Pages

புதன், நவம்பர் 24, 2010

உலகளாவிய உரிமைக்குரல்-3

                                                     அ.பாக்கியம்                                                                                                                                                           
அயர்லாந்து-பாலஸ்தீனம்
பூர்வீகம்முதல்புத்தகம்எழுதப்படும்காலம்வரைமுக்கியநிகழ்வுகள்,பார்வைகள்,கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. அயர்லாந்து இங்கிலாந்தினால் ஆக்கிரமிக்கப்பட்டது. பாலஸ்தீனம் இங்கிலாந்தினால் ஏமாற்றப்பட்டது.
                   

                    நான் உலகத்தால் ஏமாற்றப்பட்டு வருகிறேன்,              
                    நான் கடவுளால் ஏமாற்றப்பட்டு வருகிறேன்,                                  
                    நான் வரலாற்றால் ஏமாற்றப்பட்டு வருகிறேன், 

    என்ற கவிதை பாலஸ்தீனம் பற்றி இன்றைய காட்சிகளுக்கும் சாட்சியாக விளங்குகின்றது. அயர்லாந்து என்ற நாட்டை இங்கிலாந்து தன்நாட்டுடன் இணைத்துக் கொண்டது.இன்றும் ஒருபகுதியை இணைத்தே வைத்துள்ளது. ஆனால் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற புதிய நாட்டை  உருவாக்கியது. இவை எதிரும் புதிருமாக தோன்றலாம் ஏகாதிபத்தியத்தின் கொள்கை இதுதான். இயற்கையை, உழப்பை, ரத்தத்தை, சரீரத்தை சுரண்டுவது என தனது நலனுக்கு எது உகந்தோ அதுதான் சட்டம்.அதுதான் நீதி. அயர்லாந்து இங்கிலாந்தின் முதல் காலனி நாடு என்று எங்கல்ஸ் கூறினார்.இங்கிலாந்தின் நிரபிரபுத்துவம்அயர்லாந்தை பொருளாதார ரீதியாக சுரண்டியது. தொழில்வளர்ச்சிக்கும், முதலாளித்துவ மூலதன திரட்சிக்கும்  அது உதவியதால் முதலாளித்துவம் பயன்படுத்தியது. அயர்லாந்து பற்றி காரல்மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகிய இருவரின் கருத்துக்கள் மிகமுக்கியமானது ஆகும். எந்த ஒருநாட்டின் தொழிலாளி வர்க்கமும் தன் நாட்டின் ஆளும் வர்க்கம் பிற நாடுகளை அடிமைப்படுத்துவதற்கு ஆதரவளிக்க கூடாது என்று கூறினர். அயர்லாந்தை அடிமைப்படுத்துவதன் மூலமாக இங்கிலாந்தின் பிற்போக்காளர்கள்  பலமடைந்ததுடன் அதைப்பேணி காத்தும் வருகின்றனர்  என்று கூறினார். ஏங்கல்சின் மனைவி மேரிபர்ன்ஸ் அயர்லாந்துக் காரர்.இவர் இப்பிரச்சனையில் மிகுந்த ஆவர்வம் செலுத்தியதாலும்,இவர் இறந்த பிறகு ஏங்கல்ஸ் திருமணம் செய்துகொண்ட இவரது தங்கை லிஸ்ஸியும் இப்பிரச்சனையில் ஆர்வம் செலுத்தியதால்  ஏங்கல்ஸுக்கு இப்பிரச்சனையை புரிந்துகொள்வது எளிதாக  இருந்தது.
                    ஜரிஷ் என்ற தேசிய இனத்தை அடிமையாக்கி சமூகஒடுக்கு முறைக்கு உள்ளாக்கியது இங்கிலாந்து. அதே நேரத்தில் உருவாகிவந்த அரபுதேசிய ஒற்றுமையை நசுக்கிடயூதஇனத்தை மூர்க்கத்தனமாக பயன்படுத்தியது.
      நாகரீகம் தெரியாத அயர்லாந்து மக்களுக்கு நாகரீகத்தை கற்றுத்தருகிறோம் என்று கூறினர்.இதையே இந்தியாவிற்கும் கூறியதை நாம் மறக்க முடியாது. இதையேதான் பாலஸ்தீனத் திற்கும் கூறினர்.ஏகாதிபத்திய சூறையாடலுக்கு அவர்கள் சூட்டிக்கொண்ட பெயர் நாகரீகம்.
    ஏகாதிபத்தியவாதிக  பிரித்தாளும் சூழ்ச்சியின் பிதாமகன்கள்.பாலஸ்தீனத்தில்  யூதத்தையும் இஸ்லாத்தையும் மோதவிட்டனர். லெபனானில் கிறிஸ்த்துவத்தையும் இஸ்லாத்தையும், இந்தியாவில் இந்து முஸ்லீமையும் மோத விட்டனர். அயர்லாந்திலோ கிறிஸ்துவமதப்பிரிவுகளி உள்ளகத்தோலிக்கர்களையும் பிராட்டஸ்டன்ட்களையும் மோத விட்டனர்.
                   அயர்லாந்தில் பட்டினியாலும், படுகொலைகளாலும் இருபதுசதம் மக்களை வேட்டையாடினர் .பாலஸ்தீனத்திலோ முதல் பத்தாண்டுகளில் (1921-31)மட்டும் ஜம்பதாயிரம் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தனர். இன்றுவரை இது பலலட்சங்களை தாண்டி மக்கள் தொகை  சரிபாதியாக குறைந்து விட்டது.
    இந்த இருநாட்டின் விடுதலைப்போராட்டங்களும் பன்முகத்தன்மை கொணடதாக இருக்கிறது. இன்றுவரை இந்த போராட்டங்கள் உயிர்த்துடிப்போடும், உத்வேகம் குன்றாமலும் நடைபெற்று வருகின்றது.
      இந்த இருநாட்டின் விடுதலைப்போராட்டமும் நான்கு முக்கிய வடிவங்களில் நடைபெற்று வருகின்றது.வெகுமக்கள் பங்கேற்கும் இயக்கமாகவும், ஆயுதம் தாங்கிய எழுச்சியாகவும், உண்ணாவிரதம் இருந்து உயிர்நீக்கும் போராட்டமாகவும், சிலநேரங்களில் தனிநபர் பயங்கரவாத மாகவும் நடைபெற்று வருகின்றது.
   இப்போராட்டங்கள் பலநாடுகளின் விடுதலைப்போராட்டங்களுக்கு உந்துசக்தியாகவும் இருந்துள்ளது. தாகூர், பாரதியார், அரவிந்தகோஷ், சரோஜினிநாயுடு ஆகியோர் இப்போராட்டங் களை தங்களது கவிதைகளில் வடித்தனர். வியட்நாம் புரட்சித்தலைவர் ஹோ-சி-மின் அயர்லாந்து போராட்டத்தால் ஆகர்ஷ்சிக்கப்பட்டவர்களில் ஒருவர். காந்தி, நேரு இருவரும் பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை வலுவாக ஆதரித்தனர்.குறிப்பாக காந்தி அம்மக்களின் போராட்ட முறைகள் தனது கொள்கைக்கு மாறானதாக இருந்தாலும் அதை ஏன் ஆதரிக்கிறார்  என்ற விளக்கம் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது மிக முக்கயமான பகுதியாகும்.
      பாலஸ்தீன மக்களின் போராட்டத்தினூடே இந்திய அரசின் கொள்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதையும் அறியமுடிகிறது. 1947-ல் அமைக்கப்பபட்ட சிறப்புக்குழுவால் பாலஸ் தீனம் இருநாடுகளாக பிரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை இந்தியா கடுமையாக எதிர்த்தது. 1949-ல் இஸ்ரேல் நாடு ஐக்கிய நாடுகள் சபையில் இணைவதை இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது.
   ஏகாதிபத்தியம் தனது குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. மேலும் கோரமுகம் எடுத்துள்ளது. இஸ்ரேல் இன்றும் மூர்க்கத்தனமாக தனது தாக்குதலை நடத்துகின்றது.இந்தியா இன்று போராடும் மக்களை கைவிட்டு இஸ்ரேல் நாட்ட் தனது அச்சு நாடாக்கி ஏகாதிபத்தியத்திடம் மண்டியிட்டுவிட்டது.
   ஆனால் பாலஸ்தீன மக்களோ குண்டுமழைகளுக்கும்.  வெடிச்சத்தங்களுக்கும் துப்பாக்கி ரவைகளுக்கும்நடுவிலிருந்தும், வீடுகளின் இடிபாடுகளுக்கு அடியிலிருந்தும் மீண்டும் மீண்டும் ஆவேசத்துடன் எழுந்து வருகின்றனர். அயர்லாந்து மக்கள் இங்கிலாந்து வசமுள்ள பகுதியை  விடுவிக்க போராடி வருகின்றனர்.
     இவை இரணடும் புத்தகம் அல்ல. நிகழ்காலத்தின் போராட்ட களம். இக்களத்தில்  இறங்க வேண்டும், சினமும், சீற்றமும்  கொள்ள வேண்டும். மாற்றத்திற்கான மார்க்கம் புரிபடும.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...