Pages

திங்கள், ஆகஸ்ட் 08, 2022

எமக்கு தொழில் போதை விற்பனை அதற்கு எதிராக ஸ்பான்சரா? நோ... நெவர்...


 


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) ஒரு அரசியல் சமூக இயக்கம் என்ற அடிப்படையில் பல்வேறு தளங்களில் களமாடி வருகிறது. இளைஞர்களின் வாழ்வை சீர்குலைப்பது, எதிர்கால சமூகத்திற்கு பேரழிவு என்பதை உணர்ந்து, சீர்குலைவு சக்திகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிற இயக்கமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளது.


இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பழக்கத்திற்கு எதிராகவும், உயிர் கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு எதிராகவும், விழிப்புணர்வு இயக்கம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த இயக்கம் சென்னையில் செயல்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் நடைபெற்றது.


1994 ஆம் ஆண்டு வட,தென் சென்னை மாவட்ட குழுக்கள் சார்பில் பரந்த அளவில் இயக்கம் திட்டமிடப்பட்டது. எய்ட்ஸ் - போதை பழக்கத்திற்கு எதிராக இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தமிழ்நாடு மருந்து விற்பனையாளர் பிரதிநிதிகள் சங்கம், ஆகிய அமைப்புகளை இணைத்து எய்ட்ஸ் மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிராக (AIDS and drug addiction comat wave) என்ற பெயரில் ஒரு குழு உருவாக்கப்பட்டது.


இந்த தலைப்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னதாக எய்ட்ஸ் மற்றும் போதைக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடிய வகையிலும், இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வகையிலும், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. சென்னை நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சுவரெழுத்துக்களும், எழுதப்பட்டு விரிவான அளவில் பிரச்சாரம் செய்யப் பட்டது.


நிகழ்ச்சியை நடத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் விளம்பரம் சேகரித்து (ஸ்பான்சர்), பேனர்கள் வைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் வந்த கோகோ கோலா நிறுவனத்தின் தலைமை இடத்தை அணுகி சென்னை மாவட்ட நிர்வாகிகள் விளம்பரம் (ஸ்பான்சர்) கேட்டனர்.


அதற்கு கோகோ கோலா நிறுவனம், ''நாங்கள் மக்களை போதைக்கு அடிமையாக்குகிறோம். அதுதான் எங்கள் தொழில். எங்கள் தொழிலுக்கு எதிராக நாங்கள் ஸ்பான்சர் செய்ய மாட்டோம்'' என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.. கோகோ கோலா என்ற குளிர்பானத்திற்கு இளைஞர்களை அடிமை ஆக்குவது அவர்களின் வியாபாரமாக இருந்தது. லாபவெறி அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. எனவே தான் இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் போதை பொருளை எதிர்ப்பதற்கு கூட அவர்கள் தயாராக இல்லை. பேரழிவைவிட லாபம்தான் முக்கியம் என்பது முதலாளித்துவம்.


1994-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காமராஜர் நினைவரங்கத்தில் பிரம்மாண்டமான கருத்தரங்கம் நடைபெற்றது. வாலிபர் சங்கத் தோழர்கள் கிளை மூலமாக (அன்று முகநூல் வலைதள வசதிகள் இல்லை) செய்த பிரச்சாரத்தின் விளைவாக 2200க்கு மேற்பட்ட இளைஞர்கள் காமராஜர் அரங்கத்தில் குவிந்தனர். அரங்கமே நிறைந்து வழிந்தது.


கருத்தரங்கத்தை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.மிஸ்ரா அவர்கள் துவக்கி வைத்தார்கள். பத்திரிக்கையாளர் என்.ராம் அவர்களும், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திரு.பொன்னுசாமி அவர்களும் மற்றும் மருத்துவர்களும் துறைசார்ந்த நிபுணர்களும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.


மாநிலச் செயலாளர் தோழர் டி.ரவீந்திரன் முன்னாள் செயலாளர் சு.பொ. அகத்தியலிங்கம். மாவட்ட நிர்வாகிகள் மாதவ், டி.கே.சண்முகம், க.பீம்ராவ் சி.திருவேட்டை. ஆர்.முரளி. ஆர்.சுரேஷ், பா.ரவி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநிலத் தலைவராக இருந்த நான் (பாக்கியம்) நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினேன்.

 

ரத்ததான கழகத்தின் தலைவராக இருந்த தோழர் ராஜப்பா அவர்கள் இந்த கருத்தரங்கை ஒருங்கிணைப்பதிலும், நீதிபதி உட்பட பலரையும் பங்கேற்க செய்வதிலும் முக்கிய பங்காற்றினார். கருத்தரங்கத்தில் அபாயம் அகற்று என்ற விழிப்புணர்வு மலர் வெளியிடப்பட்டது


அரங்கம் நிறைந்த கூட்டமாக இருந்தாலும், மருத்துவர்களும் நிபுணர்களும் பார்வையாளர்களிடமிருந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரங்கத்திலேயே விளக்கம் அளித்தார்கள். வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் சங்கத்திற்கு அப்பாற்பட்ட இளைஞர்கள் பரவலாக இந்த இயக்கத்தில் கலந்து கொண்டனர்.


கருத்தரங்கம் நடைபெற்ற அன்று மாலை காமராஜர் அரங்கத்தில் இருந்து காந்தி சிலைவரை விழிப்புணர்வு ஓட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டிருந்தது. காவல்துறை முதலில் அனுமதி மறுக்கவில்லை. பெரும் கூட்டத்தை பார்த்தவுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆகவே விடுமுறை நாட்களில் அதை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள். தடை விதித்தார்கள்.


வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் ஒரு நல்ல நோக்கத்திற்காக இளைஞர்களை திரட்டி நடத்தக்கூடிய அந்த ஓட்டம் காவல்துறையுடன் மோதலாகவும், பொதுமக்கள் பாதிக்கக்கூடிய முறையிலும் விடக்கூடாது என்பதற்கான ஆலோசனையாக அமைந்தது. அதன் அடிப்படையில் 26.2.1995 அன்று விழிப்புணர்வு ஓட்டத்தை என்.ராம் அவர்கள் துவக்கி வைக்க 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.


போதை பழக்கத்திற்கு எதிரான இயக்கத்திற்காக மாணவர் சங்கத்தின் முன்முயற்சியால் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. 


போதை பழக்கத்திற்கு எதிரான இந்த இயக்கம் அகில இந்திய அளவில் ஒரு முன்னுதாரணமான இயக்கம் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய குழு தமிழ்நாடு மாநில குழுவையும், நிகழ்ச்சி நடத்திய எய்ட்ஸ் மற்றும் போதை எதிர்ப்பலை குழுவையும் பாராட்டியது.


கோகோ கோலா நிறுவனம் விளம்பரம் தர மறுத்தார்கள் என்பது ஒரு செய்தி என்றால், மற்றொரு செய்தி சென்னையில் வாலிபர் சங்கம் வலிமையாக இருந்த ஒரு பகுதியில், இந்த இயக்கத்தை பற்றிய பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. காரணம், சாராயம் காய்ச்சுவது அங்கு குடிசைத் தொழிலாகவே இருந்தது.  சென்னை முழுவதும் அங்கிருந்துதான் சப்ளை செய்யப்பட்டது என்று கூட சொல்லப்பட்டது. அந்தப் பகுதியில், மது, உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்றும், அப்பகுதி இளைஞர்களுக்கு மாற்று வேலை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை இணைத்து  போதை எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது.


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடக்க காலம் தொட்டே, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்திற்கு எதிராகவும் போதைப் பழக்கத்திற்கு எதிராகவும் கிளை முதல் மாநில தலைமை வரை பிரச்சாரங்களையும் இயக்கங்களையும் நடத்திக் கொண்டிருந்தது.


1989-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஓட்டம் சென்னையில் மெரினாவில் காமராஜர் சாலையில் நடைபெற்றது.1300 இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.


1990-ம் ஆண்டு அக்டோபர் 2 அன்று மதுரையில் மது ஒழிப்பு பிரச்சார ஓட்டம் நடைபெற்றது. இந்த ஓட்டத்தில் 80 இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு முன்பாக மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இவையெல்லாம் மதுரை மக்கள் மத்தியில் வாலிபர் சங்கத்திற்கு பெரும் மதிப்பை உயர்த்தியது.


திருநெல்வேலி மாவட்டத்தில் எய்ட்ஸ் மற்றும் போதை எதிர்ப்பை கருத்தரங்கம் 22.4.1995 அன்று நடைபெற்றது. வாலிபர் சங்கத்திலிருந்து 300 இளைஞர்களும் பொதுவான இளைஞர்கள் 700 பேர் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு பெற்றனர். இந்த கருத்தரங்கத்தில் மாநிலத் தலைவர் என்ற முறையில் நான் கலந்து கொண்டேன். நெல்லை மாவட்டத்திலிருந்து மருத்துவர்களும் நிபுணர்களும் கலந்து கொண்டனர். தோழர்கள் கருமலையான், சேவியர் கண்ணன், சிவசாமி போன்றவர்கள் நிர்வாகிகளாக இருந்து நிகழ்வை நடத்தினர். கருத்தரங்கத்தில் விழிப்புணர்வு மலர் வெளியிடப்பட்டது.கருத்தரங்கத்தின் நிறைவாக விழிப்புணர்வு ஓட்டம் நடந்தது இதில் 400க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டவர்கள்.


சேலம் மாவட்டத்தில் எய்ட்ஸ் மற்றும் போதை பழக்கத்திற்கு எதிரான கருத்தரங்கம் 27.5.95 அன்று நடைபெற்றது. மாநிலச் செயலாளர் டி.ரவீந்திரன் கருத்தரங்கத்தை துவக்கி வைத்தார். மாநில தலைவராகிய நான்(பாக்கியம்) கருத்தரங்கத்தை நிறைவு செய்தேன். மாவட்ட நிர்வாகிகள் பி.தங்கவேலு ஆர்.குழந்தைவேலு மேவை.சண்முகராஜா போன்ற தோழர்கள் நிர்வாகிகள் செயல்பட்டு கருத்தரங்கத்தை நடத்தினார்கள். இந்த கருத்தரங்கத்தில் 700க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு பெற்றனர். மலர் வெளியிடப்பட்டது மாலையில் நடைபெற்ற விழிப்புணர்வு ஓட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு பெற்றது சிறப்பாக அமைந்தது.


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கருத்தரங்கம் மட்டுமல்ல களத்திலும் கள்ளச்சாராயத்தை எதிர்த்து, போதைப் பழக்கத்தை எதிர்த்து சட்ட ரீதியான முறையில் மக்களை திரட்டி போராடி இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


வாலிபர் சங்கத்தில் இணைந்த காலத்தில் நான் வாழ்ந்த வியாசர்பாடி சாஸ்திரி நகரில் சுற்றுவட்டாரத்தில் கள்ளச்சாராயம் மிகப்பெரும் பிரச்சினையாக இருந்தது. எண்ணற்ற இளைஞர்கள் சீரழிந்தது மட்டுமல்ல, சமுகவிரோதிகளால் மக்கள் பாதிக்கப்பட்டனர். வாலிபர் சங்கத்தை ஆரம்பித்த காலத்திலேயே, சிஐடியு தலைவராக இருந்த லூர்துசாமி, மற்றும் ராமு போன்றவர்கள் ஊர்தலைவர்களாக இருந்ததால் வாலிபர்களை திரட்டி கள்ளச்சாராயத்தை கைப்பற்றி, தெருக்களில் போட்டு எரித்தார்கள். ஆளும் கட்சிஆதரவுடன் காவல்துறையின் ஒத்துழைப்புடன் நடந்த கள்ளச்சாராயத்தை கைப்பற்றி சாலையில் போட்டு எரித்த சம்பவம் மக்களிடம் வாலிபர் சங்கத்தின் மதிப்பை மேலும் உயர்த்தியது. எங்களை போன்ற இளைஞர்களை களத்தில் இறக்கியது. 


சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் பெரிய மேடு என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் தோழர்கள்,கோதண்டபாணி, கொண்டையா, கண்ணையா போன்ற தோழர்கள் வாலிபர் சங்கத்தை ஆரம்பித்தார்கள். இங்கு உருவான வாலிபர் சங்கத் தலைவர்கள் மனோகரன், விஜயகுமார், ராமமூர்த்தி, ராஜாமணி மற்றும் மாதர் சங்கத்தைச் சேர்ந்த சரளா உட்பட பலர் உள்ளூர் பிரச்சனைகளில் இயக்கம் நடத்தினர்.


பெரியமேடு பகுதி அன்றைய தினம் கஞ்சா மற்றும் பிரவுன் சுகர் போன்ற போதைப்பொருள் விற்பனையில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது. இப்பகுதியில் இருந்த பல இளைஞர்கள் பிரவுன் சுகர் என்ற போதைப் பொருளுக்கு அடிமையானார்கள். அந்தப் பவுடரை நீரில் சூடேற்றி ஊசியின் மூலமாக செலுத்திக் கொள்வதால் எய்ட்ஸ் நோய் பரவுவதும் அதிகமாக இருந்தது. அந்த ஊரைச் சேர்ந்த எட்டுக்கும் அதிகமான இளைஞர்கள், போதைப் பொருளுக்கு அடிமையாகி ஒரு மாத காலத்தில் இறந்தார்கள். இதுபற்றி அபபோது இளைஞர் முழக்கம் இதழில், நான் ஒரு சிறிய கட்டுரை எழுதினேன். கல்லூரி மாணவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் சிலரும் அங்கு வந்து போதைப் பொருள் வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர் என்றும் கூறுவார்கள். 


காவல்துறையின் உதவியும் ஆட்சியாளர்களின் ஆசீர்வாதமும் போதைப் பொருள் விற்கும் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக இருந்தது. இதற்கு எதிராக வாலிபர் சங்கம் மக்களை திரட்டி போராட்டம் நடத்தியது. அதிகாரிகளிடம் புகார் அளித்தது. அதிகாரிகளும், உள்ளூர் காவல்துறையினரும் சமூக விரோதிகளை வாலிபர் சங்கத்திற்கு எதிராக திருப்பி விட்டனர். எனினும் மக்கள் வாலிபர் சங்கம், மாதர் சங்கத்திறகு ஆதரவாக இருந்தனர். 

போதை ஆசாமிகளுக்கு ஆதரவாக வாலிபர் சங்க தோழர்களை பொய்வழக்கு போட்டு கைது செய்து லாக்கப்பில் வைத்து விடுவார்கள்.  


மக்கள் பலமுறை பெரியமேடு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தோழர்களை விடுவித்து வந்துள்ளனர். இரவு 12 மணிவரை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இரவிலும் 300க்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். நானும் அங்கு நடைபெற்ற அனைத்து போராட்டத்தில் கலந்துகொண்டு உள்ளேன். 


காவல்துறையின் சமூக விரோத ஆதரவு செயல்பாட்டால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த எட்டுக்கும் அதிகமானவர்கள் மீது கொலைவழக்கு ஜோடிக்கப்பட்டு பல மாதங்கள் தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதுபோன்று மேலும் இரண்டு முறை 6 தோழர்கள் பொய்வழக்கு போடப்பட்டு பலமாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்தடுத்த பொய் வழக்குகள் போடப்பட்டு கொண்டே இருந்ததன. இந்த வழக்குகளின் விசாரணை எழும்பூர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது


. அப்போது இரண்டு நீதிமன்ற வளாகத்திலும் பெரியமேட்டை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்ட ஆண்களும் தினசரி கூடிவிடுவார்கள். சாப்பாட்டை அண்டாவில் சமைத்து எடுத்து வந்துவிடுவார்கள். உயர் நீதிமன்றம் முழுவதும் இந்த வழக்கு இதனால் பிரபலமானது. இப்படி பலநாட்கள் நடந்தது. அனைத்து தோழர்களும் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக தான் சமூக விரோதிகளுக்கு எதிராகவும், அவர்கள் இளைஞர்களை போதை பழக்கத்திற்கு தள்ளுவதற்கு எதிராகவும் வெற்றி பெற முடிந்தது.


கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை எதிர்த்து மக்களை, இளைஞர்களை அணிதிரட்டி போராட்டம் நடத்தப்பட்டது, அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன் கள்ளச்சாராயம் மக்களை மாய்த்துக்கொண்டிருந்தது. தோழர்கள். குமார் ஆனந்தன் என்ற வாலிபர் சங்க நிர்வாகிகள் கள்ளச்சாராய சக்திகளை எதிர்த்து போராடிய பொழுது படுகொலை செய்யப்பட்டனர்.


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதே நேரத்தில், களத்திலே இறங்கி போராடவும் தயங்கியது என்பதற்கான வரலாற்று சாட்சியங்கள் தான் மேலே கூறப்பட்டவை. 


தமிழகத்தில் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு ஒரு சில படித்த குழுக்களால் போஸ்டர் இயக்கங்களாக நடத்தப்பட்டு, மக்கள் இயக்கமாக மாற்றி அமைத்த பெருமை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேரும். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் சந்தைமயமாக்கப்பட்டு சந்து பொந்துகளில் எல்லாம் டாஸ்மாக் கடைகள் பெருகி, குடியால் பல லட்சம் குடும்பங்கள் பாழான போதுதான், தமிழகத்தில் பரவலாக டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டங்கள் எழுந்தன. ஆனால், வாலிபர் சங்கம் (DYFI) தொடக்க காலம் தொட்டே மதுவின் தீமைகளுக்கு எதிராக, போதைப் பழக்கத்திற்கு எதிராக, இளைஞர்கள் சீரழிக்கப்படுவதற்கு எதிராக மக்களை திரட்டி போராடி வருகின்றனர். இன்றும் அந்த போராட்டம் இழப்புகளை சந்தித்தாலும் தொடரும்...


-அ.பாக்கியம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...