Pages

வியாழன், ஆகஸ்ட் 16, 2012

. ஞாபகங்கள் தீ மூட்டும்




     ஏ.பாக்கியம்

                    படித்தாலே இரத்தம் கொதிக்கும் வர்க்க பகைத்“தீ” பற்றி எரியும். யுத்தம் தொடங்க வேண்டும் எனும் வெறி தலைக்கேறி எழுச்சியுறும். அத்தகைய கொடுமை நிறைந்த பண்ணை அடிமைச் சமூகத்தில் அல்லவா, நமது முந்தைய தலைவர்கள் பயணித்து, பண்ணையடிமைகளின் விடுதலைக்கு வித்திட்டுள்ளார்கள்! பண்ணை  அடிமைகளின் விடுதலைக்கு மட்டுமா? அவர்களின் வீரம் செறிந்த போராட்டம் தேச விடுதலைக்கே வழிவகுத்தது. இந்தியநாடு முழுவதும் கம்யூனி°ட்களின் தலைமையில் பொங்கி எழுந்த விவசாயிகளின் எழுச்சியின் ஒரு பகுதியாக தஞ்சை தரணியும் காட்சியளித்தது. தேச விடுதலைப் போராட்டத்திற்கு தலைமையேற்ற காந்தி நமது போராட்டம் பண்ணையாரை எதிர்த்து அல்ல பரங்கியரை எதிர்த்து என்று பறைசாற்றினார். 

              ஆனால் அன்றைய கம்யூனி°ட்கள் பரங்கியரின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும், அதற்கு முட்டுக்கொடுக்கும் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகவும் விவசாயிகளை அணிதிரட்டினார்.இந்த விவசாயிகளின் எழுச்சியை கண்டுதான் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் அட்லிபிரபு பாராளுமன்றத்தில் இப்படி அலறினார். “இந்தியாவில் விவசாயிகள் கம்யூனி°ட்கள் பின்னால் அணிதிரண்டு வருகின்றனர். இது நமது நலனுக்கு உகந்தது அல்ல என்றார்” அதிகாரம் பறிபோவதற்கு முன்னாள் கைமாற்றிட விரும்பினார்.அவரது விருப்பத்தையும், இந்திய அளும் வர்க்கவிருப்பத்தையும் காந்தி நிறைவேற்றினார். எனவே, தேசம் விடுதலை பெற்றது. கம்யூனிட்கள் புதிய எஜமான்களின் கீழ் செயல்பட்டஅனைவருக்கும் எதிரான போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டம் படிப்படியாக வளர்ந்தது. 1967-ல் பிரதேச முதலாளிகளின் நலன் காக்கும் திமுக ஆட்சியிலும் போராட்டம் தொடர்ந்தது. இந்த யுத்தக் களத்தினூடேதான் இங்கே காண உள்ள போராளியின் பயணம் நடந்தேறியுள்ளது.

முகம் காணாத கதிரவன்

                 சூரியக் கதிர்கள் எழுமுன் பண்ணையடிமைகளின் கால்கள் வயலில் இறங்க வேண்டும். ஆண்டையின் அடியாட்கள் தூரத்தில் இருப்பார்கள். இருளில் பணி துவங்கினார்களா? இல்லையா? என்பது தெரியாது. பணியில் இறங்கி விட்டோம் என்பதை தெரிவிக்க பண்ணைக்கூலிகள் “காலேரிப்பாட்டு” என்ற ஒலியை எழுப்புவார்கள். சூரிய கதிர்கள் படர்ந்த பிறகு, பெண்கள் ஒருகையில் கஞ்சிக்களயமும், இடுப்பிலே குழந்தைகளுடன் வயல் வெளி வந்து, மரத்தின் தொட்டிலில் குழந்தைகளை இறக்கிபோட்டு, வரப்புகளில் கஞ்சிக் களயத்தை புதைத்துவிட்டு, பணிகளில் இறங்கி விடுவார்கள். 

                சூரியக் கதிர்களை எந்த பண்ணையடிமையின் முகமும் பார்க்காது, முதுகு மட்டுமே பார்க்கும். நடவு, களை எடுத்தல், உழுதல், அறுத்தல் என அனைத்தும் தலைகுனிந்தே நடக்கும். நிமிர்ந்தால் ஆண்டையின் ஆட்கள் அரட்டுவார்கள். கதிரவன் மறைந்து இருள் படர்ந்த பிறகும், கூலிகள் மேலேறி வீட்டிற்கு செல்ல முடியாது. ஆண்டையின் வீட்டிற்கு சென்று, கைகட்டி, தலைகுனிந்து “நெல்”லை கூலியாக பெற்று, அதை அரிசியாக மாற்றி இரவு 11 மணிக்கு கஞ்சியை குடிப்பார்கள் அடுத்த நாள் உயிர்வாழ, உழைத்திட படுத்துக் கொள்வார்கள். நிமிர்ந்து இருந்த நேரங்களைவிட, குனிந்தே இருந்த நேரங்கள்தான் வாழ்க்கையாக இருந்தது.
    
          கிராமங்களில் இரவுகளில்தான் கூத்து, நாடகம் நடக்கும். முன்வரிசையில் ஆண்டைகள், அதற்கு பின்னால் இதர உயர் சாதிகள், அதிலிருந்து பல அடி தூரம் தள்ளி வைக்கோல் பிரிகட்டி, அதற்கு பின்னால் பண்ணையடிமைகள். தவறி கூட எழுந்து பார்க்ககூடாது. காலை 3 மணிக்கு மேல் கூத்து நடந்தாலும் இவர்கள் பணிக்கு சென்றுவிட வேண்டும்.
பண்ணையடிமைகளுக்கு நோய் வந்தால் மருத்துவரிடம் செல்வர். அவருக்கு தெரிந்த நோய் இரண்டு. ஒன்று அய்யனார் சேட்டை. மற்றது முனி பயமுறுத்தல். இரண்டுக்கும் ஒரே மருந்து ‘விபூதி’ – ஒரு கைப்பிடி விபூதியை கொடுப்பார். அப்படியே முழுங்கிட வேண்டும். அதற்கு விலையாக ஒரு “மரக்கால்” நெல் கொடுக்க வேண்டும்.

            ஆண்டையின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்காக ஆண்டை வீட்டிலிருந்து ஒரு மூட்டை நெல் தரப்படும். இலவசமாக அல்ல. கடன் பத்திரம் எழுதி வாங்கிய பிறகு. “பெண் பார்த்தல்” – மாப்பிள்ளை பார்த்தலில் ஆண்டையின் ஆள் ஒருவர் வருவார். இவருடன் பெற்றோர்கள் மட்டும் ஈடுபட வேண்டும். மற்ற உறவினர்கள் வரக்கூடாது. வேலை பாதிக்கும். விருந்துக்கு மட்டும் மாலையில் அனுமதி உண்டு.பிறக்கும் குழந்தைகளும் பண்ணையிலேதான் இருக்க வேண்டும் என்பது நியதி.சொல்படி கேட்கவில்லை, வேலைக்கு தாமதம், எதிர்த்து பேசுதல் அனைத்துக்கும் ஆண்டையின் வீட்டு முன்னால் சாட்டையடிதான் தண்டனை. ஐந்து பிரி சாட்டையின் நுணியில் கூறான கூழாங்கற்கள் கட்டியிருக்கும். அடித்து இழுக்கும் போது சதை பிய்த்துக் கொண்டுவிடும். ரத்தம் சொரியும். வாயில் துணி இருக்கும் கத்தக்கூடாது என்பதற்காக அல்ல, அடிப்பவனை துப்பிவிடக்கூடாது, எதிர்த்து பேசிவிடக்கூடாது என்பதற்காக. இப்படித்தான் 1940-ம் ஆண்டுகளில் தமிழகத்தின் தஞ்சைத் தரணியில் பண்ணை அடிமைச் சமூகம் பயணித்துக் கொண்டிருந்தது.

எதிர்ப்பேதான் பிறப்பு

              கொடி சுத்தி பிறந்தவர்கள் உண்டு! குறைமாதத்தில் பிறந்தவர்கள் உண்டு! ஆனால் பிறப்பே எதிர்ப்பின் அடையாளமாக இருப்பதை கண்டதுண்டா? இதோ இருக்கிறதே! பண்ணையடிமையான சாத்தன் பர்மாவிற்குச் சென்றான். அங்கு பக்கவாதத்தால் படுத்துவிட்டான். மனைவி அமிர்தம் கர்ப்பம் தரித்து இருந்தார். சாத்தனின் சகோதரிகள் இந்த கருதான் சாத்தனின் நோய்க்கு காரணம் என முடிவெடுத்து, கருஞ்சீரகத்தை கரைத்து கொடுத்தார்கள். கணவனின் நலன் கருதி குடித்தாள் அமிர்தம். கரு கலையவில்லை. கண்ணாடியை தூள்களாக்கி வெல்லத்தில் சேர்த்து கொடுத்தார்கள். அதையும் உண்டாள் அமிர்தம். கரு கலையவில்லை. கருஞ்சீரகத்தையும், கண்ணாடித்துகளையும் வென்று 1926 புரட்டாசி 27 அன்று வெளியே வந்தான் தனிக்கொடி. விட்டார்களா அத்தைமார்கள்! தாய் பாலுக்கு பதிலாக இஞ்சித் தண்ணீரை கொடுத்தனர். வீட்டிற்கு வெளியே குப்பைக் கூளங்களில் போட்டார்கள். ஊரில் கள் இறக்கும் நாடார் இறக்கப்பட்டு மரத்துப்பால் என்கிற தென்னங்கள்ளை கொடுத்தனர். சத்து கிடைத்தது தனிக்கொடிக்கு. தாய்பாலை விட மரத்துப்பாலில்தான் வளர்ந்தான். வீட்டில் இருந்ததைவிட வெளியில் கிடந்த நாட்கள் அதிகம். தந்தை சாத்தன் குணமாகி வந்து குழந்தையை எடுத்து பாதுகாக்க ஆரம்பித்தான். பிறப்பும், குழந்தை பருவ வளர்ப்பும் எதிர்ப்புடன் கூடியதாகவே அமைந்தது தனிக்கொடிக்கு. இந்த தனிக்கொடி என்ற பெயரே தனுஷ்கோடியாக மாறியது.

அடங்க மறுத்த மோதல்கள். 

விளத்தூரில் தனுஷ்கோடியின் தந்தை சாத்தனுக்கும், ஆண்டையின் உறவினருக்கும் கைகலப்பு ஏற்பட்டதால், இரவோடு இரவாக குடும்பத்தை காலி செய்து பாங்கல் கிராமத்திற்கு குடியேறினர். அங்குள்ள பண்ணையில் பணிபுரிந்தனர். இதுவே சொந்த ஊராக மாறியது. பாங்கல் கிராமத்தில் பர்மாவிலிருந்து திரும்பியவர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் அங்கு இரண்டாவது வரை படித்திருந்தனர். இரவு நேரத்தில் காடாவிளக்கை வைத்து மணல் பரப்பில் சிறுவர்களுக்கு அ, ஆ, எழுத கற்றுக் கொடுத்தனர். இதை படித்த தனுஷ்கோடி பகல் நேரத்தில் மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். பண்ணை வீட்டுக்கு செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆண்டையின் காதுகளுக்கு செய்தி போய், சாத்தன் வீடு பூட்டப்பட்டு, குடும்பமே பண்ணை வீட்டின் முன் நிறுத்தப்பட்டது. சாத்தனின் உடம்பை சவுக்கடிகள் பதம் பார்த்தன. பண்ணையடிமைக்கு படிப்பு எதற்கு? என்ற சட்டம் மீண்டும் ஒரு முறை நிலைநாட்டப்பட்டது.

           தனுஷ்கோடி பண்ணை வீட்டு மாடு மேய்க்க அனுப்பப்பட்டான். மாடுகளை மேய்கும் போது முரட்டு மாடுகளை தனுஷ்கோடி அடித்தான். ஒருமாடு படுத்துவிட்டது! தனுஷ்கோடியும், சாத்தனும் பண்ணை வீட்டின் முன் நிறுத்தப்பட்டனர். சவுக்கடிகள் இருவர் உடலை பதம்பார்த்தது. மாட்டுக்கான பணம் சாத்தனிடம் பெறப்பட்டது. தனுஷ்கோடி மாடு மேய்க்கும் பணியிலிருந்து பண்ணை வேலைக்கு அனுப்பப்பட்டான். அடங்க மறுப்பது அவனது குணமாக இருந்தது. அடிமை வேலையில் வெறுப்பு. பக்கத்தில் உள்ள விளாங்கல் கிராமத்தில் அத்தையின் ஊருக்குச் சென்றான். அங்குள்ள குளத்தில் இறங்கி தண்ணீர் குடித்தான். எதிரே தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த கோனார் எதிர்ப்புத் தெரிவித்து அடித்தார். மோதல் முற்றியது. மீண்டும் பாங்கல் கிராமத்திற்கு அனுப்பப்பட்டான். 

                வீட்டில் சாமிக்கு படையல் வைத்து சாமி சாப்பிட சில மணிகள் கதவை மூடி வைப்பது வழக்கம். தனுஷ்கோடிக்கு, பலமுறை அடிபடும் போது சாமி, சாமி என்று கத்தியும் வராத சாமி இருக்கிறதா என்று சந்தேகம். எனவே, வீட்டினுள் ஒளிந்து கொண்டு பார்த்தான். சாமி சாப்பிட வரவில்லை. தானே சாப்பிட்டுவிட்டு மறைந்து கொண்டான். கதவை திறந்த அம்மாவிற்கு சாமி சாப்பிட்டுவிட்ட மகிழ்ச்சி. சாத்தனுக்கு சந்தேகம். மறைந்திருந்த தனுஷ்கோடியை கண்டுவிட்டார். அவரின் கைவிரல்கள் தனுஷ்கோடியின் உடலில் பதிந்தது.

நம்பிக்கை ஒளியும்-விரக்தியின் வெளிப்பாடும்.

காலச்சக்கரம் சுழன்றோட, தனுஷ்கோடிக்கு வயதும், எதிர்ப்புணர்வும் இணைந்தே வளர்ந்தது. கோவணத்திற்கு மேலே முட்டிவரை சுற்றிய துணியை –- இதுதான் அனைவருக்குமான உடை என்பதை–- மாற்றி நுணிக்கால்வரை வேட்டியும் முண்டா பனியனும், தோளில் துண்டும் போட்டு மிடுக்காக நடந்தான். பார்த்தவர்கள் சிலர் பரவசமடைந்தனர். பலர், என்ன நடக்குமோ என்று பயந்து நடுங்கினர். இப்போது தனுஷ்கோடிக்கு திருத்துரை பூண்டியில் ஆசிரியராக பணிபுரிந்த அய்யாசாமி பிள்ளையின் தொடர்பு கிடைத்தது. அதன்மூலம் “ஆதிதிராவிடர் வாலிபர் சங்கம் ” என்ற அமைப்பை தொடங்கினார். கிராமத்தை சுத்தமாக வைத்திருக்கும் சுகாதார பணியில் ஈடுபட்டனர். திருத்துறை பூண்டிக்கு செல்லும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தங்க இடம் கிடையாது. குளிக்க குளமும் கிடையாது.  எனவே, இச்சங்கத்தின் மூலம் கிராமத்திற்கு 20 பேர்கள் வரவழைத்து காட்டை அழித்து, குளமும், தங்கிட பெரிய இடமும் அமைத்தனர். பணி முடிந்த பிறகு, படையாச்சி சாதியினை சார்ந்தவர்கள் இவர்களை அடித்து துரத்திவிட்டு, இடத்தை அபகரித்தனர். சங்கம் முடங்கியது. வேறு வழியின்றி விழிபிதுங்கி நின்றார் தனுஷ்கோடி.


                 திருத்துறை பூண்டியை சேர்ந்த செங்கமலத்தம்மாள் என்ற காங்கிர° ஊழியர், மூவர்ண கொடியுடன் பாங்கல் கிராமத்திற்கு வந்தார். கொண்டு வந்திருந்த காகிதக் கொடிகளை குழந்தைகளிடம் கொடுத்தார். கூட்டம் சேர்ந்தது. தனுஷ்கோடியும் இணைந்தான். ஊர்வலம் கிராமம் கிராமமாக சென்றது. தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் தனுஷ்கோடி தலைமையில் உயர்சாதி வீடுகளின் திண்ணையில் உட்கார்ந்தனர். கதவுகளை தொட்டுப்பார்த்தனர். வீட்டை சுற்றி ஓடினர். அருகில் இருந்து பார்க்க முடியாத, தொட முடியாத புனித சின்னமாக சித்தரிக்கப்பட்ட வீடுகள் அதாவது ஆதிக்க சாதிய அடையாள சின்னங்களில் ஓட்டைகள் விழுந்தது. சிறுவர்களின் சிரிப்பும், °பரிசமும் அவர்களுக்கு இரத்தக் கொதிப்பை ஏற்படுத்தியது. ஊர்வலம் முடிந்தது. இரவும் நகர்ந்தது. விடிந்ததும் விளைவுகளை அறிந்திட தனுஷ்கோடி விளார்தூருக்கு சென்றான். வந்தவனை கட்டிவைத்து நையப்புடைத்து, குற்றுயிரும், கொலை உயிருமாய் அனுப்பி வைத்தனர். நேராக காங்கிர° தலைவர் ராமுபடையாச்சியிடம் சென்றான். அநியாயத்தை சொன்னான். ஆறுதல் வார்த்தையை எதிர் பார்த்தான். நேற்று நீ செய்த காரியத்திற்கு உன்னை வெட்டி புதைத்திருக்க வேண்டும் என்றார். அவனின் விழிகள் மங்கியது. விடியலின் ஒளியாய் நினைத்தது இருண்டது. அவனது சிந்தனை வேறு வழியை தேடியது.


                      1938 ம் ஆண்டுகளுக்கு பிறகு, ஆசிரியர் பெத்தபெருமாள் மூலம் பெரியார், அம்பேத்காரை பற்றி கேள்விபட ஆரம்பித்தான். திருத்துறைப்பூண்டியில் பெரியார் பங்கேற்ற கூட்டத்திற்கு சென்றார் தனுஷ்கோடி. வேஷ்டி, பனியன், துண்டு சகிதமாக கிராப் வெட்டி, தன்னை பெரியாரின் தொண்டனாக வரித்துக்கொண்டார். கூட்டம் முடிந்து திரும்புகிற வழியில் சன்னாவூர் பக்கிரிசாமி பிள்ளை டீ கடையின் உள்ளே சென்று டீ குடிக்க உட்கார்ந்தார். டீக்கடைகாரர் பெரியாரின் கட்சி. அவரும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் கருப்பு சட்டை சகிதமாக காட்சி அளித்தனர். உள்ளே இருந்த தனுஷ்கோடி தாழ்த்தப்பட்டவன் என்று கண்டு கொண்டு அவனை தரதரவென இழுத்து புரட்டி எடுத்தனர். நான் பெரியார் கட்சி என்றான். என்னடா பெரியார் கட்சி என்று கூடி இருந்தவர்களும் சேர்ந்து உதைத்தனர். டீக்கடையானாலும்கள்ளுக்கடையானாலும், தாழ்த்தப்பட்டவன் நுழையக்கூடாது என்ற சட்டம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. வண்ணங்கள்தான் மாறியது. “வர்ணாசிரமத்தை” அனைவருமகடை பிடித்தனர். அடிவாங்கவா? அரசியல் கட்சியில் சேர்ந்தோம் என்ற விரக்தியில் இருந்தான் தனுஷ்கோடி.


                   1942 டிசம்பரில் “ஜனசக்தி” என்ற பத்திரிக்கையை பார்த்தார். அதனுடன் சில நபர்களை சந்தித்தார். சீனிவாசராவ் பற்றி கேள்விப்பட்டார். தாழ்த்தப்பட்டவர் வீட்டில் அவர்கள் சாப்பிடும் தட்டில் சாப்பிடுகிறார். பாய் இல்லாவிட்டால் தரையில் படுத்துக் கொள்கிறார் என்று கேள்விப்பட்டார். களப்பால் கிராமத்திற்கு சீனிவாசராவ் வருகிறார் என்பதை அறிந்து 10 பேர்களுடன் தனுஷ்கோடி சென்றார். சாதிய அடக்குமுறைக்குள் இருக்கிற வர்க்கச்சுரண்டலை வெளிக்கொணர்ந்தார். கருத்துக்கள் புதிது, பார்வைகளும் புதிது. பாதைகளும் புதிது. புதிய மனிதனாக புறப்பட்டான் தனுஷ்கோடி. கிராமங்கள்தோறும் விவசாய சங்கம் உருவாக்கினான். செங்கொடி ஏற்றினான். கலத்திற்கு 2 மரக்கால் கூலி கேட்டு கோரிக்கை வைத்தான். இதுவரை கோரிக்கை வைத்து பழக்கப்படாதவர்கள். அவர்களிடம் அச்சமும், துணிச்சலும் கலந்த எழுச்சி ஏற்பட்டது. தனுஷ்கோடி நம்பிக்கை ஊட்டினார்.

கருமாதிக்கு பின் வந்த கடிதம்

           விவசாய சங்கங்கள் வளர்த்தது. கூடவே மோதலும் ஏற்பட்டது. பாங்கல், வளத்தூர், உத்தரங்குடி, சூரமங்கலம், பரமத்தூர், அம்மனூர் என சங்க கிளைகள் அமைத்தார். பண்ணையார்கள் கொலை செய்ய அடியாட்களை ஏவிவிட்டனர். தாயையும், தந்தையையும் அழைத்து தனுஷ்கோடி எங்களது மகன் இல்லை என்று அடித்து கையெழுத்து போடச் செய்தனர். வேலை கொடுக்க மறுப்பு, வீட்டிற்கு செல்ல முடியவில்லை. இரவில் மட்டும் சங்க வேலை. எனவே, வேறு வழியின்றி 1945 –ல் இராணுவத்தில் யாருக்கும் தெரியாமல் சேர்ந்து விட்டார். மகனைக் காணவில்லை என பல மாதங்கள் தேடி, ஆண்டைகள் கொலை செய்திருப்பார்கள் என்ற முடிவிற்கு வந்து தனுஷ்கோடிக்கு “கருமாதி”யை முடித்துவிட்டனர் பெற்றோர்கள். இதன்பிறகு சில மாதங்கள் கழித்து இலங்கையிலிருந்து தாயின் பெயருக்கு மணியார்டரும், கடிதமும், தான் இராணுவத்தில் இருப்பது பற்றிய தகவலும் கிடைத்தது. பெற்றோர் பூரிப்படைந்தனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாங்கல் வந்தார். சீனிவாசராவை சந்தித்து சங்க வேலையை தொடர்ந்தார்.
1946 கிடையில் தமிழகத்தில் பஞ்சம். பண்ணையார்கள் உணவு பொருட்களை பதுக்கினர். அதிகார வர்க்கம் துணை நின்றது. ஆட்சியரும், தாசில்தாரும் திணறினர். விவசாய சங்கத்தின் உதவியை நாடினர். அன்றைய முதல்வர் ஓமந்தூரார் பி.எ°.ஆரிடம் நேரிடையாக சங்கத்தின் உதவியை கேட்டார். தஞ்சையில் சங்கம் களம் இறங்கியது. பதுக்கல் பொருட்கள் வெளிக்கொணரப்பட்டு பங்கிடப்பட்டது.
                       1946 –ல் உழனி கிராமத்தில் தனுஷ்கோடி தலைமையில் பண்ணையாரின் அடியாட்களுடன் மோதல். கழனிவாசல் கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுக்கத் தடை. தனுஷ்கோடி சென்றார். விவசாயிகளை திரட்டி குளத்தில் இறங்கி தண்ணீர் எடுத்தார். தடை உடைபட்டது. ஆலத்தூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்த தெருவிற்கு முன் வேலி போட்டனர். தனுஷ்கோடி சென்றார் வேலி அகற்றப்பட்டது. இப்படி எண்ணற்ற தடைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் வயலில் நண்டு, நத்தைகள் பிடிக்கக்கூடாது என்றனர். அனைத்து தடைகளையும் சங்கம் மீறியது.தனுஷ்கோடி திருமணம் செய்ய மறுத்தார். நிர்பந்தம் அதிகமாகவே, புதுஜவுளி, நகை, தாலி, மேளம் எதுவும் கூடாது என்ற நிபந்தனை விதித்தார். அனைவரும் ஏற்றனர். 1947 பிப்ரவரி 2 ம் தேதி மனோன்மணியை திருமணம் செய்தார்.

குருதியின் வழியே குடிநீர்

1948 -ம் ஆண்டு ஜூன் மாதம், பண்ணையார்களின் சூழ்ச்சியால் சிறைபிடிக்கப்பட்டு 3 1/2ஆண்டுகள் திருச்சி சிறையில் கொடுமைகளுக்கிடையில் உயிர் வாழ்ந்தார். புதுச்சட்டிக்கும், வேட்டிக்கும், மருத்துவ வசதிக்கும் உண்ணாவிரதம் இருந்தார். மோதலும், தடியடியுமே வாழ்க்கையாக ஓடிக்கொண்டிருந்தது. குடிக்க நல்ல குடிநீர் கேட்டதற்காக தனுஷ்கோடியை அடித்து கூழாங்கற்கள் பரப்பி உதிரம் கொட்ட கொட்ட இழுத்துச் சென்றனர். தனுஷ்கோடி உறுதிகுலையாமல் இருந்தார். குருதி கொட்டியபிறகுதான் சிறைச்சாலையில் நல்ல குடிநீர் கிடைத்தது.


         அடுத்த கோரிக்கைக்கு ஆரம்பித்தனர் உண்ணாவிரதத்தை. இருபத்தோரு நாட்கள் தொடர்ந்தது. அனைவருக்கும் தினசரி அடி உதை. தனுஷ்கோடியை நிர்வாணமாக்கி அடித்தனர். அடித்த இடத்தில் மஞ்சள் தடவினர். சிறை அதிகாரிகள் அலறல் வரும் என நினைத்தனர். ஆனால் போராளிகளின் குரல்களிலிருந்து கோஷங்கள் பீறிட்டது. உடலிலிருந்து உதிரம் பீறிட்டது. 22 -ம் நாள் உறவினர் பார்க்க அனுமதி, பத்திரிக்கை அனுமதி, வீட்டிலிருந்து வேட்டி பெற அனுமதி, ரிமாண்ட் கைதிகளுக்கு குவளை, தட்டு, பெட்சீட் கிடைக்க ஏற்பாடு, வாரம் ஒரு நாள் குளியல் என்ற சட்டம் மாறி தினசரி குளிக்க தண்ணீர் கிடைக்க ஏற்பாடு, என பல கோரிக்கைகள் நிறைவேறியது. சிறைச்சாலையில் வர்க்கப் போராளிகள், வெளியே செனறவுடன் பண்ணையாருக்கு முன்னால் படிக்க வேண்டும் என்பதற்காக படிப்பு சொல்லிக் கொடுக்கப்பட்டது. தனுஷ்கோடி தாய் மற்றும் வால்கா முதல் கங்கை வரை நாவல்களை படிக்கும் அளவிற்கு முன்னேறினார். தனுஷ்கோடி மீது மட்டும் 57 வழக்குகள் இருந்தது.

                   சிறைச்சாலைக்குள்ளே கோரிக்கை உருவாக்க முடியும், போராட முடியும், வெற்றிபெற முடியும் என்பதை நிருபித்தனர். போவது உயிர், உதிரம், உடைமையாக இருந்தாலும், பெறுவது பாட்டாளிவர்க்க உரிமையாக இருக்க வேண்டும் என்பதால் உறுதியாக இருந்தனர். 1951 –ல் விடுதலையாகி மீண்டும் விவசாய சங்கப்பணிகளில் ஈடுபட்டார். தலைவர்கள் சிறையில். எனவே, பண்ணையார்களின் வெறியாட்டம் வெளியில். அச்சத்தில் ஆட்பட்ட மக்களை மீண்டும் திரட்டி போராட வந்தனர் தனுஷ்கோடியும், இதர தலைவர்களும். இக்காலத்தில் குடிமனை பாதுகாப்புச் சட்டம், நிலவெளியேற்ற தடுப்புச்சட்டம், வேலை கொடுப்பதற்கான உத்தரவு என பல உரிமைகளை பெற முடிந்தது.


                   1961–ல் நிலச்சீர்திருத்தத்திற்காக போராடிய போது தனுஷ்கோடி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கு மேல் சிறைவாசம். அப்போது தோழர் பி.சீனிவாசராவ் மரணம், தனுஷ்கோடியை நிலைகுலையச்செய்தது. அடுத்து தாயாரின் மரணம் மேலும் அதிர்ச்சி. தனயன் சிறையில், தாய் சிதையில் என்ற சோக காட்சிகளை காலம் நிறைவேற்றிக் கொண்டிருந்தது. மனச்சோர்வுகளை மாற்றிக் கொண்டு விடுதலையாகி மீண்டும் பணிகளில் ஈடுபட்டார். வறுமை அவரை மட்டும் விட்டு வைத்ததா என்ன? ஆறு நாட்கள் வரை உணவு கிடைக்காமல் மனைவியும், மகளும் மயங்கி விழும் அளவிற்கு வறுமை ஆட்சி செய்தது. அக்கம்பக்கத்தினர் உதவிட அஞ்சினர். எத்தனை இன்னல்கள் வந்தாலும் எதிர்த்தே நின்றார் தனுஷ்கோடி. 1964–ல் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருளும், சிறையும், வறுமையும் வாழ்வாக இருந்தாலும், சங்க வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை.
1958–-ல் பாங்கல் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட தோழர் பி.எ°.தனுஷ்கோடி தொடர்ந்து 30ஆண்டுகள்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967 -ம் ஆண்டு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 1970-ல் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக வெற்றி பெற்றார். பல கிராமங்களில் பள்ளிக்கூடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கட்டினார். பண்ணையார்கள் ஆக்கிரமித்த அனைத்து குளங்களையும் மீட்டார். எண்ணற்ற பணிகள் பறைசாற்றப்படுகிறது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக, விவசாய சங்க மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தார். 19.8.1997 –ல் சென்னை மருத்துவமனையில் உயிர் நீத்தார்.


              தனுஷ்கோடியின் வாழ்க்கைப் பயணம், சாதிய கொடுமைகளையும், வர்க்கச் சுரண்டலையும் எதிர்த்த பயணம். பிறப்பு முதல் இறப்பு வரை எதிர்ப்பும், உறுதியும் கொள்கை பிடிப்பும் கொண்டவராக இருந்திருக்கிறார். போராளிகளும், புரட்சியாளர்களும் வசீகரமான தோற்றம் கொண்டவர்கள் என்ற வரைபடம் நமக்கு நினைவு இருக்கிறது. ஆனால், கருத்த உடலும், வெள்ளை உடையும், தடித்த கண்ணாடியும், நரைத்த முடியும், உருக்கு போன்ற உறுதியுடைய போராளி, புரட்சியாளனின் பயணத்தை இதயத்தில் பதிப்போம். புரட்சிகர பாதையில் நடப்போம்!
    .

ஆக.19.தோழர்.பி.எ°.தனுஷ்கோடி நினைவுநாள்.



ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012

கமாண்டோ கான்


  ஏ.பாக்கியம்

      1724இல் இராமநாதபுரம் பனையூரில் மருதநாயகம் பிள்ளையாகப் பிறந்து முகமது யூசுப் கானாக வளர்ந்து கமாண்டோ கானாக உயர்ந்தவன். மதுரை மக்களால், “கமாந்தோ கான்’’ என அன்பாக அழைக்கப்பட்டவன். இந்துவாகப் பிறந்து, கிறிஸ்துவர்களிடம் கல்விப் பயின்று இஸ்லாமியனாக இறந்தவன். 40 வயதே வாழ்ந்தாலும் நாடறிந்தவனாக மட்டுமல்ல இந்திய வரலாற்றில் சிறந்தப் போர் வீரனாக, இராணுவ நிபுணனாக, தன்னை நிலைநிறுத்திக் கொண்டவன் கமாந்தோ கான். இந்திய இராணுவ வரலாற்றில் ஹைதர் அலியும், முகமது யூசுப் கானும் குறிப்பிடத்தக்கவர்கள். ஹைதர் அலி வேகத்திற்கு புகழ்பெற்றவர் என்றால், முகமது யூசுப்கான் விவேகத்துடன் தாக்குதலில் சிறந்தவன். ஆற்காட்டு நவாபும், கிழக்கிந்திய கம்பெனியும் பாளையக்காரர்களை அடக்கிட யூசுப் கானை முழமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.


     பனையூரில் இருந்த இல்லத்துப் பிள்ளைமார்களின் பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின, மருதநாயகத்தின் குடும்பமும் அதில் ஒன்று. கட்டுக் கடங்காமல் சுற்றித்திறிந்த யூசுப்கான் பாண்டிச்சேரிக்கு வந்து அன்றைய பிரெஞ்சு கவர்னர் மான்சர் காக்லா வீட்டில் வேலைக்காரனாகச் சேர்ந்தான். சில காலம் கழித்து வேலையிலிருந்து விலகி அல்லது நீக்கப்பட்டு தஞ்சைக்கு சென்று படைவீரனாகச் சேர்ந்தான். தஞ்சையில் தளபதி பிரட்டன், யூசுப் கானுக்கு கல்வி கற்றுக் கொடுத்தான். தனது ஆர்வத்தால் தமிழ், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தான். அங்கிருந்து நெல்லூருக்கு மாற்றப்பட்டான் அங்கு தண்டல் காரனாக, ஹவில்தாராக, சுபேதார் என பதவி உயர்வை உழைப்பால் அடைந்தான். ஆற்காட்டில் சந்தா சாஹிப்புடன் வந்து தங்கி இருந்தபோது யூசுப்கானிடம் இருந்த வீரம், விவேகத்துடன் காதலும் சேர்ந்து கொண்டது. இந்தோ  ஐரோப்பிய கலப்பின வழித்தோன்றலான மார்சியா என்ற பெண்ணைக் காதலித்து மணம் முடித்தான்.

திறமைக்கு திறவுகோல்

      1750 களில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இந்தியாவில் நாடுபிடியுத்தம் நடந்த காலம். அதேநேரத்தில் 1751இல் ஆற்காட்டு நவாபு பதவிக்கு முகமது அலி வாலாஜாவிற்கும் சந்தா சாஹிப்பிற்கும் போட்டியும் யுத்தமும் மூண்டது. முகமது அலி வாலாஜா திருச்சிக்கு தப்பித்து ஆங்கிலேயர்களிடம் சரண்அடைந்தார். சந்தா சாஹிப்பின் தாக்குதலை இராபர்ட்கிளைவ் தலைமையில் ஆங்கிலேயர்கள் முறியடித்தனர். ஆற்காட்டை மீட்பதற்காக சந்தாசாஹிப் தனது மகன் இராசாசாஹிப் தலைமையில் 10,000 படைகளை அனுப்பினான். இவர்களுக்கு உறுதுணையாக நெல்லூர் சுபேதாராக இருந்த யூசுப்கான் இருந்தான். யுத்தத்தில் பிரெஞ்சு ஆதரவளித்த சந்தாசாஹிப் படைதோல்விகண்டது. ஆங்கிலேயர்கள் முகமது அலி வாலாஜாவை நவாபாக நியமித்தனர். இதற்கு கைமாறாக மதுரை மற்றும் நெல்லையில் வரிவசூலிக்கும் உரிமையை கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தான் நவாபு.

      யுத்தக்களத்தில் முகமது யூசுப்கானின் திறமை கண்டு வியந்தான் இராபர்ட்கிளைவ் தனது படையுடன் அவனை இணைத்தான். மேஜர் ஸ்டிங்கர்லா, யூசுப்கானுக்கு ஐரோப்பிய இராணுவ முறைகளில் பயிற்சி அளித்தான். 1755ஆம் ஆண்டுகளில் மதுரை, நெல்லை பாளையக்காரர்களை அடக்குவதற்காக தளபதி அலெக்சாண்டர் கெரானுடன் யூசுப்கான் அனுப்பிவைக்கப்பட்டான்.

       எட்டயபுரம், பாஞ்சாலங்குறிஞ்சி படைகளின் தளபதியாக இருந்த “வீரன்’’ அழகு முத்துக்கோனை, பெருநாழிகாட்டில் முகமது யூசுப்கான் சாகடித்தான். மறவர் பாளையங்களை தாக்கி வெற்றி கொண்டான். பூலித்தேவனை தோற்கடித்தான். மதுரையில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் வெற்றிபெற்றான். தனது வெற்றிப் பயணத்தை தடைகளைத் தகர்த்து தொடர்ந்தான்.இக்காலத்தில் சென்னையை பிரெஞ்சுப்படை, முற்றுகையிட்டதால் யூசுப்கான் சென்னைக்கு அழைக்கப்பட்டான். பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர்லாலி தலைமையில் முற்றுகையிட்ட பிரெஞ்சு படையை 1758இல் யூசுப்கான் யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதல் நடத்தி அதிசயிக்கத் தக்கவகையில் தோற்கடித்தான். இந்த தாக்குதல்பற்றி லாலி கூறுகையில், யூசுப்கான் தலைமையிலான படைகள் ஈக்களைப் போல் பறந்தார்கள் ஒரு பக்கத்தில் தடுத்து தாக்கிட முயலும்போது, அடுத்த நிமிடம் மறுபக்கத்திலிருந்து தாக்கினார்கள் என்று கூறினார். இவ்வெற்றி முகமது யூசுப்கானுக்கு பெரும் புகழ்தேடித்தந்தது. கிழக்கிந்திய கம்பெனி முகமது யூசுப்கானுக்கு “கமாண்டன்ட்’’ பதவி உயர்வை அளித்தது. 

மதுரையின் மகுடத்தில்

     கமாண்டோ கான் என்ற பதவி உயர்வுடன் முகமது யூசுப்கானை மதுரைக்கு மீண்டும் அனுப்பிவைத்தது கிழக்கிந்திய கம்பெனி. மதுரை மற்றும் திருநெல்வேலியில் வரிவசூல் செய்து வருடத்திற்கு 5 லட்சம் கொடுக்க வேண்டுமென கூறினர் யூசுப்கான் தெற்குசீமையின் தளநாயகனாக ஆட்சிபுரிய ஆரம்பித்தான். யூசுப்கான் சென்னையில் இருந்த போது மீனாட்சி அம்மன் கோயில் நிலங்களை எல்லாம் சூறையாடி இருந்தனர். யூசுப்கான் சூறையாடிய கயவர்களை தோற்கடித்து நிலங்களை மீட்டு கோயிலிடம் ஒப்படைத்தான். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை நிலைநாட்டுவதற்கு அன்றைய தினம் கள்ளர்கள் சவாலாக இருந்தனர். அவர்களது கலவரங்களை அடக்கி சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தினான். நத்தம் பகுதியில் 
கலவரங்களை அடக்கியபோது 2000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.

     துரையின் குளங்களையும், ஏரிகளையும் பழுதுபார்த்து பாசன வசதிகளை மேம்படுத்தினான் இடிந்துகிடந்த கோட்டைகளை பழுதுபார்த்தான். நிதித்துறை மற்றும் வணிகர்கள் பாதுபாப்பை மேம்படுத்தினான். யூசுப்கான் காலத்தில் நிர்வாக செயல்பாடு மேம்பட்டது. இதனால் மதுரை மக்கள் இவனை “கமாந்தோகான்’’ என்று அன்பாக அழைத்தனர். அவர்களின் உள்ளங்களிலேயே குடியேறினான். இதனால் நவாபுக்கும், கம்பெனிக்கும் வருவாய் பெருகினாலும் யூசுப்கான் வலுவாவதை பெரும் ஆபத்தாகக் கருதினர்.

நவாப்பின் நயவஞ்சகம்

     முகமது யூசுப்கானின் செல்வாக்கை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் முயற்சித்தான் திடீரென புதிய உத்தரவைப் பிறப்பித்தான். வணிகர்களும், மற்றவர்களும் என் மூலமாகத்தான் வரிகளை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டான். யூசுப்கான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை கிழக்கிந்திய கம்பெனியும் தந்திரமாகக் காயை நகர்த்தினர். நவாப்பின் பணியாளர்தான் யூசுப்கான் என்று அறிவித்தனர். இதனால் நவாபுக்கும், யூசுப்கானுக்கும் மோதல் அதிகமானது. டெல்லியின் ஷாவும், ஹைதராபாத் நிஜாம் கிமாம் அலியும் யூசுப்கான்தான் மதுரையின் சட்டப்படியான கவர்னர் என்று அறிவித்தாலும், நவாப்பும், கம்பெனியும் இதை ஏற்கவில்லை. 1761ஆம் ஆண்டு 7லட்சம் வரிவசூல் செய்து செலுத்திட முன்வந்தான். 

     வாபும், கம்பெனியும் எற்கவில்லை. காரணம் தங்களைவிட வலுவான மக்கள் செல்வாக்கு உள்ளவனை வளர்க்க விரும்பவில்லை. தெற்கு சீமையில் இருந்த பல கம்பெனி வணிகர்கள், யூசுப்கான் மக்களிடம் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வை உருவாக்கியுள்ளான் என்று புகார் தெரிவித்திருந்தனர். எனவே, கம்பெனியும், நவாபும் யூசுப்கானை கைது செய்துவர கேப்டன் மேன்சனிடம் உத்திரவிட்டனர். இதனிடையே யூசுப்கான் “தன்னை சுதந்திர ஆட்சியாளன்’’ என்று முதன்முதலாக அறிவித்துக்கொண்டு, படைதிரட்டினான் மதுரையில் 27,000 படைவீரர்களைக் கொண்டு பலமாக இருந்தான். அவனுக்கு ஆதரவாக பிரெஞ்சுத் தூதர்கள் வந்து சேர்ந்தனர்.

துரோகத்தின் வெற்றி

   துரோகம் பல நேரத்தில் வீரம் செறிந்த போரின் முடிவை விரைவுபடுத்திவிடும், வீரர்கள் யுத்தக்களத்திலே வீழ்வதை தடுத்திடும். இங்கே யூசுப்கானுக்கும் அதுதான் நேர்ந்தது. 1763 செப்டம்பர் மாதம் காலோனல் மேன்சன் தலைமையில் மதுரையைத் தாக்கினர் தஞ்சை, திருவிதாங்கூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, பாளையங்கள் கும்பினியருடன் கைகோர்த்தனர். மழையின் காரணமாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. மீண்டும் கம்பெனி படையும், நவாபுவின் படையும் இணைந்து 22 நாட்கள் தாக்குதலை தொடுத்தனர். 120 ஐரோப்பியர்களும் 9 அதிகாரிகளும் மாண்டனர். கும்பினியர் படை நிலைகுலைந்து பின்வாங்கியது.
மீண்டும் சென்னை, பம்பாய் பகுதிகளிலிருந்து அதிக படைகள் நவீன ஆயுதங்கள் தருவித்து மதுரை மேஜர் பிரஸ்டன் தலைமையில் தாக்குதல் தொடங்கினர். 

      முதலில் நத்தம் கள்ளநாட்டில் பாதைக் காவல்கள் அனைத்தையும் கைப்பற்றினர். 1764 ஜூன் மாதம் கோட்டையை முற்றுகையிட்டனர். கோட்டையைத் தகர்க்க முடியவில்லை. கும்பினியர் படையில் 160 பேர்கள் பலியாகினர். தாக்குதல் மூலம் தோற்கடிக்கும் பாத்தியங்கள் குறைவு எனக் கருதினர். எனவே, கோட்டைக்குச் செல்லும் உணவை நிறுத்தினர். குதிரையும், குரங்கும் உணவாக வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு குடிநீரை நிறுத்தினர். இதனால் கோட்டைக்குள் இருந்த படைகள் மற்றும் மக்களிடம் சோர்வும், குழப்பமும் ஏற்பட்டது. யூசுப்கான் தப்பிக்கும் முயற்சி வெற்றிபெறவில்லை. சரணடைய பிரெஞ்சு தளபதி மார்சன்ட் முடிவெடுத்தான். இந்த சர்ச்சையால் யூசுப்கான் தளபதியை அறைந்தான். இந்த அவமானத்தை பழிதீர்க்க எண்ணினான் மார்சன்ட், யூசுப்கான் சரண் அடையாமல் சண்டையிட்டு வீரமரணம் எய்திட விரும்பினான். இதனிடையே ஆற்காடு நவாபு, சிவகங்கை தளபதி தாண்டவராய பிள்ளை மூலமாக மதுரை கோட்டையில் இருந்த திவான் சீனிவாசராவ், யூசுப்கான், பாக்டா பாபா சாஹிப், தளபதிமார்சன் பேசி வஞ்சக வலையில் வீழ்த்த திட்டமினர். சரணடைவோருக்கும், சண்டையிட்டு மடிய விரும்பியவர்களுக்கும் இடையே துரோகத்தை அரங்கேற்றினர். 

      1764 அக் 13இல் முகமது யூசுப்கான் தொழுகையில் ஈடுபட்டபோது சீனிவாசராவ், பாபாசாஹிப், மார்சன், இன்னும் சிலர் யூசுப்கானை அவனது டர்பன் கொண்டு கட்டிப்போட்டுவிட்டனர். விவரம் அறிந்து யூசுப்கானின் மனைவி சிறுபடையுடன் வந்தாலும், துரோகிகளிடம் வெற்றிபெற முடியவில்லை. எனவே, யூசுப்கான் கும்பினிப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டான். அக் 15ஆம் நாள் மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டான். இருமுறை கயிறு அறுந்து கீழே வீழ்ந்தான். மூன்றாவது முறை தூக்குக்கயிறு அவனது உயிரைப் பறித்தது. அவனைக் கண்டு அஞ்சு நடுங்கிய கும்பினியர்களும், நவாபும் அவனது தலையை திருச்சிக்கும், கைகளை பாளையங்கோட்டைக்கும், கால்களை தஞ்சைக்கும், திருவிதாங்கூருக்கும் அனுப்பிவைத்தனர். 

       உடலை, தூக்கிலிட்ட சம்மட்டிபுரத்தில் புதைத்தனர். 1808இல் அந்த இடத்தில் மசூதி கட்டடப்பட்டு கான்சாஹிப் பள்ளி வாசல் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் ஏழாவது தலை முறையாக அதை பராமரித்து வருகின்றனர். கும்பினியர்களை எதிர்த்ததால் முதன்முதலாக தூக்கிலிப்பட்ட வீரன் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வீரத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றான். தன்னை “சுதந்திர ஆட்சியாளன்’’ என்று பறைசாற்றி கும்பினியர்களுடன் போரிட்டான் வீரமரணம் எய்தினான் 40 வயதே நிரம்பிய “கமாந்தோ கான்’’.

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...