அ.பாக்கியம்
முதல் பதிப்பு ஜனவரி 2018
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
வன்முறை பற்றிய நமது பொது புத்தியின் புரிதல் மேலோட்டமானது. தனி நபர் கொலைகள், கூட்டு வன்முறை, கலவரங்கள், தீவைப்பு, பொருட்சேதம், உயிர்சேதம் என வன்முறையின் விளைவுகளிலிருந்து மட்டும் வன்முறை பற்றிய கருத்துக்கள் கட்டமைக்கப்பபட்டுள்ளது. ஒரு வர்க்க சமூகத்தின் பொருளியல் உற்பத்தியின் அடிப்படையிலிருந்து சட்டங்களும், ஒழுக்க நியதிகளும் உருவாக்கப்படுகின்றன. வன்முறை பற்றிய பார்வைகளும் இதற்கு உட்பட்டதாகவே இருக்கிறது. இதுநாள் வரை பெண்கள் மீதான வன்முறை ஆணாதிக்கப் பார்வையிலிருந்து நியாயப்படுத்தப்பட்டது. சாதிய, மதவெறி கட்டமைப்பில் இன்றும்கூட பெண்கள் மீதான வன்முறை எழுதப்படாத சட்டமாக நியாயப்படுத்தப்படுகிறது. எனினும் நவீன காலத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும் வன்முறை என்ற பார்வை மேலோங்கியுள்ளது. இந்த வகையில் வன்முறை பற்றிய பொது புத்தி கூர்மையடைந்து வருகிறது. வன்முறை பற்றிய விசாலமான பார்வையும், அதுகுறித்த விழிப்புணர்வும் தேவைப்படுகிறது.
வன்முறையின் பல வடிவங்களை பற்றிய ஆய்வுகளை பல சர்வதேச அமைப்புகள் வரையறை செய்துள்ளன. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் ஆள் பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தி ஒரு நபருக்கோ அல்லது மற்றொரு நபருக்கோ, ஒரு குழுவிற்கோ, ஒரு சமூகத்திற்கோ காயம், மரணம், பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்படுத்துதல் மற்றும் பயமுறுத்தல், இருத்தலுக்கெதிரான அச்சுறுத்தல் வன்முறையாகும் என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. 2014-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் 133 நாடுகளில் வன்முறைகளை பற்றி ஆய்வு செய்து கொடுத்த அறிக்கையில் வன்முறை பற்றிய விரிவான விவரங்கள் உள்ளன. இவற்றில் தனிநபர் வன்முறை, கூட்டு வன்முறை, சுய வன்முறை (தற்கொலை) என வன்முறையின் பல வடிவங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் அதிகாரத்தை பயன்படுத்திய (ரளந டிக யீடிறநச) வன்முறைதான் உலகில் அதிகமாகவும், பரவலாகவும் நடைபெற்று வருகிறது என்ற விவரங்களும் வெளிப்பட்டுள்ளன.
யுத்தம், எல்லை விரிவாக்கம், ஜனநாயக உரிமைகளை பறிப்பதற்கான அடக்குமுறை, தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவது, அடிப்படை உரிமைகளை மீறுவது என இந்த அதிகார வன்முறை பல வடிவங்களில் நிகழ்த்தப்படுகிறது. நவீன தாராளமய கொள்கைகள் உலகின் நியதிகளாக மாற்றப்படுகிற இக்காலத்தில் குடியிருப்புகளை அகற்றுவதில் அதிகார வன்முறை அதிகளவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இவை பரவலாக நடைபெறுகிறது. அமெரிக்காவில் எல்லை விரிவாக்கத்திற்காக செவ்வந்தியர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் அதிகாரத்தை பயன்படுத்திய வன்முறை ஆகும். அதுமட்டுமல்ல, வளர்ச்சி என்ற பெயரிலும், நாகரீக மனிதர்களுக்கும், நாகரீகமற்றவர்களுக்குமான யுத்தம் என்ற கருத்தை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட வன்முறை ஆகும். இந்தியாவில் மிகப்பெரிய அளவிற்கு இந்த அதிகார வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. இந்த அதிகார வன்முறையின் ஊடாகத்தான் இந்தியாவில் நகர்மயமாக்கலின் விளைவுகளை காணவேண்டியுள்ளது. நகர்மய விரிவாக்கத்தில் குடிசைபகுதி மக்கள், நகர்புற ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஆவணமற்ற குடியிருப்புவாசிகள் ஈவிரக்கமற்ற முறையில் நகரைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். இந்த வன்முறை,
"வளர்ச்சி" என்ற முகமூடி அணிந்து நடத்தப்படுவதால் நமது பொது புத்தியில் இது வன்முறையல்ல என்ற கருத்து வலுவாக பதியப்படுகிறது.
வளர்ச்சி என்பது அவசியமானது ; தவிர்க்க முடியாததும்கூட. அந்த வளர்ச்சி யாருக்கானது? என்பதுதான் முக்கியமான கேள்வி. நகர்மயமாக்கல் சகாப்தத்தில் இடப்பெயர்வும், வெளியேற்றமும் பெருமளவில் நடைபெறுவதை வளர்ச்சியின் அடையாளம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. நகர்மயமாக்கல் என்பது அடிப்படை கட்டுமானத்தை மேம்படுத்துவதும் நகர்புற மக்களின் சுகாதார வாழ்விட வசதிகளை மேம்படுத்துவதுமாகும். ஆனால், நவீன தாராளமய கொள்கைகளில் நகர்புறத்தில் குடியிருக்கிற 30 சதத்திற்கு மேற்பட்ட நகர்புற ஏழைகள் மற்றும் வருமானம் குறைவான தொழிலாளர்கள், நடுத்தர பகுதியினர் என 60 சதத்திற்கு மேல் உள்ளவர்களை புறக்கணித்துவிட்டு, புறநகருக்கு விரட்டிவிட்டு வளர்ச்சி என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? வசதி படைத்த ஒரு சிறு பகுதியினரின் வாழ்க்கைக்கு ஏற்ற முறையிலும் பன்னாட்டு உள்நாட்டு பெரு முதலாளிகள் குறைந்த கூலிக்கு சுரண்டல் களத்தை உருவாக்குவதற்கு ஏற்ற வகையிலும் நகர்மயம் மாற்றியமைக்கப்படுகிறது. மேற்கண்ட மாற்றங்களை சென்னை நகரில் பட்டவர்த்தனமாக பார்க்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக