வயதினரின் சதவீதம் குறைந்து வருவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 2018-19 ஆம் ஆண்டு குறைந்து வரும் விகிதம் 0.6% இருந்தது. 2020-21ஆம் ஆண்டு 0.3% என்ற அளவிலும், 2022 ஆம் ஆண்டு 0.1% என்று குறைந்து வருகிறது
சீனாவில் 65 வயதுக்கு
மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2019 ஆம்
ஆண்டு 12.6% இருந்தது. 2022 ஆம்
ஆண்டு இந்த எண்ணிக்கை 14.9% என்று உயர்ந்துள்ளது. அதாவது 2.3% உயர்ந்திருக்கிறது. இந்த உயர்வுக்கு சராசரிவாழ்நாள் உயர்வு
என்பது முக்கிய காரணம். சீனாவின் 2022- ல்
சராசரி வாழ்நாள் 78.08.% ஆகும்.2019 ஆம் ஆண்டு முதல் சீனாவின் சராசரி வாழ்நாள்
உயர்வு 0.22% ஏற்பட்டுள்ளது. சீனாவை அமெரிக்காவுடன் ஒப்பிடுவது பொருளாதார
அளவீடுகளில் பொருத்தமற்றதுதான்.
சீனாவை வளரும் நாடுகளுடன் ஒப்பிட வேண்டும்.
ஆனாலும் பல விஷயங்களில் அமெரிக்காவைவிட முன்னேறி இருக்கிறது என்பதை கவனத்தில்
கொள்வதற்காகத்தான் இந்த ஒப்பீடுகள். அமெரிக்காவின் சராசரி வாழ்நாள் 2022ஆம் ஆண்டு தரவுகளின் படி 79.05% ஆகும். 2017-18 அமெரிக்காவின் சராசரி வாழ்நாள் 0.030% குறைந்தது. அதாவது 78.84% லிருந்து
78.81% என குறைந்து 2022-ல் 0.080% சிறிதளவு அதிகரித்துள்ளது.
1990 ஆம்
ஆண்டுகளில் அமெரிக்காவின் சராசரி வாழ்நாள் 75.21% சீனாவின்
சராசரி வாழ்நாள் 68 % இந்தியாவின் சராசரி வாழ்நாள் 58. 65% என்ற அளவில் இருந்தது. சீனா 10%
வளர்ச்சியும்,
அமெரிக்கா 4% வளர்ச்சியும்
பெற்றுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளை சேர்ந்த சீனா வளர்ந்த நாடான அமெரிக்காவின்
சராசரி வாழ்நாளுடன் சமமான அளவிற்கு வளர்ந்துள்ளது என்றால் சீனாவின் வளர்ச்சி, அதன் திறன்வளர்ச்சியிலும், வாழ்க்கைதர மேம்பாட்டிலும் உள்ள மாற்றங்களை வெளிப்படுத்துகிறது.
சரிவுக்கோட்பாட்டின் அரசியல்
அமெரிக்கா ஏன் இந்த பொய் பிரச்சாரங்களை
செய்கிறது. 2024 ஆம்
ஆண்டு நடைபெறக்கூடிய தேர்தலில் அமெரிக்க மக்களை திசை திருப்புவதற்காக ஜோ பைடன் மற்றும் ஆளும் வர்க்கம் இந்த சீன சரிவு என்ற கட்டுக்கதைகளை கொண்டு
வருகிறார்கள். அமெரிக்கா வங்கிகள்
திவால் ஆவது, கடன் மலையாக மாறுவது,கடுமையான டாலர் நெருக்கடி போன்ற பொருளாதார
நெருக்கடியில் இதிலிருந்து தப்பிக்க சீன பூச்சாண்டிதான்
அவர்களுக்கு தேவைப்படுகிறது.
இதேபோன்று, மேற்கத்திய நாடுகள் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்க சார்பு நிலை எடுத்தது
பொருளாதார வளர்ச்சியில் பெரிய வேகம் பெற முடியவில்லை. அவர்களும் சீன பொருளாதார
வளர்ச்சி ஒரு முன்மாதிரியாக அமைந்து விட்டால் தங்கள் நாட்டு மக்களிடம் இருக்கும்
கருத்துக்கள் மாறிவிடும் என்று அஞ்சுகின்றனர்.
இந்தப் பிரச்சாரங்கள் மூலமாக சீனாவிற்கு
செல்லுகின்ற அந்நிய முதலீடுகளை அச்சுறுத்தி தடுப்பதற்கான முயற்சிகளை
மேற்கொள்கிறார்கள்.
சீனாவின் வளர்ச்சி, அமெரிக்காவின் பொருளாதார
மேலாதிக்கத்தையும் ராணுவ மேலாதிக்கத்தையும் தகர்த்து விடும் என்ற அச்சம்
ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, ஆசியன், பிரிக்ஸ், ஷாங்காய் கூட்டுறவு
அமைப்பு போன்ற பல பொருளாதார அமைப்புகள் உருவாகி அமெரிக்காவினுடைய
ஆதிக்கத்திலிருந்து பல
நாடுகள் வெளியேறிக்
கொண்டிருப்பது சீனாவின் வளர்ச்சியால் தான் என்பதை புரிந்து கொண்டு அதற்கு எதிரான
தாக்குதலை துவக்குகிறார்கள்.
2022 ஆம்
ஆண்டு கூடிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடும், சீன நாடாளுமன்றமும் சீனாவின் வளர்ச்சி இலக்கை தெளிவாக தீர்மானித்துள்ளது. 2035 ஆம் ஆண்டு சீனா
நடுத்தர வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்கை அடைய வேண்டும். சீனாவின் தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதுதான்
அந்த இலக்கு. இவற்றை இந்தியாவின்
தேர்தல்கால வாக்குறுதிகள் போல் நிர்ணயிக்கவில்லை.கடந்த கால வருடாந்திர வளர்ச்சியை கணக்கில் எடுத்து இந்த இலக்கை
தீர்மானித்தனர். அதன் அடிப்படையில் 2035 ஆம் ஆண்டு 100 சதவீதம் இலக்கை அடைய முடியும் என்று
சீன மக்களும், உலகமும் நம்புகிறது.
அமெரிக்காவின் கடந்த கால வருடாந்திர வளர்ச்சியை கணக்கில் எடுத்தால்
இரண்டு சதவீதமாக உள்ளது.
இதன்படி 2035 ஆம்
ஆண்டு அமெரிக்காவின் வளர்ச்சி 35% சதவீதமாக மட்டுமே இருக்கும். சீனாவின் இந்த
இலக்கை நிறைவேற்ற அனுமதித்தால் அமெரிக்கா பின்தங்கும்
என்ற காரணத்தினால் இதை தடுப்பதற்கான முயற்சிதான் சீன சரிவு கோட்பாடு பிரச்சாரம்.
உலகிலேயே அதிகமான உள்நாட்டு நுகர்வு உள்ள
நாடு சீனாவாகும். இந்த நுகர்வை மேற்கத்திய முதலாளித்துவ
பொருளாதார முறைக்கு மாற்றினால் சீனாவின் பொருளாதாரம் மந்தமடையும். மேற்கத்திய பொருளாதாரத்தைவிட வேகமாக
வளராது. சீன வளர்ச்சியை மந்தப்படுத்தினால் சீனாவின் வாழ்க்கைதரம் குறையும்.
அதன் இலக்கையும் அடைய விடாமல் தடுக்க முடியும். சீனா
மெதுவாக வளர வேண்டும் என்று அவர்களால் சொல்ல முடியாது.
மேற்கத்திய வணிக முறைகளை திணிக்கவும் முடியாது.
எனவேதான் இந்த சீனசரிவு கட்டுக்கதைகளை கொட்டிக்
குவிக்கிறார்கள்
சீனாவில் பொருளாதார நெருக்கடி இல்லையா?
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மந்தமான உலக பொருளாதார
மீட்சி மற்றும் நிதி நெருக்கடிகள் ஆகியவை ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிடத்தக்க
பொருளாதார சவால்களை ஏற்படுத்துகிறது. இந்தப் பின்னணியில் சீனாவும் சில சவால்களை
எதிர்கொள்வது உண்மை
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின்
மந்தமான உலக பொருளாதார மீட்சி மற்றும் நிதி கொந்தளிப்பு ஆகியவை ஒவ்வொரு
நாட்டிற்கும் குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை ஏற்படுத்துகிறது. இந்தப்
பின்னணியில் சீனாவும் சில சவால்களை எதிர்கொள்வது உண்மைஎந்த ஒரு வேகமான பொருளாதார
வளர்ச்சியும் குறிப்பிட்ட கட்டத்தில் வேகம் குறைவதும் தேக்கம் ஏற்படுவதும் இயல்பானது. இவ்வாறு வரும் நெருக்கடியை சீனா எதிர்கொள்ள வேண்டும் என்பதை
முன்கூட்டியே கணித்திருக்கிறார்கள்.
தொடர்ந்து இரட்டை இலக்கு வளர்ச்சி
சாத்தியமில்லை என்பதை முடிவுசெய்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் வளர்ச்சி தொடர்பான புதிய விவாதங்களை நடைபெற்று
வருகிறது. அந்த விவாதம் (De-growth -இது பற்றி தனியாக எழுதுகிறேன்)பொதுவாக பூமிப்பந்தை பாதுகாப்பதற்கான பசுமை வளர்ச்சியை
அடிப்படையாகக் கொண்டது. இந்தத் துறையிலும் சீன தலைமை கவனம் கொண்டுள்ளது.
2022 ஆம்
ஆண்டு நடைபெற்ற கட்சி மற்றும் நாடாளுமன்ற கூட்டங்களில் மூன்று துறைகளை கணக்கில்
எடுத்து அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்று நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். தேவை
சுருங்குதல், விநியோகத்தில் சீர்குலைவு, பலவீனமான
உணர்வுகள் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பதாகும். சீன பொருளாதார வளர்ச்சியில் உள்நாட்டு நுகர்வு
முக்கிய பங்காற்றி வருகிறது. இவற்றில் ஏற்படக்கூடிய தேக்கத்தை போக்குவதற்கு தேவைகளை அதிகரிப்பதற்கு இரட்டை சுழற்சி நுகர்வு
முறை என்பதை அமலாக்கி வருகிறார்கள்.
சீனா ரியல் எஸ்டேட் பிரச்சினையில்
நெருக்கடிகளை சந்தித்து வருவது உண்மை.
சீனா மட்டுமல்ல உலகின் பலநாடுகள்
சந்திக்றது, அமெரிக்க வங்கிகள் திவால் ஆனதில் ரியல் எஸ்டேட் நெருக்கடி பிரதான அம்சம்.
இன்றும் அவை நீடிக்கிறது. ஆனால் சினாவில் இதுவே வேறுவிதமான முறையில் உள்ளது.இவற்றை
அவர்க்ள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை காணவேண்டும்.மிக வேகமான வளர்ச்சி பெற்று தேவையான அளவிற்கு இருப்பிடங்கள்
அலுவலகங்கள் அமைத்த பிறகு
அந்த வளர்ச்சியில் தொய்வு ஏற்படுகிறது.
சிறுநகரங்களில் இருந்து மக்கள் பெரு நகரங்களில் குடியேறியதால் சிறு மற்றும்
நடுத்தர நகரங்களில் லட்சக்கணக்கான
வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு காலியாக
உள்ளது. எவர் கிராண்ட் உட்பட பல நிறுவனங்கள் திவால் ஆகாமல் இருப்பதற்கு மூன்று
சிகப்பு கோடுகள் என்ற திட்டத்தை அறிவித்து அமலாக்கி வருகிறது. இது பற்றி இதற்கு முந்தைய கட்டுரையில்
விளக்கி இருக்கிறேன்.
சீனாவில் உள்நாட்டு உற்பத்தியில் ரியல்
எஸ்டேட் வணிகம் அல்லது சொத்து சந்தை குறிப்பிட்ட அளவு பங்கினை செலுத்துகிறது. இந்த துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை
தனிப் பகுதியாக பரிசீலிக்க வேண்டும். ஆனாலும் இந்த தலைப்பின் தேவைகளுக்கு ஏற்ப
குறிப்பிட்ட சில விஷயங்களை வாசகர்களுக்காக முன் வைக்கிறேன்.
ரியல் எஸ்டேட் நெருக்கடி சீனாவில்
உள்நாட்டு நுகர்விலும் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது. சீன அரசாங்கம் கடந்த ஜூலை
மாதம் சொத்து கொள்கைகள் தொடர்பான பல தளர்வுகளை அறிவித்தது. சீனாவில் சொத்துக்கள்
வாங்குவது மற்றும் முதலீடு செய்வதற்காக அதிக வணிகம் நடைபெறக்கூடிய மாதம்
செப்டம்பர் அக்டோபர் மாதமாகும். இது பாரம்பரியமாக நடந்து வருகிறது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தை கோல்டன்
செப்டம்பர் என்றும்,
அக்டோபர் மாதத்தை சில்வர் அக்டோபர் என்றும் அழைப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில்
இம்மாதங்களில் வீடுவிற்பனை வீழ்ச்சி அடைந்தது. இந்த ஆண்டு அவற்றை சரி செய்வதற்காக
ஜூலை மாதம் கொள்கை தளர்வுகளை அறிவித்தார்கள். முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுவதாக
பல ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் தெரிவித்துள்ளனர்.
2021 ஆம்
ஆண்டு மூன்று சிகப்பு கோடுகள் என்று விதிகள் உருவாக்கப்பட்டது. வீடுகள்
வாழ்வதற்கே ஊக வணிகத்திற்கு அல்ல என்பதுதான் இந்த கட்டுப்பாடுகளின் அடிப்படை
அம்சம். இதனால் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நெருக்கடிகளை சந்தித்தது. அரசு
அவற்றை ஒழுங்குபடுத்தக்கூடிய பணியை மேற்கொண்டது. தற்போது இந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகளை
ஏற்படுத்தி சந்தையை மேம்படுத்த முடிவெடுத்து உள்ளன.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்கு விலைகள்
நிகர சொத்து மதிப்புக்கு கீழே குறைந்தாலும் அல்லது நிதி இழப்பில் இயங்கினாலும்
அவற்றை மறு நிதி அளிப்பதற்கான விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளனர்.
அடமான பத்திரங்களை வைப்பதற்கான முறைகளை தளர்த்தியது மட்டுமல்ல இரண்டாவது வீடு
வாங்குவதற் கானகட்டண
விகிதத்தை குறைப்பதுடன், விரைவான அனுமதியும் கொடுக்கின்றனர்.
உள்ளூர் அரசாங்கங்கள் கட்டுப்பாடுகள தளர்த்துவதை
துரிதப்படுத்தி உள்ளார்கள். சொத்து வாங்குவதை எளிதாக்கி உள்ளது. பல அரசு வங்கிகள்
ஏற்கனவே உள்ள அடமான பத்திரங்கள் மற்றும வைப்பு தொகைகளுக்கான வட்டி விகிதங்களை
குறைத்துள்ளது. இவை அனைத்தும் வீடு வாங்குபவர்களை அதிகப்படுத்தும். சீன அதிகாரிகள்
சந்தையை நிலைப்படுத்துவதற்காக வர்த்தக பத்திர வரியை பாதியாக
குறைத்துள்ளனர்
மக்கள் தொகை வளர்ச்சியின் குறைவு ஏற்பட்டு
இருப்பது வீட்டு தேவையில் வீழ்ச்சியை குறிக்கிறது. சீர்திருத்தத்தின் ஆரம்ப
ஆண்டுகளில் தனி நபர்களின் சராசரி குடியிருப்பு பரப்பு ஐந்து சதுர மீட்டராக
இருந்தது. தற்போது 40 சதுர
மீட்டராக உயர்ந்து விட்டது. அடிப்படை வீட்டு வசதி பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால்
கண்டிப்பாக ரியல் எஸ்டேட் வளர்ச்சி அதன் உச்சத்தில் இருந்து வீழ்ச்சி அடையும்.
பொதுவாக சொத்து சந்தை என்பது பண மதிப்பை பாதுகாக்கும் என்ற நிலைமையில் மாற்றம்
உருவாகி உள்ளது. அதனால் தான் புதிய நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் சீன அரசாங்கம்
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சீனா சந்தித்துவரக்கூடிய மற்றொரு நெருக்கடி
இளம் வயதினருக்கான வேலை யின்மை. வளர்ந்த சில குறிப்பிட்ட துறைகளில் வேலை
வாய்ப்பைவிட அதிகமான இளைஞர்கள் வேலைக்கு வருவதால் நெருக்கடிகள் உருவாகி உள்ளது. மாற்று வேலைகளுக்கு இளைஞர்களை
அமர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக இதற்கு இளைஞர்கள் மத்தியில்
எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மாற்று வேலைகளை அதாவது பணிகளை ஏற்றுக் கொள்ள
வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். இது போன்ற பல நெருக்கடிகளை சந்தித்து விட்டோம். எனவே இதையும் நாங்கள் எதிர்கொள்ள முடியும்
என்று எதிர் கொண்டு வருகிறார்.
சீனா புயலை எதிர் கொள்ளும் கடல் போன்றது
சர்வதேச நாணய
நிதியத்தின் நிர்வாக துணை
இயக்குனர் கீதா கோபிநாத் அவர்கள் இந்த நெருக்கடிகள் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்
சீனா இதுவரை சந்தித்த
நெருக்கடியை விட தற்போது சந்தித்து வரக்கூடிய ரியல் எஸ்டேட், உள்நாட்டு நுகர்வு சுருங்குதல், இளம் வயதினருக்கான வேலையின்மை போன்றவை
சற்று அதிகமான நெருக்கடிதான். சீனா இது போன்ற நெருக்கடிகளை வெற்றி கொள்வதற்கான
கடந்தகால அனுபவங்களை பெற்றிருக்கிறது. பணவியல் துறைகளிலும், நிதி கொள்கையிலும் நிறைய மாற்றங்களை செய்ய
முடியும்.
அதற்கான பரிணாமம் இருக்கிறது, செய்து வருகிறார்கள். எது எப்படி இருந்தாலும் இவை ஒரே நாளில்
செய்து விட முடியாது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்து இருக்கிறார். இதைவிட
மேலாக, எது எவ்வாறு இருந்தாலும் சீனா
கூர்மையான நெருக்கடிகளை சந்திக்கவும்,ஆழமான
வீழ்ச்சி அடைவதற்குமான வாய்ப்பே இல்லை என்று ஐ.எம்.எப் உறுதியாக மதிப்பீடு செய்திருப்பத தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீதா கோபிநாத் அவர்களை பேட்டி கண்ட பத்திரிக்கையாளர் 13.09.23 பிசினஸ் டுடேவில் கட்டுரை எழுதியுள்ளார். இதில் தலைப்பை மட்டும் கீதா
கோபிநாத்தின் கருத்தாக வைத்தவிட்டு மற்றவை
அனைத்தும் சீன எதிர்ப்பாளர்கள் கூறிய கருத்துகளை அதிமாக முன்வைத்து எழுதியுள் ளார். சீனா வீழ்ச்சி அடைந்தே தீரும் என்ற
முறையில் கட்டுரையில் முடித்துள்ளார்.
உலகம் முழுவதும் பல நாடுகளில் நடைபெற்ற அல்லது நடைபெற்று
வரக்கூடிய பொருளாதார வளர்ச்சியின் ஏற்றத்தாழ்வுகள் சீனாவிலும் நடைபெறுகிறது.
அவற்றை பூதாகரமாக
பிரச்சாரம் செய்வதற்கு காரணம் அமெரிக்காவின் புவி அரசியல் ஆதிக்கம் பலவீனம்
அடைவதுதான்.
உலகம் முழுவதும் சீனாவின் வளர்ச்சி பற்றிய விவாதங்கள் நடைபெற்று
வருகிறது. சர்வதேச நாணய நிதியகம் சீனா இவ்வளவு விரைவாக வளர்ச்சியடைந்தது எப்படி
என்பதை ஆய்வுகளின் அடிப்படையிலேயே எழுதியிருக்கிறார்கள். அமெரிக்காவின் ரகசிய
உளவுத்துறை சி ஐ ஏ சீனா விஷயத்தில் நாம் ஏமாந்து விட்டோம். அவர்கள் இவ்வாறு
வளர்ச்சி அடைந்து வருவதை கவனிக்காமல் இருந்தது பெரும் ஆபத்து என்ற அடிப்படையில்
ரகசிய அறிக்கைகளையும் சுற்றுக்கு விட்டுள்ளனர்.
அமெரிக்காவின் ஒற்றை உலக கொள்கை
நெருக்கடிக்கு உருவாவதும் சீனா,
ரஷ்யா.
மற்றும் வளரும் நாடுகளில் பன்முக உலக கொள்கை மக்களிடம் மேலோங்கி வருவதை தடுக்கும் நோக்கோடு சீன சரிவு கோட்பாடு அமெரிக்க மேற்கத்திய
ஊடகங்களால் கட்டமைக்கப்படுகிறது என்பதை கண்டு கொள்ள வேண்டும்.
அ.பாக்கியம்